‘ஒப்பியன் மொழிநூல்’ (Oppiyan Mozhinool) என்பது மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் எழுதிய ஒரு சிறப்புமிக்க நூலாகும். தேவநேயப் பாவாணர் அவர்கள், தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் நிலைநாட்டுவதில் பெரும் பங்காற்றியவர். ‘ஒப்பியன் மொழிநூல்’ என்ற இந்த நூலின் மூலம், தமிழ் மொழியை மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டு, அதன் வேர்ச்சொல் சிறப்புகளையும், இலக்கண அமைப்புகளையும் எடுத்துரைத்துள்ளார். இது தமிழறிஞர்கள் மற்றும் மொழி ஆய்வாளர்கள் மத்தியில் மிகவும் மதிக்கப்படும் ஒரு நூலாகும்.
ஒப்பியன் மொழிநூல்
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்
பதிப்புரை
ஒரு நாட்டின் சிறப்பு அந்நாட்டின் மொழி வளத்தைப் பொறுத்தே அமைவதாகும். மொழி, வளமுடையதாயின் அதனைப் பேசும் மக்கள், நாகரிகமும் நல்ல பண்பாடும் உடையவர்களாய்த் திகழ்வர் என்பது தேற்றம். அவ்வகையில் நந் தமிழ் மொழி தன்னேரில்லாத் தனித்தன்மை வாய்ந்தது. அதனைப் பேசும் இத்தமிழக மாந்தர் தம் நாகரிகம், தனித் தன்மையும் சிறப்பும் தொன்மையும் வாய்ந்தது. இது வரலாற்றாசிரியர் அனைவரும் ஒப்ப முடிந்த முடிபாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் நன்மக்கள் முறையாக வளர்ந்தோங்கி வாழ்ந்திருப்பின், இத் தமிழ் நாடு மேலை நாடு கட்கு ஒப்பானதொரு சீரிய நாடாக-உலக அரங்கில் முன்னணி யில் நிற்கக் கூடிய நாடாகத் திகழ்ந்திருக்கக் கூடும். ஆனால் இந்நாட்டில் குடியேறிய ஆரிய இனத்தவரின், சூழ்ச்சிகளாலும், மேலாட்சியினாலும், தமிழினத்தின் வரலாறும், தமிழ்மொழியின் சிறப்பும் புதை பொருளாரய்ச்சிக் குரியனவாய் விட்டன.
இந்திய வரலாறு சரியானபடி எழுதப்பட்டிருப்பின், தமிழகமே அவ்வரலாற்றுக்கு அடிப்படையாக அமைந்து இருக்கும்: வரலாறு குமரி முனையிலிருந்து துவங்கியிருத்தல் வேண்டும். ஆனால், மேலை நாட்டு வரலாற்றாசிரியர்கள் வட நாட்டை மையமாகக் கொண்டே தம் ஆராய்ச்சிகளை இயற்றினர், அதன் விளைவாகத் தமிழகத்தின் தொன்மை வெளியுலகிற்குத் தெரியாமற் போயிற்று. இதனால் இந்நாட்டில் வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்க்கு வாழ்வும் தமிழர்க்குத் தாழ்வும் ஏற்படலாயிற்று. தமிழர் தம்மையே மறக்கலாயினர்.
எனவே, இப்படிப்பட்ட நிலை மாறித் தமிழர்க்குப் புது வாழ்வும், புத்துணர்ச்சியும் ஏற்படவேண்டும். அதற்கு வழி கோலுவதே ‘ஒப்பியன் மொழி நூல்’ என்னும் இவ் ஒப்பற்ற நூல்; இதன்கண் தமிழினத்தின் வரலாறும், தமிழ் மொழியின் இலக்கண அமைவும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கப்பட்டு உள்ளன. ஆரிய திராவிட நாகரிக வேறுபாடுகள், பார்ப்பனர் தமிழரை வென்ற வகை, ஆரியத்தால் தமிழ் கெட்டமை, மொழி நூல் நெறிமுறைகள், தொல்காப்பியம் பற்றிய ஆராய்ச்சி, தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள், தமிழிலக்கண இலக்கியத் தோற்றம், உலக முதன் மொழிக் கொள்கை ஆகிய செய்திகள் தக்க அகப்புறச் சான்றுகளுடன் விளக்கமாகக் கூறப்படுகின்றன.
இந்நூலைப் பயில்வோர் தமிழக வரலாறு, தமிழ் மொழி இலக்கணம் ஆகிய இரண்டினையும் ஒரு சேரப் புரிந்து கொள்ள லாம். இத்தகைய நூல்கள் போதிய அளவு வெளிவராமை யாலும், வெளிவந்த நூல்களை விரும்பிப் படிப்பார் இன்மையா லுமே தமிழகம் தாழ்ந்தது. தமிழன் தன்னையே மறந்தான்; தமிழர் ஏமாந்த காலத்தில் ஏற்றம்கொண்ட ஆரியப் பார்ப்பனர் அரசியல் துறையிலும், சமயத் துறையிலும் தலைமையேற்றுத் ‘தமிழன் என்றோர் இனம் உண்டு’ என்ற உண்மையினையே மறைத்துவிட்டனர். இன்று அந்நிலையினின்று மீளத் தமிழர் அரும்பாடுபட வேண்டியதாயிற்று.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழரிடையே விழிப் புணர்ச்சி தோன்றி, அதன் விளைவாக மாண்ட அவர் தம் பெருமை மீளத் துவங்கியுள்ளது. தமிழக வரலாறு-மொழி-கலை- நாகரிகம் இன்ன பிறவற்றை அறிந்து கொள்ளும் வேட்கை கற்றவர்களிடையே அரும்பியுள்ளது. எனவே தான் இத்தகைய வேளையில் இத்தகைய வரலாற்று அடிப்படையுடன் கூடிய இலக்கண நூல்களைப் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடலானோம்.
மொழிப் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்கள், மொழிப் பற்றும், இனப்பற்றும் மிக்கவர். நல்ல ஆராய்ச்சியாளர்; பயனுள்ள நூல்களை ஆக்கும் பன்மொழிப் புலவர்: அத்தகைய அறிஞர் எழுதிய இந்நூல் 1940-ஆம் ஆண்டில் முதற் பதிப்பாக வெளிவந்தது. இப்போது திருந்திய மூன்றாம் பதிப்பாகக் கழக வழி வெளிவருகின்றது. இந் நூலாசிரியர்க்குக் கழகத்தின் நன்றி என்றும் உரியது.
இதன் முதற் பதிப்பைப் பெற்றதும் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ப்புரவலர் த, வே. உமாமகேசுரம் பிள்ளையவர்கள் அதைப்பற்றிப் பெரிதும் பாராட்டி எழுதினார்கள்; தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு ஆகியவற்றின் வளர்ச்சியினையே குறிக்கோளாகக் கொண்டு சொற்பொழிவாற்றியும் நூல்கள் எழுதியும் அருந்தொண்டு புரிந்த தனித் தமிழ்த் தந்தை மறைத்திரு. மறைமலையடிகளார் அடிச்சுவட்டைப் பற்றி இற்றை நாள் தொண்டு புரிந்து வருபவர் திருவாளர் பாவாணர் அவர்களே யாவர் எனின் அது மிகையாகாது. அடிகளார் வாழ்ந்தபோது திரு: பாவாணர் அவர்கட்கு அன்புள்ளத்தோடு வழங்கிய சான்றிதழ் இதன்கண் சேர்க்கப் பட்டிருக்கிறது.
இதனையும், இதுபோன்ற வரலாற்று இலக்கியங்களையும் கற்றறிந்தோர் ஏற்றுப் போற்றுதல் வேண்டும். அத்துடன் தமிழக அரசும் இத்தகைய நூல்கள் வெளிவரத் துணைபுரிதல் வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
CERTIFICATE
The Tamil works on the study of Tamil words written by Pandit Jna. Devaneyan, B.O. L. on the lines of general philological principles meet a longfelt want in Tamil. In my early days when I was interesting myself in the study of such English works as Arch Bishop Trench’s Study of Words Prof. Max Muller’s Science of Language, Prof. Sayce’s Comparative Philology etc., my attention turned to making a similar study of Tamil words. Dr. Caldwell’s Comparative Study of Dravidian Languages opened up before me a vast and wonderful tract of Tamil knowledge then lay hidden even to great Tamil scholars. Still Caldwell’s work as an incipient attempt in an unknown region could not be expected to treat exhaustively of all Tamil words. And this impelled me to write a Tamil Philology myself and publish even one or two essays of it in the first volume of my magazine Jaanasagaram. But I could not continue it, since my activities in other fields as religion, philosophy and literary history absorbed my whole attention. Still I was looking about whether any competent scholar would take up the subject; and I was gratified to a certain extent when Father Jnanaprakasar of Jaffna sent me his interesting work on Tamil Philology. The field being vast and extensive, I was looking forward to some more work on a comprehensive scale founded on ancient classical Tamil and am glad to say that Mr. Devaneyan has met my expectation almost wholly. Tamil scholars may Safely rely on his caroful treatment of the subject and I dare say they will be greatly benefitted by a diligent parusal of his works. It is my humble opinion that in the Study of Tamil words Mr. Davaneyan stands pre-eminent and has few rivals.
Further Mr. Devanayan is an impressive teacher and an interesting lecturer as I had on several occasions when I had presided over the annual deliberations of Tamil Sangams to hear him speak to large audiences and engage their attention by flavouring his speech with wit and humour. As a painstaking research scholar I am confident he will bring name and fame to any institution that will engage his services.
Pallavaram, 1949
(Sd.) MARAIMALAI ADIGAL
சான்றிதழ்
பண்டித ஞா. தேவநேயனார் பி. ஏ. எல். பொதுவாக மொழி நூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சி பற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவை யினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய ‘சொல்லாராய்ச்சி’, பேராசிரியர் மாக்சுமுலர் எழுதிய “மொழியறிவியல்’ பேராசிரியர் சாய்சு எழுதிய ‘ஒப்பியல் மொழி நூல்’ முதலிய ஆங்கில நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக் கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்துகிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு பண்டாரகர் கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வு’ நூலால் புலப்படலாயிற்று.. எனினும் பண்டாரகர் கால்டுவெல் அறியப் படாத வட்டாரத்தில் செய்ததொரு மூயற்சியாதலால் தமிழ்ச் சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந் துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. இதுவே மொழியியலை ஆராயவேண்டுமென்று எம்மைத் தூண்டியது. எனவே “ஞானசாகரம்” (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத்துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப் பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டி ஏற்பட்டமையால் மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத்துறையில் ஆராய் வதற்கு முன் வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர் தாம் எழுதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பி வைத்தார். அது ஓரளவு எமக்கு மன நிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித்துறை மிகவும் விரிவும் ஆழமுமுடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம்.
சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும் அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம்.
மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின் கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. அவர் வருந்தியுழைத்து ஆராய்ச்சி செய்துவரும் அறிஞர் ஆதலால் அவரைப் பணியில் அமர்த்தும் எத்த நிலையத்துக்கும் அவரால் பேரும் புகழும் கிடைக்கப்பெறும் என்று யாம் முழு நம்பிக்கையோடு கூறுகின்றேம்.
- ↑ *மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம்.
முகவுரை
மொழிநூற் பயிற்சி, அக்கலையின் ஆங்கிலப் பெயருக்கேற்ப (L. Gr. philos, loving, logos, discourse) சென்ற பத்தாண்டுகளாக எனது சிறந்த இன்பப் போக்காக இருந்துளது; இன்னுமிருக்கும்.
பள்ளியிறுதி (School Final), இடைநடுவு (Intermediate), கலையிளைஞர் (B.A.) முதலிய பல்வகைத் தேர்வுகட்கும் உரிய தமிழ்ச் செய்யுட் பாடங்கட்குத் தொடர்ந்து உரை அச்சிட்டு வரும் உரையாசிரியர் சிலர் தமது வரையிறந்த வடமொழிப் பற்றுக் காரணமாக, தென்சொற்களை யெல்லாம் வடசொற்களாகக் காட்டவே இவ்வுரை யெழுந்தனவோ என்று தனித் தமிழர் ஐயுறுமாறு, கலை-கலா: ஆவீறு ஐயான வடசொல்; கற்பு-கற்ப என்னும் வடசொல்’ சேறு-ஸாரம் என்னும் வடமொழியின் சிதைவு; உலகு-லோக மென்னும் வடசொல்லின் திரிபு; முனிவன்-மோனம் என்னும் வடசொல்லடியாய்ப் பிறந்தது; முகம்-வடசொல்; காகம்-காக என்னும் வடசொல்; விலங்கு-திரியக்ஸ் என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு எனப் பல தூய தென்சொற்களையும் வடசொற்களாகத் தம் உரைகளிற் காட்டிவருவது பத்தாண்டுகட்குமுன் என் கவனத்தை யிழுத்தது. உடனே அச்சொற்களை ஆராயத் தொடங்கினேன். அவற்றின் வேர்களையும், வேர்ப்பொருள்களையும் ஆராய்ந்தபோது அவை யாவும் தென்சொல்லென்றேபட்டன. அவற்றை முதலாவது வடமொழிக்கும் தென்மொழிக்கும் பொதுச் சொற்களாகவும், போலிப் பொதுச் சொற்களாகவுங் கொண்டு, இவ்வுண்மையை வேறொரு மொழியினின்றும் ஒருபோகு முறையான் உணர்த்துமாறு, ஆங்கிலத்திற்கும் தமிழுக்குமுள்ள பொதுச் சொற்களை ஆராயத் தொடங்கினேன். சேம்பர்ஸ் (Chambers), ஸ்கீற்று (Skeat) என்பவர்களின் ஆங்கிலச் சொல்லியலகராதி (Etymological Dictionary)களைப் பார்த்தபோது, ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் பொதுவான சில ஆங்கிலச் சொற்கள் அகப்பட்ட துடன், அவற்றின் வாயிலாகவோ, அவற்றின் மூலமாகவோ இனமாகவோ உள்ள சில இலத்தீன் (Latin) கிரேக்கு (Grees)ச் சொற்களும் அகப்பட்டன. பின்பு இலத்தீன் கிரேக்கு அகராதிகளைத் துருவினேன். வேறு சில சொற்களும் எனக்குத் துணையாயின. அவற்றுள் navis (நாவாய்), amor (அமர்-அன்புகூர்) முதலிய இலத்தீன் சொற்களும், telos (தொலை-தூரம்), palios (பழைய) முதலிய கிரேக்குச் சொற்களும் எனக்குப் பெரிதும் வியப்பை யூட்டின. இவற்றுடன், தமிழ் இந்திய-ஐரோப்பிய மூலமொழிக்கு மிக நெருங்கியதென்று, கால்டுவெல் (Caldwell) கூறியிருப்பதையும், அவரும் குண்டர்ட்டும் (Gundert) வடமொழியிலுள்ள திராவிடச் சொற்களிற் சிலவற்றை எடுத்துக் காட்டியிருப்பதையும், பண்டைத் தமிழகம் தென்பெருங்கடலில் அமிழ்ந்துபோன குமரிநாடென்றும், அந்நாட்டிலேயே தமிழர் தலைசிறந்த நாகரிகத்தை யடைந்திருந்தனரென்றும், தமிழ்த் தொன்னூல்கள் கூறுவதையும், மாந்தன் முதன்முதல் தோன்றினது இலமுரியா (Lemuria-குமரிநாடு) என்று வியன்புலவர் எக்கேல் (Haeckel) கூறியிருப்பதையும், தமிழ் உலகமொழிகள் எல்லாவற்றிலும் எளிய வொலிகளைக்கொண்டு இயற்கைத் தன்மையுள்ளதாய், அதன் சில பல சொற்கள் பல மொழிகளிலும் கலந்து கிடப்பதையும், சேரநோக்கினபோது, தமிழின் தொன்மை, முன்மை, தாய்மை, தலைமை முதலிய தனிப் பண்புகள் புலனாயின. பின்பு மொழிநூற்றுறையில் ஆழ இறங்கினேன்.
நான் மொழிநூற்பயிற்சி தொடங்கியதிலிருந்தே, அவ்வப்போது என் ஆராய்ச்சி முடிபுகளைச் ‘செந்தமிழ்ச் செல்வி’, ‘தமிழ்ப் பொழில்’ என்னும் இரு திங்கள் இதழ்களிலும், கட்டுரைகள் வாயிலாகத் தெரிவித்து வந்திருக்கிறேன். அவை சிலரை மகிழ்வித்தன; சிலர்க்குச் சினமூட்டின. ஒரு நாட்டில் ஒரு புதுக் கலை தோன்றும்போது, பலர் அதில் அவநம்பிக்கை கொள்வதும், அக்கலையைக் கூறுவாரை வெறுப்பதும் இயல்பே. மொழிநூற் கலை மேனாட்டில் தோன்றி இரு நூற்றாண்டுகளாயினும், இன்னும் அது குழவிப் பருவத்திலேயே இருப்பதையும், இந்தியர்க்குப் பெரும்பாலும் தெரியாதிருப்பதையும் நோக்குமிடத்து, எனது மொழிநூன் முடிபை வெறுப்பாரை நோக்கி வருந்துவதற்கு எள்ளளவும் இடமில்லை. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் உலக முழுமைக்கும் மொழிநூற் கதிரவனாய் விளங்கிய மாகசு முல்லரைக் கூடப் பலர், விதப்பாய் அமெரிக்கர், குறைகூறியும் கண்டனஞ்செய்தும் வந்தனர். அதற்கு அவர் அணுவளவும் அசையவில்லை; ஒரு கலையின் தொடக்கத்தில், அதைப்பற்றி எழும் நூல்களிற் பல பிழைகள் நேர்வது இயல்பு. அவற்றை அறிஞர் எடுத்துக் கூறுவதும், ஆசிரியர் அவற்றைத் திருத்திக்கொள்வதும், அக்கலை வளர்ச்சிக் கின்றியமையாத கடமைகளாகும்; இதனால், சில போலிப் பிழைகள் விளக்கம் பெற்று உண்மை வடிவங்கொள்ளும்; பொறாமை யொன்றே காரணமாகக் கூறும் சிலரின் வெற்றொலிகளும் ஒரு நிலையில் அடங்கிவிடும். என் கட்டுரைகளிற் சில பிழைகளிருந்தன என்பதை இன்று உணர்கின்றேன். ஆயினும், அவை என் பெருமுடிபுகளைத் தாக்காதவாறு மிகமிகச் சிறியனவே உண்மையைப்பற்றிக் கொண்ட ஆராய்ச்சியாளன், ஊக்கமாய் உழைப்பின், முதலிலும் இடையிலும் தவறினாலும் இறுதியில் வெற்றிபெறுவது திண்ணம்.
மொழிநூலானது உலக மொழிகள் எல்லா வற்றையும் தழுவும் ஒரு பொதுக் கலை. உலக மொழிகள் எல்லாவற்றையும், ஆரியம் (Aryan), சேமியம் (Semitic), துரேனியம் (Turanian) என்னும் முப்பெருங் குலங்களாகப் பிரித்துள்ளார் மாக்கசு முல்லர். அவற்றுள், துரேனியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திரவிடக் குடும்பத்தின் மொழிகளைத் திறம்பட வகுத்துக் காட்டியவர் கால்டுவெல். இங்ஙனமே பிறரும் பிற குடும்பங் களை வகுத்துக் காட்டியுள்ளனர். மேற்கூறிய முக்குலங்கட்கும் உள்ள தொடர்பை ஆராய்வதே இந் நூலின் நோக்கம்.அவற்றுக்கொரு தொடர்புண் டென்று, அஃதாவது,அம்மூன்றும் ஒரு மூலத்தி னின்றும் கவைத்திருக்க வேண்டுமென்று சென்ற நூற்றாண்டிலேயே மாக்கசு முல்லர் (maxmuller) திட்டமாய்க் கூறிவிட்டார். அம்மூலத்திற்குத் திரவிடம் மிக நெருங்கியதென்று கால்டுவெல் கூறியுள்ளனர். இக்கூற்றை என்னா லியன்றவரை முயன்று மெய்ப்பித்திருக்கிறேன்.
இந்நூல் திராவிடம், துரேனியம், ஆரியம், சேமியம், ஆசுத்திரேலிய ஆப்பிரிக்க அமெரிக்க முதுமொழிகள் என ஐந்து மடலங்களாகத் தொடர்வது; அவற்றுள், இப்பொத்தகம் முதல் மடல முதற்பாகம், தமிழைப்பற்றிக் கூறுவது. இரண்டாம் பாகம் பிற திராவிட மொழிகளைப்பற்றிக் கூறும். இவை தமிழில் வெளிவந்தபின் ஆங்கிலத்திலும் வெளிவரும்.
தமிழ்நாட்டில், பல நூற்றாண்டுகளாகப் பல தமிழ்ப் பகைவர் பலவாறு தமிழைக் கெடுத்தும் மறைத்தும் வைத்திருப்பதனால், அவற்றை எடுத்துச் சொல்வது இந்நூன்முடிபுக்கு இன்றியமையாததாயிருக் கின்றது. ஆகையால், அறிஞர் அதனை அருள்கூர்ந்து பொறுத்தருள்வாராக. யான் ஏதும் பிழை செய்திருப்பின், அதையும் எடுத்துக்கூறி என்னைத் திருத்துவதும் அவர் கடன்.
மொழிநூற் பயிற்சிக்கு வேண்டிய பொருள், இடம், காலம், துணை முதலிய ஏந்துகள் (வசதிகள்) எனக்கு மிகமிகக் குறைந்துள்ளன. ஆயினும், இந்நூல் இவ்வளவு உருப்பெற்றது இறைவன் திருவருளே.
என் கட்டுரைகளைக் குறைகூறி, என் முடிபுகள் முன்னிலும் வலிபெறுமாறு செய்த, பல நண்பர்கட்கும் யான் மிகவுங் கடப்பாடுடையேன்.
“குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்
கற்றறிந்த மாந்தர் கடன்.”
“குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”
(குறள். ௫௦௪)
புத்தூர், திருச்சி,
29-1-1940
ஞா. தே.
முன்னுரை
ஆரிய திராவிடப் பகுப்பு
இந்திய சரித்திரத் தந்தையும் ‘இந்தியாவின் முந்திய சரித்திரம்’ (Early History of India) என்னும் நூலின் ஆசிரியருமான வின்சன்ற்று சிமித் (Vincent Smith) என்பவர், அந்நூன் முகவுரையில் பின்வருமாறு கூறியிருக்கிறார்:—
“வடமொழிப் புத்தகங்கள் மேலும் இந்தோ-ஆரியக் கருத்துகள் மேலுமாக, வடக்கே அளவுக்கு மிஞ்சிய காலம் கவனஞ் செலுத்தப்பட்டு வந்திருக்கின்றது. ஆரியமல்லாத பகுதியைத் தகுந்தபடி கவனிப்பதற்குக் காலம் வந்து விட்டது.
“இப்புத்தகம் இந்தியாவின் அரசியற் சரித்திரத்தைச் சுருங்கக் கூறுவதற்கே எண்ணி வரையறுக்கப்பட்டுள்ளமையால், முன் சொல்லப்பட்ட ஆராய்ச்சி வழியைப் பின்பற்றக் கூடாதவனாயிருக்கின்றேன். ஆயினும், அகால முடிவ டைந்த ஒரு பெயர் பெற்ற இந்தியக் கல்விமான்[1] கவனித்தறிந்தவை சில, கருத்தாயெண்ணுதற்குரியனவாதலின் அவற்றை இங்குக் கூறாதிருக்க முடியவில்லை. அவையாவன:
இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளது
“வட இந்தியாவில் சமஸ்கிருதத்தையும் அதன் சரித்திரத்தையும் படித்து, இந்து நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வதானது, அக் காரியத்தை மிகக் கேடானதும் மிகச் சிக்கலானதுமான இடத்தில் தொடங்குவதாகும். விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள இந்தியத் தீபகற்பமே இன்றும் சரியான இந்தியாவாக இருந்துவருகின்றது. இங்குள்ள மக்களிற் பெரும்பாலார் ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடுகளையும்,மொழிகளையும், சமுதாய ஏற்பாடுகளையுமே இன்றும் தெளிவாகக் கொண்டிருந்து வருகிறார்கள்.
இங்கேகூட, சரித்திராசிரியனுக்குத் தன்னாட்டுப் பாவினின்றும் அயல்நாட்டு ஊடையை எளிதாய்ப் பிரித்தெடுக்க இயலாதவாறு, ஆரியம் மிக நன்றாய் வேரூன்றியுளது. ஆனால், எங்கேனும் ஓரிடத்தில் அதை வெற்றிபெறப் பிரித்தெடுக்க முடியுமானால் அது தெற்கில்தான். எவ்வளவு தெற்கே போகிறோமோ அவ்வளவு பிரித்தெடுக்க வசதி அதிகரிக்கும்.”
“அங்ஙனமாயின், கலைமுறைப்பட்ட இந்திய சரித்திராசிரியன் தனது படிப்பை, இதுவரை மிக நீடச் சிறந்த தென்று பின்பற்றின முறைப்படி கங்கைச் சமவெளியினின்றும் தொடங்காமல் கிருஷ்ண காவேரி வைகையாற்றுச் சமவெளிகளினின்றும் தொடங்கவேண்டும்.”
இங்ஙனம் இருபத்தைந்தாண்டுகட்கு முன்பே இரு பெருஞ் சரித்திரப் புலவர் எழுதியிருப்பவும், இந்திய சரித்திராசிரியர்கள் இதைச் சற்றும் கவனியாது, இன்றும் வடநாட்டையும் ஆரியத்தையுமே தலைமையாகவும் அடிப்படையாகவுங்கொண்டு, இந்திய சரித்திரத்தை நேர் மாறாக எழுதி வருவது பெரிதும் இரங்கத்தக்கதொன்றாம்.
“இந்தியாவில், வட பாகத்தில் ஆரிய திராவிடத்தைப் பிரிக்க இயலாவிடினும் தென்பாகத்தில் இயல்வதாகும். இங்கும் இயலாதென்பது ஆராய்ச்சியில்லாதார் கூற்றே. இந்தியாவில் ஆரியர் என்பது கீழ்நாட்டாரியரென்று மொழிநூலார் கூறும் சமஸ்கிருத ஆரியரை.
தமிழ்நாட்டு மக்களுள் ஆரியர் யாவரெனின் பார்ப்பனரென்னும் ஒரு குலத்தாரே. பிறருள், பிற்காலத்து வந்த மேனாட்டாரும், அவரது கலப்புற்ற இந்தியரான சட்டைக்காரரும், உருதுவைத் தாய்மொழியாகக்கொண்ட முகமதியரும் தவிர, மற்றவரெல்லாம் தனித்தமிழரே.
தமிழ்நாட்டின் வடபாகத்தில் லப்பையென்றும், கீழ் பாகத்தில் மரைக்காயர் என்றும், தென்பாகத்தில் ராவுத்தர் 3 என்றும், மலையாளத்தில் மாப்பிள்ளை என்றும், நால் வகை யாகச் சொல்லப்படும் முகமதியரெல்லாம், தோற்றத்தால் வேறுபட்டுக் காணினும், பிறப்பால் தமிழ்நாட்டுக் கிறிஸ்த வரைப்போலத் தமிழர் அல்லது திராவிடரேயாவர்.
தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்டுள்ள நாயுடு, ரெட்டி, கோமுட்டி, சக்கிலியர் முதலிய வகுப்பார், இக்கால மொழி முறைப்படி தமிழராகக் கருதப்படாவிடினும், தமிழருக்கு நெருங்கின இனத்தாராவர். இவர் விஜயநகர ஆட்சிக் காலத்தில் நாயக்க மன்னருடன் ஆந்திர நாட்டினின்றும் தமிழ்நாட்டிற்கு வந்தவராவர். மலையாளம், கன்னடம், துளு முதலிய பிற திராவிட மொழிகளைப் பேசும் அப் பார்ப்பனரும் தமிழருக்குத் தெலுங்கரைப் போல் இனத்தாராவர்.
ஆரியரும் திராவிடரும் வடநாட்டிற் பிரிக்க முடியாதவாறு கலந்துபோனாலும். அங்கும் பிராமணர் மட்டும் தொன்று தொட்டுத் தங்கள் குலத்தைக் கூடியவரை தூய்மையாய்க் காத்துவந்ததாகவே தெரிகின்றது.
பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள்
(1) உருவம் — நிறம் : பார்ப்பனர் வடக்கேயுள்ள குளிர் நாட்டினின்றும் வந்தவராதலின், தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில் மேனாட்டாரைப்போல் வெண்ணிறமாயிருந்தனர்; பின்பு வெயிலிற் காயக் காயச் சிறிது சிறிதாய் நிறமாறி வருகின்றனர்.
‘கருத்தப் பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக்கூடாது’ என்பது பழமொழி. பார்ப்பனருக்குரிய நிறம் வெள்ளையென்பதும், வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பென்பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக் குறிக்குமென்பதும் இதன் கருத்து.
குடுமி : பண்டைத் தமிழருள் ஆடவர் (புருஷர்) குடுமி வைத்திருந்தனரேனும், பார்ப்பனரைப்போல மிகச் சிறிய உச்சிக் குடுமி வைத்திருந்ததாகத் தெரியவில்லை. பெண்டிர் இன்று போலத் தலைமயிர் முழுவதையும் வளரவிட்டனர். ஆடவர் சுற்றிவரச் சிறிது ஒதுக்கிக்கொண்டனர். ஆடவர் முடி சிறிதாயும் பெண்டிர் முடி பெரிதாயுமிருந்ததினால், இவை முறையே குஞ்சி யென்றும் கூந்தலென்றும் கூறப்பட்டன. குடுமி என்பது உச்சிப் பாகத்திலுள்ளதைக் குறிக்கும்.
“அன்னாய் வாழிவேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாட னூர்ந்த மாவே”
என்னும் ஐங்குறுநூற்றுச் செய்யுளில், (குறிஞ்சி. 202), குதிரையின் தலையாட்டத்திற்குப் பார்ப்பனச் சிறுவனின் குடுமியை உவமை கூறியிருப்பது, அது தமிழச் சிறுவனின் குடுமியினும் மிகச் சிறிதாயிருந்தமை பற்றியே.
மீசை: மீசையைச் சிரைத்துக்கொள்ளும் வழக்கம் ஆரியரதே. தமிழரிற் சிலர் மேனாட்டாரியரைப் பின்பற்றி இப்போது மீசையைச் சிரைத்துக்கொள்கின்றனர்.
(2) உடை: பார்ப்பனருள் ஆடவர் பஞ்சகச்சம் கட்டுகின்றனர்; பெண்டிர் தாறு பாய்ச்சிக் கட்டுகின்றனர். இவை தமிழர் வழக்கமல்ல. விசுவப் பிராமணரென்று தங்களைக் கூறிக்கொள்ளும் கம்மாளர், பார்ப்பனரோடு இகலிக் கொண்டே சிலவிடத்து அவரது உடுமுறையைப் பின்பற்றுகின்றனர்.
நூல்: பூணூலணிதல் பார்ப்பனர்க்கே உரியது, ‘நூலெனிலோ கோல்சாயும்’ என்னுஞ் செய்யுளும், ‘ஊர்கெட நூலைவிடு’ என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும்.
தமிழ்நாட்டு வணிகரும் ஐவகைக் கம்மியரும் பூணூல் பூண்டது, அறியாமைபற்றி ஆரிய முறையைச் சிறந்ததாகக் கருதிய பிற்காலமாகும்.
ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிப் பார்ப்பனருக்குத் தலைமையேற்பட்டபின், பல தமிழ் வகுப்பினர் தங்களுக்கு ஆரியத் தொடர்பு கூறுவதை உயர்வாகக் கருதினர். ஆரியக் குலமுறைக்கும் திராவிடக் குலமுறைக்கும் இயைபு இல்லா விடினும், ஆரியரல்லாதவரெல்லாம் சூத்திர வகுப்பின் பாற்பட்டவர் என்னும் தவறான ஆரியப் பொதுக்கொள்கைப் படி, தமிழரெல்லாருக்கும் சூத்திரப் பொதுப்பட்டம் சூட்டின பிற்காலத்தில், தமிழ் நாட்டிலுள்ள வணிகர் தங்களை வைசியரென்று சொல்லிக் கொண்டால், சூத்திரப்பட்டம் நீங்குவது உடன் ஆரியக் குலத் தொடர்புங் கூறிக்கொள்ளலாமென்று, ஆரிய முறையைப் பின்பற்றி வைசியர், சிரேஷ்டி (சிரேட்டி-செட்டி) என்னும் ஆரியப் பெயர்களையும், பூணூலணியும் வழக்கத்தையும் மேற்கொண்டனர். வணிகர் செல்வமிகுந்தவராதலின் அவரது துணையின் இன்றியமையாமையையும், தமிழர்க்குள் பிரிவு ஏற்பட ஏற்பட அவரது ஒற்றுமை கெட்டுத் தங்கட்குத் தமிழ்நாட்டில் ஊற்றமும் மேன்மையும் ஏற்பட வசதியாயிருப்பதையும், பார்ப்பனர் எண்ணித் தமிழ் வணிகருக்குத் தாராளமாய் வைசியப் பட்டம் தந்தனர்.
ஆரியர்க்குள், பூணூலணிவது பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் மேல் மூவரணத்தார்க்கும் உரியதேனும், அது ஆரியரொடு தொடர்பில்லாத தமிழர்க்குச் சிறிதும் ஏற்பதன்று. ஒவ்வொரு நாட்டிலும் மறையோர், அரசர், வணிகர், உழவர் என்னும் நாற்பாலார் உளர். அவரையெல்லாம் (சிறிது வேறுபட்ட) ஆரிய முறைப்படி முறையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கொள்ளின், இங்கிலாந்திலுள்ள கந்தர்புரி (Canterbury) அரசக் கண்காணி யாளரைப் (Archbishop) பிராமணரென்றும், மாட்சிமை தங்கிய ஆறாம் ஜியார்ஜ் மன்னரை க்ஷத்திரியரென்றும், அங்குள்ள வணிகத் தொழிலாளரை வைசியரென்றும், உழவரையும், கூலிக்காரரையும் சூத்திரரென்றும் கூறவேண்டும். ஆங்கிலேயர் ஒரு கலவைக் குலத்தாரேனும், உறவுமுறையில் எல்லாரும் ஒரே குலத்தார் என்பது சரித்திரமறிந்த அனைவர்க்கும் தெளிவாய்த் தெரிந்ததே. பிராமணர்கள் பிற நாடுகளிலுள்ளவர்களையும் ஆரியக்குல முறைப்படி பகுத்தாலும் பிராமணக் குலத்தன்மை மட்டும் தங்கட்கேயுரியதாகக் கொள்வர். அதோடு கூடியவரை எல்லாரையும் சூத்திரரென்று பொதுப்படச் சொல்லி, பின்பு ஒரு பயனோக்கி அரசரை க்ஷத்திரியரென்றும், வணிகரை வைசியரென்றும் முன்னுக்குப்பின் முரண்படக் கூறுவது அவர் வழக்கம். ஆரிய திராவிட வரண வேறுபாட்டைப் பின்னர்க் காண்க:
கம்மியர் (கம்மாளர்) நெடுங்காலமாகப் பிராமணரொடு இகல்கொண்டு வருவதனால், தாமும் பிராமணரும் சமம் என்று காட்டுவதற்காகப் பூணூலணிந்து வருகின்றனரேயன்றி வேறன்று.
தமிழ்நாட்டில் பூணூலணியும் தமிழரெல்லாம் ஏதேனும் ஒரு வணிகத் தொழிலராயும், கம்மியத் தொழிலராயுமே இருப்பர்.
தமிழரின் நாகரிகத்தையும், சரித்திரத்தையும் அறியாத தமிழர், ஆரிய நாகரிகத்தை உயர்ந்ததென மயங்கி, இக்காலத்தும் ஆரிய வழக்கத்தை மேற்கொள்வதால் உயர்வடையலாமென்று கருதுகின்றனர். சில ஆண்டுகட்குமுன் சிவகாசி, சாத்தூர் முதலிய சில இடங்களிலுள்ள தனித் தமிழரான நாடார் குலத்தினர், புதிதாகப் பூணூலணிந்து கொண்டதுடன், தங்களை க்ஷத்திரியரென்றும் கூறிக்கொண்டனர். நாடார் குலத்தினர் வணிக குலத்தைச் சேர்ந்தவரென்பது உலக வழக்காலும், நூல் வழக்காலும் தெளிவாயறியக் கிடக்கின்றது. வைசியர், க்ஷத்திரியர் என்னும் பெயர்கள் வடசொற்களாயிருப்பதுடன், க்ஷத்திரியர் என்னும் பெயர் நாடார் குலத்திற்கு ஏற்காததாயுமிருக்கின்றது.
நூல் என்பது புத்தகத்திற்கு இழைக்கும் பொதுப் பெயராதலின், நூலோர் என்னும் பெயர் அறிஞரையும் பார்ப்பனரையுங் குறிக்கும்: இடம் நோக்கி யறிந்துகொள்க.
(3) நடை : தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில், 12-ஆம் சூத்திரவுரையில், “தன்மையென்பது சாதித் தன்மை; அவையாவன பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும்” என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இத் தன்மையை இன்றும் ஆங்கில நாகரிகம் நுழையாத சிற்றூர்களிற் காணலாம்.
(4)மொழி : பார்ப்பனரின் முன்னோர் பேசிய மொழி கிரேக்கத்தையும் பழம் பாரசீகத்தையும் வேத ஆரியத்தையும் ஒட்டியதாகும். வேத ஆரியர் மிகச் சிறுபான்மையராயி ருந்ததனாலேயே, கடல்போற் பரந்த வடஇந்தியப் பழந்திராவிட மக்களுடன் கலந்து தம் முன்னோர் மொழியைப் பேசும் ஆற்றலை இழந்தனர். அதனால், அவர் வழியினர் இன்று எம்மாநிலத்தில் உள்ளனரோ அம் மாநிலமொழியையே தம் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆயினும் வேத ஆரிய மொழியுடன் அக்காலத்து வட்டாரமொழிகளாகிய பிராகிருதங்களைக் கலந்து செயற்கையாக அமைத்துக்கொண்ட சமற்கிருதம் என்னும் வடமொழிமீது வரையிறந்த பற்றும், தாம் பேசும் வட்டாரமொழிகளில் இயன்றவரை சமற்கிருதத்தைக் கலப்பதும், அவரெல்லார்க்கும் பொதுவியல்பாகும்.
வடமொழி செயற்கையான வடிவில் மிக முதிர்ந்ததாதலின் வழக்குறாது போய்விட்டது. ஆனாலும், பிராமணரின் வழியினரான பார்ப்பனர் இன்று வடமொழியைத் தம்மாலியன்ற வரை பாதுகாத்து வருகின்றனர். பிராமணர் இந்தியாவில் எந்த இடத்திலிருந்தாலும், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் வடமொழிப் பயிற்சியைமட்டும் விடார். மற்ற வகுப்பாரோ பெரும்பாலும் தத்தம் தாய்மொழிகளையே அறிந்திருப்பர். வடமொழியின் கடினம்பற்றிச் சில பார்ப்பனர் அதைக் கல்லாதிருப்பினும், அதன்மேல் வைத்திருக்கும் பற்றில் மட்டும், அதைக் கற்றவரினும் எள்ளளவும் குறைந்தவராகார். பார்ப்பனர் பிற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டிருப்பதும், வடமொழி வழக்கற்றவிடத்து வேறு போக்கின்றியேயன்றி வேறன்று.
பார்ப்பனர் வடமொழியைப் பேசாவிடினும் வளர்ப்பு மொழியாகக் கொண்டுள்ளமையின், அவர்க்கு வடமொழியாளர் என்று பெயர்.
மணிமேகலையில், ‘வடமொழியாளர்’ (5:40) என்று பார்ப்பனர்க்கும், ‘வடமொழியாட்டி’ (13:78) என்று பார்ப் பனிக்கும் வந்திருத்தல் காண்க.
வடமொழிக்குத் தமிழ் நூல்களில் ஆரியம் என்னும் பெயரும் வழங்குகின்றது. இப்பெயரொன்றே பார்ப்பனரைத் திராவிடரினின்று வேறான ஆரியராகக் கொள்ளப் போதிய சான்றாகும். ஆரிய நாடு, ஆரியபூமி, ஆரியாவர்த்தம் என்று சொல்லப்படுவது பனி (இமய) மலைக்கும் விந்திய மலைக்கும் இடையிலுள்ள பாகமாகும். இதுதான் ஆரியர் இந்தியாவில் முதலாவது பரவி நிலைத்த இடம். இங்கு வழங்கினதினால்தான் ஆரிய மொழிக்கு ‘வடமொழி’ யென்றுபெயர்.
வடநாட்டில், ஆரியரும் ஆரியர்க்கு முந்தின பழங்குடிகளும் பெரும்பாலும் கலந்துபோனமையின், பிற்காலத்தில் வட நாட்டார்க்கெல்லாம் பொதுவாக ‘வடவர்’ ‘ஆரியர்’ என்னும் பெயர்கள் தமிழ் நூல்களில் வழங்கிவருகின்றன.
ஆரியம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில் கேழ்வரகு தவிர வேறு ஒரு பொருளுங் குறிக்கப்படுவதில்லை. ஆரியக் கூத்து என்பது தமிழ்நாட்டில் இசைத் தமிழும் நாடகத் தமிழும் வழக்கற்றபின், வடநாட்டார் வந்து ஆடிய நாடகத் திறமேயன்றி, பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ள படி கழைக் கூத்தன்று.
ஆரியன் என்னும் பெயருக்கு, ஆசிரியன், பெரியோன், பூசாரியன் முதலிய பொருள்களெல்லாம் தமிழில் தோன்றினது தமிழ்நாட்டில் பார்ப்பனத் தலைமை ஏற்பட்ட பிற்காலத்தேயாகும். இப் பொருள்களும் நூல் வழக்கேயன்றி உலக வழக்காகா:
வடமொழி, தென்மொழியின் செவிலித்தாயென்றும், நற்றாயென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சி யில்லாத பலர் கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறு பட்டனவாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும் ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பிற் சிறந்த தமிழும் திரிபில் முதிர்ந்த வடமொழியும் மிக மிக வேறு பட்டனவாகும்.
வடமொழிக்கும் தென்மொழிக்கும் வேறுபாடு
- எழுத்துகளின் தொகை (உண்மையானபடி) வடமொழியில் 42; தென்மொழியில் 30.
- வடமொழியொலிகள் வலியன; தென்மொழி யொலிகள் மெலியன.
- மூச்சொலிகள் வடமொழியில் மட்டுமுண்டு.
- கூட்டெழுத்துகள் தென்மொழியில் இல்லை.
- வடமொழியில் உயிர்கள் (தீர்க்கம், குணம், விருத்தியென மூவகையில்) நெடிலாக மாறிப் புணரும்; தென்மொழியில் உடன்படுமெய் பெற்றுப் புணரும்.
- தமிழில் மொழி முதல் இடை கடை வராத எழுத்துகளெல்லாம், வடமொழியில் மொழி முதலிடை கடை வரும்.
- இடுகுறிப்பெயர் தமிழுக்கில்லை.
- முன்னிலையை உளப்படுத்தும் தன்மைப் பன்மைப் பெயர் வடமொழியிலில்லை.
- உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடு வடமொழியில் இல்லை.
- பால்கள் வடமொழியில் ஆண்பால், பெண்பால், அலிப்பால் என மூன்று; அவை ஈறு பற்றியன; தமிழில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனப் பால் ஐந்து; அவை பொருளும் எண்ணும் பற்றியன.
- இருமை என்னும் எண் தமிழில் இல்லை.
- முதல் வேற்றுமைக்கு உருபு வடமொழியி லுண்டு; தென்மொழியில் இல்லை.
- குறிப்புவினை வடமொழியில் இல்லை.
- வடமொழியிற் பெயரெச்சமும் பெயர் போல வேற்றுமை யேற்கும்.
- வடமொழியில் வரும் முன்னொட்டுச் (Prefix) சொற்கள் தமிழில் பின்னொட்டுச் (Suffix) சொற்களாயிருக்கும்
- தழுவுஞ் சொல்லும் நிலைமொழியும் வடமொழியில் வருமொழியாயிருப்பதுண்டு. தமிழில் வழுவமைதியாயும் அருகியுமே அங்ஙனம் வரும்.
- வினைத்தொகை வடமொழியில் இல்லை.
- தமிழில் மிக முக்கியமாகக் கருதப்படும் பொருளிலக்கணம் வடமொழியில் இல்லை.
- வெண்பா, ஆசிரியப்பா முதலிய பாக்களும் இவற்றின் வேறுபாடுகளும் இனங்களும் வட மொழியில் இல்லை.
- இயல் இசை நாடகமெனத் தமிழை மூன்றாகப் பகுப்பது போல வடமொழியைப் பகுப்பதில்லை.
இனி, வடமொழி மேனாட்டாரிய மொழிகளைச் சேர்ந்ததென்பதைக் கீழ்வரும் சொற்களால் உணர்க:—
- தன்மை முன்னிலைப் பெயர்கள்
தமிழ் | Sans. | Gr. | Lat. | Ger. | Eng. |
நான் | aham | ego | ego | ieh | I(ie O.E.) |
நாம் | vayam | emeis | nos | wir | we |
நீ | tvam | tu,su | tu | du | thou |
நீர் | yuyam | suge | vos | euch, ihr | you |
- சில முறைப்பெயர்கள்
தமிழ் | Sans. | Gr. | Lat. | Ger. | Eng. |
தந்தை | pitru | pater | pater | vater | father |
தாய் | matru | meter | mater | matter | mother |
மகன் | sunu | huios | sohn | son | |
மகள் | duhitru | thugatar | tochter | daughter | |
உடன்பிறந்தான் | bhraru | frater | frater | bruder | brother |
உடன்பிறந்தாள் | svasru | sosor | schwester | sister | |
(orig. sostor) |
- சில உறுப்புப் பெயர்கள்
தமிழ் | Sans. | Gr. | Lat. | Ger. | Eng. |
தலை | kapala | kafala | caput | haupt | head |
(heafod, O.E.) | |||||
மூக்கு | nasa | nasus | nose | ||
உள்ளம், குலைக்காய் |
hrudaya | kardia | crodis | herza | heart |
பல் | dant | ontos | dens | zahn | tooth |
கால்முட்டி | janu | gonu | genu | knie | knee |
- எண்ணுப் பெயர்கள்
தமிழ் | Sans. | Gr. | Lat. | Ger. | Eng. |
ஒன்று | eka | eis, en | unus | eins | one |
இரண்டு | dvi | duo | duo | zwei | two |
மூன்று | thri | treis | tres | drei | three |
நான்கு | chathur | tettares | quatuor | vier | four |
ஐந்து | panchan | pente | quinque | fnnu | five |
ஆறு | shash | eks | sex | sechs | six |
ஏழு | sapthan | epta | septem | steben | seven |
எட்டு | ashtan | okto | octo | acht | eight |
ஒன்பது | navan | ennea | novem | neun | nine |
பத்து | dasan | deka | decem | zehn | ten |
இருபது | visathi | eikati | viminti | zwanzig | twenty |
நூறு | satha | ekaton | centum | hundert | hundred |
- சில பொதுச்சொற்கள்
தமிழ் | Sans. | Gr. | Lat. | Ger. | Eng. |
வாசல் | dhvara | thura | fores | tor | door |
நடு | madhya | messos | medius | mitte | middle |
(methyos) | |||||
வெப்பம் | gharma | thermos | formus | warm | warm |
உண் | ad | edein | edere | essen | eat |
அறி | vid | eidon | video | wissen | wit |
மரம் | daru | drus | zehren | tree | |
நீர் | uda | udor | unda | wasser | water |
வேர் (வேர்வை) | svid | idros | sudare | swizzan | sweat |
அறி | jna | gnomi | gnosco | kennen | know |
தமிழ் | Sans. | Gr. | Lat. | Ger. | Eng. |
சொல் | vartha | eiro | verbam | worte | word |
(to speak) | |||||
பிற | jan | genea | genea | generate | |
பெயர் | naman | onoma | nomen | name | name |
உண்மை | yata | eteos | etymon | etymo-logy |
- ‘இரு’ என்னும் வினைச்சொல்
தமிழ் | Sans. | Gr. | Lat. | Ger. | A. S |
இருக்கிறேன் | asmi | esmi | sum | bin | eom |
இருக்கிறோம் | smas | esmes | sumus | sind | sind |
இருக்கிறாய் | asi | eis | es | bist | eart |
இருக்கிறீர்(கள்) | satha | este | estis | seid | sind |
இருக்கிறான் | asti | asti | est | ist | is |
இருக்கிறார்(கள்) | santi | eisi | sunt | sind | sind |
மேனாட்டாரிய மொழிகட்கும் வடமொழிக்கும் சொற்களில் ஒப்புமை யிருப்பதுபோலவே, இலக்கண நெறிமுறைகளிலும் ஒப்புமையிருக்கின்றது. அவற்றையெல்லாம் இங்குக் கூறின் விரியும்.
பார்ப்பனர் தென்னாட்டிற்கு வந்த புதிதில், தமிழைச் சரியாய்ப் பேசமுடியவில்லை. இப்போதுள்ள மேனாட்டாரின் தமிழ்ப் பேச்சுப் போன்றே, அக்காலப் பார்ப்பனர் பேச்சும் நகைப்பை விளைவித்தது. அதனால், தொல்காப்பிய மெய்ப் பாட்டியல் (1-ஆம் சூ.) உரையில், ஆரியர் கூறும் தமிழை நகைச்சுவைக்குக் காட்டாக எடுத்துக் காட்டினர் நச்சினார்க்கினியர். கபிலர், நச்சினார்க்கினியர் முதலிய தமிழறிஞர் பலர் ஆரியப் பார்ப்பனரேனும், அவர் ஒரு சிறு தொகையினரேயாவர். பெரும்பாற்பட்ட பார்ப்பனர் புதிதாய் வந்தவராயும் தமிழைச் சரியாகக் கல்லாதவராயும் இருந்தமையின், தமிழைச் செவ்வையாய்ப் பேசமுடியவில்லை. மேனாட்டாருள் பெஸ்கி, கால்டுவெல், போப், உவின்ஸ்லோ முதலிய பல சிறந்த தமிழறிஞரிருந்ததையும், பிறருக்கு அவரைப்போல் தமிழைச் செவ்வையாய்ப் பேச முடியாமையையும் மேற்கூறியதுடன் ஒப்பிட்டுக் காண்க.
தமிழர்க்கும், வடமொழி அதன் செயற்கையொலி மிகுதிபற்றி நன்றாய்க் கற்க வராமையின், “பார்ப்பான் தமிழும் வேளாளன் கிரந்தமும் வழவழ” என்னும் பழமொழி எழுந்தது. இதனாலும், பார்ப்பனரும் தமிழரும் வேறானவர் என்பதை யறியலாம்.
“ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்”
என்று தேவா. (844 : 5) கூறியதும் இக் கருத்துப்பற்றியே.
குலவழக்கு: பார்ப்பனர் இப்போது நன்றாய்த் தமிழறிந்தவராகக் கருதப்படினும், வடமொழிப்பற்றுக் காரணமாக, இயன்றவரை வடசொற்களைக் கலந்து மணிப்பவள நடையிற் பேசுவதே வழக்கம். சாப்பாடு, காரணமாக, அடைமானம், தண்ணீர், திருவிழா, குடியிருப்பு, கலியாணம் முதலிய சொற்களுக்குப் பதிலாக, முறையே போஜனம், வியாஜமாக, போக்கியம், தீர்த்தம், உத்சவம், வாசம், விவாகம் முதலிய சொற்களையே வழங்குவர். இவர்களிடத்தினின்றே தமிழரும் பல வடசொற்களைக் கற்றுத் தம் பேச்சில் வேண்டாது வழங்குகின்றனர். ஆங்கிலச் சொற்களைத் தமிழிற் கலந்து பேசுவது உயர்வென்று தவறாய் இப்போது எண்ணப்படுவது போலவே, வடமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதும் முற்காலத்தில் உயர்வாயெண்ணப்பட்டது. இதற்குக் காரணம் பார்ப்பனத் தலைமையே.
அம்மாமி, அம்மாஞ்சி (அம்மான்சேய்), அத்திம்பேர் (அத்தியன்பர்) முதலிய முறைப்பெயர் வடிவங்களும், சாஸனம் (பட்டயம்) தீர்த்தம் முதலிய பொருட்பெயர்களும், அவா போய்ட்டா, நேக்கு, போட்டுண்டு, சொல்றேள் (அவர்கள் போய்விட்டார்கள், எனக்கு, போட்டுக்கொண்டு, சொல்கிறீர்கள்) என்பன போன்ற கொச்சை வழக்கும், ஆடவர் பெண்டிருள் மூத்தாரையும் அடீ என்று விளிப்பதும், பார்ப்பனத் தமிழ்ப் பேச்சிற்கு ஒரு தனித்தன்மை யூட்டுவனவாகும்.
பார்ப்பனர் சில தனிச்சொற்களால் தங்களையும் தங்கள் பொருள்களையும் பிரித்துக்காட்டுவது முண்டு.
உ-ம். | மங்கலம், சதுர்வேதி மங்கலம் | — | ஊர் |
அக்கிராகாரம் | — | குடியிருப்பு | |
பிரமஸ்ரீ | — | அடைமொழி | |
பிரமதாயம் | — | மானியம் | |
பிரமராயன் | — | அரசப்பட்டம் | |
குமாரன் | — | மகன் | |
பட்டவிருத்தி | — | வேதங்கற்ற பிராமணனுக்கு விட்ட இறையிலி நிலம் |
பார்ப்பனர் தமிழ்ப்பற்றின்மை, தனித்தமிழை விரும்பாததினாலும், யூனிவர்சிட்டி, ஸ்கூல் பைனல் என்று ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்காது வழங்குவதினாலும் அறியப்படும்.
(5) உறையுள் : பார்ப்பனர் எங்கிருந்தாலும் தமிழரொடு கலவாது தனித்தே உறைகின்றனர். அக்கிரகாரத்தில் இடம் அல்லது வசதியில்லாதபொழுதே தமிழர் நடுவில் வந்து குடியிருப்பர். அங்ஙனமிருப்பவரும் பெரும்பாலும் ஆங்கிலம் கற்றவராயும் அலுவலாளராயுமேயிருப்பர். அக்கிரகாரத்தில் எக்காரணத்தையிட்டும் தமிழருக்குக் குடியிருக்க இடந்தருவதில்லை. பலவிடங்களிற் சுடுகாடு கூடப் பார்ப்பனருக்குத் தனியாகவுளது.
(6) ஒழுக்கம் : பார்ப்பனர் தமிழ் முறைப்படி, விருந் தோம்பல், நடுவுநிலைமை முதலிய அறங்கள் இன்மையால் இல்லறத்தாருமல்லர்; கொல்லாமை, துறவு முதலிய அறங் களின்மையில் துறவறத்தாருமல்லர்.
“இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.”
ஒருவர் தம் குலத்தாருக்கு மட்டும் விருந்து செய்வது விருந்தோம்பலாகாது.
வேள்வியில் உயிரைக் கொல்வதும் கொலையே.
எல்லார்க்கும் பொதுவான அறச்சாலைகளிற்கூடப் பார்ப்பனர் உண்டபிறகே தமிழர் உண்ணவேண்டுமென்ற ஏற்பாடு இன்றும் இருந்து வருகின்றது. இது மிகவுந் திருந்திய திருப்பனந்தாள் மடத்திலும் இருந்து வருவது தமிழர்க்கு மிகவும் நாணுத்தருவதாகும்.
பார்ப்பனர் தமிழரொடு மணவுறவு கொள்ளாமை
பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து தமிழரொடு மணவுறவு கொண்டதில்லை. முதன் முதலாகத் தமிழ் நாட்டிற்கு வந்த சில ஆரியர் அரக்க மாதரையோ தமிழ் மாதரையோ மணந்து பின்பு கைவிட்டதாகத் தெரிகின்றது. காசியபர் மாயையை மணந்ததைக் கந்த புராணத்திலும், விசிரவசு கேகசியை மணந்ததை இராமாயணத்திலும் காண்க. இராமனுஜர் சில தமிழரைப் பார்ப்பனராக்கினரென்று சொல்லப்படுகின்றது. அஃது உண்மையாயிருப்பினும் சிறுபான்மைக் கலப்பையே குறிக்கும். சில இந்தியர் மேனாட்டு மாதரை மணந்திருக்கின்றனர். இதனால் மேனாட்டாரும் கீழ்நாட் டாரும் கலந்துவிட்டனர் எனக் கூற முடியாது, மலையாள நாட்டில் பார்ப்பனர் திராவிடரான நாயமாதருடன் சம்பந்தம் என்னும் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். ஆயினும், அம் மாதரையோ, அவருக்குப் பிறக்கும் பிள்ளைகளையோ, அக்கிராகரத்திற் சேர்த்துக்கொள்வதில்லை. அவரும் தம் இனத்தார் அல்லது குலத்தாருடனேயே இருந்து வருகின்றனர். திருவள்ளுவரின் தந்தையாகச் சொல்லப்படும் பகவன் என்னும் பார்ப்பான், ஆதி என்னும் பறைச்சியோடு கூடி இல்லறம் நடத்தினதாக ஒரு கதை வழங்கி வருகின்றது. அதிலும், பகவன் ஆதியைக் கைவிட்டோடியதும், பின்பு பலநாட் கழித்து, ஆதி பகவனைக் கண்டு, அவன் என்செயினும் விடாது தொடர்ந்து, தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியதும், அதன்பின், அவன் தப்ப வழியின்றித் தனக்கவளிடம் பிறக்கும் பிள்ளைகளை உடனுடன் நீக்கிவிட வேண்டுமென்னும் நிபந்தனையின்மேல், அதற்கு வெறுப்புடன் இசைந்ததும் அறியப்படும்.
பார்ப்பனர் இதுவரை தங்களை எல்லா வகையிலும் பிரித்தே வந்திருக்கின்றனர். இன்றும் அங்ஙனமே. ஆயினும், தற்கால அரசியல் முறைபற்றி, ஆரியர் – திராவிடர் என்பது மித்தையென்றும் “இருவரும் ஒருவர்” என்றும் கூறிக் கொள்கின்றனர். இது சொல்லளவேயன்றிச் செயலளவிலன்று.
ஆரிய திராவிட நாகரிக வேறுபாடு
இக்கால மொழியியலும் அரசியலும்பற்றித் தமிழும் அதனினின்று திரிந்த திரவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் திரவிடம் என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே.
தமிழ் — தமிழம் — த்ரமிள — திரமிட — திரவிட — த்ராவிட —திராவிடம்.
(1) வரணம் : பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் ஆரிய வரணப்பாகுபாடும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் தமிழ வரணப்பாகு பாடும் ஒன்றேயென்று மேனோக்காய்ப் பார்ப்பாருக்குத் தோன்றும்; ஆனால், அவை பெரிதும் வேறுபாடுடையன.
ஆரியருள், பிராமணர் என்பார் ஒரு குலத்தார்; தமிழருள், அந்தணர் என்பார் ஒரு வகுப்பார்; அதாவது பல குலத்தினின்றும் தோன்றிய சித்தரும், முனிவரும் யோகியருமான பல்வகைத் துறவிகள்.
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்”
என்று திருவள்ளுவர் ‘நீத்தார் பெருமை’யிற் கூறியிருத்தல் காண்க.
ஆரியருள், க்ஷத்திரியர் என்பார் சீக்கியரும் கூர்க்கரும் போன்ற மறக் குலத்தாரும் அரசரும் ; தமிழருள், அரசர் என்பார் அரசப் பதவியினர் ; அதாவது, சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தரும் அவர்க்குக் கீழ்ப்பட்ட பாரி காரி போன்ற சிற்றரசரும்.
ஒவ்வொரு நாட்டிலும் அங்கங்குள்ள குலத்தலைவரே அரசராவர்; அரசரென்று ஒரு தனிக்குலம் இல்லை.
ஆரியருள், வைசியர் என்பார் வணிகம், உழவு ஆகிய இரு தொழிலும் செய்பவர்; தமிழருள், வணிகர் என்பார் வணிகம் ஒன்றே செய்பவர்.
ஆரியருள், சூத்திரர் என்பார் பலவகையிலும் பிறருக்குத் தொண்டுசெய்பவரும், பூணூல், வேதக்கல்வி முதலியவற்றிற்கு உரிமையில்லாதவருமான கீழ்மக்கள்; தமிழருள், வேளாளர் என்பார் உழுதும், உழுவித்தும் இருவகையில் உழவுத்தொழில் ஒன்றே செய்பவரும் எல்லாவுரிமையுமுடையவருமான மேன் மக்கள்:
ஆரியப் பாகுபாட்டில் நாற்பிரிவும் குலமாகும்; தமிழப் பாகுபாட்டில் வணிகர், வேளாளர் என்னும் இரு பிரிவே குலமாகும். அவற்றுள்ளும், வணிகக்குலம் வேளாண் குலத்தினின்றே தோன்றியதாகும். இது பின்னர் விளக்கப்படும். ஆரியச் சூத்திரரும் தமிழவேளாளரும் தம்முள் நேர்மாறானவர் என்பதைமட்டும் நினைவில் இருத்த வேண்டும்.
தமிழருக்கும் சூத்திரர் என்னும் பேருக்கும் எள்ளளவும் இயைபில்லை. ஆயினும், ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிய பின், தமிழர் இங்ஙனம் தாழ்த்திக் கூறப்பட்டனர்.
(2) வாழ்க்கை நிலை (ஆச்சிரமம்) : ஆரிய வாழ்க்கை பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என நான்கு நிலைகளாக வகுக்கப்படும்; இவற்றுள் கிருகஸ்தம் ஒன்றே சூத்திரனுக்குரியது; தமிழர் வாழ்க்கை இல்லறம் துறவறம் என இரண்டாகவே வகுக்கப்படும்; இவை எல்லாக் குலத்தார்க்கும் பொது.
(3) நூல் : ஆரிய நூற்கலைகள் நால் வேதம் (ருக்கு, யஜு ர், சாமம், அதர்வணம்), ஆறங்கம் (சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருக்தம், சந்தம், கற்பம்), ஆறுசாஸ்திரம் (மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம்), அல்லது தரிசனம், மச்சம், கூர்மம் முதலிய பதினெண்புராணம். மனுஸ்மிருதி, யாஜ்ஞவல்யஸ்மிருதி முதலிய பதினெண் ஸ்மிருதிகள் (தரும நூல்கள்), பவுட்கரம், மிருகேந்திரம் முதலிய இருபத்தெட்டாகமங்கள், நாட்டியம் இசைக்கருவிப் பயிற்சி முதலிய அறுபத்து நான்கு கலைகள் எனவும்; அஷ்டாதச (பதினெட்டு) வித்தை (நால்வேதமும் ஆறங்கமும், புராணம், நியாய நூல், மீமாஞ்சை, ஸ்மிருதி என்னும் நால் உபாங்கமும், ஆயுள் வேதம், தனுர்வேதம், காந்தருவவேதம், அருத்தநூல் என்னும் நான்கும்) எனவும்; பிறவாறும், வகுத்துக் கூறப்படும்.
தமிழ் நூல்கள் இயல், இசை, நாடகம் எனவும்; அகப் பொருள் நூல்கள், புறப்பொருள் நூல்கள் எனவும்; பாட்டு, உரை, நூல், வாய்மொழி (மந்திரம்), பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுவகை நிலமாகவும் வகுக்கப்படும். கடைக் கழக (சங்க) நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு, பதினெண் மேற்கணக்கு (பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும்) எனவும், கழக (சங்க) நூல்கள், கழக மருவிய நூல்கள் எனவும் வகுக்கப்படும்.
தொடர்நிலைச் செய்யுட்கள் (காவியங்கள்) தொல்காப்பியர் காலத்தில் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எட்டு வனப்பாக வகுக்கப்பட்டன; இக்காலத்தில் பெருந்தொடர்நிலை, சிறு தொடர்நிலை எனவும்; சொற்றொடர் நிலை, பொருட்டொடர் நிலை எனவும் வகுக்கப்பட்டுத் தொண்ணூற்றாறு பனுவல் (பிரபந்தம்)களாக விரிக்கப்படும். கடைக்கழகக் காலத்தை யடுத்தியற்றப்பட்ட பத்துத் தொடர்நிலைச் செய்யுட்களை ஐஞ்சிறுகாப்பியம், ஐம்பெருங் காப்பியம் என இருதிறமாகப் பகுப்பர்.
இதிகாசம், புராணம் என்னும் நூல்வகைகள், பெயரளவில் வடமொழியேனும், பொருளளவில் இருமொழிக்கும் பொதுவாகும்.
(4) நயன நீதி : ஆரிய நீதி நடுவுநிலை திறம்பிக் குலத்துக்கொரு வகையாக நீதி கூறும்.
உ – ம் : “பிராமணனும் க்ஷத்திரியனும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டால், பிராமணனுக்கு 250 பணமும், க்ஷத்திரியனுக்கு 500 பணமும் அறமறிந்த அரசன் தண்டம் விதிக்க.” (மனு. 8 : 276)
“பிராமணன் க்ஷத்திரியனை அன்முறையாய் (அநியாயமாய்)த் திட்டினால் 50 பணத்தையும் அங்ஙனம் வைசியனைத் திட்டினால் 25 பணத்தையும், சூத்திரனைத் திட்டினால் 12 பணத்தையும் தண்டமாக விதிக்க.” (மனு. 8 : 268).
“இருபிறப்பாளரின் (மேல் மூவரணத்தாரின்) பெயரையும் குலத்தையும் சொல்லி, இகழ்ச்சியாகத் திட்டுகிற சூத்திரன் வாயில், பத்தங்குல நீளமுள்ள எஃகுக்கம்பியைக் காய்ச்சி எரிய வைக்க.” (மனு. 8 : 271)
“பிராமணனுக்குத் தலையை மொட்டையடிப்பதே கொலைத் தண்டமாகும்; மற்ற வரணத்தாருக்கே கொலைத் தண்டமுண்டு. பிராமணன் என்ன பாவஞ் செய்தாலும், அவனைக் கொல்லாமல் காயமின்றி, அவன் பொருளுடன் ஊரைவிட்டுத் துரத்திவிட வேண்டும்.” (மனு. 8 : 379, 80)
இத்தகைய முறையே, ஆரிய அறநூல்களில் தலைமை யானதாகச் சொல்லப்படும் மனுதரும சாத்திரத்தில் மலிந்து கிடக்கின்றது.அதில் பிராமணனுக்குக் கூறப்படும் உயர்வும், பொருள் வசதியும், சூத்திரனுக்குக் கூறப்படும் இழிவும் ஆக்கத்தடையும் மிக மிக வரையிறந்தன. அறிவுடையோர் அதனை நீதி நூல் என்றும், தரும சாத்திரமென்றும் கூற நாணுவர். அப் பெயர்களை மங்கல வழக்காக அல்லது எதிர்மறையிலக்கணையாகக் கொண்டாலன்றி, அந்நூலுக்கு எள்ளளவும் பொருந்தா.
தமிழ் அறநூல்களான நாலடியாரும் திருக்குறளுமோ, ஆங்கில முறைமை போல, எல்லாக் குலத்தார்க்கும் ஒப்ப முறைகூறும். இதனாலேயே,
“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி”
என்று கூறிப்போந்தார் சுந்தரம் பிள்ளையும்.
கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில், திருவாரூரில், தலை சிறந்து நேர்மையாக ஆண்டதினால், மனுநீதிச் சோழன் என்று புகழப்பெற்ற ஒரு சோழமன்னன் இருந்தான். அவனது ஆட்சி முறையை மனுநீதியென்று தமிழ் மக்கள் புகழ்ந்தார்களேயொழிய, அம்முறை எத்தகையதென்று அவர்களுக்குத் தெரியாது; அவ்வரசனுக்குந் தெரியாது. ஒருநாள் அரசன் தன் மகன் செய்த குற்றத்திற்குரிய தண்டனையை, மனுதரும நூலினின்றும் எடுத்துக்கூறுமாறு சில பார்ப்பனரையேவ, அவர்கள் அதினின்றும் கூறினது அவனுக்கு உடன் பாடில்லை. ஆகையால் அவன் தன் சொந்த முறைப்படியே தன் மகனைத் தண்டித்தான்.
(5) மதம்: தற்காலத்தில் ஆரியமதமும் தமிழமதமும் ஒன்றேயென்னுமாறு கலந்திருந்தாலும், ஆரியருக்கே சிறப்பாகவுரிய தெய்வங்களைப் பிரித்துக் கூறலாம்.
இரு மருத்துவர், எண்வசுக்கள், பதினோருருத்திரர், பன்னீராதித்தர் என நால்வகையான முப்பத்து மூன்று தேவரும், இவரைத் தலைமையாகக் கொண்டவர் முப்பத்து முக்கோடி தேவர் என்பதும், தியாவுஸ், பிருதுவி, மித்திரன், அதிதி, ஆரியமான், சோமம், பர்ஜன்யா, உஷா, சவித்தார், பிரமா முதலிய வேதகாலத் தெய்வங்களும் ஆரியருடையன. (அக்கினி, இந்திரன், வருணன், விஷ்ணு, ருத்திரன், சரஸ்வதி என்னுந் தெய்வங்கள் பின்னர் விளக்கப்படும்.)
இவற்றுள், சோமம் என்பது மயக்கந்தரும் ஒருவகைக் கொடிச்சாறு; உஷா என்பவள் விடிகாலையின் உருவகம்.
(6) கருத்து : பிறப்பால் சிறப்பென்பதும், பிரமாவே மக்களைப் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகையாகப் படைத்தார் என்பதும், சூத்திரனுக்கு உயர் தரக் கல்வியும் துறவறமும் இல்லையென்பதும், ஆன் (பசு) தெய்வத் தன்மையுள்ளதென்பதும். உழவு தாழ்ந்த தொழில் என்பதும், துன்பகாலத்தில் ஒழுக்கந் தவறலாம் என்பதும் ஆரியக் கருத்துகளாகும்.
தமிழர் ஆவைப் பயன் தருவதென்று பாராட்டினரே யொழியத் தெய்வத்தன்மை யுள்ளதென்று கொள்ளவில்லை.
உழவை,
“சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
என்றும்,
“உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு”
என்றும் உயர்த்துக் கூறுவர் தமிழர். ஆனால், ஆரியரோ,
“சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கின்றனர். அந்தப் பிழைபபு பெரியோர்களால் பழிக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திற்கொண்ட கலப்பையும் மண்வெட்டியும், நிலத்தையும் நிலத்திலுள்ள பல உயிர்ப்பொருள்களையும் வெட்டுகின்றனவல்லவா?” (மனு. 10 : 84) என்று இழித்துக் கூறுவர்.
ஆரியர் தொல்லகம்
“ஆரிய வரணத்தின் தொல்லகம் ஆசியாவிலன்று, பால்டிக் நாடுகளிலும் காண்டினேவிய நாட்டிலுமேயிருந்தது. அங்கே ஆரிய மொழிகள் எழுந்தன. அவற்றை வழங்கிய உயரமான, நீலக்கண்ணும் வெளுத்த மயிநம் வாலமுகமுங் கொண்ட மக்கள் அங்குநின்றும் பரவினபோது, அம்மொழிகளும் அவர்களுடன் பரவின. அவர்கள் மணக்கலப்பாலேயே, தங்கட்கு இனமாகவும் அயலாகவுமுள்ள மக்கள் மேல், தங்கள் தலைமையையும் மொழிகளையும் ஏற்றுவதில் வெற்றி பெற்றார்கள். இந்தியாவிலும் ஐரானிலும் உள்ள கீழையாரியர், ஆரிய வரணத்தின் கடைசியும் மிகச்சேய்மையுமான கிளையினராவர். அவர்கள் பெரிய ஆற்றொழுக்கங்களைப் பின்பற்றி வந்து, கடைசியில் பஞ்சாப்பில் தங்கினார்கள்,” என்று முதலாவது லத்தாம் (Latham) எடுத்து விளக்கி, பின்பு மாந்தனூலும் (Anthropology) மொழிநூலும் பற்றிய சான்றுகளால், பொயஸ்கே (Poesche) யும் பெங்கா (Penga)வும் திறம்படத் தாங்கிய கொள்கையை நான் முற்றும் ஒப்புக் கொள்ளுகிறேன்”[2] என்று சாய்ஸ் (Sayce) கூறுகிறார்.
“மொழியின் கூற்றுகளை நன்றாய் ஆராயும்போது, அவை கதையை மிக வேறுபடக் கூறுகின்றன. ஆதி ஆரியன் உண்மையாகவே முரட்டுத் தன்மையுள்ள துப்புரவற்ற மிலேச்சனாய், கடுங்குளிரினின்றும் தன்னைக் காத்துக் கொள்ளக் காட்டு விலங்குகளின் தோலையுடுத்திக்கொண்டும், உலோகத்தைப் பயன்படுத்தத் தெரியாமலும் இருந்தான்” என்று, ஆட்டோ சிரேதர் (Otto Schrader) கூறுகின்றார்.[3]
ஆரியர் வருகை
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து, முதலாவது சிந்தாற்றுப் பாங்கில் தங்கினார்கள். சிந்து என்றால் ஆறு என்பது பொருள். ஆற்றுப் பெயர், முதலாவது அது பாயும் நாட்டிற்கும், பின்பு ஆரியர் வடஇந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பரவின பின், இந்தியா முழுமைக்கும் ஆயிற்று. பாரசீகர், சகரத்தை ஹகரமாக ஒலிக்கும் தங்கள் வழக்கப்படி, சிந்து என்பதை ‘ஹிந்து’ என்று மாற்றினார்கள். பின்பு மறுபடியும் கிரேக்கர் அதை ‘இந்தி’ என்று திரித்தார்கள். கடைசியில் ஆங்கிலேயரால் ‘இந்தியா’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது முல்லை நாகரிகத்தையே அடைந்திருந்தார்கள். மாந்தன் நாகரிகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நகர் என நான்கு நிலைகளைக் கொண்டது. தோலை உடுப்பதும், பரண்களிலும் குடில்களிலும் உறைவதும், பன்றி கிழங்ககழ்ந்தவிடத்தில் தினைபோன்ற கூலம் விதைத்து மழை நீரால் (வானாவாரியாக) விளையச் செய்வதும்[4] குறிஞ்சி நாகரிகமாகும். ஆடுமாடுகளை வளர்த்து அவற்றின் ஊனையும் பாலையும் உண்பதும், சோளம் கம்பு போன்ற புன்செய்ப் பயிர்களை விளைப்பதும், ஆட்டு மயிராடை உடுப்பதும், சிற்றில்களில் உறைவதும் முல்லை நாகரிகமாகும். நெல், கரும்பு முதலிய நன்செய்ப் பயிர்களை விளைப்பதும், நிலையாக ஓரிடத்திற் குடியிருப்பதும், பஞ்சாடையுடுப்பதும், தங் கள் பொருட்காப்பிற்குக் காவற்காரனை ஏற்படுத்துவதும் மருத நாகரிகமாகும். வாணிபமும், அரசியலும், கல்வியும் தோன்றி, முன்பு உழவரென்னும் ஒரே வகுப்பாராயிருந்தவர் வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என்னும் நாற்பாலாய்ப் பிரிவதும், பின்னர்க் கொல், நெசவு முதலிய மேல் தொழில்கட்கும், சலவை, மயிர்வினை முதலிய கீழ்த் தொழில் கட்கும் மக்கள் பிரிந்து போவதும், மாளிகைகள் தோன்றுவதும், ஓவிய உணர்ச்சி உண்டாவதும் இசையும் நாடகமும் சிறப்பதும், வழிபாடுகளாயிருந்தவை மதங்களாக வளர்வதும் நகர நாகரிகமாகும். நகரத்தில்தான் நாகரிகம் சிறப்பாய்த் தோன்றிற்று. நாகரிகம் என்னும் சொல்லும் நகர் என்பதினின்றும் பிறந்ததே. (நகர் — நகரகம் — நகரிகம் — நாகரிகம்). ஆங்கிலத்திலும் இங்ஙனமே (Civilise, from civitas (L) = city).
ஆரியர்கள் ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டும், ஆவை (பசுவை)த் தங்களுக்குச் சிறந்த சார்பாகக் கொண்டும், இந்திரன், வருணன் முதலிய சிறு தெய்வங்களுக்குப் பல விலங்குகளைப் பலியிட்டுக்கொண்டும், அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டும், உழவுத்தொழிலைச் சிறு பான்மையே செய்துகொண்டும், மாடு பன்றி முதலியவற்றின் இறைச்சியை உண்டுகொண்டும் இருந்ததே, ஆரிய வேதங்களினின்றும் தரும நூல்களினின்றும் அறிகின்றோம்.
தோல்மேலாடையும், நாரினாலும் ஆட்டு மயிராலும் ஆன அரையாடையும், புல்லினாற் பின்னிய அரைஞாணும், வில்வம் முள்முருங்கை முதலிய முல்லை மரங்களில் வெட்டிய ஊன்று கோலும் ஆரிய முதல் மூவரணத்தாருக்கு மனு விதித்திருப்பதும் மேற்கூறியதை வற்புறுத்தும்.
ஆரியர் இந்தியாவிற்குள் நுழையுமுன்பே, வடஇந்தியர் நல்ல நாகரிகத்தை யடைந்திருந்தார்கள். சர் ஜாண் மார்ஷல் மோஹன்ஜோ-டோரோவைப்பற்றிப் பின்வருமாறு வரைகிறார்:
“5000 ஆண்டுகட்கு முன்பு ஆரியப் பெயரையே கேள்விப்படுமுன், இந்தியாவில், மற்ற நாடுகளுமில்லாவிடினும், குறைந்தது பஞ்சாபும் சிந்தும் மிக முன்னேறியதும் இணையற்றபடி ஓரியலானதும், சமகால மெசொப்பொத்தாமிய எகிப்திய நாகரிகத்திற்கு மிக நெருங்கியதும், சிலவிடங்களில் அதினும் சிறந்ததுமான ஒரு சொந்த நாகரிகத்தை நுகர்ந்து கொண்டிருந்தனவென்று, ஒருவராயினும் ஒருசிறிதும் இது வரை நினைத்ததேயில்லை. எனினும், இதையே ஹரப்பா, மோஹன்ஜோ-டேரொ என்னுமிடத்துக் கண்டுபிடிப்புகள் ஐயமறத் தெரிவித்திருக்கின்றன. கிறித்துவுக்கு 3000 ஆண்டுகட்கும் 4000 ஆண்டுகட்கும் முற்பட்ட சிந்து மக்கள், ஆரியவுறவின் அடையாளமே யில்லாததும், நன்றாய்ப் பண்படுத்தப்பட்டதுமான ஒரு நாகரிகத்தை யடைந்திருந்ததை அவை காட்டுகின்றன. இங்ஙனமே, அங்குள்ள தொழிற் கலையும் மதமும் சிந்துப் பள்ளத்தாக்கிற்கே யுரியவும் தனிப்பட்ட தன்மையுடையனவுமாகும். அங்குள்ள சிறிய மண்ணுருப்படிகளான ஆடுகட்கும் நாய்கட்கும் பிற விலங்குகட்கும், முத்திரைகளிலுள்ள ஓவிய வெட்டுகட்கும், அக்காலத்து மற்ற நாடுகளில் நமக்குத் தெரிந்ததொன்றும் மாதிரியில் ஒத்ததாயில்லை. அம் முத்திரைகளிற் சிறந்தவை, கவனிக்கத் தக்கபடி, திமிலும் குறுங்கொம்புங் கொண்ட காளைகளாகும். அவை வேலைப்பாட்டின் விரிவினாலும், இதுவரை வெட்டோவியக் கலையில் பெரும்பாலும் மேற்கொள்ளப்படாத உண்மையுருவப் படிவ உணர்ச்சியினாலும், பிறவற்றினின்றும் விதப்பிக்கப் பெற்றவை. அதுவுமன்றி, ஹரப்பாவில் தோண்டியெடுக்கப்பட்டுப் பத்தாம் பதினொராம் தட்டுகளிற் பொறிக்கப்பட்டுள்ள இரு தலைமையான சிறு சிலைகளின் இனிய குழைவுப்படி நிலைக்கு, கிரேக்க நாட்டு இலக்கியகாலம்வரை ஒன்றும் இணையாக முடியாது.
“சிந்து மக்களின் மதத்திலும், பிறநாட்டு மதங்களிலும் பல செய்திகள் ஒத்துத்தானிருக்கின்றன. ஆனால், மொத்தத்தில் பார்க்கும்போது, சிந்து நாட்டுமதம் இன்றும் வழங்கி வரும் இந்து மதத்தினின்றும், குறைந்தபக்கம், இன்றும் பெரும்பான் மக்கள் வழிபடும் இரு மாபெருந் தெய்வங்களாகிய சிவ சிலைகளின் வணக்கமும், ஆன்மியமும் (Animism) கலந்த அம் மதக் கூற்றினின்றும் பிரித்தற் கரிதாமாறு அத்துணை இந்தியத் தன்மை வாய்ந்துள்ளது.”
“கூலங்களை அரைப்பதற்குச் சப்பைக்கல்லும், சேணக் கல்லும்தான் மக்கட்கிருந்தன; வட்டத் திரிகல் இல்லை.”
“இங்ஙனம் சுருங்கக்கூறிய அளவில், சிந்து நாகரிகம் தன் பொதுக்கூறுகளில் மேலையாசியாவிற்கும், எகிப்திற்கும் உரிய சுண்ணக் கற்கால நாகரிகங்களை ஒத்திருக்கின்றது; பிற செய்திகளில், மெசொப்பொத்தாமியாவிற்குச் சுமேரிய நாகரிகமும், நீலாற்றுப் பள்ளத்தாக்கிற்கு எகிப்திய நாகரிகமும் போல, சிந்து, பஞ்சாப் நாடுகட்கே யுரியதாய்த் தனிப்பட்ட முறையாயுளது. இதை விளக்க இரண்டொரு முக்கியச் செய்திகள் கூறுவோம். நெசவுக்குப் பருத்திப் பஞ்சைப் பயன்படுத்துவது அக்காலத்தில் முற்றிலும் இந்தியாவிற்கே உரியதாயிருந்தது. இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகட்குப் பிறகுதான் மேலையுலகத்தில் அவ் வழக்கம் பரவினது. இஃதன்றி, சரித்திரத்திற்கு முற்பட்ட எகிப்திலாவது, மேலை யாசியாவில் உள்ள மெசொப் பொத்தாமியாவிலாவது, பிறவிடத்திலாவது, நமக்குத் தெரிந்தவற்றுள் ஒன்றும், மோஹென்ஜோ-டேரோ வாழ்நரின் நன்றாய்க் கட்டப்பெற்ற குளிப்பகங்கட்கும் இடஞ்சான்ற வீடுகட்கும் ஒப்பிடுவதற்கில்லை.
“பொது விதிக்கு விலக்காக, ‘ஊர்’ என்னுமிடத்தில், திருவாளர் உல்லி (Wolley) நடுத்தர அளவான ஒரு சுடு செங்கற் கட்டட வீட்டுத் தொகுதியை அகழ்ந்திருப்பது உண்மையே! ஆனால் அவ் வீடுகள் மோஹன்ஜோ-டேரோவின் கடைசியான மேன்மட்டங்களிலுள்ள செறிவற்றவுமான கட்டடங்களை விளக்கத்தக்க வகையில் ஒத்திருப்பதால், அவற்றைப் பின் பற்றியே கட்டப்பட்டன என்பது ஐயமறத் துணியப்படும். இஃது எங்ஙனமிருப்பினும், மோஹன்ஜோ-டேரோவிலுள்ள பெருங் குளிப்பகத்தையும், தனித்தனி கிணறும் குளிப்பறையும் விரிவு பட்ட சலதாரையொழுங்குங் கொண்ட, அறை வகுத்த பயம்பாடு மிக்க வீடுகளையும், அந் நகரப் பொது மக்கள் அக்கால நாகரிகவுலகத்தின் மற்றப் பகுதிகளிலுள்ளார் எதிர்பாராத அளவு, வசதியும் இன்பமும் நுகர்ந்தார்கள் என்பதற்குச் சான்றாகக் கொள்வது தக்கதே.”
“இப்புதிய கண்டுபிடிப்புகள், இந்தியாவின் முந்திய நாகரிகங்களை மட்டுமல்ல, பண்டைக் கீழகம் முழுவதையுமே பற்றிய தற்காலக் கருத்துகளை மாற்றுவனவாயிருக்கின்றன. (உலக சரித்திரத்தில்) இந்தியாவின் பழங்கற்கால மனிதன் நடித்த பகுதியின் முக்கியம், நெடுங்காலமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. பழங்கற்காலத்திற்குரிய கரட்டுமலை முகடுகளையும், புதுக் கற்காலத்திற்குரிய கரட்டு மலை முகடுகளையும் வடிவச்சு நூற்படி ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்திய நிலத்திலேயே, பின்னவை முன்ன வற்றினின்றும் முதலாவது திரிந்திருக்க வேண்டுமென்று ஊகிக்கப்படுகின்றது.
“தற்சமயம், நம் ஆராய்ச்சிகள் நம்மைக் கிறிஸ்துவுக்கு 4000 ஆண்டுகட்கு முன்மட்டுமே கொண்டுபோய், இச் சிறந்த நாகரிகத்தை மறைக்கின்ற திரையின் ஒரு மூலையை மட்டும் தூக்கியிருக்கின்றன. மோஹன்ஜோ-டேரோவில்கூட, இதுவரை மண்வெட்டிகொண்டு வெட்டினதற்குங் கீழாக, ஒன்றன்கீழொன்றாய், இன்னும் பல முந்திய நகரங்கள், புதைந்து கிடக்கின்றன.
“மோஹன்ஜோ-டேரோ, ஹரப்பா என்னும் ஈரிடத்தும், தெளிவாகவும், பிழைபாட்டிற்கிடமின்றியும் தோன்றுகின்ற ஒரு செய்தியென்னவென்றால், இவ்வீரிடங்களிலும் இது வரை வெளிப்படுத்தப்பட்ட நாகரிகமானது, இந்திய நிலத்தில் பல்லாயிர வாட்டை மாந்தனுழைப்பைக் கீழ்ப்படையாகக் கொண்டு, ஊழிமுதியதாய் நிலைத்துப்போன ஒன்றே யன்றிப் புத்தம்புதிதான ஒன்றன்று என்பதே.” [5]
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது, வடஇந்தியாவில் இருந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்களே. அவர்களுள், நாட்டு வாழ்நர் நாகரிகராயும் காட்டு வாழ்நர் அநாகரிகராயுமிருந்தனர். ஆரியர் தங்கள் பகைவரிடமிருந்து 99 கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார்களென்று, ஆரிய மறையிலேயே கூறியிருப்பதால், அரசியல் நாகரிகம்பெற்ற பல சிறுநாடுகள், ஆரியர் வருமுன்பே வடநாட்டிலிருந்தமை யறியப்படும்.
வட இந்தியாவினும், தென் இந்தியா உழவு, கைத்தொழில் வாணிகம், அரசு, கல்வி முதலிய பல துறைகளிலும் மேம்பட்டிருந்தது; பொன், முத்து, வயிரம் முதலிய பல வளங்களிலும் சிறந்திருந்தது. இதைச் சேர சோழ பாண்டிய அரசுகளினாலும், தமிழ்நாட்டிற்கும் அசீரியாவிற்கும் நடந்த நீர்வாணிகத்தாலும், தமிழிலிருந்த கலைநூற் பெருக்கினாலும், பிறவற்றினாலும் அறியலாம்.
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து”
என்றார், தொல்காப்பியரின் உடன்மாணவரான பனம்பாரனாரும்.
ஆரியர் தமிழ்நாட்டிற்கு ஒரேமுறையில் பெருங்கூட்டமாய் வரவில்லை. சிறுசிறு கூட்டமாய்ப் பலமுறையாக வந்தனர். முதலாவது, காசியபன், விசிரவசு முதலியவர் தமித்து வந்து அசுரப்பெண்களை மணந்தனர். பின்பு ஆரியர் தமிழ் கற்றுத் தமிழாசிரியராயும், பின்பு மதவாசிரியராயும் அமர்ந்த பின், தமிழரசரே பலமுறை பார்ப்பனரைக் கூட்டங்கூட்டமாய் வடநாட்டினின்றும் வருவித்துத் தமிழ்நாட்டிற் குடி யேற்றியிருக்கின்றனர்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனைக் குமட்டூர்க் கண்ணனார் என்னும் பார்ப்பனப் புலவர் பாடிப்பெற்ற பரிசில், உம்பர்க்காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயமும் முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகமும் என்று, பதிற்றுப்பத்தில் (2ஆம் பத்து) கூறப்பட்டுள்ளது.
1,700 ஆண்டுகட்கு முன் தொண்டைமண்டலத்தையாண்ட பப்ப மகாராசன், வடநாட்டிலிருந்து, ஆத்திரேய ஹாரித பரத்துவாஜ கௌசிக காசிப வத்ஸ கோத்திரங்களைச் சேர்ந்த, பல பார்ப்பனக் குடும்பங்களை வரவழைத்துத் தொண்டை நாட்டிற் குடியேற்றி அவற்றிற்கு நிலங்களையளித்தான். பப்பன் காலத்துக்கு முன், பிராமணர்கள் தமிழ் நாட்டில் அதிகமாகப் பரவியிருந்ததாக அடையாளம் ஒன்றும் காணோம். கொஞ்சமாய்த்தான் இருந்திருக்க வேண்டும் என்று [6] பி.தி. ஸ்ரீநிவாஸய்யங்கார் கூறுகிறார்.
சுந்தரபாண்டியரென்னும் அரசர், பல ஊர்களில் இருந்த நூற்றெட்டுத் தலவகார சாமவேதிகளாகிய வைணவப் பார்ப்பனரைத் தென்திருப்பேரையில் இருத்தி, அவர்களுக்கு வீடுகளும், நிலங்களும் வழங்கினதாகச் சொல்லப்படுகின்றது.
தமிழ்நாட்டிற் பார்ப்பனரின் ஐவகை நிலை
(1) பாங்கன் (Companion)
“காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய”
(கற்பியல். 36)
“பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி..
களவிற் கிளவிக் குரியர் என்ப.”(செய்யுளில். 181)
“பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா..
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்”(செய். 182)
இத் தொல்காப்பிய நூற்பா(சூத்திரம்)க்களால், முதன் முதலாகத் தமிழ்நாட்டிற் பார்ப்பனர் ஏற்ற அலுவல், பாங்கன் தொழிலே என்று தெள்ளத்தெளியக் கிடக்கின்றது, பாங்கனாவான் அரசர்க்கும், சிற்றரசர்க்கும் பாங்கிலிருந்து ஏவல் செய்து, மனைவியும் பரத்தையுமான இருவகை மகளிரொடுங் கூட்டுபவன். பார்ப்பனர் ‘அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்று புறத்திணையியல் (16) நூற்பாவில் கூறியுள்ள படி ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழில்கள் செய்துவந்தாரேனும், அவை எல்லார்க்கும் எக்காலத்தும் ஏற்காமையின், பலர் அரச ருக்குப் பாங்கராயமர நேர்ந்தது. பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில், இப் பொழுதையினும் வெண்ணிறமாயிருந்ததி னால் அரசர்க்கு அவர்மீது விருப்பமுண்டாயிற்று.
களவிற் கூற்றிற்குரியாரைப்பற்றிய நூற்பாவில், பார்ப்பான், பாங்கன் என்று பிரித்தது, முன்னவன் ஆரியனும். பின்னவன் தமிழனுமாவர் என்பதைக் குறித்தற்காகும். இவ்விருவரும் பிற்காலத்தில் முறையே பார்ப்பனப் பாங்கனென்றும், சூத்திரப் பாங்கனென்றுங் கூறப்படுவர். சூத்திரப் பாங்கன் பாணக் குடியைச் சேர்ந்த பறையன். முதன் முதல் பாணனுக்கேயுரியதாயிருந்த பாங்கத் தொழில் பார்ப்பனரால் கைப்பற்றப்பட்டது.
இனி, பார்ப்பான் என்பவன் வேதமோதும் பார்ப்பானென்றும், பாங்கன் என்பவன் வேதமோதாப் பார்ப்பானென்றும் கொள்ளினும் பொருந்தும். வேதமோதி வேள்வி செய்யாத பார்ப்பான் ‘வேளாப் பார்ப்பான்’ (அகம். 24) என்று கூறப்படுவன்.
பார்ப்பனர் ஆரிய வேதத்தைத் தமிழர்க்கு மறைத்து வைத்ததினாலும், அவ்வேதத்தை ஓதி, ஓதுவிப்பார்க்குப் போதிய ஊதியம் தரத்தக்க அளவு பெருந்தொகையினராய் அக்காலத்துப் பார்ப்பனர் இன்மையாலும், ஆரிய வேள்வி தமிழர் மதத்திற்கு மாறானதினாலும், முதன் முதலாய் வந்த பார்ப்பனர் பாங்கத் தொழிலே மேற்கொண்டனர் என்பது தெளிவு.
இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைக் காலத்தினரான தொல்காப்பியர் காலத்திலன்றிக் கடைக் கழகக் காலத்திலும் பார்ப்பனர் பாங்கத்தொழில் செய்தமை, கீழ் வருங் குறுந்தொகைச் செய்யுளால் அறியப்படும்.
குறிஞ்சி, 156
(பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் பாடியது.)
“பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே
யெழுதாக் கற்பி னின்செய லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ மயலோ விதுவே”
(இது, கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது.)
“பிராமணனுக்கு வில்வம், பலாசம் (முருக்கு) இவ்விரண்டும், க்ஷத்திரியனுக்கு ஆல், கருங்காலி இவ்விரண்டும், வைசியனுக்கு இரளி, அத்தி இவ்விரண்டும் தண்டமாக (ஊன்றுகோலாக) விதிக்கப்பட்டிருக்கின்றன” என்று மனு தருமசாத்திரத்திற் (2:45) கூறியிருப்பது இங்குக் கவனிக்கத் தக்கது.
(2) ஆசிரியன்
அகத்தியர், தொல்காப்பியர் முதலிய பார்ப்பனர் தமிழைக் கற்றபின் தமிழாசிரியராயினர். இதை, போப் (G.U. Pope) பெர்சிவல் (Percival) முதலிய மேனாட்டாரின் தமிழாசிரியத் தொழிலுடன் ஒப்பிடுக.
(3) பூசாரியன் (புரோகிதன்)
பார்ப்பனர் தமிழரின் மொழி, நூல், மதம், பழக்க வழக்கம் முதலியவற்றை யறிந்தபின், முருகன் (சேயோன்), திருமால் (மாயோன்) முதலிய பழந்தனித்தமிழ்த் தெய்வங்களை ஆரியத் தெய்வங்களாகக் காட்டிப் பழமைகள்[7] (புராணங்கள்) வட மொழியில் வரைந்துகொண்டு மதத்திற்கதிகாரிகளாய்ப் பூசாரித் தொழில் மேற்கொண்டனர். இதுவே அவர்கள் குலத்திற்குத் தமிழ் நாட்டிற் பெருந்தலைமையும் நல்வாழ்வும் தந்ததாகும்.
(4)அமைச்சன்
தமிழ் நாட்டில் பார்ப்பனர் ஒரோவோர் இடத்து, அருகிய வழக்காய் அமைச்சுப்பூண்டமை, மனுநீதிச்சோழன் கதையாலும் மாணிக்கவாசகர் சரித்திரத்தாலும் அறியப்படும். ஆனாலும், அது கல்வித்தகுதிபற்றி நேர்ந்ததேயன்றி, இராமச்சந்திர தீட்சிதர் தம் ‘இந்திய ஆள்வினை அமைப்புகள்’ (Hindu Administrative Institutions) என்னும் நூலிற் கூறியுள்ளபடி பார்ப்பனரே அமைச்சராக வேண்டும் என்னும் ஆரிய நெறி மொழி (விதி) பற்றி நேர்ந்ததன்று.
மிகப் பிந்திய விசயநகர ஆட்சியிற்கூட, அரியநாத முதலியார் போன்ற தமிழரே அமைச்சராயிருந்தனர். அமைச்சருக்குப் போர்த் தொழிலும் தெரிந்திருக்கவேண்டும் என்றும், ஆரியர் நடுவுநிலை திறம்பியவர் என்றும், தமிழரசர் கருதியிருந்ததால் பார்ப்பனரை அமைச்சராக அமர்த்தவில்லை.
செல்வக் கடுங்கோ வாழியாதன் “தன் புரோகிதனிலும் தான் அறநெறியறிந்து” என்றும், குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை “தன் மந்திரியாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும் அறநெறி யறிவானாகப்பண்ணி” என்றும் பதிற்றுப்பத்தில் வந்திருத்தலும், மனுநீதிச்சோழன் தன் அமைச்சர் கூறிய மனுநீதியை ஒப்புக் கொள்ளாததும் நோக்கியுணர்க.
(5) ஆள்வோன்
இதுகாலை பார்ப்பனர் ஆள்வோர் நிலையும் அடைந்திருக்கின்றனர்.
இவ் வைவகை நிலையும் வரவர ஒவ்வொன்றாய்க் கூடினவையே யன்றி ஒரே நிலையின் திரிபல்ல.
இங்ஙனம் பார்ப்பனர் ஐவகைநிலையடைந்தாலும், இவை அவருள் தலைமையானவரும் சிலரும் அடைந்தவையேயன்றி, எல்லாரும் அடைந்தவையல்ல. இங்ஙனம் அடையாதவரெல்லாம் தொன்றுதொட்டு 18ஆம் நூற்றாண்டுவரை இரந்துண்டே காலங்கழித்திருக்கின்றனர்.
இதை, “முட்டிபுகும் பார்ப்பார்” என்ற கம்பர் கூற்றும்,
“பார்ப்பன முதுமகன் படிம வுண்டியன்…
இரந்தூண் தலைக்கொண்டிந்நகர் மருங்கிற்
பரந்துபடு மனைதொறுந் திரிவோன்”
என்னும் (மணிமே. 5:33 46) அடிகளும், கூரத்தாழ்வான், இராமப் பிரமம் (தியாக ராஜ ஐயரின் தந்தை) முதலியவர் உஞ்சவிருத்தி என்னும் அரிசியிரப்பெடுத்தமையும், சில குறிப்புகளும் தெரிவிக்கும்.
பிழைப்பும் குடியிருக்க இடமுமின்றிப் பல பார்ப்பனர் காட்டுவழியா யலைந்து திரிந்தமை, உடன்போக்கில் ‘வேதியரை வினவல்’ என்னுந்துறையும் “ஒருவாய்ச் சோற்றுக்கு ஊர் வழியே போனான் பார்ப்பான்”, “பார்ப்பானுக்கும் பன்றிக்கும் பயணச் செலவில்லை” என்னும் பழமொழிகளும் உணர்த்தும்.
கடைக்கழகக் காலப் பார்ப்பனர் நிலை
கடைக்கழகக் காலத்தில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் நிலை பூசாரியமாகும்.
“சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது………………………..”
என்று சிலப்பதிகாரம் (1 : 51-3) கூறுதல் காண்க.
கடைக்கழகக் காலத்தில் தமிழ்நாட்டுத் தலைமை பூண்ட சேரன் செங்குட்டுவனுக்கு, அழும்பில்வேள், வில்லவன் கோதை என்னும் இரு தமிழர் முறையே, அமைச்சனும், படைத் தலைவனுமா யிருந்தனர். உழவு, கைத்தொழில், வாணிகம், அரசு, கல்வி முதலிய பல தொழிலும், தமிழராலேயே (தமிழில்) நடத்தப்பட்டுவந்தன. ஆகையால், பார்ப்பனர் துணை அற்றைத் தமிழர்க்குச் சிறிதும் வேண்டியதாயில்லை.
“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மின்”
என்னும் (புறநானூற்று (9 : 1-5)அடிகள், பார்ப்பனர் மறமும் (வீரமும்) வலிமையும் அற்றவர் என்றும், களங்கமற்றவரென்றும் இரங்கத்தக்கவரென்றும், சிலரால் கருதப்பட்டதைக் குறிக்குமேயன்றித் தூயரென்று எல்லாராலும் கருதப்பட்டதாகக் குறியாது. பார்ப்பனர் தூயரென்று எல்லாராலும் கருதப்பட்டிருப்பின், மாணிக்கவாசகரை அரிமர்த்தன பாண்டியன் சிறையிட்டுக் கடுந்தண்டம் செய்திருக்கமாட்டான். 17-ஆம் நூற்றாண்டில்,வடமலையப்பப் பிள்ளையின் கீழதிகாரியால் நாராயண தீட்சிதரும் சிறை செய்யப்பட்டிருக்கமாட்டார்.
“ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முள”
எனவரும் அடிகளும் (புறம். 34: 1-4) மேற்கூறிய கருத்தையே தெரிவிக்கும். பார்ப்பார்த் தப்பினவர்க்கும் கழுவாயுளது என்று கூறியிருத்தலைக் கவனிக்க. முரட்டுக் குணமின்றி அமைதியாயிருக்கும் எல்லா உயிர்ப்பொருள்களையும் தமிழர் ஒருதிறமாயெண்ணிக் காப்பர். பூனையையும் கழுதையையும் கொல்வது பெருந்தீவினை என்று கருதப்படுவதை நோக்குக. பார்ப்பனர் அக்காலத்தில் மிகச் சிறிய தொகையினராயும், எளியவராயும், ஆட்சியில் இடம்பெறாதவராயும் இருந்ததினால், தம்மைக் களங்கமற்ற சான்றோராகக் காட்டிக் கொண்டனர்.
பாண்டியன் பல்வேள்வி(யாக)ச் சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் செயலாலும், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் செயலாலும், ஆரிய வேள்விகளை வேட்கும் வழக்கம் கடைக் கழகக் காலத்திலேயே தமிழ்நாட்டில் வேரூன்றிவிட்டதை யறியலாம்.
பாலைக் கௌதமனார் என்னும் பார்ப்பனர், பல் யானைச் செல்கெழுகுட்டுவன் உதவியால், தாமும் தம் மனைவியும் துறக்கம் (சுவர்க்கம்) புகவேண்டுமென்று, ஒன்பது பெருவேள்வி வேட்டுப் பத்தாம் வேள்வியில் தம் மனைவியுடன் மறைந்து போனார் என்னும் பதிற்றுப்பத்துச் செய்தி ஆராயத்தக்கது.
பார்ப்பார், ஐயர், அந்தணர் என்னும் பெயர்கள்
தமிழ்நாட்டிற் பார்ப்பனருக்குப் பார்ப்பார், ஐயர், அந்தணர் என மூன்று பெயர்கள் வழங்கி வருகின்றன. இவற்றை ஆராய வேண்டும்.
பார்ப்பார்
பார்ப்பார், அல்லது பார்ப்பனர் என்னும் பெயருக்கு மறை நூல்களைப் பார்ப்பவர் என்பது பொருள். ஆரியர் வருமுன்பே, தமிழருக்கு மறைநூல்கள் இருந்தன. அது பின்னர்க் கூறப்படும். தமிழ் மறைநூல்களைப் பார்ப்பதும் வழிபாடு, திருமணம் முதலியவற்றை நடத்துவதுமே தொழிலாகக் கொண்டு, பார்ப்பனர் என்னும் பெயருடன் ஒரு குலத்தார் முன்னமேயிருந்து, பின்பு ஆரியப் பிராமணர் வந்தபின் தம் தொழிலையிழந்து விட்டனர். ஆரியப் பிராமணர் தமிழப் பார்ப்பாரின் தொழிலை மேற்கொண்டபின், தாமும் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருதல் இயல்பானதே. அல்லாவிடின், வடமொழிப் பற்றுள்ள பிராமணருக்குப் பார்ப்பார் என்னும் தனித்தமிழ்ப் பெயர் வழங்கிவரக் காரணமில்லை.
தமிழ்நாட்டில் இப்போதுள்ள சக்கிலியர் தெலுங்கராதலின், விசயநகர ஆட்சியில், அல்லது அதற்குச் சற்று முன்பு மெட்ராஸ் பகுதிகளுக்கு உட்பட்ட தகடூர் நாட்டில் வாழ்ந்தனர் தமிழ்நாட்டு என்ற பெயர் வருவதற்கு முன்பாகவே சக்கிலியர்கள் வாழ்ந்தார்கள். அத் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர் பறம்பர் (செம்மார்) என்னும் தமிழ வகுப்பார். இவர் பாணருள் ஒரு பிரிவார். பாணர் பகடைகள். பாணரும் சக்கிலியரைப்போல் மாடு தின்பவர். மாட்டுத் தோலைப் பதனிட்டு, அதனாற் செருப்பு, கூனை முதலிய பொருள்களைச் செய்வது, மாடுதின்பார்க்கே மிக இசையும். தோல் வேலை செய்பவர் கடைக் கழகக் காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்தமை, தோலின் துன்னர் என்று சிலப்பதிகாரத்தில் கூறியிருப்பதால் அறியப் படும். பாணருக்குத் தையல் தொழிலுமுண்டு. “பாணர்க்குச் சொல்லுவதும்…. தை….” என்று காளமேகப் புலவர் கூறியிருத்தல் காண்க. தையல் என்னும் பெயர் துணி, தோல் என்னும் இரு பொருள்களை மூட்டுவதற்கும் பொதுவாகும். துன்னம் என்னும் பெயரும் இங்ஙனமே. சக்கிலியர் பறம்பர் தொழில் மேற் கொண்ட பின், செம்மார் சக்கிலியருக்குச் செம்மான் என்னும் தமிழ்ப் பெயரும் சக்கிலி[8] என்னும் ஆதித்தமிழர் பெயரும் இன்று வழங்கி வருகின்றன. இங்ஙனமே பார்ப்பனருக்குப் பார்ப்பார் என்னும் தமிழ்ப் பெயரும் பிராமணர் என்னும் ஆரியப் பெயரும் என்க.
ஐரோப்பாவிலிருந்து கிரேக்கரும் ரோமரும் தமிழ் நாட்டிற்கு வந்து, குலமுறையாக ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்யாமை யால், யவனர் என்னும் கிரேக்கப் பெயராலேயே அழைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் இதுபோது, பார்ப்பனருக்குத் தொழிலால் நெருங்கியுள்ளவர் புலவர், பண்டாரம், குருக்கள், பூசாரி, போற்றி, உவச்சன், நம்பி என்று கூறப்படும் தமிழக் குலத்தா ராவர். இவருடைய முன்னோரே, ஒருகால் தமிழப் பார்ப்பன ராயிருந்திருக்கலாமோ என்று, இவர் பெயராலும் தொழிலாலும் ஐயுறக் கிடக்கின்றது.
ஐயர், அந்தணர்
ஐயர் என்பது ஐயன் என்னும் பெயரின் பன்மை. ஐயன் என்னும் பெயருக்கு ‘ஐ’ என்பது பகுதி. ஐ என்பது வியப்புப் பொருள்பற்றிய ஓர் ஒலிக்குறிப்பு இடைச்சொல். இன்னும், வியக்கத்தக்க பொருள்களைக் கண்ட விடத்து, ‘ஐ’ என்பது தமிழர்க்கு, சிறப்பாய்ச் சிறார்க்கு இயல்பு.
“ஐ வியப்பாகும்”
என்பது தொல்காப்பியம் ( உரியியல். 89),
ஐ + அன் = ஐயன். ஐயன் என்பான் வியக்கப்படத் தக்க பெரியோன். வியக்கப்படத்தக்க பொருளெல்லாம் ஏதேனும் ஒருவகையில் பெரிதாகவேயிருக்கும். ஒருவனுக்குப் பெரியோராயிருப்பவர் கடவுள், அரசன், முனிவன், ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன், மூத்தோன் என்னும் எண்மராவர். இத்தனை பேரையும் ஐயன் என்னும் பெயர் குறிப்பதாகும்.
தந்தை, ஆசிரியன், மூத்தோன், என்னுமிவரைக் குறிக்குந் தன்மையில்,sire என்னும் ஆங்கிலச் சொல்லுடன் ஐயன் என்பதை ஒப்பிடலாம்.
ஐயன் என்னும் பெயர், இயல்பாய் நின்று பொதுவாகக் கடவுளையும், ஆர் விகுதிபெற்றுச் சாத்தனாரையும், பெண் பாலீறு பெற்றுக் காளியை அல்லது உமையையும்; நூல் வழக்கில் பெரியோன் என்னுங் கருத்துப்பற்றி அரசனையும், தெய்வத் தன்மையுள்ளவன் என்ற கருத்துப்பற்றி முனிவனையும், பின்பு அவனைப் போல அறிவு புகட்டும் ஆசிரியனையும்; உலக வழக்கில், பறையர் என்னும் குலத்தார்க்குத் தந்தையையும், தம், தன் முதலிய முன்னொட்டுச் சொற்களில் ஒன்றைப் பெற்று அண்ணனையும் விளிவடிவில் மூத்தோன், பெரியோன் என்னுமிவரையுங் குறிப்பதாகும்.
அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் என்னும் ஐவரும் ஐங்குரவரென நீதிநூல்களிற் குறிக்கப்படுவர். குரவர் பெரியோர். ஐயன் என்னும் பெயர் ஐங்குரவர்க்கும் பொதுவாகும்; தாயைக் குறிக்கும்போது பெண்பாற்கேற்ப ஐயை என ஈறு மாறி நிற்கும். ஆகவே, ஐயன் என்னும் பெயர் பெரியோன் என்னும் பொருளையே அடிப்படையாகக் கொண்டதாகும்.
ஆசிரியன், அல்லது குரு என்னும் பொருளில், கிறிஸ்தவப் பாதிரிமாரும் ஐயர் என்றழைக்கப்படுகின்றனர்.
பார்ப்பனருக்கு ஐயர் என்னும் பெயர் முனிவர் என்னும் கருத்துப்பற்றி வந்ததாகும். முதன் முதலாய்த் தமிழ்நாட்டிற்கு வந்த காசியபன் போன்ற ஆரியப் பிராமணர், ஒழுக்கத்தால் தமிழ் முனிவரை ஒருபுடையொத்தமை பற்றி ஐயர் எனப்பட்டனர். பின்பு அது விரிவழக்காய், கபிலர், பரணர் போன்றவர்க்கும், தில்லைவாழந்தணர் போன்ற பூசாரியர்க்கும், இறுதியில் எல்லாப் பார்ப்பனருக்குமாக வழங்கி வருகின்றது.
ஆங்கிலேயர் வருமுன் தமிழ்நாட்டிலாண்ட பல தெலுங்கச் சிற்றரசர்க்குத் துரைகள் என்று பெயர். பாஞ்சாலங்குறிச்சித் துரை என்ற வழக்கு இன்னுமுள்ளது. ஆங்கிலேயர் முதலாவது “கீழிந்தியக் கும்பனி” (East India Company) அதிகாரிகளாய்த் தமிழ் நாட்டில் ஆட்சியை மேற் கொண்டபோது துரைகள் எனப்பட்டனர். பின்பு அப் பெயர் மேனாட்டார் எல்லார்க்கும் பொதுப் பெயராகிவிட்டது.
ஒரு குலத்தலைவனுக்குரிய சிறப்புப்பெயர், நாளடைவில் அக் குலத்தார்க்கே பொதுப் பெயராதல் இயல்பு. நாட்டாண்மையும் ஊராண்மையும்பற்றி யேற்பட்ட நாடன் (நாடான், நாடார்), அம்பலகாரன், குடும்பன் என்னும் தலைவர் பெயர்கள் நாளடைவில் முறையே சான்றார், வலையர், பள்ளர் என்னும் குலத்தார்க்கே பொதுப்பெயர்களாகி விட்டன. வடார்க்காட்டுப் பகுதியிலுள்ள இடையர்க்கு, அவர் முன்னோருள் ஒருவன் ஓர் அரசனிடம் அமைச்சனாயிருந்தமைபற்றி, மந்திரி என்னும் பட்டப்பெயர் வழங்கி வருகின்றது. இங்ஙனமே ஐயர் என்னும் பெயரும் பார்ப்பனருக்கு வழங்குவதாகும்.
ஐயன் என்னும் தனித் தமிழ்ப்பெயரை ஆரியன் என்னும் ஆரியப் பெயரின் சிதைவாகச் சிலர் கூறுகின்றனர். ஆரியன் என்னும் பெயருக்கு வணங்கப்படத்தக்கவன் என்று ஆரியர் பொருள் எழுதிவைத்திருப்பதினாலும், தமிழ் நாட்டிற் பிற்காலத்தில் ஆரியர்க்குத் தலைமையேற்பட்டதினாலும், ஆரியன் என்னும் பெயர் ஐயன் என்னும் பெயர் போல, பெரியோன் என்னுங் கருத்தில் ஆசிரியன், ஆசாரியன் முதலியோரைக் குறித்ததேயன்றி வேறன்று.
‘ஆரியற்காக வேகி’ என்று கம்பரும், இடைச்சுரத்துக் கண்டோர் கூற்றாக “யார்கொல் அளியர் தாமே யாரியர்” என்று (குறுந். 7) பெரும்பதுமனாரும், முறையே, வணங்கப் படத்தக்கவன், பெற்றோர் என்னும் பொருளில் ஆரியன் என்னும் பெயரை வழங்கியிருப்பது, வடநூற் கருத்துப்பற்றிய அருகிய நூல்வழக்கேயன்றி, ஐயன் என்னும் பெயர்போலப் பெருவாரியான தமிழ்நாட்டுலக வழக்கன்று?
ஐயன் என்னும் பெயர் ஆரியன் என்னும் பெயரின் சிதை வாயின் இவ்வொரே பெயரைத் தந்தை பெயராகக் கொண்ட பறையர் ஆரியராதல் வேண்டும். தனித் தமிழரும் பார்ப் பார்க்கு மிகச்சேயவருமான பறையர் அங்ஙன மாகாமையின், ‘ஐயன்’ என்னும் சொல் ‘ஆரியன்’ என்னும் சொல்லின் சிதைவன்று.
‘Ar’ (to plough) என்பதை ஆரியன் என்னும் பெயருக்கு வேராகக்கொள்வர் மாக்சுமுல்லர்.
அந்தணன் என்னும் பெயரும் ஐயன் என்னும் பெயர் போன்றே பார்ப்பனருக்கு அமைந்ததாகும். ஆனால், இன்னும் நூல் வழக்காகவே யுள்ளது.
அந்தணன் என்பதை அந்தம்+அணன் என்று பிரித்து, மறை முடிபு (வேதாந்தம்) களைப் பொருந்துகின்றவர் என்று பொருளுரைப்பர் வடமொழிவழியர் : அம் + தண்மை+அன் என்று பிரித்து அழகிய குளிர்ந்த அருளையுடையவர் என்று பொருளுரைப்பர் தென்மொழியாளர். வடமொழி வழியிற் பொருள்கொள்ளினுங்கூட, அணவு என்னும் சொல் என்னும் வேரிற்பிறந்த தனித்தமிழ்ச்சொல்லாதலின், அந் தணன் என்பது இருபிறப்பி (Hybrid)யாகும்.
அந்தணன் என்னும் பெயர் அத்தணாளன் (அம் + தண் + ஆளன்) என்ற வடிவிலும் வழங்கும்.
“அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்
கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே”
“அந்த ணாளர்க் கரசுவரை வின்றே’
என்று தொல்காப்பியத்திற் (மரபியல், 68.80) கூறியிருப்ப தால் பார்ப்பனருக்குக் தொல்காப்பியர் காலத்திவேயே தமிழ்நாட்டில் அரசுவினையிருந்த தாகச் சிலர் கூறுகின்றனர்!
அந்தணர் என்னும் பெயர்.முதலாவது, தனித்தமிழ் முனிவரைக் குறித்ததென்று முன்னமே கூறப் பட்டது.
அத்தர் என்னுஞ் சொல்லின் (அழகிய குளிர்ந்த அருளையுடையவர் எனனும்) பொருளுக்கேற்ப,
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்”
என்று அந்தணர்க் கிலக்கணங் கூறினதுமன்றி, அதைத் துறவிகளைப் பற்றிக்கூறும் “நீத்தார் பெருமை’ என்னும் அதிகாரத்திலும் வைத்தார் திருவள்ளுவர்.
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரமென்ப”
என்று தொல்காப்பியத்தில் கூறிய முனிவர் செய்தியையே,
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்”
அருள் என்னும் குணம் துறவிகட்கே உரியதாகும் அதனால்தான், அருளுடைமை, புலான்மறுத்தல், கொல் லாமை என்னும் மூன்றையும் திருவள்ளுவர் இல்லறத்திற் கூறாது துறவறத்திற் கூறினர். பிரா மணருக்கு அருளில்லை யென்பது, மனுதரும நூலாலும், இப்போது அவர் பிறரை முக்கியமாய்க் கீழோரை நடத்தும் வகையினாலும் அறியப் படும். உணவுக்கு வழியற்றவரையும், ஒழுக்கங் குன்றிய வரையுங்கூடக் கூசாமல் முனிவரென்று கூறுவது ஆரிய வழக்கம்.
அஜீகர்த்தரென்னும் முனி பசியினால் வருந்தி, சுநச் சேபள் என்னும் தம் மகனை, வேள்வியிற் பலியிடும்படி நூறு ஆவிற்குத் தாமே விற்றார். பசிக்கு மாற்றஞ்செய்தபடியால், அதனால் அவருக்குப் பாவம் தேரிடவில்லை” என்று மனு தரும நூல் (10; 105) கூறுகின்றது.
பிராமணருக்குக் கலியாணத்திற்கு முந்திய நிலைபிரம சரியமென்று பிரிக்கப்படுவதனாலும், துறவறத்தின் முற்பகுதி யான வானப் பிரத்தத்தில் குடும்ப வாழ்க்கை கூறப்படுவத னாலும், பிராமணர் ஊருக்குப் புறம்பாகவிருப் பின், எந்த நிலையிலும் தம்மைத்துறவிகளாகக் கூறிக்கொள்ள இடமுண்டு.
தமிழ் முனிவரான அந்தணர். சிறந்த அறிஞராயும் ஆசிரியராயும் ஆக்கவழிப் பாற்றலுள்ளவராயும் இருந்தமையின், அரசர்கள் அவர்களை மதியுரைக்கும் தற்காப்பிற்கும் துணைக் கொண்டனர் இதையே, திருவள்ளுவர் திருக்குறட் பொருட் பாலில், ‘பெரியாரைத் துணைக்கோடல்’, பெரியாரைப் பிழையாமை’ என்ற அதிகாரங்களிற் கூறுவர். அரசர்கள் போர், வேட்டை முதலியனபற்றிச் சென்றபோது. அவர்கட்குத் துணையாயிருந்த அந்தணரே அரசு செய்யக் கூடும். இதையே “அந்தணாளர்க் கரசு வரைவின்றே” என்னும் நூற்பா குறிப்பதாகும்.[9] ‘வரைவின்றே’ என்பது விலக்கப்படவில்லை என்று பொருள்படுமேயன்றி, என்றுமுரியது என்று பொருள் படாது. இரண்டாம் குலோத்துங்கச் சோழனுக்கு ஒட்டக்கூத்தர் அமைச்சராயிருந்து, அவன் மணஞ்செய்த புதிதில் சிறிது காலம் அவனுக்குப் பதிலாய் ஆண்டார். இதனால், அரசுரிமை புலவர்க்கெல்லாமுண்டென்று கொள்ளுதல் கூடாது. ஆனால்,அதே சமையத்தில், அது அவர்க்கு விலக்கப்பட வில்லை என்றும் அறியலாம்.
தமிழ்நாட்டிற்கு முதன்முதல் வந்த ஒருசில ஆரியப் பிராமணர், தமிழ அந்தணர் போலத் துறவிகளாகத் தோன்றியமையால் அந்தணரோடு சேர்த்தெண்ணப்பட்டார். இதை,
“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய”
(தொல். 160)
என்பதால் அறியலாம்.[10] இந் நூற்பாவிற் குறிக்கப்பட்ட நூல் முதலிய நான்கும் ஆரியர்க்கேயுரியன. தமிழ முனிவர் உயர்ந்த நிலையினராதலின் இத்தகைய பொருள்களைத் தாங்கார்.
“மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை”
(குறள். 245)
ஆரியருள், முனிவர் போன்றவர் அந்தணர் என்றும், பிறரெல்லாம் பார்ப்பாரென்றுங் கூறப்பட்டனர்.ஆரிய முனிவரை, வீரமாமுனிவர் (Beschi), தத்துவபோதக சுவாமி (Robert de Nobili) என்னும் மேனாட்டாருடன் ஒப்பிடுக.
தொல்காப்பியத்தில், பார்ப்பார் அந்தணரினின்றும் வேறாகவே கூறப்படுகின்றனர். அவர்க்கு அந்தணர் என்னும் பெயர் எங்கும் கூறப்படவில்லை. இதனால், ஆரியருட் பெரும்பாலார் அந்தணராகக் கொள்ளப்படவில்லையென்பதையறியலாம். பிறப்பால் மட்டும் பிராமணனாயுள்ளவன் பார்ப்பான் என்றும், தொழிலாலும் பிராமணனாயுள்ளவன் அந்தணன் என்றும் குறிக்கப்பட்டதாகச் சிலர் கொள்கின்றனர்.[11]’அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்று தொல் காப்பியத்திலும், வேளாப் பார்ப்பான் என்று அகநானூற்றிலும் குறிக்கப்படுவதால், அது தவறாதல் காண்க. மேலும், ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்னும் நூற்பாவில்,
“மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்”
என்று சித்தரும்,
“நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்”
என்று தவத்தோரும் பார்ப்பாரினின்றும் வேறாகக் குறிக்கப் படுதல் காண்க. இதனாலும், பார்ப்பனர் இல்லறத்தார்க்கொப் பவே எண்ணப்பட்டதை அறியலாம்.
பார்ப்பார் தமிழ்நாட்டிலிருந்தமைபற்றித் தொல்காப்பியத்திற் கூறப்பட்டனரேயன்றி, அவர் தமிழரே என்னுங் கருத்துப்பற்றி யன்று. இதுபோது தமிழ்நாட்டுக் குலங்களைக் குறிப்பின், ஐரோப்பியரும், சட்டைக்காரரும் குறிக்கப்படுவரன்றோ? அங்ஙனமே தொல்காப்பியர் காலப் பார்ப்பனருமென்க.
மேலும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று தொல்காப்பிய மரபியலிற் கூறியவை, மருத நகரில் உழவர் குலத்தினின்றும் முதன்முதல் தோன்றிய நாற்பெரும் பிரிவுகளே யன்றிப் பிற்காலத்துத் தோன்றிய பல சிறுசிறு குலங்களல்ல. தொல்காப்பியர் காலத்தில், மருத நகரில் பல குலங்களிருந்தன. ஆனால், பழைய முறைப்படி, நாற்பெரும் பிரிவுகளே கூறப்பட்டன. இப் பிரிவுகளுள் ஆரியப் பார்ப்பார் அடங்கார், அயலாராகவும் தமிழர் குலமுறைக்குப் பொருந்தா மலுமிருத்தலின். பார்ப்பார் (முனிவரான) அந்தணருமல்லர், அரசருமல்லர், வணிகருமல்லர், வேளாளருமல்லர்.
அந்தணர் முதலிய நாற்பாலும் மரபியலிற் கூறப்பட்டது தமிழ் முறைபற்றியே என்பதை,
“வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்ல
தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”
“வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே”
என்னும் நூற்பாக்களான் (76, 77) உணர்க.
“வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை”
(௸ ,73)
என்னும் நூற்பாவில், வைசியன் என்னும் வடசொல் வந்திருப்பது, அது ஆரியமுறை என்பதற்குச் சான்றாகாது. நூலைச் சூத்திர மென்றும், நினைவை ஞாபகம் என்றும், சிலவிடத்து மொழி பெயர்த்து ஆரியச்சொல்லாற் கூறுவது தொல்காப்பியர் வழக்கம். பழமலை (அல்லது முதுகுன்றம்) என்னும் பெயரை விருத்தாசலம் என்றும், வட்டு (வட்டமான கருப்புக்கட்டி) என்னும் பெயரைச் சக்கரை (சக்கரம்) யென்றும் மொழிபெயர்த்ததினால், விருத்தாசலம் ஆரிய நகரமென்றும், வட்டுக் காய்ச்சுந்தொழில் ஆரியருடையதென்றும் ஆகாதது போல, வைசியன் என்னும் வடமொழிப் பெயரினாலும், தமிழ வணிகக்குலம் ஆரிய வைசியக்குலமாகி விடாது.
முனிவரைக் [12]கடவுள்ரென்றும், [13]பகவரென்றும், கடவுளோ டொப்பக்[14]கூறுவது பண்டைத் தமிழர் வழக்கம். பார்ப்பனர் தங்களை அந்தணராகக் காட்டிக்கொண்டபின், தமிழர் தங்களைச்சாமி என்று கடவுட்பெயரால் அழைக்குமாறு செய்து விட்டனர். அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது.
தமிழகத்தில் இருசார் பார்ப்பனர்
தமிழகத்தில் உள்ள பார்ப்பனர் தொன்றுதொட்டு இரு சாரார் ஆவர். அவருள் ஒரு சாரார் தமிழை வளர்த்தோர்; அவர் அகத்தியர், தொல்காப்பியர் முதலானோர். மற்றொரு சாரார் தமிழைக் கெடுத்தோர். இவருட் பிந்தின சாராரே வரவர மலிந்துவிட்டனர். முந்தின சாரார், பரிதிமாற்கலைஞன் என்னும் சூரியநாராயண சாத்திரியாருக்குப் பின், விரல் வைத்தெண்ணுமளவு மிகச் சிலரேயாவர். வடநாட்டினின்றும் பிந்தி வந்த பிராமணர் முந்திவந்தவரை மிகக் கெடுத்துவிட்டனர்.
தமிழையும் தமிழரையும் கெடுத்தோருள் பலர், பாட்டும் நூலும் உரையும் இயற்றியிருத்தலால், தமிழை வளர்த்தார்போலத் தோன்றுவர். ஆனால் ஆராயின், அவர் வருவாய்ப் பொருட்டும், வடசொற்களையும் ஆரியக் கருத்துகளையும் தமிழ் நூல்களிலும் வடநாட்டுப் பார்ப்பனரைத் தமிழ் நாட்டிலும் புகுத்துவதற்கும் பார்ப்பனக் குலத்தை உயர்த்துவதற்குமே அங்ஙனம் செய்தனர் என்பது புலனாகும்.
எ – டு, “அந்தணரின் நல்ல பிறப்பில்லை” என்றார் விளம்பி நாகனார். “அந்தணரில்லிருந்தூ ணின்னாது” என்றார் கபிலர்.[15] “ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்னினிதே” என்றார் பூதஞ்சேந்தனார். “…..நன்குணர்வின்—நான் மறையாளர் வழிச் செலவும் இம்மூன்றும் மேன்முறையாளர் தொழில்” என்றார் நல்லாதனார்.
“எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார்”, “பார்ப்பார்…. தம்பூத மெண்ணா திகழ்வானேல் தன்மெய்க்கண் ஐம்பூதம் அன்றே கெடும்”, “பார்ப்பார் இடைபோகார்.”
“வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை யாளர் துணிவு.”
“பார்ப்பார்…… இவர்கட்காற்ற வழிவிலங்கினாரே பிறப்பினுள் போற்றி எனப்படுவார்”, “பசுக்கொடுப்பின் பார்ப்பார் கைக்[16] கொள்ளாரே”
தலைஇய நற்கருமம் செய்யுங்கால் என்றும்
[17]புலையர்வாய் நாட்கேட்டுச் செய்யார் – தொலைவில்லா
அந்தணர்வாய் நாட்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல்
என்றும் பிழைப்பதில்”
என்றார் பெருவாயின் முள்ளியார்.
இங்ஙனம், தமிழில் சில நூல்களை வரைந்து தாங்களும் தமிழ்ப் பற்றுடையவர் என்று காட்டிக்கொண்டு, வட மொழியையும் ஆரிய வரண வொழுக்கத்தையும் தமிழ் நாட்டிற் புகுத்துவது ஆரியர் தொன்றுதொட்டுக் கையாண்டு வரும் வலக்காரங் (தந்திரம்)களில் ஒன்றாகும்.
ஆரியரை உயர்த்திக் கூறியுள்ள சில தமிழரும் உளர். அவர் அறியாமையும் தந்நலமுங்கொண்ட குலக்கேடராதலின், அவர் செய்தி ஈண்டாராய்ச்சிக்குரியதன்று.
சிவனியரும்[18] திருமாலியருமான இருசார் பார்ப்பனருள், திருமாலியரே[19] தமிழுக்கும் தமிழர்க்கும் சிறந்தவராவர். திருமாலியர் தனித் தமிழரான நம்மாழ்வாரை ஆழ்வார் தலை வராக்கினர்; பறையரான திருப்பாணாழ்வாரைத் தொழாசிரியர் (அர்ச்சகர்) தோள்மேல் தூக்கித் திருவரங்கம் கோயிற்குள் கொண்டு போயினர்; நாலாயிர திவ்வியப் பனுவலைத் திரா விட மறையாகக் கொண்டனர்.[20]
சைவரோ, பார்ப்பாரான திருஞானசம்பந்தரை அடியார் தலைவராக்கினர்; தில்லையிற் சிவவுருவைக் கண்டு வழிபடப் பித்துக் கொண்ட, சிறந்த அடியாரான நந்தனார் என்னும் பறையரைச் சுட்டெரித்தனர்; தேவாரத்தை மறையாகக் கொள்ளாது, ஆரிய மந்திர வழிபாட்டு முடிவின்பின் ஓதுவிக்கின்றனர்.
பார்ப்பனர் தமிழரை வென்ற வகை
பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து நாற்பது நூற்றாண்டு களாகியும், தங்கள் தொகையைப் பெருக்கப் பல வழிகள் வகுத்தும், இன்றும் தமிழ்நாட்டு மக்கட்டொகையில் நூற்றுக்கு மூவராகவேயுள்ளனர். முதன்முதல் தமிழ் நாட்டிற்கு வந்த பார்ப்பனர் ஒருசிறு குழுவாரேயாவர்: போர் செய்தற்குரிய தன்மைகளும், தமிழரை நாகரிகத்தால் வெல்லக் கூடிய உயர்வும் அவர்களுக்கிருந்ததில்லை. அவர்கள் தமிழரை வென்றதெல்லாம் வலக்காரத்தினாலேயே. அவ்வெற்றியும் ஒரு குறுங்காலத்தில் கூடியதன்று. அவர்கள் தமிழ்நாட்டில் மதவியலைக் கைப்பற்ற 2000 ஆண்டுகளும், அரசியலைக் கைப்பற்ற மற்றோர் 2000 ஆண்டுகளும் ஆயின. இவற்றுள், முன்னதற்குத் தமிழரின் கள்ளமின்மையும், பின்னதற்கு அவர்களின் அறியாமையும் காரணமாகும். விரலாற் சுட்டி யெண்ணக்கூடிய ஒரு சிறு கூட்டம், ஒரு மாபெரு நாட்டையும் வலக்காரத்தால் கைப் பற்றலாம் என்பதற்கு, தமிழ்நாட்டுப் பார்ப்பனீயத்தைப் போன்ற எடுத்துக்காட்டு இவ்வுலகத்திலேயே இல்லை.
தமிழர் வேறெவ்வெவ்வகையில் மடம் படினும், போரில் மடம் படுபவரல்லர். கி.பி. 16ஆம் நூற்றாண்டுவரை தமிழ் நாட்டில் அயலரசுகள் வந்து நிலைத்ததேயில்லை. அதன் பின்பும், தமிழர்க்குள் ஒற்றுமையின்மையாலேயே, அயலார் தமிழ் நாட்டைக் கைப்பற்ற நேர்ந்தது.
பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள்
(1) அரசரையடுத்தல் :
பார்ப்பனர் தமிழ்நாட்டில் முதலாவது அரசரை வயப் படுத்தினால், பின்பு பொதுமக்கள் தாமே வயப்படுவர் என்று கருதி, அரசரிடத்தில் பாங்கராயமர்ந்தனர்.
(2) தவத்தோற்றம் :
பார்ப்பனர் வைகறை யெழுந்து ஆற்றிற் குளித்து, அதன் கரையிலமர்ந்து ஆரிய மந்திரங்களை நெடுநேரம் ஓதிக் கொண்டிருப்பதைத் தமிழர் கண்டு அவர்களை முனிவராகக் கொண்டனர்.
(3) தமிழ் கற்றல் :
பார்ப்பனர் தமிழைக் கற்றுத் தமிழாசிரியராகித் தமிழில் நூல்களை இயற்றினதினால், தமிழரால் மிக மதிக்கப்பட்டனர்.
(4) வடமொழியில் நூலெழுதலும் தமிழ்நூல்களை மொழிபெயர்த்தலும்.
பார்ப்பனர் ஆரிய மறைகளைத் தமிழர்க்கு மறைத்து வைத்து, நூலாக எழுதப்படாது வழக்கிலிருந்த பல தமிழ் நாட்டுக் கதைகளையும் செய்திகளையும் வடமொழியில் எழுதியும், நூல்களாக இருந்த பல தமிழ்க் கலைகளை வடமொழியில் மொழி பெயர்த்தும் வைத்துக்கொண்டு, அவ் வடநூல்களை முதனூல்களாகவும் தென்னூல்களை வழி நூல்களாகவும் காட்டினர்.
வடமொழியில் நூலெழுதலுக்கு ஹாலாஸ்ய மான்மியத்தையும், மொழிபெயர்த்தலுக்குச் சங்கீத ரத்னாகரம் போன்ற இசைநூல்களையும் காட்டாகக் கூறலாம்.
(5) தற்புகழ்ச்சி :
பார்ப்பனர் தங்களைத் தேவர் என்றும், பூசுரர் என்றும் தங்கள் மொழியைத் தேவமொழியென்றும், தாங்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்களென்றும், தங்களுக்கொப்பானவர் உலகத்திலேயே இல்லையென்றும் கூறினதுமல்லாமல், நூல்களிலும் வரைந்துகொண்டனர். அவர்களின் வெண்ணிறமும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கின்ற வடமொழி யொலிகளும் அதற்குத் துணையாயிருந்தன.
(6) மதத் தலைவராதல் :
பார்ப்பனர் முருகன், திருமால் முதலிய தனித்தமிழ்த் தெய்வங்களுக்குச் சுப்பிரமணியன், விஷ்ணு முதலிய ஆரியப் பெயர்களையிட்டு, அவர்களை ஆரியத் தெய்வங்களாகக் காட்டி, அதற்கான கதைகளையும் புனைந்து கொண்டு, தமிழ் மதாசிரியர்களாகித் தமிழரின் கோயில் வழிபாட்டையும் மங்கல அமங்கல வினைகளையும் நடாத்தி வரலாயினர்.
(7) தமிழைத் தளர்த்தல் :
பார்ப்பனர் தமிழரின் வழிபாடு, மங்கல அமங்கல வினைகள் முதலியவற்றை வடமொழியில் நடத்தியும், நூல்களையும் ஆவணங்களையும்[21] வடமொழியிலெழுதியும், பார்ப்பனருள்ள ஊர்களில், ஊராண்மைக் கழக உறுப்பினர்க்கு ஆரிய மறையறிவைத் தகுதியாக விதித்தும்,[22] பல்வகையில் வடமொழியை வளர்த்துத் தமிழை வளர்க்காது போனதுடன், வேண்டாத வட சொற்களைக் கலந்து அதன் தூய்மையையுங் கெடுத்து விட்டனர்.
(8) பிரித்தாட்சி :
பிரித்தல் என்னும் வெல்வழி ஆரியர்க்கே சிறந்த தன்மையாகும். ஒரு சிறுவகுப்பார் ஒரு பெருவகுப்பாரை வெல்வதற்கு அஃதொன்றே படையாம். பிரமா பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வரணத்தாரையும் முறையே, தமது முகம், மார்பு, அரை, கால் ஆகிய உறுப்புகளினின்றும் தோற்றுவித்தார் என்று கூறும்போதே, பார்ப்பனர் நம் நாட்டு மக்களைப் பிரித்துவிடுகின்றனர்.
கல்விக்கு வாயும், போருக்கு மார்பும், இருந்து விற்றலுக்கு அரையும் (அல்லது நிறுத்தலுக்குச் சீர்க்கோலின் நடு நாவும்), உழைப்பிற்குக் காலும் சிறந்த உறுப்புகள் என்பதே மேற் கூறிய அணியின் கருத்தாமாயினும், அதன் எழுத்தியற் (literal) பொருளையே உண்மையான பொருளாகப் பார்ப்பனர் கூறி வருகின்றனர்.
பிராமணர் முதலிய நால்வரணத்தார்க்கும் சிறப்புப் பெயர், அணி, தொழில், ஊன்றுகோல், உரிமை, தண்டனை, புதைக்கும் திசை முதலிய பல பொருள்களையும் வெவ் வேறாகவே மனு தருமங் கூறுகின்றது.
தமிழ்நாட்டிலுள்ள பல குலங்களும் தொழில்பற்றித் தொன்றுதொட்டு வழங்கி வருபவையே; ஆயினும், அவை கூடியுறவாடாதபடி செய்தது ஆரிய முறையாகும், இப்போது ஆதி திராவிடர் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட் டோரை முதலாவது ஆரியர் மேலோரினின்றும் பிரித்ததை.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க் காகிய காலமும் உண்டே”
என்னும் தொல்காப்பிய (கற்பியல். 3)நூற்பாவா லறியலாம். இதில், மேலோர் என்றது அரசர், வணிகர், உழுவித்துண்ணும் உயர்ந்த வேளாளர் என்பாரை. அந்தணர் என்பார் துறவிக ளாதலின், அவர்க்குக் கரணமில்லை. தாழ்த்தப்பட்டோர் இன்றும் தாங்களே மண வினை நடத்திவருகின்றனர்.
அக்கிரகாரங்கள் உள்ளவூர்களில் தாழ்த்தப்பட்டோர் மிகக் கொடுமையாகவும் பிறவூர்களில் அவ்வளவு கொடுமை யில்லாமலும் நடத்தப்பட்டு வருவதை நோக்குக.
பிறப்பால் சிறப்பு, பிரமாவே குலங்களைப் படைத்தார்; ஒவ்வொரு குலத்தாரும் தத்தம் தொழிலையே செய்தல் வேண்டும்; ஒருவன் தன் குலத்தை இப் பிறப்பில் மாற்ற முடியாது; குலங்கள் ஒன்றுக்கொன்று மேற்பட்டவை; எல்லாவற்றிலும் உயர்ந்தது பார்ப்பனக்குலம் என்பனபோன்ற கருத்துகளால், மேலோரான தமிழர் பற்பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஆரிய வரண வொழுக்கம் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்டது.
கடைக்கழகக் காலத்தில் வேரூன்றத் தொடங்கிய குலப் பிரிவினை வரவர வளர்ந்து 16ஆம் நூற்றாண்டில் முதிர்ந்து விட்டது. பார்ப்பனர்க்கும் பிறகுலத்தார்க்கும் உள்ள தொடர்பு தீண்டாமை (Untouchability), அண்டாமை (Unapproachability), காணாமை (Unseeability), என முத்திறப்பட்டு விட்டது. இப்போது தீண்டாமை என்று சொல்லப்படுவது, அக்காலத்துக் காணாமையா யிருந்ததே.
இடங்கிடைத்த அளவு தம்மை உயர்த்திக்கொள்வது ஆரிய வழக்கம். இதை, பார்ப்பன வுண்டிச்சாலைகளுள், சிலவற்றில் அப் பார்ப்பனருக்குத் தனியிடம் வகுத்தலும், சிலவற்றில் இடமே தராது உண்டிமட்டும் விற்றலும், சிலவற்றில் தீட்டென்று உண்டியும் விற்காமையும் நோக்கியுணர்க.
முற்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த களவு மணமுறையாலும், இந்தியா முழுதும் வழங்கிய தன்மணப்பு (சுயம்வர) முறையினாலும், அர்ச்சுனன் பாண்டியன் மகளை மணந்ததி னாலும், பாணர்க்குத் தமிழரசரிடமிருந்த மதிப்பினாலும், அந்தணரான அப்பூதியடிகள் திருநாவுக்கரசிற்குத் தம் இனத்தாருடன் செய்த சிறந்த விருந்தினாலும். பள்ளர் பள்ளியர் என்னும் வகுப்பார், மள்ளர், மழவர், உழவர், கடையர், காராளர், கருங்களமர் என்னும் பெயர்களுடன், பண்டை நூல்களில் இழிவின்றிக் குறிக்கப் படுவதினாலும், மக்களின் குலப்பெயர் இயற்பெயருடன் கூடி வழங்குவது மிக அருகியிருந்ததினாலும், சிற்றூர்களில் இன்றும் பார்ப்பனரல்லாத பல குலத்தார் முறை செப்பிக் கொள்வதினாலும், பண்டைத் தமிழ்நாட்டில் குலப்பிரிவினை இருந்ததில்லையென்று அறியலாம்.
பார்ப்பனருக்கு உயர்வு, கல்வி, அலுவல், அதிகாரம், இலவச ஏவல், செல்வம், குலப்பெருக்கம் முதலியன வரண வொழுக்கத்தால் விளைந்த நன்மைகளாகும்.
கொலைத்தண்டமின்மை, போர் செய்யாமை, போர்க் களத்தினின்றும் விலக்கப்படல் முதலியவற்றால் குலப் பெருக்கமும், கோயிற்றொழில், கொடைபெறல், புரோகிதம், வேள்வி, பட்டவிருத்தி முதலியவற்றால் செல்வப் பெருக்கும் பார்ப்பனருக்கு உண்டாயினவாம். ‘பார்ப்பானில் ஏழையு மில்லை பறையனில் பணக்காரனுமில்லை’ என்பது பழமொழி.
குலத்திற் போன்றே மதத்திலும் பிரிவினை தோன்றிற்று, கடைக்கழகத்தில் சைவர், திருமாலியர், பௌத்தர், சமணர் என்னும்பல மதத்தாரிருந்ததினாலும், வேந்தன் (இந்திரன்) விழா வில் எல்லாத் தெய்வங்கட்கும் படைப்பு நடந்ததினாலும், சேரன் செங்குட்டுவன் சைவனாயும் அவன் தம்பி இளங்கோவடிகள் சமணராயுமிருந்ததினாலும், அரசர் பல மதக் கோயில்கட்கும் இறையிலிவிட்டதினாலும், பண்டைத் தமிழ் நாட்டில் மதப் பகையுமிருந்ததில்லையென்றறியலாம்.
(9) வடநாட்டாரை உயர்த்தல் :
இது பின்னர் விளக்கப்படும்.
(10) வடநாட்டுக் கதைகளைத் தமிழ்நூல்களிற் புகுத்தல் :
கற்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, கண்ணகி, திலகவதி, புனிதவதி முதலிய பல தமிழ்ப் பெண்மணிகள் கதைகளிருப்ப வும், அவற்றை விட்டுவிட்டு, நளாயினி, சாவித்திரி முதலிய வட நாட்டுப் பெண்களின் கதைகளையே புத்தகங்களில் வரைவர். இங்ஙனமே, வில்லுக்குச் சிறந்த ஓரியும், கொடைக்குச் சிறந்த குமணனும், நட்பிற்குச் சிறந்த பிசிராந்தையும், உடம் பிறப்பன் பிற்குச் சிறந்த இளங்கோவடிகளும் தமிழப் பொது மக்கட்கு மறைக்கப்பட்டுளர்.
தமிழரின் சிறந்த தன்மை :
மதப்பற்று, மறம், அடுத்தாரைக் காத்தல், ஈகை, விருந் தோம்பல், நடுவுநிலை, நன்றியறிவு, மானம், உண்மை யுரைத்தல், நுண்ணறிவு முதலியன தமிழர்க்குச் சிறந்த தன்மைகளாகும். தமிழர் நுண்ணறிவுடையரேனும், தம் உள்ளத்தில் கள்ளமின்மையால், வஞ்சகரை நம்பி எளிதில் ஏமாற்றப்படுபவராவார்.
இந்திய நாகரிகம் தமிழ நாகரிகமே
மேனாட்டறிஞருட் பலர் வடமொழி நூல்களையே படித்து, அவற்றுட் சொல்லியிருப்பதையெல்லாம் மறைநூற் கூற்றாகக் கொண்டு, ஆரியரே இந்தியாவில் நாகரிகத்தைப் பரப்பினர் என்று கூறுகின்றனர். ஆரியர்க்கு முன்னைய இந்திய நிலைமையையும், தமிழரின் தனி நாகரிகத்தையும், ஆரியரின் ஏமாற்றுத் தன்மையையும் அவர் கவனிக்கிறதில்லை. ரைஸ்டேவிட்ஸ் (Rhys Davids) என்பவர், தமது ’புத்த இந்தியா’ (Buddhist India) என்னும் நூலின் முகவுரையில், பிராமண நூல்களையே அளவையாகக் கொள்ளுகிறவர்கள் உண்மையைக் காண முடியாமையைக் குறிப்பிடுகின்றார்.
இந்திய நாகரிகம், தமிழ் அல்லது திராவிட நாகரிகமேயென்று பின்னர் நூலில் விளக்கப்படுமாயினும் இங்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் கூற விரும்புகின்றேன்.
பார்ப்பனர் தங்களுக்குக் கூறிக் கொள்ளும் உயர்வுகளுள், ஊனுண்ணாமையும் ஒன்றாகும். ஆரியர் இந்தியாவிற்கு வந்த புதிதில், பலவகை விலங்குகளையும் கொன்று தின்றமைக்கு. அவர்களின் மறை நூலும் அற நூலுமே சான்றாகும். வட மொழியாரியரின் இனத்தினரான மேனாட்டாரியரெல்லாம் என்றும் ஊனுண்பவரே. அவரினின்றும் பிரிந்துவந்த இந்திய ஆரியர், இங்கு வந்த பிறகே திராவிடரைப் பின்பற்றி, ஊனுண்பதை ஒருவாறு நிறுத்தினர். இன்றும் வடநாட்டுப் பார்ப்பனர் ஊனுண்பதை முற்றும் ஒழிக்கவில்லை: முட்டையும், மீனும் அவர்க்கு மரக்கறியின் பாற்பட்டனவாகும். தென்னாட்டுப் பார்ப்பனரும், வேள்வியில் விலங்குகளைக் கொன்றுண்ணலாம் என்னும் கொள்கையுடையவரே; மேலும், தட்பவெப்பநிலை வேறுபட்டவிடத்தும், நோயுற்ற விடத்தும் பெரும்பாலும் ஊனுண்ணும் நிலையினரே. சைவ வேளாளரென்னுந் தமிழரோ, உயிர்க்கிறுதிவரினும் ஊனுண்ணார், சைவ மதத்தில் ஊனுண்ணாமை ஓர் அறமாக விதிக்கப்பட்டிருத்தல் பற்றி, சைவம் என்னும் மதப்பெயரும் கூட ஊனுண்ணாமையைக் குறிப்பதாகும், சைவாள் என்றும்; சைவர் என்றும் இன்றும் சிறப்பித்துச் சொல்லப்படுபவர் தனித் தமிழரே. பார்ப்பனர் முன் காலத்தில் ஊனுண்டமைக்கு இரு சான்றுகள் தருகின்றேன் :
(1) அகத்தியர் தென்னாட்டிற்கு வந்தபோது, வில்வலன் சுவைத்தளித்த ஆட்டிறைச்சியை உண்டார்.
(2) கபிலர் தாம் ஊனுண்டதைப் பின் வரும் புறநானூற்றுச் செய்யுளில், தாமே குறிக்கின்றார்.
“புலவு நாற்றத்த பைந்தடி
பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை
கறிசோ றுண்டு வருந்து தொழி லல்லது
பிறிதுதொழி லறியா வாகலி னன்றும்
மெல்லிய பெரும் தாமே……….
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே” (புறம். 14)
இது “சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப்பற்றி, ‘ மெல்லியவா மால் நுங்கை’ எனக் கபிலர் பாடியது.
‘ உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்தி போல” என்னும் பழமொழியும் இங்கு நோக்கத் தக்கது.
இவற்றினின்றும், ஊனுண்ணாமை தமிழர் ஒழுக்காறே என்பது புலனாகும்.
ஒவ்வொரு நாட்டிலும்—அது எத்துணை நாகரிகமடைந்திருப்பினும்—நாகரிகம், அநாகரிகம் அல்லது உயர்ந்தது, தாழ்ந்தது என்னும் இரு கூறுகள் அருகருகே இருந்து கொண்டே யிருக்கும். தமிழ் நாட்டில் அங்ஙனமிருப்பவற்றுள் ஒவ்வொருவகையிலும் உயர்ந்ததையே தெரிந்து கொண்டனர் பார்ப்பனர். அதனாலேயே, அவர் எதிலும் உயர்வாகவே காணப்படுகின் றனர்.
பார்ப்பனர் தமிழரிடத்தில் நாகரிகம் பெற்றவரேயன்றித் தாம் அவர்க்குத் தந்தவரல்லர்; தமிழரிடத்தினின்றும் தாம் பெற்ற நாகரிகத்தையே ஆரியப் பூச்சுப்பூசி வேறாகக் காட்டுகின்றனர். ஆரியப் பூச்சாவது குலப்பிரிவினையும், பார்ப்பன வுயர்வும்,
தமிழர் ஆரியரிடத்தினின்று நாகரிகம் பெற்றவராயின், ஆரியர் வருமுன் தலைசிறந்த நாகரிகத்தை யடைந்திருந்து, அவர் வந்தபின் ஏன் வரவரத் தாழ்த்துவரவேண்டும். ஆகை யால், அக்கொள்கை உண்மைக்கும், இயற்கைக்கும் மாறான தென்று விடுக்க:
பார்ப்பளர் மதிநுட்பமுடையவர் எனல்
பார்ப்பனர் இதுபோது மதி நுட்பமுடையவரெனல் உண்மையே. ஆனால், அது எதனால் வந்தது. ஐயாயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பனருக்குக் கல்வியே குலத்தொழிலாயிருத்து வருதலால், பிறப்பிலேயே அவர்க்குக் கற்குந்திறன் சிறப்ப வாய்ந்துள்ளது. குலவித்தை கல்லாமற் பாகம் படும் என்றார் முன்றுறையரையனார், “மகனறிவு, தந்தையறிவு” என்றபடி ஒரு தலைமுறையிலேயே குலக் கல்வித் திறமை பிறப்பிலமைகின்றது. அங்ஙனமாயின், 5000 ஆண்டுகட்கு அத்திறமை எவ்வளவு பெருகியிருக்கவேண்டும்? தமிழரோ, சென்ற 2000 ஆண்டுகளாக ஆரிய வரணவொழுக்கத்தால் தாழ்த்தப்பட்டு உயர்தரக் கல்வியை இழந்தவர்கள், ஆங்கிலேயர் வந்த பிறகே, ஆங்கிலத்தின் மூலமாய்க் கண்திறக்கப்பட்டுச் சென்ற இரண்டொரு நூற்றாண்டுகளாக உயர் தரக் கல்வி கற்றுவருகின்றனர். அதற்குள் எவ்வளவோ மூன்னேற்ற மடைந்துவிட்டனர். இன்னும் இரண்டொரு நூற்றாண்டுகள் தொடர்ந்து கற்பின் தமிழர் தம் முன்னோரின் நுண்ணறிலைப் பெறுவது திண்ணம். எந்தக் குலத்தையும் தலைமுறைக் கல்வியால் அறிவிற் சிறந்த தாக்கலாம். கல்வி ஒருவரின் அல்லது குலத்தாரின் பங்கன்று:
தமிழர் உயர் தரக் கல்வியிழந்ததைப் பின்வரும் குறுப்பால் அறிக
“1610-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22 ஆம் நாள் ராபர்ட் டீ நொபிலி (Robert de Nobili) எழுதிய கடிதம் நாயக்க மன்னரின் கல்வியமைப்பைப்பற்றிச் சிறிது தெரிவிக்கின்றது, மதுரையில், 10,000 மாணவர்க்குமேல் இருக்கின்றனர், அவர்கள் பல வகுப்புக்களைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் தொகை 200 முதல் 300 வரையுளது. அவர்களெல்லாரும் பிராமணர்களே, ஏனென்றால், உயர் தரக் கலைகளைக் கற்சு அவர்களுக்குத் தான் உரிமையுண்டு. ……. மாணவரே தங்கள் ஊணுடைகளைத் தேடிக்கொள்வதாயிருந்தால், அவர்கள் படிப்புக் கெடுமென்று பிசுநகரும் பெரிய நாயக்கரும் சிறந்த மானியங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவற்றின் வருவாய் ஆசிரியன்மார் சம்பளத்திற்கும், மாணக்கர் வாழ்க்கைச் செலவிற்கும் போதுமானது.[23]
இங்ஙனம், தமிழ் நாட்டில், ஆரியக்கலை செழிக்கவும் தமிழ்க்கலை
“….சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம்
இடமிருந்தே குற்றேவல் செய்தோ மில்லை
என்னசென்மம் எடுத்துலகில் இருக்கின் றோமே”
என்று புலவர் வருந்துமாறு வறண்டது.
இங்கனம் பார்ப்பனர் உயர்தரக் கல்வியைத் தங்களுக்கே வரையறுப்பது, தங்களைப் பிறப்பிலேயே உயர்ந்தவராகவும், பிரமாவே தங்களைக் கல்விக்குரியவராகப் படைத்ததாகவும், கல்லாத் தமிழரிடம் காட்டி அவர்களை என்றும் அடிமைப் படுத்தற்கே.
ஆரியத்தால் தமிழ் கெட்டமை
தமிழ் மாது ஆரிய மொழியால் அலங்கரிக்கப் பெற்றிருப் பதாக, மஹா மஹோபாத்தியாய டாக்டர் ..வே. சாமிநாதய ரவர்கள், தங்கள் ‘சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்’ என்னும் நூலிற் கூறியிருக்கிறார்கள், இது எத்துணை உண்மையென ஆராயவேண்டும்.
1; வீண் வடசொல்.
வடமொழி தமிழ் நாட்டிற்கு வந்ததிலிருந்து, தூய்மை பான தென் சொற்களுக்குப் பதிலாக, வீணான வட சொற்கள் மேன்மேலும் வழங்கி வருகின்றன; அவற்றுட் சில வருமாறு
அங்கவஸ்திரம் – மேலாடை | அப்பியாசம் – பயிற்சி | |
அத்தியாவசியம் – இன்றியமையாமை | அபராதம் – குற்றம் (தண்டம்) அபிஷேகம் – திருமுழுக்கு |
|
அசங்கியம் – அருவருப்பு | அபிவிர்த்தி – மிகுவளர்ச்சி | |
அந்தரங்கம் – மறைமுகம் | அபூர்வம் – அருமை | |
அநேக – பல | அமாவாசை- காருவா |
அர்ச்சனை – தொழுகை (வழிபாடு) | உத்தேசம் – மதிப்பு | |
அர்த்தம்-பொருள் | உத்தியோகம் – அலுவல் | |
அவசரம் – விரைவு (பரபரப்பு) | உபத்திரவம் – நோக்காடு | |
அவசியம் – தேவை | உபகாரம் – நன்றி | |
அவயவம் – உறுப்பு | உபசாரம் – வேளாண்மை | |
அற்புதம்-புதுமை (இறும்பூது) | உபயானுசம்மதமாய் – இருமையால் நேர்ந்து | |
அன்ன சத்திரம் – உண்டிச் சத்திரம் | உபவாசம் – உண்ணா நோன்பு | |
அன்னவஸ்திரம் – ஊணுடை | உபாத்தியாயர் – ஆசிரியர் | |
அன்னியம் – அயல் | உற்சவம் – திருவிழா | |
அனுபவி – நுகர் | உற்சாகம் – ஊக்கம் | |
அனுஷ்டி – கைக்கொள் | உஷ்ணம் – வெப்பம் | |
அஸ்திபாரம் – அடிப்படை | கங்கணம் – வளையல்(காப்பு) | |
ஆக்கினை (ஆணை) – கட்டளை | கங்கண விஸர்ஜனம் – சிலம்பு கழி நோன்பு | |
ஆகாரம் – உணவு | ஜோதிடன் – கணியன் | |
ஆச்சரியம் – வியப்பு | கபிலை – குரால் | |
ஆசாரம் – ஒழுக்கம் | கருணை – அருள் | |
ஆசீர்வாதம் – வாழ்த்து | கர்வம் – செருக்கு | |
ஆதரி – தாங்கு (அரவணை) | கவி – செய்யுள் | |
ஆதியோடந்தமாய் – முதலிலிருந்து முடிவுவரை | கனகசபை – பொன்னம்பலம் | |
ஆபத்து – அல்லல் | கஷ்டம் – வருத்தம் | |
ஆமோதி – வழிமொழி | கஷாயம் – கருக்கு | |
ஆரம்பம் – துவக்கம், தொடக்கம் | காவியம் – தொடர்நிலைச் செய்யுள் | |
ஆரோக்கியம் – நலம், நோயின்மை | காஷாயம் – காவி | |
ஆலோசி – சூழ் | கிரகம் – கோள் | |
ஆயுள் – வாழ்நாள் | கிரீடம் – முடி | |
ஆனந்தம் – களிப்பு | கிருகப்பிரவேசம் – புது வீடு புகல் | |
ஆஸ்தி – செல்வம் | கிருபை – அருள், இரக்கம் | |
ஆக்ஷேபி -தடு | கிருஷிகம் – உழவு | |
ஆட்சேபணை – தடை | கோஷ்டி – குழாம் | |
இந்திரன் – வேந்தன் | சக்கரவர்த்தி – மாவேந்தன் | |
இருதயம் – நெஞ்சம், நெஞ்சாங்குலை | சக்தி – ஆற்றல் | |
இஷ்டம் – விருப்பம் | சகலம் – எல்லாம் | |
ஈஸ்வரன் – இறைவன் | சகஜம் – வழக்கம் | |
சகுனம் – குறி, புள் | ||
சகோதரன் – உடன் பிறந்தான் |
சங்கடம் – இடர்ப்பாடு | சுதி(சுருதி) – கேள்வி | |
சங்கரி – அழி | சுபம் – மங்கலம் | |
சங்கீதம் – இன்னிசை | சுபாவம் – இயல்பு | |
சத்தம் – ஓசை | சுயமாய் – தானாய் | |
சத்தியம் – உண்மை | சுயராஜ்யம் – தன்னாட்சி | |
சத்துரு – பகைவன் | சுரணை (ஸ்மரணை) – உணர்ச்சி | |
சந்ததி – எச்சம் | சுவர்க்கம் – துறக்கம், உவணை | |
சந்தி – தலைக்கூடு | சுவாசம் – மூச்சு(உயிர்ப்பு) | |
சந்திப்பு – கூடல் (Junction) | சுவாமி – ஆண்டான், கடவுள் | |
சந்திரன் – மதி, நிலா | சுவாமிகள் – அடிகள் | |
சந்தேகம் – ஐயம், ஐயுறவு | சேவகன் – இளையன் | |
சந்தோஷம் – மகிழ்ச்சி | சேவை – தொண்டு (ஊழியன்) | |
சந்நிதி – முன்னிலை | சேனாபதி – படைத்தலைவன் | |
சந்நியாசி – துறவி | சேனாவீரன் – பொருநன் | |
சம்பந்தம் – தொடர்பு | சேஷ்டை – குறும்பு | |
சம்பாஷணை – உரையாட்டு | சொப்பனம் – கனா | |
சம்பூரணம் – முழுநிறைவு | சோதி – நோடு | |
சமாச்சாரம் – செய்தி | சௌகரியம் – ஏந்து | |
சமுகம் – மன்பதை | ஞாபகம் – நினைப்பு | |
சமுசாரி – குடும்பி (குடியானவன்) | ஞானம் – அறிவு | |
சமுச்சயம் – அயிர்ப்பு | தயவு – இரக்கம் | |
சமுத்திரம் – வாரி | தருமம் – அறம் | |
சர்வமானியம் – முற்றூட்டு | தாசி – தேவரடியாள் | |
சரணம் – அடைக்கலம் | தானியம் – கூலம், தவசம் | |
சரீரம் – உடம்பு | தினம் – நாள் | |
சன்மார்க்கம் – நல்வழி | துக்கம் – துயரம் | |
சாதம் – சோறு | துரோகம் – இரண்டகம் | |
சாதாரணம் – பொதுவகை | துஷ்டன் – தீயவன் | |
சாஸ்திரம் – கலை (நூல்) | தேகம் – உடல் | |
சாஸ்வதம் – நிலைப்பு | தைலம் – எண்ணெய் | |
சாக்ஷி – கண்டோன் | தோஷம் – சீர் (குற்றம்) | |
சிங்காசனம் – அரியணை | நதி – ஆறு | |
சிநேகிதம் – நட்பு | நமஸ்காரம் – வணக்கம் | |
சிரஞ்சீவி – நீடுவாழி | நஷ்டம் – இழப்பு | |
சீக்கிரம் – சுருக்கு | நக்ஷத்திரம் – வெள்ளி (நாண்மீன்) | |
சுகம் – உடல் நலம் (அல்லது இன்பம்) | நாசம் – அழிவு | |
சுத்தம் – துப்புரவு | நாதம் – ஒலி | |
சுதந்தரம் – உரிமை | நிஜம் – மெய் நிச்சயம் – தேற்றம் |
நித்திரை – தூக்கம் | பிரயோகம் – எடுத்தாட்சி (வழங்கல்). | |
நியதி – யாப்புறவு | பிரயோஜனம் – பயன் | |
நியமி – அமர்த்து | பிரஜை -குடிகள் | |
நியாயம் – முறை | பிராகாரம் – சுற்றுமதில் | |
நீதி – நயன் | பிராணன் – உயிர் | |
பக்தன் – அடியான் (தேவடியான்) | பிராணி – உயிர்மெய் (உயிர்ப்பொருள்), உயிரி | |
பக்தி – தேவடிமை | பிராயச்சித்தம் – கழுவாய் | |
பகிரங்கம் – வெளிப்படை | பிரியம் – விருப்பம் | |
பசு – ஆன்(ஆவு) | பிரேதம் – பிணம் | |
பஞ்சேந்திரியம் – ஐம்புலன் | புண்ணியம் – நல்வினை (அறப்பயன்) | |
பத்திரம் – தாள் (இதழ்) | புத்தி – மதி | |
பத்திரிகை – தாளிகை | புத்திமதி – மதியுரை | |
பத்தினி – கற்புடையாள் | புருஷன் – ஆடவன் | |
பதார்த்தம் – பண்டம்(கறி) | புஷ்டி – தடிப்பு(சதைப்பிடிப்பு) | |
பதிவிரதை – குலமகள் (கற்புடையாள்) | புஷ்பம் – பூ | |
பந்து – இனம் | புஷ்பவதியாதல் – முதுக்குறைதல் (பூப்படைதல்) | |
பரம்பரை – தலைமுறை | பூமி – ஞாலம், நிலம் | |
பரிகாசம் – நகையாடல் | பூர்வீகம் – பழைமை | |
பரியந்தம் – வரை | பூரணசந்திரன் – முழுமதி | |
பக்ஷி – பறவை (புள்) | பூஜை – வழிபாடு | |
பாத்திரம் – ஏனம் (தகுதி) | போதி – கற்பி, நுவல் | |
பார்வதி – மலைமகள் | போஜனம் – சாப்பாடு | |
பாவம் – தீவினை | போஷி – ஊட்டு | |
பானம் – குடிப்பு (குடிநீர்) | பௌரணை – நிறைமதி | |
பாஷை – மொழி | மத்தி – நடு | |
பிச்சை – ஐயம் பிச்சைக்காரன் – இரப்போன் |
மத்தியானம் – நண்பகல் (உச்சிவேளை) | |
பிசாசு – பேய் | மயானம் – சுடுகாடு, சுடலை | |
பிரகாசம் – பேரொளி | மரியாதை – மதிப்பு | |
பிரகாரம் – படி | மாமிசம் – இறைச்சி | |
பிரசங்கம் – சொற்பொழிவு | மார்க்கம் – வழி | |
பிரசவம் – பிள்ளைப்பேறு | மிருகம் – விலங்கு | |
பிரசுரம் – வெளியீடு பிரத்தியக்ஷணம் – கண்கூடு |
முக்தி – விடுதலை | |
பிரதக்ஷணம் – வலஞ்செய்தல் பிரயாசம் – முயற்சி |
முகஸ்துதி – முகமன் | |
பிரயாணம் – வழிப்டோக்கு பிராணி – வழிப்போக்கள் |
மூர்க்கன் – முரடன் |
மைத்துனன் – அத்தான் (கொழுந்தன்), அளியன் | விநோதம் – புதுமை வியவகாரம் – வழக்கு |
|
மோசம் – கேடு | வியவசாயம் – பயிர்த்தொழில் | |
மோக்ஷம் – வீடு, பேரின்பம் | வியாதி – நோய் | |
யதார்த்தம் – உண்மை | வியாபாரம் – பண்டமாற்று | |
யமன் – கூற்றுவன் | விரதம் – நோன்பு | |
யஜமான் – தலைவன் (ஆண்டான்) | விரோதம் – பகை | |
யாகம் – வேள்வி | விஸ்தீரணம் – பரப்பு | |
யோக்கியம் – தகுதி | விஷம்- நஞ்சு | |
யோசி – எண் | வீரன்- வயவன் (விடலை) | |
ரகசியம் – மறைபொருள், மருமம் | வேசி – விலைமகள் | |
ரசம் – சாறு | வேதம் – மறை | |
ரணம் – புண் | வைத்தியம் – மருந்துவம் | |
ரத்தினம் – மணி | ஜயம் – வெற்றி | |
ரதம்- தேர் | ஜலதோஷம் – நீர்க்கோவை, (தடுமம் | |
ராசி – ஓரை | ஜன்மம் – பிறவி | |
ருசி – சுவை | ஜன்னி – இசிவு | |
ரோமம் – மயிர் | ஜனம் – நரல் (நரூள்) | |
லஜ்ஜை – வெட்கம் | ஜனசங்கியை – குடிமதிப்பு | |
லக்ஷ்மி – திருமகள் | ஜனன் மரணம் – பிறப்பிறப்பு | |
லாபம் – ஊதியம் | ஜாக்கிரதை – விழிப்பு | |
லோபம்- இவறன்மை | ஜாதகம் – பிறப்பியம் | |
லோபி- இவறி (கஞ்சன், பிசிரி ) | ஜாதி-குலம் | |
வசனம் – உரைநடை | ஜீரணம் – செரிமானம் | |
வமிசம் – மரபு | ஜீரணோத் தாரணம் – பழுது
பார்ப்பு |
|
வயசு – அகவை | ஜீவன் – உயிர் | |
வர்க்கம் – இனம் | ஜீவனம் – பிழைப்பு | |
மர்த்தகம் – வணிகம் | ஜீவியம் – வாழ்க்கை | |
வருஷம் – ஆண்டு | ஜோதி – சுடர் | |
வாத்தியம் – இயம் | ஸ்தாபனம் – நிறுவனம் | |
வாயு – வளி | ஸ்திரீ – பெண்டு | |
வார்த்தை – சொல் | ஸ்தோத்திரி – பராவு | |
விகடம் – பகடி | ஸ்நானம் – குளிப்பு | |
விசுவாசம் – நம்பிக்கை | க்ஷணம் – நொடி | |
விசனம் – வாட்டம் | க்ஷீணம் – மங்கல் | |
விசாரி – வினவு, உசாவு | க்ஷேமம் – ஏமம், நல்வாழ்வு (காப்பு) | |
விசேஷம் – சிறப்பு | சமீபம் – அண்மை | |
வித்தியாசம் – வேறுபாடு | தூரம் – சேய்மை |
இங்ஙனம் நூற்றுக்கணக்கான வடசொற்கள் தமிழில் வேண்டாமை (அனாவசியம்) யாய் வழங்குகின்றன. இவை எங்ஙனம் வந்தன? தமிழர் மொழி வடமொழியன்று. ஆகவே வடசொற்கள் தமிழர்கட்குத் தெரியா? அவை பார்ப்பனரே தொன்று தொட்டுச் சிறிது சிறிதாய்த் தமிழில் நுழைத்தவை யாகும். தமிழ் நாட்டுக் கல்வியும், மதமும் பார்ப்பனர் வயப் பட்டமையான், அவ்விரண்டையும் நிலைக்களமாகக் கொண்டு, பலவகையில் புகுத்தினவாகும் தமிழிலுள்ள வடசொற்கள், இன்றும், பல வடசொற்கள் தமிழுக்கு வந்துகொண்டேயிருக் கின்றன. பார்ப்பனர் தென் சொற்களை அறிந்திருத்தாலும், அவற்றிற்குப் பதிலாக வடசொற்களையே வழங்குவது வழக்கம். பழக்கத்தைப் பரிச்சயம் என்றும், சுவையாய் என்பதை ருசிகர மாய் அல்லது சுவாரசியமா’ என்றும் சொல்லுவர் அவர். கல்லாத தமிழர் பார்ப்பனரை உயர்ந்தாராக மயங்கினமையின், அவர் பேச்சைப் பின்பற்றுவது பெருமையென்று பின்பற்றினர். பார்ப்பனப் பாடகா, தமிழில் இப்போதுள்ள வடசொற்கள் போதாவென்று, திருமணத்தைப் பரிணயம் என்றும், அடியாரைப் பக்தரென்றும் கூறிவருகின்றனர்.
தமிழ் நாட்டில், பல பொதுவான தென் சொற்களுக்குப் பதிலாசு வடசொற்களை வழங்கினதுடன், ஆட்பெயரும், இடப்பெயரும் தெய்வப்பொருமான பல சிறப்புப் பெயர்களையும் மொழிபெயர்த்து வழங்கினர் பார்ப்பனர். கயற் கண்ணி, தடங்கண்ணி, அழகன் என்னும் ஆட்பெயர்கள் முறையே மீனாக்ஷி, விசாலாக்ஷி, சுந்தரன் என்றும்; பழமலை, மறைக்காடு என்னும் இடப்பெயர்கள் முறையே விருத்தாசலம், வேதாரண்யம் என்றும், ஆறுமுகம், சிவன், தாயுமான தெய்வம் என்னும் தெய்லப் பெயர்கள் முறையே, ஷண்முகம், சங்கரன், மாதுருபூதேஸ்வரர் என்றும் வழங்கி வருதல் காண்க.
ஒரு நாட்டார், இரண்டொருவராய், நாடு காண்பவர் போலும் . வழிப்போக்கர் போலும், பிழைக்கப்போபவர் போலும், மற்றொரு நாட்டிற் போயமர்ந்து, பின்பு பெருத் தொகையினரானவுடன். அந்நாட்டைக் கைப்பற்றுவது ஒரு. வலக்காரமான வழியாகும், இது மொழிக்கும் ஓக்கும், வட சொற்கள் தமிழில் மிகச் சிலவாயிருந்த பண்டைக்காலத்தில், தமிழைக் கெடுப்பதாகத் தமிழர்க்குத் தோன்றவில்லை : ஆனால், இதுபோதோ, – தமிழே வடமொழியினின்றும் பிறந்ததே என்று ஆராய்ச்சியில்லாதார் தம்புமளவு: அளவிறந்த வடசொற்கள் தமிழிற் கலந்துள்ளன;
வடசொற்கலப்பினால் தமிழுக்கு நேர்ந்த தீங்குகளாவன :—
(1) தமிழ்ச்சொற்கள் வழக்கற்று மறைதல்.
(2) தமிழின் தூய்மை கெடல்.
(3) தமிழ்ச்சொற்கள் பொருளிழத்தல்,
குடும்பம், இல், குடி, குலம், வரணம், மரபு என்னும் பெயர்கள், முறையே ஒரு சிறிய அல்லது பெரிய (ஒரு தலை முறையுள்ள அல்லது பல தலை முறை யடங்கின) குடும்பத்தையும், தாய்வழி தந்தைவழிகளையும், கோத்திரத்தையும், ஜாதியையும், நிறம் பற்றிய (வெண்களமர், கருங்களமர், அல்லது ஆரியர், திராவிடர் என்பன போன்ற) பெரும் பிரிவுகளையும், குலவழித்தொடர்பை (descent)யும் குறிப்பனவாகும்.[24] ஆனால், இப்பொருள் வேறுபாடு இன்று எல்லார்க்கும் புலனாவதில்லை,
பசும்பால் என்பது காய்ச்சாத பாலையும், பசிய நிறமான வெள்ளாட்டுப் பாலையும் குறிப்பதாகும். [25]பசுவின் பால் பசுப்பால் என்றே கூறத் தக்கது. பசுப்பாலை ஆவின் பால என் றனர் முன்னோர்.
காட்டு என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக, உதாரணம் என்னும் வடசொல் வழங்கவே, அது தன் பொருளையிழந்து காண்பி என்னும் பொருளில் வழங்குகின்றது
(4) புதுச்சொற்புனைவின்மை.
தனித்தமிழ் வளர்ந்திருந்தால், ஆஸ்திகம், நாஸ்திகம் என்னும் வடமொழிப் பெயர்களுக்குப் பதிலாக உண்மதம், இன்மதம், அல்லது நம்புமதம், நம்பா மதம் என்பனபோன்ற தென்மொழிப் பெயர்கள் வழங்கியிருக்கும்.
(5) தென்சொல் வடசொல்போலத் தோன்றல்;
கலை. மீனம் முதலிய தனித்தமிழ்ச் சொற்கள் வடசொற்கள் போலத் தோன்றுகின்றன.
(6) தென்சொல்லை வடசொல்போல ஒலித்தல்.
குட்டம், முட்டி என்னும் தமிழ்ச்சொற்கள், குஷ்டம், முஷ்டி என்று வடமொழியில் வழங்குவதுபோல, வேட்டி என்னும் தமிழ்ச்சொல்லும், உலக வழக்கில் வேஷ்டி என்று வலித்தலும் காண்க.
(7) சில சொற்கள் தென்சொல்லா வடசொல்லாவென்று மயங்கற்கிடமாதல், எ-டு. மந்திரம்.
(8) தமிழர் தாய்மொழியுணர்ச்சியிழத்தல்.
ஏற்கனவே ஏராளமான வடசொற்கள் தமிழில் வந்து அடர்ந்தபின், மகமதிய ஆட்சியில் பல உருதுச் சொற்கள் தமிழில் வந்து கலந்தன. அவற்றுட்சிலவாவன:
அகஸ்மாத் | கோஷா | பவுஞ்சு | ஜமாபந்தி |
அசல் | சபாஷ் | பிராது | ஜமீன் |
அதாலத் | சாமான் | பைசல் | ஜமேதார் |
அமீனா | சுபேதார் | மகஜர் | ஜல்தி |
அமுல் | டபேதார் | மசோதா | ஜவாப் |
அர்ஜீ | டாணா | மஜூதி | ஜவாப்தாரி |
அவுல்தார் | தமாஷ் | மராமத் | ஜவான் |
ஆஜர் | தஸ்தவேஜ் | மாஜி | ஜாகிர்தார் |
உண்டியல் | தாக்கல் | மிட்டாதார் | ஜாகை |
உஷார் | தாக்கீது | மிட்டாய் | ஜாட்டி |
கச்சேரி | தாசில்தார் | ரத்து | ஜாப்தா |
கசாய் | தாலுக்கா | ரஜா | ஜாமீன் |
(கசாப்பு) | தைவி | ராஜிநாமா | ஜாரி |
கஜாளா | தொகையரா | லங்கோடு | ஜால்ரா |
காலி | நகல் | லடாய் | ஜாலக் |
கில்லேதார் | நமூனா | லாடம் | ஜாலர் |
கிஸ்து | நாஷ்ட்டா | லுங்கி | ஜிகினா |
கேலி | பசலி | லேவாதேவி | ஜிம்கானா |
கைலி | படுதா | வார்சு | ஜிமிக்கி |
கொத்தவால் | பர்வா | ஜப்தி | ஜில்லா |
ஜீனி | ஜோர் | ஷரா | ஷோக் |
ஜெண்டா | ஷர்பத் | ஷராய் | ஹுக்கா |
ஜேப்பு | ஷரத்து | ஷராப்பு | ஹோதா |
(இவற்றுட் சில, உருதுவிற் கலந்த இந்திச் சொற்களாகும்.)
மகமதிய ஆட்சியின்பின், ஆங்கில ஆட்சியில் தமிழிற் கலந்த ஆங்கிலச் சொற்களை இங்கெடுத்துக் கூறவேண்டுவதில்லை.
தேசியம் என்னும் நாட்டியல் இயக்கத்தில், தமிழிற் சில ஆரியச்சொற்கள் கலந்துள்ளன.
எ – டு : காங்கிரஸ் (இங்கிலீஷ்), மகாத்மா, சத்தியாக்கிரகம், வந்தேமாதரம், பாரதமாதா, ஜே, பிரச்சாரம், சுயராஜ்யம், ராஷ்ட்டிரபாஷா, சுதந்தரப் பிரதிக்ஞை.
இங்ஙனம் பற்பல மொழிகளினின்றும், பலப்பல சொற்கள் தமிழில் வந்து வழங்கினது. தமிழில் அவற்றுக்கு நேர்சொல் இல்லாமலோ, அவற்றின் பொருளுக்கேற்ற புதுச் சொற்கள் புனைய முடியாமையாலோ அன்று; தமிழர்க்குத் தாய் மொழி யுணர்ச்சியில்லாமையாலேயே. தமிழ் தமிழர் வயமில்லாது ஆரிய வயப்பட்டுக் கிடக்கின்றது.
(2) பாட்டியலில் எழுத்துக்கும் செய்யுளுக்கும், செய்யுள் நூலுக்கும் குலம் வகுத்தல்.
பன்னீருயிரும் முதலாறுமெய்யும் பார்ப்பன வரணம்; அடுத்த ஆறுமெய்கள் அரச வரணம்; அதற்கு அடுத்த நான்கு மெய்கள் வணிக வரணம்; இறுதி இரண்டு மெய்யும் சூத்திர வரணம் என்பதும்;
பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப்பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டும் என்பதும்;
கலம்பகம் பாடும்போது, தேவருக்கு 100 செய்யுளும், பார்ப்பனருக்கு 95 செய்யுளும், அரசர்க்கு 90 செய்யுளும், அமைச்சருக்கு 70 செய்யுளும், வணிகர்க்கு 50 செய்யுளும், மற்றவர்க்கு 30 செய்யுளும் பாடவேண்டும் என்பதும் பாட்டியல் விதிகளாகும்.
(3). தமிழுக்கும் தமிழர்க்கும் மாறானவும் கேடானவுமான, ஆரியக் கருத்துக்கள் தமிழ் நூல்களிற் கலத்தல்.
(4) வரலாற்றுண்மையற்றனவும், மதியை மழுங்கச் செய்பவுமான ஆரியப் பழமைகள் தமிழில் மொழிபெயர்க்கவும் இயற்றவும் படல்.
இவை தமிழுக்கு அலங்காரமா, அலங்கோலமா என்று நடுநிலை அறிஞர் அறிந்துகொள்க.
ஆரியத்தால் தமிழர் கெட்டமை
பிரிவினை, அடிமைத்தன்மை, மறமிழத்தல், வறுமை, பகுத்தறிவின்மை, உயர்தரக்கல்வியும் நாகரிகமுமின்மை, தாய் மொழி வெறுப்பு, தற்குலப்பகை முதலியன, ஆரியத்தால் தமிழர்க்கு நேர்ந்த தீங்குகளாகும். ஆரியர் வந்ததிலிருந்து தமிழர் பலவகையிலும் கெட்டு வந்ததை நோக்குமிடத்து, ‘தமிழர்கேடு — பார்ப்பனர் ஆக்கம்’ என்னும் முறைபற்றியே காரியங்கள் நடந்து வந்திருக்கின்றன என்பதை அறியலாம்.
பார்ப்பனர் பாட்டுத் தொழிலை மேற்கொண்டதால் பாணர் பிழைப்பும், கணியத் தொழிலை மேற்கொண்டதால் வள்ளுவர் பிழைப்பும், வடமொழியைத் தலைமையாக்கியதால் தமிழ்ப் புலவர் பிழைப்பும் கெட்டன.
தாழ்த்தப்பட்டோர் ஊர்ப் பொதுக் குளங்களில் குளிக்கக் கூடாதென்றும், அக்கிராகர வழியாகச் செல்லக் கூடாதென்றும், மேலாடையணியக்கூடாதென்றும், இன்னும் சில ஊர்களில் இருந்து வருகின்றது. மேல் வகுப்பாரைக் கண்டவுடன் ஐம்புலனும் ஒடுங்கி, அவர் ஏவல்வழி நிற்கின்றனர் தாழ்த்தப்பட்டோர். இன்னோர்க்கு மறம் எங்ஙன் உண்டாகும்?
பிறர் தாழ்த்தி வைக்கிறதினாலேயே, பெரும்பாலும் தாழ்ந்து கிடக்கின்றனர் கீழோர். மேனாட்டார்க்குச் சமையல் செய்யும் பறையர், மிகத் துப்புரவாயிருப்பதையும், பார்ப்பனரும் அவரிடத்து உண்பதையும் நோக்குக. இங்ஙனம் அவரினத்தாரெல்லாம் திருந்தக் கூடும். கல்வியொன்றே அவர்கட்குத் தேவையானது.
ஆரிய தமிழப் போர் தொன்றுதொட்டதாதல்
ஆரியதமிழப் போர் இந்தியர்க்குள், முக்கியமாய்த் தமிழர்க்குள் பிரிவினையுண்டாக்குமாறு ஆங்கிலேயரால் தோற்றுவிக்கப்பட்ட தென்றும், அடிமைத் தமிழரான நீதிக் கட்சியார் அதைக் கடைப்பிடித்து வருகின்றனரென்றும், ஒரு சாரார் கூறி வருகின்றனர்.
ஆரிய தமிழ (திராவிட)ப்போர், ஆரியர் இந்தியாவில் கால்வைத்த நாள் முதலாய் நடந்து வருவது, சரித்திரத்தால் அறியப்படும். ஆரிய மறைகளும் அதற்குச் சான்றாகும்.
பிராமண மதத்திற்கு மாறாகப் பௌத்த மதத்தைத் தோற்றுவித்த புத்தர், வடநாட்டிலிருந்த ஒரு திராவிட வகுப்பாரே. பிரிவினையென்னும் படையால், திராவிடரைக் கொண்டே திராவிடரை வென்று வடநாட்டை ஆரியர் கைப்பற்றும் வரையும், போர் நடந்துகொண்டே இருந்தது.
ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்தபின், அவர் முறைகளைத் தமிழ்நாட்டிற்குத் தீங்கு விளைப்பனவாகக் கண்ட பல தமிழறிஞர், அவ்வப்போது அவற்றைக் கண்டித்து வந்திருப்பதை, நெடுகக் காணலாம்.
செங்குட்டுவ கனகவிசயப் போர் பதினெண் நாழிகையும், பாரதப்போர் பதினெண் நாளும், இராம விராவணப் போர் பதினெண் மாதமும்) தேவ அசுரப்போர் பதினெண் ஆண்டும், நடந்ததாகச் சொல்லப்படும். ஆயின், ஆரிய தமிழப்போரோ பதினெண் நூற்றாண்டாக நடந்துவருகின்றது.
ஆய்ந்து நோக்கின் தேவ அசுரப் போர் என்பது ஆரிய திராவிடப் போரே. சேரநாட்டுச் செங்கோல் வேந்தனும் மாபெருங் கொற்றவனுமாகிய மாவலி அசுரனென்றும் பிராமணர் பூசுரர் (நிலத்தோர்) என்றும், கூறப்படுதல் காண்க. தமிழச்சித்தர் இலக்கியத் தொண்டும், நேர்மைக் கட்சியின் (Justice Party) அரசியல் தொண்டும், ஆரிய திராவிடப் போராட்டமே.
(1) நக்கீரர்
கடைக்கழகக்காலத்தில், ஒருநாள், வடமொழியறிந்த ‘கொண்டான்’ என்னுங் குயவன் ஒருவன், பட்டிமண்டபமேறி “வட மொழியே சிறந்தது; தமிழ் சிறந்ததன்று” என்று கூற, நக்கீரர் சினந்து,
“முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி—அரணிலா
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்
ஆனந்தஞ் சேர்கசுவா கா”
என்று பாடினதும், அக் குயவன் வீழ்ந்திறந்தான். பின்பு அங்கிருந்த பிறர் அவனுக்காகப் பரிந்துபேச,
“ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் — சீரிய
அந்தண் பொதிய லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்கசுவா கா”
என்று பாடி அவனை உயிர்ப்பித்தார்.[26]
நக்கீரர் பார்ப்பாரேயாயினும், நடுவுநிலைமையும் வாய்மையும் தமிழ்ப்பற்றும் உடையவராதலின், ஆரியவொழுக்கத்தை அறவே விட்டுவிட்டுத் தமிழவொழுக்கத்தை மேற்கொண்டார். தமிழின் தொன்முது பழமையையும், அதற்கு இடையிடை நேர்ந்த பல பெருந் தீங்குகளையும் நோக்குமிடத்து, நச்சினார்க்கினியர், பரிதிமாற் கலைஞர் (சூரியநாராயண சாத்திரியார்) போன்ற ஆரியப் பார்ப்பனர் இல்லாதிருந்திருப்பின், தமிழ் மிகக் கெட்டுப் போயிருக்கும்.
(2) திருவள்ளுவர்
[27]“அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்”,
“எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”,
“ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்”,
“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”,
“அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று”
“ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவின் இளிவந்த தில்”[28]
முதலிய பல குறள்கள் ஆரியவொழுக்கத்தைக் கண்டிப்பன வாகும்.
(3) பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
“வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே”[29]
இது ஆரியக் கொள்கைக்கு மாறாகும்.
(4) கம்பர்
கம்பர் ஒருமுறை வறுமையுற்றிருந்தபோது, பசியால் வாடி, ஒரு செட்டி கடைக்குச் சென்று அவல் கேட்டார். அவன் போணியாகவில்லையென்று சொல்லிவிட்டான். பின்பு, செக்காட்டிக்கொண்டிருக்கும் ஒரு செக்கானிடம் சென்று, பிண்ணாக்குக் கேட்டார். அவன் “இன்னும் எண்ணெயெடுக்க வில்லை” என்று சொல்லிவிட்டான். அதன்பின், ஒரு பார்ப்பான் வீட்டிற்குச் சென்று உணவு கேட்க, அவன் “சூத்திரனுக்குச் சோறிட்டால் குற்றம், போ” என்று சொல்லிவிட்டான்.
பின்பு, கம்பர் காட்டு வழியாகச் சென்றுகொண்டிருக்கும் போது, அங்கு உழுதுகொண்டிருந்த ஓர் உழவன், கம்பர் சோர்வைக் கண்டு, தான் வைத்திருந்த கூழை அவருக்கு வார்த்து, அவர் பசியைப் போக்கினான். அப்போது கம்பர்,
“செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப்
பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே — முட்டிபுகும்
பார்ப்பா ரகத்தையெட்டிப் பாரோமே எந்நாளும்
காப்பாரே வேளாளர் காண்”
என்று பாடினார்.
கீழ்வரும் கம்ப ராமாயணச் செய்யுளால், பார்ப்பனர் பேரவாவுடையவர் என்று கம்பர் கருதினதாக அறியலாம்.
“பரித்த செல்வ மொழியப் படருநாள்
அருத்த வேதியர்க் கான்குல மீந்தவர்
கருத்தி னாசைக் கரையின்மை கண்டிறை
சிரித்த செய்கை நினைந்தழுஞ் செய்கையாள்”
(சுந்தர காண்டம், காட்சிப்படலம். 26)
பார்ப்பனப் பேரவாவைப்பற்றிப் பஞ்சதந்திரக் கதையிலும் ஒரு செய்தியுளது.
நட்புப்பேறு (சுகிர்லாபம்) என்னும் வலக்காரத்தைப் பற்றிய கதைகளுள், ‘புலியும் பிராமணனும்’ என்பது ஒன்று. பிராமணன் புலியின் பொற்காப்பிற்கு அவாக்கொண்டு, அதனிடம் சென்றான்; தான் அதனால் வஞ்சிக்கப்பட்டதை அறிந்தபோது, ‘நம்முடைய சாதிக்கு இயல்பாயிருக்கிற பேராசையினால், இந்தத் துஷ்டனிடத்தில் விசுவாசம் வைத்து மோசம் போனேன்’ என்று சொல்லி வருந்தினதாக அதிற் கூறப்பட்டுள்ளது.
சீவகசிந்தாமணியின் 400ஆம் செய்யுளில், “அந்தணர் தொழிலே னானேன்” என்று அந்தணர்க்குச் சால்வு (திருப்தி) தொழிலாகக் கூறியது முனிவரை நோக்கியென்க.
(5) ஔவையார்
சோழன் ஒருமுறை ஒளவையாரை நோக்கி எக்குலத்தானை அமைச்சனாகக் கொள்ளலாம் என்று வினவ, அவர்,
“நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்
கோலெனிலோ வாங்கே குடிசாயும் — நாலாவான்
மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான்
அந்த வரசே யரசு”
என்று கூறினதாகத் தனிப்பாடற்றிரட்டில் உள்ளது.
“காடுகெட ஆடுவிடு ஆறுகெட நாணலிடு
ஊர்கெட நூலைவிடு…”
என்பது பழமொழி.
“சாதி யிரண் டொழிய வேறில்லை……
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்…”
என்ற நல்வழி வெண்பாவும் ஆரியக்குல முறையை மறுத்ததாகக் கொள்ளலாம்.
(6) அதிவீரராமபாண்டியன்.
“எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடிக் கற்றோரை மேல்வருக வென்பார்”
(7) சித்தர்.
சிவவாக்கியர்
“மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்
சாதிபோத மாயுருத் தரிக்குமாறு போலவே
வேதமோது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கலாத வாறதென்ன பேதமே”
பத்திரகிரியார்
“சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு சுகம்பெறுவ தெக்காலம்.”
அகஸ்தியர் :
“தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளே
தாயான பூரணத்தை யறிந்த பின்பு
தேனென்ற வமுதமதைப் பானஞ் செய்து
தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்
ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கு
ஒருநான்கு வேதமென்றும் நூலா ரென்றும்
நானென்றும் நீயென்றும் பலஜாதி யென்றும்
நாட்டினா ருலகத்தோர் பிழைக்கத் தானே.”
பாம்பாட்டிச் சித்தர்
“சாதிப் பிரிவிலே தீ மூட்டுவோம்”
இதுகாறும் கூறியவற்றால், ஆரியர் வேறு திராவிடர் வேறு என்பதும், பார்ப்பனர் ஆரியரே என்பதும், வெள்ளிடை மலையாதல் காண்க. பார்ப்பனர் — அபார்ப்பனர் என்று பிரித்து, ஒரு மன்பதை மற்றொரு மன்பதையை வெறுப்பது விலங்குத் தன்மையே. ஆனால், இவ் வெறுப்பை நீக்குவதற்கு, அவ் விரண்டையும் இசைக்கும் வழிகளைக் கையாடவேண்டுமேயன்றி, ஆரியரும் திராவிடரும் ஒரு குலத்தாரென்பதும், பார்ப்பனர் தமிழரேயென்பதும், தமிழ்வடமொழியினின்றும் வந்தது என்பதும் தவறாகும். இதனால், குலநூல் (Ethnology), மொழிநூல் (Philology), சரித்திரம் (History) என்ற முக்கலைகளும் கெடுவதாகும். ஜெர்மனியில், ஹிட்லர் யூதரைத் துரத்துவது கொடிதே. ஆனால், அவ் யூதரைக் காப்பதற்குரிய வழிகளைத் தேடாமல், யூதரும் ஜெர்மானியரே என்று சொல்லின் எங்ஙனம் பொருந்தும்?
பார்ப்பனர் தமிழ் நூற்கன்றித் தமிழ்மொழிக்
கதிகாரிகளாகாமை
இப்போதுள்ள முறைப்படி, பார்ப்பனர் தமிழ்நூல் களைக் கற்றுச் சிறந்த புலவராகலாமேயொழியத் தமிழ் மொழிக்கும் தமிழக் கருத்துகட்கும் அதிகாரிகளாக முடியாது. அதற்குக் காரணங்களாவன:
(1) ஆரிய மனப்பான்மை
ஒவ்வொரு நாட்டார்க்கும் ஒவ்வொரு மனப்பான்மையுண்டு. அதனால் சில கருத்துகள் வேறுபடும். கருத்து வெளிப்பாடே மொழி. ஒவ்வொரு மொழியின் அமைதியும், இலக்கணம் (Grammar), மரபு (Idiom) என இருவகைப்படும். ஒரு மொழியின் இலக்கணத்தையும் அதிலுள்ள நூல்களையும், எவரும் அம் மொழியை எழுதப் படிக்கத் தெரிந்தவுடன், தாமே கற்கலாம்; ஆனால், அம் மொழியின் மரபையும், அம் மொழியாரின் விதப்புக் கருத்துகளையும் தாமே அறியமுடியாது.
பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து பல நூற்றாண்டுகளாகியும், தமிழரோடு கலவாமல், தமித்தே யிருந்துவந்தமையின், தமிழ் மரபையும் தமிழக் கருத்துகளையும் முற்றும் அறிந்தாரில்லை.
பார்ப்பனர் எப்போதும் வடநாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், வடமொழியையே தங்கள் முன்னோரின் மொழியாகவும் கருதிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தமி ழரோ எப்போதும் தென்னாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், தமிழையே தங்கள் முன்னோரின் மொழியாகவும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவ்வொரு வேறுபாடே இவ்விரு வகுப்பாரையும் எவ்வளவோ பிரித்துக்காட்டும்.
நூல் என்னுஞ் சொல் முதலாவது, ஒரு சூத்திரத்தாலும் பல சூத்திரத்தாலும் ஆன இலக்கணத்தையும், இலக்கணம் போன்ற கலை(Science)யையுங் குறித்ததாகும். இப்போது, அது புத்தகத்திற்கு வழங்கினும், புத்தகத்தின் பொருளைக் குறிக்குமேயன்றி, அதன் தாள்தொகுதியைக் குறிக்காது: புத்தகம் என்னும் பெயரே தாள் தொகுதியைக் குறிக்கும்: இது பல பார்ப்பனருக்கு விளங்குவதில்லை.
நண்டுக்குட்டி, கம்பவைக்கோல் என்பனபோன்ற மரபு வழு பார்ப்பனர்க்குள் மிகப்பொது.
(2) நாட்டுப்புறத்தாரோடு தொடர்பின்மை
ஒவ்வொரு மொழியிலும், சொற்கள் உலகவழக்கு, நூல் வழக்கு என இருபாற்படும். உலகவழக்குப் பொதுமக்கட்கும், நூல்வழக்குப் புலவர்க்கும் உரியனவாகும். பொதுமக்களிலும், நகர்ப்புறத்தாரினும் நாட்டுப்புறத்தாரே உலக வழக்கிற்குச் சிறந்தாராவர். உலகவழக்கு ஒரு மொழிக்கு உயிரும் நூல் வழக்கு அதற்கு உடம்புமாகும்.
பார்ப்பனர் தங்களை நிலத்தேவராக எண்ணிக் கொண்டு, குடியானவருடனும் தாழ்ந்தோருடனும் நெருங்கிப் பழகாமையால், தமிழ்ச்சொற்கள் பலவற்றை அறிந்திலர்.
(3) வடமொழிப்பற்றும் தமிழ்ப்பற்றின்மையும்
வீணாக வடசொற்களை வழங்குவதினாலும், மணிப்பவள நடையிலும் தற்சம நடையையே பின்பற்றுவதாலும், ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்காதே தமிழில் எழுதுவதாலும், ஒருகால் மொழிபெயர்ப்பினும் வடசொற்களாகவே பெயர்ப்பதாலும், தனித்தமிழை விலக்குவதாலும், தென்சொற்களை வடசொற்களென்று கூறுவதினாலும் பார்ப்ப னருக்குத் தமிழ்ப் பற்றில்லையென்பது வெட்டவெளியாம்.
“ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரனது கிருபையால் ஸம்ஸாரி சேதநர்களின் உஜ்ஜீவனத்தின் பொருட்டு,” ‘யூநிவர்சிட்டி’ (பல்கலைக்கழகம்), லெக்சரர் (சொற்பொழிவாளர்), கமிட்டி (குழு), ஸ்கூல் பைனல் (பள்ளியிறுதி), ஆகர்ஷண சக்தி (இழுப்பாற்றல்), நிரக்ஷரேகை (நண்கோடு), மத்தியதரை (நண்ணிலம்), தசாம்சம் (பதின்கூறு), சதவீதம் (நூற்றுமேனி), வியாசம் (விட்டம்) முதலிய வழக்குகளால், தமிழ்ப்பற்றின்மை வெளியாதல் காண்க.
(4) வடமொழியைத் தென்மொழிக்கு அளவையாகக் கொள்ளல்
தமிழ்நூல்களுக்கு வடநூல்களை மேல்வரிச் சட்டமாக வைத்துக்கொண்டு, அவற்றைத் தழுவியே பொருளுரைத்து வருகின்றனர் பார்ப்பனர். தமிழ் முதனூல்கள் வடமொழி முதனூல்களினின்றும் கருத்தில் வேறுபட்டதுமன்றி, அவற்றுக்கு மிக முந்தியவுமாகும் என்பதை அவர் அறிந்திலர்.
பரிமேலழகர், தென்புலத்தாரைப் “படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி” என்றார். தென் புலத்தார் (பிதிர்க்கள்) தத்தம் காலத்தில் உலகில் வாழ்ந்து இறந்துபோனவராயிருக்க, அவரைப் படைப்புக் காலத்துப் படைக்கப்பட்டவர் என்று கொள்ளுதல் எங்ஙனம் பொருந்தும்? இதன் பிழைபாடும், இன்னோரன்ன பிறவும் பின்னர்க் காட்டப்படும். வடநூலைப் பின்பற்றிச் சேனா வரையர், சிவஞான முனிவர், சங்கர நமச்சியவாயப் புலவர், சுவாமிநாத தேசிகர் முதலிய தனித்தமிழருங்கூடப் பல இலக்கணங்களில் தவறி விட்டனர். இவற்றை யெல்லாம் எனது தொல்காப்பியவுரையிற் கண்டு கொள்க.
திருவையாற்றுக் கீழைக் கலைக்கல்லூரித் தலைவ ராகிய, பண்டாரகர் சுப்பிரமணிய சாத்திரியார், சில ஆண்டுகளாகத் தமிழுக்கு மாறான சில நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டு வருகின்றார். அவற்றுள், ‘தமிழ்மொழி நூல்’ என்பது ஒன்று. அதில், ஆராய் என்னுஞ் சொல்லில் ‘ர்’ செருகல் (intrusion) என்று கூறியுள்ளார். ஆராய் என்பது ஆய் என்பதன் மிகுப்பு (intensive). ஆர (நிரம்ப) + ஆய் = ஆராய். தீரமானி என்பது தீர்மானி என்றும், செய்யவா என்பது செய்வா என்றும் வழங்குதல் காண்க.
இன்னும், தொல்காப்பிய நூன்மரபில்,
“லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும்”
“ணனஃகான் முன்னர்க்
க-ச-ஞ-ப ம-ய-வவ் வேழு முரிய”
“ஞ-ந-ம-வ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே”
“மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும்”
என்னும் ( 24,26,27,28) நூற்பாக்களைப் பிறழவுணர்ந்து பண்டைத் தமிழ்ச் சொற்களினிடையில், ல்ய, ல்வ, ள்ய, ள்வ, ண்ய, ண்வ, ன்ய, ன்வ, ஞ்ய, ந்ய, ம்ய, வ்ய, ம்வ என்னும் இணைமெய்கள் பயின்றதாகக் கூறியுள்ளார். இவர் இங்ஙனம் துணிவதற்குக் காரணமென்ன வெனின், நச்சினார்க்கினியர், மேற்கூறிய நூற்பாக்களுள், முதலதற்கு,
எ-டு: கொல்யானை, வெள்யாறு.
“இவற்றுட் கொல்யானை என வினைத்தொகையும், வெள்யாறு எனப் பண்புத்தொகையும், நிலைமொழி வரு மொழி செய்வதற்கு இயையாமையின், ‘மருவின் பாத்திய’ என்று கூறுவாராதலின், இவ் வாசிரியர் இவற்றை ஒருமொழி யாகக் கொள்வரென்று உணர்க. இக் கருத்தானே மேலும், வினைத்தொகையும் பண்புத்தொகையும் ஒருமொழியாகக் கொண்டு, உதாரணங் காட்டுதும்” என்று கூறினவர், பின்பு, “அன்றி இவ் வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து, வினைத் தொகைக் கண்ணும் பண்புத் தொகைக் கண்ணுமன்றி, ஒரு மொழிக் கண்ணே மயங்குவனவு முளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணமில்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமற்போதலே நன்றென்று கூறலுமொன்று” என்றும்;
மூன்றாவதற்கு,
“இங்ஙனம் ஆசிரியர் சூத்திரஞ் செய்தலின், அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றாம். அவை இக்காலத்து இறந்தன.
“இனி உரையாசிரியர் உரிஞ்யாது, பொருந்யாது, திரும் யாது, தெவ்யாது என இருமொழிக்கண் வருவன உதாரண மாகக் காட்டினாராலெனின், ஆசிரியர் ஒருமொழியாமாறு ஈண்டுக் கூறி, இருமொழி புணர்த்தற்குப் புணரியலென்று வேறோர் இயலுங் கூறி, அதன்கண், ‘மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியும்’ (எழு. 107) என்று கூறினார். கூறியவழிப் பின்னும் ‘உகரமொடு புணரும் புள்ளி யிறுதி’ (எழு. 163) என்றும், பிறாண்டும், ஈறுகடோறும் எடுத்தோதிப் புணர்ப்பர் ஆதலின், ஈண்டு இருமொழிப் புணர்ச்சி காட்டிற் கூறியது கூறலென்னும் குற்றமாம். அதனால், அவை காட்டுதல் பொருந்தாமை உணர்க” என்றும்;
நாலாவதற்கு,
“இதற்கும் உதாரணம் இக்காலத்து இறந்தன. அன்றி, வரும் வண்ணக்கன் என்றாற்போல்வன காட்டின், ‘வகார மிசையு மகாரங் குறுகும்’ (எழு. 330) என்ற விதி வேண்டா வாம்” என்றும் கூறினதேயாம். இக் கூற்றுக்குக் காரணம்
நச்சினார்க்கினியர் தொகைச் சொல்லை (compound word) ஒரு சொல்லாகக் கொள்ளாமையும், கூறியது கூறலுக்கும் வழிமொழிதலுக்கும் வேறுபாடறியாமையுமே யாகும்.
“எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய”
என்றார் தொல்காப்பியர்.(எச்சவியல் 24)
தண்ணீர், புன்செய், மண்கொண்டான், பிழைபொறுத் தான் முதலிய தொகைப்பெயர்கள் எல்லாம் ஒருசொல் நடையவதால் காண்க.
நெஸ்பீல்டு (Nesfield) என்பவர், தம் ஆங்கில இலக் கணப் புத்தகத்தில், “ஒருசொல் தன்மையடையும்படி இரு சொல் புணர்ந்தது தொகைச்சொல்” என்றுகூறி ink-pot (மைக் கூடு), door-step (படிக்கட்டு), horse-shoe (குதிரைக் குளம் பாணி), drinking-water (குடிநீர்) என்று உதாரணங் காட்டினர்.[30]
இனி, நச்சினார்க்கினியர் கொள்கைப்படி கொள்ளின்; கூறியது கூறலாகத் தொல்காப்பியத்தில் எத்தனையோ நூற் பாக்களிருக்கின்றன.
“புணரியல் நிலையிடைக் குறுகலு முரித்தே
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்”
என்று நூன்மரபிற் கூறியதை,
“யகரம் வரும்வழி இகரங் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது”
எனக் குற்றியலுகரப் புணரியலுள்ளும்,
“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்”
என்று நூன்மரபிற் கூறியதை,
“மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்”
என்று புணரியலுள்ளும்,
“உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்
றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே”
என்று புணரியலிற் கூறியதை,
“உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை யென்மனார் அவரல பிறவே”
என்று கிளவியாக்கத்துள்ளும்,
“இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே
கடப்பா டறிந்த புணரிய லான”
என்று மொழிமரபிற் கூறியதை,
“வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்
தொல்லை யியற்கை நிலையலு முரித்தே”
என்று குற்றியலுகரப் புணரியலுள்ளும் கூறியிருப்பதைக் காண்க.
நச்சினார்க்கினியர் எவ்வளவோ தமிழ்ப்பற்றும் தமிழறிவும் உடையவராயிருந்தும், இங்குத் தவறிவிட்டது தமிழியல்பை அறியாததினாலேயே.
இனி, சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல் லதிகாரக் குறிப்பு என்றும், தொல்காப்பிய எழுத்ததிகாரக் குறிப்பு என்றும் இரு நூல்கள் வெளியிட்டுள்ளார். அவற் றுள், சொல்லதிகாரக் குறிப்பு மன்னார்குடிச் சோமசுந்தரம் பிள்ளையவர்களால் சின்னபின்னமாகச் சிதைக்கப்பட்டது. ஆயினும், அதைப் பல்கலைக்கழகத்தாரேனும் பண்டிதர்க ளேனும் சிறிதும் கவனித்தாரில்லை. இதை நினைக்கும் போது “குட்டுதற்கோ” என்ற செய்யுளே நினைவிற்கு வருகின் றது. இனி, எழுத்ததிகாரக் குறிப்பில், தொல்காப்பியர் வட மொழிப் பிராதிசாக்கியங்களைப் பின்பற்றித் தொல்காப்பி யத்திற் பிறப்பியலை வரைந்ததாகக் கூறியுள்ளார். எல்லா மொழிகட்கும் பல எழுத்துகள் பொதுவாயிருக்கின்றன. அவ்வெழுத்துகளெல்லாம் யார் ஒலித்தாலும்,அததற்குரிய ஒரேயிடத்தில் தான் பிறக்கும்.
ஆங்கில இலக்கணிகள்,இந்திய இலக்கணிகளைப் போல நூற்பா வடிவாக எழுதாவிடினும், உரைநடையில்,எழுத்துகளின் வகைகளையும் அவற்றின் பிறப்பியல்புகளையும் நுட்பமாக வும், விரிவாகவும் எழுதித்தான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தொண்டையின (Gutturals), அண்ணத்தின (Palatals), பல்லின (Dentals), உதட்டின (Labials) என்றவற்றையே, தமிழ் இலக்கணிகள் பின்பற்றிப் பிறப்பியல் வகுத்தார்கள் என்பது எவ்வளவு பொருந்துமோ, அவ்வளவே வடமொழி வழி காட்டுவதும் பொருந்துவதாகும்.
தமிழிலக்கணம் மிகப் பழங்காலத்தில் இயறப்பட்டதினால், மிக விரிவாக வரையப்படவில்லை. அக்காலத்து மாணாக்கர் நுண்ணறிவுடையவராயிருந்ததினாலும், எழுத்தாணியால் ஓலையிலெழுதுவது வருத்தமானதினாலும், விரிவாயெழுதின புத்தகம் சுமக்க முடியாத அளவு பெருத்து விடுமாதலாலும், சுருங்கிய அளவில் மாணவர் மனப்பாடஞ் செய்ய எளிதாயிருக்கு மாதலாலும், அக்காலத்து ஆராய்ச்சிக் குறைவாலும், இக்காலத்திற்கேற்றபடி மிக விரிவான இலக்கணம் எழுதப்படவில்லை. வட மொழியிலக்கணம் தமிழுக்குப் பிந்தினதாதலின் சற்று விரிவாயுள்ளது. ஆங்கில விலக்கணம் வடமொழிக்கும் பிந்தினதாதலின், அதினும் விரிவாகவுள்ளது.
தொல்காப்பியத்தில், பதவியல் இலக்கணம் பலவியல்களில் பரவிக் கிடக்கின்றது. நன்னூலார் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு தனியியலாக்கினார். அவர் இலக்கணத்துள்ளும், தொழிற் பெயர் விகுதிகளும், தன்வினை பிறவினையாகும் வகைகள் எல்லாமுங் கூறப்படவில்லை. இதையறியாத சிலர், வட மொழியிலக்கணவறிவு தமிழிலக்கணவறிவிற்கு இன்றியமையாத தென்று கூறுகின்றனர்.
ஆங்கில இலக்கணம் ஆறாயிர மைலுக்கப்பால் இயற்றப் பட்டதாயிருப்பினும், தமிழிலக்கண அறிவிற்கு எவ்வளவோ உதவுவதாகும்.
உதாரணமாக, அசையழுத்தம், காலப்பிரிவு, எழுவாய் வடிவுகள் முதலியவற்றைக் கூறலாம்.
(1) அசையழுத்தம் (Accent)
அசையழுத்தம் தமிழுக்கில்லையென்று சிலர் கூறுகின்றனர்.
எடுப்பு (Acute), படுப்பு (Grave), நலிபு (Circumflex) என்னும் மூன்றொலிப்பு வேறுபாடுகளும் தமிழுக்குள்ளனவென்று நன்னூலார் கூறியிருக்கின்றனர். எந்த மொழியிலும், ஒரு சொல்லில் ஏதேனுமோர் அசையில் அழுத்தம் இருந்துதான் ஆக வேண்டும். அழுத்தமுள்ள அசை எடுப்பசை; அஃதில்லாதது படுப்பசை; இவ்விரண்டிற்கும் இடைப்பட்டது நலிபசை.
தமிழில் பொதுவாய் அசையழுத்தம் சொன் முதலி லிருக்கும். தண்ணீர், வந்தான் என்ற சொற்களை ஒலித்துக் காண்க.
செம்பொன்பதின்பலம் என்னுந் தொடர், செம்பைக் குறிக் கும்போது, செம் என்னும் முதலசையும், பொன்னைக் குறிக்கும் போது, பதின் என்னும் இடையசையும் அழுத்தம் பெறும்.
வந்தான், வந்தாள் போன்ற சொற்கள், கூறுவார் குறிப்பின் படி பாலைச் சிறப்பாய்க் குறிக்கும்போது, தான், தாள், என்னும் ஈற்றசைகள் அழுத்தம்பெறும்.
சில சொற்களின் ஈறுகள், அழுத்தம்பெற்றுப் பொருளை வேறுபடுத்தும்.
“உப்ப கார மொன்றென மொழிப
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே”
என்றார் தொல்காப்பியர்.(மொழி மரபு.43).
இதன் உரையில், தபு என்னுஞ்சொல், “படுத்துக்கூற நீ சாவெனத் தன்வினையாம்; எடுத்துக்கூற நீ ஒன்றனைச் சாவப்பண்ணெனப் பிறவினையாம்” என்று நச்சினார்க்கினியர் கூறியிருத்தல் காண்க.
ஆங்கிலத்தில், முன்காலத்தில் அளபுக் குறிகள் இருந்தன; இப்போது மறைந்துவிட்டன. அதனால், அதிலுள்ள அசையழுத்தம் அழுத்தம், நெடிலோசை என இரண்டையுங் குறிப்பதாகும். சில வினைப் பகுதிகள் முதலெழுத்து நீண்டு தொழிற்பெயராவ துண்டு.
எ-டு: படு—பாடு, உண்—ஊண்.
இங்ஙனமே conduct’ என்னும் ஆங்கில வினையும், con’duct என முதல் நீண்டு தொழிற்பெயராகும். ஆனால், நெடிலைக் குறிக்க ஆங்கிலத்தில் இப்போது குறியின்மையால், அசையழுத்தமே அதைக் குறிக்கின்றது. இங்ஙனமே convoy என்பது convoy’ என நீண்டு தொழிற்பெயராதலுங் காண்க.
தமிழிலும், செய்யுளில் ஓசை குறைந்தவிடத்து, ஆங்கிலத்திற் போல அசையழுத்தம் குறிலை நீட்டுவதாகும்.
“ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்” என்ற செய்யுளில், கெடும் என்னும் சொல்லின் முதலெழுத்து நீண்டு, அசைச்சீருக்கு இயற்சீர்த்தன்மை யூட்டினமை காண்க.
இதை,
“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்”
“பையச் சென்றால் வையந் தாங்கும்”
என்னும் இசை நிரம்பின செய்யுள்களோடும் ஒப்பிட்டறிக.
(2) காலப்பிரிவு
ஆங்கிலத்தில், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலங்களுள், ஒவ்வொன்றையும் நந்நான்காகப் பகுப்பர். தமிழுக்கும் இது ஏற்றதாதல் காண்க.
நிகழ்காலம் (Present Tense)
1. அவன் வருகிறான் – செந்நிலை (Indefinite).
2. அவன் வந்துகொண்டிருக்கிறான் – தொடர்ச்சி (Continuous).
3. அவன் வந்திருக்கிறான் – நிறைவு (Perfect).
4. அவன் வந்துகொண்டிருந்திருக்கிறான் — நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous).
இங்ஙனங் கலவைக்காலங்(Compound Tense)களை ஒரு வினையாகக் கொள்ளாவிடின், குறைவு நேர்தல் காண்க.
(3) நிகழ்கால வினையெச்சம் (Infinitive Mood)
நிகழ்கால வினையெச்சமும் பெயர்நேரி (noun-equivalent) யாய் எழுவாயாதல் கூடும்.
எ-டு: எனக்குப் பாடத்தெரியும்.
இதில், ‘பாட’ என்பது, பாடுதல் அல்லது பாட்டு என்று பொருள்பட்டு எழுவாயாதல் காண்க; இவ்வுண்மை ஆங்கில இலக்கணத்தினாலேயே அறியப்பட்டது.
எல்லா மொழிகட்கும் பல நெறிமுறைகள் ஒத்திருக்கின்றன. ஒவ்வொரு மொழியிலும், அவற்றுள் ஒவ்வொன்றை, அல்லது சிற்சிலவற்றைக் கண்டுபிடித்திருக்கின்றனர்; இன்னும் கண்டுபிடியாதனவும் உள. ஒரு மொழியிற் கண்டுபிடித்திருப்பவை பொதுக்கூறுகளாயின், அவை ஏனை மொழிகட்கும் ஏற்கும்.
இதுகாறும் கூறியவற்றால், வடமொழியிலக்கணம் தமிழிலக் கணத்திற்கு மூலமன்மையறிக.
தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் தனித்தமிழர் அகமும், தமிழரல் – திராவிடர் அகப்புறமும், பார்ப்பனர் புறமும், பிறரெல்லாம் புறப்புறமுமாவரெனக் கொள்க.
பார்ப்பனர் ஓர் ஆரியக்கருத்தைப் புகுத்திக்கொண்டு, இதுவே இந்நூற்பாவிற்குப் பொருள் என்று கூறுவது, இந்தியர் சில ஆங்கிலச் சொற்களுக்கும் செய்யுள்களுக்கும், இதுவே பொருளென்று ஆங்கிலரோடு முரணுவதொக்கும்.
பார்ப்பனரின் றகரவொலிப்புத் தவறு
பார்ப்பனரிற் பலர் நெடுங்காலமாகத் தம்மவரிடத்திலேயே தமிழைக் கற்றுவருவதால், றகரவொலியைச் சரியாய் அறிந்திலர்.
றகரம் தனித்து நிற்கும்போது இரைந்தொலிக்கும்; இரட்டி வரும்போது, ஆங்கில ‘t’ போல, வன்மையாய் ஒன்றியொலிக்குமேயன்றிப் பிரிந்திசைப்பதும் இரைந்திசைப்பதுமில்லை. வெற்றி (veti) என்பதை வெற்றிறி (vetri) என்பது போன்றும், வென்றி (vendi) என்பதை வென்றிறி (vendri) என்பதுபோன்றும் இசைப்பர் பார்ப்பனர். னகர மெய்யும் றகரமும் அடுத்து வரும்போது, ஆங்கிலத்திலுள்ள ‘nd’ என்னும் இணையெழுத்துப்போல ஒலிக்கும். சில ஐரோப்பியர் பார்ப்பனரிடம் தமிழைக் கற்று ‘ற்ற, ன்ற’ என்னும் இணைமெய்களைத் தவறாகத் தம் புத்தகங்களில் எழுதிவைத்துவிட்டனர். இப்போது பார்ப்பனரே தமிழுக்கதிகாரிகளாகக் கருதப்படுவதால், புதிதாய் வந்து தமிழைப் படிக்கும் ஐரோப்பியர், அவ்வொலிகளைத் தனித்தமிழர் திருத்தினாலும் ஒப்புக்கொள்வதில்லை. இனி, அவர் மட்டுமன்றிச் சில தமிழக் கற்றதினால் அத்தவறான முறையையே பின்பற்றுகின்றனர்.
(பவணந்தியுட்படப்) பார்ப்பனர் கசடதப என்னும் வல்லின மெய்களைக்கூடச் சரியாயறிந்தாரில்லை. இது, இவற்றை அவர் வடமொழி ஐவர்க்கங்களின் முதலெழுத்துக்களோடும் ஒப்பிட்டுக் கூறுவதால் அறியலாம். தமிழிலுள்ள வல்லின மெய்கள் தமிழுக்கு வல்லினமாயினும், வடமொழி வல்லினத்துடன் ஒப்புநோக்க, சற்று மெல்லியவே யாகும். வடமொழிக் க ச ட த ப க்கள் தமிழ்க் க ச ட த ப க்களின் இரட்டிப்பாதலை ஒலித்துக் காண்க.
- ↑ ‘P. சுந்தரம் பிள்ளை, M.A.
- ↑ Principles of Comparative Philology, Preface to the Third Edition, p. xviii—xix.
- ↑ * “மிலேச்சர் ஆரியர்” என்ற திவாகரச் சூத்திரமும் இங்குக் கவனிக்கத்தக்கது.
- ↑ புறம். 168
- ↑ * Mohenjo-Daro, Vol.I, Preface, pp.v-vii
- ↑ * பல்லவர் சரித்திரம், முதற்பாகம், ப. 3.
- ↑ ‘பழமை’ என்னுஞ் சொல் பழங்கதை என்னும் பொருளில், இன்றும் தென்னாட்டில் வழங்கிவருகின்றது. பழைய நிலையைக் குறிக்கப் “பழைமை” என்னும் வடிவமும், தொன்மை, முதுமை என்னும் பிற சொற்களும் உள.
- ↑ சக்கிலி என்பது சாஷ்குலி (= புலையர்) என்னும் வடசொல்லின் திரிபென்பர் எட்கார் தட்ஸ்ற்றன் (Edgar Thurston)
- ↑ இந்நூற்பாவிற்கு,’அரசர் இவ்வழி அந்தணரே அவ்வரசியல் பூண்டோளுகளும் வரையப்படாது என்றவாறு”என்று பேராசிரியர் உறைகூறியதுங் காண்க.
- ↑ #ஆயுங்காலை என்றதனால், குடையுஞ் செருப்பும் முதலாயினவும் ஒப்பன அறிந்துகொள்க. (உ-ம்)
“எறிந்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ
லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்”
(பாலைக்கலி.9)
……இன்னும் ‘ஆயுங்காலை’ என்றதனான். ஓருகோலுடையார் இருவருளர். அவர் துறவறத்து நின்றாராகலின் உலகியலின் ஆராயப்படாரென்பது முக்கோலுடையார் இருவருட் பிச்சை கொள்வானும், பிறாண்டிருந்து தனதுண்பானும் உலகியலின் நீங்காமையின் அவரையே வரைந்தோதினானென்பது” (தொல். 610, பேரா. உரை)
- ↑ * தொல். பொருள். 74.
- ↑ “தொன்முது கடவுட் பின்னர் மேக” (மதுரைக். 41)
- ↑ பகவரைக் காணின் (திருவாய்.)
- ↑ இக்காலத்தும், ‘His Holiness’ என்று போப்பையும், ‘His Grace’ என்று அரசக் கண்காணியாரையும் மேனாட்டாரும் அழைத்து வருதல் தமிழக வழக்கத்துடன் ஒப்பிடத்தக்கது.
- ↑ *சில காரணங்களையிட்டு, இவர் பாரியைப் பாடியவரினின்றும் வேறானவராக எண்ணப்படுகிறார்.
- ↑ பார்ப்பார்கை = பார்ப்பாரின் கையினின்று.
- ↑ *. புலையர் = வள்ளுவர்
- ↑ திருமால்-விஷ்ணு;திருமாலியம்-வைஷ்ணவம்;திருமாலியர்-வைஷ்ணவர்.
- ↑ வடகலையார் தென்கலையார் என்னும் இருசார் திருமாலியருள், இங்குக் குறிக்கப்பட்டவர் தென்கலையார்.
- ↑ தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கின்ற ஒரேயொரு பார்ப்பனரும், காஞ்சி பரவத்து ராஜகோபாலாச்சாரியார் என்னும் தென்கலைத் திருமாலியரே.
- ↑ செப்புப் பட்டயங்களும் கல்வெட்டுகளும்.
- ↑ சோழவமிச சரித்திரச் சுருக்கம், பக். 53
- ↑ History of the Nayaks of Madura, p. 257. ஒ, மொ .-4
- ↑ * ஒரு பொருட் பல சொற்கள் பருப்பொருளில் ஒன்றையே குறிப்பினும், நுண் பொருளில் வேறுபட்டவை என்பதை Hand book of the English Tongue என்னும் புத்தகத்தின் 25 ஆம் 26ஆம் பக்கங்களிலும், Hints on the Study of English என்னும் புத்த கத்தின் 49ஆம் 50 ஆம் பக்கங்களிலும் காண்க.
- ↑ அந்தகக்கவி வீரராகவர் சரித்திரம் காண்க.
- ↑ இங்கு கூறிய குயவன் அபார்ப்பனனேனும், ‘வடமொழி—தென்மொழி’ப்போர் பார்ப்பனராலேயே உண்டானதாதலாலும் இக்காலத்திற்போன்றே அக்காலத்தும் இவ்விரு மொழிக்கும் இகல் இருந்ததென்று தெரிவித்ததற்கும், இச்செய்தி இங்குக்கூறப்பட்டது.
- ↑குறள்,30,110,133,184,259.
- ↑குறள். 1066
- ↑புறநானூறு. 183
- ↑ 4ம் புத்தகம் பக்.352
தமிழ் வாழ்த்து
(பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா)
தரவு 1
“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே” 2
“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே”.
(வதனம் – முகம், தரித்த – அணிந்த, திலகம் – பொட்டு, வாசனை – மணம், உதரம் – வயிறு).
நூல்
- மொழி நூல்
- மொழி
மொழியாவது மக்கள் தம் கருத்தை ஒருவருக்கொருவர் வெளியிடுதற்குக் கருவியாகும் ஒலித்தொகுதி.
- மொழிவகை
உலக மொழிகள் மொத்தம் 860 என்று பல்பி (Balbi) என்பவர் தமது திணைப்படத் (Atlas) தில் குறிக்கின்றார். மாக்ஸ் முல்லர் (Max Muller) அவை தொள்ளாயிரத்திற்குக் குறையா என்கிறார்.[1] ஏறத்தாழ ஆயிரம் எனினும் தவறாகாது.
மொழிகளையெல்லாம், பலப்பல முறையில், பலப்பல வகையாக வகுக்கலாம். அவ் வகைகளாவன:—
(1) அசைநிலை (Monosyllabic or Isolating), புணர்நிலை (Compounding), பகுசொன்னிலை (Inflectional or Polysyllabic), தொகுநிலை (Synthetic), பல்தொகுநிலை (Polysynthetic) அல்லது கொளுவுநிலை (Agglutinative), பிரிநிலை (Analytical) என்று அறு வகையாக வகுப்பது ஒரு முறை. அவற்றுள்,
அசைநிலையாவது, சொற்களெல்லாம் ஓரசையாக நிற்பது.
காட்டு : வள், செல், வா, போ, தமிழ், மொழி.
சீனமொழி அசைநிலைக்குச் சிறந்ததாகும்.
புணர்நிலையாவது, இரு தனிச்சொற்கள் புணர்ந்து நிற்பது.
கா : தமிழ்மொழி, மருமகன்
துரேனிய மொழிகளிற் சீனமொழிந்தவை[2] புணர் நிலைக்குச் சிறந்தவையாய்ச் சொல்லப்படும்.
பகுசொன்னிலையாவது, புணர்நிலைச் சொற்களில் ஒன்று குறுகித் தனித்தன்மையிழந்து, சொல்லுறுப்பாய் நிற்பது.
கா : மருமான், வில்லவன் (வில் + அவன்), வில்லான். பகுசொன்னிலைக்கு ஆரியமொழிகள் சிறந்தனவாகக் கூறப்படும்.
தொகுநிலையாவது, புணர்நிலைச்சொற்களின் இடையில், எழுத்துகளும் அசைகளும் தொக்குநிற்பது.
கா : ஆதன் + தந்தை = ஆந்தை; பெரு + மகன் (பெருமான்) – பிரான், அல்லது பெம்மான்.
பல்தொகுநிலையாவது, பன்மொழித் தொடரினிடையே பல அசைகள் அல்லது சொற்கள் தொக்கு நிற்பது.
கா : நச்செள்ளையார் (நல் + செள்ளை + அவர்). சேர சோழ பாண்டியர். அமெரிக்கமொழிகள் பல்தொகுநிலைக்குச் சிறந்தனவாகக் கூறப்படும்.
மெக்சிக (Mexican) மொழியில், ‘achichillacachocan’ என்னும் பல்தொகுநிலைத்தொடர், ‘நீர் சிவந்திருப்பதால் மக்கள் அழும் இடம்’ என்று பொருள்படுவதாம். (alt-நீர், chichiltic-சிவந்த, tlacatl-மாந்தன், chorea-அழு)[3]
பிரிநிலையாவது, பகுசொன்னிலைச் சொற்கள் ஈறிழந்து நிற்பது.
கா : வந்தேன்-வந்து (மலையாளம்); brekan (O.E.) — break (Infinitive).
(2) மூலமொழி (Parent Language), கிளைமொழி (Daughter Language), உடன்மொழி (Sister Language) என மூவகையாக வகுப்பது ஒருமுறை.
திராவிடக் குடும்பத்தில், தமிழ் மூலமொழி; தெலுங்கு, கன்னடம் (கருநடம்), மலையாளம் முதலியவை தமிழுக்குக் கிளைமொழியும், தம்முள் ஒன்றோடொன்று உடன்மொழியு மாகும். நீலமலையிலுள்ள படகம் (படகர்மொழி) கன்னடத் தின் கிளைமொழி.
(3) இயன்மொழி (Primitive Language), திரிமொழி (Derivative Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.
இவற்றுக்குத் தமிழையும் பிற திராவிட மொழிகளையும் முறையே காட்டாகக் கொள்க.
(4) இயற்கைமொழி (Natural Language), செயற்கை மொழி (Artificial Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.
தமிழ் ஓர் இயற்கைமொழி. உவில்க்கின்ஸ் கண்காணியார் (Bishop Wilkins) எழுதிய கற்பனை மொழி (‘A Real Character and a Philosophical Language) செயற்கை மொழிக்குக் காட்டாகும்[4] காங்கிரஸ் தலைவர்கள் உருதுவிற்கும் இந்திக்கும் இடைத்தரமாக, இந்துஸ்தானி என ஒன்றை அமைப்பதாகச் சொல்வது அரைச் செயற்கைக் கலவை மொழியாகும்.
(5) தனிமொழி (Independent Language), சார்மொழி (Dependent Language), கலவைமொழி (Composite or Mixed Language) என மூவகையாக வகுப்பது ஒருமுறை.
இவை மூன்றுக்கும், முறையே, தமிழையும் பிற திராவிட மொழிகளையும், ஆங்கிலத்தையும் காட்டாகக் கூறலாம்.
(6) முதுமொழி (Ancient Language), புதுமொழி (New Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.
இவற்றுக்குத் தமிழும் இந்தியும் காட்டாகும்.
(7) இலக்கியமொழி (Classical Language), வறுமொழி (Poor Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.
இவற்றுக்குத் தமிழையும் குடகையும் காட்டாகக் கூறலாம்.
(8) செம்மொழி அல்லது திருந்தியமொழி (Cultivated Language), புன்மொழி அல்லது திருந்தாமொழி (Uncultivated Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.
திராவிடக் குடும்பத்தில், தமிழ், தெலுங்கு முதலியவை செம்மொழிகள்; துடா, கோட்டா முதலியவை புன்மொழிகள்.
(9) அலைமொழி (Nomad Language), நிலைமொழி (State Language) என இருவகையாக வகுப்பது ஒரு முறை.
அலைந்து திரியும் மக்கள் பேசுவது அலைமொழி; ஓரிடத்தில் நிலைத்த மக்கள் பேசுவது நிலைமொழி.
(10) தாய்மொழி (Mother Tongue), அயன்மொழி (Foreign Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.
(11) வழங்குமொழி (Living Language), வழங்காமொழி (Dead Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.
இவற்றுக்கு, முறையே, தமிழையும் வடமொழியையும் காட்டாகக் கொள்க.
ஒரு பெருமொழியில் பல வழக்கு(Dialect) கள் உண்டு. அவற்றை மொழிவழக்கெனலாம். அவை, இடவழக்கு (Local Dialect), திசைவழக்கு (Provincial Dialect), குலவழக்கு (Class Dialect), திணைவழக்கு (Regional Dialect) என நால் வகைப்படும்.
ஒரு மொழி நீடித்து வழங்குமாயின், முற்கால (Old) வழக்கு, இடை (Middle) க்கால வழக்கு, தற்கால (Modern) வழக்கு என முந்நிலைகளை யடைந்திருக்கும்.
ஒரு மொழி உயர்ந்ததும் தாழ்ந்ததுமான இருவழக்கு களையுடையதாயிருப்பின், அவை முறையே உயர் (High), தாழ் (Low) என்னும் அடைகள்பெற்று, அம்மொழிப் பெயராற் குறிக்கப்படும் (கா: உயர்ஜெர்மன் — High German, தாழ் ஜெர்மன் — Low German). தமிழில் இவை செந்தமிழ் கொடுந்தமிழ் என வழங்கும்.
ஒரு மொழியில், எழுத்தில் வழங்கும் வழக்கு நூல்வழக்கு (Literary Dialect) என்றும், பேச்சில் வழங்கும் வழக்கு உலக வழக்கு (Colloquial Dialect) என்றும் கூறப்படும்.
- மொழிக் குலம்
உலகத்திலுள்ள மொழிகளெல்லாம், வேர்ச்சொற்களின் உறவும் இலக்கண வொற்றுமையும்பற்றி, துரேனியம் (Turanian), ஆரியம் (Aryan), சேமியம் (Semitic) என முக்குலங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு குலமும் பல குடும்பங் (family) களைக் கொண்டது. ஒவ்வொரு குடும்பமும் சில அல்லது பல மொழிகளைக் கொண்டது.
தமிழ் துரேனியக் குலத்தில்[5] திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தது. துரேனியத்திற்குச் சித்தியம் (Scythian) என்றும் ஆரியத்திற்கு இந்தோ-ஐரோப்பியம் (Indo-European), அல்லது இந்தே-ஜெர்மானியம் (Indo-Germanic) என்றும் பிற பெயர்களுமுண்டு.
மொழிப் பகுப்புமுறை – Classification of Languages
மொழிப் பகுப்புமுறை, (1) வடிவுமாறியல் (Morphological), (2) மரபுவரிசையியல் (Historical or Geneological) என்ற இரு முறை பற்றியது. இவற்றுள், முன்னையது மொழிகளை அசை நிறை முதலிய அறுவகை நிலையாகப் பகுப்பது; பின்னையது, வேர்ச்சொற்(root)களின் உறவும், இலக்கண வொற்றுமையும் பற்றிப் பகுப்பது. இவ்விரண்டும் முன்னர்க் கூறப்பட்டன.
மாக்ஸ் முல்லர், அசைநிலையை வேர்நிலை (Radical Stage) என்றும், பகுசொன்னிலையை ஈற்றுநிலை (Terminational Stage), இருதலைச் சிதைநிலை (Inflectional Stage) என்றும் இரண்டாகப் பகுத்தும் கூறுவர்.
பகுசொன்னிலையும் ஈற்றுநிலையும் ஒன்றே. இரு தலைச் சிதை நிலையாவது, வருமொழிபோன்றே நிலை மொழியும் சிதைதல்.
கா : (பெருமகன்) — பெம்மான்.
மொழிநூல்
மொழிநூலாவது சொற்கள், சொல்லாக்க முறைகள், இலக்கண அமைதி முதலியனபற்றிப் பல மொழிகட்கிடையிலுள்ள தொடர்பை ஆராயுங் கலை.
மொழி நூல் முதலாவது கிரேக்கு, இலத்தீன் என்னும் மொழிகளைக் கற்குங் கல்வியாக, 18ஆம் நூற்றாண்டில் மேனாடுகளில் தோன்றிற்று. பின்பு, ஆங்கிலேயரும் விடை யூழியரும் (Missionaries) இந்தியாவிற்கு வந்து, சமஸ்கிருதத் திற்கும் கிரேக்க லத்தீன் மொழிகட்குமுள்ள நெருக்கத்தைக் கண்டு பிடித்தபின், ஐரோப்பாவில் ஆரிய மொழிகளைப் பற்றிச் சிறப்பாராய்ச்சி எழுந்தது. ஆரிய மொழிகளை யாராய்ந்தவர்களுள் கிரிம் (Grimm), வெர்ணெர் (Verner) என்ற இருவர் தலை சிறந்தவர். உலகத்தின் பல இடங்களுக்குச் சென்ற விடையூழியரும் வழிப்போக்கரும் அவ்வவ்விடத்து மொழிகளைக் கற்று, மேலை மொழிகளில் அவற்றின் இலக்கணங்களை வரைந்து வெளியிட்டதுமன்றி, இனமொழிகளையெல்லாம் ஒப்பிட்டுப் பல குடும்பங்களாகவும் வகுத்துக் காட்டினர். ஒப்பியன் மொழி நூற்கலையே விடையூழியராலும் வழிப்போக்கராலும்தான் உருவாயிற்று என்று கூறினும் மிகையாகாது. பிறகலையாராய்ச்சியாளரும் மொழிநூலுக்கு உதவியிருக்கின்றனர்.
பல நாட்டு மொழிகள் மேனாட்டு மொழிகளில் வரையப்பட்ட பின், மாக்கசு முல்லர் என்ற மாபெரும்புலவர், சென்ற நூற்றாண்டில், தம் வாழ்நாளையெல்லாம் மொழி நூற் கல்விக்கே ஒப்புக்கொடுத்து, உலக மொழிகளிற் பெரும்பாலனவற்றை ஆராய்ந்து, தம் நுண்மாண் நுழைபுலத்தால் ஒப்பியன் மொழி நூலை உருவாக்கினார்.
மாக்ஸ் முல்லர் திராவிட மொழிகளைச் சரியாய் ஆராயாததாலும், அவற்றை வடமொழியின் கிளைகள் என்று தவறாக எண்ணியதாலும், திராவிடத்தின் உண்மையான இயல்புகளைக் கூறமுடியவில்லை. திராவிடம் வடமொழிச் சார்பற்றதென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கிய தென்றும், வடசொல்லென மயங்கும் பல சொற்கள் தென் சொற்களேயென்றும், வடமொழியில் பல தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன்முதல் எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல் (Caldwell) கண்காணியரே. திராவிட மொழிகள் மொத்தம் பன்னிரண் டென்பதும். அவற்றுள் ஆறு திருந்தினவும், ஆறு திருந்தா தனவுமாகும் என்பதும், பெலுச்சித்தானத்திலுள்ள பிராஹு யீ திராவிட மொழியே யென்பதும், இவருடைய கண்டுபிடிப்புகளே. திராவிடம் வடமொழிச் சார்பற்றது, வடமொழியில் பல திராவிடச் சொற்களுள்ளன என்னுங் கொள்கைகளில், இவருடன் ஒன்றுபட்டவர், இவர் தமிழைச் சிறப்பாயாராய்ந்தது போன்றே மலையாள மொழியைச் சிறப்பாயாராய்ந்தவர் டாக்டர் குண்டட் (Gundert) ஆவர். இவ்விருவர்க்கும் திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன் மாரிக்குப் பட்டுள்ளதேயெனினும் பொருந்தும்.
கால்டுவெல், மாக்கசு முல்லர் என்ற இருவர் ஆராய்ச்சிகளே இந் நூலுக்கு முதற்காரணமாகும்.
மொழிநூற்கலைக்கு ஆங்கிலத்தில் முதலிலிருந்து வழங்கி வரும் பெயர்கள் ‘Philology’ (Gr.-I. philos, desire; logos, discourse), ‘Glottology’ (Gr. Glotta, tongue; logos, discourse) என்பன. இவற்றுள் முன்னையதே பெருவழக்கு. ஆனால், மாக்ஸ் முல்லர் ‘Science of Language’ என்று தாம் இட்ட பெயரையே சிறப்பாகக் கொண்டனர்.
‘Philology’ என்னும் பெயர் விரும்பிக் கற்கப்படுவது என்னும் பொருளது. கிரேக்கும் லத்தீனும், மேனாட்டாரால் இலக்கிய மொழிகளென விரும்பிக் கற்கப்பட்டதினால், இப் பெயர் தோன்றிற்று.
தமிழில், முதன்முதல் தோன்றிய மொழிநூற் பனுவல், மாகறல் கார்த்திகேய முதலியார் 1913ஆம் ஆண்டு வெளியிட்ட ‘மொழிநூல்’ ஆகும். ‘மொழிநூல்’ என்னும் குறியீடும் அவரதே. அதன் பின்னது டாக்டர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் எழுதி 1936-ல் வெளியிட்ட ‘தமிழ் மொழிநூல்’ ஆகும்.
அதன்பின்னது, கலைத்திறவோரும் (M.A.) சட்டத்திற வோரு (M.L.)மான கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் எழுதி, 1939ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும்’, என்பதாகும்.
மொழிநூல் நிலை
உலகில் ஒவ்வொரு கலையும்,
(1) ஆய்வுநிலை (Empirical Stage),
(2) பாகுபாட்டுநிலை (Classificatory Stage),
(3) கொண்முடிபுநிலை (Theoretical Stage)
என முந்நிலைப்படும். அங்ஙனமே மொழிநூற்கலையும். மொழி நூற்கலையில் ஆய்வுநிலையாவது, மொழிகளைத் தனித்தனி ஆராய்தல்; பாகுபாட்டுநிலையாவது, தனித்தனி ஆராய்ந்த மொழிகளைச் சொற்களிலும் இலக்கணத்திலும் உள்ள ஒப்புமை பற்றி, பல குடும்பங்களாகவும் அக் குடும்பங்களைப் பல குலங்களாகவும் வகுத்தல்; கொண்முடிபு நிலையாவது, ஒரு குடும்ப மொழிகட்குள்ளும், பல குடும்பங்கட்குள்ளும், பல குலங்கட்குள்ளும் உள்ள தொடர்பையும், அவற்றின் நிலைகளையும், ஒலிநூல் (Phonology), உளநூல் (Psychology) முதலிய கலைகளையும் துணைக் கொண்டு, எல்லா மொழிகட்கும் பொதுவும் அடிப்படையுமான ஒரு மூலமொழியைக் கண்டுபிடித்தற்கான விதிகளையறிந்து, அதைக் கண்டுபிடித்தல். இக் கொண்முடிபு நிலையும் (1) ஆராய்ச்சி, (2) முடிவு என இருநிலைப்படும்.
உலகில், மொழிநூற்கலை முதலிரு நிலைகளையுங்கடந்து, இதுபோது மூன்றாம் நிலையில் ஆராய்ச்சிநிலைமையிலுள்ளது.
4. மொழிநூல் நெறிமுறைகள் — Principles of
Comparative Philology
மொழிநூலானது, ஒரு சிறந்த தனிக் கலையானாலும், அதன் நெறிமுறையறியாத சிலருடைய வழூஉக் கூற்றுகளால், பொதுவாய் மிகவும் பழிக்கப்படுகின்றது.
மொழி நூல் நெறிமுறைகளாவன :—
1. மொழிநூல் ஒரு தனிக்கலை
பலர் மொழிநூல் ஒரு தனிக்கலையென்பதை இன்னும் அறிந்திலர். பண்டிதர்கள் பொதுவாய்த் தங்களிடம் யாரேனும் ஒரு சொல்லுக்கு மூலங்கேட்டால், அதற்கு ஏதாவது சொல்லாதிருப்பின் இழிவென்றெண்ணி, ‘பொருந்தப் புளுகல்’ என்னும் உத்திபற்றி ஏதேனுமொன்றைச் சொல்லி விடுகின்றனர். பாண்டித்தியம் வேறு, மொழிநூற் புலமை வேறு என்பதை அவர் அறிந்திலர்.
காலஞ்சென்ற ஒரு பெருந் தமிழ்ப்பண்டிதர், திருச்சியில் ஒருமுறை ‘வடை’ என்னும் தின்பண்டப் பெயர், ‘வடு’ என்னும் மூலத்தினின்றும் பிறந்ததென்றும், அப் பண்டத்தின் நடுவில் துளையிருப்பது அதற்கொரு வடு (குற்றம்) வென்றும் கூறியுள்ளனர். வடை என்பது ‘வள்’ என்னும் வேரினின்று பிறந்ததென்பதையும், வட்டமானது என்னும் பொருளுடைய தென்பதையும், உழுந்து மாவிற்குள் எண்ணெய் எளிதாய்ச் செல்லும்படி துளையிடுவதென்பதையும், துளையினால் சுவை யாவது மணமாவது கெடாதென்பதையும் அவர் அறிந்திலர்.
ஒத்துப்பார்க்க: பெள் + தை = பெட்டை — பெடை; வள்+தை = வட்டை — வடை. பெள் = விரும்பு, வள் = வளை.
2. மொழிநூல் என்றும் ஒப்பியல் தன்மையுள்ளது
‘அட்டையாடல்’ என்பதன் பொருள் உணர்தற்குத் தெலுங்கறிவும், கன்னட அறிவும் வேண்டியதா யிருக்கின்றது. அட்ட அல்லது அட்டெ = முண்டம் (தெ., க.)[1]
அம்பு (வளையல்), அம்பி (படகு, காளான்), ஆம்பி (காளான்) என்னும் சொற்களின் வேர்க்கருத்தை லத்தீனினுள்ள ampi என்னுஞ் சொல்லும், கிரேக்கிலுள்ள ambhi என்னுஞ் சொல்லும் உணர்த்துகின்றன.
amphi = round; (amphitheatre என்னும் தொகைச் சொல்லை நோக்குக.)
3. மொழிநூல் பிறகலைச் சார்புள்ளது
மொழிநூல், கணிதத்தைப்போலப் பிறகலை சாராத கலையன்று. மொழிநூலின் ஒவ்வொரு கூற்றும், அவ்வக் கலைக்குப் பொருந்தியதாயிருத்தல் வேண்டும்.
ஆங்கிலத்திலுள்ள Teak என்னுஞ் சொல், தேக்கு என்னும் தமிழ்ச்சொல்லே யென்பதற்குத் திணைநூல் (Geography) சான்றாகும். இந்தியாவில், விந்திய மலைக்கு வடக்கே தேக்கு வளர்வதில்லை என்று, ராகொஸின் (Ragozin) தமது ‘வேதகால இந்தியா’ (Vedic India) என்னும் நூலிற் குறிப்பிடுகின்றார்.
எழுத்தொலிகளை ஒலிப்பதில் வயிறு, நுரையீரல், மூச்சுக் குழாய், தொண்டை, நா, அண்ணம், பல், உதடு, மூக்கு ஆகிய பலவுறுப்புகள் தொடர்புறுவதால், உடல் நூலும்(Physiology);
உள்ளக்கருத்துகளின் வெளிப்பாடே மொழியாதலின், உளநூலும் (Psychology);
மொழிகளைப் பேசும் மக்களின் இடமாற்றத்தையும் நாகரிக வளர்ச்சியையும் அறிந்திருக்க வேண்டியதால், சரித்திரமும் (History);
தட்பவெப்ப நிலைக்கும் அவ்வந்நாட்டுப் பொருள்கட்கும் தக்கபடி, ஒலியும் சொல்லும் மாறுபடுவதால், திணைநூலும் (Geography);
நாகரிக மக்களின் மொழிகள், மதவியலைப் பெரிதுந் தழுவியிருப்பதால், மதநூல் (Theology), பழமை நூல் (Mythology), பட்டாங்கு நூல் (Philosophy) முதலிய கலைகளும்; இன்னும், சுருங்கக் கூறின் பல கலைகளும் மொழி நூற் பயிற்சிக்குத் தெரிந்திருத்தல் வேண்டும்.
4. மொழிகளெல்லாம் ஓரளவில் தொடர்புடையன:
சில சொற்களும், அவற்றையாளும் நெறிமுறைகளும், பல மொழிகட்குப் பொதுவாயிருக்கின்றன.
கா : தமிழ் — மன், Eng — man, A.S. — mann, Sans. — மநு. தமிழ் — தா, L. — do, Sans — da. தமிழ் — நாவாய், L — Navis, Sans. — நௌ.
தனிக்குறிலையடுத்த மெய் உயிர்வரின் இரட்டுவது பல மொழிகட்குப் பொதுவாயிருக்கின்றது.
கா : தமிழ் – மண் + உலகம் = மண்ணுலகம், வெள் + ஆடு = வெள்ளாடு.
ஆங்கிலம் – thin + er = thinner, sit + ing = sitting.
5. மொழிகளுக்குள் இன அளவிற்குத் தக்கபடி ஒப்புமை யிருக்கும்.
6. மொழிகளை ஆராயும்போது, முன்னை மொழியை முன் வைத்தும் பின்னை மொழியைப் பின்வைத்தும் ஆராய வேண்டும்.
சிலர், தமிழுக்கு மிகப் பிற்பட்டனவும், தமிழினின்றே தோன்றினவும், மிகத் திரிந்துள்ளனவும், ஆரியக் கலப்பு மிக்குள்ளனவுமான மலையாளம், கன்னடம் முதலிய மொழி களுக்குப் பிற்காலத்தில் வடமொழியைப் பின்பற்றி எழுதியுள்ள ‘கேரளபாணினீயம்’, ‘கர்னாடக ஸப்தமணி தர்ப்பணம்’போன்ற நூல்களைத் துணைக்கொண்டு தமிழியல்பை ஆராய்வது, நரிவாலைக்கொண்டு கடலாழம் பார்ப்பதும், தந்தையை மகன் பெற்றதாகக் கொள்வதும் போன்றதே. அந் நூல்களைக் கற்பதால் உண்டாகும் பயன், மலைகல்லி எலி பிடித்தல் போல மிகச் சிறியதாகும்; மேலும், உண்மை காணாதபடி மயக்கத்தையும் ஊட்டும். மொழிநூல் ஆராய்ச்சிக்கு வேண்டிய மனவிரிவையடைவதற்கு, ஆங்கிலத்தில் மாரிஸ் (Morris), ஆங்கஸ் (Angus), ஸ்கீற்று (Skeat), ஸ்வீற்று (Sweet), உஹ்விட்னி (Whitney) முதலியோர் எழுதிய இலக்கணங்களைப் படித்தல் வேண்டும். நுண்ணறிவும் பெரும் புலவருமான வேங்கடராஜுலு ரெட்டியார் வடமொழியையும் பிற்காலத்திலக்கணங்களையும் பின்பற்றியதால் தாம் எழுதியுள்ள ‘இலக்கணக் கட்டுரைகள்’, ‘திராவிட மொழியின் மூவிடப் பெயர்’ என்னும் இலக்கணங்களுள், சில சோர்வு பட்டுள்ளார். அவையாவன:
(1) தமிழில் உகரவீற்றுச் சொற்கள் மூன்றே யென்பது.
தொல்காப்பியத்தில், மொழிமரபில்,
“உச்சகாரம் இருமொழிக் குரித்தே”
“உப்பகாரம் ஒன்றென மொழிப”
என்று கூறியது, முற்றியலுகர வீற்றையேயன்றிக் குற்றியலுகர வீற்றையன்று.
குற்றியலுகரம் ஈரெழுத்திற்குக் குறையாத சொல்லின் ஈற்றில் வல்லின மெய்யூர்ந்தன்றித் தனித்துவருதல் இல்லை என்று சொல்லப்படுகிறது. மறுகு, செருக்கு என்பன போன்ற சொற்களினிடையிலும், அது, பொறு என்பன போன்ற சொற் களின் ஈற்றிலும் உள்ள உகரத்தை (இக்காலவியல்பு நோக்கி)க் குற்றியலுகரமேயெனக் கொள்ள இடமிருப்பினும், உ, து எனத் தனித்தும், உரல், முகம் எனச் சொன் முதலிலும் வரும் உகரத்தைக் குற்றியலுகரமாகக் கொள்ள எள்ளளவும் இடமில்லை. ‘உகரம்’, ‘குற்றுகரம்’, ‘குற்றியலுகரம்’ என்னும் சொற்களில் வரும் உகரங்களும் முற்றியலுகரங்களே, இவற்றுள் பின்னவற்றில் குறு, ‘குற்றியல்’ என்னும் அடை மொழிகளால், குறுகிய உகரம்பொருளளவில் குறிக்கப்படுகின்றதேயன்றி ஒலியளவிலன்று. ஆகவே ‘உச்சகாரம்’ ‘உப்பகாரம்’ என்பவை முற்றியலுகரத்தைக் குறிக்குமேயன்றிக் குற்றியலுகரத்தைக் குறியா என்பது மிகத் தேற்றம்.
மேற்கூறிய இரு நூற்பாக்களானும், முற்றியலுகரவீற்றுச் சொற்கள் மூன்றென்பது பெறப்படும். அவை உசு, முசு, தபு என்பன என்றார் நச்சினார்க்கினியர். இவை சிலவாதலின் இங்ஙனம் விதந்து கூறப்பட்டன.
சுக்கு, குச்சு, பட்டு, பத்து, கற்பு, மற்று என்பனபோன்ற குற்றியலுகரச்சொற்கள் எண்ணிறந்தனவாதலின், அவற்றிற்குத் தொகை கூறிற்றிலர் தொல்காப்பியர்.
பு, து என்னும் ஈறுகளைக்கொண்ட எண்ணிறந்த தொழிற்பெயர்களும், து, சு என்னும் ஈறுகளைக்கொண்ட எண்ணிறந்த பிறவினைச் சொற்களும், குற்றியலுகர வீற்றுச் சொற்களாதல் காண்க. இதனாலேயே,
“உயிர் ஒள எஞ்சிய இறுதி யாகும்”
என்று இருவகை யுகரமுமடங்கப் பொதுப்படக் கூறி, பின்பு “உச்சகாரம்…. உரித்தே” என்றும், “உப்பகாரம்…. மொழிப…” என்றும் முற்றுகரத்தை விதந்தோதினார் தொல்காப்பியர்.
(2) தொல்காப்பியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டார் என்பது.
தொல்காப்பியப் புணரியலில்,
“மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்” (2)
“குற்றிய லுகரமும் அற்றென மொழிப” (3)
என்று குற்றியலுகரத்தை மெய்யீற்றோடு மாட்டேற்றிக் கூறியதால், குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டனர் தொல்காப்பியர் என்றார் ரெட்டியார்.
குற்றியலுகரத்தைப் புள்ளியொடு நிலையலாகக் கூறியதால் குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டுக் காட்டும் வழக்கம் பண்டைக்காலத்திலிருந்ததென்பது பெறப்படுமேயன்றி, ஆசிரியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டார் என்பது பெறப் படாது.
பண்டைத் தமிழர் நுண்ணிய செவிப்புலன் வாய்ந்திருந் தமையின், குற்றுகரம் முற்றுகரத்தினும் குறுகினதென்பதைக் காட்டும்பொருட்டுப் புள்ளியிட்டெழுதினர்.
குற்றுகரத்தின்மேல் அரைமதி (அல்லது குறும்பிறை) வைத்தெழுதுவது இன்றும் தென்மலையாள நாட்டில் உள் ளது என்று ரெட்டியாரே கூறுகின்றார். மலையாள நாட்டில், இற்றைத் தமிழ்நாட்டிலில்லாத பல பண்டைத் தமிழ் வழக்கங்கள் உள்ளன என்பது பின்னர்க் காட்டப்படும்.
தொல்காப்பியர் காலத்தில், குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டெழுதினாராயின், அவ்வழக்கம் ஏன் பிற் காலத்திலில்லை என்று கேட்கலாம். அதற்கு விடை கூறுகின்றேன்.
தொல்காப்பியர் காலத்தில், எகர ஒகர உயிர்களையும் அவையேறின மெய்களையும், மேற்புள்ளியிட்டுக் காட்டுவது வழக்கமாயிருந்ததென்பது,
நூன்மரபிலுள்ள,“மெய்யின் இயற்கை புள்ளியொடு
நிலையல்” (15)
“எகர ஒகரத் தியற்கையும் அற்றே” (16)
என்னும் நூற்பாக்களான் அறியலாம். ஏகார ஓகாரங்களும், அவையேறின மெய்களும், புள்ளி பெறாமையாலேயே, தத்தம் குறில்களினின்றும் வேறுபடுத்திக் காட்டப்பட்டன. ஆனால் 17ஆம் நூற்றாண்டில் இவ் வழக்கம் அற்றுப்போய் விட்ட தென்பது, தமிழில் எகர ஒகர உயிரேறின மெய்களும், ஏகார ஓகார உயிரேறின மெய்களும், வேறுபாடின்றி யெழுதப்பட்டமையால், பின்னவற்றை வேறுபடுத்திக் காட்டற்கு வீரமாமுனிவர் கொம்புகளை மேற்சுழித்தெழுதினதாகக் ‘கொடுந்தமிழ்’ இலக்கணத்திற் கூறியிருப்பதால் அறியப்படும். இங்ஙனமே குற்றுகரப்புள்ளியும் வழக்கு வீழ்ந்ததெனக் கொள்க.
“தொல்லை வடிவின எல்லா வெழுத்துமாண்
டெய்தும் எகர ஒகரமெய் புள்ளி”
(எழுத்து. 43)
என்னும் நன்னூல் நூற்பாவின் உரையில், ‘ஆண்டு’ என்ற மிகையானே…. குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற்புள்ளி கொடுப்பாரும் உளர் எனக்கொள்க” என்று கூறியிருத்தலின், அவ் வழக்குச் சில நூற்றாண்டுகட்கு முன்தான் வீழ்ந்ததென அறியலாம்.
தமிழ்நாட்டிற் பல நூற்றாண்டுகட்கு முன்னரே கல்விக் களம் பார்ப்பனர் கைப்பட்டுவிட்டதினாலும், தமிழ் வறள வடமொழியை வளம்படுத்துவதே அவர் கடைப்பிடியாதலாலும், தமிழர் உயர்நிலைக் கல்வியை இழந்துவிட்டதினாலும் தமிழ் எழுத்துமுறை கவனிப்பாரின்றிச் சீர்கேடடைந்தது.
புள்ளிபெறும் என்பதினாலேயே, குற்றுகரத்தை மெய்யீறாகக் கொள்ளின், மொழிமரபில்,
“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” (15)
“எகர ஒகரத் தியற்கையும் அற்றே” (16)
என்று தொல்காப்பியர் கூறியிருப்பதால், எகர ஒகர வீறுகளை யும் மெய்யீறாகக் கொள்ளவேண்டும். அங்ஙனம் கொள்ள லாகாமை வெளிப்படை.
இனி, கண்+யாது=கண்ணியாது என்பதுபோன்றே, சுக்கு+யாது=சுக்கியாது என்று புணர்வதால், குற்றியலுகரம் மெய்யீறாகக் கொள்ளப்படுமென்றார் ரெட்டியார். அங்ஙன மாயின், கதவு + யாது = கதவியாது என்று முற்றுகரமும் புணர்வதால், அதுவும் மெய்யீறாகக் கொள்ளப்பட்டு, உகரவுயிரே தமிழுக்கில்லையென்றாகும். ஆகையால், அவர் கூற்று உண்மையன்மை யறிக.
வடமொழியில், புரிக், விராட், சத் என்று வல்லின மெய்யீறு வந்திருப்பதுபற்றித் தமிழிலும் அவ்வாறே வருமென்றும், குற்றியலுகரமெல்லாம் மெய்யீறேயென்றும் கொள்வது தமிழ் முறைக்கு நேர்மாறாகும். குற்றியலுகரமெல்லாம் மெய்யீறாயின், எனக்கு, பாய்ச்சு, கட்டு (கண் + து), தாட்டு (தாள் + து), வாழ்த்து,பிடிப்பு, கொட்பு, திரும்பு, பாற்று (பால் + து), அற்று (அன் + து) என்பவற்றின் உண்மையான வடிவங்கள், முறையே, எனக்க், பாய்ச்ச், கட்ட், தாட்ட், வாழ்த்த், பிடிப்ப், கொட்ப், திரும்ப், பாற்ற், அற்ற் என்பன வாதல்வேண்டும். அங்ஙன மாகாமை அறிக;
தொல்காப்பியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டிருப்பின், “…..குற்றியலுகரம்… எழுத்தோ ரன்ன” என்று, அதை ஓர் தனியெழுத்தாகக் கூறியிரார்.
குற்றியலுகரமாவது, இடத்தினாலும் சார்பினாலும் குறுகியும் சிறிது வேறுபட்டும் ஒலிக்கும் இயல்பான உகரமே. குற்றியலுகரம் வருமிடத்தில் முற்றுகரமிருக்கமுடியாது. வல்லின மெய்கள், மெல்லின மெய்யும் இடையின மெய்யும் போலன்றிச் சிக்கெனக் காற்றைத் தடுத்தலான் (checks of breath), நீரோட்டம் கல்லில்முட்டி வேகந்தணிகிறதுபோல, ஓசையானது தடைப்பட்டு, ஈற்றிலுள்ள உகரம் குன்றியொலிக்கின்றதெனக் கொள்க.
(3) பண்டைத் தமிழ்ச்சொற்கள் வல்லின மெய்யிலும் இற்றன என்பது.
“ஞ-ண-ந-ம-ன-ய-ர-ல-வ-ழ-ள என்னும்
அப்பதி னொன்றே புள்ளி யிறுதி” (45)
என்று, சொல்லீற்று மெய்களைப் பதினொன்றேயென்று தேற்றேகாரங் கொடுத்துக் கூறினார் தொல்காப்பியர். ஆதலால், வல்லின மெய் சொல்லீறாமெனக் கொள்ள எள்ளளவும் இடமில்லை.
உரிஞ், பொருந் முதலிய சொற்களும், மண், மீன் முதலிய சொற்களும் உகரம்பெற்று வழங்குவதை, வல்லின மெய்யீறுகள் உகரம்பெற்றுத் தமிழில் வழங்குவதாகத் தாம் கொண்ட கொள்கைக்குச் சான்றாக எடுத்துக்காட்டினார் ரெட்டியார்.
உரிஞு, பொருநு, மண்ணு, மீனு என்று முதலில் உகர வீறாயிருந்த சொற்கள், பிற்காலத்தில் உகரவீறு கெட்டு உரிஞ், பொருந், மண், மீன் என வழங்கினவேயன்றி, முதலில் மெய்யீறாயிருந்த சொற்கள் பிற்காலத்தில் உகரவீறு பெற்று வழங்கினவல்ல.
தமிழர் உலகில் மிகப் பழைமையான மன்பதையராதலின், மொழியொலிமுறையில் குழந்தையர்போல்வர். முதலில், தமிழிலுள்ள எல்லாச் சொற்களும் உயிரீறாகவே ஒலித்தன. பின்பு, புலவராற் பண்படுத்தப்பெற்றபோது, மெல்லின இடையின மெய்களினின்றுமட்டும் உயிரீறு நீக்கப்பட்டது. இவ் வீரின மெய்களும் வல்லின மெய்யிலும் ஒலித்தற் கெளிதாதல் காண்க. இன்றும், சில மெல்லின இடையின மெய்யீற்றுச் சொற்கள், பகாச்சொன்னிலையில் அங்ஙனம் மெய்யீறாக நிற்குமேயன்றிப் பகுசொன்னிலையில் நில்லா.
கா : பண்—பண்ணுகிறான், அள்—அள்ளுகிறான்.
இவை பண்கிறான், அள்கிறான் என்று வழங்காமை காண்க. இதனால், உயிரீற்றுநிலை முந்தியதேயன்றி, மெய்யீற்று நிலை முந்தியதன்று என்பது அறியப்படும்.
ஆரிய மொழிகள் தமிழுக்குப் பிந்தினவையாதலானும், திரிபு வளர்ச்சி மிக்கவையாதலானும், அவற்றில் வல்லின மெய்யும் ஈறாகக்கொள்ளப்பட்டது.
பின்னியத்திலும் (Finnish), வடதுரேனிய மொழிகளுள் யூரலிய (Uralic) வகுப்பு முழுவதிலும், சொன்முதலில் இணை மெய்களையும், சொல்லீற்றில் ஒரு மெய்யையும் சேர்ப்ப தில்லை. கிளாஸ் (glas) என்னும் ஜெர்மனியச்சொல் பின்னி யத்தில் லாசி என்றெழுதப்படுகிறது. ஸ்மக் (smak), ஸ்ற்றார் (stor), ஸ்ற்றிரான்று (Stand) என்னும் சுவீடியச் (Swedish) சொற்கள் முறையே, மக்கு, சூரி, ரந்த என்றெழுதப்படுகின்றன என்று[2] மாக்ஸ் முல்லர் கூறுகிறார்.
திராவிடம் துரேனியக் கிளையாகக் கொள்ளப்படுவதையும், ஹாஸ்பிற்றல், பாங்க், ப்வீஸ் முதலிய ஆங்கிலச் சொற்கள், முறையே, ஆஸ்பத்திரி, பாங்கி, பீசு என்று உயிரீறாகத் தமிழில் வழங்குவதையும் நோக்குக.
(4) வல்லினமெய் இரட்டித்தல் இல்லை என்பது.
வல்லினமெய் இரட்டித்தல் என்பதேயில்லையென்றும், ஆட்டு, போக்கு முதலிய பிறவினைகள் எல்லாம்,
ஆடு + து = ஆட் + து = ஆட்டு, போகு + து = போக் + து = போக்கு, என்ற முறையிலேயே அமைவனவென்றும் கூறியுள்ளார் ரெட்டியார்.
தன்வினைப் பகுதியின் ஈற்றெழுத்தில் அழுத்தம் (stress) விழுவதால் அது பிறவினையாகக் கூடுமென்பது,
“உப்ப கார மொன்றென மொழிப இருவயி னிலையும் பொருட்டா கும்பே”
என்னும் நூற்பாவாற் குறிக்கப்பட்டது. ஆடு, போகு முதலிய தன்வினைகளின் ஈற்றெழுத்துகள்மேல், அழுத்தம் விழுவதாலேயே, அவை இரட்டிக்கின்றன. அசையழுத்தத்தாற் பொருள் வேறுபடுவது, மொழிநூலில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. சீனமொழியில் இந்நெறிமுறை மிகுதியும் பயில்கின்றது.
அசையழுத்தம் முதலாவது எடுப்பசையாக இருந்ததேயன்றி, வலியிரட்டலாக இல்லை. நாளடைவில் அழுத்தம் மிகமிக வலியிரட்டலாகத் தோன்றிற்று. அப்போது அதை இரட்டித் தெழுதினர். அதற்குமுன்பே தபு என்னும் வினை வழக்கற்றுப் போனதினால் அது பண்டை முறைப்படி எடுப்பசையால் பிறவினையாவதாகவே குறிக்கப்பட்டுவந்தது, தொல்காப்பியரும் முன்னூல்களைப் பின்பற்றி அங்ஙனமே குறித்தார். இதை ‘ஒன்றென மொழிப’ என்று, வழிநூன் முறையில் ஆசிரியர் கூறுவதால் அறியலாம்.
காடு, ஆறு முதலிய சொற்கள், அவற்றொடு பொருட் பொருத்தமுற்ற பிற சொற்களுடன் புணரும்போது இரட்டித்தல், அவ்வப் புணர்மொழிகளால் குறிக்கப்படும் பொருள்களுக்குள்ள நெருங்கிய அல்லது ஒன்றிய தொடர்பைக் காட்டுவதாகும்.
கா : காட்டுவிலங்கு, ஆற்றுநீர்.
நட்டாறு, குற்றுகரம் என்பனவும் இம் முறைபற்றி யனவே. இதை, இரு பொருள்களை இணைப்பதால் உண்டாகும் இறுக்கத்திற் கொப்பிடலாம்.
புகு, சுடு முதலிய வினைகள் புக்கு, சுட்டு என இரட்டித்து இறந்த காலம் காட்டினதும், அசையழுத்தத்தினாலேயே. புக்கு, சுட்டு என்பன பண்டைக் காலத்தில் முற்றாகவும் எச்சமாகவும் வழங்கப்பட்டன. பின்பு, பால் காட்டும் ஈறு சேர்ந்து புக்கான் (புக்கு + ஆன்), சுட்டான் (சுட்டு + ஆன்) என்று முற்றுக்குத் தனிவடிவம் ஏற்பட்டபின், அவ் வீறு பெறாத பண்டை வடிவம் எச்சமாக மட்டும் வழங்கி வருகின்றது.
போக்கு, ஆட்டு முதலிய தொழிற்பெயர்களும் அசையழுத்தத்தால் ஈறு இரட்டித்தவையே.
சிற்றடி, சீறடி என வழங்கும் இரு வடிவுகளுள், சீறடி என்பதே சிறந்ததென்றும், சிற்றடி என்பது சிறுபான்மை வழக்கேயென்றும் கூறினார் ரெட்டியார்.
பச்சிலை, பாசறை; செவ்வாம்பல், சேதா; முதியோர், மூதுரை எனப் பண்புப் பெயர்கள் சிறுபான்மை நீளாதும் நீண்டும் இருவகையாய் வருதலானும், பெரும்பான்மை நட்டாறு, புத்துயிர், குற்றுகரம் என நீளாது வலித்தே வருதலானும், அவர் கூற்றிற் சிறந்த தொன்றுமில்லையென விடுக்க.
(5) ‘அரவு’ என்றொரு தொழிற்பெயரீறு இல்லை யென்பது, அரவு என்று ஒரு தொழிற்பெயரீறே யில்லையென்று கூறி, கூட்டரவு, தேற்றரவு என்னுந் தொழிற்பெயர்களை, முறையே,
கூடு = கூட் + தரவு = கூட்டரவு தேறு = தேற் + தரவு = தேற்றரவு
என்று பிரித்துக் காட்டினார் ரெட்டியார்.
‘ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் வேண்டும்’ என்றாற் போல, குற்றுகரத்தை மெய்யீறாகக்கொண்ட ஒரு வழுவை மறைக்க, இங்ஙனம் ஒன்பது வழுக்கள் நேர்ந்திருக்கின்றன.
அரம் என்றொரு தொழிற்பெயரீறு இருப்பது, விளம்பரம் என்னும் தொழிற்பெயராலறியப்படும்.
அரம் என்னும் ஈறே அரவு என்று திரியும்.
அரம் — (அரமு) — அரவு.
ஒ.நோ. உரம் — உரவு, தடம் — தடவு, புறம் — புறவு.
(6) மூவிடப்பெயர் வினாப்பெயர்களின் அமைப்பு, உயிரெழுத்து வரிசைமுறையைப் பின்பற்றியதென்பது.
அ, இ, உ, எ என்னும் நான்குயிர்களும், முறையே சேய்மைச் சுட்டிற்கும், அண்மைச்சுட்டிற்கும், இடைமைச் சுட்டிற்கும், வினாவிற்கும் ஆகி, படர்க்கைப்பெயர் முன்னிலைப் பெயர் இடைமைப்பெயர் வினாப்பெயர் என்னும் நாற்பாற் பெயர்களும் அமைந்தது, உயிரெழுத்துகளின் வரிசை முறையை ஏதுவாகக் கொண்டதென்று ரெட்டியார் கூறியுள்ளார். இதன் தவறு பின்னர் விளக்கப்படும். ஆயினும் இங்கொரு செய்தியைமட்டும் கூற விரும்புகின்றேன். அதாவது, மேற்கூறிய நாற்பாற்பெயர்களும் அரிவரித் தோற்றத்திற்கு (எழுத்திற்கு வரிவடிவம் தோன்றுதற்கு) முந்தினவென்பதே.
ரெட்டியார் இலக்கணக் கூற்றுகளுள் பிற பிழைகளுமுள. அவற்றைப் பின்னர் இந் நூலிற் கூறுபவற்றினின்றும் அறிந்துகொள்க.
- மொழிநூற் பயிற்சிக்கு மொழிகளின் இலக்கணமும் அகர முதலியும் (அகராதியும்) போதிய கருவிகளாம்.
ஒரு சொல்லின் பொருளையும் மூலத்தையும் அறிதற்கு, இலக்கணமும் சொல்லியலும் (Etymology) தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், போலியொப்புமையால் வழு முடிபிற் கிடமாகும்.
கண்டி, பாராளுமன்று என்னும் தமிழ்ச்சொற்கள், condemn, Parliament என்னும் ஆங்கிலச் சொற்களுடன் ஒலியிலும் பொருளிலும் ஒத்திருக்கின்றன. ஆனால், சொல்லியலை நோக்கின், அவை சிறிதும் தொடர்பற்றவை என்பது தெளிவாகும்.
Condemn — L. condemno, from con intensive, damno to damn.
Parliament – Lit. ‘a parleying or speaking,’ Fr. parlement — parler, to speak, ment, a Lat. suffix.
பாராளுமன்று என்பது பார், ஆளும், மன்று என்ற முச்சொற்களாலானதாயும், Parliament என்பது ஒரே சொல் லாயுமிருத்தல் காண்க.
சொற்கள் பெரும்பான் மொழிகளிற் காலந்தோறும் வேறுபடுகின்றமையின், அவற்றின் மூலவடிவையறிந்தே பொருள் காண வேண்டும்.
மூலம் வேர் (root), தண்டு (stem) என இருவகைப்படும். வளையம் என்னும் சொல்லுக்கு வளை என்பது தண்டு; வள் என்பது வேர்.[3] தண்டை அடியென்றுங் கூறலாம்.
மூலமும் பகுதியும் தம்முளொரு வேறுபாடுடையன. புரந்தான் என்னுஞ் சொல்லுக்கு, புர என்பது மூலமும் பகுதியுமாகும். ஆனால், புரந்தரன் என்னுஞ் சொல்லுக்கு, புர என்பது மூலமும், புரந்தா என்பது பகுதியுமாகும்.
மொழிகளுக்கிடையிலுள்ள தொடர்பைக் காண்பதற்கு, மூவிடப்பெயர், வினாப்பெயர், முக்கியமான முறைப்பெயர், எண்ணுப் பெயர், வீட்டிலுள்ள தட்டுமுட்டுகளின் பெயர், சினைப்பெயர், வா, போ என்பன போன்ற முக்கிய வினைகள் என்பனவே போதுமாயினும், பல சொற்களும் தெரிந்திருப்பின் சொல்லியல்பும் சொற்பொருளும் விளக்கம் பெறுதலின், அகராதியையே துணைக்கொள்வது மிகச் சிறந்ததாகும்.
- ஒருவர் தம் இடத்திலிருந்துகொண்டே மொழி நூல் பயிலலாம்.
ஒருவர் ஒரு மொழியை அறிய, அது வழங்கும் இடத்திற்குச் செல்வது இன்றியமையாததன்று; தம் இடத்திலிருந்து கொண்டே தக்கோர் எழுதிய இலக்கணங்களையும் அகராதிகளையுந் துணைக்கொண்டு அயன் மொழிகளைக் கற்கலாம்.
- ஒரு மொழியறிவு பிறமொழியறிவுக்குத் துணையாகும்.
ஒரு மொழியிலுள்ள சில சொற்களின் மூலம் பிற மொழியிலேயே அறியக் கிடப்பதாலும், ஒரு மொழியின் இலக்கணிகள் கண்டுபிடிக்காத, அம்மொழிக்குரிய சில இலக்கணவுண்மைகள், பிற மொழியிலக்கணிகளால் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதனாலும், உலகத் தாய்மொழியின் இயல்பையும் வளர்ச்சியையும் அறியத்தக்க பல நெறிமுறைகள் பல மொழிகளிலும் பரவிக் கிடத்தலாலும், மொழிகளை அறிய அறிய ஒருவரின் அறிவுபெருகுவதாலும், ஒவ்வொரு மொழியின் அறிவுக்கும் பிறமொழியறிவு ஏதேனும் ஒருவகையில் உதவுவதேயாகும்.[4]
- தாய்மொழி முன்னும் அயன்மொழிபின்னும் கற்கப்பட வேண்டும்.
ஒருவன் கல்லாமலே தன் தாய்மொழியில் பேசக்கூடுமாயினும், அதன் மரபையும் இலக்கணத்தையும் கற்றேயறிய வேண்டியதிருக்கின்றது. தாய்மொழியியல்பையறியுமுன் அயன்மொழியை விரிவாய்க் கற்பவர், அயன்மொழி வழக்கைத் தாய்மொழியிற் புகுத்திவிடுவர்.
தமிழைக் கல்லாது ஆங்கிலத்தையே பயின்ற சில தமிழர், பெரும்பாலுங் கிறிஸ்தவர், நன்றாய் விளையாடினார்கள் என்பதை விளையாட்டில் நன்றாய்ச் செய்தார்கள் என்று கூறுதல் காண்க.
- முக்குல மொழிகளும் ஒரே மூலத்தின.[5]
ஒரு மரத்தில், ஒரே அடியினின்று பல கவைகளும், அக் கவைகளினின்று பல கிளைகளும், அக் கிளைகளினின்று பல கொம்புகளும், அக் கொம்புகளினின்று பல கப்புகளும், அக் கப்புகளினின்று பல வளார்களும் தோன்றுகின்றன. இங்ஙனமே, உலக மூல மொழியினின்று, பல குலநிலைகளும், அக் குல நிலைகளினின்று, பல குடும்ப நிலைகளும், அக் குடும்ப நிலைகளினின்று பல மொழிகளும், அம் மொழிகளினின்று பல கிளைமொழிகள் அல்லது மொழி வழக்குகளும் தோன்றியுள்ளன.
உலக மொழிகளின் முக்குலத் தாய்களும் ஒரே மூலத்தின என்று, சென்ற நூற்றாண்டிலேயே, மாக்கசு முல்லர் தேற்றமாய்க் கூறிவிட்டார்.
பண்டைக் காலத்தில், ஆரியர் வருமுன், இந்தியா முழுதும், பல மொழிவழக்குகளாக வேறுபட்ட ஒரே மொழி(தமிழ்) வழங்கினதாகச் சில தொல்காப்பியக் குறிப்புகளாலும் மொழி நூலாராய்ச்சியாலும் அறியக் கிடக்கின்றது. ஆரியர் வந்த பிறகுங்கூட, உண்மையான மொழிகளாக ஒப்புக் கொள்ளப்பட்டவை, வடக்கில் சமஸ்கிருதமும் தெற்கில் தமிழுமாக இரண்டேயென்பது, வடமொழி தென்மொழியென்னும் அவற்றின் பெயர்களாலேயே அறியப்படும். இன்றும், தென் னாட்டு மொழிகளையெல்லாம் தமிழுக்குள்ளும் வடநாட்டு மொழிகளையெல்லாம் சமஸ்கிருதத்திற்குள்ளும் அடக்கி விடலாம். திராவிடக் குடும்பம் முழுதும் தமிழுக்குள் அடங்குவது போலப் பிற குடும்பங்களும் ஒவ்வொரு மொழிக்குள் அடங்கிவிடும். இந்த முறையையே தொடர்ந்து பின்பற்றினால், இறுதியில், துரேனியம் ஆரியம் சேமியம் என்னும் முக்குல நிலைகளே எஞ்சி நிற்கும். அவற்றையும் ஒன்றாய டக்குவதற்குரிய நெறிமுறைகள் இல்லாமற் போகவில்லை.
(நோவாவுக்கு முந்திய காலத்தில், கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்) “உலக முழுவதும் ஒரே மொழியும் ஒரே பேச்சுமாய் இருந்தது” என்று, கிறிஸ்தவ மறையில் ஆதியாகமம் 11ஆம் அதிகாரம் முதற் கிளவியில் கூறப்பட்டுள்ளது.
இன்றும், ஒரு உலக மூலமொழியைத் தேற்றஞ் செய்வதற்கான பல சான்றுகள் உள்ளன. அவையாவன:—
(1) மக்கள் தொகை வரவர மிகுதல்.
(2) எல்லாமொழிகளின் அரிவரியும் அ ஆவில் தொடங்கல்.
(3) அம்மா, அப்பா என்னும் பெயர்களும், மூவிடப் பெயர் வினாப்பெயர் வேர்களும், பல சொற்களும் பல மொழிகட்கும் பொதுவாயிருத்தல்.
(4) எண்கள் பத்துப்பத்தாகவே பல நாடுகளில் எண்ணப் படல்.
(5) நெருப்பு, சூரியன், நாகம் முதலியவற்றின் வழிபாடு பண்டை யுலகெங்கு மிருந்தமை.
(6) நெட்டிடையிட்ட நாட்டார்க்கும் கருத்தொருமிப்பு.
கா :ஆங்கிலம் | தமிழ் |
tonic (from tone) | ஒலித்தல் (தழைத்தல்) |
to catch fire | தீப்பற்று |
to fall in love | வீழ் (“தாம்வீழ்வார்….உலகு”) |
blacksmith | கருமான் |
முதலாவது கணவனும் மனைவியுமாக இல்லறந் தொடங்கும் இருவர், பின்பு பெரிய குடும்பமாகப் பெருகுவதையும், நாளடைவில் சிற்றூர் நகரும் நகர் மாநகருமாவதையும், குடி மதிப்பறிக்கைகளில் வரவர மக்கட்டொகை மிகுந்து வருவதையும் காண்பார்க்கு, மக்கள் எல்லாம் ஒருதாய் வயிற்றினர் என்பது புலனாகாமாற் போகாது. மக்கள் ஒருதாய் வயிற்றினராயின், அவர்கள் பேசும் பல்வேறு மொழிகளும் ஒரு மூலத்தினவாதல் வேண்டும்.
மக்கள்தொகை வளர்ச்சிக்குக் காட்டாக, மாக்கசு முல்லரின் மொழிநூற் கட்டுரைகளின் முதன் மடலத்தில், 62ஆம் பக்க அடிக்குறிப்பிற் காட்டியுள்ள ஒரு குறிப்பை இங்குக் கூறுகின்றேன்.
ஒரு நங்கை பதினாறு பிள்ளைகளைப் பெற்று, அவருட் பதினொருவர் மணந்தபின் இறந்தாள். அவள் இறக்கும் போது, 144 பேரப்பிள்ளைகளும், 228 பேரப் பேரப்பிள்ளைகளும், 900 பேரப் பேரப் பேரப்பிள்ளைகளும் அவளுக்கிருந்தனர்.”
முண்டாமொழியினர்க்குள் இருபதிருபதாய் எண்ணும் வழக்கம் இருப்பது, கையையுங் காலையும் ஒன்றுபோற் கருதத்தக்க அநாகரிக நிலையில், அவர் முன்னோர் இருந்ததைக் காட்டும்.
மக்கள் பெரும்பாலும் தட்பவெப்பநிலை வேறுபாட்டாலேயே, பல வகுப்பாராக வேறுபட்டுக் காண்கின்றனர். இன்றும், நாகரிக வாழ்க்கையும் கல்வியுமிருப்பின் பல வகுப்பாரும் ஒரு நிலையராகவும் ஒத்த கருத்தினராகவும் வாழக் கூடும்.
- ஓர் இயற்கைமொழி தோன்றும் வழிகள் பல்வகைய.
உலகத் தாய்மொழி தோன்றிய வழியைப்பற்றிப் பலரும் பல வகையான கருத்துக் கொண்டனர். சிலர் ஒப்பொலிக் கொள்கை (Onomatopoeic theory)யும், சிலர் உணர்ச்சியொலிக் கொள்கை (Interjectional theory)யும், சிலர் சுட்டடிக் கொள்கை (Demonstrative theory)யும் எடுத்துக்கூறினர். ஓர் இயற்கைமொழி ஒரு வழியிலன்றிப் பல வழிகளில் தோன்றுமென்பது பின்னர் விளக்கப்படும்.
மொழி இயற்கையாய்த் தோன்றியதென்னும் இயற்கைக் கொள்கை(Natural theory)யும், இடுகுறிகளாய்த் தோன்றிற் றென்னும் இடுகுறிக்கொள்கை(Arbitrary theory)யும், பலர் கூடிஇன்னபொருட் கின்ன சொல்லென்று முடிவு செய்ததாகக் கூறும் கூட்டு முடிவுக்கொள்கை(Conventional theory)யும், கடவுளே அமைத்தார் என்னும் தெய்விகக் கொள்கை(Divine theory)யும் இக்காலத்திற் கேலா.
- இயற்கைமொழியில் இடுகுறிச்சொல் இராது.
சில மொழிகளின் சொற்கள் மூலந் தெரியாதபடி மிகத் திரிந்து போயிருக்கின்றன. பொருளறிய வாராமையால் அவற்றை இடுகுறி யென்றனர் இலக்கணிகள். வடநூலார் இராகங்களுக்கும் பிறவற்றிற்கும் பெயரிடும்போது, அவற்றைத் தமிழினின்றும் பிரித்துக் காட்டவேண்டி இடுகுறிப் பெயர்களையிட்டனர். இத்தகைய நிலைமைகள் இயற்கை மொழிக்கு நேரா
“ஒவ்வொரு சொல்லும் பொருள் குறிக்கவேண்டுமென்பது, மாந்தன் பேச்சின் முக்கியமான இலக்கணமாகும். ஒரு மொழியில் ஒலித்திரிபு தோன்றியவுடன், இவ்விலக்கணத்தை அம் மொழி யிழந்துவிடுகிறது” என்று மாக்ஸ் முல்லர் கூறுகிறார்.[6]
“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”
என்றார் தொல்காப்பியர்.[7]
- உலக முதன்மொழி தோன்றிய முறையை ஓர் இயற்கை மொழியில்தான் காணமுடியும்.
திரிபு வளர்ச்சியில் மிக முதிர்ந்த சமஸ்கிருதத்தை, இன்றும் சிலர் திராவிடத் தாயாகவும், அதற்குமேலும், உலக முதன் மொழியாகவும் மயங்கி வருகின்றனர். திரிபிற்குச் சிறந்த ஆரியக்குலத்திலுங்கூட அது மிகப் பிந்தியதென்று, சென்ற நூற்றாண்டிலேயே தள்ளிவிட்டனர் மொழிநூல் வல்லார். அங்ஙனமிருக்க, மிக இயற்கையான தமிழுக்கு அது எங்ஙனம் மூலமாகமுடியும்?
உலக முதன்மொழிக்கு நெருங்கிய மொழி, எளிய ஒலிகளையுடையதாய், அசைநிலை முதலிய ஐவகை நிலை களைக் கொண்டதாய், இடுகுறியில்லதாய், தனிமொழியாயி ருத்தல் வேண்டும்.
- சரித்திரத்தால் ஏனை மொழிக்குள் அடக்கப்படாத முன்னை மொழிக்கே மூலமொழி ஆய்வு ஏற்கும்.
மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளுள், மூல மொழிக்குரிய இயல்புகள் இரண்டொன்று தோன்றினும் அவை கொள்ளப்படா. ஏனெனில் அம் மொழிகள் ஒவ்வொன்றும் ஏனைய மொழிக்குள் அடங்கிவிடுதல் சரித்திரத்தால் அறியப்படுகின்றது.
- மொழி மாந்தன் அமைப்பே.[8]
மொழி என்று பொதுப்படக் கூறுவதெல்லாம் உலக முதன் மொழியையே. எப்பிக்கூரஸ் (Epicurus), அரிஸ்ற்றாட்டில் (Aristotle) முதலிய கிரேக்க மெய்ப்பொருணூலார், மொழி ஐம்பூதம்போல இயற்கையானதென்று கொண்டார். இந்திய முன்னோருக்கும் அக் கருத்தேயிருந்தது.
ஒலி என்றுமுள்ளதேனும், அதைக் கருத்தறிவிக்கும் கருவியாகக் கொண்டது மாந்தன் வேலையே. இதற்குச் சான்றாக விலங்கு பறவை முதலியவற்றிற்குக் கடவுள் பெயரிட்டதாகக் கூறாமல், ஆதாம் பெயரிட்டதாகக் கிறிஸ்தவ மறையிற் கூறியிருப்பதைக் காட்டினர் மாக்கசு முல்லர்.
தேவமொழியென்று உலகத்தில் ஒரு மொழியுமில்லை.
- மொழி மக்கள் கூட்டுறவா லாயது.
மொழி ஒருவனால் அமைந்ததன்று. ஒருவன் தனித்து வாழ்வானாயின் அவனுக்கு மொழியே வேண்டியதில்லை. மக்கள் ஒன்றாய்க் கூடி உறவாடும்போதே தங்கள் கருத்தைப் பிறர்க்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அதனால் மொழி பிறக்கிறது.
ஒரு மொழியிலுள்ள சொற்களில், சில தொழில்பற்றியவை; சில திணைபற்றியவை; சில குலம்பற்றியவை; சில வழிபாடு பற்றியவை. இங்ஙனம் பலவகையில் பல வகுப்பாரால் தோற்றப் பெற்ற சொற்களெல்லாம் ஒன்றுசேர்ந்ததே மொழியாகும்.
இக்காலத்தில் உவில்க்கின்ஸ் போன்ற ஒருவர், இடுகுறி களைக்கொண்டு ஒரு புதுமொழியமைக்க முடியுமாயினும், இயற்கையாய்ப் பொருள் குறித்தெழுந்த உலக முதன் மொழி ஒருவரால் தனிப்பட இயற்றப்பட்டதாகாது.
- மொழி அசைகளாகவும் சொற்களாகவும் தோன்றிற்று.
மொழியின் கடைசிச் சிற்றுறுப்பு எழுத்தாகக் கூறுவது, எழுத்தும் இலக்கணமும் ஏற்பட்ட பிற்காலத்ததாகும்.
தமிழிலக்கணத்திற் கூறப்படும் நால்வகைச் சொற்களுள், இலக்கணவகைச் சொற்கள் என்று கூறத்தக்கவை பெயர் வினை இடை என்னும் முதல் மூன்றுமே. இறுதியிலுள்ள உரிச்சொல் இலக்கணவகைச் சொல்லன்றென்பது பின்னர் விளக்கப்படும்.
மூவகைச் சொற்களுள் முந்தித் தோன்றியது இடை; அதன் பின்னது வினை; அதன் பின்னது பெயர்.
கா :கூ(என்று கத்தினான்)—இடைச்சொல்
கூவி — வினைச்சொல்
கூவல்—பெயர்ச்சொல்
தமிழுக்கு இலக்கணம் ஏற்பட்டபோது, இம்மூவகைச் சொற்களும் தருக்கநூன் முறைப்படி, கீழிறக்கப் பெருமை முறையில் மாற்றிக் கூறப்பட்டன.
மொழித்தோற்றம் முதலாவது சொற்றொடர் அமைப்பைத் தழுவியதென்று சாய்ஸ் கூறுவது, மொழிநூன் முறைக்கு மாறானது.
- மொழி ஒரே சமயத்தில் உண்டானதன்று.
மக்கட்கு வரவரக் கருத்து வளர்கின்றது. அதனால் மொழியும் வளர்கின்றது. முதல் மாந்தன் குழந்தைபோல்வன். அவனுக்கு ஊணுடை முதலிய சில பொருள்களிருந்தால் போதும். நாகரிகம் வளர வளரத்தான் கருத்துகள் பல்கும். அப்போது சொற்களும் பல்கும்.
மாந்தன் முதன்முதல் தோன்றியதற்கும், மக்கட்குள் கூட்டுறவுண்டானதற்கும் இடையில், நெடுங்காலம் சென்றிருக்கவேண்டுமாதலின், அக்காலமெல்லாம் வளர்ச்சியிலிருந்து தான் பின்னர் மொழி உருவாகியிருக்கும்.
- மொழிக்கலை ஓர் ஆக்கக் கலையாகும்.
கலைகள் இயற்கலை (Physical Science), ஆக்கக்கலை (Historical Science) என இருவகைப்படும். பூதநூல் ஓர் இயற்கலை. ஓவியம் ஓர் ஆக்கக்கலை. அதுபோல மொழிக் கலையும் ஓர் ஆக்கக்கலையே.
- மொழி பொதுமக்களாலும் நூல்கள் புலவராலும் ஆக்கப்பெற்றவை.
- ஒருமொழி சில காரணத்தால் பலவாய்ப் பிரியலாம்.
ஒரு பெருமொழி பல சிறுமொழிகளாகப் பிரிந்து போவதற்குக் காரணங்களாவன:
(1) மன்பதைப்பெருக்கம்
ஒரு மொழியைப் பேசுவோர், மிகப்பல்கி ஒரு வியனிலப் பரப்பில் பரவிவிடுவாராயின், தட்பவெப்பநிலை வேறுபாடு சேய்மை முதலியவற்றால், பல மொழிவழக்குகள் தோன்றி, நாளடைவில் வேறு மொழிகளாகப் பிரிந்துவிடும்.
பொதுவாய், 100 மைல் சேய்மையில் இரண்டொரு சொற்களும், 200 மைல் சேய்மையில் சில சொற்களும், 400 மைல் சேய்மையில் மொழிவழக்கும், அதற்கப்பால் மொழியும் வேறுபடுவதியல்பு. இப் பொதுவிதிக்குச் சில தவிர்ச்சி (exception) களுமுண்டு.
(2) ஒலித்திரிபு (Phonetic Decay and Phonetic Variation)
- சோம்பலால்.
கா : பளம் (பழம்)
- உறுப்பு வேறுபாட்டால்.
தட்பவெப்பநிலை, நிலச்சிறப்பு, ஊண், தொழில், பழக்க வழக்கம், இயற்கை முதலிய காரணங்களால், எழுத் தொலிக்குக் கருவியாகும் உறுப்புகள், ஒவ்வொரு நாட்டாரி டத்தும் நுட்பமாய்வேறுபடுகின்றன. அதனால், ஒலிப்புமுறையும் வேறு படுகின்றது. மலையாளத்தில் வலி மெலியாதலும் (Nasalization) கன்னடத்தில் பகரம் ஹகரமாதலும், தெலுங்கில் ழகரம் டகரமாதலும் காண்க.
(3) சொற்றிரிபு (Verbal Changes)
- ஈறுகெடல் (Discardance of Inflection)
- ஈறு திரிதல் (Inflectional Changes)
iii. போலி (Mutation)
- இலக்கணப்போலி (Metathesis)
- மரூஉ (Disguise)
- சிதைவு (Corruption)
vii. முக்குறை (Apherosis Syncope and Apocope)
viii. முச்சேர்ப்பு (Prosthesis, Epenthesis and Epithesis)
- அறுதிரிபு
- எதுகை (Rhyming)
- வழூஉப்பகுப்பு (Metanalysis)
xii. ஒப்பு (Analogy)
xiii. மேற்படையமைப்பு (Superstructure)[9]
(4) பொருட்டிரிபு (Semantic Changes).
- வேறுபடுத்தல் (Differentiation)
- விதப்பித்தல் (Specialisation of general terms)
iii. பொதுப்பித்தல் (Generalisation of special terms)
- இழிபு (Degradation)
- உயர்பு (Elevation)
- விரிபு (Extension)
vii. அணி (Metaphor)
viii. சுருக்கல் (Contraction)
- வரையறை (Restriction)
- வழக்கு (Usage)
(1) இலக்கணமுடையது;
(2) வழுவுள்ளது.
(5) சொற்றெரிந்து கோடல் (Natural Selection)
தெலுங்கு இல் என்னுஞ் சொல்லையும், கன்னடம் மனை என்னுஞ் சொல்லையும் தமிழினின்றும் தெரிந்து கொண்டது சொற்றெரிந்துகோடல்.
(6) வழக்கற்ற சொல் வழங்கல் (Colonial Preservation).[10]
நோலை என்னும் தமிழ்ச்சொல்லின் மூலம் தெலுங்கில் நூன (எள்நெய்) என்று வழங்குவது வழக்கற்ற சொல் வழங்கல்.
(7) புதுச்சொல்லாக்கம்.
தாய்வழக்கி லில்லாத சொல், தொகைச்சொல், ஈறு, ஒட்டுச் சொற்கள் முதலியவற்றைப் புதிதாய் ஆக்கிக் கொள்ளல்.
(8) தாய்வழக்கொடு தொடர்பின்மை.
சேரநாட்டுத் தமிழ்,சேரமான் பெருமாள் நாயனார்க்குப் பின், தமிழொடு தொடர்பின்மை யாலேயே வேறு மொழியாய்ப் பிரிய நேர்ந்தது.
(9) பிறமொழிக் கலப்பு (Admixture of foreign elements)
மேற்கூறிய திரிபு முறைகளெல்லாம், சோம்பலாலும் அறியாமையாலும் நேர்ந்து ஒரு பயனும் பயவாதிருப்பின், மொழிச்சிதைவு (Linguistic Corruption) என்னும் கேட்டிற்குக் காரணமாகும்; அங்ஙனமன்றி, அதற்கு மறுதலையாயிருப்பின், மொழி வழக்கு வளர்ச்சி (Dialectic Regeneration) என்னும் ஆக்கத்திற்குக் காரணமாகும்.
தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகள் தமிழினின்றும் பிரிந்துபோனது, திராவிடர் தவறுமன்று, ஆரியர் தவறுமன்று, மொழிவழக்கு வளர்ச்சியேயாகும். ஆனால், அம் மொழிகளில் வடசொற்களைக் கலந்ததும், அம் மொழிகளைத் தமிழினின்றும் வேறுபடுத்தினதும் திராவிட மொழிகளுக்கு வட மொழியைத் தாயாகக் காட்டியதும், தமிழைத் தாழ்த்திவிட்டு வட மொழியைத் தலைமையாக்கியதும், ஆரியத்தால் திராவிடர்க்கு நேர்ந்த தீமைகளாகும். மிகப் பெரிய திராவிட மன்பதையை ஆரியர் முதலாவது பல பிரிவாகப் பிரித்தது மொழியினால் என்பது, இதனால் விளங்கும். மொழியினால் திராவிடரைப் பல பிரிவாகப் பிரித்தபின், மதத்தாலும் வரண வொழுக்கத்தாலும் தமிழரைப் பல பிரிவாகப் பிரித்தனர்.[11]
தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகள், செந்தமிழ் நாட்டிற்குச் சேயவாதலாலும், சேர சோழ பாண்டிய ஆட்சி கட்கப்பாற்பட்டவாதலாலும், சில நல்ல சொல்வடிவுகளை யுடையவாதலாலும், தமிழினின்றும் பிரிந்து கிளைமொழி களாய், வேறாக வெண்ணப்படுவதற்குத் தகுதியுடையனவே. ஆனால், 12ஆம் நூற்றாண்டுவரை சேரநாட்டுத் தமிழாயிருந்த மலையாள மொழி, தமிழினின்றும் வேறாக எண்ணப்படுவதற்குச் சற்றும் தகுதியுடையதன்று. மலையாள மொழியைக் கெடுத்த ஆரியருள் தலைமையானவர், தமிழெழுத்தின் வகைகளான வட்டெழுத்திலும் கோலெழுத்திலுமே தங்கள் மொழியை எழுதிவந்த மலையாளிகட்கு, ஆரியவெழுத்தையமைத்துக் கொடுத்த துஞ்சத்து எழுத்தச்சன் என்பதற்கு எள்ளளவும் ஐயமேயில்லை.
- ஒரு மொழி சில காரணத்தால் திரியலாம் :
ஒரு மொழி திரிதற்குக் காரணங்களாவன
(1) பேசுவோர் நாடோடிகளாயிருத்தல்
(2) பேசுவோர் சிறு குழுவினராயிருத்தல்
(3) வரிவடிவின்மை
(4) அரசியலின்மை
(5) தாங்குநரின்மை
(6) சிதைவுகாப்பின்மை
(7) சொன்மாற்றம் i.பணிவுடைமையால்
ii. தனிமக்கள் விருப்பத்தால்
(8) பிறமொழிக்கலப்பு
ஒலி, சொல், பொருள் என்னும் மூவகையிலும் ஒரு மொழிதிரியும் முறைகள் முன்னர்க் கூறப்பட்டவையே.
இத்திரிபுகளெல்லாம், இம்மடலத்தின் இரண்டாம் பாகத்தில் விரிவாய் விளக்கப்படும். இவற்றுள், சிலவற்றை இப் புத்தகத்தின் இறுதியிற் காணலாம்.
- ஒரு மொழி சில காரணங்களால் வழக் கழியலாம்.
ஒரு மொழி வழக்கழிதற்குக் காரணங்களாவன :
(1) செயற்கை வளர்ச்சி முதிர்வு. கா : சமஸ்கிருதம்.
(2) பேசுவோர் அநாகரிகராயிருந்து பிறநாகரிக மொழியை மேற்கொள்ளல்.
ஆப்பிரிக்காவினின்றும் அமெரிக்கா சென்ற நீகரோவர், தம் மொழிகளை விட்டுவிட்டு, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டமை காண்க.
(3) பேசுவோர் சிறு குழுவாய்ப் பிறமொழி பேசும் பெரும்பான்மையோர் நடுவிலிருத்தல்.
(4) போர், கொள்ளைநோய், எரிமலைக் கொதிப்பு முதலியவற்றால் ஒரு மொழியாரெல்லாரும் அழிக்கப் படல்.
- ஒரு மொழி புதிதாய்த் தோன்றலாம்.
புதுமொழி தோன்றும் வகைகள்
- செயற்கை கா:எஸ்பெரான்ற்றோ (Esperanto)
ii. கலவை கா:இந்தி
iii. மொழிவழக்கு வளர்ச்சி கா:தெலுங்கு - அடுத்தடுத்து வழங்கும் மொழிகள் தம்முள் ஒன்றி னொன்று கடன்கொள்ளும்.
இவ்விதி தமிழுக்குப் பெரும்பாலுஞ் செல்லாதென்பது பின்னர் விளக்கப்படும்.
- ஒரு தனிமொழி பேசுவோர் தொன்றுதொட்டுத் தனிக் குலத்தினராயிருந்திருத்தல் வேண்டும்.
பிற மொழியோடு சிறிதும் தொடர்பில்லாத ஒரு தான்றோன்றி மொழியிருப்பின்,அதைப் பேசுவோர் தொன்றுதொட்டுப் பிறகுலத்தாரொடு தொடர் பில்லாத ஒரு தனிக் குலத்தினராயிருத்தல் வேண்டும்.
- மொழிநூற்கு மாந்தன் வாயினின்று தோன்றும் ஒவ்வோர் ஒலியும் பயன்படும்.
- ஒரு மொழியின் சொல்வளம் அதைப் பேசு வோரின் தொகைப் பெருமையையும் நாகரிகத்தையும் பொறுத்தது.
- மொழிநூலாளர் பல மொழிகளைப் பேச வேண்டும் என்னும் யாப்புறவில்லை.
முக்கியமான இரண்டொரு மொழிகளிற் பேசுந்திறனும், பிற மொழிகளின் இலக்கண வறிவும் சொல்லறிவும், மொழி நூலார்க் கிருந்தாற் போதும்.
- ஒரே மொழி பேசுவோரெல்லாம் ஓரினத்தா ரல்லர்.
பார்ப்பனரும் தமிழரும் ஒரே மொழி பேசுவதால் ஓரினமாகார்.
- மக்கள் நாகரிகத்தைக் காட்டுவதற்கு மொழியே சிறந்த அடையாளம்.
விலங்கினின்றும் மாந்தனை வேறுபடுத்துவது மொழி யொன்றே. அம் மொழியும் பலதிறப்பட்டு, அவற்றைப் பேசும் மக்களின் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுவதாகும்.
- மொழிநூற் கலைக்கு நடுவுநிலையும் பொறு மையும் வேண்டும்.
இவ்விதி எல்லாக் கலைக்கும் பொதுவாயினும், மொழி நூற் கலைக்குச் சிறப்பாய் வேண்டுமென்பதற்கு இங்குக் கூறப்பட்டது. ஒருவர் பெருமை பாராட்டிக்கொள் ளும் பொருள்களுள், தாய்மொழியும் ஒன்று. ஆகையால், அதன் மீதுள்ள பற்றினால் நடுவுநிலையை நெகிழவிடக் கூடாது.
தமிழ்நாட்டில், நடுவுநிலை யாராய்ச்சிக்குத் தடையாக ஈருணர்ச்சிகளிருந்துவருகின்றன. அவற்றுள் ஒன்று, ஆரியத் திற்கு மாறாக இருப்பது உண்மையாயினும் கூறக்கூடாதென்பது. இன்னொன்று மதப்பற்று. சுவாமிநாத தேசிகர் திருவாசகம், பெரிய புராணம் முதலியவற்றைப் படிக்கலாமென்றும், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலியவற்றைப் படிக்கக்கூடாதென்றும் கூறியது மதப்பற்றாகும். ஓர் ஆராய்ச்சியாளன் ஒன்றை ஆராயும்போது, தன்னை மதமற்றவன்போலக் கருதினாலொழிய, அதன் உண்மை காணமுடியாதென்பது தேற்றம்.
“காய்தல் உவத்தல் அகற்றி யொருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே — காய்வதன்கண்
உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண்
குற்றமுந் தோன்றாக் கெடும்.”
இனி, சிலர் கால்டுவெல் கூறியவாறு, ஒப்பியலறிவின்றி, ஒரு துறையிலேயே அமிழ்ந்து, உள்ளம் பரந்து விரியாமல் குவிந்தொடுங்கப் பெறுகின்றனர். நுண்ணிய மதியும் சிறந்த ஆராய்ச்சியியல்பும் உள்ள, காலஞ்சென்ற பா.வே. மாணிக்க நாயகர் ஒப்பியலறிவின்மையாற் பல செய்திகளை உண்மைக்கு மாறாகக் கூறிவிட்டனர்.
ஓங்கார வடிவினின்றும் தமிழெழுத்துகள் வந்தனவென்றும்; ஓ என்னும் வடிவம் உம என்னும் மலைமகள் பெயரும் லிங்கக் குறியும் சேர்ந்ததென்றும், சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தில், வகரம் அருளையும் யகரம் உயிரையும் நகரம் திரோதத்தையும் மகரம் மலத்தையுங் குறிக்குமென்றும், ஆய்தம் மூச்சொலியென்றும், அதன் துணைகொண்டு அரபி, ஹெபிரேயம் போன்ற மொழிகளைத் தமிழில் எழுதலாமென்றும், உடம்படுமெய் என்பது உடம்பு + அடும் + மெய் என்று பிரிந்து, பிறவியைக் கெடுப்பதென்று பொருள்படுமென்றும், ஒகரத்தின் மேல் பண்டைக்காலத்திற் புள்ளியிட்டெழுதினது, சிவ பெருமானின் தக்கண வடிவத்தைக் காட்டுதற்கென்றும், பலவாறு மயங்கிக் கூறினர் பா.வே. மாணிக்கநாயகர்.
இவையெல்லாம் பலவகை மலைவுகளுடையன என்பது ஆராய்ச்சியாளர் எல்லார்க்கும் புலனாகும். ஆயினும், இவற்றுள் ஒன்றைமட்டும், ஏனையோர்க்கும் தெரியும்படி இங்குக் கூறுகின்றேன்.
ய், வ் என்னும் மெய்கள் தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியில் ஈருயிர்களைப் புணர்த்தாலும், இடையில் உடம்படு (உடன்படுத்தும்) மெய்களாய்த் தோன்றத்தான் செய்யும். இது எல்லா மொழிக்கும் பொதுவான ஒலிநூல் விதி.
கா : he + is = ஹீயிஸ், my + object = மையாப்ஜெக்ற்ற் — ய், fuel = ப்வியூவெல், go + and (see) = கோவன்று — வ்.
Drawer, sower முதலிய ஆங்கிலச்சொற்களில், வகரவுடம்படு மெய்க்குப் பதிலாக யகரவுடம்படுமெய் வருகிறதேயெனின், வகரத்தினும் யகரம் ஒலித்தற்கெளிதாதல்பற்றி, பிற்காலத்தில் யகரவுடம்படுமெய் பெருவழக்காயிற்றெனக் கொள்க. தமிழிலும் இங்ஙனமே. ஆயிடை, கோயில், சும்மாயிரு முதலிய வழக்குகளைக் காண்க.
மாணிக்க நாயகரைப் பின்பற்றுஞ் சிலர், அவரைப் போன்றே குறுகிய நோக்குடையராய், பல சொற்கட்குத் தவறான பொருளும், தமது கருத்திற்கிசையாத நூற்பாக்களையும் சொல்வடிவங்களையும் இடைச்செருகலும் பாடவேறுபாடு மென்றும் கூறி வருகின்றனர். அவர் இனிமேலாயினும் விரி நோக்கடைவாராக.
மேனாட்டார் நடுநிலையும் ஒப்பியலறிவும் உடையராயினும், தமிழின் உண்மைத்தன்மையைக் காணமுடியாமைக்குப் பின்வருபவை காரணங்களாகும் :
(1) தமிழ் தற்போது இந்தியாவின் தென்கோடியில் ஒரு சிறு நிலப்பரப்பில் வழங்கல்.
(2) (தமிழுட்பட) இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் வடசொற்கள் கலந்திருத்தல்.
(3) (கடல்கோளாலும், ஆரியத்தாலும், தமிழர் தவற்றாலும் பண்டைத் தமிழ்நூல்கள் அழிந்து போனபின்) இந்தியக் கலை நூல்களெல்லாம் இப்போது வடமொழியிலிருத்தல்.
(4) இதுபோது பல துறைகளிலும் பார்ப்பனர் உயர்வாயும் தமிழர் தாழ்வாயுமிருத்தல்.
(5) பார்ப்பனர் தமிழரின் மதத்தலைவராயிருத்தல்.
(6) தமிழைப்பற்றித் தமிழரே அறியாதிருத்தல்.
(7) ஐரோப்பியர் தமிழைச் சரியாய்க் கல்லாமை.
கால்டுவெல் கண்காணியார், தமிழ் வடமொழித் துணை வேண்டாத தனிமொழியென்றறிந்தும், தமிழர் உயர்நிலைக் கலைகளை ஆரியரிடத்தினின்றும் கற்றதாகத் தவற்றெண்ணங் கொண்டமையால், தமிழில் மனம், ஆன்மா என்பவற்றைக் குறிக்கச் சொல்லில்லையென்றும், திரவிடம், சேரன், சோழன், பாண்டியன் என்னும் பெயர்கள் வட சொற்கள் என்றும், இன்ன என்னும் வடிவிற்கொத்த அகரச் சுட்டடிச்சொல் தமிழிலில்லை யென்றும், பிறவாறும் பிழைபடக் கூறினர்.
உவில்லியம் (William), கோல்புரூக் (Colebrooke), மூய்ர் (Muir) முதலியவரோவெனின், தமிழைச் சிறிதுங் கல்லாது, வடமொழியிலேயே மூழ்கிக் கிடந்து, இந்திய நாகரிக மெல்லாம் ஆரிய வழியாகக் கூறிவிட்டனர்.
மொழிநூற்கலையும் நூலாராய்ச்சியும் வரவர வளர்ந்து வருகின்றன. ஆகையால், சென்ற நூற்றாண்டில் தோன்றிய பல மொழிநூற் கருத்துகள் இந் நூற்றாண்டில் அடிபடும். பார்ப்பனர், ஆரியத்தை உயர்த்திக்கூறிய மேனாட்டார் சிலரின் கூற்றுகளைத் தங்கட்கேற்ற சான்றுகளாகப் பற்றிக் கொண்டு, அவற்றை மாற்றுகின்ற புத்தாராய்ச்சி தோன்றாத படி, பல வகையில் தமிழரை மட்டந்தட்டி வருகின்றனர். மேனாட்டில், உண்மை காணவேண்டுமென்று பெருமுயற்சி நடந்துவருகின்றது; ஆனால், கீழ்நாட்டிலோ உண்மையை மறைக்கவேண்டுமென்றே பெருமுயற்சி நடந்துவருகின்றது. கால்டுவெல் கண்காணியாரின் திராவிட ஒப்பியல் இலக்கணத்தின் முதலிரு பதிப்புகளிலும், இல்லாத (திராவிட நாகரிகத்தையிழித்துக்கூறும்) சில மேற்கோள்கள், மூன்றாம் பதிப்பிற் காணப்படுகின்றன. இவையெல்லாம் மொழிநூற் கலையின் முன்னேற்றத்தைக் குறியாது பிற்போக்கையே குறிக்கும்.
- ↑ வேங்கடராஜு லு ரெட்டியார் கட்டுரை (தமிழ்ப்பொழில்).
- ↑L.S.L. Vol>II. p.207.
- ↑வேரும் முதல் வேர்(Primitive root),வழி வேர் (Secondary root, சார்பு வேர்(Teritiary root) என மூவகைப்படும்.அவற்றுள்,முதல்வேர் மட்டும் மீண்டும் மூவகைப்படும். இவையெல்லாம் பின்னர் விளக்கப்படும்.
- ↑இங்குக் கூறியது மொழியறிஞருக்கேயன்றி, இந்திக் கட்டாயக் கல்விபோல எல்லார்க்குமன்று.
- ↑L.S>L. Vol.pp.35,375,387.
- ↑L.S.L. Vol.1.p.47.
- ↑தொல். 639
- ↑L.S.L. Vol.1.p.31
- ↑ உண்டு என்னும் தமிழ் வினைமுற்றைப் பகுதியாகக்கொண்டு உண்டாடு உண்டாதி முதலிய தெலுங்கு வினைமுற்றுகளையமைப்பது மேற்படையமைப்பாகும்.
- ↑ *English past & present. by French p.55
- ↑ இதுபோது நாட்டியலியக்கத்தாலும் தமிழர் பிரிக்கப்படுகின்றனர்.
II. பண்டைத் தமிழகம் – குமரிநாடு
1. குமரிநாடு
- அகச்சான்றுகள்:—
தெற்கே, இந்துமா கடலில், ஒரு பெருநிலப்பரப்பிருந்ததென்றும், அதுவே பண்டைப் பாண்டிநாட்டின் பெரும்பகுதி யென்றும், அது பின்னர்க் கடலாற் கொள்ளப்பட்டதென்றும் பல தமிழ்த் தொன்னூல்களிற் கூறப்படுகின்றது, அந் நாட்டைத் தமிழர் குமரியாற்றின் அல்லது குமரிமலையின் பெயரால் குமரி நாடென்றும், மேனாட்டுக் கலைஞர் லெமுர் (Lemur) என்ற ஒரு குரங்கினம் அங்கு வதிந்ததால் லெமுரியா (Lemuria) என்றும் அழைக்கின்றனர்.
குமரிநாட்டின் தென்பாகத்தில் பஃறுளியென்றோர் ஆறோடிற்றென்றும், அதன் கரையில் மதுரையென்றோர் நகரிருந்ததென்றும், அதுவே, பாண்டிநாட்டின் பழந்தலைநகர் என்றும், அங்கேயே தலைக்கழகம் இருந்ததென்றும், அக் கழகத்தின் பின் நெடியோன் என்னும் பாண்டியன் காலத்தில் அகத்தியர் அங்கு வந்து சேர்ந்தார் என்றும், அப்போது மதுரையைக் கடல்கொள்ள, நெடியோன் வடக்கே வந்து கபாடபுரத்தை யமைத்துத் தலைநகராகக் கொண்டானென்றும், அங்கே இடைக்கழகம் நிறுவப்பட்டதென்றும், பின்பு கபாடபுரமும் கடல் வாய்ப்பட, பாண்டியன் உள்நாட்டுள் வந்து மணவூரில் இருந்தானென்றும், பின்பு இப்போது வைகைக்கரையிலுள்ள மதுரை கட்டப்பட்டதென்றும், குமரிமுனைக்குத் தெற்கில் குமரி யென்றோர் மலைத்தொடரும் ஓர் ஆறும் இருந்தனவென்றும், அவ்வாற்றுக்கும் அதற்குத் தெற்கிலிருந்த பஃறுளியாற்றுக்கும் இடைநிலச்சேய்மை 700 காதமென்றும், குமரியாறு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கடல் வாய்ப்பட்டதென்றும் பண்டைத் தமிழ்நூல்களால் அறியக் கிடக்கின்றது.
(1) பஃறுளியாறு :
“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” [2]
(2) (தென்) மதுரை :
“தலைச்சங்கம் இடைச்சங்கங் கடைச்சங்கமென மூவகைப்பட்ட சங்கம் இரீயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார் ………………….. தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரையென்ப.” [3]
(3) குமரிமலை
மேற்குத்தொடர்ச்சிமலை, முன்காலத்தில், தெற்கே நெடுஞ்சேய்மை சென்றிருந்ததாகவும், அங்குக் குமரியென்று அழைக்கப்பட்டதாகவும், தமிழ்நூல்களால் தெரிகின்றது.
குமரிமலையையே மகேந்திரமென்று வடநூல்களும், பிற்காலத் தமிழ்நூல்களும் கூறும்.
அநுமன் மகேந்திரமலையினின்று கடலைத் தாண்டி, இலங்கைக்குச் சென்றதாக இராமாயணம் கூறுகின்றது.
“மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்”[4]
என்றார் மாணிக்கவாசகர்.
“….. தாமிரபரணி நதியைத் தாண்டுங்கள்…. அதை விட்டு அப்பாற் சென்றால்….. பாண்டிநாட்டின் கதவைக் [5] காண்பீர்கள்.அதன்பின் தென் சமுத்திரத்தையடைந்து… நிச்சயம் பண்ணுங்கள். அந்தச் சமுத்திரத்தின் கண்ணே, மலைகளுட் சிறந்ததும், சித்திரமான பலவிதக் குன்றுகளை யுடையதும், பொன்மயமானதும், நானாவித மரங்களுங் கொடிகளுஞ் செறிந்ததும், தேவர்களும் ரிஷிகளும் யக்ஷர்களும் அப்சரப் பெண்களும் தங்குவதும், சித்தர்களும் சாரணர்களும் கூட்டங் கூட்டமாக இருப்பதுமாகிய அழகிய மகேந்திர மலை,”[6]. என்று, சுக்கிரீவன் அங்கதனுக்குச் சொன்னதாக, வால்மீகி முனிவர் கிஷ்கிந்தா காண்டத்திற் கூறியிருப்பதினின்றும்,
“உன்னதத் தென் மயேந்திரமே”
என்று சிவதருமோத்திரமும், “பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடு” என்று இளங்கோவடிகளும் கூறுவதினின்றும், குமரிமலையின் பெருமையை உணரலாம்.
(4) குமரியாறு
மேற்கூறிய குமரிமலையினின்றும் பிறந்தோடிய ஆறு, அம் மலையின் பெயரால் குமரியென்றே அழைக்கப்பட்டது. இங்ஙனமன்றி, ஆற்றின் பெயரே மலைக்கு வழங்கினதாகவும் கொள்ளலாம்.
“குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறை”
“தென்றிசைக் குமரி யாடிய வருவோள்”
“தெற்கட் குமரி யாடிய வருவேன்” [7]
என்று மணிமேகலையிலும்,
“தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”
“குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” [8]
என்று புறநானூற்றிலும்,
“கன்னிதனைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி”
“மாமறை முதல்வன் மாடல னென்போன்……
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து”[9]
என்று சிலப்பதிகாரத்திலும் வந்திருத்தல் காண்க.
புறநானூற்றில், “குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. அயிர் – நுண் மணல். அயிரை நீர்க்குள் அடிமட்டத்திலுள்ள மணலின், அல்லது சேற்றின் மேலேயே ஊர்ந்து திரியும் ஒருவகை மீன். அது ஆற்றில் அல்லது குளத்தில்தானிருக்கும். கடல் மீன்களில் அயிரைக் கொத்தது நெய்த்தோலி (நெத்திலி) என்று கூறப்படும். ஆகையால், மேற்கூறிய அடியில் குமரி யென்றது ஆறென்பது தெளிவு. இதைச் சிலப்பதிகாரத்தில் கன்னியை (குமரியை)க் காவிரியோடுறழக் கூறியதாலும், மேற்கூறிய அடிகளில் உள்ள குமரி என்பதை ஆற்றின் பெயராகவே உரையாசிரியர் கூறியிருப்பதாலும் அறியலாம்.
பழம்பாண்டி நாட்டில், முதலாவது,
பஃறுளியாற்றையும் குமரிமலையையும் கடல்கொண்டமை,
“அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி” [10]
என்னும் சிலப்பதிகார வடிகளால் அறியலாம்.
இவ் வடிகட்கு,
“முன்னொரு காலத்துத் தனது பெருமையினதளவை, அரசர்க்குக் காலான் மிதித்துணர்த்தி, வேலானெறிந்த அந்தப் பழம்பகையினைக் கடல்பொறாது, பின்னொரு காலத்து அவனது தென்றிசைக் கண்ணதாகிய பஃறுளியாற்றுடனே, பலவாகிய பக்கமலைகளையுடைய குமரிக்கோட்டையும் கொண்டதனால், வடதிசைக் கண்ணதாகிய கங்கையாற்றினையும் இமயமலையினையும் கைக்கொண்டு, ஆண்டு மீண்டும் தென்திசையை யாண்ட தென்னவன் வாழ்வானாக வென்க” என்று உரை கூறியுள்ளார் அடியார்க்கு நல்லார்.
இச் செய்தியையே,
“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்” [11]
என்று கலித்தொகை கூறுகின்றது.
இதனால், கடல்கோளால் நாடிழந்தவன் பாண்டியனே என்பதும், அதற்கீடாக அவன் சேரசோழ நாடுகளின் பகுதிகளைக் கைப்பற்றினான் என்பதும் அறியப்படும்.
இதையே, “அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட் டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும், சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமு மென்னுமிவற்றை, இழந்த நாட்டிற்காக வாண்ட தென்னவன்”[12] என்று, அடியார்க்குநல்லார் கூறியுள்ளார்.
தென்னாட்டைக் கடல்கொண்டமைக்குக் காரணம், முன்னொரு காலத்தில் பாண்டியன் அதன்மீது வேலெறிந்த செயலாகச் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படுகின்றது.
இந்திரன் ஒருமுறை மதுரைமீது கடலை விட்டதாகவும், அப்போது ஆண்டுகொண்டிருந்த உக்கிரகுமார பாண்டியன் ஒரு வேலை யெறிந்து அக்கடலை வற்றச் செய்ததாகவும், திரு விளையாடற் புராணத்தில் ‘கடல்சுவற வேல்விட்ட படலம்’ கூறுகின்றது. இதிலிருந்து நாம் அறியக்கூடியது யாதெனின், ஒருமுறை நிலநடுக்கத்தால் கீழ் கடலிலிருந்து ஒரு பேரலை மதுரை வந்து மீண்டதென்பதே. இத்தகைய நிகழ்ச்சிகளைப் பல நிலநடுக்க வரலாறுகளினின்று அறிகின் றோம். உவாலேஸ் (Wallace) என்பவர் தாம் உவைகியௌ (Waigiou) தீவிலிருந்து தெர்னேற்றுத் (Ternate)த் தீவிற்குப் போகும் வழியில், நிலநடுக்கத்தால் கடன் மட்டம் உயர்ந்த தாகக் குறிப்பிடுகின்றார்.[13]
தென்னாட்டில் நிகழ்ந்த பல கடல்கோள்களில், ஒன்று பஃறுளியாற்றுக்குத் தெற்கிலிருந்து குமரியாற்றுக்குத் தெற்கில் ஓர் எல்லை வரையுள்ள நிலத்தைக் கொண்டதென்றும், இன்னொன்று குமரியாற்றையும் அதற்குத் தெற்கிலும் வடக்கி லுமிருந்த நிலத்தையும் கொண்டதென்றும் தெரியவருகின்றது.
பஃறுளிநாட்டையிழந்த பாண்டியன், தொல்காப்பியப் பாயிரத்தில் “நிலந்தரு திருவிற் பாண்டியன்” என்றும் மதுரைக்காஞ்சியில், ‘நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன்’ என்றும், புறநானூற்றில் ‘நெடியோன்’ என்றும் கூறப்படுபவன் ஆவன். முந்தின இருபெயர்களின் பொரு ளும், “மலிதிரை யூர்ந்து” என்னுங் கலித்தொகைச் செய்யுட் செய்திக்கு ஒத்திருத்தல் காண்க.
குமரியாற்றைக் கடல்கொண்டபின், அவ்விடத்துள்ள கடல் குமரிக்கடல் எனப்பட்டது. இப்போது அப்பக்கத்துள்ள நிலக் கோடி குமரிமுனை யென்னப்படுகிறது.
கோவலன் காலத்தில் குமரியாறு இருந்தமை, மாடலன் என்னும் மறையோன் அதில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, மதுரையில் கோவலனைக் கண்டதாகக் கூறும் சிலப்பதிகாரச் செய்தியால் அறியலாகும். கோவலன் இறந்து சில ஆண்டுகட்குப்பின், குமரியாற்றைக் கடல்கொண்டது. அதன்பின் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டதினால், ‘தொடியோள் பௌவமும்'[14] என்று தெற்கிற் கடலெல்லை கூறப்பட்டது.
‘தொடியோள் பௌவம்’ என்பதற்கு அடியார்க்கு நல்லார் கூறிய குறிப்புரையாவது :
“தொடியோள் – பெண்பாற் பெயராற் குமரியென்பதாயிற்று. ஆகவே, தென்பாற்கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியுமென்னாது பௌவமுமென்றது என்னையெனில், முதலூழி யிறுதிக்கண், தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து, அகத்தியனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட, நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர், எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையுள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து, நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீ இயினார். காய்சினவழுதிமுதற் கடுங்கோனீனாயுள்ளார் எண் பத்தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன், சயமா கீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப் படுத்து இரீஇயினான். அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்குமிடையே, எழுநூற்றுக்காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ் குறும் பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லமுதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின்காறும், கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றாரென் றுணர்க. இஃது என்னைபெறுமாறெனின், ‘வடிவேலெறிந்த…. கொடுங்கடல் கொள்ள’ என்பதனாலும், கணக்காயனார் மகனார் நக்கீரனா ருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரையானும் பிறவாற்றானும் பெறுதும்”, என்பது.[15]
இதில், பஃறுளியாற்றிற்கும் குமரிக்கும் இடையிலுள்ள சேய்மை 700 காவதம் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது ஒரு காவதம் பத்துமைல் என்றும் சொல்லப்படுகிறது. முற் காலத்தில் அது எத்துணைச் சேய்மையைக் குறித்ததோ தெரியவில்லை. இக்கால அளவுப்படிகொண்டாலும், தென் துருவத்திற்கும் குமரிமுனைக்கும் இடையிலுள்ள சேய்மை ஏறத்தாழ 7000 மைல் என்பதைத் திணைப்படத்தினின்றும் அறியலாம். தென்துருவ அண்மையில் விக்ற்றோரியா நாடு (Victoria Land) என்றொரு நிலப்பகுதியுமுள்ளது. அப்பகுதியும் குமரிமுனையும் ஒருகால் இணைக்கப்பட்டு ஒரு நெடு நிலப்பரப்பாகவும் இருந்திருக்கலாம். ஆனாலும், தென்துருவ வரையில், தமிழ்நாடு இருந்திருக்க முடியாது. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒருகாலத்தில் இணைக்கப்பட்டிருந்தனவென்று மேனாட்டுக் கலைஞர் கூறியிருப்பதினின்றும், இம் முக்கண்டங்களுக்கும் நிலைத் திணை, பறவை, விலங்கு, மாந்தன்குலம், மொழி முதலியவற்றிலுள்ள பல ஒப்புமைகளினின்றும், தெற்கே 3000 கல் தொலைவுவரை தமிழர் வதிந்திருக்கலாமென்று தோன்றுகிறது.
குமரியாறு கடலில் அமிழ்ந்தது கடைக்கழகக் காலமாதலின், இடைக்கழக நூலாகிய தொல்காப்பியப் பாயிரத்திற் குமரியென்று குறிக்கப்பட்டது குமரியாறேயாகும். இது,
“தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம், அது தானும் பனம்பாரனார்,
“வடவேங்கடந் தென்குமரி”
(பாயிரம்)
எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரஞ் செய் தமையிற்….. கடலகத்துப்பட்டுக் குமரியாறும் பனைநாட் டோடு கெடுவதற்கு முன்னையதென்பதூஉம்,”[16] என்று பேராசிரியர் கூறியதினின் றறியப்படும்.
ஆகவே, தெற்கில் கடலையெல்லையாகக் கூறும் நூல்களெல்லாம், குமரியமிழ்ந்ததற்குப் பிற்பட்டனவேயாகும்.
“வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத்
தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்
வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த
நாட்டியல் வழக்கம்…..”
எனத் தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையாகிய காலத்துச் சிறு காக்கைபாடினியார் செய்தநூல்”[17] என்று பேராசிரியர் கூறியதுங் காண்க.
(5) வீரமகேந்திரம் :
குமரிநாட்டைக் கடலானது, பகுதிபகுதியாகவும், பல முறையாகவும் கொண்டமையின், இலங்கைக்குத் தெற்கே வீர மகேந்திரபுரத்தைத் தலைநகராகக்கொண்ட ஒரு நிலப் பகுதி, பல கடல்கோளுக்குத் தப்பிக் கடைசியில் சூரபன்மன் காலத்திற்குப் பின், முழுகிப்போனதாகக் கந்தபுராணத்தி னின்றும் தெரிய வருகின்றது.
(6) இலங்கை :
இலங்கை ஒருகாலத்தில் இப்போதிருந்ததைவிடப் பெரிதாயும், வடபுறத்தில் தமிழ்நாட்டொடு சேர்ந்தும் இருந்தது. முதலில், தென்புறத்திலும் பிரிவில்லாதிருந்தமை சில சான்றுகளாலறியப்படும்.
“தாப்பிரப்பனே (Tabropane) தலைநிலத்தினின்றும் ஓர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் வதிநர் ‘பழையொ கொனாய்’ (Palaiogonoi) என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள்நாடு இந்தியாவினும் மிகுதியாகப் பொன்னும் பெருமுத்தும் விளைவது. தாப்பிரப்பனே இந்தியாவினின்றும், தமக்கிடையோடும் ஓர் ஆற்றினால் பிரிக்கப்படுகின்றது. அதன் ஒரு பாகம் இந்திய இனங்களினும் மிகப் பெரிய காட்டு விலங்கு களும் யானைகளும் நிறைந்தது; அடுத்த பாகம் மக்கள் வதிவது[18] என்று மெகஸ்தனிஸ் (Megasthenes) கூறுகிறார்.
இக் கூற்று, அவர்தம் முன்னோர் கூறியதைக் கொண்டு கூறியதேயாகும். ஏனெனில், அவர் தென்னாட்டிற்கு வர வில்லை, அவர் கூற்றிலுள்ள சில குறிப்புகளால், இலங்கையின் வடபாகம் ஒருகாலத்தில் இந்தியாவொடு சேர்ந்திருந்த தென்றும், தாமிரபணி இலங்கையூடும் ஓடிற்றென்றும், அதனால் இலங்கை தாம்பிரபரணி (Taprobane)யெனப்பட்ட தென்றும் அனுமானிக்க இடமுண்டு. ஆனால், தாமிர பரணியின் தெற்கிலுள்ள தமிழ்நாட்டையே தாப்பிரப்பனே யென்றும், அதற்கு வடக்கிலுள்ள தமிழ்நாட்டை இந்தியா வென்று, பண்டை யவன சரித்திராசிரியர் கூறினர் என்று கொள்ளவும் இடமுண்டு. ஏனெனில், இத்தகைய மயக்குகள் யவனாசிரியர் குறிப்புகளில் பலவுள்ளன. அதோடு, தாப்பிரப்ப னேயிலுள்ளவாகக் கூறப்பட்ட பொருளெல்லாம் பாண்டி நாட்டிலுமிருந்தன.
“வடநாட்டில், வடமொழியிற் பழமைகளை யெழுதிய நூலாசிரியர்கள், இலங்கை இப்போதிருப்பதைவிட மிகப் பெரிதாயிருந்ததாயும், விதப்பாக, மேற்கிலும் தெற்கிலும் மிக அகன்றிருந்ததாயும் கூறியிருக்கின்றனர். இக் கூற்று, புராண காலத்து உண்மையைக் கூறாவிடினும், இந்திய நாடுகளுக்குள் வழங்கிய ஒரு வழிமுறைச் செய்தியைக் குறிப்பிடுகின்ற தாயிருக்கின்றது.
“வடமொழி வானூலார் தங்கள் தலைமை உச்சகத்தை (Chief Meridian) இலங்கையில் வைத்தார்கள். ஆனால், அது இப்போதை இலங்கைக்கு மேற்கிலுள்ள கோடாயிருந்தது. இக் குறிப்புக்கள் தொன்முது காலத்தில் தென்னிந்தியாவும் மடகாஸ்கரும் இணைக்கப்பட்டிருந்தன வென்னும் கொள்கைக்குத் துணை செய்கின்றன………. இலங்கை சிறிது சிறிதாய்க் கடலுண் மூழ்கிக் குறுகியது என்று பௌத்தர் எழுதிவைத்த இடவழக்குச் செய்தியோடும் இது ஒத்திருக்கின்றது.”[19]
இராமர் காலத்தில், இலங்கை இப்போதிருப்பதை விடப்பெரிதாயும், தமிழ் நாட்டிற்கு மிக நெருங்கியதாயுமிருந்தது. இவ்விரு நிலங்கட்கும் இடைப்பட்ட கடல், ஒருவர் நீந்திக்கடக்குமளவு இடுகிய கால்வாயாக வேயிருந்தது.அநுமன் குமரி (மகேந்திர) மலையினின்று கடல்தாண்டியதும், இராமர் வானரப்படைத் துணையால் அணைகட்டியதுமான இடம், இப்போது இந்துமா கடலில் உள்ளது. இப்போது இராமர் அணைக்கட்டு என்று வழங்குமிடம், பிற்காலத்தில் பரிந்தை (Current) யாலும் எரிமலைக் கொதிப்பாலும், புயலாலும் இயற்கையாய் அமைந்த கல்லணையாகும். தமிழ் நாட்டின் தென்பகுதி கடலுண் முழுகி, இலங்கை மிக விலகிப் போனபின், சரித்திர மறியாத மக்களால், அது இராமாயணக் கதையொட்டி இராமர் அணைக்கட்டெனப்பட்டது. ‘ஆதாம் வாரைவதி’ (Adam’s Bridge) என்னும் பெயர் அதற்கு எவ்வளவு பொருந்துமோ, அவ்வளவே ‘இராமர் அணைக்கட்டு’ என்னும் பெயரும் பொருந்துவதாகும். இதை,
அநுமன் குமரி (மகேந்திர) மலையினின்று கடல் தாண்டினானென்றும், வானர வயவர் குட (மேற்குத் தொடர்ச்சி) மலை வழியாகத் தெற்கே சென்றனரென்றும், கற்களைக் குவித்தே கடலில் அணைகட்டினரென்றும், இராமர் பொதிய மலையிலிருந்த அகத்தியரிடம் வில் பெற்றன ரென்றும், இராமாயணங் கூறுவதாலும்;
“துங்கமலி பொதித்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்தி
லங்கனக விலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம்”
என்று சிவதருமோத்திரங் கூறுவதாலும்;
இலங்கையின் பழங்குடிகள் அதன் தென்பாகத்தி லேயே இன்று வதிவதாலும் அறியப்படும்
குமரிநாட்டுக் கடல்கோள்கள்
“உலகத்திலே, இன்றுவரை நேர்ந்துள்ள கடற் பெரு வெள்ளங்களுள், முதன்மையானது பதினூறாயிரம் ஆண்டுகட்குமுன்னர் நேர்ந்திருத்தல் கூடுமென்றும், இரண்டாவது வெள் ளம் எண்ணூறாயிரம் ஆண்டுகட்கு முன்னரும், மூன்றாவது வெள்ளம் இருநூறாயிரம் ஆண்டுகட்கு முன்னரும், நான் காவது வெள்ளம் எண்பதினாயிரம் ஆண்டுகட்கு முன்னரும், ஐந்தாவது வெள்ளம் ஏறக்குறைய ஒன்பதாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னரும் நிகழ்ந்திருத்தல் கூடுமென்றும் ‘காட்டெலியட்டு’ என்னும் நிலநூல் வல்லார் கூறுகின்றார்”[20] என்று கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் எழுதுகின்றார்கள்.
குமரிநாட்டில் நிகழ்ந்த கடல்கோள்களுள், தமிழ்நூல்களிற் குறிக்கப்படுபவை மூன்றாகும். அவையாவன :
(1) “பஃறுளியாற்றுடன்…. குமரிக் கோடும்” கொண்டது.
இதுவே தலைக்கழகத் தாவாகிய மதுரையின் அழிவு.
(2) இடைக் கழகத்தாவாகிய கபாடபுரத்தைக் கொண்டது. இதை, “இடைச்சங்கமிருந்தார்…. தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது”[21] என்பதனாலறியலாம்.
(3) காவிரிப்பூம்பட்டினத்தையும் வங்காளக்குடாவில் இருந்து தென்கடல்கள் (South Seas) வரையும் உள்ள பல தீவுகளையுங் கொண்டது. இதை,
“தீங்கனிநாவ லோங்குமித் தீவிடை
யின்றேழ் நாளிலிருநில மாக்கள்
நின்றுநடுக் கெய்த நீணிலவேந்தே
பூமி நடுக்குறூஉம் போழ்தத்திந்நகர்
நாக நன்னாட்டு நானூ றியோசனை
வியன்பாதலத்து வீழ்ந்துகே டெய்தும்”[22]
“மடவர னல்லாய் நின்றன மாநகர்
கடல்வயிறு புக்கது”[23]
என்னும் மணிமேகலைப் பகுதிகளால் அறியலாம். காவிரிப் பூம்பட்டினம் அழிந்தபோதே குமரியாறும் முழுகினதாகத் தெரிகின்றது.
தமிழ்நூல்களால் தெரியவருங் கடல்கோள்கள் மூன்று. அவற்றுள் முதலது மிக முக்கியமானது. ஏனெனில், அது ஒரு பெருநிலப் பரப்பின் அழிவாயும் அதன் கதை உலக முழுதும் வழங்குவதாயும், மக்கள் ஒருதாய் வயிற்றினரென் றும் மாந்தன் பிறந்தகம் குமரிநாடென்றும் துணிவதற்குச் சான்றாயுமுள்ளன.
இம் முதற் கடல்கோளே நோவாவின் காலத்தில் நிகழ்ந்த வெள்ளமாகக் கிறித்தவ மறையிற் கூறப்படுவது. இது ‘வெள்ளப் பழமை’ (The Flood Legend) என்று ஆங்கிலத் தில் வழங்கும்.
“மேனாட்டார் இக் கதையை யூதரிடத்தினின்று, பழைய ஏற்பாட்டு வாயிலாய்த்தான் அறிந்தார்கள். ஆனாலும்,இது யூதரிடத்து முதன்முதல் தோன்ற வில்லை.யூதர் இக்கதையைப் பாபிலோனியரிட மிருந்தறிந்தார்கள்.ஆனால், கில்கமேஷ் (Gilgamesh) என்னும் பாபிலோனியக் காதை நூலில் இது இணைக்கப்பட்டிருக்கிற முறையை நோக்கும் போது,இது பிற்காலச் செருக லென்றும், பாபிலோனியருக்கு மிக முற்பட்ட தென்றும் கருத இடமுண்டு.”
வெள்ளக்கதை பாபிலோனில், அல்லது சேமிய வரணத் தாருக்குள் மட்டும் காணப்படுவதன்று, அதற்கு மாறாக, அது உலக விரிவானது. யூதர் நோவாவொருவ னையே எஞ்சினோனாகக் கொண்டனர்; பாபிலோனியர் உத்தானபிஷ்திம் (Utanapishtim) என்பவனைக் கொண்டனர். கிரேக்கருக்குள், தியூக்கேலியனையும் (Deucalion) அவன் மனைவி பைரா (Pyrrha)வையுங் காண்கின்றோம். மெக்ஸி கோவில், இருவேறு வரலாறுகள் உள. அவற்றுள் முந்தின நகுவாத்தல் (Nahuatl) கதை காக்ஸ் காக்ஸை (Cox cox)யும் அவன் மனைவி சொச்சிக்கு வெத்ஸலை (Xochliquetzal)யும் கூறுகின்றது; இன்னொன்று இவ்விருவரையும், முறையே, நத்தா (Nata) நானா (Nana) என்று கூறுகின்றது.
“இதோடு பெயர்வரிசை முடியவில்லை. உண்மையில் எல்லா மக்களுக்கும் இவ் வெள்ளத்தைப்பற்றி ஒவ்வொரு கதையிருப்பதாகத் தெரிகிறது.”[24]
சீனப் பழமையில் ப்வோகி (Fohi)யும், கல்தேயப் பழமை யில் சிசுத்துருசும் (Xisuthrus) நோவாவாகக் கூறப்படுகின்றனர்.
ஆங்கில மதாசிரியர்கள் நோவாவின் வெள்ளத்திற்குக் குறித்த காலம் கி.மு. 2348. இலங்கைப் பௌத்த மதாசிரியர் இலங்கையில் கடைசியாக நேர்ந்த கடல்கோளுக்குக் குறித்த காலம் கி.மு. 2387. தமிழ்நாட்டுக் கடல்கோளும் இதே காலத்ததாயிருத்தல் மிகவும் வியக்கத்தக்கது. ஆரியர் இந்தி யாவிற்கு வந்தது, கி.மு. 3000 போல். அகத்தியர் தென்னாட் டிற்கு வந்தது, கி.மு. 2500 போல்.
தமிழ்நாட்டுக் கடல்கோள், சதாபத பிராமணம், மச்ச புராணம், அக்கினி புராணம், பாகவத புராணம், மகாபாரதம் ஆகிய வடநூல்களிலும் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் மிகப் பழைய வரலாறு சதாபத பிராமணத்தது. மகாபாரதத்தது மிகப் பிந்தியதாதலின் மிகப் பெருக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தைப்பற்றி மகாபாரதமும், கல்தேயப் பட்டயமும் கிறித்தவ மறையும் கூறும் வரலாறுகள்,வெள்ளத்தின் நோக்கம், வெள்ளத்துக்குத் தப்பியவரின் பன்மை, வெள்ளத் தின்பின் மக்கட் பெருக்கம் என்ற குறிப்புகளில் ஒத்திருப் பதை, ராகொஸின் தமது ‘வேதகால இந்தியா’வில் 340ஆம் பக்கத்திற் காட்டியிருக்கின்றார்.
வடநூல் வெள்ளக்கதைகளில், மனுவென்றும் அரச முனி (ராஜரிஷி)யென்றும் திராவிட நாட்டர சனாகிய சத்திய விரதனென்றும் குறிக்கப் படுகின்றவன், நிலந்தரு திருவிற் பாண்டியனாய்த் தான் இருக்கவேண்டும். திராவிடத் தேசத் தரசன் என்னும் பட்டமும், அரச என்னும் அடையும் அகத் திய முனிவருக் கேலாமையின், அவராயிருக்க முடியாது.
தமிழர் கி.மு. 2000 ஆம் ஆண்டுகட்கு முன்னமே, வாரித்துறை (Maritime) முயற்சிகளுள் சிறந்திருந்தமை. அவர்கள் அயல் நாடுகளோடு செய்துவந்த நீர்வாணிகத் தாலும், பல்வகை நீர்க்கலங்களையுங் குறிக்கத் தமிழிலுள்ள பெயர்களாலும்,
“முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை”
என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும் அறியப்படும். ஆகையால், நோவாவும் அவன் பேழையும், நிலந்தருதிருவிற் பாண்டியனும் அவன் நாவாயுமாய்த்தானிருந்திருத் தல்வேண்டும். இது பின்னர்த் தெளிவாக விளக்கப்படும்.
“குட(மேற்கு)மலைத்தொடர், கடலில் அமிழ்ந்து போன தென்னாட்டை நோக்க வடக்கிலுள்ளமை யால், இவ்வெள்ளத் துன்பத்திற்குமுன், வடமலைத் தொடர் எனப்பட்டது. மனுவின் பேழை வடமலைத்தொடரில் தங்கிற்றென்று சதாபத பிராமணமும், திராவிட நாட்டரசன் மலையமலையில் தவஞ் செய்து கொண்டிருந்தானென்று புராணங்களும் கூறுகின்றன….”
“மனுவின் சரிதையை முதன்முதற் கூறும் சதாபத பிராமணம், வடமலைத்தொடரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆயினும், வடமலைத்தொடர் என்றது மேற்குத் தொடர்ச்சி மலையையே என்றும், பேழை தங்கிய இடம் மலையமலையே என்றும் கொள்வதற்குப் போதிய புராணச் சான்றுகள் உள்ளன” என்று பண்டிதர் டி. சவரிராயன் (M.R.A.S.) கூறுகின்றார்.[25]
தமிழ்நாட்டில் நெட்டிடையிட்ட மூன்று அழிவுகள் தோன்றினமையின், ஈரழிவிற் கிடைப்பட்ட காலப்பகுதியை ஓர் ஊழியென்றும், மூவழிவுகளால் ஏற்பட்ட காலப்பகுதிகளை நாலூழி (சதுர்யுகம்) யென்றும் கொண்டதாகத் தெரிகின்றது. ஊழிகட்குக் குறிக்கப்பட்ட அளவுகளும், நாலூழியைச் சுற்ற ளவாகக் கொண்டதும் பிற்காலத்தன என்று தோன்றுகிறது.
ஊழி என்னுஞ் சொல் ஊழ் என்னும் பகுதியடியாய்ப் பிறந்து, முதிர்வு அல்லது அழிவு என்று பொருள்படுவது. ஊழியால் ஏற்படும் கால அளவை ஊழியென்றது ஆகு பெயர். தமிழ்நாட்டில், நாள்முதல் ஊழிவரையுள்ள கால அளவுகளெல்லாம், ஒவ்வொரு வகையில் ஈரழிவிற்கிடைப்பட்ட காலத்தையே உணர்த்துவனவென்பதை, யான் ‘செந்தமிழ்ச் செல்வி’யில் வரைந்துள்ள ‘பண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை’ என்னும் கட்டுரையிற் கண்டுகொள்க.
தெற்கேயே பல அழிவுகள் தோன்றியுள்ளமையாலும், பண்டைத் தமிழரெல்லாம் இந்துமாக் கடலில் அமிழ்ந்து போன தென்னாட்டிலேயே புதையுண்டு அல்லது எரியுண்டு கிடப்பதாலும், கூற்றுவன் தென்றிசையிலிருக்கிறானென்றும், தம் முன்னோரைத் தென்புலத்தாரென்றும் கூறினர் தமிழர். புலம்-நிலம்.
தெற்கே பெருநிலமும் பெருமலையும் கடலில் அமிழ்ந்து போனதினாலும், இதற்கு மாறாக வடக்கே கடலாயிருந்த பாகத்தில்,பனிமலை(இமயம்) யாகிய பெருமலை தோன்றியுள்ளதினாலும், வடதென்றிசைகளை முறையே, மங்கலமும் அமங்கலமுமுள்ளனவாகக் கொண்டனர் தமிழர். இதை ஆரியர் பயன் படுத்திக் கொண்டு, வட இந்தியாவை நல்வினை நிலம் (புண்ணிய பூமி) என்றும், தென்னிந்தியாவைத் தீவினை நிலம் (பாவ பூமி) என்றும் கூறியதாகத் தெரிகின்றது. தமிழர் திசை களை நல்லதும் தீயதுமாகக் கொண்டாரேயன்றி இடங்களை யல்ல. திபேத்தை நோக்க, வட இந்தியா தீயதும், தென்துரு வத்தை நோக்க தென் இந்தியா நல்லதுமாதல் காண்க.
திசைபற்றிய ஆரியக் கொள்கையைக் கண்டிக்கவே,
“எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா
தென்னாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை வடதிசையுங்
கொன்னாளர் சாலப் பலர்”.
என்னும் நாலடிச் செய்யுள் எழுந்ததாகத் தெரிகின்றது.
சிவன் அல்லது முருகன் குறிஞ்சித் தெய்வமாதலின், தெற்கே குமரிமலையமிழ்ந்து போனபின், பனிமலையைச் சிவபெருமானின் சிறந்த இருக்கையாகக் கொண்டனர் தமிழர். (இதையும் ஆரியர் சிவபெருமானை ஆரியத் தெய்வமாகக் கூறுவதற்குப் பயன் படுத்திக்கொண்டனர்.)
“பஃறுளி…. வாழி” என்னும் சிலப்பதிகாரப் பகுதியை நோக்குக.
புதுச்சேரிக்கு மேற்கே ஒரு காததூரத்திலுள்ள பாகூர்ப் பாறையில், பாகூருக்குக் கிழக்கே கடல் நான்கு காதம்….. எனக் கல்வெட்டிருக்கின்றதெனவும், இப்பொழுது அப் பாகூருக்குக் கிழக்கே கடல் ஒரு காத தூரத்திலிருக் கின்றதெனவும் கூறுவர். இதனால் மூன்று காதம் கடல்கோள் நிகழ்ந்துள்ளதென்பது புலனாம்”[26] என்று கார்த்திகேய முதலியாரும்,
“இப்போது கன்னியாகுமரி முனையில் மூன்று கோயில்கள் உள்ளன. ஒன்று முற்றிலும் அழிந்துகிடக்கின்றது. அது நாள்தோறும் கடலில் முழுகிக்கொண்டே வருகின்றது” என்று S.V. தாமசும் (Thomas) கூறியிருப்பதினின்று, குமரியாறு மூழ்கின பின்னும் தமிழ்நாடு குறுகி வந்திருப்பதையறியலாம்.
சீகாழி ஒருமுறை வெள்ளத்தாற் சூழப்பட்டமை; தோணிபுரம் என்னும் அதன் பெயரால் விளங்கும்.
குமரிநாடு – புறச்சான்றுகள்
(1) வியன்புலவர் எக்கேல் :
“உயிர்களின் ‘பெயர்வும் பிரிந்தீடும்’பற்றிய அதிகாரத்தில், ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும்போது, எக்கேல் “இந்துமாக் கடல் ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய், ஆப்பிரிக்காவின் கீழ்கரை மட்டும் படர்ந்திருந்த ஒரு நிலப்பரப்பாயிருந்தது. ஸ்கிளேற்றர் இப்பழம் பெருங்கண்டத்தை, அதில் வதிந்த குரங்கொத்த உயிரி (பிராணி) பற்றி லெமுரியா என்ற ழைக்கிறார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமாயிருந்திருக்கக் கூடுமாதலின், மிக முக்கியமானது. காலக்கணித உண்மைகளைக் கொண்டு, இப்போதை மலேயத் தீவுக் கூட்டம், முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்ட தென்று, உவாலேஸ் கூறியுள்ள முக்கியச் சான்று, விதப்பாய் உவகையூட்டத்தக்கது. போர்ணியோ, ஜாவா, சுமத்திரா என்னும் பெருந்தீவுகளைக்கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ-மலேயத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால், ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை, சற்று முந்திக்கூறிய லெமுரியக் கண்டத்தோடும் அது இணைக்கப் பட்டிருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிஸ், மொலுக்காஸ், புதுக்கினியா, சாலோமோன் தீவுகள் முதலியவற்றைக்கொண்ட கீழைப்பிரிவாகிய ஆஸ்திரே-மலேயத் தீவுக்கூட்டம், முன் காலத்தில் ஆஸ்திரேலியாவோடு நேரே யிணைக்கப்பட்டிருந்தது”[27] என்று கூறுகின்றார்.
(2) திருவாளர் ஓல்டுகாம்
“செடிகொடிகளிலும், உயிரி(பிராணி)களிலும், ஆப்பிரிக் காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலிருந்த மிகநெருங்கிய ஒப்புமைகளைக் கொண்டு திருவாளர் ஓல்டுகாம், ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்ததென்று முடிவு செய்கிறார்.”[28]
“இந்துக்கட்குப் பேரே தெரியாத சில பழைய காலத்துப் பெருமகமையான பப்பரப்புளி, அல்லது யானைப்புளி, அல்லது சீமைப்புளி (Baobab or Adansonia Digitata) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்திய தீவக்குறை (Peninsula)யின் தென்கோடியில் அயல் நாட்டு வணிகம் நிகழ்ந்துவந்த சில துறையகங்களில், அதாவது குமரிமுனையருகிலுள்ள கோட் டாற்றிலும் திருநெல்வேலிக் கோட்டகை (ஜில்லா)யில் தூத்துக்குடியருகில் பழைய கொற்கை யிருந்திருக்கக்கூடிய இடத்திலும், இன்னும் காணப்படுகின்றன என்று கால்டுவெல் கண்காணியார் கூறுகின்றார்.
தேக்கு பர்மாவிலும், தென்னிந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும்; புளி சாவகத்திலும் இந்தியாவிலும்; தென்னை இந்தியாவிலும் இலங்கையிலும் மேலனீசியத்(Melanesia)த் தீவுகளிலும்; நெல் பர்மாவிலும் இந்தியாவிலும் சீனத்திலும் ஜப்பானிலும் சாவகத்திலும்; கரும்பு சீனத்திலும் ஜாவாவிலும் இந்தியாவிலும் தொன்றுதொட்டு வளர்கின்றன.
கோளரி (சிங்கம்) இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும்; காண்டாமா மலேயாவிலும் ஆப்பிரிக்காவிலும்; யானை பர்மா விலும் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றன.
“பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉ மூர” [29]
“அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉ மூரன்” [30]
என்னுங் குறிப்புகளால் பண்டைத் தமிழ்நாட்டில் நீர்நாய் என்றோர் உயிரியிருந்தமை யறியப்படும். அரிப்பான் (Rodent) இனத்தைச் சேர்ந்த நீர்நாய் (Beaver), நீர்வாழி (Aquatic), இருவாழி(Amphibious) என இருவகை. இவற்றுள், முன்னதை எலியென்றும், தென்கண்டத்திலும் (Australia) தாஸ்மேனியா (Tasmania)விலும் வாழ்வதென்றும், வெப்ஸ்ற்றர் தமது புதுப் பன்னாட்டுப் பொதுவகராதி (New International Dictionary) யில்[31] குறிப்பிடுகின்றார். தமிழில் நீர்நாயைப் பற்றிய குறிப்பு களிலெல்லாம் அது மருதநிலத்து நீர்வாழியாகக் கூறப்பட்டி ருப்பதினால் தமிழ்நாட்டு நீர்நாய் தென்கண்டத்திலுள்ள நீரெலிக்கு (beaver rat) இனமானதாகத் தெரிகின்றது.
அன்னத்தில், வெள்ளையன்னம் காரன்னம் என இரு வகையுண்டு. இவ்விருவகையும் தமிழ்நாட்டிலிருந்தமை,
‘ஓதிம விளக்கின்’ என்னும் பெரும்பாணாற்றுப்படைத் தொடருக்கு, “ஈண்டுக் காரன்ன மென்றுணர்க” என்றும், “வெள்ளையன்னங் காண்மின்” என்னும் சீவக சிந்தாமணித் தொடருக்குக் “காரன்னமுமுண்மையின், வெள்ளையன்னம் இனஞ்சுட்டின பண்பு”[32] என்றும் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள குறிப்புரையாலறியப்படும். காரன்னம் தென் கண்டத்திற்கும் தாஸ்மேனியாவிற்குமே யுரியதென்று[33] தெரிதலால் தமிழ்நாட்டிற்கும் தென்கண்டத்திற்குமிருந்த பண்டைத் தொடர்பை யறியலாம்.
உயிரினங்களின் ஒவ்வாமை இருநாட்டின் இயை பின்மைக்குச் சான்றாகாது. ஆனால், அவற்றின் ஒப்புமை இருநாட்டின் தொடர்பிற்குச் சான்றாகலாம்.
சாமை, காடைக்கண்ணி, குதிரைவாலி, செந்தினை, கருந்தினை முதலிய பாண்டிநாட்டுப் பயிர்கள், சோழ நாட்டிலும் அதற்கு வடக்கிலும் பயிராக்கப்படுவதில்லை. அங்ஙனமே சோழ நாட்டிலும் பிறநாடுகளிலும் பயிராக்கப்படும் மக்காச்சோளம் பாண்டிநாட்டிற் பயிராக்கப்படுவதில்லை. இதனால், சோழ பாண்டி நாடுகள் வேறென்றாகா,
(3) காட்எலியட்
காட் எலியட் என்பவர் எழுதியுள்ள ‘மூழ்கிய லெமுரியா’ (Lost Lemuria) என்னும் நூலிலுள்ள திணைப் படத்தினால், “ஒருபெருமலையானது மேலைக்கடலில் தொடங்கித் தென்வட லாகக் குமரிக்குத் தென்பாலுள்ள நிலப்பகுதியிலே நெடுஞ் சேய்மை சென்று, பின் தென்மேற்காகத் திரும்பி, ‘மடகாஸ்கர்’ என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது” என்று பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை கூறுகின்றார்.
(4) சாண் மர்ரே ஆராய்ச்சிப்படை :
(இந்தியப் பட விளக்க வாரகை – ஜூலை 29, 1934)
“இந்து மாக்கடலைத் துருவுவதற்கு 20,000 பவுன் வைத்து விட்டுப்போன, காலஞ்சென்ற வயவர் சாண் மர்ரே (Sir John Murray)யால் தோற்றுவிக்கப்பட்ட கடல்நூல் (Oceanography) என்னும் தற்காலக் கலை, ஒருகாலத்தில், தென் அமெரிக்காவினின்று ஆப்பிரிக்காவையொட்டியும் இந்தியாவையொட்டியும் தென்கண்டம் (Australia) வரை படர்ந்திருந்ததும் காண்டுவானா (Gondwana)க் கண்டம் அல்லது காண்டுவானா நாடு என்று அறியப்பட்டதுமான, ஒரு முழுகிய வியனிலத்தைப்பற்றி, அண்மையில் வியக்கத்தக்க வுண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறது. இதன் சான்று, பனி மலையும் (Himalayas), காக்கஸஸ் (Caucasus), ஆல்ப்ஸ் (Alps), பிரனீஸ் (Pyrenees) என்னும் மலைகளும் கடலுக்குள்ளிருந்த காலத்தில், நாலு கண்டங்களிலும் ஒரே வகையான நிலவுயிரிகளும் செடிகொடிகளும் கன்னிலையிற் காணப் படுகின்றன என்னும் உண்மையைச் சார்ந்ததாகும். மபாஹிஸ் (Mabahiss) என்னும் சிறிய எகிப்திய மரக்கலத்தில், பிழம்புத் தலைவர் செய்மூர் செவல் (Colonel Seymour Sewell, F.R.S.) என்பவரின்கீழ், கடந்த ஏழு மாத காலமாக நடைபெற்றுவந்த புதுக் கண்டுபிடிப்புகளை, வியன்புலவர் ஜே. ஸ்ற்றான்லி நாடினர் (Professor J. ‘Stanley Gardiner’) வர்ணிக்கிறார். வியன்புலவர் காடினெரைக் கண்டு பேசியபின், எவ்ப். ஜீ. பிரின்ஸ் ஒயிற்று (F.G. Prince White) ‘நாளஞ்சல்’ (“Daily Mail”) தாளிகையில், பின்வருமாறு வரைகிறார்:—
“காண்டுவானா நாடு நச்சுயிரிக்காலத்திற்குரியதாயும் (Reptilian Period)தாயும், ஐயமற, சினாம்புள்ள நச்சுயிரிப் பூதங்களின் இருப்பிடமாயுமிருந்தது. தென்மேற்காகச் சொக்கோத்ராவை (Socotra) நோக்கிச் செல்லும் 10,000 அடி உயரமுள்ள மலைத்தொடர், தெளிவாக, (இந்தியாவில் ஆஜ்மீரிலுள்ள) அரவல்லி மலைத்தொடரும் பிற மலைகளுமானவற்றின் தொடர்ச்சியாகவே இருந்தது. இதன் தென்கிழக்கில் ஓர் ஆழ்ந்த பள்ளத் தாக்கு இருக்கிறது. அது தொல்லூழிகளில், இந்தஸ் (Indus) ஆற்றுப் படையின் தொடர்ச்சியாயிருந்த தென்பது தேற்றம். இதிலிருந்து ஒருவர், அப்பெரிய நிலப்பரப்பின் முழுமையும் இந்தஸ் ஆற்றின் பகுதியும், ஒரு பெருவாரியான எரிமலை யெழுச்சியில், சொல்லப் போனால், தலைகீழாக அமிழ்ந்தன என்றுதான் அனுமானிக்க முடியும் என்று அவ் வியன்புலவர் சொல்லுகிறார்,” (இவ்வுருப்படிக்குரிய திணைப்படத்தை இப் புத்தக முகப்பிற் காண்க.)
(5) திருவாளர் சாண் இங்கிலாந்து :
“………. கோடி யாண்டுகளுக்கு முன் — ஒருவேளை அதற்கு மிக முந்தி — ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்திருந்தது. மாந்தன் அப்போது ஞாலத்தில் தோன்றியே யில்லை. அக்கண்டத்தில் நச்சுயிரிகளும் யானையும் காண்டாமாவும் லெமுர் என்னுங் குரங்கினமும் பூத ஆமையும் குடியிருந்தன.”
“உலகம் ஓர் இன்பமான கானகமாயிருந்தது. எனினும், பறவைகள் பாடவில்லை; ஏனென்றால் அவை அப்போது இல்லை. இங்ஙனம் சில வகைகளில், இப்பெருங் கண்டம், ஒவ்வொன்றும் பெரும்போடாயிருந்த உயிரிகளுடன் அமைதியாகவும் இயற்கைக்கு மாறுபட்டு மிருந்தது.
“அது தோன்றி, அல்லது நிலையாகவே 20,000,000 ஆண்டுகள் போலிருந்தது. பின்பு மூழ்கத் தொடங்கிற்று….”[34] என்று சாண் இங்கிலாந்து கூறுகிறார்.
இங்ஙனம் மறுக்கமுடியாத பல சான்றுகளிருக்கவும், வட மொழிக்கு மாறாகத் தமிழுக்குப் பெருமை வந்துவிடுமே என்றெண்ணியோ, அல்லது வேறு காரணத்தாலோ, இந்திய சரித்திராசிரியர் குமரிநாட்டைப்பற்றி இன்னும் ஆராயாமலும், பிறர் ஆராய்ந்து கூறியதை ஒப்புக்கொள்ளாமலும் இருக்கின் றனர். எத்தனை நாளைக்கு உண்மையை மறைக்க முடியும்?
- ↑ பண்டைத்தமிழகம் (The original Home of the Dravidan Race)குமரிநாடே என்று.யான் எழுதிய நூலை 1938 ஆம் ஆண்டு நவம்பர் -மீ எனக்குக் ‘கீழ்கலைத்திறவோன்’ பட்டத்(MOL Degree)திற்கு,இடுநூலாக (Thesis),சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு விடுத்தேன். மூன்றாமாதம் அது தள்ளப்பட்டதாகப் பல்கலைக்கழக அறிவிப்பு வந்தது என் இடுநூலை ஆய்ந்தவர் யாரென்றும், தள்ளினதற்குக் காரணங்கள் எவையென்றும் பல்கலைக்கழகத்திற்கு எழுதிக் கேட்டதற்கு, அவை மறைபொருள் என்று பதில் வந்துவிட்டது.
- ↑புறம். 9
- ↑இறை,பக்.6
- ↑கீர்த்தித்திருவகல்
- ↑கபாடபுரம்
- ↑நடேச சாத்திரியார் மொழிபெயர்ப்பு.ஒ.மொ.—8
- ↑மணி.பக்.52,142,148.
- ↑புறம்.6,67.
- ↑சிலப்.பக்.206,391.
- ↑சிலப். 11 : 17—22
- ↑கலி.
- ↑சிலப்.பக்.803
- ↑The Malay Archipelago,p412.
- ↑சிலப்.பக்.230
- ↑சிலப்.9:1
- ↑தோல்.பொ.649,உரை.
- ↑தோல்.போ.650, உரை.
- ↑ ”Foreign Notices of South India,p.41.
- ↑ Manual of the Administration of the madras presidency vol.I.p.4
- ↑ இலக்கிய வரலாறு பக்.11.
- ↑ இறையனார் பக்.7
- ↑ (மணிமே. 9:17-22)
- ↑ (மணிமே. 25:176-7)
- ↑ The illustrated weekly of india Aug 6 1939 p.73
- ↑கருணாமிர்தசாகரம்,1ஆம் பாகம்,பக்.26
- ↑மொழிநூல்,பக்.14.
- ↑Castes and Tribes of Southern India Vol I,pp.29,21.
- ↑Castes and Tribes of Southern India Vol I,p.24.
- ↑ஐங். 63
- ↑ஐங். 364
- ↑Vol.I.p.200
- ↑ சீவ.4:80.
- ↑ All About Birds, p.141.
- ↑The Hindu, July 3,1938.
திராவிடம் தெற்கிற் சிறத்தல்
i. தமிழ் திராவிடத்தின் சிறந்த வடிவமாதல்
(1) தமிழின் தொன்மை : தமிழரசரின் பழைமை.
கிறித்துவுக்கு 1000 ஆண்டுகட்கு முற்பட்ட பாரதப் போரில், உதியன் சேரலாதன் என்னும் சேரமன்னன், இரு படைகட்கும் சோறு வழங்கினதாகப் புறப்பாடல் கூறுகின்றது. [1]
சேரசோழ பாண்டிய நாடுகள் பாரதத்திலும், கிறித்துவுக்கு 2000 ஆண்டுகட்கு முற்பட்ட வால்மீகி இராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளன.
“வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரித லின்று”
என்னுங் குறளுரையில், “பழங்குடி — தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கட் பிறந்தார்… தொன்றுதொட்டு வருதல் சேரசோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்” என்று கூறினார் பரிமேலழகர்.
சூரவாதித்தன், சிபி, முசுகுந்தன், தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியன், காந்தமன் முதலிய சோழமன்னரெல்லாம் சரித்திர காலத்திற்கு மிக முற்பட்டவர். சோழருக்கு முற்பட்டவர் பாண்டியர். முதற்காலத்தில், பாண்டியன் ஒருவனே தமிழுலகம் முழுவதையும் ஆண்டானென்றும், பின்பு ஒரு பாண்டியனின் தம்பிமாரான சோழசேரர் தமையனோடு பகைமை பூண்டு, வடக்கே பிரிந்து வந்து சோழசேர அரசியங்களை நிறுவினரென்றும் ஒரு வழிமுறைச் செய்தி வழங்குகின்றது.
பாண்டியன் சோழன் சேரன் என்னும் பெயர்கள் வட சொற்களென்றும், பாண்டியன் பஞ்சவன் என்னும் பெயர்கள் பாண்டவர் தொடர்பால் வந்தவை யென்றும் மயங்கினர் கால்டுவெல். அப் பெயர்களின் பொருள்களாவன :
பாண்டியன்:
வண்டி — பண்டி — பாண்டி — பாண்டியன்:
பாண்டி அல்லது பாண்டில் என்னும் பெயர் முதலாவது வட்டத்தையும் பின்பு வட்டமான வட்டு, கிண்ணம், தாமரைப்பூ, காளை முதலிய பொருள்களையுங் குறிக்கும். வட்டத்தின் பெயர் காளையைக் குறிப்பது உருட்சியானது என்னும் கருத்துப்பற்றி. இளவட்டம் (வாலிபன்), கனவட்டம் (பாண்டியன் குதிரை) என்னும் பெயர்களை இதனுடன் ஒப்புநோக்குக. பாண்டி என்பது காளையைக் குறித்து, பின்பு அக் காளைபோன்ற வயதனாகிய பாண்டியனைக் குறித்தது. விடலை, காளை என்னும் மாட்டுப் பெயர்கள் வயவரைக் குறித்தல் காண்க. காட்டுமாடு மறத்திற்குச் சிறந்தது; எதிரியைக் கொன்றாலொழிய வேறு வினை செய்வதில்லை. புலியும் கோளரியும் அங்ஙனமல்ல. நாட்டுமாடு காயடிப்பு, சூடுபோடல், வேலைப்பழக்கம், குறைந்தவுணவு முதலியவற்றாலேயே தன் மறத்தை யிழக்கின்றது.
‘மடுத்தவா யெல்லாம் பகடன்னான்’ என்று சொல்லத் தக்க குணம் அரசாட்சிக்கு இன்றியமையாததாதலுங் காண்க.
வட்டாடுதலுக்குப் பாண்டி விளையாட்டு என்னும் பெயர் பாண்டிநாட்டில் மட்டும் வழங்கி வருகின்றது. வட்டு (வட்டமான சில்) பாண்டி என்பன ஒரு பொருட்சொற்கள். பாண்டி என்னும் பெயரே இல் என்னும் குறுமையீறு(Diminutive suffix) பெற்றுப் பாண்டில் என்றாகி, கிண்ணம் தாளக்கருவி முதலிய சில பொருள்களை யுணர்த்தும். குறுமையீறு பெறாத நிலையில், ஆழி (சக்கரம்) என்னும் பெரும் பொருளை யுணர்த்தும்.
ஒ.நோ : புட்டி—புட்டில், விட்டி—விட்டில்.
பாண்டில் என்னும் பெயர் காளையைக் குறிப்பது வடிவு பற்றியேயன்றி, அளவுபற்றியன்று. இனி, பாண்டி என்னும் பெயர் காளைக் கருத்தின்றி இளவட்டம் என்னும் பெயர் போல, வட்டக் கருத்தினாலேயே வயவன் என்னும் பொருளில் பாண்டியனைக் குறித்தது எனினும் பொருந்தும்.
வண்டி (வள் + தி) என்னும் பெயர் முதலாவது வட்டமான சக்கரத்தையுணர்த்திப் பின்பு ஆகுபெயராய் இன்று சகடத்தை யுணர்த்துகின்றது. சக்கரத்தை வண்டியென்னும் வழக்கு இன்றும் தென்னாட்டிலுள்ளது. சிறுவர் களிமண்ணாற் செய்த சக்கரத்தை வண்டி யென்பர். உழவர் கபிலையேற்றத்தின் மேலுள்ள உருளை (Pulley)யைக் கமலைவண்டி யென்பர்.
பஞ்சவன் :
பாண்டியன் தன் நாட்டை ஐந்து பகுதியாக்கி, ஐந்து பதிலாளிகளால் ஆண்டு வந்தமையால், பஞ்சவன் எனப் பட்டான். இதை விசுவநாத நாயக்கர் சரித்திரத்தாலறிக.[2]
குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்து நிலங்களை யுடையவன் பஞ்சவன் என்ற காரணங் கூறுவது பொருந்தாது, அது ஏனைச் சேரசோழர்க்கும் ஏற்குமாதலின்.
கௌரியன் :
மலைமகளுக்குப் பசுமை நிறம் பற்றிக் கௌரி யென்று பெயர். கௌரி பண்டொருகால் மலையத்துவச பாண்டியனின் மகளாய்ப் பிறந்து (தடாதகைப்பிராட்டி யென்னும் பெயருடன்), பாண்டிநாட்டை யாண்டதாகக் கூறும் திருவிளையாடற் கதை பற்றிப் பாண்டியனுக்குக் கௌரியன் என்னும் எச்சமுறைப் பெயர் (Patronymic) தோன்றிற்று.
அருச்சுனன் நீராட்டுப் போக்கிற்காகத் (தீர்த்த யாத்திரை) தென்னாடு வந்தபோது பாண்டியன் மகளை மணந்ததினாலும், பாண்டியன், பஞ்சவன், கௌரியன் என்னும் பெயர்கள், முறையே, பாண்டவர், பஞ்சவர், கௌரவர் என்னும் பெயர்களுடன் ஒலியில் ஒத்திருப்பதாலும், பாண்டியன் என்னும் பெயர் பாண்டவன் என்னும் வடிவிலும் இலங்கைச் சரிதை நூலில் வழங்குவதாலும், பாண்டியன் முதலிய பெயர்கள் பாண்டவர் தொடர்பால் வந்த வடமொழிப் பெயர்கள் என மயங்கினர் கால்டுவெல்.
பாரதத்திற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுகட்கு முந்தின இராமாயணத்திற் கூறப்பட்ட பாண்டியன், பாரத வயவராற் பெயர் பெற்றதாகக் கூறுவது, பாட்டனின் முதற் கலியாணத்திற் பேரன் பந்தம் பிடித்த கதையேயன்றி வேறன்று.
இற்றையுலகிலுள்ள நாகரிக நாடுகளெல்லாம், பெரும்பாலும் கிறித்தவ ஆண்டூழிக் குட்பட்டவையாதலானும், மேனாடுகள் தற்கால நாகரிகமடைந்ததெல்லாம் சென்ற மூன்று நூற்றாண்டுகட்குள்ளேயே யாதலானும், பொதுவாய் உலகம் வரவர எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து, சென்ற நூற்றாண்டில் அநாகரிகராயிருந்த பலநாட்டார் இந் நூற்றாண் டில் நாகரிகமடைந்திருக்கவும், தமிழர் இவ்விருபதாம் நூற் றாண்டிலும் மிகத் தாழ்நிலையிலிருப்பதாலும், தமிழின் அல்லது தமிழ் நாட்டின் சரித்திரம் தமிழர்க்கே தெரியாதிருப்பதாலும், மேனாட்டார்க்குத் தமிழர் நாகரிகத்தின் தொன்மை விளங்குவதில்லை. அவருள், இன்னெஸ் (Innes) என்பவரோ தமிழ்க்கழகமென்பதே இல்லையென்று கொண்டவர்.
சோழன் :
“வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து-பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்துத் தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து”
எனப் பிற்காலத்து ஒளவையார் ஒருவர் பாடியிருப்பதால், முத்தமிழ் நாட்டுள்ளும் சோழநாடு சோற்றிற்குச் சிறந்திருந்தமை அறியப்படும். இன்றும் சோழநாட்டின் சிறந்த பகுதியாயிருந்த தஞ்சை மாவட்டம், தமிழ்நாட்டு நெற்களஞ்சியமாயிருப்பது கவனிக்கத்தக்கது. சோறு என்பது முதற்கண் நெல்லரிசிச் சோற்றையே குறித்தது.
சொல் = நெல். சொல் — சொன்றி = சோறு. சொல் — சோறு. முதற்காலத்தில் நெல் சோழநாட்டில் இயற்கையாகக் கூட விளைந்திருக்கலாம்.
சொல் என்னும் சொல்லினின்றே, சோழம் என்னும் நாட்டுப்பெயர் தோன்றியுள்ளதாகத் தெரிகின்றது. லகரம் ளகரமாகவும் அதன்வாயிலாய் ழகரமாகவும் திரிதல் இயல்பே.
எ – டு : கல் – கள் – காளம் – காழகம் = கருமை. கல் + து = கஃறு. கஃறெனல் = கறுத்திருத்தல்.
“கஃறென்னும் கல்லத ரத்தம்”
(தொல். எழுத்து. 40. உரை)
சுல் — சுள் — சூள் — சூழ்.
துல் — துள் — தொள் — தொழு — தோழன்.
நுல் — நுள் — நுளை — நுழை — நூழை.
புல்—பொல்—பொள்—போழ்.
கில்—கிள்—கீள்-—ழ்.
சொல்—(சோல்)—(சோளம்)—சோழம்-சோழன்.
இடங்கள் நிலைத்திணையால் (தாவரம்) பெயர்பெறுவது மிகப் பொதுவியல்பாகும்.
கா : நாவலந்தீவு, பனைநாடு, நெல்வேலி, ஆர்க்காடு, எருக்கங்குடி, தில்லை, கடம்பவனம், குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்திணைப் பெயர்களும் நிலைத்திணையால் வந்தவையே.
சோழன் என்னும் பெயர் வடமொழியிலும், ஆரியத் தன்மையடைந்துள்ள தெலுங்கிலும் சோட(ன்) என்று திரியும்.
கா | : | தமிழ் | தெலுங்கு | வடமொழி |
தமிழம் | திரவிடம் (திராவிடம்) | |||
கிழங்கு | கெட்ட | |||
கோழி | கோடி |
சேரன்:
தமிழகத்தின் பெருமலைத்தொடரான குடமலை, சேர நாட்டிலிருப்பதால், சேரனுக்கு மலையன், மலையமான், மலைநாடன், வானவரம்பன் என்னும் பெயர்கள் உண்டு.
சாரல் என்னும் பெயர் மலையடிவாரத்தையும் மலைப் பக்கத்தையும் குறிக்கும். குறிஞ்சிநிலத்திற்கும் குறிஞ்சித் தலைவனுக்கும் முறையே சாரல், சாரனாடன் என்னும் பெயர் கள் தொகைநூல்களிற் பயின்றுவருகின்றன. சார் என்னுஞ் சொல் சேர் என்றானாற் போல, சாரல் என்னுஞ் சொல்லுஞ் சேரல் என்றாகும். சேரநாடு குடமலையின் இருமருங்குமுள்ள சாரலாதலின், அதையாளும் சேரன் சேரல் எனப்பட்டான். இது இடவாகுபெயர்.
சேரல்—சேரன். சேரல்—சேரலன்—கேரளன்.
ல்—ன், போலி: கா : உடல்—உடன், வெல்—வென்.
ச—க,,,,, சீர்த்தி—கீர்த்தி, செய் (தெ)—(சை)—கை.
ல—ள, ,,,, செதில்—செதிள், மங்கலம்—மங்களம்.
தமிழ்மொழியின் பழைமை
தமிழ்மொழி அசைநிலை முதலிய ஐவகை நிலைகளை யடைந்துள்ளமையாலும், நகை, வளை முதலிய தற்காலப் பகுதிகள் முற்காலத்துத் தொழிற் பெயரா யிருந்தமையாலும்,சிவன், முருகன் முதலிய தெய்வங்களைத் தலைக் கழகவுறுப் பினராய்க் கூறியிருத்தலாலும், சிவனே தமிழை உண்டுபண் ணினார் என்னுங் கூற்றாலும் தமிழின் பழைமையை யறியலாம்.
தமிழ்நூல்களின் பழைமை
தொல்காப்பியர்
பெயர் – தொல்காப்பியரின் இயற்பெயர் திரண தூமாக் கினியென்று சொல்லப்படுவதால், தொல்காப்பியர் என்னும் பெயர் சிறப்புப்பெயரே யாகும். இப்பெயருக்குப் பழைமையான காவிய மரபைச் சேர்ந்தவரென்று பொருள் கூறப்படு கின்றது. தொல்காப்பியர் கவியென்ற முனிவரின் மரபின ராயின், காவியர் அல்லது காப்பியர் என்றழைக்கப்படுதல் இயல்பே. ஆனால், பல்காப்பியர் என்று இன்னொரு புலவர் பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டி லிருந்தனர். தொல்காப்பியர் என்னும் பெயருக்குப் பழைமையான காவிய மரபினர் என்னும் பொருள் பொருந்துமாயினும், பல்காப்பியர் என்னும் பெயருக்குப் பல காவிய மரபினர் என்று பொருள் கூறல் பொருந்தாது. ஆகவே, காப்பியர் என்னும் பெயருக்கு வேறொரு பொருளிருத்தல் வேண்டும்.
அகத்தியர் காலத்திற்கு முன், சிறிது காலம் தமிழ் நாட்டில் தமிழாராய்ச்சி குன்றியிருந்தமை, சில சான்றுகளால் அறியக் கிடக்கின்றது. தொல்காப்பியப் பாயிரத்தில், ‘முந்து நூல் கண்டு’ என்று கூறிருப்பதாலும், பிற சான்றுகளாலும், தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத சில பழைய தமிழ்நூல்களைக் கண்டு பிடித்தாரென்றும், அதனால் தொல் காப்பியரெனப்பட்டார் என்றும் தெரிகின்றது. தொன்மையான காப்பியங்களை யறிந்தவர் தொல்காப்பியர் என்றும், பல காப்பியங்களை யறிந்தவர் பல்காப்பியர் என்றும் கூறப்பட்டனர். தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் என்றும், பல்காப்பியர் இயற்றிய நூல் பல்காப்பியம் என்றும் அதனதன் ஆசிரியராற் பெயர் பெற்றன.
வடநூல் வகைகளில் ஒன்றானதும் காதை நூலுமான காவியத்தின் பெயர், வடமொழியில் காவியமே தோன்றுமுன், தமிழிலக்கண நூலுக்குப் பெயரான தெங்ஙனமெனின், கூறுகின்றேன்.
வடநூல்வகைகளில் ஒன்றான புராணம் என்னும் காதை வகைக்கு, படைப்பு, வழிநிலைப் படைப்பு, மரபுவழி, மனுவூழி, சரித்திரம் என்னும் ஐந்தும் கூறுவது இலக்கணமாகக் கூறப்பட்டுள்ளது. ஆயினும், வடமொழியில் புராணமே தோன்றுமுன், தமிழ்நூல்களுக்குப் புராணம் என்னும் பெயர் வழங்கினமை “இனி இடைச்சங்கமிருந்தார்…. என்ப. அவர்க்கு நூல்… மாபுராணமும் … பூதபுராணமுமென இவையென்ப”[3]என்பதனால் அறியப்படும். இங்ஙனமே காவியம் என்னும் பெயரும் என்க. இதனால், காவியம், புராணம் என்னும் பெயர்கள், முறையே, கவியினால் (செய்யுளாலும் நூற்பாவா லும்) செய்யப்பட்டது, பழைமையானது என்னுங் கருத்தில், முதன்முதல் தமிழ்நாட்டில் தமிழ்நூல்களுக்கே ஆரியரால் வழங்கப்பட்டன என்பதும், அவை வடமொழியிற் காதை நூல்களின் பெயரானதும், காவியத்திற்கும் புராணத்திற்கும் இப்போது உள்ள இலக்கணம் வகுக்கப்பட்டது பிற்காலத்தில் என்பதும் அறியப்படும்.
குலம்: தொல்காப்பியர் தம்மை ஆரிய வேத அறிஞர் என்று காட்டிக் கொள்வதாலும், சில ஆரியக் கருத்துகளைப் புகுத்தியிருப்பதாலும், தமிழர் களவியலை ஆரியர் காந்தரு வத்திற் கொப்பாகக் கூறியிருப்பதாலும் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் தலைமையில் தம் நூலை அரங்கேற்றியதாலும் தொல்காப்பியத்தில் உள்ள சில இலக்கண வழுக்க ளாலும் தொல்காப்பியர் ஆரியர் என்று துணியப்படும்.
தொல்காப்பிய வழுக்கள்
(1) “சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அஐ ஒளஎனும் மூன்றலங் கடையே”
(தொல். மொழி. 29)
“சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி
சளிசகடு சட்டை சவளி — சவிசரடு
சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும்
வந்தனவாற் சம்முதலும் வை”
என்பது நன்னூல் (எழு. 51) மயிலைநாதர் உரை மேற்கோள்.
சக்கை, சட்டம், சடுதி, சண்டை, சதை, சப்பு, சமன், சமர், சமை, சருச்சரை, சரேல், சல்லி, சலசல, சலி, சவம், சவை, சழி, சள்ளை, சளை முதலிய பல சகர முதற்சொற்கள் செந்தமிழ்ச் சொற்களாதலின், சகரம் தமிழில் மொழிமுதல் வராது என்பது வழுவே.
இனி, சகரக்கிளவிபற்றித் தொல்காப்பியர்மீது வழுவைச் சுமத்தாது, ஏட்டிலிருந்தெழுதினோர்மீது சுமத்துவர் துடிசை கிழார் அ. சிதம்பரனார். அவர் கூறுமாறு :—
“க, த, ந, ப, ம எனு மாவைந் தெழுத்தும்
எல்லா வுயிரொடும் செல்லுமார் முதலே”
(தொல். மொழி. 28)
“சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அ, ஐ, ஒள வெனும் மூன்றலங் கடையே”
(தொல். மொழி. 29)
“இவ் விரண்டு சூத்திரங்களும் ஆதியில், அதாவது, ஏட்டுச் சுவடியில் இருக்குங் காலத்து, ஒரே சூத்திரமாகத் திகழ்ந்தன.
“சுவடியில் உள்ளபடி ஈண்டுத் தருவாம்:—
“க, த, ந, ப, ம எனு மாவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அவை ஒளஎன்னும் ஒன்றலங் கடையே”
“க் – த் – ந் – ப் – ம் என்னும் ஐந்து மெய்யெழுத்துகளும், எல்லா உயிரெழுத்துகளோடும் கூடிப் பெருவரவிற்றாய் மொழிக்கு முதலாக வரும்.
“ச் என்ற மெய்யெழுத்தும் அவ்வைந்து மெய்யெழுத்துகளைப் போலவே, சிறுவரவிற்றாய், எல்லா உயிரெழுத்துகளோடுங் கூடி மொழிக்கு முதலாக வரும்.
“ஆனால், க் – ச் – த் – ந் – ப் – ம் என்ற ஆறு மெய்யெழுத்துகளும் ஒள என்னும் உயிரெழுத்தோடுங் கூடி மாத்திரம் மொழிக்கு முதலாக வரா” என்பதாம்.
“(எ – டு 🙂 நாய் கவ்விற்று (கௌவிற்று என வராது)” [4] என்பது.
இங்ஙனமே ஏனை மெய்கட்கும் அவர் காட்டுக் காண்பித்துள்ளார். இவ் வுரையும் பொருத்தமாகவே தோன்று கின்றது.
இக்காலத்துத் தமிழ்ப் பேராசிரியர் சிலர், பண்டைத் தமிழிலக்கணங்களெல்லாம் செய்யுள் நடைமொழிக்கே ஏற்பட் டவையென்றும், பண்டைத் தமிழிலக்கிய மெல்லாம் செய்யுள் நடையிலிருந்ததினால் அதிற் பல உலக வழக்குச் சொற்கள் இடம்பெறவில்லை யென்றும், அறியாது தொல்காப்பியரைக் கடக்கும் அல்லது தப்புவிக்கும் முகமாக, அவர் காலத்திற்கு முன் சகர முதற் சொற்களே தமிழில் இல்லையென்று தாம் மயங்குவதோடு தமிழ் மாணவரையும் மயக்கி வருகின்றனர். தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலேயன்றி அகரமுதலியன்று. ஆதலால், அதில் ஒரு சொல் இல்லாவிடின் அது தமிழிலேயே இல்லையென்பது, மொழியறிவும் உலக வழக்கறிவும் இன்மை யையே காட்டும். சகர முதற்சொற்கள் இலக்கிய வழக்கில் மட்டு மன்றி உலக வழக்கிலும் ஏராளமாயுள்ளன. உலக வழக்குச் சொற்கள் தமிழுக்கு இன்றியமையாதனவாகவும் அதன் சொல் வளத்தைக் காட்டுவனவாகவும் தொன்றுதொட்டு வழங்கி வருவனவாகவுமிருக்கின்றன. அவற்றுட் பல வருமாறு :—
சக்கை, சகதி, சங்கு, சச்சரவு, சட்டம், சட்டி, சட்டுவம், சட்டை, சடங்கு, சடலம், சடை, சடைவு, சண்டி, சண்டு, சண்டை, சண்ணு, சதரம் (உடம்பு), சதுப்பு, சதை, சந்து, சந்தை, சப்பட்டை, சப்பரம், சப்பனி, சப்பாணி, சம்பல், சப்பு, சப்பை, சம்பளம், சம்பு, சம்பா, சம்மணம், சமம், சமர்த்து, சமை, சமையம், சரக்கு, சரடு, சரவடி, சரவை, சரகர், சரி, சருகு, சருவம், சல்லடை, சல்லி, சலங்கை, சலவன், சலவை, சலி, சலுகை, சவ்வு, சவத்தல், சவங்கல், சவட்டு (சவட்டி-சாட்டி), சவட்டை-சாட்டை, சவட்டு – சமட்டு – சமட்டி – சம்மட்டி), சவடி, சவம், சவர், சவலை, சவள், சவளம், சவளி, சவை, சழி, சள்ளை, சளி, சற்று, சறுகு – சறுக்கு, சன்னம்.
மேலும், தனித்தும் இரட்டியும் வரும் பல குறிப்புச் சொற்களும் சகர முதலவாய் உள.
எ-டு : சக்கு, சகசக, சட்டு, சடக்கு, சடசட, சடார், சதக்கு, சம், சர், சரசர, சரட்டு, சரேல், சல்சல், சலசல, சள், சள்சள், சளசள, சளப்பு, சளார், சறுக்கு.
இனி, இற்றைச் செகர முதற் சொற்கள் சில பண்டு சகர முதலவா யிருந்தன வென்றும் அறிதல் வேண்டும்.
எ-டு : சத்தான் – செத்தான், சக்கு – செக்கு.
இவற்றை யெல்லாம் நோக்காது, குருட்டுத்தனமாய்த் தொல்காப்பியரைக் காத்தற்பொருட்டுத் தொல்பெருந் தமிழின் பெருமையைக் குலைப்பது அறிஞர்க்கு அழகன்று.
சவதலி, சம்பளி, சமாளி என்பன போன்ற திராவிடச் சொற்கள் பிற்காலத்தனவாயிருக்கலாம். ஆயின், மேற் காட்டிய தூய தென்சொற்களெல்லாம் தொன்றுதொட்டவையே.
சம்பு என்பது சண்பு என்னும் இலக்கியச் சொல்லின் திரிபா யிருப்பினும், சம்பங்கோரை, சம்பங்கோழி என்பன தொன்றுதொட்ட உலக வழக்கே.
(2) “குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்”
(தொல். மொழி. 34)
என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாம் என்றாராலோவெனின்,
“நுந்தை யுகரங் குறுகிமொழி முதற்கண்
வந்த தெனினுயிர்மெய் யாமனைத்துஞ் – சந்திக்
குயிர்முதலா வந்தணையு மெய்ப்புணர்ச்சி யின்றி
மயலணையு மென்றதனை மாற்று”
“இதை விரித்துரைத்து விதியும் அறிந்துகொள்க” என்பது நன்னூல் மயிலைநாதருரை (நன். எழு. 51)
(3) “வகரக் கிளவி நான்மொழி யீற்றது”
(தொல். மொழி. 48)
அவ், இவ், உவ், எவ், தெவ், என வகரமெய் யீற்றுச் சொற்கள் ஐந்தாதல் காண்க.
(4) “மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப
புகரறக் கிளந்த அஃறிணை மேன”
(தொல். மொழி. 49)
என்று எகின், செகின், எயின், வயின், குயின், அழன், புழன், புலான், கடான் என வரும் ஒன்பதும் மயங்காதன வெனக் கொள்ளின், பலியன், வலியன், வயான், கயான், அலவன், கலவன், கலுழன்,மறையன், செகிலன் முதலாயின மயங்கப் பெறாவென மறுக்க” என்பது நன்னூல் (எழு. 67) மயிலைநாதருரை.
(5)“ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒன்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகரம் ஆகும்”
(தொல். குற். 40)
ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது. தொண்டு + பத்து = தொண்பது – தொன்பது – ஒன்பது. தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொண்பது என்பதை ஒப்பு நோக்குக.
தொண்ணூறு என்னும் பெயர், முதலாவது, 900 என்னும் எண்ணைக் குறித்தது, தொண்டு + நூறு = தொண்ணூறு. இதை அறுநூறு, எழுநூறு, எண்ணூறு என்னும், பிற மூன்றாம் இட எண்ணுப் பெயர்களுடன் ஒப்புநோக்குக.
தொள்ளாயிரம் அல்லது தொளாயிரம் என்பது, முதலாவது, 9000 என்னும் எண்ணைக் குறித்தது. தொண்டு ஆயிரம் = தொள்ளாயிரம் – தொளாயிரம். இதை ஆறாயிரம், ஏழாயிரம், எண்ணாயிரம் என்னும் பிற நாலாம் இட எண்ணுப் பெயர்களுடன் ஒப்பு நோக்குக.
தொண்டு என்னும் பெயர், எங்ஙனமோ, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே உலகவழக்கற்றது; ஆயினும், செய்யுள் வழக்கிலிருந்தது. தொல்காப்பியரே தம் நூலில், தொடைத் தொகை கூறுமிடத்து,
“மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே (செய். 101)”
என்று, தொண்டு என்னும் சொல்லை 9 என்னும் எண்ணைக் குறிக்க வழங்கியுள்ளார். “தொண்டுபடு திவவின்”[5] என்றார் பெருங்கௌசிகனாரும்.
எண்ணுப்பெயர்களுள் தொண்டு என்னும் ஒன்றாம் இடப்பெயர் வழக்கொழியவே, பத்தாம் இடப்பெயர் ஒன்றாம் இடத்திற்கும், நூறாம் இடப்பெயர் பத்தாம் இடத்திற்கும், ஆயிரத்தாம் இடப்பெயர் நூறாம் இடத்திற்குமாக ஒவ்வோரிடம் முறையே இறக்கப்பட்டன. பின்பு, ஆயிரத்தாம் இடத்திற்குப் பத்தாம் இடத்திலிருந்து ஒன்றாம் இடத்திற்கு இறங்கிவந்த ஒன்பது என்னும் பெயருடன், ஆயிரம் என்னும் பெயரைக் கூட்டவேண்டியதாயிற்று.
எண் | பண்டைப்பெயர் | இற்றைப்பெயர் |
9
|| தொண்டு || ஒன்பது (தொன்பது) |
||
90
|| தொண்பது || தொண்ணூறு |
||
900
|| தொண்ணூறு || தொள்ளாயிரம் |
||
9000
|| தொள்ளாயிரம் || ஒன்பதினாயிரம் (ஒன்பது + ஆயிரம்) |
ஒன்பதினாயிரம் என்னும் கலவை எண்ணுப்பெயர் பண்டை முறைப்படி (1000 x 9) 9000 என்னும் எண்ணைக் குறிப்பதாகும்.
ஒன்றுமுதல் பத்துவரையுள்ள ஏனையெண்ணுப் பெயர்களெல்லாம் தனிமொழிகளாயிருக்க ஒன்பது என்பது மட்டும் தொடர்மொழியாயும், பது (பத்து) என்னும் வருமொழியைக் கொண்டதாயுமிருத்தல் காண்க. தொன்பது என்னும் பெயர் முதன்மெய் நீங்கி ஒன்பது என்று தமிழில் வழங்குகின்றது. தெலுங்கில் முதன்மெய் நீங்காமல் தொம்மிதி (தொனுமிதி) என்று வழங்குவதுடன், எட்டு என்னும் எண்ணுக்கும் எனுமிதி எனப் பத்தாம் இடப்பெயர் வழங்கி வருகின்றது.
ஒன்பது என்னும் பெயருக்கு, ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவது, ‘பொருந்தப் புகலல்’ என்னும் உத்திபற்றியது. இக் கூற்றிற்கு உருதுவிலும் இந்தியிலும் உள்ள, உன்னீஸ் (19), உன்தீஸ் (29), உன்சாலிஸ் (39), உன்சாஸ் (49), உன்சட் (59), உனத்தர் (69), உன்யாசி (79) என்னும் எண்ணுப்பெயர்கள் ஒருகால் சான்றாகலாம். ஆனால், அங்கும், அப் பெயர்கள் ஒழுங்கற்ற முறையில மைந்தவை யென்பதை, நவாசீ (89) நின்னா நபே (99) என்னும் பெயர்களாலறியலாம்.
தொண்டு + பத்து = தொண்பது (தொன்பது – ஒன்பது), தொண்டு + நூறு = தொண்ணூறு, தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்று புணர்ப்பது எளிதாயும் இயற்கையாயு மிருப்பவும், இங்ஙனம் புணர்க்காது, ஒன்பது + பத்து = தொண்ணூறு என்றும், ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் என்றும், செயற்கையாகவும் ஒலிநூலுக்கும் தருக்கநூலுக்கும் முற்றும் மாறாகவும் தொல்காப்பியர் புணர்த்தது, அவருக்கு முன்னமே தொண்டு என்னும் எண்ணுப்பெயர் வழக்கற்றுப் போனதையும், தொல்காப்பியத்திற்கு முந்தின தமிழிலக்கண நூல்களில் மேற்கூறிய எண்ணுப்பெயர்களைத் தவறாகச் செய்கைசெய்து காட்டியதையும் குறிப்பதாகும். இதனால் தமிழின் தொன்மையும் தமிழ் இலக்கணத்தின் தொன்மையும் அறியப்படும்.
தொல்காப்பியரைப் பின்பற்றி, நன்னூலாரும் தொண்ணூறு தொள்ளாயிரம் என்னும் புணர்மொழி யுறுப்புகளைப் பிழைபடக் கூறியுள்ளார்.
கால்டுவெல் இவற்றின் ஒவ்வாமையை அறிந்தே, தமிழர் எச்சொல்லினின்றும் எச்சொல்லையும் திரித்துக்காட்டுவர் என்று கூறியுள்ளார்.
(6) ‘ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே
முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும்
நூறென் கிளவி நகார மெய்கெட
ஊஆ வாகும் இயற்கைத் தென்ப
ஆயிடை வருதல் இகார ரகாரம்
ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும்’
(தொல். குற். 58)
இதன் வழுநிலை முன்னர்க் கூறப்பட்டது. இந் நூற்பாவில், “இயற்கைத் தென்ப” என்று கூறியிருப்பதால், இக் கூற்று முன்னோரது என்பது புலனாகும்.
(7) “நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே”
(தொ.பு.30)
“அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை
உக்கெட நின்ற மெய்வயின் ஈவர
இய்யிடை நிலைஇ ஈறுகெட ரகரம்
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே
அப்பால மொழிவயின் இயற்கை யாகும்”
(தொ.பு.31)
என்றார் தொல்காப்பியர். இதைப் பிரயோக விவேக நூலார் பற்றுக்கோடாகக் கொண்டு,
“இனித் தொல்காப்பியரும், தமிழில் ‘எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே’ என்றாராயினும், வடநூலில் எழுவாய் வேற்றுமை இவ்வாறிருக்குமென்றறிதற்கு, நும் என்னுமொரு பெயரை மாத்திரம் எழுவாய் வேற்றுமை யாக்காது பிராதிபதிகமாக்கி, பின்னர் நும்மை நுங்கண் என இரண்டு முதல் ஏழிறுதியும் வேறுபடுத்து வேற்றுமையாக்கினாற்போல, ‘அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை’ என்னுஞ் சூத்திர விதிகொண்டு நீயிரென வேறுபடுத்து, எழுவாய் வேற்றுமை யென்னும் பிரதமாவிபத்தியாக்குவர். இவ்வாறு நின், தன், தம், என், எம், நம் என்பனவற்றையும் பிராதிபதிகமாக்கி, பின் நீ, தான், தாம், யான், யாம், நாம் எனத் திரிந்தனவற்றை எழுவாய் வேற்றுமை யாக்காமையாலும், ‘எல்லா நீயிர் நீ’ எ-ம், ‘நீயிர் நீயென வரூஉங் கிளவி’ எ-ம், பெயரியலுள் பெயர்ப் பிராதிபதிகமாகச் சூத்திரஞ் செய்தலானும், ‘அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை’ என்னுஞ் சூத்திரத்தை வடமொழிக்கு எழுவாய் வேற்றுமை இவ்வாறி ருக்குமென்று தமிழ்நூலால் அறிதற்கே செய்தாரென்க. நிலை மொழி விகாரமொழி எட்டாம் வேற்றுமையானாற்போல நும் மென்னு நிலைமொழி விகாரம் முதல் வேற்றுமையாமென்க” எனக் கூறியுள்ளார். (பிரயோக விவேகம், நூ. 7, உரை)
பார்ப்பனர் தமிழின் இயல்பை அறியாமைக்கு, அல்லது தமிழை வடமொழி வழித்தாகக் காட்டச் செய்துவரும் முயற்சிக்கு, இப் பிரயோக விவேகக் கூற்று ஒரு நல்ல காட்டாகும்.
இலக்கணக் கொத்தின் ஆசிரியராகிய சுவாமிநாத தேசிகர்,
“. . . . . . . .. . . . . .விகாரப் பெயரே
பெயர்ப்பின் விகுதி பெறுதலே யாயவன்
ஆனவன் ஆவான் ஆகின் றவன்முத
லைம்பாற் சொல்லும் பெயர்ப்பி னடைதலே
யுருபென வெவ்வே றுரைத்தார் பலரே”
என்று நூற்பாவியற்றி,
“தன், தம், நம், என், எம், நின், நும் என்னுந் திரிபில் பெயர்கள் உருபுகளையும், உருபோடு வருமொழிகளையும், உருபின்றி வருமொழிகளையும் ஏற்று நிற்கும். இப் பெயர்கள் எழுவாயாங்காற் றிரிந்தே நிற்கும். இத் திரிபே யுருபென்க.
“இனி இறைவன் கடியன், காக்கும்; தையலாள் வரும்; உமையாளமர்ந்து விளங்கும்; கோன் வந்தான்; கோக்கள் வந்தார்; மரமது வளர்ந்தது; மரங்கள் வளர்ந்தன, இவ் விகுதிகளே உருபென்க. இவ் வுருபுகளைத் தொகுத்துமறிக.
“இனி ஆயவன்முதல் நாற்சொல்லும் பாவால் இருபதாம். அவையே உருபு. சாத்தனானவன் வந்தான், இதனுள் எழுவாயும் உருபும் பயனிலையுங் காண்க. பிறவு மன்ன. இவற்றைத் தொகுத்து மறிக” என்று உரையும் கூறி,
இறுதியில், “இவ்வெண்விதியோ டெழுந்த சூத்திரம் பிறர் மதங் கூறலேயாம். தன்றுணி புரைத்தலன்று” என்று அதன் புன்மையையும் குறித்தார். இங்ஙன மிருக்கவும், இன்றுஞ் சில மாணவரிலக்கண நூலாசிரியர், ஆயவன் முதலிய பெயர்கள் ஆ என்னும் பகுதியடியாய்ப் பிறந்த வினையாலணையும் பெயர்களென்பதையும்; அவை ஆயவனை, ஆயவனால் என்று வேற்றமையுருபேற்கு மென்பதையும்; கட்டுரைச் சுவைபடப் பெயர்களை நீட்டவேண்டிய விடத்து வருவனவேயன்றி, இன்றியமையாது பெயர்களைத் தொடர்வனவல்லவென்பதையும் அறியாமல், தமிழிலக்கணத்திற்கு முற்றிலும் முரணாக, அவற்றை முதலாம் வேற்றுமை யுருபுகளென்று வரைந்து வருகின்றனர்.
இனி, ஆயவன், ஆனவன் என்னும் வடிவங்கள் வெவ்வேறு சொற்களல்ல வென்பதையும்; அவற்றை வெவ்வேறாகக் கொள்ளின், ஆகிறவன் ஆபவன் என்பவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதையும்;ஆ என்னும் பகுதியினின்று பிறந்தவைபோலவே என் என்னும் பகுதியினின்று பிறந்த, என்றவன், என்கின்றவன் முதலிய சொற்களும் பெயரோடு கூடி வழங்குமென்பதையும் அவர் நோக்கிற்றிலர்.
நும் என்னும் பெயர் நூம் என்பதன் வேற்றுமைத் திரிபடியென்றும்.நீயிர் என்னும் பெயர் நீ என்பதன் பன்மை யென்றும் அறியாது, தொல்காப்பியர் அவ் விரண்டையும் ஒன்றாயிணைத்ததே வழுவாயிருக்க, அவர் நும் என்ப தையும் நீயிர் என்பதையும், முறையே பிராதிபதிக மென்றும் பிரதமா விபக்தியென்றும் கொண்டாரென்று வழுமேல் வழுப்படக் கூறினர் பிரயோக விவேகர். தொல்காப்பியர் காலத்தில் வட மொழியில் இலக்கணநூலேயில்லை யென்பது பின்னர் விளக்கப்படும்.
நீன், நீம் என்பன முறையே முன்னிலை யொருமை பன்மைப் பெயர்கள். நீன் என்னும் வடிவம் இன்றும் தென் னாட்டில் உலக வழக்கில் வழங்கினும், அதன் கடைக்குறை யாகிய நீ என்பதே இன்னோசை பயப்பதாகப் புலவராற் கொள்ளப்பட்டு நூல்வழக்கிற் குரியதாயிற்று. பிற்காலத்தில், நீ யென்பதனொடு இர் என்னும் பலர்பாலீறு சேர்க்கப்பட்டு, நீயிர், நீவிர் என்னும் முன்னிலைப் பன்மை வடிவங்கள் தோன்றின. நீம் என்னும் பன்மை வடிவம் நூம் என்று திரிந்தது. இகர ஈகாரம் உகரவூகாரமாகத் திரிதல் இயல்பு.
கா : பிறம் – புறம் பீளை – பூளை |
நூ. வ. | பிட்டு – புட்டு பீடை – பூடை |
உ. வ (கொச்சை) |
நூம் என்பது வேற்றுமை யேற்கும்போது நும் என்று குறுகும். ஆகவே, நீயிர் என்பதும் நும் என்பதும் வெவ் வேறு வடிவங்களினின்றும் பிறந்தவை யென்பது பெற்றாம்.
நும் என்னும் பெயர் நீயிர் என்னும் பெயராய்த் திரிந்த தாகச் செய்கை செய்வது, ஒன்பது பத்து என்னும் எண்ணுப் பெயர்கள் சேர்ந்து, தொண்ணூறு என்னும் பெயர் தோன் றிற்று என்று கூறுவதையே ஒக்கும்.
8) ”ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே”
(தொல். மொழி. 39)
இதில், நொ என்பது பகுதியாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நோ என்பதே பகுதியாகும். நொ என்பது அதன் குறுக்கமே.
ஏவல் | இ. கா. | நி. கா | எ. கா. | பெயர் |
நோ | நொந்தான் | நோகிறான் | நோவான் | நோய் |
காண் | கண்டான் | காண்கிறான் | காண்பான் | காட்சி |
நோ என்பது ஏவல் வினையாகும்போது, குறுகியே நொம்மாடா, நொந்நாகா என்று நிற்கும். நொ என்பதே இயல்பான வடிவமாயின், அது ‘து’ என்னும் வினை துக்கி றான், துப்பான் என்றாவது போல, நொக்கிறான், நொப்பான் என்று நிகழ்கால எதிர்காலங்களில் ஆதல் வேண்டும். அங்ஙனமாகாமை காண்க.
இனி, “உச்ச காரம் இருமொழிக் குரித்தே” என்ற வரையறை கூட வழுவோவென்றையுறக் கிடக்கின்றது.
இங்ஙனம் தொல்காப்பியர் பல இடத்தில் தவறினதற்குக் காரணம், அவரது ஆரியப் பிறப்பேயன்றி வேறன்று. கால்டுவெல் ஐயர் ஐம்பதாண்டுகள்போல் தமிழை யாராய்ந்தும், அவரது ஒப்பியலிலக்கணத்தில் சிலவிடத்துத் தவறினது, அவரது அயற் பிறப்பாலேயே.
இங்ஙனம் சில தொல்காப்பிய வழுக்களை எடுத்துக் கூறியதால், தொல்காப்பியத்தை இழித்துக்கூறினேன் என்று எள்ளளவும் எண்ணற்க. அங்ஙனம் கூறுபவன் கடைப்பட்ட கயவனே என்பதற்கு ஐயமில்லை. இற்றைத் தமிழ்நிலையின் உயிர்நாடி தொல்காப்பியம் ஒன்றே. சில குற்றத்தைக் குற்றமென்று கூறினேனேயொழிய வேறன்று என்க.
காலம்: தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டாசானை “நான்மறை முற்றிய” என்றும், தொல்காப்பியரை “ஐந்திரம் நிறைந்த” என்றும், தொல் காப்பியச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் அடை கொடுத்துக் குறிப்பதனால் ஆரிய மறையை நாலாக வகுத்த வேதவியாசர் காலத்திற்கும், ஐந்திரத்திற்கும் பிற்பட்ட ‘அஷ்டாத்யாயீ’யை இயற்றிய பாணினி காலத்திற்கும், தொல் காப்பியர் இடைப் பட்டவர் ஆவர். பாரதக் காலத்தினராகிய வேதவியாசர் காலம் கி.மு. 1000, பாணினி காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு.
தொல்காப்பியர் இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைப்பட்டவர். அகத்தியற்கு மிகப் பிற்பட்டவர். அவரை அகத்தியர் மாணவர் என்பது காலவழுவாகும். அகத்தியர் பாரதத்திற்கு முந்தியவர்; தொல்காப்பியர் பிந்தியவர்; இருவரும் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டவரே.
தொல்காப்பியர்க்குக் கழகத் தொடர்பின்மையினாலேயே அவர் நூல் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப் பெற்றது.
கடைக்கழகக் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4ஆம் நூற்றாண்டுவரை என்பது, பண்டைத் தமிழ் நாட்டு வரலாற்றாராய்ச்சியாளர் பேரா. இராமச்சந்திர தீட்சிதர் முடிபு.
“விண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு”
(தொல். 1336)
என்று தொல்காப்பியர் தம் காலத் தமிழகத்தை வண்ணித் திருப்பதால், எள்ளளவும் எதிர்ப்பின்றி மூவேந்தரே முடியு டையோராய் முத்தமிழ் நாட்டையும் தம் முன்னோர்போல் அறம் பிழையாது ஆட்சி செய்துவந்த நற்காலம் தொல்காப்பியரென்பது என்பது அறியப்படும்.
மூவேந்தரும் தம்முள்ளும் தம் குறுநில மன்னரொடும் அடிக்கடி நிகழ்த்திய போரால் அமைதியின்மை தமிழகத்தில் நிலவியிருந்தமையே, கடைக்கழக இலக்கியம் அளிக்கும் காட்சியாகும். ஆதலால் தொல்காப்பியர் அத்தகைய காலத் திற்கு மிக முற்பட்டவர் என்பது தெளிவு.
“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல”
(தொல். 510)
என்ற இலக்கண வரம்பு திருக்குறளிலும் கடைக்கழகச் செய்யுளிலும் மீறப்படுவதால், தொல்காப்பியர் காலம் கடைக் கழகத்திற்கு மிக முற்பட்டதாதல் வேண்டும்.
இனி, மேற்குறித்த 1336ஆம் நூற்பாவில் தொல்காப்பியர் “நாற்பெயரெல்லையகம்” என்றொரு தொடர் மொழியால் தமிழகத்தைக் குறித்திருப்பது உற்று நோக்கத் தக்கது. நால் வேறுபெயர் கொண்ட எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பு என்பது அத் தொடரின் பொருள்.
நால்வேறு பெயர்கொண்ட எல்லையாவன : வடக்கில் வடுகநாடும் தெற்கில் குமரியாறும் கிழக்கில் கீழைக்கடலும், மேற்கில் குடமலையும்.
முதற்காலத்தில் குடமலைக்குக் கீழ்ப்பட்ட கொங்கு நாடே திருச்சிராப்பள்ளிக் கருவூரைத் தலைநகராகக் கொண்ட சேரநாடா யிருந்தது.
“சேரர் கொங்கு வைகாவூர் நனாடதில்”
என்று அருணகிரிநாதர் பாடுதல் காண்க.
பிற்காலத்தில் கொங்குநாடு ஒரு நிலையான போர்க்களமாய் மாறியதாலும், தொல்காப்பியர் காலத்திற்குப்பின் மேலைக் கடற்கரை சற்று விரிவடைந்ததினாலும், சேரன் தன் அக நாட்டுத் தலைநகரையும் மேலைத் துறைநகராகிய வஞ்சிக்கு மாற்றி அதற்குக் கருவூர் என்றும் பெயரிட நேர்ந்தது.
மேலைக்கடற்கரையின் விரிவுபற்றியே, பரசுராமர் தம் தவ நிலையத்திற்கு இடம்வேண்டி, ஓர் அம்பெய்து மேலைக் கடலைப் பின்வாங்கச் செய்தார் என்ற கதையும் எழுந்தது.
‘நாற்பெய ரெல்லை’ என்றது நாற்றிசை எல்லைகளையேயன்றி நால்வேறு மண்டலங்களையன்று. மேலும், பிற்காலத் துருவான மண்டலங்கள் நான்கல்ல, ஐந்தாகும். அவை, பாண்டி மண்டலம், சோழமண்டலம், சேரமண்டலம் அல்லது மலை மண்டலம், தொண்டைமண்டலம், கொங்கு மண்டலம் என்பன வாகும்.
சேரநாட்டார் கிழக்கிலிருந்து சென்றவர் என்பதற்கு, அவர் நாட்டமைப்பிற்கு நேர்முரணான கிழக்கு மேற்கு என்னும் சொற்களே போதிய சான்றாம்.
இதுகாறும் கூறியவற்றால், தொல்காப்பியர் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டென்று கொள்வதே மிகப் பொருத்தமாம்.
இனி, “முரஞ்சியூர் முடிநாகராயர் தொல்காப்பியனார்க்கு முன்னர் இருந்தார் எனக் கூறுதற்கு ஒரு தடை உளது. தொல்காப் பியனார், வியங்கோள் தன்மை முன்னிலையில் வாராதெனக் கூறுகின்றனர். அவ்வாறிருக்க நீ நிலீஇயர் என்றது முடி நாகராயர் செய்யுளிற் காணப்படுகின்றது. படர்க்கையில் மாத்திரம் வழங்கப்பட்ட வியங்கோள், பிற்காலத்தே முன்னிலையிலும் தன்மையிலும் வழங்கப்படுதல் இயற்கை யாதலின், முடிநாகராயர் தொல் காப்பியனார்க்கு முற்பட்டவ ரென எவ்வாறு கூற முடியும்?” [6] என்கிறார் சாத்திரியார்.
“……முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடு
மன்னா தாகும் வியங்கோட் கிளவி”
(தொ.வி.29)
என்பது சாத்திரியார் குறித்த நூற்பாவாகும். இதன் பொருளையே சாத்திரியார் நன்றாயறியவில்லை. ‘மன்னாதாகும்’ என்னும் வினைக்குப் ‘பெரும்பாலும் வராது’ என்பதே நூற்பாவிற் குறித்த பொருள்.
ஒருவேளை,
“கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்
றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே”
என்னும் நூற்பாவில் (தொல். இடை. 4) மிகுதிப் பொருள் மன்னைச் சொற்குக் குறிக்கப்படவில்லையே என்று அவர் கூறலாம்.
தமிழிலக்கண முன்னூல்கள் மிகப் பழையவாதலானும், அவற்றில் பல இலக்கணச்செய்திகள் முற்றும் எழுதப்படாமையானும், தொல்காப்பியம் பல பற்றியங்(விஷயம்) களில், முன்னூல்களிற் கூறியவற்றையே கூறுதலானும், தொல்காப்பியத்தில் ஒன்றைப்பற்றிய எல்லாச் செய்திகளையுங் காணமுடியாது.
நன்னூலார் பிற்காலத்தவராதலின், தொல்காப்பியரினும் விரிவா யாராய்ந்து,
“மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம்
கழிவு மிகுதி நிலைபே றாகும்”
என்று மன்னை யிடைச்சொற்பொருள் ஆறாகக் கூறியுள்ளார். மிகுதி = பெரும்பான்மை. நன்னூலாரும் சில பொருள்களை விட்டுவிட்டனர்.
இனி, தொல்காப்பிய நூற்பாவிலுள்ள ‘மன்னாதாகும்’ என்னுஞ் சொல் வினைச்சொல்லாதலின், இடைச்சொல்லாகாதெனின், இடைச்சொல் இயற்கையினாயது, பெயரினாயது, வினையினாயது என மூவகையென்றும், அவற்றுள் மன் என்னும் சொல் வினையி னாயதென்றும் கூறிவிடுக்க.
கா | : | இயற்கை | பெயர் | வினை |
ஆவா! | ஐயோ! | (என்றான்) என்று | ||
சீ | (பாவம்!) | (போன்றான்) போல | ||
சலசல | முறையோ! | (கொண்டான்) கொண்டு | ||
(3-ம் வே.உ.) |
“கசதப மிகும்வித வாதன மன்னே” என்று, மன்னையிடைச் சொல்லை, நன்னூலார் மிகுதிப் பொருளில் வழங்கியதுங் காண்க.
வியங்கோள் வினை வாழ்த்து, சாவிப்பு, ஏவல், வேண்டுகோள், வஞ்சினம், விருப்பம், சொல்லளிப்பு முதலிய பல பொருள்களில் வரும். இவற்றுள், வாழ்த்து முதல் வேண்டுகோள் வரையுள்ள பொருள்கள் தன்மைக்கும், வஞ்சினம் சொல்லளிப்பு என்னும் பொருள்கள் முன்னலைக்கும் படர்க் கைக்கும் ஏற்கா. வியங்கோள் வினைக்குச் சிறந்த பொருள்களான வாழ்த்து,வேண்டுகோள் என்னு மிரண்டும் அவற்றின் மறுதலைகளான,சாவிப்பு, ஏவல் என்பனவும் தன்மைக்கு ஏற்காமையின், வியங்கோள் பெரும்பாலும் தன்மையில் வராது எனக் கூறப்பட்டது. ஆனால் முன்னிலைக்கு இவ் வரையறை கூறினது தவறேயாகும். ஆகையால், முரஞ்சியூர் முடிநாகராயர் பாட்டில் ‘நிலீயர்’ என்னும் வியங்கோள் வினை வந்திருப்பது கொண்டு,அவரைத் தொல்காப்பியருக்குப் பிந்திய வராகக் கூறமுடியாது. மேலும், தொல்காப்பியர் காலத்திலேயே அதோடு தொல்காப்பியத்திலேயே, தொல்காப்பிய இலக்கணங்கட்கு மாறான சில சொல்வடிவங்களைக் காணலாம்.
இதுவரை, தனித்தமிழ்க் கருத்துகளையே தழுவின முழு நிறைவான தமிழ் இலக்கணமாவது, இலக்கண உரையாவது இயற்றப்படவே யில்லை. ஆதலின்,மொழிநூலைத் துணைக் கொண்ட தமிழ் முறையான நடுநிலையாராய்ச்சி யாலன்றி, உண்மையான தமிழிலக்கணத்தை யறியமுடியாத தென்பது தேற்றம். தொல்காப்பியம் ஒன்றையே தழுவுவார் தமிழியல்பை அறியமுடியா தென்பதற்கு ஒரு காட்டுக் கூறுகின்றேன்.
கள் என்னும் ஈறு பலர்பாலுக்குரியதாகத் தொல்காப் பியத்தில் விதிமுறையிற் கூறப்படவில்லை. ஆயினும், “உயர் திணை யென்மனார் மக்கட் சுட்டே” என்று கள் ஈறுபெற்ற மக்கள் என்னும் பலர்பாற் பெயரைத் தொல்காப்பியரே வழங்கியிருக்கிறார். இதையறியாத சிலர், தொல்காப்பியர் காலத்தில், கள் ஈறு உயர்திணைப் பன்மைக்கு வழங்கவில்லை என்று கூறுகின்றனர்.
இனி, “பிறப்பியலிலுள்ள சூத்திரங்கட்கும் தைத்திரீய சுக்லயஜு ர் வேதீயப்ராதிசாக்கிய சூத்திரங்களுக்கும் ஒற்றுமை யிருத்தலானும்….ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு வேதங்கள், ப்ராதிசாக்கியங்கள், தர்ம சாத்திரங்கள், யாஸ்க நிருத்தம், நாட்டிய சாத்திரமோ அதன் முன்னூலோ ஆகிய வடமொழி நூல்களிற் பயிற்சியுண்டு என அறியக்கிடக்கின்றது” என்று தம் தொல் காப்பிய எழுத்ததிகார முகவுரையிற் கூறி, கீழே அடிக்குறிப்பில், “அந் நூல்கள் தற்போதுள்ள ஆராய்ச்சியா ளர்களால் கி.பி. 3, 4 நூற்றாண்டுகளுக்கு முன்னருள்ளன எனக் கூறப்படுகின்ற மையான் தொல்காப்பியம் கி.பி. இரண்டாவது நூற்றாண்டதாகும்” என்று சாத்திரியார் கூறியுள்ளது, நெஸ்ப்வீல்டு (J.C. Nesfield) ஆங்கிலத்தில் எழுதிய இலக்கண நூல்களிற் சொல்லப் பட்டவற்றிற்கும், தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டவற்றிற்கும், சில பொருள்களில் ஒற்றுமையிருப்பதால், நெஸ்ப்வீல்டு இலக்கணத்தைப் படித்துத்தான் தொல்காப்பியர் தம் இலக்கண நூல் இயற்றினார் என்றும், போப் (G.U. Pope) ஆங்கிலத்தில் எழுதிய திருவாசகத்தைத்தான் மாணிக்கவாசகர் தமிழில் மொழி பெயர்த்தாரென்றும் கூறுவது போன்றதேயன்றி வேறன்று.
தொல்காப்பியத்தின் செந்தமிழ் நடையொன்றே, அந் நூலின் தொன்மையைக் காட்டற்குப் போதுமானது. தொல்காப்பியத்திற் பயின்று வரும் ‘அலங்கடையே’, ‘இவணையான’ ‘சிவணும்’ ‘ஓரன்ன’ முதலிய சொற்றொடர்களும், தொல்காப்பியத்தின் வடசொல்லருகிய தனித்தமிழ்க் கால நிலையை உணர்த்துவனவாகும்.
பல்கலைக்கழக அகராதியின் பதிப்பாளராகிய வையாபுரிப் பிள்ளை அவர்கள், தொல்காப்பியத்தில், பாயிரத்துள் வந்துள்ள ‘படிமையோன்’ என்னும் சொல்லும், நூலுள், உயிர்களை அறிவுத் தொகைபற்றி ஆறு வகையாகப் பகுத்த பாகுபாடும், சமண மதத்திற்குரியவாதலின், தொல்காப்பியர் சமணரென்று முடிவுசெய்ததுடன், ‘படிமை’ என்ற சொல் தமிழ்ச்சொல்லாகத் தோன்றவில்லை என்று தம் தமிழறியா மையையும் புலப்படுத்தி யிருக்கின்றார்கள்.
படிமை என்ற சொல் படி என்னுஞ் சொல்லடியாகப் பிறந்தது.
படு-படி-பதி. படுதல் – வீழ்தல். படு என்னுஞ் சொல்லே படி,பதி எனத் திரியும்.படிதல்-பதிதல். ஒரு பொருள் இன்னொரு பொருள் மேற்படும் போது,மேற்பொருள் கீழ்ப்பொருள் மேற்படியும்; அப்போது, முன்னதன் வடிவம் பின்னதிற் பதியும். அவ்வடிவம், அப்படிந்த பொருளின் வடிவத்தையே போன்றிருக்கும்;(அடிச்சுவடுகளையும் முத்திரை களையும் நோக்குக) இதனால், படி என்னுஞ் சொல் போல அல்லது வகையில் என்னும் பொருளில் வழங்கும்.
கா :
அப்படி, இப்படி, உப்படி, எப்படி.
அப்படி = அவ் வடிவம், அம் முறை—
In that form
அப்படிச் செய் = அம் முறையிற் செய், அதுபோலச்செய் – do so.
போல இருப்பது போன்மை. அங்ஙனமே, படியிருப்பது படிமை. ஒ. நோ : like-likeness.
வழிபடு வுருவமாவது,பொம்மையாவது,கடவுளைப் போல அல்லது மாந்தனைப்போலச் செய்யப் பட்டிருப்பதால் படிமை எனப்பட்டது. இஃதொரு பண்பாகுபெயர்.
படிமை என்னுஞ் சொல்லில், படி பகுதி; மை பண்புப் பெயரீறு. மையீறு தமிழ்க்கேயுரிய தென்பது பின்னர்க் காட்டப்படும். வடமொழியில் படிமை, மகிமை முதலிய சொற்களையெல்லாம் பகாச்சொற்களாகவே கொள்வர். அம்மொழியில் மையீறில்லை. தமிழிலோ அச் சொற்கள் பண்புப் பெயர்களான பகுசொற்களாகும்.
படி – மை என்னுஞ் சொல்லை, அடி – மை, குடி – மை, மடி – மை, மிடி – மை முதலிய பண்புப்பெயர்களோடு ஒப்புநோக்குக.
ஒரு மூலவோலையைப் பார்த்தெழுதினது, அல்லது அச்சிட்டது, அம் மூலத்தின்படி யிருப்பதால் படி(copy) யெனப்படும். படியோலை என்று பண்டை நூல்களில் வழங்குதல் காண்க.
படி, படிமையென்னும் தமிழ்ச்சொற்களையே ப்ரதி, ப்ரதிமா என வழங்குவர் வடநூலார்.இப்போது, மூலச்சொற்களையே படிச்சொற்களாகக் காட்டுவது, எவ்வளவு பெரிய ஏமாற்றம் என்பதை எண்ணிக் காண்க. இங்ஙனமே, பல தமிழ் நூல்களும் கலைகளும், வடநூல்களும் கலைகளுமாகக் காட்டப்படுகின்றன வென்க.
தமிழ்ச்சொல்லை வடசொல்லாக மாற்றும்போது, பல முறைகளைக் கையாளுவர் வடநூலார். அவையெல்லாம் இந்நூலின் மூன்றாம் மடலத்தில் விரிவாய் விளக்கப்படும்.
ப்ரதி, ப்ரதிமா என்ற சொற்களில்,கையாளப்பட்ட முறைகள்: (1) முதலெழுத்தை மெய்யாக்கி ரகரஞ்சேர்த்தல், (2) டகரத்தைத் தகரமாக்கல், (3) ஐயீற்றை ஆவீறாக்கல் என்பன.
பவளம், பகுதி முதலிய தமிழ்ச்சொற்களையும், ப்ரவாளம், ப்ரக்ருதி என்று மாற்றுதல் காண்க.
வடமொழியிலும் தென்மொழியிலும் பொதுவாய் வழங்கும் சொற்களை, இன்னமொழிக்குரிய வென்று துணிதற்கு விதிகள் இப் புத்தகத்தின் இறுதியிற் கூறப்படும். அவற்றுள் முக்கியமானது, பகுதிப்பொருள்பற்றியது.ஆரியர் தமிழ்ச்சொற்களை வட நூல்களில் எழுதிவைத்துக்கொண்டு, அவற்றுட் சிலவற்றிற்குப் ‘பொருந்தப் புளுகல்’ என்னும் முறைபற்றி, ஏதேனும் ஒரு பொருள் கூறுவர்; அது இயலா விடின் இடுகுறியென முத்திரையிட்டு விடுவர். அவ்விடுகுறிச் சொற்கள், தமிழில் பகுதிப்பொருள் தாங்கி வழங்குமாயின் தமிழ்ச் சொற்களேயென்பது ஐயமறத் துணியப்படும்.
ஒரு மூலத்தின் படி (copy), அம்மூலத்தின் அளவாயேயிருத்தலால், அளவு என்னும் பொருளிலும் படி என்னுஞ் சொல் வழங்குவதாகும்.
கா : காற்படி (அரிசி), | பட்டணம்படி | — | முகத்தலளவு. |
படிக்கல் | — | நிறுத்தலளவு. |
படிமுறை, படிக்கட்டு முதலிய தொகைச்சொற்களும் முறையே சிறுசிறு அளவாய் ஏறுதல், பல அளவாய்ச் செல்லுதல் என்னும் கருத்துப் பற்றியனவே. வரும்படி – வரும் பொருளளவு.
படி என்னுஞ் சொல் பதி என்று திரிவது முன்னர்க் கூறப்பட்டது. படிமானம் = பதிவு.
பண்டமாற்றிலும், ஈட்டுக்கடனிலும், ஒரு பொருளுக்கு அதன் மதிப்பளவுள்ள இன்னொரு பொருள் கொடுக்கப் படுகின்றது. ஓர் அலுவலாளர் விடுமுறையிலிருக்கும்போது, அறிவிலும் ஆற்றலிலும், அவரளவுள்ள இன்னொருவர் அவருடைய இடத்தில் அமர்த்தப்படுகிறார்.
இதனால், பதில் என்னும் சொல் ஈடு, பதிலி (substitute) என்னும் பொருள்களில் வழங்கத் தலைப்பட்டது. பதி என்னும் சொல்லே லகரமெய்யீறு பெற்றுப் பதில் என்றாகும். இங்ஙனம் ஈறுபெறுவது பொருள் வேறுபடுத்தற்கென்க. படி – (படில்) – பதில்.
பண்டமாற்றில் ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளை மாறித் தருவதுபோல, உரையாட்டில் அல்லது எழுத்துப் போக்குவரவில், ஒரு சொலவுக்கு இன்னொரு சொலவை மாறித்தருவது பதில் எனப்படும். மாற்றம் என்னுஞ் சொல்லை இதனுடன் ஒப்புநோக்குக. மாறிச் சொல்வது அல்லது (இருவர்) மாறிமாறிச் சொல்வது மாற்றம்.
வழக்காளிகள் இருவருள், வழக்காடி வாதியென்றும், பதில் வழக்காடி ப்ரதிவாதியென்றும் வடசொல்லாற் கூறப்படுகின்றனர். வழக்காடியின் கூற்றுக்கு மாறிக்கூறுவதால், பதில் வழக்காடி ப்ரதிவாதியெனப்படுகின்றான். (பதில் வழக்காடி, வழக்காடியின் வழக்கிற்கு எதிராக, மற்றொரு வழக்குத் தொடுப்பது எதிர்வழக்காகும்.)
ப்ரதியுபகாரம் – மாறிச்செய்யும் நன்றி. கைம்மாறு என்னுஞ் சொல்லை நோக்குக. ப்ரதிபிம்பம் – மாறித் தோன்றும் வடிவம்.
ஓரினத்தைச் சேர்ந்த எல்லாப் பொருள்களும், ஒரேபடி (வடிவு அல்லது வகை)யாயிருத்தலான், (படி அல்லது) ப்ரதி என்னும் சொல், ஒவ்வொரு என்னும் பொருளிலும் வழங்குவதாகும்.
படி + உ = படிவு + அம் = படிவம்
படிவு — வடிவு. படிவம் — வடிவம். ப—வ போலி.
எனக்கு ஒரு படி (வகை) யாய் வருகிறது என்பதை, எனக்கொரு வடியாய் வருகிறது என்பர் தென்னாட்டார்.
பகு—வகு, பகிர்—வகிர், தபம்—தவம், என்பவற்றில் பகரத்திற்கு வகரம் போலியாய் வருதல் காண்க.
படிமை என்னும் சொல், ஒன்றன் வடிவத்தைக் குறிக்கு மென்பது, முன்னர்க் காட்டப்பட்டது. நோன்பி(விரதி)கள் விதப்பான உடையும் அணியும் பூண்டிருப்பராதலின், அவரது வடிவம் அல்லது தோற்றம் சிறப்பாய்ப் படிமை யெனப்பட்டது ‘விரதியரை வினாவல்’ என்னுந் துறைபற்றிய திருக்கோவைச் செய்யுளில்,
“சுத்தியபொக் கணத்தென்பணிகட் டங்கஞ்சூழ் சடைவெண் பொத்திய கோலத்தினீர்…”
என்று கூறியிருத்தல் காண்க.
பார்ப்பனர்க்கும் ஒரு படிமையுண்டென்பது, ‘வேதியரை வினவல்’ என்னுந் துறைபற்றிய செய்யுளில் (243),
“வெதிரேய் கரத்துமென் றோலேய் சுவல்வெள்ளை
நூலிற்கொண்மூ
வதிரேய் மறையினிவ் வாறுசெல்வீர்….” என்றும்,
பாலைக்கலியில் (8),
“எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ
லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலு
நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்”
என்றும் கூறியிருப்பதா லறியப்படும்.
படிமையுடையோன் படிமையோன். நோன்பைப் படிமை யென்றது ஆகுபெயர். படிமை என்னுஞ் சொல் படிமம் என்றும் நிற்கும். மம் என்பது பண்புப் பெயருக்கும் தொழிற்பெயருக்கும் பொதுவான ஓர் ஈறாகும். உருமம், கருமம், பருமம், (பருமன்), மருமம் என்னுஞ் சொற்களை நோக்குக.
படிமத்திற்கு (நோன்பிற்கு) உணவுமுறை வேறுபட்ட தாதலின், அது படிமவுண்டி யெனப்படும்.
“படிம வுண்டிப் பார்ப்பன மகனே” என்று குறுந்தொகையில் வந்திருத்தல் காண்க.
இனி, உயிர்களின் அறுவகைப் பகுப்பைப்பற்றிச் சிறிது கூறுகின்றேன். உயிர்களை அறிவுபற்றி ஆறாகப் பகுப்பது தொன்று தொட்டுத் தமிழ்நாட்டிலுள்ளது. இது ஒரு படிமுறைப் பகுப்பு. கிறித்தவமறையில், ஆதியாகமம் முதலதிகாரத்தில், படைப்பைக் கூறும்போது, நிலைத்திணை, நீர்வாழி, பறவை, விலங்கும் ஊர்வனவும் என்பன முறையே படைக்கப்பட்ட தாகக் கூறியுள்ளது. இதுவும் ஒரு படிமுறைப் பகுப்பே. இதனால், கிறித்தவமறைக்கும் தொல்காப்பியத்திற்கும் ஓர் இயைபு கூறமுடியாது.
சின்கிளேர் ஸ்ற்றீவென்சன் அம்மையார் (Mrs. Sinclair Stevenson) தாம் எழுதிய ‘ஜைன நெஞ்சம்’ (The heart of Jainism) என்ற நூலில், 7ஆம் அதிகாரத்தில் சமண முறைப் படி உயிர்களை 13 முறையிற் பலவாகப் பகுக்கின்றார். அவற்றுள், 4ஆம் முறையிற் புலன்பற்றி உயிர்களை ஐந்தாகப் பகுத்து, அவ் வைந்தனுள் ஐயறிவுயிரை மீட்டும் பகுத்தறிவுண்மையின்மை பற்றி இரண்டாக வகுக்கின்றார். பின் 10ஆம் அதிகாரத்தில், பிரதிமா என்னும் பெயரால், ஒரு ஜைனன் மேற்கொள்ளவேண்டிய 11 சூளுறவுகளையுங் குறிக்கின்றார். ப்ரதிமா என்பதற்குப் படிமா என்னும் மறுவடிவமும், 221ஆம் பக்கத்தில் அடிக்குறிப்பிற் காட்டப் பட்டுள்ளது. இங்ஙனம் அவர் கூறியதால், வடநாட்டில் வழங்கும் தமிழ்ச் சொற்களையும் தமிழக் கொள்கைகளையும், சமணர் மேற்கொண்டு வழங்கினர் என்பதல்லது, தொல்காப்பியர் சமணர் என்பது எங்ஙனம் பெறப்படும்? தமிழின் தொன்மையைப் பற்றியே திருவாளர் வையாபுரிப்பிள்ளையவர்கட்கு ஒரு கருத்தில்லையென்பது, அவர்களெழுதிய ‘ஆராய்ச்சியுரைத் தொகுதி’யால் அறியக்கிடக்கின்றது. அவர்கள் முடிபெல்லாம், மகன் தந்தையை ஒத்திருப்பதால் மகனே தந்தையைப் பெற்றவன் என்பது போன்றவையே. வடமொழியுட்பட, வட நாட்டு மொழிகள் எல்லாவற்றிலும், தனித்தமிழ்ச் சொற்கள் நூற்றுக் கணக்காகக் கலந்துள்ளன என்பதை, அவர் அறியார்போலும்! வடநாட்டில் தோன்றிய, பௌத்த மறைக்குச் சிறப்புப் பெயராய் வழங்கும் பிடகம் என்னும் சொல்லுங் கூட, பெட்டகம் என்னும் தமிழ்ச் சொல்லாயிருக்கும்போது, வேறென்ன சொல்ல வேண்டுவது? பிடகம் (பெட்டகம்) = பெட்டி, கூடை, தட்டு. கி.மு. 20ஆம் நூற்றாண்டிலிருந்த தொல்காப்பியருக்கு, கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமண மதத்தோடு எங்ஙனம் தொடர்பிருந்திருக்க முடியும்?
“மகேந்திரமலை முழுகிக்கிடக்கின்றது” என்று சுக்கிரீவன் அங்கதனுக்குக் கூறுவதாக வால்மீகி கூறியிருப்பதால், கபாடபுரம் இராமர்காலத்தது என்பது வலியுறும்.
ஒரு மொழியில் இலக்கியம் தோன்றிய பிறகுதான் இலக்கணம் தோன்றும்.
“இலக்கிய மின்றி யிலக்கண மின்றே
எள்ளின் றாகில் எண்ணெயு மின்றே
எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல
இலக்கி யத்தினின் றெடுபடு மிலக்கணம்.”
தொல்காப்பியர் காலத்தில், ஆரியர்க்கு வேதமும் பிராமணமும் ஒருசில மிருதிகளும் இராமாயண பாரத இதிகாசங்களும் தமிழைப் பின்பற்றிய எழுத்து சொல் இலக்கணங்களும் மட்டுமிருந்தன.
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்
கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற்
காமக் கூட்டம் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”
என்னுங் களவியல் நூற்பாவில், தமிழர் இல்லற வாழ்க்கையின் முற்பகுதியான களவியல் என்னுங் கைகோளை, ஆரிய மணங்கள் எட்டனுள் ஒன்றான கந்தருவத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவதாலறியலாகும். இதனால், ஆரிய தமிழ வழக்கங்களை யும் நூல்களையும், ஒப்பிட்டுப் பார்ப்பதில் தொல்காப்பியர் விருப்பமுடையவர் என்பதும் வெளியாகும்.
‘புறத்திணையியலில்’ வாகைத்திணைபற்றிய நூற்பாவில், ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்று கூறியிருப்ப தாலும், தொல்காப்பியர் காலத்தில் ஆரியர்க்கு வேதமிருந்தமை யறியப்படும். வேறேயொரு நூலாவது கலையாவது, ஆரியர்க் கிருந்ததாகத் தொல்காப்பியத்தில் எங்கேனும் குறிக்கப்படவேயில்லை.
பிறப்பியலில், “எல்லா எழுத்தும் அந்தணர் மறைத்தே” என்று கூறியது, ஆரிய மறையையன்றென்பது பின்னர் விளக்கப்படும். களவியலுரையில், நச்சினார்க்கினியர்,
“பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப” (13)
என்னும் நூற்பாவிற்கு,
“அகனைந்திணையும் அல்லாதவழிப் பாங்கன் கண்ணவாகிய நிமித்தம் பன்னிருபகுதியவாம்” என்றவாறு.
“எண்வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான், இருவகைக் கோத்திரம் முதலியனவுந் தானறிந்து இடைநின்று புணர்த்தல் வன்மை, அவர் புணர்தற்கு நிமித்தமாதலின். அவை அவன் கண்ணவெனப்படும். இவனைப் பிரசாபதியென்ப…. அவ்வாற்றானே பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் எனவும்; முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் எனவும்; அசுரம், இராக்கதம், பேய் எனவும் பன்னிரண்டாம்” என்றும்,
“முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே” (14)
என்னும் நூற்பாவிற்கு,
“இதற்கு முன்னின்ற அசுரமும் இராக்கதமும் பைசாச முங் கைக்கிளை யென்றற்குச் சிறந்திலவேனும், கைக்கிளை யெனச் சுட்டப்படும்” என்றும்,
“பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே” [7] (15)
என்ற நூற்பாவிற்கு,
“பின்னர் நின்ற பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வத மென்னும் நான்கினையும் பெருந்திணை தனக்கு இயல்பாகவே பெறுமெனவுங் கூறப்படும்” என்றும்,
“முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பி னைந்நிலம் பெறுமே” (16)
என்னும் நூற்பாவிற்கு,
“மேற்கூறிய நடுவணைந்திணையுந் தமக்கு முதலாக அவற்றோடு பொருந்திவரும் கந்தருவ மார்க்கம் ஐந்தும், கெடலருஞ் சிறப்பொடு பொருந்திய ஐவகை நிலனும் பெறுதலின், அவை ஐந்தெனப்படும்” என்றும் தமிழ்முறைக்கு மாறாக உரை கூறினார்.
இவ்வுரை தவறென்பதற்குக் காரணங்களாவன :
(1) தமிழ்முறைக்கு மாறானமை.
இதை, நச்சினார்க்கினியரே, “இங்ஙனம் ஐந்திணைப் பகுதியும் பாங்கனிமித்தமாங்கால் வேறுபடுமெனவே, புலனெறி வழக்கிற்பட்ட இருவகைக் கைகோளும்போலா இவை யென்பதூஉம்…. இவ்வாற்றான் எண்வகை மணனும் உடனோதவே, இவையும் ஒழிந்த எழுவகை மணனும்போல அகப்புறமெனப் படுமென்பதூஉங் கொள்க,” என்று 13ஆம் நூற்பாவுரையில் கூறியிருப்பதா லறியலாம்.
(2) ஆரிய மணமுறையைத் தமிழ மணமுறையொடு கலத்தல்.
களவியல் முதல் நூற்பாவில் ஆசிரியர் தமிழர் கைகோளாகிய களவொழுக்கத்தை, ஆரிய மணமாகிய கந்தருவத்தொடு (ஒருசார் ஒப்புமைபற்றி) ஒப்பிட்டுக் கூறினரேயன்றி, ஆரிய மணமுறைக்கு இலக்கணங் கூறிற்றிலர்.
தொல்காப்பியத்தில் ஆங்காங்கு ஒருசில வடசொற்கள் அமைந்திருக்கலாம்; சில ஆரிய வழக்கங்களும் குறிக்கப் படலாம். ஆனால், இலக்கணங் கூறுவதுமட்டும் தமிழ் எழுத்துச் சொற்பொருள்கட்கும், தமிழ வழக்கங்கட்குமே என்பதை மறத்தல் கூடாது.
(3) முறைமாற்று.
ஆரிய மணங்கள் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம், கந்தருவம் என்னும் முறையிலமைந்திருக்கவும், இவற்றுள் முன்னைய நான் கையும் பின்னர் நான்கென்றும் ஈற்றயல் மூன்றையும் முன்னைய மூன்றென்றும் முறைபிறழக் கூறினார் நச்சினார்க்கினியர்.
(4) தமிழ மணத்திற்கும் ஆரிய மணத்திற்கும் இசைவின்மை.
இதை, “இதற்கு முன்நின்ற அசுரமும் இராக்கதமும் பைசாசமும் கைக்கிளை யென்றற்குச் சிறந்திலவேனும்,கைக்கிளையெனச் சுட்டப்படும்” என நச்சினார்க்கினியரே கூறியிருத்தல் காண்க. இது பின்னரும் விளக்கப்படும்.
(5) பார்ப்பனத் தொடர்பு கூறல்.
பார்ப்பனருக்குத் தொல்காப்பியர் காலத்தில், தமிழரிடத்தில் பாங்கத் தொழிலிருந்ததேயன்றிப் புரோகிதத் தொழிலில் லையென்று, முன்னமே முன்னுரையிற் கூறப்பட்டது. ஆயினும் தெளிவுறுத்தற் பொருட்டு இங்கும் கூறுகின்றேன்.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், இன்பவொழுக் கத்தையும் இல்லறத்தையும் சிறப்பாய்க் கூறும் அகத்திணை யியல் களவியல் கற்பியல்களிலேனும், பொதுப்படக் கூறும் பிறவியல் களிலேனும், பார்ப்பார்க்கு அறுதொழிலும் பாங்கத் தொழிலும், ஆவொடுபட்ட நிமித்தங் கூறலும் வாயில் தொழி லுமேயன்றிப் பிற தொழில்கள் கூறப்படவே யில்லை.
“அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்னும் புறத்திணையியல் அடி, பார்ப்பார் தாமே தமக்குள் செய்துவந்த அறுவகை ஆரிய வைதிகத் தொழில்களைக் குறிக்குமேயன்றித் தமிழரிடம் செய்துவந்த வினைகளைக் குறியா.
பார்ப்பார் தமிழரிடம் செய்த தொழில்களைக் கூறும் தொல்காப்பிய நூற்பாக்களாவன :
கற்பியல்:-
“காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய” (36)
“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
………………………………
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” (52)
செய்யுளியல் :-
“பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
………………………………..
களவிற் கிளவிக் குரியர் என்ப.” (181)
“..பேணுதரு சிறப்பிற் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத்
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்.” (182)
“பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.” (189)
மரபியலிற் கூறிய அந்தணர், நாற்பாலாருள் ஒரு பாலாரான தமிழ முனிவரும், முனிவர்போலியரான ஒருசில ஆரியருமேயன்றிப் பார்ப்பாரல்லர். பால்வேறு, குலம்வேறு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பன பால்கள். “வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்” என்று புறநானூறு கூறுதல் காண்க. பிள்ளை, முதலியார், மறவர், இடையர் என்பன குலங்கள். பார்ப்பார் என்பது ஒரு குலம். பார்ப்பாரைக் குறிக்கும்போதெல்லாம் பார்ப்பார் என்ற குலப்பெயர் குறித்தே கூறுவர் தொல்காப்பியர். அந்தணர், ஐயர், அறிவர், தாபதர் என்னும் பெயர்களெல்லாம் முனிவரைக் குறிக்கும்.
கற்பியலில், திருமண வினையைப்பற்றி நான்கு நூற் பாக்கள் உள்ளன. அவையாவன :
“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள்வதுவே.” (1)
“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான.” (2)
“மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்
கீழோர்க் காகிய காலமும் உண்டே.” (3)
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.” (4)
இவற்றுள் பார்ப்பனர் பெயரே யில்லை. கரணமென்பது திருமண வினையைமட்டும் குறிக்கும்; இக்காலத்துப் பார்ப்பனராற் செய்யப்படும் ஆரியமந்திரச் சடங்கைக் குறியாது. நச்சினார்க்கினியர் திருமண வினைக்குக் காட்டாகக் கூறிய செய்யுள் வருமாறு :
“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப்
பெருஞ்சோற் றமலை நிற்ப நிறைகாற்
றண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக்
கோள்கா னீங்கிய கொடுவெண் டிங்கட்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
நீரொடு சொரிந்த வீரித ழலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணங் கழிந்த பின்றை…..”
(அகம். 86)
இச்செய்யுளில் பார்ப்பனர் தொழில் சிறிதுமின்மை காண்க.
‘பொய்யும் வழுவும்’ என்னும் நூற்பாவில், பொய் என்றது ஒருவன் ஒருத்தியை மணந்தபின், அவளை மணந்திலேன் எனலை. வழுவென்றது ஒருத்தியை மணந்தபின் பிறரறியக் கைவிடலை. ஐயர் தமிழ முனிவர். தொல்காப்பியர் காலத்தில் பார்ப்பாருக்கு ஐயர் என்னும் பெயர் வழங்க வில்லை. ‘என்ப’ என்று பிறர்வாய்க் கேள்வியாக, அல்லது நூல்வாயறிவாகத் தொல்காப்பியர் குறித்திருப்பது. தமிழர் கரணத்தோற்றத்தின் தொன்முது பழைமையைக் காட்டும். அப்போது ஆரியக்குலம் இந்தியாவில் இல்லவேயில்லை. பொய்யும் வழுவும் சிறுபான்மைத் தமிழராலேயே நிகழ்ந்தன. ஆயினும், பெண்டிர்க்குப் பொதுப்படக் காப்புச் செய்யும் பொருட்டுக் கரணம் வகுக்கப்பட்டது. மலையாள நாட்டில் வழங்கும் மருமக்கட்டாயமும் பெண்களின் பாதுகாப்பிற் கேற்பட்டதே.
“பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு” என்பதற்கு, இளம்பூரணர் உரைத்த உரையாவது :
“பன்னிரண்டாவன : பிரமம் முதலிய நான்கும், கந்தருவப் பகுதியாகிய களவும் உடன்போக்கும், அதன்கண் கற்பின் பகுதியாகிய இற்கிழத்தியும், காமக்கிழத்தியும், காதற் பரத்தையும் அசுரம் முதலாகிய மூன்றும்” என்பது.
இங்ஙனம், இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஆரியத்தைக் கலந்துணர்ந்தமையாலேயே தொல்காப்பியத்தின் உண்மைப் பொருளைக் காணமுடியாது போயினர். அக்காலத்தில், சரித்திரம், குலநூல், மொழிநூல் முதலிய கலைகளில்லாமை யால், அவர்மீதும் குற்றஞ் சுமத்தற்கிடமில்லை.
இனி, மேற்கூறிய களவியல் நூற்பாக்கட்கு உண்மைப் பொருள் வருமாறு :—
கைக்கிளைக்குறிப்பு மூன்றும், ஐந்திணையும் பெருந்திணைக் குறிப்பு நான்குமாகப் பாங்கன் நிமித்தம் பன்னிரண்டாம்.
“காமஞ் சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை எய்தலும்;
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்தலும்;
சொல்லெதிர் பெறாஅன் சொல்லிஇன் புறலும்”
(ஆகிய மூன்றும்) புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. (அகத். 53) இவையே, “முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே” என்று சுட்டப்பட்டவை. மூன்று நிகழ்வுகள் ஒரு புணர்சொற்றொடரில் (Compound Sentence) இணைத்துக் கூறப்பட்டுள என்க.
“ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே”
(அகத். 54)
இவையே, “பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே” என்று சுட்டப்பட்டவை. ‘முன்னைய’, ‘பின்னர்’ என்னும் முறையையும், ‘மூன்றும்’ ‘நான்கும்’ என்னுந் தொகைகளையும் ஓர்ந்தறிக.
அன்பின் ஐந்திணை வெளிப்படை. யாழோர் என்றது, இசையிற் சிறந்த, இல்லற வொழுங்கற்ற ஓர் ஆரிய வகுப்பாரை. யாழ் இசை. யாழோரைக் கந்தருவர் என்பர் வடநூலார்.
கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என்பவை, முறையே, ஒருதலைக் காமமென்றும், இருதலைக் காமமென்றும், பொருந்தாக் காமமென்றுங் கூறப்படுகின்றன. இவை தெளிவும் நிறைவுமான இலக்கணங்களல்ல.
கைக்கிளையும் பெருந்திணையும் பெரும்பாலும் (சிறிது) காலமே நிகழ்பவான காமக் குறிப்புகளும் புணர்ச்சிகளுமாகும். “கைக்கிளைக் குறிப்பே”, “பெருந்திணைக் குறிப்பே” என்று கூறுதல் காண்க. அன்பினைந்திணை அங்ஙனமன்றி, களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளுள்ள நீடித்த அன்பொத்த இன்பவாழ்க்கையாகும்.
நெறிதிறம்பிய காமம் ஒரு பெண்ணுக்கு எவ்வகையிலேனும் தீமை செய்யாவிடத்துக் கைக்கிளையாம்; தீமை செய்தவிடத்துப் பெருந்திணையாம். காமஞ்சாலாத ஒரு சிறு பிள்ளையோடு பேசிமட்டும் இன்புறுவது கைக்கிளை; வரம்பு கடப்பின் பெருந்திணை. இன்பநெறிக்கு மாறாக விலங்குத் தன்மையும் பேய்த்தன்மையுமான கூட்டமெல்லாம் பெருந் திணையே. கொடிய குட்டநோய் பெருநோய் எனப்பட்டது போல, கொடியமணக் கூட்டம் பெருந்திணையென்னப்பட்டது. இதையறியாமல், எண்வகை மணங்களில் நால்மணம் பெற்றதால் பெருந்திணை யெனப்பட்டது என்று கூறினர் நச்சினார்க்கினியர். மேலும், பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்மணங்களும் பெருந்திணையாகாமையுமறிக.
பண்டைக்காலத்தில், களவின் தொடர்ச்சியாகவே கற்பு நிகழ்ந்துவந்தது. இதுபோது, பெரும்பாலும் பெற்றோராலேயே புணர்க்கப்படும் மணங்களுள், பெண் மாப்பிள்ளை என்னும் இருவர்க்குள்ளும், ஒருவர்க்கே அன்பிருப்பின், கைக்கிளையின் பாற்படும்; இருவர்க்கும் அன்பிருப்பின் அன்பின் ஐந்திணையாம்; இருவர்க்கும் அன்பில்லாதிருப்பின் பெருந்திணையின் பாற்படும்.
அகத்தியர் காலம்
இனி, “அவரும் (அகத்தியர்) தென்றிசைக்கட் போது கின்றவர்…. துவராபதிப் போந்து, நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் கோடிவேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின்கண்ணிருந்து” என்று நச்சினார்க்கினியர் தொல்காப்பிய எழுத்ததிகாரவுரையிற் கூறியிருப்பதின் பொருளையுணராது. அகத்தியரைக் கண்ண னுக்குப் பிற்பட்டவரென்று கூறுகின்றனர் சிலர்.
நச்சினார்க்கினியர் கூற்றில், துவரை என்றது மைசூரைச் சார்ந்த துவாரசமுத்திரத்தை. நிலங்கடந்த நெடுமுடியண்ணல் என்றது குறள் (வாமனத்) தோற்றரவு(அவதார)த் திருமாலை. இதுவரை நிகழ்ந்துள்ள திருமாலின் ஒன்பது தோற்றரவுகளுள், குறள் ஐந்தாவதென்பதையும் இரகுராமன் ஏழாவதென்பதையும், கண்ணன் கடையனென்பதையும் அவர் மறந்தனர்போலும்! இரகுராமர் காலத்தவரான அகத்தியர் கண்ணனுக்குப் பிற்பட்டவராதல் எங்ஙனம்?
அரசரைத் திருமாலின் வழியினராகக் கூறுவது தமிழ்நாட்டு வழக்கமென்பதும், திருமாலின் முதல் ஐந்து தோற்றரவுகளும் தமிழ்நாட்டிலேயே நிகழ்ந்தனவென்பதும் பின்னர்க் கூறப்படும்.
அரசர் பதினெண்மரும் பதினெண் கோடி வேளிரும் என்றது, பதினெட்டுத் தமிழரசரையும் அவர்க் கீழிருந்த பதினெண் வகுப்புத் தமிழக் குடிகளையும். வேளிர் வேளாளர். அருவாளர் அருவா நாட்டார். பதினெண்கோடி வேளிர் என்றது பதினெண் குடி வேளிர் என்பதன் ஏட்டுப்பிழை.
காடு கெடுத்து நாடாக்கியென்றது, அக்காலத்தில் மக்கள் வழக்கின்றியிருந்த பல காடுகளை அழிப்பித்து, அவற்றில் துவரையினின்றும் கொண்டுபோந்த குடிகளைக் குடியேற்றியதை.
அகத்தியர் பொதியின்கண்ணிருந்தது, அலைவாயை (கபாடபுரத்தை)க் கடல் கொண்டபின்.
துவரை என்பது ஒரு செடிக்கும் ஒரு மரத்திற்கும் பெயர். தில்லைமிக்க இடத்தைத் தில்லை என்றாற்போல, துவரைமிக்க இடத்தைத் துவரை என்றது இடவனாகுபெயர். துவரை என்பது துவரா(பதி), துவாரா(பதி), துவாரகா என்று ஆரிய வடிவங் கொள்ளும்.
துவரை என்ற தென்னாட்டு நகர்ப்பெயரையே, பிற் காலத்தில் கண்ணன் ஆண்ட இடமாகிய, வடநாட்டு நகர்க்கிட்டனர். மைசூர்த் துவரைநகர் மிகப் பழைமையானதென்பதை. அது அகத்தியர் காலத்திலிருந்ததாக நச்சினார்க்கினியர் கூறுவதாலும்,
“உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே” [8]
என்று இருங்கோவேள் கி.பி. 2ஆம் நூற்றாண்டினரான கபிலராற் பாடப்பெற்றிருப்பதாலும் அறியலாம்.
மேற்கூறிய புறப்பாட்டிற் குறிக்கப்பட்ட துவரைநகர், கண்ணன் ஆண்ட வடநாட்டுத் துவாரகையாகப் பல்கலைக் கழக அகராதியில் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது.
தலைக்கழக இருக்கையாகிய மதுரையின் பெயரை எங்ஙனம் பிற்காலத்தில் வடநாட்டிற் கம்சன் ஆண்ட நகர் பெற்றதோ, அங்ஙனமே துவரையென்னும் தென்னாட்டு நகர்ப்பெயரையும் கண்ணன் ஆண்ட வடநாட்டு நகர் பெற்ற தென்க. பண்டைத் தமிழகம் குமரிநாடென்பதையறியாமையாலேயே, மேற்கூறிய தவறுகளும் அன்னோரன்ன பிறவும் நிகழ்கின்றன. முதலில் வடநாட்டிற் குடியேறினவர் திராவிட ரேயாதலின், தங்கள் நகர்களுக்குத் தென்னாட்டுப் பெயர்களையிட்டனர் என்க.
மேற்கூறிய புறநானூற்றுச் செய்யுளில், இருங்கோ வேளுக்குப் புலிகடிமால் என்றொரு பெயர் வந்துளது. டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் அச்செய்யுளின் அடிக்குறிப்பில்,
“தபங்கரென்னும் முனிவர் ஒரு காட்டில் தவஞ் செய்கையில் ஒரு புலி அவர்மேற் பாய்தற்கு நெருங்க, அது கண்ட அம் முனிவர் அங்கு வேட்டையாடி வந்த சளனென்னும் யாதவ அரசனை நோக்கி, ‘ஹொய்ஸள’ என்று கூற, அவன் அப் புலியைத் தன்னம்பால் எய்து கடிந்தமையால், ஹொய்ஸளனென்றும் புலிகடிமாலென்றும் வழங்கப் பட்டானென்று சிலர் கூறுவர்; சசகபுரத்தை யடுத்த காட்டி லுள்ள தன் குலதேவதையான வாஸந்திகா தேவியைச் சளனென்னு மரசன் வணங்கச் சென்ற போது, புலியால் தடுக்கப் பட்டு வருந்துகையில், அக் கோயிலி லிருந்த பெரியவர் அவனை நோக்கி ‘ஹொய்ஸள’ என்று கூறி ஓர் இரும்புத் தடியை அருள, அவன் அதனைக் கொன்றமைபற்றி’ஹொய்ஸளன்’ என்றும் ‘புலிகடிமால்’ என்றும் பெயர் பெற்றனனென்று வேறு சிலர் கூறுவர்” என்று வரைந்துள் ளார்கள். இவை கல்வெட்டுச் செய்திகள்.
இதனால், இருங்கோவேளின் மரபினர் ஹொய்சளர் என்பதும், அவ் வேள் ஒருமுறை ஒரு புலியைத் தன் குடிகட்குத் துன்பஞ் செய்வதினின்று விலக்கினான் என்பதும், பிற்காலத்தில் ஹொய்சளன் என்னும் பேருக்குப் பழங்காலக் கதை சற்றுப் பொருத்திக் கூறப்பட்ட தென்பதும் அறியப்படு மேயன்றி, புலிகடிமாலே ஹொய்சளக் குடியினன் என்பது பெறப்படாது, காலவிடையீடு பெரிதாயிருத்தலின்.[9]
இனி, புலிகடிமால் என்னும் பெயராலும் ஹொய்சள என்னும் பெயராலும் சுட்டப்பட்ட கதைகள் வெவ்வேறாகவுமிருக்கலாம். மைசூர் நாட்டில் சிறுத்தைப் புலிகள் நிறைந்திருப்பதும், அடிக்கடி அவை சிற்றூர்களுக்கு வந்து குடிகளுக்குத் துன்பம் விளைவிப்பதும், வேட்டைக்காரர் அவ்வப்போது அவற்றைக் கொல்வதும், தாளிகை வாயிலாய் யாவரும் அறிந்தவையே. ஐயரவர்கள் குறிப்பிலேயே இருவேறு வரலாறுள.
‘வடபால் முனிவரன் தடவுட்டோன்றி’னதாக இருங்கோவேளைப் பற்றிப் புறநானூற்றிற் கூறியிருக்கும் செய்தி, கற்பனையான பழமைக்கூற்றாதலின், ஆராய்ச்சிக்குரியதன்று.
இதுகாறும் கூறியவற்றால், அகத்தியர் பாரதக் காலத்திற்கு முற்பட்டவர் என்பதும், தொல்காப்பியர் அக்காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரல்லர் என்பதும், இருவரும் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், முதலிரு கழகமும் இம்மியும் ஆரியச் சார்பில்லா முழுத் தூய்மை பெற்றவை என்பதும்; இடைக் கழகக் காலத்தில் ஆரியம் என்னும் பெயரே உலகில் தோன்றவில்லை யென்பதும், அறிந்து கொள்க.
தமிழ் எண்ணிற்கு மெட்டாக் காலத்துக் குமரிமலை நாட்டில் தோன்றிய உலக முதல் ஒருதனிச் செம்மொழி யாதலின், அதன் தொன்மையை உணராத பிற்காலத்தார் அகத்தியரைத் தலைக் கழகத்தினராகவும் தொல்காப்பியரை இடைக்கழகத்தினராகவும் கட்டிக் கூறிவிட்டார். இதற்கு முதலிரு கழக நூல்களும் அழிக்கப் பட்டுப் போனமையும், தமிழிலக்கியத்திற்கு ஆரிய மூலம் காட்டப்பட்டமையும் பிற்காலத் தமிழர்க்கு வரலாற்றுணர்ச்சி அற்று விட்டதுமே, கரணியமாகும்.
ஆங்கிலக் கல்வியும் அறிவியலாராய்ச்சியும் மிக்க இக் காலத்திலேயே பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவுபற்றி, தமிழத் தமிழ்ப் புலவர்க்கில்லாத தனியுயர்வு பிராமணத் தமிழ்ப் புலவர்க்கேற்படின்; ஏதிலரை நம்பி எளிதில் ஏமாறும் பழங்குடிப் பேதைமையும், வரலாற்றொடு கூடிய ஒப்பியன் மொழிநூலறிவின்மையும், மிக்க பண்டைக் கால அல்லது இடைக்காலத் தமிழரிடை ஐரோப்பியரை யொத்த வெள்ளை நிறமும் வல்லோசை மிக்க மந்திரமுங் கொண்டிருந்த வேத ஆரியர்க்கு எத்துணைப் பெருங் கண்ணியம் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.
தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்
தொல்காப்பியர் காலத்தில், தமிழிற் பல கலைகளும் நூல்களுமிருந்தனவேனும், அவற்றுள், தொல்காப்பியந் தவிர வேறொன்றும் அகப்படாமையான், பண்டைத் தமிழ்க் கலை களைப்பற்றி விரிவாயெடுத்துரைக்க இயலவில்லை. ஆயினும், ஆனையடிச்சுவடு கண்டு ஆனை சென்றதை யறிதல் போல, தொல்காப்பியத்தில் ஆங்காங்குள்ள சில குறிப்புகளினின்று, தொல்காப்பியர் காலத்தில் எவ்வெக் கலைகள் தமிழிலிருந்தன வென்று இங்கெடுத்துக் கூறுகின்றேன்.
(1) இலக்கணம்
தொல்காப்பியர் காலத்தில் தமிழில் இலக்கணமிருந்தமைக்குத் தொல்காப்பியம் ஒன்றே போதிய சான்றாம். தொல்காப்பியரின் உடன் மாணவரான அவிநயனார், காக்கை பாடினியார் முதலிய பிறரும் தமிழிலக்கண மியற்றினதை யாப்பருங்கல விருத்தியுரையா லறியலாம்.
பிறமொழி யிலக்கணங்களெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணி என நான்கு பிரிவேயுடையன. ஆனால், தமிழோ அவற்றுடன் பொருள் என்னும் சிறந்த பிரிவையுமுடையது. யாப்பு, அணி என்பவற்றைப் பொருளில் அடக்கித் தமிழிலக்கணத்தை மூன்றாகப் பகுப்பதே பண்டை வழக்கம். யாப்பும் அணியும் ஒரு செய்யுளின் பொருளை யுணர்தற்குக் கருவிகளாதலின், அவற்றைப் பொருளிலக்கணத்தினின்றும் பிரிக்கக் கூடாதென்பது முன்னோர் கருத்து. யாப்பருங்கலம், யாப்பருங் கலக்காரிகை என்பவை, தொல்காப்பியத்திற் கூறப் படாத, செய்யுளிலக்கணங்களைக் கூறுவதற்குத் தனிநூல் களாயெழுந்தனவேயன்றி, மூன்றாயிருந்த தமிழிலக்கணப் பிரிவை நான்காக்குவதற்கன்று.
தமிழிலுள்ள பொருளிலக்கணத்தை இற்றைத் தமிழர் சரியாயுணரவில்லை. பார்ப்பனரோ அவரினும் உணரவில்லை. பண்டைத் தமிழர் மதிநுட்பமெல்லாம் பழுத்துக்கிடப்பது பொருளிலக்கணம் ஒன்றில்தான். ஒரு மக்களின் நாகரிகத்தைக் காட்டச் சிறந்த சின்னம் மொழியென்று முன்னர்க் கூறப்பட்டது. பல கருத்துகளையும் தெரிவிப்பதற்குரிய சொற்களும் சொல் வடிவங்களும், விரிவான இலக்கியமும் ஒரு மொழியின் சிறப்பைக் காட்டும். இலக்கியத்தினும் இலக்கணம் சிறந்தது. இலக்கணத்திற் சிறந்தது தமிழ்மொழி ஒன்றே. ஆகையால் உலகமொழிகள் எல்லாவற்றினும் தமிழே மிகத் திருந்திய தென்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை.
எழுத்தாற் சொல்லும் சொல்லாற் பொருளும் உணரப்படும். எழுத்து, சொல் என்பவற்றின் கூறுபாடுகளும் இயல்புகளும், அவற்றைச் செவ்வையா யுணர்தற்கு எங்ஙனம் பயன்படுமோ, அங்ஙனமே பொருளின் கூறுபாடும் அதன் இயல்புகளும் பொருளைச் செவ்வையா யுணர்தற்குப் பயன்படும்.
பொருளிலக்கணம் ஒன்றையே இலக்கணமாகவும், ஏனை எழுத்தும் சொல்லும் அதற்குக் கருவிகளாகவும் கொண்டனர் முன்னோர். இதை,
பாண்டிய “அரசனும் புடைபடக் கவன்று, ‘என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின், இவை பெற்றும் பெற்றிலேம்’….”[10] எனக் கூறியதால் அறியலாம்.
பொருளிலக்கணம் வீடும், எழுத்திலக்கணமும் சொல் லிலக்கணமும், முறையே அதற்குட் செல்ல வழியாயிருக்கும் வாயிலும் நடையும் போல்வன.
பொருளிலக்கண முடைமையால் தமிழ் மிக்க இலக்கண வரம்புள்ளது என்று முன்னோர் கொண்டமையை,
“கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ”
என்ற பரஞ்சோதி முனிவர் கூற்றாலுணரலாம்.
பொருளிலக்கணத்தில், பொருள்கள் எல்லாம் அகம் புறம் என இரண்டாகவும், அவற்றுள், அகம் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என ஏழாகவும், புறம் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழாகவும் வகுக்கப்படும்.
ஒழுக்கநூற் பாகுபாடான அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள்களுள் இன்பம் இன்னவாறிருந்த தென்று பிறர்க்குப் புலனாகும்படி எடுத்துக்கூற இயலாதவாறு, அகத்தானாயே உணர்ந்து நுகரப்படுதலின் அகமெனப்பட்ட தென்றும், அங்ஙனமன்றிப் பிறர்க்குப் புலப்படக் கூறுவதாய் இன்பத்திற்குப் புறமானதெல்லாம் புறமெனப்பட்டதென்றும் கூறப்படுகின்றது.
சிலர் அகப்பொருளிலக்கணத்தை அன்புநூல் (Science of Love) என்றும், புறப்பொருளிலக்கணத்தைப் போர்நூல் (Science of War) என்றும் கொண்டனர். அன்பு சிறப்பது பெரும்பாலும் கணவன் மனைவி யிருவரிடையே யாதலாலும், அன்பிற்கெதிரான பகையாலேயே போர் நிகழ்வதாலும் இவ்வுரைகோளும் ஒருவாறு பொருந்துவதே.
மாந்தன் உலகில் அடையக்கூடிய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றனுள், அறம் தனித்திராது ஏனையிரண்டையும் பற்றியே யிருக்கும். அறவழியால் ஈட்டுவதே பொருள். அறவழியால் நுகர்வதே இன்பம். அறவழியால் ஈட்டாத பொருளாலும், அல்லற வழியால் இன்ப நுகர்ந்து கொண்டும், செய்யப்படும் அறம் அறமாகாது. இன்பத்தை நுகர்வதற்குப் பொருள் கருவி. ஆகவே, பொருளீட்டுவதும் அதனால் இன்பம் நுகர்வதுமாகிய இரண்டே எல்லா மக்களின் தொழில்களும். உலக இன்பத்திற் சிறந்தது பெண்ணின்பம் அல்லது மனைவியின்பம். இதுபெரும்பாலும் வீட்டிலேயே நுகரப்படுவது. பொருள் முயற்சி பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே நிகழ்வது, மக்கள் தலைவனான அரசனது பொருள் முயற்சி போர். அகம் வீடு. புறம் வீட்டிற்கு வெளி. புறப்பட்டான் என்னுஞ் சொல், வீட்டிற்கு வெளிப்பட்டான் என்ற கருத்துப்பற்றியே, வழிப்போக்குத் தொடங்கினான் என்று பொருள்படுவதாகும். ஆகவே, அகத்தில் நிகழ்வதை அகம் என்றும், புறத்தில் நிகழ்வதைப் புறமென்றும் முன்னோர் கொண்டனர் எனினும் பொருந்தும். அகம் என்பது செந்தமிழ்ச் சொல்லே. பார்ப்பனர் தம் வீடுகளைப் பிற குலத்தார் வீடுகளினின்றும் பிரித்துக் காட்டுவதற்கு அகம் என்னுஞ் சொல்லைத் தெரிந்து கொண்டனர்.
இனி, மக்கள் ஆண் பெண் என இருபாற்படுதலின், அவ்விருபால்பற்றிய தொழில்களையும் அகம் புறம் என வகுத்துக் கூறினர் என்று கொள்ளினும் பொருந்தும். உயர் திணையில் பெண்பாலே அழகுடையது. பெண் என்னும் சொல் விரும்பத் தக்கது அல்லது விரும்பத்தக்கவள் என்னும் பொருளையுடையது. விரும்பத்தகுவது இன்பமும் அழகும்பற்றி. இன்பத்திற்கு அழகு துணையாவது. இதனால், காமர் என்னும் விருப்பம்பற்றிய சொல் அழகு என்னும் பொருள்படுவதாயிற்று.
பெள் — பெண். பெட்பு = விருப்பம். பெண் — பேண், பேணுதல், விரும்புதல் அல்லது விரும்பிப் பாதுகாத்தல். பெண் — பிணா — பிணவு — பிணவல். பெள் + தை = பெட்டை — பெடை – பேடை — பேடு, பெண் வீட்டிலிருப்பவள். இதனாலேயே, இல், மனை, குடி என்னும் வீட்டுப்பெயர்கள் மனைவியையுங் குறிக்கலாயின. அகத்திலுள்ள மனைவிபற்றியது அகப் பொருள். ஆண்பால் மறத்திற்குச் சிறந்தது. ஆள் — ஆண். ஆண் என்பது ஆள்வினைத் திறமையுடையது அல்லது மறமுடையது என்னும் பொருளது. ஆட்சி, ஆளல், ஆண்மை என்னுஞ் சொற்களை நோக்குக. ஆண் — (ஆடு) — ஆடவன். (ஆடு) — ஆடூஉ. ஆண்மைத் தொழில் போர்த்தொழிலும் பொருளீட்டலும். அகத்துக்கு (வீட்டுக்கு)ப் புறம்பே நிகழும் தொழில் புறப்பொருள்.
பொருளிலக்கணத்தைப்பற்றிச் சுருங்கச் சொன்னால், எல்லாக் கருத்துகளும் தொழிலும் பற்றிய மக்கள் வாழ்க்கையையே. அகம் புறம் என்னும் இருவகையால் நுட்பமாய் ஆராய்ந்தனர் முன்னோர் எனலாம். பண்டைத் தமிழர் கடவுள் வழிபாட்டிலும் வீடுபேற்று முயற்சியிலும் சிறந்திருந்தமையின், அகப்பொருளிலக்கணத்தைக் கடவுட்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும் பிறிதுமொழி யுவமையாகவுங் கொண்டனர். இதையறியாது சில பார்ப்பனர் அகப்பொருளிலக் கணத்தைக் காமநூலென்கின்றனர்.
“ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்
காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர்
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே”
என்ற திருக்கோவைச் சிறப்புப்பாயிரச் செய்யுளே அவர்க்குச் சிறந்த விடையாகும்.
காமநூல் புணர்ச்சியின்பத்திற் கேதுவான பொருள்க ளையே கூறுவதாகும். ஒருவன் போர், கல்வி முதலிய தொழில் பற்றித் தன் மனைவியைவிட்டுப் பிரிந்துபோவதும், அவளிடம் சொல்லாமல் ஏகக் கருதியிருக்கும்போது, இரவில் தன்னையறியாமல் கனவிலுளறித் தன் போக்கை அவளுக்குத் தெரிவித்து விடுவதும் எங்ஙனம் காமநூலுக்குரிய பொருள் களாகும்? தமிழரின் இல்லற வாழ்க்கையைக் கருத்துப் புலனாக்கும் ஓவியமே அகப்பொருளிலக்கண மென்க.
இனி, புறப்பொருளையும், போர்த்தொழிலொன்றே கூறுவதென்றும், பிற கலைவளர்ச்சியைத் தடுப்பதென்றும் குறை கூறுகின்றனர் சில பார்ப்பனர். பிறமொழிகளிலில்லாத பொருளிலக்கணத்தை வகுத்த தமிழர், அங்ஙனம் பொருளிலக் கணத்தைக் குன்றக் கூறுவரா என்றும் சற்று நினைத்திலர். புறப்பொருட்குரிய எழுதிணைகளுள், ஐந்து திணைகளில் அரசர்க்கும் மறவர்க்குமுரிய போர்த்தொழிலைச் சிறப்பாய்க் கூறி, வாகைத்திணையில் எல்லாத் தொழில்களையும் கலைகளையும் பாடாண்டிணையில் புகழ்நூல்களின் எல்லா வகைகளையும் அடக்கினர் முன்னையிலக்கணிகள்.
வாகைத்திணையின் இலக்கணமாவது :—
“வாகை தானே பாலையது புறனே
தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப” [11] என்பது.
வாகைத்திணையின் பாகுபாடாவது :—
“அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்
பாலறி மரபிற் பொருநர் கண்ணும்
அனைநிலை வகையோ டாங்கெழு வகையான்
தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர்” [12] என்பது.
பண்டை யுலகில் மறம் சிறந்த குணமாகக் கருதப்பட்டதாலும், பகையரசரைப் போராலடக்கினாலன்றிக் குடிகட்குப் பாதுகாப்பும் தொழில் நடைபேறு மின்மையானும், கலைகளை வளர்க்கும் அரசர் நூல்வாயிலாய்ப் புகழப்படற்குரியராதலானும், அரசர் தொழிலைத் தலைமைபற்றிச் சொல்லவே குடிகள் தொழிலும் ஒருவாறு அதனுள் அடங்குதலானும், போர்த் தொழில் பொருளிலக்கணத்திற் சிறப்பாய்க் கூறப்பட்டதென்க.
சான்றோன் என்னும் தமிழ்நாட்டு மறவர் பெயரையும் Knight என்னும் மேனாட்டு மறவர் பெயரையும் ஒப்பு நோக்குக.
இதில் முக்கியமானவற்றைக் கூறி ஏனையவற்றை ‘அனை நிலை வகை’ யென்பதி லடக்கினார் தொல்காப்பியர். பண்டைத் தமிழாசிரியர் பலர் அறிவ(சித்த)ராயிருந்தமையின், அவரியற்றிய கலைநூல்களெல்லாம் ‘அறிவன் தேயமாய்’ அடங்கும்.
செய்யுளிலக்கணம்:— செய்யுளுறுப்புகளில் அடிப் படையானது அசை. மேலையாரிய மொழிகளிலெல்லாம், அசை வகுப்பு அசையழுத்தத்தைப்(Accentuation of syllables)ப் பொறுத்தது. அங்கு அசைகள் எடுப்பசை (Arsis – accented syllable) படுப்பசை (Thesis-unaccented syllable) என இரண்டாக வகுக்கப்பெறும். வடமொழியில் லகு குரு என்னும் பாகுபாடும் இம் முறை யொட்டியதே. தமிழிலோ, ஆரிய மொழிகளிற்போல எளிய முறையில் ஒவ்வோ ருயிரெழுத்தாய்ப் பிரியாமல், எழுத்துகள் தனித்தொலிப்பதும் இணைந்தொலிப்பதும்பற்றி, நேரசை நிரையசையென்றும், அவை குற்றியலுகரத்தொடு கூடிவருதல் பற்றி, நேர்பு அசை நிரைபு அசை என்றும் நான்காக வகுத்தனர். இவற்றுள் முன்னவை இயலசை; பின்னவை உரியசை.
செய்யுட்களில் வெண்பா, கலிப்பா என்னும் பாக்களும் அவற்றின் வகைகளும் பிறமொழிகட்கில்லை.
செப்பலோசைக்கு வெண்பாவும், அகவலோசைக்கு ஆசிரியமும் துள்ளலோசைக்குக் கலிப்பாவும், தூங்கலோசைக்கு வஞ்சியும் சிறந்தனவென்று கண்டுபிடித்ததும், அகவலை நூற்பாவிற்கும், கலியையும் அதன் வேறுபாடாகிய பரிபாடலையும் அகப்பொருட்கும், அம்போதாங்கவொத் தாழிசைக்கலி, கொச்சக வொருபோகு முதலிய கலிவகைகளைக் கடவுள் வாழ்த்திற்கும் மருட்பாவைக் கைக்கிளைக்கும் உரிமையாக்கினதும், தமிழரின் சிறந்த மதிநுட்பத்தையும் நுண்ணிய செவிப்புலனையுங் குறிப்பனவாகும். செப்பல் – விடையிறுத்தல். அகவல் – ஒருவரை விளித்துக் கூறல். கலிப்பாவின் சிறப்பைக் கலித்தொகையிற் கண்டறிக.
எப்பொருளுக்கும் ஏற்ற ஓசையிற் செய்யுள் செய்வதும், பலவகை வண்ணங்களிற் பாடுவதும், சொற்செறிவும், தமிழுக்கே சிறப்பாயுரியன. தமிழ் யாப்புமுறை மிகமிக விரிவானது.
தமிழ்ச் செய்யுள்களில் மிகச் சிறந்தது கலிப்பாவாகும். அதன் வகை யிரண்டற்கு இங்குக் காட்டுத் தருகின்றேன்.
(திருமால் வாழ்த்து)
(1) அம்போதரங்க வொத்தாழிசைக்கலி
தரவு
“கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக்
கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிறும் வாறுளைஇ
யழல்விரி சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத்
தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க
வார்புனலி னிழிகுருதி யகலிட முடனனைப்பக்
கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்;
தாழிசை 1
முரசதிர வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப்
புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்ல
ரடியோடு முடியிறுப்புண் டயர்ந்தவ ணிலஞ்சேரப்
பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ; 2
கலியொலி வியனுலகங் கலந்துட னனிநடுங்க
வலியிய லவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு
மாணாதா ருடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச்
சேணுய ரிருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ; 3
“படுமணி யினநிரைகள் பரந்துட னிரிந்தோடக்
கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறு
வெரினொடு மருப்பொசிய வீழ்ந்துதிறல் வேறாக
வெருமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் னிகலாமோ;
பேரெண்
இலங்கொளி மரகத வெழின்மிகு வியன்கடல்
வலம்புரித் தடக்கை மாஅ னின்னிறம்;
விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்
பொருகளி றட்டோய் புரையு நின்னுடை;
சிற்றெண்
கண்கவர் கதிர்மணி கனலுஞ் சென்னியை;
தண்சுட ருறுபகை தவிர்த்த வாழியை;
ஒலியிய லுவண மோங்கிய கொடியினை;
வலிமிகு சகட மாற்றிய வடியினை:
இடையெண்
“போரவுணர்க் கடந்தோய்நீ; புணர்மருதம் பிளந்தோய்நீ; நீரகல மளந்தோய்நீ; நிழறிகழைம் படையோய்நீ;
அளவெண்
ஊழிநீ; உலகுநீ; உருவுநீ; அருவுநீ
ஆழிநீ; அருளுநீ; அறமுநீ; மறமுநீ
தனிச்சொல்
எனவாங்கு;
சுரிதகம்
“அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன்
றொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற்
கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன்.”
(தோழி தலைவனை வரைவுகடாயது.)
(2) வண்ணக வொத்தாழிசைக்கலி
தரவு
“விளங்குமணிப் பசும்பொன்னின் விசித்தமைத்துக் கதிர்கான்று
துளங்குமணிக் கனைகழற்காற் றுறுமலர் நறும்பைந்தார்
பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றுங்
குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண்
மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கு மல்லார்க்கும்
தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரகேள்;
தாழிசை 1
“காட்சியாற் கலப்பெய்தி யெத்திறத்துங் கதிர்ப்பாகி
மாட்சியாற் றிரியாத மரபொத்தாய் கரவினாற்
பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய
வணிநலந் தனியேவந் தருளுவது மருளாமோ; 2
“அன்பினா லமிழ்தளைஇ யறிவினாற் பிறிதின்றிப்
பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப்
பெருவரைத்தோ ளருளுதற் கிருளிடைத் தமியையாய்க்
கருவரைத்தோள் கதிர்ப்பிக்குங் காதலுங் காதலோ; 3
“பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும்
தேங்காத காவினையுந் தெளியாத விருளிடைக்கட்
குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் றமியையாய்த்
தடமலர்த்தா ரருளுநின் றகுதியுந் தகுதியோ;
அராகம்
“தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்;
போதுறு நறுவிரை புதுமலர் தெரிதரு கருநெய்தல் விரிவன கழி;
தீதுறு திறமறு கெனநனி முனிவன துணையொடு பிணைவன துறை;
மூதுறு மொலிகலி நுரைதரு திரையொடு கடிதொடர் புடையது கடல்;
நாற்சீரீரடி யம்போதரங்கம்
கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனா
லிடுங்கழி யிராவருதல் வேண்டாமென் றிசைத்திலமோ;
கருநிறத் துறுதொழிற் கராம்பெரி துடைமையால்
இருணிறத் தொருகானி லிராவார லென்றிலமோ ;
நாற்சீரோரடி யம்போதரங்கம்
நாணொடு கழிந்தன்றாற் பெண்ணரசி நலத்தகையே;
துஞ்சலு மொழிந்தன்றாற் றொடித்தோளி தடங்கண்ணே;
அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே;
நயப்பொடு கழிந்தன்றா னனவது நன்னுதற்கே;
முச்சீரோரடி யம்போதரங்கம்
அத்திறத்தா லசைந்தன தோள்;அலர்தற்கு மெலிந்தனகண்;
பொய்த்துரையாற் புலர்ந்தது முகம்; பொன்னிறத்தாற் போர்த் தனமுலை;
அழலினா லசைந்தது நகை;அணியினா லொசிந்த திடை;
குழலினா னிமிர்ந்தது முடி;குறையினாற் கோடிற்று நிறை;
இருசீரோரடி யம்போதரங்கம்
“உட்கொண்ட தகைத்தொருபால்;உலகறிந்த வலத்தொருபால்;
கட்கொண்ட றுளித்தொருபால்;கழிவெய்தும் படித்தொருபால்;
பரிவுறூஉந் தகைத்தொருபால்;படிறுறூஉம் பசப்பொருபால்;
இரவுறூஉந் தகைத்தொருபால்;இளிவந்த வெளிற்றொருபால்;
மெலிவுறூஉந் தகைத்தொருபால்;விளர்ப்புவந் தடைந்தொருபால்;
பொலிவுசென் றகன்றொருபால்;பொறைவந்து கூர்ந்தொருபால்;
காதலிற் கதிர்ப்பொருபால்;கட்படாத் துயரொருபால்;
ஏதில்சென் றணைந்தொருபால்;இயனாணிற் செறிவொருபால்;
தனிச்சொல்
“எனவாங்கு :
சுரிதகம்
“இன்னதிவ் வழக்க மித்திர மிவணலம்
என்னவு முன்னாட் டுன்னா யாகிக்
கலந்தவ ணிலைமை யாயினு நலந்தகக்
கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக்
கற்பொடு காணியம் யாமே
பொற்பொடு பொலிகநின் புணர்ச்சி தானே.”
வடமொழியிலுள்ள உத்தம் முதல் உற்காதம் வரையுள்ள 26 சந்தங்களும்; நிகர்த், புரிக், விராட் முதலிய அளவழிச் சந்தங்களும்; மண்டிலம் (விருத்தம்) என்னும் இனயாப்புள் அடங்கும்.
தமிழ்ச்செய்யுட்கள் பா, பாவினம் என இருவகைப்படும். அவற்றுள், பா வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு. பரிபாடல் கலியின் திரிபு. மருட்பா முதலிரு பாக்களின் கலவை. பாவினம், துறை, தாழிசை, மண்டிலம் என மூன்று. இவை ஒவ்வொரு பாவிற்கு முரியன. மண்டிலத்தைப் பிற்காலத்தார் விருத்தம் என்னும் வட சொல்லாற் குறித்ததுடன், வடமொழி யாப்பாகவுங் காட்டினர். இதன் விளக்கத்தைத் தமிழ்ப் பொழிலில் யான் வரைந்துள்ள ‘பாவினம்’ என்னுங் கட்டுரையிற் கண்டுகொள்க.
ஒரு மொழியின் வடிவம் உரைநடை, செய்யுள் என இரண்டு. அவற்றுள் செய்யுள் சிறந்தது. செய்யுளிற் சிறந்தவர் தமிழர். முற்காலத்தில் தமிழ்ப்புலவர் உரையாட்டெல்லாம் செய்யுளாகவே யிருந்தன. கலைகளெல்லாம் பெரும்பாலும் செய்யுளிலேயே எழுதப்பட்டன. அகராதி (நிகண்டு) கூடச் செய்யுளி லெழுதப்பட்டது. பல்வகைத் தொழிலாளரும் செய்யுளியற்றுந் திறமையுடையவராயிருந்தனர். முன்னைய பயிற்சியும் ஊக்கலுமிருப்பின், இக்காலத்தும் கடும்பாவலர் (ஆசுகவிஞர்) தோன்றலாம்.
செய்யுளைப் பிறமொழியாரெல்லாம் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என அறுவகையாயே யாராய்ந்தார்; தமிழரோ இருபத்தாறு வகையா யாராய்ந்தார். அவ்வகை யாவன:—
“மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ
. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .
ஆறுதலை யிட்ட வந்நா லைந்தும்
. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .
நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே.”
(தொ.செ.1)
(1) “மாத்திரை யென்பது, எழுத்திற்கோதிய மாத்திரைகளைச் செய்யுள் விராய்க்கிடக்கும் அளவை யென்றவாறு….(2) எழுத்தியல்வகை யென்பது, மேற்கூறிய எழுத்துகளை இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு.(3) அசைவகை யென்பது அசைக் கூறுபாடு; அவை இயலசையும் உரியசையுமென இரண்டாம்.(4) யாத்தசீர் என்பது, பொருள்பெறத் தொடர்ந்து நிற்குஞ் சீரென்றவாறு.(5) அடியென்பது, அச்சீர் இரண்டும் பலவுந் தொடர்ந்தாவதோர் உறுப்பு.(6) யாப்பு என்பது, அவ்வடிதொறும் பொருள் பெறச் செய்வதொரு செய்கை.(7) மரபு என்பது காலமு மிடனும்பற்றி வழக்குத் திரிந்தக் காலுந் திரிந்தவற்றுக்கு ஏற்ப வழுப்படாமைச் செய்வதோர் முறைமை.(8) தூக்கு என்பது, பாக்களைத் துணித்து நிறுத்தல்.(9) தொடைவகை யென்பது, தொடைப்பகுதி பலவு மென்றவாறு.(10) நோக்கு என்பது, மாத்திரை முதலாகிய உறுப்புகளைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல்.(11) பா என்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாட மோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை.(12)அளவியல் என்பது, அப் பா வரையறை.(13) திணை யென்பது, அகம் புறமென்று அறியச் செய்தல்.(14) கைகோள் என்பது, அவ்வத்திணை யொழுக்க விகற்பம் அறியச் செய்தல்…..(15) கூற்றுவகை யென்பது, அச் செய்யுள் கேட்டாரை இது சொல்லுகின்றார் இன்னாரென உணர்வித்தல்…(16) கேட்போர் என்பது, இன்னார்க்குச் சொல்லுகின்றது இதுவெனத் தெரித்தல்.(17) களன் என்பது, முல்லை குறிஞ்சி முதலாயினவும் இரவுக்குறி பகற்குறி முதலாயினவும் உணரச் செய்தல்….(18) காலவகை யென்பது, சிறுபொழுது பெரும் பொழுதென்னுங் காலப்பகுதி முதலாயின.(19) பயன் என்பது, சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச் செய்தல்.(20) மெய்ப்பாடு என்பது, சொற்கேட்டோர்க்குப் பொருள் கண்கூடாதல்.(21) எச்சவகை யென்பது, சொல்லப்படாத மொழிகளைக் குறித்துக்கொள்ளச் செய்தல்…(22) முன்னம் என்பது, உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோரும் தத்தம் வகையான் ஒப்பச்சொல்லுதற்குக் கருத்துப்படச் செய்தல். (23) பொருள் என்பது, புலவன் தான் தோற்றிக் கொண்டு செய்யப்படுவதோர் பொருண்மை.(24) துறைவகை என்பது, முதலும் கருவும் முறை பிறழ வந்தாலும் இஃது இதன்பாற்படுமென்று ஒரு துறைப்படுத்தற்கு ஏதுவாகியதோர் கருவி அச் செய்யுட்குளதாகச் செய்தல்…..(25) மாட்டு என்பது, பல்வேறு பொருட் பரப்பிற்றாயினும் அன்றாயினும் நின்றதனொடு வந்ததனை ஒரு தொடர் கொளீஇ முடித்துக் கொள்ளச் செய்தல். (26)வண்ணம் என்பது, ஒரு பாவின் கண்ணே நிகழும் ஓசை விகற்பம்.”[13]
இவற்றுள் கூற்று, கேட்போர், களன் முதலிய சில வுறுப்புகள் எல்லா மொழிகட்கும் பொதுவேனும், அவை செய்யுளுறுப்புகளிற் சேர்க்கப்பட்டதும், நோக்கு, திணை, துறை முதலிய பிறவுறுப்புகளும் தமிழுக்குச் சிறப்பாகும்.
மேற்கூறிய 26 உறுப்புகளையும் தொல்காப்பியத்திற் கண்டு கொள்க. இங்கு நோக்கு என்பதற்கு மட்டும் ஒரு காட்டுத் தருகின்றேன்.
“முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்
பரலவ லடைய விரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானங் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெரு கானங்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுற லஞ்சி
மணிநா வார்த்த மாண்வினைத் தேர
னுவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன்
கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்
போதவி ழலரி னாறு
மாய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே.” (அகம். 4)
“முல்லையென்னாது “வைந்நுனை” என்றதனான், அவை அரும்பியது அணித்தென்பது பெறப்பட்டது; சின்னாள் கழியின் வைந்நுனையாகாது மெல்லென்னுமாகலின். இல்லமும் கொன்றையும் மெல்லென்ற பிணியவிழ்ந்தன வென்றான், முல்லைக்கொடி கரிந்த துணை அவை முதல் கெடாது முல்லை யரும்பிய காலத்து மலர்ந்தமையின். இரலை மருப்பினை, ‘இரும்பு திரித்தன்ன மருப்பு’ என்றதூஉம், நீர் தோய்ந்தும் வெயிலுழந்த வெப்பந்தணிந்தில, இரும்பு முறுக்கிவிட்ட வழி வெப்பம் மாறா விட்டவாறுபோல வெம்பா நின்றன வின்னுமென்றவாறு. ‘பரலவ லடைய விரலை தெறிப்ப’ எனவே, பரல் படுகுழிதோறுந் தெளிந்து நின்ற நீர்க்கு விருந்தினவாகலாற் பலகாலும் நீர் பருகியும் அப் பரல் அவலினது அடைகரை விடாது துள்ளுகின்றன வென அதுவும் பருவந் தொடங்கினமை கூறியவாறாயிற்று. ‘கருவி வானங் கதழுறை சிதறி’ என்பதூஉம் பலவுறுப்புங் குறைபடாது தொக்கு நின்றன மேகந் தனது வீக்கத்திடைக் காற்றெறியப்படுதலின் விரைந்து துளி சிதறின வென்றவற்றையும் புதுமை கூறினாள்; எனவே, இவையெல்லாம் பருவந் தொடங்கி யணித்தென்றமையின் வற்புறுத்துதற்கு இலேசாயிற்று. ‘குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி’ என்பது, கொய்யாத உளை பல்கியும் கொய்த உளை பலகாலுங் கொய்ய வேண்டுதலுமுடைய குதிரை யென்றவாறு; எனவே, தனது மனப்புகழ்ச்சி கூறியவாறு. அத்துணை மிகுதி யுடைய குதிரை பூட்டின வாரொலி விலக்காது மணியொலி விலக்கி வாராநின்றான் அங்ஙனம் மாட்சிமைப்பட்ட மான் றோனாதலா னென்றவாறு. அதற்கென்னை காரணமெனின், ‘துணையொடு வதியுந் தாதுண் பறவை’ எனவே, பிரிவஞ்சி யென்றவாறு. பறவை நாவொலி கேட்பின் வண்டு வெருவுமாகலின் அது கேளாதிரு மணிநாவினை இயங்காமை யாப்பித்த மாண்வினைத் தோறும் வாராநின்றானென இவையெல்லாந் தலை மகள் வன்புறைக் கேதுவாயின. ‘கறங்கிசை விழவினுறந் தைக் குணாது, நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தள்.’ தெய்வமலை ஆகலான் அதனுளமன்ற காந் தளைத் தெய்வப் பூவெனக் கூறி, அவை போதவிழ்ந்தாற் போல அவர் புணர்ந்த காலத்துப் புதுமணங் கமழ்ந்த நின்கைத்தொடிகள் அவை அரியவாகிப் பிரிந்த காலத்துப் போன்று வடிவொத்து மனங்குறைபட்ட துணையேயால் அவர் பிரிந்து செய்த தன்மையினென, இதுவும் வன் புறைக்கே உறுப்பாயிற்று”[14]
அணியிலக்கணம் — அணியை முற்காலத் தமிழர் யாப் பினின்றும் பிரிக்கவில்லை. உவமையின் வேறுபாடுகளையும், எழுத்திலக் கணத்திலும் சொல்லிலக்கணத்திலுமுள்ள பல அமைதிகளையுமே பிற்காலத்தார் அணியிலக்கணமாகப் பிரித்துக் காட்டினர்.
“உவமை யென்னுந் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய வரங்கிற் கவினுறத் தோன்றி
யாப்பறி புலவ ரிதய
நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே.”[15]
“இனி, இவ் வோத்தினிற் (உவமவியல்) கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும், சொல்லதிகாரத்தினுள்ளுஞ் செய்யுளியலுள்ளும் சொல்லுகின்றன சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென இக்காலத்தாசிரியர் நூல் செய்தாருமுளர். அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணங் கூறப்படா; என்னை? வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன்றாகியும் வருந்தாங் காட்டிய இலக்கணத்திற் சிதையா வழியுமென்பது…..
“இனி, இரண்டுபொரு ளெண்ணியவற்றை வினைப்படுக் குங்கால் ஒருங்கென்பதோர் சொற்பெய்தல் செய்யுட்கு அணியென்ப. பிறவும் இன்னோரன்ன பலவுஞ் செய்யுட்கணியா மென்பது அவர் கருத்து. ஒருங்கேயென்பதேயன்றி மூன்று தாழிசையுள் மூன்று பொருள்கூறி, ‘எனவாங்கு’ என்பதொரு சொல்லான் முடிந்தவழியும் ‘எனவாங்கு’ என்பதோர் மொழி எனவென்பது ஓரலங்காரமெனல் வேண்டுமாகலான், அவ் வாறு வரையறுத்துக் கூறலமையாதென்பது. பிறவும் அன்ன:
“இனி, அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது அணி யென்பவாயிற் சாத்தனையுஞ் சாத்தனாலணியப்பட்ட முடியுந் தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல. அவ் வணியுஞ் செய்யுளின் வேறாகல் வேண்டுமென்பது.
இனி, செய்யுட்கு அணிசெய்யும் பொருட்படை எல்லாங் கூறாது சிலவே கூறி ஒழியின் அது குன்றக் கூறலாமென்பது.”[16]
உவமை தொல்காப்பியத்திலுள்ள உவமவியலில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன் வகைகளில் உள்ளுறை யுவமம் என்பது மிகச் சிறந்ததாகும். அதைத் தமிழர் அகப்பொருட் செய்யுள்களில் கையாண்டு வந்தனர். அது ஒரு நாட்டு வரணனையாய், அல்லது கருப்பொருட்டொழிலைக் கூறுவதாயமைந்து, அந்நாட்டரசனின் இயலையும் செயலையுங் குறிப்பாய்த் தெரிவிப்பதாகும். இது “மன்ன னெப்படி மன்னுயி ரப்படி” என்னும் நெறிமுறை பற்றியது. உள்ளுறுத் தியற்றப்படும் உவமம் உள்ளுறையுவமம்.
கா:
“வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயிற்கொண்ட
ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண்
டோங்குய ரெழில்யானைக் கனைகடங் கமழ்நாற்ற
மாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான்
வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர்
தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்லை
பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய
பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர.”
(கலித். 66)
“இதனுள், ‘வீங்குநீர்’ பரத்தையர் சேரியாகவும், அதன் கண் அவிழ்ந்த நீலப்பூக் காமச்செவ்வி நிகழும் பரத்தையராகவும், பகர்பவர், பரத்தையரைத் தேரேற்றிக்கொண்டுவரும் பாணன் முதலிய வாயில்களாகவும், அம் மலரைச் சூழ்ந்த வண்டு தலைவனாகவும், யானையின் கடாத்தை ஆண்டுறைந்த வண்டுகள்வந்த வண்டுக்கு விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற சேரிப்பரத்தையர் தமது நலத்தை அத் தலைவனை நுகர் வித்தலாகவும், கங்குலின் வண்டு முல்லையை ஊதுதல் இற்பரத்தையருடன் இரவு துயிலுறுதலாகவும், பண்டு மருவிய பொய்கையை மறத்தல் தலைவியை மறத்தலாகவும், பொருள் தந்து, ஆண்டுப் புலப்படக் கூறிய கருப்பொருள்கள் புலப்படக் கூறாத மருதத்திணைப் பொருட்கு உவமமாய்க் கேட்டோ னுள்ளத்தே விளக்கி நின்றவாறு காண்க.”
இலக்கியம்
தமிழிலக்கியத்தை இயல், இசை, நாடகம் என மூவகையாக வகுத்து, அவற்றை முத்தமிழ் என்றனர் முன்னோர்.
இயல்பாகவுள்ளது இயற்றமிழ்; அதனொடு அராகமும் தாளமும் சேர்ந்தது இசைத்தமிழ். இசைத்தமிழொடு ஆட்டஞ் சேர்ந்தது நாடகத்தமிழ்.
முத்தமிழில் ஒவ்வொன்றும் இலக்கணம், இலக்கியம் என இரு பிரிவுடையது. தொல்காப்பியம் போன்றது இயற்றமிழிலக்கணம்; மணிமேகலை போன்றது இயற்றமிழ் இலக்கியம். இசை நுணுக்கம் போன்றது இசைத்தமிழ் இலக்கணம்; தேவாரம் போன்றது இசைத்தமிழிலக்கியம். செயிற்றியம் போன்றது நாடகத்தமிழ் இலக்கணம்; சீகாழி அருணாசலக் கவிராயர் இயற்றிய இராமாயண நாடகம் போன்றது (ஆனால் உரையிடையிட்டது) நாடக இலக்கியம். அகத்தியம் முத்தமிழிலக்கணம்.; சிலப்பதிகாரம் முத்தமிழ் இலக்கியம் என்று சொல்லலாம்.
தமிழ்நாடக விலக்கியத்தைச் சிலர் ஆரிய மொழிகளிலுள்ள நாடகத் தொடர்நிலைச் செய்யுள் போன்றதாகக் கருதுகின்றனர். இசைப்பாட்டும் உரையுமாக அமைந்து நடித்தற்கேற்ற நிலையிலுள்ளதே தமிழ்நாடக விலக்கியமாகும்.
இலக்கணம் இலக்கியம் என்னுஞ் சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே.[17] இவை இலக்கு என்னும் பகுதியடியாய்ப் பிறந்து முறையே, அணம், இயம் என்னும் ஈறு பெற்றவையாகும். இலக்கு இலை. இலக்கித்தல் எழுதுதல் (சீவக. 180). இலக்கணம், இலக்கியம் என்பவற்றின் திரிபே, லக்ஷணம், லக்ஷியம் என்னும் வடசொற்கள், வடமொழியில் இலக்கணத்தைக் குறிக்கும் சொல் வியாகரணம் என்பது. செந்தமிழ்ச் சொற்களைத் திரித்து வடநூல்களில் வரைந்துகொண்டு அவற்றை வடசொல்லென்று வற்புரைப்பது ஆரிய வழக்கம். இலக்கணத்தைக் குறிக்க இலக்கணம் என்ற சொல்லன்றி வேறு சொல் தமிழில் இல்லை. இங்ஙனமே இலக்கியத்திற்கும். சிறந்த இலக்கணமும் இலக்கியமுமுடைய தென்மொழிக்கு அவற்றைக் குறிக்கும் சொல் இல்லையென்றால், அறிஞர் நம்ப முடியுமா?
இசைத்தமிழ் — Musical Literature
இசையாவது ஓசை. அது பாட்டிற்குரிய இன்னிசையைச் சிறப்பாயுணர்த்திற்று. இன்னிசை = சங்கீதம். (இன்னிசையரங்கு = சங்கீதக் கச்சேரி).
தமிழ் தலைக்கழகக் காலத்தில் இயலிசை நாடகமென முப்பிரிவா யிருந்ததென்பது, அகத்தியம் முத்தமிழிலக்கண நூல் என்பதால் அறிகின்றோம். தொல்காப்பியம் இயற்றிமிழ் இலக்கண நூலாயினும், இசைத்தமிழ்க் குறிப்புகள் ஆங்காங்கு சிலவுள. அவையாவன :
“அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்”
(எழு.33)
“…..செய்தி யாழின் பகுதியொடு தொகைஇய
அவ்வகை பிறவும் கருவென மொழிப”
(அகத்.20)
“துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”
(களவு. 1)
“பாணன் பாடினி…. வாயில்கள் என்ப.”
(கற். 52)
“…. பாட்டின் இயல பண்ணத்தி யியல்பே”
(செ. 173)
என்பன.
இசை எல்லா நாட்டிற்கும் பொதுவேனும், தமிழர் அதில் தலைசிறந்திருந்தமைபற்றி அதை மொழிப்பகுதியாக்கினர். இழவு வீட்டில் அழுவதுகூட அராகத்தோடு அழுவது தமிழர் வழக்கம். அராகத்தோடு அழாவிட்டால், அழத் தெரியாதவராக எண்ணப்படுவர்.
இசைக்கு உறுப்பாவன அராகம், தாளம் என இரண்டு. அராகம் அர் என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து இசையைக்குறிக்கும் சொல். அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா வுறுப்புக்களில் ஒன்றற்குப் பெயராயமைந்ததும் இச் சொல்லே. அரங்கன் என்பது ரங்கன், இரங்கன் என்று வழங்கினாற்போல, அராகம் என்பதும் ராகம், இராகம் என வழங்குகின்றதென்க.
தாளம் என்பது பாடும்போது காலத்தைத் துணிக்கும் துணிப்பு. தாள் = கால். தாள் – தாளம். பாடும்போதும் ஆடும் போதும், காலையாவது கையையாவது, அசைத்தும் தட்டியும் தாளத்தைக் கணிப்பது இன்றும் வழக்கம். தாளத்திற்குப் பாணி கொட்டு என்றும் பெயர். பாணி = கை. பண்ணுவது பாணி. ஒ.நோ. செய்வது செய். செய் (தெ.) = கை. செய்-(சை)-கை (த.) (செய்கை – சைகை.) பாணி கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு உறுப்புகளையுடையது. கொட்டு அமுக்கு தல்; அதற்கு மாத்திரை 1/2. அசை தாக்கியெழுதல்; அதற்கு மாத்திரை 1. தூக்கு தாக்கித்தூக்குதல்; அதற்கு மாத்திரை 2. அளவு தாக்கினவோசை 3 மாத்திரை பெறுமளவும் வருதல். “அரை மாத்திரையுடைய ஏகதாள முதல் 16 மாத்திரையுடைய பார்வதிலோசன மீறாக 41 தாளம் புறக்கூத்திற்குரிய” என்று அடியார்க்குநல்லார் கூறுகிறார். இக் கூற்றிலுள்ள தாளப் பெயர்கள், தமிழ்ப் பெயர்க்குப் பதிலாய்ப் புகுத்தப்பட்ட வட மொழிப் பெயர்கள்.
அராகம் இசை (சுரம்), பண், பாட்டு என முப்பிரிவையுடையது.
சுரம் மொத்தம் ஏழு, அவை ஏழிசை யெனப்படும். ஏழிசைகளாவன :—
தென்மொழிப் பெயர் | வடமொழிப் பெயர் | அடையாள
வெழுத்து |
(1) குரல் | ஷட்ஜமம் | ச |
(2) துத்தம் | ரிஷபம் | ரி |
(3) கைக்கிளை | காந்தாரம் | க |
(4) உழை | மத்திமம் | ம |
(5) இளி | பஞ்சமம் | ப |
(6) விளரி | தைவதம் | த |
(7) தாரம் | நிஷாதம் | நி |
ஏழிசைகளில் குரலும் இளியும் தவிர, ஏனையவைந்தும் இவ்விரண்டாகப் பகுக்கப்படுவன. இவ் விருசார் சுரங்களும், முறையே, பகாவிசை (ப்ரக்ருதிஸ்வரம்), பகுவிசை (விக்ருதி ஸ்வரம்) எனக் கூறப்படும்.
எழுசுரங்களும் நுட்பப் பிரிவால் 12 ஆவதும் 24 ஆவதும் 48 ஆவதும் 96 ஆவதும் ஓர் இசையை நான் காகக் கருணாமிர்த சாகரத்துட் (பக். 860 – 62) கண்டு கொள்க. தமிழர் பகுத்துணர்ந்தது அவரது நுண்ணிய செவிப் புலனைக் காட்டும்.
ஏழிசைகளும் சேர்ந்த கோவை ஒரு நிலை(octare) யெனப்படும். இதை ஸ்தாய் என்று மொழிபெயர்த்தனர் வடநூலார். ஸ்தா= நில். (நிலை என்பதை நிலையி என்று வழங்குவது நலம்.)
மாந்தன் தொண்டையிலும், ஓர் இசைக்கருவியிலும் அமையக் கூடிய 3 நிலையிகள் வலிவு, மெலிவு, சமன் என்று கூறப்பட்டன. இப்போது, அவை, முறையே, தாரம், மந்தரம், மத்திமம் என்று வடசொல்லால் வழங்குகின்றன.
பாட்டுப் பாடும்போதும் ஒரு கருவியை இயக்கும் போதும் அடிமட்டமாக வைத்துக்கொள்ளும் சுரம் கேள்வி யெனப்படும். இதை ச்ருதி (சுதி) என்று மொழிபெயர்த்துக் கொண்டனர் வடநூலார். ச்ரு = கேள்,
கேள்விச் சுரங்கள் மொத்தம் 24 என்று தமிழ்நூல் களும், 22 என்று வடநூல்களும் கூறுகின்றன. தமிழ்நூற் கூற்றே சரியானதென்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தமது கருணாமிர்த சாகரத்துள் மிகத் திறமையாய் விளக்கியிருக்கிறார்கள். என் இசையாசிரியர் காலஞ்சென்ற மன்னார்குடி யாழாசிரியர் இராஜகோபாலையரவர்களும், தமிழ்க் கூற்றே சரியானதென்று ஒப்புக்கொண்டார்கள்.
ஏழு சுரங்களின் அடையாளவெழுத்துகளான ச ரி க ம ப த நி என்பவை, தமிழில் ஏற்பட்ட குறிகளே யென்றும், அவை குறிக்குஞ் சொற்கள் இப்போது வழக்கிறந்துவிட்டன வென்றும் சில காரணங் காட்டிக் கூறுகின்றனர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள்.[18]இது எங்ஙன மிருப்பினும், ஆரியர் வருமுன்னமே தமிழர்க்கு இசைத் தமிழ் இருந்ததென்பதும், ஆரியர் தமிழரிடமிருந்தே இசையைக் கற்றனர் என்பதும் மட்டும் மிகத் தேற்றமாம்.
ச ரி க ம ப த நி என்பவற்றிற்குப் பதிலாக, தமிழ்ச் சுரப்பெயர்களின் முதலெழுத்துக்களையே, கு து க உ இ வி த என்று வைத்துக் கொள்ளினும், அன்றி வேறு இனிய இசைவான எழுத்துகளை (க ச த நி ப ம வ) வைத்துக் கொள்ளினும், ஓர் இழுக்குமில்லை.
பண்ணாவது இனிமையைத் தருவதும், தனியோசையுடையதும் ஆலாபித்தற் கிடந்தருவதுமான, ஒரு சுரக்கூட்டம். அது நால்வகைப்படும். அவை பண் (7 சுரம்), பண்ணியம் (6 சுரம்), திறம் (5 சுரம்), திறத்திறம் (4 சுரம்) என்பன. இவற்றையே, முறையே, சம்பூரணம், ஷாடவம், ஔடவம், சுவராந்தம் என வடசொல்லால் தற்காலத்தில் வழங்குகின்றனர். பண்ணை இக்காலத்தில் ராகம் என்கின்றனர். அது அராகம் என்பதன் முதற்குறை.
பண்களைத் திரிக்கும் முறைகளில் மிக விரிவானது பாலையெனப்படும். அது ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோண (முக்கோண)ப் பாலை, சதுர (நாற்கோண)ப் பாலை என நால்வகை. இந்நூல்வகையும், ஏழிசைகளையும் முறையே 12 ஆகவும் 24 ஆகவும் 48 ஆகவும் 96 ஆகவும் பகுக்கும் என்பர். அவற்றுள், ஆயப்பாலையினின்று, செம்பாலைப்பண் (தீர சங்கராபரணம்), படுமலைப் பாலைப்பண் (கரகரப்பிரியா), செவ்வழிப் பாலைப்பண் (தோடி), அரும்பாலைப்பண் (கல்யாணி), கோடிப் பாலைப்பண் (அரிகாம்போதி), விளரிப் பாலைப்பண் (பைரவி), மேற்செம் பாலைப்பண் (சுத்த தோடி) என்னும் ஏழுபண்கள் பிறக்கும்.
பெரும்பண்கள் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என நால்வகைப்படும். இவை யாழெனவும் பண்ணெனவும் பெயர் பெறும். ஏழ்—யாழ் = ஏழிசையுடையது.
இனி குல(ஜாதி)ப் பண்கள் என நான்குண்டு. அவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்பன. இவற்றைப் பெரும்பண்களோடுறழப் பதினாறாம். இவற்றை யெல்லாம் கருணாமிர்த சாகரத்துட் கண்டுகொள்க.
பிங்கலத்தில் 103 பண்கள் கூறப்பட்டுள்ளன. தேவாரத்தில் 24 பண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. “நரப்படைவாலு ரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண் ணூற்றொன்றாகிய ஆதியிசைகள்” என்று அடியார்க்கு நல்லார் கூறுவதால் (சிலப். ப. 109) பண்டைத் தமிழிசையின் பரப்பை ஒருவாறுணரலாம்.
குறிஞ்சி, நாட்டை, கொல்லி, தக்கேசி, யாழ்முறி, நேரிசை, செந்துருத்தி, செவ்வழி, புறநீர்மை முதலியவாகப் பண்களுக்குரிய தனித்தமிழ்ப் பெயர்களையெல்லாம் மறைத்து, இடுகுறியான வடமொழிப் பெயர்களை வழங்கி இசைத்தமிழைக் கெடுத்தனர் ஆரியர்.
இசைக்கருவிகள் தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி என நால்வகைப்படும். வாய்ப்பாட்டை மிடற்றுக் கருவியென ஒரு கருவியாகக் கூறுவர் சிலர்.
பண்ணைப் பாடும்போது, ஏற்றியும் இறக்கியும் அலுக்கியும் இனிமை வளர்ப்பது ஆளத்தி யெனப்படும். அது இக்காலத்தில். ஆலாபனை, ஆலாபனம் என்னப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் வேர் ஆல் என்னும் தமிழ்ச்சொல்லே. ஆலுதல் சுற்றுதல், ஆடுதல். ஆலத்தி என்னுஞ் சொல்லை நோக்குக.
ஆரோசை, அமரோசை, அலுக்கு என்பவற்றுக்குப் பதிலாக, இப்போது, முறையே ஆரோகணம், அவரோகணம், கமகம் என்ற வடசொற்கள் வழங்குகின்றன.
பாட்டென்பது பண்ணுக்கமைந்த செய்யுள். பண்ணென்பது தனியிசை. இசையொடு சொல்லும் சேர்ந்தது பாட்டு. பாட்டை இன்று கீர்த்தனை என்பர். கடவுளின் கீர்த்திபற்றியது கீர்த்தனை.
சீர்த்தி — கீர்த்தி. “சீர்த்தி மிகுபுகழ்” என்பது தொல்காப்பியம். சீர் + தி = சீர்த்தி. கீர்த்தனை திருப்புகழ் என்றாற் போல்வது. கீர்த்தனைச் செய்யுள் கொச்சகக்கலி, அதன் திரிபான பரிபாடல் என்பவற்றினின்றும் பிறந்ததாகும்.
தோற்கருவிகள் “பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை,கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை” முதலியன.
இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலைமுழவு என ஏழு வகைப்படும்; மீண்டும் பாடன்முழா (கீதாங்கம்), நட முழா (நிருத்தாங்கம்), பொதுமுழா (உபயாங்கம்) என மூவகைப்படும். இக் கருவிகளை யெல்லாம் செய்தவரும் இயக்கினவரும் தனித் தமிழரேயன்றி ஆரியரல்லர்.
துளைக்கருவி குழல், நாகசுரம் முதலியன. பாம்பாட்டியின் குழலிலிருந்து தோன்றினமையால் நாகசுரம் எனப் பட்டது.
நரப்புக்கருவி பலவகைப்படும். அவற்றுள் ஐந்து பெருவழக்கானவை. அவை பேரியாழ் (21 நரம்பு), மகரயாழ் (19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு). செங்கோட்டியாழ் (7 நரம்பு), சுரையாழ் (1 நரம்பு) என்பன.
நரப்புக் கருவிகளெல்லாம் பண்டைக்காலத்தில் யாழ் என்றே கூறப்பட்டன. இப்போதுள்ள வீணை செங்கோட்டி யாழாக அல்லது அதன் திருத்தமாக இருத்தல் வேண்டும். செங்கோடு நேரான தண்டி. செங்கோல் என்பதை இதனொடு ஒப்புநோக்குக.
“கணைகொடிதி யாழ்கோடு செவ்விது”[19] என்று கூறியது, வளைந்த பிற யாழ்களை நோக்கியேயன்றிச் செங்கோட்டியாழை நோக்கியன்று.
இசைத்தமிழ் வழக்கற்றுப்போன பிற்காலத்தில், கம்பர் முதலியோர் யாழும் வீணையும் வேறாகக் கருதினர். யாழ் என்னும் தென்சொற்குப் பதிலாகவே, வீணையென்னும் வடசொல் வழங்கி வருகின்றதென்க.
இப்போது ப்விடில் (Fiddle) என்று சொல்லப்படும் மேனாட்டிசைக்கருவி, பண்டு கீழ்நாட்டிலிருந்தே சென்றதாகத் தெரிகின்றது. தமிழ்நாட்டில் அதற்கு வழங்கும் பெயர் கின்னரி அல்லது கின்னரம் என்பது.
“கின்னரி வாசிக்குங் கிளி” என்றார் காளமேகரும். தென்னாட்டில், யாழ்பயின்ற ஒரு வகுப்பார் யாழோர் எனப்பட்டது போல, கின்னரம் பயின்ற ஒரு வகுப்பார் கின்னரர் எனப்பட்டனர்போலும்! யாழோரும் (கந்தருவர்) கின்னரரும் பதினெண்கணத்தைச் சேர்ந்தவராகப் புராணங் கூறும்.
யாழுறுப்புகள் வாய், கவைக்கடை, கோடு, மாடகம், நரம்பு, திவவு, பத்தர், போர்வை, ஒற்று, தந்திரிகரம், ஆணி முதலியன. இவற்றுள், மாடகம், ஒற்று, தந்திரிகரம், ஆணி என்பவற்றால் வீணை போன்றிருந்த ஒரு யாழ் அனுமானித் தறியப் படும்.
யாழில் இசையமைக்கும் வகை பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும் போக்கு என எட்டு. யாழை இயக்கும் (வாசிக்கும்) வகை வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என எட்டு.
நின்ற நரம்பு(ச), இணை நரம்பு (ப), கிளை நரம்பு (ம), நட்பு நரம்பு (க), பகை நரம்பு என்பன நரம்புகட்கிடையுள்ள தொடர்பைக் காட்டும் குறியீடுகள்.
செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கூடம் என்பன நரம்புகளின் குற்றங்களைக் காட்டும் குறியீடுகள். யாழ்நரம்பின் குற்றங்களைச் சீவக சிந்தாமணியிற் காந்தருவதத்தை யிலம்பகத்திற் கண்டு கொள்க.
இயம் என்பது வாத்தியத்திற்குப் பொதுப்பெயர். இயவர் = வாத்தியக்காரர்.
மேளம் என்பது ஒருவகைப் பறையையும், நிலையித் திட்டத்தை (Scale)யும் குறிக்கும் செந்தமிழ்ச்சொல்.
பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தொழில் நடாத்தி வந்தவர் பாணர் என்னும் பறையர் வகுப்பினர். “பாண்சேரிப் பற்கிளக்கு மாறு” என்பது பழமொழி. 11ஆம் நூற்றாண்டுவரை பாணரே தமிழ்நாட்டில் இசைத்தலைமை வகித்து வந்தமை, நம்பியாண்டார் நம்பியாலும் அபயகுல சோழனாலும் தில்லையம்பலத்திற் கண்டெடுக்கப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கட்கு இசை வகுக்குமாறு, திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபினளான ஒரு பெண் அமர்த்தப்பட்டமையால் விளங்கும்.
ஆரியப் பிராமணர் இசை பயிலக்கூடாதென்று பண்டு ஒரு விலக்கிருந்தது. மனுதர்ம சாஸ்திரம் 4ஆம் அத்தியாயம் 15ஆம் விதியில், பிராமணர் “பாட்டுப்பாடுவது, கூத்தாடுவது ….. இப்படிக்கொத்த சாத்திர விருத்தமான கருமத்தினால் பொருளைத் தேடிக்கொள்ளக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.
வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி, வேத ஒழுக் கத்தினின்றும் தவறியதால், சில பார்ப்பனர் விலக்கப்பட்டு ஓர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தி சிலப்பதிகாரத்தில் (புறஞ்சேரி. அ. 38, 89),
“வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூன் மார்பர் உறைபதி”
என்னும் அடிகளிற் குறிக்கப்படுகின்றது.
சாமவேத (சுருக்கம்) மொழிபெயர்ப் பாசிரியரான ஜம்புநாதன் என்பவர், அவ் வேதத்தைச் சரளி முறைப்படி பாடத் தொடங்கியது பிற்காலமென்று குறித்துள்ளார்.[20]
வேத மந்திரங்கள் மன்றாட்டாதலின், இசைத்தமிழ்ப் பாட்டுப் போல ஆலாபித்துப் பாடப்பட்டிருக்க முடியாது.
பாட்டுத்தொழிலால் மதிப்பு, வருவாய் முதலிய பயன்களைக் கண்ட பார்ப்பனர், பிற்காலத்தில் அத் துறையில் இறங்கிப் பிறப்பிலுயர்வு தாழ்வு வகுக்கும் குலமுறையமைப்பால், பாணர்க்குப் பிழைப்பில்லாது செய்துவிட்டனர். அவர் முதலாவது நரப்புக்கருவியும், பின்பு துளைக்கருவியும் பயின்று இதுபோது தோற்கருவியும் தொடங்கியிருக்கின்றனர்; ஆயினும், புல்லாங்குழல் மிருதங்கம் போன்ற மதிப்பான கருவிகளையே பயில்வர்.
பல நூற்றாண்டுகளாகப் பார்ப்பனர் இசைபயின்று அதைக் குலத்தொழில்போல ஆக்கிக்கொண்டமையாலேயே, தியாகராஜ ஐயர் என்னும் பார்ப்பனர் தலைசிறந்த இசைப் புலமை வாய்க்கப் பெற்றனர் என்பதை அறிதல் வேண்டும்.
நாடகத்தமிழ்—(Dramatic Literature)
“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்” [21]
“கூத்தர் விறலியர். . . . . வாயில்கள் என்ப” [22]
என்பவற்றால், தொல்காப்பியர் காலத்து நாடகமுண்மை யறியப்படும்.
நாடகம் என்பது நடி என்னும் பகுதியடியாய்ப் பிறந்த தொழிற்பெயர். நடி + அகம் = நாடகம். (முதனிலை திரிந்து ஈறுபெற்ற தொழிற்பெயர்). நடி + அம் = நடம் -—நட்டம். நட்டம்—நிருத்தம் (வ). ஒ.நோ : வட்டம் — விருத்தம் (வள் + தம் = வட்டம்). நாடகம் கதை தழுவிவரும் கூத்து. நடம் நட்டம் என்பன தனிக்கூத்தும் பாட்டிற்கேற்ற அபிநயமுள்ளதும். நட்டம் பயிற்று பவன் நட்டுவன். நடம் பயில்பவள் கணிகை. நாடகமாடுபவள் நாடகக் கணிகை. தாளத்தைக் கணித்தாடுவதால் கணிகை யென்று பெயர். கணிகையை இக்காலத்தில் தாசியென்பர். தாசி = அடியாள், தேவடியாள். தனிக்கூத்திற்குத் தாண்டவம் என்னும் பெயர். தாண்டியாடுவது தாண்டவம். தாண்டுதல் — குதித்தல்.
நடி என்பது நட என்னும் சொல்லின் திரிபு. முதன்முதல் நடித்தது ஒருவனைப்போல் நடந்து காட்டியதே. நட என்னும் சொல்லே “அம்” ஈறுபெற்று நடம் என்றானது எனினும் பொருந்தும். நடக்கிற இடம் என்பதை நடமாடுகிற இடம் என்று சொல்லும் வழக்கை நோக்குக.
நடத்தல் என்பது, காலால் நடத்தலை மட்டுமன்றி ஒழுகும் வகையையுங் குறிக்கும். நடக்கை, நன்னடக்கை முதலிய வழக்குகளை நோக்குக.
நாடகத்தைத் தனிக்கூத்து, பாட்டொடு கூடியது, கதை தழுவியது என மூன்றாய் வகுக்கலாம்.
நாடகத்திற்குக் கூத்து என்றும் பெயர். கூத்து என்பது முதலாவது ஆட்டத்தை மட்டும் உணர்த்தி, பின்பு கதை தழுவிய நாடகத்தையும் உணர்த்துகின்றது. குதித்தாடுவது கூத்து. கூத்தாடுகிறான், ஆனந்த (உவகை)க் கூத்தாடினான் என்னும் வழக்குகளை நோக்குக.
நாடகத்தை முன்னோர் (1) வசைக்கூத்து, புகழ்க்கூத்து, (2) வேத்தியற்கூத்து, பொதுவியற்கூத்து, (3) வரிக்கூத்து, வரிச்சாந்திக் கூத்து, (4) சாந்திக்கூத்து, வினோத (இன்ப)க் கூத்து, (5) ஆரியக் கூத்து, தமிழக்கூத்து, (6) இயல்புகூத்து, தேசிகக்கூத்து, (7) அகக்கூத்து, புறக்கூத்து எனப் பலவகையில் இவ்விரண்டாக வகுத்தனர்.
இனி, உலகியற்கூத்து, தேவியற்கூத்து என வகுக்கவும் இடமுண்டு. தேவியலாவன அரங்கேற்றுகாதையிற் கூறப்படும் 11 ஆடல்கள் போல்வன. சாந்திக்கூத்தின் வகை :
(1) சொக்கம் – தனிநடம் (சுத்தநிருத்தம்).
(2) மெய் – தேசி, வடுகு, சிங்களம்.
(3) அவிநயம் – கதைதழுவாது பாட்டின் பொருளுக்கேற்ப வல்லபஞ்செய்வது.
(4) நாடகம் – கதை தழுவிவருவது.
அவிநயம் (அபிநயம்) என்னுஞ்சொல் ஓர் இருபிறப்பி.
விநோதக்கூத்தின் வகை :—
(1) குரவை
(2) கலிநடம் – கழாய்க்கூத்து
(3) குடக்கூத்து
(4) கரணம்
(5) நோக்கு – மாயம், கண்கட்டு முதலியன:
(6) தோற்பாவை
(7) நகைத்திறச்சுவை.
சிலர் நகைத்திறச்சுவைக்குப் பதிலாக வெறியாட்டைக் கூறுவர்.
வரிக்கூத்து கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள்வரி என எட்டுவகைப்படும்.
அவிநயம் வெகுண்டோன், ஐயமுற்றோன், சோம்பினோன், களித்தோன், உவந்தோன், அழுக்காறுடையோன், இன்பமுற்றோன்,தெய்வமுற்றோன், ஞஞ்ஞையுற்றோன், உடன்பட்டோன், உறங்கினோன், துயிலுணர்ந்தோன், செத்தோன், மழை பெய்யப்பட்டோன், பனித்தலைப்பட்டோன், வெயிற்றலைப் பட்டோன், நாணமுற்றோன், வருத்தமுற்றோன், கண்ணோவுற்றோன், தலைநோவுற்றோன், அழற்றிறப்பட்டோன், சீதமுற்றோன், வெப்பமுற்றோன், நஞ்சுண்டோன் என 24 வகைகளையுடையது. இவற்றை இன்னும் மலையாள நாட்டுக் கதகளியிற் காணலாம்.
அவிநயத்திற்குரிய கை இணையாவினைக்கை (பிண்டி, ஒற்றைக்கை), இணைக்கை (இரட்டைக்கை, பிணையல்) என இருவகை. இவற்றோடு ஆண்கை, பெண்கை, அலிக்கை, பொதுக்கை என நான்கைக் கூட்டுவாருமுளர்,
இணையாவினைக்கை பதாகை முதல் வலம்புரியீறாக 33 வகைப்படும். இணைக்கை அஞ்சலி முதல் வருத்தமானம் ஈறாக 15 வகைப்படும்.
இனி, அவிநயக்கை எழிற்கை, தொழிற்கை, பொருட்கை என மூன்றாகவும் வகுக்கப்படும்.
நாடகமாடும் சாலை அரங்கு எனப்படும். இச் சொல் அர் என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து, அறை என்னும் பொருளையுடையது. அறையை அரங்கு என்பது இன்றும் தென்னாட்டு வழக்கு.
அரங்கிற் கட்டும் திரை எழினி யெனப்படும். மேல் எழுந்து செல்வதால் எழினி யெனப்பட்டது. அது ஒருமுக வெழினி (ஒருபுறத்தினின்று இழுப்பது), பொருமுக வெழினி (இரு புறத்தினின்றும் இழுக்கும்), இரட்டைத்திரை: கரந்துவரல் எழினி (மேனின்று கீழிறங்கி வருவது) என மூவகைப்படும் வடநூல்களில் ஒரேயொருவகைத் திரைமட்டும் கூறப்பட்டுள்ள தாகச் சொல்லப்படுகிறது.
நாடகம்பற்றிய பிறவிலக்கணங்களை யெல்லாம், அடியார்க்குந ல்லார் அரங்கேற்று காதைக் குரைத்த வுரையினின்றும் அறிந்து கொள்க.
இசையிலும் நாடகத்திலும் இதுபோது வழங்கும் வடசொல் மிகுதியைக் கண்டு, இவை ஆரியக்கலைகளோ என்று ஐயுறற்க.இவற்றை ஆரியக்கலைகளாகக் காட்டவேண்டியே, தென் சொற்கட்குப் பதிலாக வடசொற்களைப் புகுத்திவிட்டனர் ஆரியர் என்க. குரல் என்பதைக்கூடச் சாரீரம் என்று சொன்னால் பிறவற்றைப் பற்றி என் சொல்வது?
இசைத்தமிழும் நாடகத்தமிழும் மறைந்துபோனமைக்கு ஆரியமும் சமணமும் பெரிதுங் காரணமாகும்.
தொல்காப்பியத்தினின்று அறியும்பாக்களும் நூல்களும்
அறுவகைப்பாக்கள் — (Poetic Metres)
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபாடல் என்பன.
இருபான் வண்ணங்கள்— (Poetic Rhythms)
பா அ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண் ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர (ஓவிய) வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணம் என்பன.
பொருளீடுகளும் நூல்வகைகளும்—(Different Themes and Kinds of Poetry)
காமப் பொருளீடுகள்— (Amatory Themes)
கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை, மடல் முதலியன.
வர்ணனைப் பொருளீடுகள் (Descriptive Themes)
குறிஞ்சி, முல்லை (Pastoral),மருதம், நெய்தல், பாலை என்பன.
போர்ப் பொருளீடுகள் —Martial Themes
வெட்சி,வஞ்சி,உழிஞை,தும்பை,வாகை முதலியன.
கருதற் பொருளீடுகள் —Reflective Themes
பெருங்காஞ்சி,முதுகஞ்சி,மறக்காஞ்சி,வஞ்சினக் காஞ்சி,மகட்பாற்காஞ்சி,கையறுநிலை (Elegy) முதலியன.
பாடாண் பொருளீடுகள் Euology and Doxology
உலா,கொற்றவள்ளை, இயன்மொழி வாழ்த்து, நால் வகை யாற்றுப்படை, கடவுள் வாழ்த்து முதலியன.
வாயுறை வாழ்த்து செவியறிவுறூஉ |
Didactic |
புறநிலை வாழ்த்து — Benedictory.
செய்யுளின் எழுநிலம் —Bases of Poetical Composition
பாட்டு (Poem or Lyric), உரை (Prose), நூல் (Grammar and Science), வாய்மொழி (Scripture), பிசி (Riddle), அங்கதம் (Satire and Imprecation), முதுசொல் (Proverb) என்பன.
இவற்றுள், உரை பாட்டிடை வைத்த குறிப்பு (Prose interposed in poetry), பாவின்றெழுந்த கிளவி (Commentary), பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி (Fable), பொருளொடு புணர்ந்த நகைமொழி (Wits and Humour) என நால் வகைப்படும்.
நூல்வகை— Different Kinds of Poems
பண்ணத்தி -பாட்டும் உரையும் கலந்த ஒருவகை நூல்.
எண் வனப்பு
அம்மை (Sonnet), அழகு (Poem with proper diction), தொன்மை (Legend in mixed prose & verse), தோல் (Epic), விருந்து (Novel Composition), இயைபு (Epic whose sections end in any of the nasals or liquids), புலன் (Dramatic), இழைபு (Lyrical) என்பன.
மறைநூல்—(Scripture)
ஒவ்வொரு நாட்டிலும் முதலாவது தோன்றக்கூடிய சிறந்த நூல் மறைநூலாகும். அதனால் அதன் பெயர் அறிவு அல்லது புத்தகம் என்று பொருள்படுவதாயிருந்து, பிற்காலத்தில் பிற நூல்களுக்கும் கலைகளுக்கும் பொதுப் பெயராவதுண்டு.
ஆங்கிலத்தில் கிறித்தவ மறைநூலுக்கு Bible என்று பெயர். இது புத்தகம் என்று பொருள்படும் biblos என்னும் கிரேக்கச் சொல்லினின்றும் பிறந்தது.
Bible என்னும் சொல் இன்றும் புத்தகம் என்று பொருள் படுவதை, bibliography, bibliomania முதலிய சொற்களா லறியலாம் Scripture என்பதும் முதலாவது எழுத்து (எழுதப்பட்ட நூல்) என்றே பொருள்படும். Script – எழுத்து.
வடமொழியில் வேதமே முதலாவது நூல். வேதம் என்னும் பெயர், ‘வித்’ (அறி) என்னும் வேரினின்று பிறந்து, அறிவு என்று பொருள்படுவதொரு சொல். பிற்காலத்தில் ஆயுர்வேதம், காந்தருவ வேதம், தனுர்வேதம் என்று பிற கலைகட்கும் வேதம் என்னும் சொல் பொதுப்பெயராயிற்று.
இங்ஙனமே தமிழிலும் முதலாவதெழுந்த நூல் மறை நூலாகும். மறை என்னும் சொல் மறைவான (Esoteric) பொருளுள்ளது என்று பொருள்படுவது. பின்பு அது பிற கலைகட்கும் பொதுப் பெயரானதை, “நரம்பின் மறை” என்றும், “காமப் புணர்ச்சியும்…. மறையென மொழிதல் மறையோர் ஆறே” [23] என்றும், முறையே, இசைநூலையும் இலக்கண நூலையும் குறிக்க அச் சொல்லைத் தொல்காப்பியர் வழங்கியதினின் றறியலாம்.
தமிழர்க்குத் தனிமறையிருந்த தென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில்,
“பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே”
(75)
“மறைமொழி கிளந்த மந்திரத் தான
(158)
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப”
(171)
என்று கூறியிருப்பதா லறியப்படும்.
மறைநூ லிலக்கணம் தொல்காப்பியர் கூறியபடியே திருவள்ளுவரும் கூறுகின்றார்.
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்”
நக்கீரர் பாடிய “முரணில் பொதியில்” என்னும் செய்யுளை மந்திரமன்றென்றும் அங்கதப் பாட்டென்றும் பேராசிரியர் கூறியிருப்பதாலும், ‘நீத்தார் பெருமை’ என்னும் அதிகாரத்தில் முனிவர் சாவிப்பைத் தனியாய்,
“குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது”
என்று கூறியிருப்பதாலும், “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி” என்பது, முனிவருடைய வாழ்விப்புச் சாவிப்பாற்றலைக் குறியாது, மக்கள் கைக்கொள்ள வேண்டிய விதியாக, அல்லது கடவுளின் கட்டளையாக, முனிவர் கூறிய மறைபொருளுள்ள கூற்றுகளையே குறிப்பதாகும்.
பக்குவான்மாக்களுக்கன்றிப் பிறர்க்கறிவிக்கப் படாமல் மறைக்கப்பட்டதனால் மறைமொழி யெனப்பட்டது.
மறை, மறைநூல் என்பன தமிழர் வேதத்தையும், மறைமொழி என்பது அவ் வேதக் கூற்றையும், வாய்மொழி, மந்திரம் என்பன அவ் வேதச் செய்யுள்களையும் குறிப்பனவாகும்.
நம்மாழ்வார் வாய்மொழியென்ற சொல்லையும், திருமூலர் மந்திரம் என்னும் சொல்லையும் தெரிந்து கொண்டனர்.
வாய்மொழி என்பது வாய்க்கும் அல்லது நிறைவேறும் சொல்லென்றும், மந்திரம் என்பது மனத்தின் திரம்பற்றிய சொல்லென்றும் பொருள்படும்.
மனம், திரம் என்பன தமிழ்ச்சொற்களே. முன்னுதல் – நினைத்தல். முன் + அம் = முன்னம் – முனம்.
A.S.munan, to thinks. Ger. meinen, to think. முனம் — மனம் (முன் – மன்) ஒ.நோ : முடங்கு — மடங்கு.
முறுமுறு — மர்ம௧ர் (Murmur), E.
மனம் — மனஸ் (Sans), mens(Lat),menos(Gr.), menos(Gr.), mind (E).
திரம் = உறுதி. திரம் — திறம். ர — ற. ஒ.நோ : ஒளிர் — ஒளிறு; கரு(ப்பு) — கறு(ப்பு). திரம் என்பதையே ஸகரமெய் முதற் சேர்த்து ஸ்திரம் என்றனர் வடமொழியாரியர். ஒ.நோ. நாகம் – snake (E).
முன் – மன். மன் + திரம் = மந்திரம். ஒ.நோ : தேன் + தட்டு = தேந்தட்டு.
வாய்மொழி மந்திரம் என்னுஞ் சொற்கள் ஒருபொருட் சொற்களாகத் தொல்காப்பியத்திற் கூறப்படினும், வழக்குப் பொருளில் அவற்றுக்கு வேறுபாடுண்டு. அது பின்னர்க் கூறப்படும்.
“எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியிற்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே”
என்று தொல்காப்பியப் பிறப்பியலிற் (20) கூறியது தமிழ மறையையேயன்றி ஆரிய மறையையன்று.
முதலாவது, அந்தணர் என்னும் சொல் முனிவரைக் குறித்த தென்றும், தொல்காப்பியம் இலக்கணங் கூறுவது தமிழ் எழுத்து கட்கேயென்றும் அறிதல் வேண்டும்.
இரண்டாவது, “அஃதிவண் நுவலாது…. அளவுநுவன் றிசினே” என்பதால், நுவலத்தக்க எழுத்தொலியையே நுவலாததாகக் கூறுகின்றார் தொல்காப்பியர் என்றறிதல் வேண்டும். தொல்காப்பியத்தில் நுவலத்தக்க எழுத்துகள் தமிழ் எழுத்துகளே. ஆகையால், ஒப்பீட்டு (Comparative) முறையாலும் ஆரிய வெழுத்துப் பிறப்புக் குறிக்கப்படவில்லை.
தொல்காப்பியர் காலத்தில் ஆரிய மொழியில் இலக்கண மிருந்த தில்லையென்று முன்னமே கூறப்பட்டது.
“அகத்தெழு வளியிசை…. நுவலாது,” “புறத்திசைக்கும் மெய்தெரி வளியிசை….நுவன்றிசினே” என்று கூறுவதால், வாயினின்றும் வெளிப்பட்டொலிக்கின்ற வடிவுதெரியும் எழுத்தொலியைக் கூறுகின்றாரென்றும், அங்ஙனம் வெளிப்படாது உள்ளேயே ஒலிக்கின்ற எழுத்தொலியைக் கூறவில்லையென்றும் தெரிகின்றது.
வடமொழி யெழுத்துகளெல்லாம் புறத்திசைத்து மெய் (வடிவு) தெரிகின்ற வொலிகளாதலின், அவற்றைத் தொல்காப்பியர் குறிக்கவில்லை யென்பது தேற்றம்.
பின் வேறு பொருளென் எனின், கூறுகின்றேன். தமிழ் நாட்டில், முனிவரும் யோகியருமிருந்தமையும் அவர் யோகு பயின்றமையும், “மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியி னாற்றிய அறிவன் தேயமும்,” “நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்,” “அந்தணர்,” “நிறைமொழி மாந்தர்” என்று தொல்காப்பியர் கூறுவதாலறியலாம்.
யோகம் தமிழில் தபம் அல்லது தவம் எனப்படும். தபுத்தல் (பிறப்பைக்) கெடுத்தல். தபு + அம் = தபம் — தவம். ஒ.நோ : தபல்— தவல். திருவள்ளுவர் தவம் என்னுஞ் சொல்லை யோகம் என்னும் பொருளிலேயே வழங்கியிருக்கிறார். தொல்காப்பியரும் அதே பொருளில் அதன் மறுவடிவான தபம் என்பதை வழங்கியிருக்கிறார். தபம் செய்வார் தபத்தோர் அல்லது தாபதர் எனப்படுவர்.
தபத்தில், எண்ணம் இறைவன்மேலேயே யிருப்பதால், வினைக்குக் காரணமாக அவாவும், அதன் காரியமாகிய வினையும், அதன் பயனான பிறப்பும் தபுகின்றன. இதுவே தபம். துறவொழுக்கத்தின் முக்கிய நிலை தவமே. தவமில்லா விடின் துறத்தலரிது. இதனாலேயே, துறவறவியலில், தவத்தை முன்னும் துறவு அவாவறுத்தல்களைப் பின்னும் வைத்துக் கூறினார் திருவள்ளுவர். இல்லறத்தினின்றும் துறவறத்தை வேறுபடுத்திக் காட்டுவதும் தவநிலையே.
தபம் என்னுஞ் சொல் முதலாவது துறவுநிலை முழுவதையுங் குறித்துப் பின்பு அதில் முக்கியப் பகுதியான யோகுநிலையை மட்டுங் குறித்தது. துறவறத்தைப்பற்றிய பகுதி முழுமைக்கும் ‘துறவறவியல்’ என்று பெயரிட்டு, அதில் ‘துறவு’ என ஒரு தனியதிகாரமும் அமைத்திருக்கிறார் திருவள்ளுவர். இங்ஙனமே தவம் என்னும் பெயரும் என்க.
தபம் – தபஸ் (வ). ஒ.நோ : மனம்-மனஸ் (வ.).
தவத்திற்குரிய எண்கூறுகள் இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி எனக் கூறுவர் நச்சினார்க்கினியர்.
இவற்றுள் முதல் மூன்றும் கடையொன்றும் வடசொற்கள். இவற்றுக்குப் பதிலாகக், கடிவு, நோன்பு, இருக்கை, கலத்தல் என்பவற்றை முறையே வைத்துக்கொள்ளலாம். பிற்காலத்தார் எண்ணுறுப்புக்களையும் வடசொற்களாலேயே கூறுவர். பொருட்டொகைகளை முதலிலிருந்து கவனித்துக் கொண்டே வந்தால், தொல்காப்பியர் காலத்தில் இரண்டொரு வட சொற்களே தோன்றிப் பின்பு வரவர மிக்குத் தற்காலத்தில், பொருட்பாகுபாடுகளெல்லாம் ஆரியமோ என்று மயங்கும்படியாயிருப்பது தோன்றும்.
தவத்திற்குரிய எண்ணுறுப்புக்களில் வளிநிலை மிக முக்கியமானது. இதைப் பிராணாயாமம் என்பர் வடநூலார்.
உண்மூச்சு, வெளிமூச்சு என்னும் இருவகை மூச்சுக்களில் முன்னது ஒரு மடங்கும் பின்னது ஒன்றரை மடங்குமாகும். இவ் விரண்டையும் சமமாக்கிவிட்டால் வாழ்நாள் நீடிக்கும் என்பது முன்னோர் கருத்து. அங்ஙனம் சமமாக்கி இருவகை மூச்சுக்களையும் நிகழ்த்தும்போதே, கடவுள் பெயரான சிவ என்னும் ஈரெழுத்துகளையும் மந்திரமாக வொலித்துக்கொள்ளும்படியான முறையையும் அவர்கள் வகுத்தார்கள். இயல்பாகக் குறுகியும் நீண்டுமிருக்கின்ற உண்மூச்சு வெளிமூச்சுகள், குறிலும் நெடிலுமாகவுள்ள ‘சிவா’ என்னும் விளிப்பெயர் போல்வ வென்றும். அவற்றைச் ‘சிவ’ என்னும் விளி வடிவை யொக்குமாறு சமப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும், அவ் விருவகை மூச்சுக்களையும் ‘சிவ’ என்னும் ஈரெழுத்தொவிகளாகக்கருதுவதுடன், அவ் வொலிகளாகவே அம் மூச்சுக்களைப் புறத்தார்க்குப் புலனாகாதபடி மெல்லிதாய் உயிர்க்க வேண்டுமென்றும், அதனால் உடலுக்கு இளமையும் ஆன்மாவிற்கு வீடுபேறும் கிட்டும் என்றும் முன்னோர் கொண்டனர். இவற்றை,
“கூட மெடுத்துக் குடிபுக்க மங்கைய
ரோடுவர் மீளுவர் பன்னிரண் டங்குல
நீடுவ ரெண்விரற் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோல வஞ்செழுத் தாமே”
“வளியினை வாங்கி வயத்தி லடக்கிற்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்”
“சிவசிவ வென்கிலர் தீவினை யாளர்
சிவசிவ வென்றிடத் தீவினை மாளும்
சிவசிவ வென்றிடத் தேவரு மாவர்
சிவசிவ வென்னச் சிவகதி தானே”
என்னும் திருமந்திரங்களான் உணர்க: இதன் விளக்கத்தைத் திருவாளர் C.S. சுந்தர முதலியார் எழுதிய ‘திருமந்திர உபதேசப் பகுதியுரை’யிற் கண்டுகொள்க. (பக். 52—4).
சிவம் அல்லது சேயோன் (முருகன்) என்பது பண்டைத் தமிழ்த்தெய்வம் என்பதும், ஆரிய வேதங்களி லுள்ள ருத்திரன் என்னும் தெய்வமும் தமிழர் தெய்வமாகிய சிவம் என்பதும் வேறு என்பதும் பின்னர்க் காட்டப்படும்.
‘சிவாய நம’ என்னும் திருவைந்தெழுத்தில் ‘சிவ’ என்னும் ஈரெழுத்துகளே தமிழர்க்குரியன. ‘ஆய’ என்னும் நான்காம் வேற்றுமையுருபும், ‘நம’ என்னும் வணக்கங்குறித்த சொல்லும், வடமொழியாகும். தமிழர்க்குத் திருவைந்தெழுத் திருந்திருப்பின், அது ‘சிவபோற்றி’ என்பது போன்றிருக்குமே யன்றிச் ‘சிவாய நம’ வென்றிருக்கவேயிருக்காது. ஆரியர் தமிழ மதத்தலைவரான பிற்காலத்தில், வடமொழி தேவ மொழி யெனப்பட்டு, தமிழிற் புகுந்த ஒவ்வொரு வடசொல்லும் வடவெழுத்தும் தெய்வத்தன்மை யேற்றிக் கூறப்பட்டது. சரித்திரமும் மொழிநூலுமறியாத தமிழர்க்கு இன்றும் நான் சொல்வது விளங்காதென்றே நினைக்கின்றேன். ஆங்கிலவறிஞரும் சூழ்ச்சியப்புலவரு (Engineer)மான மாணிக்க நாயகரே மயங்கின ரென்றால் பிறரை யென்சொல்வது? மூச்சுகள் இரண்டேயாதலும், சிவ என்னும் சொல் ஈரெழுத்துச் சொல்லேயாதலும் அதனால் வளிநிலை அஞ்செழுத்தெண்ண லாகாமையும் அறிந்துகொள்க.
“எல்லா வெழுத்தும்” என்னும் தொல்காப்பிய நூற் பாவில், “உறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல்” என்பதைச் ‘சிவ’ என்னும் திருவிரண் டெழுத்துப் போன்ற வொலிகளைத் தவத்தோர் ஒலித்தலா கவே கொள்ள வேண்டும் என்க.
தொல்காப்பியப் பாயிரத்தில், “நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்கு” என்னும் பகுதியில், நான்மறையென்றது தமிழ் மறையையே.
நான்மறையென்பது, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளும் பயக்கும் மறையை. ஏலாதியென்னும் கீழ்க்கணக்கு நூற் கடவுள் வாழ்ந்துச் செய்யுளிலுள்ள ‘நான்மறை’ என்னுந் தொடர்க்கும் இங்ஙனமே பொருள் கூறப்பட்டுள்ளது. மற்றப்படி, சமணர்க்கு நான்கு மறைகளின்மை யறிக. பதினான்கு சுரமுள்ள கோவையைப் பதினாற்கோவை யென்பதுங் காண்க.
ஆரியர்க்குத் தொல்காப்பியர் காலத்தில் ஒரே மறைதானிருந்தது. இப்போதும் உண்மையானபடி ஆரிய மறைகள் ருக்கு, அதர்வணம் என இரண்டேயாகும். யசுர், சாமம் என்பன பெரும்பாலும் ருக்வேத மந்திரங்களைக் கொண்டவையே. ருக் வேதத்திலுள்ள மூலமந்திரங்கள் 1028 [24] என்று சொல்லப்படுகிறது. ருக்வேத மந்திரங்களுள் வேள்விக்குரிய வற்றைப் பிரித்து யஜுர் வேதமென்றும், பாடுவதற்கேற்ற வற்றைப் பிரித்து இசைவகுத்துச் சாமவேத மென்றும் பெயரிட்டனர். அதர்வண வேதம் பெரும்பாலும் மாந்திரீக முறையான மந்திரங்களைக் கொண்டது; அது பிற்காலத்தது. திராவிடர் ஆரியர் வருமுன்னமே மாந்திரீகத்தில் தேர்ந்திருந் ததினாலும், ஆரியர் முதலாவது திராவிட மாந்திரீகத்தைப் பழித்தமை ருக்வேத மந்திரங்களாலறியக் கிடப்பதாலும் அதர்வணம் மற்ற மூன்று வேதங்கட்கும் பிற்பட்டதினாலும், ஆரியர் திராவிடரிடமிருந்து மாந்திரீகத்தைக் கற்றுக்கொண்ட பின்பே அதர்வண வேதம் தோன்றினதாகத் தெரிகின்றது. இதன் மந்திரங்களிலும் ஏறத்தாழ ஆறிலொரு பாகம் ருக்வேதத்திலுள்ளவை என்று சொல்லப்படுகிறது.
ஆரிய வேதங்களை நான்காக வகுத்தது வியாசர் என்றும், அதனால் அவர் வேதவியாசர் எனப்பட்டார் என்றும் சொல்லப் படுவதினால், தொல்காப்பியர் காலத்தில் ஆரிய வேதம் ஒன்றாகவேயிருந்தது என்பது தேற்றம். ஆகையால், தொல் காப்பியப் பாயிரத்திலுள்ள ‘நான்மறை’ என்பது நான்கான ஆரிய வேதங்களைக் குறிக்கமுடியாது.
தொல்காப்பியத்திற் சுட்டப்பட்ட தமிழ்மறைகள் இதுபோது இறந்துபட்டன.
இப்போது தமிழ்மறையாகவுள்ளன, பன்னிரு திருமுறைகளுள் முதற் பதினொன்றும், நாலாயிர திவ்வியப் பனுவலும், திருக்குறளுமே.
“தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமுந் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்”
என்று ஔவை கூறியதுங் காண்க.
சில தமிழ்ப்பகைவர், திருக்குறள் மறையாவதெங்ஙனம் என்கின்றார். திருக்குறள் ‘தமிழ்மறை’, ‘பொதுமறை’, ‘உத்தர வேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொய்யாமொழி’ என்று கடைக்கழகப் புலவராலேயே மறையாகக் கொள்ளப்பட்டிருக்க, இப்போது அதன் மறைத்தன்மையைப்பற்றி ஐயங்கொள்வானேன்?
கடவுள், அவரை ஆன்மாக்கள் அடையும் வழி, அங்ஙனம் அடைவதால் உண்டாகும் பயன், அடையாமையால் நேரும் கேடு என்றிவற்றைக் கூறுவதே மறைநூலிலக்கணமாகும். திருக்குறள் இவ்வனைத்தும் கூறுவதால் மறை நூலாவதற்குத் தடையென்னை யென்க.
சிறுதெய்வ வழுத்துகளும், சிலர் சோமச்சாற்றைக் குடித்து விட்டு வெறியிற் கூறினவைகளும்[25] மறைகளாயிருக்கும் போது, எல்லா மதத்திற்கும் பொதுவான முழுமுதற் கடவுளையடையும் வழியைக் கூறுவதும், கள்ளூணைக் கண்டிப்பதுமான திருக்குறள் மறையாவதற்குத் தடையென்னை யென்க.
கடவுட்பற்றில்லாத சிலர், திருக்குறளில் வீட்டைப் பற்றிச் சொல்லவில்லையே என்கின்றனர். வீட்டைக் கண்டு வந்தவன் இங்கொருவனுமில்லையென்றும், வீட்டையடையும் வழி அறத்துப் பாலில் ஈரியல்களிலும் சொல்லப்பட்டுள்ளதென்றும், அங்ஙனம் காரண வகையானன்றி, வரணனை வகையான் வீட்டைக் கூற முடியாதென்றும் அவர் அறிந்து கொள்க.
“எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பானாகும் — மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்”
என்பது ஒரு பழைய வெண்பா. இதனாலும், தமிழர்க்கு மறையிருந்தமையுணரப்படும். தமிழர்க்கு மறையிருப்பவும், ஆரியரை மறையோர், வேதியர் என்றது, புதுமைபற்றி யென்க. கிறித்தவ மறையை வேதமென்றும் கிறித்தவரை வேதக்காரரென்றும் தமிழர் கூறுதல் காண்க.
‘செங்கோன் றரைச்செலவின்’ ஒரு பகுதி தவிர, தொல் காப்பியத்தின்படி, பாக்கள் முதல் மறையீறாகச் சொல்லப் பட்டவற்றுள் ஒன்றுக்காயினும் இலக்கியம் இப்போதில்லை.
தவநூல்:
இது முன்னர்க் கூறப்பட்டது.
“வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது”
என்றும்,
“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”
என்றும் தொல்காப்பியத்திற் கூறியிருப்பதால், பண்டைக் காலத்தில், தமிழரசர் பட்டாங்கு நூலறிந்து இறுதிக் காலத்தில் துறவு புகுந்தமை யறியப்படும்.
பட்டாங்குநூல்— (Philosophy)
தமிழ் இலக்கணக் குறியீடுகளிலிருந்தே, பண்டைத் தமிழர்க்குப் பட்டாங்குநூல் தெரிந்தமை யுணரப்படும்.
பொருள்களெல்லாம் உயிர், மெய் (body), உயிர்மெய் (பிராணி) என மூவகைப்படும். இவை, முறையே, தனியுயிரும் தனியுடம்பும் உயிரோடுகூடிய உடம்புமாகும். பிராணனை யுடையது பிராணி யெனப்பட்டாற்போல, உயிரையுடைய மெய் உயிர்மெய் எனப்பட்டது. (இது 2ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.) பிராணி என்னும் வடசொல் வழங்கவே, உயிர்மெய் என்னும் சொல் வழக்கற்றுத் தன் பொருளையும் இழந்து, இலக்கணநூல் வழக்கிலும், உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்து என்று உம்மைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகத் தவறாகக் கருதப்படுகின்றது. இச் சொல்லுக்குப் பதிலாக உயிர் என்னும் சொல்லும், உயிர்ப் பிராணி பிராணி என்னுஞ்சொல்லும், முறையே, குன்றக்கூறலாகவும் மிகைபடக் கூறலாகவும் வழங்கி வருகின்றன.
எழுத்துகளில், உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் போல்வன. அவற்றின் பெயர்களாலேயே கூறப்பட்டன. இப்பெயர்கள் எழுத்தைக் குறிக்கும்போது உவமையாகு பெயர். எழுத்திற்கு உயிராவது ஒலி.
பொய்யான உடம்பை மெய்யென்றது மெய்ப்பொருள் நூலுக்கு முரணென்று கூறுவர் சிலர். உடம்பு பொய்யானதென்று முன்னைத் தமிழர் அறிந்திருந்தாலும், உடம்போடு கூடிய நிலையே உயிர் வாழ்க்கையாதலின், உடம்பை மெய்யென்று மங்கல வழக்காய்க் கூறினர் என்க. சாவைப் பெரும்பிறிது என்றும் சுடுகாட்டை நன்காடு என்றும் அவர் கூறியதுங் காண்க.
ஓர் ஆளில், அல்லது உயிர்ப்பொருளில், உயிர் உடம்பு என இருபொருள் கலந்திருப்பினும், காண்பார்க்கு உடம்பே முற்பட்டுத் தோன்றும்; அதன் பின்னரே அதற்குள் உயிரிருப்பது அறியப்படும். அதுபோல, உயிர்மெய்யெழுத்திலும் மெய்யெழுத்தே முன் ஒலிக்கும்; அதன் பின்னரே உயிர் ஒலிக்கும். இதை,
“மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே” என்றனர் இலக்கணிகள்.
எல்லா மொழிகளிலும் மெய்யும் உயிருமாய் வரும் எழுத்துக்கள் இணைந்தே ஒலிக்கும். இதை மேனாட்டார் நோக்காததினால், உயிர்மெய்க்குத் தனிவடிவம் வகுக்காமல், மெய்யையும் உயிரையும் அடுத்தடுத்து வெவ்வேறாயெழுதுவாராயினர். இது மாணவர்க்கு எளிதாயினும், ஆங்கில தமிழ இலக்கணிகளின் மெய்ப்பொருளுணர்ச்சித் தாழ்வேற்றங் களைக் குறிக்கத் தவறாதென்க.
சொற்களுக்கு இலக்கணத்தில் பெயர் வினை என்று மக்கள் தொடர்பான பெயர்களே இடப்பட்டிருக்கின்றன. பெயர் = ஆள். பெயர் = பேர். எத்தனை பேர் என்னும் வழக்கை நோக்குக. வினை = செய்கை.
பொருள்களைப் பகுத்தறிவுண்மை யின்மைபற்றி, உயர் திணை, அஃறிணை என இரண்டாக வகுத்தனர் தமிழர். இப்பாகுபாடு வேறு மொழியில் இல்லை. சொற்களையும் அவை குறிக்கும் பொருள்கள்பற்றி இரு திணையாக வகுத்தனர்.
தமிழில், சொற்கள் அவை குறிக்கும் பொருள்கள் பற்றியே பாலுணர்த்தும், ஆரிய மொழிகளிலோ, அவை ஈறுபற்றியே பொருளுணர்த்தும்.
வடமொழியில் மனைவியைக் குறிக்கும் சொற்களும், தாரம், பாரியை, களத்திரம் என்னும் மூன்றும் முறையே ஆண்பாலும் பெண்பாலும் அலிப்பாலுமாம்.
உயிர்களை ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிரீறாக அறுவகையாகப் பகுத்தனர் தமிழர்.
“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”
(மரபு. 27)
என்று முன்னோர் உயிர்களைப் பகுத்தமையைக் கூறி, அதற் கடுத்த நூற்பாக்களில், அவ்வுயிர்கட்குப் “புல்லும் மரனும்”, “நந்தும் முரளும்”, “சிதலும் எறும்பும்” “நண்டும் தும்பியும்” “மாவுமாக்களும்”, “மக்களும் பிறவும்” என முறையே காட்டுத் தந்தனர் தொல்காப்பியர்.
“நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”
என்பதனால்,(மரபு. 86) ஐம்பூத வுணர்ச்சியும் தமிழர்க்கிருந்தமை யறியப்படும்.
“மறுவில் செய்தி… அறிவன் தேயமும்” என்று தொல்காப்பியர் கூறுவதினாலும். தமிழர் மெய்ப்பொருளுணர்ச்சியை ஒருவாறுணரலாம்.
ஒழுக்க நூல்— (Ethics)
தொல்காப்பியத்தில், புறத்திணையியலில் 44ஆம் நூற்பாவில் “மூன்றன் பகுதி” என்று கூறியிருப்பதால், ஒழுக்க நூல் அக்காலத்தில் தமிழிலிருந்தமை உணரப்படும். மூன்றன் பகுதியாவது அறத்தினால் பொருளாக்கி அப்பொருளால் இன்பம் நுகர்தல் என்றல். அறம்பொருளின்பம் என்பது ஒழுக்கநூற் பாகுபாடு. அறம் எனவே, இல்லறம் துறவறம் இரண்டும் அடங்கும். துறவறம் — வீட்டுநெறி.
அறம்பொருளின்பம் வீடென்னும் பாகுபாடு தமிழரதே. ஆரியரே அவற்றைத் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என வடமொழியில் மொழிபெயர்த்துக்கொண்டனர். அதோடு இப்போது வடசொற்களை மூலமாகவும் தென்சொற்களை மொழி பெயர்ப்பாகவுங் காட்டுகின்றனர். தமிழ்ப் பொருட்பாகுபாடுகளை யெல்லாம் இங்ஙனம் மொழி பெயர்த்துக் கொண்டு, மூலமாகக் காட்டுவது ஆரிய வழக்கம் என்க.
தமிழர் அறத்திற் சிறந்திருந்தமை, தொல்காப்பியத்தில் ஆங்காங்குக் கூறப்படும் அறவொழுக்கங்களா லறியப்படும்.
பொருள்களை அகம் புறம் என்று பகுப்பதே தமிழ முறையென்றும், அறம்பொருளின்பம் வீடென்று பகுப்பது ஆரிய முறையென்றும் சிலர் கூறுகின்றனர். ஒரு மொழியிலேயே நூலுக்கும் கலைக்கும் ஏற்றபடி, வெவ்வேறு வகையாய்ப் பொருள்கள் பகுக்கப்படும். இலக்கணநூல் ஒன்றிலேயே, எழுத்ததிகாரத்தில் உயிர், மெய், உயிர்மெய் என்று மூன்று வகையாகவும், சொல்லதிகாரத்தில் பொருள் இடங் காலம் சினை குணம் தொழில் என்று ஆறு வகையாகவும், மற்றோர் முறையில் உயர்திணை அஃறிணை என்று இரு வகையாகவும் பொருள்கள் பகுக்கப்படுகின்றன. தருக்க நூலில் ஏழாகவும் பதினாறாகவும் பகுக்கப்படுகின்றன. ஆகையால், அகம் புறம் என்பது பொருளதிகாரப் பாகுபாடென்றும், அறம் பொருளின்பம் வீடென்பது ஒழுக்கநூற் பாகுபாடென்றும் அறிந்துகொள்க.
சொற்கள் இலக்கண முறையில், பெயர் வினையிடையுரி யென்றும், சொல்லியல் முறையில், இயல் திரி திசை வட சொற்களென்றும், ஒழுக்கநூலிற் பொய் குறளை கடுஞ் சொல் பயனில்சொல்லென்றும், கொண்முடிபு (சித்தாந்த) நூலில் வேறுவகையாகவும் பகுக்கப்படுகின்றன. இங்ஙனமே பொருள்களுமென்க.
ஆரிய நூல்களை முற்படியாக வைத்துக்கொண்டு தமிழ் நூல்களுக்குப் பொருளுரைப்பவரெல்லாம், எவ்வகையேனும் தவறவே செய்வர். திருக்குறள் தனித்தமிழ் முறையில் இயற்றப்பட்டிருக்கவும், பரிமேலழகர் அதை ஆரியவழியாகக் கொண்டு, அறத்துப்பால் முகவுரையிலும் காமத்துப்பால் முகவுரையிலும் உண்மைக்கு மாறானவற்றை உரைத்துள்ளார், ஐந்திணையும் தனித்தனி கூறப்படும்போது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையென்று பெயர் பெறுமென்றும், கோவையாய்க் கூறப்படும் போது களவு, கற்பு என இரு கைகோள்களாகக் கூறப்படு மென்றும் அவர் அறியாது போயினர். கோவையிலும், “முன்னைய நான்கும் முன்னதற் கென்ப” என்பதால் கைக்கிளை முன்னும், கூட்டத்தினால் ஐந்திணை இடையும், கூட்டம் நீடிக்காது மடலேற்றம் நிகழின் பெருந்திணை பின்னும் அமைந்திருத்தலும், முறையே நிகழ்கின்ற புணர்தல் பிரிதல் இருத்தல் அல்லது இரங்கல், ஊடல் என்பவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்திணைகளாயமைதலும் அவர் அறிந்திலர் போலும்.
உளநூல்— (Psychology)
தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில்,
“எள்ளல் இளமை பேதைமை மடனென்
றுள்ளப் பட்ட நகைநான் கென்ப” (4)
“இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே” (5)
“மூப்பே பிணியே வருத்தம் மென்மையோ
டியாப்புற வந்த இளிவரல் நான்கே” (6)
“புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே” (7)
“அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (8)
“கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (9)
“உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே” (10)
“செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே” (11)
என்றும் பிறவாறு நுட்பமாய் இவற்றை விரித்தும் கூறியிருப் பதால், தமிழர்க்கு உளநூலுணர்ச்சி யிருந்தமை யறியப்படும். இதன் விரிவை மெய்ப்பாட்டிய லுரையிற் கண்டுகொள்க.
கணிதநூல்— (Arithmetic)
கண் + இதம் + கணிதம். கண் = கருது, மதி, அள. கண் + இயம் = கண்ணியம் (மதிப்பு). கண் — கணி, to calculate. கணி + கை = கணிகை (தாளங்கணித்தாடும் கூத்தி). கணி + அன் = கணியன் (ஜோதிடன்). கண் + அக்கு = கணக்கு. அக்கு என்பது ஓர் ஈறு. கா: இலக்கு இலை, பதக்கு. கணி — குணி -—அளவிடு. கண், கணி என்னும் தென்சொற்களையே gan, gani என உரப்பி யொலித்து வடசொல்லாகக் காட்டுவர். கண்ணுதல் என்னுஞ் சொல், அகக்கண்ணின் தொழிலைக் குறித்தலால் வடமொழி வடிவங்கள் தென்சொற்களின் திரிபே என்பது தெற்றென விளங்கும். “கண்படை கண்ணிய”, “கபிலை கண்ணிய” என்று தொல்காப்பியத்திலேயே வருதல் காண்க.
அரை, குறை, கலம், பனை, கா, பதக்கு, தூணி, உரி, நாழி என்னும் அளவுப்பெயர்களும் நிறைப்பெயர்களும், தொல்காப்பியத்தில், தொகைமரபு, உயிர்மயங்கியல் என்னும் இயல்களிற் கூறப்பட்டுள்ளன.
தொகைமரபில், 28ஆம் நூற்பாவில், அளவுப்பெயர்களும் நிறைப்பெயர்களும் க ச த ப ந ம அ உ என்னும் ஒன்பதெழுத்துகளில் தொடங்குமென்று கூறப்பட்டிருக்கிறது. நச்சினார்க்கினியர் அதற்கு,
“எடுத்துக்காட்டும்: கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு இவை அளவு. கழஞ்சு சீரகம் தொடி பலம் நிறை மாவரை அந்தை இவை நிறை…. இம்மி ஓரடை இடா என வரையறை கூறாதனவுங் கொள்க…… தேயவழக்காய் ஒரு ஞார் ஒரு துவலி என்பனவுங் கொள்க” என்று உரை கூறியுள்ளார்.
புள்ளிமயங்கியல் 98ஆம் நூற்பாவில், ‘ஐ’, ‘அம்’, ‘பல்’ என முடியும் சில பேரெண்ணுப் பெயர்கள் குறிக்கப்பட்டுள.
அவை தாமரை குவளை சங்கம் வெள்ளம் ஆம்பல் முதலியன. பரிபாடல் 2ஆம் பாட்டில் “நெய்தலுங் குவளையும் ஆம்பலும் சங்கமும்” என்று சில மிகப் பேரெண்கள் கூறப்பட்டுள்ளன. சங்கம் இலக்கங் கோடியென்றும், தாமரை கோடாகோடியென்றும் சொல்லப்படுகின்றது.
தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள துண்மையாயின், பண்டைத் தமிழில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிற்றிடப் பேரெண்கட்குத் தனிப்பெயரில்லை. இதனால், அதற்குமேல் தமிழர்க்கு எண்ணத் தெரியாதென்று கொள்ளற்க. ஆயிரம், நூறு, பத்து என்னும் எண்ணுப்பெயர்களையே உறழ்ந்து, இலக்கத்தை நூறாயிரமென்றும் பத்திலக்கத்தைப் பத்துநூறாயிரமென்றும், கோடியை நூறு நூறாயிரமென்றும் கூறினர் என்றே கொள்ளப்படும். தொல்காப்பியத்தில் பதினூறாயிரம் வரை கூறப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும், hundred thousand, two hundred million என்று இன்றும் கூறுதல் காண்க.
இலக்கம் (லக்ஷம், Sans., lakh, Eng.), கோடி (கோட்டி, Sans., crore, Eng.) என்னும் பெயர்கள் பிற்காலத்தனவாயிருக்கலாம். ஆனால், அவை இந்தியாவினின்றே தோன்றினதாகத் தெரிகின்றது. கோடி என்று தமிழிலும், குடோடு என்று இந்துஸ்தானியிலும், குரோர் (crore) என்று ஆங்கிலத்திலும் வழங்குதல் காண்க.
இலக்கம் கோடியென்பன தமிழ்ப் பெயர்களாயின், முறையே, பெரிய இலக்கம் (எண்) என்றும், கடைசியெண் என்றும் பொருள் படுவனவாகும். இவற்றுள் இலக்கம் முன்னும் கோடி பின்னும் தோன்றினவென்பதை, ஆயிரப்பத்து பத்தாயிரம், பத்தாயிரப்பத்து நூறாயிரம், நூறாயிரப்பத்து பத்து நூறாயிரம், பத்து நூறாயிரப்பத்து பத்திலக்கங்கோடி (பத்திலக்கம் அல்லது கோடி) என்னும் எண்சுவடி வாய்பாட்டால் அறியலாம்.
பண்டைத் தமிழர் கணிதத்தில் மிகச் சிறந்தவர் என்பதற்குச் சான்றாக இரண்டோர் அளவை வாய்பாடுகளை இங்குக் குறிக்கின்றேன்.
கீழ்வாயிலக்க வாய்பாடு[26]
1/2,3238245,3022720,0000000 | —தேர்த்துகள் | 6½=1 நுண்மணல் |
1/3575114,6618880,0000000 | —நுண்மணல் | 100=1 வெள்ளம் |
1/35751,1466188,8000000 | —வெள்ளம் | 60=1 குரல் வளைப்பிடி |
1/595,8524436,4800000 | —குரல்வளைப்பிடி | 40=1 கதிர்முனை |
1/14,8963110,9120000 | —கதிர்முனை | 20=1 சிந்தை |
1/7448155,5456000 | —சிந்தை | 14=1 நாகவிந்தம் |
1/532011,1104000 | —நாகவிந்தம் | 17=1 விந்தம் |
1/31294,7712000 | —விந்தம் | 7=1 பாகம் |
1/4470,6816000 | —பாகம் | 6=1 பந்தம் |
1/745,1136000 | —பந்தம் | 5=1 குணம் |
1/149,0227200 | —குணம் | 9=1 அணு |
1/16,5580800 | —அணு | 7=1 மும்மி |
1/2,3654400 | —மும்மி | 11=1 இம்மி |
1/2150400 | —இம்மி | 21=1 கீழ்முந்திரி |
1/102400 | —கீழ்முந்திரி | 320=1 மேல்முந்திரி |
1/320 | —மேல்முந்திரி | 320=1 (ஒன்று) |
கீழ்வாயிலக்கம்.
“இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர்
வழங்கியன் மாவென் கிளவி தோன்றின்
மகர வளவொடு நிகரலு முரித்தே”
என்று தொல்காப்பியக் குற்றியலுகரப் புணரியல் நூற்பாவில் மா என்னும் அளவு கூறப்பட்டிருப்பதால், கீழ்வாயிலக்கத் தைச் சேர்ந்த ஏனையளவுகளும் தொல்காப்பியர் காலத்தில் வழங்கின வென்றே கொள்ளப்படும்.
நீட்டலளவை வாய்பாடு
8 | அணு | = | 1 தேர்த்துகள் |
8 | தேர்த்துகள் | = | 1 பஞ்சிழை |
8 | பஞ்சிழை | = | 1 மயிர் |
8 | மயிர் | = | 1 நுண்மணல் |
8 | நுண்மணல் | = | 1 கடுகு |
8 | கடுகு | = | 1 நெல் |
8 | நெல் | = | 1 பெருவிரல் |
12 | பெருவிரல் | = | 1 சாண் |
2 | சாண் | = | 1 முழம் |
4 | முழம் | = | 1 கோல் அல்லது பாகம் |
500 | கோல் | = | 1 கூப்பீடு |
4 | கூப்பீடு | = | 1 காதம் |
சிலப்பதிகாரத்தில், பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றுக்கு மிடையிலிருந்த சேய்மை எழுநூற்றுக் காவதம் என்று அடி யார்க்கு நல்லார் கூறியது, இவ் வளவு பற்றியதாயின், அது ஏறத்தாழ 1600 மைல்களாகும். பஃறுளியாற்றுக்குத் தெற்கும் குமரியாற்றுக்கு வடக்கும் இருந்த நிலத்தையுஞ் சேர்த்துக் கணிப்பின், அழிந்துபோன தமிழ்நாடு எவ்வகையினும் 2000 மைலுக்குக் குறையா தென்னலாம். அங்ஙனமாயின், இற்றை யிந்தியா அளவு ஒரு பெருநிலம் தென்கடலில் மூழ்கியதாகும்.
“சோழ இராச்சியம் முழுமையும், முதல் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும், முதல் குலோத் துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும், மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும் அளக்கப்பட்டது. இவை முறையே, கி.பி. 1001, கி.பி. 1086, கி.பி. 1216ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவைகளாகும்.
“நிலம் அளந்த கோலை ‘உலகளந்த கோல்’ என்று வழங்குவர். இக் கோல் பதினாறு சாண் நீளமுடையது… நிலங்கள் நூறு குழிகொண்டது ஒரு மாவாகவும் இருபது மா கொண்டது ஒரு வேலியாகவும் அளக்கப்பெற்றன…. அந்நாளில் நிலத்தின் எத்துணைச் சிறு பகுதியும் விடாமல் நுட்பமாக அளக்கப் பெற்றுள்ளது என்பது ‘இறையிலி நீங்கு நிலம் முக்காலே இரண்டு மாகாணி அரைக்காணி முந்திரி கைக்கீழ் அரையே இரண்டுமா முக்காணிக்கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக் கீழ் நான்கு மாவினால் இறைகட்டின காணிக்கடன்’ என்பதனால் விளங்கும்.”[27] இங்குக் குறிக்கப்பட்ட அளவு வெளியாகும்.
வானநூல்— (Astronomy)
‘நாள்கோள்’ (புறத். 11) எனவே நாண்மீனும், (Lunar asterism), ‘ஞாயிறு திங்கள்’ (கிளவி. 58) எனவே, எழுகோளும் (Planets), அவற்றாற் பெயர் பெறும் ஏழு கிழமைகளும் (days), ‘ஓரையும்'(Signs of the Zodiac) (கள. 45) எனவே இராசியும், ‘காரும் மாலையும்’ (அகத். 6), ‘கூதிர் யாமம்’ (அகத். 7), ‘பனியெதிர் பருவமும்’ (அகத். 8), ‘வைகறை விடியல்’ (அகத். 9), ‘எற்பாடு’ (அகத். 10), ‘நண்பகல் வேனிலொடு’ (அகத். 10), ‘பின்பனி’ (அகத். 12) எனவே பெரும்பொழுதும் (Seasons) சிறுபொழுதும் (Divisions of the day) தொல்காப்பியர்காலத் தமிழர்க்குத் தெரிந்தும் வழக்கிலு மிருந்தமை யறியப்படும்.[28]
(அசுவினி முதல் ரேவதியீறான) இருபத்தேழு நாள்மீன் (நட்சத்திரம்)கட்கும் பண்டைக்காலத்தில் வழங்கிவந்த தமிழ்ப் பெயர்கள், முறையே புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக் குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி என்பன. இவற்றுக்கு வேறு பெயர்களுமுண்டு. அவற்றை நிகண்டுகளிற் கண்டுகொள்க. வெள்ளி, உடு, விண்மீன் என்பவை பொதுவான நட்சத்திரப் பெயர்களாகும்.
கோள்கள் ஏழென்றே தமிழர்கொண்டு, அவற்றின் பெயர்களால் ஏழுநாட்கொண்ட வாரமென்னும் அளவை ஏற்படுத்தினர். ஆனால், ஆரியர் கோள்களின் தொகையை மிகுத்துக் காட்டவேண்டுமென்று, கதிரவன் மறைவும் திங்கள் மறைவு மாகியவற்றைத் தம் திரிபுணர்ச்சியால் இருகோள்களாகக் கருதி அவற்றுக்கு ராகு கேது என்று பெயரிட்டு, அவற்றை எழுகோள்களோடு கூட்டி நவக்கிரக மென்றனர்.
புதன் சனி என்னும் இரு பெயர்கட்கும், பண்டைக் காலத்தில் வழங்கிவந்த தமிழ்ப் பெயர்கள் அறிவன் காரி என்பன.
பன்னிரு மாதங்கட்கும் இப்போது வழங்கிவரும் வடமொழிப் பெயர்கட்குப் பதிலாக, பன்னீர் ஓரை(ராசி)யின் பெயர்களே மலையாள நாட்டிற்போலப் பண்டைத் தமிழ்நாட்டிலும் வழங்கிவந்தன. பன்னீர் ஓரைப்பெயர்களில் மேடம், இடபம், கடகம், கன்னி, துலாம், கும்பம், மீனம் என்னும் ஏழும் தமிழ்ச் சொற்களே. இவற்றுள் முதலாறுக்கு முறையே, தகர், குண்டை, அலவன், மடந்தை, தூக்கு, குடம் என்றும் பெயருண்டு. ஏனைய மிதுனம், சிங்கம், விருச்சிகம், தனுசு, மகரம் என்னும் ஐந்தும் தமிழில், முறையே, இரட்டை, ஆளி, தேள், வில், சுறா எனப்படும்.
1. | சித்திரை—மேடம் | 7. | ஐப்பசி—துலை |
2. | வைகாசி— இடபம் | 8. | கார்த்திகை—தேள் |
3. | ஆனி—இரட்டை | 9. | மார்கழி—வில் |
4. | ஆடி—கடகம் | 10. | தை—மகரம் |
5. | ஆவணி—ஆளி | 11. | மாசி—கும்பம் |
6. | புரட்டாசி—கன்னி | 12. | பங்குனி—மீனம் |
மாதம் என்பது மதி என்பதினின்றும் பிறந்த தமிழ்ச் சொல்லே. மதி – மாதம் (த.) – மாஸம் (வ.) மதி = சந்திரன். காலத்தை மதிப்பதற்குக் கருவியாயிருப்பது மதி. மதித்தல் அளவிடுதல். ஒ.நோ : moon-month. மதி என்பதினின்று மாதம் என்னும் வடிவம் தோன்று மேயன்றி மாஸம் என்னும் வடிவந் தோன்றாது. த-ஸ, போலி. திங்கள் என்னும் சொல் ஒரு கிழமைப் பெயராதலின், மாதம் என்னும் சொல்லே மாதத்தைக் குறிப்பதாகும். ஒருவளர்பிறையும் ஒரு தேய்பிறையும் சேர்ந்தது ஒரு மாதம். மதியாலுண்டாகும் கால அளவு மாதமெனப்பட்டது. மதி என்னும் பெயரும் மாதத்தைக் குறிக்கும். வளர்பிறைக் காலத்தை ஒளிப்பக்க மென்றும், தேய்பிறைக் காலத்தை இருட்பக்கமென்றும்[29] முன்னோர் கூறினர். இவற்றையே, முறையே, சுக்கிலபக்ஷ மென்றும் கிருஷ்ணபக்ஷ மென்றும், நிலைமொழிகளை மொழி பெயர்த்தும் வருமொழிகளை எழுத்துப் பெயர்த்துங் கொண்டனர் ஆரியர்.
சில ஓரைப்பெயர்களின் மூலங்களாவன :
மேழகம் — மேடகம் — மேடம் — மேஷம் (வ,)ஒ.நோ . புழலை — புடலை, நாழுரி — நாடுரி, விடை — விடபம் (வ்ருஷபம், வ.) — இடபம், கும்— கும்பு— கும்பம். கும்பு + அம் = கும்பம். கும்புதல் — குவிதல். மின் — மீன் — மீனம். ஒ.நோ . தின் — தீன்.
கடகம் (நண்டு) என்பது வட்டமானது என்னும் பொரு ளது. தோட்கடகம், கடகப்பெட்டி என்னும் வழக்குகளை நோக்குக. நாழிகை வட்டிலைக் குறிக்கும் கடிகை என்னுஞ் சொல்லும் கடகம் என்பதன் மறுவடிவமே. வட்டமானது வட்டில். கடிகை + ஆரம் = கடிகையாரம் – கடிகாரம். தோட்கடகம் தோள்வளைவி என்றும் கடிகை என்றும் வழங்குதல் காண்க. கடகம் ஒரு பருமைப் பெயருமாகும் [30]
துலை என்னும் சொற்குப் பகுதி, தோல் என்று இந்தியில் வழங்குகின்றது. தமிழ்நாட்டின் பெரும்பகுதியைக் கடல் கொண்டதினாலும், பண்டைத் தமிழ்நூல்களில் தொல் காப்பியந் தவிர மற்றவையெல்லாம் அழிந்துபோனதினாலும், தமிழ்ச் சொற்கள் பலவற்றிற்கு வேர்கள் தமிழில் மறைந்து விட்டன. வடநாட்டில், ஆரியர் வருமுன் திராவிட மொழிகளே வழங்கி வந்தமையால் சிந்தி, இந்தி, வங்கம் முதலிய வடநாட்டு மொழிகளில் பல திராவிடச் சொற்கள் கலந்துள்ளன. அவை இந் நூலின் மூன்றாம் மடலத்தில் விரிவாய்க் கூறப்படும்.
மேலும், ஒரு மொழியின் தாய்வழக்கில், ஒரு பொருட்குரிய பல சொற்களில், வழக்கற்றவையெல்லாம் கிளைவழக்குகளில் தான் வழங்கும். இதுவே ‘வழக்கற்றசொல் வழங்கல்’ எனமுன்னர்க் குறிக்கப்பட்டது. இது ஒரு தாய்வீட்டிலுள்ள வழங்காத கலங்களையெல்லாம் மக்கள் கொண்டுபோய் வழங்குதல் போன்றது.
தமிழிலுள்ள நோட்டம் என்னும் தொழிற்பெயரின் வேரான நோடு என்பது, கன்னடத்தில் வழங்குதல் காண்க.
துல்லிபம், துலை, துலைநா, துலா, துலாம், துலான், துலாக்கோல், கைத்துலா, ஆளேறுந்துலா என்று இருவழக்கிலும், துலை என்னும் சொல்லும் அதன் பிற வடிவங்களும் தொன்று தொட்டுத் தமிழ்நாட்டில் வழங்கிவருகின்றன.
இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்னும் அறுவகைப் பருவங்களையும், முறையே, வசந்தம் கிரீஷ்மம், வர்ஷம், சரத், ஹேமந்தம், சிசிரம் என்று மொழி பெயர்த்துக் கொண்டனர் ஆரியர். வசந்தம் (Spring), கோடை (Summer), வறளை (Autumn), மாரி (Winter) என்னும் நால்வகைப் பருவங்கள்தாம் ஆரியநாடு என்னும் வடநாட்டிற்கேற்கும். இளவேனில் முதலிய அறுவகைப் பருவங்கள் தமிழ்நாட்டிற்கேயுரியன. இதனால், மூலம் எவை யென்றும் மொழிபெயர்ப்பு எவையென்றும் அறிந்து கொள்ளலாம். இங்ஙனமே ஆரிய மொழி பெயர்ப்புகள் சிலவிடங்களில் மறைந்திருப்பினும் சிலவிடங்களில் வெளியாய்விடுமென்க.
“நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும்” என்று தொல் காப்பியத்தில்(புறத். 30) கூறியிருப்பதால், குறிநூலும் (Astrology) தொல்காப்பியர் காலத்திலிருந்தமையறியப்படும்.
வானநூலறிஞனுக்குத் தமிழில் கணியன் என்று பெயர். கணியன் காலத்தைக் கணிப்பவன். பண்டைத் தமிழ்நாட்டில் வள்ளுவரே பெரும்பாலும் கணியராயிருந்தனர். தமிழர் கணிதத்தில் வல்லவராயிருந்ததினால் வானநூலிலும் வல்லவராயிருந்தனர்.
இப்போது வழங்கும் 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால், அல்லது கனிஷ்கனால்[31] கி.பி. 78-இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாயுள்ளன. 60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதினாலும், மிகக் குறுகியதினாலும், சரித்திர நூற்குப்பயன்படாது. ருத்ரோத்காரி என்று கூறினால், எந்த ருத்ரோத் காரி யென்று அறியப்படாமையால், இவ்வளவின்மைபற்றித் தமிழுக்கொரு குறையுமில்லையென்க.
சொல்லியல் நூல்— (Etymology)
தொல்காப்பியத்தில்,
“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”
(பெயர. 1.)
“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே”
(எச். 1)
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”
(எச். 4)
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”
என்றும், அறுவகைத் திரிபுகளும் (எச். 7), மூவகைக் குறைக ளும் (எச். 57) வினை பயன் மெய் உரு என்ற நால்வகை யுவமங்கட்கு வெவ்வேறுருபுகளும் (உவ. 12—6) கூறியிருப்ப தாலும், பிறவற்றாலும், பண்டைத் தமிழர்க்குச் சொல்லிய லுணர்ச்சியிருந்தமை யறியப்படும். மொழிநூற்குமுற்படியானது சொல்லியலே. ஒரு மொழிபற்றியது சொல்லியலும் பல மொழிபற்றியது மொழிநூலுமாகுமென்றறிக.
தருக்கநூல்— Logic
தருக்குதல் ஒருவன் தன்னை மிகுத்துக்காட்டுதல். “தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து” என்று தொல்காப்பியத்திலேயே (அகத். 53) வந்திருத்தல் காண்க. தருக்கு — செருக்கு. த—ச, அ—எ, போலிகள். (ஒ.நோ : ஓதை — ஓசை, சத்தான் — செத்தான்.)
தருக்கு + அம் = தருக்கம். தருக்கத்திற்கு ஏரணம் என்றும் பெயருண்டு. ஏர் + அணம் = ஏரணம். ஏரணம் எழுச்சி. தருக்கம் என்னும் தென்சொல்லையே, தர்க்கம் என்று எழுதி வடசொல்லாகக் காட்டுவர் ஆரியர்.
தருக்கம் என்பது ஒரு சொற்போர். ஒருவன் தன் கொள்கையை நாட்டி எதிரியை வெல்வதே தருக்கம். வெல்வதெல்லாம் வாகை. வாகைப் பொதுவிலக்கணமாவது.
“தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல்.”
(தொ. புறத். 15)
அகத்தியத் தருக்க நூற்பாக்கள்
கீழ்வரும் நூற்பாக்கள் தருக்கப் புலவர் வடிவேல் செட்டியார் பதிப்பித்த ‘தர்க்க பரிபாஷை’ என்னும் நூலிறுதியிற் கண்டவை. இவை உண்மையில் அகத்தியர் இயற்றியவையாயின், தொல்காப்பியர் காலத்தில் தருக்க நூலுந் தமிழிலிருந்தமை யறியப்படும்.
- பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை
யின்மை யுடன்பொரு ளேழென மொழிப.2. மண்புன லனல்கால் வெளிபொழு தாசை
யான்மா மனதோ டொன்பதும் பொருளே.3. வடிவஞ் சுவையிரு நாற்ற மூறெண்
ணளவு வேற்றுமை புணர்ச்சி பிரிவு
முன்மை பின்மை திண்மை நெகிழ்ச்சி
சிக்கென லோசை யுணர்ச்சி யின்பந்
துன்பம் விருப்பம் வெறுப்பு முயற்சி
யறமறம் வாதனையொடு குணமறு நான்கே.4. எழும்பல் விழுதல் வளைத னிமிர்த
னடத்த லுடனே கருமமை வகைத்தே.5. பொதுமை மேல்கீ ழெனவிரு வகையே.
6. மன்னிய பொருளின் கண்ணவா யவற்றின்
வேற்றுமை தெரிப்பன பலவாஞ் சிறப்பே.7. ஒற்றுமை யாப்பஃ தொன்றே யென்க.
8. முன்னின்மை பின்னின்மை முற்று மின்மை
யொன்றினொன் றின்மையென் றின்மை நான்கே9. மண்ணீ ரனல்கான் முறையே நாற்றந்
தட்பம் வெப்ப மூற்ற மாகி
மெய்ப்பொரு ளழிபொருண் மேவு மென்க.10. அணுக்கண் மெய்ப்பொருள் காரிய மழிபொருள்
பிருதிவி நித்திய வநித்திய வணம்பெறும்
நிலையணுப் பொருணிலை யில்லது காரியம்.11. அதுவே:—
உடல்பொறி விடய மூவகைப் படுமே
நம்மனோர் யாக்கை மண்கூற் றுடம்பு
நாற்றங் கவர்வது நாசியி னுனியே
மண்கல் முதலிய விடய மாகும்.12. நீரிறை வரைப்பிற் கட்டுநீ ருடம்பு
சுவைதிறங் கவர்வது நாவி னுனியே
கடல்யா றாதி விடய மாகும்.
13. கதிரோன் வரைப்பிற் கட்டன லுடம்பே
யுருவங் கவர்வது கருமணி விழியே
மண்விண் வயிறா கரநால் விடயம்.
14. வளியிறை வரைப்பிற் கட்டுகா லுடம்பே
யூற்றங் கவர்வது மீந்தோ லென்க
விடய மரமுத லசைதற் கேதுவே
பிராண னுடலகத் தியங்குங் காற்றே.
15. விசும்பே காலந் திசையோ டான்மா
மனமிவை யைந்து நித்தியப் பொருளே.
16. ஓசைப் பண்பிற் றாகா யம்மே.
17. இறப்புமுதல் வழக்கிற் கேதுக் காலம்.
18. கிழக்குமுதல் வழக்கிற் கேதுத் திசையே. 19
20. அறிவுப் பண்பிற் றான்மா வென்க
விறையே யீசன்முற் றறிவனோர் முதலே
யுயிர்தா னுடறொறும் வெவ்வே றாகும்.
மனமணு வடிவாய் வருமின் பாதி
யறிதற் கின்றி யமையாக் கருவி
யாகிப் பலவா யழிவின் றுறுமே.
இந்நூற்பாக்களையே, நுண்ணறிவுள்ள ஒருவர் ஒரு நூலாக விரித்துவிடலாம்.
இந்நூற்பாக்கள் சிறப்பிக முறையைச் சேர்ந்தவை. சிறப்பிகம் (வைசேடிகம்), முறையிகம் (நியாயம்) என்னும் இருவகைத் தருக்க முறைகளுள், முன்னதே சிறந்ததென்க.
தொழிற்கலைகள் (Arts)
சிற்பம்— (Architecture)
“முழுமுதல் அரணம்” (புறத். 8), “ஆரெயில்” (புறத். 10), “மதிற்குடுமி” (புறத். 10) முதலிய குறிப்புகளால், தொல்காப்பியர்காலத்தில் சிற்பத்தொழில் தமிழ்நாட்டிற் சிறந்திருந்தமை யுணரப்படும்.
சுவர், மதில், பதணம், இஞ்சி, அகப்பா, புரிசை, எயில், சோ முதலிய மதில்வகைகளும், ஞாயில், சூட்டு, ஏப்புழை முதலிய மதிலுறுப்புகளும், எழுநிலை மாடமும் பண்டைத்தமிழரின் சிற்பக்கலைச் சிறப்பை உணர்த்துவனவாகும். இவற்றின் விரிவைச் சிலப்பதிகாரத்துட் கண்டுகொள்க.
பண்டைத் தமிழர் நாடகவரங்கு அமைத்த நுட்பம் (சிலப். 113-16) மிக வியக்கத்தக்கது.
வளைவிற்பொறி, கருவிரலூகம், கல்லுமிழ்கவண், பாகடு குழிசி, காய்பொன்னுலை, கல்லிடுகூடை, தூண்டில், தொடக்கு, ஆண்டலையடுப்பு, கவை, கழு, ஐயவித்துலாம், கைபெயரூசி, சென்றெறிசிரல், பன்றி, பனை, நூற்றுவரைக்கொல்லி, தள்ளி வெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும்பாம்பு, கழுகுபொறி, புலிப் பொறி, குடப்பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி[32] முதலிய மதிற்பொறி வகைகள், பண்டைத் தமிழரின் படிமைக் கலையையும்(Sculpture) சூழ்ச்சியக் கலையையும் (Engineering) தெரிவிப்பனவாகும். படிமை — பதுமை. பாவைவிளக்கு கந்திற்பாவை முதலிய பெயர்களையும் நோக்குக.
சிற்பம் படிமைக்கலை முதலியவற்றாலும், நாடகவரங்கின் எழினியாலும் ஓவியநூலும்(Drawing) பண்டைத் தமிழர்க்குத் தெரிந்திருந்தமை சொல்லாமே யுணரப்படும். சிற்பநூல் ஓவிய நூல் என்று இருநூல்கள் கடைக்கழகக் காலத்திலிருந்தனவாக, அடியார்க்கு நல்லார் அரங்கேற்று காதையுரையிற் குறிப்பிடுகின்றார்.
உழவு— (Agriculture)
உழவு பண்டைத் தமிழர்க்குத் தெரிந்திருந்தமையை ஒருவரும் ஐயுறார். ஆயினும், அதைப்பற்றிய சில குறிப்புகள் அறியத்தக்கன.
“ஏரோர் களவழி” என்பது தொல்காப்பியம்(புறத். 16). Agriculture என்னும் ஆங்கிலப்பெயர் தமிழ் மூலத்ததாகவே தெரிகின்றது.
Agriculture, L, agricultura — ager, a field, cultura, cultivation — colo, to cultivate.
அகரம் மருதநிலத்தூர். மருதநிலம் வயற்பாங்கு. பார்ப்பனர் மருதநிலத்தில் தங்கினதினாலேயே, அவர் குடியிருப்பு அக்கிரகாரம் எனப்பட்டது. அக்கிர + அகரம் = அக்கிரா கரம். அக்கிரம் = நுனி, முதல், தலைமை. “அகர மாயிரம் அந்தணர்க் கீயிலென்” என்றார் திருமூலர்.
- acre, A.S. aceer, Ger. acker, Gr. agros, L. ager Sans. ajra.
கல் = தோண்டு. கல் + வி = கல்வி. கல்வி என்னும் பெயர் முதலாவது தோண்டுதல் என்னும் பொருளில் உழவைக் குறித்தது. பின்பு, நூற்கல்விக்குச் சிறப்புப் பெயராயிற்று. மாந்தன் முதன்முதற் கற்ற கல்வி உழவே. கல் – colo, to till.
தொழில் என்னும் பெயரும் முதலாவது உழவையே குறித்தது. தொள் + இல் = தொளில் — தொழில்.
ஒ.நோ : பொள் + இல் = பொளில் — பொழில். பொள் — பொளி. பொளித்தல் வெட்டுதல். (பொள் – பொழ்) பொள்ள (வெட்ட)ப்படுவது பொழில். பொழில் = சோலை. பண்டைத் தமிழகம் முழுவதும் பெருஞ்சோலையாய் அல்லது காடாயி ருந்தது. காடுவெட்டி நாடாக்கப்பட்டது. அகத்தியர் காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின்கணிருந்தமை நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க.
தமிழகம் முழுதும் ஒரு பெருஞ்சோலையாயிருந்ததினாலேயே பொழில் என்னும் பெயர் உலகம் அல்லது நாடு என்று பொருள் படுவதாயிற்று. ‘நாவலந் தண்பொழில்’ ‘வண்புகழ் மூவர் தண் பொழில்’, ‘ஏழ்பொழில்’ என்னும் வழக்குகளை நோக்குக.
தொள் = தோண்டு. தொள் — தொடு = தோண்டு. தொள்- till, to cultivate. தொள்ளுவது தொழில்.
மாந்தன் முதலாவது செய்த பெருந்தொழில் உழவே. உழவின் பெயரான தொழில் என்பது, பிற்காலத்தில் எல்லாத் தொழில்கட்கும் பொதுப்பெயராயிற்று.
செய் = வயல். செய்வது செய். நன்செய், புன்செய் என்னும் பெயர்களை நோக்குக. செய்கை = வயல்வேலை. பண் = செய். பண்ணுவது பண்ணை. பண்ணை = வயல்.
முதலாவது கையினாற் செய்யப்பட்ட தொழில் உழவு என்னுங் கருத்துப்பற்றியே, உழவரைக் “கைசெய்தூண் மாலையவர்” என்றார் திருவள்ளுவர்.
முதலாவது தோன்றிய ஒரு பொருளின் அல்லது தொழிலின் பெயர், பிற்காலத்தில் அதன் இனத்திற்குப் பொதுப்பெயராய் வழங்குதல் இயல்பே. தோடு என்னும் ஓலைப் பெயர், பிற்காலத்தில் அதற்குப் பதிலாயணிப்படும் கம்மல் (கமலம்) வகைக்குப் பொதுப் பெயராய் வழங்கு வதையும்; வில்லேருழவர், சொல்லேருழவர், தேரோர் களவழி யென்னும் வழக்குகளையும் நோக்குக.
பழ நார்வீஜியம் (Old Norse), ஆங்கிலோ-சாக்ஸன் என்ற மொழிகளில், முறையே, erfidhi, earfodh என்ற சொற்கள் முதலாவது உழவைக் குறித்துப் பின்பு உழைப்பைக் குறித்தன வென்றும். லத்தீனில் ars, artis என்ற சொற்கள் முதலாவது உழவைக் குறித்துப் பின்பு கலைப் பொதுப்பெய ராயிற்றென்றும், அச் சொற்கட்கு மூலம் ar(to plough) என்பது என்றும், முதலாவது கற்பிக்கப்பட்ட கலை உழவேயென்றும் மாக்கசு முல்லர் கூறியிருத்தல் காண்க.[33]
ஏர் = கலப்பை. ஏர்த்தொழில் = உழவு.
- ear (ஏர்.), to plough. A.S. erian, L. aro, GK. aroo – root ar. to plough. E. arable, adj.
- Share – கொழு. M.E. schar, A.S. scear, Ger. schar, schaar.
காறு = கொழு.
க-ச, போலி. ஒ.நோ : திகை – திசை (தேவா. 308:1), இகல் – இசல். சேம்பர்ஸ் அகராதியில் shear (to cut) என்பது share என்பதன் மூலமாகக் காட்டப்பட்டுள்ளது. அங்ஙனமாயினும், shear என்பது சிறை என்னும் தமிழ்ச் சொல்லை ஒத்திருத்தல் காண்க.
இங்ஙனம், மேனாடுகளில் மாந்தன் முதற்றொழில்பற்றிய தமிழ்ச்சொற்கள் வழங்குவதற்குக் காரணம் பின்னர்க் கூறப்படும்.
—கைத்தொழில் —Industries
தாழ், வாள், வேல், கழல், தோல் (கேடகம்), குடை, கணை, தேர், யாழ், இழை, துடி, பொன் முதலிய பெயர்களும், ‘ஊழணி தைவரல்’ (மெய். 14) என்னுந் தொடரும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருப்பதால், அது இயற்றப்பட்ட காலத்தில், தமிழ் நாட்டிற் கைத்தொழில் சிறந்திருந்தமை யுணரப்படும்.
அக் கைத்தொழில் பல திறத்தன. அவற்றுள் நெசவு மட்டும் இங்குக் கூறப்படும்.
நெசவு—Weaving
“உடைபெயர்த்துடுத்தல்” என்பது தொல்காப்பியம் (மெய். 14). பருத்தி நெசவு முதன்முதல் இந்தியாவில்தான் செய்யப்பட்ட தென்றும், அங்கிருந்தே மேனாடுகளுக்குப் பரவிய தென்றும் வயவர் சாண் மார்சல் கூறுகிறார்.
பண்டைக்காலச் சரித்திராசிரியரெல்லாம். மேனாடுகள் இந்தியாவினின்றும் இறக்குமதி செய்த பொருள்களுள், துணி ஒன்றாகத் தவறாது குறிப்பிடுகின்றனர்.
18ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை, இந்தியாவினின்றே மேனாடுகட்குத் துணி ஏற்றுமதியானமை, பின்வருங் குறிப்பினாலறியலாம்.
“தற்கால இந்தியாவின் வறுமைக்கு மற்றொரு பெருங் காரணம், ஐரோப்பாவில் பொறிவினைத் தோற்றத்தினாலும், திருந்திய முறைச் செய்பொருள் வினையின் பரவலினாலும் ஏற்பட்ட கைத்தொழில் தேவைக்குறைவே. ஐரோப்பா, இந்தியரின் சொந்தத் துறைகளில், இன்னும், எண்ணுக்கெட்டாத தொன்று தொட்டு எவற்றுக்கு அவர்களைச் சார்ந்திருந்தோமோ அவையும், அவர்களுக்கே விதப்பாயுரியவுமான கைத்தொழில்களிலும் செய்பொருள் வினைகளிலும், அவர்களை வெல்லக் கற்றுக் கொண்டதினால், உண்மையில் இனி யொருபோதும் எதற்கும் இந்தியாவைச் சாந்திருப்பதில்லை. உண்மையில், காரியங்கள் தலைகீழாய் மாறிவிட்டன. இவ் வெளிப்பாடு இந்தியாவை முற்றிலும் கெடுத்துவிடுவதாக அச்சுறுத்துகின்றது.
“ஐரோப்பாவிற்குத் திரும்புவதற்குச் சற்று முன்பே, கைத்தொழில் செய்யும் கூற்றங்களிற் சிலவற்றினூடு வழிச் சென்றேன். அங்குப் பரவியிருந்த பாழ்நிலைக்கு ஏதும் ஒப்பாகாது. வேலையறைகளெல்லாம் சாத்தப்பட்டிருந்தன. அங்கே வாழும்இலக்கக்கணக்கான நெசவுத்தொழின் மக்கள் பசியால் மடிந்து கொண்டிருந்தனர். நாட்டிலுள்ள முன்றவற்றெண்ணம் (Prejudice) பற்றி, அவர்கள் அவமானப்பட்டன்றிப் பிற தொழிலையும் மேற்கொள்ள முடியாது. முந்திய காலத்தில் நூல்நூற்றுத் தங்கள் குடும்பத்தைக் காத்துவந்த, கணக்கற்ற கைம்பெண்களும் பிற பெண்டிரும் வேலையிழந்து பிழைப்பற்றிருந்ததைக் கண்டேன். யான் எங்குச் சென்றாலும் ஒரே துன்பத்தோற்றம் எனக்கு எதிரே நின்றது”[34] என்று 18ஆம் நூற்றாண்டில் மைசூர் நாட்டில் விடையூழியம் செய்த அப்பே டூபாய்ஸ் (Abbe Dubois) கூறுகின்றார்.
பண்டைக் காலத்திற் பெண்டிர் நூல் நூற்றமையை நக்கீரர், கபிலர், பவணந்தி முதலியோருங் கூறியுள்ளனர். ‘பருத்திப் பெண்டு’ என்று புறநானூறு (125, 326) கூறும்.
“நூலினு மயிரினு நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த வறுவை வீதியும்”
(சிலப். 14 : 205-207)
என்று இளங்கோவடிகள் கூறுவதால், பண்டைத் தமிழர் நெசவின் பெருமை விளங்கும்.
“மயிரினும்” என்பதற்கு “எலிமயிரினாலும்” என்று பொருள் கூறியுள்ளார் அடியார்க்குநல்லார்.
மயிர் நிறைந்த ஒருவகை மலையெலி பண்டைத் தமிழ் நாட்டிலிருந்த தென்பதும், அதன் மயிரால் சிறந்த கம்பளம் நெய்யப்பட்ட தென்பதும்,
“புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன
பவளமே யனையன பன்மயிர்ப் பேரெலி”
“செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயி
ரந்நெ ருப்பள வாய்பொற் கம்பலம்”
என்று சிந்தாமணி (1898,2686)) கூறுவதா லறியப்படும். பலவகைத் துணிகள் பண்டைத் தமிழ்நாட்டில் நெய்யப்பட்டமை,
“துகில் (ஆடை): கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம்,கோங்கலர், கோபம், சித்திரக்கம்மி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல் யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி”[35] என 36 வகையென்று அடியார்க்கு நல்லார் கூறுவதினின்றறியலாம்.
“ஆவி யன்ன வவிர்நூற் கலிங்கம்” (பத். 4 : 169) என்பதினாலும், பாலாடைக்கும் பஞ்சாடைக்கும் ஆடையென்னும் பொதுப்பெயர் இருத்தலாலும், பாம்பு கழற்றிய மீந்தோல் சட்டையெனப் படுதலாலும், இக்காலத்திற் சூழ்ச்சியப்பொறியால் நெய்யும் நொய்ய ஆடை வகைகள் போன்றே, அக்காலத்திற் கைத்தறியால் தமிழர் நெய்து வந்தனர் என்பதறியப்படும்.
நெசவுபற்றிய சில தமிழ்ச்சொற்கள் மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன.
பன்னல் = பருத்தி. L. punnus, cotton, It. panno, cloth.
கொட்டை = பஞ்சு. Ar. qutun, It. cotone, Fr. coton, E. cotton.
கொட்டை நூற்றல் என்னும் வழக்கை நோக்குக. பருத்திக் காயினின்று கொட்டுவது கொட்டை.
வேட்டி = ஆடை. L. vestis, Sans. வஸ்த்ர, E. vesture.
வெட்டுவது வேட்டி. ஒ.நோ : துணிப்பது துணி. அறுப்பது அறுவை. வேட்டியை வேஷ்டி என்று தமிழரே தவறாய் வழங்குகின்றனர். இது இன்னும் வடமொழிக்குட் புகவில்லை.
“தடுக்கப் பழையவொரு வேட்டி யுண்டு” என்று பட்டினத்தார் கூறுதல் காண்க. (திருத்தில்லை, 17)
சேலை = (சீலை) நீண்ட அல்லது அகன்ற துணி.
A.S. segel, E. sail.
தச்சு = L. texo, E. texture, anything woven. தை + சு = தைச்சு — தச்சு. தச்சு = தைப்பு. தச்சு என்னும் பெயர் சரியானபடி நெசவுக்குரியதேனும், மரக்கொல்வேலைக்கு வழங்கிவருகின்றதுஅதிலும் தைப்புத் தொழிலுள்ளமையின். வண்டியைத் தைக்க வேண்டும் என்று தச்சர் கூறும் வழக்கை நோக்குக. தைத்தல் பலவுறுப்புகளை ஒன்றாயிணைத்தல். நெசவில் நூல்கள் ஒன் றாயிணைக்கப்படலும், தச்சில் வண்டியாயின் குறடு ஆரை சூட்டு என்னும் உறுப்புகளும், பெட்டி நாற்காலியாயின் பலகைகளும் கால்களும் ஒன்றாயிணைக்கப்படலும் காண்க.
வாணிகம்— (Commerce)
வாணி என்னும் சொல் வாய்நீர் என்பதினின்று பிறந்ததாகவும் கொள்ள இடமுண்டு. வாய்நீரை வாணீர் என்பது கொச்சை வழக்கு. ஒ.நோ: குறுநொய் – குறுணை. தண்ணீர் தண்ணி எனப்படுவதுபோல, வாணீர் வாணி எனப்படும். வாய்நீருக்கு மறுபெயர் சொள்ளு என்பது. சொளுசொளு என்று வடிவது சொள்ளு. பேசத் தொடங்கும் பருவத்தில் குழந்தைகட்குச் சொள்ளு வடியும். சொள்ளு மிகுதியாய் வடிந்தால் பேச்சு மிகுதியாகும் என்றொரு கொள்கையுளது. ‘சொள்ளும் பெருத்தால் சொல்லுப் பெருக் கும்’ என்பது பழமொழி. சொள்ளு – சொல்லு -சொல். வாய்நீர் – வாணீர் – வாணி = நீர், சொல். வாணி – பாணி.
கொச்சை வழக்கிலிருந்தும் சில சொற்கள் கொள்ளப்படும். கா. கொண்டுவா – (கொண்டா) – கொணா – கொணர், பழம் – பயம்.
வாணி என்பதற்கு வாச் என்று வடமொழி மூலங் காட்டினும், அதற்கும் வாய் என்னும் தமிழ்ச்சொல்லே மூலமாதல் காண்க.
வாணி + இகம் = வாணிகம். வாணி = சொல். சொல்லுதல் என்று பொருள்படும் வாணிகம் என்னும் சொல், விலை சொல் லுதல் என்னும் பொருளில் பண்டமாற்றைக் குறிப்பதாகும். ஒ.நோ : பகர்தல் = சொல்லுதல், விற்றல். நொடுத்தல் = சொல்லுதல், விற்றல். நொடி = கதை. நொடை = விற்பனை.
வாணி என்னும் சொல் வழக்கிலில்லாமையினாலேயே வடசொல்லாகக் கருதப்படுகின்றது, பாணி என்னுஞ் சொல் போல. வர்த்தகம், வியாபாரம், வைசியம் என்னும் சொற்களே வட சொற்கள். வானி (வான் + இ) என்னுஞ் சொல் வாணியென்று திரிந்திருக்கலாம். ஒலியை வானத்தின் பண்பாக முன்னோர் கருதினர். வாணிகம் முதலாவது உள்நாட்டு வணிகம் அயல்நாட்டு வணிகம் என இருதிறப்படும். அவற்றுள் அயல்நாட்டு வணி கமே சிறந்தது. அதுவும் நிலவாணிகம் நீர்வாணிகம் என இருதிறப்படும். அவற்றுள் நீர்வாணிகமே சிறந்தது.
தமிழர் பண்டைக்காலத்தில் நீர்வாணிகத்திற் சிறந்திருந் தமைக்கு அகச்சான்றும் புறச்சான்றும் நிரம்பவுள.
கிறித்துவுக்கு 3000 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்ட தான ஊர் என்னும் கல்தேயநகர் அகழ்வில், இந்தியத் தேக்கு மரத்துண்டு கண்டுபிடிக்கப்பட்டதென்றும், தேக்கு மரம் இந்தியாவில் விந்தியமலைக்கு வடக்கே வளர்வதே யில்லையென்றும், மஸ்லினுக்குப் பாபிலோனிய பழம்பெயர் சிந்துவென்றும், அது இந்தியாவினின்றும் ஏற்றுமதியானதி னால் அப் பெயர் பெற்ற தென்றும் ராகொஸின் கூறுகிறார்.[36] “எகிபதியக் கல்லறைகளில் நீலமும் (indigo), மஸ்லினும் கண்டது, இந்திய விளைபொருள்கள் குறைந்தது கிறித்து வுக்கு 1700 ஆண்டுகட்கு முற்பட்ட பழைமையில் எகிப்திற் குள் புகுந்தமையைத் திட்டமாய்க் காட்டிவிட்டது. சுமேரியர் இந்தியாவிற்கேயுரிய பொருள்களாகிய தேக்கு, மஸ்லின் வணிகம் செய்தார்கள் என்பதற்கும் சான்றுளது” என்று திருவாளர் ஏ. கோஸ் (Ghose) ஒரு கட்டுரையிற் கூறுகின்றார்.[37]
கிறித்துவுக்கு 1000 ஆண்டுகட்கு முன்னிருந்த சாலோமோனுக்கு முந்திய சான்றுகளிருப்பதால், அவன் இந்தியாவோடு செய்த வாணிகத்தின் வாயிலாய், எபிரேய மறைக்குள் புகுந்த துகி (தோகை = மயில்), கபி (கப்பி = குரங்கு) என்னும் தமிழ்ச்சொற்கள், தமிழ்நாடு மேனாட்டொடு பண்டு செய்துவந்த வணிகத்திற்குச் சிறப்புடைச் சான்றாகா.
“முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை” என்று தொல் காப்பியத்திற் (அகத். 37) கூறியிருப்பதால், கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்பே, தமிழர் வாரித்துறையிற் சிறந்திருந் தமையறியப்படும்.
தமிழில் பலவகை மரக்கலங்கட்கும் பெயருள்ளன. அவை புணை, பரிசல், கட்டுமரம், தோணி, திமில், ஓடம், படகு, அம்பி, வங்கம், கப்பல், நாவாய் முதலியன.
“கலஞ்செய் கம்மியர்” “கலம்புணர் கம்மியர்” என்று மணிமேகலையிலும்,
“நீரினின்று நிலத்தேற்றவு
நிலத்தினின்று நீர்பரப்பவு
மளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
யருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போர்” என்றும்,
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்”
என்று பட்டினப்பாலையிலும்,
“இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்”[38] என்று சிலப்பதிகாரத்திலும் கூறியிருப்பதால், பண்டைத்தமிழரின் கலஞ்செய்வினையும்(Ship building) நீர்வாணிகமும் நன்றாய் விளங்கும்.
வாரித்துறைபற்றிய பல தமிழ்ச்சொற்கள் மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன. அவையாவன :—
வாரி = கடல். வார் + இ = வாரி. வார்தல் நீளுதல்.
“வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள”
என்பது தொல்காப்பியம்,(உரி. 21)
நீர் ஓரிடத்தினின்று நீள்வதால் நீர் என்றும் வாரி யென்றும் கூறப்பட்டது.
நீள் — நீர். ஒ.நோ : கள் — கரு (நிறம்). தெள் — தெருள். வார் + இதி = வாரிதி (வ.). வார் + அணம் = வாரணம்.
வாரி, வாரிதி, வாரணம் என்னும் நீர்ப்பெயர்கள், சிறந்த நீர்நிலையும் பிற நீர்நிலைகட்குக் காரணமுமான கடலைக் குறித்தன.
வாரி – L. mare, the sea; Fr. mer, mare, pool; Ger- and Dut. meer; A.S. mere; E. mere, a pool or lake.
வாரணம் – L. marinus, E. marina, n. marine, maritime, adj.
வாரணன் கடலோனான நெய்தல்நிலத் தெய்வம். வாரணன் என்னும் தமிழ்ப்பெயர் வடமொழி வடிவத்தை யொட்டி வருணன் என்று திரிக்கப்பட்டது. இந்திய ஆரியர், மேலையாசியாவினின்றும் நிலவழியாய் இந்தியாவிற்கு வந்தமையால், வாரித் துறையறிந்தவரல்லர். சமுத்திரம் என்று வேதத்திற் சொல்லி யிருப்பது, வானத்திலுள்ள மேகப்படலத்தை.[39]
நாவாய் — L. navis.O. Fr. navis, Gr. naus, Sans. nau, E. navy, n. nautical, adj.
நால்வாய் (யானை) — நாவாய், நால்வாய்போல் அசைவதால் கப்பல் நால்வாயெனப்பட்டது (உவமையாகுபெயர்).
“நாவாய் – களிகள்போற் றூங்குங் கடற்சேர்ப்ப”
என்றார் முன்றுறையரையனார். களி – மதங்கொண்ட யானை. களிகொள்வது களிறு (ஆண்யானை). கள் + இ = களி. கள் = மயக்கம், மதம்.
“வெளி விளக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை”
என்ற பட்டினப்பாலை யடிகளையுங் காண்க.
நால்வாய் – நாவாய். பொருள் வேறுபடுத்தற்கு இடைக் குறைந்தது.
படகு – Low. L. bargia, Gr. baris, O. Fr. barge, a boat.
Low. L. barca, Fr. barque, E. bark, barque, a ship of small size.
படகு — barge—bark. ட-ர, போலி.
ஒ.நோ : முகடி — முகரி, குடகு — Coorg.
Galleon (Sp. galeon – Low. L. galea), galley (O. Fr. galee – Low. L. galea) என்னும் பெயர்கள் கலம் என்னும் பெயரையும், Ship (L. scapha, Gr. skaphos, Ger. schiff, ice.skip, Goth.skip, A.S. scip, E. skiff) என்னும் பெயர் கப்பல் என்னும் பெயரையும் பெரும்புடை ஒத்திருக்கின்றன.
கட்டுமரம் என்பது catamaran என்றானது மிக அண்மையிலாகும்.
Sail என்பது சேலை அல்லது சீலை என்னும் பெயரை யொத்திருப்பது முன்னர்க் கூறப்பட்டது.
நங்கூரம் – L. ancora, Gr. angkyra, Fr. ancre, E. anchor.
நங்கூரம் வடிவத்திற் கலப்பைபோன்றிருப்பதால், அப் பெயர் பெற்றது. நாங்கூழ், நாகேல (தெ.), நாஞ்சில் என்பன கலப்பைப் பெயர்கள். நாங்கூழ் – நங்கூரம் – anchor. ஆங்கிலப்பெயரில் நகரமெய் நீங்கிற்று. ஒ.நோ: நாரந்தம் — naranj (Pers.) — arancio (Fr.—It.); E. orange.
கவடி – cowry. கவடி – (பலகறை) ஒரு கடற்பொருள்.
பண்டைத் தமிழர் வாரித்துறையிற் சிறந்திருந்ததினால், வையகம் வட்டவடிவமென் றறிந்திருந்ததாகத் தெரிகின்றது.
மண் + தலம் = மண்டலம் (பூமி) – மண்டிலம் = வட்டம்.
மாநிலத்திற்கு ஞாலம் என்னும் பெயர் வானநூலறி வாலிட்ட பெயராகத் தெரிகின்றது. வாரித்துறையில் சிறந்தவர்க்கு வான நூலும் தெரிந்திருக்கும். வானச்சுடர்களே மீகாமர்க்கு வழிகாட்டிகளும் கடிகாரமும். இதை மாக்ஸ் முல்லரும் கூறுகின்றார்.
நாலம் — ஞாலம் = உலகம். நால் + அம் = நாலம். நாலுதல் தொங்குதல். வானத்திலுள்ள சுடர்கள் தாங்கலின்றித் தொங்கிக் கொண்டிருப்பதை யறிந்த தமிழர், மாநிலமும் அங்ஙனமே தொங்கிக்கொண்டிருப்பதாக உணர்ந்திருக்க வேண்டும். மற்றப்படி,
“அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம்
…….நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துன்னணுப் புரைய
சிறிய வாகப் பெரியோன்” [40]
என்ற கருத்து முன்னோர்க்குத் தோன்றியிராது.
ந—ஞ, போலி. கா : நயம் — ஞயம், நண்டு — ஞண்டு.
உலகத்திற்கு அண்டம் (முட்டை) என்னும் பெயரும், வான்சுடர் வடிவுபற்றி வந்ததே. அண்டங்களையெல்லாம் தன்னுளடக்கிய வெளியும் பிற்காலத்தில் அண்டமெனப் பட்டது, எப்புறமும் வளைந்து தோன்றுதலின்.
அம்பு, ஆழி என்னும் கடற்பெயர்கள் வட்டம் என்னும் பொருள் பெற்றதும், பண்டைத்தமிழரின் வாரித் துறைத் தேர்ச்சியைக் காட்டுவதாகும்.
அம், ஆம், அம்பு என்பன நீரைக் குறிக்கும் தனித் தமிழ்ப் பெயர்கள். அம் — அம்பு. ஒ.நோ : கும்—கும்பு, திரும்—திரும்பு. அம்பு என்பது தமிழ்ச்சொல்லன்றாயின், அம்போதரங்கம் என்னும் தமிழ்ச்செய்யுளுறுப்புப் பெயரின் பகுதியாயமைந் திருக்காது. அம்பு என்னும் தமிழ்ச்சொல்லே, வடமொழியில் அப்பு என்று வலிக்கும், உம்பர் என்பது உப்பர் என்று இந்தியில் வலித்தல்போல தமிழிலும் இங்ஙனம் வலித்தல் உளது. கா : கம்பு-கப்பு, கொம்பு-கொப்பு.
ஆழ்ந்திருப்பது ஆழி, வாரி என்னும் நீர்ப்பெயர் கடலைக் குறிப்பதுபோல, அம்பு என்னும் நீர்ப்பெயரும் கடலைக் குறிக்கும். கடல் நிலத்தைச்சூழ வட்டமாயிருப்பதால், அதன் பெயர்கள் வட்டப்பொருள் பெற்றன.
அம்பு என்னும் பெயர் வட்டப்பொருள் பெற்றபின், வட்டமான பிற பொருள்களையுங் குறிக்க நேர்ந்தது. அம்பு – வளையல், அம்பி — ஆம்பி – காளான், L: amb, ambi, Gr. ambhi round.
மலேயத் தீவுக்கூட்டத்தைச் சேர்த்த கே (Ke)த் தீவிலுள்ள மிலேச்சர் செய்யும் படகு வேலைப்பாட்டை, மேனாட்டார் கலவினைப் போன்றே மிகச் சிறந்ததாக மெச்சுகிறார் ரசல் உவாலேஸ்.[41] உலகத்திலேயே முதன் முதலாகப் பெருங்கலஞ் செய்தவராகத் தெரிகின்ற தமிழரின் தற்காலக் கைத்தொழில் நிலையோ, மிகமிக இரங்கத் தக்கதாயிருக்கின்றது.
“உழவு தொழிலே வரைவு வாணிபம்
வித்தை சிற்பமென் றித்திறத் தறுதொழில்
கற்கும் நடையது கரும பூமி”
என்று பிங்கலத்திற் சிறப்பிக்கப்பட்டது பண்டைத் திராவிட இந்தியாவே.
அழிந்துபோன தமிழ் நூல்கள்
ஏனைய மொழிகளிலெல்லாம் இலக்கியம் வரவர உயர்ந்தும் மிகுந்தும் வரவும், தமிழிலோ வரவரத் தாழ்ந்தும் குறைத்தும் வந்திருக்கின்றது. வடமொழி தென்மொழி யிலக்கியங்கள் இரு பெருங்கடல்களாகத் தொள்லூல்களிற் கூறப்படு கின்றன. அவற்றுள், வடமொழிக்கடல் முன்னுள்ளபடியே இன்றும் குறையாதுளது. ஆனால், தென்மொழிக்கடலோ ஒரு சிறு குளமாக வற்றியுள்ளது.
அகத்தியருக்கு முத்திய தமிழ் நூல்களில், செங்கோன் தரைச்செலவு என்னும் சிறிய நூலின் ஒரு பகுதியே இன்று கிடைத்துளது.
தலைக்கழகத்தாராற் பாடப்பட்ட எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையுமென் இத்தொடக்கத்தன வும் இடைக்கழகத்தாராற் பாடப்பட்ட கலியும் குருகும், வெண்டானியும், வியாழமாலையாகவலுமென இத்தொடக்கத்தனவும் கடைக்கழகத்தாராற் பாடபட்ட பரிபாடலுட் பலவும், கூத்தும் வரியும் சிற்றிசையும், பேரிசையும் இப்போதில்லை.
தலைக்கழகக் காலத் திலக்கணமாகிய அகத்தியமும், இடைக் கழகத் திலக்கண மாகிய மாபுராணமும் இசை நூலும் பூதபுராணமும் இப்போதில்லை,
இனி, அடி நூல், அணியியல், அவிநயம், அவிநந்தமாலை, ஆசிரியமாலை, ஆசிரிய முறி, ஆனந்தவியல், இளந்திரையம், இந்திர காளியம், ஐந்திரம். ஓவிய நூல், கடகண்டு, கணக்கியல், கலியாண காதை, களவு நால், கவிமயக்கிறை, கலைக்கோட்டுத் தண்டு, காலகேசி, காக்கை பாடினியம், குண்டலகேசி, குண நூல், கோள் நூல், சங்கயாப்பு, சயந்தம், சிந்தம், சச்சபுட வெண்பா, சாதவாகனம், சிற்பநூல், சிறுகாக்கை பாடினியம், சிறுகுரீ இயுரை, சுத்தானந்தப்பிரகாசம், செயன்முறை, செயிற்றியம், தந்திரவாக்கியம், தும்பிப்பாட்டு, தகடூர் யாத்திரை, தாளசமுத்திரம், தாளவகையோத்து, தேசிக மாலை, நாககுமாரகாவியம், நீலகேசி, பஞ்சபாரதியம், பரதம், பஞ்சமரபு, பதினாறுபடலம், பரதசேனாபதியம், பரிநூல், பல்காப்பியம், பல்காயம், பன்மணிமாலை, பன்னிரு படலம், பாவைப்பாட்டு, பாட்டியன் மரபு, பாட்டுமடை, பாரதம் (பெருந்தேவனார் இயற்றியது). புணரிப்பாவை, புதையல் நூல், புராண சாகரம், பெரியபம்மம், பெருவல்லம், போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், மந்திர நூல், மயேச் சுரர்யாப்பு. மார்க்கண்டேயர் காஞ்சி, முறுவல், முத்தொள்ளாயிரம், மூப்பெட்டுச் செய்யுள், மூவடி. முப்பது, மோதிரப்பாட்டு, யசோதர காவியம், லச்சத் தொள்ளாயிரம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, வாய்ப்பியம், விளக்கத்தார் கூத்து முதலிய எண்ணிறந்த நூல்கள் கடைக் கழகக் காலத்திலும் பிற்காலத்திலுமிருந்தவை யிப்போதில்லை.
பாண்டியன் தமிழ்ப்பாரதம், திருச்சிராப்பள்ளியந்தாதி. ஸ்ரீராஜ ராஜ விஜயம், நாடக நூல், வீரணுக்க விஜயம், குலோத்துங்க சோழ சரிதை, அஷ்டாதச புராணம், அருணிலை விசாகன் தமிழ்ப் பாரதம். பெருவஞ்சி, அத்திகிரித் திருமால் சிந்து, காங்கேயன் பிள்ளைக்கவி, வீரமாலை, திருவதிகைக் கலம்பகம். திருவல்லையந்தாதி முதலியவை, இதுவரையறியப்படாத நூல்களாகச் சாஸனத்தமிழ்க்கவி சரிதத்திற் குறிக்கப்பட்டுள்ளன.
கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட புலவர்களியற்றிய நூல் களிற் பல இப்போது கிடைக்கவில்லை. ஒட்டக்கூத்தரியற்றிய அரும்பகைத் தொள்ளாயிரம், எதிர்நூல் முதலியவை இன்னும் வெளிவரவில்லை.
இடைக்கழக விருக்கையாகிய கபாடபுரத்தில், எண்ணாயிரத் தெச்சம் நூல்களிருந்து பின்பு கடல்கோளுண்டழிந் தனவென்றொரு வழிமுறை வழக்குள்ளது.
பற்பல கலைகள் பண்டைத் தமிழிலிருந்து பின்பழிந்து போயின வென்பதை,
“ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம்
தாரண மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள”
என்னும் செய்யுளா லறியலாம்.
மேற்கூறிய நூல்களெல்லாம் அழிந்து போனமைக்குக் கடல் கோள்களும், ஆரியத்தினால் தமிழர் உயர் நிலைக்கல்வியிழத்தமையும், இருபெருங் காரணங்களாகும்.
தொல்காப்பியம் ஒன்றில் வல்லவரே ஒரு பெரும் புலவராக மதிக்கப்படுகின்றார். தொல்காப்பியத்திற்குச் சமமும் அதினுஞ் சிறந்தவு மான ஏத்துனையோ நூல்கள் இறந்துபட்டன.
அகத்தியர்
}அகத்தியர் என்று எத்தனையோ பேருளர். அவருள் முதலாவாரே இங்குக் கூறப்படுபவர்.
அகத்தியர் காலம்:
அகத்தியர் இராமர் காலத்தவராதலின், ஏறத்தாழ கி.மு. 1200 ஆண்டுகட்கு முற்பட்டவராவர்.
அகத்தியர் கதைகள்
(1) விந்தத்தின் செருக்கடக்கினது;
ஒருகாலத்தில் பனிமலை (இமயம்) நீர்க்கீழ் இருந்தது. அப்போது விந்தியமலை மிகவுயரமாய்த் தோன்றிற்று. பனிமலை யெழுந்தபின், அதனொடு ஒப்பு நோக்க வித்தம் மிகச் சிறிதாய்த் தோன்றிற்று. இதே விந்தத்தின் செருக்கடக்கம். இதை அகத்தியர் பெயரொடு தொடுத்துக் கூறக் காரணம், அவர் தென்னாடு வந்தபின் குமரி நாட்டைக் கடல் கொண்டமையே. அகஸ்தியர் என்னும் பெயருக்கு, விந்தத்தின் அகத்தை (செருக்கை) அடக்கினவர் என்று, வடமொழியிற் பொருள் கூறப்படுகின்றது.
(2) கடலைக் குடித்தது.
முன்பு கடலாயிருந்த பாகம் பின்பு நிலமாகிப் பனிமலை தோன்றியதையே, அகத்தியர் கடலைக் குடித்ததாகக் கதை கட்டியதாகத் தெரிகின்றது.
(3) குடத்திற் பிறந்தது
மேற்குத் தொடர்ச்சிமலை முற்காலத்தில் குடமலை யெனப்பட்டது. தென் மதுரையைக் கடல் கொண்டபின், அகத்தியரிருந்தது பொதியமலை. அது குடமலையின் ஒரு பகுதி. குடதிசையில் அல்லது குடமலையிலிருந்தமை பற்றி அகத்தியர் குடமுனிவர் என்று கூறப்பட்டிருக்கலாம். பழைமையர் தமது வழக்கம்போல் அதன் உண்மைப் பொருளைக் கவனியாது, குடத்திற் பிறந்தவராகக் கதை கட்டி, அதன் மறுபெயர்களான கும்பம் கலசம் முதலிய சொற்களாலும் அவர்க்குப் பெயரமைத்திருக்கலாம்;
ஆர்க்காட்டுப்புராணத்தில், ஆர்க்காடு என்னும் பெயரை ஆறுகாடு என்று கொண்டு, அதைச் சடாரண்யம் என்று மொழி பெயர்த் திருப்பதாகப் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் கூறுவர்.
(4) அங்குட்ட அளவாயுள்ளது:
அகத்தியர் குள்ளமாயிருந்ததினால் குறு முனிவரென்றும் குட்டமுனிவரென்றும் கூறப்பட்டார்.
குட்டை குட்டம், ஒ. நோ? பட்டை—பட்டம், தட்டை—தட்டம்.
செய்யுளடிகள் குறளுஞ் சித்துமாய்க் குறுகி வருவது குட்டம்படுதல் என்றும், கைகால் விரல்கள் அழுகிக் குட்டையாகும் தொழு நோயும் குரங்குக்குட்டியுங் குட்டமென்றுங் கூறப்படுதல் காண்க.
குட்டத்தைக் குஷ்டமென்பர் வடநூலார். ஒ? நோ, கோட்டம்கோஷ்டம் (வ), முட்டி—முஷ்டி (வ).
சில பெயர்களில், அம் என்னும் முன்னொட்டுச்சேர்தல் இயல்பு:
கா : அங்கயற்கண்ணி, அங்காளம்மை.
இங்ஙனமே குட்டமுனி என்னும் பெயரும் அங்குட்டமுனி என்று ஆகியிருக்கலாம்.
அங்குட்டன் என்று ஏற்கனவே பெருவிரலுக்குப் பெயர். குட்டையாயிருப்பதால் கட்டைவிரல் குட்டன் எனப்பட்டது அஃறிணைப் பெயரும் அன் ஈறு பெறும். கா : குட்டன் = ஆட்டுக்குட்டி, குட்டான் = சிறு பெட்டி, சிறு படப்பு. அம் + குட்டன் — அங்குட்டர். இது வடமொழியில் அங்குஷ்டன் எனப்படும்,
அகத்தியர் பெயராள அங்குட்டன் என்பதையும், பெருவிரலின் பெயரான அங்குட்டன் என்பதையும், ஒன்றாய் மயக்கி, அகத்தியர் அங்குட்ட (பெருவிரல்) அளவினர் என்று பழைமையர் கூற நேர்த்திருக்கலாம்,
(5) மாநிலத்தைச் சமனாக்கியது.
பனிமலை ஒரு காலத்தில் நீர்க் கீழிருந்து பின்பு வெளித் தோன்றியது. அகத்தியர் தெற்கே வந்த பின், குமரிநாட்டைக்கடல்கொண்டது. முற்காலத்தில் முறையே தாழ்ந்தும் உயர்ந்து மிருந்த வடதென் நிலப்பாகங்கள், பிற்காலத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் போயின. இவ்விரண்டையும் இணைத்து, அகத்தியர் தாழ்ந்தும் உயர்ந்து மிருந்த வடதென் நிலப்பாகங்களைச் சமப்படுத்தினரென்றும்,வடபாகம் அமிழ்ந்ததற்குக் காரணம் நிலத்திற்குப் பாரமாகுமாறு பதினென் கணத்தவர் வந்து கூடிய சிவபெருமான் கலியாணமென்றும் கதைகட்டினர் பழைமையர்,
(6) தமிழை உண்டாக்கினது.
தமிழ் மிகப் பழைமையானதாதலாலும், பிற்காலத் தமிழர்க்குச் சரித்திரவறிவின்மையாலும், இது போது அறியப் படுகின்ற தமிழ் நூல்களுள் அகத்தியம் முன்னதாதலாலும், அகத்தியர் தலைக்கழகத்திறுதியில் வந்தவராதலாலும் அகத்தியர் தமிழை உண்டாக்கினர் என்று சிலர் கருதலாயினர்.
அகத்தியம் வழி நூலாதல் :
அகத்தியம் தமிழிலக்கண முதனூலென்று, இதுவரையும் கூறப்பட்டுவந்தது. இற்றையாராய்ச்சியால் அது வழிநூலே யென்பது தெள்ளத்தெளியத் தெரிகின்றது:
அகத்தியம் வழி நூல் என்பதற்குக் காரணங்கள்:
(1) தொல்காப்பியத்தில் ஓரிடத்தும் அகத்தியம் கூறவும் சுட்டவும் படாமை.
(2) “என்ப’ , “என்மனார் புலவர்“, “என மொழிய“, “என்றிசினோரே” என்று தொல்காப்பியர் முன்னூலாசிரி யரைப் பல்லோராகக் குறித்தல்,
(3) “களவினுங் கற்பினுங் கலக்க மில்லாத்
தலைவனுந் தலைவியும் பிரிந்த காலைக்
கையறு துயரமொடு காட்சிக் கவாவி
எவ்வமொடு புணர்ந்து நனிமிகப் புலம்பப்
பாடப் படுவோன் பதியொடு நாட்டொடு
முள்ளுறுத் திறினே யுயர்கழி யானந்தப்
பையு ளென்று பழித்தனர் புலவர்“
என்று அகத்தியர் முன்னோர் மொழிபொருளை எடுத்தோதுதல், சிலர் ஆனந்தக் குற்றம் பிற்காலத்துத் தோன்றிய தென்று கூறுவர். அது தவறாகும்.
“கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதா னந்தமும்”
(புறத். 19.)
என்று. ஆனந்தப்பெயர் தொல்காப்பியத்திற் கூறப்படுதல் காண்க.
“ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை
வேறென விளம்பாள் பெயரது விகாரமென்
றோதிய புலவனு முனனொரு வகையா
னிந்திர னெர்ட்டாம் வேற்றுமை யென்றனன்”
என்று அகத்தியர் தமக்கு முந்தின இரு நூலாசிரியரை விதந்துங் கூறினர்.
அகத்தியத்திற்குமுன், இந்திரன் என்றொரு புலவன் இவற்றிய ஐந்திரம் என்னும் இலக்கணம் இருந்தமை,
“மல்குநீர் வரைப்பின் ஐந்திர நிறைந்த
தொல்காப்பியன்எனத் தன்பெயர் தோற்றி”
என்று தொல்காப்பியம் பாயிரத்திற் கூறியதாலறியலாம்.
“ஏழியன் முறையது” என்னும் அகத்திய நூற்பாவில் குறிக்கப்பட்ட இரு நூல்களையும் முறையே வடமொழி இலக்கண நூல்களாகிய பாணினீயமும் ஐந்திரமுமெனக் கொண்டனர் பல்லோர். இது தமிழின் தொன்மையை அறியாமையால் நேர்ந்த தவறாகும்.
பாணினி கி. மு. 5 ஆம் நூற்றாண்டினராயிருக்க, அவரியற்றிய இலக்கணம் எங்ஙனம் இராமர் காலத்தவரான அகத்தியர் நூலுக்கு முதனூலாதல் செல்லும்?
ஐந்திரம் என்பது இந்திரன் என்றோர் (ஆரியப்) புலவர் இயற்றிய இலக்கணமாகும். அகத்தியர்க்கு முன்னமே ஒரு சில ஆரியர் தென்னாட்டிற்கு வந்திருந்தமை, ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்று தொல்காப்பியர் கூறுவதாலும், கந்தபுராணத்தாலும், திருமாலின் முதலைந்து தோற்றரவுச் செய்திகளாலு மறியப்படும்.
ஐந்திரம் என்பது வடமொழியிலக்கணமா தென்மொழியிலக்கணமா என்று திட்டமாய்க் கூற இயலவில்லை. ஆயினும், இந்திரன்—ஐந்திரம் என்னும் திரிபாகுபெயர் (தத்திதாந்த) முறையினாலும், ஐந்திரத்தினும் வேறாக “முந்துநூல்கண்டு” எனச் சில நூல்களைப் பனம்பாரனார் குறித்தலாலும் அது வடமொழி யிலக்கணமே யெனக் கொள்ள இடமுண்டு. ஆதலால்.
“புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுதூ லெய்துவீர்“
“கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கை விளக்கங் காணாய்“
என்று சிலப்பதிகாரத்தில், நாடுகாண்காதையிற் கூறினதுமென்க.
“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்“ என்று தொல்காப்பியர் சிறப்பிக்கப்படுவதால், ஐந்திரம் மிக விழுமிய நூலென்பது பெறப்படும். இந்திரன் மருதநிலத்துப் பண்டைத் தமிழ்த் தெய்வமாதலின், ஐந்திரம் அதன் சிறப்புப்பற்றியும் நூலாசிரியன் பெயரொப்புமைபற்றியும் அத்தெய்வத்தினதாகக் கூறப்பட்டது. இறையனார் அகப்பொருள் அதன் நூலாசிரியன் பெயரொப்புமை பற்றியும், கோயிற்பீடத்தடியிற் கிடந்தமை பற்றியும், சிவ பெருமானியற்றியதாகக் கருதப்பட்டமை காண்க. இந்திரனுக்குப் பண்டைத் தமிழ்ப் பெயர் வேந்தன் என்பது. இந்திர தெய்வத்திற்குப் பண்டைத் தமிழ் நாட்டிலிருந்த பெருமையைச் சிலப்பதிகாரத்தானும் மணிமேகலையானு முணர்க.
தமிழில் 8 வேற்றுமையும் ஒரே காலத்தில் தோன்றினவையல்ல. முதலாவது 5 அல்லது 6 வேற்றுமைகள்தாம் தோன்றியிருக்க முடியும்; இறுதியில் தோன்றினது எட்டாம் வேற்றுமை, அது ஒரு காலத்தில் முதல் வேற்றுமையின் வேறுபாடென்று அதனுள் அடக்கப்பட்டது. இதையே,
“ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை
வேறென விளம்பரன் பெயரது விகாரமென்
றோதிய புலவனு முளன்“
என்பது குறிக்கும். ஆங்கிலத்திலும் விளிவேற்றுமையை முதல் வேற்றுமையின் வேறுபாடு (Nomintaive of Address) என்றே கூறுவர்.
ஐந்திர இலக்கணத்தில், விளி வேற்றுமை முன்னூல் களிற்போல முதல் வேற்றுமையில் அடக்கப்படாது, தனி வேற்றுமையாகக் கூறப்பட்டது. இறையே.
“இந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்”என்று கூறினர் அகத்தியர்.
வேற்றுமைகள் தோன்றின வகையும் முறையும் பீன்னர்க் கூறப்படும்.
(4) அகத்தியம் முத்தமிழிலக்கணமாதல்.
ஒரு மொழியில், முதன்முதலிலக்கணய தோன்றும்போது, கூடிய பக்கம் எழுத்து சொல் யாப்பு என்ற மூன்றுக்கே தோன்றும். அகத்தியத்தில் இம் மூன்றுடன் பொருளிலக் கணமும், அதன்மேலும் இசை நாடக விலக்கணங்களும் கூறப் பட்டிருந்தலின் அது முதனூலாயிருக்க முடியாதென்பது தேற்றம்.
அகத்தியத்திற்கு ஆரியவிலக்கணத் தொடர்பின்மை
அகத்தியம் வடமொழியிலக்கண நூல்கட்கு மிகமிக முந்தியதாதலானும், தமிழிலக்கணத்திலுள்ள குறியீடுகளெல்லாம் செந்தமிழ்ச் சொற்களே யாதலானும், வடமொழியிலக்கணத்திலில்லாத சில சொல்லமைதிகளும் பொருளிலக்கணமும் இசைநாடகவிலக்கணமும் தமிழிலுண்மையானும், ஆரியர் இந்தியாவிற்குள் புகு முன்பே திராவிடர் தலைசிறந்த நாகரிகம் அடைந்திருந்தமையானும், அகத்தியத்திற்கும் வடமொழியிலக்கணங்கட்கும் எட்டுணையும் இயைபின் றென்க.
“ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன் கேட்
டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க”
என்று புத்தமித்திரன் கூறியது, தமிழ்நாட்டிற் பௌத்தத்தைச் சிறப்பித்தற்குக் கூறிய புனைந்துரையே யாகும்.
தமிழிலக்கியத்தின் உச்சநிலைக் காலம்
The Augustan Age of Tamil Literature.
தமிழிலக்கியத்தின் உச்சநிலைக்காலம் தலைக்கழகக் காலமே யென்பதற்குக் காரணங்கள் : —
(1) தமிழ்ப் பயிற்சி வரவரக் குறைதல்.
தலைக்கழகக் காலத்தில், தமிழ் முத்தமிழாயிருந்து, பின்பு இடைக்கழகக் காலத்தில் வெவ்வேறாய்ப் பிரிந்தது. கடைக் கழகக்காலத்தில் இசை நாடக நூல்களிருந்தும் புலவராற் பெரும்பாலும், பயிலப்படவில்லை. இதுபோதோ, இசை நாடக நூல்கள் இல்லாமையுடன், இயற்றமிழும் சரியாய்க் கற்கப்படவில்லை, இயற்றமிழ்ப் பகுதிகளில் முக்கியமான பொருளிலக்கணம் தெரிந்த புலவர் இதுபோது மிகச் சிலரேயாவர்.
(2) முக்கழகங்களும் முறையே ஒடுங்கல்.
முக்கழகங்களும் காலத்தினாவன்றித் தன்மையினாலும் தலை யிடை கடையாயினமை, கீழ்க் காணும் குறிப்பால் விளங்கும்;
தலை | இடை | கடை | |
உறுப்பினர் தொகை | 549 | 59 | 49 |
பாடியார் தொகை | 4449 | 3700 | 449 |
கழகமிருந்த ஆண்டுத்தொகை | 4440 | 3790 | 1850 |
இரீயினார் தொகை | 89 | 59 | 49 |
அரங்கேறிய அரசர் தொகை | 7 | 5 | 3 |
(3) கலைகள் வரவர மறைதல்.
தலைக்கழகக் காலத்தில் எத்துணையோ கலைகள் தமிழிலிருந்தன. அவை ஒவ்வொன்றாய் மறைத்து போயின, இன்றும் நூல் வழக்கிலில்லாவிடினும் செயல் வழக்கிற் பல கலைகளுள்ளன. அவற்றுள் ஒன்று சிற்பம், சிற்பக்கலைக்குரிய அக்கிரபட்டியல், பலகை, முனை, இதழ், குடம், தாடி, கால், நாகபந்தம், போதிகை, யாளம், கூடு, நாணுதல், மதளை, பூமுனை, கொடி, சாலை, கும்பம், பீடம், மண்டபம் கோபுரம், கொடுங்கை சுருன்யாளி, தூண், பட்டம், அளவு உத்திரம், முட்டி பந்தம், கொடிவளை, ஆளாங்கு, அணிவெட்டிக்காய், கோமுகம் முதலிய குறியீடுகள் இன்றும் தமிழாயுள்ளன.[42] பிற குறியீடுகளும் தற்போது வடசொல்லாயிருப்பினும், தமிழினின்றும் மொழி பெயர்க்கப்பட்டவையே: இன்றும் தமிழ் நாட்டிற் கட்டடத் தொழில் தமிழராலேயே செய்யப்படுவதும் பார்ப்பனராற் செய்யப்படாமையுங் காண்க: (4) இலக்கணம் வரவரப் பிறழ்தல்.
தொல்காப்பியர் காலத்திலேயே நூலில் இலக்கணப் பிழைகள் தோன்றினமை முன்னர்க் கூறப்பட்டது. அதோடு வழக்கிலும் பல வழுஉ முடிபுகள் பிற்காலத்தில் தோன்றியுள்ளன.
அல்ல என்னும் படர்க்கைப் பலவின்பால் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றே, ஏனை எண் ணிடங்கட்கும் வழங்கி வருதல் காண்க;
(5) சொற்கள் வரவரப் பொருளிழத்தல்.
தலைக்கழகத்திற்குப் பின், ஒரு பொருட் பலசொற்களைப் புலவர்கள் பெரும்பாலும் திட்டமில்லாது வழங்க வந்திருக்கின்றனர்.
ஈ, தா, கொடு என்பன, முறையே இழிந்தோன் ஒத்தோன் உயர்ந்தோன் சொற்களாகும். இவை பிற்காலத்தில் வேறுபாடின்றி வழங்கப்பட்டுள்ளன.
(6) தமிழ் வரவரத் தூய்மைகெடல்.
தொல்காப்பியம் முழுமையிலும், ஐந்தாறே வட சொற்கள் உள்ளன. பிற்காலத்தில் அவை வரவரப் பெருகினமையை, முறையே, கடைக்கழகநூல்கள், திருவாசகம், கம்பராமாயணம், வில்லிபுத்தூராழ்வார் பாரதம் முதலியவற்றை நோக்கிக் காண்க . பிற்காலத்திற் செய்யுள் செய்தார் தமிழின் தூய்மையைச் சிறிதுங் கருதாமல், மோனை யெதுகையொன்ற நோக்கி, வடசொற்களை ஏராளமாயும் தாராளமாயும் வழங்கி விட்டனர்.
(7) நூற்செய்யுள் வரவர இழிதல்.
முக்கழகக் காலங்களிலும், பாக்களாலேயே பெரும்பாலும் நூல்களியற்றப்பட்டன. பிற்காலத்தார் பெரும்பாலும் பாவினங்களையே தெரிந்துகொண்டனர், பாவினும் பாவினம் இயற்றுதற்கெளிதாயிருத்தலின்:
(8) பொருளினும் சொல்லே வரவரச் சிறத்தல்,
கழகக் காலங்களில் சொல்லினும் பொருளே சிறந்ததென்று, செந்தொடையாயினும் பொருள் சிறப்புச் செய்யுள் செய்தனர். பிற்காலத்தில், மடக்கு, திரிபு முதலிய சொல்லணிகளையும், பலவகை ஓவிய (சித்திர)ச் செய்யுட் களையும் சிறப்பாகக் கொண்டு, அவற்றிலேயே தம் திறமையைக் காட்டினர். பொருளணியில் இயற்கைக் கருத்தும் சொல்லணியில் செயற்கைக் கருத்தும் அமைதல், செய்யுளி யற்றிப் பயின்றவர் யாவர்க்கும் புலனாம்.
(9) நூற்பொருள் வரவர இழிதல்.
முற்காலப் புலவர் மேனாட்டார் போலப் பல்வகைக் கலை நூல்களை இயற்றினர் : பிற்லாலப் புலவரோ கோவை, உலா, அந்தாதி, கலம்பகம் முதலிய புகழ் நூல் வகைளையே இயற்றுவாராயினர். ஒருவர் கோனவ பாடிவிட்டால், தலை சிறந்த புலவராக மதிக்கப்படுவர். ‘யாவையும் பாடிக் கோவயைப் பாடு’ என்பது பழமொழி.
பிற்காலத்தில் வகுத்த 96 பனுவல்களும் பெரும்பாலும் புகழ் நூல்வகைகளே, இதனால் பிற்காலத்தாரது கலை வர்ச்சியின்மை வெளியாகும்.
செய்யுள் கட்கும் நூலாவுக்கும் குலமுறை வகுத்ததும், பிற்காலத்தார் புல்லறிவாண்மையைக் காட்டும்.
கடைக்கழகக் காலத்தில் நால்வர் தனித்தனி நாற்பது செய்யுள் கொண்ட நூலொன்றை யியற்றினர். பிற்காலத்துப் பாட்டியல்கள் அவற்றின் தொகையிலிருந்தும், ‘நானாற்பது’ என்றொரு நூல்வகையை வகுத்து கொண்டது நகைப்பிற் கிடமானதே. கதையுணர்ச்சியிழந்தமையாலும், வடமொழியினின்றும் வந்த பழமைக் கல்வியினாலும், சரித்திரம் திணை நூல் என்னும் ஈர் அறிவியற்கலைகட்கும் மாறாகப் பாவியங் (காவியம்) களில், நாட்டுப்படலம் நகரப் படலம் முதலிய பகுதிகளில், தம் மதிநுட்பத்தைக் காட்டுவதொன்றே குறிக் கோளாகக் கொண்டு, பொய்யும் புலையுமானவற்றை யெல்லாம் புனைவாராயினர் பிற்காலப்புலவர்.
(10) ஆட்பெயர்கள் வரவர வடசொல்லாதல்,
கடைக்கழகத்திற்கு முன் காலத்தில், அரசர் பெயர்கள் கடுங்கோன் காய்சினன் எனச் செந்தமிழ்ப்பெயர்களாயிருந் தமையும், பின் காலத்தில் ஜடிலவர்மன் பராக்கிரமன் என வட மொழிப்பெயர்களானமையும், படைத்தலைவன், மேலோன் என் ம் தனித்தமிழ்ப் பெயர்களிருப்பவும், அவற்றுக்குப் பதிலாய், முறையே ஏனாதி (சேனாபதி), எட்டி (சிரேஷ்டின்) என்னும் வடமொழிப் பெயர்கள் பட்டப்பெயர்களாய் வழங்கி னமையுங் காண்க,
(11) வரவர வட நூல் தமிழ் நூலுக்களவையாதல்,
(12) தமிழர் பல துறைகளிலும் வரவரக் கெட்டுவருதல்.
கடைக்கழக இலக்கியம் ஓர் இலக்கியமாகாமை
பலர் கடைக்கழக இலக்கியமே தமிழிலக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கினறனர், அதுவே இலக்கியமாயின், தமிழ் புன்மொழிகளில் ஒன்றாகவே வைத்தெண்ணப்படும்.
பதினெண் மேற்கணக்கான பத்துப்பாட்டு எட்டுத் தொகை என்பவற்றுள், பத்துப்பாட்டு, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை என்ற, நான்கே நூல் என்னும் பெயர்க்குச் சிறிது உரிமை யுடையவை, இவையும் புகமும் அகப்பொருளும் பற்றியலையே. ஏனைய நான்கும் தனிப் பாடற்றிரட்டுக்கள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தனி நூல்களாயினும், நன்னெறி அகப்பொருள் என்னும் இரு பொருள் பற்றியனவ.
கடைக்கழக நூல்கள் முப்பத்தாறனுள்ளும் ஒன்றாவது கலைபற்றியதன்று, பாவியமுமன்று. அவற்றுள் ஆசாரக் கோவையோ வட நூல் மொழிபெயர்ப்பாயும் பிறப்பிலுயர்வு தாழ்வு வகுப்பதாயும், எளிய பொருள்களைக் கூறுவதாயு முள்ளது,
கடைக்கழக நூல்கள் என்று கூறப்படும் முப்பத்தாறும், அக்கழகக் காலத்திலேயே தோன்றியவையல்ல. அவற்றுட் சில அதன் பின்னரே இயற்றவும் தொகுக்கவும்பட்டன. தொகை நூல்களெல்லாம் ஒருவரே ஒரே காலத்தில் தொகுத்தவையுமல்ல.
மேலும், நாலடியார், நான்மணிக்கடிகை முதலிய பல கீழ்க்கணக்கு நூல்கள், கடைக்கழகப் புலவராலியற்றப் படாமையும், மேற்கணக்கு பதினெட்டிற்கொப்பக் கீழ்க்கணக்கு பதினெட்டு வகுக்கப் பட்டமையும், நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன நந்நாநூறு பாடல்களாய்த் தொகுக்கப்பட்டமையும் நோக்கி உணர்ந்துகொள்க. பதினெண்கீழ்க்கணக்குள் பதினெட்டாவது நூல், கைந்நிலை யென்றும் இன்னிலையென்றும் இருவேறு கொள்கை நிலவு வதையும் நோக்குக.
சிறந்த நூல்களெல்லாம் அகத்தியர்க்கு முன்னமே தமிழில் இயற்றப்பட்டிருந்தன: பிற்காலத்தார் அவற்றை ஆராய்ந்தே வந்தனர் என்பதை,
“தலைச்சங்கமிருந்தார்……. தமிழாராய்ந்தது கடல் கொள் ளப்பட்ட மதுரையென்ப.” ‘இடைச்சங்கமிருந்தார்……. தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப.” கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் …….. சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்ப” என்று முக்கழக வரலாற்றிற் கூறிய தினின்றும் அறிந்து கொள்க.
அகத்தியர்க்கு முன்னரே தனித்தமிழர் தமிழ் வளர்த்தமை
அகத்தியர்க்கு முன் இந்திரன் என்ற ஓர் ஆரியர், தமிழிலக்கணம் செய்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவ்விந்திரனுக்கு முன் ஆரியர் இலக்கணம் பெரும்பாலும் செய்திருக்க முடியாது.
“தலைச்சங்கமிருந்தார்…. நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோனீறாக எண்பத்தொன்பதின்மரென்ப’ என்று, தலைக்கழகமிருந்த காலம் 89 அரச தலைமுறையினதாகச் சொல்லப்படுதலால், அகத்தியர் அவ்வளவு காலமிருந்திருக்க முடியாதென்பது முழுத்தேற்றம். ஆகவே, தலைக்கழகத்தின் இறுதிக் காலத்தில், அல்லது அதன் பின் தான், அகத்தியர் தமிழ் நாட்டிற்கு வந்திருக்க முடியும். அவர் தென் மதுரை சென்ற சில ஆண்டுகளுக்குள், குமரி நாட்டின் தென்பகுதியைக் கடல் கொண்டது. பின்பு அவர் ஓய்வு பெற்றுப் பொதியமலையில் தவமிருந்து தம் இறுதிக் காலத்தைக் கழித்தார், பாண்டியன் கபாடபுரத்தைக் கட்டி அங்கு இடைக் கழகத்தை நிறுவினான். அதில் தொல்காப்பியர் தலைமை தாங்கினார். அகத்தியர் அக்காலத்தில் இருத்தனரேனும், அக்கழகத்தில் உறுப்பினராயிருந்ததாக முக்கழக வரலாறு கூறுவது. அவர் அக்காலத்திலிருந்தமை பற்றியேயன்றி வேறன்று, தலைக்கழகத்தை அவர் அமைத்தார் என்ற வரலாறு பொருந்தாதென்பது முன்னர்க் கூறப்பட்டது. ஒவ்வொரு கழகமும் பல தலைமுறையாக நடைபெற்றதென்றும், அவற்றுள் இறுதித் தலைமுறையிலிருந்த புலவர் தொகையே வரலாற்றிற் கூறப்படுகின்றதென்றும் அறிந்து கொள்க.
அகத்தியர், தொல்காப்பியர் காலத்திலிருந்து கடைக் கழகக் காலத்தில் கபில பரன நக்கீரரும், அண்மைக் காலத்தில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களும், ராவ்சாஹிப் மு. இராகவையங்கார் அவர்களும், ரா. இராகவையங்கார் அவர்களுமாகப் பெரும்பாலும் பார்ப்பனரே தமிழ் நூலுக் கதிகாரிகளாயிருந்து வருவது எவர்க்கும் தெரிந்ததே.
குமரிநாடு எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு பழைமையானது தமிழ் என்பதை அவர் அறிவாராக. தொண்டு நும் என்னுஞ் சொற்களின் இயல்பு அகத்தியர் காலத்தவரான தொல்காப்பியரால் அறியப்படாமையாலும், இக்காலத்தினின்று பழங்காலம் நோக்கிச் செல்லச் செல்லத் தமிழில் வட சொற்கள் குறைந்துகொண்டே போவதினாலும், அகத்தியத்திலும் தொல்காப்பியத்திலும் ஐந்தாறு சொற்களே வட சொற் களாயிருத்தலாலும், அகத்தியர் காலத்திற்கு முன்பே எட்டுணையும் வடசொற்கலவாத தனித்தமிழ் வழங்கியதென்றும் அது தமிழராலேயே வழங்கப்பட்ட தென்றும் அறிந்து கொள்க:
பேரகத்தியம் என்று இதுபோது வழங்கும் நூல் பிற்காலத்தில் வடமொழிப்பற்றுள்ள ஒருவராற் செய்யப்பட்டது. அது பேரில் மட்டும் அகத்தியம் என்க.
அகத்தியர் சிற்றகத்தியம் பேரகத்தியம் என இருவேறு நூல்கள் இயற்றியதாகத் தெரியவில்லை. அகத்தியம் வழக்கற்றபின், அதன் நூற்பாத்திரட்டுக்களால், சிறியதும் பெரியதுமான இரண்டே முறையே அப்பெயர் பெற்று வழங்கியிருத்தல் வேண்டும்.
வடசொல்லைத் தமிழ்ச் செய்யுட்குரிய சொற்களில் ஒன்றாகவும் (எச். 1). மொழிபெயர்ப்பை வழி நூல் வகைகளுள் ஒன்றாகவும் (மரபு. 94) தொல்காப்பியர் கூறியது பொருந்தவில்லை. அவற்றுள், வடசொல் ஒரோவொன்று (வீணாக) வருவது அவர் காலத்தில் உள்ளதேயாயினும், மொழிபெயர்ப்பிற்குத் தமிழில் இடமிருந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும், தொல்காப்பியத்தில் அங்கனங் கூறியிருப்பதால், அது தமிழின் இன்றும் மொழி பெயர்த்த வட நூல்களையே முதனூல்களாகக் காட்டும் ஆரிய ஏமாற்று. அவர்க்கு முன்னமே தொடங் கினதையே உணர்த்துவதாகும், இது வேண்டாதவட சொற்கள் தொல்காப்பியத்தில் வழங்குவதனாலும் உணரப்படும். அக்காலத்தில் இரண்டொரு சொற்களே ஆரியர் தமிழிற் புகுத்தமுடியும் என்பதையும் உய்த்துணர்க.
அகத்தியர்க்குமுன் தமிழ் சற்றுத் தளர்ந்திருந்தமை
சீகத்தியர் காலத்திற்கு முன், தமிழ் நூல்கள் சிறிது போது கற்கப்பட இருந்தமை, பின்வருங் காரணங்களால் விளங்கும்.
(1) அகத்தியர் முருகனைநோக்கித் தவங்கிடக்க, அத்தெய்வம் தோன்றி, அவர்க்குச் சில ஓலைச்சுவடிகாக் காட்டிற்று என்ற கதை.
(2) அகத்தியர் தமிழை உண்டாக்கினார் என்ற வழக்கு
{3) தொல்காப்பியப் பாயிரத்தில் ‘முந்து நூல் கண்டு’ என்று கூறியிருத்தல்.
அகத்தியர்க்கு முன்பே, சில ஆரியர் தமிழ் நாட்டிற்கு வந்திருந்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவர்வயப்பட்டே பாண்டியன் தமிழைச் சிறிதுபோது வளர்க்காதிருந்திருக்க வேண்டும். கடைக்கழத்திற்குப் பின், பாண்டியரிருந்தும் கழகம் நிறுவாமையும், வணங்காமுடிமாறன் பொய்யாமொழிப் புலவர் கழகம் நிறுவச் சொன்னமைக்கு இணங்காமையும் நோக்கியுணர்க.
தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத சில தொன்னூல்களைக் கண்ட மைபற்றியே, தொல்காப்பியர் என்று அவர் பெயர் பெறவும், முந்து நூல் கண்டு என்று பாயிரத்திற் குறிக்கவும் நேர்ந்ததென்க. இதை, பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் காலத்தில் கழக கால்கள் அறியப்படாதிருந்ததும், அவருக்குத் தெரியாத முது நூல்களை அவர் மாணாக்கரான டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் கண்டதுமான நிலைக்கு ஒப்பிடலாம்.
தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத முந்து நூல் கண்டமைபற்றியே, தம் நாலில் அகத்தியத்தைப்பற்றி எங்கேனும் குறிப்பிடவில்லையென்க. தொல்காப்பியம் அகத் தியத்திற்குப் பிந்தினதாதலின், அதிலும் சிறப்பாய் இலக்கண மெழுதப்பட்டது. அகத்தியம் வழக்கற்றமைக்கு இதுவும் ஒரு காரணமாகும். இதை யறியாதார் பிற்காலத்தில், தொல் காப்பியர் அகத்தியத்தைச் சா’த்ததாக ஒரு கதை கட்டினர்.
தொல்காப்பியர் அகத்தியரைத் தம் ஆசிரியராகவேனும் ஓரிடத்தும் குறிக்காமையால், அவ்விருவர்க்குமிருந்த தொடர்பு, வேதநாயகம் பிள்ளைக்கும் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு மிருந்தது போன்றதோ என்று ஐயுறக் கிடக்கின்றது.
அகத்தியர் தமிழ்நூற்பயிற்சியைப் புதுப்பித்தமை
டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள், எங்கனம் மடங் களிலும் தமிழ்ப்புலவர் வீடுகளினும் பயிலப்படாது குவிந்து கிடந்த பல தமிழ் நூல்களைத் திரட்டி அசட்டுத் தமிழுலகுக்குத் தந்தார்களோ, அங்ஙனமே அகத்தியரும் சிறிதுபோழ்து பயிலப்படாது கிடந்த தமிழ் நூல்களைத் திரட்டி யாராய்ந்து, தமிழ்நூற் கல்வியைப் புதுப்பித்தாரென்க.
இதனால், தலைக்கழகம் முடிந்த பின்னரே அசுத்தியர் தென்னாட்டுக்கு வந்தாரென்பதும், அக்கழகம் நின்றுபோன மைக்குச் சில ஆரியரே காரணமாயிருந்திருக்கலாமென்பதும், இங்ஙனம் தமிழைத் தளர்த்தோரும் தமிழை வளர்த்தோருமாக இருசாரார் தமிழ் நாட்டிற்கு வந்த ஆரியர் என்பதும் நுனித் தறியப்படும்.
மேனாட்டில் முதல் முதல் இலக்கணம் வரைந்தவர் பிளாற்றோ (Plato, B.C 421) என்றும். அவர் பெயர்ச் சொல்லும் வினைச்சொல்லுமே கண்டுபிடித்தார் என்றும் அதன்பின் அவர்தம் மாணாக்கரான அரிஸ்ற்றாட்டில் (Aristotle, B.C,384) இடைச் சொல்லும் எச்சமுங் கண்டுபிடித் தாரென்றும், மேனாட்டிலக்கணங்கட்கெல்லாம் அடிப்படையானதும் விளக்கமானதும் உண்மையில் இலக்கணமென்று சொல்லத் தக்கதும், டையோனிசியஸ் நிராக்ஸ் (Dionysius Thrax, B.C; 100) எழுதிய இலக்கணமேயென்றும் மாக்ஸ் முல்லர் கூறுகிறார்:
வடமொழியில் நிறைவான இலக்கணமாகிய பாணினீயம் கி.மு. 7ஆம் நூற்றாண்டினது. அதற்கு முன்னமே பல இலக்கண நூல்கள் வடமொழியிலிருந்தன. ஆயினும், அவை யாவும் வடமொழி முதற் பாவியமான வான்மீகியிராமாயணத்திற்குப் பிற்பட்டவையே. வடமொழியிலக்கணங்கள் முதன் முதல் ஆரிய மறைக்கே எழுந்தனவேனும், அவை தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டவை என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. அவை ஆரியர் தமிழிலக்கணத்தை யறிந்தபின்னரே இயற்றப் பட்டவையென்பது பின்னர் விளக்கப்படும்.
இங்ஙனம், உலகத்திலேயே முதன் முதல் திருந்தியதும் இலக்கணமெழுதப்பெற்றதுமான தமிழ், இது போது ஒரு புன் மொழியினும் இழிவாயெண்ணப்படுவதற்குக் காரணம், இற்றைத் தமிழரின் அறியாமையும் மடிமையுமேயன்றி வேறன்று.
ஆரியர் தம் மறை நூல்களைத் தமிழர்க்கு நெடுங்காலம் மறைத்துவைத்தது. அவற்றின் தாழ்வு வெளியாகாமைப் பொருட்டேயன்றி, அவற்றின் தூய்மையைக் காத்தற்பொருட் டன்று. தமிழிலுள்ள கலை நூல்களை மொழி பெயர்த்தும், அவற்றை விரிவாக்கியும், வடமொழியிலக்கியத்தை மிக வளர்த்துக் கொண்ட பின்புங்கூட, அவர் தம் மறை நூல்களைத் தமிழர்க்கு நேரேயறிவிக்கவேயில்லை. மேனாட்டாரே முதன் முதல் அவற்றைக் கற்றுத் தம் மொழிகளிற் பெயர்த்துத் தமிழர்க்கறிவித்தனர். இப்போது உண்மை வெளியாகிவிட்டதே யென்று, ஆரியர் தம் முன்னோர் கி. மு. 2500 ஆண்டுகட்கு முன் இயற்றிய எளிய மறைமொழிகட்கு, இவ்விருபதாம் நூற்றாண் டிற்குரிய விழுமிய கருத்துக்களையெல்லாம் பொருத்தியுரைக் கின்றனர். இதன் பொருந்தாமை ஆராய்ச்சியில்லார்க்குப் புலனாகாதுபோயினும், அஃதுள்ளார்க்குப் போகாதென்க;
வடதிசை உயர்ந்ததும் தென்திசை தாழ்ந்ததும்
அகத்தியர் தெற்கே வந்த பின், நிலம் வடதிசையில் உயர்த்ததும் தென் திசையில் தாழ்த்ததும் முன்னர்க் கூறப்பட்டது. இங்கனமே, கல்வி, கைத் தொழில், வாணிகம், செல்வம், அலுவல், அதிகாரம் முதலிய பிறவற்றிலும் அவ்விரு திசைகளும் (ஆரியமும் திராவிடமும்) முறையே உயர்த்தும் தாழ்ந்தும் போயின வென்றறிந்துகொள்க.
மேற்கு கிழக்கு என்னும் திசைப் பெயர்கள் போன்றே, உத்தரம் (வடக்கு) தக்கணம் (தெற்கு) என்னும் திசைப் பெயர்களும் ஏற்ற விறக்கங்களையுணர்த்துவது பின்னர்க் கூறப்படும். கன்னடத்தில் இலக்கியம் தோன்றியது கி. பி. 8ஆம் நூற்றாண்டென்றும், தெலுங்கில் தோன்றியது கி. பி. 10-ஆம நூற்றாண்டென்றும், மலையாளத்தில் தோன்றியது கி. பி. 13ஆம் நூற்றொண்டென்றும் சொல்லப்படுகின்றது. தமிழிலக்கியம் தோன்றிய காலம் இன்ன நூற்றாண்டென்று வரையறுத்துக் கூற இயலாதலாறு, அத்துணைப் பழைமையாயிருத்தலின், திராவிட மொழிகளில் தமிழே — மொழியாயினும் நூலாயினும்—மிகத்தொன்மை வாய்ந்ததென்பதைச் சொல்ல வேண்டியதேயில்லை.
தமிழின் திருத்தம் :
திராவிட மொழிகட்குள் தமிழ் மிகத் திருந்தியதென்பது, அதன் சொல் வடிவங்களாலும் இலக்கணச் சிறப்பாலும் அறியப்படும்.
தமிழ்ச் சொல் வளம்
(1) தமிழின் வளம் :
தமிழின் சொல்வளத்தைத் தமிழரே இன்னும் சரியாய் உணர்ந்திலர்.
உண்மையுடைமை யென்னுங் குணம். நினைவு சொல் செயல் என்ற முக்கரணங்களையுத் தழுவியது என்பதை உணர்த்தற்கு, உண்மை (உள் +மை) வாய்மை (வாய்+மை), மெய்ம்மை (மெய்+மை) என மூன்று சொற்கள் தமிழிலுள்ளன.
மனத்தின் வெவ்வேறு வினையையுங் குறித்தற்கு வெவ்வேறு சொல் உளது.
கா : உள்(ளு). to will (உள்ளம் – will): உணர், to feel’ to comprehend (உணர்வு – sentiment, உணர்ச்சி —feeling); நினை , to think. to remember (நினைவு–thought, நினைப்பு-memory); நினைவு கூர், to remember, to commemorate ; முன்(னு , to propose, to ‘think, to intend (முன்னம்:—intention. indication) ; முன்னிடு, to propose, to set before, முன்னிட்டு having proposed, having set before, for the purpose of. ஒரு காரியத்தை முன்னிட்டு என்னும் வழக்கை நோக்குக. முன்னீடு = Proposal : உன்(னு), to imagine(உன்னம்— imagination); உன்னி , toguess (கன்னிப்பு— guessing); எண(னு). to deliberate. to coasider (எண்ணம்— consideration), கருது, to conceive, to think (கருத்து— concept, idea) அறி, to kaow (அறிவு— kaowledge); கொள், to opine (கோள்— opinion, கொள்கை— doctrine); மதி, to estinate, to regard (மதிப்பு— estination, approximation, respect, மதி—sense); தீர்மானி, to determine, to resolve; நய, to appreciate (நயப்பு—appreciation); தெருள், to perceive clearly : மருள், to be deluded ; ஆய், to test, to examinc, (ஆய்வு— test); ஆராய், to make a critical study, to investigate (ஆராய்ச்சி—research, critical study); சூழ், to Calmisel, to deliberate குழவை—council.
உளத்தொழில் பற்றி இன்னும் பல சொற்களுள, இவற் தொடு துணைவினை சேர்த்துக்கொள்ளின், இக்காலத்திய மனத்தொழில் நுட்ப வேறுபாடு பற்றிய கருத்துக்களை யெல்லாம் குறிக்கச் சொற்களை யமைத்துக் கொள்ளலாம்
மனைவிக்குக் கணவனோடுள்ள புலவியின் மூன்று நிலைகளையுங் குறித்தற்கு,முறையே கடல், புலவி, துனி என மூன்று சொற்கள் உள்ளன.
ஒரு வினைக்குத் தகுந்த சமையும், நல்ல கருத்தில் செவ்வி என்றும் தீய கருத்தில் அற்றம் என்றும் கூறப்படுகின்றது.
தமிழின் சொல்வளத்தை நன்றாயுணர்தற்கு நிலைத் தினைச் சொற்களை நோக்கவேண்டும்.
முதலாவது உள்ளீடுள்ள நிலைத்திணை யுயிரிகளை மர மென்றும், அஃதில்லா தவற்றைப் புல்லென்றும் இருவகையாக வத்தனர் முன்னோர்.
“புறக்கா ழனவே புல்லென மொழிப்” (மரபு 81.)
“அகக்கா முனவே மரமென மொழிப்”(மரபு. 21)
என்பன தொல்காப்பியம்.
நிலைத்திணை புறுப்புக்களில் ஒவ்வொன்றிற்கும் அதனதன் நுட்ப வேறுபாட்டிற்கேற்ப வெவ்வேறு பெயருளது.
இலையென்னும் ஒரேயுறுப்பிற்கு நால்வேறு சொற்களுன. மா வாழை முதலியவற்றினது இலை யென்றும், நெல் கேழ்வரகு முதலியவற்றினது தான் என்றும், கரும்பு, பெருஞ் சோளம் முதலியவற்றினது தோகையென்றும், தென்னை பனை முதலியவற்றினது ஓலையென்றுங் கூறப்படும்.
பூ முதலாவது தோன்றும்போது அரும்பு என்றும், போரும் பானபோது போது என்றும், மலர்ந்தபின் மலர் என்றும், விழுந்த பின் வீ என்றும், வாடிய பின் செம்மல் என்றும் கூறப்படும். பூ என்பது பொதுப்பெயர்.
அரும்பு என்னும் ஒரு நிலைக்கே, அதனதன் அளவுக்குத் தக்கபடி, அரும்பு, மொட்டு, முகிழ், முகை, மொக்குள் என வெவ்வேறு சொற்களுள,
பூக்கள் கோட்டுப்பூ, கொடிப்பூ. நீர்ப்பூ. நிலப்பூ என நால்வகையாக வகுக்கப்படும் இவற்றுடன், செடிப்பூ என்ப தொன்றும் சேர்த்துக்கொள்ளலாம்.
காயின் வெவ்வேறு நிலைகள், பூம்பிஞ்சு, திருகு பிஞ்சு, இளம் பிஞ்சு, பிஞ்சு, அரைக்காய், காய். முக்காற்காய், கன்னற் காய் அல்லது பழக்காய், கடுக்காய் அல்லது கருக்காய் என வெவ்வேறு சொற்களாற் குறிக்கப்படுகின்றன.
மாம்பிஞ்சு வடு என்றும், பலாப்பிஞ்சு மூசு என்றும் விதப்பித்துக் கூறப்படுகின்றன.
பருவத்திற் காய்ப்பது பருவக்காய் என்றும், பருவமல்லாத காலத்திற் காய்ப்பது வம்பக்காய் என்றும் கூறப்படுகின்றது.
முதிர்ந்தபின் கனிவில்லாதது காய் என்றும், கடினமானது நெற்று என்றும் கூறப்படுகின்றன:
செவ்வையாய்ப் பழுக்காத பழங்கள், வெவ்வேறு சாரணம் பற்றிச் சிவியல், சூம்பல், வெம்பல், சொத்தை எனப் பலவகையாகக் கூறப்படுகின்றன. இவற்றுள், சொத்தை வகைசொண்டு, சொத்தை, சொட்டை எனப் பல பெயராற் கூறப்படுகின்றது. சொத்தையான மிளகு பழம் அல்லது வற்றல் சொண்டு என்னுஞ் சொல்லால் மட்டும் குறிக்கப் படுதல் காண்க.
பழத்தின் தோல் வகைகட்கு, அதனதன் வன்மை மென்மைக்குத் தக்கபடி, தொலி, தோல், தோடு, ஓடு, சிரட்டை எனப் பல பெயர்களுள.
விதை வகைக்கு, வித்து, விதை. மணி, முத்து, கொட்டை என வெவ்வேறு சொற்களுள,
இங்ஙனம், ஒவ்வோருறுப்பிற்கும் பற்பல சொற்களுள்ளன. அவற்றையெல்லாம் எனது செந்தமிழ்ச் சொல்லியலகராதியிற் கண்டு கொள்க.
நெல் வகை மட்டும் நூற்றுக்கணக்கா யுள்ளன. அவற்றுள் சம்பா என்னும் ஒருவகையே 70 திறமாயுள்ளது.
ஆங்கிலம் இக்காலத்தில் பல்வேறு மொழிகளினின்றும் ஏராளமான சொற்களைக் கடன்கொண்டிருப்பதால், எக்கருத் தையும் தெரிவிக்கவல்ல மொழியாகப் புகழப்படுகின்றது. ஆனால், இவ்விருபதாம் நூற்றாண்டிலும், ஆங்கிலத்திலும் அதுபோன்ற பிற பெருமொழிகளிலும் இல்லாத பல சொற்கள் கி. மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிலிருந்தது மிக மிக வியக்கத்தக்கதே.
தமிழில் ஒரு பொருட்சொற்கள் பல பொருள்கட்குள்ளன. பிற திராவிட மொழிகள், பல பொருள்கட்குத் தமிழ்ச் சொற்களையே ஒவ்வொன்றும் ஒவ்வொன்றாகத் தெரிந்து கொண்டிருக்கின்றன;
கா: இல் — இல்லு (தெலுங்கு). மனை — மன (கன்னடம்).
(2) தமிழ்த்தாய்மை :
திராவிடச் சொற்கட்கு மூலம் பெரும்பாலும் தமிழிலேயே உள்ளது.
கா : வென்ன (தொ) <வெண்ணெய் = வெள்+நெய். லேது (தெ.) < இலது.
செய் (கை) என்பது போன்ற இரண்டொரு சொற்கள், மூல வடிவில் தெலுங்கிலிருப்பது, பொதுவிதிக்குத் தவிர்ச்சியேயன்றி மாறாகாதென்க,
(3) தமிழ்த்தூய்மை :
தமிழைப் போலப் பிற திராவிட மொழிகளைப் பிற மொழிக்கலப்பின்றி யெழுத முடியாது.
தெலுங்கில் உடலுக்கு வழங்கும் ஒள்ளு, தேகம் என்னும் இருசொற்களில், ஒள்ளு என்பது உடல் என்னும் தமிழ்ச் சொல்லின் சிதைவு தேகம் என்பது வடசொல்,
(4) தமிழின் முன்மை :
பிற திராவிட மொழிச்சொற்கள் மூலத்திற்குத் தமிழைச் சார்ந்திருப்பதுபோல, தமிழ்ச் சொற்கள் மறித்தும் தம் மூலத் திற்குப் பிறமோழியைச் சார்த்திருப்பவையல்ல.
(5) தமிழல் திராவிட மொழிகளின் திசைவழக்குத்தன்மை.
தமிழல்லாத திராவிட மொழிகளெல்லாம், ஆரியர் இந்தியாவிற்கு வருமுன், தமிழின் கிளைவழக்குகளாகவேயிருந்தன.
தமிழிலுள்ள சொற்கள், இயற்சொல் திரிசொல் திசைச் சொல் வட சொல் என்று நால்வகையாகத் தொல்காப்பியத்தில் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், முதல் மூன்றும் தன் சொல் ; இறுதி யொன்றும் அயற்சொல்.
முதல் மூன்றனுள், முன்னிரண்டும் செந்தமிழ்ச்சொல் ; பின்னொன்றும் கொடுந்தமிழ்ச்சொல்.
செந்தமிழ்நாடு
செந்தமிழ் நிலத்தை “வைகையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம்” என்று இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலியோர் உரைத்தனர்.
செந்தமிழ் நாட்டின் சிறந்த பகுதி இன்றும் பாண்டி நாடேயாயிருத்தலின், இவ்வரை பொருந்தாது.
“செந்தமிழ் நாடாவது:—வையையாற்றின் வடக்கும், மருத யாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமையானும், வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும், மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ் திரி நிலமாதல் வேண்டுமாதலானும், அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு:—
“வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி“
என்றனமயாலும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகமென விசேடித்தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறிய வதனாற் குமரியின் தெற்காசிய நாடுகளை யொழித்து, வேங்கட மலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குணகடலின் மேற்கும், குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப என்றுரைத்தார் தெய்வச் சிலையார்,
இவ்வுரையே சிறந்ததாகும்; செத்தமிழ் நிலம்,
“சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ்
சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ்
சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநா டென்ப“
என்பது பிற்காலத்திற் கேற்றதாகும்:
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி“ (தொ. எச்: 4.)
என்பதால், செந்தமிழ் நாட்டெல்லை தாண்டிய பன்னிரு நாடுகள் கொடுந்தமிழ் நாடு என்பதும், அவற்றுள் விதப்பாய் வழங்கிய சொற்கள் திசைச்சொற்கள் என்பதும் பெறப்படும்.
கொடுந்தமிழ்நாடு
கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டையும்,
“தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றி யருவா வதன் வடக்கு — நன்றாய
சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்“
என்னும் வெண்பாவிற் குறிக்கப்பட்டனவாகக் கூறுவர் பல உரையாசிரியர். இவையெல்லாம் முதற்காலத்தில் செந்தமிழ் நாட்டின் பகுதிகளாகக் கொள்ளப்பட்டமையின், இவ்வுரை பொருந்தாது. இந்த கேளுள் வேணாடு புனனாடு என்ற இரண்டிற்குப் பதிலாக, பொங்கர் நாடு ஒன் நாடு என்பவற்றைக் குறிப்பர் இளம் பூரணர், சேனாவரையர் முதலியார்: பொங்கர் நாட்டைப் பொதுங்கர் நாடென்பர் இளம்பூரனார். “தாயைத் தள்ளை என்ப குடநாட்டார், நாயை ஞமலி என்ப பூழி நாட்டார்” என்று திசைச்சொற்குக்காட்டுக்கூறினர் இளம்பூரணர். இங்குக் குறிக்கப்பட்ட இரு நாடுகளும் இப்போது மலையாள நாட்டின் பகுதிகளாக வுள்ளன.
நச்சினார்க்கினியர் பின் வருமாறு திசைச்சொற்குச் காட்டுக் கூறினர்.
“தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பனவற்றைப் பெற்றம் என்றும் , குடநாட்டார் தாயைத் தள்ளை என்றும், நாயை ஞெள்ளை என்றும்: குட்டநாட்டார் தந்தையை அச்சன் என்றும், கற்காநாட்டார் வஞ்சரைக்கையர் என்றும்; சீதநாட்டார் ஏடாவென்பதனை எலுவன் என்றும், தோழியை இருளை என்றும், தம்மாமியென்பதனைத் தந்துவை என்றும்; பூழி நாட்டார் நாயை ஞமலி என்றும், சிறு குளத்தைப் பாழி என்றும்; அருவாநாட்டார் செய்பைச் செறு என்றும், சிறு குளத்தைக் கேணி என்றும்; அருவாவட தலையார் குறுணியைக் குட்டை என்றும் வழங்குப.
“இனிச் சிங்களம் அந்தோவென்பது, கருநடங் கரைய சிக்க குனிர என்பன; வடுகு செப்பென்பது : தெலுங்கு எருத்தைப் பாண்டிலென்பது : துளு மாமரத்தைக் கொக்கென்பது. ஒழித்தவற்றிற்கும் வந்துழிக் காண்க.“
இதனால் தெலுங்கு, கன்னடம் முதலியவை ஒருகாலத்தில் தமிழின் திசைவழக்குகளாகவே இருந்தனவென்றும், பின்பு கிளை வழக்குகளாகி இறுதியில் வடசொறகலப்பால் வேறு மொழிகளாய்ப் பிரிந்து விட்டனவென்றும் அறியட்படும்.
தெய்வச்சிலையாரும் இக்கருத்தை யொட்டியே,
“செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்து முள்ளோர் தத்தம் குறிப்பினையுடைய திசைச் சொல்லாகிய சொல் என்றவாறு.
“பன்னிரு நிலமாவன :—வையையாற்றின் … நாடு, ஒளி நாடு, தென்பாண்டிநாடு. கருங்குட்ட நாடு. குடநாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழிநாடு, மலாடு, அருவா தாடு, அருவா வடதலை என்ப. இவை செந்தமிழ் நாட்டகத்த. செந்தமிழ் (சேர்ந்த) நாடென்றமையால், பிறநாடாகல் வேண்டுமென்பார் எடுத்துக்காட்டுமாற:—“கன்னித் தென் கரைக் கடற் பழத் தீபம் கொல்லம் கூபகம் சிங்கள மென்னும் எல்லையின் புறத்தவும், கன்னடம் வடுகம் கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம் என்பன குடபாலிரு புறச்சையத்துட னுறைபுகூறுந் தமிழ்திரி நிலங்களும், முடி யுடையவரிடு நிலவாட்சியின் அரசு மேம்பட்ட குறு நிலக் குடுமிகள் பதின்மரும் உடனிருப்பிருவருவாகிய பன்னிருவர் அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும், தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையன என்றமையானும், “தமிழ் கூறும் நல்லுலகத்து……………. பொருளும் நாடி” என நிறுத்துப் பின்னுஞ் “செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல் கண்டு” என ஓதியல தனாற் சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும், பன்னிரு நிலமாவன :—
“குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சைலத்தின் மேற்குப்பட்ட கொங் கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கரு நடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்.
“இவற்றுள், கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப்படுதலின், குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினார் போலும், பஞ்சத்திராவிடமெனவும் வடநாட்டார் உரைப்பவாகலான், அவையைந்தும் வேங்கடத்தின் தெற் காதலுங் கூடாமையுணர்க
“அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா என்றவாறு.
“குடாவடியுளியம் என்றவழி, குடாவடி என்பது குடகத்தார் பிள்ளைகட்கு இட்டபெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற்கிட்டபெயர், யான் தற்கரையவருது என்ற வழி கரைதல் என்பது கருநாடர் விளிப்பொருளுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. பாண்டில் என்பது தெலிங்கர் பசுவிற்கும் எருத்திற்கும் பெயராக வழங்குவது. கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்த வழிக் கண்டுகொள்க” என்று கூறியிருத்தல் காண்க.[43]
தெலுங்கு கன்னட முதலியவை பிற்காலத்தில் பிறமொழிகளாய்ப் பிரித்து போன பின்பு, அவற்றின் முன்னை நிலையை . யுணராது அவை வழங்கும் நாடுகளையும் அயன்மொழி நாடுகளையுஞ் சேர்த்துக் கொடுந்தமிழ் நாடாகக் கூறினர் பவணந்தியார்,
“செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி“
என்று, தமிழொழிந்த பதினெண் நிலங்களை,
“சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகங்
கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம் வங்கங்
கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலந்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே“
என்னுஞ் செய்யுளானறிக.
தெலுங்கு கன்னடம் முதலியவை தமிழினின்றும் பிரித்து போனபின்பே, பொங்கர் நாடு ஒளிநாடு முதலிய பழஞ்செந் தமிழ் நாட்டுப்பகுதிகள் கொடுந்தமிழ்நாடாகக் கூறப்பட்டன. இதனால், முன்பு கொடுந்தமிழ் நாடாயிருந்தனவ பல பின்பு பிறமொழி நாடாய் மாறிவிட்டன என்பதும், செந்தமிழ் நாடு வரவரத் தெற்கு நோக்கி ஒடுங்கிக்கொண்டே வருகின்ற தென்பதும், இதற்குக் காரணம் ஆரியக் கலப்பும் செந்தமிழ்த் தொடர்பின்மையும் என்பதும் அறியப்படும்.
செப்பு என்பது, சொல்லுதல் என்னும் பொருளில் மட்டும் திசைச் சொல்லாகும். மற்றப்படி அது செந்தமிழ்ச் சொல்லே என்பது,
“செப்பும் வினாவும் வழா அல் ஓம்பல்” (கிளவி. 13.)
“அஃதன் றென்ப வெண்பா யாப்பே”(செய், 78.)
என்பவற்றால் அறியப்படும்.
செப்பு என்பது, தெலுங்கில் சொல்லுதலையும், தமிழில் விடை சொல்லுதலையுங் குறித்தல் காண்க. அதோடு தமிழிலக்கணந் தோன்றிய தொன்முது காலத்திலேயே, செப்பு என்பது ஓர் இலக்கணக் குறியீடாயமைந்ததையும் நோக்குக, (செப்பல் வெண்பாவோசை.)
ஈ தா கொடு என்னும் மூன்று செந்தமிழ்ச் சொற்களில், ஈ என்பது எங்ஙனம் தன் நுண்பொருளை யிழந்து தெலுங்கில் வழங்குகின்றதோ, அங்ஙனமே செப்பு என்பதும் என்க.
தொல்காப்பியர் காலத்தில், தமிழில் வழங்கிய அயன் மொழிச்சொல் வடசொல் ஒன்றே. அதனாலேயே அது தன் பெயரால் வடசொல் எனப்பட்டது. அதன்படி இப்போது தமிழில் வழங்கும் அயன் மொழிச் சொற்களையெல்லாம். ஆங்கிலச் சொல், இந்துஸ்தானிச் சொல் என அவ்வம் மொழிப் பெயராலேயே கூறல் வேண்டும். திராவிடமொழிச் சொற்கள் மட்டும் திசைச்சொல்லாகவே கூறப்படும்:
தொல்காப்பியர் காலத்தில் தமிழில் வழங்கின வடசொற்களும், அருகிய வழக்கேயன்றிப் பெருகிய வழக்கன்று. அவ்வருசிய வழக்கும் வேண்டாமையாய்த் தமிழைக் கெடுத்தற்கென்றே புகுத்தப்பட்டதாகும்.
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே“
என்று தொல்காப்பியர் கூறியது, வடசொல் மேன்மேலுங் கலந்து தமிழ்த் தூய்மையைக் கெடுக்காதவாறு ஒருவாறு தடை செய்ததே யன்றி, இக்காலத்துச் சிலர் எண்ணுவது போல வடசொல்லையும் பிற சொல்லையும் தாராளமாய்ச் சேர்த்துக்கொள்ளுமாத விடை தந்ததன்று.
(8) திராவிடம் என்னுஞ் சொன் மூலம்
பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும் ‘ அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின.
கா : ஈழம், கடாரம், சீனம், யவனம்.
தமிழம் – த்ரமிள (ம்) —த்ரமிட (ம்) — த்ரவிட (ம்) — த்ராவிட(ம்) என்றும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் எனறு திரிந்ததாகும்.
தமிழம் என்பது தமிள—தனிள—தவிட என்று பிராகிருதத்தில் திரித்த பின்பு, தமிள தவிட என்னு!’ வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரித்ததாக, பண்டிதர் நிரையர்சன் (Dr. Crierson) கூறுவர்.[44]எங்கனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை.
கால் வெல் ஐயர் இதுபற்றித் தலைகீழாகக் கூறினர்: அவர் தவற்றைக் கிரையர்சனுங் குறித்துள்ளார்.
திராவிட மொழிகள் எல்லாவற்றிற்கும், தமிழம் என்னும் பெயரே பொதுப்பெயராக முதலாவது வழங்கி வந்தது. த்ராவிடம் என்னும் வடிவும், தமிழம் என்னும் பொருளிலேயே, முதன் முதல் வழங்கிய தாகும்.தெலுங்கு தமிழினின்னும் பிரிந்துபோன பின்பு,முன்பு ஒன்றாயெண்ணப்பட்ட திராவிட மொழி இரண்டாய்க் கருதப்பட்டு,ஆந்திர திராவிட பாஷா என்னும் இணைப்பெயராற் குறிக்கப்பட்டது. அதன்பின்,கன்னடம்,மலையாளம் முதலிய மொழிகள் பிரித்து திராவிடம் பல்கிய பின், தமிழம் என்னும் பெயரின் மறுவடிவமான தமிழ் திராவிடம் என்னும் சொற்களுள்,முன்னது தமிழ்மொழிக்கும் பின்னது திராவிட மொழிகள் எல்லா வற்றுக்குமாக வரையறுக்கப்பட்டன.
இதுகாறும் கூறியவற்றால், தமிழே திராவிட மொழி கட்குள் மிகத் தொன்மையானதும் மிகத் திருத்தியதும், மிக வளமுள்ளதும், அதனால் மிகச் சிறந்த திராவிட எச்சமானதும் என்றறிந்து கொள்க[45]
- ↑புறம் 2
- ↑ Pandyan Kingdom, p.121,122.
- ↑.இறை பக்.7.
- ↑செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 15,பரல் 2,பக்.67,69.
- ↑ மலைபடுகடாம், 21
- ↑P.S.s>சாத்திரியார் தொல் எழுத்ததிகாரம்,முகவுரை பக்.1,2.
- ↑ இதுவும் முந்தின நூற்பாவும் நமச்சிவாய முதலியார் பதிப்பில் இரண்டாகவும்,கனகசபாபதி பிள்ளை பதிப்பில் ஒன்றாகவும் காட்டப்பட்டுள்ளன.
- ↑புறம். 201
- ↑Ancient India,pp.228,229.
- ↑ இறை (ப) பக்.8,9.
- ↑ தொல். புறத்.18
- ↑ தொல்.புறத். 20
- ↑ தொல் செ.1.பேராசிரியர் உரை.
- ↑தொ.செ.103.பேராசிரியர் உரை.
- ↑ மாறனலங்காரம்;வரலாறு,பக்.10.
- ↑ தொ.உவ.37.பேரா.உரை.
- ↑”இலக்கணம்’,’இலக்கியம்’என்னும் சொற்களைப் பற்றித் தமிழ்ப் பொழிலில் யான் வரைந்துள்ள கட்டுரையைக் காண்க.
- ↑ 1 கருணாமிர்த சாகரம்.பக்.112-5.
- ↑ குறள். 279
- ↑ சாம வேதம்: முகவுரை,பக்.19
- ↑ தொல். அகத். 56
- ↑ தொ. கற்பு. 52
- ↑ தொ.செ.178.
- ↑ Vedic India,p.114.
- ↑ Vedic India,p.174.
- ↑ கருணாமிர்தசாகரம், பக்.644
- ↑ முதல் குலோத்துங்கச் சோழன்.பக்.84,85.
- ↑ சோழவமிச சரித்திரச் சுருக்கம் பக்.58
- ↑ சிலப். 28:133
- ↑ பருமைப்பெயர்— Augmentative
- ↑ The Hindu, March 10,1940,p.7
- ↑ சிலப்.பக்.413-415
- ↑ L S. L. p. 294.
- ↑ Hindu Manners Customs and Ceremonies.Ch.VI.
- ↑ சிலப்.பக்.379
- ↑ Vadic india, pp. 305, 306
- ↑ The Madras mail dated 2nd Dec. 1915
- ↑ கலங்கரை விளக்கம்-LightHouse.
- ↑ Vedic India,p.107.
- ↑ திருவாசகம்.திருவண்டப்பகுதி
- ↑ The Malay Archipelago, pp. 321-2.
- ↑ Dravidian Architecture. pp, 10-23.
- ↑ தொல். எச். நூ. 1, 4 உரை
- ↑ Linguistic Survey of India, Vol. IV. p. 298.
- ↑ Caldwell’s Comparative Grammar, pp, 1, 4, 9, 80, 370.
1. திராவிடம் வடக்கு நோக்கித் திரிதல்
(i) தமிழ் நாட்டில், பாண்டி நாட்டுப் பகுதியாகிய தென்பாகமே இன்றும் தமிழுக்குச் சிறந்ததாக வுளது.
பாண்டியனுக்குத் தமிழ் நாடன் என்ற பெயர் திவாகரத்திற் கூறப்பட்டுள்ளது.ஆகவே, பாண்டி நாடு தமிழ் நாடெனச் சிறப்பிக்கப்பட்டதாம்.
சோழநாட்டைத் தமிழ் நாடென்றும், தொண்டை நாட்டைச் ‘சான்றோருடைத்து’ என்றும் கூறியது பிற்காலமாகும். தமிழரசர்க்குள், முதலாவது ஆரியத்திற்கு முற்றும் அடிமைப்பட்டவன் பாண்டின். அதனாலேயே,இன்று தென்பாகத்தில் வடபாகத் திலிருப்பது போன்ற தமிழுணர்ச்சி யில்லை. ஆயினும், நாட்டுப்புறத்திலுள்ள குடியானவர் கனிடைப் பண்டைத் தமிழ்ச் சொற்களும் வழக்குகளும் பல இன்றும் அழியாதிருந்து, பாண்டி நாட்டின் பழம் பெருமையை ஒரு சிறிது காத்துக்கொண்டிருக்கின்றன.
2. தமிழ்நாட்டில் தென்பாகம் சிறந்ததென்பதற்குக் காரணங்கள்
(1) தமிழை வளர்த்த அல்லது காத்த மூன்று கழகங் களும் பாண்டிதாட்டிலிருந்தமை.
(2) வடபாகத்தில் வழங்காத பல சொற்களும் பழமொழிகளும் வழங்கல்,
(3) வடசொற்கள் தற்பவமாக வழங்கல்,
கா : சாக்ஷி-சாக்கி.
சுத்தம், மிராசுதார் முதலிய சொற்களுக்குத் துப்புரவு. பண்ணையார் முதலிய தனித்தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன,
(4) சொற்கள் உண்மை வடிவில் வழங்கல்: கா : இராமம்-(நாமம்):
(5) அயல் நாட்டினின்று வந்த பொருள்கட்குத் தமிழ்ப் பெயர் வழங்கல்.
கா : bicycle- மிதிவண்டி .
(6) வடபாகத்திலில்லாத பல பயிர்கள் செய்யப்படல்:
கா:காடைக்கண்ணி, சாமை, குதிரைவாலி.
(7) ஓவிய வுணர்ச்சி சிறந்திருத்தல்,
(8) சல்லிக்கட்டு, சிலம்பம் முதலிய மறவிளையாட் டுக்கள் சிறப்பாய் வழங்கல்,
(ii) திருச்சியெல்லையிற் சொற்கள் குறைதல்: கா: பரசு (sweep) என்ற சொல் வழங்காமை:
(iii) வடார்க்காட்டு அல்லது சென்னைத் தமிழ் கொச்சை மிகல்,
(iv) சென்னைக்கு வடக்கில் மொழி பெயர்தல்.
“வடவேங்கடம்” என்று, வேங்கடம் தமிழ்நாட்டின் வடவெல்லையாகத் தொல்காப்பியப் பாயிரத்திற் கூறப்பட்டுள்ளது. ஆயினும். “தமிழ் கூறும் நல்லுலகத்து“ என்றதனால், அதைச் செந்தமிழ் நாட்டின் வடவெல்லையாகக் கொள்வதே பொருத்தமாகும்.
வேங்கடம் இப்போது தெலுங்க நாட்டிற்கு உட்பட்டு விட்டது.
தெலுங்கு மிகுதியும் ஆரியத்தன்மையடைந்து, ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ளது.
தெலுங்கில் எழுத்தொலிகள் வடமொழியிற் போல் வல்லோசை பெறுகின்றன ; வகரம் பகரமாகவும் ழகரம் டகரமாகவும் மாறுகின்றன, வடசொற்கள் மிகத் தாராளமாய் வழங்குகின்றன. ஒரு செய்யுள் பெரும்பாலும் வடசொற்களாயிருந்தால், மிகவுயர்ந்த தெலுங்காக மதிக்கப்படுகின்றது.
தெலுங்கு வடிவாகப் பல தென் சொற்கள் மேலையாரிய மொழிகளிலும் வழங்குகின்றன.
கா : | தமிழ் | தெலுங்கு | ஆரியம் |
விளி | பிலு(ச்)சு | I. pello | |
அடுகு | E. appeal,repeal etc. | ||
அள் (காது) | அடுகு | L. audio | |
வரை | விராசு | E. write, A: S. writan | |
சால் | சாலு | L. satis, E: satisfy; | |
வண்டி, பண்டி | பண்டி | E. bandu | |
வெள்ளூ | Ger. wenden, | ||
A. S. wendan, E. wend to go: |
கேள் என்னும் சொல், வினவு என்னும் பொருளில் தமிழில் வழங்குவதுபோல, அடுகு என்னும் சொல் தெலுங்கில் வழங்குகின்றதென்க, என்னும் Write சொல்லில் (வ்) பண்டு ஒலித்தது.
(v) தெலுங்கிற்கு வடக்கில் ஆரியமொழி வழங்கல்.
பண்டைக்காலத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குஜராத்தி என்னும் ஐந்தையும், ஆரியரே பஞ்சத்ராவிடீ என்று அழைத்தனர். கால்டுவெல் ஐயர் இத்தொகுப்பை ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும், இத்தொகுப்பு சரியானதேயென்பது, இம்மடலத்தின் 2ஆம் பாகத்தில் விளக்கப்படும்.
(vi) வட இத்தியாவில் திராவிட மறைவு.
கோண்டி (Gondi), பத்ரீ { Bhatri), மால்ற்றோ (Malto). போய் (Bhoi) முதலிய திராவிட மொழிகள், மெள்ள மெள்ள ஆரிய மயமாவதை அல்லது மறைந்து போவதைப் பண்டிதர் கிரையர்சன் 1906 ஆம் ஆண்டே தமது ‘இந்திய மொழிக் கணக்கீடு’ என்னும் நூலிற் குறித்துள்ளார்.
(vii) வட இந்திய மொழிகளில் திராவிட அடையாளம்.
ஆரியர் வருமுன் வட இந்தியாவில் வழங்கிய திராவிட மொழிகள், அவர் வந்த பின் ஆரியத்தொடு கலந்துபோனமையால், ஆரியத்திற்கு மாறான பலதிராவிட அமைதிகள் இன்றும் வட நாட்டு மொழிகளிலுள்ளன. அவையாவன:—
(1) பிரிக்கப்படும் ஈற்றுருபால் வேற்றுமையுணர்த்தல்.
(2) ஈரெண்ணிற்கும் வேற்றுமையுரு பொன்றாயிருத்தல்.
(3) முன்னிலையை உளப்படுத்துவதும் உளப்படுத்தாததுமான இரு தன்மைப்பன்மைப் பெயர்கள்.
(4) முன்னொட்டுக்குப் பதிலாகப் பின்னொட்டு வழங்கல்.
(5) வினையெச்சத்தாற் காலம் அமைதல்.
(6) தழுவுஞ் சொற்றொடர் தழுவப்படுஞ் சொற்றொடர்க்கு முன்னிற்றல்.
(7) தழுவுஞ்சொல் தழுவப்படுஞ்சொற்கு முன்னிற்றல்.[1]
இந்தியில் பல தமிழ்ச்சொற்களும் இலக்கண அமைதிகளும் வழக்குகளும் வழங்குகின்றன.
சொற்கள் : | ||
தமிழ் | இந்தி | பொருள் |
ஆம் | ஹாம் | yes |
இத்தனை | இத்னா | இவ்வளவு |
உத்தனை | உத்னா | உவ்வளவு |
உம்பர் | உப்பர் | மேலே |
உழுந்து | உடத் | (ஒரு பயறு) |
ஓரம் | ஓர் | பக்கம் |
கடு | காடா | கடினமான |
கிழான் | கிஸான் | உழவன் |
சவை | சபா | மெல் |
செவ்வை | சாப்வ் | துப்புரவு |
தடி | சடீ | கம்பு |
தண் | தண்டா | குளிர்ந்த |
தண்டம் | தண்ட | தண்டனை |
தாடி | டாடி | தாடி மயிர் |
நேரம் | தேர் | வேளை |
படு | பட் | விழு |
படு | படா | பெரிய |
புகல் | போல் | சொல் |
பூ | பூல் | மலர் |
மாமா | மாமா | மாமன் |
மாமி | மாமீ | அத்தை |
முத்து | மோத்தீ | pearl |
மேல் | மே | (7-ம்வே. உருபு.) |
முட்டி | முட்டி | மொழிப் பொருத்து |
மூக்கு | நாக்கு | நாசி |
மோட்டு | மோட்டா | பருமனான |
வெண்டை | பிண்டி | வெண்டைக்காய் |
இலக்கண அமைதி :
(1) 4 ஆம் வேற்றுமையுருபு தமிழில் ‘கு’ என்றும் இந்தியில் ‘கோ’ என்றுமிருக்கின்றது.
(2) இரு மொழிகளிலும் வேற்றுமையடியுடன் உருபு சேர்ந்து மூவிடப்பெயர்கள் வேற்றுமைப்படுகின்றன.
கா : என்மேல், முஜ்மே.
(3) தமிழில் ‘இய’ என்பதும், இந்தியில் (முன்னிலையில்) ‘இயே’ என்பதும் வியங்கோள் ஈறாகவுள்ளன.
(4) மாறே[2] (மாறு+ஏ) என்பது இருமொழியிலும் ஏதுப் பொருளிடைச் சொல்லா யுள்ளது.
இந்தியில் ‘கே’ என்னும் உருபோடு சேர்ந்தே வரும்.
{5) இந்தியில், செயப்படுபொருள் குன்றாவினைப் பகுதிகள் ஆவ் (வா ஜாவ் போ) என்னும் ஏவலொருமையுடன் கூடி, இறத்தகால வினையெச்சப் பொருள்படும். கா : ஸுன் ஜான் = கேட்டுவிட்டுப்போ.
இங்ஙனம் தமிழிலுமுண்டு, ஆனால், வினைப்பகுதிகள் இறந்தகால வினையெச்சப்பொருள்படாமல் நிகழ்கால வினை யெச்சப்பொருள்படும்.
கா : கேள்வா=கேட்கவா ; கேள்போ = கேட்கப்போ.
(6) இந்தியில் இறந்தகால வினையெச்சங்களும் முற்றுக்களும் ஆண்பாலொருமையில் ஆகார வீறாயுள்ளன.
கா : ஆயா = வந்தான், வந்து.
போலா = சொன்னான், சொல்லி,
இவை ‘செய்யா’ என்னும் வாய்பாடு, வினையெச்சமே பண்டைத் தமிழிலும் வினை முற்றாய் வழங்கிற்று. பாலுணர்த்தும் ஈறு பிற்காலத்திற் சேர்க்கப்பட்டது.
வழக்கு : ‘பல்லைப் பிடுங்கிவிடு’ என்னும் வழக்கு செருக்கடக்கு என்னும் பொருளில், ‘தாந்த் கட்டேகாதோ’ என்றும், ‘உயிரைக் கையிலேந்திக் கொண்டு நடு’ என்பது ‘ஜான்லேக்கர் பாக்’ என்றும் இந்தியில் வழங்குதல் காண்க.
(viii) இந்தியாவிற்கு மேற்கே பெலுச்சிஸ்தான மலை நாட்டில் பிராஹுயீ என்னும் திராவிடச் சிறுபுன்மொழி வழங்கல்.
(ix) பெலுச்சிஸ்தானத்திற்கப்பால் திராவிடமொழி வழங்காமையும், திராவிடச்சொற்களே வழங்குதலும்.
ஒருமொழி தன்னாட்டிற் செவ்வையாயிருந்து, அயல்நாடு செல்லச்செல்லத் திரிவது இயல்பு. ஆங்கிலம் இங்கிலாந்தில் செவ்வையாகவும், இந்தியாவில் திரிந்தும், அப்பிரிக்கா சீனம் முதலிய இடங்களிற் சிதைந்தும் வழங்குகின்றது. இங்ஙனமே தமிழ் அல்லது திராவிட மொழி தென்னாட்டிற் செவ்வை யாயும் வடக்கே செல்லச்செல்லத் திரித்தும் வழங்குவதினால், திராவிடரின் தொல்லகம் குமரிநாடேயென்பது துணியப்படும்.
- ↑ *L. S.I. Vol. IV. pp. 446, 472-4.
Caldweli’s Comparative Glammar : introduction p. 59 - ↑ புறம் 4, 20, 22, 92—3, 271, 380; நற்.231.
3. தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்
(1) நிலத்தின் தொனமை
ஞாலத்தில் குமரிநாடு மிகத்தொன்மையானது. இந்தியாவின் முதற்பெயர் நாவலந்தீவு என்பது. இது நாவலந் நண்பொழில் என்றும் வழங்கும். தமிழ்நாடு முழுவதும் ஒரே பொழில் (சோலை) போலிருத்தமையின், பொழில் என்பது நாடு அல்லது உலகம் என்று பொருள்பட்டது. இதனால் தமிழ் நாட்டின் மக்கட்பெருக்கற்ற ஒரு தொன்முதுநிலையுணரப்படும்.
சரித்திர காலத்திற்கு முற்பட்ட தாழிகளும் அடக்கக் கற்களும் ஏனங்களும், தென்னாட்டிற் பலவிடங்களிற் காணப்படுகின்றன.
“மிகப் பழைமையான மண்டையோடுகளுள் ஒன்று, ஜாவாவினின்று வந்துள்ளது. அத்தீவு தன்னருகிலுள்ள பிற தீவுகளுடன் ஒருகாலத்தில் ஆசிய நிலத்தோடிணைக்கப் பட்டிருந்தது. அது காட்டுமாந்தன் (Orang-utan) என்னும் குரங்கு வதியும் இடங்கட்கு அணித்தானது. மாந்தனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட ஓர் உயிரி வதிந்த இடமாகத் தெரிதலால், அது நமக்கு மிக முக்கியமானது”[1] என்று ஆல்ப்வ்ரெட் கிளாட் (Alfred Clodd) கூறுவதால், அதனோடு ஒரு காலத்தில் இணைக்கப்பட்டிருந்த குமரிநாட்டின் தொன்மையும் ஒரு வாறு விளங்கும்.
யானைக்கையும் மடங்கலுடம்பும் உள்ள யாளி என்னும் விலங்கும், அதுபோன்ற பிறவும் பண்டைத் தமிழ்நாட்டிலிருந்ததும் அதன் தொன்மையைப் புலப்படுத்தும்.
(2) நிலத்து மொழியின் தொன்மை :
இது பின்னர்க் கூறப்படும்.
(3) நிலத்துமக்கள் வாழ்க்கைமுறை
நாட்டுவாழ்க்கைநிலை : இக்காலத்திற்போலச் சரித்திர நூல்கள் முற்காலத்தில் எழுதப்படாவிடினும், முதற்றமிழரின் வாழ்க்கை முறை அகப்பொருட் செய்யுட்களில், சிறப்பாகக் கோவையில், மிகக் காவலாகப் போற்றப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு நாகரிகமடையினும், அதனால் அவரது நடையுடை கொள்கை எவ்வளவு மாறினும், பண்டைமுறைபற்றியே என்றும் பாடவேண்டு மென்று கோவைக்கு ஒரு மரபுள்ளது. அது புலனெறிவழக்கம் எனப்படும். அதாவது. உள்ளதும் இல்லதுங் கலந்து இனியதாகவே யிருக்கும் நாடக முறையும், இனியதும் இன்னாததுங் கலந்து உள்ள தாகவே இருக்கும் உலகியல் முறையும் ஒருங்கே தழுவிய நூனெறி வழக்காகும்.
குறிஞ்சி நாட்டரசன் மகளுக்கு உடையும் அணியும் தழையாகவே கோவையிற் கூறியிருப்பது, மிகப் பழங்காலத்து இயல்பைக் குறிப்பதாகும். இக்காலத்திற் கராச்சிப் பட்டணியும் ஒரு பெண்ணைக்குறித்துக் கோவை பாடினும், பண்டைத் தழையே தலைவன் கையுறையாகக் கூறப்படுவதன்றிக் கராச்சிப்பட்டு கூறப்படாது. இங்கனமே பிறவும்.
பண்டைத் தமிழர் குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலத்திற் குடியிருந்தனர். இவை ஐந்திணை யெனப்படும். இவை நிலைத்திணையாற் பெயர் பெற்றன (இடவனாகு பெயர்.) இவற்றின் பெயர்களுள், பாலை மருதம் என்னும் இரண்டும் மரப்பெயர்கள், ஏனைய பூப்பெயர்கள்.
பாலை எனபது பிறநாட்டிலுள்ளது போன்ற வறண்ட மணல் நிலமன்று, குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையிலுள்ள நிலம் பாலைமரச் சிறப்பால் பாலையெனப்பட்டது, அது முதுவேனிற் காலத்தில் வறண்டும் மற்றக் காலத்தில் செழித்துமிருக்கும்.
“வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
றானலத் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய குறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்”
என்று இளங்கோவடிகள் (சிலப். 11: 12—16) கூறுதல் காண்க. பாலையின் முதுவேனிற்கால நிலையே, பிரிவிற்தரித்தாக அகப்பொருட் செய்யுட்களிற்௷ கூறப்படும்.
மக்கள் ஐந்திணை நிலத்திற்குப் பிரிந்து போவது, குறிஞ்சி யினின்று போவதும், அயல் நாட்டினின்று வந்து குடி புகுந்து போவதுமாக இருவகை. இவற்றுள்,முன்னது மக்கட்பெருக் கால் படிப்படியாய் திகழ்லது ;பின்னது தெரிந்து கோடலால் ஒரே சமையந்தும் நிகழக்கூடியது. இவற்றுள் முன்னதே தமிழ் நாட்டில் நிகழ்த்ததென்க.
குறிஞ்சியில் மட்டும் மக்களிருந்த காலமுமுண்டு. அது மாந்தன் தோற்றத்திற்கு அடுத்த நிலையாகும், தமிழ் நூல்கள் தோன்றியது மருதத்தில் நகரம் தோன்றிய பின் பாதலின், குறிஞ்சியில் மட்டும் மக்களிருந்த தொன்னிலை அப்போது மறைந்து போயிற்று. அதனாற் குறிக்கப்பட வில்லை. ஆயினும் அதைக் கருத்தளவையான் அறிந்து தொள்ளலாம்,
மாந்தன் தோற்றம் ஆணும் பெண்ணுமாய்த் தாளிருந்திருக்க வேண்டும், அவரையே ஆதம் ஏவையென்று கிறித்து மதமும் இஸ்லாம் மதமுங் கூதுகின்றன,
இருமுது பெருங்குரவரினின்றும் பல மக்கள் தோன்றிய பின், குறிஞ்சியில் இடம்போதாமல், சிலர் முல்லைக்குச்சென்றனர்.
முதற்காலத்தில் உணவு தேடுவதே மாந்தர் தொழிலா யிருந்தது. குறிஞ்சியில் காய்கனிகளைப் பறித்தும் வேட்டை யாடியும் உண்டுவந்த மக்கள், இயற்கையாய் விளையும் மர வுணவு போதாமை யாலும், வேண்டியபோ தெல்லாம் ஊலுணவு கிடையாமையாலும், செயற்கையாய்ப் பயிர் பச்சைகளையும் விலங்குகளையும் வளர்க்கத் தொடங்கினர். இதற்கு மரமடாத்த குறிஞ்சி வசதியாயிராமையால் முல்லைக்குச் சென்றனர். இதனால் கொடிய விலங்குகட்கும் ஓரளவு தப்பினர்.
மாந்தன் முதன் முதலாய் வளர்த்த விலங்கு ஆவே: ஆ என்பது மா என்பதன் மெய் நீக்கம் மா என்று கத்துவது மாவெனப்பட்டது. மா-மான்-மாடு. மா என்பது னகர மெய்யீது பெற்று, ஆவிற்கினமான மானை உணர்த்திற்று. ஆ என்பது மாடு என்பது போல முதலாவது பொதுப்பெயரா யிருந்து, பின்பு பெண்பாலுக்கு வரையறுக்கப்பட்டது. முதலாவது வளர்க்கப்பட்ட விலங்கு மா ஆ) வாதலின் அதன் பெயர் விலங்கினத்திற்கெல்லாம் பொதுப் பெயராயிற்று. ஆ – என்பது னகர வீறுபெற்று ஆன் என்றாயிற்று.
மரவுணவும் ஊனுணவும் மக்கட்த வேண்டியவாயுள் எமையின், உழவும் ஆவோம்பலும் ஒருங்கே தோன்றின வென்னலாம். ஆவானது பால் தந்ததுடன் உழவிற்கு வேண்டிய கன்றுகளையும் ஈன்றது. புல்வெளிகளில் மாடுகளை மேய்த்துக் கொண்டு, சிறிது புன்செய்ப் பயிர் களையும் வினைத்துக் கொண்டனர் முல்லை நிலத்தார்.
மாடு பறையரால் மட்டும் தின்னப்படுகின்றது. மேனாடுகளில் அதை எல்லாரும் உண்கின்றனர்.
முல்லை நிலத்திற் போதுமான நீர்வளமும் நிலவளமுமில்லாமையால், மக்கள் அடுத்தாற்போல், மீனை பெரிதும் விரும்பினவர் நெய்தல் நிலத்திற்தம் கூலத்தைப் பெரிதும் விருப்பினவர் மருத நிலத்திற்குமாகப் பிரிந்து போயினர்.
பாலை நிலவாணர்க்கு முதுவேனிலில் உணவு கிடையாமையால், அன்று அவர் ஆறலைக்கவும் சூறை கொள்ளவும், நேர்ந்தது.
ஐந்து நிலத்திலும் மாத்தர் பரவியபின், குறிஞ்சி நிலத்தார் குறி சொல்வதால் குறவர் என்றும், பாலை நிலத்தார் போர்த் தொழில் செய்து மறம். (வீரம்) சிறந்திருந்தமையின் மறவர் என்றும், முல்லை நிலத்தார் குறிஞ்சிக்கும் மருதத்திற் கும் இடையிலிருந்தமையால் இடையர் என்றும் ஆவைக் காத்தலால் ஆயர் என்றும், மருத நிலத்தார் உழவைச் சிறப்பாய்ச் செய்ததால் உழவர் என்றும், நெய்தல் நிலத்தார் படவுத் தொழில் செய்தமையின் படவர் அல்லது பரவர் என்றுங் கூறப்பட்டார்.
படகு படவு: க–வ, போலி, படவர் – பரவர்-பரதவர் ட, ர, போலி, படவர் செந்நிறமா யிருப்பதால் செம்படவர் எனப்பட்டார், பரதவர் விரித்தல் திரிபு.
நகர வாழ்க்கை நிலை :
மாந்தர் மருத நிலத்திற்கு வந்த பின் நிலையாய்க் குடியிருக்கத் தொடங்கினர்!. அதனால் குடியானவர் எனப் பட்டனர். நிலையாய்க் குடியிருந்ததினால், மருத நிலத்தூர்கள் மூதூரும் பேரூரும் நகரும் மாநகருமாயின, மருத நிலத்தூர்கள் பிற நிலத்தர்களினும் பலவகையிற் சிறந்திருந் தமையால், கார் என்றே யழைக்கப்பட்டன.
உயர் நகர் என்னும் பெயர்கள், முதலில் தனி வீட்டையும், பின்பு, வீட்டுத் தொகுதியான உரையும் குறித்தன. நகர் என்பது பிற்காலத்தில் பேரூருக்கு வரையறுக்கப்பட்டது.
நிலையான வாழ்க்கையாலும், மாந்தர் பெருக்காலும், முதன் முதல் நகரத்திலேயே நாகரிகம் சிறப்பாய்த் தோன் றிற்று. நாகரிகம் என்னும் சொல்லும் நகரம் என்னும் சொல்லினின்று பிறந்ததே. அது முன்னர்க் கூறப்பட்டது.
அரசியல் :
மாந்தர் நிலையாயுள்ள இடத்தில் ஆட்பொருட் பாதுகாப்பிருப்பதும், நிலையில்லாத இடத்தில் அவையில் லா திருப்பதும் இயல்பு. மருத நிலத்தில் மாந்தர் நிவையா யிருந்தமையின், ஆட்பொருட் பாதுகாப்பிற்கு முதலாவது காவலும், பின்பு ஊராண்மை நாட்டாண்மைகளும், அதன் பின் அரசியலும் தோன்றின
குடிகளை ஒரு மத்தை போன்றும் அரசனை அதன் மேய்ப்பன் போன்றுங் கருதினர். அதனால், அரசன் கோன் எனப்பட்டான். அவன் கையில், அரசிற்கு அடையாளமாக ஒரு மேய்ப்பன் கோலுங் கொடுக்கப்பட்டது. அது நேராயிருந்தமைபற்றிச் செங்கோல் எனப்பட்டது. செங்கோல் செம்மையான அரசாட்சிக்கு அடையாளம்.
கோ= பசு. கோ+ அன் கோவன்–கோன் – கோ (ன்). கோன் என்னும் சொல் ஆவென்னும் பொருளில் ஆரிய மொழிகளிற் பெரு வழக்காக வழங்குகின்றது:
Swed.—Dan: ko, Du. koe, Sans. go, Ger. kub, Ice. kyr, Irish.— Gael. bo, Lg bos, Gr. bous.
கோ என்னுச் சொல், ஆவென்னும் பொருளில் தமிழில் வழங்காமையாலும், ஆரியத்தில் வழங்குவதினாலும் அதை ஆரியச் சொல் என்று கொள்ளற்க. பசுவைக் குறிக்க, ஆ. பெற்றம் என ஏனையிரு சொற்கள் வழங்குவதினாலேயே, கோ என்னும் சொல் அப்பொருளில் வழக்கற்றதென்க;
கோவையுடையவன் கோன். அன் ஈற்றில் அகரம் தொக்கது. ஒ. நோ, யாவர்—யார்.
கோவன், கோன் என்னும் பெயர்கள் இயற்பொருளில் இடையனையும், உருவகப் பொருளில் அரசனையுங் குறிக்கும்,
“கோவனிரை மீட்டனன்” (சீவக, 455) என்பதில் இடையனையும், கோவனும் மக்க தில் அரசனையும் கோவன் என்னுஞ் சொல் குறித்தது.
கோன் கோனார் (உயர்வுப்பன்மை) என்னும் பெயாகள் இடையர்க்குக் குடிப்பெயராய் வழங்குகின்றன. கோன் என்னும் சொல், செங்கோன் கடுங்கோன் என்னும் பெயர் களில் அரசனைக் குறித்தது.
அரசன் என்னும் பொருளில், கோன் என்னும் பெயரே ஈ கெட்டுக் கோ என்றாகும். தலைக்கழகக் காலத் தரசர் பெயர் செங்கோன் கடுங்கோன் என்று வழங்கினதையும், கடைக்கழகக் காலத்தரசர் பெயர் (பாலைபாடிய பெரும்) கடுங்கோ , இளங்கோ (அடிகள்) என்று வழங்கினதையும், கோ என்னும் பெயர் பசுப்பொருளுக் கேற்பதையும் கோன் என்னும் பெயர் அரசனுக்கும் இடையனுக்கு மன்றிப் பசுவுக் கேலாமையையும் நோக்குக.
கோ என்பதை, ஆ மா என்பவற்றோடு சேர்த்து,
“ஆமா கோனவ் வணையவும் பெறுமே“
என்று பவணந்தியார் கூறியது தவறாகும்.
கோடான்னும் பெயர் பெற்றுத் திற்கு வழக்கற்றுப் போன மையின், கோன் என்பதின் ஈறுகெட்ட வடிவம், அரசனைக் குறிக்கும்போது மயக்கத்திற்கிடமில்லை,
தா என்னும் சொல் ஆரிய மொழிகளில் வழங்கினும், தமிழுக்கு எங்கனம் உரியதோ, அங்ஙனமே கோ என்னுஞ் சொல்லும் உரிய தென்க. இன்னும் இதன் மயக்குத் தெளிய, இப்புத்தகத்தின் இறுதியிற் காண்க.
அரசியல் பற்றிச் சில தமிழ்ச்சொற்கள் ஆரிய மொழி களில் வழங்குகின்றன. அவை அரசு, பாழி முதலியன. அரசு என்னுஞ் சொல்லின் வரலாறு பின்னர்க் கூறப்படும்.
பாரி = கதர். Gr. polis, a city. இச் சொல்லிலிருந்தே , police (the system of regulations of a city), policy (manner of governing a city or nation), political (pertaining to policy) politics (science of government). polity (civil constitution) முதலிய சொற்கள் பிறக்கும்.
தொழிற் பெருக்கமும் குலப் பிரிவும் :
மருத நிலத்தில் முதலாவது உழவர் என்னும் ஒரே வகுப்பார் இருந்தனர். பின்பு, முறையே வணிகம் அரசியல் துறவு என்பன பற்றி, அவ்வகுப் பினின்றும் பிரிந்து போனவர், வாணிகார் அரசர் அந்தணர் எனப்பட்டார்.உழவர் முதலிய நாற்பாலும் பிற்காலத்தில் ஏற்றத் தலைமை முறையில் தலை மாற்றிக் கூறப்பட்டன. உழவர் கடையிற் கூறப்பட்டமையின் கடையர் எனப்பட்டார்.
கொல், நெசவு முதலிய கைத்தொழில்பற்றிய பின்பு உழவர் குலத்தினின்றே பலர் பிரிந்தனர்.
உழவர் பிறரை தோக்க, வேளாண்மையில் (உபசாரத்தில்) சிறந்திருந்தமையின் வேளாளர் எனப்பட்டார். அவருள் வறியராயினார் உழுதுண் பாரும் செல்வராயினார் உழுவித்துண் பாருமாயினர். இவரே நிறம்பற்றி முறையே கருங்களமர் அல்லது காராளர் என்றும், வெண்களமா அல்லது வெள்ளாளர் என்றுங் கூறப்படுபவர். களத்தில் வேலை செய்பவர் களமர்.
கருங்கள மரும் ஒழுக்கம், ஊண், இடம், பழக்க வழக்கம் முதலியன பற்றிப் பிற்காலத்திற் பற்பல குலமாய்ப் பிரிந்து போயினர். இங்ஙனமே பிறகுலத் தாரும். இவற்றின் விரிவை எனது தென்னாட்டுக் குலமரபு என்னும் நூலிற் கண்டுகொள்க.
நகரத்தில் அரசியல் தோன்றினபின் திணை மயக்கம் ஏற்பட்டது.முல்லை நிலத்திலிருந்த இடையரும் பாலைநிலத்திலிருந்த கள்ளர் மறவரும், நெய்தல் நிலத்திலிருந்த செம்படவரும், குறிஞ்சி நிலத்திலிருத்த குறவரும் நகரத்திற்கு வந்து தத்தம் தொழிலைச் செய்வாராயினர். அவருட் கள்ளரும் மறவரும் முறையே சோழனுக்கும் பாண்டியனுக்கும் படைரூ ராயினர். பண்டைத் தமிழ் நாட்டின் வெற்றிச் சிறப்பிற்கு இவ்விரு குலமும் பெருங்காரணமென்பது தென்னாட்டுக் குலமரபில் விளக்கப்படும்,
கள்ளர் தனித் தமிழராயிருப்பவும், அவரைப் பல்லவரென்று ஓர் அயல் வகுப்பாராகக் கூறி வருகின்றனர் சிலர்: பல்லவர் என்பார், கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையும், சோழ நாட்டை அல்லது தொண்டை மண்டலத்தையாண்ட ஓர் அரசக் குடும்பத்தாரேயன்றித் தனிக் குலத்தினரல்லர். அவருடைய குடிகளும் படைஞரும் தமிழரே, அவருக்குத் தனிமொழியும் தனிமதமுமில்லை , தமிழ் நாட்டு மொழிகளும மதங்களுமே அவர்க்கிருந்தனவும், செல்வமும் மறமும் படைத்த எவனும், ஒரு படையைத் திரட்டிக் கொண்டு ஒரு நாட்டைக் கைப்பற்ற என்றும் இடமுண்டு.
பல்லவர்க்கிருந்த பட்டப் பெயர்களுள், தொண்டையன் என்பதும் ஒன்று, பல்லவர்க்கும் பன்னூற்றாண்டுக்கு முன்பே, சோழ நாட்டின் வடபாகத்திற்குத் தொண்டை மண்டலம் என்றம், அதன் அரசனுக்குத் தொண்டைமான் என்னும் பெயர் வழங்கினமை பெரும்பாணாற்றுப்படையா லறியப்படும். அவ்வாற்றுப்படைத்தலைவனைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகால் வளவனையும் பாடியுள்ளார். கரிகால் வளவன் காலம் கி.பி.1 ஆம் நூற்றாண்டாகும். ஆகையால். புதுக்கோட்டை அரசரைத் தொண்டைமான் என்னும் பட்டம் பற்றிப் பல்லவ மரபினராகக் கூறுதல் பொருந்தாதென்க. மேலும் தொண்டைமான் என்பது தனித் தமிழ்ச்சொல்லாதலுங் காண்க.
வழிபாடும் மதமும் :
வழிபாடாவது ஒரு சிறு தெய்வத்தையேனும் முழு முதற் கடவுளையேனும் வணங்கும் வணக்கம். மதமாவது வீடுபேறு கருதி முழுமுதற் கடவுளை யடையும் பெருநெறி.
மதி+அம் = மதம். மதித்தல் – கருதுதல். கடவுளைப் பற்றிய மதிப்பு மதமாகும். மதத்திற்குச் சமயம் என்றும் பெயருண்டு சமை+ அம் =(சமையம்)-சமயம். சமைதல் – பக்குவமாதல்: பெண்டிர் பூப்படைதலையும் அரிசி சோறா தலையும் சமைதல் என்று சொல்லுவதும், பக்குவமாதல் என்னுங் கருத்துப்பற்றியே, மதம் ஆன்மாக்களை வீடு பேற்றிற்குப் பக்குவப்படுத்தலால் சமயம் எனப்பட்டது. சமையம் = பக்தவமான வேளை. வேளை, சம்யம் பக்குவ மாக்கும் நெறி அல்லது கொள்கை. வேளையைக் குறிக்கும் சமையம் என்னும் சொல், மதத்தைக் குறித்தற்கு ஐகாரம் அகரமாயிற்று. ஒரு சொல் பொருள் வேறுபடுதற்கு எழுத்து மாறுவது, ஒரு சொல்லியல் நூல் நெறிமுறையாகும்.
கா : பழைமை (தொன்மை )—பழமை (புராணம்) – முதலியார்—முதலியோர்.
நொடிப்பழமை, பழமை பேசுதல் என்னும் வழக்குகளை நோக்குக:
வழிபாடு – Cults,
ஐந்தினைத் தெய்வம் :
“மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
என்பது தொல்காப்பியம் (அகத். 5);
முல்லைத்தெய்வம் மாயோன்
மா = கருப்பு. மாயோன் கரியோன். மாயோனுக்கு மால் என்றும் பெயர், மால் கருப்பு, மேகம், வானம், கரியோன் முல்லை நிலத்தில், மேலே எங்குப் பார்த்தாலும் நீல அல்லது கரிய வானமும் மேகமுமாய்த் தோன்றுவதாலும், ஆதிரைக்கு வேண்டிய புல்லும் ஆயர்க்கு வேண்டிய வானவாரி அல்லது புன்செய்ப் பயிர்களும் வளர்வதற்கு மழை வேண்டியிருப்பதாலும்,மேகத்தை வானத்தோ டொப்பக் கொண்டதினாலும், முல்லை நிலத்தார் தங்கள் தெய்வத்தைக் கருமையானதென்று கருதி, மாயோன் என்றும் மால் என்றும் பெயரிட்டனர். திருமால் என்பதில் திரு என்பது அடை.
முல்லை நிலத்திற்குரிய கலுழனை (கருடனை)யும் துளசியையும், முறையே மாயோனுக்குரிய மர்தியாகவும் பவாகவும் கொண்டார்கள்.
குறிஞ்சித்தெய்வம் சேயோன்
சேயோன் – சிவந்தவன், சேயோன் சேந்தன் சிவன் என்பன ஒரு பொருட்சொற்கள் : குறிஞ்சியில் மூங்கிலால் அடிக்கடி தீப்பற்றிக் கொண்ட தினாலும், தீ அஞ்சத்தக்க தான திலாதும். அதைத் (தெய்வமாக அல்லது) தெய்வ வெளிப்பாடாகக் கொண்டு,அதற்குச் சேயோன் என்று பெயரிட் டார்கள்.
சேயோனுக்குக் குறிஞ்சி நிலத்திற்குரிய மயிலை ஊர்தி யாகவும், சேவலைக் கொடியாகவும், கடம்பமலரைப் பூவாகவுங் கொண்டனர்.
கோழியை வீட்டில் வளர்த்தது பிற்கால வழக்கம். சூரபன்மன் மயிலுங் கோழியுமாகிக் கந்தனுக்கு முறையே ஊர்தியுங் கொடியுமானான் என்றது பிற்காலக்கதை. சேவல் போர் செய்வதிற் சிறந்த பறவையாதலால், அத்தொழிலிற் சிறந்த சேயோனுக்குக் கொடியுருவமாய்க் கொள்ளப்பட்ட தென்க.
சேயோனுக்கு முருகன், கந்தன், ஆறுமுகன் என்றும் பெயருண்டு. முருகு என்பது மணம், அழகு, இளமை என்னும் பல பொருள்களை யுடையது. தெய்வத்திற்கு அல்லது பேய்க்கு மணம் விருப்பமென்றும், மலரணிந்து கொண்டாவது மலருள்ள இடத்திலாவது பருவப்பெண்கள் தனிச்செல்லக் கூடாதென்றும், ஒரு கொள்கை தமிழர்க்குள் இன்றும் இருந்து வருகின்றது.
தெய்வம் இயல்பாக அழகுள்ளதென்று எல்லா மதத் தாராலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. இதனால் அழகன் என்று திருமாலுக்கும் சொக்கன் என்று சிவனுக்கும் பிற்காலத் திற் பெயர்கள் தோன்றின. அழகு எப்போதும் இளமையொடு கூடியது. கோவையில் ‘நிலைகண்டுரைத்தல்’ என்னுந் துறையை நோக்குக.
கந்தன் என்னும் பெயர், சந்தில் (தூணில்) தெய்வ வுருவைப் பொறித்த அல்லது செதுக்கிய பிற்காலத்தில் தோன்றினதாகத் தெரிகின்றது. கந்திற்பாவை என்னும் வழக்கை நோக்குக, கந்தனையே ஸ்கந்தன் என்றனர் வட நூலார். ஆறுமுகம் என்னும் பெயர் பின்னர்க் கூறப்படும்.
மருதத்தெய்வும் வேந்தன்
வேந்தன் = அரசன்,
நல்வினை செய்தவரின் உயிர்கள் இறந்த பின் மேலுலகத் திற்குச் செல்லுமென்றும், உலகில் (மருதநிலத்தில்) அரசனா யிருந்தவன் மறுமையில் மேலுலகத்திலும் அரசனாவான் என்றும், மருத நில மாந்தர் கருதி, முதன் முதல் இறந்த அரசனையே வேந்தன் என்று பெயரிட்டு வணங்கினார்கள், மழை மேலிருந்து பெய்வதால், மேலுலக வேந்தனாகிய தங்கள் தெய்வத்தினிட மிருந்தே வருவதாகக் கருதி,மழை வளத்திற் காகவும் அவனை வழிபட்டார்கள்.
நல்வினையாவன வேளான்மையும் போர்த் தொழிலும், போர்த்தொழிலில் ஒருவன் பிறர் நன்மைக்கென்று தன் உயிரைக் கொடுத்தலால், அது தலைசிறந்த வேளாண்மை யாகும். சிறந்த இல்லறத்தார்க்கும் போரில் பட்ட மறவர்க்கும் மறுமையில் வானுலகம் என்பது. அவர் வேளாண்மையிற் சிறந்தவர் என்னும் கருத்துப் பற்றியே,
“செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு” (குறள், 86)
என்றார் திருவள்ளுவர்.
26 ஆம் புறப்பாட்டும் இக்கருத்துப்பற்றியதே.
“நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்க” (புறத். 93)
என்பதனால், போரிலி தந்தவர் வானுலகம் புகுவர் என்ற கொள்கையறியப்படும்.
உழவுத்தொழில் செய்யும் பள்ளரும் போர்த் தொழிற்குரிய மறவரும், இன்றும் தங்களை இந்திர குலத்தாரென்றும், தங்கள் குலமுதல்வன் இந்திரனென்றும் கூறிக்கொள்கின்றனர். அரசனிடத்தில் வேளாண்மையும் போர்த்தொழிலும் ஒருங்கேயுண்டு, அவன் இம்மையிலும் மழைக்குக் காரணமாகக் கருதப்பட்டான்.
“இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு” (குறள், 545)
“முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வாளம் பெயல்” (குறள். 559)
என்றார் திருவள்ளுவர்.
வேளாண்மைக்குச் சிறந்த உழவர் குடியிருப்பதும், சிறந்த அரசு முதன் முதல் தோன்றியதும் மருத நிலமே.
பாலை நிலத்து மறவர் படை ஞராகுமுன், மருத நிலத்து உழவரே போர்த்தொழில் செய்து வந்தனர். அதன் பின்பும் உழவர் போர்த்தொழிலை விட்டுவிடவில்லை. இதை,
“வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும்
வாய்ந்த னர் என்ப அவர் பெறும் பொருளே” (மரபு. 77)
என்று தொல்காப்பியங் கூறுவதாலும், மள்ளர், மழவர் என்னும் பெயர்கட்கு உழவர் மறவர் எள்னு மிருபொருளு முண்மையாலும், உழவர் குலத்தில் ஒரு வகுப்பார் படையாட்சி யென்று பெயர் பெற்றிருப்பதினாலும், மேனாட்டிலும் கீழ்நாட்டிலு மிருந்த பண்டை அமர நாயக முறை (Feudalism) யாலும் அறியலாம்.
பண்டைக்காலத்தில் அரசரையும் தெய்வமாக வணங் கினர் என்பது, இரணியன், நேபுகாத் தேச்சார் முதலியார் சரித்திரத்தாலும், அரசனும் தெய்வ முமிருக்குமிடம் கோயில் என்று கூறப்படு வதினாலும், அரசனுக்கும் அரசிக்கும் தேவன் தேவி என்னும் பெயர்கள் வழங்குவதாலும், திருவாய்க் கேள்வி திருமந்திர வோலை முதலிய அரசக அலுவற் பெயர்களாலும், பிறவற்றாலும் அறியப்படும்,
வேந்தன் என்னும் பெயரை யே, இந்திரன் என்று ஆரியர் மொழிபெயர்த்துக்கொண்டனர். இந்திரன் = அரசன். நரேந் திரன், மிருகேந்திரன், கவீந்திரன் முதலிய பெயர்களை நோக்குக.
நூறு குதிரைவேள்வி வேந்தன் (இந்திரன்) பதவிக்குத் தகுதியாக ஆரியப்பழமை நூல் கூறும்: குதிரை வேள்வி செய் பவன் அரசனே.
கடைக்கழகக் காலம் வரை வேந்தன் வழிபாடு தமிழ் நாட்டிற் சிறந்திருந்ததென்பது, சிலப்பதிகாரத் தாலும் மணி மேகலையாலும் பிற நூல் குறிப்புக் களாலும் அறியப்படும்.
(ஆயர்பாடியில் வேந்தன் வழிபாட்டை நிறுத்திய) கண்ணன் வழிபாடு வரவரத் தமிழ்நாட்டில் வலுத்ததினாலும், நகர மாந்தருள் உழவர் சிறுபான்மையான தினாலும், வேந்தன் மழைவளம் ஒன்றே தரும் சிறுதெய்வமாதலாலும், சைவம் திருமா லியம் என்னும் இரண்டும் வீடுபேற்றிற் குரிய பெரு மதங்களாய் வளர்ந்து விட்டமை யாலும், வேந்தன் வணக்கம் பெரும்பாலும் நின்று விட்டது. இதுபோது ஒரோவோரிடத் துள்ள மழைத்தெய்வவுருவமே பண்டை வேந்தன் வழிபாட் டின் அடையாளமாயுள்ளது.
மருத நிலத் தெய்வத்துக்குப் பண்டிருந்த பெருமையை, அகத்தியர் வேந்தன் சிவிகையைச் சுமந்ததாகத் திருவிளையாடற் புராணமும் குமரிமலையை மகேந்திரமென்று வடநூல் களும் ஐந்திரத்தை ‘விண்ணவர் கோமான் விழு நூல்’ என்று சிலப்பதிகாரமும் கூறுவதும், வேந்தன் விழாவை ஒரு சோழன் நிறுத்தியதால் புகார் கடல்வாய்ப்பட்டதென்ற கொள்கையும் விளக்கும்.
வேந்தனுக்குச் சேணோன் புரந்தரன் என்றும் பெய ருண்டு, சேண் உயரம், சேணுலகத்தரசன் சேணோன், வாலு லகைப் புரந்தருபவன் புரந்தரன். புரந்தருதல் காத்தல்,
நெய்தல் நிலத்தெய்வம் வாரணன்
வாரணம்=கடல்; வாரணன்-கடலோன்
கடல் மீனாகிய சுறாவின் கோடு (முதுகெலும்பு) வாரண னுக்கு அடையாளமாகக் கொள்ளப்பட்டது:
கடைக்கழகத்திற்குப் பின்புகூட தமிழர் வாரித் துறையில், தேர்த்திருந்தமையும், தமிழரசர் நாவாய்ப்படை வைத்திருந் தமையும்,
“காந்தளூர்ச்[2] சாலை கலமறுத் தருளி..
முரட்டொழிற் சிங்களர் ஈழமண் டலமும்[3] ….
முந்நீர்ப் பழந்தீவு பன்னீ ராயிரம்
திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்”
என்று முதலாம் இராஜராஜசோழன் (985) கல்வெட்டும்,
“அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வர்மம்
னாகிய கடாரத் தரசனை வாகையம்
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத்து………..
தேனக்க வார்பொழில் மா தக்க வாரமும்[4]
தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்[5]
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பர கேசரி”
என்று இராஜேந்திர சோழன் (1012) கல்வெட்டும் கூறுவதா இலும், 13-ஆம் நூற்றாண்டுவரை பாண்டியரும் சோழரும் ஈழத்தொடு வைத்திருந்த போர் நட்புத் தொடர்பினாலும் அறியப்படும்.
ஆகவே, வாரணன் என்னும் பெயரே வருணன் என்று, வடமொழியில் திரிக்கப்பட்ட தென்க.
பாலைநிலத்தெய்வம் கொற்றவை
பாலை நிலம் முதுவேனிற்காலத்தால் தோன்றுவது,
கொற்றம் + அவ்வை = கொற்றவ்வை — கொற்றவை. கொற்றம் = வெற்றி. அவ்வை அம்மை என்பதன் போலி, பிற்காலத்தில் பாட்டியைக் குறித்தது.
பாலை நில மாந்தராகிய கள்ளர் மறவருக்கு. அவரது போர்த் தொழிலில் கொற்றத்தைத் தருபவள் கொற்றவை,
கொற்றவைக்கு அம்மை, மாயோள், காளி, அங்காளம்மை, மாரி, பிடாரி, கன்னி , குமரி, பசுவதி முதலிய பிற பெயர்களுமுண்டு.
அம்மை = தாய்,பெண்தெய்வம். முதுவேனிற் காலத்தில் வெப்பத்தினால் தோன்றும் வைசூரிநோய், அம்மையால் தோன்றுவதாகக் கருதப்பட்டு அம்மை எனப்பட்டது. அக் காலத்தில் தழைக்கும் வேப்பிலையும் அம்மைக்குகந்த தாகக் கொள்ளப்பட்டது.
அம்மை (அம்ம) என்பதின் திரிபே அம்மன், அம்பா (வ.), என்பவை,
மாயோள் = கரியள். – மாமை-கருமை.
கள்—காளம்—காளி, கள்— கருப்பு. கள்ளம், களங்கம், காளான் (black mushroom) முதலிய சொற்கள் கருப்பு என்னும் மூலப்பொருளைக் கொண்டவை.
காளி வணக்கம் முற்காலத்தில் தமிழகத்தில் மிகச் சிறத் திருத்தது.வங்காளத்தில் உள்ள காலிக் கோட்டம் என்னும் இடப்பெயர் இன்று காளிக்கட்டம்—Culcutta — கல்கத்தா, என்று திரிந்து வழங்குகின்றது. கோட்டம் – அரண், கோயில், கோடு +அம் = கோட்டம். கோடுதல்- வளைதல், கோடிய (வளைந்த) மதிலாற் சூழப்பெற்றது கோட்டம் (தொழிலாகு பெயர்), கோடு+ஐ= கோட்டை . தமிழர் அல்லது திராவிடர் பண்டு வட இந்தியா வரை பரவியிருந்தனர் என்பதற்குக் காளிக்கோட்டமும் ஒரு சான்றாம்.
காளி கூளி (பேய்) களின் தலைவி, பேயைக் கருப்பென்றும் இருளென்றும் கூறுவது உலக வழக்கு.
அம் + காளம் (அல்லது காளி) + அம்மை = அங்காளம்மை.
மாரி = சாவு. காளி அழிப்புத் தெய்வமாகக் கருதப் பட்ட தால் மாரியெனப்பட்டாள், மடங்கலை அவளுக்கு ஊர்தியாகக் கொண்டதும் இக்கருத்துப்பற்றியே.
பீழை—பீடை+அரி =பீடாரி (மரூஉப்புணர்ச்சி).
ஒரு நோ. பனை+அட்டு = பினாட்டு: அரித்தல் அழித்தல்.
துன்பத்திற்குக் காரணமானவளே அதை அழிப்பவளாக வுங் கருதப்பட்டாள்.
பீடாரி—பிடாரி, பிடாரி = அம் = பிடாரம்.
கன்னி என்றும் இளையோளாயிருப்பவள்; குமரி என்னும் பெயரும் இப்பொருட்டே.
கும் + அம் = குமம்—குமர் = திரட்சி, இளமை , கன்னிமை.
ம்-ர், போலி. ஒ. நோ. சமம் – சமர்:
“குமரிருக்குஞ் சசிபோல்வாள்” (குற்றா தருமசாமி. 47)
கும்—குமி — குவி. குவிவு—குவவு = திரட்சி,
குமர்+அன் = குமரன், குமர்+இ= குமரி.
குமரன் = திரண்டவன், இளைஞன், முருகன்.
குமரி— திரண்டவள், இளையள், கன்னி, காளி,
ஓ, நோ. இளவட்டம் = இளைஞன். வட்டம் = உருட்சி.
E. vergin, from Gr. orago, to swell.
கும்மை — கொம்மை = திரட்சி, ஓ. நோ. குட்டு — கொட்டு.
குமரன் — குமாரன்(வ.) குமரி—குமாரி(வ.) — குமாரத்தி:
பகவதி பகவன் என்பதின் பெண்பால்) கன்னி என்னும் பெயர்கள் பின்னர்க் கூறப்படும்.
“வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ” (கலி. 15) என்பதால், சூரியனும் பாலைநிலத்தில் வணங்கப்பட்டமை அறியப்படும். ‘சுடரோடிரத்தல்’ என்னும் கோவைத் துறையும் இதை யுணர்த்தும்.
இனி, ஐந்திணைக்கும் பொதுவான சில வழிபாடுகளுமுள. அவையாவன :—
(1) தீவணக்கம்.
மலையில் மூங்கில்கள் ஒன்றோடொன்று தேய்வதனாலும், சக்கிமுக்கிக்கற்களை ஒன்றோடொன்று தேய்ப்பதனாலும் தீ உண்டாகிறது. தீக்கடை கோலால் நெருப்புண்டாக்கும் வழியை மூங்கிலுரசித் தீப்பற்றுவதிலிருந்து, அல்லது கல்லைச் செதுக்கும் போது தீப்பொறி தோன்றுவதிலிருந்தே. முதன் மாந்தர் கண்டுபிடித்திருக்க வேண்டும்.
பொருள்கள் தேய்வதால் உண்டாகும் நெருப்பு, தேய் எனப்பட்டது. தேய்-தேயு (வ.)
தேய்—தே—தீ. ஓ. நோ. தேன்—தே (த்தட்டு)— தீ(ம் பால்). தே+உ = தேய்வு—தேவ.. தேய்வு-தெய்வு. தெய்வு +அம் =தெய்வம். தேவு+ அன் =தேவன்.
மாந்தனால் முதன்முதல் வணங்கப்பட்டது தீயாதலால், அதன் பெயர்கள் பிற்காலத் தெய்வங்கட்கெல்லாம் பொதுப் பெயராயின. தீ வணக்கமும் பேய் வணக்கமும் சேர்ந்தே , சேயோன் வணக்கம் முதன் முதல் தோன்றிற்று.
தெய்வம், தேவு, தேவன் :
Sans, deva : L. deus, Cr. theos, god :
Ice tivi; W. duw; Gael-Ir. dia; A. S. tiw E. deity.
திவ், திவ்ய என்பவை தேவு என்பதன் திரிபேயாதலால், திவ் என்பதைத் தெய்வப் பெயர்க்கு மூலமாகக் காட்டுவது தவறாகும். இங்ஙனம் முதன் முதற் காட்டியது வடமொழியாரியர், வடமொழிக்குப் பிறமொழியை மூலமாகக் காட்டக் கூடாதென்பதே அவர் நோக்கம். ஆகையால், அவர் கூற்றைப் பின்பற்றுவோரெல்லாம், ஒப்பியன் மொழி நாலியல்பைச் செவ்வையா யுணரார். வடமொழி வழக்கற்ற மொழியாதலின், அதன் சொற்கட்குப் பொருத்தப்புகலல் என்னும் முறையில், எதையும் மூலமாகக் காட்டலாம், எப் பொருளையும் மூலப் பொருளாகக் கூறலாம்.
தீயானது பொருள்களை அழித்து விடுவதால் அஞ்சத் தக்கது சமையலுக்கும் குளிர் நீக்கவும் உதவுவதால் நன்மை செய்வது. அச்சமும் என்மைப் பேறுமே, முதன் முதல் தெய்வ வழிபாடு தோன்றிய தற்குக் காரணம்,
தீ வணக்கம் பண்டு எல்லா நாட்டிலு மிருந்தது. இன்றும், விளக்கு வடிவில் அதன் அடையாளம் இருந்து வருகின்றது.
(2) நாக வணக்கம்.
இந்தியாவிலுள்ள 280 வகைப் பாம்புகளுள், அரச நாகம் (King Cobra). நல்லபாம்பு, விரியன் முதலியவை பெரு நஞ்சுடையன. இவற்றுள், அரச நாகம் உலகத்திலேயே மிகக்கொடியது. நச்சுப்பாம்புகளுள் பருமனிலும் இதுவே பெரியது. இதற்கடுத்ததே தென்கண்டத்திலுள்ள செம்பூதப் பாம்பு (Giant Brown Snake). இவற்றின் நீளம் முறையே 18 அடியும் 12 அடியுமாகும்.
அரச நாகம் அசாம், பர்மா, தென் சீனம், மலேயா, பிலிப்பைன் தீவுகள் முதலிய இடங்களிலும் வதிகின்றது.
பாம்புகளுள் மிகப்பெரியவை தென் அமெரிக்காவிலுள்ள அனக் கொண்டாவும் (Anaconda) இந்தியாவிலும் மலேயாவிலுமுள்ள பாந்தளுமே (Python) இவை 30 அடிக்கு மேற்பட்டவை: மாந்தனையும் விலங்குகளையும் பிடித்துச் சிறிது சிறிதாய் விழுங்குபவை.
கடற்பாம்புகளும், அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், அமைதிப்பெருங்கடல் ஆகிய இடங்களில்தான் மிகுதியாய் வாழ்கின்றன. ஆகையால், குமரிநாடு பாம்பு நிறைந்த இடமாகும்.
திருநெல்வேலிக் கோட்டகையின் கீழ்ப்பாகத்தில், இன்றும், நல்ல பாம்பினாலும் விரியனாலும் கடியுண்டு மக்கள் அடிக்கடியிறக்கின்றனர். ஆகையால், தமிழர் நாகத்தை வணங்கினமை வியப்பன்று.
இன்றும் தமிழ் நாட்டிலும் மலையாள நாட்டிலும் சில வீடுகளில் நாகவணக்கம் இருந்துவருகின்றது.
நகர்வது நாகம்: நகர்— நாகர் — நாகம்.
- snake; A. S. snaca from snican, to creep; Ice, snakr, snokr; Dan. snog ; Swed. snok ; Sans. naga.
நகத்தில் மலையில்) உள்ளது நாகம் என்று வடநூலார் கூறுவது சரியன்று . நாகம் – Snake (முதல்விரி—Prosthesis).
கீழுலகத்தில் பாந்தள் மிகுதியாயிருப்ப தால், கீழ் என்பதை அடியென்று நினைத்துக் கொண்டு, ஞாலத்திற் கடியில் ஆதிசேடன் (= முதற்பாம்பு) இருந்து தாங்குவதாகக் கூறினர் பழமையர்.
கீழ்நாட்டில் நாக வணக்கம் மிகுதியாயிருந்தமையால், பிற்காலத்தில் அதைச் சைவத்திலும் திருமாலியத்திலும் உட்படுத்தவேண்டி, நாகம் சிவ பெருமானுக்கு அணியாகவும் திருமாலுக்குப் பாயலாகவுங் கூறப்பட்டது.
சிவபெருமான் நாகத்தைத் தலையிலணிந்திருப்பதாகக் கூறுவது, நாக வணக்கத்தின் பண்டைப் பெருமையைக் காட்டும்.
பண்டை எகிப்தியரின் நாக வணக்கமும், கௌ—என். அத்தென் (Khou-en-Aten) என்னும் எகிப்தியவரசன் நாகவுருவைத் தன் முடியிலமைத்ததும்[6], இங்கு ஒப்புநோக்கத்தக்கன.
தாருகா வனத்து முனிவர் சிவபெருமான்மேற் பாம்பை யேவியதாகக் கூறுவது பழமைக்கட்டு.
(3) பேய்வணக்கம்—Demonolatry.
பே என்பது அச்சத்தினால் உளறும் ஒலி, பேம் = அச்சம்;
“பேநாம் உரும்என வரூஉம் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” (உரி. 69.)
என்பது தொல்காப்பியம்.
பேபே என்று உளறுகிறான் என்பது வழக்கு: ஓ. நோ. E. babble பே-பேய், ஒ. நோ . E. fay ; Fr. fee.
பே—பேந்து. பேய், பேந்து என்பவை இடைச்சொல்லாகவும் வழங்கும். கா : பேயப்பேய (விழிக்கிறான்), பேத்தப்பேந்த (விழிக்கிறான்):
பேந்து: ஓ. நோ. Ger, feind; Dut. vijand: A. S. feond; E. fiend.
சேம்பர் அகராதியில், A. S. feond, pr. p. of feon, to hate என்று கூறப்பட்டுள்ளது: feon என்பதற்கு அஞ்சு என்பதே மூலப் பொருளாயிருக்கலாம்.
பேய் — அச்சம். அச்சத்தைத் தரும் ஆவி பேய் எனப்பட்டது: பேய்கள் அகாலமாய் இறந்தோரின் ஆவிகளென்றும், அதற்றிற் பல வகையுண்டென்றும் சொல்லப்படுகிறது.
பேய்களை மனவுறுதியாற் கட்டுப்படுத்தி, அவற்றாற் பயன் கொள்வது மந்திரம், மந்திரம், மாந்திரிகம், மாத்திரிகள் என்பன முறையே மந்திர மொழிக்கும் வினைக்கும் வினைஞனுக்கும் வழங்கும் பெயர்கள். மந்திரம் வாய்மொழி என்னும் பெயர்களுள், முன்னது கடவுள் பேய் இரண்டையும் பற்றியது; பின்னது கடவுளையே பற்றியது.
பேய்களுக்குத் தலைவி காளியாதலால், அவளை வழி படுதல் ஐத்திணைக்கும் பொதுவும் மாந்திரிகர்க்குச் சிறப்பும் ஆயிற்று. மாந்திரிகா அவளை வாலை (-இளையள், கன்னி) என்பர்.
சுட்டுவைப்பித்தல், வேலன் வெறியாட்டு, தேவராளன், தேவராட்டி என்பவை மாந்திரிகம் பற்றிய பழங் குறிப்புக்களாகும்:
பேய்களில் ஒருவகை பூதம். பூதம் பெருஞ்செயல் செயவல்லது. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த சதுக்கப் பூதத்தைப் பற்றிச் சிலப்பதிகாரத்திற் காண்க.
பூத வணக்கம் பண்டைக்காலத்தில் சிறப்பாயிருந்ததினாலேய, சிவபெருமான் பூத கணங்களுக்குத் தலைவர் எனப்பட்டார்.
பூதம் என்னும் பெயர் பெருமைப் பொருளது. பொது பொது (இரட்டைக் கிளவி), பொதுக்கு, பொந்து என்னும் சொற்களை நோக்குக. பொந்து — பொந்தன்-மொந்தன். ஓ— உ — ஊ, பொது— (புது)—புது. இரும்பூது — இறும்பூது. புது+ அம் = பூதம். பேய்களிற் பெரியது பூதம். உலகின் ஐம்பெருங் கருவிப்பொருள்கள் ஐம்பூதம் எனப்பட்டன.
இந்தியா, எகிப்து, சீனம் ஆகிய நாடுகள் பண்டைக் காலத்தில் மாந்திரிகத்திற் சிறந்திருந்தன.
பேய்களைத் தெய்வம் என்பது, இருவகை வழக்கிலும் தொன்று தொட்டு இன்றுவரை யுள்ளது.
(4) நடுகல் தெய்வம்.
“காட்சி கல்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபிற் பெரும்படை வாழ்த்தல்” (புறத். 5.)
என்பது தொல்காப்பியம்.
மதுரை வீரன், மாடசாமி, கருப்பசாமி முதலியவை நடுகல் தெய்வங்களே.
(5) கற்புத் தெய்வம்.
கண்ணகி வரலாறு காண்க:
(6) தென்புலத்தார் வணக்கம் – Aacestor Worship.
பண்டைத் தமிழர், இறந்து போன தம் முன்னோரைத் தென் புலத்தார் என்று பெயரிட்டுச் சமையம் வாய்க்கும் போதெல்லாம் வணங்கி வந்தனர். இது முன்னோரை நினைவு கூர்வதும் பெரியோர்க்குச் செய்யும் மதிப்புமாகும். இது சீன நாட்டில் மிகுதியாக வுள்ளது.
”தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தா றோம்பல் தலை”
என்றார் திருவள்ளுவர்.
(7) நிலா வணக்கம்.
நிலாவும் ஒருகாலத்தில் வணங்கப்பட்டதைப் ‘பிறை தொழுகென்றல்’ என்னுங் கோவைத்துறையா லறியலாம்,
நால்வேள்வி :
வேள் + வி = வேள்வி. வேட்டல் விரும்பல், விருப்பத்தோடு பிறரை யுண்பிப்பது வேள்வி
”இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்” (குறள். 87),
என்னுங் குறளில், விருந்தைத் திருவள்ளுவர் வேள்வி யென்றமை காண்க
வேந்தன், வாரணன் முதலியோர்க்குச் செய்யும் தேவ வேள்வியும், பேய்கட்குச் செய்யும் பூத வேள்வியும், முன்னோர்க்குச் செய்யும் தென்புலத்தார் வேள்வியும், விருந்தினர்க்குச் செய்யும் மாந்தர் வேள்வியுமெனத் தமிழர் செய்துவந்த வேள்வி நான்கு. இவற்றொடு மறையோதுதலைப் பிரமயாகம் என்று சேர்த்து, பஞ்சமகாயக்ஞம் என்றனர் ஆரியர், இதன் பொருந்தாமையை அறிஞர் அறிக, ராஜசூயம், அசுவமேதம் முதலிய ஆரிய வேள்விகள் தமிழர்க்குரியவை யல்ல, தமிழரசர் அவற்றை வேட்டது பிற்காலமாகும்.
மதம் — Religion
முதலாவது, முற்கூறிய சிறு தெய்வ வணக்கங்களே தமிழர்க்கிருந்தன. பின்பு அவற்றிலிருந்து பெருந்தெய்வ வணக்கமாகிய மதம் தோற்றுவிக்கப்பட்டது.
குறிஞ்சித் தெய்வ வணக்கத்தினின்று சைவமும், முல்லைத் தெய்வ வணக்கத்தினின்று திருமாலியமும் தோன்றின, பாலைத் தெய்வமாகிய காளி, சிவபெருமானுக்குத் தேவியாகக் கொள்ளப்பட்டாள். மருதத்தெய்வமும் நெய்தல் தெய்வமும் கடைக்கழகக்காலம் வரை வணங்கப்பட்டுப் பின்பு கைவிடப்பட்டன.
சேயோன் என்னும் பெயரின் மறு வடிவமே சிவம் என்பது சிவ-சே (மரூஉ), சிவ+அம் =சிவம். சிவம்+(அன்) = சிவன் சே+= சேய், சே+ஒன் = சேயோன், சேந்தோன் சேந்தன் சிவன், சேயோன் சேந்தன் என்னும் மூன்றும், சிவந்தவன் என்று பொருள் பட்டு முருகனையே அல்லது ஒரு தெய்வத்தையே முதலாவது குறித்தன.
சேய், சேயோன், குமரன் என்னும் பெயர்கட்கு. மகன் என்று தவறாகப் பொருள்கொண்டு, சிவம் என்பது சேயோனின் தந்தையென, ஒரே தெய்வத்தை யிரண்டாகக் கூறிவிட்டனர் ஆரியர். இங்ஙனம் செய்தது. ஆரியத்தெய்வமாகிய ருத்திரனைச் சிவத்தோடிணைத்தற்கும் உதவிற்று.
முருகனும் சிவமும் ஒன்றேயென்பதை, சேயோன் சிவன் என்னும் இருபெயர்களும் ஒரே பொருளுடைமையாலும், குறிஞ்சிக்குரிய மலை, காளை, துடி, மழு, புலித்தோல், கரித் தோல் முதலியவை சிவனுக்குக் கூறப்படுவதாலும், குமரன் என்பதின் பெண்பாற் பெயரான குமரி என்பது சிவன் தேவி பாகிய காளியைக் குறித்தலாலும் அறியப்படும்.
திசைகளைத் தெய்வத்திற்கு முகங்களாவும் கைகளாகவுங் கூறுவது வழக்கம். திசைகள் முதலாவது நான்கென்றும் பின்பு உயர் திசையைக் கூட்டி ஐந்தென்றும், பின்பு உயர் திசையும் அடித்திசையுங் கூட்டி ஆறென்றும், பின்பு நான்கு பெருந்திசையும் நான்கு கோணத்திசையுமாக எட்டென்றும், பின்பு இவற்றொடு உயர்திசையும் அடித் திசையுங் கூட்டிப் பத்தென்றும் கூறப்பட்டன.
ஐந்து திசைகளும் எட்டுத் திசைகளும், முறையே சிவ பெருமானுக்கு ஐம்முகங்களாவும் எட்டுக் கைகளாகவும், ஆறு திசைகளானவை. முருகனுக்கு ஆறு முகங்களாகவுங் கூறப் பட்டன. ஆறு முகங்கட்கும் முகத்திற் கிரண்டாகப் பன்னிருகைகள் கூறப்பட்டன. சிவபெருமானுக்கும் ஆறு முகம் என்று ஒரு காலத்தில் கொள்ளப்பட்டிருந்தமை, அவர் தமது ஆறு முகங்களினின்றும் ஆறுபொறியைத் தோற்றுவித்து முருகனைப் படைத்ததாகக் கூறும் கந்தபுராணக் கதையா லறியலாம். ஆறு முகத்தை ஷண்முகம் என்று மொழி பெயர்த்தும், சுப்பிரமண்யன், கார்த்திகேயன், குகன் எனப்புது வடமொழிப் பெயர்களையிட்டும், பனிமலையில் சரவணப் பொய்கையிற் பிறந்ததாகக் கதை கட்டியும், முருகனை ஆரியத் தெய்வமாகக் கூறினர் வடநூலார்:
முழுமுதற்கடவுளுக்குப் பேரண்டத்தையே வடிவமாகக் கூறுவது வழக்கமாதலால், மாலையில் தோன்றும் செவ்வானம் சிவபெருமானுக்குச் சடையாகவும், செவ்வானத்திற்கு மேலாகத் தோன்றும் பிறையையும் பனிமலையுச்சியில் பிறக்கும் கங்கையையும் அவர் தலையிலணித்திருப்பதாகவும் உருவகித்துக் கூறினர் முன்னோர்.
திங்கள் தக்கன் புதல்வியர் இருபத்தெழுவரை மணந்ததாகக் கூறுவது, இராவான் சுடர்கட்குத் தலைமையானது நிலா என்பதே. உடுபதி என்னும் பெயரை நோக்குக; –
தீ முதன் முதல் வணங்கப்பட்ட தெய்வமாதலாலும்,இறைவன் பெரும்பாலும் தீயாக அல்லது ஒளியாக வெளிப்படுவதாலும், ஐம்பூதங்களுள் தீயே அறிவு, தூய்மை, நன்மை, அழிப்பு முதலிய பலவகையில் இறைவனைக் குறித்தற்குச் சிறத்தலாலும், அதன் நிறம்பற்றிய சிவம் என்னும் பெயரே முழுமுதற் கடவுட்குச் சிறந்த பெயராகக் கொள்ளப்பட்டது.
சிவபெருமானுக்குச் செம்மணியாகிய மாணிக்கத்தை உவமை கூறுவதாலும், முதன் முதல் சைவத் துறவிகளே நெருப்பின் நிறமான காவியுடையை அணிந்ததினாலும், சிவம் என்னும் சொல்லுக்குச் சிவப்பு என்னும் பொருளே தெளிவாயிருத்தலாலும், சிவம் என்பது தமிழ்த்தெய்வமேயாத லாலும், மங்கலம் அல்லது நன்மை செய்பவன் என்று பொருள் கூறிச் சிவம் என்னுஞ் சொல்லை வடசொல்லாகக் கூறவது பொருந்தாது.
செம்மை என்னும் நிறம் பற்றிய சொல்லுக்கு, நேர்மை, நேர்மையான ஒழுக்கம் என்று பொருள் வந்தது, துறவிகள் காவியுடையணிந்ததினாலேயே, செம்மையாயிருத்தல் என்பது, முதலாவது செங்கோலமாயிருத்தல் என்று பொருள்பட்டுப் பின்பு, செவ்வையா யொழுகல் என்று பொருள்பட்டது.
சிவம் தமிழத் தெய்வமேயென்பது, ஆரியர் வருமுன்னமே, மோஹன் ஜோ-டேரோவில் சைவம் வழங்கியதினாலும்,
“மந்திர மாமலை மகேந்திர வெற்பன்“
“மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமத் தோற்றுவித் தருளியும்“
“பாண்டி நாடே பழம்பதி யாகவும்“
“தென்னா டுடைய சிவனே போற்றி“
என்று மாணிக்கவாசகர் கூறுவதாலும் அறியப்படும்.
முதலாவது ஒரு தெய்வமாயிருந்த சிவத்திலிருந்து, முருகன், பிள்ளையார், சாத்தனார், பைரவன், வீரபத்திரன் எனப் பல தெய்வங்கள் தோற்றுவிக்கப்பட்டன பழமையரால்,
பிள்ளையார் என்று முதலாவது முருகனுக்குப் பெயரிடப்பட்டது. பின்பு ஆனைமுகத்தர் மூத்த பிள்ளையார் எனப்பட்டார். இப்போது, மூத்த பிள்ளையாரே பிள்ளையார் எனப்படுகிறார்.
ஓங்கார வரிவடிவம் யானை வடிவு போலிருத்தலாலும், கயமுகன் என்னும் அசுரனைக் கயமுகத்தொடு சென்ற சிவ ஆற்றல் கொன்ற தென்னுங் கதையாலும், பிள்ளையார் என்ற தெய்வம் தோற்றுவிக்கப்பட்டது. கணபதி (தகணங்களுக்குத் தலைவர்) என்னும் பெயர் சிவனுக்கும் ஏற்றலாலும், சிவனுக்கும் பிள்ளையாருக்கும் முக்கண் கூறப்படுவதாலும், அவ்விருவரும் ஒருவரே யென்பதுணரப்படும்.
இங்கனமே பிறதெய்வங்களும் ஒவ்வோர் காரணம் பற்றித் தோற்றுவிக்கப்பட்டனவாகும்.
பிள்ளையார் வணக்கம் கடைக்கழகக்காலத்திற்கு முந்தி யிருந்ததாகத் தெரியவில்லை, முருகனுக்குப் பிள்ளையார் உதவினதாகக் கந்தபுராணங் கூறுவது களிறு தரு புணர்ச்சியேயன்றி வேறன்று.
சிவ பெருமானுக்குப் பகவன், ஐயன் என்று பெயர்களுண்டானமையின், காளிக்குப் பகவதி, ஐயை என்று பெயர்களுண்டாயின. பகவன் என்னும் பெயருக்கு அறிவு, திரு, ஆட்சி, ஆற்றல், அவாவின்மை, புகழ் என்னும் அறு குணங்களையுடையவன் என்று பொருள் கூறப்படுகிறது. சிலர் பகம் என்பது குறி (இலிங்கம்) யென்றும், பகவடிவிற் குறிக்கப்படும் கடவுள் பகவன் என்றுங் கூறுகின்றனர். இருபாற்கூட்டத்தால் உயிர்கள் தோன்றுவதாலும், கடவுளிடத்தில் தாய்க் கூறும் தந்தைக் கூறும் உள்ளன என்னுங் கருத்தில், சிவபிரானை அம்மையப்பன், மாதொருபாகன், மங்கைபங்கன் முதலிய பெயர்களால் அழைப்பதாலும், வழிபடப்படும் சிவவுரு இலிங்கப் பெயருள்ள தாயும் இலிங்க வடிவ மாயுமிருத்தலாலும், எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் ஒரு மூல ஆற்றலைக் குறி’ வடிவால் முன்னோர் குறிப்பித்தார் என்று கொள்ளல் பொருத்தமானதே.
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”. (குறள், 355)
காளி துடுக்கு நிலையளாதலின், அமைந்த நிலைக்குரிய தேவிவடிவம் சிவன் என்பதின் பெண்பாலான சிவை என்னும் பெயராற் குறிக்கப்பட்டது. சிவையைப் பார்வதியென்பர் வடநூலார்.
சிவை பர்வதவரசன் மகளாகிப் பார்வதியென்று பெயர் பெற்றதாக ஒரு கதை கூறப்படுகிறது. ஆனால், குறிஞ்சித் தேவி என்று பொருள்படும் மலைமகள் என்னும் பெயரையே, மலைக்கு மகள் எனப் பிறழவுணர்ந்து அக்கதைகட்டப்பட்டதோ என ஐயுறக் கிடக்கின்றது. கலைமகள், மலர்மகள், நில மகள் முதலிய பெயர்களில் மகள் என்பது மூறைகுறிக்காது பெண் பாலையே குறித்தல் காண்க. பர்வதவரசன் என்னும் தொடரும் மலைகட்கு அரசு போற் சிறந்த பனிமலையையே குறித்தலையும், சிவன் பண்டு குறிஞ்சித் தெய்வமாயிருந்ததையும், மகேந்திரம் முழுகிய பின் பனிமலை சிவனுக்குச் சிறந்த இடமாகக் கொள்ளப்பட்டமையையும் நோக்குக. ஆகவே, மலையரசன் பெற்ற மகள் என்பது பனிமலை அடைந்த அல்லது தாங்கிய பெண்டெய்வம் என்றே பொருள்படுவது காண்க.
சிவனியமும் (சைவமும்) மாலியமும் (வைணவமும்) வெவ் வேறு சமயங்களா யிருக்க அவற்றை ஆரியர் முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கை பற்றி ஒன்றாயிணைத்ததால், சில புதுக் கருத்துக்களைக் கொள்ள வேண்டியதாயிற்று. அவை யாவன
அரன் = தேவன். இப்பெயரின் வரலாறு பின்னர்க் கூறப் படும்,
(1) சிவ பெருமானுக்கு அழிப்பும் திருமாலுக்குக் காப்பும் தொழிலாக வகுத்தல்,
தீ போல்பவன் சிவன் என்றும் மேகம் போல்பவன் திருமால் என்றுங் கொண்டமையால், முறையே அவற்றின் தொழிலான அழிப்பும் காப்பும் அவ்விருவர்க்கும் கூறப்பட்டன. தீ ஆண்டன்மையும் நீர் பெண்டன்மையுங் குறித்தற்கேற்றல் காண்க:
(2) அரியரன் (ஹரிஹரன் அல்லது சங்கர நாராயணன்) என்ற வடிவம் அமைத்தல்.
(3) திருமாலை மலைமகளுக்கு அண்ணன் என்றல்:
இவ்விருவர் நிறமும் கருமை யென்பதையும் நோக்குக. கருமை, நீலம், பசுமை என்னும் மூன்றும் ஒன்றாகவே கொள்ளப்படும்:
(4) பிரமன் திருமானின் மகன் எனல்,
இம்முறை காட்டற்கே, பிரமனுக்குத் திருமாலின் திருவுந்தித் தொடர்பு கூறப்பட்டது.
திருமாலியராய்த் தெரிகின்ற தொல்காப்பியர் காலத்திலிருந்து திருமால் தனித் தெய்வமாகப் பிரித்துக் கூறப்பட்டு, அதிலிருந்து திருமாலியமே சிறந்து வருகின்றது என்பதற்குச் சான்றுகள் :
(1) தொல்காப்பியம் :
- ‘மாயோன் மேய’ என்ற நூற்பாவில் மாயோனை முற்கூறுதல்.
- “மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் ”
என்று மன்னர்க்குத் திருமாலை உவமை கூறல்.
(2) திருக்குறள்.
- “தாமரைக் கண்ணான்“ என்றும். “அடியளந்தான் தா அயதெல்லா மொருங்கு“ என்றும், திருமாலை விதப்பாய்ச் சுட்டல்:
- “தேவிற்றிருமால்“ என்று கவிசாகரப் பெருந் தேவனார் கூறல் (திருவள்ளுவ வெண்பாமாலை).
(3) சிலப்பதிகாரம் : திருமாலைப்பற்றிய பகுதிகளை மிகச் சிறப்பாய்க் கூறல்.
(4) தமிழ் தெடுங்கணக்கு அரி ஓம் நம என்று தொடங் கியதால் ஆரிவரியெனப்படுதல்.
(5) இதுபோது சில சைவரும் இராமம் நாமம் அணிதல்.
சிவன் திருமால் என்னும் தமிழத் தெய்வங்களோடு, முறையே ருத்திரன் விஷ்ணு என்னும் ஆரிய தெய்வங்களை இணைத்து விட்டனர் ஆரியர். ஆரியர்க்கு ருத்திரன் புயற் காற்றுத் தெய்வமும் விஷ்ணு சூரியத் தெய்வமுமாகும்,
காளிக்குச் சிறந்த இருப்பிடம் சுடலையாதலானும், பேய் கட்குத் துணங்கைக் கூத்து உரிய தாதலானும், காளியின் கணவனான சிவ பெருமான் சுடலையாடி யெனப்பட்டார்.
சிவபெருமானுடைய முத்தொழிலையே திருக்கூத்தாக உருவகித்தனர் உயர்ந்தோர்.
சைவம்[7] பற்றிய சில தமிழ்க் குறியீட்டுப் பொருள்கள்
ஆனைந்து (பஞ்ச கவ்யம்) :
ஆனைத்தை (துடிசைகிழார் அ. சிதம்பரனார் செந்தமிழ்ச் செல்வியிற் கூறுகிறபடி) பால் தயிர் வெண்ணெய் மோர் நெய் என்று கொள்ளுவதே பொருத்தமாயிருக்கிறது. ஆனைத்தைப் பஞ்ச கவ்யம் என்று மொழிபெயர்த்துக் கூறினதுடன், பால், தயிர், நெய், கோமூத்திரம் சாணம் என்று பிறழக் கறி விட்டனர் ஆரியர்.
திருநீறு :
சிவபெருமான் தம்மை யடைந்தவரின் தீவினையை எரித்து விடுகிறார் என்னுங் கருத்துப்பற்றியதே, திருநீற்றுப் பூச்சாகத் தெரிகின்றது. நீறு = சுண்ணம், பொடி: பூதி யென்பது நீற்றின் மறுபெயர். பூழ்தி (புழுதி) – பூதி. ஒ. நோ. போழ்து (பொழுது)-போது. பூ =பொடி, தூள். பூதியை ‘வி’ என்னும் முன்னொட்டுச் சேர்த்து, விபூதியென்று வடசொல்லாக்கினர்.
உருத்திராக்கம் :
உருத்திர+ அக்கம் = உருத்திராக்கம்.
உருத்திரன் என்று சிவபெருமானுக்கொரு பெயர் தமிழிலேயே யிருந்தது. உருத்தல் = சினத்தல், தோன்றுதல். உரும்=நெருப்பு, சினம், இடி. உருமி=புமுங்கு. உருமம்= உச்சிவேளை. உருப்பக அழல் (புறம். 25). உரு என்ற சொல் முதலாவது நெருப்பையும் பின்பு சிவத்தையுங் குறித்தது. ஓ. நோ, அழல் – இழலுதல் =சினத்தல், கனல் -கனலுதல் = சினத்தல், சினம் நெருப்பின் தன்மையுடையது. “சினம்……. சுடும்“ (குறள். 306). நெருப்பின் தன்மை ஒளியா தலாலும், ஒளியால் பொருள்களின் வடிவந் தோன்றுதலாலும், உரு என்னும் சொல் வடிவம் குறித்தது. “சுவையொளி” என்னுங் குறளில், காட்சியை அல்லது வடிவத்தை ஒளியென்றது காண்க.
‘உரு+உ = உருவு. உருவு + அம் = உருவம்.
உருவு-உருபு (வேற்றுமை வடிவம்).
உரு. உருப்படி என்னுஞ் சொற்கள், எத் துணையோ பொருள்களில் உலகவழக்கில் வழங்குகின்றன.
உரு என்னுஞ் சொல்லின் வரலாறு மிக முக்கியமானது. இது இந்நூலின் மூன்றாம் படலத்தில் விரிவாகக் கூறப்படும். உருவம் என்னுந் தமிழ்ச் சொல்லே, வடமொழியில் ரூப என்று திரியும். இது வட நூலார் கூற்றையொட்டிப் பல்கலைக்கழக அகர முதலியிற் றலை மாறிக் கூறப்பட்டுள்ளது.
சிவன் நெருப்பின் தன்மையும் அழிப்புத் தொழிலும் உடையவராதலின், உருத்திரன் எனப்பட்டார். உரு + திரம் – உருத்திரம் (ருத்ரம்-வ.) சினம். திரம் ஒரு தொழிற் பெயர் ஈறு, உருத்திரத்தையுடையவன் உருத்திரன். உருத்திரன் என்னும் தமிழ்ப் பெயரையே, ருத்ர என்னும் ஆரிய வடிவில் சினக்குறிப்புத் தோன்றுங் கடுங்காற்றிற்குப் பெயராயிட்டனர் ஆரியர் என்க.
அக்கம் = கூலம் (தானியம்), மணி, அக்கம் – அக்கு. அக்கஞ் சுருக்கேல் என்றார் ஔவையார், கூலம் மணியென்றும் பொருள்படுவதை, நென்மணியென்னும் வழக்காலறிக.
“கொக்கிறகக்கம்” (திருப்பு, 416.)
உருத்திரன் பற்றி யணியப்படும் அக்கம் உருத்திராக்கம். நீட்டற் புணர்ச்சி (தீர்க்க சந்தி)யும், மரூஉ முறையில், தமிழுக்குச் சிறுபான்மை யுண்டென்பதை, மராடி, குளாம்பல், எனாது, குணாது என்னும் வழக்குகளால் உணர்க. ‘உருத்திராக்கத்தின் சிறப்புப் பண்பை , பூத எநூலும் (Physics) நிலைத்திணை நூலும் (Botany) அறிந்தவர் ஆராய்ந்து கூற வேண்டும்.
உருத்திராக்கத்தை ருத்திராக்ஷம் என்று திரித்து, ருத்திரனின் கண்ணிலிருந்து தோன்றியதாக ஒரு கதை கட்டினர் ஆரியப் பழைமையா, இங்ஙனம் கூறுவதற்குக் காரணம், ரா (Ra) என்னும் (சூரியத்) தெய்வத்தின் கண்ணீரே மழையென்றும், அதிலிருந்து பயிர்பச்சைகள் தோன்றுகின்றன வென்றும், பண்டை யெகிப்தில் வழங்கிய ஒரு பழைமைத் கொள்கையை, மேலையாசியாவி லிருந்தபோது ஆரியர் கேட்டறிந்ததேயென்று தோன்றுகின்றது.
பிற்காலத்தில், ருத்திராக்ஷம் வட நூற் பொருளை யொட்டிக் கண்மணியென மொழிபெயர்க்கப்பட்டது.
ஓ(ம்) குரு, தீக்கை (தீக்ஷா) என்பனவும் தமிழ்ச் சொற்க ளாகவே தோன்றுகின் றன, ஓங்காரத்திற்கு இன்றும் தமிழ் வரிவடிவமே எழுதப்படுவதையும், உரு என்னும் சொல் போன்றே குரு என்னும் சொல்லும், வெப்பம், தோற்றம் சிவப்பு என்று பொருள் படுவதையும், தீக்கை என்பது குரு பருவான்மாவின் மலத்தைக் காண்டல் தீண்டல் முதலிய வற்றால் தீத்து (எரித்து) விடுதலைக் குறித்தலையும் நோக்குக.
ஓ-ஓங்காரம். ஒ. நோ. ரீ-ரீங்காரம்.
ஓ = அ + உ என்று வடமொழிப் புணர்ச்சிப்படி பிரித்தது பிற்காலம். ஆசிரியன் என்பதன் பொருளைத் தழுவி, குரு என்பதில், கு= குற்சிதம், ரு= ருத்திரன் என்று கூறுவது, News என்பது North Eest West South என்னும் நாற்றிசைச் செய்தி குறிப்பது என்று அப்பெயர்க்குக் காரணம் கூறுவது போன்றதே.
மதம்பற்றிய சில பொதுச்சொற்கள்
மாயை:
மாய்= ஐ=மாயை. ஓ. தோ, சாய்+ஐ= சாயை= நிழல். மாய்+ அம் = மாயம். மாயை மாயம் என்பவை, அழிவு, மயக்கம் என்னும் பொருளன. ‘ மாயமாய்க் காணோம்’ மாயவித்தை என்னும் வழக்குகளை நோக்குக. மாயை சாயை என்னும் தமிழ்ச்சொற்களை மாயா சாயா என்று கோர வீறாக்கினவனவானே வடசொல்லாகக் கூறுவது நகைப்பிற்சிடமானதே.
மதந்தழுவிய சில கருத்துக்கள்
வீடு :
ஆன்மாவுக்குத் துன்பத்தை நீக்குவதும் நிலையான இருப்புமாகிய துறக்கவுலகைப் போல, பெயின்மழைத் துன்பத்தை விலக்குவதும் நிலையாகத் தங்கற் குரியது மானது என்னுங் கருத்தில், இல்லத்தை வீடென்றனர் முன்னோர்.
விடு—வீ=(பிறவி நரகத் துன்பத்தினின்றும்) விடுதலை துறக்கம். உலகப்பற்றைத் துறந்து பெறுவது துறக்கம்.
ஏழுலகம் :
பண்டை ஞாலம் ஏழு தீவுகளாய் அல்லது கண்டங்களாயிருந்தமையின், ஞாலத்தைச் சேர்த்து மேல் ஏழுலகம் அமைந்திருப்பதாக முன்னோர் கொண்டதாகத் தெரிகின்றது. இனி எழுகோள்களினின்றும் ஏழுலகவுணர்ச்சி யுண்டானதாகவும் கொள்ளலாம்.
ஏழுலகத்தைக் குறிப்பதற்கே, எழுநிலை மாடமும் எழுநிலைக் கோபுரமும் எடுத்தனர் என்க.
எழு தீவுகளையுஞ் சுற்றியுள்ள கடல்களை எழுகடல் என்றனர் முன்னோர். ஒ. நோ. Indian Ocean (from Mount Atlas, in the north west of Africa) எழுகடல்களை நன்னீர், உவர் நீர், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு என்பவற்றால் நிறைந்ததாகப் பிறழக்கூறினர் ஆரியப்பழைமையர்.
எழுபிறப்பு :
ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிரீறாக ஆறும், தேவர் பிறப்பொன்றுமாக, உயிரடைவது ஏழ் பிறப்பென்று தமிழர் கொண்டனர். இவற்றைத் தேவர் மாந்தர் விலங்கு பறவை நீர்வாழ்வன ஊர்வன நிலைத்திணை என, வேறொரு வகையா யெண்ணியதுடன், மாந்தர்க்குள்ளேயே சூத்திரன் வைசியன் க்ஷத்திரியன் பிராமணன் என முறையே உயர்ந்த நால்வகைப் பிறப்புள்ளதாகவும், பிராமணப்பிறப்பு ஒரு விரிவுளர்ச்சி (Evolution) யெனவும் கூறினர் ஆரியப் பார்ப்பனர்.
பிறப்பாலுயர்வு தாழ்வு வகுப்பது (இந்திய) ஆரியக் கொள்கை; தமிழர் கொள்கையன்று. பிரமாவே மக்களை நாற்குலமாகப் படைத்தாரென்றால், ஏனை நாடுகளில் ஏன் அங்கனம் படைக்கவில்லை? இந்தியாவில் மட்டும் ஏன் படைக்க வேண்டும்? அதிலும் தமிழரை ஏன் படைக்கவில்லை? இந்துக்கள் கிறித்தவரும் இஸ்லாமியருமானவுடன் ஏன் பிரமாவின் படைப்பு அவர்களைத் தாக்குவதில்லை? இதனால், பிறப்பாற் சிறப்புக்கொள்கை ஆரியராற் புகுத்தப் பட்ட தந்நலக்கருத்தேயன்றி வேறன்றென்க. இந்தியாவின் ஒற்றுமையைக் கெடுப்பது இதைப்போன்று வேறொன்று மில்லை. அயல்நாடு சென்றால் கண்திறக்குமென்ற கருத்துப் பற்றியே, இடைக்காலத்தில் இந்தியர் அயல் நாடு செல்வது ஆரியத்தால் தடுக்கப்பட்டிருந்ததென்க,
“பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” குறள்-972.)
என்றார் திருவள்ளுவர்,
மக்கள் வரவரப் பெருகி வருதலையும், அதனாற் குலமும் பெருகி வருதலையும், ஒருகாலத்தில் குலமேயில்லா திருந்ததையும் நோக்குக. கபிலரகவலையுங் காண்க:
முப்படிவம் (திரிமூர்த்தம்) :
மாந்தர்க்கு முதலாவது இறப்பச்சம் பற்றி அழிவுணர்ச்சியும் பின்பு காப்புணர்ச்சியும், அதன் பின் படைப்புணர்ச்சியும் தோன்றுவதே இயல்பு. முதலாவது சிவனுக்கு அழிப்புத் தொழிலும் பின்பு திருமாலுக்குக் காப்புத் தொழிலும் கூறப் பட்டன. பின்பு படைப்புணர்ச்சி தோன்றியபோது, அதுவும் சிவனுக்கே யுரித்தாக்கப்பட்டது, ஒடுங்கின இடத்திலிருந்தே ஒன்று தோன்றவேண்டும் என்னும் கருத்துப்பற்றி.
இதே,
”தோற்றிய திதியே யொடுங்கிமலத் துள தா
மந்த மாதி யென்மனார் புலவர்”
என்று சிவஞான போதத்திற் கூறப்படுகின்றது.
பிராமணர் தென்னாட்டிற்கு வந்த பின், படைப்புத் தொழிலைப் பிரித்துத் தங்கள் குல முதல்வராய பிரமாவினது என்று கூறிப் பழைமை வரைந்தனர். ஆயினும் தமிழர் ஒப்புக் கொள்ளாமையால் அவருக்குக் கோயில் வழிபாடேற்படவில்லை. இதற்குப் பிற்காலத்தில் ஒரு கதை கட்டப்பட்டது.
பிராமணரின் குல முதல்வரே பிரமாவென்பது, பிரமஸ்ரீ, பிரம தாயம் என்னும் பிராமணரைக் குறித்த சொல்வழக்குக்களாலும், வீர மகேந்திரத்திலிருந்த பிரமா கந்தனொடு போய்ச் சேர்ந்து கொண்டமையால், அடுத்த அண்டத்திலிருந்த பிரமாலைச் சூரபன்மன் வரவழைத்தான் என்னுங் கந்தபுராணச் செய்தியாலும் உணரப்படும்.
திருமால் முகில் வடிவினராதலின், மேகத்தைச் சமுத்திரமென்னும் தங்கள் மறைவழக்குப்படி, கடலை அவர்க்கு இடமாக்கினர் ஆரியர். திருமால் வணக்கம் வரவரச் சிறந்து வந்தமையால், பிரமா திருமாலின் மகனெனப்பட்டார் போலும், ஆரிய மறையோதுவதே சிறந்த கல்வி என்னுங் கருத்தில், கலை மகள் (சரஸ்வதி) பிரமாவின் மனைவியாகக் கூறப்பட்டாள். தமிழர் கல்வியைத் தமிழ்மாது என மொழிப் பெயராற் கூறினரேயன்றிக் கலைப்பெயராற் கூறவில்லை, ஆரியம் வருமுன் தமிழொன்றே தமிழகத்தில் வழங்கினமையின்:
பண்டைக்காலத்தில் ஒவ்வோர் அரசனிடத்தும், ஒவ்வொரு கருமான் அல்லது தச்சன் இருந்தான், அவனே ஊர்களை அல்லது நகர்களைக் கட்டுபலனாதலின், ‘ உலகக் சுருமான்’ (விசுவகர்மா) எனப்பட்டான். ‘உலக விடைகழி’ என்பதில் உலகம் நகரைக் குறித்தலையும், சுருமான் என்பது கொல்லன் பெயராதலையுங் காண்க. விசுவகர்மா என்பது உலகக் கருமான் என்பதின் மொழிபெயர்ப்பே .
உலகக் கருமானுக்கு அரசத் தச்சன் என்னும் பெயருண்டு ஓ. நோ. Gr. architekton-archi, chief, and tekton, a builder. E. architect.
ஊரைக் கட்டுவது தச்சனாதலாலும், கொல்லருக்குள் சுருமான், தச்சன், கற்றச்சன், கன்னான், பொற்கொல்லன் என ஐம்பிரிவிருப்பதாலும், உலகத்தைப் படைத்தவன் முதற் கருமான் என்றும், அவன் ஐம்முகன் என்றும் ஒரு பழைமை வழக்கு தொன்றுதொட்டுக் கம்மாளர்க்குள் வழங்கி வந்திருக்கின்றது.
பிராமணர் தம் குல முதல்வராகிய பிரமனைப்படைப்புத் தெய்வமென்றும் நான்முகனென்றும் கூறியபோது, கம்மாளர்க்கு அவர் மீது பகையுண்டானதாகத் தெரிகின்றது. அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது. ஆரிய மறையை நான்காகப் பகுத்தத பிற்காலமாதலின், பிரமாவை நான் முகன் என்றது திசைபற்றி அல்லது குலப்பிரிவு பற்றியேயிருத்தல் வேண்டும்,
அறுமுறை வாழ்த்து
பாடாண் பொருள் புகழ்ச்சி, வாழ்த்து, வழுத்து என மூவகைப்படும். புகழ்ச்சியாவது ஒருவரைச் சிறப்பித்துக் கூறல் ; வாழ்த்தாவது ஒருவரை நீடு வாழ்கவென்றல்; வழுத்தாவது ஒரு தெய்வத்தைப் பராவுதல்.
‘அமரர் கண் மூடியும் அறுவகை யானும்’ (புறத். 21) என்பதால், வாழ்த்தப்படுபொருள் ஆறென்றார் தொல்காப்பியர், “அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம்” என்று கூறினர் நச்சினார்க்கினியர். இவற்றுள், பார்ப்பார் முற்காலத்துக்கேற்காமையின், அவர்க்குப் பதிலாய்க் கூறத் தக்கது அறமேயாகும்.
“கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
என்பது தொல்காப்பிய நூற்பா (புறத்: 27).
இதில் ‘கொடி நிலை கந்தழி வள்ளி” என்பதற்குப் பலரும் பலவாறு பொருள் கூறினர். அவற்றுள் மு. இராகவையங்கார் அவர்கள் கூறியதே உண்மையான பொருளாகும். அது ‘அவை முறையே வான் நீத்தார் அறன் என்பன’ என்பது.
“முதலன மூன்றும்” என்றதனால் முன்னாற் கூறப்பட்ட முதன் மூன்று பொருளும் என்றும், “வடுநீங்கு சிறப்பின்” என்றதனால், அவை மிகுந்த சிறப்புடையவை என்றும், “கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்பதனால், அவை கடவுள் வாழ்த்தொடு சேர்த்து வருமென்றும் பொருள் படுவதாலும்,”முதவன மூன்றும்” என்ற சுட்டு, ” அமரர் கண் முடியும் அறுவகையைத் தவிர வேறொன்றையும் தழுவ முடியாமையாலும், “கொடி நிலை சுந்தழி வள்ளி” என்ற மூன்றற்கும் ஐயங்கார் அவர்கள் கூறிய பொருள் “அமரர்கண் முடியும் அறுவகை” யில் மூன்றாயமைதலானும். இதற்குச் சிறந்த பழத்தமிழ் நூலாகிய திருக்குறட் பாயிரம் காட்டா யிருத்தலானும், வேறோருரைக்கு இடமில்லை யென்க.
“கடவுள் வாழ்த்து” என்னும் பெயரும், அதன் பின் “கொடி நிலை கந்தழி வள்ளி” என்ற முறையும். திருக்குறட் பாயிரத்தில் அமைந்திருப்பதை நோக்குக
இது மதி நுட்பத்தாலறியும் பொதுச் செய்தியாதலின், பார்ப்பார் தமிழ் மொழிக்கதிசாரியா கார் என்று யான் முற்கூறியதற்கு முரணாகாதென்க.
தமிழுக்கு இது போது தொண்டு செய்து வருவாருள், தலைமை யானவருள் ஒருவர் மு. இராகவையங்கார் அவர்கள் ஆவார்கள். அவர்கள் எழுதிய நூல்களுள், தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, கலிங்கத்துப்பரணி யாராய்ச்சி, சேரன் செங்குட்டுவன், ஆழ்வார்கள் காலநிலை, சாஸனத் தமிழ்க்கவி சரிதம் என்பவை மிக மிகப் போற்றற்குரியன,
நூல்களை உள்ளபடி அச்சிடுவதினும் ஆராய்ச்சி நூல்களை வெளியிடுவது சிறந்தது. ஐயங்கார் அவர்கள் நூல்களில் உள்ள சில தமிழொடு முரண் கருத்துக்கட்கு, மூன்னோரான பார்ப்பாரும் தமிழருமே காரணராவர்.
அறிவ (சித்த) மதம்
‘அறிவன் தேயம்’ என்று தொல்காப்பியத்திற் கூறியிருப்பதால், உருவ வணக்கத்தை (Idolatry) யொழித்த உயர்ந்த அறிவ மதமும் பண்டைத் தமிழகத்திலிருந்தமையுணரப்படும். பிற்காலத்திலிருந்த பதினெண்ணறிவரும் தமிழரே. சுடவுள் என்ற பெயர் எல்லாவற்றையும் கடந்த முழுமுதற்கடவுளைக் குறித்தல் காண்க:
வடமொழிப் பழைமை நற்பொருள்கள் பல
தென்னாட்டுச் செய்திகளேயாதல்
சதாபத பிராமணம், பாரதம், பாகவதம், அக்கினி புராணம், மச்ச புராணம் என்பவை தென்னாட்டுக் கடல்கோட் செய்தியைக் கூறுகின்றன.
திருமாலின் ஆமைத்திருவிறக்கம் :
“பாண்டி நாட்டைச் சூழ்ந்த கடல்களில், மிகப் பெரிய ஆமைகள் வாழ்கின்றன. அவற்றின் ஓடுகள் வீடுகளுக்கு முகடு போட உதவுகின்றன. ஓர் ஓட்டின் நீளம் 15 முழம். அதனடியில் பலர் நின்று வெயிலுக்குத் தப்பமுடியும் என்று மெகஸ்தனிஸ் கூறுகிறார்.[8] இது முன்னோர் கூற்றைக் கொண்டு கூறியதே.
தென்கடலில் நில நடுக்கத்தால் தத்தளித்த ஒரு மலைத் தீவையே, ஆமையுடன் இணைத்து, திருப்பாற்கடல் கடைந்த கதையைக் கட்டியிருப்பதாகத் தெரிகின்றது.
இராமாயணத்தில் முக்கியமான பகுதி தென்னாட்டுச் செய்தியே.
தெய்வமாக்கிக் கூறியவர், சிறந்த அல்லது பெரிய அரசரைத் தெய்வ வால்மீகியைவிடக் சும்பரே இராமனைமிகுதியும்மாக வணங்குவது பண்டை வழக்கம், திருமலை நாய்க்கர் இறந்த பின்பு அவர்க்குக் கோயில் எடுத்து வழிபட்டனர். [9] திருமாலைப்போல அரசரும் காப்புத் தொழிலையுடைமையின், அவரைத் திருமாலாகக் கூறுவது தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கம் என்பதை, ‘பூலை நிலை’ என்பதாலறியலாம். ‘முச்சக்கரமும்’ என்னும் வெண்பா கரிகாலனைத் திருமாலாகக் கூறுவதையும், அரசர் நாடும் வெற்றியும் அடைவதை நில மகளையும் வயமகளையும் மணப்பதாக மெய்க்கீர்த்தி மாலைகள் கூறுவதையும், திருவுடையரசரைக் காணின் திருமாலைக் கண்டேனென்னும் என்னும் திவ்வியப் பனுவற் கூற்றையும் நோக்குக.
இராமன் தவஞ் செய்து கொண்டிருந்த ஒரு சூத்திரனைக் கொன்றும், கண்ணன் நால்வகைக் குலமும் பிரமாவின் படைப்பேயேன்று கூறியும், பிராமணீயத்தை வளர்த்ததினால் மிகப் போற்றப்பட்டதாகத் தெரிகிறது. [10]
கந்தபுராணத்தில், கந்தன் பிறப்புத் தவிர, மற்றைய வெல்லாம் (பெரும்பாலும்) தென்னாட்டுச் செய்திகளே,
பஞ்சதந்திரக் கதைகனிற் பல தென்னாட்டில் வழங்கியவை,
ஹாலாஸ்ய மான்மியம், உபமன்யு பக்த விலாசம் முதலி யவையும் பல தலப் பழைமைகளும் தென்னாட்டுச் செய்தி களைக் கூறுபவை.
அடி முடி தேடிய கதை திருவண்ணாமலையில் தோன்றியது.
முப்புரம் எரித்த கதை வடவிலங்கையில் தோன்றியது. மாந்தையிலிருந்த முக்கோட்டைகள் நிலநடுக்கத்தாலோ எரிமலையாலோ பன்முறை அழிந்து போயின. ஒரழிவு பௌத்த மதம் இலங்கையிற் புகுந்த பின் நிகழ்ந்தது. அதுவரை சைவமே அங்கு வழங்கிவந்தது. அதனால் திருமால் புத்தவடிவு கொண்டு தாரகாட்சன் முதலிய மூவரைப் பௌத்தராக்கி, பின்பு சிவ பெருமானால் அவர்க்கு அழிவு நேர்வித்ததாகக் கதை கட்டப் பட்டது. (கதிரைமலைப்பள்ளைக் காண்க.)
ஜனமேஜயன் கதை மைசூர் நாட்டில் தோன்றியது.[11]
பண்டைக்காலத்தில், திருமாலியர்க்குத் திருவரங்கமும் சைவர்க்குத் தில்லையுமே சிறந்த திருத்தலங்களாகவிருந்தன, அதனால் அவற்றிற்குக் கோயில் என்றே பெயர்.
கங்கை நாட்டிலிருந்த பார்ப்பனர் தென்னாட்டிற்குக் குமரியாட வத்தனர்.
இராகனன் பெயர்க்க முயன்றதாகக் கூறும் கயிலை யாழ்ப்பாணத்திலுள்ளதே.
பதினெண் கணத்தாருள், பெரும்பாலார் தென்னாட்டிற்கேயுரியவர்.
சோழ மரபின் முன்னோருள் ஒருவனான சிபி அயோத்தியில் ஆண்டதாகக் கூறப்படுகின்றான். இதனால், வட நாட்டுச்குரிய திங்கள் மரபினரின் முன்னோர் தென்னாட்டாரே என்று தெரிகின்றது.
எண்டிசைத் தலைவர்
கிழக்கில் வேந்தன் (இந்திரன்);
இந்திரன் என்று பழைமை நூல் கூறுவது பலவிடத்தில் கடாரத்தரசனையே. இந்திரன் யானைக்கு வெள்ளை நிறமும் ஐராவதம் என்னும் பெயரும் கூறப்படுவதையும், கடாரத்திலுள்ள ஐராவுதி என்றும் ஆற்றுப் பாங்கரில் வெண்புகர் யானை வதிவதாகக் கூறப்படுவதையும், இலங்கையிலிருந்த அரக்கரும் அசுரரும் அடிக்கடி இந்திரனை வென்றதாகக் கூறுவதையும், கடாரம் கிழக்கிலிருப்பதையும், இந்திரன் கடலைப் பாண்டி தாட்டின் மேல் வரவிட்ட கதையையும், மேகம் கீழ் கடலில் தோன்றிக் கொண்டல் என்று பெயர் பெறுவதையும், கடாரமும் மலேயாவும் இன்றும் ஆடல்பாடல்களிற் சிறந்திருப்பதையும், தேவருலகிற்கு நாகலோகம் என்றொரு பெயரிருப்பதையும் நோக்குக.
எண்டிசைத் தலைவருள், அரசரெல்லாம் ஒருகாலத்தில் ஒரு தலைமுறையில் தத்தமக்குரிய திசையிலுள்ள நாடுகளை ஆண்டு கொண்டிருந்தவரே. கடாரத்தரசனுக்கு இந்திரன் என்று பட்டப்பெயரிருந்திருக்கலாம்.
தென் கிழக்கில் தீ (அக்கினி)
ஜாவாவிலிருந்து பிலிப்பைன் தீவுவரையும், இன்றும் பல விடத்தில் எரிமலைகள் எரிந்து கொண்டிருப்பதைத் திணை நூலிற் காண்க.
தெற்கில் கூற்றுவன் (யமன்)
இவனைப்பற்றி முன்னர்க் கூறப்பட்டது. மறத்திற் சிறந்த எருமைக்கடா[12] மறலிக்கு ஊர்தியாகக் கூறப்பட்டது.
தென்மேற்கில் அரக்கன் (திருதி).
தென்னாப்பிரிக்க மக்களையும் பண்டு தமிழகமும் ஆப்பிரிக்காவும் இணைந்திருந்ததையும் நோக்குக.
மேற்கில் வாரணன (வருணன்),
வங்காளக்குடாவிலிருந்த நிலங்கட்கு முந்தி, அரபிக்கடலிலிருந்த நிலம் அமிழ்ந்து போனதால், மேற்கில் வாரணன் குறிக்கப்பட்டான்,
வடமேற்கில் காற்று (வாயு).
இது ஒரு கால் சகாராப் பாலை நிலக் காற்றாயிருக்கலாம்.
வடக்கில் குபேரன்.
இவன் இராவணன் காலத்தவன், இல் விருவரும் முறையே இலங்கையிலிருந்த இயக்கர் (யக்ஷர்), அரக்கர் (ராக்ஷஸர்) என்னும் குலங்கட்குத் தலைவர். இவ்விருவர்க்கும் போர் நிகழ்ந்தது. இராவணன் குபேரனை வென்று அவன் ஊர்தி (புஷ்பக விமானம்) யையும் கவர்ந்து கொண்டான். பின்பு குபேரன் வடதிசைக்குப் போய் ஒரு நாட்டையாண்டான். ஈழத்தில் பொன்னும் மூத்தும் ஏராளமாயகப்பட்டமையின், அவன் ஒரு பெருஞ் செல்வனாய்ப் பல கருவூலங்களை யுடையவனாயிருந்தான்,
வடகிழக்கில் ஈசானன்.
ஈசானன் ஒரு சில வடிவாகக் கூறப்படுகின்றான். இது மலைமகளின் கூறாகக் கருதப்படும் தடாதகைப் பிராட்டி, வடகிழக்குத் திசையிலிருந்த சோமசுந்தரனைக் கலியாணஞ் செய்ததினாலேயே.
இதுகாறும் கூறியவற்றால், இந்திய நாகரிகம் தமிழ் நாகரிகமே யென்பதும், “ஆரியர் நாகரிகத்தில் திராவிடராக, திராவிடர் மொழியில் ஆரியரானார்” என்று கில்பெர்ட் சிலேற்றர் (Gilbert Slater) கூறுவது சரியே என்பதும் அறிந்து கொள்க.
நாகர்:
நாகர் என்பார் முதன் முதல் நாக வணக்கங்கொண்டிருந்த கீழ்த்திசை நாட்டார். இன்றும் கீழ் நாடுகள் பாந்தளும் நச்சுப் பாம்பும் நிறைந்தவை.
“கீழ்நில மருங்கினாக நா டாளு
மிருவர் மன்னவர்” (9 : 54, 55)
என்பது மணிமேகலை,
நாகநாட்டு மாந்தரும் அரசரும் நாக இலச்சினையுடை யவராயும், நாகவுருவை அல்லது படத்தைத் தவையிலணிந்த பராயுமிருந்தனர். சிவபெருமான் நாகத்தைத் தலையிலணிந்த தாகக் கூறியது, புல்லிய வணக்கத்தையுடைய நாகரைச் சைவராக்குவதற்குச் சூழ்ந்த சிறந்த வழியே. பௌத்த மதம் பிற்காலத்து வந்தது.
சாவகம் (ஜாவா) நாகநாடென்றும் அதன் தலைநகர் நாகபுரம் என்றும் கூறப்பட்டன, இன்றும் நாகர்கோவில், நாகபட்டினம், நாகூர், நாகபுரம் (Nagpur), சின்ன நாகபுரம் (Cheta Nagpur) முதலிய இடங்கள் இந்தியாவின் கீழ்க்கரையில் அல்லது கீழ்ப்பாகத்திலேயே இருத்தல் காண்க.
அனுமான் கடல் தாண்டும் போது நாகரைக் கண்டா (னென்றும், மைத்நாகமலையில் தங்கினானென்றும், வீமன் துரியோதனனால் கங்கை லமிழ்த்தப்பட்டபின் நாகநாடு சென்றானென்றும், சூரவாதித்த சோழன் கிழக்கே சென்று நாககன்னியை மணந்தாவொன்றும் கூறியிருத்தல் காண்க.
நாகர் அல்லது கீழ்த்திசை நாட்டார் நாகரிகரும் அநாகரிகருமாக இருதிறத்தினர். அநாகரிகர் நக்கவாரம் (Nicobar) முதலிய தீவுகளில் வாழ்பவராயும், அம்மணராயும், தரவூனுண்ணிகளாயு மிருந்தனர்.
“சாதுவனென்போன் தகவில னாகி…
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கஞ் சார்ந்தவர் பான்மைய னாயினள்…
நக்க சாரணர் நயமிலர் தோன்றி…
ஊனுடை யிவ்வுடம் புணவென் றெழுப்பலும்”
என்னும் மணிமேகலை (16 : 4- 59) யடிகளைக் காண்க:
தக்கம் — அம்மணம்.
சாவகம் முதலிய நாட்டிலுள்ளவர் நாகரிகராயிருந்தனர். நாக நாட்டின் ஒரு பகுதி இன்பத்திற்குச் சிறந்திருந்தமையால், அது தேவருலகாகக் கருதப்பட்டது. சாவகத்தின் பண்டைத் தலை தகரான நாகபுரத்திற்குப் போகவதிபுரம் என்றும் பெயருண்டு. மலேயத் தீவுக்கூட்டத்தில், சாவகம் பலி முதலிய தீவுகள் இன்றும் ஆடல் பாடலுக்கும் பிறவின் பங் கட்கும் சிறந்திருப்பது கவனிக்கத் தக்கது.
நடுமாகணத்தி (Central Provinces) லுள்ள முண்டரின் முன்னோர், கீழ்த்திசையிலிருந்த நாக நாட்டாரே. வங்காளக் குடாவிலிருந்த பல தீவுகள் அமிழ்ந்து போனபின், அவற்றினின் றும் எஞ்சினோர் இந்தியாவின் கீழ்ப்பாகங்களிற் குடியேறினர் என்க
முண்டரின் முன்னோர் நாகர் என்பதற்குச் சான்றுகள்
(1) சின்ன நாகபுரத்திலிருந்து மலேயத் தீவுக்குறை (Malayan Peninsula) வரையும், ஒரேவகையான கற்கருவிகள் அகப்படுவதுடன் பல பழக்கவழக்கங்களும் ஒத்திருக்கின்றன.[13]
(2) முண்டாமொழிகளும், நக்கவாரத் தீவுகளில் வழங்கும் மொழிகளும் மலேயத் தீவுக்குறையின் பழங்குடிகள் வழங்கும் மான் குமேர் (Mon – Khmer) மொழிகளும் ஓரின மென்று கொள்ளும்படி, பல முக்கியச் செய்திகளில் ஒத்திருக்கின்றன.[14]
மான்குமேர், முண்டா , திராவிடம் என்னும் முக் குடும்ப மொழிகளும் பின்வருபவற்றில் ஒத்திருக்கின்றன.
i; சொன் முதலில் ஒரு மெய்க்குமேல் வராமை
ii, சொல்லின் ஈற்றில் அரையொலிப்பு மெய்கள்.
iii. மூவிடப்பெயர்களிற் சில, பெயர்களுடன் சேர்ந்து கிழமைப்பொருள்தரல்.
- பல சொற்கள் :—
முண்டா | மான்கு மேர் | தமிழ் |
— | தம் | தமர் (துளை) |
மூ | முஹ் | மூக்கு |
புரு | ப்ரி | பொறை (மலை) |
பீர் | ப்ரி | மரம் |
ஜம் | செள | சப்பு (உண்) |
மரன் | — | முரண் (பெரிய) |
ஹா | — | ஆம் |
நி | நெ | இன் (இந்த) |
நொ | நொ | அன் (அந்த) |
தமிழில், சொற்களின் ஈற்றில் மெய்கள் அரையொலிப்பா யொலித்தல் கொச்சை வழக்கு.
இன் என்னுஞ் சொல், இலக்கணப் போலியாய் எழுத்து முறைமாறி நி என்றாகும். அகர இகரங்கள் முறையே ஒகர எகரங்கட்கினம்.
குரங்கு, கொண்டை, பரவு (படவு), இரும் (கருப்பு), பெட்டி மூக்க (முகம்) ஏகு, பொஹொ (புகை) முதலிய பல தமிழ்ச் சொற்கள் மலேயத் தீவுக் கூட்டத்தில் வழங்குகின்றன
கீழ்வருபவை முண்டா மொழியினத்தின் சிறப்பியல்புகளாகப் பண்டிதர் கிரையர்சன் குறிப்பிடுகின்றார்:-
(1) ஒரே சொல் பல சொல்வகை (Parts of Speech) யாக வழங்கல்
(2) ஆண் பெண் என்ற சொற்கள் பெயரோடு சேர்ந்து முறையே ஆண்பாலும் பெண்பாலு முணர்த்தல். (3) 6-ஆம் வேற்றுமை பெயரெச்சமாயிருத்தல்.
(4) முன்னிலையை உளப்படுத்துவதும் படுத்தாததுமான இரு தன்மைப் பன்மைப் பெயர்களிருத்தல்
(5) இருந்து என்று பொருள்படும்
(5 ஆம் வேற்றுமை) உருபு ஒப்புப் பொருளை யுணர்த்தல்.
(6) தொடர்புப்பதிற்பெயர்களும் (Relative Pronouns)
தொடர்பு வினையெச்சங்களும் இல்லாமை
இவை தமிழுக்கும் உரியவாதல் காண்க.
மான்குமேர் மொழியினம் ஓரசை நிலை (Monosyllabic) யதாகவும், முண்டாமொழியினம் பல்லசை நிலை (Polysyllabic) யதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் முன்னதன் முன்மை யுணரப்படும்: |
ஆத்திரேலிய மொழிகட்கும் தமிழுக்கும் உள்ள ஒப்புமை.[15]
(1) சகர வேறுபாடுகளும் மூச்சொலிகளு மில்லாமை:
(2) பின்னொட்டுச் சொற்களாலேயே பெரும்பாலும் புதுச்சொற்கள் ஆக்கப்படல்,
(3) ஆத்திரேலிய மொழிகளில் உயர்திணைப் பெயர் களும் அஃறிணைப் பெயர்களும் வேறு படுக்கப் படாமை,
முதுபழந் தமிழிலும் இங்ஙனமே யிருந்தது.
கா : மண்வெட்டி, விறகு வெட்டி: சலிப்பான் (சல்லடை)
(4) ‘அர்’ பன்மை வீறாயிருத்தல்;
தமிழர், முண்டர், நாகர், ஆத்திரேலியர் என்பவர் பண்டு திரினத்தாராயிருந்ததாகத் தெரிகின்றது.
இலங்கையில் பண்டு வழங்கியது தமிழென்றும், ஈழ நாட்டரசர்க்கு முடிநாகர் என்ற பேர் இருந்ததென்றும், முத்துத்தம்பிப் பிள்ளையவர்கள் ‘செந்தமிழ்’ச் சுவடிகை (Magazine) யில் எழுதியிருப்பது பொருத்தமானதே.
ஆத்திரேலியர் திராவிடரைப் பலவகையில் ஒத்திருப்பதாக மாத்தனூலார் கூறுகின்றனர்.
தமிழர் நீக்கிரோவர்க்கும் ஆரியர்க்கும்
இடைப்பட்டோராதல்
இதற்குச் சான்றுகள் :
(1) கடாரத்தில் முதன் முதல் இராக்கதர் (Monsters) வாழ்ந்தனர் என்னும் ஒரு வழக்குண்மையாலும், நக்கவாரத்தில் நரவூனுண்ணிகனிருந்தமை மணிமேகலையிற் கூறப்படுவதாலும், இலங்கைக்குத் தெற்கே அசுரர் என்னும் ஓர் இராக்கத வகுப்பாரிருத்தமை கந்தபுராணத்தாலறியப்படுவதாலும், தென்மேற்குத் திசைத்தலைவனாக நிருதியென்றோர் அரக்கன் குறிக்கப்படுவதாலும், இன்றும் தென்மேற்கிலுள்ள ஆப்பிரீக்கர் அரக்கவினமாயிருப்பதாலும், பண்டு தமிழகத்தின் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் மாந்தனின் 2 ஆவது நிலையினரான நீக்கிரோவர் வாழ்ந்தனர் என்பது அறியப்படும். இராக்கதர் இரவில் செல்லுபவர், இதையே நிசாசரர் என்று மொழி பெயர்த்துக்கொண்டனர் ஆரியர். அரக்கர் அழிப்பவர்.
(3) உடலமைப்புப்பற்றிய மாந்தன் நிலைகளுள், முதலாவது விலங்கு போல்வது; இரண்டாவது பண்டை நீக்கிரோவரது; மூன்றாவது திராவிடரது, நாலாவது ஆரியரது.
தமிழர் உடலமைப்பில் ஒரு வலத்த கருநீசிய(Melanesian) அல்லது இந்தோ-ஆப்பிரிக்கக் கூறுள்ளதாகப் பண்டிதர் லோகன் (Dr. Logan) கூறுகின்றார்.[16]
மாந்தன் நிலைகள், தொழிற்படி, முறையே உண்ணும் மாந்தன் {Man the Eater) உழைக்கும் மாத்தன் (Man the Worker), எண்ணும் மாந்தன் (Man the Thinker) புதுப்புனை மாந்தன் (Man the Inventor) என நான்கு. அவற்றுள் இடை மூன்றும் திராவிடர் அடைந்தவை; இறுதியது ஆரியரது.
மாந்தனை நிறம்பற்றிக் காலமுறைப்படி முறையே கருமாந்தன், செங்கருமாந்தன், செம்மாந்தன், பொன்மாந்தன், வெண்மாந்தன் என ஐவகையாக வகுக்கலாம். அவற்றுள் முதல் மூன்று நிறங்கள் திராவிடருடையன.
மாந்தன் மூக்கு முதலிலிருந்து வரவர ஒடுங்கி வந்திருக்கின்றது. நீக்கிரோவர் மூக்கு அகன்றும் திராவிடரது நடு நிகர்த்தாயும், ஆரியரது ஒடுங்கியு மிருக்கும்.
“சரியான திராவிடனுடைய மூக்கின் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விழுக்காட்டளவு (proportion), நீக்கி ரோவின் மூக்கிற்குள்ளது போன்றேயிருக்கிறது.”
“இந்தியாவிற்கு வெளியே திராவிட வரணமில்லை.”
“திராவிடரின் முகம் (தலை) வழக்கமாக வாலவடிவாயுளது. ஆனால், பிற இயல்புகளிலெல்லாம் அது ஆரியத்திற்கு நேர்மாறாயுள்ளது” என்று கிரையர்சன் வரைகின்றார்.
தமிழருள் அல்லது திராவிடருள் தாழ்த்தப்பட்டோரான ஒரு பகுதியாரை, ஆதிதிராவிடர் என்று பிரிப்பது தவறாகும். வெயிலில் உழைப்பதாலும், நாகரிக வாழ்க்கையும் சிறந்தவுணவும் இல்லாமை யாலுமே, அவர் அங்ஙனமிருக்கின்றனர். தாழ்த்தப்பட்டோருன் இரண்டு மூன்று தலைமுறையாய் நாகரிகமானவர் மேலோரைப் போலிருத்தலையும், பிறந்தவுடன் ஒரு பறைக் குழந்தையைப் பார்ப்பனக்குடியிலும், ஒரு பார்ப்பனக் குழந்தையைப் பறைக் குடியிலும் விட்டு வளர்க்க உருவம் மாறுபடுவதையும் நோக்குக.
- ↑ Child Hood of the world.
- ↑ காந்தளூர்-மேல்கரையில் ஓர் ஊர்.
- ↑ ஈழம் – இலங்கை
- ↑ நக்கவாரம் –Nicobar
- ↑ கடாரம்-பர்மா
- ↑ The Funeral Tent of an Egyptian Queen. p. 96.
- ↑ சிவநெறியைச் சைவம் என்றது திரிபாகுபெயர் (தத்தி தாந்தம்). இவ்வியல்பு தமிழுக்குஞ் சிறுபான்மை யுண்டென்பதைப் பைத்தியம் என்னுஞ் சொல்லானுணர்க பித்து (gall – bladder)பித்தம் (Bile)– பைத்தியம் (insanity).
- ↑ Foreign Notices of South India, p. 42.
- ↑ History of the Nayaks of Madura. p. 146.
- ↑ இக்காலத்தில் வரணாசிரமத்தைத் தாங்கும் திருவாளர் காந்தியை, மகாத்மா வென்றும் முனிவர் என்றுங் கூறுதல் காண்க.
- ↑ Illustrated Weekly of India Oct. 33. 1938, p. 22,
- ↑All About Animals, pp. 54, 55.
- ↑ S. 1. Intro. p. 1.
- ↑ S. 1. pp. 10, 15.
- ↑ L S. 1. p. 14.
- ↑ L, S.I.p.14. t Caldwell’s Comparative Grammar pp. 560. 561.
4. பண்டைத் தமிழர் மலையாள நாட்டிற் கிழக்கு
வழியாய்ப் புகுந்தமை
மலையாள நாடு பண்டை முத்தமிழ் நாடுகளுள் ஒன்றான சேர நாடாகும். கி. பி. 2ஆம் நூற்றாண்டில், இந்தியா முழுவதையும் தன்னடிப்படுத்திய சேரன் செங்குட்டுவன்கீழ், அது தலை சிறந்த தமிழ் நாடயிருந்தது. ஆனால், இன்றோ முற்றிலும் ஆரியமயமாய்க் கிடக்கின்றது. இதுபோதுள்ள தமிழ்ப் பாவியங்களுள் சிறந்த சிலப்பதிகாரம் மலையாள நாட்டிற் பிறந்த தென்பதை நினைக்கும்போது, சரித்திரம் அறிந்தவர்க்கும் ஒரு மருட்கை தோன்றாமற்போகாது: கி.பி. 9 ஆம் நூற்றாண்டுவரை அது தமிழ் நாடாகவே யிருந்தமை, சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி என்னும் இரு நாயன்மார் சரித்திரத்தாலும் அறியக்கிடக்கின்றது அதற்குப் பின்னும் சில நூற்றாண்டுகள் தமிழ் நாடாகவே யிருந்திருக்கவேண்டும். 12ஆம் நாற்றாண்டிற்குப்பின் தான் மலையாளம் என்னும் மொழி முளைக்கத் தொடங்கிற்று. அது தன் முற்பருவத்தில் தமிழையே தழுவியிருந்தது. பிற்பருவத்தில்தான் ஆரியத்தைத் தழுவிற்று. துஞ்சத்து எழுத்தச்சன் (17ஆம் நூற்றாண்டு) ஆரியவெழுத்தையமைத்தும், வடசொற்களைப் புகுத்தியும், சேரநாட்டுக் கொடுந்தமிழாயிருந்ததை முற்றும் ஆரிய மயமாக்கிவிட்டார். மலையாளம் இன்றும் ஐந்தாறாட்டைப பருவத்ததே. ஆயினும் தமிழறியாமையாலும், ஆரியப் பழைமையை நம்பியும் தங்கள் தாட்டைப் பரசுராம க்ஷேத்ரம். என்றும், மிகப் பழைமையானதென்றும், தமிழ்நாடன்றென்றும் சொல்லிக்கொள்கின்றனர் மலையாளத்தார். இது அவர்கட்கு இழிவேயன்றி உயர்வன்று. ஆயினும் இது அவர்கட்குத் தோன்றுவதில்லை.
மலையாள மொழித்தோற்ற வளர்ச்சிகளை S. ஸ்ரீநிவாச ஐயங்கார் அவர்கள் எழுதிய தமிழிலக்கிய ஆராய்ச்சி (Studies in Tamil Literature) என்னும் நூலிற் கண்டுகொள்க. அவை இம் மடலத்தின் இரண்டாம் பாகத்தில் விளக்கப்படும்.
மலையாளம் என்னும் மொழிபோன்றே, அதன் பெயரும் பிற்காலத்தது.
மலை+ஆளி= மலையாளி: ஆளி = ஆள், ஓ. நோ. கூட்டாளி, வங்காளி, பங்காளி, தொழிலாளி. மலையாளி = மலை நாட்டான்.
மலையாளியின் மொழி மலையாளம். மலையாளி+அம்= மலையாளம் , ஒ. நோ, வங்காளி–வங்காளம்.
மலையாள நாட்டின் வடபாகம் மலபார் (Malabar) என்று அழைக்கப்படுகிறது. முதன்முதல் மலையாள நாட்டில் வந்திறங்கின மேலை விடையூமியர், மலையாள நாட்டு மொழிக்கு மலபார் என்று பெயரிட்டு, தமிழையும் அப்பெயரால் அழைத்தனர். அன்றவ்விரண்டிற்கும் வேறுபாடு சிறிதேயாதலின்,
மலை வாரம்—மலவாரம்—மலவார்—மலபார்.
வாரம் = சாய்வு அல்லது சரிவு, ஒ. நோ, அடிவாரம் தாழ்வாரம். வாரம் இடப்பெயராதலை நக்கவாரம் என்பதாற் காண்க. நக்கவாரம்-Nicobar. மலைவாரம்–Malabar.
இப்போதுள்ள மலையாள மக்களின் முன்னோரான தமிழர், மலையாள நாட்டிற் புகுந்தது கிழக்கு வழியாயென்பதற்குச் சான்றுகள் :—
(1) பாண்டியனின் தம்பிமாரான சோழ சேரர் தெற்கினின்றும் வடக்கே வந்து, சோழ சேர நாடுகளை நிறுவினர் என்னும் வழக்கு.
சேரநாடு முதலாவது குடமலைக்குக் கிழக்கில் நிறுவப்பட்டுத் திருச்சிராப்பள்ளிக் கோட்டகையைச் சேர்ந்த கரூர் அதன் தலைநகரானதாகவும், பின்பு சேரன் குட மலைக்கு மேற்கிலுள்ள பகுதியைக் கைப்பற்றி நீர் வாணிகத்திற்கும் சோழ பாண்டியரினின்றும் பாதுகாப்பிற்கும் மேல்கரையில் வஞ்சி நகரையமைத்துக் கரூர் என்றும் அதற்குப் பெயரிட்டதாகவும், பிற்காலத்தில் கீழ்ப்பகுதியைக் காத்துக் கொள்ள முடியாமை யால், அது கொங்கு நாடென்று தனி நாடாய்ப் பிரிந்தபின் பழங் கரூர் கைவிடப்பட்டதாகவுந் தெரிகின்றது.
வினையெச்சமே பண்டைத் தமிழில் வினைமுற்றாக வழங்கிற்று:
மலையாளத்தில் இன்றும் அங்ஙனமே. இது சேரன் மேல்பாகத்தைக் கைப்பற்று முன்னிருந்த பழந்தமிழ் நிலையைக் குறிக்கும். சோர் செந்தமிழை வளர்த்தனர்; ஆயினும் அது எழுத்து வழக்கிலேயே சிறப்பாயிருந்திருக்கின்றது. பேச்சு வழக்கில் கற்றோரிடம் வினைமுற்று வடிவும் மற்றோரிடம் வினையெச்ச வடிவுமாக இருவகை வடிவுகளும் வழங்கியிருக்கவேண்டும். பிற்காலத்தில் செந்தமிழ்ச் சேர மரபின்மையாலும், தமிழொடு தொடர்பின்மையாலும், ஆரிய முயற்சியாலும், பண்படுத்தப்பட்ட செந்தமிழ் வழக்கற்று, பழைய வினையெச்ச வடிவமே வழங்கிவருகின்றதென்க: ஆயினும், ‘வான்’ ‘பான்’ ஈற்று வினையெச்சங்கள் இன்றும் வழங்குவதால், சேர நாட்டிற் செந்தமிழ் வழங்கியதை யுணரலாம்.
கிழக்கு மேற்கு என்னும் திசைப்பெயர்கள், குமரி நாட்டிலேயே அல்லது சேர ஆட்சியேற்பட்டபின் மலையாள நாட்டார்க்குள் தோன்றியிருக்க வேண்டும்.
(2) குமரி நாட்டில் ஒரு பகுதியின் பெயரான கொல்லம் என்பது, மலையாள நாட்டில் ஓர் இடத்திற்கிடப்பட்டமை.
(3) திரிந, மகிழ்நன், பழுதி முதலிய மெலித்தல் வடிவங்கள் செந்தமிழில் வழங்குதல்.
இவை குமரி நாட்டிலேயே தோன்றின குமரி மலை நாட்டு வழக்காகும்.
(4) உரி (அரைப்படி), துவாத்து (தோர்த்து) முதலிய திருநெல்வேலிச் சொற்கள் மலையாள நாடு நெடுக வழங்கல்.
(5) பாணர் என்னும் பழந்தமிழ்க்குலம் மலையாள நாட்டிலிருத்தல்.
(6) மலையாள நாட்டில் மாதங்கட்கு ஓரைப் பெயர் வழங்கல்
இதுவே பண்டைத் தமிழ்முறை; தமிழ் நாட்டில் இது மாற்றப்பட்டது. திராவிடத்திற்குச் சிறந்த தமிழ் நாட்டையே முதன் முதல் ஆரிய மயமாக்கினர். இது ஒரு வலக்காரம்: தமிழ் நாடு ஆரிய மயமாயின், பிற திராவிட நாடுகள் தாமேயாகுமென்பது ஆரியர் கருத்து.
(7) பண்டைத் தமிழ் அவிநயங்கள் கதகளி என்னும் பெயரால் மலையாள நாட்டில் வழங்குதல்,
(8) தம்பிராட்டி, சிறுக்கள் (சக்கன்) முதலிய செந்தமிழ்ச் சொற்கள் மலையாள நாட்டில் வழங்கல்.
(9) மருமக்கட்டாயம் போன்ற ஒரு வழக்கு கருநீசியத் தீவுகளில் வழங்கல்.[1]
ஒரு விதப்பான மன்பதைய (Social) வழக்கு தென் கண்டத்திற்கு வடகிழக்கிலுள்ள தீவுகளிலும் மலையாள நாட்டிலும் வழங்குவதாயிருந்தால், இவ்விரு நிலப்பகுதிகளும் ஒரு காலத்தில் ஒன்றா யிணைக்கப்பட்டிருந்திருத்தல் வேண்டுமென்பதைத் தவிர வேறென்ன அறியக் கூடும்? குமரி நாட்டிலும் பெண் வழிச்செல்லமரபு வழங்கியிருக்கவேண்டும், தாய் + அம் = தாயம், தாயினின்றும் பெறும் உரிமை தாயம்.
பட்டம் விடுதல் சேவற்போர் முதலிய பொழுது போக்குக்கள், தென்னாட்டிலும் கீழ்நாடுகளிலும் இன்றும் ஒரேபடியாயிருக்கின்றன;
கீழ் நாடுகளிலுள்ள வீடுகள் கோயில்கள் முதலிய கட்டடங்களின் அமைப்பும், வேலைப்பாடும், பெரும்பாலும் தமிழ்நாட்டில் அல்லது மலையாள நாட்டில் உள்ளவை போன்றே யிருக்கின்றன
கடாரம் ஜப்பான் முதலிய நாடுகளில், எரிமலை நில நடுக்கம் வெள்ளம் முதலியன பற்றி, அடிக்கடி வீடுகளும் ஊர்களும் இடம் பெயர்த்து கொண்டேயிருக்கின்றன. குமரி நாட்டிலும் இவ்வியல்பு இருந்ததாகத் தெரிகின்றது. ஊர் நகர் என்னும் பெயர்கள் முதலாவது வீட்டின் பெயர்களாயிருத்தமையும், பெயர்வுப் பொருளுடையனவாயிருத்தலையும் பிறை வட்டமான எரிமலைத் தொடரிருத்திருத்தல்வேண்டும். அதுவே சக்கரவாள கிரியென்றும், அதற்கப்பாற்பட்ட கடலே பெரும்புறக்கடலென்றுங் கூறப்பட்டிருத்தல் வேண்டும். நெட்டிடையிட்டு நிகழ்ந்த பல எரிமலைக்கொதிப்பும் வெள்ளமும்பற்றியே, ஊவழியித்தியில் நெருப்பால் அழிவு நேருமென்று மலைவாணராகிய சிவனை வணங்குவோரும், நீரால் அழிவு நேருமென்று கடல்வாணராகப் பிற்காலத்திற் கூறப்பட்ட திருமாலை வணங்குவோரும், முறையே கொண்டிருத்தல் வேண்டும்.
- ↑ Peeps at Many Lands – The South Seas, pp. 64—66.
5. பண்டைத்தமிழ் நூற்களிற் பிறநாட்டுப் பொருள்கள் கூறப்படாமை
பழந்தமிழ் நூல்களில், தமிழர் வடக்கிருந்து வந்தார் என்பதற்கு சான்றாகத்தக்க, ஒருவகை அயல்நாட்டுப்பொருளும் கூறப்படவில்லை.
‘வெம்மை’ யென்னுஞ் சொல்லுக்கு விருப்பப்பொருளிருப்பது ஒரு சிறிது சான்றாகத் தோன்றலாம். குளிர் நாடுகளில் வெப்பத்தையும் வெப்ப நாடுகளில் குளிர்ச்சியையும் விரும்புவது இயல்பு. அதனாலேயே, ‘a warm welcome’, to pour cold water’, ‘பாட்டுக் குளிர்ச்சியாயிருந்தது’ ‘ சூடான சொல்’ முதலிய வழக்குக்கள் முறையே நற்பொருளும் தீப் பொருளும் பற்றித் தோன்றியுள்ளன. ஆனால், ஆராய்ந்து பார்ப்பின், தமிழ்நாட்டில் வெம்மையும் சில காலங்களில் வேண்டப்படுவது, தெரியவரும். பனிக்காலங்களில் வெம்மையை வேண்டுவதையும், பொதுவாய் மழையையும் குளிரையும் தாங்க முடியாமையையும், ‘கொன்வரல் வாடை’, ‘பலநாளைப் பாலத்தை (வெயிலை)த் தாங்குகிறோம், ஒரு நானைப் புண்ணியத்தை (மழையை)த் தாங்க முடியவில்லையே’ என்னும் வழக்குகளையும், இங்கிலாந்திலும் ‘a warm reception’ என்பது தீப்பொருளில் வழங்குவதையும் நோக்குக.
“வெம்மை வேண்டல்” என்பது தொல்காப்பியம் (உரி, 38. )
III. தமிழ்மொழித் தோற்றம்
(1) கத்தொலிகள்.Cries.
கா ; ஓ, கோ , கூ..
இவை துன்பத்திற் கத்தும் அரற்றொலிகள், அல்லது பிறரைக் கூப்பிடும் வினிப்பொலிகள்.
ஓ—ஓசை, ஓதை ; ஓல்—ஓலம்,
ஓதை—ஓது. ஓல்—-ஓல் – ஒலி.
கூ—கூவு. கூ( க்குரல்) கூப்பு (தொழிற்பெயர்) + இடு – கூப்பிடு.
(2) ஒப்பொலிகள் –Imitatives:
கா: கூ (கூயில்) – குயில். ஒ. நோ, (கூக்கூ ) – குக்கூ (cuckoo) கக்கூ என்பது பிற்காலத் துச் சரிப்பு: மா – மாடு, காகா—காக்கா —காக்கை—காகம்; குர்—குரங்கு .
ஒலிக்குறிப்புக்கள் — Onomatopoeia
கா: பட்(டு) – படு(விழு). தூ-துப்பு:
உரறு (roar). அரற்று (rattle), பினிறு (blare), கரை (cry, crow) முதலிய சொற்களெல்லாம் ஒலிக்குறிப்பே.
உணர்ச்சிவெளிப்பாட்டொலிகள்—Interjections.
ஒளி—பளபள, தகதக, பலார், பளிச்சு (flash)
நிறம்—பச்சு வெள், கரு.
ஊறு—பிசு, குறுகுறு, சுரசுர, மெத்து;
நாற்றம்—கம், கமகம.
விரைவு—சடு(சட்), E, sudden, சடார், திடும், திடீர், பொசுக்கு.
அச்சம்—துண், திடுக்கு, பே.
இரக்கம்—ஆ. ஆஆ—ஆவா—ஆகா
.
அருவருப்பு -சீ, சே, சை.
வியப்பு-ஓ. ஆ, ஏ, ஐ, ஆ ஆ–(ஆவா) ஆகா.
தெளிவு-ஓ, ஓஓ-ஓவோ –ஓகோ.
சுருக்கம்-சிவ், சிவுக்கு.
விரிவு -பா, பளா.
பருமை-பொந்து, பொது, பொதுக்கு.
செறிவு -கொசகொச, மொசுமொசு.
கனம்–திண்.
கேடு – நொசகொச.
பொலிவு-சம், (ஜம்).
மூட்சி —குப்.
ஏவல்-உசு (உஸ்).
விளி-தோ, சூ, பே.
அமைத்தல்–உசு (உஷ்) E: hush.
நுணுகி நோக்கினால், எல்லாக் குறிப்புக்களும் ஒலிக்குறிப் பினின்றே தோன்றினமை புலனாகும் ஆ, ஏ, ஓ என்பவை சுட்டடிகள்.
குறுகுறு என்பது காதில் அங்ஙனம் ஒலிப்பது. பிசு பிசு என்பது பசையுள்ள பொருளைத் தொடும் போது தோன்றும் ஒலி. திடும் என்பது ஒரு பொருள் திடீர் என்று விழும் ஒலி. ஆ என்பது நோவு தோன்றும்போது அரற்றும் ஒலி. இங்ஙனமே பிறவும்.
பிசு என்னுங் குறிப்பினின்று, பிய், பிசின், பிசிர், பிசினி, பிசினாறி முதலிய சொற்கள் பிறக்கும். இங்ஙனமே பிறவற்றினின்றும்.
குறிப்புச் சொற்கள் இணைக்குறிலாயிருப்பின், இரட்டைக் கிளவியாயிருப்பது பெரும்பான்மை. ஆனால், சில அடுக்குத் தொடர்களும் இரட்டைக்கிளவிபோல் தோன்றுவதுண்டு: அவற்றைப் பிரித்தறிய வேண்டும்.
கா: | இரட்டைக்கிளவி | அடுத்குத்தொடர் |
குறுகுறு | மினுமினு (மின்னு மின்னு) | |
மடமட | சுடுசுடு |
இரட்டைக்கிளவி இரட்டித்தே வரும் ; தனித்து வந்து பொருள் தராது ; அடுக்குச்சொல் தனித்துவந்து பொருள் தரும்:
செக்கச்செவேர், சின்னுஞ்சிறு என்பவற்றை இரட்டுக்கிளவி யெனலாம்:
(3) வாய்ச் சைகைபொலி—Oral Gesture.
முதலாவது அழைப்புவிடுப்புகளும் அண்மை சேய்மைப் பொருள்களும் கத்தொலியோடு கூடியகைச்சைகையினாலேயே குறிக்கப்பட்டன. பின்பு வாய்ச்சைகையோடுகூடிய ஒலிகளாற் கூறப்பட்டன:
அழைப்பு : வா. (பா என்றும் உலக வழக்கில் வழங்கும்.)
வா என்னும் ஒலியை ஒலிக்கும்போது, கீழுதடு மேல் வாய்ப்பல்லைத் தொட்டிறங்குவது, ஒருவன் சேய்மையிலுள்ள வனைத் தன்னிடம் வரச்சொல்லுவதைக் குறிக்கும். இதைக் கைக்சைகையில் கையானது மேலுயர்ந்து கீழிறங்கும் செய்கையுடன் ஒப்பநோக்குக.
விடுப்பு : போ.
போ என்னும் ஒலியை ஒலிக்கும்போது, பகரமாகிய வெடிப் பொலி (Explodent)யும் ஒகாரமாகிய கீழ்மேலங்காப்பொலியும், முறையே போக்கையும் சேய்மையையும் குறிப்பனவாகும்.
சுட்டு :
வாயை விரிவாயங்காத்தலால் சேய்மையையும், பக்கவாரியாய் நீட்டிக் கீழ்மேல் ஒடுக்கியங்காத்தலால் அண்மையையும், இடை நிகர்த்தாய்க் குவித்தங்காத்தலால் இடைமையையும், பக்கவாரியா யொடுக்கிக் கீழ்மேல் நீட்டியங்காத்தலால் உயரத்தையும் முதற்றமிழர் குறித்தொலித்ததால், முறையே, ஆ ஈ ஊ ஓ என்னும் ஒலிகள் பிறந்திருக்கின்றன. இவற்றை ஒலித்துக்காண்க.
ஓ உயரத்தை யுணர்த்துவதை, ஓங்கு, ஓச்சு முதலிய: சொற்களாலறிக,
ஓ…ஓ. கா : ஒய்யாரம்.
ஓ—ஊ, ஓ—உ, ஒகரத்தை உகரமாகவும் உகரத்தை ஒகரமாகவும் ஒலிப்பது உலக வழக்கு. உயரங்குறித்து முதலாவது தோன்றியவொலி ஓகாரமே.
ஊங்கு, உம், உம்மை , உம்பர், உம்பல், உத்தரம், உச்சி, உயர், உன்னதம் முதலிய சொற்களில், ஊகாரவுகரங்கள் உயர்ச்சி குறித்தல் காண்க.
மேல் என்னும் உயரங்குறித்த சொல், மேற்சொன்ன என்று இறந்த காலத்தையும், இனிமேல் என்று எதிர்காலத்தையும் உணர்த்தல் போல, ஊகாரவுகரச் சுட்டடிப்பெயர்களும் அவ்விரு காலத்தையும் உணர்த்தும்.
கா; ‘காணாவூங்கே “— இறந்தகாலம்
“உம்மை எரிவாய் நிரயத்தும்”—எதிர்காலம்
எதிர்காலம் பிற்காலம் என்று சொல்லப்படுவதாலும், பின் என்னும் பெயர் காலத்தைப் போன்றே இடத்தையும் குறித்தலாலும், பின்பக்கம் உப்பக்கம் எனப்பட்டது.
ஆகவே, உகரச்சுட்டு உன்னதம் உச்சி முதலிய சொற்களில் உயரத்தையும் : ஊங்கு. உம்பர் முதலிய சொற்களில் உயரத்துடன் இறந்தகாலத்தையும்; உம், உம்மை என்னுஞ் சொற்களில் உயரத்துடன் எதிர்காலத்தையும், உத்தரம் என்னுஞ் சொல்லில் உயரத்துடன் (நூலின்) பிற்பாகத்தையும் பிற்கூறும் மறுமொழியையும்; உப்பக்கம் என்பதில் பின்பக்கத்தையும் முதுகையும் உணர்த்துமென்க,
இடைமைச்சுட்டான உகரமும் உயரச்சுட்டான உசுரமும் வெவ்வேறு; முன்னது இயற்கையினாயது, பின்னது ஓகாரத்தின் திரிபு:
வினா :
(1) ஈற்று வினா—ஓடு
ஓகாரம் உயரச்சுட்டென்று முன்னர்க் கூறப்பட்டது. விளர்ப்பொருளில் உயரச்சுட்டுக்களே பயன்படுத்தப்பட்டன. ஒரு பொருளை எதுவென்று வினவும்போது, கீழே கிடக்கும் பல பொருள்களில் ஒன்றை மேலேயெடுத்துக்காட்டிக் கேட்டல் போன்ற வுணர்ச்சி குறிப்பாய்த் தோன்றுதலை நுண்ணிதி னோக்கி யுணர்க. சொற்கள் தோன்று முன், எதுவேண்டுமென்னும் கருத்தில், ஒரு பொருள் எடுத்து அல்லது குறித்துக் காட்டியே கேட்கப்பட்டது.
ஓகாரம் அவனோ, வந்தானோ என்னுஞ் சொற்களிற் போல ஈற்றுலினாவாகவே யிருக்கும்.
(2) இரு தலைவினா—ஏ:
சேய்மை யண்மை யிடைமைச் சுட்டுக்களினின்று முறையே அவன் இவன் உவன் முதலிய சுட்டுப் பெயர்களும், அன்மைச்சுட்டினின்றே முன்னிலைப் பெயரும் பிறந்தபோது, தன்னைக் குறிக்க ஓர் ஒலி வேண்டியதாயிற்று. அதற்கு உள் ளிருந்தெழுப்பப்படும் ஓர் ஒலியே பொருத்தமாகும். அவ்வொலி ஏகாரமே. உண்ட பின் வயிற்றிலிருந்து எழும் ஒலி ஏப்பம் (Eructation) என்றும், இன்பத்தில் விடும் (அடிவயிற்றினின் றெழும்) நெட்டுயிர்ப்பு ஏங்கு என்னும் சொல்லாலும் குறிக்கப் படுதல் காண்க.
ஏ என்னும் ஒலி அடிவயிற்றினின்று மேனோக்கியெழுப்பப் படுவதால், அது எழற்பொருளையும் உயரத்தையும் உண்ர்த் துவதாகும். ஏ-எ.
கா:
எ—எக்கு, எழு, எடு, எம்பு, எவ்வு:
ஏ—ர, ஏகு, ஏத்து, ஏந்து, ஏன், ஏர், ஏறு:
தென்னூ, நெடு, நெம்பு, சேண், மே, மேடு என்பவை, மெய்யொடு கூடிய எகர ஏகார வடியாய்ப் பிறந்தவை:
எழால், எழில், எழிலி, எழினி என்பவை எழு என்பதினடியாய்ப் பிறந்தவை,
“ஏபெற் றாகும்” என்றார் தொல்காப்பியர் (உரி. 8).
ஏண் என்பதினின்றே ஏணி, ஏணை, சேன், சேணோன் முதலிய சொற்கள் பிறக்கும்.
சேய்மையிற் செல்லுதல் அல்லது தொடர்ந்தொன்றைச் செய்தல் மேற்செல்லுதலாகக் கூறப்படும்: ஒ. நோ. go on “go on reading.
மேற்செல்லுதல் என்னும் கருத்தையே ஏ (அம்பு), ஏவு’ ஏரு என்னும் சொற்கள் தழுவியன. செய்து கொண்டேயிரு என்பதில் ஏகாரம் தொடர்ச்சியையும், ஒன்றேகால் என்பதிற் கூடுதலையுங் குறிக்கும்.
Educate, elate, erect, eructate, heave, heaven முதலிய சொற்களெல்லாம், எகர ஏகார அடியாய்ப் பிறந்து, எழல் அல்லது எடுப்புப்பொருளை உணர்த்துபவையே.
ஒ.நோ : சுவரெடு – to erect a wall.
எகரம் அல்லது எடுத்தல் என்னுஞ் சொல், எடுப்பாக (உயரமாக) வளர்த்தல், வெளியே எடுத்தல், வெளியே எடுத்து நடத்தல், வெளியே என்னுங் கருத்துகளை முறையே தழுவும்.
ஒ.நோ : L. educo, E. educate, to bring up; to draw out the mental powers of, as a child,
- educo, E. educe, to draw out.
- educo, duco (Aphesis), to lead.
- e, ex; Gr. ec, ex; E. ex, out, out of.
பண்டைத்தமிழில் வினைச்சொற்கள் எடுக்க, நடக்க என்று நிகழ்கால வினையெச்ச வடிவிலே கூறப்பட்டிருக்கின்றன. அவையும் கல்லார்வாயில் எடுக்கோ, நடக்கோ என்று ஓகார வீறாகவே வழங்கினதாகத் தெரிகின்றது. இதை இன்றும் மலையாளத்திற் காணலாம். எடுக்கோ, educo (L.) என்னும் சொற்கள் ஒத்திருத்தலைக் காண்க.
எடு என்னும் சொல் தமிழில் வெளியே எடு என்னும் பொருளில் வழங்குவதை, வாயாலெடு, காலில் முள்ளெடு என்னும் வழக்குகளாலுணர்க. எ-e; எக்கு – ec, ex. எகரவொலியே பண்டு e என்னும் ஆங்கில வெழுத்திற்கு மிருந்தது.
ஏ என்னும் ஒலி, ஒருவனுக்குள்ளிருந்து வருவதால், அவன் தன்னைக் குறிக்கும் தன்மைப் பெயரடியாயிற்று. ஏன் — யான் — நான்.
ஏகாரம் எழலைக் குறித்தலால் ஓகாரம்போல வினாப் பொருட்கும் ஏற்றது.
கா : ஏது, ஏவன் (முதல்); அவனே, வந்தானே (ஈறு)
ஏ — எ. கா: எது, எவன், என்.
ஏ — யா. கா: யாது, யாவன், யார்.
ஏகாரத்தின் திரிபே யா என்பது. இதனாலேயே தொல்காப்பியர் யாவை வினாவெழுத்தாகக் கூறவில்லை.
ஒ. நோ: ஏன் — யான், (ஏனை) — யானை. ஏனம் = கருப்பு, பன்றி. ஏழ் — யாழ்.
ஈற்றில் வரும் ஆ வினா சேய்மைபற்றியதாகும். சேய்மையும் உயரத்திற்கினமான பண்பாதலையும், ஆன் ஓன் என்னும் இருவடிவிலும் ஆண்பாலீறு வழங்குவதையும், ஈரெழுத்தும் ஏறத்தாழ ஒரே முயற்சியால் பிறப்பதையும் நோக்கியுணர்க.
ஆ வினா முதலில் வராது. ஆர் என்பது யார் என்பதன் மரூஉ.
தமிழிலுள்ள ஆ, ஈ, ஊ, ஓ, ஏ என்ற ஐந்தெழுத்துகளே, சுட்டும் வினாவும் உயரமும்பற்றிய ஆரியச்சொற்களுள் பெரும்பாலனவற்றிற்கு வேர் என்பது, இந்நூலின் மூன்றாம் மடலத்தில் விளக்கப்படும்.
சுட்டு வினாவடிகள் ஆரிய மொழிகளிற் சொற்களாயும், அவற்றுள்ளும் சில எழுத்து மாறியு மிருக்கின்றன. தமிழிலோ அவை எழுத்துகளாயும், ஓரிடத்திலும் பிறழாமலும் இருக்கின்றன.
கா: வடமொழியில்,
பிறழ்ந்தவைபிறழாதவை
அத்ய = இன்றைக்குஇ(த்)தி = இப்படி
அத்ர = இங்கேஇத்தம் = இவ்வாறு, E. item.
இந்தியில் இதர் உதர் என்ற சொற்கள் தமிழியல்புப்படியேயிருத்தல் காண்க.
(4) சொற்கள் தோன்றிய பிறவகைகள்
சைகையும் சொல்லும் : இத்துணைப்போல, அவ்வளவு.
ஒப்புமை : காடைக்கண்ணி, ஆனைக்கொம்பன், கரடிகை.
எழுத்துத்திரிபு : புழலை — புடலை, பெள் — பெண்
திரிசொல் : கிளி — கிள்ளை, மயில் — மஞ்ஞை.
மரூஉ : பெயர் — பேர், கிழவர் — கிழார்.
முதன்மெய்நீக்கம் : சமர் — அமர், தழல் — அழல்.
முதன்மெய்ப்பேறு : ஏண் — சேண்.
சிதைவு : எம்மாய் — யாய், நும்மாய் — ஞாய், தம்மாய் — தாய்.
போலி : நாலம் — ஞாலம், நெயவு — நெசவு, குதில் — குதிர்.
இலக்கணப்போலி – சிவிறி (எழுத்துமாற்று), வாயில் (சொன் மாற்று), கோயில் (உடம்படுமெய்ம்மாற்று).
முக்குறை:—
முதற்குறை : தாமரை — மரை, ஆட்டுக்குட்டி — குட்டி.
இடைக்குறை : வட்டை — வடை, உருண்டை — உண்டை.
கடைக்குறை : தம்பின் — தம்பி, கோன் — கோ.
அறுதிரிபு (உலக வழக்கு) :—
வலித்தல் : கொம்பு — கொப்பு, ஒளிர் — ஒளிறு, பதர் — பதடி.
மெலித்தல் : போக்கு — போங்கு.
நீட்டல் : நடத்து — நடாத்து, கழை — கழாய்.
குறுக்கல் : ஆங்கு — அங்கு.
விரித்தல் : — முதல்விரி : காயம் — ஆகாயம்.
இடைவிரி : காதம் — காவதம்
கடைவிரி : திரும் — திரும்பு
தொகுத்தல் : செய்யுமவன் — செய்வோன்.
குழூஉக்குறி : இருகுரங்குக்கை (முசுமுசுக்கை).
எதுகை : (இயற்கை) செயற்கை (செயல் + கை).
காரணச்சொல் : உள்ளி, நாளி — நாழி (நாளம் = மூங்கில்).
தொழிற்பெயர் : வெட்டு, கேடு, செய்கை.
பண்புப்பெயர் : வெளுமை — வெண்மை.
வினையாலணையும் பெயர் : வெட்டுவான், வாழவந்தான்.
ஆகுபெயர் : இலை (அலகு), வெள்ளை (வெளுத்த துணி)
திரிபாகுபெயர் : பித்தம்—பைத்தியம்.
குறுமைப்பெயர் : நரிக்கெளிறு, தொட்டி—தொட்டில்,
பருமைப்பெயர் : குன்று- குன்றம், தெருஞ்சில் — ஆனை நெருஞ்சில்,
உடையோன் பெயர் : அறிவுடையோன், வீட்டுக்காரன்,
இல்லோன் பெயர் : அறிவிலி.
தொழிலிபெயர் : வெட்டி, சலிப்பான், கொள்ளி.
அறுதொகை:–
வேற்றுமை : ஊற்றுக்கண், பிழைபொறுத்தான்,
வினை : நிறைகுடம், சுடுசோறு.
பண்பு : வெந்நீர், செம்மறி:
உவமை : கண்ணாடியிலை.
உம்மை : பயிர்பச்சை, தாய் பிள்ளை:
அன்மொழி : நால்வாய்,
இடைச்சொற்றொடர் ; இன்னொன்று.
புணர் மொழித்திரிபு! புகவிடு—புகட்டு, வரவிடு—வரட்டு, ‘போகவிடு—போகடு—போடு. L. Pono; Gacl. Put; W. Pwitio ; A. S. potian; E. put, pose.
மரு உப்புணர்ச்சி : தெங்கு -|- காய் = தேங்காய்,
துணைவிகைப்பேறு — எழுந்திரு, கொண்டாடு, பாடுபடு,
முன்னொட்டுச்சேர்பு: முற்படு, உட்கொள்,
பின்னொட்டுச்சேர்பு : பொக்கணம், ஏராளம்:
அடைமுதல் : நல்லபாம்பு, செந்தாமரை, முடக்கொற் நான் –
சினைமுதல் ; வாற்குருவி, கொண்டைக்கடலை,
அடைச்சினை முதல் (வண்ணச் சினைச் சொல்) : செங்கால் நாரை.
ஒட்டுப் பெயர் : இரெட்டியைக் கெடுத்த வெள்ளி, தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன்.
ஒரு வேர்ச்சொல் பல வழிக்கருத்துக்கள் கிளைக்கத்தக்க மூலக் கருத்தையுடையதாயின், அதனின்றும் ஏராளமான சொற்கள் பிறக்கும்.
கா : வள்,
+இ=வள்ளி—வளி.
+ஐ = வள்ளை —வளை , + அம் = வளையம் —வலயம் (வ)
+அல்=வளையல்
+ வி= வளைவி
+அகம் = வளாகம்
+அம் =வள்ளம்— வளம்— வளமை— வனப்பும்: வளைவு முதிர்ச்சியையும் வளத்தையுங் குறிக்கும்.
+அர் = வளர்
+அல்= வள்ளல்
+ஆர்= வளார்
வள்
+தி= வட்டி,+இல் வட்டில்
+ அணை = வட்டணை
=வண்டிவண்டி—பண்டி—பாண்டி
+இல் = பாண்டில்
+ அன் = பாண்டியன்
+து = வட்டு+அகம் – வட்டகம்- (வட்டுகம்)—வட்டுவம்.
=வண்டு
+ தம் = வட்டம் (வ்ருத்த, வ.)+ அகை = வட்டகை
+ ஆரம் =வட்டாரம்
+தை = வட்டை — வடை
வட்டம் என்பதை நிலை மொழியாகக்கொண்டு வட்டக் கெண்டை வட்டப்பாலை முதலிய தொடர்மொழிகளும், வரு மொழியாகக்கொண்டு ஆலவட்டம் இளவட்டம் கனவட்டம் காளிவட்டம் பரிவட்டம் முதலிய தொடர் மொழிகளும் தோன்றும்.
வள்—வாளம்—வாளி:
வாளம் — வாணம்—பாண (வ).
வாளம் = வளைத்தது, வளைந்த மதில். ஓ. தோ. சக்கர வாளம்.
Lat. vallum a rampart; Ger, wall ; A. S. Weall; E. wall.
வாளம்—பாளம்(மதில் போன்ற கனத்த தகடு):
வாளம் —வாள் (வளைந்த கத்தி) அரிவாளையும் வெட்டறுவாளையுங் காண்க.
வள்—வணர் — வணங்கு.
வள்—uri (Sans), verto (L)
வள்—வரி—வரை. வரி+சை = வரிசை, வரி+ அம்= வரம்:
வரி + அணம் = வரணம் — வண்ணம்
வரணம்—வரணி—வண்ணி,
வண்ணம்+ஆன் = வண்ணான்.
இவற்றுள் பல சொற்கள் தனித்தனி பற்பல பொருள்களைக் குறிப்பன. அவற்றையும், வள் என்னும் வேரடியாய்ப் பிறந்த பிறசொற்களையும், எனது செந்தமிழ்ச் சொல்லியலக ராதியிற்றான் காணமுடியும்.
தமிழ்மொழி வளர்ச்சி
தமிழ்மக்கள் குறிஞ்சிய விருந்தபோது சில சொற்களே தோன்றின. பின்பு முல்லை முதலிய ஏனைத்தினைகளுக்குச் சென்ற போது, ஒவ்வொன்றிலும் சிற்சில புதுச்சொற்கள் தோன்றின. அவற்றுள் மருதத்தில் தோன்றினவை பலவாகும். மருதத்திலும் நகரந் தோன்றிய பின்னரே பல சொற்கள் தோன்றின.
பல தொழிலும் பல கலையும் பல நூலும் தோன்றிய போது ஒவ்வொன்றிலும் பற்பல சொற்கள் தோன்றின.
ஒவ்வொரு திணையிலும் பொருளும் தொழிலும் கருத்தும் வேறுபடுதலின், வெவ்வேது சொற்கள் பிறந்தன; ஒவ்வொரு தொழிலிலும் கலையிலும் நூலிலும் கருத்துக்கள் வேறுபடுதலின் வெவ்வேறு சொற்கள் பிறந்தன.
மருத நிலத்தரசன் ஏனை நாற்றிணைகளையும் அடிப்படுத்திய போது. ஐந்திணை வழக்கும் ஒரு மொழியாயின : பின்பு அடுத்த நாடுகளைக் கைப்பற்றிய போது, சொல்வளம் விரிந்தது:
விலங்கு பறவை முதலிய ஒவ்வோர் உயிரினத்தினின்றும் சில சொற்களும் வழக்குக்களும் கருத்துக்களும் கோன்றின. அவற்றுள் நிலைத்திணையினின்றும் தோன்றியவை மிகப்பல. அவையாவன :—
முதல் :—
“அறுகுபோல் வேரூன்றி அரசு போலோங்கி அத்திபோல் துளிர்த்து ஆல்போற்படர்ந்து………..” என்று ஒருவரை வாழ்த்துவது வழக்கம்.
அரசாணிக்கால் நட்டல், அறுகிடல் என்பவை திருமண வழக்கு:
கொடி = குலத்தொடர்ச்சி. கா : கொடி வழி, கொடி கோத்திரம்,
புல் = சிறுமை. கா , புன்மை , புல்லியர், புன்செய், புன் செயல், புன்னகை,
பனை = பெருமை, ஓரளவு.
மரம் — மரபு. அடியுங் கவையுங் சிளையும் உடைய மரம் போலக் கிளைத்துத் தொடர்ந்து வருதலின், குல வழி மரபெனப்பட்டது.
மன்று என்னும் சொல்லும் மரம் என்பதினின்றே வந்திருக்கின்றது. கா = சோலை. காத்தல் பழச்சோலையைப் போற் காத்தல்:
வாழை — வாழ்:
வாழை நீர்வள நிலத்தில் வளர்வதையும், ஒரு குடும்பம் போல மரமும் பக்கக்கன்றுகளுமா யிருப்பதையும், பெற்றோர் தள்ளாடின பின் பிள்ளைகள் தலையெடுப்பது போலத் தாய் வாழை முதிர்ந்த பின் பக்கக் கன்றுகள் ஓங்குவதையும், இங்கனம் தொடர்ந்து நிகழ்வதையும் நோக்குக.
“வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்” என்றார் இராமலிங்க அடிகள்.
வாழை முதிர்த்தபின் சாயும்.
சாய்— சா = இற. ஒ. நோ. let. deyja ; Dan. do : Scot. dee ; E. dic.
சகர டகரங்கட்கு ஓர் இயைபிருப்பதனாலேயே, ஓடி— ஓசி, vide—vise என்று திரிகின்றன:
சா + வி = சாவி (சப், வ.) சாவி+ அம் = சாவும் (சாபவ ) —சாபம்.
சாவிக்கிறான் என்பது இன்றும் உலக வழக்கு:
வாழ்விX சாவி, வாழ்த்து—வழுத்து. வாழ்த்தல் சொல் வளவே.
சினை | :- | |
வேர் | : | வேரூன்று, வேர்கொள், வேரறு. |
முளை | : | கான்முளை , முளை = தோன்று(வி.), இளமை, துவக்கம் (பெ). |
தண்டு | : | தண்டு = தடி, படை (பெ.); தண்டல் = வரி |
திரட்டல், தண்டம் = தடி, படை, தண்டனை, தண்டனைக் கட்டணம், வீண். | ||
தண்டி = பெரு, ஒறு (வி.) | ||
தடி = கம்பு, திரட்சி, ஊன் (பெ.) ; பெரு, வெட்டு (வி.). தடியாலடித்ததே முதல் தண்டனை. | ||
கவை | : | கவை = பிரி, (வி.) கவடு = காலிடை, கவை—கவான்—கமா (உருது). |
கிளை | : | கிளை = பிரி(வி.). இனம், பிரிவு (பெ.) கிளைவழி. |
கொம்பு | : | கொம்பு (மகள்), கொம்பன் (மகன்), கொள் |
கொம்பு— கொழு கொம்பு, விவங்குக்கொம்பு, எழுத்துக்கொம்பு, ஆடுகொப்பு, கொடு, வாங்கு
(கிளை பயிர் வளைவதால் தோன்றியவை). |
||
கோடு | : | கோடு (stroke), மலைக்கோடு, பற்றுக்கோடு. |
இலை | : | மூவிலைச்சூலம், இலைத் தொழில். |
இலக்கு = குறி, இடம், எழுத்து, இலக்கம்,
இலக்கித்தல் எழுதல், |
||
பூ | : | பூத்தல் = தோன்றுதல். பூப்பு (puberty). பூசுணம் பூத்தல், உவகைபூத்தல், |
அரும்பு | : | அரும்பல் தோன்றல். முகிழ் = தோன்று, ஒடுங்கு. மொக்கு = கோலம். அம்பல் = சிறிது வெளிப்பட்ட பழி. |
கூம்பு = ஒடுங்கு (வி.). பாய்மரம் (பெ.) (கை)
கூம்பு—கூப்பு, |
||
மலர் | : | முகமலர்ச்சி, மலர்த்தல் = மல்லாத்தல், அலர் = பழி. |
காய் | : | கை காய்த்தல், காய் விழுதல் (abortion);
மாங்காய் = குலைக்காய் (beart) |
பழம் | : | பழுத்தல் = முதிர் தல். கா : பழுத்த கிழம், சளி, சிலந்தி முதலியன முதிர்தல் பழுத்தலாகக் கூறப்படும். |
= நிறைதல். கா : நைவளம் பழுநிய”,
பழுத்த சைவன், |
||
= தண்டனை நேர்தல். கா : 10 உருபா
பழுத்து விட்டது. |
||
பழுப்பு நிறம் = மஞ்சள் நிறம். பழுக்காவி | ||
இலைப்பழுப்பு. பழுப்பு—பசுப்பு (தெ.);
பசப்பு—பசலை: |
||
பழம்—பழமை—பழைமை—பழகு—பழங்கு—வழங்கு. | ||
பழவினை, பழையன், பழங்கண், | ||
பழம்—பயம். பழன் —பயன், ஒ. நோ, fruit
= effect. |
||
பழம்— பல (வ.), fruit : பலி (வ.), to fructify; பண்டு =பழம் (தெ.), பழைமை. |
கனி | : | கன்னுதல் = பழுத்தல், கொப்புளம் தோன்றல். |
கன்னி (பழுத்தது)—கனி. | ||
கன்னி = பருவமான பெண்: ஒ: நோ. matured girl | ||
கன்னி—கன்னீகை: கன்யா (வ.). | ||
குலை | : | ஈரற்குலை. |
விதை | : | வித்து = முதற்காரணம். இம்மி, எள், தினை = சிற்றளவு. என்(ளு) = இகழ் (வி.). |
எண்மை-எளிமை. எள்கு (எஃகு)-இளகு-இளமை-இளை, இளகு -இலகு-இலேசு, இளை-எய். | ||
குன்றி ஓரளவு, காணம் (கொள்)= ஓரளவு பொன், பொற்காக. பொக்கு = பொய், பொக் கணம் = பை. | ||
தழை | : | தழைத்தல். |
குழை | : | நகை. |
தோடு | : | கம்மல், திரட்சி. ஓலை = எழுத்து, திருமுகம், ஆவணம், திருமண முன்னறிவிப்பு (இக்
காலத்தது). |
கொழுந்து | : | குலக்கொழுந்து, “கங்கைக் கொழுந்து”, |
குருத்து | : | காதின் குருத்து. |
தமிழிலக்கியத் தோற்றம்
ஒரு மொழியில் முதலிலக்கியம், காதல் திருமுகங்கள், முன்னோர் சரித்திரம், முன்னோர் போர்ப்பாடல்கள், திரு மன்றாட்டுகள், மறை நூல் என்ற வகையாகவே இருக்கும். பின்னரே பிற நூல்களும் கலைகளும் தோன்றும்.
தமிழில் மறை நூலிருந்தமை முன்னர்க் கூறப்பட்டது.
“நிறைமொழி மாந்தர்” என்னும் தொல்காப்பிய நாற்பா வுரையில், “‘தானே’ என்று பிரித்தான், இவை தமிழ் மந்திர மென்றற்கும், பாட்டாகி அங்க தமெனப்படுவனவும் உள அவை நீக்குதற்குமென உணர்க” என்று நச்சினார்க்கினியர் கூறியிருத்தல் காண்க.
தமிழிலக்கணத் தோற்றம்
எழுத்து :
எழுத்துக்களில் முதலாவது நெடிலும் பின்பு குறிலும் தோன்றின. முதற்றமிழர் குழந்தையர் போன்றனர், குழந்தைகள் வாயில் நெடிலே முன் பிறக்கும், குறிலினும் நெடிலே ஒலித்தற்கெளிது. நெடிலுங் குறிலும் ஒலியில் வெவ்வேறல்ல; அளவிலேயே வெவ்வேறாகும். நெடில் குறுகிக் குறிலாயிற்றென்க.
சுட்டும் வினாவும் முதலாவது நெடிலாகவே இருந்தன. இதை,
“நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி”
(மொழி. 10.)
“குற்றெழுத் தைந்தும் மொழி நிறை பிலவே”
(மொழி. 11.)
“ஆ-ஏ-ஓ அம் மூன்றும் வினா”
(நூல். 32)
“நீட வருதல் செய்யுளுள் உரித்தே”
(உயிர். 6.)
என்று தொல்காப்பியர் கூறுவதாலும், பிற திராவிடமொழிகளில் நெடில்கள் இன்றும் உலக வழக்கில் வழங்குவதாலும் அறியப்படும்.
ஐ, ஔ இரண்டே தமிழில் புணரொலிகள் (Diphthongs).
தமிழில் அரிவரி தோன்றினபோது, ஏகார ஓகாரங்கட்குக் குறிகளமைத்திருக்கவில்லை. பிற்காலத்தில் தான் அவை தோன்றின. அப்போது அவற்றின் மேலும் அவையேறின மெய்யெழுத்துக்களின் மேலும் புள்ளியிட்டனர். கற்காலத்தில் புள்ளிக்குப் பதிலாக, உயிரெழுத்துக்கரில் கீழிழுப்பு கீழ்ச் சுழிகளும், உயிர் மெய்யெழுத்துக் கொம்புகளில் மேற்சுழிகளும் இடப்பட்டன.
ஆய்தம் இத்தாலிய ஹகரம் போன்ற மெல்லிய ககரம்.
“ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்”
என்பது தொல்காப்பியம் (உரி. 34). ஆய்தம் = நுணுக்கமான ஒலி.
மெய்யெழுத்துக்களில், ழ ள ற ன என்ற நான்கும் முதன் முதல் அரிவரி தோன்றிய காலத்திற்குப் பிற்பட்டவை. அதனாலேயே அவை ஈற்றில் வைக்கப்பட்டன.
ல—ள—ழ. ஒலித்தற் கெளிமை கருதி ழகரம் ளகரத்திற்கு. முன் வைக்கப்பட்டது. ர-ற றகரத்திற்கு இனமாக னகரம் தோற்றுவிக்கப்பட்டது. னகரம் தோன்று முன் நகரமே வழங்கிற்று. வெரிந், பொருந், மகிழ்நன், கொழுநன் முதலிய சொற்களை நோக்குக.
எழுத்து படவெழுத்து (Hieroglyphic or Ideographic) அசையெழுத்து (Syllabic), ஒலியெழுத்து (Phonetic) என மூவகைப்படும். உலகில் முதன் முதல் தோன்றினது படவெழுத்தே. தமிழிலும் அதேயென்பது,
“உருவே யுணர்வே யொலியே தன்மையென
இருவகை யெழுத்து மீரிரண் டாகும்”
என்று யாப்பருங்கல விருத்தியிலும், ‘இன்ன பலபல வெழுத்து. நிலைமண்டபம்’ என்று பரிபாடலிலும் (19: 53), ”கடவுளெழுதிய பாவை” என்று மணிமேகலையிலும் (20: 111) கூறியிருப்பதாலும், படமெழுதுதல் என்னும் வழக்கு இன்று முண்மையாலும் அறியப்படும்.
திருவாளர் தி. நா. சுப்பிரமணியன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்னும் அரிய ஆராய்ச்சி நூலால், ஒருவகைத் தமிழெழுத்துக்கள் அடைந்து வந்துள்ள மாறுதல்களை நன்றாயறியலாம். தமிழில் இருவகையெழுத்துக்கள் இருந்தன.
சொற்கள்
முதன் முதல் தோன்றினவை தனிச்சொற்களே, குழந்தைகள் சோறு வேண்டும்போது சோறென்று மட்டும் கூறுதல் காண்க.
சொற்கள் இலக்கண முறையில், பெயர் வினை இடை உரி என நான்காக வகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள், முதல் மூன்றே உண்மையில் சொல்வகையாகும், இறுதியது செய்யுள் வழக்குப் பற்றியதே.
உரிச்சொல்—Poetic Idiom
உரிச்சொல் செய்யுள் வழக்குப்பற்றியதே யென்பதற்குக் காரணங்களும் சான்றுகளும்:—
(1) சொற்கள் மூவகைக்கு மேற்படாமை.
பெயர்ச் சொல்லும் வினைச்சொல்லும் அவ்விரண்டையும் சார்ந்து வரும் இடைச்சொல்லுமென மூவகையே சொற்கள், எச்சவினை காலங்காட்டின் தெரிநிலையும், காட்டாவிடின் குறிப்புமாகும்.
ஆங்கிலத்திலுள்ள எண்வகைச் சொற்களையும்,
I. | Nouns | — | பெயர்ச்சொல். |
II. | Verbs | — | வினைச்சொல் |
II. | Particles | — | இடைச்சொல் |
என மூன்றாகலே அடக்குவர் கென்னெடி (Kennedy) என்பார்.[1]
அரபியிலும் அதைப் பின்பற்றும் உருதுவிலும், பெயர் வினை இடை என மூன்று சொல்வகையே கூறப்படுகின்றன;
(2) “உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை………
பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்தம் மரபிற் சென்று நிலை மருங்கின்
எச்சொல் லாயினும் பொருள் வேறு கிளத்தல்”
என்று தொல்காப்பியர் உரிச்சொல்லிலக்கணங் கூறல்,
(3) தொல்காப்பியர் ஏனை மூன்று சொற்கட்கும் இலக்கணங் கூறியது போல, உரிச்சொற்கோர் இலக்கணங் கூறாமையும், அகராதி முறையில் பொருளே கூறிச் செல்லுதலும்,
(4) செய்யுள் வடிவிலுள்ள அகராதிகளான நிகண்டுகள் உரிச்சொல்லென்று பெயர்பெறல்,
“இன்ன தின்னுழி யின்னண மியலும்
என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா
எல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே”
என்றார் பவணந்தியார்.
உரிச்சொல் நிகண்டு என்று ஒரு நிகண்டுமுளது. செய்யுளிற் சிறப்பாக வரும் சொற்களெல்லாம், மாணாக்கர் இளமையிற் பாடஞ் செய்தற் பொருட்டுத் தொகுக்கப்பட்டன. அத்தொகையே நிகண்டென்பது.
இப்போதுள்ள அகராதிக்கு முந்தின நிலை நிகண்டும், அதற்கு முந்தின நிலை உரிச்சொல்லுமாகும்.
(5) உரிச்சொல் செய்யுட் சொல்லேயென்று பண்டைக் –காலத்தில் கூறப்பட்டமை.
“பெரும்பான்மையுஞ் செய்யுட்குரியலாய் வருதலின் உரிச்சொல்லாயிற் றென்பாருமுளர்“ என்று சேனாவரையர் கூறுதல் காண்க.
பிறவுரை மறுப்பு
(1) | உரை | : | இசை குறிப்பு பண்பு என்பவற்றிற்
குரியவை உரிச்சொல் என்பது. |
மறுப்பு | : | இது நாற்சொற்கும் பொதுவிலக்கணம் என்பது. | |
(2) | உ | : | பெயர்க்கும் வினைக்கும் உரியது உரிச்சொல் என்பது. |
ம | : | இஃது இடைச்சொற்கும் ஏற்குமென்பது. | |
(3) | உ | : | பலபொருட் கொருசொல்லும் ஒரு பொருட்குப் பல சொல்லுமாக உரியது உரிச்சொல் என்பது. |
ம | : | இதுவும் நாற்சொற் பொது விலக்கணம் என்பது. | |
(4) | உ | : | வினைவேரே உரிச்சொல் என்பது. |
ம | : | வினைவேர் (தாது) ஏவலாகவும் பகுதியாகவும்
வினையியலிற் கூறப்பட்டுள்ளது. |
|
வினை வேரை வேறாகக்கூறின், இடைவேரையும் வேறாகக் கூறவேண்டும். குரு மாலை முதலிய பெயர்ச்சொற்களும் செல்லல் அலமரல் முதலிய |
வினைச் சொற்களும் ஏ ஐ முதலிய இடைச் சொற்களுமாக, உரிச்சொல் மூவகைப்படுதலானும், அவற்றுள் வினைச்சொல் பகுதியும் தொழிற்பெயருமாக இருவேறு வடிவிற் கூறப்படுதலானும், உரிச்சொல்லை ஒரு தனிச்சொல் வகையென்றும். வினைவேரென்றம் கூறுதல்
தவறே என்பது. |
|||
(5) | உ | : | “உயிரும் புள்ளியும் இறுதி யாகிக் குறிப்பீனும் பண்பினும் இசையினும் தோன்றி தெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி ” |
உரிச்சொல் என்பது.
(குற்றி. 77)
| ம | : | இதற்கு உரையாசிரியர்கள் காட்டியுள்ளாவின் விணைத்தது, |
வெள்ள விளர்ந்தது முதலிய சாட்டுகளில், நிலைமொழிகள் இடைச்சொல்வாயும் வருமொழிகள் வினைச்சொல்லாயு மிருத்தலின், இவ்வுரை போலியுரையென்பது. |
பிறர் மறுப்புக்கு மறுப்பு
உரிச்சொல் செய்யுட் சொல்வேயென்று, முன்னமே நான் செந்தமிழ்ச் செல்வியில் ஒரு கட்டுரை வரைந்திருக்கின்றேன், அதன் உண்மையை உணராத சிலர், பலவாறு மறுப்புக் கூறியிருக்கின்றனர். அம்மறுப்பும் அதன் மறுப்புமாவன :—
(1) | ம | : | வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா |
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன.” (உரி. 2) |
என்று தொல்காப்பியர் வெளிப்படுசொல்லும் உரிச் சொல்லுள் அடங்கக் கூறியிருப்பதால், உரிச்சொல் செய்யுட் சொல்லன்றென்பது.
| ம. ம | : | ஒரு குழுவார் பிறர்க்குத் தெரியாது மறை பொருளலாகத் |
தமக்குள் வழங்கும் குறிகளே குழூஉக் குறியாயினும். அவற்றுள் பொருள் வெளிப்பட்டவும் பண்டை நிலை நோக்கிக் குழூஉக் குறி யெனப்படும், ஆசிரியன் குழூஉக்குறிகட்குப் பொருள் கூறும் போது. வெளிப்படை யானவற்றிற்குப் பொருள் கூறான். இது போன்றதே மேற்கூறிய நூற்பாக் கூற்று மென்பது. |
மேலும், செய்யுட்கே யுரியதும் செய்யுட்கும் உரை நடைக்கும் பொதுவானதுமெனச் செய்யுட்சொல் இருவகை. அவற்றுள், செய்யுட்கேயுரிய சொல்லே உரிச்சொல்லெனப் படுவது என்பதைக் குறித்தற்கே, வெளிப்படு சொல்லைச் சொல்லென்றும் வெளிப்படாச் சொல்லை உரிச்சொல்லென்றும் தொல்காப்பியர் குறித்ததூஉமென்க.
மேலும், உரிச்சொற்பெயர் ஒரு சொல்லை மட்டுமன்று. அது செய்யுளில் சிறப்பாக ஒரு பொருளில் வழங்கற்பாட்டையும் பொறுத்தது.
செல்லல் என்பது போதலைக் குறிப்பின் தொழிற்பெயர்; பிறரிடம் போயிரக்கும் வழமையாகிய இன்னாமையைக் குறிப்பின் உரிச்சொல், வாள் என்பது கருவியைக் குறிப்பின் பெயர்ச்சொல் ; அதன் ஒளியைக் குறிப்பின் உரிச்சொல். இங்ஙனமே பிறவும்.
சுதழ் துனை போன்ற சொற்கள், உலக வழக்கில் வழங் காமையால், எல்லாப் பொருளிலும் உரிச்சொல்லாகும்.
இங்ஙனம், சொல்லே உரிச்சொல்லாவதும், ஒவ்வொரு பொருளில் மட்டும் உரிச்சொல்லாவதுமென, உரிச்சொல் இருவகை.
பழுது முழுது முதலிய சொற்கள், இக்காலத்தில் வெளிப் படையாயினும், தொல்காப்பியர் காலத்தில், அல்லது அவர்க்கு முன்னொரு காலத்தில், வெளிப்படையல்லாதிருந்ததிருக்க வேண்டும். மறை வெளிப்படையாவதும் வெளிப்படை மறையாவதும் சொற்கட்கியல்பே
(2) | ம. | தட, கய முதலிய சொற்கள் அகரவீறாயிருப்பதால் அஃது ஒரு தனிச் சொல் ‘கையைக்குறிக்கும் என்பது. | |
ம. | ம | : | தொல்காப்பியர் ஓர் இலக்கணியேயன்றி மொழி நூற் புலவரல்லர். |
ஆகையால் சில சொற்களை ஈறு நீக்கிப் புணர் நிலை வடிவிற் குறிப்பர்; மத என்று ஓர் உரிச் சொல்லைக் குறித்துள்ளார். அது மதம் மதன் என்று வழங்குதல் காண்க. இங்ஙனமே பிறவும் என்பது. |
சொற்கள் சொல்லியல் முறையில், இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என, நால்வகையாக வகுக்கப்படும்.
இவற்றுள், இயற்சொல் (Primitive word) என்பது இயல்பான சொல்; திரிசொல் (Derivative word) என்பது அவ்வியற் சொல்லினின்றும் திரிந்த அல்லது திரிக்கப்பட்ட சொல். இவற்றிற்கு இவையே பொருள் என்பதை, இப்பொருட் பொருத்தத்தினின்றும், கிளி-கிள்ளை, மயில்-மஞ்ஞை என்பவற்றை உறுப்புத் திரிந்தவையென்று நச்சினார்க்கினியர் கூறியிருப்பதினின்றும் உணர்ந்து கொள்க.
இயற்சொல்லெனினும் வேர்ச்சொல்லெனினும் ஒக்கும். இது முதல்வேர், வழிவேர், சார்புவேர் என மூவகைப்படும்.
பளீர், பளிச்சு முதலிய சொற்களில் வேராயிருப்பது பள் என்பது. இது முதல்வேர். பள் என்பதன் திரிபு பால் என்பது. இது வழிவேர், பால் என்பது வால், வெள் என்று திரியும். இவை சார்பு வேர்.
சில சொற்களில் ஒவ்வோர் எழுத்தே பொருள் நிறைந்திருக்கும். அவ்வெழுத்தை விதையெழுத்தென்னலாம். பள் என்னும் சொல்லில் ‘ள’ விதையெழுத்தாகும் த(ன)மலள என்ற எழுத்துக்கள் ஒளிபற்றிய சொற்களில் வருதல் பெரும்பான்மை.
கா : | வேர் | முதல் திரிவு | வழித்திரிவு | சார்புத்திரிவு |
ஏ | ஏண் | சேண் | சேணோன் | |
அர் | அரி | அரம் | அரவு, அராவு |
திசைச்சொல் என்பது, செந்தமிழ் நாட்டில் வழங்கும் பொருளினின்றும் வேறான பொருளில் வழங்கும் கொடுந் தமிழ்ச் சொல்லாகும்.
கா : வளர (மலையாளம்) = மிக. வடசொல் வடமொழிச் சொல்.
கிளவி
கிளவியென்பது பெயர் முதலிய நால்வகைச் சொல்லுக்கும் பொதுப் பெயர், கிளத்தல் சொல்லுதல்.
இலக்கண நூல் தோன்றுமுன்னமே, திணை பால் எண் இடம் வேற்றுமையும், வினாவும் செப்பும் பிறவும்பற்றிய மரபு களும், தமிழிய அமைந்திருந்தன. அவற்றின் பாகுபாடுகளும் குறியீடுகளுமே இலக்கணிகளா லுண்டானவை. இதைக் குறித்தற்கே கிளவியாக்கம் முதலிய நான்கு இயல்கள், தொல்காப்பியத்திற் பெயரியலுக்கு முன் கூறப்பட்டுள்ளன.
பெயர்ச்சொல்
பெய்+ அல் = பெயல்—பெயர், பெய்தல் இடுதல். பாட்டன் பெயரும் பெயரன் (பேரன்) பெயரும் மாறி மாறி வந்தது பிற்காலமாதலின், பெயர் தற்பொருள் பிற்பட்டதாகும்.
பொருட்பெயர்—மூவிடப்பெயர்
தன்மை: ஏ தன்மைச்சுட்டு
ஏ+ன் = ஏன் (ஒருமை), ஏ+ம்= ஏம் (பன்மை ).
ஏன் — யான்— நான், ஏம்— யாம்— நாம்.
யாம்+கள் = யாங்கள், நாம்+கள் = தாங்கள்.
யாம் தனித்தன்மைக்கும் நாம் உளப்பாட்டுத்தன்மைக்கும் வரையறுக்கப்பட்டன.
முன்னிலை : ஈ அண்மைச்சுட்டு.
ஈ+ன் = ஈன்—(யீன்) — நீன். ஈ+ம் = ஈம்— (யீம்)—நீம்.
நீன்—நூண். நீம்—நூம். நீம் + கள் = நீங்கள், நீன்—நீ. நீமர்—நீமிர்—நீவிர்—நீயிர்—நீர்.
நீன்— நீம், நீமர் என்பவை இன்றும் தென்னாட்டில் உலக வழக்கில் வழங்குகின்றன. செந்தமிழ் தோன்றிய காலத்தில், நீ நீயிர் நீவிர் என்பன சிறந்தனவாகக் கொள்ளப்பட்டதினால், ஏனைய நூல்வழக்கற்றன. முன்னிலைப் பெயர்கள் வினை முற்றீறுகளாகும்போது பின்வரும் வடிவங்களையடையும்.
ஈ (முன்னிலையொருமைப்பெயர்)—ஏ-ஐ ஆய். நீ-தீ-தி.
கா : வந்தீ—வந்தே—வந்தை—வந்தாய் (இ. கா.)
ஓ. நோ, சீ—சே—சை. கழை— சுழாய். ஐ = அய்—ஆய்.
(செய்தி)— செய்தி (ஏவலும் நிகழ்கால ஒருமையும்.)
வா, தா என்பவற்றின் கால்மேல், வேறுவகையாய் வந்த புள்ளியை எழுத்துப்புள்ளியென் றெண்ணி, முதலாவது வர் தர் என்றும், பின்பு வரு தரு என்றும், ஏட்டைப் பார்த்துப் பெயர்த்தெழுதினவர் தவறு செய்ததாகத் தெரிகின்றது. இறந்த காலத்தில் இவ்வினைகள் வந்தான் தநதான் எனக் குறுகி மட்டும் நிற்றல் காண்க.
ந—த, போலி. ஓ. நோ. நுனி-நுதி. ஆன்மா -ஆத்மா (வ).
இடைமைப் பெயர் :
ஊ இடைமைச்சுட்டு, ஊ+ன் = ஊன் (வழக்கற்றது).. ஊ+ம்=ஊம் (வழக்கற்றது).
படர்க்கைப் பெயர் :
ஆ படர்க்கைச் சுட்டு. ஆ+ன்= ஆன்— தான், ஆ+ம்= ஆம்—தாம். தாம் +கள் = தாங்கள்.
மூவிடப்பெயர்களும் வேற்றுமைப்படும் போது பின் வருமார திரியும்.
யான் —என், யாம்—எம். யாங்கள்—எங்கள், நான்—(நன்), நாம்—நம், நாங்கள்— தங்கள், நீன்— நின், (நூன்—நுன்—உன், நீம் — (நிம்), (நூம்)— நும்—உம், நீங்கள்—(நிங்கள்). (நூங்கள்)— நுங்கள்—உங்கள், தான்—தன், தாம் தம், தாங்கள்—தங்கள்.
பிறைக்கோட்டுளுள்ளவை இது போது தமிழில் இருவகை வழக்கிலும் வழக்கற்றவை. இவற்றுக்குப் பதிலாக இவற்றை யொத்த பிற சொற்களே வழங்குகின்றன. நன் என்பதற்கு என் என்பதும் நங்கள் என்பதற்கு எங்கள் என்பதும் வழங்குதல் காண்க.
வினாப்பெயர்
ஏ உயரச்சுட்டு, ஏ+ள்—ஏன். ஏ+ம் = ஏம் (தமிழில் வழக்கற்றது).
குறிப்பு :
(1) முதலாவது, ஏ ஈ ஊ ஆ என்ற நெடில்களே, மூவிடப் பெயராகவும், வினாப்பெயராகவும் திணையும் பாலும் காட்டாது இடமும் எண்ணும் மட்டும் காட்டி வழங்கிவந்தன.
வடஇந்தியாவில் வழங்கும் இந்தியில் இன்றும் எ ஒ என்னும் தனி நெடில்கள் சுட்டுப் பெயராய் வழங்குகின்றன, அவை முறையே ஈ ஊ என்பவற்றின் திரிபாகும்.
இடையிந்தியாவில் வழங்கும் தெலுங்கில், ஆ ஈ ஏ என்னும் நெடில்கள் புறச்சுட்டுக்களாய் மட்டும் உலகவழக்கில் வழங்குகின்றன; பெயர்களாய் வழங்கவில்லை.
தென்னிந்தியாவில் வழங்கும் தமிழில், அவை புறச்சுட்டாகவும் வழங்கவில்லை. அவற்றுக்குப் பதிலாய் அந்த இந்த எந்த என்ற சொற்களே வழங்குகின்றன. புறச்சுட்டாகவும் புறவினா வாகவும் அவற்றின் குறில்களே வழங்குகின்றன,
இதற்குக் காரணம் வட இந்திய மொழி நிலை பண்படுத்தப் படாது பண்டை நிலையிலேயே இருப்பதும், தென்னிந்திய மொழி பண்படுத்தப்பட்டு மிகுதியும் மாறியிருப்பதுமே,
புதுப்புனைவுசெய்யும் ஒரு நாட்டில் கருவிகள் மாறிக் கொண்டே வரும், அது செய்யாத நாட்டில் அவை என்றும் சற்றுப் பண்டை. நிலையிலேயே யிருக்கும், இந்தியாவிலுள்ள புதுப்புனைவுக் கருவிகளெல்லாம் மேனாட்டினின்றும் வந்தவை, மேனாட்டில் நாள்தோறும் புதுப்புனைவுக்கலை வளர்ந்து கொண்டேயிருப்பதால், கருவிகள் திருத்திக் கொண்டே வருகின்றன. ஆனால், இந்தியாவில், சென்ற நூற்றாண்டுகளிற் கண்டுபிடிக்கப்பட்டு, மேனாட்டில் வழக்கற்றவை யெல்லாம் காணப்படலாம். இங்ஙனமே தென்னாட்டிலும் வட நாட்டிலும் வழங்கும் சொற்களுமென்க.
(2) முதலில் நெடிலாயிருந்த கட்டுவினா வெழுத்துக்கள் பின்பு குறிலாயின.
(3) குறிலும் நெடிலுமான சுட்டுலினா வெழுத்துக்கள் பல ஈறுகளைக் கொண்டிருந்தன,
கா : ஆம், ஆண், அம், அன், அல், அவ், அண் முதலியன
இவற்றுள் ஆம் அம் என்பவை முந்தினவாக த் தெரிகின்றன
ஆகு—ஆங்கு. ஆண்—ஆண்டு,
அம்—அந்து-அந்த—அந்தா.
அது—அதா—அதோ-அதோள்—அதோனி.
அம் — அன் — அன்ன—அன்னா : அன்ன — அனை—அனைத்து,
அம்— அங்கு, அம்— அம்பு—அம்பர்.
அல் — அள்— அண். அம் — அவ், அல்—அன் என்றுங் கூறலாம்.
அல்+து = அன்று. ஒ. நோ. எல்+து = என்று (சூரியன்).
அல் இல் எல் என்னும் வடிவமும் சுட்டுவினாச்சொற்கட் குண்டென்பதை, அன்று இன்று என்று என்னும் தமிழ்ச்சொற்களாலும், அல ஏலா என்னும் தெலுங்குச்சொற்களாலும், அல்லி இல்லி எல்லி என்னும் கன்னடச்சொற்களாலும் உணர்ந்துகொள்க.
அல் என்னும் வடிவமே இல் எனத் திரிந்து, சேய்மைச் சுட்டாக இலத்தீனில் வழங்குகின்றது.
கா : ille — அவன்illi, illae—அவர்
illa—அவள்illa — அவை
illud—அது
(4) அன் என்பதை ஒருமைக்கும் அம் என்பதைப் பன்மைக்கும் முதலாவது வழங்கினதாகத் தெரிகிறது.
நோக்குக. ஏன், ஏம் : நீன் நீம் : தான், தாம்.
ஈறுகளின் முதலிலுள்ள அசுரம் புணர்ச்சியிற்கெடுதல் இயல்பே.
கா : சிவம்—அன் = சிவன் : மண+அம் = மணம்.
(5) சுட்டடியான உயிர்நெடில்கள் யகரமெய் சேர்ந்து வழங்கியிருக்கின்றன. பின்பு அவ் யகரம் நகரமாக மாறியிருக்கின்றது.
கா : ஏன்— யான்— நான், ஈ—(யீன்) — நீன். ஆன்—(யான்)—(நான்)— தான்.
இ ஈ எ ஏ இன்றும் சொன்முதலில் வரின், யகரம் சேர்ந்தே பேச்சுவழக்கில் வழங்குகின்றன.
கா, யிடம், யீரம், யெழுத்து, யேடு.
யான் நான் என்னும் வடிவங்கள் தன்மையில் வருதலின் அவை மயக்கமின்மைப்பொருட்டுப் படர்க்கையில் விலக்கப்பட்டன. நகரத்திற்குத் தகரம் போலியாக வருமென்பது முன்னர்க் கூறப்பட்டது.
ஆகாரத்தோடும் யகரம் சேர்ந்து வருமென்பதை, yon (ஆண்), yonder (ஆண்டு+அர்) என்னுஞ் சொற்களானுணர்க.
(6) தான் தாம் என்னும் பெயர்கள் முதலாவது படர்க்கைச் சுட்டுப் பெயராயிருந்து, பின்பு அவன் அவர் முதலிய சுட்டுப் பெயர்கள் தோன்றிய பின், படர்க்கைத் தற்சுட்டுப் பதிற்பெயர் (Reflexive Pronoun) களாக வழங்கி வருகின்றன.
தாங்கள் என்பது, இன்று உயர்வு குறித்து முன்னிலை யொருமைக்கும் வழங்குகின்றது. இஃதோர் இடவழுவமைதி,
(7) மூவிடப் பெயர்களிலும் வினாப்பெயர்களிலும், எண் மட்டுங் குறித்தவை முந்தியன, பால் குறித்தவை பிந்தியன.
(8) பால் குறித்த சுட்டுப் பெயர்களையும் வினாப் பெயர்களையும் வேண்டிய போது, அவன் அவள் முதலியவாக, (பிற்காலத்து) இயல்பாகத் தோன்றிப் பால் காட்டாது வழங்கின சுட்டு வினாப் பெயர்களையே, முறையே ஆண்பால் முதலிய ஐம்பாற் சுட்டுவினாப் பெயர்களாகத் தமிழ்மக்கள் கொண்டதாகத் தெரிகின்றது. அவற்றுள் வினாப் பெயரடிகள் நெடிலாகவும் வழங்கும்.
அவ்—அவ — அவை. அவ—அ :
அவன் அவள் முதலிய சொற்கள் இயல்பாய்த் தோன்றியவை யென்பதும், அவை முதலாவது பால் காட்டவில்லையென்பதும், எவன் என்னும் பெயர் அஃறிணையிரு பால் வினாக் குறிப்பு வினைமுற்றாயும் ஆண்பால் வினாப்பெயராயு, மிருத்தலானும், அவள் என்பதன் திரிபான அவன் என்பதும் அதோள் உவள் என்பனவும் இடத்தைக் குறித்தலானும், அது என்னும் பெயர் சில வழக்குகளில் இருதிணைக்கும் பொதுவாயிருத்தலானும், அன் அர் என்னும் ஈறுகள் பால் காட்டியும் காட்டாமலும் அஃறிணைக்கும் வழங்குவதாலும் பிறவற்றாலும் அறியப்படும்.
அது என்னும் பெயர் உயர்திணைக்கும் வழங்குமாறு:—
யார் அது? கொற்றனது மகன் :
சுட்டுப் பெயர்கள்
அவன்—ஆண்பால் அவள்—பெண்பால் அவர்—பலர் பால் அது—ஒன்றன்பால் அவை—பலவின்பால் |
சேய்மைச் சுட்டுப் பெயர்கள் |
இங்கனமே அண்மை யிடைமைச் சுட்டுப்பெயர்களும், இடைமைச் சுட்டு தமிழில் உலகவழக்கற்றது . இந்தியில் சேய்மைச் சுட்டாக வழங்குகின்றது. இந்தி நிலை முந்தியது, அதன்பெயர் பிந்தியது.
வினாப்பெயர்கள்
ஏவன் – எவன் ஏது – எது
ஏவள் – எவன் ஏவை – எவை
ஏவர்– எவர்
ஏ—யா. யா+அன் = யாவன். இங்ஙனமே ஏனை யீறுகளையும் ஒட்டிக்கொள்க;
யா என்னும் வினாவடி, அஃறிணைப் பன்மை வினாப் பெயராகச் செய்யுளில் வழங்கும்,
காலப்பெயர்
காலம் என்னும் பெயர் செந்தமிழ்ச்சொல்லே யென்பது, யான் செந்தமிழ்ச் செல்வியில் வரைந்துள்ள ‘காலம் என்னும் சொல் எம் மொழிக்குரியது’ என்னுங் கட்டுரையிற் கண்டு கொள்க.
பொழுது : பொழுது = சூரியன், வேளை (சிறு பொழுது) பருவகாலம் (பெரும் பொழுது.) பொள்—(போள்)—போழ், – போழ்து—(பொழுது)—போது. ஒ. நோ. வீழ்து—விழுது.
போழ்தல் = பிளத்தல், வெட்டுதல், நீக்குதல்,
சூரியன் இருளைப் போழ்வது.
“வாள்போழ் விசும்பில்” என்றார் நக்கீரர்
(திருமுருகாற்றுப்படை).
பொழுது என்னும் சொல் முதலாவது சூரியனைக் குறித்து. பின்பு அதன் தோற்ற மறைவுகளால் நிகழும் காலத்தைக் குறித்தது. பொழுது புறப்பட்டது, பொழுது சாய்ந்தது என்னும் வழக்குகளில், இன்றும் அச்சொல் சூரியனைக் குறித்தல் காண்க.
சமையம் : சமை+ அம் = சமையம். சமைதல் பக்குவமாதல், ஒரு பொருள் பக்குவமான வேளை சமையம் எனப்பட்டது. இன்று அச்சொல் தகுந்த வேளைக்குப் பெயராய் வழங்குகின்றது.
பருவம் : ஒரு பொருள் நுகர்ச்சிக்கேற்ற அளவு பருத்திருக்கும் நிலை பருவம். பரு+வு =பருவு, பருவு + அம்=பருவம்:
நேரம் ; நேர்+ அம் = நேரம், தேர்தல் நிகழ்தல்: ஒரு வினை நேரும் காலம் நேரம்:
வேளை ; வேல் — வேலி — வேலை—வேளை,
கருவேல முள்ளால் அடைப்பது வேலி, வேலி ஓர் இடத்தின் எல்லை. வேலை = ஒரு கால வெல்லை. வேலையென்பதின் திரிபு வேளையென்பது. .வேலை செய்யுள் வழக்கு
மாதம் : மதி+அம் = மாதம்:
மாதம் என்னுங் கால அளவு மதியினாலுண்டானது;
ஆண்டு: என்று (சூரியன்) — (ஏன்று) — (ஏண்டு) – யாண்டு…ஆண்டு.
ஆண்டென்னுங் கால அளவு சூரியனாலுண்டானது. இங்ஙனமே பிற்காலப் பெயர்களும் ஒவ்வொரு காரணம் பற்றியவையாகும்.
இடப்பெயர்
இடு+ அம் — இடம்; பொருள்களை இடுவதற்கிடமானது. இடம். ஒ. நோ. E, position, from L. pono, to place.
தலம் என்னும் பெயர் ஸ்தலம் என்பதின் திரிபாகக்கருதப்படுகிறது. ஸ்தலம் என்பதற்கு ஸ்தா (நில்) என்பது வேர், இது ஆரிய மொழிகள் எல்லாவற்றிலுமிருக்கின்றது. State, Station, stand, steady, establish முதலிய சொற்கட்கெல்லாம் sta என் பதே வேர். ஆனால், இதனால் மட்டும் அதை ஆரியத்திற்தே யுரிய சொல்லாய்க் கொள்ள முடியாது; தா (கொடு) என்னுஞ் சொல்லை நினைத்துக் கொள்க.
காலுக்குத் தாள் என்று ஒரு தனித் தமிழ்ச்சொல் உளது. அதற்குத் தா என்பது தான் வேராயிருக்கவேண்டும். தாவு என்னுஞ் சொல், இடப் பொருளில் தென்னாட்டில், சிறப்பாய்க் கல்லா மக்களிடை வழங்குகின்றது. தாள் என்னுஞ் சொற் போன்றே, தா என்னுஞ் சொல்லும் முயற்சியென்னும் பொருளில் நூல்வழக்கில் வழங்குகின்றது
“தாவே வலியும் வருத்தமும் ஆகும்”
(உரி. 48.)
என்றார் தொல்காப்பியர், வலி = வன்மை. வருத்தம்= முயற்சி தாளம், தாளி (கள்னி), தாண்டு, தாவு, தாழ், தங்கு, தக்கு, தாங்கு, தளம், தளர் முதலிய பல சொற்கள் தா என்னும் வேரினின்று பிறந்தவையே. ஆகையால், குமரிநாட்டில், தா என்னும் வேர்ச்சொல் நில் என்னும் பொருளில் தமிழில் வழங்கி யிருக்கவேண்டும். தளம்- தலம். ஆராயப்படா மையாலும் வேர் வழக்கற்றதினாலுமே இச்சொல் வடசொல்லாகத் தோன்றுகின்றது. தலம்—ஸ்தலம் (மூன்மெய்ச்சேர்பு:)
உலகம் : உல—உலகு —உலகம்: உலத்தல் அழிதல், உலப்பது உலகம். இங்ஙனமே பிற இடப்பெயர்களும் ஒவ்வொரு காரணம் பற்றியனவயேயாகும். உலகம்-லோக(வ.)
சினைப்பெயர் :
சில்—சில்லை—(சின்னை )—சினை—துண்டு , பிரிவு, உறுப்பு:
சில சினைப்பெயர்கள் இடப்பொருளை முதலாவது பெற்றுப் பின்பு பல சொற்களைப் பிறப்பித்திருக்கின்றன;
கா : கண் — நகக்கண், சல்லடைக்கண், ஊற்றுக்கண்
(இடம்);
அலக்கண், இடுக்கண், பழங்கண்
(துன்பம்);
உறுகண், தறுகண்
(பண்பு )
பண்புப்பெயர் (Abstract Noun)
பண்புப்பெயரீறு :
மை = மேகம், ‘நீர், நீரைப்போன்ற நல்லதன்மை, தன்மை :
ஒ: நோ. நீர்= தன்மை. நீர் என்பது புனற்பொருளொடு மயக்காமைப் பொருட்டு, நீர்மை என மையீறு பெறும்.
படி+மை = படிமை = போன்ளம = போன்ற தன்மை, தீமை = தீயின் தன்மை, நன்மை=நல்ல தன்மை, புல்+மை= புல்லின் தன்மை, பெருமை=பெரிய தன்மை, தான்=தன். தன்மை = தன்குணம், குணம்: இனிமை= இனிக்குந்தன்மை;
அம் = நீர்.
தல் +அம் = நலம் = நல்லதன்மை . வள்+அம்= வளம்= வளத்தன்மை , சின + அம் = சினம் = சினக்குந்தன்மை.
அப்பு = நீர்: அப்பு—பு
இனி+ அப்பு= இனிப்பு: இன்+பு= இன்பு: இன்லுதல் = இனித்தல். இன்பு+அம் = இன்பம்:
அப்பு என்பதில் அகரம் கெட்டது; ஒ: நோ: மற+ அத்தி = மறத்தி.
திசைப்பெயர் :
திகை — திசை; திகைத்தல் மயங்கல், திகைப்பதற்கிடமானது திகை, திசைத்தல் திகைத்தல்: திக்குவதற்கிடமானது தீக்கு: திக்குதல் தடுமாறல். திக்குமுக்காடுதல் என்னும் வழக்கை நோக்குக. வடநூலார் திஸ் (காட்டு) என்னும் மூலத்தைக் காட்டியது பிற்காலம்.
திசைச்சொல் என்பது ஓர் இலக்சணச்குறீயீடாயிருத்தலை நோக்குக திசை திக்கு என்னும் இருசொல்லும் வடசொல்லாயின், தமிழுக்குத் திசைபற்றிய சொல்லே யில்லை யென்றாகும். இது கூடாமையே, எல்லையென்னுஞ்சொல் முதலாவது சூரியனைக் குறித்து, பின்பு முறையே வேளை, குறித்த வேளை, குறித்த இடம், வரம்பு என்னும் பொருள்களைத் தழுவியது. ஆகையால் இச்சொல் திசைப்பெயருக் கேற்காமையறிக:
வடக்கு: வடம் + கு = வடக்கு.
வடம் = பெருங்கயிறு, வடம் போன்ற விழுதுகளை விடுவது வட(ஆல) மரம். வடமரம் வங்காளத்தில் மிகுதியாய் வளர்கின்றது. அதனாலேயே அது Ficus bengalensis என்று நிலைத்திணை நூலில் அழைக்கப்படுகிறது. நாவலந் (இந்து) தேயத்தின் வடபாகத்தில் வடமரம் மிகுதியாய் வளர்தலின், அத்திசை வடம் எனப்பட்டது;
தெற்கு : தென் + கு = தெற்கு.
நாவலத்தேயத்தின் தென்பாகத்தில் தென்னைமரம் இன்றும் சிறப்பாய் வளர்கின்றது. தென்னாட்டையும் கரு நீசியத் தீவுகளையும் நோக்குக.
தென்னைமரம் மிகுதியாய் வளரும் திசை தென்திசை யெனப்பட்டது.
கிழக்கு மேற்கு என்பவை, மொழிநூற் பெரும்புலவர் கால்டுவெல் ஐயர் நுணித்தாய்ந்து கண்டபடி, முறையே கீழ் மேல் என்னும் சொற்களடியாய்ப் பிறந்தவை.
வடம் தென் கீழ் மேல் என்று முதலில் வழங்கிய பெயர்கள், இன்று நான்காம் வேற்றுமை வடிவில் வழங்குகின்றன. இனி, அக்கு என்பது ஒரு பின்னொட்டு எனினும் ஓக்கும்.
உத்தரம் : உ+ தரம் = உத்தரம் = உயர் நிலை.
உகரம் உயர்ச்சி குறித்தல் முன்னர்க் கூறப்பட்டது.
தக்கணம்: தக்கு+அணம் = தக்கணம். தக்கு = தாழ்வு.
தக்குத் தொண்டை, தக்கில் பாடுதல் என்னும் வழக்குகளை நோக்குக அணம் ஒரு பின்னொட்டு,
பனிமலை எழுந்த பின், வடதிசை உயர்ந்தது, தென்திசை தாழ்ந்தது. அதனால் அவை முறையே உத்தரம் தக்கணம் எனப்பட்டன. இவற்றை மேற்கு கிழக்கு என்னும் பெயர்களுடன் ஒப்புநோக்குக.
உத்தரம் தக்கணம் என்னும் தென் சொற்களே, உத்தர தக்ஷிண என்று வடமொழியில் வழங்குகின்றன என்பது தேற்றம்.
குடம்: குடம் = வளைவு. குடம் குடக்கு. அக்கு ஓர் ஈறு.
சூரியன் மேற்கேபோய் வளைவதனால், அத்திசை குடம் எனப்பட்டது. குடமலை, குடநாடு, குடவர், குடக்கோ என்பவை செந்தமிழ் வழக்குகளாதல் காண்க.
குணம் : குடம்—குணம், ட—ண, போலி. ஓ. நோ. படம்—பணம், கோடு—கோணு, குடக்கு—குணக்கு.
குனம் = வளைவு. குணக்கெடுத்தல் என்னும் வழக்கை நோக்குக, சூரியன் கீழ்த்திசையிலும் வளைதல் காண்க. ஒரே வடிவம் இரு திசைக்கும் வழங்கின் மயங்கற்கிடமாதலின், குடம் என்பது மேற்றிசைக்கும் குணம் என்பது கீழ்த்திசைக்கும் வரையறுக்கப்பட்டன.
எண்ணுப்பெயர் :
எ உயரச் சுட்டு: எ—எண்: எண்ணுதலால் தொகை மேன் மேலுயர்தல் காண்க.
ஒன்று : ஒல்—ஓ. ஒல்லுதல் பொருந்தல், ஒத்தல் பொருந்தல். ஒல்+து = ஒன்று = பொருந்தினது, ஒன்றானது.
இரண்டு : (இரள்) +து = இரண்டு.
இதற்கு இருவகையாய்க் காரணங் கூறலாம்.
(1) ஈர்தல் அறுத்தல், இரு துண்டாக ஈர்ப்பது, இரண்டு .
ஈருள் = ஈர்தல், ஈருள்—(இருள்)—(இரள்).
(2) இருமை = கருமை, இருள்.
இரா, இருள், இருட்டு, இரும்பு, இருந்தை, இறடி முதலிய சொற்களிலெல்வாம், இர் என்னும் வேர் கருமை குறித்தல் காண்க. இர்—எர்—என்—ஏன், கா : எருமை, ஏனம்
இருள் அகவிருள் புறவிருள் என இரண்டாதலின், இரண்டாம் எண் இருமையெனப்பட்டது.
இங்ஙனம் கூறுவது பொருட்டொகை (பூதசங்கியை) முறையாகும்: ஒன்பதுவரை ஏனையெண்களும் இம்முறை பற்றியவையே.
மூன்று : மூ =முக்கு. மூக்கின் பக்கங்கள் மூன்றாயிருத்தல் காண்க, மூன்று என்னும் வடிவம் ஒன்று என்பதனுடன் எதுகை நோக்கியது.
நான்கு : நாலம் — நாலு—நாலுகு—தால்கு—நான்கு:
நாலம்—ஞாலம் (பூமி). ந—ஞ, போலி,
உலகத்திற்கு ஞாலம் என்னும் பெயர் வந்ததின் காரணம் முன்னர்க் கூறப்பட்டது. நாலம் என்னும் உலகப் பெயர் அதன் பகுதியையும் குறிக்கும். “மைவரை யுலகம்”, தமிழுலகம் என்னும் வழக்குகளை நோக்குக உலகம் இயற்கையில் நால்வகையாயிருத்தலின், நாம் என்னும் பெயர் நான்காம் எண்ணைக் குறித்தது. உலகம் நானிலம் எனப்படுவதையும் நோக்குக.
ஐந்து : கை—ஐ. ஐ+து = ஐது—ஐந்து:
ஒரு கையின் விரல்கள் ஐந்து:
பொருள் விற்பனையில் கை என்னும் சொல் ஐந்து என்னும் பொருளில் இன்றும் வழங்குகின்றது.
ஆ : இதன் வரலாறு தெளிவாய்ப் புலப்படவில்லை.
ஆறு= வழி, ஒழுக்கநெறி, சமயம், மார்க்கம் என்னும் வடசொல் இப்பொருளதாதல் காண்க. ஐந்திணை வழிபாடுகளும் இன் (நாஸ்திக) மதமுஞ் சேர்ந்து ஆறாகக் கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது வேறொரு வகையாய் அறுமதங்கள் எண்ணப்பட்டிருக்கலாம். அறு சமயம் என்னும் தொகை வழக்கு மிகத்தொன்மை வாய்ந்தது.
ஏழு: ஏழ் —ஏழு—எழு.
பண்ணைக்குறித்த யாழ் என்னும் சொல் ஏழ் என்பதன் திரிபு. யாழ் என்னும் நரம்புக்கருவி தோன்றுமுன்னமே, குறிஞ்சியாழ் பாலையாழ் எனப் பண்ணின் பெயராக யாழ் என்னுஞ்சொல் வழங்கினதினால், யாழ் யாளியின் தலை வடிவைக் கடையிற்கொண்டதென்ற காரணம்பற்றி, அதை யாளி என்னுஞ் சொல்லின் திரிபாகக்கூற முடியாது. யாழின் கடையிலிருப்பது சரியான யாளிவடிவமுமன்று.
கருவியிலாயினும் தொண்டையிலாயினும் இசையை, யெழுப்புதல் எழூஉதல் எனப்படும். எழுவது அல்லது எழுப்பப்படுவது ஏழ், ஏழ்= இசை. இசைச்சுரங்கள் ஏழு. “ஏழிசைச் சூழல்”, ‘ஏழிசை வல்லபி’ என்னும் வழக்குகளை நோக்குக. ஏழ் என்னும் இசையின் பெயர், அதன் சுரத் தொகையான ஏழாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது.
எட்டு : எண்+து = எட்டு.
எண் = எள், இப்பெயர் ஆகுபெயராய் உணவைக் குறிப்பின், கூலத்தின் தொகைபற்றியதாகும் ; எள்ளைக் குறிப்பின், அதன் காயிலுள்ள பக்கங்களின் தொகைபற்றிய தாயிருக்கலாம்.
நெல், புல் (கம்பு), சோளம், வரகு, தினை, சாமை, குதிரைவாலி, காடைக்கண்ணிஎன்ற எட்டே முதலாவது எண் கூலமென்று கொள்ளப்பட்டவை. கேழ்வரகு வரகின் வகையாயடங்கும். எண் என்னும் உணவுப்பொருள் அல்லது கூலம் எட்டுவகையாயிருத்தலின், அதன் பெயர் எட்டாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டிருக்கலாம்;
தொண்டு : தொள்+து = தொண்டு, தொள் = தொளை.
உடம்பின் தொளைகள் ஒன்பதாயிருத்தலின், தொண்டு என்னும் பெயர் ஒன்பதாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது.
தொண்டு — தொண்டி = தொளை.
ஓ. நோ, தொண்டை (throat) = தொளையுள்ளது.
பஃது : பல்+து = பஃது. ஓ. நோ. அல்+து = அஃது.
பல்=பல, முதன் முதலாய்த் தமிழர்க்கு எண்ணத்தெரிந்தது பத்துவரைக்குந்தான். கைவிரல் வைத்தெண்ணியதே இதற்குக் காரணம். இரு கைவிரல் பத்து. பத்து கடைசி யெண்ணாயிருந்தமையின், அதைப் பலவென்னுஞ்சொல்லா லேயே குறித்திருக்கலாம். இது பல் என்னும் உறுப்புப் பெயரின் திரிபு. 12ஆம் , அல்லது 13-ஆம் மாதத்தில், குழந்தைக்குப் பத்துப்பல்லேயிருப்பதாக பெர்ச் (Birch) கூறுகிறார்[2] பல் — பன்—பான், கா : பன்னிரண்டு. இருபான்,
முதன் முதலாய்ப் பத்து மட்டுமே எண்ணப்பட்டதினால் தான், அதற்கு மேற்பட்ட எண்களெல்லாம் பத்துப்பத்தாக என்ணப்பட்டு, பத்தாம் பெருக்க இடங்கட்கெல்லாம் கோடி வரை தனிப்பெயர்கள் இடப்பட்டுள்ளன:
முதலாவது, நூறு பத்துப்பத்தெனப்பட்டது: பதிற்றுப் பத்து என்னும் பெயர் இன்றும் நூல் வழக்கில் உள்ளமை காண்க, நூற்றுக்கு மேலெண்னும் போது, பத்துப் பதினொன்று என்று கூறின் அது 110 என்ற எண்ணையுங் குறிக்கும். ஆகையால் நூறு என்றொரு பெயர் வேண்டியதாயிற்று: இங்ஙனமே, ஆயிரத்தைப் பத்து நூறென்று கூறினும் நூற்பத்தென்று கூறினும் இடர்ப்பாடுண்டானமையின், அதற்கும் வேறு பெயர் வேண்டியதாயிற்று. இங்ஙனமே பிறவும்.
நாகர் கால் விரலையுஞ் சேர்த்து என்ணினமையின், இருபதிருபதாய் எண்ணினதாகத் தெரிகின்றது.
வகரம் தகரத்தொடு புணரின் ஆய்தமாகத் திரிவது,
“தகரம் வருவழி ஆய்தம் நிலையலும்
புகரின் றென்மனார் புலமை யோரே”
(புள்ளி . 74)
என்று தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ளது.
அஃது பஃது என்று தகரம் றகரமாகத் திரியாத வடிவம் முந்திடாகவும், அஃறிஎன பஃறொடை என்று தகரம் றகரமாகத் திரித்த வடிவம் பிந்தியதாகவும் தெரிகின்றது:
நூறு : நூறு = பொடி, பொடி எண்ண முடியாதபடி, மிக்கிருத்தலில், அஃது ஒரு பேரெண்ணுக்குப் பெயராயிற்று.
ஆயிரம் : அயிர் — அயிரம் — ஆயிரம்.
அயிர் = நுண் மணல்; நூறு என்பதற்குக் கூறியதே ஆயிரம் என்பதற்கும்
இலக்கம் : இலக்கம் = எழுத்து, எண்குறி, எண்.
இலக்கம் என்பது பேரெண், என்னும் கருத்தில் நூறாயிரத்தைக் குறிக்கும், எடை தூக்கு நிறை என்னும் எடுத்தலளவைப் பொதுப்பெயர்களே ஒவ்வோர் அளவைக் குறித்தல்போல,
கோடி : கோடி = கடைசி, கடைகோடி, தெருக்கோடி என்னும் வழக்குகளைக் காண்க.
கடையெண் என்னுங் கருத்தில். கோடியென்னும் பெயர் நூறிலக்கத்தைக் குறிக்கும்.
இலக்கம் கோடி என்னும் எண்ணுப் பெயர்கள் மிகப் பித்தியவை. தமிழர் கணிதத்தில் சிறந்தவராயிருந்ததினாலும், மேனாடுகளில் இலக்கத்திற்கு வழங்கும் பெயரின் வடிவம் (lakh) தமிழ்ப்பெயர் வடிவத்தை ஒத்திருப்பதாலும், இலக்கத் தீவுகள் (Laccadive Is.) என்னும் பெயர் ஆங்கிலத்திலும் திரியாது வழங்குவதாலும், இலக்கம் கோடி என்னும் பெயர்கட்குத் தமிழிற் பொருத்தமான பொருளுண்மையாலும், “மதியாதார் தலைவாசல்……. மிதியாமை கோடி பெறும்”. ‘கோடியுந் தேடிக் கொடிமரமும் நட்டி’, ‘காணியாசை கோடி கேடு’ என்று பழைமையான வழக்குகளுண்மையாலும், இலக்கம் கோடி என்னுஞ் சொற்களை வடசொற்கள் என்பதினும் தென் சொற்கள் என்பதே பொருத்தமுடைத்தென்க.
குறுமைப் பெயர்-Diminutives.
(1) தனிப்பெயர் :
குள் – குள்ளன், குழவு, குழவி, குண்டு, குட்டி, குட்டன், குட்டான், குட்டம், குட்டை, குணில், குந்தாணி, குருளை, குருவி, குறள், குறளி. குறில், குற்றி -குச்சி குச்சு, குஞ்சி (குஞ்சு) குக்கல், குன்று, குன்றி, குன்னி, கூழி, கூழை. சில்– சில்லான், சிறுக்கன், சிடுக்கான், சிடுக்கான்-கிச்சான், சிண்டு, சிட்டி, சிட்டு, ஓட்டு, சின்னம், சின்னான், சீனி, சுள்-சுள்ளி, சுருவம் சுருவை, சுருங்கை, சுண்டு, சுக்கு, சுக்கல், சுப்பி. இங்கனமே பிறவும்:
(2) முன்னொட்டுச் சேர்பு :
கண் விறகு, சுண்டெலி, சீனிமிளகாய், ஊசிமிளகாய், குறுமகன் (குறுமான்). குறுதொய், குக்கிராமம் (இருபிறப்பி), குற்றில்-குச்சில், பூஞ்சிட்டு, சில்லுக்கருப்புக்கட்டி, பிட்டுக்கருப்புக்கட்டி, கூழைவால், நரிக்கெளிறு. அரிசிப்பல், அரி நெல்லி, மணிக்குடல், கட்டைமண், குட்டிச்சுவர், பூச்சிமுள், அரைத்தவளை, சிற்றாமணக்கு, கதலிவாழை, இட்டிகை முதலியன
(3) பின்னொட்டுச் சேர்பு:
தூண்டில், முற்றில்— மூச்சில், கெண்டைக்கசனி, அயிரைப் பொடி முதலியன.
(4) வலித்தல் திரிபு : (நந்து) — நத்தை :
(5) சொன்முறைமாற்று : (கால்வாய்)—வாய்க்கால்:
பருமைப் பெயர் – Augmentatives.
(1) தனிச்சொல் ;
கடல், கடகம், கடப்பான், கடா, சேடன், சேடா, சாவி தாழி, நெடில், படாகை —-பதாகை, பூதம், மிடா, முரடு, முருடு முதலியன,
(3) முன்னொட்டுச் சேர்பு :
ஆனைக்குவளை, பாம்புமுள், பேரிந்து, பொத்த மிளகாய், மொந்தன் வாழை, மோட்டெருமை, சுட்டெறும்பு: கடப்பாரை, அல்லது கட்டிப்பாரை, மாட்டுப்பல், கடகால், பரவைச்சட்டி, பெருநாரை முதலியன,
(3) பின்னொட்டுச் சேர்பு :
குன்றம், பொட்டல் முதலியன.
தொழிற்பெயர்–Gerundial and Abstract Nouns.
தொழிற்பெயரும் பண்புப்பெயரும் மிக நெருங்கியவை. இதனால் ஆங்கிலத்தில் அவை ஓரினமாகக் கூறப்படுகின்றன; கோபித்தல் என்னும் வடிவம் தொழிலையும் கோபம் என்னும் வடிவங் குணத்தையும் குறித்தலையும், மை து அம் முதலிய ஈறுகள் இவ்விருகைப் பெயர்க்கும் பொதுவாயிருத்தலையும் நோக்குக, தன்மை, அறிவு, ஆற்றலென முத்திறப்பட்ட குணத்தின் வெளிப்பாடு அல்லது நுகர்ச்சியே தொழிலேன்க: பண்பு, இயல்பு என்னும் பெயர்களும் முதலாவது தொழிற் பெயராக விருந்தவையே. பண்+பு = பண்பு (செயல்). இயல்+பு=இயல்பு (நடக்கை ).
தொழிற்பெயர் வடிவங்கள் பின்வரும் முறையில் தோன்றியவை.
(1) முதனிலைத் தொழிற்பெயர்:
கா : அடி, வெட்டு.
(2) முதனிலை திரிந்த தொழிற்பெயர்,
கா : ஊண், பாடு, (கோட்படு) — கோட்பாடு,
(3) ஈற்று வலியிரட்டித்த தொழிற்பெயர்.
கா : எழுத்து, பாட்டு, மாற்று.
(4) இடைமெலிவலித்த தொழிற்பெயர்:
கா : விளக்கு, பொருத்து:
இந்நான்கு முறையும் அசையழுத்தம் பற்றியவை:
ஈற்று வலியிரட்டித்தலே, பிற்காலத்தில் மெலிதோன்றிய வடிவத்திற்கும் கொள்ளப்பட்டதாகவும் கொள்ளலாம்.
கா: இலகு — இலக்கு. இலகு — இலங்கு: இலங்கு — இலக்கு.
(5) ஈறுபெற்ற தொழிற்பெயர்:
ஈறுகளெல்லாம் பற்பல சொற்களின் திரிபே; அவை பின் வருமாறு அறுவகைப்படும்.
(i) கைப்பெயர் :
கை செய்கை. கா : நடக்கை.
பாணி = கை: கா : சிரிப்பாணி (தென்னாட்டு வழக்கு).
(ii) இடப்பெயர் :
இடம்+ அடம்+ அணம்—அனம்+ அனை+ஆனை.
கா : கட்டிடம், கட்டடம், கட்டணம். விளம்பனம், வஞ்சனை, வாரானை,
இடம் — இதம்— தம்—சம், கா : தப்பிதம், கணிதம்; கணிசம்.
அடம்—அரம்— அரவு. கா : விளம்பரம், தேற்றரவு.
இல் = வீடு, இடம், கா : எழில்.
இல் — அல்—ஆல். கா : எழில் , எழல், எழால்
தலை = (ஒரு சினைப்பெயர்), இடம். கா : விடுதலை.
தலை — தல்—சல் —சில்.
கா : விடுதலை, கடைதல், கடைசல், (அடுசில்) — அடிசில்.
(iii) சுட்டிடப் பெயர் :
(அது) — அத்து —து— சு.
கா : பாய்ந்து — பாய்ச்சு, காண்+து = காட்டு, உருள் +து = உருட்டு, ஈன்+து = ஈற்று.
(அது) — அதி —சி. கா : மறதி, காட்சி.
அக்கு = அவ்விடம், இடம். கா : கணக்கு.
அகம் = அவ்விடம், இடம். கா : வஞ்சகம், நம்பகம்.
(அவ்) — அஅ — வு. கா : செலவ, தேய்வு.
(அவ்) — (அவி)—வி—இ. கேள்வி, வெகுளி. (அவ்) — (அவை)— வை ; பார்வை.
(அவ்) — (அவ)—(அ)—ஐ. கா : கொடை, விலை.
(அ) — ஆ. கா : உணா, பிணா, இரா, நிலா.
வுகரவீறே உகரமாக இலக்கண நூல்களிற் கூறப்படுகின்றது.
உள் = பின்னிடம், உள்ளிடம், இடம், உவள் — உள்.
கா : விக்குள், செய்யுள், கடவுள்.
(iv) நீர்ப்பெயர். அம் = நீர். அப்பு (நீர்)—ப்பு—பு.
கா : கோட்டம். படிப்பு.
மை = நீர், மை மம் — மன், கா : பருமை, பருமம், பருமன்.
(v) மிகுதிப்பெயர், காடு = மிகுதி. ஒ. நோ, வெள்ளக் காடு, திரம் = திறம், கா : வேக்காடு, உருததிரம்.
(vi) அளவுப்பெயர் : மானம் = அளவு. கா: படிமானம்.
(vii) இயக்கப் பெயர் : இயம் = இயக்கம்: கா : கண்ணியம்.
(viii) எச்சந்தொடர்ந்த பெயர். கா: வந்தமை, வந்தது (வந்த+அது).
(ix) கலவை முறை.
கா : கொடுப்பு+அனை = கொடுப்பனை. கொள்வு+ அனை = கொள்வனை.
தீன்+இ = தீனி, கொள்+தல் = கோடல், திருத்து+ அம்=திருத்தம்.
அத்து+ஐ = அத்தை —தை—சை. கா : சிவத்தை , புரிசை.
ஒரு பகுதி பலஈறும் பெறும் : ஈறுதோறும் பொருள் வேபடும்.
கா: கற்றல், கல்வி, கலை, கற்பு.
(x) இரு மடித்தொழிற்பெயர்.
கா : நகு+ஐ= நகை, நகை+பு= நகைப்பு.
கள் + அவு = களவு. களவுசெய் + தல் = களவு செய்தல்,
ஆகுபெயர்—Metonymy and Synecdoche.
பெயர்கள் தோற்றமுறைபற்றி இயற்பெயர் ஆகுபெயர் என இருவகைப்படும் அவற்றுள் ஆகுபெயர் பல் திறத்தது.
கா | : | முதலாகு | பெயர் | — | கவரி (மயிர்) |
சினையாகு | ,, | — | தலை(மறுதலை), கை(இடக்கை) | ||
இடவாகு | ,, | — | குறிஞ்சி (யாழ்) | ||
இடவனாகு | ,, | — | கழல், விளக்கு |
| காலவாகு | பெயர் | — | அஞ்சு மணி, செவ்வந்தி (ஜாமந்தி) | |
[3] | காலவனாகு | ,, | — | கார், கோடை, | |
பண்பாகு | ,, | — | வெள்ளை, குட்டை. | ||
பண்பியாகு | ,, | — | சாம்பல் (வாழை), பனை (அளவு). | ||
அளவையாகு | ,, | — | காணம், அரை, | ||
தொழிலாகு | ,, | — | வற்றல், செய்யுள். | ||
செய்வோனாகு | ,, | — | திருவள்ளுவர், கோலியன். | ||
கருவியாகு | ,, | — | செம்பு, கண்ணாடி, பொழுது. | ||
காரணவாகு | ,, | — | அம்மை (தவறாயெண்ணியது). | ||
காரியவாகு | ,, | — | வளை, வெண்கலம். | ||
உவமையாகு | ,, | — | காளை, பாவை. | ||
சின்னவாகு | ,, | — | கோல், குடை. | ||
சொல்லாகு | ,, | — | உரை, (பொருள்). | ||
[4] | பொருளாகு | ,, | — | பள்ளு, இலக்கணம். | |
பெயராகு | ,, | — | பேர் (ஆள்). அடையடுத்த | ||
அடையடுத்த | |||||
ஆகு | ,, | — | வெற்றிலை, நால்வாய். | ||
பன்மடியாகு | ,, | — | மடங்கல், கார். | ||
திரிபாகு | ,, | — | பைத்தியம். |
பெயரிலக்கணம்
திணை பால் எண் இடம் வேற்றுமை என்னும் ஐந்தனுள் முதலாவது தோன்றியது இடமே. அதன்பின், முறையே எண் பால் திணை என்பவை தோன்றின. வேற்றுமை எண்ணுக்குப் பின் தோன்றியிருக்கலாம்.
திணையென்னும் பெயர் தின் என்னும் மூலத்தினின்றும் தோன்றியது. திர+ள் = திரள் = திரட்சி. திர+அம் = திரம் — திறம்—திறன்—திறல் = தடிப்பு, உறுதி, வலிமை, கூறுபாடு, திரள்+ஐ= திரளை— திரணை— திரட்சி, திண்ணை— திரளை = திரட்சி, உருண்டை, திண்ணை — திட்டை. திண்டு—திட்டு திண்ணம். திட்டம் = உறுதி, தேற்றம். திரம் — திறம்—திடம் உறுதி. திண்ணம் = தடிப்பு, திரட்சி, உறுதி, தேற்றம். திண்ணை —திணை = திரட்சி, குழு, வகுப்பு, ஓ. நோ. குழு= திரட்சி, கூட்டம் வகுப்பு.
பால் :
பகு+அல் = பகல்—பால் = பிரிவு.
ஆண்பால் பெண்பாற் பெயர்கள் பின் வருமாறு மூவகையாயமையும்.
(1) வேற்றுப்பெயர். கா : ஆடவன், பெண்டு.
(2) ஈற்றுப் பேறு. கா: மகன், மகள்,
ஆண்பாலீறுகள் அலன், அன், ஆன், ஒன், ன், மகன் — மான் — மன் — வன், ஆளன், காரன் முதலியன.
கா : வில்லவன், இடையன், தட்டான், மறையோன், கோன், திருமகன்—திருமான் (ஸ்ரீமான்), களமன், மணாளன், வேலைக்காரன்.
பெண்பாலீறுகள் அவள், அள், ஆள், ஒள், ஐ. மகள்—மாள், மி, வி, மாட்டி. ஆட்டி அத்தை , அத்தி, அச்சி, காரி முதலியன. இவற்றுள் ஈற்றயல் மூன்றும் முறைப்பெயர்கள்.
கா: வல்லவள், நல்லள், கண்ணாள், மாயோள், பண்டிதை, வேண்மகள்—வேண்மாள், சிறுமி, புலவி, பெருமாட்டி, தம்பிராட்டி, பரத்தை, வண்ணாத்தி, மருத்துவச்சி, வேலைக்காரி.
மேற்காட்டிய ஆண்பாலீறுகட்கெல்லாம் னகரவொற்றும், பெண்பாலீறுகட்கெல்லாம் ளகரவொற்றும் இகரமுமே மூலமாகும்.
மாந்தருள், ஆண்மை திரிந்த பெண்பாற் பெயர் பேடி என்பது; பெண்மை திரிந்த ஆண்பாற் பெயர் பேடன் என்பது. இவ்விரு பாற்கும் பொதுப்பெயர் பேடு என்பது; இவ்விருபாலும் அல்லாததின் பெயர் அலி என்பது. (அலி மாத்தரும் உலகில் உளர்.)
அன் இ முதலிய ஈறுகள் இருதிணைக்கும் பொதுவாம்:
கா: கடுவன், கொள்ளி, கண்ணி.
அஃறிணையிலும் ஆண்பால் பெண்பாலுண்டு.
(1) வேற்றுப்பெயர்: களிறு—பிடி.
(2) முன்னொட்டுச் சேர்பு. ஆண்பனை — பெண்பனை, சேங்கன்று—கிடாரிக்கன்று.
(1) பின்னொட்டுச் சேர்பு, மயிற்சேவல்— மயிற்கோழி, மயிற்பேடை.
அஃறிணையாண்பெண் பாற்பகுப்பு, திணைப்பாகுபாடு பற்றி இலக்கணத்திற் கொள்ளப்படவில்லை.
(4) முன்னொட்டுச் சேர்பு.
கா : ஆண் பிள்ளை, பெண் பிள்ளை.
எண்:
பன்மையிறு:
சீன மொழியில், பன்மையுணர்தற்குத் தொகுதிப்பெயர் பெயர்களின் ஈற்றிற் சேர்க்கப்படுகிறது.[5]
கா : gin=man; kiai= whole or totality.
gin-kiai=men.
i=stranger. pei=class. i =r pei—strangers.
ngo = I, ch¢= assembly. ngo-che=we
தமிழிலும் ‘கள்’ ஈறு இங்கனம் தோன்றியதே.
கல—கள—களம். கள + அம் =களம் = கூட்டம். கூட்டத்தின் பெயரே கூடும் இடத்தையுங் குறிக்கும்.
மன்று, மந்தை, அம்பலம் என்னும் பெயர்கள் கூட்டத்தையும் கூடுமிடத்தையும் குறித்தல் காண்க.
‘அவையஞ்சாமை’ என்னும் அதிகாரத்தில்,
“உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்”(குறள், 736.)
என்று திருவள்ளுவர் அவையைக் களனென்றார். நன்னூலாரும் “காலங்களனே“ என்றார்.
கள—கள். மரங்கள—மரங்கள்:
கள் ஈறு இருதிணைக்கும் பொது, கா: மக்கள், மாக்கள், மரங்கள்.
அர், அ, வை என்பவை இயல்பா வாசுவே தெரிகின்றன.
குருவார்— குருமார், வ—ம, போலி:
வேற்றுமை :
வேறு+மை=வேற்றுமை: பெயரின் இயல்பான எழுவாய்ப்பொருள், செய்பொருள் கருவிப்பொருள், முதலியவாக வேறுபடுவது வேற்றுமை.
எட்டு வேற்றுமைகளுள், 1 ஆம், 3 ஆம், 3 ஆம், 4 ஆம். 6 ஆம், 7 ஆம் வேற்றுமைகளே முந்தித் தோன்றியவை. இவற்றுள்ளும், 2 ஆம், 4 ஆம், 7ஆம் வேற்றுமைகளே மிக முந்தியவை என்று கொள்ள இடமுண்டு. முதல் வேற்றுமையிலிருந்து 8 ஆம் வேற்றுமை தோன்றினது. 8 ஆம் வேற்றுமையே இறுதியில் தோன்றினது, தொல்காப்பியர் காலத்தில், வீளியைச் சேராமல் வேற்றுமை யேழென்றும், அதனைச் சேர்த்து வேற்றுமை யெட்டென்றும் இருகொள்கைகள் நிலவின. தொல்காப்பியர்,
“வேற்றுமை தாமே ஏழென மொழிப“
“விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே“
என்று கூறிய பின்பு, வேற்றுமை யெட்டென்னுங் கொள்கை: நிலைத்து விட்டது.
எட்டு வேற்றுமைகளும் இப்போதமைந்துள்ள முறைக்குக் காரணத்தை, பின்வரும் வினாக்களாலும் சிற்றாலுமறியலாம்,
அழகன் (யார்? அல்லது) என்ன செய்தான்? எதைச் செய்தான்? எதனாற் செய்தான்? எதற்குச் செய்தான்? எதனின்று செய்தான்? அது இப்போது யாரது? யாரிடத்திலிருக்கிறது?
எட்டாம் வேற்றுமை இறுதியில் தோன்றினதினால், இறுதியில் வைக்கப்பட்டது. அது முன்னிலை எழுவாயே
2 ஆம் வேற்றுமையுருபு ஐ.
இது ஆய் என்னும் வினையெச்சத்தின் திரிபாயிருக்கலாம், சோறாய்ச் சாப்பிட்டான், பெட்டியாய்ச் செய்தான் என்னும் வழக்குகள் இன்றுமுள்ளன, ஆய் என்பது ஐ என்று தெலுங்கிலும் திரிகின்றது.
கா : சாரமாயின (த.)—சாரமைன (தெ.).
3 ஆம் வேற்றுமையுருபு ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்.
ஆல்—ஆன். ஓ. நோ; மேல — மேன.
இல் (7 ஆம் வே, உ:)—ஆல், ஒ. நோ. எழில்—எழால்: மையில் எழுதினான் என்னும் வழக்கை நோக்குக, செருப்பாலடியென்பதைச் செருப்பிலடி யென்பர் வடார்க்காட்டு வட்டகையார்.
குடம் — உடம் — உடன் — உடல், குடம்பு — உடம்பு. குடங்கு —உடங்கு. குடக்கு—உடக்கு. குடம், குடம்பு முதலியவை கூட்டின் பெயர்கள், உடல் கூடுபோற் கருதப்பட்டது.
“குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு” (குறள், 338.)
என்றார் திருவள்ளுவர்.
“கூடுவிட்டிங் காவி தான் போனபின்பு“ என்றார் ஔவையார். ‘கூடுவிட்டுக் கூடு பாய்தல்’ என்பது அறிவராற்றல் குறித்த வழக்கு.
ஒருவனுடன் இன்னொருவன் செல்லுதல், ஒருவன் தன் உடம்போடு செல்வது போன்றிருக்கிறது.
உடன் என்னும் சொல்லுக்குப் பதிலாக, கூட என்னுஞ் சொல்லும் வழங்குகின்றது. கூடு (பெ)—கூடு (வி.)— கூட (நிகழ்கால வினையெச்சம்)
ஓடு என்பது சில காய்கனிகளின் கூடு. ஓடு—ஒடு.
தோடு என்பதும் இங்கனமே தோட என்பது தெலுங்கில் 3 ஆம் வேற்றுமை உடனிகழ்ச்சியுருபு. ஒ. நோ, கூடு — கூடா
ஆல், ஓடு என்னும் ஈருருபுகளும், தனித்தனி கருவி உடனிகழ்ச்சி யென்னும் இருபொருளிலும் வழங்கும்.
கா : ஊரானொரு கோயில் = ஊருடன் அல்லது ஊர் தொறும் ஒரு கோயில்.
கொடியொடு துவக்குண்டான் = கொடியால் துவக்குண்டான்.
சுருவி உயர் திணை அஃறிணையென இருவகை. அவற்றுள் உயர்திணைக் கருவியே, எழுவாய் (கர்த்தா) என்று பிரித்துக் கூறப்படுவது.
இவற்றையெல்லாம் நோக்காது, 3 ஆம் வேற்றுமை வேறுபட்ட பொருள்களை யுடையதென்றும், வடமொழியைப் பின்பற்றியே தமிழில் எட்டு வேற்றுமை யமைக்கப்பட்டன வென்றும் கூறினர் கால்டுவெல் ஐயர்.
கொண்டு என்பது உடனிகழ்ச்சிப் பொருட் சொல்லுருபு. கொண்டு = பிடித்து. உளிகொண்டு = உளியைக் கையிற் கொண்டு.
4 ஆம் வேற்றுமையுருபு கு.
இஃது ஒக்க என்னும் வினையெச்சத்தின் திரிபாயிருக்கலாம்.
மழவன் நம்பியொக்கக் கொடுத்தான், திருவாணன் (ஸ்ரீநிவாசன்) ஊரொக்கப் போனான், என்பவை பொருத்தமாயிருத்தல் காண்க. ஒக்க — (ஒக்கு) — உக்கு(அக்கு)—கு. கா : அழகன் + உக்கு = அழகனுக்கு. என்+அக்கு = எனக்கு, அவன் +கு= அவற்கு.
பொருட்டு (பொருள்+து) நிமித்தம் என்பவை 6 ஆம் வேற்றுமை யுருபோடும், ஆக என்பது குவ்வுருபோடும் கூடி 4 ஆம் வேற்றுமைச் சொல் ஒருபாக வரும்.
5 ஆம் வேற்றுமையுருபு இல், இன்:
இல் (7 ஆம் வே, உ)—இன், இருந்து, நின்று என்னும் எச்சங்கள், இல் இன் என்பவற்றோடு சேர்ந்து வரும்: இவற்றுள் முன்னது இருந்த நிலையையும் பின்னது நின்ற நிலையையுங் குறிக்கும்.
6 ஆம் வேற்றுமையுருபு எண் காட்டுவனவுங் காட்டாதனவுமாக இருவகை.
அது ஆது அ என்பவை எண் காட்டுவன. அது—து.
இவை அஃறிணை வினை முற்றீறுகளே, எழுவாய்த் தொடர் வினைமுற்றுத் தொடராக மாற்றிக் கூறப்பட்டதால் இவ்வுருபுகளுண்டாயின.
கா : புத்தகம் அம்பலவாணனது – அம்பலவாணனது புத்தகம். புத்தகம் எனாது—எனாது புத்தகம். |
ஒருமை. |
புத்தகங்கள் கண்ணன — கண்ணன புத்தகங்கள் (பன்மை ).
இன் அன் என்பவை எண் காட்டாதன. இல் (7 ஆம் வே. உ.)—இன்—அன்.
கா : அதன், வேரின்.
உடைய என்பது உடைமை என்னும் பண்புப் பெயரடியாய்ப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம்.
அது, இன், அன் என்லும் உருபுகள் கலந்தும் வரும். அது என்பது அத்து என் இரட்டியும், து எனக் குறைந்தும் வரும்.
கா அத்து + இன் = அத்தின், இன் + அது= இனது. இன்+ து =இற்று. இன்+து+இன் =இற்றின், அன்+ அது = அனது. அன் + து = அற்று. அன் + து + இன் = அற்றீன், இங்ஙனமே பிறவும்.
7 ஆம் வேற்றுமையுருபுகள் இல் முதலியன.
அவை பின்வருமாறு நால்வகைப்படும் :
(1) | இடப்பெயர் | கா | : | இல் (வீடு), |
(2) | அருகிடப்பெயர். | கா | : | முன், பின், இடம், வலம். |
(3) | சினைப்பெயர். | கா | : | கண், கால், கை, வாய், தலை, |
(4) | புணருருபு. | கா | : | இடம் + அத்து = இடத்து. |
இடம் + அத்து+இல் = இடத்தில். |
8ஆம் வேற்றுமையுருபு பெயரின் விளித்தற்கேற்ற திரிபே. அது பெரும்பாலும் ஈற்று நீட்டம். அது சேய்மையும் உயரமுங் குறிக்கும். ஆ ஏ ஓ என்னும் நெடில்கள் சேர்வதாலும், ஈற்றில் அல்லது ஈற்றயலிலுள்ள குறில்கள் நீளுவதாலும் உண்டாகும். கா : மகனே, தேவி, அண்ணா.
வினிவேற்றுமை இரக்கக் குறிப்பும் வியப்புக் குறிப்பும் பற்றிய சில சொற்களைப் பிறப்பித்திருக்கின்றது.
கா : ஐயோ, ஐயவோ, ஐயகோ, அன்னோ -இரக்கக் குறிப்பு.
அம்ம, அம்மா, அப்பா – வியப்புக்குறிப்பு.
- ↑ The Revised Latin Primer,pp,12,13.
- ↑ Management to Children. in India. p. 79…
- ↑ காலவன் = காலத்தில் தோன்றுவது.
- ↑ பொருள்— நூற்பொருள்
- ↑ S. L. Vol. I, p. 48,
வினைச்சொல்
வினை என்னுஞ் சொல் விளை என்பதன் திரிபாகத் தெரிகின்றது. முதற் பெருந்தொழில் உழவு. வினைஞர் = மருத நிலத்தார், உழவர், விளைஞர்— வினைஞர், விசைக்களம் = போர்க்களம். போர்க்களம் என்னும் பெயர் ஏர்க்களம், பொருகளம் என்னும் இரண்டிற்கும் பொது. விளை — வினை. ஓ. நோ. வளை — வனை.
வினைச்சொல், முற்று எச்சம் என இருவகைப்படும். எச்சம், பெயரெச்சம் வினையெச்சம் என இருவகைப்படும். இவை பெயராகிய எச்சத்தையுடையது வினையாகிய எச்சத் தையுடையது என்னும் பொருளன.
முதன் முதல் வினைச்சொற்கள் இறந்தகாலமும் எதிர் காலமுமாகிய இரண்டுகாலமே காட்டின. இறந்தகால வினை முற்றுகள் இப்போதுள்ள எச்சவடிவாகவேயிருந்தன. செய்யும் என்னும் முற்றே இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் மலையாளத்திற்போல் எதிர்கால வினை முற்றாக வழங்கிற்று.
நிகழ்காலவுணர்ச்சி தமிழர்க்குத் தோன்றிய போது, கில் என்னும் ஆற்றற்பொருள் வினையின் இறந்தகால முற்றுவடிவமே நிகழ்கால வினை முற்றாகக் கொள்ளப்பட்டது. அதன் மூன்று நிலைகளாவன :—
(1) கின்றான் = ஆற்றினான். ஒ, நோ. நின்றான், சென்றான்.
(3) செய்யகின்றான் = செய்ய ஆற்றினான், அவனுக்குச் செய்ய முடிந்தது.
ஒ. தோ; செய்ய பாட்டினான், (வழக்கற்றது) செய்ய மாட்டுவான் (எ. கா.)
(3) செய்யகின்றான் – செய்கின்றான் – செய்கிறான் (இடைக் குறை) = he does.
இங்ஙனம், கின்றான் எளனும் இறந்தகால முற்று, தனிவினை துணைவினை நிகழ்கால வினைமுற்று என மூன்று நிலைகளை அடைந்துள்ளது. மூன்றாம் நிலையின் பின், இன்று கிறு என்பதை நிகழ்கால இடைநிலைகளாகப் பிரித்துக் கூறப்பட்டன. ஆநின்று என்றோர் இடை நிலையில்லை. செய்து நின்றான் என்று பொருள்படும் செய்யா நின்றான் என்னும் தொடர் மொழியையே, ஒரு சொல்லாகக் கொண்டு, ஆதின்று என்பதோர் இடைநிலையெனக் கூறினர் பவணந்தியார்.
பண்டையிறந்தகால எதிர்கால வினைமுற்று வடிவங்கள்
இ. | கா. | எ. | கா. | |
அவன் | செய்து | அவன் | செய்யும் | |
அவள் | ,, | அவள் | ,, | |
அவர் | ,, | அவர் | ,, | |
அது | ,, | அது | ,, | |
அவை | ,, | அவை | ,, | |
நான் | ,, | நான் | ,, | |
நாம் | ,, | நாம் | ,, | |
நீ | ,, | நீ | ,, | |
நீர் | ,, | நீர் | ,, |
உம் என்பது எதிர்காலமுணர்த்தும் உகரவடிச் சுட்டுச் சொல்: ஒ. நோ,“ உம்மை எரிவாய் நிரயம்.”
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே, செய்யும் என்னும் முற்று தன்மை முன்னிலைகளிலும் படர்க்கைப் பலர்பாவிலும் வழக்கற்றுவிட்டது. மலையாளத்தில் இன்றும் வழங்குகின்றது.
இறந்தகால வினையெச்சங்களாக இப்போது கூறப்படு பவை, செய்து, செய்பு. செய்யா, செய்யூ. செய்தென என்பவை. இவற்றுள், ஈற்றது தவிர ஏனையெல்லாம் தொழிற்பெயராகவே தோன்றுகின்றன. அவற்றை முறையே விழ்து, முடிபு, உணா, உறூ (உறூஉ) என்பவற்றோடு ஒப்பு நோக்குக. செய்து+என = செய்தென = செய்தானென்னும் படி,
உநூறு, மருஉ முதலிய வடிவங்களை நோக்கின், பண்டு சில வினைப்பகுதிகள் ஈற்றுயிர்க்குறில் நீண்டும் தொழிற் பெயரானது போல் தெரிகின்றது. இதுவும் அசையழுத்தம்.
சென்று, கண்டு, ஓடி, போய் என்னும் வடிவங்களை, குன்று. வண்டு, வெகுனி, பாய் என்னும் தொழிற்பெயர்களுடன் ஒப்பு நோக்குக. பின்னவற்றுள் வெகுளியொழிந்தவை தொழிலாகு பெயர்கள், இ—ய். கா : போகி—போய், தாலி—தாய்.
பிற்காலத்தில் ஐம்பாற் கட்டுப்பெயர்களான பாலீறுகள் இறந்த கால வினைகளுடன் சேர்க்கப்பட்டன.
கா: செய்து + ஆன் = செய்தான் = செய்கையையுடையவன். சினந்தான் =சினந்த செயலோன்.
இறந்தகால வினைகள் பாலீறு பெற்றுச் சிறிது காலஞ் சென்ற பின், எதிர்கால வினைமுற்றுக்களும் பாலீறு பெற்றன.
கா : செய்யுமான்—செய்ம்மான்—செய்வான்.
செய்யுமாள்—செய்ம்மாள்—செய்வாள்.
செய்யுமார்—செய்ம்மார்— செய்வார்.
செய்யுமது — செய்ம்மது — செய்வது.
செய்யும—செய்ம்ம செய்வ.
செய்யுமன—செய்ம்மன—செய்வன.
உண்ணுமான்—உண்மான்—உண்பான். நடக்குமான்— நடப்பான், இனி, செய்வு நடப்பு என உவ்வீறும் புவ்வீறும் பெற்ற தொழிற்பெயர்களே பாலீறு பெற்று எதிர்கால வினைமுற்றாகும் என்று கொள்ளவும் இடமுண்டு. செய்பு+ ஆன் = செய்வான், தடப்பு+ஆன் = நடப்பான்.
“ஆ ஓ வாகும் பெயருமா ருளவே” (தொ . 679)
என்றபடி, செய்யுமார் என்பது செய்யுளில் வினையா வணையும் பெயராகும்போது, செய்யுமோர் என்றாகும். வினையாலணையும் பெயர் வினைமுற்றும் பெயரெச்சத்தோடு கூடிய சுட்டுப்பெயருமாக இருவகை வடிவிலிருக்கும்.
கா : | இ. | கா. | நி. கா. | எ. கா. |
(1) | செய்தான் | செய்கிறான் | செய்வான் | |
(2) | செய்த(அ)வன் | செய்கின்ற (அ)வன் | செய்யுமவன் — | |
செய்யுபவன்—செய்பவன். | ||||
நடந்த(அ)வன் | நடக்கின்ற (அ)வன் | நடக்குமவன்— | ||
நடக்குபவன்— நடப்பவன். |
அகத்தியர் காலத்திற்கு முன்பே, வினைமுற்றுக்கள் பாலீறு பெற்றுவிட்டன, அஃறிணைப்படர்க்கை யிருபாற்கு மட்டும் செய்யும் என்னும் முற்றே இன்றும் உலக வழக்கில் வழங்குகின்றது : ஆண்பாற்கும் பெண்பாற்கும் செய்யுளில் வழங்கும். செய்யும, செய்ம்ம என்பவை செய்யுப செய்ப என்றும் திரியும். இவற்றுள் முன்னவை பலவின்பாலுக்கும், பின்னவை பலர்பாலுக்கும் வரையறுக்கப்பட்டன. ம—ப. போலி. இனி, செய்பு+அ = செய்ப என்றுமாம்.
வினைமுற்றுக்கள் எச்சப் பொருளில் வழங்குவ துண்டு.
கா | : | செய்வான் | வந்தான். |
படிப்பான் | ,, | ||
செய்ம்மார் | வந்தார். |
இவை முற்றெச்ச மெனப்படும். இவையே பிற்காலத்தில் வான் பான் மார் ஈற்று வினையெச்சங்களாகக் கூறப்பட்டன.
“மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியும் என்ப” (தொல். 691)
என்று தொல்காப்பியர் கூறுதல் காண்க. வான் பான் ஈற்று முற்றெச்சங்கள் பிற்காலத்தில் இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் வழங்கப்பட்டன.
செய்பாக்கு என்பதை, செய்பு+ ஆக்கு (செயலை ஆக்க) என்று பிரிக்கலாம். ஆக்க— ஆக்கு (திரிபு).
எச்சவினை
பெயரெச்சம் :
பெயரெச்சமெல்லாம் அன் சாரியை பெறாத அகர வீற்றுப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்றுக்களே.
கா : | வினைமுற்று | பெயரெச்சம் | ||
அவை | செய்த | செய்த | பையன் | |
,, | செய்கின்ற | செய்கின்ற | ,, | |
,, | செய்யும் | செய்யும் | ,, | |
,, | உள்ள | உள்ள | ,, | |
,, | நல்ல | நல்ல | ,, |
படர்க்கைப் பலவின் பால் வினைமுற்று பிற பாலிடங்கட்கும் வழங்கக்கூடியதை, அல்ல என்னும் படர்க்கைப் பலவின் பால் எதிர்மறைச்குறிப்பு வினைமுற்று, இப்போது இரு திணை ஐம்பால் மூவிடங்கட்கும் வழங்குதல் நோக்கி யுணர்க.
வினைமுற்றே பெயரெச்சமாவதை 6 ஆம் வேற்றுமை யாலுமுணர்க, கிழமை வேற்றுமை பெயரெச்ச வடிவின தென்று மாக்ஸ் முல்லரும் கூறுகிறார்.
வினையெச்சம் :
இறந்தகால வினையெச்சங்கள் முன்னர்க் கூறப்பட்டன. தழீஇ என்பதன் பண்டை வடிவம் தழீ என்றிருந்ததாகத் தெரிகின்றது. தழி என்பது நீண்டு தழீ என்றாகி யிருக்கலாம். ழீ என்பது சொல்லீறாகாதென்று கொண்டு, பிற்காலத்தார் இகரஞ் சேர்த்திருக்கலாம். குரி—குரிஇ (குருவி)=தறியது. தழுவு குருவு (குறுகு) என்னும் பிற்றை வடிவங்கள், தழுவி குருலி என வினையெச்சம் (அல்லது தொழிற்பெயர்) அல்லது தொழிலிபெயர் ஆகும். ‘இ’ என்னும் ஈறு இம்முப் பொருளிலும் வரும்.
குழு மரு உறு என்பவை குழூ மரூ உறூ என்று தொழிற் பெயராயின. குழுஉ மரூஉ உறூஉ என்பன பிற்கால வடிவங்கள், ஆடூஉ மகடூஉ என்னும் வடிவங்கள் இன்னிசை பற்றி முன்னவற்றைப் பின்பற்றியவை. ஆன் — ஆடு — ஆடூஉ. மகள் — மகடு—மகடூஉ, ஆடு +அவன் = ஆடவன்.
நிகழ்கால வினையெச்சம் என்று ‘செய்து கொண்டு’ (doing) என்னும் வாய்பாட்டைக் கூறினால் கூறலாம். ‘செய்ய‘ என்பது உண்மையில் திகழ்கால வினையெச்சமன்று. அது எதிர்கால வினை யெச்சமாகவே கூறற்குரியது.
செய்யியர் செய்யிய செய்ய என்பவை வியங்கோள் வினையைக் கூறுமிடத்துக் கூறப்படும்.
செய்யின் = செய் (தொழிற்பெயர்) + இன் (5-ஆம் வே, உ, ஏதுப்பொருள்).
செய்தால் = செய்து (தொழிற்பெயர்)+ஆல் (3 ஆம் வே. உ.)
செயற்கு = செயல் + கு (4-ஆம் வே. உ.)
செய்ம் மன = செய்யும் (எ; கா. வி. மு.)+என = செய்ய மென — செய்ம்மென — செய்ம்மன = செய்யும் என்னும்படி.
பின், முன், கால், கடை, வழி, இடத்து, போது முதலிய வினையெச்சவீறுகள் காலப்பெயர்களும் இடப்பெயர்களுமாகும். இவை பெயரெச்சத்தோடு சேர்த்து அதற்கு வினையெச்சத் தன்மையுண்டாக்கும் சொல்லீறுகளாகும்.
அடுக்கிற்று வினைமுற்றுக்கள் :
சில வினைமுற்றுக்கனில் ஈறுகள் அடுக்கிவரும்.
கா : செய்தான் செய்தன் +அன் = செய்தனள், + அன் = செய்தனன்,+அர் = செய்தனர்,+அ = செய்தன.
என்னுமான் — என்மான் — பன்மன் + ஆர் = என்மனார் (எ. கா. வி. மு.)
ஓ. நோ. மகனார், சாத்தனார்.
செய்தனன் என்பதில், ஈற்றயல் ‘அன்’ ஆண்பாலீறே. அது குறுகிய வடிவாயிருத்தலின் மேலோர் ‘அன்’ சேர்க்கப்பட்டது. ‘ஆன்’ ஈறாயின் தனித்தே நிற்கும். ஒரே யீறும் அடுக்கிவரும் என்பதை, மரத்தது என்னும் சொல்லாலறியவாம்.
மரம்+ அத்து (அது)+அது = மரத்தது. ஈற்றயல் ‘அன்’ பொருள் மறைந்த பின் பிறபாலிடங்கட்கும் சென்றது. செய்தன் என்பது திணை பால் தோன்றாத பண்டைக்காலத்த தெனினுமாம்.
தன்மை வினை
இறந்த காலம் :
ஒருமை—கண்டு, வந்து, சென்று.
இவை முற்கூறப்பட்ட செய்து என்னும் வாய்பாட்டுப் பண்டை இறந்தகால வினைமுற்றுக்கள்.
பன்மை — கண்டும், வத்தும், சென்றும். இவை, யாம் நீம் தாம் என்பவற்றைப்போல் பன்மையுணர்த்தும் மகர மெய்யீற்றவை.
எதிர்காலம்:
ஒருமை—செய்கு, போது:
இது இயல்பான வினைவடிவம். முதன்முதல் எல்லாச் சொற்களும் உயிரிலேயே இற்றன. இப்போது மெய்யீற்றனவா யிருப்பவையெல்லாம் முதலாவது உயிரீற்றனவாகவே யிருந்தன. எல்லாச் சொற்களின் ஈற்றிலும் உகரம் அல்லது இகரம் ஒலிப்பெளிமைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இவற்றுள் உகரத்தை Eaunciative ‘u’ என்பர் கால்டுவெல் ஐயர். இவ்வுகரம் குற்றியலுகரம். இது சில வினையீற்றில் வகரமெய் சேர்ந்து ‘வு’ என வழங்கும். ‘வு’ ‘கு’ ஆகும் இஃது ஓரியன்மை (uniformity) தோக்கிப் பிறசொற்களின் ஈற்றிலும் கொள்ளப்பட்டது, வ—க, போலி.
கா : காடகன்ணு , நில்லு’ கையி, பாயி: ஏவு, மருவு; ஆகு, போகு.
நட, கொடு என்பவற்றின் நிகழ்கால வினையெச்சங்கள் நடவ கொட என்றிராமல், நடக்க கொடுக்க என்றிருப்பதையும், சில விடங்களில் கொடுப்பான் என்பது கொடுக்குவான் என்று வழங்குவதையும் நோக்குக. அமைத்து தொலைத்து என்பவை கழக நூல்களில் அடைச்சி தொலைச்சி என வழங்கு இன்னை, இவற்றின் பகுதிகள் அடைச்சு தொலைச்சு என்பனவாகும், போது என்பது போகு என்பதன் திரிபு.
தமிழ் பண்படுத்தப்பட்டபோது, சொற்களின் வேரைச் சேராத எழுத்துக்களெல்லாம் விலக்கப்பட்டன. அங்ஙனம் விலக்கியபோது, வல்லின மெய்யின் பின்வருபவை மட்டும் விலக்கப்படவில்லை ஒலித்தற் கருமையாகாமைப் பொருட்டு.
இயல்பான வினைவடிவமே முதலாவது தன்மை யொருமைக்கு எதிர்காலத்தில் வழங்கியிருக்கின்றது.
“மடுக்கோ கடலில் விடு திமி லன்றி மறிதிரை மீன்
படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் றில்லை முன்றிற்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க் காயகுற் றேவல் செய்கோ
தொடுக்கோ பணியீ ரணியீர் பலர் நுஞ் சுரிகுழற்கே“[1]
என்னுஞ் செய்யுளிலுள்ள செய்கு என்னும் வாய்பாட்டு வினைகளையும், செய்தேன் என்னும் எதிர்கால வினைமுற்று வடிவத்தையும் நோக்குக.
செய்கு என்பது, வினைகள் பாலீறு பெறாததும் நிகழ் காலவினை தோன்றாததுமான பண்டைக் காலத்தில் தோன்றியது.
பன்மை—செய்கும், போதும்.
செல்லுது என்பது, பகுதி நீண்டு, செல்+து = சேறு என்று ஒருமையிலும், சேறும் என்று பன்மையிலும் ஆகும். இங்ஙனமே கொள்ளுது என்பதும் ஒருமையில் கோடு (கொள் +து) என்றும், பன்மையில் கோடும் என்றும் ஆகும், துவ்வீறு போது என்னும் வினையினின்றும் தோன்றியது. இவற்றையறியாமல், குடுதுறு என்பவும், கும் டும் தும் றும் என்பவும் தன்மைவினைமுற்றீறுகள் எனக் கூறினர் இலக்கணிகள். இங்ஙனமே, படக்கையொன்றன்பாற் குறிப்பு வினைமுற்றீறுகளையும் து று டு என்றனர் இம்மூன்றுள், (அது என்பதன் முதற்குறையான) ‘து’ ஒன்றே உண்மையான ஈறாகும்.
கா : உடையது—உடைத்து.
கண்+அது = கண்ணது: கண்+து =கட்டு,
தாள்+அது = தாளது; தாள் +து = தாட்டு.
அன்+அது = அன்னது; அன்+து = அற்று:
பால்+அது = பாலது; பால்+து = பாற்று.
பிற தன்மை வினையீறுகள் தன்மைப் பெயர்களும் அவற்றின் திரிபுமாகும்.
ஒருமை : ஏன்—என், (நான்)—(ஆன்)— அன் — அல் :
பன்மை : ஏம்—எம். (நாம்)—ஆம்—அம். (கண்டும் செய்தும் முதலியவற்றிலுள்ள) உம்—ஓம்.
முன்னிலை வினை
முன்னிலைவினை, ஏவல்வினை செயல்வினை என இரு வகைப்படும். செயல்வினை ஒருமை ஈறுகள் முன்னர்க் கூறப்பட்டன.
ஏவல்வினை, ஒருமை பன்மையென இருவகைப்படும், அவற்றுள், ஒருமை பின்வருமாறு எழுவகையாயிருக்கும்:
(1) பகுதி: கா : செய், போது.
(2) முன்னிலைப் பெயரீறுடையது. கா : (செய்நீ)—
(செய்தீ)— செய்தி,
(3) வேண்டுகோளெதிர் மறைமுற்று. கா : செய்யாய்
(செய்).
(4) எதிர்கால வினைமுற்று. கா : செய்வாய்.
(5) நிகழ்கால வினையெச்சம். கா : செய்ய.
(6) தொழிற்பெயர். கா : செயல்,
(7) துணைவினைபெற்றது. கா: செய்ய + விடு = செய்யட்டு.
பன்மையேவல் பின் வருமாறு அறுவகைப்படும்.
(1) | முன்னிலைப்பெயரீறு பெற்றது. | |||
(நீர்)—(தீர்)—திர். | கா | : | செய்திர். | |
நூம்—நும் — உம். | கா | : | செய்யும். | |
உம்+கள் = உங்கள். | கா | : | செய்யுங்கள். | |
உம்+(ஈம்)—(இம்) — இன். | கா | : | செய்யுமின், செய்மின். | |
(2) | வேண்டுகோளெதிர்மறைமுற்று. | கா | : | |
(3) | எதிர்கால வினைமுற்று, | கா | : | செய்வீர். |
(4) | நிகழ்கால வினையெச்சம், | கா | : | செய்ய. |
(5) | தொழிற்பெயர். | கா | : | செயல். |
(6) | துணைவினை பெற்றது. | கா | : | செய்யட்டும் (செய்யவிடும்). |
செயல்வினைப் பன்மையீறுகள் ஈர்இர் ஆகும். நீர்-ஈர்-இர்.
கா : செய்நீர், செய்தனிர்; செய்கின்றீர், செய்கிறீர் : செய்வீர், செய்விர்.
‘கள்’ ஈறு முன்னிலை படர்க்கைப் பன்மையில் ஈற்றுமே வீறாய் வரும். ஒருமையீறு, பன்மையீறு, பன்மையீற்று மேலீறு என்னும் மூன்றும் முறையே, இழிந்தோன் ஒப்போன் உயர்ந்தோன் என்னும் மூவர்க்கும் உலகவழக்கிற் கொள்ளப்பட்டன. இவ்வியல்பு மலேய மொழிகளிலும் உள்ளது.
படர்க்கை வினை முற்கூறப்பட்டது.
வியங்கோள் வினை
வியம் = ஏவல், வியங்கொள்-வியங்கோள் (முன்னிலை திரித்த தொழிற் பெயர்). உயரச்சுட்டு செல்லுதற் பொருளில் வரும் என்று முன்னமே கூறப்பட்டது. ஓய் = செலுத்து. ஒய்+அம் = ஓயம். ஒய்—உய்+அம் உயம். உய் செலுத்து. ஒ. நோ, ஒ—ஒடு ஏ—ஏவு=ஏகு. ஏவு பிறவினைப் பொருளிலும் ஏகு தன்வினைப் பொருளிலும் வழங்குகின்றன. ஆனால், இவற்றுள் ஒவ்வொன்றுக்கும் அவ்இருபொருளும் உள. உயம்—வியம். ஏவல்குறித்த வியம் என்னும் சொல், மதிப்பான ஏவலுக்குப் பெயராயிற்று. “தேர்வியங்கொண்ட பத்து”[2] என்னுஞ் சொற்றொடரில், வியங்கொள் என்னுஞ் சொல் செலுத்தற்பொருளில் வந்திருத்தல் காண்க.
ஏவலும் வியங்கோளும் சொன்முறையில் ஒன்றே. தொழிற்பெயரே ஏவலாகவும் வியங்கோளாகவும் பயன்படுத்தப்பட்டது. “செயல்” “எனல்” [3] என்று திருவள்ளுவரும் “நிலையல்” “கொளலே”[4] என்று தொல்காப்பியரும் கூறுதல் காண்க. நில் (தொழிற்பெயர்)+ஈயல்= நிலீயல் = நின்றருள், ஈயல்ஈதல், நிலீயல்—நிலீயர் — நிலிய – நிலிய, ஈயல் + ஈயர் — ஈய—இய—அ—க. ஈயர் — இயர், செய்யிய—செய்ய. செய்கு +அ=செய்க, போகு+அ = போக. நட+அ= நடக்க. போக நடக்க முதலிய சொற்களின் ஈற்றில் அகரம் ககர மெய்யோடு சேர்ந்து நிற்பதால், ‘க’ ஒரு வியங்கோளீறாகக் கூறப்பட்டது. வியங்கோள் பாலீறும் எண்ணீறும் பெறாமையால் இருதிணை யைம் பால் மூவிடங்கட்கும் பொதுவாம்.
செய்ய என்னும் வினையே, ஏவல், வியங்கோள், நிகழ்கால வினையெச்சம், தொழிற்பெயர் என்னும் நால்வகையில் வழங்கும். இவ்வியல்பு ஆங்கிலம் இந்தி முதலிய பிறமொழிகளிலும் உள்ளது.
செய்யியர் — செய்யிய —செய்ய (செய) என்பவை தொல் காப்பியத்தில் எதிர்கால வினையெச்சங்களாகக் கூறப்பட்டன. இவற்றுள், ‘செய்ய’ என்னும் வடிவுமே நிகழ்கால வினை யெச்சமாகவும் கூறப்படும். எதிர்கால வினையும் நிகழ்கால வினையென வழங்கினதை, ‘மலை நிற்கும்’, ‘ஞாயிறியங்கும்’ என, எதிர்கால வினைமுற்றுக்களையே முக்காலத்திற்கும் பொதுவான பொருளைக் குறிக்கும் நிகழ்கால வினைகளாக, உரையாசிரியர்கள் வழிவழி கூறினதினாலும், இன்றும் நீர் குளிரும் தீச்சுடும் என எதிர்கால வினைமுற்றுக்களே அப் பொருட்கேற்பதினாலும், அறிந்து கொள்ளலாம்.
எதிர்மறை வினை
ஏவல் :
ஒருமை—செய் + எல் = செய்யல்—செய்யேல். அல் என்பது எதிர்மறைக் குறிப்பு வினை.
செய்யாய்+த் =(செய்யாய் தீ)—(செய்யாதீ)—செய்யாதி (செய்யா தீ)— செய்யாதே—செய்யாதை.
பன்மை | — செய்யல் | + | மின் = செய்யன் மின். | |
செய்யாதீ | + | ஈர் = செய்யாதீர். | +கள். | |
+ | இர் = செய்யாதிர். | +கள். | ||
செய்யாதே | + | உம் = செய்யாதேயும். | +கள். |
வியங்கோள் : செய்+அல்+க = செய்யற்க.
செயல் வினை : இஃது இருவகை.
(1) துணைவினை பெற்றது:
கா: செய்தானல்லன் செய்தானில்லை செய்ததிலன் செய்ததில்லை செய்திலன் செய்யவில்லை (முக்காலத்திற்கும் பொது ) |
படர்க்கை ஆண் பால் இறந்தகால வினைமுற்று |
இங்கனமே பிற பாலிடங்கட்கும் ஒட்டுக. இல்லை யென்னும் சொல் இருதிணையைம்பால் மூவிடங்கட்கும் பொது.
(2) இடைதொக்கது. கா: செய்யேன், செய்யாய், செய்யான்.
இது எதிர்கால வினை : வழக்கத்தைக் குறிக்கும்போது முக்காலத்தையும் தழுவும் : இதில் இறுதியிலுள்ள உயிர் குறிலாயின் நீளும். செய்யாய் செய்யீர் என்னும் முன்னிலை வினைகள், முறையே, ஒருமை பன்மை ஏவலாகவும் வரும். காலங்காட்டும் இடை நிலையின்மை எதிர் மறை குறிக்கும் என்பர் கால்டுவெல் ஐயர்.[5]
வினையெச்சம்
செய்யாது (எதிர்மறைத் தொழிற்பெயர்).
செய்யாமை (எதிர்மறைத் தொழிற்பெயர்). செய்யாமை — செய்யாமே. செய்யாமை—செய்யாமல்.
துவ்வீற்றுப்படர்க்கை ஒன்றன்பாற் பெயர் வினை யெச்சமாகக் கூடியதை, பெரிது வந்தான், நன்று சொன்னான் என்னுந் தொடர்களா லுணர்க. முற்றெச்சம் = பனை பாலணையும் பெயர் +ஆய், ஆன.
செய்யாது என்னும் வாய்பாட்டில் வரும் அல்லாது இல்லாது என்னும் குறிப்புவினைகள், அல்லது (அல் + அது), அன்று (அல்+தி), இல்லது (இல்+அது) இன்று (இல் +5) எனக் குறுகும்.
அன்று போனான் = அல்லாது போனான்: இன்று போனான் இல்லாது போனான்.
இதையறியாது.
“அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம்
தொடர் பினு ளுகர மாய்வரி னியல்பே”[6]
என்றார் பவணத்தியார். செய்யாது என்பது செய்யா என ஈறு கெட்டும் வரும்.
பெயரெச்சம் :
செய்யாது (எதிர்மறை வினையெச்சம்) + அ (பலவின் பாலீறு) = செய்யாத (படர்க்கைப் பலவின் பால் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று).
படர்க்கைப் பலவின்பால் வினைமுற்றே பெயரெச்சமாகுமென்று முன்னர்க் காட்டப்பட்டதை நினைக்க.
செய்யாத என்பது செய்யா என ஈறுகெட்டும் வரும்.
தொழிற்பெயர் :
செய்யாத (பெயரெச்சம்)+மை (தொழிற்பெயரீறு) = செய்யாதமை.
செய்யா (ஈறுகெட்டது)+ மை = செய்யாமை.
செய்யாத + அது = செய்யாதது.
வினையாலணையும் பெயர் :
செய்யாத + அவன் = செய்யாதவன்—செய்யாதான்.
குறிப்பு வினை
முற்று :
குறிப்பு வினைமுற்று மூவகையது.
(1) பாலீறில்லாத பெயர். கா: அது மரம் ; அவன் யார்?
(2) பாலீறுள்ள பெயர். கா : கண்ணன், நல்லது, நல்ல.
(3) குறைவினை (Defective Verb) கா : உண்டு , இல்லை ; உண்டு இல்லை என்பனவும் பாலீறு பெற்றவையே : இப்போது பாற்பொருவிழந்து வழங்குகின்றன.
உன்+அது = உள்ளது. உள்+து அ=உண்டு . இல்+ அது = இல்லது. இல்+து = இன்றும் உள்+அ= உள்ள — உள. இல் + அ = இல்ல—இல—இலை. இல்ல — இல்லை, ஓ. நோ. அம்ம—அம்மை.
செந்தமிழில் ஐகாரவீறாயுள்ள பல சொற்கள், உலக வழக்கிலும் ஏனைத் திராவிட மொழிகளிலும் அகரவீறாகவே வழங்குகின்றன. முன்னது இயல்பான வடிவும் பின்னது பண்படுத்திய வடிவுமாகும்.
பெயரெச்சம் :
பெயரெச்சம் பின்வருமாறு பலவகைகளில் உண்டாகும்;
(1) வினைப்பகுதி. கா : பெரு, சிறு.
(3) பலவின் பால் வினைமுற்று. கா : நல்ல, சின்ன, பெரிய, பெயரிய.
இய என்னும் ஈற்றில், இகரம் இறத்தகாலவினையெச்ச வீறும் அகரம் பலவின்பால் வினைமுற்றுமாகும்,
கா : இ. கா. வி, எ. | ப, பா, வி, மு. | பெயரெச்சம், |
ஓடி | ஓடிய | ஓடிய |
இறந்தகால வினையெச்சமே முதலாவது முற்றாயிருந்ததென்றும், பின்பு பாலீறு சேர்க்கப்பட்டுத் தற்கால முற்றான தென்றும் முன்னமே கூறப்பட்டதை நினைக்க.
கா : செய்து+அ = செய்த(வி. மு.) — செய்த (பெ. எ.).
ஓடிய—ஓடின. போதிய—போகின — போயின, போகபோய்+அ = போய—போன, உறங்கிய — உறங்கின, ஆயஆன, ய| ன, போலி, ஓ. நோ. யான்— நான், யமன் (வ.) — நமன்.
செய்தன (செய்தன்+அ) என்னும் வடிவம், ஆண்பால் வினை முற்றின் மேல் பலவின்பாலீறு சேர்ந்த அடுக்கீற்று வினையாகும்.
ஆகவே, உண்வையில் இடைநிலையென்னும் சாரியை யென்றும் பகுபதத்தில் ஒருறுப்புமில்லையென்க.
(3) ஈறுகெட்டபெயர். கா : வட்ட, மர.
(4) ஈற்றுவலி யிரட்டித்த சொல். கா : சிற்று, நாட்டு.
(5) முதல் வேற்றுமைப் பெயர். கா :குட்டி, மூங்கில், பொலம்.
(6) 6ஆம் வேற்றுமைப் பெயர். கா : மரத்து, பதின், பதிற்று.
கிழக்கத்திய, பிறம்பத்திய என்பவை 6 ஆம் வேற்றுமை யடியாய்ப் பிறந்த பலவின்பால் குறிப்பு வினைமுற்று.
(7) ஐயீற்றுப்பெயர், கா : பண்டை , அன்றை, கீழை.
ஆய—ஐ— ஐ. பண்டாய—பண்டைய — பண்டை,
“பண்டாய நான் மறை” என்னும் திருவாசகத் தொடரை நோக்குக.
(8) பெயரெச்ச வீற்றுப் பெயர். கா : வட்டமான அறிவுள்ள.
(9) பலவின்பாலீறு பெற்ற பெயர். கா : பார்ப்பார, வண்ணார.
குறிப்பு :- பெரு நாரை மூங்கிற்குழாய் என்னுந் தொடர்கள் இயல்பாய்த் தோன்றியவை; இடையில் ஒன்றும் தொக்கவையல்ல. அவற்றைப் பெருமையாகிய நாரை, மூங்கிலாகிய குழாய் என்று விரித்துக் கூறியது பிற்காலத்தது. தயிர் குடம் என்னும் இருபொருட் சேர்க்கையைக் கண்டதும், தயிர்க்குடம் என்பரேயன்றித் தயிரையுடைய குடம் என்னார். தயிர் அடையானதினால் முற்கூறப்பட்டது. குடம் அடையாயின் குடத்தயிர் என்று முற்கூறப்படும். அடை வேறு படுப்பது. வேற்றுமையேயில்லாத ஒரு காலமுமிருந்தது. அக்கால வழக்கையே பிற்காலத்தில் வேற்றுமைத்தொகை யென்றனர். இங்கனமே பிற தொகைகளும். இன்றும், பேச்சு வழக்கிலும் குழந்தை பேச்சிலும், ஏன் புஸ்தகம் நானுகை என்று வழங்குதல் காண்க.
வினையெச்சம் :
(1) தொழிற்பெயர், கா: இன்றி (இல்+தி), இல்லாமை.
(2) முதல் வேற்றுமைப்பெயர், கா : வெளி, புறம்.
(3) திரிவேற்றுமைப்பெயர். பிறகால், வெளியில்:
(4) வினையெச்சவீற்றுப் பெயர். கா: நன்றாய், நன்றாக.
(5) முற்றெச்சம். கா : வேலினன் {வந்தான்).
செயப்பாட்டு வினை
(1) நிகழ்காலவினையெச்சம்+படு (to suffer). கா : செய்யப்படு
செயப்படுவது செயப்பாடு. செயப்பாட்டைக் கூறும் வினை செயப்பாட்டுவினை.
(2) முதனிலைத்தொழிற்பெயர் +உண் (to experience, lit to eat). கா : கொல்லுண்.
(3) ஈறுபெற்ற தொழிற்பெயர்+உண். கா: கொலையுண்.
(4),, +ஆ (to become), போ முதலியன; கா : கொலையானான், விலைபோகும்:
தமிழ்ச் செயப்பாட்டு வினை முறை ஆங்கில முறையினின்றும் வேறுபட்டிருப்பது கொண்டு, தமிழில் உண்மையான செயப்பாட்டு வினையில்லையென் நயிர்த்தார் கால்டுவெல் ஐயர், ஆங்கிலச் செயப்பாட்டு வினைப்பெயரே தமிழ்ச் சொல்தான்.
- passive, adj. Fr-L. passivus from patior, to suffer (root PAT[7] pat=படு, passion = பாடு, (1—3, போலி (Permutation).
பிறவினை —Causal Verb
பிறவினை என்பது இருமடி அல்லது பன்மடி, ஏவல்:
“செய்யென் வினைவழி விப்பி தனிவரின்
செய்வியென் னேவ லிணையினீ ரேவல்” (138)
என்று தன்னூலாருங் கூறுதல் காண்க. தொழிற்பெயர் ஏவல் வினையாக வருமென்பது முன்னர்க் கூறப்பட்டது. துணைவினை பெற்றவையொழிந்த, ஏனைய பிற வினை வடிவுகளெல்லாம் தொழிற்பெயர்களே.
கா : வாழ்+து = வாழ்த்து . து —சு. பாய்+சு — பாய்ச்சு.
துவ்வீறே புணர்ச்சியில் டுறு வாகும்.
கா காண்+து + காட்டு, உருள்+து = உருட்டு, தின்+ து = தீற்று, நால்+து = நாற்று.
செய்யப்பண், வரச்செய் முதலியன துணைவினை பெற்றவை.
குறைவினை-Defective Verb
எல்லாத் திணைபாலிடங்கட்கும் புடைபெயராத வினை குறைவினையாகும்.
கா : வேண்டும், கூடும், போதும்.
வேண்டு = விரும்பு. எனக்கு அது வேண்டும்= யான் அதை விரும்புவேன். விருப்பம் இங்குத் தேவையைக் குறிக்கும் : நீ அதைச் செய்யவேண்டும் = நீ அதைச் செய்ய யான் விரும்புவேன்.
உனக்கு என்ன வேண்டும் = நீ என்ன விரும்புவாய்.
‘செய்யும்’ என்னும் வாய்பாட்டு எதிர்கால வினைமுற்றாகிய ‘வேண்டும்‘ என்பது, இன்று பொருள்மறைந்து வழங்குகின்றது. இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தொடங்கினதாகும்.
வழுவமைதி வினை -Anamolous Verb
கா : அல்லேன்—வழாநிலை (நான்) அல்ல — வழுவமைதி.
ஒட்டுவினை
மற்றச் சொற்களோடு சேர்ந்தே வழங்கும் வினை ஓட்டு வினை :
கா : (ஆகும்) ஆம்-செய்யலாம், செய்தானாம்.
ஆக்கும்-(ஆகும்) செய்வானாக்கும், புலவனாக்கும்.
துணைவினை — Auxiliary
கா : (செய்ய) முடியும், நீராடு, புரந்தா, அலம்வா.
துணைவினைகள் பலவகைப் பெயர்களோடும் வினை முற்று எச்சங்களோடும் சேர்ந்துவரும். அவற்றுள் சினைப் பெயரோடு சேர்ந்து வருபவை மிகப்பல.
கா : கைபார், கைக்கொள், கையாடு, கையாள், கைதேர், கைவா, கையறு, கைப்பற்று முதலியன.
துணை வினைகளுள் முடி, கூடு, மாட்டு முதலியவை, உடன்பாட்டில் ஆற்றல் (Potential) பொருளும் எதிர்மறையில் விலக்கு (Prohibition) மறுப்பு (Dealal)ப் பொருள்களும் உணர்த்தும், விடு இடு என்பவை துணிவு விரைவு வியப்பு முடிவு முதலிய பொருள்களுணர்த்தும் ; இடு அருள் முதலியவை வேண்டுகோள் வாஞ்சை அருளல் ஆகிய பொருள்களுணர்த்தும் கொள் என்பது தற்பொருட்டு (Reflexive) ப் பொருளும் மாற்றிக்கோடல் (Reciprocal) பொருளுமுணர்த்தும் ஆர் (ஆர), தீர் (தீர) முதலியவை முன்னொட் டாய்ச் சேரின் மிகுதி (Intensive) ப் பொருளுணர்த்தும்.
இரட்டைக்கிளவி வினை -Fedquentative Verb
கா : துறுதுறு, குளு குளு, சலசல.
பெயரடிவினை -Denominative Verb
கா : எள் — எள்ளு , புரம்—புர.
புரத்தல் காத்தல். புரம் – கோட்டை , நகர்.
ஆகு பொருள் வினை :
ஒரு வினை தன் பொருளொடு தொடர்புள்ள இன்னொரு பொருளில் வழங்கின், அதை ஆகுபொருள் வினையெனலாம்.
கா : (காசு) செல்லும், (இவ்வளவு) போதும், (உள்ளம்) குளிரும்.
- ↑ திருக்கோவை, 63.
- ↑ ஐங்குறுநூறு, பக்.139.
- ↑ குறள், 38, 196.
- ↑ தொல். 15, 405,
- ↑c. G. p. 361.
- ↑ நன்னூல்,178
- ↑ Cassell’s Latin Dictionary, p. 396. connected with Gr. pascho),
இடைச்சொல்
இடை ஒன்றன் இடம். இடு(கு)தல் சிறுத்தல், உடம்பில் இடுகிய பாகம் இடை. இடைாேல ஒன்றன் பாகமான இடம் இடை. ஒ. நோ. கண், கால், தலை, வாய், இடம் என்பது உண்மையான இடத்தையும் இடை என்பது 7ஆம் வேற்றுமை இடத்தையுங் குறிக்கும்.
பெரும்பாலும் பெயரிடத்தும் வினையிடத்தும் வருஞ் சொல் இடைச் சொல்.
இடைச்சொற்கள், பொருள் இடம் பயம்பாடு குன்றிய பொருண்மை என்பனபற்றி, நால்வகையாக வகுக்கப்படும்.
(1) பொருள்கள் குறிப்பு, வினா, ஐயம், உயர்வு, இழிவு, எச்சம், விளி, வியப்பு, காலம், இடம், பிரிநிலை, தேற்றம், முற்று, எண், பயனின்மை , பிறிது முதலியன.
(2) இடம் பற்றியவை முன்னொட்டும் பின்னொட்டும்.
(3) பயம்பாடு பற்றியவை வேற்றுமையுருபு, உவமவுருபு; பெயரீறு, வினையிறு, சாரியை, இனக்கச்சொல், இணைப்புச் சொல், வரிசைக்குறி என்பன.
இடைச்சொல் பெரும்பாலும் பயம் பாட்டைப் பொறுத்தது.
கா : போன்றான் (வி.), போல (இ); என்றான் (வி), என்று (இ.).
(4) குன்றிய பொருள சிவசிவா (சூசுவா). பார்த்தாயா பார் முதலியன.
இணக்கச்சொல் ஆம், சரி, நல்லது, ஆகட்டும் முதலியன:
இணைப்புச் சொல் நால்வகைய. அவையாவன :—
i கூட்டிணைப்புச்சொல் (Cumulative Conjuncion).
கா : ஏ, உம், என, அதோடு, அன்றியும், மேலும், இனி.
- விலக்கிணைப்புச்சொல் (Alternative Conjuuction)
கா : ஆயின், ஆனால், ஆனாலும், என்றாலும், இருந்தாலும்.
iii: மாறிணைப்புச் சொல் Adversative Conjunction)
கா : ஆவது, ஆதல், ஆயினும், அல்லது, எனினும்— ஏனும்.
- முடிபிணைப்புச்சொல் (Illative Conjuncion)
கா : அதனால், ஆதலால், ஆகையால், ஆகவே, எனவே வரிசைக்குறிகள் ஆம், ஆவது என்பன.
சாரியை, கரம் காரம் கான் என்னும் எழுத்துத் துணையொலிகள், சாரியை இடை நிலையென்று உண்மையில் சொல்லறுப்பில்லை.
கைலையங்கிரி =கைல என் கிரி, கூட்டாஞ்சோறும்= கூட்டு ஆம் சோறு. புளியம்பழம் = புளியின்பழம், ஆலங்காடு = ஆலம்+காடு.
வல்லோசையுள்ள தோன்றல் திரிதல் இரட்டல் ஆகிய புணர்ச்சிகள் முது பழந்தமிழில் இல்லை.
அறிஞன் என்பதில் நகரம் போலியே. அறிநன்—அறிஞன்.
அறிகின்றாள் — அறியுன்னான் — அறியுன்னன் — அறியுநன்—அறிஞன். னகரத் தோன்றுமுன் நகரமே வழங்கிற்று.
அசை நிலையென்று ஒரு சொல்லுமில்லை. பொருள் குன்றிய அல்லது பொருள் தெரியாத அல்லது தவறாகப் பிரித்த சொற்களையே அசைநிலையென்று இலக்கணிகள் கூறிவிட்டனர், அதனால் பிற்காலத்தார் அவற்றைப் பொருளின்றியும் வழங்கினர்.
அசைநிலைச் சொற்கள்
மா : “புற்கை யுண்கமா கொற்கை யோனே”
மாகொற்கையோனே என்று பிரிந்திசையும்,
மியா :கேளுமையா— கேளுமியா — கேள்மியா— கேண்மியா.
இக : ‘கண்பனியான்றிக’, ஆன்று இக = நிறைந்து விழ
ஏ: செல்லுமையே — செமியே — சென்மியே — சென்மே. ஐயே-(இயே)-ஏ-ஏன். கா : வாருமே, வாருமேன்.
மோ: மொழியுமையோ—மொழியுமியோ—மொழிமியோ. மொழிமோ.
மதி: மதி = அளவு, போதும், செல்மதி=போ, அது போதும்.
அத்தை: அதை — அத்தை. ஒ. நோ. ‘எத்தால் வாழலாம்.
இத்தை: இதை — இத்தை.
வாழிய: வியங்கோள்வினை.
மாள : ‘தவிர்ந்தீகமாள.’ மாள = முடிய, முற்றிலும்.
ஈ: சென்று+ஈ=சென்றீ = சென்றாய்.
யாழ: “யாழநின்“ = யாழ்போலும் இனிய நினது (கலி 18)
யா: பன்னிருவர் மாணாக்கர். யார் அல்லது யாம் என்பதன் ஈற்று மெய் விட்டுப்போயிருக்கலாம். யா என்னும் அஃறிணைப் பன்மை வினாப் பெயரே ஒரு காலத்தில் உயர் திணைக்கும் வழங்கிற்று:
கா:’இவள் காண்டிகா’ காண்டி = பார், கா = காத்துக்கொள்:
பிற:’ஆயனையல்ல பிற’ = ஆயனையல்லாத மற்றவை.
பிறக்கு : ‘பிறக்கதனுட் செல்லான்.’ பிறக்கு = பிறகு.
அரோ : அரன் என்பதன் விளி, அரோ = சிவனே.
போ : இது வெளிப்படை மறுப்புப் பொருளில் உலகவழக்கிலும் வழங்கும்.
மாதோ :மகடூஉ முன்னிலை. மாதோ = பெண்ணே.
இகும்:’கண்டிகும்.’ இகும் = இடும். இடுதல் = கொடுத்தல்.
சின்: உரைத்து+ஈ = உரைத்தீ, உரைத் தீயினோர்— உரைத் தீசினோர்— உரைத்திசினோர். ஈ துணை வினை. ஈதல் கொடுத்தல் ஏன்றீயேன் (என்றிட்டேன்) — என்றியேன் — என்றிசேன் — என்றிசின்.
குரை: குரு + அ = குர —குரை=பெருமை. ஒ. நோ.குரு+ அவு = குரவு. குரவு+ அன் = குரவன் = பெரியோன் “பல்குரைத்துன்பம்”, “பெறலருங் குரைத்தே.”
ஓரும்: ஓர்=உணர்,ஒன்று “அஞ்சுவதோரும் அவா“ = அஞ்சுவதொன்றும் அவாவே ; (அல்லது) அஞ்சுவது அவா, அதை நீர் உணரும். அதனோரற்றே அதனொடு ஒரு தன்மைத்து. அன்றே = அவ்லவோ போலும் இருந்து முதலிய பிறசொற்கள் வெளிப்படை.
சில இடைச்சொற்கள் வீண் வழக்கால் பொருளிழந்துள்ளன. கா : ஊரிலே — ஏ ; மரத்தினின்றும்—உம்.
உரிச்சொல்
உரிச்சொல் முன்னர்க் கூறப்பட்டது.
உடம் — (உட) — (உடி)— உரி. உரிமை = உடமை. உடனுள்ளது உடமை. உடல்—உடன். ஒ.நோ. தொலி —தோல் —தோறு— தோடு, தொலி — தொறு = கூட. தொறு+ உம்=தொரும். தோட=கூட உரி= தோல். உடு, உடீஅ என்பவற்றை நோக்குக
பல்கலைக்கழக் அகராதியின் பல்வகைக் குறைகள்
ஒரு வழங்கு மொழியின் சொற்கள் இயல்பாக நூல் வழக்கில் ஒரு தொகுதியும் உலக வழக்கில் ஒரு தொகுதியுமாக இரு கூற்றாகவேயிருக்கும். வடமொழி போன்ற வழக்கற்ற மொழியாயின், எல்லாச் சொற்களையும் நூல்வழக்கினின்றே அறிய முடியும். தமிழ் போன்ற வழங்கு மொழியாயின், எல்லாச் சொற்களையும் தொகுக்க வேண்டுவார் இருவகை வழக்குகளையும் ஆராய்ந்தாக வேண்டும்.
தமிழ்நாட்டில், இதுபோது தமிழில் தலைமை தாங்குபவர் பெரும்பாலும் பார்ப்பனர். அவர் நாட்டுப்புறத்தாரோடும் தாழ்த்தப்பட்டாரோடும் அளவளாவு நிலையினரல்லர். தமிழ் வழக்கு இதுபோது பார்ப்பனத்தொடர்பு மிக மிக வடசொல் மிகுந்தும், அது குறையக்குறைய வடசொற் குறைந்தும் உள்ளது.
பல்கலைக்கழக அகராதி முடியும்வரை, சொல்லாராய்ச்சியுள்ளவர் ஒருவராவது அதன் தொகுப்புக்குழுவில் இருந்ததாகத் தெரியவில்லை.
மேலும், அத்தொகுப்புக்குழுவினர் பெரும்பாலும் மரயு ஊணினர். அதனால் ஊனுணவுபற்றிய பல சொற்கள் அவ்வகராதியிற் காணப்படவில்லை.
அவர் உலக வழக்கையாராயாதது மட்டுமன்று, நூல் வழக்கையும் சரியாய் ஆராய்ந்திலர். முதலாவது பல அகராதிகளினின்றே சொற்களைத் தொகுத்ததாகத் தெரிகின்றது. ஏனென்றால், கருமுக மந்தி, செம்பின் ஏற்றை, கருங்களமர், வாய்ச்சியாடல் முதலிய பல சொற்கள் அகராதியிற் காணப்படவில்லை.
அகராதித்தொகுப்பு 27 ஆண்டுகளாக நடந்து வந்திருக்கின்றது; 4,10,000 உருபாக்களும் செலவாகியிருக்கின்றன. ஆகையால், காலம் போதாதென்றொரு காரணங்கூறி, அகராதியின் குறையைமறைக்க முடியாது. ஆராய்ச்சியாளனாயின், இதுவரை சென்றுள்ள செலவில் 1/8 பங்கிற்கு, இதினும் சிறந்த அகராதி ஒருவனே தொகுத்திருக்கக்கூடும் என்று கூறுவது மிகையாகாது.
இப்போது அனுபந்தம் முதற்பாகம் என்றொரு பகுதி வெளிவந்துளது. அதிலும் சில சொற்களைக் காணோம்.
பல்கலைக்கழக அகராதியின் குறைகள் பின்வருமாறு பல திறப்படும்.
(1) எல்லாச் சொற்களுமில்லாமை.
(3) உள்ள சொற்கட்கு எல்லாப்பொருளும் கூறப்படாமை.
(3) காட்டக்கூடிய சொற்கட்கெல்லாம் வேர் காட்டப்படாமை.
(4) காட்டிய வேர்ச்சொல் தவறாயிருத்தல்.
(5) பல தென்சொற்களை வடசொற்களாகவும் பிறசொற்களாகவும் காட்டியிருத்தல்.
தமிழ் நாட்டின் பெரும்பகுதியைக் கடல் கொண்டதினாலும், பல தமிழ்க் கலைகளும் நூல்களும் அழிந்து போனதினாலும், பண்டைத் தமிழின் பல சொற்கள் மறைந்து போனமையால், இதுபோது எல்லாத் தமிழ்ச் சொற்கட்கும் வேர் காட்ட முடியாததுண்மையே. ஆயினும், சொல்லியல் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பின், பல சொற்கட்கு வேர் காட்டல் கூடும். இப்போதே இஃதாயின், தொல்காப்பியர் காலத்தில் எத்துணை எளிதாயிருந்திருக்கும்? ஆயினும், வேர் காண்டல் எல்லார்க்கும் எளிதன்று. இதனாலேயே,
“மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” (உச். 98)
என்றார் தொல்காப்பியர்.
‘விழிப்ப’ என்பது விழித்தமட்டில் அல்லது பார்த்தமட்டில் என்று பொருள்படும். ‘விழிப்பத் தோன்றா’ என்பதற்கு ”beyond ascertainment” என்று, பல்கலைக்கழக அகராதிப் பதிப்பாசிரியராகிய உயர் திருவையாபுரிப் பிள்ளையவர்கள் கூறியிருப்பது தவறாகும்.
பல்கலைக்கழக அகராதியில், தென்சொற்கள் வடசொற்களாய்க் காட்டப்பட்டிருப்பதற்கு, இரு காட்டுத் தருகின்றேன்,
(i) மயில்<மயூர (வ.)
மை = கருப்பு. மயில் = கரியது. பச்சையானது. கருமை நீலம் பச்சையென்பன இருவகை வழக்கிலும் ஒன்றாகக் கூறப்படுவதுண்டு, பச்சை மயில் நீலக்கலாபம் என்னும் வழக்குகளை நோக்குக, காளி, நீலி என்பர் கொற்றவையின் பெயர்கள் – திருமாலின் நிறம் கருமை நீலம் பசுமை என முத்திறத்திற் கூறப்படும். நீலச்சேலைக் கருப்புச் சேலை யென்பது உலக வழக்கு சற்றுப் பசிய வெண்ணிறக் காளையை மயிலை என்பர் உழவர். மயில் தென்னாட்டிற்குச் சிறப்பாயுரிய குறிஞ்சிப் பறவையாகும். மயில் என்னும் தமிழ்ச் சொல்லே மயூர என்று வடசொல்லில் வழங்குகின்றதென்க,
(ii) வடவை வடவா (வ.)
வடதுருவத்தில் சில சமையங்களில் தோன்றும் ஒளி வடவை யெனப்பட்டது. வடக்கிலிருந்து வரும் காற்றும் வடவை வடந்தை எனப்படும், வடவை ஒளி அல்லது தீ ஆங்கிலத்தில் Aurora Borealis என்றழைக்கப்படும்.
Aurora Borealis, the northern aurora or light; L. aurora, light; borealis, northerg – boreas, the north wind.
கிரேக்கர் வடகோடியில் வாழ்ந்த ஒரு வகுப்பாரை Hyperboreans என்றழைத்தனரென்றும், அப்பெயர் மலைக்கப்பாலர் என்று பொருள்படுமென்றும், Boreas என்பது வடகாற்றின் பெயரென்றும், அது முதலாவது மலைக்காற்று என்றே பொருள் பட்டதென்றும், Boros என்பதின் பொருள் மலையென்றும், மாக்ஸ் முல்லர் எழுதிய ‘மொழி நூற் கட்டுரைகள்’ என்னும் நூலின் இரண்டாம் பாகத்தில், 8 ஆம் 9 ஆம் பக்க அடிக்குறிப்பில் குறிக்கப்பட்டுள்ளது.
இதனால் boros அல்லது boress என்பது பொறை என்னும் தமிழ்ச்சொல்லே யென்றும், Hyperboacan என்பது உப்பர்ப் பொறையன் என்றலமயும் தமிழ்த்தொடர் என்றும் தெரிகின்றது.
வடவை வடமுகத்தில் தோன்றுவதால் வடவை முகம் என்றுங் கூறப்படும். ஒ. நோ. துறைமுகம்,
ஆல்ப்ரெட் ரசல் உவாலேஸ் என்பவர், மலேயத்தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த முக்க (Muka) த் தீவில், தாம் வடவைத் தீயைக் கண்டதாகக் கூறுவதால்[1] தமிழர் வடவைத்தீயைக் கண்டிருந்தார் என்பதில் எட்டுணையம் ஐயத்திற்கிடமின்று.
வடவை என்னும் தமிழ்ச்சொல்லைப் படபா என்றும். வடவைமுகம் என்பதைப் படபா முகம் என்றும் வடமொழியில் திரித்துக் கொண்டு, பெட்டைக் குதிரையின் வடிவானது என்று அதற்குப் பழைமையர் கூறிய பொருளை இவ்விருபதாம் நூற்றாண்டிலும் கூறினால், மேனாட்டுக்கலை இந்நாவலந் தேயத்திற்கு வந்து என்னதான் பயன்?
ஒரு மொழியின் பெருமையை உணர்த்தும் நூல்களில் அகராதியும் ஒன்றாகும். தமிழகராதி இங்கனமிருப்பின், அம் மொழியின் பெருமை எங்ஙனம் புலனாகும்? அசுராதிக்கு வராது எத்துணையோ சொற்கள் நாட்டுப்புறங்களில் வழங்குகின்றன.
தமிழே திராவிடத்தாய்
தமிழே திராவிடத்தாய் என்று, இம்மடலத்தின் இரண்டாம் பாகத்தில், வெள்ளிடைமலையாய் விளக்கப்படும்.
தெலுங்கு கிழக்கத்திய இத்தாலியன் (‘Italian of the East’) என்றால், தமிழ் கிழக்கிற்கு மட்டுமன்று, இவ்வுலகிற்கே இலத்தீன் (Latin of the Universe) ஆகும். தமிழிலக்கியம் திராவிட மொழிகட்கெல்வம் பொதுச்செல்வம். ஆயினும், ஆரியத்தால் மயங்கிய பிற திராவிட மொழிகள் தமிழ்த் தொடர்பை முற்றிலும் விட்டுவிட்டன. ஆனால், தென் சொல் கலவாமல் ஏனைத் திராவிட மொழிகளில் ஒன்றிலாயினும் ஒரு விரிவான சொற்றொடரும் அமைக்க முடியாது.
- ↑ The Malay Archipelago, p. 402.
IV. உலக முதன்மொழிக் கொள்கை
1: மாந்தன் தோன்றியது குமரி நாடாயிருக்கலாம் என்பது.
இதற்குச் சான்றுகளும் காரணங்களும் —
(1) குமரி நாட்டின் பழைமை.
(2) ஹெக்கேல் ஸ்கிளேற்றர் முதலியோர் இலெமுரியா மாந்தன் தோன்றிய இடமாகக் கூறியிருத்தல்.
(3) குமரி நாட்டு மொழியின் தொன்மையும் முன்மையும்.
(4) தென்னாட்டுப் பெருங்கடல்கோட் கதை உலக முழுதும் வழங்கல்.
(5) மக்கள் கிழக்கிலிருந்து வந்தார் என்று யூத சரித்திரங் கூறல்.[1]
{6) தொன்மரபினரான மாந்தர் பெரும்பாலும் தென் ஞாலத்திலிருத்தல்.
(7) குமரி நாடிருந்த இடம் ஞாலத்தின் நடு மையமாயிருத்தல்.
(8) குளிரினும் வெம்மையே மக்கட்கேற்றல்.
(9) தென்ஞாலத்தின் வளமை.
உலகத்திற் கிடைக்கும் பொன்னும், வயிரமும், பெரும்பாலும் தென்னாப்பிரிக்கா, தென்னிந்தியா, தென்கண்டம் (Australia) ஆகிய இடங்களிலேயே எடுக்கப்படுகின்றன.
(10) முதல் மாந்தன் வாழக்கூடிய கனிமரக்கா (ஏதேன்) தென்ஞாலக் குறிஞ்சி நாடுகளிலேயே காணக்கூடியதாயிருத்தல்.
குறிப்பு :—கிறித்தவ விடையூழியர் கானான் நாட்டை ஞாலத்தின் மையம் என்று கூறுவது தவறாகும். அந்நாடு நள்ளிகை (Equator)க்கு வடக்கே 30 ஆம் 40 ஆம் பாகைகட் கிடையிலுள்ளது. குமரிநாட்டிடமோ நள்ளிகையின் மேலேயோ உள்ளது. மேலும், பண்டை ஞாலத்தில் தென்பாகத்திலேயே நிலம் மிக்கிருந்ததென்றும், கானான் நாட்டு நிலம் நீர்க்கீழ் இருந்ததென்றும் அறிய வேண்டும்.
ஆதியாகமத்தில் மாந்தன் படைப்பை யூத சரித்திரத்தோடு இணைத்துக் கூறியிருக்கிறது.
யூதர் முதல் மக்கள் வகுப்பாரல்லர் என்பதற்குக் காரணங்கள் :—
(i) பழைய ஏற்பாட்டில் 4000 ஆண்டுச் சரிதையே கூறப்பட்டுள்ளமை.
இதுபோது 6000 ஆண்டுகட்கு மேற்பட்ட மரங்கள் உள்ளனவாகச் சொல்லப்படுகிறது. தமிழ்மொழி தோன்றிய காலம் எவ்வகையினும் கி. மு. 5000 ஆண்டுகட்குப் பிற்படாது.
(ii) காயீன் தன்னைப் பலர் கல்லெறிவார் என்று கூறி யிருத்தல்.
(iii) மக்கள் கிழக்கிலிருந்து வந்தாரென்று யூத சரித்திரங் கூறல்.
(iv) யூதர் தேவ புத்திரரைக் கண்டாரெனல்.
தேவ புத்திரரென்று உலகில் சொல்லத்தக்கவர் வெள்ளையரான ஆரியர். ஆரியரைத் தேவரென்று சொல்லத்தக்கவர் தென்னாட்டிலிருந்து சென்ற கருப்பரா யிருந்திருத்தல் வேண்டும்.
(V) உலக முழுதும் ஒரே மொழி வழங்கிற்றென்று ஆதியாகமத்திற் கூறியிருத்தலும், எபிரேய மொழி உலக முதன் மொழியாதற் கேற்காமையும்.
(vi) எபிரேய மொழியில் பல தமிழ்ச் சொற்கள் சிதைந்து கிடத்தல்.
கா : ஆப் (அப்பன்). ஆம் (அம்மை ), நூன் (மீன்), வாவ் (வளைவு), மேம் (மேகம் = நீர்), பே (வாய்). மேகம் என்பது மேலேயுள்ள நீர் என்று பொருள்படும் தமிழ்ச்சொல்லே, மே (மேல்)+கம் (நீர்)= மேகம்:
ஆதாம் (மாந்தன்) என்னும் முதல் எபிரேயப்பெயர் ஆதோம் (சிவப்பு) என்பதின் திரிவாகச் சொல்லப்படுகிறது, ஆதோம் என்பது அரத்தம் (சிவப்பு) என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபாயிருக்கலாம்.
இந்நூலின் 4ஆம் மடலத்தில், எபிரேயம் எங்ஙனம் தமிழி னின்றும் திரித்ததென்பது விளக்கப்படும்.
(vii) ஆதியாகமத்திற் படைப்பைப் பற்றிக் கூறுமிடத்தே, வாரம் என்னும் எழு நாளளவைக் கூறியிருத்தல்.
பகலும் இரவும் சேர்ந்த நாள் என்னும் அளவு முதலிலிருந்துள்ளது. ஆனால், எழுகோள்களைக் கண்டுபிடித்தபின் அவற்றின் பெயரால் உண்டான வாரம் என்னும் அளவு பிற்காலத்தது.
மோசே உலக சரித்திரமறிந்தவரல்லர். அவர் அக்காலத்து மக்களின் அறிவு நிலைக்கேற்றபடி, பழைமை முறையிற் படைப்பைப் பற்றிக் கூறினார். இயேசு பெருமான் தாமே திருவாய் மலர்ந்தருளினதே, கிறித்தவர் ஐயமின்றிக் கொள்ளத்தக்கது. கடவுள் நினைத்தவளவில் எல்லாவற்றையும் படைப்பவர். அதற்கு வாய்ச்சொல்லும் ஏழு நாளும் வேண்டியதில்லை.
- தமிழ் உலக முதற்பெருமொழியா யிருக்கலாமென்பது
இதற்குச் சான்றுகளும் காரணங்களும் :-
(1) தமிழ் நாட்டின் பழைமை.
(2) தமிழின் பழைமை.
(3) தமிழின் எளிய வொலிகள்.
(4) தமிழில் இடுகுறிச்சொல்லும் சுட்டசை (Definite. Article) யும் இல்லாமை.
(5) தமிழில் ஓட்டுச்சொற்கள் சிலவாயிருத்தல்.
(6) அம்மை அப்பன் என்னும் தமிழ் முறைப் பெயர்கள் பல வடிவில் உலகமொழிகள் பலவற்றில் வழங்கல்.
(7) தமிழ்ச்சொற்கள் சிலவோ பலவோ உலக மொழிகள் எல்லாவற்றிலுமிருத்தல்.
(8) மும்மொழிக் குலங்களின் சிறப்பியல்பும் ஒரு சிறிது தமிழிற் காணப்படல்.
வடமொழிக்குரிய நீட்டற்புணர்ச்சி (தீர்க்கசந்தி) தமிழிலுள்ளமை முன்னர்க் கூறப்பட்டது.
சித்தியக் குலத்திற்குச் சிறந்த உயிரொப்புத் திரிபு (Harmonious Sequence of Vowels) பொதியில் (பொது + இல் சிறியிலை (சிறு + இலை) முதலிய தொடர் மொழிகளில் உளது.
சீனத்தில் ஒரே சொல் இடவேற்றுமையால் வெவ்வேறு சொல் வகையாகும். தமிழிலும் இஃதுண்டு.
கா : பொன் (அழகிது)— பெயர்ச்சொல். (அது)பொன் —வினைச்சொல், பொன் (வளையல்) — பெயரெச்சம், பொன் (விளைந்த களத்தூர்)— வினையெச்சம்.
பிறமொழிகளில் உள்ள ஒருமை இருமை பன்மை என்னும் எண்பாகுபாட்டிற்கு, அவன் அவர் அவர்கள், அல்லது ஒரு சில பல என்னும் வழக்குகள் மூலமாயிருக்கலாம்.
(9) தமிழில் ஒலிக்குறிப்பாயுங் குறிப்பொலியாயுமுள்ளவை பிறமொழிகளில் சொல்லாய் வழங்கல்.
கா : தரதர— tear, தகதக—தஹ்(வ.), உசு—hush, சளப்பு —saliva, கெக்கக் கெக்க—L. cacbinne, V; E. cachinna— tion.
(10) அயன் மொழிச்சொற்கள் பலவற்றிற்கு வேர் தமிழிலிருத்தல்.
முக்குல மொழிகளிலுமுள்ள சுட்டு வினாச்சொற்களின் அடிகள் தமிழிலிருப்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.
(11) எழுகிழமைப் பெயர்களும் பன்னீரோரைப் பெயர்களும், ஆரிய மொழிகளில் தமிழ்ச்சொற்களின் மொழி பெயர்ப்பாயிருத்தல்.
பண்டைத்தமிழர் வானூல் வல்லோராயிருந்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவர் நாளின் (நாண்மீனின்) பெயரால் ஒரு கிழமையளவையும், எழு கோள்களின் பெயர்களால் ஒரு வார அளவையும், மதியின் பெயரால் ஒரு மாத ‘வளவையும், சூரியன் பெயரால் ஓர் ஆண்டளவையும் குறித்திருத்தலே, அவரது வானூலறிவிற்குச் சிறந்த சான்றாம். இவ்வளவுகள் முதன் முதற் குமரி நாட்டிலேயே தோன்றியவை.
ஆங்கிலத்தில் உள்ள வார நாட் பெயர்களில், Sunday, Monday, Tuesday, Saturday என்னும் நான்கும் தமிழ்ப் பெயர்களின் மொழிபெயர்ப்பாயிருக்கின்றன.
Tues என்பது Zeus என்பதின் மறுவடிவமாகக் கூறப்படுகிறது. இவை முறையே செவ்வாய் சேயோன் என்னும் பெயர்களைச் சொல்லாலும் பொருளாலும் ஒத்திருக்கின்றன, Zeus கிரேக்கப் பெருந்தெய்வம். கிரேக்கர் தமிழ் நாட்டில் மிகப்பழங்காலத்திலேயே குடியிருந்தனர். அவரை யவனர் என்று தமிழ் நூல்கள் கூறும். யவனம் என்பது கிரேக்க நாட்டின் பெயர்களுள் ஒன்று. பாண்டியனுக்கும் கிரேக்க மன்னருக்கும் கயல்மீன் சின்னமாயிருந்ததும், தமிழருக்கும் கிரேக்கருக்கும் பல பழக்கவழக்கங்கள் பொதுவாயிருந்ததும் இங்குக் கவனிக்கத்தக்கன.
இலத்தீனில் வழங்கிய பன்னீர் ஓரைப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களின் மொழிபெயர்ப்பாகவேயிருக்கின்றன?
- Aries (ram) ij: Taurus (bull}, iii: Gemmini (twins), iv. Cancer (crab), v. Leo (lion), vi, Vergo (virgin), vii. Libra (balance), viii. Scorpio (scorpion), ix: Sagittarius (archer) or bow), x, Capricorn (the goat-horned = shark), xi. Aquarius (water-bearer = pitcher), xii. Pisces (fish).
(12) தமிழில் முதல் வேற்றுமைக் குருபின்மை.
(13) தமிழ் வேற்றுமை யுருபுகளெல்லாம் பின்னொட்டுச்
சொற்களாயிருத்தல்.
(14) சொற்றொடரில் தமிழ்ச்சொன்முறை இயல்பாயிருத்தல்.
பன்னிரண்டு என்னும் சொன்முறை பத்தோடு இரண்டு சேர்ந்தது என்பதைக் குறிப்பதாகும். வடமொழியில் த்வாதசம் என்னும் முறை இயற்கைக்கு மாறானதாகும்.
(15) தமிழ் உலக முதன்மொழி ஆய்வுக்கு நிற்றல்.
தமிழொடு பிறமொழிகள் ஒவ்வாமைக்குக் காரணங்கள்
(1) தமிழின் பல்வேறு நிலைகளில் மக்கள் பிரிந்து போனமை.
தமிழ் குறிப்பொலி நிலையிலிருந்தபோதும், அசை நிலையிலிருந்தபோதும், புணர்நிலையிலிருந்தபோதும், பகுசொன்னிலையிலிருந்தபோதும், தொகுநிலையிலிருந்தபோதுமாகப் பற்பல சமயங்களில், குமரிநாட்டினின்றும் மக்கள் கிழக்கும் மேற்கும் வடக்குமாகப் பிரித்துபோ யிருக்கின்றனர்.
(2) குறிப்பொலி நிலையிலும் அசைநிலையிலும் பிரிந்த மாந்தர் அவற்றை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு சொற்களை அமைத்துக்கொண்டமை.
(3) பிரிந்துபோன மக்கள் மூலச்சொற்களை மறந்துவிட்டுப் புதுச்சொற்களை ஆக்கிக்கொண்டமை.
(4) தட்பவெப்ப நிலை உணவு முதலியவற்றால் உறுப்புத் திரிந்து, அதனால் உச்சரிப்புத் திரிந்தமை.
கா : தோகை —Pers: tawns, Gr: taos, L. pavo, A: S: pawe, E; pea–peacock. சே—சேவு—(சேக்கு )—A. S. coc, E. cock; ஓ. நோ: நா—நாவு— நாக்கு.
(5) பெரும்பாற் சொற்கள் போலி மரூஉ சிதைவு முதலிய முறைகளில் திரிந்தமை;
(6) மூலமொழியி லில்லாதவொலிகள் தோன்றினமை.
(7) மூலமொழி யிலக்கணத்தினின்றும் வேறுபட்ட இலக்கணம் எழுதப்பெற்றமை.
(8) பெரியோரை மதித்தல் காரணமாகச் சொற்களை மாற்றல்.
பலநீசியத் (Polynesian) தீவுகளில் தெபி (Tepi) என்றொரு வழக்கமுள்ளது. அதன்படி, அரசன் பெயராவது அதன் பாகமாவது வருகின்ற சொற்களையெல்லாம் மாற்றிவிடுகின்றனர். இவ்வழக்கம் தென்னாப்பிரிக்காவிலும் உள்ளதாம்.
வட மொழி உலக முதன்மொழியாக முடியாமை
மொழிகளின் இயல்பையறியாத பலர், வடமொழி உலக முதன் மொழியாயிருக்கலாமென்று கருதுகின்றனர்.
உலகில் முதலாவது தோன்றிய திருந்திய மொழி தமிழே, குமரிநாட்டில் தமிழ் குறிப்பொலி நிலையிலிருந்தபோது பிரிந்த மக்கள், ஆப்பிரிக்கா, தென்கண்டம், அமெரிக்கா முதலிய இடங்கட்கும், அசை நிலையிற் பிரிந்த மக்கள் கடாரம் சீன வட ஆசியா ஐரோப்பா முதலிய இடங்கட்கும் சென்றதாகத் தெரிகின்றது. அசைநிலையிற் பிரிந்த மக்களின் மொழிகளே, துரேனியம் அல்லது சித்தியம் என்று கூறப்படும் குடும்பத்தவை.
பால்டிச் சுடற்பாங்கரில், துரேனியத்தின் திரிபாகவே ஆரியம் தோன்றியிருக்கின்றது. பால்டிக்கின் வடபாகங்களில் பின்னியம் (Finnish) என்னும் துரேனிய மொழி வழங்குவதும், சுவீடியம் (Swedish) டேனியம் (Danish) முதலிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் இருப்பதும், ஜெர்மானியத்திலுள்ள சில சொற்கள் ஆரிய இலக்கிய மொழிச்சொற்கள் சிலவற்றிற்கு மூலமாயும் தமிழுக்கு நெருக்கமாயுமிருப்பதும், ஆட்டோ சிரேதர் கூறியிருப்பதும் இக்கொள்கைக்குச் சான்றுகளாம்.
ஆரியஞ்சென்ற தமிழ்ச்சொற்கள் பின் வருமாறு மூவகைய.
(1) ஆரியரின் முன்னோர் குமரிநாட்டினின்று பிரிந்து போனபோதே உடன் சென்றவை.
கா: | தமிழ் | வடஇந்தியம் | மேலையாரியம் | கீழையாரியம் |
நான் | மைன் | me | — | |
நாம் | ஹம் | wir, we | vayam | |
நூன் | தூ | du, tu | tvam | |
நூம் | தும் | ye, you | yuyam | |
இருத்தி | — | eart. es | asi |
மாசய வாலிலாக இந்தியாவிற்கு வந்த (2) ஆரியர் இந்தியாவிற்கு வருமுன் இடைக்காலத்திற் சென்றவை, அல்லது நேரே மேலையாரியஞ் சென்றவை.
கா: | தமிழ் | மேலையாரியம் | கீழையாரியம் |
ஆன்மா | animos | atma | |
நாவாய் | navis | nau | |
வேட்டி | vestis | vasthra. | |
இஞ்சிவேர் | zingiber, zingiberi | sringa-vera. | |
இரும்(பு) | iren, eisen | ayas. |
(3) ஆரியர் இந்தியா விற்கு வந்தபின் அல்லது கீழை யாரிய வாயிலாகச் சென்றவை.
கா: | தமிழ் | மேலையாரியம் | கீழையாரியம் |
கப்பி | kapi | ape. | |
குருமம் | gharma | thermos, formus, | |
warmg | |||
அகம்(மனம்) | aham | ego, Ich, Ic, I | |
தா (நில்) | Sta | sta, esta. | |
படி—பதி—வதி | vas | wes, wis, was |
குறிப்பு:—(1) அரக்கு, அரக்கம், அரத்தம், அலச்தம், அலத்தகம், இரத்தி, இலந்தை முதலிய தென் சொற்களை நோக்கின், அர் அல்லது இர் என்னும் ஒரு வேர்ச்சொல் சிவப்புப் பொருளை யுணர்த்துவது தெளிவாகும். அருக்கன், அருணம், அருணன் முதவிய (வட) சொற்களும் இவ்வேரினின்றே பிறந்தனவாகும். இங்ஙனம் பல வட தென் சொற்கள் ஒரே மூலத்தன.
(2) கப்பு = மரக்கிளை, கப்பில் வாழ்வது கப்பி. “கோடு வாழ் குரங்கு” (மரபியல், 13) என்றார் தொல்காப்பியரும்.
(3) குரு = வெப்பம், வெப்பத்தால் தோன்றும் கொப்புளம், ஒளி, ஒளிவடிவான ஆசிரியன், குரு = சிவப்பு: குருதி, குருதிக் காந்தள், குருதிவாரம் என்னும் சொற்களை நோக்குக. “குருவுங் கெழுவும் நிறனா கும்மே“ (உரி: 5) என்றார் தொல்காப்பியர், குருத்தல் தோன்றுதல், குருப்பது குருத்து. குரு—உரு: குருமம்— உருமம்.
(4) அகம் = அவ்விடம், அவ்வுலகம், வீடு, உள் உள்ளம், (நான்), ஓ, நோ, இகம் = இவ்விடம், இவ்வுலகம் இகபரம் என்னும் வழக்கை நோக்குக; வீடு = துறக்கம், இல்லம் இல் = வீடு, உள். உள் = உட்புறம், மனம். உள்+அம் = உள்ளம்—உளம். உள்ளம் என்று பொருள்படும் அகம் என்னும் தமிழ்ச்சொல்லையே, நான் என்னும் பொருளில் வழங்கினர் வடமொழியாரியர், ஆன்மா என்னுஞ் சொல்லை, ஆத்மனேபத, ஆத்மநிவேதனம் முதலிய தொடர்களில் தன்னைக் குறிக்க வழங்குதல் காண்க. அகம் X புறம்.
மேலையாரிய மொழிகளில் முதலாவது தன்மை யொருமைப் பெயராக வழங்கியது me என்பது. min, me, mec முதலிய வேற்றுமைபெற்ற பெயர்கள் me என்பதினின்று தோன்றுமே யொழிய அகம் என்பதினின்று தோன்றா.[2] go என்னும் வினையின் இறந்தகால வடிவம் வழக்கற்று, அதற்குப் பதிலாக wend என்பதின் இறந்தகால வடிவமாகிய wend என்பது வழங்குவது போன்றது அகம் என்பது.
(5) sta என்னும் சொல் esta என்று மேலையாரியத்தில் வழங்குவது, பண்டைக்காலத்தில் மேனாட்டாரும் இஸ்கூல் (School) என்று சொல்லும் தமிழர் நிலையிலிருந்தனர் என்பதைக் காட்டும். தாவு = இடம், தாக்கு = நிலை. தாக்குப் பிடித்தல் என்னும் வழக்கை நோக்குக.
புரி, புரம் என்னும் நகர்ப்பெயர்கள் ஆரிய மொழிகளிலெல்லாம் வழங்குவதும், தொல்லாரியர்க்கும் தமிழர்க்கு மிருத்த தொடர்பைக் காட்டும்.
புரிதல் = வளைதல், L. spira, Gr: speira, E, spire. புரி = வளைந்த அல்லது திருகிய இழை, ஓ. நோ. thread: from thrawan (திரி), to twist. புரிதல் = மனதில் பதிதல், விளங்குதல், L. prehendo= புரிகொள். E. prehend—appre—hend, comprehend etc. புரி—புரி (வ.) — வளைந்த மதில், கோட்டை மதிலாற் சூழப்பட்ட நகர். ஒ. நோ, கோடு+ஐ= கோட்டை , கோடு+அம் கோட்டம்—koshta (sans)= மதில் – சூழ்ந்த கோயில்.
வடமொழியிற் கோஷ்ட என்பதை, கோ (பசு) என்பதினின்று பிறந்ததாகக் கூறுவது பொருந்தாது. அது தொழுவம் என்று பொருள்படினும் கோட்டம் அல்லது கொட்டம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபே. கொடு+ அம்= கொட்டம், ‘கொடு+இல் = கொட்டில்.
புரி+சை=புரிசை: புரி+அம் =புரம்-E, borough, burgh, புரி-bury: கோபுரம் = அரசன்மனை, அரசநகர். முதலாவது அரசன் வெள்ளத்தினின்றும் பகைவரினின்றும் தற்காக்க எழு நிலை மாடத்தில் அல்லது உயர்ந்த கட்டடத்தில் வதித்தான். பின்பு அது மிகவுயரமாய் வடிவு மாறிக் கோவிலுறுப்பாயிற்று. ஓ. நோ; கோயில் = அரசன் மனை, தெய்வ இருப்பிடம்; புரம்—புர: புரத்தல் காத்தல் புரவலன் புரப்பதில் வல்லவன், புரந்தருபவன் புரந்தரன். ஒ. நோ: A. s. beorgan, Ger, berger, to protect, from burg.
மேலையாசியப் பாங்கரில், துரேனியமும் ஆரியமும் சேர்ந்து சேமியம் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது.
பால்டிக் பாங்கரினின்று, முதலாரியர் காக்கசஸ் மலையின் தென்பாகத்தில் வந்து குடியேறி யிருக்கின்றனர். பின்பு அங்கிருந்து மேற்கொரு பிரிவாரும் கிழக்கொரு பிரிவாரும் பிரிந்து போயிருக்கின்றனர். கிழக்கே வந்தவரே இந்திய ஆரியர். இந்தியாவிற்கு வந்த ஆரியருள் ஒரு பிரிவார் திரும்பவும் மேலையாசியாவிற்குச் சென்றிருக்கின்றனர்.[3] அவரே பெர்சிய அல்லது ஸெந்து (Zend) ஆரியர்,
இந்திய ஆரியரது மொழி இந்தியாவிற்கு வருமுன் இப்போதுள்ள நிலையிலில்லை. இலத்தீன், கிரேக்கம், ஜெர்மானியம் என்ற மூன்று மொழிகட்கும் நெருங்கிய நிலையிலேயேயிருந்தது; அப்போது ஆரியம் என்னும் பொதும் பெயரேயன்றி ஒரு விதப்புப் பெயரும் அதற்கில்லை,
இந்திய ஆரியர் இந்தியாவிற்கு வந்த பின்னரே. அவரது மொழிக்குச் சம்ஸ்கிருதம் என்னும் ஆரியப்பெயரும், வட மொழி என்னும் தென்மொழிப்பெயரும் தோன்றின.
வடமொழிக்கு வேதகால வடிவும் பிற்கால வடிவுமென இருநிலைகளுண்டு. வேத காலத்திலேயே, வட இந்தியத் திராவிட மொழிச் சொற்கள் பல வடமொழியிற் கலந்து விட்டன. வட இந்திய மொழிகளெல்லாம், உண்மையில் திராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் பிறந்த இரு பிறப்பி மொழிகளேயன்றி, தனி ஆரியக்கிளைகளல்ல.
மேனாட்டாரிய மொழிகட்கில்லாது, சமஸ்கிருதத்திற்கும் திராவிடத்திற்கும் பொதுவாயுள்ளவையெல்லாம், தமிழினின்றும் வடமொழி பெற்றவையே.
கா: உயிர்மெய்ப்புணர்ச்சி, ட ண முதலிய சில ஒலிகள், எழுத்து மூறை, எட்டு என்னும் வேற்றுமைத்தொகையும் அவற்றின் முறையும், சில கலை நூல்கள் முதலியன.
வடமொழியில் வழங்கும் நூற்றுக்கணக்கான சொற்கள் தென்சொற்களென்பது, மூன்றாம் மடலத்திற் காட்டப்படும்
வடநூல்களிலுள்ள பொருள்களிற் பெரும்பாலன, ஆரியர் வருமுன்னமே வட இந்தியாவில் அல்லது இந்தியாவில் வழங்கியவையென்றும், அவற்றைக் குறிக்கும் சொற்களே ஆரிய மயமென்றும் அறிதல் வேண்டும்.
உலக மொழிகள் எல்லாவற்றிலும், வளர்ச்சியிலும் திரிபிலும் முதிர்ந்தது வடமொழியாகும். இதனாலேயே ‘நன்றாகச் செய்யப்பட்டது’ என்னும் பொருள் கொண்ட ’சமஸ்கிருத்’ என்னும் பெயரை வடமொழி ஆரியரே அம்மொழிக்கிட்டுக் கொண்டனர். வடமொழியை ஆரியத்திற்குக் கூட மூலமொழியாகக் கொள்ளவில்லை மேனாட்டார்.[4]
வடமொழி முதிர்ச்சியைக்காட்ட இங்கு ஒரு சான்று கூறுகின்றேன்.
மெய்யெழுத்துக்களின் தொகை :— தென்கண்ட (ஆத்திரேலிய) மொழிகளில் 8 ; பலநீசிய (Polynesian) மொழிகளில் 10; பின்னியத்தில் 11; மங்கோலியத்தில் 18; இலத்தீனினும் கிரேக்கிலும் 17: ஆங்கிலத்தில் 20; எபிரேயத்தில் 23; காப்பிரி (Kaffir) யில் 26; அரபியில் 28; பெர்சியத்தில் 31; துருக்கியத்தில் 32; வடமொழியில் 39: அரபி, பெர்சியம், சமஸ்கிருதம் என்னும் மூன்றன் கலவையான இந்துஸ்தானியில் 48, இத் தொகைகள் மாக்ஸ் முல்லர் கூறியன. இவற்றுள் ஒன்றிரண்டு கூடினும் குறையினும் இவற்றைக் கூறியதின் பயன் மாறாதிருத்தல் காண்க.
இங்குக் கூறியவற்றால், வடமொழி உலக முதன்மொழியாவதினும், ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது எளிதாயிருக்குமென்க.
திராவிடம் சிறிய குடும்பமேயாயினும், பல காரணம் பற்றித் தனித்துக் கூறப்படற்கேற்றதாகும்.
- ↑ பழைய ஏற்பாடு முதற்புத்தகம், 11:1.
- ↑ Historical outlines of English Accidence, P. 177.
- ↑ S. L. Vol. 1, pp. 287, 283
- ↑ Principles of Comparative Philology, p. vii.
முடிவு
தமிழே உலக முதல் இலக்கியமொழி. இதன்பெருமை சென்ற 2000 ஆண்டுகளாக மறைபட்டுக் கிடந்து, இன்று மொழி நூற்கலையால் வெள்ளிடைமலையாய் விளங்குகின்றது. பண்டைத் தமிழர்க்கும், இற்றைத் தமிழர்க்கும் எல்லாத் துறைகளிலும் ஆனைக்கும் பூனைக்கும் உள்ள வேறுபாடாரும்.
தமிழை முன்னோர் செந்தமிழாகவும் தனித்தமிழாகவுமே வளர்த்தனர்; அங்ஙனமே இனிமேலும் வளர்க்க வேண்டும். வளர்ப்பு முறை தமிழுக்கும் பிறமொழிகட்கும் வேறுபட்டதாகும். பிற மொழிகளில் கொடுவழக்குகளெல்லாம் செவ்வழக்காகும் : தமிழிலோ கொடுவழக்குகள் கொள்ளப்படாது. என்றும் செந்தமிழே கொள்ளப்படும்.
கா ; ஆங்கிலத்தில் r, l சில சொற்களில் ஒலிக்கப்படாவிட்டாலும் குற்றமில்லை ; தமிழிலோ அவர்கள் என்பதை அவக என்றொலித்தால் குற்றமாம். இந்தியில் சொல்லிற்று னகர மெய் அரைமெய்யாயொலிப்பது குற்றமன்று : தமிழில் அங்கனம் ஒலிப்பது குற்றம். தெலுங்கில் பப்பு என்பது குற்றமன்று: தமிழிலோ குற்றம். இங்கனமே பிறவும் பற்பல வழக்குகள் தமிழ்நாட்டில் வழங்கினாலும், செந்தமிழையே அளவையாகக் கொண்டதினாலேயே தமிழ் இது நாள் வரைக்கும் பெரும்பாலும் திரியாது வந்திருக்கின்றது:
தமிழ் கடன் சொற்களால் தளர்ந்ததன்றி வளர்ந்ததன்று. கடன்கோடலால் ஓர் ஏழைக்கு நன்மை ; ஆனால் செல்வனுக்கோ இழிவு. அதுபோல் கடன் சொற்களால் பிறமொழிக்கு வளர்ச்சி; தமிழுக்கோ தளர்ச்சி, முதலாவது, பிணிக்கு நோய் என்று தமிழ்ச்சொல்மட்டும் தமிழ் நாட்டில் வழங்கியது. பின்பு ஆரியம் வந்த பின் வியாதி என்னும் சொல் வழங்கிற்று. அதன் பின் ஆங்கிலம் வந்தபின் சீக்கு என்னும் சொல் வழங்குகிறது: இதுவே தமிழுக்குப் பிறமொழியாலுண்டாகும் வளர்ச்சி; இனி இந்திவரின் பீமாரி என்னும் சொல்லும் வழங்கும் போலும்!
தென் மொழியை வடமொழியோடு கலவாமல் தனியே வளர்க்க வேண்டும்; “தமிழ்வெறி” என்று தமிழ்ப் பகைவர் கூறுவதற்கு இது ஆரிய நாடன்று. இந்தியா முழுதும் ஒருகால் பரவியிருந்த தமிழ் இன்று தென்கோடியில் ஒடுங்கிக் கிடக்கின்றது: தன்னாடான இங்கும் தமிழுக்கிடமில்லை யென்றால் வேறெங்கது செல்லும்? தமிழ் நாடொழிந்த இந்தியா முழுதும் ஆரியத்திற் கிடமாயிருக்கும்போது, இத்தமிழ் நாட்டையாவது ஏன் தமிழுக்கு விடக்கூடாது? தமிழ் இதுபோது அடைந்துள்ள தாழ்நிலையும், இற்றைத் தமிழர் தாய்மொழியுணர்ச்சியில்லாதிருப்பதும், அவரது அடிமை நிலையைச் சிறப்பக் காட்டும். பார்ப்பனரும் அபார்ப்பனரும் இனிமேல் ஒற்றுமையாயிருந்து தமிழைச் சிறப்பாய் வளர்க்கவேண்டும்.
தமிழ் நாட்டுக் கிழார்களும் வேளிரும் மடங்களும், திருப்பனந்தாள் மடத்தைப் பின்பற்றித் தமிழை வளர்த்தால் அது சிறந்தோங்கும்.
புறவுரை
இப்பொத்தகத்திற் கூற விரும்பிய சில செய்திகள் விரிவஞ்சி விடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பிற மடலங்களுள்ளும் பகுதிகளுள்ளும் கண்டுகொள்க.
இங்குக் கூறிய சில சொன் மூலங்கள் மாறலாம். ஆனால் மொழிகளைப் பற்றிய பெரு முடிபுகள் மாறா.
செய்யுது என்னும் தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்றில் உது என்பது ஈறென்றும், முன்மைச் சுட்டாகிய அகாரத்தினின்று நூன் நூம் என்பவை தோன்றின வென்றுங் கொள்ளலாம். இவை புது மாற்றங்களாம்.
“ஓங்க லிடைவந் துயர் ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத் திருளகற்று—மாங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்”
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ
தெங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப்
பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல்
நன்றோ சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை
செய்தல் வேண்டும்.“—பாரதியார்
பிற்சேர்பு
முன்னுரை : பக்கம் 21: கோத்ர (வமிசம்) என்னும் சொல் மாட்டுக்கொட்டில் என்றும், துஹித்ரி (மகள்) என்னும் சொல் பால் கறப்பவள் என்றும், பொருள்படுவது. ஆரியர் இந்தியாவிற்கு வந்த போது முல்லை நாகரிகத்தினரே என்பதைக் காட்டும்.
நூல் : பக்கம் க0. மொழி நூலுக்கு ஆங்கிலத்தில் Linguistics, Linguistic Science என்றும் பெயருண்டு.
பக்கம் ௩௪; மொழி நூல் நெறிமுறைகள் : உ௮. மொழி நூற்கு மாந்தன் வாயினின்று தோன்றும் ஒவ்வோர் ஒலியும் பயன்படும். ௨௯. ஒரு மொழியின் சொல்வளம் அதைப் பேசுவோரின் தொகைப் பெருமையையும் நாகரிகத்தையும் பொறுத்தது.
பக்கம் ௧௫௨: வாணி என்னும் சொல் வாய்நீர் என்பதினின்று பிறந்ததாகவும் கொள்ள இடமுண்டு, வாய்நீரை வாணீர் என்பது கொச்சை வழக்கு. ஒ. நோ. குறுதொய்—குறுணை. தண்ணீர் தண்ணி எனப்படுவதுபோல, வாணீர் வாணி எனப்படும். வாய் நீருக்கு மறு பெயர் சொள்ளு என்பது. சொளுசொளு என்று வடிவது சொள்ளு. பேசத் தொடங்கும் பருவத்தில் குழந்தைகட்குச் சொள்ளு வடியும், சொள்ளு மிகுதியாய் வடிந்தால் பேச்சு மிகுதியாகும் என்றொரு கொள்கையுளது. ‘சொள்ளுப் பெருத்தால் சொல்லுப் பெருக்கும்’ என்பது பழமொழி: சொள்ளு—சொல்லுசொல். வாய்நீர்—வாணீர் — வாணி = நீர், சொல், வாணி— பாணி.
கொச்சை வழக்கிலிருந்தும் சில சொற்கள் கொள்ளப்படும். கா; கொண்டுவா —(கொண்டா)—கொணா—கொணர், பழம்— பயம்.
வாணி என்பதற்கு வாச் என்று வடமொழி மூலங்காட்டினும், அதற்கும் வாய் என்னும் தமிழ்ச்சொல்லே மூலமாதல் காண்க.
பக்கம் ௧௮௬ வரி 8 பரசு (பீராய்) மூஞ்செலி (மூஞ்சூறு.
பக்கம் ௨௧௩, சிவம் என்னும் சொல் ருக்வேதத்திற் சேர்க்கப்பட்டது பிற்காலமாகும். அச்சொற்கு மங்கலம் அல்லது நன்மை என்று பொருள் கூறினும், அதுவும் திருமகள் நிறம் சிவப்பு என்னும் கொள்கை பற்றியதே.
பக்கம் ௨௧௯. ஓம் என்னுஞ் சொல் எல்லாவற்றையும் படைக்கும் மூல ஆற்றலைக் குறிப்பதென்ற கொள்ளினும், பாதுகாப்புப் பொருளதென்று கொள்ளினும், தமிழ்ச் சொல்லே யென்பதற்கு எள்ளளவும் தடையில்லை.
ஓ என்பது உயரச் சுட்டு. அது உயரமாய் வளர்தலையும் வளர்த்தலையுங் குறிக்கும். வளர்த்தல் காத்தல். ஓ. நோ: ஏ—எ —எடு, எடுத்தல் = வளர்த்தல். Rear, v. t. (orig.)to raise: to bring up to maturity. [A. S. roeran, to raisn.]
ஓ—ஓம்—ஓம்பு. ஓ. நோ. ஏ—ஏம்—ஏம்பு : ஆ — அ—அம் — அம்பு—அம்பர். கும்—கும்பு, திரும்—திரும்பு.
ஓம் = காப்பு. ஓம்+படு = ஓம்படு, ஓம்படு + ஐ =ஓம் படை= பாதுகாப்பு, பாதுகாப்புச் செய்தல், ஓம்படுத்துரைத்தலென்பது ஒரு கோவைத்துறையாயுமுள்ளது. ஓம்படுதல் தன் வினை. ஓம்படுத்தல் பிறவினை, வழிப்படுத்துரைத்தல் என்னும் துறைப் பெயரை நோக்குக.
பக்கம் ௨௪௩; உதடுகள் உகரத்தை ஒலிக்கும்போது மூன்னும் இகரத்தை ஒலிக்கும்போது பின்னும் செல்வதால், உகர இகரங்கள் முறையே முன் பின் என்னும் பொருள்களையும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட பிற கருத்துக்களையும் தரும் சொற்களைப் பிறப்பிக்கும்.
கா: ஊங்கு = முன்பு. ௨௪௧ ஆம் பக்கத்தில் உயரக் கருத்தை அடிப்படையாக் கொண்டு எதிர்காலத்தையுயர்த்துவதாகக் கூறிய உகரம், முன்மைக் கருத்தை அடிப்படியாகக் கொண்டு அக்காலத்தை உணர்த்துவதாகவுங் கொள்ளலாம். ஊங்கு —ஊக்கு. உகை—L. Gr. ago, to drive, Act, agent, agency, agenda முதலிய சொற்கள் ago என்னும் மூலத்தினின்றும் பிறந்தவை. உத்து—முற்செலுத்து.
துர—E. drive, A; S. drifan, Ger. treiben, to push.
முன்—முந்து மூ—மூக்கு — முகம்—முகப்பு. முகம்—நுகம். மூக்கு—முகடு. மூக்கு—முகை —முகிழ். மூக்கு—முக்கு.
முகம் என்பது முதலாவது முன்னால் நீண்டிருக்கின்ற மூக்கைக் குறித்து, பின்பு தலையின் முன்புறமான முகத்தைக் குறித்தது; வட மொழியில் அதை வாய்ப்பெயராகக் கொண்டது பிற்காலம்.
மூக்கு—E. mucus. மூக்கு—E. beak, Fr, bec, Celt. beic. deis. மூக்கு—E—Celt. peak. முக்கு—E. nook, Scot, neuk. Gael.—Ir, njuc.
pike (E. and Celt.); pic (Gael) ; pig (W.)— a point; spica (L.) : spike {E.); spoke (E.) முதலிய சொற்கள் மூக்கு, என்பதன் வேறுபாடுகளே.
முன் — முனி—நுனி— துணி— நுண். முனி—முனை— நுனை.
நுண்—L. min, இதனின்று minor, minority, minish, minim, minimum, minister, minstrel, minute, minus முதலிய பல சொற்கள் பிறக்கும்.
முனையைக் கொனை என்பது வடார்க்காட்டு வழக்கு—E. cone, a solid pointed figure. cone, L. couus, Gr. konos.
bone (E;), han (h. S.). bein (Ice.) cana (Sans.) முதலிய சொற்கள் கொனை என்பதினின்றும் திரிந்தவையே.
முட்டு —E. butt, buttress: Meet, moot என்னுஞ் சொற்கள் முட்டு என்பதினின்றும் திரிந்தவையே. A. S. metan, to meet ; mot, an assembly, முட்டு —முட்டி — கைகால் பொருத்துக்கள்.
ஈங்கு—இங்கு. ஈ—இ. இறங்கு. இழி, இனி, ஈனம். இவை இறங்கலும் இழிவும் குறிக்கும். மேட்டடியில் நிற்கும்போது அண்மை இறக்கமாகும்.
ஈர், இழு—இசு—இசி, இழு இழுகு—இழுது—எழுது.
இவை பின்னுக்கு அல்லது அண்மைக்கு இழித்தலையும், பின்னுக்கு இழுத்து வரை தலையுங் குறிக்கும். இட, இணுங்கு. என்பவை இழுத்தொடித்தலைக் குறிக்கும். இடறு என்பது பின் வாங்கி விழுதலையும், இடை என்பது பின்வாங்கி ஓடுதலையும் குறிக்கும்.
பின் — பிந்து. பின்—பின்று —E. hind, adj; behind, ads: hinder, y: t. binderance, a ; A. S. hinder, adj; hindriat, Ger. bindero, v. t.
பின்—பிற— பிறகு— பிறக்கு—E. back, A. S. boec, Sw. bak, Dan, bag.
திரை = எழினி, அலை, தோற்சுருக்கு, தயிர்த்தோயல். இவரத்தல் = இழுத்தல். வேட்டியை மேலே இழுத்துக் கட்டு தலைத் திரைத்துக் கட்டுதல் என்பர் இன்றும் தென்னாட்டார், திரை (எழினி) இழுப்பது. அலை தோற்சுருக்கு முதலியவை ஆடையை இழுத்திழுத்து வைத்தாற்போலிருத்தல் காண்க.
திரை என்னும் சொல்லே ஆங்கிலத்தில் draw என்று திரியும்; Drawer என்பது இழுக்கின்ற மரத்தட்டையும், இழுத்துக் கட்டினாற்போன்ற குறுகிய காற்சட்டையையும் குறித்தல் காண்க. திரை என்பதினின்று பல மேலையாரியச் சொற்கள் பிறக்கும்.
- traho. Dut, trekken, E. draw. A. S. dragas. Ger. trages, Ice. drug, draft, drafts; drag draggle, dragnet; drain, drainage, draine; draught, draught house; draughts, draughtboard, draughtsman;drawback, drawsbridge, drawee, drawing, Hawing-room, drawl, draw-welf; withdraw, dray : dredge, dredger dregs, dreggy; trace, tracery: track, trackroad; inet, tractatihity, tractile, tractarias, traction. tractor, tractive, abstract, attract, extract; trail; train, trainer, training, trainband, train-bearer; trait; trawl; treachery; treat, treatise treatment, treaty’; tret; trick; trigger; troll ; த்ராவகி (வ.) முதலிய சொற்களெல்லாம் திரை என்னும் சொல்லை மூலமாக அல்லது நிலைமொழியாகக் கொண்டவையே. திரைத்தல் = இழுத்தல், இறக்குதல்.
பக்கம் ௨௭௬. இகம், இதி என்பவை இகரச்சுட்டடிம் பெயரான தொழிற்பெயரீறுகள்.
பக்கம் ௨௮௩. 3-ஆம் வேற்றுமைக்குரிய கருவிப்பொருளும் 7-ஆம் வேற்றுமைக்குரிய இடப்பொருளும் உணர்த்தக்கூடிய இல் என்னும் உருபு. அப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு நீங்கற் (motion from) கருத்தைச் சிறப்பாகப் பெற்று 5-ஆம் வேற்றுமையாயிற்று:
பக்கம் ௨௮௯, ஒப்பியல் தரங்கள் (Degrees of comparison) ஒய்டித்தரம் (postive), உறழ்தரம் (comparative), உயர் தரம் [superlative) என மூவகைப்படும். அவற்றுள் ஒப்புத்தரம் 2-ம் வேற்றுமையுருபுடன் விட (நீக்க), பார்க்க (காண); பார்க்கிலும், (பார்த்தாலும்), காட்டின் (காட்டினால்), காட்டிலும் (காட்டினாலும்) முதலிய சொற்கள் சேர்வதாலுணர்த்தப்படும், பிற வெளிப்படை.
பக்கம் ௨௯௬. நிகழ்கால வினையெச்சம் முதலாவது தொழிற்பெயராயிருந்தது. செய்யல்-செய்ய. ஆங்கிலத்திலும் இங்ஙனமே.[1]
- ↑ Historical Outlines of English Accidence, p. 258.
பின்னிணைப்பு I
மா என்னும் வேர்ச்சொல்
மதி (நிலா) என்னும் சொல் மத என்னும் சொல்லடியாய்ப் பிறந்தது. மதமத என்பது உணர்ச்சியின்மையைக் குறிக்கும் ஒரு குறிப்புச்சொல், மத—மதவு= மயக்கம், பேதைமை,
“மதவே மடனும் வலியு மாகும்” என்றார் தொல்காப்பியர்
மத — மதம் — மதர் = மயக்கம். மதம் — மத்தம் = மயக்கம், பைத்தியம், நிலவினால் — மயக்கம் உண்டாகும் என்றொரு பண்டைக் கருத்துப்பற்றி, நிலா மதியெனப்பட்டது. மதம்—மதன் = வலி.
ஒ. நோ. சந்திரரோகம் = பைத்தியம். Lunacy (insanity) from luna, the moon; மயக்கம் தருவதினாலேயே, தேனுங் கள்ளும் மதம் என்றும் மது என்றும் கூறப்பட்டன.
மதி காலத்தை யளக்குங் கருவியாதலின், அதன் பெயர் அளத்தற்பொருள் பெற்றது. L. metior Goth, mitan, Ger. messen, A. S. metan, E. mete, Sans. மிதி, மதி—(மது)—மத்துமட்டு.
மதி என்னுஞ் சொல்லே மா என்று மருவியிருக்கலாம்: ஒ. நோ. பகு —பா, மிகு — மி. எங்கனமாயினும், மா என்னும் வேர்ச்சொல் தமிழே என்பதற்குத் தடையில்லை.
மா என்பது ஒரு கீழ்வாயிலக்கம், ஒரு நில அளவு:
மா+அனம் = மானம் அளவு, வருமானம் = வரும்படி
மானம் என்னும் சொல் அளவு என்பதை அடிப்படையாகக் கொண்டு பல பொருள்களைப் பிறப்பிக்கும்;
மானம் = 1 படி (வடார்க்காட்டு வழக்கு)
= அளவு, ஒப்பு, கா : சயானம் (இரு.)
= அளவு, மதிப்பு. மானம் – ‘honour (L.)
= மதிப்புப்பற்றியனிக்கும் பரிசு, கா : சன்மானம் (இரு.)
= தன்மதிப்பு. உயிர் நீப்பர் மானம் வரின்
= பெருமை, [குறள், 969.)
= அகங்காரம். களிமடி மானி’ (நன். 39.) = அளவு, வரையறை, விலக்கு.
“மெய்ந்நிலை மயக்கம் மான மில்லை” (மொழி. 14)
என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் மானம் என்பதற்குக் குற்றமென்று பொருள் கூறியது குற்றமாகும், டாக்டர் S. P. சாஸ்திரியார் ஆனம் என்று பிரித்தது அதிலும் குற்றமாகும். “கடிநிலை யின்றே” (புள்ளி. 94), வரை நிலை யின்றே (புள்ளி. 104) என்று தொல்காப்பியர் பிறாண்டுக் கூறுவதை, *மானமில்லை என்பதனுடன் ஒப்பு நோக்குக.
= அளவு கருவி;
= அளவு, ஒரு தொழிற் பெயரீற: கா! சேர்மானம்
மானம் (மதிப்பு)X அவமானம். அவி+அம் = அவம் = அழிவு. மானம் என்பது. அளவு அளவை என்னும் பொருளில் வடமொழியில் மாணம் என்று திரியும். கா ! பரிமாணம், பிரமாணம். மானம் என்பதினின்று மானி மானு என்னும் வினைகள் தோன்றும்.
மானித்தல் = அளத்தல், வெப்பத்தை அளப்பது வெப்பமானி.
= மதித்தல், கா ! அபிமானி (இரு பிறப்பி);
மதித்தளிக்கும் நிலம் மானியம் —மானிபம்,
= அளவையாலறிதல், கா: அனுமானி.
உவமானம் (ஒத்த அளவு) உபமான(வ).
உவத்தல் – விரும்பல், ஒத்தல். ஒ. நோ. like = to be pleased with, to resemble, விழைய நாட என்பவை உவமவுருபுகள்.
உவமை—உவமம் —உவமன். உவமை—உபமா (வ.)
மானுதல் = ஓரளவாதல், ஒத்தல். மான (போல) உவமவுருபு. மானம் என்னும் சொல்லே மோன மூன் முதலிய பல வடிவுகளாகத் திரிந்து மேலையாரிய மொழிகளில் நிலாவைக் குறிக்கும்.
Moon. Lit, the ‘measurer of time’ found in all the Teurt. languages, also in 0. slav. menso, L. mensis, Gr. mene all from root ma, to measure என்றார் சேம்பராரும்
Moon-month. Moon day- Monday.
Moor என்பது மிகப் பழைமையான சொல்லென்பர் மாக்ஸ்முல்லர்.
மா + திரம் = மாத்திரம் = மாத்திரை = அளவு.
Gr.metron, Li mensura, Fr. mesure, E, measure Gr. metron, Fr.-L. metrum, E. metre, poetical measure, E, meter, a measurer:
Geometry. Fr.-L.-Gr- geometria-geometreo, to measure land-ge, the earth, metreo, to measure.
கூ-ge. கூவளையம் — குவலையம் = நிலவட்டம்.
Mother என்னும் முறைப் பெயரும் மா என்பதன் அடிப் பிறந்ததாகவே சொல்லப்படுகிறது.
Mother, M. E. moder-A. s. noder, cog with Dut; moder, Ice. modhir, Ger. mutler, Ir. and Gael, mathair, Russ. mate, L. mater, Gr, meter, Sans. mata, matri, all from the Aryan root ma, to measure என்றார் சேம்பரார்.
மேனாட்டார் தமிழைச் சரியாய்க் கல்லாமையால், பல தமிழ் வேர்ச்சொற்களை ஆரிய வேர்ச்சொற்களாகக் கூறுவர்.
mother என்னும் பெயர் மாதர் என்னும் சொல்லாகத் தெரிகின்றது. மா+து = மாது. மாது+ அர் = மாதர் =பெண், காதல், அம்மை அன்னை அத்தி அச்சி முதலிய பெயர்கள் உயர்திணையில் தாயையும் பெண்பாலையும் குறித்தல்போல, மாதர் என்னும் சொல்லும் குறித்திருக்கவேண்டும். இங்கு மாதர் என்பது வண்டர், சுரும்பர் என்பன போல அர் என்னும் விரியீறு பெற்ற ஒருமைப் பெயர்.
“மாதர் காதல்” என்றார் தொல்காப்பியர். எழுமாதர்= the seven divine mothers, Matron, Fr.—L, matrona, a married lady,—mater, mother?
Matter, Matrix, matriculate, matrimony முதலிய சொற்களும், matter, (mother) என்பதனடியாகப் பிறந்தவையென்றே சொல்லப்படுகின்றன.
மாத்திரை—மாத்திரி—மாதிரி, F. madulus, Fr. modele E. model. மாதிரி—மாதிரிகை. (மாத்ரகா, வ.)
பின்னிணைப்பு II
அர் என்னும் வேர்ச்சொல்
அர் என்பது ஓர் ஒலிக்குறிப்பு. அரித்தல்1 அர் என்னும் ஒலி தோன்ற எலி புழு முதலியவை ஒரு பொருளைத் தின்னல் அல்லது குறைத்தல், அர—அரா—அரவு—அரவம் = ஒலி, (இரையும்) பாம்பு. அரித்தல் நுண்ணிதாயொலித்தல், கா, அரிக்குரற்பேடை அரித்தல். அறுத்தல், கா: அரிவாள்மனை (அரி)—(அரம்) — அரங்கு: அரங்கல் அறுத்தல். அரங்கு = அறை, ஆற்றிடைக்குறை. அரங்கு—அரங்கம், அரங்கு—அரக்கு—அரக்கன் = அழிப்பவன், அரித்தல் 4 வெட்டுதல், கா : கோடரி (கோடு+அரி) = மரக்கிளையை வெட்டுங்கருவி, கோடரி—கோடாரி—கோடாலி. அரித்தல்” அராவுதல், அரி+ அம் = அரம்—அரவு—அராவு; அரித்தல்’ அராவுதல் போல உடம்பிலுண்டாகும் நமச்சல், அரிப்பெடுத்தல், புல்லரித்தல் என்னும் வழக்குகளை நோக்குக. அரித்தல் அரிப்பெடுக்கும்போது சொறிதல்போல, விரல்களால் ஒரு பொருளை வாரித்திரட்டல். அரிப்பது அரிசி. அரிசிபோற் சிறிய பல் அசிசிப்பல்: சிறிய நெல்லி அரிநெல்லி, அரி = நுண்மை , அழகு, அரித்தல்’ அழித்தல், அரி = பகைவன், சிங்கம், அரசன் தேவர்க்கரசனாகிய இந்திரன். கோளரி = கொல்லும் சிங்கம்: அரி= அழிப்பவன், அழிப்பது; கா முராரி, ஜ்வரஹரி (வ). அரி—ஹரி (வ). அரி—அம்= அரம்=அழிவு, துன்பம் | E-Ger; barm. அரம்=—அரத்தை அளி+ அன் = அரன் = அழிப்பவன் தேவன், சிவன். இனி அரம்= சிவப்பு, அரன் = சிவன் என்றுமாம். அழிப்புத் தெய்வங்களே முதன் முதல் வணங்கப்பட்டன. அச்சமே தெய்வ வழிபாட்டிற்கு முதற்காரணம், அணங்கு என்னும் சொல்லை நோக்குக. அரமகளிர் =தேவமகளிர். இதற்கு அரசமகளிர் என்று வித்துவான் வேங்கடராஜலு ரெட்டியார் அவர்கள் கூறியிருப்பது பொருந்தாது. “சூரர மகளிரொ டுற்ற சூளே” என்பது குறிஞ்சித் தெய்வப் பெண்களையே நோக்கியது (அரம்)—(அரம்பு)— அரம்பை தேவமகள் ரம்பா (வ.) அரன்— ஹரன் (வ.) அரி (பெண்பாற்பெயர்) = திருமால். அரி — ஹரி (வ.) அரோ (ஈற்றசை நிலை.) அரோ அரா—அரோவரா— அரோகரா. அரம்.
மரங்களுள் அரசுபோல் உயர்ந்தது அரசு (Ficus religi osa) அரச இலைபோல் குலைக்காய் வடிவுள்ள (cordate) இலைகளையுடைய தாய்ப் பூவோடு கூடியது பூவரசு.
பின்னிணைப்பு III.
ஆசியத்திலுள்ள தமிழ்ச்சொற்களிற் சில.
சொற்கள் :—
கவ—L. capio, Ger. baben, A. S. habban, Dan, have, E. have, to hold or possess.
கவர்—L. cupio, O. Fr. covet, to desire.
சேர்—L. sero, to join, சேர்மானம்—L. sarmonis, E2 Sermon, lit an essay.
உக—Goth. hauhs, Ger. hoch, ice. har, A. S. heah, E. high.
உலகு—L. vulgus, the people, E. vulgar, used by the common people.
உறு—L. verus, true ஓ. நோ. உறுதி—உண்மை : Ger: wahr, A. S. voer, E. very adv in a great degree adj. true.
ஒழுங்கு—L. lougus, E. long. இலக்கு —L, locus, சோம்பு—L. sonaus, sleep. கரவு—Gr. cryptos.
சமட்டு—E, smite, to strike. A. S. smiten, Dut. smijten. சமட்டுவது சமட்டி—சம்மட்டி. E. hammer, A. S. hamor, Ger. hammer, Ice hamarr, a tool for beating. E. smith, one who smites.
கூடு—E. gather, A, S. gederian, gaed, a company : to gather—together=கூட.
காண்—A. S. cnawan; Ice. kna, Russ. znate, L. nosco. gnosco, (Gr. gignoso, Sans. jna. (All from a base GNA, a secondary form of GAN or KAN, to know. ஓ நோ; காட்சி = அறிவு : vid (Sans), to know; vide (L.), {to see.)
முன்னொட்டுகள் :—
அல் (not) — அன்—Gr. an, A. S. un: அl-— (Sans): ஒ. நோ. நல்–ந, குள்-கு. கா : நக்கீரர், குக்கிராமம்.
இல் (not)—இன்—L. in. இல் (உள்)–இன்—I.-A; S. in, L. em, en, Gr. en E. in.
உம்—A. S. up. உம்பர்-Sans: upari, L. super, Gr. hyper Goth. ufar, E. over. ம-ப-வ. போலி.
கும் = குவி, கூடு. கும்ம (நி. கா. வி, எ.)—L. com, cum, Gr. sys, Sans, sam, E. com, con, together.
பின்னொட்டுகள் :—
குறுமைப்பெயர் : இட்டி —L: E. etee; கா : cigar-ette இல்-L. E. el, le. கா: citad-el: குழவு-L: E; cule. icle. கா : animal-cule, parti-cle,
தமிழ்ச்சொற்களாலான புணர்சொற்கள் ஆரிய மொழிகளில், விதப்பாய் மேலையாரிய மொழிகளில், மிகப் பலவுள.
கா: கும் compose, from கும் and போடு; concert, from -கும் and சேர்: transparent, from துருவ and பார்.
Transparent—L. trans, through, and pareo, to appear. துரு—துருவு—துருவ —A. S. thurh, Ger. durch, W. trw Sans, taras, L. trans, E. through—root tar.
இத்தகைய ஆரியத் தமிழ்த் தனிச் சொற்களும் கூட்டுச் சொற்களும் நூற்றுக்கணக்கின 3ஆம் மடலத்திற் காட்டப்படும்:
(முற்றும்)