1974 ஆம் ஆண்டு, கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, தமிழகச் சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம், இந்திய அரசியலமைப்பில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்தத் தீர்மானம் 1969ல் கலைஞர் அரசு அமைத்த ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது.
தி.மு.க. ஆட்சியில் மாநில சுயாட்சித் தீர்மானம் 1974
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 16-4-1974 அன்று முதலமைச்சரும் கழகத்தலைவருமான கலைஞர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானமும் பேருரையும்.
இந்நூல்…
தி. மு. கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதை அடுத்து, முதலமைச்சர் என்கிற பொறுப்பில் முதன் முதலாக
17-3-1969 அன்று இந்தியத் திருநாட்டின் தலைநகராம் டெல்லிக்குச் சென்றார்.
அப்போது, அனைத்திந்தியாவையும் சார்ந்த ஐம்பதுக்கும் மேலான பத்திரிக்கை நிருபர்கள் அவரைச் சூழ்ந்து துருவித் துருவிக் கேள்விகளைக் கேட்டுப் பதில் பெற்றனர், சங்ககாலத் தமிழ் இலக்கியத்திலிருந்து சங்கு குளிக்கும்
தொழிலாளர் பிரச்சினைவரை, இருமொழித் திட்டத்திலிருந்து கரும்பு உற்பத்தி இலக்குவரை, இந்தித் திணிப்பை எதிர்ப்பதிலிருந்து இந்திராகாந்தி தலைமைச் சிறப்புவரை அத்தனைக் கேள்விகளையும் பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
அனைத்துக்கும் தலைவர் கலைஞர் பதிலளித்து முடித்து இறுதியாக ஒரு முக்கியமான அறிவிப்பையும் அப்போது வெளியிட்டார்.
தி. மு. கழக அரசு தகுதி மிக்கவர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கும் என்றும், அந்தக் குழு மத்திய – மாநில உறவுகள் பற்றியும்; மத்திய அரசாங்கத்திலிருத்து மாநில அரசுகளுக்கு எந்தெந்த அதிகாரங்கள் மாற்றப்பட வேண்டும் என்கிற பரிந்துரையையும் அளிக்கும் என்றும் அறிவித்தார். சட்ட வல்லுநர்க அரசியல் சட்ட மேதைகள் கல்வித் துறையில் புகழ் வாய்ந்தவர்கள் அந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் கலைஞர் குறிப் பிட்டார்.
கலைஞர் அவர்கள், புது டெல்லியில் 17-3-1959 அன்று பத்திரிகையாளர்களிடம் அறிவித்ததற்கு ஏற்ப,
திரு .பி.வி.இராசமன்னார்,
(தமிழ் நாடு உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி)
குழுத் தலைவராகவும்,
திரு ஏ. லட்சுமணசாமி முதலியார்
(சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர்)
திரு பி. சந்திரா ரெட்டி
(உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி)
ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டதாகவும் ஒரு குழு
1969 செப்டம்பர் திங்களில் அரைக்கப் பட்டது.
இந்தியாவிலுள்ள அனைத்து மாநில முதல்வர்கள், அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள், எல்லா மாநில சட்டமன்ற (பேரவை – மேலவை) கட்சித் தலைவர்கள்,நிதிக்குழுக்களின் தலைவர்கள், திட்டக்குழு தலைவர், திட்டக்குழுத் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில உயர்நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகள், எல்லா மாநிலங்களின் அட்வொகேட் ஜெனரல்கள் சுட்ரீம் கார்ட் நீதிபதிகள் மத்திய – மாநில சர்வீஸ் கமிஷன் தலைவர்கள் தலைமைத் தேர்தல் கமிஷனர், விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட முக்கியத் தலைவர்கள், தொழிலதிபர்கள், பொருளாதார வல்லுநர்கள்,புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் – வார இதழ்களின் ஆசிரியர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ராஜமன்னார் குழு விவரங் கோரி கருத்துரைகேட்டது.
இவைகளின் அடிப்படையில் இராஜமன்னார் குழு தனது அறிக்கையை 1971 மே திங்களில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடம் அளித்தது.
அறிக்கையையும், அந்த அறிக்கையின் பேரில் கழக அரசின் கருத்தையும் இணைத்து 1974 ஏப்ரல் 16 அன்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கலைஞர் அவர்கள் தீர்மானத்தை முன் மொழிந்து விவாதத்திற்கு வைத்தார்.
அறிக்கையின் மீது சட்டப் பேரவையில் 5 நாட்கள் விரிவான விவாதம் நடைபெற்று, 1974 ஏப்ரல் 20 அன்று நிறைவேற்றப் டட்டது.
1974 ஏப்ரல் மாதத்தில் கழக அரசால் நிறைவேற்றிய மத்திய அரசின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்ட மாநில சுயாட்சி பற்றிய தீர்மானம்தான். இன்று பீறிட்டுக் கிளம்பியுள்ள மத்திய மாநில உறவு குறித்த பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல்வோருக்கு அருந்துணையாக உதவும் பெருமை பெற்றுள்ளது.
இத்தகு பெருமைக்குரிய தீர்மானத்தையும், அதுகுறித்து அப்போதைய கழக அரசின் முதல்வர் கலைஞர் அவர்களின் கருத்துக்களையும் இந்நூல் வடிவில் தமிழக மக்கள் முன்வைப்பதில் தலைமைக் கழகம் பெருமையடைகிறது.
தி.மு.க. ஆட்சியில் மாநில சுயாட்சித் தீர்மானம்.
மாநில சுயாட்சி பற்றியும், கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையிலான தமிழக அரசால் நியமிக்கப்பட்ட இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துரைகளை மத்திய அரசு ஏற்று அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், 16-4-1974 அன்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழக சட்டப் பேரவையில் முன் மொழிந்த தீர்மானமும் பேருரையும்:
தீர்மானம்:
மாண்புமிகு டாக்டர் மு கருணாநிதி: தலைவரவர்களே,
“மாநில சுயாட்சி பற்றியும், இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் பற்றியும் தமிழ்நாடு அரசின் கருத்துரைகளையும், இராஜமன்னார் குழுவின் அறிக்கையையும் இப் பேரவை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, பல்வேறு மொழி, நாகரீகம், பண்பாடு ஆகியவைகளைக் கொண்ட இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டைப் பேணிக்காக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றிச் செயல்படவும்,
மாநில சுயாட்சி பற்றியும், இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துக்களை மத்திய அரசு ஏற்று -மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்று இப்பேரவை முடிவு செய் கிறது.”
என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
கலைஞர் பேருரை:
மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய நாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு இடத்தைப் பெறப்போகும் சிறப்புமிக்க தீர்மானத்தை நமது தமிழ் நாடு சட்டப் பேரவையில் முன்மொழிகிறபேறு பெற்றமைக்கு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சிந்தனைச் செல்வம் மிகுதியாகப் பெற்றுள்ள இந்த அவையின் மாண்புமிகு உறுப்பினர்கள், இந்தத் தீர்மானத்தின் நல்லநோக்கத்தை ஆய்ந்துத் தெளிந்து, தங்கள் பேராதரவை நல்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவின் வலிவும் பொலிவும் கெடாமலிருக்கவும், ஒருமைப் பாட்டுக்கு ஒரு துளி தீங்கும் நேராமல் இருக்கவும் தன் பங்கு எப்போதும் உண்டு என்று சூளுரை மேற்கொண்டு,அதனைச் செயல் வடிவிலும் பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது, இன்றைய ஆளுங்கட்சியான தி. மு. கழகம் என்பதை அனைவரும் அறிவர்.
1962ம் ஆண்டில் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டதும், சீன ஆக்ரமிப்பின்போது அந்த எதிரிகளை நோக்கிப் போர் முழக்கம் செய்த பாடி வீடுகளில் ஒன்றாக இருந்ததும், பாகிஸ்தான் போக்கு முறியடிக்கப்பட இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் முந்திக்கொண்டு ஆறு கோடி ரூபாய்க்கு மேல் தமிழகத்தின் சார்பில் போர் நிதி வழங்கியதோடு, போர் முனையில் நிற்கும் உணர்வுடன் வெற்றிக்கான வீரப்பணிகளைப் புரிந்ததும் – இன்றைய ஆளுங்கட்சியான தி.மு. கழகத்தின் நாட்டுப் பற்றுக்குச் சான்றுகளாகும்.
தேவையற்ற ஐயப்பாட்டுப் பின்னணியினூடே இந்தத் தீர்மானத்தின் நோக்கம் பற்றி சிந்தித்திட வேண்டாம் என்பதற்கே இவைகளைக் குறிப்பிட்டேன்.
இந்திய நாட்டில் கூட்டாட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை,
அகில இந்திய காங்கிரஸ் சுட்சி, 1945-ஆம் ஆண்டு இந்திய மக்கள் முன் வைத்த தேர்தல் பிரகடனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.
“இந்தியக் கூட்டாட்சி என்பது, அதன் பல்வேறு பகுதிகளில் – விரும்பி இணையும் ஒன்றியமாக இருக்கவேண்டும் பகுதிகளுக்கு (அதாவது மாநிலங்களுக்கு) அதிகபட்ச சுதந்திரம் அளிப்பதற்காக எல்லோருக்கும் பொதுவான, முக்கிய அதிகாரங்கள் கொண்ட குறைந்தபட்ச அதிகாரத்தைக் கூட்டாட்சி (மத்திய) அரசுக்கும், தேவைப்படும் பகுதிகள் (அதாவது மாநிலங்கள்) விரும்பினால் ஏற்கும் பொதுவான அதிகாரங்கள் கொண்ட பொதுப்பட்டியலும் இருக்கலாம்.”
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இந்தத் தேர்தல் பிரகடனத்தைத் தொடர்ந்து, 1947-ஆம் ஆண்டில் அரசியல் நிர்ணய சபையில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் முன்மொழிந்த தீர்மானத்திலும் மத்திய அரசுக்கு என்று ஒதுக்கப்படும் அதிகாரங்களைத் தவிர, மற்ற எல்லா அதிகாரங்களும் சுயாட்சி உள்ள மாநிலங்களுக்கே உண்டு என்பது வலியுறுத்தப்பட்டது. அத்தீர்மானத்தின் பகுதியாவது:-
”இப்பொழுது பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள நிலப்பகுதிகளும், இந்திய சமஸ்தானங்களில் உள்ள நிலப்பகுதிகளும், வேறு வெளியில் உள்ள பகுதிகளும் இணைந்து சுதந்திர இந்தியாவாக விளங்கும். அரசியல் நிர்ணய சபை தீர்மானிக்கிறபடியான எல்லைகளைக் கொண்டோ அல்லது இப்பொழுதுள்ள எல்லைகளுடனோ அவை அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் தனித்த சுயாட்சியுள்ள பகுதிகளாகச் செயல்படும். எஞ்சிய அதிகாரங்களும் (Residuary powers) அப்பகுதிகளுக்கே அளிக்கப்படும்”
இந்தத் தீர்மானங்களும், தேர்தல் பிரகடனங்களும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குப் பிறகு மறந்துவிட்ட அல்லது மறைக்கப்பட்டுவிட்ட உணமைகளாக ஆகிவிட்டன.
அந்த உண்மையை தி.மு. கழகம் எதிர்க்கட்சியாக இருந்த போதுமக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் பலமுறை வெளிக்கொணர்ந்து, அதற்கேற்ற வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்று வாதிட்டிருக்கிறது.
1967-ஆம் ஆண்டு தி.மு. கழகத்தேர்தல் அறிக்கை பின் வருமாறு அமைந்தது :-
“ஒருமைப்பாடு என்பதை வலியுறுத்தி நடைமுறைக்குக் காண்டு வரும்போது, அது, ஒரு பகுதியினர் பிறபகுதியினர் மீது ஆதிக்கம் செலுத்துவதாக ஆகிவிடாமல் பாதுகாத்திடும் பொறுப்பை தி. மு. கழகம் மேற்கொள்ள உறுதிகொண்டுள்ளது.
மாநில உரிமைகள் நசுக்கப்படாமல் பாதுகாத்திடவும், பொருளாதார வளம் ஒருசீராக எல்லா மாநிலங்களுக்கும் அமைவதற்கான திட்டம் மேற்கொள்ளப்படவும் தி.மு. கழகம் பொறுப்புடன் பணியாற்ற உறுதி கொண்டிருக்கிறது.
மாநில உரிமைகளைப் பாதுகாத்திடும் முறையிலும், குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகாரங்கள் (Residuary Powers) மத்திய சர்க்காரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முறையை மாற்றி, அவை மாநிலங்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதற்காகவும் கழகம் பாடுபடுவதுடன், அந்த நோக்கத்துடன் இந்திய அரசியல் சட்டத்தை திருத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறது”.
மாநிலங்கள் மத்திய அரசை அண்டி நிற்கும்நிலை களையப்பட வேண்டுமென்ற கருத்தைச் சுட்டிக்காட்டி, அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்றிருந்தபோது 1967-68ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் கீழ்கண்டவாறு சுட்டிக் காட்டினார் :-
“நமது கூட்டாட்சி அமைப்பில் (Federal set up) எத்தகைய வரம்புகளுக்கு உட்பட்டு மாநில அரசுகள் இயங்க வேண்டியுள்ளன என்பதை நாட்டத்திற்கொள்ளுதல் வேண்டும். அரசியல் அமைப்பில் விதித்துறைகள் மத்திய அரசுக்கு ஊட்டங்கொடுக்கும் முறையிலே அமைந்திருப்பது ஒருபுறமிருக்க, கடந்த பதினைந்து ஆண்டுகளாக திட்டமிட்ட பொருளாதார அமைப்பின் கீழ் எழுந்த நெறிமுறைகளும், வளர்ந்த மரபுகளும் மாநிலங்களை மெலியச்செய்து மத்திய அரசிலை மேலும் வலுவூட்டும் போக்கில் அமைந்துள்ளன. அயல்நாட்டு வாணிபம் நாணயச் செலாவணிக் கொள்கை, கடன் கொள்கை, முதலியன குறித்து, அரசியலமைப்பில் வகை செய்துள்ள அதிகாரங்களின் கீழ், நமது பொருளாதாரம் முழுவதையுமே நெறிப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசிற்கே உரியதாக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியலமைப்பில் குறிப்பிட்டுக் கூறப்படாத எஞ்சிய வரி விதிப்பு அதிகாரங்கள் (Residuary Powers) உட்பட, நீட்சித்திறன் பெற்ற வருமான இனங்களின்மீது மத்திய அரசிற்குள்ள உரிமை வாய்ப்பின் மூல தேசிய வருமான பெருக்கத்தின் பெருமளவு பங்கினை ஈர்த்துச்செல்லும் நிலையிலே அது உள்ளது. இந்நிலைமை காரணம் மாநிலங்கள் தங்கள் திட்டங்களையும் கொள்கைகளையும் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் விருப்பக் (Discretionary) கடன்களையும் உதவி மானியங்களையும் எதிர்நோக்கி நிற்கும் நிலையில் உள்ளன. பொதுக் கடன்கள் மூலம் மாநில அரசுகள் நிதி திரட்டி, தங்கள் நிதி வளத்தைப் பெருக்கிக் கொள்வதிலும், அரசியலமைப்பின் 293-வது பிரிவில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம் நேரடியாகவும், ரிசர்வ் பாங்கியின் மூலம் மறைமுகமாகவும், அக்கடன்கள் எந்த நிபத்தனைகளுக்கும் வரையறைகட்கும் உட்பட்டுத் திரட்டப்படலாம் என கட்டுப்படுத்தும் உரிமையுடன் மத்திய அரசு விளங்குகிறது. ஐந்தாண்டுகட்கு ஒரு முறை மாநிலங்களின் நிதித்தேவைகளைப்பற்றி நிதிக்குழுக்களின் வாயிலாக நடுவு நிலையில் நின்று ஆராய வேண்டுமென்கிற ஏற்பாடும், அக்குழுக்களின் ஆய்வு வரம்பு குறித்து விதிக்கப்படும் பல்வேறு வரையறைகள் காரணமாக, மாநிலங்கள் மத்திய அரசினை அண்டி நிற்கும் நிலை பெருமளவில் குறைந்தபாடில்லை”.
அந்த நிதி நிலை அறிக்கையின் இறுதிப் பகுதியில் அண்ணா அவர்கள்,
“மத்திய-மாநில அரசுகளுக்கிடையே உள்ள தொடர்புகள் பற்றிய மறு சிந்தனை தேவை என்பதனை இப்பேரவை அறியும். இன்றுள்ள உறவு, உள்ளத்துக்கு நிறைவு தருவதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தை அனைவரும் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. இதுவரை வரிப்பங்கீடு, அதிகார வரம்பு, திட்ட நிதி ஒதுக்கீடு ஆகியவற்றிலே கிடைத்துள்ள அனுபவம், கசப்பு நிரம்பியதாக இருப்பதை எவரும் மறுத்திட இயலாது; இந்தக் கசப்பு நீங்கிடவும், கனிவு கிடைத்திடவுமான முறையில் தொடர்புகள் அமைந்திட வழி காண்பது உடனடிப் பிரச்சினையாகி விட்டிருக்கிறது. இது குறித்து அச்சமோ, ஐயப்பாடோ அல்ல, தெளிவான சிந்தனையே தேவை. ஒருவருக்கொருவர் உள்ள நல்லெண்ணத்தினாலும், ஒருவரையொருவர் நன்கறிவதாலும் தோழமைத் தொடர்பு மகிழ்ச்சியும் பயனும் மிக்கதாக ஆக்கப்பட வேண்டும் என்பதே எனது அவாவாகும்” என்று கூறியுள்ளதும் குறிப்பிடத் தக்கதாகும்.
அதன் பின்னர், 1969-ஆம் ஆண்டு “ஹோம் ரூல்” ஆங்கிலஏட்டில் அண்ணா அவர்கள் எழுதிய கடைசி கட்டுரையில்
“அன்புள்ள தம்பி.
நான் பதவியைத் தேடி பைத்தியம் பிடித்து அலைபவனுமல்ல, காகிதத்தில் கூட்டாட்சியாகவும், நடைமுறையில் மத்தியில் அதிகாரக் குவிப்புக் கொண்டதாகவும் இருக்கிற ஒரு அரசியல் சட்டத்தின் கீழ் முதலமைச்சராக இருப்பதற்கு மகிழ்ச்சி கொண்டிருப்பவனுமல்ல. இதற்காக மத்திய அரசிற்கு எரிச்சல் ஏற்படுத்துவதும், டில்லியோடு சண்டை போடுவதும் தான் எனது நோக்கம் என்று – எனது நண்பர் ஈ.எம்.எஸ்.- ஐப் போல் – நான் பிரகடனம் செய்ய விரும்பவில்லை. அதனால் யாருக்கும் நன்மையில்லை. உண்மைதான்; சரியான பருவத்தில் ஒரு உறுதி ஏற்பட வேண்டுமென்பதுதான் முக்கியம். ஆனால் கூட்டாட்சி முறையைப்பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுப்பதை அதற்கு முன்னால் செய்ய வேண்டும். அந்தப் பணியில், அன்புத்தம்பி, உன்னுடைய உற்சாகமான ஒத்துழைப்பும், மனப்பூர்வமான பங்கேற்பும் எனக்குச் கிடைக்குமென்பதில் எனக்கு நிச்சயம நம்பிக்கை உண்டு.”
”பதவியில் இருப்பதின்மூலம், இன்றைய அரசியல் அமைப்புச் சட்டம் கொல்லைப்புறமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு இரட்டை ஆட்சிதான் என்பதைச் சிந்திக்கக் கூடிய பொதுமக்களின் கவனத்திற்கு தி. மு. க. கொண்டு வர முடியுமானால் அது உண்மையிலேயே அரசியல் உலகிற்குச் செய்யப்படும் குறிப்பிடத்தக்க உதவியாகும்”
என்று எழுதிய கருத்துக்களின் அடிப்படையிலும் 1967-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 8-ஆம் நாள் புதுடெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில், “மாநிலங்களுக்குப்போதுமான அதிகாரங்களை வழங்கிவிட்டு; நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ அவைகளை மட்டும் மத்திய அரசு வைத்துக்கொண்டால் போதும்; இப்படி அதிகாரங்களைப் பங்கீடுசெய்வதற்கும், அரசியல் சட்டம் செயல்படுவதற்கும், உயர் அதிகார ஆணைக்குழு ஒன்றினை அமைக்கவேண்டும்” என்று அவர் தெரிவித்த கருத்துக்கு ஏற்பவும். 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் நாள் சட்டப்பேரவையில் நான் அறிவித்ததையொட்டி, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு நேராவண்ணம், மாநில சுயாட்சி அடிப்படையில் மத்திய மாநில உறவுகளை ஆராயுமாறு டாக்டர் இராஜமன்னார் தலைமையில் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார், திரு. பி. சந்திரா ரெட்டி ஆகியோரைக் கொண்ட குழுவை 1969 செப்டம்பர் 22-ம் நாள் இந்த அரசு அமைத்தது.
அதன் பிறகு 1971-ஆம் ஆண்டு தி. மு. கழகத்தின் தேர்தல் அறிக்கையில், “இந்திய அரசியல் முறை ‘கூட்டாட்சி’ முறை என்று வர்ணிக்கப்பட்டாலும், அந்தத் தராசு மத்திய அரசு பக்கம் அதிக பட்சம் சாய்ந்திருப்பதால்; அதிகாரத் துறையிலும் நிதித் துறையிலும் மாநிலங்கள் செவ்வனே செயல்பட முடியாமல் தடைகள் இருப்பதால்; அதேநேரம் இந்தியா வலுப்பெற்றதாக இருக்க வேண்டுமென்கிற இலட்சியத்திற்கும் ஊறு தேடாமல்; எந்தெந்தத் துறைகளில் வலுவான இந்தியா இயங்குவதற்காக மத்திய அரசு செயல்பட வேண்டுமோ அந்த அதிகாரங்களை மட்டும் மத்திய அரசிடம் கொடுத்துவிட்டு; இதர அதிகாரங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்தி; மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று கருதுகிறோம். இந்த நோக்கத்தோடு நமது அரசு அமைத்த வல்லுநர் குழுவின் அறிக்கை கிடைத்த பிறகு; அந்த அடிப்படையில் அகில இந்திய ரீதியில் மாநில சுயாட்சி இயக்கத்திற்கான ஆதரவு திரட்டும் இயக்கத்தைக் கழகம் மேற்கொள்ளும்.
அரசியல் துறை அதிகாரங்களும், நிதித்துறை அதிகாரங்களும் மாநிலங்களுக்கு மேலும் தேவை என்று கேட்பது ; மாநிலங்களில் இருப்போர் அதிக அதிகாரங்களை நுகரவேண்டுமென்கிற ஆசையால் அல்ல; மாநில அரசுகள் மக்களுக்கு நெருங்கிய நிலையில் இருப்பதால் அந்த அதிகாரங்களை மத்திய அரசிடமிருந்து மேற்கொண்ட பிறகே எதிர்பார்க்கும் விதத்தில் மக்களுக்குத் தொண்டாற்ற முடியும் – என்பதால்தான், மாநில சுயாட்சி கோருகிறோம் என்பதையும் தெளிவாக்க விரும்புகிறோம்”
என்று குறிப்பிட்டிருப்பதை யாரும் மறந்திருக்க இயலாது.
1972-ஆம் ஆண்டு மைசூர் மாநில ஸ்தாபன காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
“Congress will fight in a determined manner for greater autonomy for the State and against all discrimination and step-motherly treatment by the Centre”.
[மத்திய அரசு காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மை, பாரபட்சம் இவற்றுக்கு எதிராகவும், மாநிலத்திற்கு அதிகமான சுயாட்சி பெறுவதற்காகவும் காங்கிரஸ் கட்சி உறுதியாகப் போராடும்.]
என்று குறிப்பிட்டதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்வது பொருத்தமுடையதென்று நான் கருதுகின்றேன்.
1971-ஆம் ஆண்டு மே 27-ஆம் நாள் இராஜமன்னார் குழுவின் அறிக்கை வெளிவந்தது. அந்த அறிக்கை இந்திய நாட்டுத்தலைமை அமைச்சர் இந்திராகாந்தி அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட தலைமை அமைச்சர் அவர்கள் எனக்கு 1971-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 22-ம் தேதி விட்டு எழுதிய கடிதத்தில்,
“Dear Thiru Karunanidhi,
I have received your letter of the 15th June with which you have sent me a copy of the report of the Centre-State Relations Inquiry Committee. Your Government will probably examine the recommendations of this report. As you know the Administrative Reforms commission also went into the question and has already submitted a report which is under our consideration. If the views of your Government on this matter are made available to us, they will also be taken into account. These are important issue and we intend to consult all the Chief Ministers. With regards,
Yours Sincerely, (Sd.) INDIRA GANDHI
அன்புள்ள திரு. கருணாநிதி,
நீங்கள் சூன் 15-ந் தேதி அனுப்பிய சுடிதம் கிடைத்தது. மத்திய மாநில உவுறகள் ஆய்வுக்குழுவின் அறிக்கையின் நகல் ஒன்றை கடிதத்துடன் அனுப்பியுள்ளீர்கள். அறிக்கையின் பரிந்துரைகளை உங்களது அரசாங்கம் ஆய்வு செய்யுமென்று எண்ணுகிறேன். நிர்வாக சீரமைப்புக் குழுவும் இப் பிரச்சினை பற்றி ஆய்ந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். அக் குழு அளித்துள்ள அறிக்கை எங்களது ஆய்வில் உள்ளது. இது குறித்து உங்கள் அரசின் கருத்துக்களையும் அனுப்பி வைத்தால் அவற்றையும் சேர்த்து ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். இவை முக்கியமான பிரச்சினைகள் என்பதால் எல்லா முதலமைச்சர்களுடனும் இதுகுறித்து கலந்து ஆய்வு செய்ய எண்ணியுள்ளோம்.
என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
தங்கள் அன்புள்ள,
(ஓம்) இந்திரா காந்தி
1972-ஆம் ஆண்டு மே திங்கள் 30-ம் நாள் டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் நான் பேசும்போது,
“Decentralisation is particularly necessary if a large country like ours is to cope with the problems of a modern economy. It is in this sense that our demand for State autonomy should be understood as a request for more efficient management of the country’s resources, as a means to enable the Centre to be strong in areas of vital national concern, as a method of enabling the minimum demands of our people to be met in the quickest time and in the most efficient manner.”
(நமது நாடு போன்ற பெரிய நாட்டின் கற்காலப் பொருளாதாரச் சிக்கல்களை சமாளிப்பதெனில் அதிகாரங்கள் பரவலாக இருப்பது அத்தியாவ சியமானது. நாங்கள் எழுப்பியுள்ள மாநில சுயாட்சி கோரிக்கையின் நியாயத்தினை இக்கோணத்திலிருந்து காணவேண்டும். நாட்டின் வளங்களை இன்னும் திறமையாக நிர்வகிப்பதற்கான வேண்டுகோளாகவும், நாட்டின் ஆதாரமான காரியங்களில் மத்திய அரசு வலுவுடன் இயங்குவதற்கான சாதனமாகவும், மிகத் திறம்படவும் மிக விரைவிலும் நம் மக்களின் குறைந்தபட்சத் தேவைகள் கிடைப்பதற்கான வழிவகையாகவுமே மாநில சுயாட்சிக் கோரிக்கையைக் கொள்ளவேண்டும்.
என்ற அளவில் இந்த அரசின் கொள்கையைத் தெளிவாக்கி இருக்கின்றேன்.
டாக்டர் ராஜமன்னார் குழுவின் அறிக்கையை வரிக்கு வரி இந்த அரசு ஏற்றுக்கொள்ளா விட்டாலும், அரசின் கொள்கை, வெற்றிகரமாகப் படருவதற்கான கொழுகொம்பாகவே அந்த அறிக்கையை நாம் கருதுகின்றோம்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையில் மிக நிதானமாக முடிவெடுக்க வேண்டுமென்ற கருத்துடன் பல கட்டங்களில் இது பற்றி ஆராயப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி சார்பில் அமைக்கப்பட்ட செழியன் – மாறன் குழுவினரும் ராஜமன்னார் குழுவின் அறிக்கையை அணுகினர். மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அறிக்கையையும் அரசு பரிசீலித்தது. அதன் தொடர்பான கருத்துக்கள், இந்திய நாட்டு அரசியல் மேதைகளின் அபிப்பிராயங்கள், உலக நாடுகளின் நிலைமைகள் இவைகள் அனைத்தையும் ஆழச் சிந்தித்து ராஜமன்னார் குழு அறிக்கை மீதும் – மாநில சுயாட்சிக் கொள்கை மீதும் – தமிழக அரசின் கருத்துரைகள் என்ற அறிக்கையை இந்த அவையின் முன்வைத்திருப்பதோடு அதனை ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தையும் உங்கள் மேலான வழி மொழிதலுக்காக வைத்துள்ளேன்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்துறை பற்றிய கருத்துப் பரிமாற்றக் குழு (Consultative Committee) கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தண்டபாணி பேசும் போது ”ராஜமன்னார் குழு தந்த அறிக்கையில், மத்திய மாநில அதிகாரங்கள் மறுபரிசீலனை பற்றி நல்ல கருத்துக்கள் இருப்பதாகவும், அதன்மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை”. என்று கூறியதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு. தீட்சித் அவர்கள் அளித்த பதிலில், “ராஜமன்னார் குழு மாநில அரசால் அமைக்கப்பட்ட குழு என்றும், அந்த அறிக்கையின் மீது மாநில அரசு இதுவரை தனது அபிப்பிராயத்தை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை” என்றும் கூறியிருக்கிறார். ஆகவே, அந்தப் பதிலுக்கு ஏற்பவும், ராஜமன்னார் குழுவின் அறிக்கை பற்றி இந்தப் பேரவையின் கருத்துக்களைப் பெற வேண்டுமென்று மாண்புமிகு உறுப்பினர்கள் விரும்பியதற்கு ஏற்பவும், இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் சுயாட்சித் தன்மை கிடைத்திடவும், மத்தியில் உண்மையான கூட்டாட்சி ஒளிவிடவும், இந்தத் தீர் மானத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
இந்திய நாட்டின் சுதந்திரக் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. வான்முகட்டைத் தொடுவதுபோல் அசைந்தாடும் அந்தக் கொடியின் கம்பீரம் காண, முகில்களைக் கிழித்துக் கொண்டு நமது விழிகள் தாவுகின்றன. வங்கம் தந்த தங்கக் கவி தாகூர் எழுதிய தேசீய கீதம் நமது செவிகளில் குற்றால நீர் வீழ்ச்சியின் சங்கீத ஓசையாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அடிமைப்பட்டுக் கிடந்த நாடு, தன்னை விடுவித்துக்கொண்டு தலை நிமிர்ந்து கிளம்பிய வரலாற்று வரிகள், உலகப் புத்தகத்தில் கோடிட்டு வைக்கப்பட்டுள்ளன.
சிறையிலிருந்த நாடு, விடுதலை பெற்று விட்டது. கதவு திறந்தது. பூட்டிய இருப்புக் கூட்டிலேயிருந்த கைதி, புன்னகை மலர வெளியே வருகிறான், தந்தையைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த தளிர் நடைச் செல்வம், இளங்கரம் தூக்கி, தாவியோடுகிறது, அவனைத் தழுவிக்கொள்ள! அவனும் அடக்க முடியாத மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரள மகனைத் தூக்கி முத்தமிடக் கரங்களை நீட்டுகிறான். கைகள் இயங்க முடியாமல் தவிக்கின்றன. சிறையிலிருந்துதான் விடுபட்டுவிட்டானே; இன்னும் என்னதடை? தன்னை யார் தடுப்பது? சுற்றும் முற்றும் பார்க்கிறான். அவன் சிறையில் இல்லை; சுதந்திர பூமியில்தான் இருக்கிறான். பிறகு யார். தன் குழந்தையைக் கூடத் தழுவிட முடியாமல் அவனைக் கட்டும் படுத்துவது? யாருமல்ல; அவன் சிறையிலிருக்கும்போது அவன் கைகள் இரண்டையும் காலையும் சேர்த்து ஒரு விலங்கு மாட்டியிருந்தார்கள். விடுதலை அடைந்த பூரிப்பில், விலங்குகளைக் கழற்ற வேண்டுமென்ற நினைப்புகூட இல்லாமல் அவன் வெளியே வந்துவிட்டான். அவன் சுதந்திர மண்ணில் தான் இருக்கிறான். கை கால் விலங்கு மட்டும் கழற்றப்படவில்லை. மனிதன் விடுதலையாகி விட்டான்; கை, கால்கள் மட்டும் கட்டுண்டு கிடக்கத் தேவையில்லையே; இந்தியா, விடுதலை பெற்றுவிட்டது. அகன் அவயவங்களைப் போன்ற மாநிலங்கள் மட்டும் மத்திய அரசுக்குத் தேவையில்லாத அதிகாரக் குவியல்கள் என்னும் விலங்குகளால் கட்டுண்டு கிடப்பானேன்?
இந்தக் கேள்வியின் நீண்ட நாளைய தாகத்தைத் தீர்க்கும் நெல்லிக்கனியாகத்தான், இன்று, இந்த அவையின் முன்னால் இந்தத் தீர்மானத்தை முன்மொழிகின்றேன்,
அரசியல் சட்டம் என்பது திருத்தப்படக் கூடாத ஒன்றல்ல. நமது அரசியல் சட்டம் 30 தடவைகளுக்கு மேல் திருத்தப்பட் டிருக்கிறது.
மாநிலங்களின் மொழிகள் வளரவும், பண்பாட்டுத் தன்மைகள் காக்கப்படவும், மாநிலத்திற்கு மாநிலம் நல்லுறவுகள் வளரவும், மத்திய மாநில உறவுகள் நிலைத்துச் செழிக்கவும், நாட்டின் பொருளாதாரம் வளம பெற்றுத் திகழவும், அரசியல் சட்டத்தில் இந்த மகத்தான மாறுதலைச் செய்வது எதிர்காலத்தில் இந்தியாவின் வலிமையையும் வளப்பத்தையும் பெருக்குவதற்கு அடித்தளமாக அமையும் என்பதை உணர்ந்து மத்திய அரசினர் செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதற்கு உறுதுணையாக உங்கள் ஒத்துழைப்பு அமையவேண்டுமென்று விழைகின்றேன். மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டும். பெற்ற சுதந்திரத்தின் பயனை நாடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை நெஞ்சில் பதித்துக்கொண்டும், இந்திய அரசியல் அரங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் நாம் ஏற்றிவைக்கும் இந்தச் சுடர்விளக்கு ஒளிவிட அரசியல் மேதைகள் இருக்கவேண்டுமென்றும் பணிவன்புடன் தூண்டுகோலாக கோருகிறேன் வணக்கம்.
இணைப்பு.
மாநில சுயாட்சி பற்றியும் ராஜமன்னார் குழு அறிக்கை பற்றியும் தமிழ்நாடு அரசின் கருத்துரைகள் (1974)
இந்தியாவின் ஒருமைப்பாட்டினையும் இறையாண்மையினையும் ஓங்குறச் செய்வதில் தனக்குள்ள திடமான உறுதிபாட்டினைத் தமிழ்நாடு அரசு அழுத்தமாக அறிவித்துக்கொள்கிறது. மேலும் நாட்டில் பொருளாதார, சமூக முன்னேற்றம் விரைவில் ஏற்பட வேண்டுமானால், உண்மையான கூட்டாட்சி முறையிலே நாட்டின் அரசியலமைப்பு அமைவது அவசியமென்று இவ்வரசு ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது.
அரசியல் நிர்ணய சபையில், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் முன்மொழிந்து, 1947 ஜனவரி 22 ஆம் நாளன்று நிறைவேறிய வரலாற்று இலட்சியங்கள் பற்றிய தீர்மானத்தின் முக்கியமான பகுதியை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
”இப்போது பிரிட்டிஷ் இந்தியாவில் அடங்கியுள்ள ஆட்சிப்பகுதிகளும், இந்திய சமஸ்தானங்களாக உள்ள ஆட்சிப்பகுதிகளும், இவற்றுக்கு அப்பாலுள்ள பிறபகுதிகளும், சுதந்திர இந்தியாவுடன் இணைவதற்கு இசையும் மற்றப் பகுதிகளும் சேர்ந்து இந்திய ஒன்றியமாக அமைதல் வேண்டும்;
மேற்சொன்ன ஆட்சிப்பகுதிகள் தற்போதுள்ள எல்லைகளுடனோ, அரசியல் நிர்ணயசபை வரையறுக்கும் எல்லைகளுடனோ பின்னர் அரசியலமைப்புச் சட்டத்திற்கிணங்க ஏற்படும் எல்லைகளுடனோ சுயாட்சி பெற்ற மாநிலங்களாக விளங்கி எஞ்சிய (Residuary powers) அதிகாரங்கள் அனைத்தையும் கொண்டிருத்தல்வேண்டும். ஒன்றிய அரசுக்கென்று ஒதுக்கப்படும் அல்லது அந்த அரசினைச் சார்ந்து நிற்கும் அதிகாரங்கள் ஒன்றிய அரசுடன் இயைந்துள்ளதும் பொதிந்துள்ளதுமாக உள்ள அதிகாரங்கள் இவை மட்டுமே மாநிலங்களுக்கு இருப்பதில்லை.”
இந்திய நாடு பல்வேறு மொழிகளையும் பண்பாடுகளையும் வரலாற்றுச் சிறப்புக்களையும் கொண்ட மக்கள் வாழும் மிகப் பெரிய நிலப்பரப்பாகும். அதன் மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனித் தேவைகளும் பிரச்சினைகளும் உள்ளன. எனவே, மாநிலங்கள் இடையீடுகள் ஏதுமின்றிச் செயல்படுவதுடன், நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படாத வகையில் முன்னேற்றம் அடை வதற்கான சட்டங்களை இயற்றுவதற்கும் நிர்வாகத்தினை நடத்து வதற்கும் தேவைப்படும் அதிகாரங்கள் அனைத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். உண்மையான கூட்டாட்சி முறையில்தான் இது சாத்தியமாகும்.
நம் நாடு விடுதலை பெற்ற பின்னர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நாம் அடைந்துள்ள இதமற்ற அனுபவத்தை எண்ணிப் பார்க்கையில், மத்திய அரசிடம் குவிந்துள்ள அதிகாரங்களின் விளைவால் மாநிலங்கள் உறுதி குலைந்து ஊக்கமிழந்த நிலையில் இருப்பதையே காண்கிறோம்.
அரசியலமைப்பினை ஒற்றை ஆட்சிமுறையிலே செயற்படுத்தி, மத்திய அரசுக்குக் கீழ்ப்பட்டவைகளாக மாநிலங்களை நடத்தும் தீவிரப் போக்கு இருந்துவருகிறது. பெரும்பாலான அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிந்திருந்தால்தான் மத்திய அரசு வலுவுடன் இருக்க முடியும் என்பது கற்பனைக் கூற்றேயாகும். அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்தவரும், மூத்த அரசியலறிஞருமான திரு. கே. சந்தானம் அவர்கள் வலுவுள்ள மத்திய அரசு வேண்டுமென்ற கூற்றினை ஆய்ந்து கூறியுள்ளதாவது:-
“இந்தியா சிதறிவிடாமலும் குழப்பத்தில் சிக்குண்டு குலைந்துவிடாமலும் இருப்பதற்கு வலுவுள்ள மத்திய அரசு இன்றியமையாததுதான். ஆனால், அரசியல் அதிகாரங்கள் குவிந்திருந் தால்தான் அத்தகைய வலுவேற்படும் என்ற கூற்றினை நான் ஏற்பதற்கில்லை. மாறாக, பரந்துகிடக்கும் இந்தியா முழுமையிலும் வாழும் பெருத்தமக்கள் தொகையினரின் சார்பான பொறுப்புக்கள் பலவற்றை ஏற்றுக்கொள்வதன் மூலம் மத்திய அரசு மீளமுடியாத அளவுக்குப் பலவீனமாகிவிடுகிறது என்பதே எனது திடமான கருத்தாகும். அவசியமான அனைத்திந்தியப் பொறுப்புகளில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி, அப்பொறுப்புக்களை மாநிலங்களோடு பகிர்ந்து கொள்ளாமல், அதே நேரத்தில், எஞ்சிய எல்லா அரசுத்துறைகளிலும் மாநிலங்களுக்கு முழு சுயாட்சி அளித்திடுவதன் வாயிலாகவே நாடாளுமன்றமும் மத்திய அரசும் உண்மையான வலுவுடன் உறுதியாக இருக்க முடியும். இந்தியா விடுதலையடைந்து இருபதாண்டு காலமாக ஒரே கட்சியின் அரசியல் ஆதிக்கம் நிலவி வந்தது. இதன் விளைவாக இந்தியக் கூட்டாட்சி முறையில் தெளிவில்லாமல் வழி நடத்திச் செல்லும் போக்கு வலுப்பெற்றுள்ளது. இப்போக்கு மத்திய அரசுக்கு இன்னலைச் சேர்க்கிறது, மாநிலங்களுக்கு எரிச்சலையூட்டுகிறது.”
1967 ஜூன் 17 ஆம் நாளன்று சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை அளித்து ஆற்றிய உரையில் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் கூறியதாவது:-
“மாநிலங்களின் வளர்ச்சி வேண்டு மென்று கோருவது நாட்டின் ஒற்றுமையைக் குலைத்துவிடும் என்ற வாதம் வீணானது. மத்திய மாநில அரசுகளின் நிதித் தொடர்பு முறைகள் அரசியலமைப்பில் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்த நிலைமைகள் வெகுவாக மாறிவிட்டன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது எண்ணிப் பார்த்திருக்க இயலாத பற்பல புதிய போக்குகள் தொன்றியுள்ளன. மத்திய அரசிடம் அதிகாரங்கள் பெருமளவில் குவிந்துவிடுவதற்கு அரசியலமைப்புச்சட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தினை எழுதியவர்கள் எண்ணிப் பார்த்திராத புதியதொரு துறையின் மூலம் மத்திய அரசு மேற்கொண்டுள்ள அதிகாரங்கள் பெருகியுள்ளன. இது மாநிலங்களுக்குக் கவலையளிப்பதாகும். பொருளாதாரத்திட்டம் என்பதுதான் அப்புதியதுறை. இதற்கான நிதிதிரட்டுதல், நிதி ஒதுக்குதல் திட்டத்திற்காகப் பணத்தைச் செலவிடும் முறை இவையனைத்திலும் மத்திய அரசு ஏற்றுள்ள அதிகாரங்கள் மாநிலங்களைக் “கையேந்தி” நிற்கும் நிலைக்குத் தள்ளிவிட்டன. கட்சிக்கட்டுப்பாடு காரணமாக இதுகுறித்துப் பேசுவதற்குச் சிலர் தயங்கலாம். ஆனால், பொருளாதாரக் கண்கொண்டு இப் பிரச்சினையை ஆய்ந்தோர் அனைவரும் மத்திய-மாநில நிதி உறவுகளில் எழுந்துள்ள இப் போக்குகள் குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர். அரசியல் சட்டத்தின் ஏழாவது இணைப்பில் மத்திய அரசுப் பட்டியலில் 36 முதல் 38 இனங்களாகக் கூறப்பட்டுள்ள பணம் வெளியிடுதல், அன்னியச் செலவாணி போன்ற துறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் அடங்குவதால், பணவீக்கம்.
பற்றாக்குறை நிதி நிலை ஆகியவற்றுக்கான அனைத்துப் பொறுப்பும் மத்திய அரசினையே சேருகிறது. இதனால் விளையும் விலையேற்றத்திற்கும் மத்திய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். இதன் பயனாக, விலைகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பினையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் விளையும் விலையேற்றத்தினால் மாநிலங்கள் அவதியுறுகின்றன. ஆனால் விலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரங்கள் அரசியல சட்டப்படி மாநிலங்களுக்கு இல்லை. ஆதலால்தான், விலையேற்றம் காரணமாக அரசு அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு தருவதால் ஏற்படும் அதிகச் செலவு. மலிவு விலையில் உணவுப் பொருள்களை வழங்குவதனால் ஏற்படு இழப்பு, இவற்றில் மத்திய அரசும் பங்கேற்க வேண்டும் என்று நான் கேட்க வேண்டியிருக்கிறது. மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள்களைத் தருவதாலும், அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதாலும் ஏற்படும் பொறுப்புச் சுமையினை மாநிலங்களே தாங்கிக் கொள்ள வேண்டுமென மத்திய அரசு அடித்துக் கூறுகிறது இதுபற்றி நான் குறை கூறுவதன் காரணம் இப்பொழுது நன்கு விளங்குமென எண்ணுகிறேன். கட்சிக் கண்ணோட்டம் சுருத்தினை மறைத்தாலன்றி, அரசியலமைப்புச் சட்டத்தில் காணப்படும் மத்திய மாநில உறவுகளை ஆய்ந்தறிந்தோர் எனது வாதத்திலுள்ள நியாயத்தினை ஒப்புக்கொள்ளத் தயங்கமாட்டார்கள்.”
எனவே, மத்திய அரசிடம் அதிகமான அதிகாரங்கள் குவிந்திருப்பதால் அது உண்மையில் பலவீனந்தான் அடைகிறது என்பது தெளிவாகும். இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாநிலங்கள் மத்திய அரசின் கைப்பாவைகளாக மாறி கையாலாகாத நிலையில் உள்ளன.
உண்மையான கூட்டாட்சி அமைப்பில் நாட்டின் பாதுகாப்பு. வெளிநாட்டு உறவுகள், மாநிலங்களுக்கிடையே போக்குவரத்துத் தொடர்புகள், நாணயச் செலாவணி ஆகியவை குறித்த அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். ஏனைய அதிகாரங்கள் அனைத்தும் எஞ்சிய அதிகாரங்களுடன் மாநிலங்களிடம் இருக்க வேண்டும். மத்திய அரசும் மாநில அரசுகளும் தமக்குள்ள அதிகார வட்டத்திற்குள் சுயேச்சையாகச் செயல்பட வேண்டும். இத்தகைய கூட்டாட்சி முறை நிலவினால்தான் நாடு முழுவதுமாக நலமுறுதல் இயலுமென்பதே இந்த அரசின் உறுதியான நம்பிக்கை.
இதைக்கருத்திலே கொண்டுதான், மாநிலங்கள் தக்க அளவில் சுயாட்சியுரிமை பெற்றிட இயலும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வேண்டிய திருத்தங்கள் செய்வதற்கான கருத்துரைகளை வழங்குமாறு, 1969-ம் ஆண்டில் ஒரு குழுவினை இந்த அரசு நியமித்தது. டாக்டர் பி.வி. இராஜமன்னார் அவர்கள் தலைவராகவும், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் அவர்களும் திரு. பி. சந்திரா ரெட்டி அவர்களும் உறுப்பினர்களாகவும் இக் குழுவில் பணியாற்றினர்.இக்குழுவின் அறிக்கை 1971-ம் ஆண்டில் அளிக்கப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது இணைப்பில், “மத்தியப் பட்டியல்”, “மாநிலப் பட்டியல்”. “பொதுப் பட்டியல்” என்ற தலைப்புகளில் நாடாளுமன்றம் – மாநிலச் சட்ட மன்றங்கள் ஆகியவற்றின் சட்டமியற்றும் அதிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. அப்பட்டியல்களில் பல்வகைத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென இராஜமன்னார் குழு கருத்துரை வழங்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், மாநிலங்களுக்கிடையே போக்குவரத்துத் தொடர்புகள், நாணயச் செலாவணி ஆகியவை தொடர்பான அதிகாரங்களை மட்டும் கொண்டுள்ள மத்திய அரசும், எஞ்சிய அதிகாரங்கள் உட்பட ஏனைய அதிகாரங்கள் அனைத்தையும் கொண்டுள்ள மாநில அரசுகளும் உள்ள உண்மையான கூட்டாட்சியை நிறுவும் இலட்சியத்துடன், தமிழ்நாடு அரசு, இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை ஆய்ந்த பின் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளிலும் அதிகாரப் பட்டியல்களிலும் செய்யப்படவேண்டிய திருத்தங்களை வகுத்துத் தொகுத்துள்ளது. இதன் விளைவான வேறு மாறுதல்களையும் அரசிய லமைப்புச் சட்டத்தில் செய்தல் வேண்டும்.
அரசியலப்புச் சட்டப் பிரிவுகளில் செய்யப்பட வேண்டிய முக்கியமான மாறுதல்கள் வருமாறு :-
மைய அரசு மாநில அரசுகளுக்கு கட்டளைகள் பிறப்பித்தல்
மாநில அரசுகளுக்குக் கட்டளை பிறப்பிக்க மைய அரசிற்கு அதிகாரமளிக்கிற 256, 257,339 (2), 344 (6) பிரிவுகள் நீக்கப்ப வேண்டும். கட்டளைகள் பிறப்பிக்கும் அத்தகைய அதிகாரம். எதையும் மைய அரசு கொண்டிருத்தல் கூடாது.
அனைத்து மாநிலக் குழு
எல்லா முதலமைச்சர்களையும் அல்லது அவர்களது நியமனதாரர்களையும் கொண்டு அனைத்து மாநிலக் குழு அமைக்கப்பட
வேண்டும். அதில் எல்லா மாநிலங்களுக்கும் சமப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும். இந்தியாவின் தலைமை அமைச்சர் இதன் தலைவராக இருக்க வேண்டும். மைய அமைச்சர் எவரும். இக்குழுவில் உறுப்பினராக இருக்கக்கூடாது.
பாதுகாப்பு, அயல்நாட்டு உறவுகள், மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து, நாணயச் செலாவணி ஆகியவை குறித்து எடுக்கப்பட வேண்டிய எந்த ஒரு நடவடிக்கையும், மைய-மாநில உறவை அல்லது மாநிலங்களைப் பாதிக்கிற வரையில் அதைப் பொறுத்து, அனைத்து மாநிலக் குழு கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.
இதைப்போலவே, மைய அரசு மேற்கொள்ளும் பொருளாதார, நிதி, பணம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் விவாதிக்கும் வாய்ப்பையும் அனைத்து மாநிலக் குழு கொண்டிருக்க வேண்டும்.
அரசியலமைப்பின் 263-வது பிரிவில் சொல்லப்பட்டுள்ள அனைத்து மாநிலக் குழு பயனற்றது: அதனால் எவ்வித பலனும் கிட்டாது.
அனைத்து மாநிலக் குழுவின் பரிந்துரைகள் மைய அரசையும், மாநில அரசுகளையும் கட்டுப்படுத்துவதாய் இருக்கவேண்டும். பரிந்துரை எதுவும் ஏதேனும் காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டால், அந்தப் பரிவுரையும், அந்தப் பரிவுரை நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களும் நாடாளுமன்றத்தின் முன்பும் மாநிலச் சட்டமன்றங்களின் முன்பும் வைக்கப்படவேண்டும்.
பொதுப் பட்டியலின் கீழ் வரும் சட்டமியற்றும் அதிகாரம்.
பொதுப் பட்டியலில் கண்டுள்ள எந்த ஒரு பொருள் குறித்தும் நாடாளுமன்றத்தில் சட்டவரைவு எதுவும் அறிமுகம் செய்யப் படுவதற்குமுன் அனைத்து மாநிலக் குழுவும், மாநில அரசுகளும் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். இது சம்பந்தப்பட்ட சட்ட வரைவு அறிமுகம் செய்யப்படும்போது, அனைத்து மாநிலக் குழுவின் கருத்துரைகளும், மாநில அரசுகள் கருத்துத் தெரிவித்திருப் பின் அந்தக் கருத்துக்களின் சுருக்கமான விவரமும் நாடாளு மன்றத்தின்முன் வைக்கப்பட வேண்டும்.
எஞ்சியுள்ள அதிகாரங்கள்.
சட்டமியற்றுவது, வரி விதிப்பதுபற்றிய எஞ்சியுள்ள அதிகாரங்கள் மாநிலச் சட்டமன்றங்களிடம் நிலைபெற்றிருத்தல் வேண்டும்.
154, 258-ஆவது பிரிவுகள்.
மாநில அரசுக்கும் மாநில அதிகாரமன்றங்கட்கும் அதிகாரம் வழங்குவதற்கான சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றுவதற்கான அதிகாரம் அளிக்கின்ற பிரிவுகள் நீக்கப்பட வேண்டும்.
169-ஆவது பிரிவு.
சட்டமன்ற மேலவைகளை எடுத்துவிடுவதற்கான அல்லது அமைத்திடுவதற்கான அதிகாரம், நாடாளுமன்றச் சட்டம் இயற்யறும் தேவையில்லாமலேயே, மாநிலச் சட்டமன்றப் பேரவைகளிடம் நிலைபெற்றிருத்தல் வேண்டும்.
249-ஆவது பிரிவு.
மாநிலப் பட்டியலில் காணும் எப்பொருள் குறித்தும் சட்டமியற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரமளிக்கிற இந்தப் பிரிவு நீக்கப்பட வேண்டும்.
252-ஆவதுபிரிவு.
இரண்டு அல்லது மேற்பட்ட மாநிலங்களின் இசைவைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றம் சட்டமியற்றுவதற்கு அதிகார மளிக்கும் இப்பிரிவு நீக்கப்படவேண்டும்.
மாநிலச் சட்ட வரைவுகளை குடியாட்சித் தலைவரது ஆய்வுக்காக
ஒதுக்குதல்.
மாநிலச் சட்ட வரைவுகளை, குடியாட்சித் தலைவரது ஆய்வுக் காகவும், இசைவுக்காகவும் ஒதுக்குவது குறித்த பிரிவு நீக்கப்பட வேண்டும். சட்டமியற்றும் பொதுப் பட்டியலின் வரம்புக்குள் வரும் விவகாரங்கள் குறித்து மையச் சட்டத்தைவிட மாநிலச் சட்டமே மேலோங்கியிருக்க வேண்டுமென்கிற வகையில் 254-ஆ வது பிரிவு திருத்தப்பட வேண்டும்.
ஆளுநர் அவசரச் சட்டத்தை பிரகடனம் செய்தல்.
ஓர் அவசரச் சட்டம் பிரகடனம் செய்யப்படுவதற்கு முன் குடியாட்சித் தலைவரின் கட்டளைகளைப் பெறும் அவசியத்தை ஏற்படுத்துகிற 213(1) பிரிவுக்கான நிபந்தனை நீக்கப்பட வேண்டும்
மானியங்கள்.
ஐந்தாண்டுத் திட்டச் செலவுக்காகவும், திட்டத்தின்கீழ் வராத செலவுகளுக்காகவும் மாநிலங்களுக்கு மைய அரசு அளிக்கின்ற மானியங்கள், நிதி ஆணைக்குழு அல்லது அதைப்போல் சட்டப்படி அமைந்த அமைப்பு போன்ற தனிப்பட்ட, பாரபட்சமற்ற அமைப்பு ஒன்றின் பரிந்துரைகளின்படியே வழங்கப்பட வேண்டும்.
நிதி ஆணைக்குழு.
அரசியலமைப்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள நிதி ஆணைக்குழு மாநிலங்களின் நிதிவாயில்களையும் தேவைகளையும் பரிசீலிக்கிறது. ஆனால் அது, மைய அரசு நிதி நிலையைப் பொறுத்து இதைப் போன்ற அலுவலை நிறைவேற்றுவதில்லை. எனவே, மைய அரசின் நிதிவாயில்களையும் தேவைகளையும்கூட அவ்வப்போது மதிப்பிட வேண்டுமென்பது அவசியம். இதற்கிணங்க, மாநிலங்களின் நிதி வாயில்களையும் தேவைகளையும் மட்டுமல்லாமல் மைய அரசின் நிதி வாயில்களையும் தேவைகளையும்கூட ஆய்வு செய்வதற்கான அதிகாரம் நிதி ஆணைக்குழுவிற்கு வழங்கிட வேண்டும். அப்போது மைய அரசு அதன் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான தொகைகளை நிதி ஆணைக்குழு பரிந்துரை செய்யும். அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட தொகைகள், மைய அரசு விதிக்கும் வரிகளிலிருந்து ஒதுக்கப்பட வேண்டும்.
நிதி ஆணைக்குழு அதற்கு உரித்தான செயலகத்துடன் நிலையான அமைப்பாக விளங்க வேண்டும்.
அனைத்து மாநிலக் குழுவைக் கலந்தாலோசித்துக் கொண்டு நிதி ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
நிதி ஆணைக் குழுவின் பரிந்துரைகள், மைய அரசு, மாநிலங்கள் ஆகிய இரு தரப்பினர்களையும் கட்டுப்படுத்துமென்று அரசியலமைப்பில் வகை செய்யப்பட வேண்டும்.
மாநிலங்களின் கடன்களும், கடன் சுமையும் .
கூட்டாட்சிக் கடன் ஆணைக்குழு ஒன்று இருக்க வேண்டும் மாநிலங்களின் கடன் சுமை பற்றிய எல்லா பிரச்சினைகளையும் இக்குழு ஆய்வு செய்யவேண்டும். இந்த ஆணைக்குழு நாளடைவில் கூட்டாட்சி வளர்ச்சி வங்கியாகச் செயல்பட வேண்டும். இது மைய, மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும். வெளிச் சந்தையிலிருந்து திரட்டும் கடன்களுக்குமேல் மைய அரசோ மாநில அரசோ கடன் வேண்டுமென்று செய்துகொள்ளும் விண்ணப்பங்களை இந்த வங்கி பரிசீலிக்க வேண்டும்.
இடருதவி நிதி.
இயற்கைப் பேரிடர்களினால் ஏற்படும் இன்னல்களைத் தீர்ப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் இடருதவி நிதி இருக்க
வேண்டும். சீரமைப்புப் பணிகளுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படலாம்.
திட்ட ஆணைக்குழு.
திட்ட ஆணைக்குழுவானது, மைய நிர்வாகக் கட்டுப்பாட்டிலோ அல்லது அரசியல் கட்சிச் சார்புள்ளதாகவோ இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படும் ஓர் அமைப்பாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தை எய்த, திட்ட ஆணைக்குழுவினை நிறுவ வகைசெய்யும் சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டு அது சட்டப்படி அமைதல் வேண்டும்.
சட்டப்படி அமைக்கப்படும் திட்ட ஆணைக்குழுவில் பொருளாதார, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் வேளாண்மைத் துறை வல்லுநர்களும் பிற வகை தேசீய பணியைச் சேர்ந்த வல்லுநர்களும் மட்டுமே இடம் பெற வேண்டும். இந்திய அரசைச் சேர்ந்த அமைச்சர் எவரும் அதில் இடம் பெறலாகாது. இது தொடர்பாக இயற்றப்படவிருக்கும் சட்டத்தில், திட்ட ஆணைக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலம், பணி நிபந்தனைகள் ஆகிய வற்றிற்கு வகை செய்யப்படல் வேண்டும். இந்த திட்ட ஆணைக் குழுவிற்கென்று தனியே ஒரு செயலகம் இருத்தல் வேண்டும். தற்போதுள்ள திட்ட ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும்.
திட்ட ஆணைக்குழுவின் பணி, மாநிலங்கள் உருவர்க்கும் திட்டங்கள் குறித்து அறிவுரை வழங்குவதாக இருத்தல்வேண்டும்.
மாநிலங்களால் அல்லது மாநிலங்களில் தொடங்கப்படும் தொழில் திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு அன்னியச்செலாவணி வழங்குவது தொடர்பாக, நிதி ஆணைக்குழுவினால் பரிசீலிக்கப்படுவதற்கு பரிந்துரைகள் செய்ய வேண்டியதும் இதன் பொறுப்பாகவே இருக்கும் நிதி ஆணைக்குழு மானியங்களுக்குப் பரிந்துரை செய்கையில், திட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாநிலமும் தனக்கென ஒரு திட்ட வாரியத்தை அமைத்துக் கொள்ளலாம்.
திட்டமிடுதலும், வளர்ச்சியும்
1951-ஆம் ஆண்டு தொழில்கள் (வளர்ச்சியும் ஒழுங்கு முறையும்) சட்டம் (மத்தியச் சட்டம் 65/1951) ரத்து செய்யப்பட வேண்டும்.
புதியதொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்திவருவதற்கும், மாநிலத்திற்குள் புதிய தொழில் நிறுவனத்தைத் தொடங்குவதற்காக உரிமம் வழங்குவதற்கும் மாநிலத்திற்கு அதிகாரம் இருத்தல் வேண்டும். ஒரு மாநிலத்தால் உரிமம் வழங்கப்பட்ட அல்லது தொடங்கப்பட்ட ஒரு தொழில் நிறுவனத்திற்கு அன்னியச் செலாவணி தேவைப்படுமானால், தேசியத் திட்ட முன்னுரிமைகள், தேசியத்தேவை மதிப்பீடு, செய்திப்பகிர்வு முறை ஆகியவற்றுக்கு உட்பட்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் மொத்த மானிய வடிவில் அவ்வுதவி அளிக்கப்படல் வேண்டும்.
நீதித்துறை
உச்சநீதி மன்றம்
மைய – மாநிலப் பிரச்சினைகள் உட்பட அரசியலமைப்புப் பிரச்சினைகள், அல்லது மத்தியச் சட்டத்திற்குப் பொருள் விளக்கம் கூறுதல் ஆகியவை தவிர்த்த வேறு எந்த சாதாரண உரிமை இயல் குற்றவியல், அல்லது பிற வழக்குகளில், எவ்வளவு தொகை சம்பந் தப்பட்டிருப்பினும், என்ன தண்டனை விதிக்கப்பட்டிருப்பினும், அத்தகையவற்றில் உயர்நீதி மன்றங்களிலிருந்து உச்சநீதி மன்றத்திற்கு மேன்முறையீடு இருத்தல் கூடாது. நீதிபதிகளை நியமிக்கும் போது, கூடியமட்டிலும் திறமைக்குக் குந்தகமில்லாதவாறும். நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கு பல்வேறு பகுதிகளில் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர் சங்கங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இருக்குமாறும் பார்த்துக்கொள்வது விரும்பத் தக்கதாகும்.
உயர்நீதி மன்றங்கள்.
உயர்நீதி மன்றத்தின் அமைப்பு, நிர்வாகம் சம்பந்தமாகச் சட்டமியற்றும் அதிகாரம், மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதால், 217, 222, 223, 224, 224-ஏ பிரிவுகளைப் பொருத்தமான முறையில் திருத்த வேண்டியுள்ளது; அல்லது விட்டுவிட வேண்டியுள்ளது.
உயர்நீதி மன்றத்தின் ஆய்வுரை கோரல்.
மாநிலச் சட்டம் ஒன்றினுடைய ஒரு குறிப்பிட்ட பிரிவு அரசியலமைப்புச்சட்டத்திற்கு முரணாயுள்ளதென்று உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்படும்பொழுதெல்லாம், அந்த வழக்கை, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்ட – அவர்களில் ஒருவர் தலைமை நீதிபதியாக இருக்கவேண்டும் – முழு நீதிபதி ஆயத்திடம் ஒப்படைப்பதற்காக உயர்நீதி மன்றத்தை கேட்டுக் கொள்வதற்கான உரிமையை மாநில அரசு பெற்றிருத்தல்வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்ட நீதிபதி ஆயம், சம்பந்தப்பட்ட சட்டத்தின் ஒவ்வொரு பிரிவையும் ஆராய வேண்டும்; அது தன்னுடைய தீர்ப்பினை வழங்கிய பின்னர், அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்னும் காரணத்தைக் கொண்டு அச்சட்டத்தின் பிரிவு எதுபற்றியும் வாதிடக்கூடாது. பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் அல்லது பொருண்மை குறித்து உயர்நீதி மன்றத்தின் அறிவுரைக் கருத்தினைக் கேட்டறிய மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
ஆளுநர்.
ஆளுநர் பதவி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விட்டுச்சென்ற ஒரு பதவியாகும். ஆளுநர் நியமனம் குறித்து நமது அரசியலமைப்பில் வகை செய்யப்பட்டுள்ளது மக்களாட்சி முறையில் காலத்திற்கு ஒவ்வாத ஒன்றாகும். இவர், மத்திய அரசால் நியமிக்கப்பட்டு மத்திய அரசுக்குப் பொறுப்புள்ள அதிகாரியாவார். எனவே, உள்ளூர் நிலைமைகளையும் அரசியல் நிலைமையையும் இவர் அறிந்திருக்க முடியும் என்று எதிர்பார்க்க இயலாது. ஆளுநர் பதவிக்காகச் செய்யப்படும் செலவு சமதர்ம சமுதாய முறைக்கு ஏற்றதாக இல்லை. இச்செலவு வீணானது ; இதனைக் கைவிடலாம். அமைச்சர், ஆளுநருக்குக் கீழ்ப்பட்டவர் என்று ராவ் ஷிவ்பகதூர் சிங்கிற்கும் விந்தியப் பிரதேச அரசுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது (1953 S.C R 1188). இவ்வாறாக, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் சட்ட கோட்பாட்டின்படி மைய அரசுப் பிரதிநிதியின் ஊழியராக இருக்கிறார். ஆளுநர் பதவியை எடுத்து விடுவதற்கு உற்ற தருணம் இதுவேயாகும்.
மரணம், பதவி துறப்பு முதலிய காரணங்களினால் முதலமைச்சர் பதவி காலியானால், மேற்கு ஜெர்மனியில் பின்பற்றப்படும் நடைமுறையின்படி அடுத்த முதலமைச்சர் குறிப்பிட்ட கால அளவிற்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் படாவிடில் சட்டமன்றப் பேரவை தானாகவே கலைந்து விட்டதாக கொள்ளப்படும். இத்தகைய இடைக்கால அளவில் புதிய முதலமைச்சர் பொறுப்பேற்கும் வரை மாநிலத்தின் தலைமை நீதிபதி நிர்வாகப் பொறுப்பினை ஏற்கலாம். இக்கருத்துக்குப் பின்னணியாக அமைந்துள்ள கோட்பாடு ஏற்றுக்கொள்ளப் பட்டால், ஏனைய விவரங்கள் தொகுக்கப்படலாம்.
மேற்கு ஜெர்மானிய நடைமுறையின்படி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் நிர்வாகத் தலைமை அகற்றப்படலாம். இது “ஆக்க முறையிலான நம்பிக்கையில்லாத் தீர்மானம்” என்றழைக் கப்படுகிறது. இத்த நடைமுறையின்படி, அடுத்த முதலமைச்சர் தேர்வு பற்றிய கால அளவு நம்பிக்கையில்லாத் தீர்மானத்துடன் அனுப்பப்பட்டாலன்றி நிர்வாகத் தலைமை, அகற்றப்பட முடியாது. இதைப் போன்றதொரு முறை இங்கேயும் பின்பற்றப்படலாம். ஆளுநர் தற்போது கவனித்து வரும் அலுவலை முதலமைச்சர் கவனிக்கலாம். இடைக்காலம் ஏற்பட்டால் முதலமைச்சர் இல்லாத மாநிலத்தின் தலைமை நீதிபதியே அந்த அலுவல்களை ஆற்றலாம்.
நெருக்கடிகால அதிகாரங்கள்.
356, 357 பிரிவுகள், மாநிலங்களில் குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சியைத் திணிக்க நெருக்கடி கால அதிகாரங்களை அளிக்கின்றன. இப்பிரிவுகள் நீக்கப்பட வேண்டும்.
பிரிவு 365. – மைய அரசு கட்டளைகள் பிறப்பிப்பதற்கான பிரிவுகள் விடப்பட்டுள்ளன. எனவே, இப்பிரிவும் நீக்கப்பட வேண்டியுள்ளது.
தேசீய நெருக்கடி நிலை
பிரிவுகள் 352, 354.- நெருக்கடி நிலையை பிரகடனம் செய்வது தொடர்பாக 352, 354 பிரிவுகளின்கீழ் உள்ள அதிகாரங்கள், அவை தொடர்பான அதிசாரங்கள் ஆகியவை, போரோ, ஆக்கிரமிப்போ இருந்தாலன்றி செயல்படுத்தப்படக்கூடாது.
பிரிவு 353(ஏ). – நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள போது போர் அல்லது ஆக்கிரமிப்பு குறித்து மட்டுமே கட்டளைகள் பிறப்பிப்பதற்கான அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அனைத்து மாநிலக் குழுவின் அனுமதியுடன் மட்டுமே அத்தகைய கட்டளைகள் பிறப்பிக்கப்பட வேண்டும். பிரிவு 355. – போர் அல்லது ஆக்கிரமிப்பின்போது மட்டுமே ஒவ்வொரு மாநிலத்தையும் பாதுகாப்பது மைய அரசின் கடமையாகும்.
நிதி நெருக்கடி நிலை-
பிரிவு 360. – இந்தியாவின் நிதி நிலை உறுதிக்கு அல்லது நாணயத்திற்கு அபாயம் ஏற்படும் நேர்வுகளில், நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு நீக்கப்படவேண்டும்.
அரசுப் பணிகள்.
இரண்டு வகைப் பணிகள் மட்டுமே இருக்கவேண்டும் –
(1) மைய அரசுப் பணிகள்.
(2) மாநில அரசுப் பணிகள்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகள் உட்பட தற்போதுள்ள அனைத்து இந்தியப் பணிகள் மைய அரசுப் பணிகளுடனோ மாநில அரசுப் பணிகளுடனோ இணைக்கப்பட வேண்டும்.
மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வு, பணி நிபந்தனைகள் ஆகியவை மாநிலங்களால் தொடர்ந்து முறைப்படுத்தப்பட வேண்டும். கூட்டாட்சி அரசுப் பணிகளுக்கான தேர்வு தற்போதுள்ள நடைமுறையையொட்டி இருக்கும். அத்தகைய தேர்வு ஒவ்வொரு மாநிலத்திலும் அரிசனங்கள், பழங்குடி மக்கள், பின்தங்கிய வகுப்பினர் ஆகியோரின் எண்ணிக்கையை ஒட்டி அவர்களுக்குப் பதவிகள் ஒதுக்குவதற்கான ஏற்பாட்டுடன் மாநில வாரியான அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.
கூட்டாட்சி அரசுக்கும் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கும் இடையே ஒப்புக்கொள்ளக்கூடிய வரையறைகள் – நிபந்தளைகளின் படி, மாநில அரசுப் பணியாளர்களையும், கூட்டாட்சி அரசுப் பணியாளர்களையும் பரஸ்பரம் மாற்றிக் கொள்ள வழிவகை இருத்தல் வேண்டும்.
பிரிவு 312. – அனைத்திந்தியப் பணிகள், புதிய அனைத்திந்தியப் பணியை உருவாக்குதல் ஆகியவை தொடர்பான இந்தப் பிரிவு நீக்கப்படவேண்டும்.
மைய அரசுப் பணியாளர்களின் ஊதியங்கள்.
மைய, மாநில அரசுப்பணியாளர்களின் ஊதியங்கள்.
உள்ளூர் அல்லது தனி நிலைகளுக்குரிய சலுகைகள் அளிக்கப்பட்டு, நாடு முழுவதும் ஒருபடித்தாக அமைய வேண்டும்.
மாநில அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழு
மாநில அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழு, அதன் உறுப்பினர்களை நீக்குதல் அல்லது தற்காலிகமாகப் பணியிலிருந்து நிறுத்தி வைத்தல் ஆகியவை தொடர்பான அதிகாரம் மாநில அரசிடமே இருத்தல் வேண்டும்.
மாநில ஆட்சிப் பகுதி.
ஒரு மாநிலத்தின் ஆட்சிப்பகுதி ஒருமைப்பாட்டில், பின்வரும் மூன்று மாற்று வகைகளில் யாதேனு மொன்றிற்கிணங்க அல்லாமல், மற்ற எம்முறையிலும் தலையிடுதல் கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்திலேயே தெளிவாக வகை செய்யப்பட வேண்டும்.
(1) தொடர்புள்ள மாநிலச் சட்டமன்றத்தின் இசைவைப் பெறவேண்டும்.
(2) இவ்வழக்கினை போட்டியிடும் தரப்பினரின் இசைவுடன் இதற்கென அமைக்கப்படும் உயர்நிலை நீதிமுறை தீர்ப்பாயத்தினிடம் ஒப்படைக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட வேண்டும் அதனுடைய தீர்ப்பு எல்லாத் தரப்பினரையும் கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும்
(3)தொடர்புடைய பகுதியின் அல்லது பகுதிகளின் மக்களுடைய கருத்தைத் தனி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அறிந்திட வேண்டும்.
அதாவது 3, 4 பிரிவுகள் நீக்கப்பட வேண்டும். ஒரு மாநிலத்தின் எல்லைகள், பகுதி முதலியவற்றை மாற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டியது அவசியமாகும்.
நாடாளுமன்றத்தில் மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம்
மாநிலங்கள் அவை
ஒவ்வொரு மாநிலத்திற்கும் LOLDT GOT பிரதிநிதித்துவம் இருத்தல் வேண்டும். அதாவது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் மக்கள் தொகை யாதாயினும் பிரதிநிதிகள் சம எண்ணிக்கையில் இருக்கவேண்டும்.
மாநிலங்களவைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படக்கூடாது.
மக்கள் அவை
1951-ல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அறுதியிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தாலன்றி, மற்றபடி மாற்றம் செய்யப்படாமல், இருந்தவாறே. இருக்க வேண்டும். மக்கள் தொகை அதிகரித்திருந்தால், அதிக அளவு எண்ணிக்கை ஒன்றிற்குட்பட்டு, இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் ஆயினும், 1951-ல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அறுதியிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை எந்நிலையிலும் குறைக்கப்படக்கூடாது.
மொழி.
மைய அரசின் ஆட்சி மொழி, அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது விவரப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள அனைத்து மொழிகளாகவும் இருக்க வேண்டும். இந்நிலையினை எய்தும் வரை, மைய அரசு தலைமைச் செயலகம் உட்பட மைய அரசுத் துறைகளனைத்திலும், மைய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே தொடர்பு கொள்ளவும் ஆங்கிலமே தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். உச்ச நீதி மன்றத்தில் ஆங்கிலமே தொடர்ந்து பயன்படுத்தப்படவேண்டும். உயர் நீதிமன்றம் உட்பட நீதிமன்றங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் ஆட்சி மொழியை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யவேண்டும். மாநிலத்தில் உள்ள மைய அரசின் அலுவலகங்கள் பொதுமக்களுடன் அலுவல் தொடர்பு கொள்வதற்கு ஆங்கிலத்துடன் அந்தந்த மாநிலத்தின் ஆட்சி மொழியையும் பயன்படுத்த வேண்டும், மாநிலத்தில் அமைந்துள்ள மைய அரசின் அலுவலகங்களால் மாநில அரசோடும். அதன் அலுவலகங்களோடும் மேற்கொள்ளப்படும் தகவல் தொடர்புகள், அந்த மாநிலத்தின் ஆட்சி மொழி வாயிலாகவே நடைபெறல் வேண்டும். மாநிலத்தில் பணிபுரியும் மைய அரசுப்பணியாளர்கள் அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியை நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.
வர்த்தகமும் வாணிபமும்.
பிரிவு 302 – மாநிலங்களுக்கிடையே வர்த்தகத்தின்மீதும் வாணிபத்தின்மீதும் பிறதொடர்புகள்மீதும் தடைகள் விதிக்க நாடாளுமன்றத்திற்கு இப்பிரிவு அதிகாரம் அளிக்கிறது. இது நீக்கப்பட வேண்டும்.
பிரிவு 304 (பி) – மாநிலச் சட்டமன்றம் இயற்றும் சட்டவரைவுகளுக்கு குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று கோரும் 304 (பி) பிரிவின் நிபந்தனை நீக்கப்பட வேண்டும்.
பொது ஒழுங்கமைதி.
மாநில அரசு கேட்டுக்கொள்வதன் பேரிலோ அதன் இசைவின் பேரிலோ அன்றி, மற்றப்படி எந்த ஒரு மாநிலத்திற்கும் மத்திய ரிசர்வ் காவல் படை அனுப்பப்படக் கூடாது.
மாநிலச் சட்டமன்றத்தின் தேர்தல்களை நடத்துவதற்கான பணியாளர் அமைப்பு.
1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்,1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகிய இருசட்டங்களின் பிரிவுகளும், அவற்றின் கீழ் இயற்றப்பட்ட விதிகளும் நாடாளு மன்றத் தேர்தல்களுக்குப் பொருந்துசின்ற வசையில் திருத்தப்பட வேண்டும். மாநிலச் சட்டமன்றங்களின் தேர்தல் குறித்து, மாநிலச் சட்டமன்றங்கள் சட்டங்கள் இயற்ற முழு உரிமை பெற்றவையாக இருக்கவேண்டும்.
மாநிலங்களுக்கிடையே ஏற்படும் நீர்பற்றிய தகராறுகள்.
பல மாநிலங்களிடையே ஓடும் ஓர் ஆறு குறித்து நீர் பற்றிய தகராறு எழுமாயின், சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு கலந்து பேசப்படும் போது, குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்பந்தங்கள் ஏதும் ஏற்படாவிடில், குறித்த காலவரைக்குள் பிரதமரால் அப்பிரச்னை தீர்த்து வைக்கப்பட வேண்டும் உடன்படிக்கை ஏதும் செய்யப்படாவிடில், குறிப்பிட்ட காலத்திற்குள் மைய அரசே இத் தகராறை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இத் தகராறு குறித்த வழக்கினை மைய அரசு கவனிக்கத் தவறினால் தகராறுக்குரிய தரப்பினர் எவரேனும் அவ் வழக்கினை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் வழக்கு உச்ச நீதிமன்ற அனைத்து நீதிபதிகளும் கொண்ட ஆயத்தால் விசாரிக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைச் செயல்படுத்துவதற்கு வேண்டும் வகையில் விதிகள் இயற்றப்படவேண்டும்.
ஆட்சிப் பகுதியிலுள்ள கடற் படுகை
ஒரு மாநிலத்தை ஒட்டி அதன் ஆட்சிப் பகுதியான கடலின் கீழே உள்ள நிலங்கள், கனிப் பொருள்கள், விலை மதிப்புள்ள பிற பொருள்கள் யாவும் அந்த மாநிலத்திற்கே உரியனவாகும் வகையில் பிரிவு 297 திருத்தப்படவேண்டும்.
மைய நிர்வாகத் துறை.
நாடாளுமன்ற முறைக்கும், அது சம்பந்தப்பட்ட அனைத்து முறைகளுக்கும் ஏற்றதாய், நாட்டின் பல்வேறு வட்டாரங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறும் வகையில், மைய அமைச்சரவை அமையும் வகையில் மரபுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்;
அமைச்சரவைத் தரம் உள்ள மைய அமைச்சர்களின் எண்ணிக்கை, எந்த ஒரு தனி மாநிலத்தைப் பொறுத்த வரையிலும் மொத்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதிக்கு மேற்படக் கூடாது.
மைய, மாநில உறவு குறித்துப்பரிசீலிக்க நிர்வாகச் சீர்திருத்த ஆணைக் குழுவால், திரு. எம். சி. செதல்வாட் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு, மாநிலப் பட்டியல்கள் பொதுப் பட்டியல்கள் விவகாரங்களைக் கவனிக்கின்ற மைய அமைப்புகளின் பணி பற்றி ஒரு முழு அத்தியாயத்தில் விளக்கி உள்ளது. ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளின்படி, வேலை இனங்கள் மாநிலங்களுக்கிடையே பரவலாக்கப்பட வேண்டும். மைய அரசு வழிகாட்டியாகவும், திட்ட ஆலோசகராகவும், பணி மதிப்பீட்டாளராகவும், அமைதல் வேண்டும். மாநிலப் பட்டியலின் வரம்பிற்குள் வருகிற பொருள்களைப் பொறுத்தமட்டில் மைய அமைச்சகங்கள், மையத் துறைகள் ஆகியவற்றின் பணி குறைக்கப்பட வேண்டும் என்று நிர்வாகச் சீர்திருத்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. மாநிலப் பட்டியலின் கீழ்வரும் எப்பொருளைக் குறித்தும் பரிசீலிப்பதற்காக மையத்தில் தனி அமைச்சகமோ, துறையோ இருக்க வேண்டிய தேவை இல்லை.
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம்
அர சியலமைப்புச் சட்டத்தில் எந்த ஒரு விதித்துறை சம்பந்தப்பட்டதாய் இருப்பினும், அதில் செய்யப்படும் ஒவ்வொரு திருத்தமும் அனைத்து மாநிலங்களாலும் ஏற்புறுதி பெற வேண்டும்.
சட்டமியற்றும் அதிகாரம்.
அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 7-வது இணைப்பில் மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் என்ற தலைப்புகளின் கீழ் நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்கள் ஆகியவற் றின் சட்டமியற்றும் அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. இராஜ மன்னார் குழுவின் பரிந்துரைகளைக் கவனத்திற்கொண்டு, நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை, மாநிலங்களுக்கிடையே போக்குவரத்துத் தொடர்புகள், நாணயச் செலாவணி ஆகியவைகளைக் குறித்த அதிகாரங்கள் மாத்திரம் கூட்டாட்சி அரசுக்கு ஒதுக்கப்பட்டு, எஞ்சிய அதிகாரங்கள் உட்பட, மற்ற எல்லா அதிகாரங்களும் மாநிலங்களுக்கு மட்டுமே இருக்கும் வகையில் உண்மையான கூட்டாட்சி அரசை நிறுவும் நோக்குடன் மேற் சொன்ன அதிகார விவரப் பட்டியலை ஆய்ந்து, அவற்றைக் கூட்டாட்சிப் பட்டியல் மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் என்ற தலைப்புகளின்கீழ் வகுத்துத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
கூட்டாட்சிப் பட்டியல்
சட்டமியற்றும் அதிகாரங்கள் சம்பந்தமாக மைய அரசுப் பட்டியல் பின்வரும் பதிவுகள் கூட்டாட்சிப் பட்டியலில் அப்படியே வைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
பாதுகாப்புக்குப் படை திரட்டுவது உட்பட இந்தியப் பாதுகாப்பும், அது சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பணியும், போர்க்காலங்களில் உசிதமாய் இருக்கக்கூடிய எல்லா வகையான நடவடிக்கைகளும், அவை தொடரப்படுவதும், போர்க்காலம் முடிந்ததும் ராணுவத்தைக் கலைப்பதற்கான நடவடிக்கைகளும்;
மைய அரசின் கப்பற்படை, ராணுவப்படை, விமானப் படைகள், அதைச் சேர்ந்த ஆயுதப்படை;
பாளையப் பகுதிகளை வரையறுத்தல், அந்தப் பகுதிகளில் உள்ளாட்சி, அந்தப் பாளையப் பகுதிகளுக்குள் அதிகார மன்றங்கள் அமைப்பும் அதன் அதிகாரங்களும், அத்தப் பகுதிகளில் வாடகைக் கட்டுப்பாடு உட்பட வீட்டு வசதியை முறைப்படுத்துதல்.
கப்பற்படை, ராணுவப்படை, விமானப் படைப் பணிகள்;
ஆயுதங்கள், சுடு படைக்கலன்கள், துப்பாக்கி மருந்துகள்,
வெடி மருந்துகள் ;
நாட்டின் பாதுகாப்பைப் பொறுத்த மட்டில், அணுசக்தியும், அதன் உற்பத்திக்கு அவசியமான கனிவள வாயில்களும்;
பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லது போர் தொடருவதற்காக அவசியமாய் இருக்கக்கூடிய தொழிற்சாலைகள்;
மத்தியப் புலனாய்வுக் குழுவும், புலனாய்வும்;
பாதுகாப்பு, அயல்நாட்டு உறவுகள் அல்லது இந்தியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தடுப்புக்காவல், அத்தகைய தடுப்புக் காவலுக்கு உட்பட்ட நபர்கள்;
அயல்நாட்டு உறவுகள், அயல் நாடு ஒன்றுடன் மையஅரசைத் தொடர்புபடுத்தும் விவகாரங்கள்; அரசியல், அயல்நாட்டு வணிகப் பிரதிநிதித்துவம்;
ஐக்கிய நாடுகள் சபை
உலக நாடுகள் மாநாடுகளிலும், சங்கங்களிலும் ஏனைய அமைப்புகளிலும் கலந்துகொண்டு அவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்துதல்;
அயல்நாடுகளுடன் உடன்படிக்கைளையும், ஒப்பந்தங்களையும் எழுதிக்கொண்டு அந்த உடன்படிக்கைகளையும், ஒப்பந்தங்களையும் நடைமுறை மரபுகளையும் செயல்படுத்துதல்;
போரும், அமைதியும்;
அயல்நாட்டு அதிகார வரம்பு;
குடியுரிமையும், அயல் நாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்குதலும்,
நாடு கடந்து வந்த குற்றவாளிகளை அந்நாட்டவரிடமே ஒப்படைத்தல்;
இந்தியாவில் சேர்த்துக்கொள்ளுதல், இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்குக் குடியேறுதல், இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்குக் கடத்தி விடுதல்,
கடவுச் சீட்டுகளும் விசாக்களும்;
இந்தியாவுக்கு வெளியே உள்ள இடங்களுக்கு யாத்திரைகள்;
கடலில் அல்லது விமானத்தில் செய்யப்படும் கொள்ளைக் குற்றங்களும், பிற குற்றங்களும் ;
நிலத்தில், அல்லது கடலில் அல்லது விமானத்தில் பன்னாட்டுச் சட்டத்திற்கு எதிராகச் செய்யட்படும் குற்றங்கள்;
மாநிலங்களிடையே ரெயில்வேக்கள்;
கடல் சார்ந்த இடங்களில் கப்பல் வாணிகமும், கப்பல் போக்குவரத்தும்; கப்பல் வாணிகத் துறையில் கல்வி அளிப்பதும் பயிற்சி அளிப்பதும் அதனை முறைப்படுத்துதலும்; கலங்கரை விளக்கங்கள், சரக்கு இறக்கப்பட்ட கப்பல்கள், வழிகாட்டும் விளக்குகள் உட்பட கலங்கரை விளக்கங்கள், கப்பல், விமானப் பாதுகாப்புக்கான வேறு ஏற்பாடுகள்;
பெரிய துறைமுகங்களும் அவற்றின் எல்லைகளை வரையறுத்தல் உட்பட துறைமுக அதிகார மன்றங்களின் அமைப்பும், அதன் அதிகாரங்களும்;
துறைமுகத் தொற்றுத் தடைக்காப்பும் அது சம்பந்தப்பட்ட மருத்துவ மனைகளும், மாலுமிகள், மருத்துவ மனைகள், கடல் வணிகர் மருத்துவ மனைகள்;
விமானப் போக்குவரத்து, விமானம், விமானங்கள் செலுத்துதல் ; விமானத் தளங்களை அமைத்தல்; விமானத் தளங்களை முறைப் படுத்துதலும் சீரமைத்தலும்; விமான இயல் கல்வி அளித்தல், அக்கல்விப் பயிற்சியை முறைப்படுத்தல்;
மாநிலங்களுக்கு இடையே செல்லும் ரயில், கப்பல், விமானங்களில் பயணிகளையும், சரக்குகளையும் ஏற்றிச் செல்லுதல்;
தபால், தந்தி, தொலைபேசிகள்;
மைய அரசின் சொத்தும் அதிலிருந்து கிடைக்கும் வருவாயும்; ஒரு மாநிலத்தில் உள்ள சொத்தைப் பொறுத்தவரையில், இது மாநில அரசு சட்டமியற்றுவதற்கு உட்பட்டதாகும்;
இந்திய சமஸ்தான மன்னர்களின் எஸ்டேட்டுகளுக்கான கோர்ட் ஆஃப் வார்டுகள்;
மைய அரசின் பொதுக்கடமை;
நாணயம், நாணயம் அச்சிடுதல், சட்டப்படி செலாவணியாகும் நாணயங்கள், அன்னியச் செலாவணி;
அன்னியக் கடன்கள்;
மைய ரிசர்வ் முறையில் அமைந்த ரிசர்வ் வங்கி;
அயல் நாடுகளுடன் வர்த்தகம், வாணிகம்; சுங்க எல்லைகளுக்கு அப்பால் இறக்குமதியும் ஏற்றுமதியும்; சுங்க எல்லைகளின் பொருள் விளக்கம்;
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவிருக்கும் பொருள்களின் தரவரையறைகளைக் குறிப்பிடுதல்;
ஆட்சிப் பகுதியிலுள்ள கடலுக்கு அப்பால் மீன் பிடித்தலும்
மீன் வளமும்;
மைய அரசுப் பணியாளர்கள் தொடர்பான தொழில் தகராறுகள்;
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கக் காலத்தில் இருந்த தேசீய நூலகம், இந்திய அரும்பொருள் காட்சிசாலை + இம்பீரியல் போர் அரும்பொருள் காட்சிசாலை, விக்டோரியா நினைவுச் சின்னம், இந்திய போர் நினைவுச் சின்னம் போன்ற அமைப்புகள்;
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்த காசி இந்து பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், டில்லி பல்கலைக் கழகம் போன்ற நிறுவனங்கள்;
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு;
மைய அரசுப் பணிகளும் மைய அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழுவும்;
மைய அரசு ஓய்வூதியங்கள், அதாவது, இந்திய அரசால் அல்லது இந்தியத் தொகுதி நிதியிலிருந்து வழங்கப்படத் தக்க ஓய்வூதியங்கள்;
நாடாளுமன்றத்திற்கும், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் பதவிகளுக்கும் நடைபெறும் தேர்தல்கள்;
அத்தகைய தேர்தல்கள் தொடர்பான தேர்தல் ஆணைக் குழு;
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்கள் அவையின் தலைவர், துணைத் தலைவர், மக்களவையின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு வழங்கப்படும் சம்பளங்களும் படிகளும்,
நாடாளுமன்றத்தின் அவைகள் ஒவ்வொன்றுக்கும், அவை உறுப்பினர்களுக்கும், ஒவ்வொரு அவையின் குழுக்களுக்கும் உள்ள அதிகாரங்கள், சிறப்புரிமைகள், சட்ட விலக்கு உரிமைகள்; நாடாளுமன்றம் நியமிக்கும் நாடாளுமன்றக் குழுக்கள் அல்லது ஆணைக் குழுக்கள் முன்பாக சாட்சியம் அளிப்பதற்கு அல்லது ஆவணங்கள் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் வந்திருக்க வேண்டுமென்ற முறையை செயலுக்குக் கொண்டு வருதல்;
குடியரசுத் தலைவரின் சம்பளம், படிகள், சிறப்புரிமைகள், வராமலிருப்பது தொடர்பான உரிமைகள்; மைய அரசின் அமைச்சர்களுக்குரிய சம்பளங்களும், படிகளும்; மைய அரசின் தலைமைத்துவம் (Controller and Auditor-General) படிகள், விடுப்புகள் தொடர்பான உரிமைகள், ஏனைய பணி நிபந்தனைகள்;
மைய அரசின் கணக்குகளைத் தணிக்கை செய்தல்;
உச்சநீதி மன்றத்தின் அமைப்பு, ஒழுங்கு, நிர்வாகம், அதிகார வரம்பு (நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான அதிகாரம் உட்பட ) அதிலிருந்து பெறப்படும் கட்டணங்கள்; உச்ச நீதிமன்றத்தில் வழக்குறைஞர் தொழில்புரியும் தகுதி பெற்றுள்ளவர்கள்;
சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அனுமதியைப் பெற்று மைய ஆட்சிப் பகுதிக்கு ஓர் உயர் நீதி மன்றத்தின் அதிகார வரம்பை விரிவுபடுத்தலும், உயர்நீதி மன்றம் பெற்றுள்ள அதிகார வரம்பை நீக்கி விடுதலும் ;
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்தில் குடியேறுதல், மாநிலங்களுக்கிடையே தொற்றுநோய்த் தடைகாப்பு;
ஏற்றுமதித் தீர்வைகள் உட்பட, சுங்கத் தீர்வைகள்;
மைய அரசுப் பட்டியல் தொடர்பான பொருள் குறித்த சட்டத்திற்கு எதிராகச் செய்யப்படும் குற்றங்கள்;
மைய அரசுப் பட்டியலில் கண்டுள்ள ஒரு பொருள் தொடர்பான காரியத்திற்கு மேற்கொள்ளப்டும் விசாரணைகள், ஆய்வுகள், புள்ளி விவரங்க;
மைய அரசுப் பட்டியல் குறித்த பொருள் தொடர்பாக, இந்திய உச்ச நீதிமன்றம் நீங்கலாக, எல்லா நீதிமன்றங்களும் பெற்றுள்ள அதிகார வரம்பும், அதிகாரங்களும், கப்பற்படை ஆட்சிக் குழு அதிகார வரம்பு;
மைய அரசுப் பட்டியல் குறித்த ஒரு பொருள் தொடர்பாக வசூலிக்கப்படும் கட்டணங்கள்; ஆனால், எந்தவொரு நீதிமன்றத்திலும் வசூலிக்கப்படும் கட்டணங்கள் இவற்றில் அடங்கா.
மாநில அரசுப் பட்டியல்
(1) மாநில அரசுப் பட்டியலில் வைத்துக்கொள்ளப்படும் சட்டமியற்றும் அதிகாரங்கள்.
மாநில அரசுப் பட்டியலில் சட்டமியற்றும் அதிகாரங்கள் சம்பந்தமான பின்வரும் பதிவுகள் வைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
பொது ஒழுங்கு (சிவில் அதிகாரத்திற்கு உதவியாக கடற்படை, இராணுவம் அல்லது விமானப் படைகள் அல்லது யூனியனின் ஏனைய ஆயுதப் படை ஆகியவற்றைப் பயன்படுத்துதல் இதில் சேராது).
இரயில்வே காவல் படை, கிராமக் காவல் படை உட்பட காவல் படைகள்.
நீதி, நிர்வாகம்; உச்ச நீதிமன்றம் நீங்கலாக அனைத்து நீதிமன்றங்களின் அமைப்பும் நிர்வாகமும்; உயர் நீதிமன்ற அதிகாரிகளும் பணியாளர்களும் வாடகை வருவாய் நீதிமன்றங்களின் (Rent and Revenue Courts) வழக்கு நடைமுறைகள் ; உச்ச நீதி மன்றம் நீங்கலாக, எல்லா நீதிமன்றங்களிலும் வசூலிக்கப்படும் கட்டணங்கள்.
சிறைச்சாலைகள், சீர்திருத்தப்பள்ளிகள், இளைஞர் சீர்திருத்தப் பள்ளிகள், அவையொத்த பிற அமைப்புகள், அவற்றில் வைக்கப்பட்டுள்ள நபர்கள், சிறைச்சாலைகளையும் பிற நிறுவனங்களையும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பிற மாநிலங்களுடன் செய்து கொள்ளப்படும் ஏற்பாடுகள்;
உள்ளாட்சி, அதாவது, நகராட்சி மன்றங்களின் அமைப்பும் அதிகாரங்களும், மேம்பாட்டுப் பொறுப்புக் கழகங்கள், மாவட்ட வாரியங்கள், சுரங்க ஏற்பாட்டு அதிகார மன்றங்கள், சுயேச்சையான உள்ளாட்சி அல்லது கிராம நிர்வாகத்திற்கான ஏனைய உள்ளாட்சி மன்றங்கள்;
பொதுச் சுகாதாரமும் துப்புரவும்; மருத்துவ மனைகளும் மருந்தகங்களும்;
இந்தியாவிற்கு வெளியேயுள்ள இடங்கள் நீங்கலாக பிற இடங்களுக்கு யாத்திரைகள் செய்தல்.
போதையூட்டும் மதுவகைகள், அதாவது, போதையூட்டும் மதுவகைகளை உற்பத்தி செய்தல், தயார் செய்தல், வைத்திருத்தல், போக்குவரத்து செய்தல்,வாங்குதல், விற்பனை செய்தல்.
உடல் ஏலாமையுற்றவர்களுக்கும் வேலையில் அமர்த்தப்பட இயலாதவர்களுக்கும் நிவாரணம் அளித்தல்.
புதைத்தலும் இடுகாடுகளும்; எரியூட்டலும் சுடுகாடுகளும்.
பல்கலைக் கழகங்கள் உட்பட, கல்வி
மாநில அரசு கட்டுபாட்டின் கீழுள்ள அல்லது மாநில அரசின் செலவில் நடைபெறும் நூலகங்கள், அரும்பொருட்காட்சி சாலைகள் அவைபோன்ற பிற நிறுவனங்கள்; பண்டைய சரித்திரப் புகழ் வாய்ந்த நினைவுச் சின்னங்கள், பதிவேடுகள்.
போக்குவரத்து அதாவது சாலைகள், பாலங்கள், ஓடத் துறைகள் ஏனைய போக்குவரத்துகள், நகராட்சி டிராம் வண்டிப் பாதை,சாலைகள், உள்நாட்டு நீர் வழிகள், கப்பற்பாதை, இயந்திர சக்தியினால் இயக்கப்படும் வண்டிகள் நீங்கலாக ஏனைய வண்டிகள்.
வேளாண்மைக் கல்வி. ஆராய்ச்சி, பூச்சித் தடுப்பு, பயிர் நோய்த்தடுப்பு உட்பட வேளாண்மை.
கால் நடைகளைப் பேணுதல், பாதுகாத்தல், மேம்படுத்துதல், கால்நடை நோய்த் தடுப்பு, கால்நடை மருத்துவப் பயிற்சி, வைத்தியம்.
கால்நடை அடைப்பு கொட்டகைகள், கால்நடைகள் அத்து மீறுவதைத் தடைபடுத்துதல்.
தண்ணீர், அதாவது தண்ணீர் வழங்கல், கால்வாய்களும், வடிகால்களும், கரைகளும், நீர்த்தேக்கங்களும், நீர் சக்தியும்.
நிலம், அதாவது நிலத்திலோ அல்லது நிலத்தின் மீதோ, உள்ள உரிமைகள், நிலச்சுவான்தாருக்கும் குடியானவருக்கும் உள்ள தொடர்பு உட்பட நில உரிமை முறைகளும் குத்தகை வசூலும்; வேளாண்மை நிலத்தை மாற்றுதலும் செய்தலும்; நில மேம்பாடும் வேளாண்மைக் குடியேற்றம். பராதீனம் கடன்களும்.
காடுகள்.
வனவிலங்குகளையும் பறவைகளையும் பாதுகாத்தல்.
மீன் வளங்கள்.
1-வது பட்டியலில் கண்ட விதித்துறைகளுக்குட்பட்டு கோர்ட் ஆஃப் வார்டுகள், வில்லங்கத்திற்குட்பட்டவைகளும் ஜப்தி செய்யப் பட்டவைகளுமான எஸ்டேட்டுகள்;
சுரங்கங்களை முறைப்படுத்துதலும் கனிப் பொருள்களை மேம்பாடு செய்தலும்.
1-வது பட்டியலில் கண்ட விதித்துறைகளுக்குட்பட்ட தொழில்கள்
எரிவாயு, எரிவாயு உற்பத்தித் தொழிற்சாலைகள், மாநிலத்திற்குள் வியாபாரமும் வாணிகமும், பண்டங்களின் உற்பத்தி, வழங்கல், வினியோகம், அங்காடிகளும் சந்தைகளும்.
எடைகளும் அளவைகளும் – தர நிர்ணயம் நீங்கலாக.
லேவாதேவித் தொழிலும் கடன் விவசாயிகளின் கடன் நிவாரணம். கொடுப்பவர்களும்:
விடுதிகளும் விடுதிக்காரர்களும்,
கழகங்களையும், பல்கலைக் கழகங்களையும் சட்டப்படி இணைத்தலும் முறைப்படுத்தலும், கலைத்தலும், சட்டப்படி இணைக்கப்பட்டிராத வியாபார, இலக்கிய, விஞ்ஞான, சமய சங்கங்களும், சுழகங்களும்; கூட்டுறவுச் சங்கங்கள்.
அரங்குகளும், நாடக நிகழ்ச்சிகளும்; திரைப்படங்கள், விளையாட்டுகள், வேடிக்கைகள், கேளிக்கைகள்.
பந்தயம் கட்டுதலும் சூதாடுதலும்.
மாநிலத்திடம் நிலைபெற்றிருக்கும் அல்லது அதன் வசமிருக்கும் பணிகளும், நிலங்களும், கட்டிடங்களும்.
மாநிலச் சட்டமன்றத்திற்குத் தேர்தல்கள்.
சட்டமன்றத்தின் உறுப்பினர்கள், சட்டமன்றப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர், சட்டமன்ற மேலவை இருந்தால் மேலவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் சம்பளங்களும் படிகளும்.
சட்டமன்றப் பேரவை, உறுப்பினர்கள் குழுக்கள், சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள், குழுக்கள் ஆகியவற்றின் அதிகாரங்களும் சிறப்புரிமைகளும், பாதுகாப்புகளும்; மாநிலச் சட்டமன்றக் குழுக்களின் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கோ ஆவணங்கள் கொடுப்பதற்கோ நபர்கள் வந்திருக்கும்படி செய்தல்
மாநில அமைச்சர்களின் சம்பளங்களும் படிகளும்.
மாநில அரசுப் பணிகள்; மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணைக்குழு.
மாநில ஓய்வூதியங்கள், அதாவது மாநில அரசால் அல்லது மாநிலத்தின் தொகுதி நிதியிலிருந்து கொடுக்கத்தக்க ஓய்வூதியங்கள்.
மாநிலத்தின் பொதுக் கடன்.
புதையல்.
நிலவரி – வரி விதித்தலும் வசூலித்தலும், நிலப்பதிவேடுகளைப் பேணி வருதலும்; நிலவரிக்கான ஆய்வு, நில உரிமைப் பதிவேடுகள் வரிகளைப் பராதீனம் செய்தல்.
வேளாண்மை வருமான வரிகள்.
வேளாண்மை நிலத்திற்கு வாரிசுரிமை குறித்த வரிகள்.
வேளாண்மை நிலம் குறித்த மரண வரி.
நிலங்கள், கட்டிடங்கள் இவற்றின் மீது வரிகள்.
கனிப் பொருள்கள் பற்றிய உரிமைகள் மீது வரிகள்.
மாநிலத்தில் தயாரிக்கப்படும் அல்லது உற்பத்தி செய்யப்படும் பின்வரும் பண்டங்கள்மீது ஆயத் தீர்வைகளும், இந்தியாவில் வேறெங்கணும் தயாரிக்கப்படும் அல்லது உற்பத்தி செய்யப்படும். அதேமாதிரியான பண்டங்களின் மீது அதே வீதங்களின் படியோ அல்லது குறைந்த வீதங்களின் படியோ எதிர்த் தீர்வைகள்-
(அ) மனிதர்கள் உட்கொள்ளும் மது பானங்கள்.
(ஆ) அபினும், இந்திய சணலும், போதை உண்டாக்கும் பிற மருந்துச் சரக்குகளும், போதை பொருள்களும்
உள்ளூர்ப் பகுதிக்குள் செலவழிப்பதற்கோ பயன்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ பொருள்களைக் கொண்டு வருவதன்மீது வரிகள்,
மின்சாரப் பயன் வரி அல்லது மின்சார விற்பனை வரிகள்.
செய்தித் தாள்கள் நீங்கலாக ஏனைய பொருள்களின் விற்பனை அல்லது வாங்குதல் மீது வரிகள், விளம்பரங்கள் மீது வரிகள், சாலை அல்லது உள்நாட்டு நீர் வழிகள் மூலமாக ஏற்றிச் செல்லப் படும் பொருள்கள் மீதும் பயணிகள் மீதும் வரிகள்.
சாலைகளில் பயன்படுத்தத்தக்க வண்டிகளின் மீது – டிராம் வண்டிகள் உட்பட விசையினால் இயக்கப்பட்டாலும் இயக்கப் படாவிட்டாலும் – வரிகள்.
விலங்குகளின் மீதும் படகுகளின் மீதும் வரிகள்.
சுங்க வரிகள்.
தொழில்கள், வாணிபங்கள், அலுவல்கள், வேலைகள் இவைகளின் மீது வரிகள்.
தலைகட்டு வரிகள்.
ஆடம்பரப் பொருள்களுக்கு வரிகள், வேடிக்கைகள் கேளிக்கைகள்,பந்தயம் கட்டுதல், சூதாட்டம் இவைகளின் மீது விதிக்கப்படும் வரிகள் உட்பட, ஆவணங்கள் குறித்து முத்திரைத் தாள் தீர்வை வீதங்கள்.
இப்பட்டியலில் உள்ள பொருள்களில் எதுபற்றியேனும் செய்த சட்டங்களுக்கு விரோதமான குற்றங்கள்.
இப் பட்டியலில் உள்ள பொருள்களில் எதுபற்றியேனும் எல்லா நீதிமன்றங்களின் – உச்ச நீதிமன்றம் தவிர – அதிகார வரம்பும் அதிகாரங்களும்.
இப்பட்டியலில் உள்ள பொருள்களில் எதுபற்றியேனும் கட்டணங்கள், ஆனால் நீதிமன்றத்தில் வாங்கப்படும் கட்டணங்கள் நீங்கலாக.
(2) தற்போதைய மைய அரசுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் சட்டமியற்றும் அதிகாரங்கள்.
மைய அரசுப் பட்டியலில் சட்டமியற்றும் அதிகாரங்கள் சம்பந்தமான பின்வரும் பதிவுகள் மாநில அரசுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளன.
பாதுகாப்புக் காரியங்கள் தவிர மற்ற காரியங்களுக்காக அணு சக்தியும், கனிப்பொருள் வாயில்களும்.
மாநிலத்திற்குள் அமைந்துள்ள ரயில்வேக்கள்.
மாநிலத்திற்குள் அமைந்துள்ள நெடுஞ்சாலைகள் அனைத்தும்
விசையினால் இயக்கப்படும் மரக்கலங்கள் தொடர்பாக உள்நாட்டு நீர் வழிகளில் செல்லும் கப்பல்களும் அவற்றைச் செலுத்துதலும்; அத்தகைய நீர் வழிகளில் சாலை விதிகள்.
மாநிலத்திற்குள் பயணிகளையும் சரக்குகளையும் ரயில்வேக்களில் எடுத்துச் செல்லுதல்.
கம்பி இல்லாத் தந்தி, ஒலிபரப்பு, டெலிவிஷன் இவை போன்ற ஏனைய செய்திப் பரப்பு முறைகள்.
சேமிப்பு வங்கி
பரிசுச் சீட்டுகள்.
மாநிலங்களுக்கிடையே வர்த்தகம்,வாணிபம்.
வங்கி, காப்புறுதிக் கழகங்கள், நிதிக் கார்ப்பரேஷன்கள் உட்பட தொழில் கழகங்களை இணைத்தல், முறைப்படுத்துதல், கலைத்து விடுதல்.
வர்த்தகக் கழகங்களாயிருப்பினும் இராவிடினும் அவற்றை இணைத்தல், முறைப்படுத்துதல், கலைத்துவிடுதல்.
வங்கி நடவடிக்கைகள்.
காப்புறுதி
பங்கு மாற்று நிலையங்கள், வாய்தா மார்க்கெட்டுகள்.
எண்ணெய் புலங்கள், கனி எண்ணெய்ப் பொருள் வாயில்கள் இவற்றை முறைப்படுத்துதலும் வளர்ச்சியடையச் செய்தலும்.
பெட்ரோலியமும், பெட்ரோலியப் பொருள்களும் ஏனைய திரவங்களும் பொருள்களும்.
சுரங்கங்களிலும் எண்ணெய் வயல்களிலும் வேலை செய்தலையும் பாதுகாப்பையும் முறைப்படுத்துதல்
ஆட்சிப் பகுதியில் அடங்கிய கடற்பகுதிக்குள் மீன் பிடித்தலும் மீன் வளங்களும், உப்பு உற்பத்தி, வழங்கல், பங்கீடு; ஆகியவற்றை முறைப் படுத்துதலும் கட்டுப்படுத்துதலும்.
அபினி சாகுபடி, உற்பத்தி, ஏற்றுமதிக்கான விற்பனை.
திரைப்படங்களைக் காட்டுவதற்கு அனுமதி கொடுத்தல்.
அறிவியல் அல்லது தொழில் நுட்பக் கல்விக்கான நிலையங்கள்
காவல்துறை அதிகாரிகளின் பயிற்சி உட்பட தொழில், வாழ்க்கைத் தொழில் அல்லது தொழில் நுட்பப் பயிற்சிக்கான நிறுவனங்கள்; அல்லது சிறப்பு ஆய்வுகள் அல்லது ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான பயிற்சி நிலையங்கள்; அல்லது குற்றங்களைப் புலனாய்வு செய்தல் அல்லது கண்டுபிடித்தல் குறித்த அறிவியல் அல்லது தொழில் நுட்ப உதவிக்கான நிலையங்கள்.
உயர்கல்வி அல்லது ஆராய்ச்சிக்கான நிறுவனங்கள், விஞ்ஞான நிறுவனங்கள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் இவற்றின் தரங்களை நிர்ணயித்தல்.
பண்டைய நினைவுச் சின்னங்கள், வரலாற்றுச் சின்னங்கள், ஆவணங்கள், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் சிதைவுகளும்.
மாநிலச் சட்டமன்றங்களுக்கு நடைபெறும் தேர்தல்கள், இத்தகைய தேர்தல்கள் குறித்த தேர்தல் ஆணைக்குழு.
மாநிலக் கணக்குகளின் தணிக்கை.
(உயர்நீதி மன்றத்தின் விடுமுறை நாட்கள் உட்பட) உயர்நீதி மன்றத்தின் அமைப்பும் ஒழுங்கும்; உயர்நீதி மன்றத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் குறித்த விதித்துறை, உயர்நீதி மன்றத்தின் முன் வழக்குரைஞர் தொழில் நடத்த உரிமை பெற்றவர்கள்.
வருமான வரி.
சாராயம் அல்லது பிற பொருள் அடங்கிய மருந்து ஒப்பனைப் பொருள்கள் உட்பட புகையிலை, ஏனைய பொருள்களின் மீது ஆயத்தீர்வை, கார்ப்பரேஷன் வரி.
தனியார், கம்பெனிகள் ஆகியோரின் இருப்புகளின் மூலதன மதிப்பின் மீது விதிக்கப்படும் வரிகள்; கம்பெனிகளின் மூலதனத்தின் மீது விதிக்கப்படும் வரிகள்.
சொத்துக்களின் மீதான மரண வரி.
சொத்து வாரிசுரிமை சம்பந்தமான வரிகள்.
ரயில், கப்பல் அல்லது விமானம் மூலமாக ஏற்றிச் செல்லப்படும் பண்டங்கள், பயணிகள் மீது இறுதிமுனை வரி (Terminal Tax) மாநிலத்திற்குள் ரயில்வே கட்டணங்கள், சரக்குக் கட்டணங்கள் மீது வரி.
பங்கு மாற்று நிலையங்கள், வாய்தா மார்க்கெட்டுகள் இவற்றின் விவகாரங்களின்மீது முத்திரைத்தாள் தீர்வை நீங்கலாகப் பிற வரிகள்.
மாற்று உண்டியல்கள், காசோலைகள், கடன் உறுதிச் சீட்டுகள், கப்பல் சரக்குப்பட்டிகள், பண அனுமதிச் சீட்டுகள், இன்சூரன்ஸ் பாலிசிகள், பங்குகள் மாற்றம், கடன் ஈட்டுறுதி ஆவணங்கள், பிரதிநிதிச் சீட்டுகள், ரசீதுகள் இவைபற்றிய முத்திரைத்தாள் தீர்வை வீதங்கள்.
செய்திப் பத்திரிகைகள் விற்றல் அல்லது வாங்குதல் மீதும் அவற்றில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மீதும் விதிக்கப்படும் வரிகள்.
செய்தித் தாள்கள் நீங்கலாகப் பிற பண்டங்களை விற்றல் அல்லது வாங்குதல் மீது விதிக்கப்படும் வரிகள்.
I, III, பட்டியல்களில் குறிப்பிடப்படாத வரிசள் உட்பட எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும்.
(3) கூட்டுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் சட்டமியற்றும் அதிகாரங்கள்.
பொதுப் பட்டியலில் சட்டமியற்றும் அதிகாரங்கள் சம்பந்தமான பின்வரும் பதிவுகள் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட் டுள்ளன.
குற்றவியல் சட்டம், இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் தொடக்கத்தில் இந்திய குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தும் உட்பட – ஆனால், மையஅரசுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள பொருள்கள் குறித்த சட்டங்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் நீங்கலாக; சிவில் அதிகாரத்திற்குத். துணையாக மைய அரசின் கடற்படைகள், ராணுவப் படைகள் அல்லது விமானப் படைகள் அல்லது வேறு எந்த ஆயுதம் படைகளையாவது பயன்படுத்துதல் நீங்கலாக.
குற்றவியல் வழக்கு முறை – இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கத்தில் குற்றவியல் வழக்குமுறைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த பொருள்கள் அனைத்தும் உட்பட.
நாட்டின் பாதுகாப்பு, பொது அமைதியைப் பாதுகாத்தல் அல்லது சமுதாயத்திற்கு இன்றியமையாத பொருள்கள் வழங்குதலையும் பணிகளையும் பாதுகாத்தல், இவைபற்றிய காரியங்களுக்காக தடைப் பாதுகாவல்; அத்தகைய பாதுகாவலுக்கு உட்பட்ட வரிகள்.
விவாகமும் விவாகரத்தும்; சிசுக்கள், மைனர்கள் ; சுவீகாரம். உயில், உயிலற்ற நிலை, வாரிசுரிமை; பிரிவினையாசாத குடும்பம். பாகப் பிரிவினை; இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கத்திற்கு அடுத்து (முன்னதாக நீதிமன்ற நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் எந்தெந்தப் பொருள்கள் குறித்து சொந்த உரிமைகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தார்களோ அப்பொருள்கள் அனைத்தும்.
சொத்து மாற்றம்; பத்திரங்கள், ஆவணங்கள் பதிவு.
ஒப்பந்தங்கள் – கூட்டுப் பங்கு, முகமை, பொருள்களை ஏற்றிச் செல்லுவதற்கான ஒப்பந்தங்கள், ஏனைய வகை சிறப்பு ஒப்பந்தங்கள் உட்பட.
வழக்குத் தொடரக்கூடிய தவறுகள்.
நொடிப்பு நிலையும் கடன் தீர்க்கச் சக்தியின்மையும்.
பொறுப்புக் கழகங்களும் அறங்காவலர்களும்.
அட்மினிஸ்ட்ரேட்டர் ஜெனரல்களும் பொறுப்புச் சொத்து ஆட்சியர்களும்.
சாட்சியங்களும் உறுதி மொழிகளும். சட்டங்களையும் பொதுக் காரியங்களையும், ஆவணங்களையும் நீதி மன்ற நடவடிக் கைகளையும் அங்கீகரித்தல்.
இந்த அரசியலமைப்பின் தொடக்கத்தில் உரிமையில் நடைமுறைச் சட்டக் கோவையில் சேர்க்கப்பட்டுள்ள எல்லாப் பொருள்களும் உட்பட உரிமையியல் நடைமுறை, கால வரம்பு, நடுவர் முடிவு.
நீதிமன்ற அவமதிப்பு: உச்ச நீதிமன்ற அவமதிப்பு இதில் அடங்காது.
நாடோடித் தன்மை ; நாடோடி இனத்தவரும், இடம் விட்டு இடம் செல்லும் இனத்தவரும்.
புத்தி சுவாதீனமின்மையும், மூளை வளர்ச்சியடையாமையும் புத்தி சுவாதீனமற்றவர்களுக்கும், மூளை வளர்ச்சி அடையாதவர்களுக்கும் சிகிச்சையளிக்கும் இடங்கள், அவர்களைப் பேணும் இடங்கள் ஆகியவை உட்பட.
விலங்குகளுக்குத் தீங்கு இழைப்பதைத் தடுத்தல். உணவுப் பொருள்களிலும் ஏனைய பண்டங்களிலும் கலப்படம் செய்தல்.
மருந்துகளும், நச்சுப் பொருள்களும்.
பொருளாதார சமூகத் துறைகளில் திட்டமிடுதல்.
வணிக, தொழில் ஏகபோக உரிமைகளும், வணிகச் சங்கக் கூட்டு நிறுவனங்களும், பொறுப்புக் கழகங்களும்.
தொழிற்சங்கங்களும், தொழில், தொழிலாளர் தகராறுகளும்
சமூகப் பாதுகாப்பு, சமூகக் காப்புறுதி, வேலைவாய்ப்பு வேலையின்மை.
பணி நிலைமைகள் உட்பட தொழிலாளர் நலன், வருங்கால வைப்பு நிதிகள், தொழிலதிபர்களின் பொறுப்பு, தொழிலாளர்களுக்கு இழப்பீடு, ஏலாமை ஓய்வூதியங்கள், முதியோர் உதவித் தொகைகள், பேறு காலப் பயன்கள்.
தொழிலாளர்களுக்கு வாழ்க்கைத் தொழில் பயிற்சியும், தொழில் நுட்பப் பயிற்சியும் அளித்தல்.
சட்ட, மருத்துவ, ஏனைய தொழில்கள்
அறம், அறநிலையங்கள். அறக்கட்டளைகள், சமயக் கட்டளைகள் சமய நிறுவனங்கள்.
பிறப்புகள், இறப்புகள் பதிவு உட்பட பிறப்பு இறப்புப் புள்ளி விவரங்கள்.
பெரிய துறைமுகங்கள் நீங்கலான துறைமுகங்கள்,
விசையால் இயக்கப்படும் கப்பல்களைப் பொறுத்த வரையில் உள்நாட்டு நீர் வழிகளில் கப்பல் போக்குவரத்து, அந்த நீர் வழிகளில் கப்பல்கள் செல்வதற்கான விதிமுறைகள், மாநிலத்திற்குள் உள்நாட்டு நீர் வழிகளில் பயணிகளையும், சரக்குகளையும் ஏற்றிச் செல்லுதல்.
கீழ்க்கண்ட பொருள்களில் வர்த்தகம் செய்தல் அல்லது வாணிசம் செய்தல், அவற்றை உற்பத்தி செய்தல், வழங்கல் பங்கீடு செய்தல்.
(அ) ஒரு தொழிலில் உற்பத்தியாகும் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்ட அதேவகைப் பொருள்கள்;
(இ) சமையலுக்கான எண்ணெய் வித்துக்கள், எண்ணெய்கள் உட்பட உணவுப் பண்டங்கள்.
(உ) கால்நடைத் தீவனம் – பிண்ணாக்கு ஏனைய செறிவுப் பொருள்கள்.
(எ) விதை நீக்கப்பட்ட அல்லது விதை நீக்கப்படாத கச்சாப் பருத்தியும், பருத்திக் கொட்டையும்.
(ஐ) கச்சாச் சணல்.
விலைக் கட்டுப்பாடு.
விசையினால் இயக்கப்படும் வண்டிகள் – அத்தகைய வண்டிகள் மீது வரிகள் எந்தக் கோட்பாடுகளையொட்டி விதிக்கப்பட வேண்டுமென்பது உட்பட.
தொழிற்சாலைகள்.
கொதிகலன்கள்.
செய்தித் தாள்கள், புத்தகங்கள், அச்சகங்கள்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சிதைவுகள்.
சொத்துக்களைக் கையகப்படுத்தலும், கேட்டுப்பெறுதலும்.
நில வரி நிலுவைகள், நில வரி நிலுவைகளைப் போல் வசூலிக் கத்தக்க தொகைகள் உட்பட ஒரு மாநிலத்தில் வரிகள், ஏனைய பொதுட்பாக்கிகள் தொடர்பாகச் செய்யப்படும் வசூல்கள்.
நீதித் துறை முத்திரைத் தாள்கள் வாயிலாக வசூலிக்கப்படும் தீர்வைகள், கட்டணங்கள் நீங்கலாக முத்திரைத் தாள் தீர்வைகள்; ஆனால், முத்திரைத் தாள் தீர்வை வீதங்கள் இதில் அடங்கா.
மா நிலப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள பொருள்களின் நோக்கங்களுக்காக விசாரணைகள், புள்ளி விவரங்கள்.
பொதுப்பட்டியல்
(1) அப்படியே வைத்துக்கொள்ளப்படும் சட்டமியற்றும் அதிகாரங்கள்.
பொதுப் பட்டியலில் சட்டமியற்றும் அதிகாரங்கள் சம்பந்தமான பின்வரும் பதிவுகள் அப்பட்டியலில் அப்படியே வைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
சிறைக் கைதிகளையும், குற்றம் சாட்டப்பட்டவர்களையும், தடுப்புக் காவல் கைதிகளையும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லுதல்.
மனிதர்கள், விலங்குகள் அல்லது பயிர்கள் தொடர்பான தொற்று நோய்கள் அல்லது எளிதில் பரவக்கூடிய நோய்கள் அல்லது பயிர் நோய்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குப் பரவுவதைத் தடுத்தல்.
அகதிகள் சொத்து என்று சட்டப்படி அறிவிக்கப்பட்ட சொத்துக்களைப் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளுதல், நிர்வகித்தல், முடிவு செய்தல்.
இந்தியா பாகிஸ்தான் நாடுகள் அமைக்கப்பட்டதன் காரணமாக தாம் வசிக்குமிடத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கி அவர்களுக்குப் புதுவாழ்வு அளித்தல்.
பொதுப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள்கள் ஏதேனும் ஒன்றின் நோக்கத்திற்காக விசாரணைகள், புள்ளி விவரங்கள்.
பொதுப் பட்டியலில் கண்டுள்ள பொருள்களில் ஒன்றின் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் நீங்கலாக, எல்லா நீதிமன்றங்களின் அதிகார வரம்பும். அதிகாரங்களும்.
பொதுப் பட்டியலில் கண்டுள்ள பொருள்களில் ஒன்றின் தொடர்பாகக் கட்டணங்கள்; ஆனால் ஒரு நீதிமன்றத்தில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் இதில் அடங்கா.
(2) தற்போதைய மைய அரசுப்பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட சட்டமியற்றும் அதிகாரங்கள்
மைய அரசுப் பட்டியலில் சட்டமியற்றும் அதிகாரங்கள் சம்பந்தமான பின்வரும் பதிவுகள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப் பட்டுள்ளன.
மாற்று உண்டியல்கள், காசோலைகள், கடனுறுதிச் சீட்டுகள் மற்றும் அது போன்ற ஏனைய உறுதிச் சீட்டுகள்.
பதிவுப் பொருள் தனியுரிமை (Patents) புதிய கண்டுபிடிப்புகள்,
வடிவமைப்புகள், பதிப்புரிமை, வணிகக் குறிகள், வணிகச் சரக்குக் குறிகள்.
தர எடைகள், அளவைகள்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிற அல்லது ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குப் போக்குவரத்து செய்யப்படுகிற சரக்குகளின் தரநிர்ணயம்.
மாநிலங்களுக்கிடையேயான ஆறுகளையும், ஆற்றுப் பள்ளத்தாக்குகளையும் முறைப்படுத்தலும், மேம்படுத்தலும்.
இந்திய சர்வே நிறுவனம், புவியியல், தாவரவியல், விலங்கியல், மனித இன ஆராய்ச்சி இயல், வானியல் நிறுவனங்கள்.
சட்டமியற்றும் அதிகாரங்கள் சம்மந்தமான பட்டியல்களில் செய்ய வேண்டிய மேற்சொன்ன மாறுதல்களையும் அதன் தொடர்பாகவும் விளைவாகவும், செய்யப்பட வேண்டிய திருத்தங்களையும் அரசியலமைப்புச் சட்டத்தில் செய்தல் வேண்டும்.
பாராட்டுரை
“திரு, மு. கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சராகப்
பொறுப்பேற்ற பின்னர், முதலமைச்சர் என்னும் முறையில் 1969 மார்ச்
17-ம் நாள் முதன் முதலாகப் புது டில்லிக்குச் சென்றிருந்தார். அவ்வமயம்
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெளிவரும் பத்திரிகைகளின் ஐம்பதுக்
கும் மேற்பட்ட செய்தியாளர்கள் பற்பல பொருள்கள் குறித்துத் துருவித் துருவி வினாக்களை எழுப்பினர். அவ்வினாக்களுக்கு விடையளிக்கையில்,
மைய-மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து, மைய அரசிலிருந்து மாநிலங்களுக்கு மாற்றப்படக் கூடிய அதிகாரங்களைப் பரிந்துரைப்பதற்காக, வல்லுநர் குழு ஒன்றினை அமைப்பது பற்றித் தமது அரசு ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டார். சட்ட நுட்பமும் அரசமைப்புச் சட்ட நுணுக்கமும் அறிந்த வல்லுநர்களையும் திறமைமிக்க கல்வி நிபுணர்களையும் இக் குழுவில் சேர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு மாற்றப்படுவதில், அதன் அதிகாரங்கள் சரணடையப் பட்டதாக மைய அரசு கருதாமல், அதன் சுமை குறைக்கப்படுவது குறித்து மகிழ்ச்சியடைய வேண்டுமென்று அவர் மேலும் கூறினார்.
அடுத்து, 1969 ஆகஸ்டு 19-ம் நாள், என்னைத் தலைவராகவும் டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார் அவர்களையும், திரு. பி. சந்திரா ரெட்டி அவர்களையும் உறுப்பினர்களாகவும் கொண்ட மூவர் குழு ஒன்று அமைக்கப்பட்டதாகச் சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார். மாநிலங்களுக்கு முழுமையான தன்னாட்சி உரிமை அளிக்கப்படும் வகையில் மாநிலங்கள் அதிகாரங்கள் எந்த வகையில் அதிகரிக்கப்பட வேண்டுமென்பதை இக்குழு ஆராயுமென்றும் அவர் கூறினார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்படும் அவசியம் குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமன்றி பிறமாற்றுக் கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளனவென்றும் குறிப்பிட்டார். உண்மையில், காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்கள் சிலரும் கூட மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டு மென்று விரும்பினர்.
மக்கள் பாராட்டிற்குரிய முதலமைச்சர் இந்தியாவிலேயே முதன் முறையாக இக்குழுவை அமைக்க எடுத்த இம் முடிவு அவரது மதி நுட்பம் மிக்க அரசியல் மேதைத் திறனுக்கும், தேசீயச் சிக்கல்களை அணுகும் சீரிய தன்மைக்கும், எதிர்கால நிகழ்வுகளைத் தெளிந்துணர்ந்து நோக்கும் வல்லமைக்கும் சான்று பகர்வதாகும். பிறரை ஈர்க்கும் சக்திவாய்ந்த இவர். பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ளார். நமது பரந்தநாட்டில் உண்மையான, என்றும் நிலைத்திடும் இணைப்பாட்சி அமைப்பை உருவாக்கிட அவரது குறிப்பிடத்தக்க தொண்டு, அதன் . வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்திடுமென்பதில் ஐயமில்லை.
பி .வி.ராஜமன்னார்
27, 1971 தலைவர், ராஜமன்னார் குழு
கழகத்தலைவர் கலைஞர் அளித்துள்ள
ஐம்பெரும் முழக்கங்கள்
- அண்ணா வழியில் அயராது உழைப்போம்..!
- ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்..!
- இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்..!
- வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்..!
- மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி..!
(முற்றும்)