திரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்

அ. மருதகாசி அவர்கள் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். அவர் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார். திரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்: இது பரணி பதிப்பகத்தால் 1986 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பு நூல்

DOWNLOAD :

(Available Formats)

“திரைக்கவி திலகம்” அ. மருதகாசி (பிப்ரவரி 13, 1920 – நவம்பர் 29, 1989) தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர். ஏறத்தாழ 4000-க்கும் மேற்பட்ட பாடல்களை 250-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார். கவிஞர் கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவருடைய பாடல்கள் எளிய தமிழில், ஆழமான கருத்துக்களுடன், கிராமிய மணத்துடன் அமைந்திருக்கும். மெட்டுக்கு பாட்டு எழுதுவதில் வல்லவர்.

திரைக்கவி திலகம்

அ. மருதகாசி

பாடல்கள்

M. A. வேணு அவர்களின் வாழ்த்துக்கள்

நான் மாடர்ன் தியேட்டரின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த நேரத்தில் 1947-ல் மாயாவதி படத்திற்குப் பாடல் எழுத ஆரம்பித்தவர். மெட்டுக்குப் பாட்டமைப்பதில் குறிப்பிடத்தக்கவர். என் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றவர். T.R.S. அவர்களிடமும் அப்படியே, நான் மாடர்ன் தியேட்டரை விட்டு விலகி வந்து ஆரம்பித்த பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். பணத்தைப் பெரிது பண்ணாது நட்புக்கே மதிப்புத் தருபவர். வாழ்விலும் தாழ்விலும் ஒரே சீராக நடந்துவருபவர். அவரது திரைப்படப் பாடல் தொகுப்பு வரப்போவது அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் பெற்ற விருதுகளும் பட்டங்களும் பலப்பல :

  1. திரைக்கவி திலகம் 1959 (குடந்தை வாணி விலாச .சபா) 2.”கலைமாமணி” 1969. இயல், இசை, நாடக மன்றம், 3.தமிழக அரசு பரிசு! 1969, 4. V.G.P. அன்னை சந்தனம்மாள் பரிசு 1984, 5.கவியரசு கண்ணதாசன் நினைவுப் பரிசு 1985. அவருடைய எல்லாப் பாடல்களுமே புத்தக வடிவெடுக்க விரும்புகிறேன். ஆண்டவனும், தமிழக மக்களும் அவருக்கு அந்த சக்தியை அளிக்குமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்

எம். ஏ. வேணு

எம். ஏ. வி. பிக்சர்ஸ்

 

 

 

பாவலர்க்குப் பாராட்டு!

 

கி.மு, கி.பி. என்று காலத்தைக் கணக்கிடுவார்கள். இந்திய மண்ணைப் பொறுத்தவரை சுதந்திரத்துக்கு முன் என்றும் பின்னென்றும் நம்மை நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். அந்த வகையில் இந்நூலாசிரியர் சுதந்திரத்துக்கு முற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஒரு நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் அவரும் ஒன்றாகவே கலையுலகில் காலடி எடுத்துவைத்தவர்கள். நான் ஒரு நாடகம் எழுதினேன். அதன் பெயர் : ”சூறாவளி” குடந்தையில் அரங்கேறிற்று அதன் பாடலாசிரியர் அவர்.

அவர் எழுத்திலே தமிழ் மரபிருக்கும், தமிழின் தரமிருக்கும், தமிழ்ப் பண்பாட்டின் பழைய மிடுக்கிருக்கும், புதிய பார்வையுமிருக்கும். அவர் ஒரு கவிஞர்; அல்ல, அதற்கும் மேலானவர். ஒரு நல்ல நண்பர்.

விலைக்கு எழுதும் வியாபார நோக்கு அவருக்கு இருந்ததில்லை. கலைக்கு எழுதும் கற்பனை போக்கு மிக்கவர். அவர்தான் மருதகாசி அவரை நான் மரியாதைகாசி என்பேன். அவர் தம் காரோட்டியைக் கூட அண்ணே வாங்க போங்க என்றே அழைப்பார்.

விவசாயி வியாபாரி ஆக முடியாது வியாபாரி விவசாயி ஆகக்கூடாது என்று ஆன்றோர் சொல்லுவர். பாரம்பரியமான இந்த விவசாயி, வியாபாரி ஆனார். அதுவும் திரைப்படத் தயாரிப்பில், அதுதான் தாளாத தளர்ச்சியையும் முதிர்ச்சியையும் அவருக்குத் தந்துவிட்டது.

அத்தடைகளையும் மீறி தமிழும் ஆர்வமும் அவரைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான படங்களுக்கு ஆயிரக்கணக்கில் பாடல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் ஒரு சில, தமிழ்க் கரங்களிலே தவழ ஒரு புத்தக வடிவெடுத்து வருகின்றன. தமிழ்த் திரைப்பட சரித்திரப் பாட்டையில் இது ஒரு சுவடு. பாடல்களுக்குப் பின்

 

ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. வரிசைப் படுத்தினால், இந்த இலக்கியம் நடந்து வந்த சுவடும், கடந்து வந்த காலப் போக்கும் இன்னதென்று புரியும். பாடல்களை இனம் பிரித்து வகைப்படுத்தியிருக்கிறார்.

“ஏர் முனைக்கு நேர் எதுவுமே இல்லை” என்று எழுதிய இவரது விவசாயப் பாடல்களுக்கு ‘நேர்’ திரைப் பாடல்களில் எதுவுமே இல்லை.

பல வருடங்களாக ஒவ்வொரு தைத்திங்களும், வானொலியில் ஒலிக்கும் இவரது “தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்” என்ற பாடலுடன் தான் பிறந்து கொண்டிருக்கிறது.

“கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவது உண்மைக் காதலே” ஆம்! கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்திடும் வண்ணத் தமிழ்ப் பெண்கள் உலா வரும், இவரது பாடல்களின் மேல் மக்களுக்கு உள்ள காதல் கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமையை இன்றும் தருவது உண்மையே.

“நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே” என்று நெஞ்சை உருக வைக்கும் சோக கீதங்கள்.

“வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே” எனும் தத்துவப் பாடல்கள், இப்படி இன்பம், துன்பம், சமூகம், தத்துவம், நகைச்சுவை, என்று எத்தனையோ வகையான இறவாப் பாடல்களை இவரது பேனா முனை தந்திருக்கிறது.

ஆக, கலையும் இலக்கியமும் நமக்கு இருக்கிறது என்பதற்குச் சான்றாகத் தம் அனுபவங்களையும், அறிவின் திறத்தையும் தமிழ்த் தொண்டாக்கி அரும்பணியாற்றிய பெருந்தகை திருமிகு மருதகாசி அவர்கள் நீடு வாழவும், நிறைபுகழ் பெறவும் இறைவனை வேண்டுகிறேன்.

அன்பன்

  1. K. வேலன்

 

 

 

 

கவிஞர் வாழ கந்தன் அருள்க!

மதிப்பிற்குரிய
மருத காசியார்
மூதறிவாளர்;
முத்தமிழ்க் கவிஞர்!
நதிப்புன லொழுக்காய்
நற்றமிழ் நடையில்
நல்ல பனுவல்கள்
நாளும் யாத்தவர்!

எளிய சந்தமும்
எழுச்சிப் பொருளும்
இணைந்த பாடல்
இவரது பாடல்:
எளியேன் போன்றோர்
இசைக்குப் பாடல்
எழுதுதற் கிவரே
இலக்கண மானார்!

பணமும் புகழும்
படைத்த நாட்களில்
பொறையைப் பேணும்
நிறைகுட மானவர்;
குணத்தில் சிறிதும்
கோதிலாச் செம்மல்;
குழந்தை மனத்தைக்
கொண்ட இப் பெரியார்!

 

படத்துறை இவரால்
பயன்கள் பெற்றது;
பழந்தமிழ் இவரால்
புதுத்தமி ழானது!
அடக்கம் இவரது
அணிகலம் என்பேன்;
அகந்தை யாதென
அறியாப் பெம்மான்;

ஆக்கிய பாடல்கள்
அச்சில் வருவதால்
அடுத்த தலைமுறைக்(கு)
அவைகள் உதவும்;
பாக்களின் மேன்மை
படித்தால் புரியும்;
பாமரன் என்னால்
புகலத் தரமோ?

செய்யநற் றமிழின்
கீர்த்திக ளனைத்தும்
சிந்துகள் மூலம்
செப்பிய மேதை!
வையம் பயனுற
வாழ்ந்திட என்றும்
வேலன் திருவடி
வணங்குகின்றேனே!

 

வாலி

2-2-86

 

 

 

தன்னிகரற்ற இன்னிசைக் கவிஞர்

பாட்டினைப் போல் ஆச்சரியம்

பாரின் மிசை இல்லையடா”

– என்று புத்துலகக் கவி பாரதியார் அன்று பாட்டின் பெருமையை வியந்து, பாராட்டிப் பாடினார். இன்று அந்த வரிகளுக்கு விளக்கமாக தமிழ்த் திரையுலகில் முடிசூடாப் பெருங்கவியாக விளங்கி வருகின்ற மதிப்புமிகு அண்ணன் மருதகாசி அவர்களின் பாடல்கள் விளங்குகின்றன. ஒரு காலத்தில் தமிழ்த் திரைப் பாடல்கள் இலக்கியமாக முடியுமா? என்ற வினா எழுந்ததுண்டு. அதற்கு, முடியும் என்று தங்களுடைய ஆற்றலால், அரிய படைப்புகளால் விடையளித்த கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்தவர், பெருங்கவிஞர் மருதகாசி அவர்கள் என்றால் மிகை இல்லை. அதற்குச் சான்றாக அவரின் இந்தத் திரைப்படப்பாடல் தொகுப்பு விளங்குகிறது. நான் சின்னஞ் சிறுவனாக உலவிய போது, செந்தமிழை உண்டு களிக்கக் கள்வெறி கொண்டு திரிந்தபோது, பாடி மகிழ்ந்த பாடல்களிலே அண்ணன் மருதகாசி அவர்களின் பாடல்கள் முன்னிடம் பெற்று இருந்தன.

“வாராய் நீ வாராய்!

போகுமிடம் வெகுதூரமில்லை நீவாராய்”

“மனுஷனை மனுஷன் சாப்பிடுறான்டா

தம்பிப்பயலே!-இது

மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக்கவலே!”

“உலவுந் தென்றல் காற்றினிலே

ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே!”

 

“கண்வழி புகுத்து கருத்தினில் கலந்த

மின்னொளியே ஏன் மௌனம்?

வேறெதிலே உந்தன் கவனம்?”

“மாசிலா உண்மைக் காதலே!

மாறுமோ செல்வம் வந்த போதிலே!”

“தென்றல் உறங்கிய போதும்

திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா? – காதல்

கண்கள் உறங்கிடுமா?”

“இதுதான் உலகமடா! – மனிதா

இதுதான் உலகமடா! – பொருள்

இருந்தால் வந்து கூடும்! – அதை

இழந்தால் விலகி ஓடும்!”

“ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே!

வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே”

என்று இப்படி எண்ணற்ற பாடல்களை என் இதயத்தேரில் ஏற்றி, ஊர்வலம் வந்த அந்த நாட்களை இன்று நினைத்தாலும் என் நெஞ்சில் இனிமை சுரக்கிறது.

“மணப்பாறை மாடு கட்டி

மாயவரம் ஏரு பூட்டி

வயல் காட்டை உழுதுபோடு சின்னக்கண்ணு!-பசுந்

தழையைப் போட்டு பாடுபடு செல்லக்கண்ணு”

போன்ற பாடலும்,

“ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமேயில்லே!

என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லே!”

“தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!

தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்!”

 

“விவசாயி! விவசாயி!

கடவுள் என்னும் முதலாளி

கண்டெடுத்த தொழிலாளி! விவசாயி!”

என்பன போன்ற பாடல்களும் அன்று காடுகரையெல்லாம். எதிரொலித்து மணமூட்டின, ஏன்? இன்றும் தான்!

“அந்தப் பாடலாசிரியரைச் சந்திக்கும் வாய்ப்பு வருமா?” என்று கூட ஏங்கியிருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு என்னையுமறியாமல் ஒரு நாள் திடீரென்று எனக்குக் கிடைத்தது. 1965-ம் ஆண்டு என்ற நினைவு. என் நண்பர் ஒருவருடன், திரைப்பட நடிகர் V. K. ராமசாமி அவர்கள் இல்லத்திற்குச் செல்கின்றேன், இரவு நேரம். திரு V. K. R. உடன் இன்னொரு பெரியவரும் பேசிக் கொண்டிருக்கிறார். அழைத்துச் சென்ற நண்பர் திரு V.K.R அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்துகிறார். அந்த நொடியே அவர் அருகில் அமர்ந்திருந்த பெரியவர், திடுமென எழுந்து என் கரங்களை சகோதர பாசத்தோடு, உரிமையோடு பற்றிக் கொண்டு உறவு கொண்டாடி நலம் விழைகிறார். முன் பின் அறியாத இளைஞனாகிய என்னை, அத்துணை பாசத்தோடு அரவணைத்துப் பாராட்டத் தொடங்கிய அவர்தான் பெருங் கவிஞர் மருதகாசி என்று அறிந்து, திகைத்துப் போய் விடுகின்றேன். அந்தக் கவிதைப் பெருமகனின் பணிவு, இன்னும் என்னுள் பசுமையாக நிழலாடிக் கொண்டிருக்கின்றது. ஏறக்குறைய 4000 பாடல்களை அரிய கவிதை இலக்கியச் சொத்தாக வழங்கி இருக்கின்ற அவரின் ஆற்றலால் தமிழ்க் கவிதை உலகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இன்னிசைத் துணையோடு எதிரொலித்து வரும் அந்தப் படைப்புகளெல்லாம் நூல் வடிவம் பெறவில்லையே என்று ஏங்கிக் கிடந்த, எண்ணற்றவர்களில் நானும் ஒருவன். திரைப்படப் பாடல்களை மக்கள் இலக்கியமாக ஆக்குவதில் முயன்று வெற்றி கண்டவர்களில், குறிப்பிடத் தகுந்தவர் அண்ணன் மருதகாசி அவர்கள்.

எளிமை, இனிமை, அதே நேரத்தில் சூழ்நிலைக்கேற்ப அமையும் திரைப்படப் பாடலாக இருந்தாலும், அதனுள் சமூகப்பார்வை பிணைத்து வெற்றி காணும் திறமை அவருக்கே உரிய தனித் திறமையாகும்.

“அழகை ரசிப்பதில் கவிஞன் நான்!

அன்பு காட்டினால் அடிமை நான்!

பழகும் தன்மையில் பண்புள்ள தமிழன்

பரந்த நோக்கம் உள்ளவன் நான்!”

 

என்ற அவரின் பாடல் வரிகளுக்கு இலக்கணமாகவே இன்றும் அவர் வாழ்ந்து வருகின்றார்.

எந்தவிதப் பின்னணிகளும் இல்லாமல் எந்தவிதப் பெரிய மனிதர்கள் அரவணைப்பும் இல்லாமல், தன் திறமை ஒன்றினாலேயே வெற்றி கண்டு, பல்லாயிரம் விழுதுகளுடன் படர்ந்து நிற்கின்ற ஒரு ஆலமரமாய் நிமிர்ந்து நிற்கின்ற பெருங்கவிஞர் மருதகாசி அவர்கள் இன்றைய கவிதை உலகில் குறிப்பாக தமிழ்த் திரைப்பட உலகில் தலையாய வழிகாட்டி என்றால் மிகை இல்லை. தன்னிகரில்லா இந்த இன்னிசைப் பெருங்கவிஞரின் உழைப்பால், ஆற்றலால் தமிழன்னை, பெரிதும் புன்னகைத்துப் பூரிப்படைந்துள்ளாள்! வழி காட்டுதற்குரிய இக்கவிஞரின் வழிநடந்து வாழ்வோம். இப்பெருமகனை வணங்கி வாழ்த்துவோம்.

வெல்க பெருங்கவிஞர் மருதகாசி கொள்கைகள்!

 

அன்பன்.

பொன்னடியான்

 

“முல்லைச்சரம்”

43, துரைசாமி சாலை,

வடபழனி, சென்னை-26

 

 

 

 

திரைக்கவித் திலகம்

கவிஞர் மருதகாசி

திரை இசைப் பாடல்களைத்

திவ்யப் பிரபந்தமாய் வழங்கியவர்!

அமுதப் பிரவாகமாய் என் இதயத்தில்

அலைமோதிய அவரது பாடல்களை

இன்றும் நான் நினைவு கூர்கிறேன்.

“நீலவண்ணக் கண்ணா வாடா”-இந்தப் பாடல்தான் அந்த நாளில் என் இதயத்தைத் தாலாட்டியது.

“சமரசம் உலாவும் இடமே” – இந்தப் பாடல்தான் அந்த நாளில் எனக்கு வாழ்வின் தத்துவத்தை அறிமுகப் படுத்தியது.

“நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே” – இந்தப் பாடல்தான் அந்த நாளில் என் நெஞ்சத்தை உருக வைத்தது.

நான் ரசித்த திரையிசைப் பாடல்கள் இப்படிப் பலநூறு பாடல்கள் ஆகும்.

அப்பொழுதெல்லாம் இந்தப் பாடல்களைப் படைத்த பாடலாசிரியர் யார் என்று பெயர் கேட்டுத் தெரிந்து கொண்டதில்லை.

ஒரு சந்தர்ப்பத்தில் நான் மிகவும் ரசித்த பாடல்கள் பலவற்றைப் படைத்த பிரம்மா மருதகாசி அவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்ட பொழுது, என்னிடம் பச்சையப்பன் கல்லூரியில் ஆராய்ச்சி செய்ய வந்த செல்வி இரா. வைஜயந்தியிடம், கவிஞர் மருதகாசி அவர்களின் திரையிசைப் பாடல்களைத் திரட்டி ஆய்வு செய்யுமாறு, வழிகாட்டினேன். அந்த ஆய்வும் வெற்றி பெற்றது. தமிழுலகம் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி “குருவிக் கரம்பை சண்முகம் தன் பள்ளிப் பருவத்தில் எவருடைய திரையிசைப் பாடல்களை அதிகமாக ரசித்தானோ, அவருடைய பாடல்களைத்தான்; ஆம்! கவிஞர் மருதகாசியின் பாடல்களைத்தான் பிற்காலத்தில் தனது மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்ய வைத்தான்!” என்பதுதான்.

⁠கவிஞர் மருதகாசி திரையிசைப்பாடல் உலகின் கம்பர். ⁠வயல்களையும் பேச வைத்தவர்.
⁠ஏர்களையும் பாட வைத்தவர்.

“வாராய்! நீ வாராய்!” என இசையுலகை நோக்கி நம்மை அழைத்தவர்! தென்றல் காற்றில் நம்மையும் நம் செவிகளையும் உலவ வைத்தவர். “திரைக் கவித்திலகம்” கவிஞர் அ.மருதகாசி இந்நூலைப் புரட்டியபொழுது,

“வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே” என்ற பாடலை முணுமுணுத்தவாறே எங்கள் ஊர் ஆற்றங்கரையின் வழியே நான் நடந்துபோன நாட்கள் ஞாபகம் வருகின்றன.

கடந்த காலத்தில் நான் கேட்டு மகிழ்ந்து வளர்ந்த பாடல்கள், இதோ இப்பொழுது, இங்கே ஒரு தொகுப்பாக வந்திருப்பதைக் காணும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த மகிழ்ச்சியை ஒவ்வொரு தமிழனும் பங்கிட்டுக் கொள்வான் என்பது உறுதி.

குருவிக்கரம்பை சண்முகம்

சென்னை.

14-12-81

 

 

 

அறிமுகம்

 

திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடக் கரையோரம் மேலக்குடிக்காடு என்னும் ஒரு சிற்றூரில் 13-2-1920-ல் பிறந்தான் ஒரு பாடலாசிரியன்.

தந்தை கிராம அதிகாரி அய்யம் பெருமாள் உடையார். தாயார் மிளகாயி அம்மாள். பரம்பரை விவசாயிகள்.

பள்ளிப் படிப்பு நான்காம் வகுப்பு வரை உள்ளூரில். பிறகு குடந்தை பாணுதுரை உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை. கேள்வி ஞானத்தால் ஒரளவு நன்றாகப் பாடக் கூடியவன். மொழி மீதும் நாடகக் கலை மீதும் பெரும் பற்றுக் கொண்டவன். ஒரு சில நாடகங்களில் நடிப்பதுண்டு. அவனுக்கு அந்த தாகத்தை அதிகமாக்கியவர், லிட்டில் ஃபிளவர் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர், காலஞ் சென்ற பாபநாசம் சிவன் அவர்களின் மூத்த சகோதரர் திரு. ராஜகோபாலய்யர் அவர்கள். ஒய்வு நேரங்களிலெல்லாம், அவனுக்கு இலக்கண இலக்கியங்களில் ஒரளவு தேர்ச்சியுறக் கற்றுத் தந்தார்.

1938-முதல் 1940 மார்ச் முடிய குடந்தை அரசினர் கல்லூரியில் “இண்ட்டர் மீடியட்” படித்தான் படித்த இரண்டு ஆண்டுகளிலும், கல்லூரியில் நாடகங்கள் தயார் செய்து நடத்தினான். அந்தக் காலத்தில் அங்கு B. A. படித்தவர்தான், நாடகங்களில் பெண் வேடங்களில் மிக அழகாக நடித்துக் காட்டிய, பிரபல எழுத்தாளரான தி. ஜானகிராமன். அவனது தமிழ் ஆர்வத்தை அதிகம் வளர்த்து விட்டவர் திரு. கோ. முத்துப்பிள்ளை அவர்கள், இன்று தமிழக அரசின் தமிழ் ஆய்வுத்துறையில் பணியாற்றி வருபவர்.

கல்லூரிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க நேர்ந்தது. காரணம் சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ள விவசாயக் குடும்

பத்தை கவனிக்க வேண்டிய நிலை. குடந்தையில் இருந்த காலத்தில் பல நாடக நடிகர்களுடனும், நாடகக் குழுக்களுடனும் நெருங்கிப் பழகியவன். அவன் இசைக்காக எழுதிய முதற்பாடலே, அன்றும் இன்றும் அவன் “சங்கீத தேவதை”யாக ஆராதனை செய்து வரும் திருமதி. M. S. சுப்புலட்சுமி அவர்கள், கிராமபோன் ரெக்கார்டில் பாடியுள்ள “குக சரவணபவ சிவபாலா” என்ற மெட்டில் எழுதிய “கலைமகள் உறைந்திடும் கலாசாலை” என்று தொடங்கும் பாடலாகும்.

⁠ஊரில் விவசாய வேலையோடு கிராம அதிகாரி வேலையையும் பார்த்து வந்தான். அந்த நேரத்தில், அவனுக்கு முன்பே பரிச்சயமாயிருந்த K. N. ரத்தினம் அவர்களின், தேவி நாடக சபைக்குப் பாட்டு எழுதித் தர நண்பர் ஸ்ரீராமுலு நாயுடு என்பவரின் மூலம் அழைப்பு வந்தது. அவர்கள் அப்பொழுது முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களின் நாடகமான “மந்திரி குமாரி” நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில், கலைஞர் அவர்களின் எழுத்துக்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டானாலும், நிலைத்திருக்கக் கூடியவை. அங்கு அரங்கேற்றிய புலவர் A. K. வேலன் எழுதிய “சூறாவளி” என்ற நாடகத்திற்குத்தான் முதல் முதல் பாடல் எழுதினான். அங்குதான் கா. மு. ஷெரீப் அவர்களின் நட்பு ஏற்பட்டது.

⁠அதைத் தொடர்ந்து “ஒரே முத்தம்” “பராசக்தி” போன்ற நாடகங்களுக்குப் பாடல் எழுதி விட்டு, நடிகனாகவும் மாறி, கம்பெனியுடன் செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

⁠காரைக்குடி முகாமில், அரு. ராமனாதன் எழுதிய “வானவில்” என்ற நாடகத்திற்கு, திருச்சி லோகநாதன் அவர்கள் கொடுத்த மெட்டுகளுக்குப் பாடல் எழுதினான். கா. மு. ஷெரீப் அவர்கள் “பெண்” என்ற நாடகத்திற்குப் பாடல் எழுதினார்.

⁠கம்பெனி தஞ்சையில், அடுத்து முகாமிட்டது. அப்பொழுது, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து

 

அவனுக்கும், கா. மு. ஷெரீஃப் அவர்களுக்கும் “திரு, லோகநாதன் அவர்கள் பாடிய உங்கள் பாடல்களைக் கேட்டோம். திருப்தியாக இருந்தது உடன்வந்து சேரவும்” என்று தந்தியும், லெட்டரும் வந்தது. அவனும், கா. மு. ஷெரீப் அவர்களும் அங்கு சென்றார்கள். அப்பொழுது அண்ணன் M. A. வேணு அவர்கள் அங்கு தயாரிப்பு நிர்வாகி, இசையமைப்பாளர். அத்துறையில் மாபெரும் மேதையான அண்ணன் G. ராமனாதய்யர் அவர்கள் அவர்களை, அவன் மெட்டுக்குப் பாட்டெழுதி, திருப்தியடையச் செய்தான். T. R. மகாலிங்கம். அஞ்சலிதேவி நடித்த “மாயாவதி” என்ற படத்தில் உள்ள “பெண் எனும் மாயப்பேயாம்” என்ற பாடலுடன் அவனுடைய திரையுலகப் பணி ஆரம்பமாயிற்று. ஒரே கம்பெனியில் இருந்து வந்திருந்ததால், வேற்றுமையில்லாமல் ஒவ்வொரு பாடலும் கா. மு. ஷெரீஃப், மருதகாசி என்ற தலைப்பிலேயே வெளிவந்தது.

⁠”மந்திரி குமாரி” கதையை மாடர்ன் தியேட்டர்ஸார் வாங்கிப் படமாக்க வகை செய்தான். M. A. வேணு அவர்களின் அரவணைப்பால் அவனது கலைப்பணி நன்கு வளர்ந்தது “பொன்முடி” படத்தைப் பார்த்த “பாகவதர்” அவர்களால் G. ராமனாதய்யர் மூலம் சென்னைக்கு அழைக்கப்பட்டான், அங்கு அவனது நண்பரான ஒளிப்பதிவாளர் திரு. R. M. கிருஷ்ணசாமி அவர்கள், தனது நண்பர்களான V.C. சுப்பராமன், ராதாகிருஷ்ணன் அவர்கள் கூட்டுறவுடன் ஞானமணி அவர்களின் இசையமைப்பில் “ராஜாம்பாள்” என்ற படத்திற்குப் பாடல் எழுத அழைத்தார்.

⁠அன்று முதல் அவன் கலைப்பணி தொடர்ந்தது. மெட்டுக்கேற்பப் பாடல்கள் எழுதும் அவனது திறமை பல தயாரிப்பாளர்களையும் இசையமைப்பாளர்களையும் அவனை அழைக்கச் செய்தது. அனைத்துச் சந்தர்ப்பங்களும் அவனைத் தேடி வந்தனவே தவிர, அவன் சந்தர்ப்பங்களைத் தேடவில்லை. அந்தப் பாடலாசிரியன் தான் மருதகாசி. இனி அவனது அனுபவம் பேசுகிறது.

 

 

 

 

 

அனுபவம்

 

 

சென்னையில் அருணா பிலிம்ஸ் “ராஜாம்பாள்” படம் முடிந்ததும், “குமாஸ்தா” என்ற படம் ஆரம்பித்தார்கள். தெலுங்கு மொழிக்கு ஆச்சார்யா ஆத்ரேயாவும், தமிழுக்கு நானும் பாடல் இயற்றினோம். –

இசையமைப்பாளர் C. N. பாண்டுரங்கன் அவர்கள். ஆத்ரேயா தெலுங்கில் “மன அதக்குல இந்தே பிரதுக்குல பொந்தே ஆசலு பேக்கலமேடே” என்று பாடல் எழுதினார். அதற்கு நமது மனக் கோட்டைகள் எல்லாம் சீட்டுக் கட்டுகளால் கட்டப்பட்ட வீடு என்று அர்த்தமாம். நான் உடனே அதே பாடலின் மெட்டுக்கு, தமிழில் “நம் ஜீவியக் கூடு, களி மண் ஓடு! ஆசையோ மணல் வீடு” என்று பல்லவி எழுதினேன். ஆத்ரேயா உட்பட அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கும் போதே, அதன் எதிரொலியாக, இன்னும் சொல்லப் போனால், தாங்கமுடியாத பேரிடியாக ஒரு தகவல் கிடைத்தது. அதுதான் என்னை நிலைகுலைய வைத்த எனது அடுத்த தம்பி கோவிந்தசாமி என்பவரின் மரணச் செய்தி. எழுதிய எழுத்துக்கள் என் வாழ்க்கையிலேயே நிஜங்கள் ஆகிவிட்டன. அதுவும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே.

அதன் பிறகு, மாதுரி தேவி அவர்கள் தனது சொந்தப் படமான “ரோகிணி”க்குப் பாடல் எழுத என்னையும், இசை அமைக்க G.ராமனாத அய்யர் அவர்களையும் ஒப்பந்தம் செய்தார்கள். அவர்கள் அடிக்கடி சில பெங்காலி

 

கிராமபோன் ரிக்கார்டுகளைப் போட்டுக் காட்டி, மெட்டுகளுக்குப் பாடல் எழுதி ரிகார்டு செய்யுங்கள், என்று G. R. அவர்களிடம் சொல்ல, அவர் எந்தக் காரணத்திற்காக, சேலத்திற்கு (மாடர்ன் தியேட்டர்ஸ்) வர மாட்டேன் என்று சொன்னாரோ, அதே காரணம் இங்கும் தொடர்ந்ததும், G.R. மாதுரி தேவி அவர்களிடம், “இதற்கு நான் தேவையில்லை; வேறு யாரையாவது வைத்துக் கொள்ளுங்கள்” என்று சுமுகமான முறையில் சொல்லிவிட்டு அப்பொழுது H. M. V. யில் இருந்த, எனது அன்பிற்குரிய K. V. மகாதேவன் அவர்களை, இசை அமைப்பாளராகப் போடும்படி சொல்லிவிட்டு, விலகிக் கொண்டார். பல படங்களில் நாங்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்யும் சந்தர்ப்பத்தையும், ஒரே குடும்பம் போல் எங்கள் இரண்டு குடும்பங்களும் செயல்படும் நிலைமையையும் இறைவன் உண்டாக்கினார் என நினைக்கிறேன்.

மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து பிரிந்தவரும் என்னுடைய வளர்ச்சிக்காகப் பெரும் பாடுபட்டவருமான அண்ணன் M. A. வேணு அவர்கள், தனது சொந்தப் படங்களுக்கு என்னையும், ஷெரீஃப் அண்ணன் அவர்களையும் பாடல்கள் எழுத வைத்து, ஊக்குவித்ததை நான் என்றென்றும் மறக்க முடியாது.

இப்படி இருக்கும் போது பாகவதருடைய “புது வாழ்வு” படத்திற்கு ஒரு நகைச்சுவைப் பாடல் எழுதுவதற்கு கலைவாணருடைய ஒப்புதல் வாங்க என்னையும், திரு G. ராமனாதன் அவர்களையும் N.S.K. வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். N.S.K. யிடம் பாடல் ஆசிரியர் என்ற முறையில் எனக்கு அன்றுதான் அறிமுகம்.

ஆனால் N.S.K. அவர்கள் அவருக்கே உரிய பாணியில் என்னிடம் “எனக்கு இதுவரை உடுமலையார், கே. பி. காமாட்சி இருவரைத் தவிர, ஒரே ஒரு பாடல் ஆசிரியரான சந்தான கிருஷ்ண நாயுடு மட்டும்தான் எழுதினார். “நீங்கள் எழுதித் தரும் பாடல் எனக்குப் பிடிக்கவில்லையென்றால் நான் மறுபடியும் உடுமலையாரைக் கூப்பிடு என்று சொல்வேன். நீங்கள் மனம் ஒடிந்து விடுவீர்கள். நன்றாய் இருந்தால் பாராட்டுவேன். சம்மதம் என்றால் எழுதுங்கள்” என்றார்.

நான் அதைச் சவாலாக எடுத்துக் கொண்டேன். “பாடலுக்குரிய காட்சி அமைப்பைச் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு அவர், “ஒரு குருவிக்காரனும், குருவிக்காரியும் பகல் முழுவதும் தனித் தனியாக வியாபாரத்திற்குச் சென்று விட்டு வருகிறார்கள். அவன் அவள் மீது சந்தேகப்பட்டு ஏதேதோ கேட்கிறான். அவள் அதற்குச் சரியான பதில் சொல்லிக் கொண்டு வருகிறாள். முடிவில் உண்மையைச் சொல்லுகிறாள், வழியில் ஒரு காலிப்பயல் வம்பு செய்ததாக. அதைக் கேட்டு, குருவிக்காரன் கோபத்துடன் அவளையும் அழைத்துக் கொண்டு, அந்தக் காலிப்பயலைச் சந்தித்து, புத்தி புகட்ட போவதாகச் சொல்கிறான். இதுதான் காட்சி அமைப்பு” என்றார், பாடல் தன்னுடைய பாணியில் இருக்க வேண்டும் என்று சொன்னார். நான் “இது மிகவும் எளிதாயிற்றே. குற்றாலக் குறவஞ்சியில் வரும் சிங்கன் சிங்கிதானே”, என்றவுடன் N.S.K. என்னிடம் “தங்களுக்கு இலக்கியப் பயிற்சி உண்டா?” எனக் கேட்டார். எனக்கு இலக்கியப் பயிற்சி அளித்த பாபநாசம் ராஜகோபாலய்யர் அவர்கள், என்னுடைய மானசீக குரு உடுமலையார் அவர்கள், என்னுடைய வழிகாட்டிகள் காழி அருணாசலக் கவிராயர் (ராம நாடகம் எழுதியவர்) “நந்தனார்” சரிதம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார், சைவ சமய சமரச கீர்த்தனைகள் தந்த ஜட்ஜ் வேதநாயகம் பிள்ளை, பாபநாசம் சிவன், நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் எனச் சொல்லி, அவரிடம் சில பாடல்களையும் பாடிக் காட்டினேன். என்னை உடனே N.S.K. அணைத்துக் கொண்டு, உடுமலை இருந்த இதயத்தில் உங்களுக்கு பாதியைக் கொடுத்து விட்டேன். “நீங்கள் நன்றாக வளர்வீர்கள்” என்று ஆசீர்வதித்தார். நான் மறுநாளே பாடலை இயற்றி, அவருடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றேன். பாடிக் காட்டச் சொன்னார். பாடினேன். பரவசப்பட்டார். அந்தப் பாடல்தான் “சீனத்து ரவிக்கை மேலே” எனத் தொடங்கும் பாடல். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் பாகவதர் படம் வெளி வர மிகவும் தாமதம் ஆயிற்று. அண்ணன் N.S.K. அவர்கள் அந்தப் பாடலைப் பாடவில்லை. அது “முல்லைவனம்” என்ற படத்தில் உபயோகப் படுத்தப்பட்டது. அவருக்கு நான் எழுதிய அடுத்த பாடல் “ராஜா ராணி” என்ற படத்தில் வந்த “சிரிப்பு” என்று தொடங்கும் பாடல். அதை அவர் எழுதச் சொன்னது உடுமலையாரிடம். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், பாடல் சரியாக அமையாததால், இருவரும் சேர்ந்தே ஆள் அனுப்பி, என்னைக் கூப்பிட்டு, “சிரிப்பு! அதன் சிறப்பைச் சீர் தூக்கிப் பார்ப்பது நம் பொறுப்பு” என்ற பல்லவியைக் கொடுத்து, பாடலை முடித்துத் தரச் சொன்னார்சள். நான் மறுநாளே அந்தப் பாடலை முடித்துக் கொடுத்தேன். அதில் கடைசி வரியை “இது சங்கீதச் சிரிப்பு” என முடித்திருந்தேன். அந்தச் சங்கீதச் சிரிப்புக்கு, ஆவர்த்தனக் கணக்கும் போட்டு இரண்டு ஆவர்த்தனம், ஒரு ஆவர்த்தனம் எனக் குறைத்துக் கொண்டு வந்து அவர் முடித்ததை நினைத்து, இன்றும் சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

ஆனால் அந்தச் சிரிப்பு என்னைப் பொறுத்தவரை அழ வைத்துச் சென்று விட்டது. கலைவாணர் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும், எனக்கும் எனது மனைவிக்கும் தீபாவளிக்கு, பட்டுவேட்டி, பட்டுச் சேலை அனுப்பி வைத்ததை நினைத்து, நினைத்து நெஞ்சம் நெகிழ்கிறது. அந்த கலைவாணருக்கு ஈடு அவரேதான்.

நான் ஆரம்பக் காலத்தில், புரசவாக்கத்தில் கந்தப்ப ஆச்சாரித் தெருவில் 17-ம் நம்பர் வீட்டில் தங்கியிருந்தேன். பக்கத்து அறையில் அறிஞர் அண்ணா அவர்களின் நெருங்கிய நண்பர் “தையற்கலை சுந்தரம்” என்பவர் தங்கி இருந்தார்.

அண்ணா அவர்கள் எப்போது ஓய்வு கிடைத்தாலும் புரசவாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வீட்டிற்கு வருவார்கள். படம் பார்க்க திரு. சுந்தரம், பேராசிரியர், அண்ணா மூவரும் சேர்ந்தே செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் “உமா” தியேட்டரில் “கனவு” என்னும் படத்தைப் பார்த்து இருக்கிறார்கள். பாடல்கள் முழுவதும் நான் எழுதியவை. இசை அமைப்பு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்று எல்லோரும் அழைக்கக் கூடிய மலையாள தட்சிணாமூர்த்தி அய்யர் அவர்கள். அதில் வரும் ஒரு பாடலில்,

“திருநாடு தன்னில் திருவோடு ஏந்தி
தெருவோடு போகும் நிலைமாறிடாது
சீமான்கள் உள்ளம் மாறாதபோது”

என்ற வரிகள் அண்ணாவை மிகவும் கவர்ந்துள்ளன. படம் பார்த்து வந்தவுடன், சுந்தரம் அவர்கள் மூலம், அண்ணா என்னை அழைத்துப் பாராட்டிய விதத்தை நினைத்து, இன்றும் நான் மகிழ்கிறேன். அது மட்டுமல்ல, என்னுடைய கிராமியப் பாடல்களில் அவர் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதற்கு S.S.R. “தங்கரத்தினம்” படத்தில் வரும், “இன்னொருவர் தயவெதற்கு, இந்நாட்டில் வாழ்வதற்கு? இல்லையென்ற குறையும் இங்கே, இனிமேலும் ஏன் நமக்கு?” என்ற பாடல் உதாரணம். மேற்கண்ட இரண்டு வரிகளை வைத்துக் கொண்டு, “திராவிடநாடு” பத்திரிகையில் சுமார் 5 பக்கங்கள் அண்ணா எழுதிய கட்டுரையை, அவர் எனக்குக் கொடுத்த நற்சான்றிதழாக நினைக்கிறேன்.

1956-ம் ஆண்டு A. P. N, அவர்களுடைய லட்சுமி பிக்சர்ஸில் “மக்களைப் பெற்ற மகராசி” என்பது முதல் படம். அதில் பல ஊர்களின் பெயரை வைத்து ஒரு பாடல். எழுதச் சொன்னார்கள். வெறும் ஊர்ப் பெயர் வந்தால் போதாது, கதை ‘விவசாயி’யைப் பற்றியது. அதனால், அந்தத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுத வேண்டும் என்று எழுதிய பாட்டுத்தான் “மணப்பாறை மாடுகட்டி” என்று தொடங்கும் பாடல். அதே சமயத்தில், திரு. A K வேலன் அவர்களின் வெற்றிப் படமான “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற படத்திற்கு “நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு” என்ற பல்லவியை எழுதிக் கொண்டிருக்கும்போது, நண்பர் வயலின் மகாதேவன் M.M. புரொடக்‌ஷன் என்ற கம்பெனி ஆரம்பிக்க வேண்டிய பங்குதாரர், பத்திரங்களுடன் வந்து கையெழுத்துப் போடுமாறு கேட்டார். முதலில் மறுத்தேன். பிறகு A.P.Nன் வற்புறுத்தலால் ஒப்புக் கொண்டேன்.

பல காரணங்களால், படம் வெளியிட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், நானும் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனும் அந்த “அல்லி பெற்ற பிள்ளை” என்னும் படத்தினால் அடைந்த தொல்லைக்கு அளவேயில்லை. இடையில், எத்தனையோ சம்பவங்கள். அன்றைய மக்கள் திலகம், புரட்சி நடிகர், இன்றைய முதல்வர் திரு. M. G. R. அவர்களுக்காக, என்னை அழைத்து, தேவர் அண்ணன் அவர்களால் எழுதி வாங்கப்பட்ட, புரட்சிகரமான கருத்துள்ள, முதல் பாடல் “மனுஷனை மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே” என்பதாகும்.

இடையில் மூன்று நான்கு ஆண்டுகள் நான், சேலத்திற்குப் போகவில்லை. அய்யா உடுமலையார் அவர்களை “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படத்திற்குப் பாடல் எழுதச் செய்ய, உயர்திரு. பாலு முதலியார் அவர்களும், சுலைமான் அவர்களும் வந்திருந்தார்கள். அப்பொழுது அய்யா அவர்கள். “நேஷனல் பிக்சர்ஸ்” ரத்தக் கண்ணீர் படத்திற்கு இந்தி ரிக்கார்டு டியூனுக்குப் பாட்டு எழுத, என்னைத் துணை புரிய அழைத்திருந்தார். அய்யா, அவர்களுடன்

என்னைப் பார்த்த பாலு முதலியார் அவர்கள், “ஏனப்பா! நீ கூப்பிட்டால் கூட, சேலம் வருவதில்லை?” எனக் கேட்டார். நான் “நேரம் போதவில்லை. அதனால் வரவில்லை” எனச் சொல்லி விட்டேன். உண்மையான காரணம் வேறு. T.R.சுந்தரம் அவர்கள் இல்லாத சமயத்தில், என்னிடம் பண விஷயத்தில் சொன்னபடி நடக்கவில்லை என்பதுதான் காரணம்.

அவர்கள், அய்யா அவர்களை, “அலிபாபா” படத்திற்குப் பாட்டு எழுத 25 ஆயிரம் ரூபாய் என முடிவு செய்து விட்டு, “அய்யா! நீங்கள் எழுதி, டியூன் போட வேண்டிய பாடல்கள் இரண்டு அல்லது மூன்றுதான் இருக்கும். மீதமுள்ள பாடல், இந்தி அலிபாபாவில் உள்ள டியூனுக்கே எழுத வேண்டும்” என்று சொன்னதும், அய்யா என்னிடம், “நீ சேலம் வருகிறாயா?” எனக் கேட்டார்கள். அதன் காரணத்தை யூகித்துக் கொண்ட சுலைமான் அவர்கள் மாலை திரும்பி வருவதாகச் சொல்லி விட்டு T.R.S.க்கு டிரங்கால் செய்து, “அய்யாவை நீங்கள் கேட்டபடி ஏற்பாடு செய்து விட்டோம். ஆனால் ரிக்கார்டு டியூனுக்குப் பாட்டு எழுதுவது என்றால், மருதகாசியும் என்னுடன் வருவார் என்று சொல்லி இருக்கிறார்” எனக் கூற, அதற்கு T.R.S.அவர்கள் சுலைமான் அவர்களிடம், “நான் பலமுறை கேட்டும், மருதகாசி வர மறுத்து விட்டதாகச் சொன்னாயே? இப்பொழுது மட்டும் எப்படி வருகிறார்? அவர் மிகவும் மரியாதையுள்ளவர். இதற்கிடையில் ஏதோ காரணம் இருக்கிறது. அதனால் அருணா பிலிம்ஸ் கிருஷ்ணசாமியைப் பார்த்து, மருதகாசியை மாலை ஆறு மணிக்கு மேல் டிரங்கால் செய்து, நான் பேசச் சொன்னதாகச் சொல்” எனக் கூறி விட்டார். திரு. சுலைமான் அவர்கள், அதை அருணா பிலிம்ஸ்க்கு ஃபோன் செய்து சொன்னார்.

நான் டிரங்கால் செய்து, T.R.S. அவர்களிடம் பேசினேன். “காலையில் கவிராயரை அழைத்துக் கொண்டு வர முடியுமா?” என T R.S. கேட்டார்.

நானும் அய்யாவை அழைத்துக் கொண்டு சென்றேன். அங்கு பாடல்களைக் கேட்டோம். 8 பாடல்கள் இந்தி மெட்டுகள். இரண்டு பாடல்கள்தான் டியூன் செய்ய வேண்டியவை.

அய்யா அவர்கள், “இந்த மெட்டுகளுக்குப் பாடல் எழுதுவது எனக்கு ஆகாத வேலை. அதை இவர்தான் செய்ய வேண்டும். எழுதி, டியூன் போடும் பாடல்கள் மட்டும் நான் எழுதுகிறேன்” எனச் சொல்லி விட்டார். T.R.S. அவர்கள் சந்தோஷப்பட்டு, என்னையே பாடல் முழுவதும் எழுத வைத்தார். அய்யாவிடம் ஒரே ஒரு பாடல் மட்டும் எழுதி வாங்கிக் கொண்டு, மூவாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள் ஆனால் அந்தப் பாடல், படத்தில் இடம் பெறவில்லை.

பிறகு தொடர்ச்சியாக, வண்ணக்கிளி, எங்கள் குலதேவி, கைதி கண்ணாயிரம், ஆகிய பல படங்களுக்குப் படம் முழுவதற்கும் நானே பாடல்கள் எழுதினேன். அதில் “வண்ணகிளி” படத்திற்குத்தான், சேலத்தில் மியூசிக் டைரக்டராக K. V. மகாதேவன் நியமிக்கப்பட்டார்.

சூழ்நிலையால், எங்கள் யூனிட் உடைந்து போனது. எனக்கும் ‘LOW PRESSURE’ ஏற்பட்டு, நான் ஊருக்குத் திரும்பிச் செல்ல நேர்ந்தது. ஊருக்குப் போகும் போது, கடைசியாக நான் இயற்றிய பாடல் “ஆனாக்க அந்தமடம்! ஆகாட்டி சந்தமடம்! அதுவும்கூட இல்லாட்டி ப்ளாட்பாரம் சொந்த இடம்” என்று “ஆயிரம் ரூபாய்” படத்தில் வரும் பாடல்தான். நான் பணம் கூட வாங்கிக் கொள்ளாமல் ஊருக்குச் சென்று விட்டேன்.

யாரை நான் நல்ல நண்பர்கள் என நினைத்தேனோ, அவர்களுடைய பொறாமையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். இரண்டரை ஆண்டுகள், நான் ஊரிலேயே இருந்து விட்டேன். 1967ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுற்று, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்கும் நிலை வந்த பொழுது

திரு M.G.R. அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல் எல்லோரும் அறிந்ததே. அவர் எடுத்தது மறுபிறவி. தேவர் பிலிம்ஸ் சின்னப்பா அண்ணன் அவர்கள், எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் “மக்கள் திலகம் M.G.R.க்கு மறுபிறவி. நீங்களும் இரண்டரை ஆண்டுகள் இல்லாமல் போய்விட்டீர்கள். ஆகையால், உங்களுக்கும் மறுபிறவியாக இருக்கட்டும். படத்தின் டைட்டிலும் ‘மறுபிறவி’தான். ஆகையால், உங்களை உடனே புறப்பட்டு வருமாறு M.G.R.ம் சொன்னார்” என்று எழுதினார். உடனே புறப்பட்டு, சென்னை வந்து சேர்ந்தேன் அந்தப் படம், ஒரு பாடலுடன் நிறுத்தப் பட்டுவிட்டது. பிறகு “தேர்திருவிழா” விவசாயி முதலிய பல படங்களுக்குப் பாடல் எழுதினேன்.

துணைவன் என்ற படத்திற்கு எழுதிய மருதமலையானே என்று தொடங்கும் பாடல் எனக்கு, தமிழக அரசு பரிசைப் பெற்றுத் தந்தது.

அந்தச் சமயத்தில், “நினைத்ததை முடிப்பவன்” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் மக்கள் திலகம் M.G.R. அவர்கள், இரு வேடம் ஏற்றிருந்தார்கள். அதில் இரண்டு பாடல்கள் எடுத்தும், அவருக்கு முழுத்திருப்தி ஏற்படாததால், என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்கள். அதில் ஏற்கனவே கண்ணதாசன் எழுதியிருந்த, “நான் பொறந்த சீமையிலே நாலு கோடிப் பேருங்க. நாலு கோடிப் பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க” என்ற பாட்டு, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. “இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது” என்று சொன்னேன். ஆனால் M.G.R. அவர்கள், “பாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கே உரிய தனித்தன்மை அதில் இல்லையே” என்றார். “எப்படி?” என்று கேட்டேன். “ஆயிரத்தில் ஒருவன் என்பதற்கும், நாலு கோடிப் பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா” என்று M.G.R. கேட்டார். பத்து நிமிடங்கள், நான் அசந்து உட்கார்ந்து விட்டேன். இவர் பழைய

M.G.R. அல்ல, ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டே இருக்கும் மாமனிதர் என்ற எண்ணமும், அதுவரையில் அவரிடம் நான் வைத்து இருந்த நம்பிக்கையின் உயர்வும், என் மனதில் வளர்ந்து கொண்டே போயிற்று.

பிறகு, அதே சூழ்நிலைக்கு ட்யூன் போட்டு, நான் எழுதிய பாடல்தான் “கண்ணை நம்பாதே!” என்று ஆரம்பிக்கும் பாடல். இந்தப் பாடல் M.G.R. அவர்களுக்குப் பரிபூரண திருப்தியளித்தது. மறுநாள் ரிக்கார்டிங்கிற்கு வந்திருந்தார். பாடல் ஒலிப்பதிவு ஆவதற்கு 5 நிமிடங்களுக்கு முன், என்னைத் தனியே அழைத்துச் சென்றார். “கடைசிச் சரணத்தை மறுபடியும் பாடிக் காட்டுங்கள்” என்றார். பாடினேன். “பொன் பொருளைக் கண்டவுடன், வந்தவழி மறந்து விட்டுத் தன் வழியே போகிறவர் போகட்டுமே” என்ற வரியில், “தன் வழி நல்ல வழியாக, வந்த வழியை விடச் சிறந்த வழியாக இருந்தால், தன் வழியே செல்வதில் என்ன தவறு?” எனக் கேட்டார். எனக்கு இரண்டாவது அதிர்ச்சி. இவர் ஒவ்வொரு நிமிடமும் N.S.K. போல, சிந்தித்துக் கொண்டே இருப்பவர் என்ற எண்ணம் மலை போல் வளர்ந்து விட்டது. பிறகுதான் “வந்த வழி மறந்து விட்டுக் கண்மூடிப் போகிறவர் போகட்டுமே” என்று மாற்றினேன். இப்படி இவருடன் எத்தனையோ அனுபவங்கள்.

பிறகு தசாவதாரத்திற்குப் பாடல் இயற்ற மல்லியம் சென்றிருந்த அய்யா உடுமலையார் அவர்கள், K.S.கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி, அந்தப் பொறுப்பை என்னிடம் முழுக்க முழுக்கக் கொடுத்த நல்ல எண்ணத்தையும், நான் எப்படி அவருடைய பாராட்டுதலுக்கு ஆளானேன் என்பதையும் எழுதுவது என்றால், அதற்கே எனக்கு ஒரு அவதாரம் தேவை. விரிவஞ்சி சுருக்கிக் கொள்கிறேன்.

இப்படியாக எத்தனையோ அனுபவங்கள். திரையுலகின் வளர்ச்சியிலும் தொடர்ச்சியிலும் என்னுடைய பங்கிற்குச் சான்றானவை. ஆல் தழைத்துக் கொண்டேயிருக்கிறது.

சருகுகள் உதிர உதிர, துளிர்கள் பசுமையைக் கொழித்துக் கொண்டே வளர்கின்றன. திரைத் தொழில் வளர வளம் பெற வாழ்த்துகிறேன்.

இந்த நூலை வெளியிட என்னைத் தூண்டிவிட்ட கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும், பாராட்டு வழங்கிய அண்ணன் M.A.வேணு, ஏ.கே.வேலன், குருவிக்கரம்பை சண்முகம், கவிஞர் வாலி, கவிஞர் பொன்னடியான் அவர்களுக்கும், நல்ல விதமாக இந்தப் பதிப்பு வெளிவர உதவிய அச்சக நிர்வாகி ரெங்கநாதன் அவர்களுக்கும், எனது பணிவையும் நன்றி கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். எனது வளர்ச்சிக்குக் காரணமான தமிழக ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.

அன்பன்⁠

அ. மருதகாசி

 

 

 

 

திரைக்கவித் திலகம்

கவிஞர் அ. மருதகாசி

பாடல்கள்

உழவும் தொழிலும்  

சுந்தரி சவுந்தரி

தூக்கு தூக்கி—1954

இசை :⁠ G. ராமநாத அய்யர்
பாடியவர்கள் : ⁠T. M. சௌந்தரராஜன்
⁠P. லீலா குழுவினர்

 

சுந்தரி சவுந்தரி நிரந்தரியே!
சூலி யெனும் உமையே.குமரியே! (சுந்தரி)
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே!
அமரியெனும் மாயே

பகவதி நீயே
அருள்புரிவாயே
பைரவித் தாயே
உன் பாதம் சரணமே (சுந்தரி)

சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
சேர்ந்த கலை ஞானம்

தானம் நிதானம்
மாதரின் மானம்
காத்திட வேணும்
கண் காணும் தெய்வமே (சுந்தரி)

 

 

ஏர் முனைக்கு நேர்

பிள்ளைக் கனியமுது-1958

இசை:K. V. மகாதேவன்
பாடியவர்:⁠T. M. சௌந்தரராஜன்

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை!… ஏ… ஏ…
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை!…ஆ…ஆ…
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை!

பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே-பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே!-நாம்
க்ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே-இந்த
தேச மெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே!….(ஏர்)

நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக-அது
நெல் மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக் கொத்தாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக்கட்டாக-அடிச்சு
பதரு நீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக! (ஏர்)

வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா?-தலை வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின் பக்கமா-இது
வளர்த்து விட்ட தாய்க்குத்தரும் ஆசை முத்தமா?என்
மனைக்கு வரக் காத்திருக்கும் நீ என் சொத்தம்மா! (ஏர்).

மணப்பாறை மாடு கட்டி

மக்களைப் பெற்ற மகராசி-1957
இசை :K. V. மகாதேவன்
பாடியவர்:⁠T. M. சௌந்தரராஜன்

 

பொன்னு வெளையிற பூமியடா-வெவசாயத்தே
பொறுப்பா கவனிச்சுச் செய்யிறோமடா
உண்மையா உழைக்கிற நமக்கு-எல்லாம்
நன்மைகளும் நாடி வந்து கூடுதடா…!
(பாட்டு)

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு-பசுந்
தழையெப் போட்டுப் பாடுபடு செல்லக்கண்ணு

ஆத்தூரு கிச்சிடிச் சம்பா பாத்து வாங்கி வெதை வெதைச்சு
நாத்தைப் பறிச்சு நட்டுப் போடு சின்னக்கண்ணு- தண்ணியே
ஏத்தம் புடிச்சு எறைச்சுப் போடு செல்லக்கண்ணு ,
கருதெ நெல்லா வெளையவச்சு மருதெ சில்லா ஆளெவெச்சு
அறுத்துப்போடு களத்து மேட்டிலே சின்னக் கண்ணு நல்லா
அடிச்சுத் தூத்தி அளந்து போடு செல்லக்கண்ணு!

பொதியெ ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு சின்னக் கண்ணு-நீயும்
வித்துப் போட்டுப் பணத்தை எண்ணு செல்லக்கண்ணு
சேத்த பணத்தைச் சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு சின்னக்கண்ணு அவுங்க
ஆறை நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு.

 

 

தை பொறந்தா வழி பொறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும்-1958

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: ஜிக்கி & குழுவினர்

 

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் (தை)

ஆடியிலே வெத வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களை எடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனி யெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம் (தை)

கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணம் ஆகுமடி தங்கமே தங்கம்
வண்ண மணிக்கைகளிலே தங்கமே தங்கம்
வளையல்களும் குலுங்குமடி தங்கமே தங்கம் (தை)

முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து விளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் (தை)

விவசாயி! விவசாயி!

விவசாயி-1967

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: T. M. சௌந்தரராஜன்

 

விவசாயி! விவசாயி!
கடவுள் என்னும் முதலாளி!
கண்டெடுத்த தொழிலாளி! விவசாயி! ⁠(விவசாயி)

முன்னேற்றப் பாதையிலே மனசை வைத்து
முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணமுடையோன் விவசாயி! ⁠(விவசாயி)

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!
ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில்!
உயரும் உன்மதிப்பு அயல் நாட்டில்! ⁠(விவசாயி)

கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெருகாதோ சாகுபடி? ⁠(விவசாயி)

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி!
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேணும் எங்கும் ஒரே சின்னக்கொடி! -அது
பஞ்சம் இல்லையெனும் அன்னக் கொடி! ⁠(விவசாயி)

 

 

பாடுபட்டால் பலனை யாரும்

வாழவைத்த தெய்வம்-1959

இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: T. M. சௌந்தரராஜன்

 

கெஜல்

ஒற்றுமையின் சங்கநாதம் முழங்குதே! அது
வெற்றி வெற்றி என்ற சொல்லை வழங்குதே!

 பாட்டு
பாடுபட்டால் பலனை யாரும்
பார்க்கலாமே கண்ணாலே!
பாலைவனம் உருமாறிடுமே
பசுஞ்சோலை போல தன்னாலே!

காடுமேடெல்லாம் நாடுநகரமாய்
ஆவதும் எதனாலே?
மாட மாளிகை கூட கோபுரம்
வளர்வதும் எதனாலே?
ஒடாகத் தேய்ந்த போதும்
உணவின்றிக் காய்ந்த போதும்
மாடாக உழைப்பவர் தொழிலாலே
இந்த மாநில மேலே! (பா)

நெத்தி வேர்வையை நிலத்தில் சிந்தினால்
நீர்வளம் உண்டாகும்!
முத்து முத்தாக முப்போகம் விளையும்
நெற்பயிர் உருவாகும்!
கொத்தாது பஞ்சமும் நம்மை!
குறையாது வாழ்வினில் செம்மை!
சொத்தாகச் சேர்ந்திடுமே நன்மை!
இது அனுபவ உண்மை. (பா)

 

 

கொத்துமல்லி பூபூக்க

பொன்னு விளையும் பூமி-1959

இசை : ரெட்டி
பாடியவர் : T. M. சௌந்தரராஜன்
கொத்துமல்லி பூபூக்க கொடிகொடியாய் காய்காய்க்க!
கொத்துக் கொத்தாய் நெல்விளையும் சீமையிது! நம்ம
குறைதீர்க்கும் பொன்விளையும் பூமியிது!

வாழைமடல் விரிய மண்ணிலே குலை சாய!
வந்தாரை வாழவைக்கும் சீமையிது!-நம்ம
மனசுபோல் பொன் விளையும் பூமியிது!

வாய்க்கால் கரைபுரள வயல்களிலே மீன்புரள!
வற்றாத வளம் கொழிக்கும் சீமையிது!-எதை
நட்டாலும் பொன் விளையும் பூமியிது!

கண்ணிலே கனிவிருக்க கருத்தினிலே துணிவிருக்க!
எண்ணத்தால் உயர்ந்தவங்க சீமையிது! உலகில்
எந்நாளும் பொன்விளையும் பூமியிது!
அநியாயம் செய்பவரை அஞ்சாமல் எதிர்த்து நின்று
தன்மானம் காத்துவரும் சீமையிது! -பெற்ற
தாயாகும் பொன்விளையும் பூமியிது!

 

பஞ்சப் பாட்டு பாடாமெ

குடும்ப கௌரவம்-1958

இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்: S. C. கிருஷ்ணன்

 

(தொகையறா)
நாம் பொறந்த சீமையிலே
பூமி செழிப்பாச்சி-முப்
போகம் வெளஞ் சாச்சு-இல்லையென்ற பேச்சே
இல்லாமல் போச்சு-இனி எந்நாளும் நமக்கு
திரு நாளுமாச்சு?

இனி
பஞ்சப் பாட்டு பாடாமெ
கஞ்சிக்காக வாடாமெ
நஞ்செ புஞ்செ நல்ல ராசி தந்தது-பலன்
நம்ம வீடு தேடியோடி வந்தது!

காலை முதல் மாலை வரை கஷ்டப்பாடு பட்ட நாங்க
கனவு கண்ட தான்ய லெட்சுமி தாயே-எங்க
கவலை தீர வந்த தேவி நீயே!

பொங்கல் விழா கொண்டாட
செங்கரும்பும் வாழைத் தாரும்
மஞ்ச கொத்தும் இஞ்சி கொத்தும் பூவும்-நாம
சந்தையிலே வாங்கி வரப் போவோம்!

பிள்ளைகளின் வாயினிக்க
வெண் பொங்கல் பால் பழம்
பெரியோருக் கெல்லாம் தரவேணும் தாம்பூலம்!

 

அள்ளி அள்ளி நெல்லை யெல்லாம்
அன்பாக வழங்கு வோம்
ஆடுகளும் மாடுகளும்
பெருக என்று முழங்குவோம்–
பொங்கலோ! பொங்கல். (இனி)

 

கண்ணைக் கவரும் அழகுவலை

சுகம் எங்கே-1954

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

 

பெண்: கண்ணைக் கவரும் அழகுவலை-பல
கலைகளிற் சிறந்த தையற் கலை! (கண்)

ஆண்: பெண்ணின் அழகைப் பெருக்கியே காட்டும்
உன்னதமான உருவம் உண்டாக்கும்(கண்)

பெண்: படிக்காதவரை பீ.ஏ., எம் ஏ.
பட்டதாரி போல் மாற்றிவிடும்!-இது
பட்டதாரி போல் மாற்றிவிடும்-புது
சட்டைக் கார தொரை யாக்கிவிடும்(கண்)

ஆண்: பண்ணை வேலை செய்யும் பெண்ணையும்
பாரிஸ் லேடி யாக்கி விடும்-இது
பாரிஸ் லேடி யாக்கி விடும்-
படித்தவள் போலே காட்டிவிடும்!

பெண்: கிழவர்கள் தம்மை குமரர்களாக்கி
கிண்ணாரம் போடச் செய்திடுமே!

ஆண்: கிழவிகள் தமையும் குமரிகளாக்கி
கேலி பேசவும் செய்திடுமே!

பெண்: ஆடும் மாடும் மேய்ப்பவர் கூட
அணியும் மைனர் புஷ் கோட்!

ஆண்: இது-ஆடும் ராணி, இன்னிசை வாணி
போடும் ஹைனெக் ஜாக்கெட்!

பெண்: இது புஷ்கோட்!

 

ஆண்: இது ஜாக்கெட்!

இருவரும்: கண்ணைக் கவரும் அழகுவலை-பல
கலைகளிற் சிறந்த தையற்கலை!
மின்னும் துணிகள் பல வகையாலே
வித விதமான உடைகள் உண்டாக்கி(கண்)

 

 

பசி தீருமா?

ராஜாம்பாள்-1951  

இசை : ஞானமணி
பாடியவர்: S. C. கிருஷ்ணன்
ஜிக்கி குழுவினர்

 

ஆண்: தக்தினதீன் தினதீன் தக்தினதீன்!
பெண்:பசி தீருமா?
ஆண்: தக்தினதீன்!
பெண்: நிலைமாறுமா?
பஞ்சத்தினாலே படும் சஞ்சலம்தானே
பறந்தோடுமா
காலம் ரொம்பக் கெட்டுப்போச்சு ரேஷனுமாச்சு!
ரேஷனுமாச்சு!
கல்லோடு மண்ணை நாம் சாப்பிடலாச்சு!
நாம் சாப்பிடலாச்சு!
காறிப்போன சோளம் வாங்கும் காலமும் ஆச்சு!
காலமும் ஆச்சு
பசி தீருமா?
ஆண்: தக்தினதீன்!
பெண்: ஹா…
பசி தீருமே!
பாடுபட்டா லேபஞ்சப்பேயும் தன்னாலே பறந்
தோடுமே!
ஏர்பிடித்தே சேவை செய்தால் ஏது பஞ்சமே?
ஏதுபஞ்சமே !
எந்தநாடும் உணவுக்காக நம்மைக் கெஞ்சுமே!
நம்மைக் கெஞ்சுமே!
பெண்: கந்தல் ஆடைகட்டி வாழும் காலம் மாறுமா?
காலம் மாறுமா?
கள்ளச்சந்தைக்காரர் செய்யும் தொல்லை தீருமா!
தொல்லை தீருமா?
துயர் தீருமா?

 

ஆண் : தக்தினதீன்!
பெண்: துயர்தீருமே!
சோம்பலில்லாமே தினம் பாடுபட்டாலே சுகம்
நேருமே!
கட்சி பேசி கலகம் செய்து திரிந்திடாமலே!
திரிந்திடாமலே!
கடமையோடு தொண்டு செய்தால் கஷ்டம்
நீங்குமே! கஷ்டம் நீங்குமே!
ஆட்சியை குறைகூறுவதால் ஏதுலாபமே?
யாவருமே சேர்ந்து நன்றாய் தன்னல மில்லா
சேவை செய்வோமே! சேவை செய்வோமே!
All : சேவை செய்வோமே! சேவை செய்வோமே!
பெண்: எந்நாளுமே!
All : சேவை செய்வோமே! சேவை செய்வோமே!

ஆடுறமாட்டை ஆடிக்கறக்கனும்!

அறிவாளி-1963  

இசை : S.V. வெங்கட்ராமன்
பாடியவர் : T. M. சௌந்தரராஜன்

 

ஆடுறமாட்டை ஆடிக்கறக்கனும்!
பாடுற மாட்டை பாடிக்கறக்கணும்!
அறிவும் திறமையும் வேணும்!-எதுக்கும்
அறிவும் திறமையும் வேணும்! (ஆ)

காடுமேடாகத் தரிசாகக் கிடந்த மண்ணு! நெற்
களஞ்சியமானது எப்படியென்று எண்ணு!-அது
பாடுபடும் விவசாயிகள் திறமையினாலே!
பலனுண்டு நாமிதை உணர்ந்து நடப்பதனாலே!

மண்ணோடு மண்ணாக மங்கிக்கிடக்கிற பொன்னு!
மங்கையர் அணியும் நகைகளாவதை எண்ணு!-அது
மின்னுவதெல்லாம் தொழிலாளி திறமையினாலே!-புது
மெருகு கிடைப்பது கையாளும் முறைகளினாலே! (ஆ)

மண்ணையும் பொன்னையும் போன்றவளேதான்
பெண்ணும்!-அவள்
மனசையறிந்தாலே வசப்படுத்தலாம் ஆணும்!-இதை
எண்ணிப்பாராமல் பேசுவதால் பலன் இல்லை!
-பெண்ணிடம்
இருக்கும் குறைகளை மாற்றுவது ஆண்களின் வேலை!

 

 

 பொழைக்கும் வழியைப் பாரு!

ஆசை அண்ணா அருமைத் தம்பி-1955

இசை : K.V. மகாதேவன்
பாடியவர்: S.C. கிருஷ்ணன்

 தொகையறா

கிழக்கு வெளுக்கவே இருளென்ற அழுக்கு விலகவே-சூரியன்
கிளம்பி விட்டான் வழக்கம் போலவே
உறக்கம் நீங்கியே எழுந்து உழைக்க வேணுமே
இந்த உலகெலாம் செழிக்கவே!

 பாட்டு

பொழைக்கும் வழியைப் பாரு!
ஒழைச்சாதான் சோறு!
பொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு!
எடுத்துத் திரியாதே! காசு பணம் சேரு!
ஓ … ஓ … ஓ

போடு சீரங்கி கரணம்போடு சீரங்கி-ஹை
ஆடுகின்ற அழகிபோல ஆடுசீரங்கி!…
புருஷனிடம் புதுப்பெண்டாட்டி காதை கடிப்பதெப்படி
பொறுத் திடாத மாமிரெண்டு பூசை கொடுப்பதெப்படி?
காட்டு சீரங்கி-செய்து காட்டு சீரங்கி!
ஓ … ஓ … ஓ

 தொகையறா

ஏ….கண்ஜாடை காட்டும் கைகார ராஜா!
முன்னே வந்து நல்லாபாரு முள்ளில்லா ரோஜா!

 பாட்டு

காசு இல்லாமே நடக்காது-ஐயா
காரியம் எதுவும் பலிக்காது!
பூசை பண்ணாட்டி அம்மன்தான்-இந்த
பூமியிலே வரம் கொடுக்காது!
ஓ … ஓ … ஓ

நீ-இருக்கும் இடந்தன்னிலே-லெஷ்மி
என்றும் வாசம் செய்வாள்!
சுரக்கும் சுவைப்பாலென்னும் வானமுதம் தந்து
சுகமாக உயிர் வாழ வழிசெய்யும் தாயே!

 

 தாலாட்டு

நீல வண்ணக் கண்ணா வாடா!

மங்கையர் திலகம்-1955

இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர் : பாலசரஸ்வதி

 

நீல வண்ணக் கண்ணா வாடா!
நீ ஒரு முத்தம் தாடா!
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா!

பிள்ளையில்லாக் கலியும் தீர
வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்!
எல்லையில்லாக் கருணை தன்னை
என்ன வென்று சொல் வேனப்பா?

வானம்பாடி கானம் கேட்டு
வசந்த காலத் தென்றல் காற்றில்
தேன் மலர்கள் சிரிக்கும் காட்சி
செல்வன் துயில் நீங்கும் மாட்சி!

தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்!
கண்ணால் உன்னைக் கண்டால் போதும்!
கவலை யெல்லாம் பறந்தே போகும்.

சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி
பொன்னாலான நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் கருணை காட்டு!

நடுங்கச் செய்யும் வாடைக் காற்றே!
நியாயமல்ல உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு!

 

விண்ணில் நான் இருக்கும் போது!
மண்ணில் ஒரு சந்திரன் ஏது?
அம்மா என்ன புதுமை என்றே
கேட்கும் அந்த மதியைப் பாரு!

இன்ப வாழ்வின் பிம்பம் நீயே!
இணையில்லா செல்வம் நீயே!
பொங்கும் அன்பின் ஜோதி நீயே!
புகழ் மேவி வாழ்வாய் நீயே!
புகழ் மேவி வாழ்வாய் நீயே!
புகழ் மேவி வாழ்வாய் நீயே

 

 

 

சின்ன பாப்பா! எங்க செல்லப்பாப்பா!

வண்ணக்கிளி-1959

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசீலா

 

சின்ன பாப்பா! எங்க செல்லப்பாப்பா!
சொன்ன பேச்சைக் கேட்டாத்தான் நல்ல பாப்பா!
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா?
சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா?
கண்ணா மூச்சிஆட்டம் உனக்குச் சொல்லித் தரணுமா?
-அப்போ
கல கலண்ணு சிரிச்சுக்கிட்டு என்னெப்பாரம்மா!
(சின்ன)

கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு!-நீ
கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாத்தான் சாப்பிடுவாரு!
கோழி மிதிச்சுக் குஞ்சு முடம் ஆகிவிடாது!-உனக்குக்
கொய்யாப்பழம் பறிச்சுத்தரேன் அழுகை கூடாது.
(சின்ன)
 

 

 

 

 

குழந்தையும் தெய்வமும்

வண்ணக்கிளி-1959

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா

 

குழந்தையும் தெய்வமும்
கொண்டாடும் இடத்திலே!
ஐக்கியமாகி விடும் இது உண்மை ஜெகத்திலே

மழைபோல் கருணையுள்ள மனமிருந்தாலே
வாரி அரவணைக்கும் குணமிருந்தாலே
மாற்றாந்தாய் என்பதையே மறந்திடும் பிள்ளை
மலர்முகம் காட்டிவந்து அமர்ந்திடும் மடியிலே!
(குழந்)

பெற்றால்தான் பிள்ளையென்பதில்லையே! அதற்கு
சுற்றமென்றும் சொந்தமென்றும் இல்லையே!
வற்றாத அன்பு என்னும் அமுதையே!-யார்
வழங்கினலும் மயங்கும் தெய்வம் குழந்தையே!
(குழந்)
 

 

 

 

முத்துப்போலே மஞ்சள் கொத்துப் போலே

சபாஷ் மாப்பிளே-1961

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா

 

பெண் : முத்துப்போலே மஞ்சள் கொத்துப் போலே
முழுநிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
கஷ்டம் தீர்ந்தது உன்னாலே கவலை ஒய்ந்தது
கண்மணியுன் தந்தை வாழ்வில் இன்பம் சேர்ந்தது

ஆண்: தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது
உனைப் பெற்ற அன்னை பெருமை கொள்ளும்
நிலையைத் தந்தது-(முத்து)

பெண்: கட்டித் தங்கமே என்னாசைக் கனவு யாவுமே

ஆண்:கனிந்து பிள்ளை உருவமாக வந்த செல்வமே

பெண் : கண்ணைக் காக்கும் இமையைப் போல்-உன்னை
வாழ்விலே
இருவரும்: கால மெல்லாம் காத்திருந்து மகிழுவோமடா!
(முத்து)

சின்ன அரும்பு மலரும்

பங்காளிகள்-1961

இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. சுசிலா

 

சின்ன அரும்பு மலரும்-அது
சிரிப்பைச் சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும்-நான்
களிக்கும் நாள் வரும்
(சின்ன)
மண்ணில் உலவும் நிலவே-என்
வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே-மனம்
மகிழும் நாள் வரும்-நான்
மகிழும் நாள் வரும்
(சின்ன)
உனது மாமன் வருவார்
அணைத்து இன்பம் பெறுவார்
உரிமை எல்லாம் தருவார்-அந்த
அரிய நாள் வரும்-சுகம்
பெருகும் நாள் வரும்
(சின்ன)
ஏழை கண்ட தனமே-மனம்
இளகச் செய்யும் அழகே
வாழைக் குருத்துப் போலவே-நீ
வளரும் நாள் வரும்-குலம்
தழைக்கும் நாள் வரும்
(சின்ன)

 

நீ எங்கு இருந்த போதும்-என்
இதயம் உன்னை வாழ்த்தும்-தாய்
அன்பு உன்னைக் காக்கும்-நீ
அழுவ தேனடா-உறங்கி
அமைதி காணடா.
(சின்ன)

 

 

 

 

நீ சிரிச்சா நான் சிரிப்பேன்

பாவை விளக்கு-1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: சூலமங்கலம் ராஜலட்சுமி

 

நீ சிரிச்சா நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே!
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே!
(நீ சிரி)

தேன் மணக்கும் வாயிதழோ சிவப்பு மத்தாப்பூ
சின்னஞ்சிறு கண்மலரோ நீல மத்தாப்பூ
மேனியிலே தெரியுதம்மா தங்கத்தின் ஜொலிப்பு-அதைக்
காணும் போது மனசுக்குள்ளே எத்தனை களிப்பு
(நீ சிரி)

எட்டி எட்டி வட்ட நிலா உன்னைப் பாக்குது-உன்
எச்சில் பட்ட சோத்தை அது தனக்குக் கேக்குது!
சட்டமாகச் சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா-அந்தச்
சந்திரனை விளையாடக் கூப்பிடு அம்மா
(நீ சிரி)
 

முத்தே! பவளமே! முக்கனியே

உத்தம புத்திரன்-1958
இசை : ஜி. ராமநாதன்
பாடியவர்: P. சுசிலா

 

முத்தே! பவளமே! முக்கனியே! சர்க்கரையே!
கொத்து மருக்கொழுந்தே! கோமளமே கண்வளராய்!

ஆளப்பிறந்த என் கண்மணியே!-எந்தன்
ஆசையைக் கேளடா விண்மணியே!
நாளொரு மேனியும் நீ வளர்ந்தே!-கலை
ஞானத்தில் தேர்ந்திட வேண்டுமடா!
சீலம் மிகுந்தே எந்நாளும்! மக்கள்
சிந்தையில் நிலைபெற வேண்டுமடா!

ஏழையென் வீட்டுக்கு வந்தவனே!-இணை
இல்லாத ஆனந்தம் தந்தவனே!
வாழைக்குருத்தென நீ வளர்ந்தே-ஒரு
வல்லவனாகிட வேண்டுமடா!
வாழப் பிறந்த கண்மணியே! சொல்லும்
வார்த்தையைக் கேளடா பொன்மணியே!

பிள்ளைக் கலிதீர்த்த தெள்ளமுதே! உந்தன்
சொல்லே ஆணையாக வேண்டுமடா! எந்தன்
உள்ளங்குளிர இம்மண் மேலே-எல்லை
இல்லாப் புகழ் தேட வேண்டுமடா!

ஏழையாக என்றும் வாழ்ந்தாலும்!-ஒரு
கோழையாக மட்டும் வாழாதே!-உந்தன்
வாழ்வின் கடமை மறவாதே!-தன்
மானத்தைக் காக்கவும் தவறாதே!

 

 

 

 

அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது

மருத நாட்டு வீரன்-1961

இசை : S.V. வெங்கட்ராமன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன்,
P. சுசிலா

 

ஜீவகன்: அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்டவுடன் கவலை பறக்குது?

ரத்னா: பிறந்த போது விருந்து வைக்கும் பெருமையில்லாது-பல
பெண்கள் வந்து தொட்டிலாட்டும் சிறப்பு மில்லாது
அருமையுள்ள ஆசைத்தந்தை அருகில் இல்லாது
வறுமையிலும் சிறுமையிலும் வாட்டம் கொள்ளாது
–(அரும்பு)

ஜீவகன்: குரலைக் கேட்ட எனது காதில் தேனும் பாயுது
இருந்த இடத்தை மறந்து மனம் எங்கோ தாவுது-அது
பறந்து பறந்து புதிய புதிய கனவு காணுது- பிள்ளைப்
பாசத்தினால் என் இதயம் ஆடிப்பாடுது
–(அரும்பு)

ரத்னா: தரம்மிகுந்த வைரமுடி தரையில் கிடக்குது
உரிமையுள்ள நெஞ்சம் அதை உணர்ந்து துடிக்குது
–(அரும்பு)
 

ஜீவகன்: சிரிப்பது தான் உலகத்திலே கவலைக்கு மருந்து
திகட்டாத அமுதமாக இனித்திடும் விருந்து –
-(அரும்பு)

 

 

 

எஜமான் பெற்ற செல்வமே!-என்

அல்லி பெற்ற பிள்ளை-1959

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: G. ராமநாத அய்யர்

எஜமான் பெற்ற செல்வமே!-என்
சின்ன எஜமானே! பசும்
பொன்னே என் கண்ணே
அழாதே! அழாதே!

தங்கமே உனக்குத் தந்தையில்லை!
தொண்டன் எனக்குத் தலைவன் இல்லை!
அன்புள்ள அன்னைக்குத் தராதே தொல்லை!
அன்னமே நீ கேளென் சொல்லை!
அழாதே! அழாதே

தாய் சொல்லைத் தட்டாதே தம்பி!
தந்தை பேரெடுக்கணும் என் தங்கக் கம்பி!
தீயவரோடு நீ சேராதே நம்பி! ராஜா!
சேவை செய்வேன் என்னை மறவாதே தம்பி!
அழாதே! அழாதே!

செல்லக்கிளியே செந்தாமரையே

பொன் விளையும் பூமி-1959

இசை : ரெட்டி
பாடியவர்: P. சுசிலா குழுவினர்

 

செல்லக்கிளியே செந்தாமரையே கன்னையா!-பேசும்
தெய்வச் சிலையே ஜீவச்சுடரே சின்னையா!-ஓ
தேடக் கிடைக்காத பொன்னையா!-நீ
செல்வச் சிறப்போடு வாழய்யா!

முல்லைநகை வீசி முத்தான மொழி பேசி நீயே!
துள்ளிவரும் காட்சி தோன்றுதே என்கண்ணில் சேயே!
நீலவிழி கொஞ்சும் நிலவு முகம் காணும்போது
நெஞ்சில் உருவாகும் இன்பநிலைக்கு ஈடேது!
உனக்கு ஈடேது!

அன்புப் பயிராக இன்ப நதியாக வந்தாய்!
பொங்கும் வளம்யாவும் எங்கள் மனைதன்னில் தந்தாய்

எதுவேண்டுமாயினும் உன்பாட்டன் தருவார் !
இதழூறும் முத்தங்கள் பெறுவார்!-தந்தை
கதை சொல்லுவார்-அன்னை
தாலாட்டுவாள்!-எங்கள்
கண்போல உனை என்றும் காப்பாற்றுவோம்!

எல்லோரும் உன்னை நல்லவன் என்றே

பாக்கியவதி-1957

இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. சுசிலா

 

எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா!
ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம்
உண்டாக வேண்டுமடா!

எனது கண்ணே உனது தாயின்
சொல்லை நீ கேளடா! -தாயின்
சொல்லை நீ கேளடா! ⁠⁠(எல்லோரும்)

பாலகா அதிகாலையில் விழிக்கும்
பழக்கம் வேண்டுமடா-என்கண்ணே
பள்ளி சேர்ந்தே நீ செந்தமிழைப் படிக்க வேண்டுமடா!
படிக்க வேண்டுமடா!
சொல்லைக் கேளடா!-தாயின்
சொல்லைக் கேளடா! ⁠⁠(எல்லோரும்)

தெய்வந்தன்னை மறவாமல் நீயும்
வாழ வேண்டுமடா!-என் கண்ணே
தீய சகவாசம் பொய், களவை
விலக்க வேண்டுமடா!
சொல்லை நீ கேளடா!-தாயின்
சொல்லை நீ கேளடா! ⁠⁠(எல்லோரும்)

 

 

 

சின்னச் சின்ன ரோஜா

அழகு நிலா-1962

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. B. ஸ்ரீனிவாஸ்

 

சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா!
அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா
(சின்ன)

கண்மணியே நீ வளர்ந்து படித்திட வேண்டும்
கல்வியிலே கலைமகளாய் விளங்கிட வேண்டும் –
செண்பகமே! பலரும் உனைப் புகழ்ந்திட வேண்டும்
செல்வத்திலே திருமகளாய்த் திகழ்ந்திட வேண்டும்
(சின்ன)

கன்னியராம் தாரகைகள் கூட்டத்திலே-நீ
வெண்ணிலவாய் கொலு விருக்கும் நாள்வர வேண்டும்.
கண் கவரும் கணவன் கிடைத்திட வேண்டும்-நான்
காணும் ஆசைக் கனவெல்லாம் பலித்திட வேண்டும்
(சின்ன)

 

தாயாக்கி வச்ச என் தங்கமே!

ரௌடி ராக்கம்மா -1977

இசை : சங்கர் கணேஷ்
பாடியவர்: வாணி ஜெயராம்

 

தாயாக்கி வச்ச என் தங்கமே!
நீ போகுமிடம் செல்வம் பொங்குமே!-என்னை
(தாயாக்கி)

வாயும் வயிறுமாய் இருக்காமே!-ஒரு
மருத்துவச்சி வந்து பார்க்காமே!
மாவடுவை வாங்கிக் கடிக்காமே-என்னை
மற்றாெருத்தி தாங்கிப் பிடிக்காமே!-பெத்த
(தாயாக்கி)

நான் பூஜை புனஸ்காரம் பண்ணாமே
ஒரு புண்ணியச் செயலையும் செய்யாமே
பேசும் தெய்வம் ஒண்ணு வந்ததடி!-கூடப்
பிறக்காத தங்கையாய்ப் போற்றுதடி
(தாயாக்கி)

என் தெய்வத்தைத் தெய்வமாய்க் கொண்டவளே!
பெரும் செல்வத்தின் செல்வத்தைக் கண்டவளே!
கொய்யாத கனியாக இருந்தவளே!-என்
குழந்தைக்குக் குழந்தையாய் வந்தவளே!
(தாயாக்கி)

அழகுக்கு அழகூட்டும் பிள்ளை முகம்! உனக்கு
ஆண்டவன் வழங்கிய வெள்ளை மனம்!
அழகுமுகம் இது மாறிடலாம்! உன்
அன்பு மனம் மாறக் கூடாது!

 

 

 

கண்ணுக்கு நீ யொரு கன்னிப் பொண்ணு!

உள்ளத்தில் குழந்தையடி -1978

இசை : சங்கர் கணேஷ்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் & வாணி ஜெயராம்

பெண்: கண்ணுக்கு நீ யொரு கன்னிப் பொண்ணு!-என்
கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு!
உண்ணடியோ சோறு உண்ணடியோ!-நீ
ஒட்டாரம் பண்ணுவ தென்னடியோ!

ஆண்: வண்ணச் சம்பா குத்தி சோறாக்கி
வாளைமீன் துண்டத்தைச் சாறாக்கி
வஞ்சம் அறியாத பெண் உனக்கு-நல்ல
வஞ்சர மீனும் பொரிச்சிருக்கு!

பெண்: உருவத்தில் நீ யொரு செங்கரும்பு!
உள்ளத்தில் சின்னஞ்சிறு அரும்பு!-நீ
ஓடியாடி பண்ணும் அக்குறும்பு-இந்த
உலகமறியா பிள்ளைக் குறும்பு!

ஆண்: இது பிஞ்சில் பழுக்கிற காலமடி!-பதி
னஞ்சில் இது என்ன கோலமடி!
நெஞ்சில் உன் எதிர்காலம் வந்து!-என்னை
சஞ்சலத்துக்கு ஆளாக்குதடி

சங்கத் தமிழ் மொழி

பிள்ளைக் கனியமுது-1958

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

 

மோகனா: சங்கத் தமிழ் மொழி
கொஞ்சும் வர்ணக்கிளி
எங்கள் இரு விழி நீ!-கண்ணே
இன்பம் தரும் ஒளி நீ!…
எங்கள் இரு விழி நீ! …

பெண்கள்: சங்கத் தமிழ் மொழி
கொஞ்சும் வர்ணக்கிளி
எங்கள் இரு விழி நீ!-கண்ணே
இன்பம் தரும் ஒளி நீ!…
எங்கள் இரு விழி நீ!…

மோகனா: தங்க நிற மலரே!-தொட்டிலில்
தவழும் சந்திரனே!
பிஞ்சுத் தளிர்க் கரத்தால்-ஜாடை
பேசிடும் சுந்தரனே!…
முத்தே! மரகதமே! திகட்டாத
முக்கனியின் சுவையே!…
புத்தமுதே! தேனே! எழுதா
சித்திரமே வாடா!…

பெண்கள்: சங்கத் தமிழ் மொழி
கொஞ்சும் வர்ணக்கிளி
எங்கள் இரு விழி நீ-கண்ணே
இன்பம் தரும் ஒளி நீ!…
எங்கள் இரு விழி நீ!…

 

 

தந்தையாரோ தாயும் யாரோ

யார் பையன்-1975

இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்; P. சுசிலா
லதா: தந்தையாரோ தாயும் யாரோ?
நீயும் எந்த ஊரோ?
ஜாலக்காரா தூங்கடா!
ஆராரோ-நான் யாரோ-நீயாரோ! ⁠(தந்தை)

மணம் புரிந்து அரசும் வேம்பும்-நான்
வலம் வராத போதிலும்
மதலையாக வீடு தேடி
வந்ததென்ன விந்தையோ! (தந்தை)

மாலை சூடி லாலி பாடி
மனைவியாகக் கொள்ளும் முன்னே
ஏழு வயதுப் பிள்ளையாக
எனக்குத் தந்தார் உன்னை! (தந்தை)

வாலை சும்மா சுருட்டிக் கொண்டு
தூங்கடா நீ தூங்கு!
வம்பு செய்தால் உந்தன் கன்னம்
எந்தன் கையால் வீங்கும்! (தந்தை)

வாடா மல்லிகையே! வாடா

எங்கள் குலதேவி-1959
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா

 

வாடா மல்லிகையே! வாடா என் இன்பமே!
மாற்றுக் குறையாத தங்கமே!
வளரும் என் செல்வமே! ⁠(வாடா)

தங்கத் தொட்டில் போட்டு தாலாட்டியே!
மங்காத வைரநகை உனக்குப் பூட்டியே!
சிங்காரம் செய்யவே கொண்டேனே ஆசையே!
தேனே என் செல்வமே! கண்ணே! ⁠(வாடா)

நாடும் ஏடும் இங்கே உன் பேரையே!
நாள் தோறும் கொண்டாட மந்திரியாகியே!
வாழ்வதை நான் காண கொண்டேனே ஆசையே!
வளரும் என் செல்வமே! கண்ணே! ⁠(வாடா)

ஏழை எளியோர் வந்தால் வாரி வழங்கியே!
வாழைக் குருத்தாக வளர்ந்தே ஓங்கியே!
வாழ்வதை நான் காண கொண்டேனே ஆசையே
வளரும் என் செல்வமே! கண்ணே! ⁠(வாடா)

 

 

 

பச்சைப் பசுங்கிளியே!-ஜொலிக்கும்

எங்கள் குலதேவி-1959

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா

பச்சைப் பசுங்கிளியே!-ஜொலிக்கும்
பவள வண்ணச் சிலையே!
பிச்சையாக எனக்கே-கிடைத்த
பேரின்பப் பொக்கிஷமே!-தாலேலோ
கண்ணே தாலேலோ!

உச்சி குளிருதடா! கண்மணி
உன் முகம் பார்க்கையிலே!-என்
லட்சியப் பெருங்கனவே-எனது
நேத்திரம் நீ தாண்டா! தாலேலோ
கண்ணே தாலேலோ!

பாசக் கொடியாலே-எனையே
பற்றி இழுத்தவனே!
ஆசை வெறியில்லையடா-எனது
ஆனந்தம் நீ தாண்டா! (பச்சை}

தாலாட்டி சீராட்ட-உன்னைப் பெற்ற
தாயின்று இல்லையடா!
தங்கமே அந்தக் குறை-தீர்ப்பதே
இங்கு என் கடமையடா! தாலேலோ!
கண்ணே தாலேலோ!

 

அன்பின் உருவமடா-உன் அன்னை என்
அருமைப் பிறவியடா!
என்றோ மறைந்தாலும்-தெய்வம் போல்
இருந்தவள் காத்திடுவாள்! {பச்சை)

 

 

 

 

கோமள செழுந் தாமரை

நல்லதங்காள்-1955

இசை : G. ராமநாதன்
பாடியவர்: ஜிக்கி

 

கோமள செழுந் தாமரை-எழில்
மேவிய குண சீலா
குலமே தான் விளங்க வந்த
அருந்தவ பாலா! (கோமள)

வளர் பிறையே வானமுதே
மாசிலாத பொன்னே!
மணமலரே தரையினிலே
தவழ விடோம் உன்னை!
வளநாடே உன் புகழைப்
பாடு மடா பின்னே!
வருங்கால மன்னவனே
வாழ்க எங்கள் கண்ணே! (கோமள)

கதிரவனே மாமன் உனைக்
காண ஓடி வருவார்!
கண் கவரும் கனக மணி
பொம்மைகளும் தருவார்!
மதிவாணா உன்னருமை
மாமி அலங்காரி
உனை வாரித் தழுவிடுவார்
உண்மை இன்பம் பெறுவாள்! (கோமள}
வளர் பிறையே வானமுதே
மாசிலாத பொன்னே!
மண மலரே வறுமையினால்
வதங்கிடும் என் கண்ணே!
தளராத என் இதயம்
தளர்ந்ததடா இன்று!
தனிமையிலே தவிக்குதடா
உங்கள் துன்பம் கண்டு! (கோமள)

 

 

 

 

ஆசைக் கிளியே! அழகுச் சிலையே!

பாக்கியவதி-1957

இசை: S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. சுசிலா

 

ஆசைக் கிளியே! அழகுச் சிலையே!
அமுத நிலையே! செல்வமே!
வாச மலரே! பேசும் பிறையே:
வாழ்வின் நிதியே தூங்கடா!

மாசிலா ஒளி வீசப் பிறந்த
வைர மணியே இன்பமே!
வசந்த காலத் தென்றலே-என்
வாழ்வின் நிதியே தூங்கடா!

குழலும் யாழும் இனிமை தருமோ
மழலை இன்பம் போலவே!
கோடி கோடி செல்வ மெல்லாம்
குழந்தைக் கீடு ஆகுமோ?
வாழ்வின் நிதியே தூங்கடா!

 

 காதல்

வசந்த முல்லை போலே வந்து

சாரங்கதரா-1958

இசை : G. ராமநாதன்
பாடியவர்: T. M. சௌந்தரராஜன்
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் வெண் புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே!
வா……வா……ஒடி வா……
(வசந்தமுல்லை)

இசையினில் மயங்கியே
இன்புறும் அன்பேவா!
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே!
(வசந்தமுல்லை)

சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே!
மந்திரக் கண்ணாலே, தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா!

இந்திர வில் நீயே!
சந்திர ஒளி நீயே!
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே!
(வசந்த முல்லை)

 

 

 

 

முல்லை மலர் மேலே

உத்தமபுத்திரன்-1958

இசை G. ராமநாதன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் P. சுசிலா

 

பெண்: முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே!

ஆண்: வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே!
அல்லி விழி தாவக் கண்டேன் என்மேலே!

பெண்: வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே!
கண்ணெதிரில் காணுகிறேன் ப்ரேமையினாலே!

ஆண்: மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப்போலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே!

பெண்: விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே!
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே!

ஆண்: சிந்தை நிலைமாறியதாலே எந்தன் முன்னாலே!
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே!

ஆயிரம் கண் போதாது

பாவை விளக்கு-1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: C. S. ஜெயராமன்
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே-குற்றால
அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே! (ஆயிரம்)

தென்றல் இசை பாடிவரும் தேனருவி ஆடிவரும்
அன்றலர்ந்த செண்பகப்பூ வண்ணக்கிளியே!-எங்கும்
ஆனந்தக் காட்சி தரும் வண்ணக்கிளியே! (ஆயிரம்)

எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக்கிளியே! நெஞ்சில்
இன்ப நிலை தந்திடுதே வண்ணக்கிளியே!
பொங்கி வரும் ஐந்தருவி வண்ணக்கிளியே! இங்கே
சங்கத்தமிழ் முழங்கிடுதே வண்ணக்கிளியே! (ஆயிரம்)

மந்தி யெல்லாம் மாங்கனியைப் பந்தாடி பல்லிளிக்கும்
சந்திரன் போல் சூரியனும் வண்ணக்கிளியே-குளிர்ச்சி
தந்திடுவான் இங்கு என்றும் வண்ணக்கிளியே (ஆயிரம்)

 

 

 வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி

பாவை விளக்கு-1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: C. S. ஜெயராமன்

 

வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்!
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்! (வண்ண}

வெண்ணிலவின் அழகை யெல்லாம்அவள் முகத்தில் கண்டேன்!
வேல்விழி வீச்சின் மின்னலினால் திசைமாறி நின்றேன்! (வண்ண)

அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்!
ஆடற்கலை இலக்கணத்தை அறியவரும் மயிலும்!
இன்னிசையைப் பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்!
இயற்கை யெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்! (வண்ண)

கன்னல் மொழி பேசும் அந்தக் கன்னியரின் திலகம்
கமலம்! என் கமலம்! செங்கமலம்! (வண்ண)

 

 

 

காவியமா?  நெஞ்சின் ஓவியமா?

பாவை விளக்கு-1960

இசை : K. V. மகாதேவன் –
பாடியவர்கள்: C. S. ஜெயராமன் P. சுசிலா

 

ஆண் : காவியமா?
நெஞ்சின் ஓவியமா?
அதன் ஜீவிதமா!
தெய்வீகக் காதல் சின்னமா?

பெண் : காவியமா?
நெஞ்சின் ஓவியமா?
அதன் ஜீவிதமா?
தெய்வீகக் காதல் சின்னமா?

ஆண் : காவியமா?
நெஞ்சின் ஓவியமா?
அதன் ஜீவிதமா?
தெய்வீகக் காதல் சின்னமா?

பெண் : மொகலாய சாம்ராஜ்ய தீபமே! சிரித்த
முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே!

ஆண் : மும்தாஜே முத்தே என் பேகமே! பேசும்
முழுமதியே என் இதயகீதமே!

பெண் : என்றும் இன்பமே! பொங்கும் வண்ணமே!
என்னை சொந்தம் கொண்ட தெய்வமே!

ஆண் : அன்பின் அமுதமே! அழகின் சிகரமே!
ஆசை வடிவமே! அழகின் அதிசயமே! (காவியமா)
 

பெண்: எந்நாளும் அழியாத நிலையிலே-காதல்
ஒன்றே தான் வாழும் இந்த உலகிலே!

ஆண் : கண்முன்னே தோன்றும் அந்தக் கனவிலே! உள்ளம்
கலந்திடுதே ஆனந்த உணர்விலே!

பெண்: கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்!
இனிமை தருவதுண்மைக் காதலே!

ஆண் : காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்!

 

 

 வாராய் நீ வாராய்!

மந்திரி குமாரி-1950

இசை : G. ராமநாதன்
பாடியவர்கள்: திருச்சி லோகநாதன் & ஜிக்கி

ஆண் : வாராய் நீ வாராய்!
போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்!

பெண் : ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே!

ஆண் : இதனிலும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்
கலந்துயர் விண்ணினைக் காண்பாய்! அங்கே வாராய்!

பெண் : அமைதி நிலவுதே! சாந்தம் தவழுதே!
அழிவில்லா மோன நிலை சூழுதே!

ஆண் : முடிவில்லா மோன நிலையை நீ!-மலை
முடியில் காணலாம் வாராய்!

பெண் : ஈடிலா அழகை சிகரமீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்!

ஆண் : இன்பமும் அடைந்தே இகம் மறந்தே
வேறுலகம் காணுவாய் அங்கே!
வாராய்! நீ வாராய்!
புலியெனைத் தொடர்ந்தே புதுமான் நீயேவாராய்!

 

 

 

 

 

உலவும் தென்றல் காற்றினிலே

மந்திரி குமாரி-1950

இசை G. ராமநாதன்
பாடியவர்கள்: திருச்சி லோகநாதன் & ஜிக்கி

 

பெண் : உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே!

ஆண் : அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே!

பெண் : உயர்ந்த மலையும் உமது அன்பின்
உயர்வைக் காட்டுதே!

ஆண் : இதயம் அந்த மலைக்கு ஏது?
அன்பைக் காட்டவே!

பெண் : தெளிந்த நீரைப் போன்ற தூய
காதல் கொண்டோம் நாம்!

ஆண் : களங்கம் அதிலும் காணுவாய்
கவனம் வைத்தே பார்!

பெண் : குதர்க்கம் பேசி என்னை மயக்க
எங்கு கற்றீரோ?

ஆண் : உனது கடைக்கண் பார்வை காட்டும்
பாடம் தன்னிலே?

இருவரும் : உலக வாழ்க்கை ஆற்றினிலே
காதலெனும் தோணிதனில்
ஊர்ந்து செல்லுவோம்!

 

 

 

 

கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து

ஆண் : கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து
மின்னொளியே ஏன் மௌனம்?
வேறெதிலே உந்தன் கவனம்?

பெண் : இன்மொழி பேசி ஏய்த்திட எண்ணும்
இதய மில்லாதார் கவனம்!
இழந்ததனால் இந்த மௌனம்!

ஆண் : வண்ணச் சிலையே! வளர்பிறையே!
வந்த தறியேன் மனக் குறையேன்?

பெண் : எண்ணம் வேம்பு! மொழி கரும்பு!
எனைப் பிரிந்த உம் மனம் இரும்பு!

ஆண் : கண்ணே போதும் சொல்லம்பு!
உனைக் கணமும் பிரியேன் எனை நம்பு!

பெண் : உண்மையில் என் மேல் உமக்கன்பு!
உண்டென்றால் இல்லை இனி வம்பு!

ஆண் : கண்ணில் தவழுதே குறும்பு!
கனி மொழியே நீ எனை விரும்பு!

இருவரும் : கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து
கனிவுறும் காதல் ஜோதி!
காண் போமே பாதி பாதி!

தூக்கு தூக்கி-1954

இசை : G. ராமநாதன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன், M. S. ராஜேஸ்வரி
 

 

 

வண்டி உருண்டோட அச்சாணி தேவை!

வண்ணக்கிளி-1959

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலா

பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை!
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை! (வண்டி)

ஆண் : சொந்தம் கொண்டாடவென்று அன்பு கொண்டு
ஷோக்கு மாப்பிள்ளை வாராறே இன்று!
ஷோக்கு மாப்பிள்ளை வாராறே இன்று!

பெண் வந்தாலும் பலனில்லையே-அன்பைத்
தந்தாலும் அதை வாங்க ஆள் இல்லையே! (வண்டி)

பெண்: நிலவைக்கண்டு மலரும் அல்லி
விளக்கைக் கண்டு மலருமா?
உலகம் கொண்டாடும் சூரியன் வந்தாலும்
உண்மை இன்பம் கொண்டாடுமா?

ஆண் : விளங்கும்படி சொல்லம்மா
வெண்ணிலவும் யாரம்மா?
வேலைக்காரன் எனக்கு அது புரியுமா? என்
வேலையை நான் பார்க்க வேணும் தெரியுமா? – சும்மா
விளையாட வேணாம் அதைக் கொடம்மா! கொடம்மா!

பெண்: வண்டி உருண்டோட அச்சாணி தேவை!
என்றும் அது போல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை!
ஆண் : வம்பு ஏனம்மா? வாங்க! அதை தாங்க! வந்த
வழிபார்த்து நேராகப் போங்க! நீங்க
வழி பார்த்து நேராகப் போங்க!

பெண் : வழிபார்த்து நான் போகவே-எந்தன்
மனம் நாடும் நிலவாகி வழிகாட்டுங்க!

ஆண் : ஆ… … …
பெண் : ஊம்… … …

ஆண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை!

பெண்: என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை!

ஆண் : ஊம்!

இருவர்: வண்டி உருண்டோட அச்சாணி தேவை!
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை!

மாசிலா உண்மைக் காதலே?

அலிபாபாவும் 40 திருடர்களும்-1955

இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்கள்: A. M. ராஜா P. பானுமதி

அலிபாபா : மாசிலா உண்மைக் காதலே?
மாறுமோ செல்வம் வந்த போதிலே!

மார்ஜியானா : பேசும் வார்த்தை உண்மை தானா?
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா?

அலிபாபா : கண்ணிலே மின்னும் காதலே!
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே?
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே!

மார்ஜியானா : நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே?
(பேசும்)
அலிபாபா : உனது ரூபமே உள்ளந் தன்னில் வாழுதே!

மார்ஜியானா : இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே!

இருவரும் : அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்!
இங்கு நாம் இன்பவாழ்வின் எல்லை காணுவோம்!
(மாசிலா)

மாமா! மாமா! மாமா!

குமுதம்-1961

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன் & ஜமுனராணி

பெண் : தொடாதே!
மாமா! மாமா! மாமா!

ஆண் : ஏம்மா! ஏம்மா! ஏம்மா!

பெண் : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்திச் சுத்தி
கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா?-தாலி
கட்டும் முன்னே கையும் மேலே படலாமா?
{-மாமா)

ஆண் : வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா?-கையைத்
தொட்டுப் பேச மட்டும் தடை போடலாமா?
(-ஏம்மா)

பெண் : ஊரறிய நாடறியப் பந்தலிலே!-நமக்கு
உற்றவங்க மத்தவங்க மத்தியிலே!
ஒண்ணாகி உறவுமுறை கொண்டாடும் முன்னாலே
ஒருவர் கையை மற்றாெருவர் பிடிக்கலாமா?-இதை
உணராம ஆம்பளைங்க துடிக்கலாமா?

ஆண் : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே!-துாண்டி
போடுகிற உங்களது கண்ணாலே!
ஜாடை காட்டி ஆசை மூட்டி
சல்லாபப் பாட்டுப் பாடி

நீங்க மட்டும் எங்க நெஞ்சைத் தாக்கலாமா? – உள்ள
நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா?

பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்தவுடன் காதலிச்சு – அவளைக்
கைவிட்டு ஒன்பது மேல் ஆசை வச்சு
வண்டாக மாறுகின்ற மனமுள்ள ஆம்பளைங்க
கொண்டாட்டம் போடுவதைப் பார்த்ததில்லையா? -பெண்கள்
திண்டாடும் கதைகளையே கேட்டதில்லையா?

ஆண் : ஒண்ணெ விட்டு ஒண்ணெத் தேடி ஒடுறவன்!
ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன்!
உள்ள இந்த உலகத்தையே
உற்றுப் பார்த்தா நீங்க இப்போ
சொல்லுவது எல்லாமே உண்மைதான்!-கொஞ்சம்
தூரநின்னு பழகுவதும் நன்மைதான்! நன்மைதான்!
ஆமா! ஆமா! ஆமா!

பெண் : கட்டுப்பாட்டை மீறாமெ
சட்ட திட்டம் மாறாமெ
காத்திருக்க வேணும் கொஞ்சகாலம் வரை!
கல்யாணம் ஆகிவிட்டால் ஏது தடை?

 

 

 

 

 

கொடுத்துப் பார்! பார்! பார்!

விடிவெள்ளி-1960

இசை : A. M. ராஜா
பாடியவர்கள்: ராஜா & ஜிக்கி

 

ஆண் : கொடுத்துப் பார்! பார்! பார்! உண்மை அன்பை!
நினைத்துப் பார்! பார்! அதன் தெம்பை!
உயர்வு தாழ் வெனும் பேதத்தைப் போக்கும்!
இருவர் வாழ்வினில் இன்பத்தைச் சேர்க்கும்!
(கொடு)

ஆண் : கண்ணுக்குள் மின்னல் வெட்டைக் காட்டுகின்ற கண்ணம்மா!
கன்னத்தில் ஆப்பிள் வந்து காய்த்திருப்பதென்னம்மா!
உண்பதற் காகுமா? என் பசி தீருமா?
உள்ளதைக் கேட்டாலே என் மீது கோபமா?
(கொடு}

பெண் : கற்பனை உங்களுக்கே சொந்த மென்ற எண்ணமா?
சர்க்கரை பாகு உங்கள் நாவில் வந்த தென்னம்மா
பிறவியில் வந்ததா? பெண் அன்பு தந்ததா?
இரவெல்லாம் உறவாடும் கனவாலே சேர்ந்ததா?
(கொடு)

ஆண் : ஆட்டத்தில் தோகையோடு போட்டி போடும் முல்லையே!
ஓட்டத்தில் என்னை நீயும் வெல்வதற்கு இல்லையே!

தோற்றத்தில் முல்லை நான்! ஓட்டத்தில் புள்ளி மான்!
போட்டியும் போட்டாலே தவறாமல் வெல்லுவேன்
(கொடு)

பெண் : உன்னாலே எந்தன் உள்ளம் ஊஞ்சல் ஆடுதே
பின்னாலே சுத்திச் சுத்தித் தாளமெல்லாம் போடுதே
காலத்தின் கோலமா? காதலின் ஜாலமா?
காணாத புது வாழ்வு கண் இன்று காணுதே!
(கொடு)

 

 

 

 

 

 தென்றல் உறங்கிய போதும்

பெற்ற மகனை விற்ற அன்னை-1958

இசை: மெல்லிசை மன்னர்கள்
எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள் : A.M. ராஜா & P. சுசீலா

 

ஆண் : தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா?-காதல்
கண்கள் உறங்கிடுமா?

பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடிக் கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா?-காதல்
கண்கள் உறங்கிடுமா?

ஆண் : நீலஇரவிலே தோன்றும் நிலவைப் போலவே
வாலைக் குமரியே நீயும் வந்தபோதிலே!

பெண் : நேசமாகப் பேசிடாமல் பாசம் வளருமா?
ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா?
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா?-காதல்
கண்கள் உறங்கிடுமா?

ஆண் : இதய வானிலே இன்பக் கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே!

பெண்: வானம்பாடி ஜோடி கானம் பாடமயங்குமா?
வாசப் பூவும் தேனும் போல வாழத்

இருவரும்: அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உ றங்கிடுமா?-காதல்
கண்கள் உறங்கிடுமா?

 

 

 

 

 

 ஆடாத மனமும் உண்டோ?

மன்னாதி மன்னன்-1960

இசை எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & M. L. வசந்தகுமாரி

 

ஆண் : ஆடாத மனமும் உண்டோ? நடை
அலங்காரமும் அழகு சிங்காரமும்-கண்டு (ஆடாத)

பெண் : நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்-வீர
நடைபோடும் திருமேனி தரும் போதையில் ⁠ (ஆடாத)

ஆண் : வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்-கை
வளை ஓசை தரும் இன்ப இசைக் கார்வையில்

பெண் : ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்-தனி
இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில் ⁠ (ஆடாத)

ஆண் : இதழ் கொஞ்சும் கனிஅமுதை மிஞ்சும்
குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே!

பெண் : பசுந்தங்கம் உனது எழில் அங்கம்
அதன் அசைவில் பொங்கும் நயம் காணவே! ⁠ (ஆடாத)

ஆண் : முல்லைப் பூவில் ஆடும் சிறுவண்டாகவே!

பெண் : முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே

ஆண் : அன்பை நாடி உந்தன் அருகில் வந்து நின்றே

பெண் : இன்ப மெனும் பொருளை இங்கு கண்டே

ஆண் : தன்னை மறந்து

பெண் : உள்ளம் கனிந்து

இருவரும் : இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன்
(ஆடாத)

பெண் : தேனாறு பாய்ந்தோடும் கலைச் செல்வமே-தரும்

இருவரும் : திகட்டாத ஆனந்த நிலை பொங்குமே!

பெண் : தேனாறு பாய்ந்தோடும் கலைச் செல்வமே-தரும்

இருவரும் : திகட்டாத ஆனந்த நிலை பொங்குமே!

 

 

 

 

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?

குமுதம்-1960

இசை: K. V. மகாதேவன்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலா

 

பெண் : என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?
இனி முடியுமா?-நாம்
இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா? தெரியுமா?
கண்ணுக்குள்ளே புகுந்து
கதைகள் சொன்ன பின்னே!
எண்ணத்திலே நிறைந்து! அதில்
இடம் பிடித்த பின்னே!
எந்தன் அன்னை தந்தை
சம்மதித்த பின்னே!
அன்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே!
ஓ … ஓ … ஓ … ஓ …

ஆண் : உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா?
இனி முடியுமா?-என்
உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா? தெரியுமா?
அன்னம் போல நடை நடந்து வந்து என்
அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
கன்னம் சிவக்க நீயிருக்க மஞ்சள் கயிறு எடுத்துனது
கழுத்தில் முடிக்கும் இன்பநாள் தெரியும் போது
ஆ… ஆ… ஆ… ஆ…

பெண் : மலர் மாலை சூட்டி
பலபேரும் வாழ்த்த
வளையாடும் என் கையின் விரலில்
கணையாழி பூட்டி
புதுப்பாதை காட்டி
உறவாடும் திருநாளின் இரவில் (என்னை)

ஆண் : இளந்தென்றல் காற்றும்
வளர் காதல் பாட்டும்
விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும்
கனிச்சாறும் கொண்டு
தனியே நீ வருகின்ற நிலையில்

ஆண்: ஆ…ஆ… ஆ…
பெண்: ஓ…ஓ….ஓ…

 

 

 

 

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே!

ஆடவந்ததெய்வம்-1960

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: T. R. மகாலிங்கம் & P. சுசிலா

 

ஆண்

சொட்டு சொட்டுன்னு

சொட்டுது பாரு இங்கே!

பெண்

கொட்டு கொட்டுன்னு

கொட்டுது பாரு அங்கே!

ஆண்

கஷ்டப்படும் ஏழை சிந்தும்

நெத்தி வேர்வை போல – அவன்

கஞ்சிக்காகக் கலங்கிவிடும்

கண்ணீர்த் துளியைப் போலே (சொட்டு)

பெண்

முட்டாப் பயலே மூளையிருக்கா

என்று ஏழைமேலே

துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக்

கொட்டுற வார்த்தை போலே – மழை (சொட்டு)

ஆண்

முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே

முக்காடு எதுக்கு? – உன்

முக்காட்டை நீக்கு! தலை ஈரத்தைப் போக்கு!

பெண்

இருக்க இடங்கொடுத்தா என்னையே நீ தாக்குறே!

குறுக்கு மூலை பாயுறே! கோணப் புத்தியெக் காட்டுறே!

ஆண்

பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும்

இரும்பைப் போலவே!-முகம்

சிவக்குதே இப்போ- அது சிரிப்பதும் எப்போ?

பெண்

குளிச்சு முழுகிவிட்டுக் குளிர்ச்சியாக ஓடிவா!

செவந்து போன முகத்திலே சிரிப்பை நீயும் காணலாம்!

 

 

 

 

கோடி கோடி இன்பம் தரவே!

ஆடவந்த தெய்வம்-1960

இசை : K. V. மகாதேவன்

பாடியவர் : T. R. மகாலிங்கம்

 

கோடி கோடி இன்பம் தரவே!

தேடி வந்த செல்வம்!

கொஞ்சும் சதங்கை கலீர் கலீரென

ஆட வந்த தெய்வம்!
பாடும் பாட்டின் பாவம் தன்னை

பார்வை சொல்லிடவே!

ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம்

அசைந்தே துள்ளிடவே!

முழு நிலவென அழகு மலரென

முகங் காட்டியே பருவமங்கை உருவாய் ⁠(கோடி)

 

வாடும் பயிரை வாழச் செய்ய

மேகம் வந்தது போல்

வாச மலரும் அன்பினாலே

தேனைத் தந்தது போல்

கனிமொழியுடன், கருணை விழியுடன்

களிப்பூட்டவே கலைஞானவடிவாய் ⁠(கோடி}

 

 

பச்சைக்கிளி பாடுது!

அமரதீபம்-1956

இசை : சலபதிராவ்

பாடியவர்: ஜிக்கி

 

பச்சைக்கிளி பாடுது! பக்கம் வந்தே ஆடுது!

இங்கே பாரு!

உன் துன்பம் பறந்தோடுது- (பச்சை)

கள்ளம் அறியாதது! ரொம்ப சாது!

வேறெங்கும் ஓடாது!

உன் சொல்லைத் தள்ளாது- (பச்சை)

உன்னைக் காணா விட்டால் உயிர் வாடும்!

கண்டால் இன்பம் கூடும்!

சந்தோஷங் கொண்டாடும்! (பச்சை)

காதல் கதை சொல்லவோ மனம் கூசும்!

கண்ணால் அதைப் பேசும்!

அன்பால் வலைவீசும்- ⁠(பச்சை)

 

 

 

சித்தாடை கட்டிக் கிட்டு

வண்ணக்கிளி-1959

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: P. சுசிலா & ஜமுனா ராணி குழுவினர்.

 

சித்தாடை கட்டிக் கிட்டு

சிங்காரம் பண்ணிக்கிட்டு

மத்தாப்பூ சுந்தரி ஒருத்தி

மயிலாக வந்தாளாம்!

அத்தானைப் பார்த்து-அசந்து

போயி நின்னாளாம்! (சித்தாடை)

 

முத்தாத அரும்பெடுத்து

முழ நீள சரம் தொடுத்து

வித்தார கள்ளி கழுத்தில்

முத்தாரம் போட்டானாம்!

எத்தாகப் பேசி

இளமனசைத் தொட்டானாம்! (முத்தாத)

 

குண்டூசி போல ரெண்டு

கண்ணும் உள்ளவளாம்-முகம்

கோணாமல் ஆசை அன்பா

பேசும் நல்லவளாம்!

அந்தக் கண்டாங்கி சேலைக்காரி கை காரியாம்!

அந்தக் கள்ளி அத்தானைக் கல்யாணம்

பண்ணிக் கொண்டாளாம்! (சித்தாடை)

 

அஞ்சாத சிங்கம் போல

வீரம் உள்ளவனாம்!-யானை

வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்!

அந்த முண்டாசுக்காரன் கொஞ்சம்

முன் கோபியாம்!

ஆனாலும் பெண்ணென்றால் அவன்

அஞ்சிக் கெஞ்சி நிற்பானாம்! (முத்தாத)

 

முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க!

அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க!

அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க!

அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க

அதைக் கண்டு சந்தோஷம் கொண்டாடிப்

பாடப் போறாங்க! (சித்தாடை)

 

 

 

படிக்க வேண்டும் புதிய பாடம்

தாயில்லாப் பிள்ளை-1961

இசை : к v. மகாதேவன்

பாடியவர்: P. சுசிலா

 

பெண் : படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா!

பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா!

ஆண் : பார்வை சொல்லும் பாடம் கண்டு விழிக்கிறேனம்மா!

படிப்ப தெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா?

(படிக்க)

பெண் : கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு-நாம்

எட்டிச்சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு?

ஆண் : ஒட்டும் இரு உள்ளந் தன்னில் பற்றிக்கொண்டது-அந்த

புத்தம்புது நெருப்பைத் தானே காதலென்பது! கவிஞர் சொன்னது!

(படிக்க)

பெண் : தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்த உலகமே

செங்கதிரோனைச் சுற்றும் சேதி பழைய பாடமே!

ஆண் : என்னை மட்டும் சுற்றிக் கொண்டு இந்த உலகமே-இன்று

உன்னைச் சுற்றிக்கேட்கும் பாடம் புதிய பாடமே-புதிய பாடமே!

(படிக்க)

ஆண் : படிக்கவேண்டும் புதிய பாடம் வாத்தியாரம்மா!

பெண் : பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா!

இரு: ஹா… ஹா… ஹா… இம்… ம்… ம்…

 

 

மழை முத்து முத்துப் பந்தலிட்டு

தேர்த் திருவிழா-1968

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

 

ஆண் : மழை முத்து முத்துப் பந்தலிட்டு

கிட்டக் கிட்டத் தள்ளுது!

பெண் : நெஞ்சைத் தொட்டுத் தொட்டு ஆசைகளை

புட்டு புட்டுச் சொல்லுது!

ஆண் : என்னம்மா பண்ணுது உள்ளதைச் சொல்லு?

பெண் : என்னமோ பண்ணுது என்னத்தைச் சொல்ல…

(மழை)

பெண் : கட்டுக் குலையாத-அரும்பைத்

தொட்டு விளையாட-நெருங்கி

ஒட்டி உறவாட வந்தது காத்து!

ஆண் : மொட்டுச் சிரிப்பாட-இதழில்

பட்டு விரிப்பாட-அழகைக்

கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து!

பெண் : பூவாகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாச்சு!

ஆண் : அந்தக் கனியும் இப்போ கைக்கு வந்தாச்சு!

(மழை)

பெண் : வெத்தலை பாக்கு வச்சு-விருந்தை

வீட்டிலே கூட்டி வச்சு-தாலி

கட்டி என் கைபுடிச்சு கலந்திட வேண்டும்!

 

ஆண் : குத்து விளக்கு வச்சு-குலுங்கும்

மெத்தையில் பூவிரிச்சு-இனிக்கும்

வித்தையெல்லாம் படிச்சு சுகம் பெற வேண்டும்.

 

பெண் : காலாட மேலாடக் கையாட முகம் சிவக்கும்!

 

ஆண் : என் கைகளில் உன் பூவுடல் மிதக்கும்.

(மழை)

 

 

 

சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு-சின்னச்

தேர்த் திருவிழா-1968

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

 

ஆண் : சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு-சின்னச்

சிட்டு! உன் பார்வை மின் வெட்டு!

பெண் : சிங்காரக் கைகளில் என்னைக் கட்டு! நெஞ்சைத்

தொட்டு! உன் அன்பை நீ கொட்டு! (சித்)

 

ஆண் : இது காதல் நாடக மேடை!

பெண் : விழி காட்டுது ஆயிரம் ஜாடை!

ஆண் : இங்கு ஆடலுண்டு!

பெண் : இன்பப் பாடலுண்டு

ஆண் : சின்ன ஊடலுண்டு!

பெண் : பின்னர் கூடலுண்டு! ⁠(சித்)

ஆண் : மது உண்டால் போதையைக் கொடுக்கும்!

பெண் : அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்!

ஆண் : தன்னைத் தான் மறக்கும்!

பெண் : அது போர் தொடுக்கும்!

ஆண் : இன்ப நோய் கொடுக்கும்!

பெண் : பின்பு ஒய்வெடுக்கும்!

ஆண் : இங்கு தரவா நானொரு பரிசு?

பெண் : அதைப் பெறவே தூண்டுது மனசு! :ஆண் : ஒண்ணு நான்கொடுத்தால் என்ன நீ கொடுப்பாய்?

பெண் : உண்ணத் தேன் கொடுப்பேன் என்னை நான் கொடுப்பேன்!

(சித்)

 

 

 

 

தேவியின் திருமுகம்

வெள்ளிக் கிழமை விரதம்-1974

இசை : சங்கர், கணேஷ்

பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

 

ஆண் : தேவியின் திருமுகம்

தரிசனம் தந்தது!

பெண் : தேவனின் அறிமுகம்

உறவினைத் தந்தது!

ஆண் : பூவுடல் நடுங்குது குளிரில்-நான்

போர்வையாக லாமா?

பெண் : தேவை ஏற்படும் நாளில்!-அந்த

சேவை செய்யலாம்!

ஆண் : மனமோ கனி!

குணமோ தனி!

பெண் : மனமும் குணமும்!-கோபம்

வந்தால் மாறுமே!

ஆண் : நோ! நோ! நோ!

 

ஆண் :காற்றினில் ஆடிடும் கொடிபோல்!-என்

கையில் ஆட நீ வா!

பெண் : கையினில் ஆடணும் என்றால்!-ஒன்றை

கழுத்தில் போடணும்!

ஆண் : அதை நான் தரும்!

திரு நாள் வரும்!

பெண் : வரட்டும் அந்த நாள்!-வந்தால்

தருவேன் என்னை நான்!

ஆண் : எஸ்! எஸ்! எஸ்!

 

 

 

பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு!

படிக்காத மேதை-1960

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: A.L. ராகவன் & ஜமுனாராணி

 

ஆண் : பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு!-கண்

பார்வை போடுதே சுருக்கு!

பெண் : பாதையிலே பல வளைவிருக்கு!-உங்க

பார்வையிலே நம்ம உயிரிருக்கு!

ஆண் : நானிருக்கும் போது பயமெதற்கு?- என்

நாட்டமெல்லாம் உன் மேலிருக்கு!

பெண் : ஆனைக்கும் உண்டு அடிசறுக்கு!-இதை

அறிந்தும் ஏனோ வீண்கிறுக்கு!

 

பெண் : நெஞ்சினிலே புது நினைவிருக்கு !-அதில்

நேசத்தினால் வரும் மணமிருக்கு!

ஆண் : நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு!-நல்ல

நேரமும் இடமும் கிடைத்திருக்கு!

பெண். எங்கும் இன்பம் நிறைந்திருக்கு!-அதில்

இருமனம் ஒன்றாய்க் கலந்திருக்கு!

 

 

 

அன்பே அமுதே! அருங்கனியே!

உத்தமபுத்திரன்-1958

இசை : G. ராமநாதன்

பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P.சுசிலா

 

ஆண் : அன்பே அமுதே! அருங்கனியே!

ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே!

எண்ணமெல்லாம் நிறைந்தே நீயே!

இன்பமும் தந்தாயே! கொஞ்சும் கிளியே!

கன்னல்மொழிபேசி கண்ணால் வலைவீசி!

கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி!
பெண் : என்ன தவம் செய்தேன் கண்ணா!

உன்னுடன் உறவாட ஆசை மன்னா!
ஆண் : இருவரும் ஒன்றானோம்!

மதுவுண்ணும் வண்டானோம்!
பெண் : சுவாமி!

ஆண் : கண்ணே

பெண் : இதுவே பேரின்பம்!

மியாவ்! மியாவ்! பூனைக்குட்டி!

குமுதம்-1961

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி

 

மியாவ்! மியாவ்!

மியாவ்! மியாவ்! பூனைக்குட்டி!

வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி!

அத்தான் மனசு வெல்லக்கட்டி-அவர்

அழகு எப்படி சொல்லுகுட்டி!

அங்கமெல்லாம் பளபளக்கும்

தங்க நிறம் என்பது போல் –

அவரின் திருவுருவம் தகதகன்னு ஜொலிக்குமா?

அந்தமுள்ள சந்திரனை

உவமை சொல்வது போல்-யாரும்

ஆசை கொள்ளும் வண்ணம் மலர்முகமும் இருக்குமா?

(மியாவ்)

செங்கரும்பாய் இனித்து!-அவர்

சொல்லும் என்னை மயக்கிடுதே!

சிரிப்பும் அதைப் போல எனை

மயங்கச் செய்யுமா?

பொங்கி எழும் ஆவலினால்

மங்கை நான் கேட்கிறதை

புரிந்துகொண்டு பதில் எனக்கு சொல்ல உனக்குத் தெரியுமா?

ஆசை அன்பு இழைகளினாலே

வெள்ளிக்கிழமை விரதம்-1974

இசை : சங்கர், கணேஷ்

பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

 

ஆண் : ஆசை அன்பு இழைகளினாலே

நேசம் என்னும் தறியினில்

நெசவு நெய்தது வாழ்க்கை!

பெண் : ஆசை அன்பு இழைகளினாலே

நேசம் என்னும் தறியினில்

நெசவு நெய்தது வாழ்க்கை!

ஆண் : வண்ணம் பல மின்னும்-அதில்

பிள்ளை போலவே !

பெண் : எண்ணிப் பார்க்க ரெண்டு போதும்

நம்மைப் போலவே!

ஆண் : மனக் கண்கள் அந்தக் கனவே காணுதே!

பெண் : நாம் காணும் இன்பம் நிலையாய்த் தோணுதே!

ஆண் : எண்ணும் எண்ணம் யாவும் என்றும்

உன்னைப் பற்றியே!

பெண் : அது இன்பம் இன்பம் என்று ஆடும்

உன்னைச் சுற்றியே!

ஆண் : அதன் சின்னம் தோன்றி உருவம் காட்டுதே

பெண் : அது உன்னைப் போல சிரிப்பை மூட்டுதே!

 

 

என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்!

தாய்மீது சத்தியம்-1978

இசை : சங்கர், கணேஷ்

பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன் & P. சுசீலா

 

என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்!

ஏதும் தோன்றாமல் தடுமாறுகின்றேன்!

காணாத நிலையே கண்டதனாலே

கங்கு கரையின்றிப் பொங்கு கடல் போலே ஆனேனே!

இது கனவோ? அன்றி நனவோ?

என தன்பே! நீ சொல்லாயோ? (என்)

 

இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே

இணையே இல்லாத இல்வாழ்விலே

தேவைதனை உணர்ந்தே

சேவை செய்து மகிழ்வேன்

சிறந்த இன்பம் காணுவேன்!

 

உறவாடும் காதல் சுகம் வரும் போது

உனை மறந்தாலே அதிசயம் ஏது? கிடையாது!

இது கனவோ அன்றி நனவோ?

எனதன்பே ! நீ சொல்லாயோ?

தங்கப் பதுமை-1958

இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி

பாடியவர்: P. சுசிலா

பெண் : நேரம் வந்தாச்சு!-நல்ல

யோகம் வந்தாச்சு!

கூறைப் பட்டு எனக்காக

ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ!

இந்தக் குமரிப் பொண்ணு உனக்காக!

ட்ரியோ! ட்ரியோ ட்ரியோ! ட்ரியோ!

பக்கத்திலே வந்து நில்லுங்க மச்சான்!

பட்டு வேட்டி இதைக் கட்டுங்க மச்சான்!

அக்கம் பக்கம் இங்கே யாருமே இல்லே!

வெட்கப் படவும் தேவையே இல்லே!

 

ஆண் : நேரம் வந்தாச்சு!-நல்ல

யோகம் வந்தாச்சு!

நீ பொறந்தே எனக்காக!

ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ!

நான் பொறந்தேன் உனக்காக!

ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ!

சிட்டுக் குருவியே கிட்ட வாடி-உன்னைத்

தொட்டுத் தொட்டு மனம் விட்டுச் சிரிப்பேன்!

பட்டாம் பூச்சி போலே வட்டமிட்டே-உன்னை

விட்டுப் பிரியாமெ ஒட்டியிருப்பேன்!

பெண் : வச்ச பயிரு வளர்ந்தாச்சு!

வளர்ந்த பயிரு கதிராச்சு!

அதன் பலனை நாமடைந்து

ஆனந்தமா வாழ்ந்திடணும்!

எல்லா சுகத்தையும் அள்ளணும் மச்சான்!

இதுக்கு மேலென்ன சொல்லணும் மச்சான்!

நல்ல நாளாப் பாத்து வீட்டுக்கு வந்து

பாக்கு வெத்தலை மாத்துங்க மச்சான்!

 

ஆண் : வயலுக்கு ஒரு வரப்பாவேன்!

வாழ்க்கைக்கு நான் துணையாவேன்!

கால நேரம் பாத்துக்கிட்டுக்

கல்யாணத்தை வச்சுக்குவோம்!

மருத மலை முருகனுக்கு

மாவிளக்கு போட்டிடுவோம்!

வேலவனை நாம் துதிப்போம்

வேண்டியதை அவன் கொடுப்பான்!

 

 

காவேரிதான் சிங்காரி!

வாழவைத்த தெய்வம்-1959

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

 

பெண் : காவேரிதான் சிங்காரி!

சிங்காரிதான் காவேரி!

கண்ணால் கண்டவ சிங்காரி!

கலந்து கொண்டவ காவேரி!

காதல்வெள்ளம் பெருக்கெடுத்து கரை மீறி-மனக்

காட்டினிலே பாய்ந்ததனால் வெளியேறி-உங்க

பக்கத்திலே வந்திருக்கும் வம்புக்காரி!

ஆண் : ஆஹா! சிங்காரிதான் காவேரி!

காவேரிதான் சிங்காரி!

கண்ணால் கண்டவ சிங்காரி!

கலந்து கொண்டவ காவேரி!

தங்கம் போல மனமுடைய பணக்காரி! நல்ல

தான தர்ம சிந்தனையுள்ள உபகாரி!

தந்திரத்திலே சிறந்த குள்ளநரி! என்னை

மந்திரத்தால் மயக்கிய கைகாரி!

பெண் : குணத்துக்கு அடிமை! பணத்துக்கு எதிரி!

கொஞ்சிப் பாடிவரும் காவேரி!

ஆண் : குறும்புக்காரியே! உனது கரும்புப் பார்வைதான்

என்றும் என் வாழ்விலே எனக்கதிகாரி!

பெண் : இனிக்கும் பேச்சிலே மனசும் மயங்கியே

ஏங்கி வாடுபவள் சிங்காரி!

ஆண் : ஏக்கம் தீரவே ஏய்த்து ஆளையே

இழுத்து வந்தவதான் காவேரி!

பெண் : அந்தக் காவேரிதான்!

ஆண் : இல்லை சிங்காரிதான்!

பெண் : ஊஹூம் காவேரிதான்!

ஆண் : ஊஹூம் சிங்காரிதான்!

 

 

 

நாதம் இல்லை யென்றால்

அழகு நிலா-1962
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலா

ஆண் : மூங்கில் மரக் காட்டினிலே கேட்கு மொரு நாதம்

முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்

பெண் : மூங்கில் மரக் காட்டினிலே கேட்கு மொரு நாதம்

முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்

(மூங்கில்)
ஆண் : நாதம் இல்லை யென்றால் கீதம் கிடையாது

பெண் : ராகம் இல்லை யென்றால் தாளம் கிடையாது!

ஆண் : காதல் இல்லை யென்றால் உலகம் கிடையாது

பெண் : கண்கள் இல்லை யென்றால் காட்சியும் கிடையாது!

(மூங்கில்)

 

ஆண் : கண்கள் இருந்தென்ன? காட்சியும் இருந்தென்ன?

கொஞ்சும் மொழியில்லை! குறிப்பும் தெரியவில்லை!

பெண் : பிஞ்சும் காயாகும்! காயும் கனியாகும்!

கனியில் சுவையிருக்கும்! காலம் வந்தால் பலன் கொடுக்கும்

(மூங்கில்)

ஆண்: காலம் வருவ தென்று? காயும் கனிவ தென்று?
கண்கள் மலர்வ தென்று?இன்பம் வளர்வ தென்று?

பெண்: ஆக்கப் பொறுத்த மனம் ஆறப் பொறுக்கலையா!
பார்க்கும் பார்வையிலே நோக்கம் புரியலையா?

(மூங்கில்)

 

 

 

 

பொங்கும் அழகு பூத்துக் குலுங்கும்

தங்கம் மனசு தங்கம்-1959

இசை : கே. வி. மகாதேவன்

பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்

 

பொங்கும் அழகு பூத்துக் குலுங்கும்

தங்கத் தாமரையே!

அன்பு வெள்ளம் அள்ளி வழங்கும்

இன்பக் காவிரியே! – (பொ)

 

இன்று நேற்று வந்த உறவா

இங்கு நம் உறவே!

இதயத்தோடு இதயமாகக்

கலந்த பெண் உருவே!

 

சங்கத் தமிழ்க் கன்னியாக

அன்று நீ பிறந்தாய்!

கம்பனாகத் தோன்றி யுன்னைக்

கலந்து நான் மகிழ்ந்தேன்!

 

இந்த உலகம் உள்ள வரையில்

சொந்தம் மாறாது!

எது வந்தாலும் எந்த நாளும்

பிரிவும் நேராது!

சீருலாவும் இன்ப நாதம்

வடிவுக்கு வளைகாப்பு-1962

இசை : K. V மகாதேவன்

பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன் & P சுசிலா

 

ஆண் : சீருலாவும் இன்ப நாதம்

ஜீவ சங்கீதம்!

 

பெண் : செவி நாடும் தேன் சுவை யன்றோ

திருவே உமது கானம் (சீரு)

 

ஆண் : ஆவியே இயல் இசை போலே நாமே

அன்பினால் கலந்தே மகிழ்வோம்.

 

பெண்: ஏழை எனது தாழ்வை அகற்றி

வாழ்வு தந்தீர் எல்லாம் என் பாக்கியம் (சீரு)

 

பெண்: நாதத்தால் மனம் வசமாகும் போது

பேதம் பாராது!

 

ஆண் : காதலலைகள் மோதும் மனதில்

தாழ்வு உயர் வேது?

 

பெண் : ஆசை மொழியே பேசி எனையே

ஆளும் அரசே எல்லாம் என் பாக்கியம்!

 

ஆண் } சீருலாவும் இன்ப நாதம் ஜீவ சங்கீதம்!

பெண்} ஹம்மிங்

 

 

 

 

உன் முகம் தான் என் முகத்தை

பெண் மனம்-1963

இசை: வேதா

 

உன் முகம் தான் என் முகத்தைக் காட்டும் கண்ணாடி – இதை

உணர்ந்து நீயும் சிரிக்க வேணும் எனக்கு முன்னாடி!

 

நீ எண்ணுவதை உன் கண்ணிரண்டும்

சொல்லாமல் சொல்லுதே-அதை

எண்ணி எண்ணி இங்கு என் மனமும்

துள்ளாமல் துள்ளுதே!

என்னை எங்கோ அழைத்துச் செல்லுதே

(உன் முகம்)

 

உள்ளத்தினால் இங்கு ஒன்று பட்டால்

உருவாகும் நன்மையே-ஒரு

கள்ளமில்லா இன்பம் தேடிவரும்

எந்நாளும் நம்மையே!

அன்பு ஒன்றே உலகில் உண்மையே

(உன் முகம்)

 

 

 

 

சிரிக்கத் தெரிந்தால் போதும்-துயர்

மாடப்புறா-1962

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

 

ஆண் : சிரிக்கத் தெரிந்தால் போதும்-துயர்

நெருங்காது நம்மை ஒரு போதும்! (சிரி)

 

பெண் : சிரிக்கத் தெரிந்தால் போதும்-துயர்

நெருங்காது நம்மை ஒரு போதும்! (சிரி)

 

ஆண் : வனத்துக்கு அழகு

 

பெண் : பசுமை

 

ஆண் : வார்த்தைக்கு அழகு

 

பெண் : இனிமை

 

ஆண் : குளத்துக்கு அழகு

 

பெண் : தாமரை-நம்முகத்துக்கு அழகு புன்னகை(சிரி)

 

ஆண் : இரவும் பகலும் உண்டு-வாழ்வில்

இளமையும் முதுமையும் உண்டு!

 

பெண் : உறவும் பகையும் உண்டு-எனும்

உண்மையை நெஞ்சில் கொண்டு (சிரி)

 

பெண் : உறவை வளர்ப்பது.

 

ஆண் : அன்பு

 

பெண் : மன நிறைவைத் தருவது

 

ஆண் : பண்பு

 

பெண் : பொறுமையை அளிப்பது

 

ஆண் : சிரிப்பு-இதைப் புரிந்தவர் அடைவது களிப்பு (சிரி)

 

பெண் : மனிதன் மாறுவதில்லை-அவன்

மாறிடில் மனிதனே இல்லை!

 

ஆண் : வந்திடும் அவனால் தொல்லை-நீ

சிந்தித்துப் பார் என் சொல்லை(சிரி)

 

 

 

 

கம கம வென நறுமலர் மணம் வீசுதே!

சமய சஞ்சீவி.-1957

இசை : G. ராமநாதன்

 

பெண் : கம கம வென நறுமலர் மணம் வீசுதே!

ஆண் : நம் திருமண முதல் இரவென அது பேசுதே! (கம)

 

பெண் : ஜிலு ஜிலுவெனத் தென்றல் உடலைத் தழுவுதே!

 

ஆண் : தன் நிலை மறந்து மனமும் எங்கோ நழுவுதே!

 

பெண் : கலை மதியும் வானுடன் விளையாடுதே!

 

ஆண் : என் கண்ணும் கருத்தும் உன் அழகில் ஆடுதே!

பெண் : குறு குறு வென இரு விழி என்னைப் பார்க்குதே!

 

ஆண் : அது கொஞ்சிப் பேசி மகிழ்ந்திடவே அழைக்குதே!

 

பெண் : இதய நாடி பட பட வெனத் துடிக்குதே!

 

ஆண் : ஒரு இனமறியா புது உணர்வு பிறக்குதே!

 

பெண் : உள்ளக் கருத்தை உமது முகம் காட்டுதே!

 

ஆண் : உன் சொல்லும் செயலும் நெஞ்சில் இன்பமூட்டுதே!⁠ (கம)

பிள்ளைக் கனி அமுது ஒண்ணு

பிள்ளைக்கனியமுது-1958

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

 

முத்த : பிள்ளைக் கனி அமுது ஒண்ணு

பிறந்திட வேணும்!-அதை

அள்ளிக் கையால் அணைத்து இன்பம்

அடைந்திட வேணும்!

 

முருகன் : செல்லக் கிளி மழலை மொழி

சிந்திட வேணும்!-நாம்

செவியாற அதைக் கேட்டு

மகிழ்ந்திட வேணும்!

 

முத்த : கள்ள மில்லா அன்பை

கன்னித் தமிழ் பண்பை

 

முருகன் : கலந்துணவாய் நாமதற்கு

ஊட்டிட வேணும்!

 

இருவரும் : பிள்ளைக் கனி அமுது ஒண்ணு

பிறந்திட வேணும்!-அதை

அள்ளிக்கையால் அணைத்து

இன்பம் அடைந்திட வேணும்!

 

முருகன் : தெள்ளு தமிழ்க்கலைகளிலே

தேர்ந்திட வேணும்!-பொது

சேவையிலே முன்னணியில்

திகழ்ந்திட வேணும்!

 

முத்த : உள்ளம் ஒன்று கூடும்

உறவின் பலன் நாடும்

நம் கனவும் நனவாகி

நலம் தர வேணும்!

 

இருவரும் : பிள்ளைக் கனி அமுது ஒண்ணு

பிறந்திட வேணும்! அதை

அள்ளிக் கையால் அணைத்து

இன்பம் அடைந்திட வேணும்!

 

 

 

 

சந்தனப் பொட்டு வச்சு

பிள்ளைக்கனியமுது-1958

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

 

பெண் : ஓடுகிற தண்ணியிலே ஒறச்சு விட்டேன் சந்தனத்தை

சேந்துதோ?… சேரலையோ?… செவத்த மச்சான் நெத்தியிலே…!

 

ஆண் : சந்தனப் பொட்டு வச்சு

சொந்த மச்சான் வந்திருக்கேன்!

சந்தோஷமாக நீயும் வந்து சேரு இக்கரைக்கு!

 

பெண் : இக் கரையில் நானிருக்க

அக் கரையில் நீ யிருக்க

இருவரையும் பிரிக்க இடையில் இந்த ஆறிருக்கு!

 

ஆண் : ஆறாலும் நம்மைப் பிரிக்க

ஆகு மோடி மத்தியிலே!

ஆசையுள்ள பெண் மயிலே

பாரு வாறேன் பக்கத்திலே!

 

பெண் : பக்கத்திலே வந்தவுடன்

பாச முள்ள எம் மனசு

சொக்காமல் சொக்கிடுது சுத்திச் சுத்தி ஆடிடுது!

பக்குவமா நேரம் பார்த்துப்

பாட்டுப் பாட வந்த மச்சான்!-என் சொந்த மச்சான்

வெக்கமா இருக்குதுங்க

விலகிக் கொஞ்சம் போங்க மச்சான்!

 

ஆண் : வெக்கத்தையும் மூட்டை கட்டி

கக்கத்திலே வச்சுக் கிட்டு

வில்லாக வளைஞ்சு ஆடு

டப்பாத் தாளம் போட்டுக்கிட்டு

வில்லாக வளைஞ்சு ஆடு

டப்பாத் தாளம் போட்டுகிட்டு

 

 

 

 

யாருக்கு யார் சொந்தமென்பது

சபாஷ் மாப்பிள்ளை-1961

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P சுசிலா

 

ஆண் : யாருக்கு யார் சொந்தமென்பது-என்னை

நேருக்கு நேர் கேட்டால் நானென்ன சொல்வது?

வாரி முடித்த குழல் எனக்கே தான் சொந்த மென்று

வானத்துக் கார் முகிலும் சொல்லுதே?

மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனமென்று

வண்ண மலரெல்லாமே துள்ளுதே-இதில்

(யாருக்கு)

பெண் : வண்ண மலர் என்றும் வண்டுக்குத் தான் சொந்தம்!

வழங்கிடும் மதுவாலே இரண்டுக்கும் ஆனந்தம்!

 

ஆண் : தந்தப்பல் எழில் கண்டு, தன் இனந்தான் என்று

பொங்கும் வெண்முத்து பண்பாடுதே!

குங்கும இதழ் கண்டு கோவைக் கனி எல்லாம்

தங்களின் இனமென்று ஆடுதே-இதில்

(யாருக்கு)

 

பெண் : கொத்தும் கிளிக்கே தான் கோவைக்கனி சொந்தம்!

குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது?

(யாருக்கு)

வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து

எங்கள் குலதேவி-1959

இசை : K. V. மகாதேவன்

 

வஸந்தன் : வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து

வாடாமல் இருக்கும் பூ என்ன பூ?

 

மீனா : அன்புக் கணவனின் முன்னாலே மனைவி

அழகாகச் சிந்தும் புன் சிரிப்பு!

 

வஸந் : நெஞ்சம் ஒன்றாகி எந்நாளும் இன்பம் பெறவே

சொந்தம் கொண்டாடச் செய்யும் புதுப்பூ என்ன பூ?

 

மீனா : உண்டான ஆசை தன்னைச் சொல்லாமல் சொல்லி

உள்ளம் ரெண்டைச் சேர்க்கும் நாலு கண்ணின் சந்திப்பு!

(வண்டு)

 

வஸந் : உள்ளம் ஒன்றான பின்னாலே உருவெடுத்து

தொல்லை தந்தாலும் இன்பம் தரும் பூ என்ன பூ?

 

மீனா : எல்லோரும் இணையேதும் இல்லாத செல்வம்

என்றே சொல்லும் பிள்ளைச் செல்வம் செய்யும் குறும்பு

(வண்டு)

 

காயிலே இனிப்பதென்ன?

மனமுள்ள மறுதாரம்-1958′

இசை : K. V. மகாதேவன்

 

ஆண் : காயிலே இனிப்பதென்ன?

கனியானால் கசப்பதென்ன?

வாயாடி வம்பு பேசும் மானே!

பதில் சொல்லு!

 

பெண் : காலத்தின் கோலத்தினால்

கட்டழகு குலைவதினால்

எட்டிக் கனியாக ஆண்கள்

எண்ணும் பெண்ணினந்தான்!

 

ஆண் : நீலமாய்த் தெரிவதென்ன?

நீர் வீழ்ச்சி யாவ தென்ன?

நிமிர்ந்தே என்னைப் பார்த்து

நேரான பதில் சொல்லு!

 

பெண் : நெஞ்சிலே அனுதினமும்

கொஞ்சும் இன்ப துன்ப மெனும்

நிலையைக் காட்டுகின்ற

பெண்களின் கண்கள்தான்!

 

ஆண் : பிரிந்தால் கனலாகி

நெருங்கி நின்றால் பனியாகி

கருத்தில் விளையாடக்

காணும் பொருளென்ன?

 

பெண் : இரண்டு இதயங்களை

இவ்வுலகில் ஒன்றாக்கி

என்றும் அழியாமல்

வாழும் உண்மைக் காதல் தான்!

 

இருவரும்: தெய்வீகக் காதலினால்

சேர்ந்து விட்டோம் ஆனதினால்

சிங்கார கானம் பாடி

வாழ்வோம் நாம் இனிமேல்!

 

 

 

பார்த்தாலும் பார்த்தேன்-நான்

ஆயிரம் ரூபாய்-1964

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

 

ஆண் : பார்த்தாலும் பார்த்தேன்-நான்

உன்னைப் போல பார்க்கலே!

கேட்டாலும் கேட்டேன்!-உன்

பேச்சைப் போல கேக்கலே!

 

பெண் : பார்த்தாலும் பார்த்தேன்-நான்

ஒன்னைப் போல பாக்கலே!

கேட்டாலும் கேட்டேன்-ஒன்

பேச்சைப் போலே கேக்கலே!

 

ஆண் : பூத்திருக்கும் மலர் முகமோ

பொன்னைப் போல மின்னுது-உன்

போக்கை மட்டும் பார்க்கையிலே

எதையெதையோ எண்ணுது!

 

பெண் : படபடத்து வெடவெடத்து

சடசடத்துப் போவுது!

பக்கத்திலே நீயிருந்தா

இன்னான்னமோ ஆவுது!
 

ஆண் : காணுகின்ற பொருளில் எல்லாம்

உன்னுருவம் தெரியுது!

காதலென்றால் என்னவென்று

எனக்கு இன்று புரியுது!

 

பெண்: ஏதோ ஒண்ணு என்னையும் உன்னையும்

இப்படிப் புடிச்சு ஆட்டுது!

இருந்த இருப்பெ நடந்த நடப்பெ

மறக்க வச்சு வாட்டுது!

 

 

 

 

 

சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?

குல மகள் ராதை-1963

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன், P. சுசிலா

 

ராதை : சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?

சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா?

நெஞ்சில் இன்பம் வளருமா-எந்நாளுமே ⁠(சந்)

 

சந் : சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே

சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா?

 

ராதை: என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா?

ஏழை என் மீது இன்னும் சந்தேகமா?

 

சந் : உன் மனக் கண்களை மூடிய மேகமே

தன்னால் விலகிப் போனதா என் தங்கமே! (சந்)

 

ராதை: சந்திரன் ஒளியை உண்டு வாழும்

சாதகப் பறவை ஆனேனே-நானே!

 

சந் : அன்பெனும் சிறகை விரித்தே பறந்து

ஆனந்த உலகைக் காண்போம் நாமே!

 

ராதை: இன்பம் உண்டு என்றுமினி துன்பமேயில்லை!

 

சந் : இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை!

 

இருவரும்: சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?

சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா?

நெஞ்சில் இன்பம் வளருமா-எந்நாளுமே (சந்)

 

 

 

செந்தமிழ் நாட்டுச் சோலையிலே

சுகம் எங்கே?-1954

இசை : எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி

பாடியவர்கள்: K. R. ராமசாமி & ஜிக்கி

 

ஆண் : செந்தமிழ் நாட்டுச் சோலையிலே-சிந்து

பாடித்திரியும் பூங்குயிலே!

தென்றலடிக்குது என்னை மயக்குது!

தேன் மொழியே இந்த வேளையிலே!

 

பெண் : சிந்தை கவர்ந்த ஆணழகா!

உம்மால் எனது வாழ்விலே

சொந்தம் மிகுந்தது! காதலில் புது

சுகமும் என் மனம் காணுது! ⁠ (தென்ற)

 

ஆண் : அன்பில் விளைந்த அமுதே-என்

ஆசைக் கனவும் நீயே!

இன்ப நிலவே! உனது கண்கள்

இனிய கதைகள் சொல்லுதே! ⁠(தென்ற)

 

பெண் : உம்மை யன்றி இங்கு இன்பமில்லை!

உற்ற துணை வேறு யாரு மில்லை!

என்னுயிரே! தமிழ்க்காவியமே!

என்றும் ஒன்றாகவே-வாழ்ந்திடுவோம்! ⁠ (தென்ற)

 

ஆண் : இன்ப துன்பம் எதிலும்-சம

பங்கு அடைந்தே நாமே

இல்லறம் ஏற்று பேதமில்லா

எண்ணங் கொண்டு வாழலாம்: ⁠(தென்ற)

இருவரும் : அதை எண்ணி யெண்ணி-இந்த

ஏழையின் மனம்

இன்பக் கனவு காணுதே!

தென்றலடிக்குது! என்னை மயக்குது !

தேனமுதே இந்த வேளையிலே!

 

 

 

 

பார்க்கப் பார்க்க மயக்குதடி

கவிதா-1962

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: ஜமுனாராணி & குழுவினர்

 

கவிதா : பார்க்கப் பார்க்க மயக்குதடி

பார்வையாலே அழைக்குதடி!

வார்த்தை ஏதும் இல்லாமலே! சொல்லாமலே!

 

கோரஸ் : வார்த்தை ஏதும் இல்லாமலே! சொல்லாமலே!

(பார்க்க)

 

கவிதா : பாத்தி கட்டித் தோட்டக்காரன்

பரிவுடனே வளர்த்த கொடி!

 

லீலா : பொங்கும் இளம் பருவத்தினால்

பூத்து நின்று குலுங்குதடி!

 

கோரஸ் : புதுப்புது கனவுகள் காணுதடி!

காணுதடி காணுதடி!

 

கவிதா : ஆதவனைக் கண்டு

ஆசை மிகக் கொண்டு

தாமரைப் பெண் இதழ் விரியும்!

கோரஸ் : முகம் மலரும்

 

லீலா : காதலனைக் கண்டு

நீயது போல் நின்று

கண்ணாலே பேசும் ஒரு

 

கோரஸ் : நாளும் வரும்!

 

கவிதா : வருவ தெல்லாம் வரட்டும்!

தருவ தெல்லாம் தரட்டும்!

 

லீலா : வாழ்க்கை மட்டும் நம்கையில் இல்லையடி!- அது

மனிதருக்கே புலப்படாத எல்லையடி!

(பார்க்க)

 

 

 

 

 

 

சும்மா சும்மா சிரிச்சுக்கிட்டு

ஆண் : சும்மா சும்மா சிரிச்சுக்கிட்டு

சொகுசு நடை போட்டுக் கிட்டு

துள்ளித் துள்ளி ஆடிவரும்! உன்னைக் கண்டா

சுத்திச் சுத்திப் பார்க்காத கண்ணும் உண்டா?

 

பெண் : கும்மாளம் போட்டுக்கிட்டு

குதிரை வண்டி ஒட்டிக்கிட்டு

தெம்மாங்கு பாடி வரும் உன்னைக் கண்டா

திரும்பிப் பார்க்காத கண்ணும் உண்டா?

(சும்மா)

 

ஆண் : மஞ்சள் பூசிக் குளிச்ச முகம் மினுமினுக்க

மயக்க மூட்டும் பார்வையிலே நிலவெரிக்க

மரிக் கொழுந்து கொண்டையிலே கமகமக்க!

குறும்புப் பேச்சைக் கேட்பவங்க கிறுகிறுக்க!

(சும்மா)

 

பெண் : சிலுக்குச்சட்டை காத்துப்பட்டு சிலுசிலுக்க-தங்கச்

சிலையைப் போல தேகக்கட்டு பளபளக்க

தெருவழியே வண்டிச் சத்தம் கடகடக்க-கையில்

சின்னஞ் சிறு சாட்டை வாரு துடிதுடிக்க!

(சும்மா)

 

ஆண் : புருவமெனும் வில்வளைச்சு

பருவமெனும் அம்பெவச்சு

புள்ளி மான் போல் குதிச்சு

வெள்ளி மீனைக் கண்ணில் வச்சு

(சும்மா)

 

பெண் : வருபவங்க எல்லோருக்கும்

அருமையான வழியைக் காட்டி

புதுமையான பாதையிலே

போவதற்கு ஆசைமூட்டி

(சும்மா)

 

ஆண் : ஒ! துள்ளித் துள்ளி ஆடிவரும் உன்னைக் கண்டா

சுத்திச் சுத்திப் பாக்காத கண்ணும் உண்டா!

 

அல்லி பெற்ற பிள்ளை-1959

இசை: K. V. மகாதேவன்

பாடியவர்கள் : T.M. சௌந்தரராஜன் & P. சுசீலா

 

 

மல்லிகை முல்லை நறுமலரும்

பிறந்த நாள்-1962

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசீலா

 

ஆண் : மல்லிகை முல்லை நறுமலரும்

மயங்கித் தவிக்கும் எனதுயிரும்

அள்ளிச் செறுகிக் கூந்தலிலே

அழகாய் முடித்த பெண் மயிலே!

துள்ளி யோடும் காவிரி நீ!-உனைச்

சொந்தம் கொள்ளும் அலைகடல் நான்!

 

பெண் : கள்ளம் இல்லா மனத்தாலே

கவிதை பாடும் திறத்தாலே

உள்ளம் உருகச் செய்தவரே!

உணர்வில் ஒன்றிக் கலந்தவரே!

 

ஆண் : துள்ளி யோடும் காவிரி நீ!

சொந்தம் கொள்ளும் அலைகடல் நான்!

 

ஆண் : செந்தமிழ் நாட்டின் சீருயர

வந்திடும் காவிரி நதி போலே

அந்தகன் எனது வாழ்வுயர

அன்பின் வெள்ளம் தந்தவளே!

 

பெண் : சிந்தனைக் கதவும் திறந்திடவே

செய்திடும் அறிவுச் சுடர் போலே

மங்கை எனது மதி மயக்கம்

மாறிடும் விந்தை புரிந்தவரே!

ஆண் : துள்ளி யோடும் காவிரி நீ!

 

பெண் : சொந்தம் கொள்ளும் அலைகடல் நீ!

 

ஆண் : மங்கிய நீல இரவினிலே

மலர்ந்தே ஒளி தரும் முழு நிலவே!

 

பெண் : வான நிலவும் ஒளி பெறவே

தானம் அளிக்கும் செங்கதிரே!!

 

ஆண் : துள்ளி யோடும் காவிரியே!

 

பெண் : சொந்தம் கொள்ளும் அலைகடலே!

 

 

 

 

கண்களால் காதல் காவியம்

சாரங்கதரா-1958

இசை : G. ராமநாதன்

பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

 

அற்புதக் காட்சி யொன்று கண்டேன்!

ஆனந்த லாகிரி கொண்டேன்-சகியே

(அற்புதக் காட்சி)

 

கனகா : கண்களால் காதல் காவியம்-செய்து

காட்டிடும் உயிர் ஓவியம்-தங்கள்

அன்பெனும் சாம்ராஜ்ஜியம்-சொந்த

மானதே எந்தன் பாக்கியம்!

 

சாரங் : கண்களால் காதல் காவியம்-செய்து

காட்டிடும் உயிர் ஓவியம்-உந்தன்

அன்பெனும் சாம்ராஜ்ஜியம்-சொந்த

மானதே எந்தன் பாக்கியம்!

 

கனகா : தங்களால் இந்த இன்பமே-என்றும்

சாஸ்வத மாகிட வேண்டுமே!

 

சாரங் : தங்கமே அதில் ஐயமேன்? இன்ப

சாகரம் மென்மேலும் பொங்குமே!

 

கனகா : திங்களைக் கண்ட அல்லி போல்-திரு

வாய் மொழியால் உள்ளம் மலருதே!

 

சாரங் : செந்தமிழ் கலைச் செல்வியே-மனம்

தேனுண்ணும் வண்டாய் மகிழுதே! (கண்களால்)

 

கனகா : மண்ணிலே உள்ள யாவுமே-எழில்

மன்னவர் உம்மைப் போல் காணுதே

 

சாரங் : எண்ணமே ஒன்று ஆனதால்-இணை

இல்லாத ஆனந்தம் தோணுதே!

 

கனகா : இன்பமோ அன்றி துன்பமோ-எது

நேரினும் நாம் பங்கு கொள்ளுவோம்!

 

சாரங் : அன்றில் போல் பிரியாமலே-நாம்

இன்று போலென்றுமே வாழுவோம்!

(கண்களால்)

 

 

 

 

சிற்பிகள் செய்யாத சிலை யொன்று கண்டேன்!

சாரங்கதரா-1958

இசை : G. ராமநாதன்

பாடியவர் : P. பானுமதி

 

சிற்பிகள் செய்யாத சிலை யொன்று கண்டேன்!

சிங்கார வாய் திறந்து பேசவுங் கண்டேன்!

கற்பனைக் கவிஞரின் காவியத் தலைவன்-என்

கண்முன்னே உயிரோடு வரவுங் கண்டேன் சகியே

(அற்புதக் காட்சி)

 

முத்துக்கள் கோர்த்தது போல் மோகனப் பல்வரிசை!

முடி மன்னர் யாவரும் வணங்கிடும் கைவரிசை!

சித்திரம் போல் மனதில் பதிவாகும் குரலோசை!

தித்திக்கும் நினைத்தாலே திருமாறன் அவராசை!

(அற்புதக் காட்சி)

 

 

 

 

 

ஆல மரத்துக்கிளி!

பாலாபிஷேகம்-1977

இசை : சங்கர், கணேஷ்

பாடியவர் : P. சுசிலா

 

ஆல மரத்துக்கிளி!

ஆளைப்பார்த்துப் பேசும் கிளி!

வால வயசுக் கிளி!-மனம்

வெளுத்த பச்சக்கிளி!-மனம்

வெளுத்த பச்சக்கிளி!

 

முத்து முத்தா பனித்துளியாம்!

முகம் பார்க்கும் கண்ணாடியாம்!

கொத்துக் கொத்தாப் பழக்குலையாம்!

குமரிப் பெண்ணின் முன்னாடியாம்!

 

புள்ளையில் உசந்த புள்ளே!

பூமியிலே என்ன புள்ளே?-அது

வள்ளலாட்டம் உள்ளதெல்லாம்

வாரி வழங்கும் தென்னம் புள்ளே!

 

வாழையடி வாழையாக வாழணுமிண்னு

வாழ்த்துறதுலே இருக்கு தத்துவம் ஒண்ணு!

தாய்மையின் தியாகச் சின்னம் தானேயிண்ணு-குலை

தள்ளி வாழை ஒண்ணு சொல்லுது நின்னு!

 

நீர் இருந்தா ஏர் இருக்கும்!

ஏர் இருந்தா ஊர் இருக்கும்!

ஊர் இருந்தா உலகத்திலே எல்லாம் இருக்கும்!

உண்மையோடு நன்மை எல்லாம் நல்லா செழிக்கும்!

 

 

 

 

சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே!

ஆடவந்த தெய்வம்-1960

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: T. R. மகாலிங்கம் & P. சுசீலா

 

ஆண் : சங்கம் முழங்கி வரும்

சிங்காரத் தமிழ்க் கலையே!

இன்பம் உருவாகப்

பொங்கும் அன்பின் அலையே!

 

பெண் : சிந்தும் இசையமுதம்

தென் பொதிகைத் தென்றலோ?

செங்கரும்போ? கனிரசமோ?

தேன் குயிலின் கொஞ்சலோ?

 

ஆண் : கண்ணே சகுந்தலையே! கண்கவரும் ஓவியமே!

கணமும் உனை மறவேன்! என் காதல் காவியமே!

 

பெண்; மன்னவரே! ஏழைக்கு வாழ்வளித்த தெய்வமே!

என்னுயிரே! இன்று முதல் உமக்கேநான் சொந்தமே!

 

ஆண் : பெண்ணே மும்தாஜே! பேரழகின் பிம்பமே!

பேசும் பிறை நிலவே! என் வாழ்வின் இன்பமே!

 

பெண் : என் மனதில் கொஞ்சிடும் இனிப்பான எண்ணமே!

எந்நாளும் அழியாது நம் காதல் சின்னமே!

 

 

 

 

அருவிக் கரை ஓரத்திலே

அழகுநிலா-1962

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: P. சுசிலா

 

அருவிக் கரை ஓரத்திலே அமைதி கொஞ்சும் நேரத்திலே

பருவக் காற்று வீசுது! பல கதைகள் பேசுது!(அருவி)

 

உருவமில்லா ஒருவன் உலகில் ஒண்ணைப் படைச்சானாம்!

அந்த ஒண்ணுக்குள்ளே பலபொருளை உணரவச்சானாம்!

கண்ணுக்குள்ளே துள்ளும் மீனைக் காண வச்சானாம்

கன்னத்திலே ரோஜாப்பூவை மின்ன வச்சானாம்⁠(அருவி)

 

அன்னத்தையும் நடையிலே அமரவச்சானாம்-காற்றில்

ஆடுகின்ற பூங்கொடி போல் இடை யமைச்சானாம்!

வண்ண நிலா தன்னைப் போல முகம் அசைச்சானாம்!

வானவில்லைப் புருவமாக மாற்றி வச்சானாம்⁠(அருவி)

 

கோவைக் கனி தன்னை உதட்டில் குவிய விட்டானாம்-இன்பம்

கொஞ்சும் கிளி மொழியை நாவில் உலவ விட்டானாம்!

மேகத்தையும் கூந்தலாக மேய விட்டானாம்-அந்த

தேகத்துக்குப் பெண் என்னும் பெயரை இட்டானாம்!(அருவி)

 

நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கையொரு

தாய் மீது சத்தியம்-1978

இசை : சங்கர், கணேஷ்

பாடியவர்: P. சுசிலா

 

கெஜல்

உறவும் உண்டு! பிரிவும் உண்டு உலகிலே!

வரவும் உண்டு! செலவும் உண்டு வாழ்விலே!

 

பாட்டு

 

நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கையொரு

கூட்டல் கணக்குத்தான்?-எப்போதும்

கூட்டல் கணக்குத்தான்?

கழித்தல் என்பதே இனி அதில் இல்லை!

பெருக்கல் என்பதுதான் அதன் எல்லை!

இருக்கும் வரையிலும் இருவர் வாழ்விலும்

கூட்டல் கணக்குத்தான்!-எப்போதும்

கூட்டல் கணக்குத்தான்!

 

கெஜல்

 

நெஞ்சம் நினைப்பதற்கே! இளமை ரசிப்பதற்கே!

கனிகள் சுவைப்பதற்கே! கைகள் கொடுப்பதற்கே!

 

பாட்டு

 

துள்ளித் துள்ளியிங்கு துடிக்குது மனசு!

கிள்ளிக் கிள்ளி நெஞ்சைக் கிளறுது வயசு!

அள்ளி அள்ளி நான் தருவேன் பரிசு!

கூட்டல் கணக்குத் தான்-எப்போதும்

கூட்டல் கணக்குத்தான்!(நீயும்)

 

 

 

தேன்கூடு! நல்ல தேன்கூடு

ஆட்டுக்கார அலமேலு-1976

இசை : சங்கர், கணேஷ் –

பாடியவர்: P. சுசிலா

 

தேன்கூடு! நல்ல தேன்கூடு!

திருமகள் வாழ்ந்திடும் என்வீடு!

 

காணும்போது இனிக்கும்!-மதுரைக்

கதம்பம் போல மணக்கும்!

கண்ணைக் கவ்வி இழுக்கும்!-தன்னை

உண்ணச் சொல்லி அழைக்கும்!(தேன்)

 

வாடும் மனதை மூடும் கவலை

மதுவில் கரைந்தே பறந்தோட

வாழ்வில் நிம்மதி தேடும் செல்வச்

சீமான் மயங்கி உறவாட!(தேன்)

 

கலையால் வீசும் வலையால்-காதல்

விலையே பேசும் கிளி நான்!

கலையா போதை நிலையால் ஆளைக்

கவரும் காந்தச் சிலைதான்!

 

போனது எல்லாம் போகட்டும்!-மனம்

புதுப்புது கனவுகள் காணட்டும்!

ஆனது எல்லாம் ஆகட்டும்!

அதில் அதிசயக் காட்சிகள் தோணட்டும்!

 

 

 

 

சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு!

பாக்தாத் திருடன்-1960

இசை : கோவிந்தராஜலு நாயுடு

பாடியவர்: P. சுசிலா

 

சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு!

திண்டாடச் செய்திடும் மை பூசுங் கண்ணு!

 

செந்தாழைமேனி சிங்கார மூட்டும்!

மண்மீது மாயா ஜாலங்கள் காட்டும்!

கண்டோரை எல்லாம் கொண்டாடச் செய்யும்!

கண்பார்வை அமுதெனும் தேன்மாரி பெய்யும்!

 

கல்லான நெஞ்சை சொல்லாமல் தாக்கும்!

கொல்லாமல் கொல்லும் காயம் உண்டாக்கும்!

வல்லாண்மைக் காரர் செல்வாக்கைப் போக்கும்!

மன்னாதி மன்னரை மண் பொம்மையாக்கும்!

 

ஆடாமல் ஆடும்! பாடாமல் பாடும்!

அழகின் முன்னாலே அறிவே தள்ளாடும்!

கூடாத செல்வம் எல்லாமே கூடும்!

குறையுள்ள போதிலும் பின்னாலே ஒடும்!

 

பொங்கிவரும் காவிரியே

பொன்னித்திருநாள்-1960

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

 

பெண்: பொங்கிவரும் காவிரியே எங்களது தாயே!

கங்கையினும் மேலான கன்னித்தெய்வம் நீயே!

 

ஆண் : மங்கையரின் முகத்தழகு மஞ்சள் பூச்சினாலே!

மாநிலத்தின் அழகுனது வண்டல் பாய்ச்சலாலே!

பெண்: அங்கமெல்லாம் அலைபுரள அசைந்து வரும் பாவை !

செங்கரும்பு பயிர்வளரச் செய்வதும் உன்சேவை!

 

ஆண் : மாலையிட்ட மங்கையர்கள் தாலி பெருக்கிப் படைப்பார்!

மணவாளன் கைபிடித்து சிரித்தபடி நடப்பார்!

 

பெண்: வாளையைப்போல் காளையர்கள் தாவித் தாவிக் குதிப்பார்!

மனங் கவரும் கன்னியர்மேல் நீரை வாரி இறைப்பார்!

 

பெண்: மலை முடியில் பிறந்ததனால் மலைமகளும் நீயே!

அலைகடலில் கலந்ததனால் அலைமகளும் நீயே!

ஆண் : சலசலக்கும் ஒசையிலே ஏழுசுரம் தந்தாயே!

 

பெண்: தமிழ் முழக்கம் செய்வதனால் கலைமகளும் நீயே!

 வெற்றி கொள்ளும் வாளேந்தி

பாக்தாத் திருடன்-1960′

இசை : கோவிந்தராஜலு நாயுடு

பாடியவர் : P. சுசிலா

 

வெற்றி கொள்ளும் வாளேந்தி சுற்றும் வீரர் இருகையைப்

பற்றிக் கொண்டேன் என் கையிலே-இனி

வேறென்ன தேவை வாழ்விலே!-இந்த

ஜெகமே என்கையிலே!

 

தாவென்று கேட்குமுன் “இந்தா” வென்றே அள்ளி

ஒய்வின்றி தரும் “கை” என் கையிலே!-இனி

சீருண்டு பேருண்டு வாழ்விலே!-இந்த

ஜெகமே என் கையிலே!

 

கனவாகவே துன்பக் கதையாகவே-சென்ற

காலத்தின் நினைவும் எனக்கில்லையே!- என்

கண்முன்னே நான் காணும் வாழ்விலே!-இந்த

ஜெகமே என் கையிலே!

 

எந்நாளும் என்னைக் கண்போலவே காக்கும்

பண்பாளர் துணையும் உண்டானதே!-இனி

தன்மானப் பெருவீரர் அன்பிலே-இந்த

ஜெகமே என் கையிலே!

 ஊருக்கும் தெரியாது!

மாடப்புறா- 1962

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

 

ஆண் : ஊருக்கும் தெரியாது!

யாருக்கும் புரியாது!

உன்னை எண்ணிக் கனவு கண்டு

உள்ளம் ஏங்குவது!

 

பெண் : ஊருக்கும் தெரியாது

யாருக்கும் புரியாது!

உன்னை எண்ணிக் கனவு கண்டு

உள்ளம் ஏங்குவது!⁠-ஊருக்கும்

 

ஆண் : உன்னுடனே நானிருக்கும்

என்னுடனே நீ யிருக்கும்

 

பெண் : உண்மையை உலகம் அறியாது!

உனையன்றி வாழ்க்கையுமேது? ⁠ -ஊருக்கும்

 

பெண் : காண்பதெல்லாம் உன் உருவம்!

கேட்ப தெல்லாம் உனது குரல்!

 

ஆண் : கண்களை உறக்கம் தழுவாது!

அன்புள்ளம் தவித்திடும் போது!

 

இருவரும் : ஊருக்கும் தெரியாது!

யாருக்கும் புரியாது!

 

 

 

கண்ணாலே நான் கண்ட கணமே!

பார்த்திபன் கனவு-1960

இசை : வேதா

பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன் & சுசிலா

 

பெண்: கண்ணாலே நான் கண்ட கணமே!-உயிர்க்

காதல் கொண்ட தென் மனமே! இது

முன்னாளில் உண்டான உறவோ-இதன்

முடிவும் எங்கோ? எதுவோ?

 

ஆண் : எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து

என்னோடு வாவென்று சொல்லுதே!-இது

முன்னாளில் உண்டான உறவோ?-இதன்

முடிவும் எங்கோ எதுவோ?

 

பெண்: யாரென்று கேட்காததேனோ?

யாரானால் என்னென்றுதானோ?

நேராக நின்று யாரென்று கேட்டால்

கூரான வேல் பாயும் என்றோ?

 

ஆண் : யாரான போதென்ன கண்ணே!

நானுண்ணும் ஆனந்தத் தேனே!

நீ வேறு அல்ல! நான் வேறு அல்ல!

வேறென்ன நானின்னும் சொல்ல!-இனி

எந்நாளும் நீ இங்கு எனக்கே!

பெண் : என் இதயமெல்லாம் உமக்கே!

 

 

 

வீசிய புய லென்னும் விதி வலியால்

எல்லாம் உனக்காக-1961

இசை : K. V. மகாதேவன்

பாடியவர் : P. சுசிலா

 

வீசிய புய லென்னும் விதி வலியால் துவண்டு விட்ட

வாச மலர்க் கொடிக்கு வாழ்வு தர ஒடி வந்தாய்!

ஆசை யென்ற கை கொடுத்தாய்! பாசமென்ற பந்தல் போட

யோசனையும் செய்வது ஏன்? உணர்ந்து பாராய் மனமே?

 

(பல்லவி)

அசைந்து குலுங்கும் சதங்கை ஒலியும்

ஆயிரம் கதைகள் சொல்லிடுமே!

அழகும் இளமையும் காண்பவர் இதயம்

அலைகடல் போலே துள்ளிடுமே! (அசைந்து)

 

(சரணம்)

வசந்த முல்லைத் தேனெடுத்து

வண்ணச் சந்தனப் பொடி சேர்த்து

கலந்தே செய்த சிலை வடிவம்-என

கருதிடச் செய்யும் பெண்ணுருவம்!(அசைந்து)

 

கண்ணில் மின்னல் விளையாட!

கையில் வளையல் இசை பாட!

அன்னம் போல நடை போடும்-ஒரு

கன்னிப் பெண்ணின் கால்களிலே(அசைந்து)

 

 

 

 

தேன் சுவை மேவும் செந்தமிழ் கீதம்

டாக்டர் சாவித்திரி-1955

இசை : K.V. மகாதேவன்

பாடியவர் : P. சுசிலா

 

தேன் சுவை மேவும் செந்தமிழ் கீதம்

பொழிவதும் குரலாலே!

சிந்தையைக் கிளறும் மதுரச நாதம்

எழுவதும் விரலாலே!(தேன்)

 

வேய்ங்குழலோசை போலே காதிலே

வித விதமாகிய நாத வெள்ளமே

பாய்ந்திடும் போதில் நெஞ்சிலின்பமே

உறவாடுமே! சுகம் கூடுமே!

உல்லாசம் தன்னாலே உண்டாகுமே!(தேன்)

 

கான சஞ்சாரம் காதல் சீர் தரும்!

ஆனந்த தீரம்! அமுத சாகரம்!

மானில உயிர்கள் மயக்கமே பெறும்!

மலர் போலவே மணம் வீசும்

மங்காத சிங்கார சங்கீதமே!(தேன்)

 

 

எத்தனை எத்தனை இன்பமடா!

யாருக்குச் சொந்தம்-1963

இசை : K. V. மகாதேவன்

பாடியவர் : T. M. சௌந்தரராஜன்

 

எத்தனை எத்தனை இன்பமடா!-இவை

எல்லாம் உனக்கே சொந்தமடா!(எத்தனை)

 

மரம் படைத்தான்! ஒரு கொடி படைத்தான்! -அந்த

மரத்தைத் தழுவி அதைப் படர வைத்தான்! படர வைத்தான்!

மலர் படைத்தான்! நறு மணங் கொடுத்தான்-அதில்

வடியும் தேனையும் உனக்களித்தான்!(எத்தனை)

 

உன்னைப் படைத்தான்! ஒரு பெண்ணைப் படைத்தான்!-காதல்

உறவு கொள்ளவும் வழிவகுத்தான்! வழிவகுத்தான்!

பொன்னைப் படைத்தான்! பல பொருள் படைத்தான்-இந்த

பூமியில் சொர்க்கம் காண வைத்தான்!(எத்தனை)

 

கண் கொடுத்தான் நீ காண்பதற்கு! பல

காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு! களிப்பதற்கு!

மனங் கொடுத்தான் உன்னை நினைப்பதற்கு-நல்ல

மதி கொடுத்தான் எண்ணிப் பார்ப்பதற்கு⁠(எத்தனை)

 

 

ஆடும் மயிலே அழகு நிலாவே

மன்னாதி மன்னன்-1960

இசை : M. S. விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடியவர்கள் : ஜமுனாராணி & குழுவினர்

 

ஆடும் மயிலே அழகு நிலாவே

வாடா மலரே வருக!

பாடும் குயிலே செந்தமிழ் பேசும்

பைங்கிளியே நீ வருக!⁠(ஆடும்)

 

மாங்கனிபோலே பளப்பளப்பாக

மின்னும் உந்தன் கன்னம்-அதில்

வண்டுகள் போலே தாவிடும் எங்கள்

மன்னரின் இரு கண்ணும்!

மதுரசம் பருகிட அவர் மனம் எண்ணும்!

இருவரும் உலகில் இணைவது திண்ணம்!

மாதவி நீதானே! கோவலன் அவர்தானே! (ஆடும்)

 

பஞ்சணை மீது கொஞ்சிக் குலாவி

பாலும் பழமும் தருவார்-இவர்

பாவை உந்தன் கோவை இதழில்

பரிசாய் முத்தம் பெறுவார்

பரவச வெறியில் தனை மறந்தாடும்

உறவினில் புதுமுறை கவிதை பாடும்

ஊர்வசி நீதானே ! இந்திரன் அவர்தானே! (ஆடும்)

 

 

 

 

 

கள்ள மலர்ச் சிரிப்பிலே கண்களின்

குலமகள் ராதை-1963

இசை : K. V. மகாதேவன்

பாடியவர் : P. சுசிலா

 

கள்ள மலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே

கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே!

சொல்லுமின்றி மொழியுமின்றி மௌனமாகப் படித்தாள்!

உள்ளமதைக் குருவுக்கவள் காணிக்கையாய்க் கொடுத்தாள்!

துள்ளியெழும் ஆசையால் தூக்கமின்றித் தவித்தாள்!

கொள்ளையிட்ட கள்வனுக்கு மாலை போடத்துடித்தாள்!

(கள்ள)

 

அன்புக் கைகள் அணைப்பிலே ஆசை தீரும் பொன்னாள்!

இன்ப மென்னும் உலகினிலே இணைந்து வாழும் நன்னாள்!

என்று வரும் என்று வரும் கனவு காணும் அந்நாள்!

என்று எண்ணி ஏங்குகிறாள் அன்னநடைப் பெண்ணாள்!

(கள்ள)

 

 

 

உன்னைக் காண ஏங்கும்!

மணிமேகலை-1959

இசை : G. ராமநாதன்

பாடியவர் : T. M. சௌந்தரராஜன்

 

உன்னைக் காண ஏங்கும்!-அன்பே

என் நெஞ்சும் கண்ணும் என்று தூங்கும்?

ஒளி மின்னல் மாறி இளங்கன்னியாகி

எனைக் கொள்ளை கொண்ட அன்பே!

 

எண்ணப் பொய்கையில் அன்னம் போலவே

இன்பமாக நீந்தி-புது

அன்புப் பார்வை ஏந்தி!-ஆனந்தம்

தந்த சூர்ய காந்தி!-சுவை

கன்னல் கொஞ்சிடும் உன்சொல்லைக் கேட்டுநான்

காண்பதென்று சாந்தி!

 

சிந்துபாடியே வந்து என்னையே

சொந்தமாக்கிக் கொண்டாய்!-உன்

சொந்தமாக்கிக் கொண்டாய்!-மெய்க்காதல்

பந்தத்தாலே வென்றாய்-நம்

சொந்த பந்தத்தை சிந்தியாமலே

இன்று எங்கு சென்றாய்?

 

மனதில் கொண்ட ஆசைகளை

மாடப் புறா-1962

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள் : P. சுசிலா & ஜமுனாராணி

 

வசந்தா : மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு!

இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய்விடு!

 

மீனா : மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு!

இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய்விடு!

 

வசந்தா : விதைப்ப தெல்லாம் முளைப்பதில்லை மண்ணின் மீதிலே!

முளைப்ப தெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே!

 

மீனா : மலர்வ தெல்லாம் மணப்பதில்லை பூமி தன்னிலே!

வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே!

ஒரு நிலாதான் உலவ முடியும் நீலவானிலே

உணர்ந்த பின்னால் கலங்கலாமோ உள்ளம் வீணிலே!

 

வசந்தா : உருகி உருகிக் கரைவதாலே பலனுமில்லையே!

ஓடிப்போன காலம் மீண்டும் வருவதில்லையே!

இருவரும் : மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு!

இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய்விடு!

 

 

பட்டுச் சிறகடித்தே-பறக்கும்

பொன்னித்திருநாள்-1960

இசை : K. V. மகாதேவன்

பாடியவர் : P. சுசிலா

 

பட்டுச் சிறகடித்தே-பறக்கும்

சிட்டுக் குருவிகளா!–சிறைப்

பட்டுத் தவித்துருகும் பாவை என்

பரிதாபம் காணீர்களா?

 

தட்டிப் பறித்து வந்தே!-என்னை

சஞ்சலக் கூட்டுக்குள்ளே!-ஒரு

துஷ்டன் அடைத்துவிட்டான்!-பெரும்

துன்பத்தில் ஆழ்த்தி விட்டான்!- இதை

விட்டுப் பறப்பதற்கோ-எனக்கு

இறகுகள் ஏதுமில்லை!-என்னைத்

தொட்டுக் கலந்தவர்க்கே- இதைப்போய்ச்

சொல்லிட மாட்டீர்களா?

 

முத்துமுத்தாய்க் கண்ணீர்த்-துளியை

முகத்தினில் சோரவிட்டே-இங்கு

எத்தனை நாள் இன்னும்-நான்

இவ்விதம் வாடுவதோ?-மனம்

 

பித்துப் பிடிக்கும் முன்னே-இந்த

பேதை படுந்துயரை-என்

அத்தானிடத்தில் சொல்லி-அழைத்தே

வந்திட மாட்டீர்களா?

 

 

 

 

நினைந்து நினைந்து நெஞ்சம்

சதாரம்-1956

இசை : G. ராமநாதன்

பாடியவர் : T. M. சௌந்தரராஜன்

 

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே-உன்னை

நீங்கிடாத துன்பம் பெருகுதே!

 

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே-வாழ்க்கை

உடைந்து போன சிலையானதே!

நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே!

அமைதி யின்றியே அலைய நேர்ந்ததே!(நினை)

 

எங்கிருந்து நீவாடுகின்றாயோ?

துன்ப கீதமே பாடுகின்றாயோ?

இந்த நிலை என்று மாறுமோ?-உனைக்காணும்

இன்ப நாளுமே வந்து சேருமோ?(நினை)

 

 

 

வருவேன் நான் உனது மாளிகையின்

மல்லிகா-1957

இசை : T. R. பாப்பா

பாடியவர் : A. M. ராஜா 8 P. சுசீலா

 

பெண் : வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே!

ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!

 

ஆண் : காதலே கனவு என்னும்

கவிதை தன்னை வாழ்நாளில்!

ஓர் முறை பாடியே

உறங்கிடுவேன் உன்மடியில்!

ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!

 

பெண் : எந்தனுயிர்க் காதலரை

இறுதியிலே கண்ணாலே

கண்டு நான் விடை பெறவே

காத்திருப்பாய் ஒரு கணமே!

ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே?

 

 

 

 

பனியிருக்கும்! குளிரெடுக்கும்!

தாயின் மேல் ஆணை-1966

இசை : லிங்கப்பா

பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலா

 

பெண் : பனியிருக்கும்! குளிரெடுக்கும்!

பால் நிலவின் நிழலிருக்கும் இரவினிலே!

 

ஆண் : இதழ் வெளுக்கும்! விழி சிவக்கும்!

இருவரது முகம் வியர்க்கும் உறவினிலே!

 

பெண் : மனதினிலே ஆசைக் கனல் எரியும்!

மலரணையில் கருங்குழலும் விரியும்!

 

ஆண் : இனிய காதல் தேன் மழையைச் சொரியும்!

இரண்டு நெஞ்சும் இணைந்து இன்பப்போர் புரியும்!

 

பெண் : கைகலந்து மெய்யணைந்து

கட்டித் தழுவிக் கொஞ்சும்!

 

ஆண் : கட்டில் மெள்ள மெள்ள வென்று

காதில் சொல்லிக் கெஞ்சும்!

 

பெண் : இருவர் என்னும் இடமும் அங்கே மறையும்!

 

ஆண் : ஒருவர் என்னும் நிழல் படத்தை வரையும்!

 

பெண் : இரவு செல்லும்!

 

ஆண் : பகல் நெருங்கும்!

 

இருவரும்: இதயம் இன்பக் கனவு காணும் உடல் உறங்கும்

 

 

 

 

 

எந்நாளும் வாழ்விலே! கண்ணான காதலே!

விடிவெள்ளி-1960

இசை : A. M. ராஜா.

பெண் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்

 

எந்நாளும் வாழ்விலே! கண்ணான காதலே!

என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே

(எந்)

 

கண்ணாலே காணுகின்ற காட்சி எங்கும் நீ நிறைந்தாய்!

எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும் தேன் பொழிந்தாய்!

உன்னாலே எந்தன் உள்ளம் துள்ளித் துள்ளி ஆடுதே!

எனை மீறி நிலைமாறி சல்லாப கானம் பாடுதே!

(எந்)

 

உன்முன்னே ஜாதி பேத வாதமெல்லாம் சாய்வதில்லை!

ஊரெல்லாம் ஒய்ந்த போதும் நீ உறங்கி ஒய்வதில்லை!

மண்மீது நீ இல்லாது வாழும் ஜீவன் இல்லையே!

மலர் மேலே மணம் போலே உலாவும் இன்ப ஜோதியே!

(எந்)

 

 

 

ஒரு திருமண மேடை!

கெட்டிக்காரன்-1971

இசை : சங்கர், கணேஷ்

பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

 

ஒரு திருமண மேடை!

கை தட்டத் தட்டத் துடிக்கும்

இதன் கருவிழி ஜாடை!

 

ஆண் : பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்

பூப்பட்டுப் பட்டு மணக்கும்!

 

பெண் : செந்தமிழ் நாட்டுச் சிலையாட்டம் தித்திக்கும்!

 

ஆண் : சிட்டே சிட்டே வா வா!

ஜில்லென்று கிட்டே நீவா!

நகையும் சுவையும் பசியும் உணவும் நாமாகலாம்!

 

பெண் : சிரிப்பூட்டும் ராஜா!

தேனூறும் இந்த ரோஜா!

கிடைக்காது! நினைக்காதே

ரொம்ப லேசா!

 

ஆண் : சின்னச் சின்ன பாப்பா!

சிங்காரக் கண்ணு பாப்பா!

சிலையே மலையே உன் மேலாசை

கொண்டால் தப்பா?

 

பெண்: தமிழ் நாட்டுப் பாப்பா!

தன்மானம் உள்ள பாப்பா!

தவறான ஆசைக்குப் போடும் தாப்பா!

 

ஆண் : ஏய்! என்னப்பா இது!

 

 

 

 

கண்ணாளன் வருவார்!

சர்வாதிகாரி-1951

இசை : S. தட்சிணாமூர்த்தி

பாடியவர் : ஜிக்கி

 

கண்ணாளன் வருவார்! கண்முன்னே நான் காண்பேன்!
⁠ஆஹாஹா காதல் மொழி பேசி மகிழ்வேனே!

 

⁠ஒஹோஹ்ஹோ           ⁠ஒஹோஹ்ஹோ

⁠என் ராஜா                      என் ராஜா

⁠வருவாரே! ⁠                    வருவாரே

⁠ஒஹோஹ்ஹோ           ⁠ஒஹோஹ்ஹோ

⁠ராஜன் வருவாரே         ⁠ராஜன் வருவாரே

⁠பேசிமகிழ்வேனே!        ⁠பேசிமகிழ்வேனே!

 

என் காதல் நாதன் இன்பதேவன் வாழ்வின் ஜீவன்
⁠என்னைத் தேடி விரைவினிலே ஜெயத்துடனே என் ராஜா வருவாரே!

 

⁠என் ராஜா                      என் ராஜா

⁠வருவாரே! ⁠                    வருவாரே

⁠ராஜன் வருவாரே!        ⁠ராஜன் வருவாரே

⁠பேசிமகிழ்வேனே!        ⁠பேசிமகிழ்வேனே!

 

கலந்து உறவாடும்! கண்களும் கண்களும்
⁠கன்னமும் கன்னமும் கலந்து உறவாடும்
⁠கணமும் இணை பிரியாமல் கனியும் சுவையும் போல் கலந்தே

 

மனம் மகிழ்ந்தே வாழ்வோமே!

வாழ்வோமே!

வாழ்வோமே!

 

 

 

 

பார்த்தேன் பார்க்காத அழகே

கெட்டிக்காரன்-1971

இசை : சங்கர், கணேஷ்

பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன், P. சுசிலா

 

ஆண் : பார்த்தேன் பார்க்காத அழகே!

கேட்டேன் கேட்காத இசையே!

 

பெண் : பார்க்கும் அழகென்ன அழகோ?

கேட்கும் இசையென்ன இசையோ?

 

ஆண் : நான் பாட நீயாட சபை யேறலாம்!

ரதியாக மதனாக உறவாடலாம்!

 

பெண் : உறவாடும் எண்ணம் மனம் கொள்ளலாம்!

உனைத்தேடி வரும்போது அதைச் சொல்லலாம்!

 

ஆண் : நதியோடு நதி சேரும் கடலாகலாம்!

புதுப்பாதைதனில் சேர்ந்து நடைபோடலாம்!

 

பெண் : என்பாதை வேறு உன்பாதை வேறு!

இருவேறு நேர்க்கோடு இணையாதது!

 

 

 

தாவி வரும் காவிரியின் சோலையோரம்!

பெரியகோயில்-1958

இசை: K.V. மகாதேவன்

 

தாவி வரும் காவிரியின் சோலையோரம்!

பூவிரிய வண்டுபாடும் காலை நேரம்!

ஆவலுடன் பறவையினம் ஆரவாரம்-செய்து

காவினிலே இரை தேட வெளி யேறும்!

 

நாவினிக்க உண்பதற்குக் காய்கனிகள்!

நஞ்சைகளில் தங்கநிற நெல்மணிகள்!

மேவி நிற்கும் காட்சியின்பம் காணும் விழிகள்!

வேறெதையும் விரும்புமோ இந்த உலகில்?

 

வான்மழையின் வளம் தோன்றும் வயல்களிலே!-கலை

வாணர்களின் திறம் தோன்றும் கோயில்களிலே!

மாறாத குளுமை தோன்றும் தென்றல்தனிலே! என்

மாதரசி மேனி தோன்றும் மாந்தளிரிலே!

 

 

 

 

வான் மழையின்றி வாடிடும் பயிர்போல்

பொன் முடி-1949

இசை : G. ராமநாதன்

பாடியவர்கள் : G. ராமநாதன், T. V. ரெத்தினம்

 

பெண் : வான் மழையின்றி வாடிடும் பயிர்போல்

நானுன்னைப் பிரிந்தே வாடுகின்றேன்!

சூழ் நிலையாலே கூண்டினில் வாழும்

பைங்கிளி போலிங்கு வாழுகிறேன்!

வெளியில் விடாமல் வீட்டினுள் வைத்தே

கெடுமதியால் எனைப் பூட்டினரே… …. …

வளர் காதல் ஜோதி உனையின்றி பாரில்

ஒளியுமே ஏதென் வாழ்விலே?

 

ஆண் : காதல்மொழி பாவாய்! கனவோ நம் வாழ்வு-ஓ!

கணமும் இனி உயிர் நான் தரியேன்

நாதம் இல்லாத யாழ் போலும் ஆனேன்

நானே உன் பிரிவால் வாடியே!

 

பெண் : எந்நாளினி ஒன்றாகி இணையாய்

முன்போலவே நாம் சேர்ந்திடுவோமோ? என் அமுதே!

 

ஆண் : எந்நாளினி ஒன்றாகி இணையாய்

முன் போலவே நாம் சேர்ந்திடுவோமோ! என் அமுதே!

பெண் : வானிலே தோன்றும் ஆதவன் போலே

காதலரே! உம்மைக் காண்பதென்றோ?

 

 

 

 

 

 

 

சமூகம்

அது முத்திய கலியின் அடையாளம்!

தசாவதாரம்-1975

இசை : ராஜேஸ்வரராவ்

பாடியவர் : A. L. மகாராஜன்

 

(தொகையறா)

 

சத்தியம் பொய்யாகும்! தருமம் தலைசாயும்!

அறநெறிகள் அலைமோதும்! அதர்மம் அரசாளும்!

பருவ நிலை மாறும்! பசுமைக்குப் பஞ்சம் வரும்!

வறுமை சதிராடும்! மண்ணுலகே நரகாகும்!

 

(பாட்டு)

 

அது முத்திய கலியின் அடையாளம்!

அதன் முடிவே கல்கி அவதாரம்!

எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்!

என்னும் நிலைமை வரும்-அது

பிஞ்சுக் குழந்தைகள் உண்ணும் உணவிலும்

பெரிதும் கலந்து விடும்!⁠(அது)

அருந்தும் மருந்தில் நஞ்சைக் கலக்கி

அழகுச் சிமிழில் அடைத்து மயக்கி

விற்பனை செய்பவர் வளமடைவார்-பெரும்

வியாபாரிகள் எனும் பெயரடைவார்!(அது)

மானாட்டம் மயிலாட்டம் மலராட்டம் கொடியாட்டம்

மகிழ்வூட்டும் பரதக்கலை-கண் வழியே

மனங்காட்டும் புனிதக்கலை-மாறி

நாயாட்டம் பேயாட்டம் நரியாட்டம் கரியாட்டம்

வெறியூட்டும் அங்கங்களைத்-தெளிவாக

வெளிக்காட்டும் புதியகலை!(அது)

புல்லரும் பொய்யரும் கள்வரும் கயவரும்

புயவலி கொண்டாட-பெரும்

செல்வமிகுந்தவர் வல்லமையுற்றவர்

ஜெயம் ஜெயமென்றாட-மிக

நல்லவர் ஏழைகள் ஞானிகள் மானிகள்

உள்ளம் பதைத்தாட-கொடும்

நாலாம் யுகமது முடிவுறும் நாள்வர

கோள்களும் கூத்தாட-மனிதப் பேய்களும் கூத்தாட!

“வெடி படு மண்டத் திடிபல தாளம் போடும்-வெட்ட

வெளியிலிரத்தக் களியோடு பூதம் பாடும்”-சட்டச்

சட சட வென்று எரிமலை வெடித்தே சாடும்-கட்டக்

கட கட கட வென பூமி பிளந்தேயாடும்!

புயலுமெழுந்திடும்! மழையும் பொழிந்திடும்!

அலைகடல் பொங்கும் உலகையழிக்கும்

ப்ரளயம்-மஹாப்ரளயம்-மஹாப்ரளயம்.

 

 

பாலுந் தேனும் பெருகி ஓடுது

தாய்க்குப்பின் தாரம்-1956

இசை : K. V. மகாதேவன்

பாடியவர் : T. M. சௌந்தரராஜன்

 

பாலுந் தேனும் பெருகி ஓடுது

பரந்த சீமையிலே நாம்

பொறந்த சீமையிலே! ஆனா

பாடு படுறவன் வயிறு காயுது

பாதி நாளையிலே-வருஷத்தில்

பாதி நாளையிலே!

ஒ….என்னடா தம்பி நேராப்போடா

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா

தம்பிப் பயலே-இது

மாறுவதெப்போ? தீருவதெப்போ?

நம்ம கவலே!

வானம் பொழியுது! பூமி விளையுது!

தம்பிப் பயலே-நாம்

வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே-ஆனா

தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே-இது

தகாதுயின்னு எடுத்துச் சொல்லியும் புரியலே-அதாலே

⁠⁠⁠                                                                                                 (மனுஷனை)

தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு-தன்

குறையை மறந்து மேலே பாக்குது பதரு-அதுபோல்

அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே-எதுக்கும்

ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது நாட்டுலே-அதாலே

⁠⁠⁠                                                                                                 (மனுஷனை)

ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப்பயலே-எதுக்கும்

ஆமாம்சாமி போட்டுவிடாதே தம்பிப்பயலே!

பூனையைப் புலியாய் எண்ணிவிடாதே தம்பிப்பயலே ஒன்னைப்

புரிஞ்சுக்காம நடக்காதேடா தம்பிப்பயலே!-டேய்

(மனுஷனை)

 

 

இன்னொருவர் தயவெதற்கு?

தங்கரத்தினம்-1960

இசை : K. V. மகாதேவன்

பாடியவர் : P சுசிலா

 

இன்னொருவர் தயவெதற்கு?

இந் நாட்டில் வாழ்வதற்கு!

இல்லையென்ற குறையும் இங்கே

இனிமேலும் ஏன் நமக்கு?

கன்னித்தாய் காவேரி எந்நாளும் துணையிருக்க!

கைகளிலே உழைப்பதற்கு பலமிருக்க திறமிருக்க!

பொன்விளையும் பூமியெனும் கண்ணான நிலமிருக்க!

புகழுடனே உலகையாண்ட இனம் என்ற பெயரிருக்க! (இ)

எண்ணத்தால் இமயம் போலே உயர்ந்து விட்ட மனமிருக்க!

லட்சியமே உயிராகக் கொண்டாடும் குணமிருக்க!

முன்னேற்றப் பாதையிலே அறிவோடு நாம் நடக்க!

கண்ணோட்டம் கொண்டவர்கள் வழிகாட்டக் காத்திருக்க! (இ)

வந்தாரை வரவேற்று வாழவைத்த தென்னாடு!

வள்ளுவனார் பொது மறையை வழங்கிய நம்நாடு!

இந்நாடு பிறர்கையை எதிர்பார்த்து வாழுவதா?

எந்நாளும் துயர்மேகம் நம்மீது சூழுவதா?

 

 

ஒயிங்கு தவறாமெ!

ஆயிரம் ரூபாய்-1964

இசை : K. V. மகாதேவன்

பாடியவர் : P. சுசிலா

 

ஒயிங்கு தவறாமெ!

ஊரெ எத்தி வாயாமெ

பொயிதெ வீணாக்காமெ

புவ்வாவ தேடிக்கணும்!

ஆனாக்க அந்த மடம்

ஆவாட்டி சந்தெமடம்!

அதுவும் கூட இல்லாகாட்டி

ப்ளாட்டுபாரம் சொந்த இடம்!(ஆனா)

மச்சுலே இருந்தாத்தான்

மவுசுயிண்ணு எண்ணாதே!

குச்சுலே குடியிருந்தா

கொறச்சலுண்ணு கொள்ளாதே!

மச்சு குச்சு எல்லாமெ

மனசுலே தானிருக்கு!

மனசு நெறஞ்சிருந்தா

மத்ததும் நெறஞ்சிருக்கும்!⁠(ஆனா)

கெடைச்சா கஞ்சித்தண்ணி!

கெடைக்காட்டி கொயாத்தண்ணி!

இருக்கவே இருக்கையிலே

இன்னாத்துக்குக் கவலை கண்ணி!

மரத்தெப் படெச்சவன் தான்

மனுசாளைப் படைச்சிருக்கான்!

வாறதெ ஏத்துக்கதான்

மனசெ கொடுத்திருக்கான் !

தெட்டிக்கினு போறதுக்கு

திருடன் வருவான்னு

துட்டுள்ள சீமாங்க

தூங்காமெ முயிப்பாங்க!

துட்டும் கையிலே இல்லே!

தூக்கத்துக்கும் பஞ்சமில்லே!

பொட்டியும் தேவையில்லே!

பூட்டுக்கும் வேலையில்லே!

 

 

மாட்டுக்கார வேலா!

வண்ணக்கிளி-1959

இசை : K. V. மகாதேவன்

பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்

 

காட்டு மல்லி பூத்திருக்க

காவல் காரன் பாத்திருக்க

ஆட்டம் போட்டு மயிலைக் காளை

தோட்டம் மேயப் பாக்குதடா!

மாட்டுக்கார வேலா! ஓம்

மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா!(காட்டு)

கோட்டைச் சுவர் போல வேலி இருக்கு!

குத்தும் கருவேல முள்ளுமிருக்கு!

தோட்டக்காரன் கையில் கம்பு மிருக்கு!

சுத்திச் சுழட்டவே தெம்புமிருக்கு!

மாட்டுக்கார வேலா! ஓம்

மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா!(காட்டு)

போகாத பாதையிலே போகக் கூடாது-சும்மா

புத்தி கெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது!

மாடாகவே மனுஷன் மாறக் கூடாது!

மற்றவங்க பொருளுமேலே

ஆசை வைக்க கூடாது!

மாட்டுக்கார வேலா! ஒம்

மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா!⁠(காட்டு)

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்

கைதி கண்ணாயிரம்-1960

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: P. சுசிலா தொகையறா

 

பட்டு : கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்!

வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்!

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும் !

நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்!

உண்மையிதை உணர்ந்து நன்மைபெறப் படித்து

உலகில் பெரும் புகழ் சேர்த்திடடா!

குமரன் : பள்ளிக்குச் சென்று கல்வி பயின்று

பலரும் போற்றப் புகழ் பெறுவேன்!

பட்டு : சபாஷ்!

அக்கம் பக்கமே பாராது!

ஆட்டம் போடவும் கூடாது!

அழுவதும் தவறு! அஞ்சுவதும் தவறு!

எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு!

குமரன் : அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்!

இந்த நாட்டின் வீரனாவேன்!

பட்டு : சபாஷ்!

தன்னந்தனிமையில் நீயிருந்தால்

துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்

கண்கலங்குவாயா? துணிந்து நிற்பாயா?

கண்மணி எனக்கதை சொல்லிடு நீ!

குமரன் : புயலைக் கண்டு நடுங்கமாட்டேன்!

முயன்று நானே வெற்றி கொள்வேன்!

பட்டு : சபாஷ்!

 

 

மந்தரையின் போதனையால் மனம்

பாகப்பிரிவினை-1959

இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி

பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் & L. R. ஈஸ்வரி குழுவினர்

 

ஆண் : மந்தரையின் போதனையால் மனம் மாறிகைகேயி

மஞ்சள் குங்குமம் இழந்தாள்!

வஞ்சகச் சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்

பஞ்ச பாண்டவரை பகைத்தழிந்தார்!

சிந்தனையில் இதையெல்லாம் சிறிதேனும் கொள்ளாமல்

மனிதரெல்லாம் மந்தமதியால் அறிவு மயங்கி

மனம் போன படி நடக்கலாமா?

(பாட்டு)

கோரஸ் : ஒற்றுமையாய் வாழ்வதாலே

உண்டு நன்மையே!

வேற்றுமையை வளர்ப்பதனாலே

விளையும் தீமையே!(ஒற்)

உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாடமே

அணையாத தீபமாய்ச் சுடர் என்றும் வீசுமே

ஆண் : நெஞ்சில்-உண்டான அன்பையே

துண்டாடி வம்பையே

உறவாகத் தந்திடும்

சிலர் சொல்லை நம்பியே

இருவரும் : வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!

கோரஸ் : ஒற்றுமையாய் !!

இருவரும்: துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே!

வன வேடன் வீசிய வலை தன்னில் வீழ்ந்ததே!

ஆண் : இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே

கதையான போதிலும் கருத்துள்ள பாடமே!

இருவரும்: வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!

கோரஸ்: ஒற்றுமையாய்…!

இனத்தாலே, ஒன்று நாம்!

மொழியாலும் ஒன்றுதான்!

இணையில்லா தாயகம்

நமக்கெல்லாம் வீடுதான்!

ஒரு தாயின் சேய்கள் நாம்!

இது என்றும் உண்மையே!

அறிவோடு நாமிதை

மறவாமல் எண்ணியே

ஒற்றுமையாய் வாழ்வதாலே

உண்டு நன்மையே!

 

 

 

கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!

நினைத்ததை முடிப்பவன்-1975

இசை : எம். எஸ். விஸ்வநாதன்

பாடியவர்: T. M. சௌந்தரராஜன்

 

கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!

உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்

உண்மையில்லாதது!

அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்!

அடையாளம் காட்டும்! பொய்யே சொல்லாதது!

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்

கண்முன்னே தோன்றுவது சாத்தியமே!

காத்திருந்து கள்வருக்குக் கை விலங்கு பூட்டிவிடும்

கண்ணுக்குத் தோணாத சத்தியமே!

போடும் பொய்த் திரையைக் கிழித்து விடும் காலம்!

புரியும் அப்போது மெய்யான கோலம்!(கண்)

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே

உருத்திராட்சப் பூனைகளாய் வாழுறீங்க:

சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே

ஏமாற்றிக் கொண்டாட்டம் போடுறீங்க!

பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை!

உண்மை எப்போதும் தூங்குவது மில்லை!⁠(கண்)

பொன் பொருளைக் கண்டவுடன்

வந்த வழி மறந்து விட்டுக்

கண்மூடி போகிறவர் போகட்டுமே!

என் மனதை நானறிவேன்!

என் உறவை நான் மறவேன்!

எது ஆன போதிலும் ஆகட்டுமே!

நன்றி மறவாத நல்ல மனம் போதும்!

என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்.(கண்)

 

 

 

 

மதியாதார் வாசல் மதித்தொருக்கால்

சதாரம்-1956

இசை : G. ராமநாதன்

பாடியவர் : திருச்சி லோகநாதன்

மதியாதார் வாசல் மதித்தொருக்கால் சென்று

மிதியாமை கோடி பெறும் என்ற

மதி சொன்ன ஔவை மொழி தன்னைப் போற்றி

வாழ்வதே பெருமை தரும்!

மண்மீது மானம் ஒன்றே ப்ரதானம்

என்றெண்ணும் குணம் வேணும்-இதை

மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்

மாறாத அவமானம்!⁠(மண்)

கண்ணான கணவன் தன்மானம் தன்னைக்

காப்பாற்றும் பெண் தெய்வம்-மனம்

புண்ணாகிச் சிந்தும் கண்ணீரைக் காணப்

பொறுக்காதடா தெய்வம்!

எண்ணாத இன்பம் எது வந்த போதும்

எதிர் கொள்ளத் தயங்காதே!

எளியோருக்காக நீ செய்த த்யாகம்

இதை லோகம் மறவாதே!(மண்)

அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும்

பணங் காசிலே இல்லை-மெய்

அன்பே எந்நாளும் அழியாத இன்பம்

அதற்கீடு வேறில்லை

காலணா மிஞ்சாதையா!

அவன் அமரன்-1958

இசை : இப்ராஹிம்

 

ஆண் : காலணா மிஞ்சாதையா!

காலணா மிஞ்சாதையா!

பெண் : ஆலையில் பாடு படும்

ஏழைகள் வாழ்வினிலே(காலணா)

ஆண் : ஜாலியாய் வாழ்ந்திடலாம்

ஜாலியாய் வாழ்ந்திடலாம்

நினைத்தால் உலகையெல்லாம்

பணத்தால் வாங்கிடலாம்!

பெண் : பாட்டாளியே வறுமைக்

கூட்டாளியே-எண்ணிப்

பாரய்யா உன்நிலையை இந்நாளிலே!

ஆண் : நோட்டாக வந்த

கூட்டாளியே-மனக்

கோட்டையெல்லாம் உன்னால் ஈடேறும்!

பெண் : ஒண்ட நிழல் சொந்தமில்லே!

ஓய்வுமட்டும் சிறிதுமில்லே!

ஆண் : கண்டபடி களிப்புறவே

காலந்தான் போதவில்லே!

கோரஸ் : ஆலையில் பாடுபடும்

ஏழைகள் வாழ்வினிலே!(காலணா)

ஆண் : பணநாதனே உந்தன்

அருட் பார்வையால் -இந்தப்

பார்மீது உழைக்காமல் பொருளீட்டுவோம்!

பெண் : பசியாறவே ஏழ்மைப்

பகைதீரவே – பகல்

இரவென்றும் பாராமல் பணியாற்றுவோம்!

பெண் : காலம் மாறிடுமா!

கவலை தீர்ந்திடுமா?

ஆலையில் பாடுபடும்

ஏழைகள் வாழ்வினிலே(காலணா)

 

 

 

 

மண்ணிலே பொன் கிடைக்கும்!

நல்லவன் வாழ்வான்-1961

இசை : T. R. பாப்பா

 

மண்ணிலே பொன் கிடைக்கும்!

மரத்திலே கனி கிடைக்கும்!

எண்ணத்திலே தாழ்ந்துவிட்ட மனிதர்களால்-இந்த

உலகத்திலே பிறருக்கென்ன சுகங் கிடைக்கும்!

சின்னஞ்சிறு சிப்பிகூட முத்து தரும்!-கொட்டும்

தேனீக்கள் சுவை மிகுந்த தேனைத்தரும்!

செங்கரும்பு உருவிழந்தும் சாறு தரும்!-தான்

செத்த பின்னும் யானை கூடத் தந்தம் தரும்!

எண்ணத்திலே தாழ்ந்து விட்ட மனிதர்களால்-இந்த

உலகத்திலே பிறருக்கென்ன சுகங் கிடைக்கும்!

மனிதராகப் பிறந்ததினால் மனிதரில்லை-பெரும்

மாளிகையில் வசிப்பதனால் உயர்வுமில்லை!

குணத்தால் சிறந்தவரே உயர்ந்தவராம்-அந்தக்

கொள்கையுள்ள நல்லவரே மனிதர்களாம்!

 

 

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே!

அல்லி பெற்ற பிள்ளை-1959

இசை : K. V. மகாதேவன்

 

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே!-வள்ளுவர்

ஆக்கி நமக்களித்த அரும் பொருளே!

(அறி)

உடலுக்கு உயிர் போலே!

உலகுக்கு ஒளிபோலே!

பயிருக்கு மழை போலே!

பைந்தமிழ் மொழியாலே!

(அறி)

அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே!

அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே!

அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே

அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே!

(அறி)

வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது!

மனம்மொழி மெய்இனிக்க வார்த்திட்ட தேனது!

வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது!-எம்

மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக்கண்டது!

அறிவாளி-1963

இசை : S.V. வெங்கட்ராமன்

பாடியவர் : T. M. சௌந்தரராஜன்

(தொகையறா)

அறிவிருக்கும் அன்பிருக்கும் பண்பிருக்கும் சிலரிடம்!

அழகிருக்கும் பணமிருக்கும் பகட்டிருக்கும் பலரிடம்!

பாட்டு

இது தெரியும்!

அது தெரியாது!

ஏழடுக்கு மாளிகையில் இருக்கிற பேர்வழிக

எத்தனையோ தப்புத்தண்டா பண்ணுவாங்க!

ஏழை எளியவங்க இல்லாத காரணத்தால்

ஏதோ சிறு தவறு பண்ணுவாங்க!
ஜாலி மைனர்கள் விசிறி மடிப்பிலே

கிழிசல் ஒரு கோடி இருக்கும்!-தொழி

லாளி துவைச்சு உடுத்தும் உடையிலே

தையல் பல ஓடி இருக்கும்!

 

கனதனவானின் நெஞ்சில் எந்நாளும்

கபடம் பொறாமை எனும் அழுக்கிருக்கும்!

கள்ளம் அறியாத பாட்டாளி மேனியில்

உள்ளபடி வேர்வை அழுக்கிருக்கும்!

(இது)

 

 

இது தான் உலகமடா!

பாசவலை-1956

இசை : எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி

பாடியவர் : C. S. ஜெயராமன்

 

இது தான் உலகமடா!-மனிதா

இது தான் உலகமடா!-பொருள்

இருந்தால் வந்து கூடும்-அதை

இழந்தால் விலகி ஒடும்!

 

உதைத்தவன் காலை முத்தமிடும்!

உத்தமர் வாழ்வைக் கொத்தி விடும்!

உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்

வளர்த்தே அறிவை மாய்த்து விடும்!

பொருள்-இருந்தால் வந்து கூடும்!

அதை இழந்தால் விலகி ஓடும்!(இது)

 

உழைப்பவன் கையில் ஓடு தரும்!

உணவுக்குப் பதிலாய் நஞ்சைத் தரும்!

பழியே புரியும் கொடியோன் புசிக்க

பாலும் பழமும் தினம் தேடித் தரும்!

பொருள்-இருந்தால் வந்து கூடும்!

அதை இழந்தால் விலகி ஓடும்!(இது)

மெய்யைப் பொய்யாய் மாற்றி விடும்!

வீணே சிறையில் பூட்டி விடும்!

பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னைப்

புகழ்ந்தே பாடல் புனைந்து விடும்!

பொருள்-இருந்தால் வந்து கூடும்!

அதை-இழந்தால் விலகி ஒடும்!

 

 

எல்லாம் திரை மறைவே

பிறந்த நாள்-1982

இசை: K. V. மகாதேவன்

 

(பல்லவி)

எல்லாம் திரை மறைவே–உலகில்

எல்லாம் திரை மறைவே
கல்வி இருந்தென்ன கற்பனை இருந்தென்ன

கண்டு ரசிக்க கண்களில்லாதவர்க்கு

(எல்லாம்)
 

கற்றுக் கொடுக்காத கவி வாணரின் புலமை

கஞ்சத் தனமுடையோன் காக்கும் பணப் பெருமை

கவைக்குதவாப்படிப்பு உணர்ச்சியில்லா நடிப்பு

கதிரவன் ஜோதி முன்னே குடத்தில் இட்ட விளக்கு

(எல்லாம்)
 

ஆடம்பரம் இல்லா அறிவாளி நாவன்மை

அவனியை உருவாக்கும் தொழிலாளி கைவன்மை

நாடிக்கடல் கலந்த நதிநீரின் நல்ல தன்மை

நன்றியில்லா தவர்க்கு செய்த செய்த நன்மை

(எல்லாம்)

 

சொன்னாலும் கேக்காத உலகமுங்க!

ஆடவந்த தெய்வம்-1960

இசை: K. V. மகாதேவன்

 

சொன்னாலும் கேக்காத உலகமுங்க!

சொல்லாமப் போனாலும் புரியாதுங்க!-இதில்

முன்னாலும் போகாமெ பின்னாலும் போகாமெ

முழிக்கிற கும்பல் ஏராளங்க!

 

சோம்பேறி ஆகுதுங்க!-சிலது

தூங்காமத் தூங்குதுங்க!-புதுத்

தொழிலைத் துவக்கிப் பலர்

துயரத்தைத் தீர்க்காமெ

துட்டுகளைப் பெட்டியிலே பூட்டுதுங்க!⁠(சொ)

 

பாடுபடும் ஏழைகளும்!-பணம்

உள்ளவரும் சேர்ந்திடுங்க!-புதுப்

பாதையை வகுத்திடுங்க!

பங்கு போட்டுச் சாப்பிடுங்க!

பாரபட்சமில்லாமெ வாழ்ந்திடுங்க!-என்று(சொ)

 

 

நம்ம சரக்கு ரொம்ப நல்ல சரக்கு!

தேடிவந்த செல்வம்-1958

இசை: லிங்கப்பா

நம்ம சரக்கு ரொம்ப நல்ல சரக்கு!

நாணயமும் நம்பகமும் உள்ள சரக்கு!

ஸ்டாரு படம் போட்டிருக்கு பின்னாடி-இது

சிறந்த பெல்ஜியம் கண்ணாடி!-நீ

சிரிச்சா சிரிக்கும் அழுதா அழுவும்

சிந்திச்சுப் பாரு இதன் முன்னாடி!
அறிஞர் கலைஞர்கள் அருமைக் கவிஞர்கள்

அறிவை உலகில் தரும் பேனா!-நல்ல

இருதயமில்லாத மனிதருக்கு இது

ஈட்டிமுனையாகும் சொல்லப் போனா!
கெட்டதைப் பாக்காதே கேக்காதே பேசாதே!

கேடுகெட்டுப் போகாதே மனக்குரங்கே!-அது

கட்டுப்பாடு, கண்ணியம் கடமையைக் கொல்லுமின்னு

வெட்ட வெளிச்சமாச் சொல்லுது இங்கே!
இதோ பாரு தஞ்சாவூரு தலையாட்டி பொம்மை!

இழுத்தபக்கம் சாயுறது இதனுடைய தன்மை!

இதைப் போலச் சிலமனிதர் இருக்கிறதும் உண்மை!

எண்ணிப் பார்த்தா அதுகளெல்லாம் நடமாடும் பொம்மை.

எளியோர்க்கு சுகவாழ்வு ஏது?

கனவு-1954

இசை: S. தட்சிணாமூர்த்தி

 

எளியோர்க்கு சுகவாழ்வு ஏது?-துன்ப

இருள் நீக்க ஆள்வோர் எண்ணாத போது!(எளி)
திருநாடு தன்னில் திருவோடு ஏந்தி

தெருவோடு போகும் நிலைமாறிடாது!

சீமான்கள் உள்ளம் மாறாத போது!(எளி)
எதுவந்தபோதும் விதிஎன்று எண்ணும்

மதிகொண்ட மாந்தர் மனம் மாறிடாது

நிதியோடு இன்பநிலை நேர்ந்திடாது !⁠(எளி)

 

 

 

 

புவி மீதினில் நீதி புகைந்ததே!

ராஜாம்பாள்-1951’’

இசை: ஞானமணி

 

(தொகையறா)

 

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்!

உயர் பதவி காணுகின்றார்!

உண்மையே பேசிடும் உத்தமர்கள் ஓயாத

துயராலே வாடுகின்றார்!

 

பாட்டு

 

புவி மீதினில் நீதி புகைந்ததே!

பொய், பாபமும், சூதும் மலிந்ததே!

பணப்பேயதன் முன்னே சட்டமெல்லாம்

பணிந்தாடுதே இன்று பாரினிலே!

கனல் மீதினில் புழுவாய் ஏழைகளே!

கண்கலங்கியே வாடித் திண்டாடுறார்!

அநியாயமிதே! அழியாததேன்?

இதை அழித்திடுவாரே இல்லையா?

பொதுமேடையில் ஏறிப் பேசுகிறார்-தாம்

பொதுநலத் தொண்டன் என்கிறார்

அதிகாரமும் கையில் வந்தவுடன்

அநியாயமும் செய்கின்றார் கண்மூடியாய்!

மனத்தூய்மையுடன் எல்லோருமே

வாழ்ந்தால் அன்றி நிலையும் மாறுமோ?

பாபமும் சூதும் மலிந்ததே!

பாபம் மலிந்ததே! மலிந்ததே!

 

 

 

உருளும் பணம் முன்னே!

பொன்னு விளையும் பூமி-1959

இசை: ரெட்டி

 

உருளும் பணம் முன்னே!

உலகம் அதன் பின்னே!

தெரிந்து நட கண்ணே!

திறமையுடனே!

 

உல்லாசமும் சல்லாபமும்

சொல்லாமலே தன்னால் வரும்!

எல்லோரும் நம்மைக் கொண்டாடவே

இல்லாத பெயர் எல்லாம் தரும்!

உள்ளதைக் கோட்டை விட ஆளிருக்கும்போது!

சில்லறைப் பஞ்சம் நம்ம கூட்டத்திற்கு ஏது?

கண்ணாலே ஜாடை காட்டு!

உன் கையைக் கொஞ்சம் நீட்டு!

உன் எண்ணம் போல இன்ப வாழ்வு வந்து சேரும்!

தள்ளாடும் கிழத் தாத்தாவுக்கும்

துள்ளாட்டம் போட ஆசை வரும்!

ஒய்யாரிகளின் நேசம் தரும்!

மெய்யான சுகவாசம் பெறும்!

கள்ளரை நல்லவரைப் போல அதுகாட்டும்!

கண்ணியம் உள்ளவரைக் கூட அது வாட்டும்!

என்னாளும் அதைத் தேடு!

உன் சொந்தமாக்கிப் போடு!

உன் எண்ணம்போல இன்பவாழ்வு வந்து சேருமே!

 

 

 

ஆசையைக் கொன்றுவிடு!

ஆடவந்த தெய்வம்-1960

இசை: K. V. மகாதேவன்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

 

ஆசையைக் கொன்றுவிடு!-இல்லையென்றால்

ஆவியைப் போக்கிவிடு!

பாசத்தை நீக்கிவிடு!-துன்பம் இல்லாப்

பாதையைக் காட்டிவிடு!
அந்தஸ்து பார்க்கும் கண்மூடி உலகம்!

அன்பையும் பார்க்காது!-அதன்

வஞ்சக நெஞ்சம் தெய்வீகக் காதலை

வாழவும் வைக்காது!
ஜாதியின் பேதம் சந்தர்ப்பவாதம்!

காதுக்குக் கேட்காது! காதலின்கீதம்

நாதமில்லாத வீணையும் ஆகி

வாழ்வது ஏன் இங்கு? வாழ்ந்தது போதும்!

வாழ்ந்தது போதும்! வாழ்ந்தது போதும்!

 

 

 

 

விந்தையிலும் பெரிய விந்தையடி

படிக்காத மேதை -1960

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: P. லீலா

 

விந்தையிலும் பெரிய விந்தையடி!-இது

சிந்திக்க முடியாத எங்குமே காணாத

(விந்தை)
 

செந்தமிழ்ப் பண்பாட்டின் சிகரத்திலே

சிறப்புடன் வாழும் இந்தக் குடும்ப நிலை!

(விந்தை)
 

பந்தபாசம் என்றால் படியென்ன விலையென்று

தந்தையைப் பிள்ளை கேட்கும் காலமன்றோ!-இதில்

அன்புடன் பெற்றவரின் அறுபதாம் ஆண்டுவிழா

கொண்டாடும் குடும்பம் இதைப்போல உண்டோ?

(விந்தை)
 

வந்தமருமகளை நிந்தனை செய்வதையே

வாடிக்கையாய்க் கொண்ட உலகினிலே

மலர்ந்த முகங்காட்டி மருமகளைப் போற்றி

மகளென்று பிறர் எண்ணும் வகையினிலே

பாராட்டி சீராட்டிப் பழகிடும் மாமியும்

பேறுகள் பதினாறும் பெற்ற இந்தக் குடும்பம்!

(விந்தை)

 

 

 

 

 

ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே

வண்ணக்கிளி-1959

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: P. சுசீலா & ஈஸ்வரி குழுவினர்

 

பெண்கள்: ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே-நம்மால்

ஆகாததில்லையென்று பாடுவோமே-நாம்

அழியாத புகழ் தன்னைத் தேடுவோமே-கற்பை

அணியாக நாம் என்றும் சூடுவோமே-என்றும்

                                                                                (ஆனந்தமாய்)
 

கண்ணகியின் மரபில் வந்த

கன்னியர்கள் என்பதை நாம்

எண்ணி எண்ணி இன்பம் கொள்வோமே!-பெண் குலத்தின்

பெருமை தன்னை எடுத்துச் சொல்வோமே!

கற்பெனும் தீயால்-பெரும்

அற்புதம் செய்தாள்-அந்தப்

பொற்கொடிபோல் வாழ்ந்திடுவோமே!-என்றும்

                                                                                (ஆனந்தமாய்)
 

ஆஹா…

அனுசூயை எனும் ஒரு பெண்ணாள்-அணையாத

கற்பென்னும் சுடர் வீசும் கண்ணாள்!

சிவனோடு ப்ரம்மாவை திருமாலை முன்னாள்

சிசுக்களாக்கி அமுதம் அளித்த பெருமை சொல்வோமே-என்றும்

                                                                                (ஆனந்தமாய்)

நாதனுயிர் காத்திடவே

ஆதவனை மறைத்துவிட்ட

மாதரசை மனதில் கொள்வோமே-நளாயினி

மகிமைதனை எடுத்துச் சொல்வோமே!

கற்பெனும் தீயால்-பெரும்

அற்புதம் செய்தாள்-அந்தப்

பொற்கொடிபோல் வாழ்ந்திடுவோமே!-என்றும்

(ஆனந்தமாய்)

 

 

 

வாழ்வு உயரவேண்டும்!

ராஜாம்பாள்-1951

இசை: ஞானமணி

 

வாழ்வு உயரவேண்டும்!-நாட்டின்

வளமும் பெருகவேண்டும்!

ஏழை எளியவர்க்கே!-உதவும்

எண்ணம் பரவ வேண்டும்!

 

பேத மகல வேண்டும்-மத

பித்தம் நீங்க வேண்டும்-பொல்லா

சூதும் வாதும் தொலைந்தே-தூய

ஜோதி துலங்க வேண்டும்!

 

மாதர் தம்மை யடிமை-செய்யும்

வழக்கம் ஒழிய வேண்டும்!

நீதி நிலவவேண்டும்!-எங்கும்

நேர்மை உலவ வேண்டும்!-இன்ப

(வாழ்வு)

 

பொல்லாத உலகத்திலே நல்லதுக்குக் காலமில்லே!

நான் சொல்லும் ரகசியம்-1959

இசை : G. ராமநாதன்

பாடியவர்: T. M. சௌந்தரராஜன்

 

பொல்லாத உலகத்திலே நல்லதுக்குக் காலமில்லே!

போலியெல்லாம் போடுதண்ணே கொண்டாட்டம்-இந்தப்

போக்கு மாற செலுத்த வேணும் கண்ணோட்டம்!

கள்ளர்களும் கயவர்களும்

கண்ணியவான் போர்வையிலே

கொள்ளையிட்டுப் பணத்தைச் சேத்துக் குவிப்பதா?

நல்ல மனம் உள்ளவங்க

சில்லறைகள் பார்வையிலே

நாணய மில்லாதவராய்த் தவிப்பதா?

(பொல்லாத)
வெள்ளைசள்ளையிருந்தாத்தான் மதிப்பதா?-அது

இல்லையின்னா காலில் போட்டு மிதிப்பதா?-இனி

இந்தநிலை மாறிடவே இன்ப நிலை நேர்ந்திடவே

ஒன்றுபட்டு உறுதியோடு உழைக்கணும்!

(பொல்லாத)
உள்ளபடி வயிறெரியும்.

உதடு மட்டும் பழம் சொரியும்

தில்லு முல்லு திருகு தாளக் கூட்டமே

பல்லைக் காட்டிக்கிட்டு

பாடிகார்டா சுத்திக் கிட்டு

குல்லாப் போட்டு செய்யுது ஆர்ப்பாட்டமே

(பொல்லாத)

மொள்ளே மாறிக் கும்பல் குணம் மாறணும்-அதன்

மூளையிலே சொறணை கொஞ்சம் ஏறணும்-அது

நல்லபடி நடந்திடணும்!

நம்ம நிலை உயர்ந்திடணும்

நல்லவங்க அதுக்கு நாளும் உழைக்கணும்!

(பொல்லாத)

 

 

 

 

திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்!

 

திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்!

திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்!

(திரு)

திருவிழா ஊருக் கெல்லாம் சிங்காரம்-நம்

திருநாட்டின் பெருமைக்கு இதுவேதான் ஆதாரம்!

(திரு)

“இல்லறமே நல்லறமாய் வாழுங்க”-என்ற

வள்ளுவரை வாசுகியைப் பாருங்க!

தெள்ளமுதாம் நீதிமொழி தன்னையே-நமக்கு

அள்ளித் தந்த பாட்டி இந்த ஔவையே!

(திரு)

சதிபதிகள் இணைந்தது சம்சாரமே!-அதில்

தனிமை வந்தால் இன்பநிலை மாறுமே!-எனும்

தத்துவத்தைச் சொன்ன வேதநாயகன்!-சொல்லின்

நித்தியத்தை உணரவேணும் யாருமே!

(திரு)

மனமுள்ள மறுதாரம்-1958

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: P. சுசிலா

ஜிங்காலே ஜிங்காலே ஜிங்காலே

ஜிங்காலே ஜிங்காலே ஜிங்காலே

(ஜிங்)

ஆண் } அத்திப்பயத்தை பாக்கப் பாக்க அயவுதான்! ::::::::::::ரொம்பஅயவுதான்!

பெண்} புட்டுப் பாத்தா உள்ளே அல்லாம் புயுவுதான்!

அல்லாம் புயுவுதான்!

ஆண் : சுத்த மிண்ணு சொல்லுறது

சுத்திக்கிற துணியிலில்லே!

தோலு நெறத்திலில்லே!

காசு பணத்திலில்லே!

பெண்: மெத்தப் படிச்சவன் பேச்சிலில்லே!

மேனாமினுக்கிப் பூச்சிலில்லே!

மத்தவனை மதிக்கத் தெரிஞ்ச

மனசுலதான் இருக்கு சாமி!

(ஜிங்)

ஆண் : நாலு பேரு மத்தியிலே நாகரீக சாயப்பூச்சு!

நல்லவங்க மாதிரியா நாணயமான பேச்சு!

பெண் : களவாணி கூட்டத்துக்கு ஏஞ்சாமி வாய்வீச்சு!

காலம் இப்போ சத்தியமா ரொம்ப ரொம்ப கெட்டுப்போச்சு!

(ஜிங்)

டில்லி மாப்பிள்ளை-1968

இசை: K. V. மகாதேவன்

இருந்தும் இல்லாதவரே- எல்லாம்

இருந்தும் இல்லாதவரே-அவர்கள்

இருப்பது உண்மையில் பெருந்தவறே-உலகில் (இருந்)

செல்வம் இருந்தென்ன? சிறப்புகள் இருந்தென்ன?

கள்ளமில்லா உள்ளம் இல்லாதவர் எல்லாம் (இருந்)

மணக்கும் ஜாதி மல்லி மலரைத் தள்ளி-கண்ணைப்

பறிக்கும் காகிதப்பூ வாங்குவோர்-வெளி

அழகில் ஆசை கொண்டு ஏங்குவோர்

மலர் விட்டு மலர் தாவி மது வுண்ணும் வண்டாகி

மனநிலை தடுமாறி வாழ்ந்திடுவோர் எல்லாம் (இருந்)

கொங்கு நாட்டு தங்கம்-1961

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: P. சுசிலா

 

 

சமாதானமே தேவை

மருத நாட்டு வீரன்-1961

இசை : S. V. வெங்கட்ராமன்

பாடியவர்: T. M. சௌந்தரராஜன்

 

சமாதானமே தேவை …

அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை

அமைதியாக நாம் வாழ்ந்திடவே

அன்பும் அறமும் வளர்ந்திடவே

சமரசப் பாதை தோன்றிடவே

சாந்தியும் இன்பமும் சூழ்ந்திடவே

(சமாதான)
போட்டிப் பொறாமைகள் இல்லாத-ஒரு

புதிய சமுதாயம் உருவாக-புத்தர்

காட்டிய வழியில் நாம் போக-அவர்

கண்ட கனவுகள் நனவாக

(சமாதான)
கட்சி பேதங்கள் எதற்காக?-பல

கலகமும் பகையும் எதற்காக?

ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்!

ஒரே கட்சியாய் இருந்திடுவோம்!

(சமாதான)

வணக்கம் வணக்கம் ஐயா

மாடப்புறா-1962

இசை : K. V. மகாதேவன்

பாடியவர் : P. சுசிலா

 

பாட்டு

 

வணக்கம் வணக்கம் ஐயா, அம்மா உங்க அபயம்!

அணைக்கும் கையால் தள்ளாதீங்க இந்தச் சமயம்!

(வண)

வாயிருக்கு எங்களுக்கும் வயிறிருக்கு!

வாட்டுகின்ற பசிப்பிணி துயரிருக்கு!

வாழுவது உங்க கையில் தானிருக்கு!

(வண)

 

பற்றிப் படர வந்த பசுங்கொடியைப்

பந்தலே தள்ளுவதும் சரியா?

பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் குறைகளைப்

பெரிதாய்க் கொள்ளுவதும் முறையா?

(வண)

 

(கெஜல்)

அண்ட நிழல் தேடிவரும் நொண்டிகளை ஆலமரம்

அடித்தே விரட்டுவதும் உண்டோ?

வந்தவரை வாழ வைக்கும் வசதி படைத்தவங்க

தண்டனைகள் தருவதும் நன்றோ?

 

பாட்டு

 

கண்ணிருக்கு உங்களுக்குக் கருத்திருக்கு!

கையேந்தும் எங்கநிலை தெரிஞ்சிருக்கு!

கடவுளும் நீங்க தான் எங்களுக்கு!

(வண)

 

 

எங்குமே சுத்துவோம் இஷ்டம் போலே!

ஜமீன்தார்-1952

இசை : G. ராமநாதன்

பாடியவர் : ஜிக்கி

 

எங்குமே சுத்துவோம் இஷ்டம் போலே!

எங்களில் கட்சியால் சண்டை இல்லே!

ஏய்ப்பவரில்லே-ஏழையுமில்லே-ஏனென்றால் பணமில்லே!           (எங்)
 

தங்கவோ ஓரிடம் சொந்தமும் இல்லே !

சட்டமும் திட்டமும் எங்க கூட்டத்துக்கில்லே!

ஜாதியுமில்லே! பேதமுமில்லே! ஏனென்றால் படிப்பில்லே!           (எங்)
 

கூப்பனோ ரேஷனோ வாங்குவதில்லே!

காப்பியும் டிபனும் நாங்க கண்டதுமில்லே!

காய்ச்சலுமில்லே! டாக்டருமில்லே!

ஏனென்றால் அது இல்லே! எங்களுக்கு அது இல்லே!                     (எங்)
 

ஏட்டிலே எங்க பேர் காட்டவுமில்லே!

ஓட்டுகள் போடவும் இன்னும் உரிமையு மில்லே!

கேட்டதுமில்லே! தந்ததுமில்லே!

ஏனென்றால் பலனில்லே!                                                                  (எங்)

 

 

 

கோபம் உண்டானதே!

வாழவைத்த தெய்வம்-1959

இசை : K. V. மகாதேவன்

 

கெஜல்

 

அறிவிருந்தும் ஆராய்ந்து பாராமலே!

அன்பிருந்தும் அதன் குரலைக் கேளாமலே!

அணைகடந்த காட்டாற்று வெள்ளம் போலே!- மனதிலே!

ஆவேசம் கொண்டதாலே!
பாட்டு

கோபம் உண்டானதே! ஒன்றாய்க் கலந்தே

குலாவிய குடும்பம் ரெண்டானதே!-முன்

(கோபம்)
கெஜல்

தன்னலம் கண்களை மறைத்ததாலே

தன் தவறைத் தான் உணரா நிலையினாலே!

தனக்கு ஒருநீதி! பிறர்க்கு ஒருநீதி என்று

தர்மநெறி முறைதவறி நினைத்ததாலே!

 

பாட்டு

அமுதையும் நஞ்சாக வெறுத்திடுதே!

அன்பெனும் வலையை அறுத்திடுதே!

அமைதி இல்லாமல் அலைந்திடுதே!

இவையாவும் முருகா உன் லீலையா?

(கோபம்)

 

 

 

சுயநலம் பெரிதா?

யார் பையன்-1957

இசை : S, தட்சிணாமூர்த்தி

 

சுயநலம் பெரிதா?

பொது நலம் பெரிதா?-இந்த

சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா

மதி மயக்கத்திலே

வரும் தயக்கத்திலே

மனம் தடுமாறித் தவிக்கும் மனிதா-இந்த

சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா!

(சுயநலம்)
 

துன்பம் இல்லாமலே

இன்பம் உண்டாகுமா?

அன்பு இல்லாத

இதயம் இதயமா?

நல்ல தேமாங்கனி

என்றும் வேம்பாகுமா-இந்த

சொல்லின் உண்மை தன்னை எண்ணிப்பாரடா

(சுயநலம்)

நாம் தேடாமலே வந்த

செல்வம் என்றால்

அதைத் தெரு மீது

வீணே எறிவதா?

தென்றல் புயலாவதா?-உள்ளம்

தீயாவதா? இந்த

சொல்லின் உண்மை தன்னை எண்ணிப்பாரடா

(சுயநலம்)

 

 

 

ஜரிகைப் பட்டு சலசலக்க

சமயசஞ்சீவி – 1957

இசை : G. ராமநாதன்

 

ஜரிகைப் பட்டு சலசலக்க

சாந்துப் பொட்டு பளபளக்க

புருஷன் மனசு கிறுகிறுக்க

புதுக் குடித்தனம் நடத்தப் போற

கல்யாணப் பொண்ணே!

கல்யாணப் பொண்ணே!

கவனம் வையடி!
வரவுக் கேத்த செலவு பண்ணும்

வழி மொறையைத் தெரிஞ்சுக்கோ!

மாமன் மாமி நாத்தி மனம்

கோணாமலே நடந்துக்க

புருஷன் குணம் போற போக்கு

நடத்தைகளைப் புரிஞ்சுக்க!

புத்தியோடு நடந்து நல்ல

பேரும் புகழும் தேடிக்க!

(கல்)

அரச்சு மஞ்சளைக் கொழச்சு முகத்தின்

அழகு வளரப் பூசிக்க!

சிரிச்ச முகம் சீதேவியா

இனிக்க இனிக்கப் பேசிக்க!

அசட்டையாக இல்லாமலே

அலுவல்களைப் பார்த்துக்க!

அடக்க ஒடுக்கம் அன்பையும் உன்

அருந் துணையா சேத்துக்க!

(கல் )

கண்ணகி போல் பேரெடுக்க

கற்பு நெறியைக் காத்துக்க! ஆனா

கணவன் வேறு மாதவியைத்

தேடிக்காமெ பாத்துக்க!

பொண்ணு புள்ள ரெண்டு ஒண்ணை

சிக்கனமாப் பெத்துக்க!

புட்டிப் பாலு தய வில்லாமெ

கச்சிதமா வளர்த்துக்க!

(கல்)

 

 

வெள்ளிப் பணத்துக்கும்

சபாஷ் மாப்பிளே – 1961

இசை : K. V. மகாதேவன்

நான் சொல்லும் ரகசியம்

 

வெள்ளிப் பணத்துக்கும்

நல்ல குணத்துக்கும் வெகுதூரம்-இது

உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும்

ஒரு பாடம்!

(வெள்ளி)

 

பிள்ளை யெனும் பந்த பாசத்தைத் தள்ளிப்

பிரிந்தோடும்-தன்

உள்ளத்தை இரும்புப் பெட்டகமாக்கித்

தாள் போடும்!

இல்லாதவர் எவரான போதிலும்

எள்ளி நகையாடும்-இணை

இல்லாத அன்னை அன்புக்குக் கூட

சொல்லாமல் தடை போடும்

(வெள்ளி)
வெள்ளத்தினால் வரும் பள்ள மேடு போல்

செல்வம் வரும் போகும்-இதை

எள்ளளவேனும் எண்ணாத கஞ்சர்க்குத்

துன்பம் வரவாகும்!

கள்ள மில்லாத அன்புச் செல்வமே

என்றும் நிலையாகும்!

கஷ்டம் தீரும் கவலைகள் மாறும்

இன்பம் உருவாகும்!

(வெள்ளி)

 

 

கண் காணும் அதிசயம்

நான் சொல்லும் ரகசியம்-1959

இசை : G. ராமநாதன்

பாடியவர் : T. M. சௌந்தரராஜன்

 

கண் காணும் அதிசயம்

நன்றாக எண்ணிப் பாருங்க

இதை அவசியம்-அவசியம்-அவசியம்

(நான்)
 

உணவுக்கு ஒரு கும்பல்

போராடும் வேளையில்

பதவிக்கு ஒரு கும்பல்

போராட்டம் நடத்துது!

ஒய்வில்லா வேலையால்

உசுரை விடும் ஏழையின்

உழைப்பாலே ஒரு கும்பல்

உல்லாசம் தேடுது!

(நான்)
கல்யாணம் செய்யவே

சிங்காரப் பந்தலும்

கச்சேரி சதுராட்டம்

ஊர்வலமும் வேணுமா?-இவை

இல்லாமல் எவரேனும்

கல்யாணம் பண்ணினால்

இன்பசுகம் பிள்ளை குட்டி

இல்லாமல் போகுமா!

(நான்)

 

தங்க நகை வைர நகை

சரஞ்சரமாய்த் தொங்கினால்

மங்காத அழகு வரும்

என்று எண்ணும் பெண்களே!

பங்கம் வரும் திருடர்களும்

பார்த்து விட்டால் இவைகளைப்

பறித்திடுவார் அப்பொழுது

கலங்காதோ கண்களே!

 

 

பார்க்காத புதுமைகளெல்லாம்

நான் சொல்லும் ரகசியம்-1959

இசை : G. ராமநாதன்

பாடியவர் : P. சுசிலா

 

பார்க்காத புதுமைகளெல்லாம்

கண்ணாரப் பாரடி பொம்மி!

கேட்காத சங்கதி யெல்லாம்

காதாரக் கேளடி பொம்மி!
ஆம்பளெ வந்து ஆடிப்பாடினா

அவனுக்கு பைசா கெடைக்காது!

அழகுப் பொம்பளெ ஆடிப்பாடினா

அதுக்குக் கெடைக்குது பணம் காசு!

அரும்பு மீசையில் கையைப் போடுது

அங்கே பாரு! ஒரு கேசு!

குறும்பாப் பாத்துப் பல்லை இளிக்குது

கூறு கெட்ட ஒரு முண்டாசு!

(பார்க்காத)
தெருவுக்குத் தெருவு சந்திக்கு சந்தி

டிங்கி அடிக்கிற ஒரு கூட்டம்!

இருக்கிற இருப்பெ பொழப்பையும் மறந்து

இங்கு செய்யுமாம் ஆர்ப்பாட்டம்

வரவுக்கு மிஞ்சி செலவுகள் பண்ணி

மஜா தேடுற ஒரு கூட்டம்

இரவு ராணிகள் வலையில் விழுந்து

ஏங்கி நிக்குமாம் குரங்காட்டம்!

(பார்க்காத)

பரபரப்பாக இருக்கிற சமயம்

பாக்கட் அடிப்பான் கில்லாடி!

இருக்கிற காசைப் பறி கொடுத்தவனோ

ஏங்கித் தவிப்பான் தள்ளாடி!

சுறு சுறுப்பாக இருக்கற இடத்தில்

தூங்கியே வழிவான் சோம்பேறி!

சொன்னதை எல்லாம் மனசுலேவச்சு

நடந்துக்க வேணும் அம்மாடி!

(பார்க்காத)

 

 

சாமி சாமி என்று ஊரை

இசை : K. V. மகாதேவன் –

பாடியவர் : T. M. சௌந்தரராஜன்

(தொகையறா)

 

சாமி சாமி என்று ஊரை ஏய்க்கின்ற-ஆ

சாமி ரொம்ப இந்த நாட்டிலே!-ஒரு

சாண் வயித்துக்காக ஆண்டவன் பேரையும்

சந்திக்கிழுக்கிறாங்க பாட்டிலே-ஏ சாமியோ!-நடு

சந்திக்கிழுக்கிறாங்க பாட்டிலே!

(சாமி)

 

தாடிசடைமுடி தண்டு கமண்டலம்

கொண்டவனெல்லோரும் சாமி!-நல்லாப்

பாடுபட விரும்பாத திருவோட்டுப்

பரதேசிப் பயல்களும் சாமி!

கூடுபொய் வீடுபொய் குடும்பம் பொய் எனப்பாடும்

கேடுகெட்டவன் ஒரு சாமி!

தன்குட்டு மறைய வேடம் கட்டிக் கடவுள் பெயர்

குரைக்கும் நாயும் ஒரு சாமி!-இப்படி

(சாமி)
கட்டின பெண்டாட்டிதனை விட்டுவிட்டு ஓடிவந்த

கையாலாகாதவனும் சாமி!

கடனைவாங்கித் திருப்பித்தரமுடியாத காரணத்தால்

காஷாயம் உடுத்தவனும் சாமி!

சுட்ட திருநீறு பூசித் துந்தனாவை மீட்டி வரும்

துடுக்கனும் கூட ஒரு சாமி!

விட்டெறிந்த எச்சிலையை வீதியில் பொறுக்கித்தின்னும்

கிறுக்கனும் கூட ஒரு சாமி! இப்படி

(சாமி)

 

 

 

ஆருக்குந் தெரியாமல் பஞ்சமா பாதகம்

ராஜராஜன்-1957

 

ஆருக்குந் தெரியாமல் பஞ்சமா பாதகம்

அஞ்சாமல் தினம் செய்து

ஊருக்கு நீதியை உபதேசம் செய்யும் –

உலுத்தப் பயலும் ஒரு சாமி!

ஆருக்கும் குடியல்லோம் அஞ்சோம் நமனை என்று

ஆர்ப்பாட்டம் செய்து

நேருக்குநேர் வெறும் நிழலைக் கண்டு நடுங்கும்

நீசப் பயலும் ஒரு சாமி!

 

கஞ்சாக் குடிப்பவனும் சாமி!-கடவுளைக்

கண்டதாய்க் கதைப்பவனும் சாமி!

காமியெல்லாங் கூட இங்கே சாமி!-பணம்சேர்க்கக்

கயிறு திரிப்பவனும் சாமி!

எத்தனெல்லாம் சித்தன்!

ஏமாறுபவன் பக்தன்!

ரோஹியெல்லாம் யோகி!

பைராகி பெரும் தியாகி!

 

 

பாடுபட்டுத் தேடிப் பணம் குவித்து

 

பாடுபட்டுத் தேடிப் பணம் குவித்து

மாடிமனை நிலபுலன்கள் வாங்கி வைத்து

வாழ்வதனால் சுகபோகம் வந்திடுமோ?

மாறாத மன நிறைவு தந்திடுமோ?

(பாட்டு)

இருப்பவர்கள் அனுபவிக்க

இருக்குது பல இன்பமே!-பணம்

இருப்பவர்கள் அனுபவிக்க

இருக்குது பல இன்பமே!

இதையுணர்ந்து அதை அறிந்து

சுகிக்க வேணும் என்றுமே!

(இருப்பவர்கள்)

(தொகையறா) .

தேவைக்கு மேல் பொருளைச் சேர்த்து வைத்துக் காப்பவரே!

ஆவிபோனபின் அதனால் என்ன பலன் சொல்வீரே!

(பாட்டு)

காலனும் வரும் முன்னே கண்ணிரண்டும் மூடுமுன்னே

வாலிபம் வாழ்வில் தோன்றி வான வில்லாய் மறையு முன்னே

வண்டாக ஆடிப்பாடி உலகிலே

(இருப்பவர்கள்)

(தொகையறா)

என் அங்க நிறத்திற்குத் தங்கமும் ஈடாமோ?

பொங்கும் விழிப்பார்வைக்குப் புதுவைரம் இணையாமோ?

குங்கும இதழுக்குச் செம்பவழம் நிகராமோ?

கோடானுகோடி பொருள் ஒரு கொஞ்சு மொழி சுவைதருமோ?

(பாட்டு)

செங்கரும்புச் சாறெடுத்து தேனுடனே அதைச் சேர்த்து

சிங்கார ரசமளிப்போம் தேடியாரும் வரும் போது!

திகட்டாத இனிமை தந்து வாழ்விலே!

(இருப்பவர்கள்)

நாலு வேலி நிலம்-1959

இசை : K.V. மகாதேவன்

பாடியவர்: P. சுசிலா

 

 

புதிய வாழ்வு பெறுவோம்!

அமரகவி-1952

இசை : G. ராமநாதன்

பாடியவர்: M.K. தியாகராஜபாகவதர்

புதிய வாழ்வு பெறுவோம்!-மதியினால்

விதியை வெல்ல முயல்வோம்!

கெதியை நொந்திடாமல்-காலக்

கெதியை நொந்திடாமல்

கடமையைச் செய்வோம்!                         (புதிய)

 

உழவைப் போற்றி வளர்ப்போம்!-சகல

உயிர்க்கும் உணவு அளிப்போம்!

பஞ்சப் பிணியைத் தொலைப்போம்!-சமதர்மப்

பாதை தன்னை வகுப்போம்!                    (புதிய)

 

எழுத்தறிவில்லார் என்பவரே-இங்கே

எவருமில்லாமல் செய்திடுவோம்!

பகுத்தறிவாளர் பாசறையாய்ப்

பாரில் நம் நாட்டை ஆக்கிடுவோம்!        (புதிய)

 

இந்த நாட்டின் எதிர்காலம்

இளைஞர்கள் கையில் இருப்பதாலே-அவர்களை

வளர்க்கும் மாதர் அறிவே வளர்ந்திடும்

மார்க்கம் காணச் செய்வோம்!       (புதிய)

கண்ணைப் போல தன்னைக் காக்கும்

நான் சொல்லும் ரகசியம்-1959

இசை: G. ராமநாதன்

வாழ்க நமது நாடு!

 

கண்ணைப் போல தன்னைக் காக்கும்

அன்னை தந்தையே-உணர்ந்து

சொன்ன சொல்லைப் போற்ற வேணும்:

தூய சிந்தையே-இதுவே அறிவுடமை!

ஒரு கன்னியின் கடமை! –

முன்னும் பின்னும் எண்ணிப் பார்த்து

நடந்திட வேண்டும்!

கண்ணை, காதை வாயை அடக்கும்

தன்மையும் வேண்டும்!

பொன்னில், பொருளில் ஆசையின்றி

இருந்திட வேண்டும்!

போது மென்ற மனதுடனே!

மகிழ்ந்திட வேண்டும்

இதுவே அறிவுடமை!

ஒரு கன்னியின் கடமை!

அடங்கி ஒடுங்கி அன்பு காட்டும்

பண்பில்லாது-பூணும்

அணி மணியால் வந்து சேரும்

அழகு நில்லாது!

தொடர்ந்து துன்பம் வந்த போது

துணிவுயில்லாது-தங்கள்

குடும்பப் பெயரைக் குலைக்கும் முறையில்

நடக்கக் கூடாது!

இதுவே அறிவுடமை!

ஒரு கன்னியின் கடமை!

 

புன்னகையைப் பொன்னகையாய்ப்

போற்றிட வேண்டும்-நல்ல

புத்தி சாலி என்னும் பெயரை

ஏற்றிட வேண்டும்

கண்ணகி போல் கற்பு நெறி

காத்திட வேண்டும்!

பணக்காரப் பெண்கள் கூட்டுறவை

விலக்கிட வேண்டும்!

இதுவே அறிவுடமை

ஒரு கன்னியின் கடமை

 

 

 

வளரும் அன்பினோடு!

சாரங்கதரா-1958

இசை: G. ராமநாதன்

பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

 

வளரும் அன்பினோடு!

சூழ்க என்றும் நல்லறங்கள்

என்று சொல்லிப் பாடு!

வானம் பெய்து நாட்டிலே

வளம் நிறைந்து வீட்டிலே

மாசில்லாத இன்பம் பொங்கி

மக்கள் வாழ்க்கை ஏட்டிலே

தேர்ந்த கல்வி ஞானம்

செல்வம் சேர வேணும்!

தேசமெங்கும் தேனும் பாலும்

பெருகி ஓட வேணும்

(வாழ்க)

 

சண்டையின்றி யாவரும்

ஒன்று பட்டு வாழுவோம்!

அண்டை நாட்டு மக்கள் தம்மை

அன்பினாலே வெல்லுவோம்!

நெஞ்சில் நேர்மை ஈரம்

அஞ்சிடாத வீரம்!

சொந்தங் கொண்டு வள்ளலாக

வாழவேணும் யாரும்!

(வாழ்க)

நீதியுள்ள ஆட்சியே

நிலவுகின்ற மாட்சியே

யாருங்காண நமது நாடு

ஆக வேணும் சாட்சியே!

ஏழை என்ற சொல்லே

இந்த நாட்டில் இல்லை

என்று யாரும் சொல்ல நாமும்

செய்ய வேணும் சேவையே!

(வாழ்க)

 

 

சிந்திக்கும் தன்மையற்றதாலா?

(தொகையறா)

சமய சஞ்சீவி-1957

இசை: G. ராமநாதன்

 

விளக்கினைப் பழம் என்று கருதியே ஏமாந்து

விட்டிலும் விழுவதேனோ? ஆண்களின்

வெளி வேஷப் பேச்சிலே மயங்கியே பெண்கள்

எனைப் போல் நலிவதேனோ?

 

(பாட்டு)

 

சிந்திக்கும் தன்மையற்றதாலா? அல்லது முன்

ஜென்மத்தில் செய்த வினையாலா? இன்பம் தனை

துன்பம் தொடரும் என்பதாலா? உலகமே

சூதின் வடிவம் என்பதாலா                                 (சிந்)

 

(தொகையறா)

 

சதி செய்யும் சுய நலக் கும்பலாய் ஆண்களும்

தரணியிலிருப்ப தேனோ?

தங்கள் மனம் போலவே தாய்க்குலம் தன்னையே

வீணாக வதைப்ப தேனோ?

 

(பாட்டு)

 

நம்பிடும் பெண்கள் உள்ளதாலா?-உலகிலே

நயவஞ்சகம் மலிந்ததாலா?

தெம்பில்லாப் பேதை என்பதாலா?-சிலரிங்கே

தெய்வமே இல்லை என்பதாலா?              (சிந்)

 

 

 

அழகான பொண்னு நான்!

அலிபாபாவும் 40 திருடர்களும்-1955

இசை : S. தட்சிணாமூர்த்தி

பாடியவர்: P. பானுமதி

 

அழகான பொண்னு நான்!

அதுக் கேத்த கண்ணுதான்

எங்கிட்ட இருப்ப தெல்லாம்

தன்மானம் ஒண்ணு தான்!                                            (அழகான)

 

ஈடில்லா காட்டு ரோஜா

இதெ நீங்க பாருங்க!

எவரேனும் பறிக்க வந்தா

குணமே தான் மாறுங்க!

முள்ளே தான் குத்துங்க!

ஓ…….அங்கொண்ணு சிரிக்கிது!

ஆந்தை போல் முழிக்கிது!

ஆட்டத்தை ரசிக்க வில்லை!

ஆளைத்தான் ரசிக்குது!                                                (அழகான)

 

இங்கொண்ணு என்னைப் பாத்து

கண் ஜாடை பண்ணுது!

ஏமாளிப் பொண்ணுயின்னு

ஏதேதோ எண்ணுது!

ஏதேதோ எண்ணுது!

 

ஓ … பெண்சாதியெத் தவிக்க விட்டு

பேயாட்டம் ஆடுது!

பித்தாகி என்னச் சுத்திக்

கைத் தாளம் போடுது!…                                       (அழகான)

 

 

 

 

 

தத்துவம்

பூவும் பொட்டும்-1968

இசை : கோவர்த்தனம்

பாடியவர் : T. M. சௌந்தரராஜன்

 

முதல் என்பது தொடக்கம்!

முடி வென்பது அடக்கம்!

விடை என்பது விளக்கம்!

விதி என்பது என்ன? என்ன? என்ன?⁠                                      (முதல்)

அறிவென்பது கோயில்!

அன்பென்பது தெய்வம்!

அறமென்பது வேதம்!

அவன் என்பது என்ன? என்ன? என்ன?⁠                                   (முதல்)

துயர் என்பது பாதி!

சுகம் என்பது மீதி!

இயல் பென்பது நீதி!

செயல் என்பது என்ன? என்ன? என்ன?⁠                                  (முதல்)

உறவென்பது பெருக்கல்!

பிரிவென்பது கழித்தல்!

வழி என்பது வகுத்தல்!

வாழ்வென்பது என்ன? என்ன? என்ன?⁠                        (முதல்)

 

 

 

 சமரசம் உலாவும் இடமே

ரம்பையின் காதல்-1956

இசை : T. R. பாப்பா

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

 

சமரசம் உலாவும் இடமே-நம்

வாழ்வில் காணா                                        ⁠ (சமரசம்)

 

ஜாதியில் மேலோரென்றும்

தாழ்ந்தவர் தீயோ ரென்றும் பேத மில்லாது

எல்லோரும் முடிவில் சேர்ந்திடுங்காடு!

தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு!

உலகினிலே இது தான்                              (நம் வாழ்)

 

ஆண்டியும் எங்கே? அரசனும் எங்கே?

அறிஞனும் எங்கே? அசடனும் எங்கே?

ஆவி போனபின் கூடுவாரிங்கே!

ஆகையினால் இது தான்!                          (நம் வாழ்)

 

சேவை செய்யும் தியாகி! சிருங்கார போகி!

ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி!

எல்லோரும் இங்கே உறங்குவதாலே

உண்மையிலே இது தான்(நம் வாழ்)

 

 

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை!

பாசவலை–1956

இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி

பாடியவர்: C. S. ஜெயராமன்

 

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை! அதை

அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை!                                        (அன்)

 

சொந்தமென்னும் உறவுமுறை நூலினாலே!-அருட்

சோதியான இறைவன் செய்த பின்னல் வேலை!                          (அன்)

 

தன்னை மறந்தாடும் சிலையே!

சங்கத் தமிழ் பாடும் கலையே!

சிலையே கலையால் நிலையே

குலைந்தாய் உண்மையிலே!

உளமிரண்டும் நாடி

உறவே கொண்டாடி

கனிந்து முதிர்ந்த காதல் தனை

நினைந்து மனம் உருகிடுது வாழ்வினிலே! ⁠                                   (அன்)

 

கொஞ்சு மொழிக் குழந்தைகளைப் பிரிந்த போது! நல்ல

குலவிளக்காம் மனைவிதன்னை இழந்தபோது!

தம்பி தன்னைப் பறிகொடுக்க நேர்ந்த போது!

சம்சாரம் எல்லாம் அழிந்த போது வாழ்வில் ஏது!                          (அன்)

 

 

ஆத்திலே தண்ணி வர

வண்ணக்கிளி-1959

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

 

ஆண்: ஆத்திலே தண்ணி வர

அதில் ஒருவன் மீன் பிடிக்க

காத்திருந்த கொக்கு அதைக்

கவ்விக்கொண்டு போவது ஏன்?

கண்ணம்மா! அதைப்

பாத்து அவன் ஏங்குவதேன்? சொல்லம்மா!

பாத்தி கட்டி நாத்து நட்டு

பலனெடுக்கும் நாளையிலே

பூத்ததெல்லாம் வேறொருவன்

பாத்தியமாய் போவது ஏன்? கண்ணம்மா! கலப்பை

புடிச்சவனும் தவிப்பது ஏன்? சொல்லம்மா!

பெண்: னன்னானே னானே னானே

னானே னன்னானே

னன்னானே னன்னானே னானே னன்னானே

ஆண்:பஞ்செடுத்து பதப்படுத்தி

பக்குவமாய் நூல் நூற்று

நெஞ்சொடிய ஆடை நெய்வோன்

கண்ணம்மா!-இங்கு

கந்தலுடை கட்டுவதேன்?

சொல்லம்மா!

காத்திருக்கும் அத்தை மவன்

கண் கலங்கி நிற்கையிலே

நேத்து வந்த ஒருவனுக்கு

மாத்து மாலை போடுவதேன்

கண்ணம்மா!-அவள்

நேத்திரத்தை பறிப்பது ஏன்?

சொல்லம்மா?

பெண்: ணன்னானே…..

ஆண்: ஏற்றத்தாழ்வும் ஏமாற்றும்

இவ்வுலகில் இருப்பது தான்

இத்தனைக்கும் காரணமாம்

கண்ணம்மா! இதை

எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா!                           (ஆத்தி)

 

 

பெண்: னன்னானே…

ஆண் : கண்ணம்மா! சொல்லம்மா!

கண்ணம்மா சொல்லம்மா!

கண்ணம்மா! வ…வ…வண்ணம்மா!

 

 

அடிக்கிற கைதான் அணைக்கும்

வண்ணக்கிளி-1959

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: திருச்சி லோகநாதன்

 

அடிக்கிற கைதான் அணைக்கும்

(வசனம்) ஏய்! பாடுடி!

அடிக்கிற கைதான் அணைக்கும்!

அணைக்கிற கைதான் அடிக்கும்!

இனிக்கிற வாழ்வே கசக்கும்

கசக்கிற வாழ்வே இனிக்கும்! –

(வசனம்) ம்! ஆடுடி                                                       (அடிக்கிற)

புயலுக்குப்பின்னே அமைதி!

வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி!

இருளுக்குப் பின் வரும் ஜோதி!

இதுதான் இயற்கை நியதி!

(வசனம்) பலே! (அடிக்கிற)

இறைக்கிற ஊற்றே சுரக்கும்-இடி

இடிக்கிற வானம் கொடுக்கும்!

விதைக்கிற விதைதான் முளைக்கும்

இதுதான் இயற்கை நியதி

(வசனம்) சபாஷ்! அஹஹ!                               (அடிக்கிற)

 

 

பிளாட்பாரம் மட்டமுன்னு எண்ணாதீங்க

தேடி வந்த செல்வம்

இசை:         டி. ஜி. லிங்கப்பா

பாடியவர : எஸ். சி. கிருஷ்ணன்

 

பிளாட்பாரம் மட்டமுன்னு எண்ணாதீங்க-சும்மா

பேச்சுக்குப் பேச்சு கேலி பண்ணாதீங்க!

ஆளுமேலே காருமோதி ஆஸ்பத்திரி போகாமே

அனுதினம் காப்பது பிளாட்பாரம்!

கூழுக்காக நாள் முழுதும் பாடுபடும் ஏழைகளின்

கூரையில்லா வீடு இந்த பிளாட்பாரம்!

சாதிமத பேதமின்றி ஏழை பணக்காரருக்கும்

சமத்துவம் கொடுப்பது பிளாட்பாரம்!

காசையெல்லாம் கோட்டைவிட்ட ஊதாரிச் சீமான்கள்!

கடைசியில் சேரும் இடம் பிளாட்பாரம்!                                         (பிளாட்)

 

காதல் கொண்ட ஆணும்பெண்ணும் மத்தவங்க காணாமே!

கண்ணாலே பேசும் இடம் பிளாட்பாரம்!-யாரும்

காலேஜில் படிக்காத பாடங்களைக் கற்றுத்தரும்

அனுபவப் பள்ளிக் கூடம் பிளாட்பாரம்! (பிளாட்)

கட்சியின் பெயராலே லட்சிய முழக்கமிட்டால்

உச்சியிலே ஏற்றுவதும் பிளாட்பாரம்!-பிறகு

கட்சிவிட்டு கட்சி மாறும் பச்சோந்திக் கும்பலைக்

காலைவாரி விடுவதும் பிளாட்பாரம்!

எளக்காரமாகவே பணக்காரர் ஏழைக்கு

இடுகின்ற செல்லப் பெயர் பிளாட்பாரம்! எவர்

எது சொன்ன போதிலும் அஞ்சாமல் கடமையை

எப்பொழுதும் செய்யுமிந்த பிளாட்பாரம்!

 

 

இன்பமெங்கே? இன்பமெங்கே?

மனமுள்ள மறுதாரம்-1958

இசை : K. V. மகாதேவன் –

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

 

தொகையறா

 

தூங்கையிலே வாங்குகிறமூச்சு-இது

சுழிமாறிப் போனாலும் போச்சு!-உளுத்த

மூங்கில் உடல் மேல்மினுக்குப் பூக்சு!-என்ற

மொழி என்றும் உண்மையான பேச்சு!

 

(பாட்டு)

 

இன்பமெங்கே? இன்பமெங்கே? என்றுதேடு!-அது

எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு!

இன்றிருப்போர் நாளையிங்கே

இருப்பதென்ன உண்மை!-இதை

எண்ணிடாமல் சேர்த்து வைத்துக்

காத்து என்ன நன்மை?

இருக்கும் வரை இன்பங்களை

அனுபவிக்கும் தன்மை!

இல்லையென்றால் வாழ்வினிலே

உனக்கு ஏது இனிமை? (இன்ப)

கனிரசமாம் மதுவருந்திக்

களிப்பதல்ல இன்பம்!

கணிகையரின் துணையினிலே

கிடைப்பதல்ல இன்பம்!

இணையில்லா மனையாளின்

வாய்மொழியே இன்பம்!-அவள்

இதழ் சிந்தும் புன்னகையே

அளவில்லாத இன்பம்! (இன்ப):

மாடி மனை கோடி பணம்

வாகனம் வீண் ஜம்பம்!

வாழ்வினிலே ஒருவனுக்குத்

தருவதல்ல இன்பம்!

மழலைமொழி வாயமுதம்

வழங்கும் பிள்ளைச் செல்வம்!-உன்

மார்மீது உதைப்பதிலே

கிடைப்பதுதான் இன்பம்!

 

 

 

என்னைத் தெரியலையா?

யாருக்கு சொந்தம்-1963

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: சந்திரபாபு

 

என்னைத் தெரியலையா?

இன்னும் புரியலையா?

குழந்தை போலே எம்மனசு-என்

வழியோ என்றும் ஒரு தினுசு! (என்னைத்)

அழகை ரசிப்பதில் கவிஞன் நான்!

அன்பு காட்டினால் அடிமை நான்!

பழகும் தன்மையில் பண்புள்ள தமிழன்!

பரந்த நோக்கம் உள்ளவன் நான்!⁠(என்னைத்)

காதல் பாதையில் கம்பன் மகன்!

கன்னி தான் இன்னும் கிடைக்கலே!

கவலை ஏதுமே இல்லாத மனிதன்

சிரிக்க வைப்பதில் வல்லவன் நான்! (என்னைத்)

அனுபவப் படிப்பில் முதிர்ந்தவன் நான்!

ஆசைத் துடிப்பிலே வாலிபன்!

என்னையறிந்தோர் எல்லோர்க்கும் நண்பன்!

இரக்க சிந்தை உள்ளவன் நான்!⁠ (என்னைத்)

 

 

மனித னெல்லாம் தெரிந்து கொண்டான்!

அழகுநிலா-1962

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

 

மனித னெல்லாம் தெரிந்து கொண்டான்!

வாழும் வகை புரிந்து கொண்டான்!

இருந்த போதும் மனிதனுக்கு

ஒன்றுமட்டும் புரியவில்லை –

மனிதனாக வாழமட்டும், மனிதனுக்குத் தெரியவில்லை

(மனிதனெல்லாம்)

 

இனிய குரலில் குயில் போலே

இசையும் அழகாய்ப் பாடுகிறான்!

எருதுகள் போலே வண்டிகளை

இழுத்துக்கொண்டு ஓடுகின்றான்

வனத்தில் வாழும் பறவைகள் போல்

வானில் பறந்து திரிகின்றான்

மனிதனாகவாழ மட்டும்

மனிதனுக்குத் தெரியவில்லை

(மனிதனெல்லாம்)

 

சாரமில்லா வாழ்க்கையிலே

சக்கரம் போலே சுழலுகிறான்!

ஈரமண்ணால் பல உருவை

இறைவனைப் போலே படைக்கின்றான்!

நேரும் வளைவு நெளிவுகளை

நீக்கி ஒழுங்கு படுத்துகிறான்

மனிதனாக வாழமட்டும்

மனிதனுக்குத் தெரியவில்லை

(மனிதனெல்லாம்)

 

கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தைச்

சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்!

குள்ள நரிபோல் தந்திரத்தால் குடியைக் கெடுக்கப்

புரிந்து கொண்டான்!

வெள்ளிப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்கத்

தெரிந்து கொண்டான்!

மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை

(மனிதனெல்லாம்)

⁠ ⁠

 

 

பாலை ஊற்றிப் பாம்பை நாம்

 

மந்திரி குமாரி-1950
இசை : G. ராமநாதன்

பாடியவர்: T. M. சௌந்தரராஜன்

 

தொகையறா

 

உபகாரம் செய்தவர்க்கே அபகாரம் செய்ய எண்ணும்

முழு மோசக்காரன் தானே முடிவில் நாசமாவான்!

பாட்டு

அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே

எண்ணங்கொண்ட பாவிகள் மண்ணாய் போகநேருமே!

தொகையறா

வேஷங்கண்டு மயங்கியே வீணாக ஆசை கொண்டு

மோசமும் போன பின்னால் மனவேதனை

யடைவதாலே லாபமென்ன?

 

பாட்டு

 

பாலை ஊற்றிப் பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே

கடிக்கத்தான் வந்திடும் அதை அடிச்சே கொல்ல

நேர்ந்திடும்!

 

 

பிறப்பவர்கள் பலகோடி!

இசை: K. V. மகாதேவன்

 

பிறப்பவர்கள் பலகோடி!

இறப்பவர்கள் பலகோடி!

இறப்பில்லாமல் என்றும் வாழ

தியாகமே உயிர்நாடி!

புரட்சி எனும் விதைவிதைத்து

பொது நலமென்னும் பயிர்வளர்த்து

அடக்கு முறைக்கும் ஆளாவோர்

அடையும் பரிசும் இதுதானோ?

மக்கள் வாழ்வை முன்னேற்ற

மங்கையர் கற்பைக் காப்பாற்ற

நித்தம் உழைக்கும் உத்தமரின்

நிலையும் உலகில் இதுதானோ?

கொந்தளிக்கும் கடல் அலைபோல்

நெஞ்சமெல்லாம் குமுறுதடா!

சொந்த உயிர் பிரிவது போல்

இந்த நாடே துடிக்குதடா!

வீரக்கனல்-1960

 

 

 

ஆடுவதும் பாடுவதும் காசுக்கு!

அலிபாபாவும் 40 திருடர்களும்-1955

இசை : S. தட்சிணாமூர்த்தி

பாடியவர்: ஜிக்கி & குழுவினர்

 

நாம-ஆடுவதும் பாடுவதும் காசுக்கு!

பலர்-ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு!

சிலர்-கூடுவதும் குழைவதும் காசுக்கு! –

காசுக்கு… … காசுக்கு!                                                     (நாம ஆடு).
பல்லு-இல்லாத வெள்ளைத் தாடி-மாப்பிள்ளை தேடி-தம்

செல்லப் பெண்ணைத் தந்திடுவோர் கோடானுகோடி! எல்லாம் :பெட்டியிலே இருக்கும் காசுக்கு-                                 (நாம ஆடு).
பணம்-படைத்தவரின் சொல்லைக் கேட்டு

அதுக்குத் தாளம் போட்டு-பலர்

பல்லிளித்துப் பாடிடுவார் பின் பாட்டு

எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு!                  (நாம ஆடு),

 

 

 

 

பெண்ணெனும் மாயப்பேயாம்-

மாயாவதி-1949

இசை : G. ராமநாதன்

பாடியவர்: T. R. மகாலிங்கம்

 

பெண்ணெனும் மாயப்பேயாம்-பொய்மாதரை

என் மனம் நாடுவேனோ-அழகினால் உலகமே அழியும்

மின் விழிப்பார்வை நோயால்-மெய்யறிவு

தன் நிலை மாறுவேனோ?

கன்னியர் காமத்தீயாம்-பொய்க்கானலில்

வெந்துடல் வாடுவேனோ?

புன் மொழி மாதை நானே-எண்ணியே

பொய் வழி சேருவேனோ?

பெண்களைப் பேணுவார்தாம்-பின்னாளிலே

விண்ணினைக் காணுவாரோ?

உண்பதோ காயை வீணே!-இங்கெவரும்

உண்ணுவார் தீங்கனியே!

அண்ணலைப் பாடுவேனே-மெய்ப்பேரின்ப

நன்னிலை நாடுவேனே!

சம்புவின் நாமமதே பணிந்திட

பந்தமதே நீங்குமே!

 

 

 

ஏ மனிதா! எங்கே ஓடுகிறாய்?

குமாஸ்தா-1953

⁠இசை: C. பாண்டுரங்கன்

 

உள்ளம்: ஏ மனிதா! எங்கே ஓடுகிறாய்?……..நீ
எங்கே ஓடுகிறாய்?
வறுமை இருளால் வழி தடுமாறி
மதிமயங்கி குருடனைப் போலே! எங்கே
ஓடுகிறாய்?

உருவம் : வறுமையின் உருவம்! பூமிக்கு பாரம்!
வாழ்ந்தென்ன சாரம்! தீராவி சாரம்!

குழந்தை: (எங்கே அப்பா)

உள்ளம் : ஊழ்வினைப் பயனை வென்ற தாரடா?
உன் நிழல் உன்னை பிரிந்திடுமோடா?

குழந்தை: (பிள்ளை யாரப்பா)

உருவம் :மண்ணில் பிறந்த மனித பொம்மை நாம்
மண்ணுடன் மண்ணாய் கலப்போம் ஒரு நாள்

குழந்தை: (பூஜை செய்யணும் அப்பா)

உருவம் :நாளும் கிழமையும் நலிந்தவர்க் கேது?
நலம் பெற உலகில் மரணமே தோது?

உள்ளம் : வாழ்வதற்கே தான் பிறந்தாய் உலகில்?

உருவம் : வாழ்வ தெவ்விதம் எந்தன் நிலையில்?

உள்ளம் : பொறுமை வேண்டும்!

உருவம் : பொறுத்தது போதும்!

 

உள்ளம் : உலகைப் பார்!

உருவம் : நரகம் தான்!
⁠⁠⁠⁠நரகம்! நரகம்! நரகம்! !

⁠⁠⁠⁠⁠⁠⁠⁠

 

 

 

சந்தேகம் தீராத வியாதி

தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை-1959

இசை: K. V. மகாதேவன்

 

சந்தேகம் தீராத வியாதி-அது
வந்தாலே தடுமாறும் அறிவென்னும்-ஜோதி!

(சந்)

சிந்தித்துப் பார்க்க விடாது-யாரையும்
நிந்தித்துப் பழிபேச அது தயங்காது! (சந்)

 

தான் பெற்ற பிள்ளையைத் தாயாரின் உள்ளமே
தவறாக எண்ண வழி செய்யுமே!

காணாத ஏதேதோ கற்பனைகள் காட்டுமே!
வீணாக முன் கோப மூட்டுமே!

தேன் சொட்டும் வாக்கையே விஷமாக மாற்றுமே!
தீயாகப் பிறர் நெஞ்சை வாட்டுமே!

தெளிவான மனதிலும் குழப்பம் உண்டாக்குமே!
திசை மாறித் திண்டாட வைக்குமே! (சந்)

 

 

 

நீயும் நானும் ஒன்று

கொடுத்து வைத்தவள்-1963

பாடியவர் : P. சுசிலா

இசை : K. V. மகாதேவன்

 

நீயும் நானும் ஒன்று-ஒரு

நிலையில் பார்த்தால் இன்று! (நீயும்)

 

அழகை உனக்கு கொடுத்த இறைவன்

அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான்!

விழியை எனக்கு கொடுத்த இறைவன்

வழியை காட்ட மறுத்து விட்டான்!                               (நீயும்)

 

எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம்

என்பதுனக்கும் தெரிய வில்லை!

எதற்குப் பிறந்தோம் எதற்கு வளர்ந்தோம்

என்ப தெனக்கும் புரியவில்லை!                                  (நீயும்)

 

உறவுமில்லை பகையுமில்லை

உயர்வும் தாழ்வும் உனக்கில்லை!

இரவுமில்லை பகலுமில்லை

எதுவும் உலகில் எனக்கில்லை!                                     (நீயும்)

 

 

யாருக்குத் தீங்கு செய்தேன்?

பாசவலை-1959

இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி

பாடியவர்: C. S. ஜெயராம்

 

(தொகையறா)

 

யாருக்குத் தீங்கு செய்தேன்?

யார் குடியைக் கெடுத்தேன்?

யார் பொருளை அபகரித்தேன்?

சீரோடு வாழ்ந்த என்னை

வேரோடு அழித்தது ஏன்?

தெய்வமே! இது நீதியா?

 

(பாட்டு)

 

கண்ணில்லையோ? மனமில்லையோ?

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ?

கருணைக் கடல் என்பதெல்லாம் பொய்யோ?

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ?                      (கண்)

 

எண்ணமும் கனவாகி இடி மின்னல் மழையாகி

கண்களும் கண்ணீர் கடலானதே!

மங்கல வாழ்வும் பறிபோனதே!

துயர் சூழ்ந்த என் வாழ்வில் புயல் வீசலாமோ?

உயிரோடு எனை வைத்து வதைசெய்யலாமோ?                          (கண்)

 

என்னைப் படைத்ததும் ஏன்?

இன்பங் கொடுத்ததும் ஏன்?

இது போலே பாதியிலே தட்டிப் பறித்ததும் ஏன்?

அன்பை வளர்த்ததும் ஏன்?

ஆசையைத் தந்ததும் ஏன்?

துன்ப மெனும் நெருப்பாற்றில்

எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்?                                    (கண்)

 

செய்த பிழை என்ன?

தேகம் இருந்தென்ன?

உய்யும் வழி என்ன?

உனது தீர்ப் பென்ன?

 

 

எங்கே?…….. எங்கே?…….. நீ எங்கே?

பொன்னான வாழ்வு-1967

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: T. M. சௌந்தரராஜன் & ராஜேஸ்வரி

 

ராஜீ:எங்கே?…….. எங்கே?…….. நீ எங்கே?

குங்குமச் சிமிழே ! கோபுரவிளக்கே!

தங்கக் கலசமே! தாமரைப் பூவே!

(எங்கே)

 

திருமுகத்தின் அழகை நிலாதிருடிச் சென்றதோ?

செவ்விதழைக் கொவ்வைக் கனி கவ்விக் கொண்டதோ?

கருவிழிகள் புள்ளி மானைக் கலந்து கொண்டதோ? என்

கண்பட்டுத்தான் காலம் உன்னைக் கவர்ந்து சென்றதோ?

(எங்கே)

 

மழலை மொழியை கிளிகளுக்கு வழங்கி விட்டாயோ?

மண்ணை விட்டு விண்வெளியில் பறந்து விட்டாயோ?

நிழலைப்போல நேருவை நீ தொடர்ந்து விட்டாயோ?

நிம்மதியாய் அமரவாழ்வை அடைந்து விட்டாயோ?

(எங்கே)

 

சாந்தி:பூத்திருக்கும் ரோஜாப்பூவில் மணமில்லையா?அந்த

மணத்தைப் போல் உன்மனசுக்குள்ளே நானில்லையா?

நேருமாமா சொன்ன சொல்லும் நினைவில்லையா? உன்

நேரிலேதான் நானிருக்கேன் தெரியலையா?

குங்குமச் சிமிழும் கோபுரவிளக்கும்

தங்கக் கலசமும் தாமரைப் பூவும்

இங்கே……இங்கே……நான் இங்கே!

 

 

 

 

 

இன்பமோ! துன்பமோ!

குமாஸ்தா-1953

இசை: C. N. பாண்டுரங்கன்

 

(தொகையறா)

 

இன்பமோ! துன்பமோ! எதுவுமே நில்லாதே!

இது… இயற்கை நியதி!
பாட்டு
நம் ஜீவியக் கூடு – களிமண் ஓடு!

ஆசையோ-மணல் வீடு!

நம்

ஆசையோ-மணல் வீடு!

சுக வாழ்வு தான் நாடுவோம்!

துயர் சூழ்ந்து நாம் வாடுவோம்!

(நம் ஜீவி)
தவறுகள் அதிகம் செய்வோம்!

தலை விதியென நாம் கொள்வோம்!

சொல்லும்

தைரியம் இழந்து வீணே-

நாம்

சமுக அடிமைகள் ஆவோம்.

(நம் ஜீவி)

 

தூற்றிடும் உலகமே-நமைப்

போற்றுதல் சகஜமே!-மனம்

சோராதே எதிலுமே!

தோல்வி கண்டு அதை எண்ணி வீணிலே

சோக பிம்பம் ஆகாதே!

மனமே நோகாதே! காலம்

மாறும் மறவாதே!

 

 

 

 

இறந்த கால வாழ்வை எண்ணி ஏங்காதே!

ஆசை அண்ணா அருமைத்தம்பி-1955
இசை: K. V. மகாதேவன்

 

இறந்த கால வாழ்வை எண்ணி ஏங்காதே!

எதிர்கால இன்ப வாழ்வை உதறித்தள்ளாதே-மனமே.

(இறந்த)

 

பறந்து போகும் வானம்பாடி ஜோடி பார்!-அவை

பாடும் இனிய காதல்கீதம் தன்னைக்கேள்!-மனமே

(இறந்த)

 

அறுந்து போன பின்னும் அந்த யாழிலே!-புதிய

நரம்பை மாட்டி நாதம் சேர்ப்பதில்லையா?

சரிந்து போன வீட்டை இந்த உலகிலே-புயலால்

சரிந்து போன வீட்டை இந்த உலகிலே-மீண்டும்

பழுது பார்த்துக் குடியிருப்பதில்லையா?- மனமே

(இறந்த)

 

பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே-மண்ணில்

பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே!-இதை

மறந்து வீணில் வருந்தி என்ன லாபமே!

நிறைந்த துன்பம் நீங்கி வாழ்வில் இன்பமே!

சிறந்து வாழும் வழியைத் தேட வேணுமே!-மனமே

(இறந்த)

 

 

 

சஞ்சலம் தீர்க்கும் மருந்து

பிறந்த நாள்-1962

இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்  ⁠⁠

 

உம்…. சாவு….சாவு….

சஞ்சலம் தீர்க்கும் மருந்து-அது

சாந்தியும் நிம்மதியும் தரும் விருந்து!

பஞ்சம் பசிப்பிணியால் தவிப்பவர்க்கு-இனி

அஞ்சேல் என அபயம் அளிக்கும்!

நெஞ்சத் துயர் சுமையால் துடிப்பவர்க்கு-அது

நீங்காத அமைதியைக் கொடுக்கும்.                           (சஞ்சலம்)
சாவின் மடியில் தான் கவலையில்லை- செத்தும்

சாகாமல் வாழும் இந்த நிலமையில்லை!

வாழ்வுமில்லை-சாவில் தாழ்வுமில்லை!

நானுமில்லை-அங்கே நீயுமில்லை-!                            (சஞ்சலம்)

 

அழுக்கு…….அழுக்கு……

உள்ளே அழுக்கிருக்க

வெளியழுக்கை விலக்க

நினைப்பது ஏன் மட நெஞ்சமே-உற்று

நினைத்துப் பார் நீ இதைக் கொஞ்சமே!

குள்ள நரித்தனக் கள்ளம் கபடங்கள்

உள்ளத்தில் ஒரு கோடியுண்டு-அதை

வெள்ளைத்துணியாலும் வெல்லம் போல்சொல்லாலும்

மூடி மறைப்பவர்கள் உண்டு-அந்த

மனிதர் அழுக்கை எண்ணிப்பாரு-அதை

அகற்ற நல்லவழி கூறு! –

இந்த

சிக்கை அறுத்து விட முடியும்-அந்த

சிக்கை யாரால் அறுக்க முடியும்?

பக்குவம் அடையாத பாழ் மனம் தன்னையே

பாசக் கொடியும் பின்னிப் பற்றி படருதே!

மக்கள் மனைவி சொந்தம்!

மாதா பிதாவின் சொந்தம்!

திக்கித் திணறி நெஞ்சைத்

திண்டாடச் செய்யுதே-அந்த

சிக்கையாரால் அறுக்க முடியும்?

 

 

 

காசு பணம் செலவழித்து கல்லோடு

பெரிய கோயில்-1958

இசை : K. V. மகாதேவன்

பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்

 

காசு பணம் செலவழித்து கல்லோடு மண்சேர்த்து

ஆசையினால் மனிதன் அமைப்பதெல்லாம் கலைக்கோயில்!

மாசில்லா அன்பின் வடிவாக ஆண்டவன்

காசினியிலே படைத்த கண்கண்ட திருக்கோயில்!

ஈன்று வளர்த்து இரவு பகல் கண்விழித்து

ஈயெறும்பு மொய்க்காமல் இன்னல் பல சுமந்து

பாலூட்டி தாலாட்டி பரிவோடு ஆளாக்கி

வாழவைக்கும் தியாகியாம் மாதாவே பெரியகோவில்!

பெரியகோயில் என்றே உலகினில் எந்நாளும்

பேர்பெற்று விளங்கும் கோயில்!

அரியகோயில் ஜாதிமத பேதமின்றியே

அனைவர்க்கும் உரிய கோயில்!

தருமநெறி இதுவென்று நமக்கெல்லாம் உணர்த்தியே

சன்மார்க்கம் வளர்க்கும் கோயில்!

தாயெனும் தூய திருக்கோயிலைப் போற்றி

வாயார வாழ்த்துவமே!

 

 

 

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா.

நீலமலைத் திருடன்-1957

  1. V. மகாதேவன்
    பாடியவர்: T. M. சௌந்தரராஜன்

 

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா.

தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!….(சத்)

 

(பாட்டு)

 

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா

தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!…..

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே-உன்னை

இடற வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே!

அத்தனையும் தாண்டிக் காலை முன் வையடா!-நீ

அஞ்சாமல் கடமையிலே கண் வையடா!                              (சத்)
குள்ளநரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்!

நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும்!

எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா-அவற்றை

எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா!…                    (சத்)

 

 

 

வலை வீசம்மா வலை வீசு!

பெரிய கோயில்-1958

இசை: K. V. மகாதேவன்

 

Both :வலை வீசம்மா வலை வீசு!

வாற மீனுக்கு வலை வீசு!

பெண் :வளையல் ஓசை கேட்டா-சிலது

வந்திடும் முன்னாலே!

ஆண் :நிலையை மறந்து நிண்ணே-சிலது

மயங்கிடும் தன்னாலே!

அலையைப் போல நெளியும்-சிலது

ஆளைக் கண்டு ஒளியும்!

பெண் :ஆட்டங் காட்டி அலையும்!-சிலது

நோட்டம் பாக்க வளையும்!

பெண் :கண்ணுக்குத்தப்பி தூண்டிக்குத்தப்பி

திரியும் மீன்கள் பலவுண்டு!

ஆண் :கரையின் பக்கமா தலையைக் காட்டும்

கருக்கல் இருட்டைத் துணை கொண்டு!

காலம் நேரம் சமயம்-பாத்து

காலைக் கவ்விப் பிடிக்கும்!

பெண் : தேளைப் போல கடிக்கும்-சிலது

ஆளின் உயிரைக் குடிக்கும்!

இ சின்ன மீனுக பெரிய மீனுக்கு!

இரையாய்ப் போகும் அநியாயம்!

என்ன ஞாயம்? இனத்துக்கு இனத்தால்

ஏற்படலாமோ அபாயம்!

 

 

 

 

கொஞ்சும் மொழி பெண்களுக்கு

நீலமலைத் திருடன்-1957

இசை: K. V. மகாதேவன்

 

கொஞ்சும் மொழி பெண்களுக்கு

அஞ்சா நெஞ்சம் வேணுமடி!

வஞ்சகரை எதிர்த்திடவே

வாளும் ஏந்த வேணுமடி….                                   (கொஞ்)

 

மங்கம்மா பரம்பரையில் பிறந்தவரன்றோ?-நாம்

மானங் காக்க போர் புரிந்தால் அதிசயமுண்டோ?…..

மங்காத ஒளி விளக்காய் மாசுஇல்லா மாணிக்கமாங்

மண்மீது புகழுடனே வாழ்ந்திடவே இந்நாளில்          (கொஞ்)

 

வம்பு செய்யும் ஆணைக் கண்டு பதுங்கக்கூடாது.

அவன் வாலை ஒட்ட நறுக்கிடாமல் விடவும் கூடாது!

அம்பு விழி மங்கையர்கள் பொங்கி மட்டும் எழுந்து

விட்டால் அட்டகாசம் செய்பவர்கள் அடங்கிடுவார் தன்னாலே

(கொஞ்)
அல்லி அரசாணிமாலை படித்ததில்லையோ?.. அவள்

அர்ச்சுனனை அடக்கியதாய்க் கேட்டதில்லையோ?….

அடிமை கொள்ளும் ஆடவரின் கொடுமைகளை திருத்திடுவோம்;

அறிவின் திறமையினால் உலகையெல்லாம் ஆண்டிடுவோம்!

(கொஞ்)

நகைச்சுவை

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே

ராஜாராணி-1956
இசை : T.R.பாப்பா

பாடியவர்: கலைவாணர் N. S. கிருஷ்ணன்

 

சிரிப்பு…. …. …. … இதன்

சிறப்பை சீர்தூக்கி பார்ப்பது நமது பொறுப்பு!…

கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக்

காட்டும் கண்ணாடி சிரிப்பு-மனம்

கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக்

காட்டும் கண்ணாடி சிரிப்பு

 

இது

களைப்பை நீக்கி கவலையைப் போக்கி,

மூளைக்குத் தரும் சுறு சுறுப்பு ….

துன்ப வாழ்விலும் இன்பம் காணும்

விந்தை புரிவது சிரிப்பு ! இதைத்

துணையாய்க் கொள்ளும் மக்களின் முகத்தில்

துலங்கிடும் தனி செழிப்பு !

 

பாதையில் போகும் பெண்ணைப் பார்த்துப்

பல்லிளிப்பதும் ஒரு வகைச் சிரிப்பு-அதன்

பலனாய் உடனே பரிசாய் கிடைப்பது

காதறுந்த பழஞ் செருப்பு!

 

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே

சொந்தமான கையிருப்பு! வேறு

ஜீவ ராசிகள் செய்ய முடியாத

செயலாகும் இந்த சிரிப்பு !

இது …. அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு !….

இது …. அடங்கி நடப்பவன் அசட்டுச் சிரிப்பு !…

இது …. சதிகாரர்களின் சாகசச் சிரிப்பு !…

இது …. சங்கீதச் சிரிப்பு !

 

 

 

 

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும்

கைதி கண்ணாயிரம்

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: M. S. ராஜேஸ்வரி

 

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும்

திருமணமாம் ! – இரவில்

சோளத்தட்டை பல்லாக்கிலே

ஊர் வலமாம் !
நொண்டிக்காலு நண்டுப் பொண்ணு

நாட்டியமாம் !

நுரைத் தவளை மேளதாள

வாத்தியமாம்!

தொண்டையில்லாக் கோட்டானும்

சுதியை விட்டு பாடிச்சாம் !

கண்சிமிட்டி மின்மினியும்

காந்தலைட்டு போட்டுச்சாம் !
நஞ்ச வயல் சேறு அங்கே

சந்தனமாம்!

நத்தாங் கூட்டுத் தண்ணிரே

பன்னீராம் !

புஞ்சைக் காட்டுக் குருவித் தழை

போட்டுக் கொள்ள வெத்திலையாம் !

வந்திருந்த கும்பலுக்கு

சோறுமட்டும் பத்தலையாம் !

 

 

 

 

வளையல்-அம்மா! வளையல்!

ஆசை-1956

இசை : T.R.பாப்பா
பாடியவர்கள்: N. S. கிருஷ்ணன், A. M. ராஜா

 

சேகர் : வளையல்-அம்மா! வளையல்!

ஜக்கன் : வளையல்! அம்மா! வளையல்!

வளைசல் நெளிசல் ஒடசல் இல்லா வளையல்:

சேகர் : பளபளப்பான பம்பாய் வளையல்

இருக்குது பலதினுசு! -கைவசம்

இருக்குது பலதினுக!

ஜக்கன் : புது பாஷன் பூனா வளையல் இதுக்கு

எங்கும் தனிமவுசு !-எப்போதும்

எங்கும் தனிமவுசு!

சேகர் : வழவழப்பான கைகளுக்கேத்த

வங்கிரகம் புதுசு!-இந்த

வங்கிரகம் புதுசு!

ஜக்கன் : இதை ….

வாங்கிப் போட்டுக்கும் அம்மாமாருக்கு

வந்து சேரும் சொகுசு!-தேடி

வந்து சேரும் சொகுசு!

 

(வேறு நடை)

ஜக்கன் : புள்ளைக்குட்டி பெத்தெடுத்த

பொம்பளைங்க கூட இதை

போட்டுக்கிட்டா வயசு தெரியாது!

சேகர் : பணப் ….

புழக்கமில்லா ஏழைகளும்

சல்லுசாக வாங்கும் நகை

பூமியிலே வேறு கிடையாது!

ஜக்கன்: கள்ளத்தனமாக இரு காதலர்கள் பேசும்போது

எள்ளளவு ஓசையும் செய்யாது !-இது

எள்ளளவு ஓசையும் செய்யாது!

சேகர் : கப்பலேறி இங்குவந்த ரப்பர் வளைஇது எந்தக்

காரணத்தினாலும் உடையாது !-எந்தக்

காரணத்தினாலும் உடையாது !

(வேறு நடை)

செகப்புவளையல் கறுத்த கையில்

ஜிலு ஜிலுன்னு ஜொலிக்கும் !

கருப்பு வளையல் செவந்த கையின்

மதிப்பை அதிகமாக்கும் !

ஜக்கன்: கனத்த உடம்பு பெண்களுக்கு

காரு வளையல் இருக்கு !

கடகம் இது தலையணையா

உதவி செய்யும் நமக்கு !

(வேறு நடை)

சேகர் : பொன்னைப் போலவே மின்னும் கண்ணாடி

வளையல் ரொம்ப ஜோரு!-இந்த

வளையல் ரொம்ப ஜோரு!

ஜக்கன்:கையில் போட்டு ஆட்டினா புருஷனும் மயங்கி

கேட்டதைத் தருவாரு!-நீ

கேட்டதைத் தருவாரு!

சேகர் : கன்னிப் பெண்களின் கண்ணைக் கவ்வும்

கங்கணக் காப்பைப் பாரு!-இந்த

கங்கணக் காப்பைப் பாரு!

ஜக்கன்: இது

கையில் ஏறினா கல்யாண மாப்பிள்ளை

வீடு தேடி வருவாரு!-உன்

வீடு தேடி வருவாரு!

 

 

 

 

சீனத்து ரவிக்கை மேலே

முல்லைவனம்-1955

 

ஆண் : சீனத்து ரவிக்கை மேலே

சேலம் பட்டு சரிகைச் சேலே!

ஓரங் கிளிஞ்ச தென்னடி?-எங்குருவிக்காரி

உண்மையைச் சொல்லிப் போடடி!
பெண்: பானையை எறக்க நானும்

பரணை மேலே ஏறும் போது

ஆணி மாட்டிக் கிழிஞ்சி போச்சுடா!-எங்குருவிக்காரா

அவநம்பிக்கை கொள்ள வேணாண்டா!
ஆண் : மாலை வெயில் டாலடிக்கும்

மாம்பழக்கன்ன நிறம்

மாறிச் சிவந்த தென்னடி?-எங்குருவிக்காரி

மர்மம் விளங்கச் சொல்லடி!
பெண்:மாலையிட்ட மம்முதனே!

காலையிலே உன்னுடைய

வாண்டுப் பயல் கடிச்சிப் போட்டாண்டா!-எங்குருவிக்காரா

தாண்டியே குதிக்க வேணாண்டா!
ஆண் : சீவி சிணுக்கெடுத்து

சிங்காரிச்சு பூவும் வச்சு

கோயிலுக்குத் தானே போனே?-எங்குருவிக்காரி

கூந்தல் கலைஞ்சதென்னடி?

பெண்: கோயிலுக்கு போயிநானும்

கும்பிட்டதும் என் மேலே

சாமி வந்து ஆடுனதாலே!-எங்குருவிக்காரா

தலையும் கலைஞ்சு போச்சுடா!

 

ஆண் :நீ கைவீசிப் போகையிலே கலகலண்ணு ஒசையிடும்!

கண்ணாடி வளையல் பூராவும்!-எங்குருவிக்காரி

ஒண்ணில்லாம ஒடைஞ்ச தென்னடி?

 

பெண்:நான் பொய் பேசப் போறதில்லே!-மச்சான்

ஒரு புத்தியில்லாகாலிப்பயல்

கையைப் புடிச்சு இழுத்ததால்!-எங்குருவிக்காரா

கலகத்துல ஒடைஞ்சு போச்சுடா!

 

ஆண் :ஆங்! அப்படியா! அவன் யாரு?

அவன் என்ன? அவன் எங்கே?

நீ காட்டு! நான் போட்டு!-சும்மா

கும்தளாங்கு குமுர்தகுப்பா!

ஷிங் ஷிணாகி டபுக்கு டப்பா!

குத்து! ஒருவெட்டு! ஒரு தட்டு!

ஆ ஹய்! ஆஹய்! ஆஹய்!

 

 

 

 

அந்தி சாயிற நேரம்!

மந்திரிகுமாரி-1950  

இசை : G. ராமநாதன்

பாடியவர் : T. M. சௌந்தரராஜன் குழுவினர்.

 

அந்தி சாயிற நேரம்!

மந்தாரைச் செடியோரம்!-ஒரு

அம்மாவைப் பார்த்து-ஐயா

அடிச்சாராம் கண்ணு-அவ

சிரிச்சாளாம் பொண்ணு!
கொக்கர கொக்கர கொக்கரகோன்னு

குயிலைப் போல பாடிடுவா!

கொக்கரக்கோ! கொக்கரக்கோ!

கொக்கர கொக்கர கொக்கரக்கோ!
பல்லாக்கு போல நெளிஞ்சி ஆடி

பார்த்தவர் மனசை லாவிடுவா!

பப்பரபூ பப்பரபூ

பப்பர பப்பர பப்பரபூ!
தத்தித் தத்தி அன்னம் போலே

தாவியே நடையும் போட்டிடுவா!

டர்ரரடன் டர்ரரடன்

டர்ரர டர்ரர டர்ரரடன்!
பக்காப் பொண்ணு ஐயாமேலே

சொக்குப் பொடியும் தூவிட்டா!

தக்கிடஜம் தக்கிடஜம்

தக்கிட தக்கிட தக்கிடஜம்!

 

 

 

 

லாபமா? நஷ்டமா?

சதாரம்-1956

இசை: G. ராமநாதன்

 

ஒருவன் : லாபமா? நஷ்டமா?-நைனா

லாபமா? நஷ்டமா?

ராசாங்கம் நம்ம கையில் வந்ததாலே

நாட்டிலுள்ள மக்களுக்கு நம்மளாலே- (லாபமா)

சாலையிலே நிக்கும் மரம் சர்க்காரு வச்சமரம்

ஆளுமேலே சாஞ்சுதுனா ஆபத்து-அவன்

ஆவியது போகுமிண்ணு யூகிச்சு-நல்லா

வேரைக் கெல்லி மரத்தையெல்லாம்

வெட்டித் தள்ளி காயவச்சு

வித்து விடச் சொல்லி விட்டேன் காசுக்கு

வெறகு பஞ்சம் தீர நம்முடைய ஊருக்கு

நைனா-லாபமா?-நஷ்டமா?

இதனால்-லாபமா?-நஷ்டமா!
மற்றொருவன் : பழங் கொடுத்துப் பலன் கொடுக்கும்.

பல மரமும் போனா

நிழலும் ஏது பணமும் ஏது

லாபமேது நைனா!
ஒருவன் : சத்திரங்கள் இருப்பதாலே தண்ட சோத்து சாமிகளே

ஜாஸ்தியாகிப் போச்சு நம்ப நாட்டிலே-அதுக

சஞ்சரிக்க வேண்டியது காட்டிலே-அதனால்

இத்தினமே எங்குமுள்ள சத்திரத்தை இடிச்சு தள்ள

உத்தரவு போட்டு விட்டேன் நேருலே-எனைப் போல்

புத்திசாலி யாரு இந்த ஊரிலே?

நைனா-லாபமா-நஷ்டமா?

இதனால்-லாபமா-நஷ்டமா?

இடிச்சுத் தள்ள ஏகப்பட்ட செலவு ஆகும் போது

இருப்ப தெல்லாம் கறைஞ்சு போகும் லாபமேமிலேது?

சம்பளமும் வாங்கிக் கிட்டு கிம்பளமும் பெத்துக்கிட்டு

சட்ட திட்டம் போடும் அதிகாரிங்க-தம்மைத்

தள்ளிப் போட்டேன் வேலை விட்டு நானுங்க-இனி

சம்பளமும் மிச்சம் பல வம்புகளும் மிச்சம்-நம்ப

சனங்களுக்கும் இல்லை ஏதும் சங்கடம்-மனசில்

சந்தோஷம் தன்னாலே பொங்கிடும்-

நைனா-லாபமா-நஷ்டமா?

இதனால்-லாபமா-நஷ்டமா?

 

 

 

சின்ன மீனைப் போட்டா தான்

தாயைப் போல பிள்ளை
நூலைப் போல சேலை-1959

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: ஜமுனாராணி

 

சின்ன மீனைப் போட்டா தான்-பெரிய மீனைப் புடிக்கலாம்.

சில்லரையை விட்டாத்தான்-பெருந் தொகையை

எடுக்கலாம்.                                                                           (சின்ன)

 

கண்ணும் கண்ணும் சேர்ந்தாத்தான்

காதல் பாடம் படிக்கலாம்!

காலம் நேரம் வந்தாத்தான் காரியத்தை முடிக்கலாம்.               (சின்ன)

அதட்டிப் பேசும் திறமிருந்தா எதிரி வாயை அடக்கலாம்
உருட்டும் புரட்டும் தெரிஞ்சிருந்தா உலகத்தையே

ஏய்க்கலாம்!

குதர்க்க புத்தி இருந்தாத்தான் குறுக்கு வழியில் போகலாம்!
குள்ள நரி குணமிருந்தா எதிலும் ஜெயிக்கலாம்                          (சின்ன)

வெள்ளை சள்ளை இருந்தாத்தான்

கள்ளத்தனத்தை மறைக்கலாம்!

நல்லவர் போல் நடிச்சாத் தான்

கொள்ளையிட்டுக் குவிக்கலாம்!

பல்லைக் காட்டத் தெரிஞ்சாத்தான்

பக்குவமாப் பொழைக்கலாம்:

கல்லு மனசு படைச் சிருந்தா அடுத்துக் கெடுக்கலாம்!

(சின்ன)

 

 

 

 

 

 

அரே நம்பள்கி

டில்லி மாப்பிள்ளை—1968

இசை: K. V. மகாதேவன்

பாடியவர் : T. M. சௌந்தரராஜன் & ராஜேஸ்வரி

 

அரே நம்பள்கி சொல்றதெ

நிம்பள்கி கேட்டுக்கோ !

தம்பிடிக்கி தம்பிடி

வட்டியும் போட்டுக்கோ ஸர்தானா-அது

இல்லாம ஈட்டிக்காரன் தர்வானா?

யாஹீம் யாஹீம் யாஹீம் !

சம்பள்தே வாங்கிக்கிணு

ஜல்சா ஏன் செய்யிறான் ?

பொம்பளங்கே ஊட்டுமேலே

பொங்கி அயப் பண்ணுறான் ஸர்தானா!- நீ

போவுறதும் நல்ல வயிதானா ?

காசுக்கு ஆசெப்பட்டு

ரேசுக்கு போவுறான் !

கையிலே உள்ளதை

உட்டுப் போட்டு சாவ்றான் ஸர்தானா-நீ

காசாயம் கட்டிக்கினா விடுவானா?

தாயிகிட்ட பத்து மாசம்
கடன் பட்டு வாயிறான் !
வாயும் வரெ பக்வான்கி
கடன் பட்டு சாயிறான் ஸர்தானா !-இவன்
வச்சிருக்கும் கடனெ தீர்ப்பானா ?
யாஹீம்…யாஹீம்…யாஹீம் !

 

 

 

 

மாமா மாமா பன்னாடெ !

பெற்ற மகனை விற்ற அன்னை-1958

இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி

 

தோழிகள்: ஆஹா ஹா…..

மாமா மாமா பன்னாடெ !

வாங்கி வாயேன் பொன்னாடெ

வரவு மட்டும் பொண்ணோடெ !

செலவு எல்லாம் ஒன்னோடெ !

ஜீவா : மாமா ! மாமா !

மோகனா : மாமா ! மாமா !

ஜீவா : ஆமாஞ்சாமி காரியம் முடிச்சி

அனுப்பி வைக்கிறோம் கையோட !

தோழிகள் : சீமான் ஒனக்கு வரிசை வம்மெ

சாமான் தாறோம் பையோடெ !

கோமாளிக்கும் கோமாளி ஏ

குலுக்கி மினுக்கும் ஏமாளி !

வரவு மட்டும் பொண்ணோடெ

செலவு எல்லாம் ஒன்னோடெ

ஜீவா : கத்தியெடுத்தாலே சத்தமில்லாமலே

தோழிகள் :பத்துப் பதினஞ்சு கத்திரிப் பிஞ்சுகளெ!

ஜீவா :பாஞ்சு பாஞ்சு வீரன் நீயும்

பதுங்கி ஒதுங்கி நறுக்குவே !

தோழிகள் :ஆஞ்சு ஒஞ்சு அசந்து போயி

விழுந்து எழுந்து பொறுக்குவே !

ஜீவா : செத்துக்கிடக்கிற கட்டு விரியனை

எட்டியிருந்தே நொறுக்குவே !

தோழிகள் : புத்தியிருக்குது கூஜா தூக்க !

பித்துயிருக்குது ராஜாவாக

வரவுமட்டும் பொண்ணோடெ

செலவு எல்லாம் ஒன்னோடெ!

மோகனா : மாப்பிள்ளையின்னா மாப்பிளைதான்

மண்ணாங்கட்டி மாப்பிளே !

ஜீவா : சாப்பிட்டுப் பிட்டு ஏப்பம் விட்டு

நல்லாத் தூங்குவே தோப்பிலே !

கூப்பிடும் போது கொறட்டை விடுவே! பொண்ணு

கூப்பிடும் போது கொறட்டை விடுவே !

ஆப்பிட்டுக்கிட்டு அவதிப்படுவே !

 

 

 

ஆடிவரும் பூங்கொடி

திலகம்-1960

இசை : சுதர்சனம்

பாடியவர் : ஜமுனா ராணி

 

உய்….. ஆடிவரும் பூங்கொடி அழகினிலே மனம் ஆடுதா ?தடுமாறுதா ?

ஆஹா அலைபோலே பின்னாலே அய்யாவின் மனம் போகுதா ? :ஆசைவலை பின்னி ஜாடைகளும் பண்ணி ஆடுதா ?-திண்டாடுதா ?

வாருங்க மைனர் சார்-உங்க வாழ்க்கையே ஜாலி தான் !

பாருங்க பர்ஸையே அது என்றுமே காலிதான் !

தனிக் கவர்ச்சியுண்டு இவர் face லே

அதில் காலம் ஓடுதுங்க ஓசிலே!

உய்……

உண்மையைச் சொன்னதை எண்ணி

எண்ணியே கோபமா? மனஸ்தாபமா ?

ஆட்டத்தில் நாட்டமா ? ஆள் மீது கண்ணோட்டமா ?

பாட்டையே கேட்டதால் உண்டான கொண்டாட்டமா ?

கை தாளம் தவறாகப் போடுதே !

கலை ஞானி போல தலையாடுதே!… உய்…

அந்தரத்து மின்னலை சொந்தங் கொள்ள எண்ணினால்

நடக்குமா? அது கிடைக்குமா-உய்…..

தோற்றத்தில் துறவிபோல் வெளிவேஷம் போடுவாங்க!

கூட்டத்தில் பெண்களை குறிப்பாகத் தேடு வாங்க!

ஏமாற்றும் ஆசாமி நொடியிலே

ஏமாளியாவானே முடிவிலே-உய் …

காலையில் ராஜா ஆனாராம்

தலை கொடுத்தான் தம்பி. 1959

இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி

பாடியவர் : S.C.கிருஷ்ணன்

ஜமுனாராணி

 

ரதி : பம் பம் பம் பம் சிக் பம்

மன்மதன் : பம் பம் பம் பம் சிக் பம்

கோரஸ் : காலையில் ராஜா ஆனாராம்
மாலையில் கூஜா ஆனாராம்

ரதி : பாலும் தேனும் கசப்
பாகத் தோணு தென்று
காலை வேளையிலே சொன்னாராம்!

ரதி : கூழுக்காக பல்லைக்
காட்டிக் கொண்டு-இவர்
மாலை வேளையிலே நிண்ணாராம்!
(காலையில்)

மன்மதன் : போனாராம் யானையைப் போலே
பொல்லாத வேளையினாலே !
வந்தாராம் பூனையைப் போலே !
சிந்தையில் ஆணவம் கொண்டதன் பலனாலே

(காலையில்)

ரதி : நாலும் மூணும்-இனி
ஏழு இல்லை-அது
ஆறு என்று-இவர் சொன்னாராம்

 

ரதி : தாளம் போட்டுத்- தலை

ஆட்ட ஊரில் ஒரு

ஆளும் இல்லை என்று கண்டாராம் !

(காலையில்)

 

மன்மதன் : முட்டாளைத் தலைவனும் ஆக்கி

மூளைக்கு மதிப்பையும் போக்கி

எட்டாத கோட்டையைத் தாக்கி

ஏட்டினில் தன் புகழ் சேர்த்திடப் பார்த்தாராம் ! (காலையில்)
 

 

 

கூஜா …..கூஜா … கூஜா …

மாங்கல்யம் – 1954

இசை : K. V. மகாதேவன் .

பாடியவர் : S. C. கிருஷ்ணன் & சீர்காழி கோவிந்தராஜன்

 

கழுகுமலை : கூஜா …..கூஜா … கூஜா …

கூஜா……கூஜா…..கூஜா……ஏய்

கூஜா தூக்கி உடல் வளர்த்து

ராஜா போலே நடை நடக்கும்-                                      (கூஜா)

 

மணி : ஓய்!…வானா… மூனா..கானா… ஒய்

வானா… மூனா.. கானா

மூனாத் தனத்தை மறைக்க வைக்க

முதலாளியைக் காக்கா புடிக்கும்                                (வானா)

 

கழுகுமலை : நாக்கை அடக்கு காக்கா புடிப்பவன்

நானில்லேடா கூஜா-உன்போல்

நடிகையின் பின்னே சுத்தித் திரியும்

அடிமைப் பசங்க தாண்டா கூஜா                                 (கூஜா)

 

மணி : ஷோக்குப் பண்ணப்ராடு கணக்கு

ஜோடிப்பதிலே ராஜா-பணத்தை

சுரண்டும் உங்க விஷய மெல்லாம்

தெரியும் எனக்கு பேஷா – {வானா)

 

(கெஜல்)

 

கழுகுமலை : ராஜாத்தி போல் வாழ்ந்த நட்சத்திரங்கள் கூட

உன்னைப் போல்-கூஜா- பசங்களாலே

நாசமாய்ப் போனதுண்டு

 

(பாட்டு)

 

குடியைக் கெடுக்கும் கூஜா-கோள் சொல்லித்

திரியும் கூஜா-கும்மாளம் போடும் கூஜா

மானம் கொஞ்சம் இல்லாத கூஜா- (கூஜா)

 

(கெஜல்)

 

மணி : தேசத்தில் எத்தனையோ சிறப்பான கம்பெனிகள்

உனைப் போல் மேனேஜர் அமைந்ததினால்

காணாமல் போன துண்டு

 

(பாட்டு)

 

மூட்டை அடிக்கிறதும் நீங்க- பணத்தை

மூட்டை அடிக்கிறதும் நீங்க-கம்பெனி

மூடு விழா செய்யறதும் நீங்க

சேட்டைகள் பண்ணுறதும் நீங்க-பொம்பளையைத்

தேடியலையறதும் நீங்க- நீங்க ….

(வானா)

 

கழுகுமலை: பகட்டித் திரியிதடா கூஜா–முதலாளி

பக்கத்திலே ஒரு வகை கூஜா

பாடுபவர் ஆடுபவர் பின்னே –எங்கு

பார்த்தாலும் கூஜா.. கூஜா… கூஜா (கூஜா)

 

(முற்றும்)