பதிற்றுப்பத்து என்பது எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. இது சேர மன்னர்களின் சிறப்புகளையும், அவர்களின் போர்த் திறன்களையும், கொடை வள்ளல் தன்மைகளையும், ஆட்சியில் சிறந்து விளங்கியதையும் விரிவாகப் பேசும் ஒரு புறப்பொருள் நூல்.
புலியூர்க் கேசிகன் அவர்கள் சங்க இலக்கியங்களுக்கு எளிய மற்றும் தெளிவான உரைகளை எழுதிப் பெரும் பங்காற்றியவர். அவருடைய பதிற்றுப்பத்து தெளிவுரை, கடினமான சங்கப் பாடல்களைப் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
பதிற்றுப்பத்து
புலியூர்க் கேசிகன் தெளிவுரையுடன்
தெளிவுரை
அமிழ்தினுமினிய செழுந்தமிழ் மொழியின் அவிர்சுடர் மணிகளாகத் திகழ்வன எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகிய சங்கத் தொகைநூல்கள். அவற்றுள், எட்டுத் தொகையுள் விளங்கும் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, கலித்தொகை, ஐங்குறுநூறு என்னும் எட்டு நூல்களுள், புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் பற்றிய நூல்கள்: அகநானூறு முதலாய பிறநூல்கள் ஆறும் அகத்திணை சார்ந்த நூல்கள்.
பழங்காலத் தமிழகத்தின்கண்ணே விளங்கிய ஒப்புயர் வற்ற மறமாண்பும், கொடைப்பண்பும், புலமைச்செறிவும், ஒழுக்கத்திட்பமும், அறநெறிச்சால்புமே இத்தகைய இணையற்ற செறிவான நூல்களின் தோற்றத்திற்குரிய நிலைக்களன்களாக விளங்கின. அத்தகு நூல்கள் பிற்காலத்தே எழாமைக்குக் காரணமும், அத்தகு பண்பட்ட நிலைக்களன்கள் செறிவுகுன்றித் தளர்வுற்றுப் போயினமையே யாகும்.
இலக்கியத் தோற்றமும் இலக்கியப் பயிற்சியும் செம்மையுடன் செழுமையாக வளர்ந்து செழிக்கவேண்டும் என்று விரும்பினால், அதற்கேற்ற சமுதாய நிலைக்களன்களையும் முயன்று மக்கள் உருவாக்கவேண்டும். இதனை உறுதியாக உரமோடு அனைவருமே உளங்கொள்ளலும் வேண்டும்.
அக்காலத்து அரசர்களும் வள்ளல்களும் தலைவர்களுமாகிய பலரையும், சான்றோர் பலரும், பற்பல சமயங்களிற் போற்றுதலாகவும், அறிவுறுத்தலாகவும் பாடிய தனித்தனிச் செய்யுட்களின் தொகுப்பே புகழ்சால் புறநானூற்றுப் பெருநூல். அங்ஙணமல்லாது, பழந்தமிழ் மூவேந்தருள் முதலாவதாக வைத்துக் கூறப்பெறுவோரும், தொன்றுமூத்த தொல்குடியினருமான சேரவரசருள் பதின்மரைப் போற்றுமுகத்தான், பதின்மர் புலவர்கள் பாடிய பத்துப்பத்துப் பாடல்களின் தொகுப்பே இப் பதிற்றுப்பத்து ஆகும்.
ஒரு பொருளைக் குறித்துப் பத்துப் பத்தாகச் செய்யுள் செய்யும் பதிக மரபுக்கு முன்னோடியாகவும், நூறு செய்யுட்களாக ஒரு நூலை அமைக்கும் சதகமரபுக்கு முதனூலாகவும், அந்தாதியாகத் தொடுக்கும் அந்தாதி மரபுக்கு அடிப்படையாகவும் அமைந்து, தமிழிலக்கிய வரலாற்றினைப் புதுப்போக்கில் உருவாக்கிய தனிச்சிறப்பையும் இப் பதிற்றுப்பத்துப் பெற்றிருக்கின்றது.
பிற்காலத்தே தோன்றிய கல்வெட்டுக்களிலும், உலா போன்ற பிறவற்றிலும் காணப்படும் மெய்க்கீர்த்திகளுக்கும் இதுவே முன்னோடியாகும் என்று கருதலாம்.
இனி இந்நூலின் செய்யுட்களுக்கு வகுத்துக் குறிக்கப் பெற்றிருக்கும் வண்ணமும் தூக்கும் இவை இசையோடு, பாடிப் பயிலப்பெற்று வழங்கிய சிறப்பினையும் காட்டும்.
சேரவரசர்களுள், இப் பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முதல்வனாகக் கொண்ட குடியினரையும், சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையை ஆதியாகக் கொண்ட குடியினரையும் பற்றிய செய்திகளையே விரித்துக் கூறுகின்றன.
இவர்களையன்றிப் சேரவரசர் பலர் புகழோடு வாழ்ந்திருத்தலும், அவர்களைப் புலமை சிறந்த தமிழ்ச்சான்றோர் பாடியிருத்தலும் கூடும் எனினும், அவற்றை எல்லாம் அறிவதற்கேற்ற வாய்ப்பினை நாம் பெற்றன மில்லேம்.
சேரவரசரின் தலைமைக் கோநகராக வஞ்சி மூலூரே வரலாற்றுக் காலந்தொட்டு விளங்கி வந்தது. அதன்கண் இருந்து அரசியற்றியோர் சேரர்குடியின் தலைமையாளராக விளங்கி வந்தனர். ஆயின் சேரவரசர் குடும்பத்தைச் சார்ந்த பலரும் பிறபிற இடங்களிலும், பெரும்பான்மையும் சுதந்திரமான தனியரசுகளை நிறுவிக்கொண்டு, அதே காலத்தேயேயும் அதன் பின்னரும் மாண்போடு வாழ்ந்திருக்கின்றனர்.
ஒரு கால அளவின் எல்லையிலேயே வாழ்ந்தவரான சிலரையே நாம் இந்நூலால் அறிகின்றோம். இது அக்காலத்தைய அரசியலமைப்பில், பெருநாட்டின் பகுதிகளைத் தம் குடும்பத்தாரின் நேரடியான ஆட்சிக்குள்ளாக முறைப்படுத்திப் பகுத்து வாழ்ந்த அரசியல் நெறியையும் நிர்வாகச் செறிவையும் நமக்குக் காட்டுவதுமாகும்.
கடைச்சங்க காலத்துச் சேரவளநாடு நிலப்பரப்பாலும் ஆட்சியின் எல்லையாலும் மிகமிகப் பரந்து செறிந்த தமிழ்ப் பெருநாடாக விளங்கியது என்பதையும் இப் பதிற்றுப்பத்து விளக்குகின்றது. ஏறக்குறைய இந்நாவலந்தீவின் தென்பகுதி முழுவதையும் தம் நேரடியான ஆட்சிக்கீழ்க் கொண்டுவந்த தோடு, விந்தியப்பெருவரைக்கு வடபாலும் தண்டுகொண்டு சென்று, அங்கிருந்த அக்காலவரசரையும் வெற்றிகொண்டு, வடபால் இமயம்வரைக்கும் தமிழருடைய மறமேம்பாட்டைச் சேரமன்னர்கள் நிலைபெறுத்திப் புகழ்பெற்றிருக்கின்றனர். இதன்மேல், வடமேற்கு எல்லைப்பகுதிகளுள் வந்து புகுந்து, அப் பகுதிகளுட் சிலவற்றைக் கைப்பற்றியிருந்த யவனர்களையும் வென்று, நிலத்தை மீட்டு வெற்றி கொண்ட சிறப்பினையும் செந்தமிழ்ச் சேரர்கள் அன்று பெற்றிருக்கின்றனர்.
இவ்வாறு, சேரவரசர்கள் பெற்ற வெற்றிகளுக்குக் காரணமாக அமைந்தன, அந் நாளையத் தமிழ்மறவர்களின் மறமேம்பாடும், கட்டுப்பாட்டுச் செறிவும், இனவுணர்வுப் பெருமிதமும், அவர்களைத் தலைமையேற்று நடத்திய தமிழரசர்களின் மனவலிமையும், சால்பும், போர்ப்பயிற்சி நலமும், தமிழகத்தின் வற்றாத பெருவளமுமே யாகும். இவற்றையும் இச்செய்யுட்கள் நன்றாக உணர்த்துகின்றன.
சேரவரசர்களின் அளவுகடந்த தமிழ்ப்பற்றையும், தமிழறிந்த சான்றோரை அவர்கள் போற்றிப் புரந்துவந்த பெருஞ்சால்பையும். நினைத்தால், வியப்பால் விம்மிப் பெரு மிதமடையலாம். அத்தகைய தமிழ்ப்பற்றும் புரக்கும் தன்மையும் கொண்ட தலைவர்கள் பிற்காலத்தே தோன்றாமையான ஊழ்க்கேட்டையும் அடுத்துக் கண்ணிரோடு நினைக்கின்றோம். இச்செய்யுட்களைப் பாடிய புலவர்க்குச் சேரமன்னர்கள் அளித்த பெரும் பரிசில்களும் பெரும்பாராட்டுகளுமே இத்தகைய எண்ணத்தை நம்பால் எழுப்புகின்றன!
தளராத தமிழ்ப்பற்றும், தமிழறம் பேணும் தகைமையும் கொண்டோராயினும், புதியராக வந்து வாழ்வுகண்ட வேற்றினத்தாரின் வழிபாட்டு மரபுகளையும் இவர்களுட் சிலர் பேணிப்புரந்தனர் என்பதையும் இந் நூலாற் காணுகின்றோம். இதுவும் இவர்களது பெருமாண்பு ஆகும். இதன் பின் விளைவுகள் விபரீதமாயின செய்தியும் உண்மையே!
‘இவன் இன்னாரின் மகன்’ எனத் தந்தையின் பெயரையே குறித்துச் சொல்லப்படும் மரபினுக்கு மாறாக ‘இன்னன் இன்னவனுக்கும் இன்னவளுக்கும் பிறந்த மகன்’ எனத் தாயின் பெயரையும் சேரவே சொல்லும் சிறந்த குடிமரபு உரைக்கும் மரபையும் பதிற்றுப்பத்துப் பதிகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சேரநாட்டாரிடைத் தாய்மையைப் போற்றும் இந்தத் தலையாய பண்பு பண்டே நிலவியதனையும் வியப்புடன் காண்கின்றோம். –
இப்போது, இப் பதிற்றுப்பத்து நூலின் முதற்பத்தும் பத்தாம் பத்தும் கிடைக்கப் பெறவில்லை. இரண்டு முதலாக ஒன்பதாம்பத்து வரையுமுள்ள 80 செய்யுட்களே கிடைத்துள்ளன. ஆனால், தொல்காப்பிய உரையாசிரியரான ஆசிரியர் நச்சினார்க்கினியரின் காலத்தில் இந்நூல் முழுமை யாகவே கிடைத்திருக்கிறது. இதனை அவரது உரையுள் வரும் ‘பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலின் பாடாண் திணை ஆயிற்று’ என்னும் உரைக் குறிப்பால் அறியலாம்.
பதிற்றுப்பத்துச் சார்ந்த செய்யுட்களாகச் சில தொல்காப்பிய உரைகளுக்கு இடையிலும், புறத்திரட்டிலும் காணப் பெறுகின்றன. அவை இந்த இரண்டுமுதலாக ஒன்பதுவரை யுள்ள பத்துக்களிற் சேராதவை. அவை நூலிறுதியில் தனியாகத் தரப்பட்டுள்ளன. அவை முதற்பத்தையோ பத்தாம் பத்தையோ சேர்ந்த செய்யுட்களாகவும் இருக்கலாம்.
வரலாற்றுச் செய்திகள் பல இந்நூலால் அறியப்படுகின்றன. அவை வாய்மையாதலைப் பிற சங்கநூற் செய்திகளும், வரலாற்றாளர்தம் கூற்றுக்களும் அரண் செய்கின்றன. ஆகவே, பழந்தமிழர் வரலாற்றை உணர்த்தும் வரலாற்று நூலாகவும் இதனைக் கொள்வது பொருத்தமாகும்.
இந் நூலுக்குப் பழைய உரைக்குறிப்புக்கள் அமைந்த தொகுப்பு ஒன்றும் இருந்தது. அதுவே, இதன் பொருள் வளத்தை அறியவும், அதனைச் சார்ந்தும் தழுவியும் பல உரை விளக்கங்கள் தோன்றவும் ஊற்றுக்களனாகிய சிறப்புடைத்து. அதனை இயற்றிய ஆசிரியர் பெயரும் காலமும் அறியப்பட வில்லை; எனினும், அவர்தம் புலமைச் செவ்வியைமட்டும் அக் குறிப்புக்கள் நமக்கு நன்கு காட்டி உணர்த்துகின்றன.
இந் நூலின் பதிகங்களைப் பிற்காலத்துச் சான்றோருள் ஒருவரோ அன்றிப் பலரோ செய்திருக்கலாம் எனவும், அல்லது நூலைத் தொகுத்த தொகுப்பாசிரியரே செய்திருக்கலாம் எனவும் கருதுவர். அவர் யாவராயினும், அவை மிகவும் சிறப்புடையவை என்பது அவற்றைக் கற்பவர் எளிதிற் காணக் கூடியதாகும்.
இந் நூலின் திணை முற்றவும் பாடான் திணையே என்பது நச்சினார்க்கினியர் கருத்தாயினும், பிற திணைகளையும், துறை களையும் சான்றோர் சிலர் வகுத்திருக்கின்றனர். அவற்றையும் அவற்றின் விளக்கங்களையும் நூலினுள்ளே காணலாம்.
தமிழரின் பொற்காலப் பெருமிதநிலையையும், தமிகத்தின் பழங்காலத்து வளமையின் வற்றாத ஏற்றத்தையும், தமிழ்ச் சமுதாயத்தின் சால்பு நிரம்பிய தனித்தன்மையோடு அமைந்த ஒழுகலாறுகளையும், தமிழ்நலம் பாரிக்கும். தன்னிகரற்ற ஆர்வப்பெருக்கையும் நாம் மனங்கொண்டு பூரிப்படையவும், இன்றைய நிலையோடு ஒப்பிட்டுக் கண்டு தெளிவும் புத்துணர்வும் செம்மாப்பும் புத்தூக்கமும் பெறவும், இப் பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் உதவக் கூடியன.
வடபுல அரசர்களின் வலிமையை அழித்து வென்றி கொண்டு, வடவிமயத்தும் தமிழ்க் கொடியைப் பறக்கவிட்ட தமிழரின் மறமாண்பை நினைத்துப் பெருமிதங்கொள்வதோடு, அந்த மறமாண்பு சிதைவுற்று மழுங்கியதற்கான காரண காரியங்களையும் ஆய்ந்து தெளிந்து, நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்வதற்கும் இச்செய்யுட்கள் சிறந்த தூண்டுதல்களாக விளங்குவன.
உலக வரலாற்றிலே மாபெரும் வெற்றியாளர்களாக மதிக்கப்பெறும் கிரேக்கத்து அலெக்சாந்தருக்கும், மற்றும் பிறருக்கும் மேலான வெற்றியாளராகத் திகழ்ந்தவர்கள் சேரமன்னர்களான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், சேரன் செங்குட்டுவனும் ஆவர்!. இதனைச் சான்றுகாட்டி உலகின்முன் உறுதிப்படுத்தத் தமிழ் அறிவாளர்கள் முன்வர வேண்டும்.
இன்னொரு வரலாற்று உண்மையையும் நாம் பதிற்றுப் பத்தால் அறிகின்றோம். அஃது, இந்நாளிற் கேரளத்தாராகவும், மலையாள மொழியினராகவும் தனித்தன்மை பெற்று விளங்குவோர் அனைவரும், பண்டைத் தமிழகத்துத் தமிழ்ப் பெருங்குடிகளுள் ஒருவரான சேரர் வழிவந்த பழந்தமிழ்ப் பரம்பரையினரே என்பதாகும்.
காலப்போக்கிலேயும் வேற்றார் ஊடுருவலாலேயும் நிகழ்ந்துவிட்ட மொழி மாற்றத்தால் இவர்கள் தனிமொழியினராக வாழ்ந்தபோதும், பழந்தமிழ்ப் பெருங்குடியினரின் வழித்தோன்றல்களே தாமும் என்று அவர்களும் பெருமிதங் கொள்வதை நாம் வரவேற்கவேண்டும். அதற்கேற்ற தமிழ்ப் பணியையும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஊக்கத் தையும் உதவிகளையும் செய்யவேண்டும். இதற்கும் இப் பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் நம்மைத் தூண்டுவனவாகும்.
இறுதியாக, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ எனவும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனவும் எழுந்த உலகஒருமை முழக்கங்களின் நினைவோடு, இப் பழந்தமிழ் நூலின் பெருமையைப் பார்முழுதும் கற்றுப்போற்றவும் வகை செய்யவேண்டும் என்னும் விருப்பத்தோடு, இதனைத் தமிழ் அன்பர்களின், தமிழார்வமிக்கவும் வரலாற்றார்வமிக்கவுமான உள்ளங்களுக்கு நல்விருந்தாக அளிக்கின்றேன்.
இச் செய்யுட்களைப் பாடியோர் பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்புக்களும், இச் செய்யுட்களாற் பாடப்பெற்றோரைப் பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்புக்களும் இந் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. அவை கற்பவருக்கு உதவுமென்பது தெளிவு.
இத்துணை நலம்பல செறிந்த இத் தமிழ்த் தொகை நூலைத் தேடி எடுத்துச் செப்பமாக முதற்கண் அச்சேற்றி வழங்கிய பெருமை, ‘தமிழ்த் தாத்தா’ எனப் பெரும் புகழோடு நிலவும் டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களையே சாரும். இதன் பின்னர்ப் பேருரையாசிரியர் திரு. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்களின் அகலவுரைப் பதிப்பும், யாழ்ப்பாணத்துப் பண்டித திரு சு. அருளம்பலம் அவர்களின் ஆராய்ச்சியுரைப் பதிப்பும், திரு. மீ. பொன் இராமாாதன் செட்டியாரவர்களின் உரைப்பதிப்பும் வெளிவந்தன. இதன் மூலபாடத்தைத் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் தமது சங்கநூல் தொகுதிகளில் செப்பனிட்டு வெளியிட்டார்கள்: மர்ரே கம்பெனியார் தனி நூலாக இதனை வெளியிட்டார்கள்.
இவ்வாறு வெளிவந்துள்ள பல பதிப்புக்களாலும் இதன் செழுமையையும் சீர்மையையும் தமிழன்பர்கள் அறிந்து இன்புறலாயினர். தெளிவுரையமைப்பு ஒன்றும் வெளிவரின் அது தமிழன்பர்களிடையே மிகவும் பரவி, அதனால் தமிழ்நலம் பெருகும் என்னும் ஆர்வத்துண்டுதலாலேயே இப் பதிப்பினை யான் விரும்பி அமைத்துள்ளேன்.
தெளிவுரையும், அருஞ்சொற் பொருளும், இன்றியமையாத சில விளக்கக் குறிப்புக்களும் கொண்ட கையடக்கமான ஒரு பதிப்பாக இப் பதிற்றுப்பத்துத் தெளிவுரை நூல் வெளி வருகின்றது.
இதனைத் தங்கள் வெளியீடாக ஏற்று வெளியிட்டுள்ள பாரி நிலையத்தினரின் ஒத்துழைப்புக்கும் தமிழன்புக்கும் யான் மிகப் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். ‘பைந்தமிழ் புரக்கும் பாரி’ என்று போற்றப்பெறும் அவர்களின் பெரும்பணியிற் பங்குபெறும் இந் நல்ல வாய்ப்புக் கிடைத்தமைக்கும் பெரிதும் மகிழ்கின்றேன்.
இதனை மிகவும் விரைவாகவும் அழகாகவும் அச்சியற்றித் தந்த மாருதி அச்சகத்தாருக்கும் என் நன்றி உரியதாகும்.
தமிழார்வம் மிகுந்த தமிழன்பர்களிடையே இத் தெளிவுரைப் பதிப்பும் என் பிற எட்டுத் தொகை நூல்களின் பதிப்புக்களைப் போலவே நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகின்றேன்.
புலியூர்க் கேசிகன்
கடவுள் வாழ்த்து
திணை : பாடாண் திணை. துறை : கடவுள் வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம், தூக்கு : செந்தூக்கு.
[தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில், நச்சினார்க்கினியரால் எடுத்துக் காட்டப்படுவது இது. இச் செய்யுளைப் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாகக் கொள்வார்கள் தமிழ்ச் சான்றோர்கள். முதற்பத்தும் அதற்கு முற்பட்ட பகுதியும் மறைந்து போயினதால், கடவுள் வாழ்த்தையும் எதுவெனக் காணுமாறில்லை. ஆதலின், இதனைக் கொள்வது ஓரளவுக்கு ஆறுதல் தருவதாகும். இதனைப் பாடியவர் பெயரும் தெரிந்திலது.]
எரியெள்ளு வன்ன நிறத்தன்; விரியிணர்க்
கொன்றையம் பைந்தார் அகலத்தன்; பொன்றார்
எயிலெரி பூட்டிய வில்லன்; பயிலிருள்
காடமர்ந் தாடிய ஆடலன்; நீடிப்
புறம்புதை தாழ்ந்த சடையன்; குறங்கறைந்து 5
வெண்மணி யார்க்கும் விழவினன்: நுண்ணூற்
சிரந்தை யிரட்டும் விரலன்; இரண்டுருவாய்
ஈரணி பெற்ற எழிற்றகையன்; ஏரும்
இளம்பிறை சேர்ந்த நுதலன்; களங்கனி
மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன்; தேறிய 10
குலம் பிடித்த சுடர்ப்படைக்
காலக் கடவுட்கு உயர்கமா வலனே!
தெளிவுரை : எரிதீயையும் எள்ளி நகையாடுவதுபோல அமைந்த ஒளிரும் செந்நிறத்தை உடையவன்; விரிந்த பூங்கொத்துக்களையுடைய கொன்றை மலராலே தொடுக்கப் பெற்ற பசுமையான மாலை விளங்கும் மார்பகத்தைக் கொண்டவன்;
எதனாலும் கெடாத வரம்பெற்றவராகிய அவுணரது திரிபுரக் கோட்டைகளுக்கு எரியினை ஊட்டியழித்த வில்லினை ஏந்தியவன்; செறிந்த இருளையுடைய யுகாந்தகாலப் பேரிருளிலே, சுடுகாட்டை விரும்பியவனாக, அங்குநின்றும் ஆடிய ஊழிக்கூத்தை யுடையவன்;
நெடிய முதுகுப் புறத்திலேயும் தாழ்ந்து வீழ்ந்தபடி அதனையே மறைத்துக் கொண்டிருக்கும் தாழ்ந்த செஞ்சடையினை உடையவன்; வெண்மையான மணிகள் தொடைப் பக்கத்தே மோதி ஒலிக்கின்ற ஆடல் விழவினைக் கொண்டவன்;
நுண்ணிய நூலாற் கட்டப்பெற்ற உடுக்கை என்னும் துடியினை மாறிமாறி ஒலித்தபடியிருக்கும் விரலினைக் கொண்டவன். ஆணும் பெண்ணுமாகிய சிவசக்தி என்னும் இரண்டு உருவமும் ஒன்றாகி ஓருருக் கொண்டோனாகத் திகழ்ந்து, அதற்கேற்ப இருவகை அணிகளாலும் அழகுபெற்று விளங்கும் அழகிய உருவினன்;
‘வளர்கின்ற இளம்பிறை’ சேர்ந்திருக்கும் நுதலையுடையவன்; களங்கனியும் மாறாக நிறத்தாலே ஒவ்வாதபடி கருமையை ஏற்று விளங்கும் கருமைக்கறை பொருந்திய கழுத்தைக் கொண்டவன்;
தெளிந்த ஒளியையுடைய குலப்படையைத் தன் திருக்கரத்திலே தாங்கியும்,மற்றும் ஒளிசிதறும் படைகளையும் தாங்கியும் விளங்குபன்; அவனே காலக்கடவுளாகிய சிவ பெருமான்! அவனுக்கு வெற்றியானது நாளும் நாளும் மிகுதியாக உயர்வதாக! சொற்பொருளும் விளக்கமும் : எரி – எரியும் தீ: செம்மை நிறத்தைக் கொண்டது. ‘உயர்க மாவலனே’ என வென்றி வாழ்த்தாக முடியும் இச்செய்யுள் ‘எ’ கரத்திலே தொடங்கி ‘ஏ’ காரத்திலே முடிகின்றது. வழிபாட்டிலே ‘எரி’யோ எரிசுடரோ கொண்டு தொடங்குவது மரபு. அது கட்டவே இது ‘எரி’ எனத் தொடங்குகின்றது. பயில்தல் – செறிதல். வெண்மணி – பளிங்குமணி. சிரந்தை – சிரற்பறவைச் சிறகு போல அசையும் உடுக்கை. இரட்டுதல் – மாறி மாறி ஒலித்தல். ஈரணி – இருவகை ஒப்பனை; அது, சக்தியும் சிவமுமாக, பெண் ஆணாகச் செய்யப் பெறும் வேறுவேறான ஒப்பனைகள். காலக் கடவுள் – காலங்கடந்து நின்று காலத்தையும் வகுக்கும் மூலமுதற் கடவுள். சிவனை ஈமக்காட்டின் இறையாக இன்றும் போற்றிவரும் தென்பாண்டி மரபையும், சமாதி மேலாகச் சிவலிங்கம் நிறுவும் தொடர்ந்த நாட்டு வழக்கையும் இங்கே கருதுக.
சிவபிரானது செம்மேனிவண்ணமும், அளவில் ஆற்றலும், அவன் கூத்தியற்றும் அற்புதப் பாங்கும், அவன் சக்தியோடும் கலந்திருக்கும் அந்தத் தனித்தன்மையும், அவன் அருளின் செவ்வியும், பிறவும் கூறி வியந்து போற்றுகின்றனர்.
‘எரியையும் எள்ளுவது போன்ற நிறம்’ என்றது, எரி நெருப்பினுங் காட்டில் செம்மையும் வெம்மையும் ஆற்றலும் ஒளியும் கொண்டதான செம்மேனி வண்ணம் என்றதாம்.
அந்தத் திருமேனி உடையானின் திருமார்பிடத்தே கொன்றைப் பைந்தார் அழகுசெய்தபடி விளங்கும் என்றது, அவனது தண்மையையும் அழகுணர்வையும் நினைந்து மகிழ்ந்ததாம்.
‘பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன்’ என்றது, அடியவர்க்கு அமைந்து அடியவனாகி அவர்க்கு ஊறு இழைப்பாரின் ஆணவத்தை தீய்த்தொழிக்கும் சினத்தோடு செயற்பட்டு அருளுகின்ற உளப்பாங்கும் உடையவன் என்று கூறியதாகும்.
‘பயிலிருள் காடமர்ந்து ஆடிய ஆடலன்’ என்றது. சர்வ சங்கார காலத்துப் பேரிருளில் அனைத்தையும் ஒடுக்கி யாடுகின்ற ஊருப்பெருங்கூத்தினை. இது, அவனே அனைத்துக்கும் ஆதியும் அந்தமும் ஆனவன் என்பதனையும், அனைத்தும் அவன் அருள்விளக்கமே என்பதனையும், அவன் அழிக்கத் திருவுளம் பற்றுங்காலத்தே அனைத்தும் அழிந்தொழிந்து மறையும் என்பதும் உணர்த்துவதாம்.
‘சிரந்தை இரட்டும் விரலன்’ என்றது, உடுக்கையினின்று தோன்றும் ‘ஓம்’ என்னும் ஆதிநாதமான பிரணவ ஒலியைத் தோற்றுவித்து, அதனின்று அனைத்தையும் முறையே பூத்தெழுமாறு தோற்றுவிப்பவன் அவனே என்றற்காம்.
இளம் பிறை சேர்ந்த நுதலும், களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடறும் அவனது அளப்பில் பெருங்கருணையை வியந்ததாம்; அளவில் ஆற்றலையும் நினைந்ததாம்.
‘சூலம் பிடித்தவன்’ என்று கூறியது முத்தொழிற்கும் தானே முதல்வனாகவும், முச்சக்திகட்கும் தானே முதல்வனாகவும் விளங்குபவன் அவன் என்று உணர்த்துதற்காம். இது முத்தலைச் சூலம் எனவும் கூறப்பெறும்.
‘காலக் கடவுட்கு’ என்றது. அவன் காலத்தைக் கடந்து நிற்பவன் எனவும், அவனே காலமாக அமைபவன் எனவும், அவனே ஆதி முழுமுதல் எனவும் உணர்த்துதற்காம்.
‘அனைத்துமாகிய அவன் பெருவெற்றி உலகெங்கும் உயர்ச்சிபெறுக’ என்றது. உலகமாந்தர் அனைவரும் அவன் செயலே அனைத்துமென்பதை உணர்ந்து, அவன்பாலே தம்மையும் ஒன்றுபடுத்தி உயரவேண்டும் என விரும்பி உரைப்பதாம். அதற்கான கோட்பாட்டிலே உலகோர் சித்தத்தைத் தீவிரப்படுத்த நினைந்து கூறியதுமாம்.
சிவனை உமையொரு பாகம் உடையவனாகக் கொண்டு வழிபட்டு வாழ்வுபெறும் மரபு பண்டைக்காலத்துத் தமிழ் மரபே என்பதனையும் நாம் இதனால் அறிதல் வேண்டும்.
‘அனைத்துமாகியவனின் மாவலன் உயர்க’ என்று போற்றலால், அனைத்தும் இனிதே நிறைவெய்த, அவ்வாறு போற்றுவாரும் மாவலன் உயரப் பெற்றவராகி மாண்படைவர் என்பதாம்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடியது
இரண்டாம் பத்து
பதிகம்
மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி யீன்றமகன்–
அமைவரல் அருவி இமையம்விற் பொறித்து
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் 5
தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு 10
பெருவிரல் மூதூர்த் தந்துபிறர்க் குதவி
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்
இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு;
அவைதாம்,
(1) புண்ணுமிழ் குருதி, (2) மறம்விங்கு பல்புகழ், (3) பூத்த நெய்தல், (4) சான்றோர் மெய்ம்மறை, (5) நிரைய வெள்ளம், (6) துயிலின் பாயல், (7) வலம்படு வியன்பணை, (8) கூந்தல் விறலியர், (9) வளனறு பைதிறம், (10) அட்டுமலர் மார்பன்; இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில் : உம்பற் காட்டு ஐந்நூறூர் பிரம தாயம் கொடுத்து, முப்பத்தெட்டு யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக் கோ.
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தான்.
தெளிவுரை : நிலையான பெரும்புகழையும், அறநெறிகளுக்குக் குற்றமில்லாதே செம்மையோடு செல்லுகின்ற அரசாணையினையும் உடையவன், இனிதாக இசைக்கின்ற வெற்றிமுரசத்தையும் கொண்டவன் உதியஞ் சேரலாதன். அவனுக்கு, வெளியத்து வேளிர்களின் குடியிலே பிறந்து, அவனை மணந்து, கோப்பெருந்தேவியாகவும் விளங்கியவள் வேண்மாள் நல்லினி தேவியாவாள். அவள், அவனுக்குப் பெற்றுத்தந்த மகன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவன், என்றும் இடையீடுபடாதே வருதலையுடைய அருவிகளைக் கொண்டதான இமையப் பெருமலையினிடத்தே, தன் வில்லாகிய இலச்சினையைச் சென்று பொறித்தவன். முழங்கும் கடல்களையே வேலியாகவுடைய இத் தமிழகத்தின் புகழ்ச்செவ்வியானது உலகமெங்கணும் விளக்கம் அடையுமாறு, தன்னுடைய செங்கோன்மையான அரசாட்சியை, இந் நாட்டிலே எப்புறத்தும் நிலைபெறச் செய்தவன். தன் சேரர் குடிக்கே உரித்தான தகைமைமிகுந்த போர் வினைச் சிறப்போடுஞ் சென்று, பெரும்புகழுடைய அரச மரபினரான ஆரியமன்னரைக் களத்திலே வெற்றிகொண்டு, அவரைத் தனக்குப் பணிந்து வாழச்செய்தவன். நயப்பாடு என்பதே இல்லாதவான வன்சொற்களையே கூறித் தன்னை எதிர்த்தோரான யவனத்தவரை வென்று, அவரைச் சிறைப் பிடித்தவன். அவர்தம் தலையிலே நெய்யைப் பெய்தும், அவர் கைகளைப் பின்புறமாக வைத்துக் கட்டியும்,தன் நாட்டிற்குக் கொணர்ந்தவன். அவர்க்குரியவும், மதிப்பிடற்கரிய விலையினை உடையவுமான நல்லபல அணிகலன்களை வயிரக் கற்களோடும் கைப்பற்றிக் கொணர்ந்தவன். பெரிதான வெற்றிப்புகழுடைய மூதூரான தன் வஞ்சிநகரிடத்தே, தன் படை மறவர்க்கும் அலுவலர்க்கும் குடிகட்கும் அவற்றைத் தந்தவன். அவர் அன்றியும், தன்னை வந்து இரந்து நின்றவரான வேற்றுநாட்டார் பலருக்கும் அவற்றைத் தந்தும் உதவியவன். இவன், தன்னோடும் பொருந்தாது, தன்னைப் பகைத்த அரசரை எல்லாம் கொன்று அழித்த, பகைவர்க்கு நினைப்பினும் அச்சத்தைத் தருதலையுடைய, வலிமையான தாளினைக் கொண்டவன். இத் தகையோனாகிய இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பத்துப் பாட்டுக்களாலே புகழ்ந்து பாடினர்.
அவை, ‘புண்ணுமிழ் குருதி’ முதலாக, ‘அட்டுமலர் மார்பன்’ ஈறாக விளங்குவனவாகும்.
அவற்றைக் கேட்டு மகிழ்ந்தான் அக் கோமான். அவற்றைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார்க்கு உம்பற்காட்டுப் பகுதியிலுள்ள ஐந்நூறு ஊர்களை இறையிலி நிலமாக வழங்கினான். அத்துடன், தென்னாட்டுள். தனக்கு வருகின்ற அரசிறையினும் ஒரு பங்கினை முப்பத்தெட்டு ஆண்டுகள் கொடுத்தான். இவன் ஐம்பத்தெட்டு ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான்.
சொற்பொருள் : பெரும்புகழ் – பெருமைக்குரிய புகழ். வாய்மொழி – சொன்னபடியே செல்லும் அரசாணை; சொல்லுஞ்சொல் தவறாத வாய்மையும் ஆம். வெளியன் – வெளியத்து வேளிர்குலத் தலைவன். வேண்மாள் – வேளிர்குடிப் பிறந்தவள். விற்பொறித்து – வில்லாகிய அடையாளத்தைப் பொறித்து; இது, அந்த எல்லைவரைக்கும் தன் மேல்ஆணைக்கு உட்பட்டது என்று உறுதிப்படுத்தும் வெற்றியின் அடையாளம். தமிழகம் – தமிழ் மொழி வழங்கிய அக் காலத்து நிலப்பகுதி; இது, செந்தமிழும் சொடுந்தமிழும் வழங்கிய பல்வேறு நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு சொல். ‘தகை சால் சிறப்பு’ சேரர்தம் குடித்தகுதியாலே மிகுந்த சிறப்பான போர்வினைத் திறம். ‘பேரிசை மரபின் ஆரியர் என்றது, ஆரிய வரசருள்ளும் பெரும் புகழுடைய அரச மரபினரான பேரரசர்களையும் வென்றான் என்பதற்கு. இதனால் பிறவரசர் தாமே பணிந்து திறை செலுத்தினராதலும் பெறப்படும். ‘நயனில் வன்சொல் யவனர்’ என்றது, வடமேற்கு எல்லைப் பகுதியினை அந் நாளிலே வலிந்து கைப்பற்றிக் கொண்டிருந்த கிரேக்கராகிய யவனரை. இது, இவர் சேரமானுக்குப் பணிந்து போகாது, கொடிய சபதங்களைக் கூறி எதிர்த்து, முடிவில் போரிலே தோற்ற நிலையைக் காட்டுவது ஆகும். ‘பிறர்’ என்றது. தனக்கு உட்படாதவரான பிறநாட்டு அரசரை; இவர் பாரதப் பரப்பிற்குப் புறத்திருந்தவராகலாம். அணங்கு – அச்சம். நோன்மை – வலிமை. ‘நோன்தாள்’ எனச் சேரனின் வெற்றிப் பெருமிதம், அவன் தாள்மேலாக ஏற்றிக் கூறப் பெற்றது.
விளக்கம் : உதியஞ் சேரலின் சிறப்புக்கள் மூன்று. அவை, ‘மன்னிய பெரும்புகழ், மறுவில் வாய்மொழி, இன்னிசை முரசு’ என்பன: மூவேந்தரும் வேளிர்குடியிற் பெண் கொள்ளல் பண்டைய மரபு. இது, வேண்மாள் நல்லினியை இவன் தேவியாகக் கொண்டதாலும் விளங்கும். ‘ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்முதிர் வடவரை வணங்குவிற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்’ என இவ் இமையவரம்பனின் வடபுல வெற்றியைப் பரணர் பெருமானும் வியந்து போற்றுவர் – (அகம், 396). ‘தமிழகம்’ எனத் தமிழ் வழங்கிய பெருநாடு பொதுப் பெயராற் குறிக்கப்படுவதனை, ‘இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்பதும் காட்டும், ‘வையக வரைப்பின் தமிழகம்’ எனக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனாரும் புறப்பாட்டிற் கூறுவர்.
‘பேரிசை மரபின் ஆரியர்’ எனவே, அதுகாலை வட புலத்தே ஆரிய மன்னருட் சிலர் பேரரசர்களாகவும் புகழுடன் விளங்கினர் எனலாம். இவனால் வெற்றிகொள்ளப் பெற்றவர் வடபுலப் பேரரசர்களான நந்தர்கள் எனக் கருதுதலும் பொருந்தும். யவனரையும் இவன் வெற்றி கொண்டான் என்பதனால், இவனுடைய வடபுலப் போர்ச் செலவு வடமேற்கு எல்லைப்புறம் வரையிலும் சென்றது என்பதும் அறியப்படும்.
‘ஆரியர் வணக்கி’ என்றது, அவர் தோற்றுத் திறை செலுத்திப் பணிய, அவரைத் தன் மேலாட்சியை ஏற்று மீள்வும் தம் நாட்டை ஆளச் செய்தனன் என்பதாம். ‘யவனரைச் சிறையிட்டுக் கொணர்ந்தான்’ என்பது, அவர் இங்கே உரிமைநாடு ஏதுமற்ற வேற்று நாட்டாராயினதாலும், நயனில் வன்சொல் பல தன்பாற் கூறியதாலும் என்று கொள்க.
குமட்டூர்க் கண்ணனார் அந்தணராதலை அவர்க்குப் பிரமதாயமாக நிலம் வழங்கின. இச் செய்தியால் அறியலாம். அந் நாளைய அந்தணருள்ளும் சிலர் சிறந்த தமிழ்ப் பற்றினராயும், தமிழ்ப் புலவர்களாயும் விளங்கினர் என்பதும் இதனால் அறியப்படும். ஆரியரை வென்று வணக்கியதும், யவனரைப் போரிற் பணியச் செய்ததும் செயற்கருஞ் செயல்கள் என்பதும் இதனாலே விளங்கும். முப்பத்தெட்டு ஆண்டுகள் தென்னாட்டில் வருவதனுள் பாகங்கொடுத்தான் என்றதால், இவனது இருபதாவது ஆட்சியாண்டில் இப்பாட்டுக்கள் பாடப்பெற்றன எனக் கொள்ளலாம்.
11. புண்ணுமிழ் குருதி
துறை செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்; ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. இதனாற் சொல்லியது: சேரலாதனின் வெற்றிச் செல்வச் சிறப்பு.
[போரிடையே பகைவரது மார்புகளைப் பிளந்தான். பிளக்கப்பெற்ற அம் மார்புப் புண்களினின்றும் செங்குருதி வெள்ளமாக வழிந்து பெருகி ஓடலாயிற்று. அதனால், கழியின் கருமையான நீரும் தன் நிறத்தில் மாறுபட்டதாய்க் குங்குமக் கலவையைப் போலக் கருஞ்சிவப்பாய் ஆயிற்று. இவ்வாறு போர்க்களத்தை வியந்து கூறிய உவமை நயத்தால் இப்பாட்டிற்குப் ‘புண்ணுமிழ் குருதி’ என்பது பெயராயிற்று.
விகார வகையானே அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தைப் போலாது. உலகினுள்ளே இயற்கைவகையானே இயன்ற மக்களைப் பாடுதலால், இதனைச் ‘செந்துறைப் பாடாண் பாட்டு’ என்றனர். ஒழுகிய ஒசையாற் செல்வதனால் ‘ஒழுகு வண்ணம்’ என்றனர். ஆசிரியப்பா ஆதலின் ‘செந்தூக்கு’ என்றனர்.]
வரைமருள் புணரி வான்பிசிர் உடைய
வளிபாய்க் தட்ட துளங்கிருங் கமஞ்சூல்
நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குடை அவுணர்.ஏமம் புணர்க்கும்
குருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் 5
கடுஞ்சின விறல்வேள் களிறூர்க் தாங்குச்
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறங் திறந்த புண்ணுமிழ் குருதியின்
மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல வரண்கொன்று 10
முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஒக்கலை
பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய வேஎய்
வென்றெறி முழங்குபனை செய்த வெல்போர்
நாரரி நறவின் ஆர மார்பிற் 15
போரடு தானைச் சேரலாத!
மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப்
பொலனணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்
பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே 20
கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்திலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்
தென்னங் குமரியொ டாயிடை
மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே. 25
தெளிவுரை : மலைகளைப்போல அலைகள் உயரமாகக் கிளம்பி மேலே எழுகின்றன. அவ் அலைகளின் வெண்மையான திவலைகள் உடைந்து சிதறுமாறு, காற்றும் அவற்றின் ஊடாகப் புகுந்து மோதிச் சிதைக்கின்றது. விளக்கங் கொண்ட கரிய பெரிய நிறை. சூலைக் கொண்டாற்போலக் கடலும் விளங்குகின்றது. அத்தகு, செறிந்த பெரும் பரப்பைக் கொண்ட கருங்கடலின் நடுவே சென்று, முருகவேளுக்கு அஞ்சியோனாகிய சூரபதுமனும் அக் காலத்தே தன்னுருக் கரந்தானாகி ஒளிந்து கொண்டான். பிறருக்கு அச்சம் தருவோரான அவுண வீரர்கள் பலர். தன்னைக் காவலாகச் சேர்ந்திருக்கச், சூரனைத் தன்னிடத்தே கொண்டதாக விளங்கியது ஒரு மாமரம். அம் மாமரத்தினை, அதுதான் தன் வேரோடும் முற்றவும் அழிந்து வீழ்ந்துபடுமாறு வெட்டி யழித்தனன் விறலோனான முருகப்பெருமான். கடுஞ்சினமும், வெற்றிச் செருக்கும் கொண்டோனாக, அப் பெரும் புகழ்ச் செயலைச் செய்து முடித்தான் முருகவேள். அதன் பின்னர், தனக்குரிய ‘பிணிமுகம்’ என்னும் போர்க்களிற்றின் மேலாக ஏறி அமர்ந்தோனாக, அம் முருகப் பிரான் வெற்றியுலாச் சென்றான். அவனைப் போலவே, நீயும் நின் கடலிடத்துப் பகைவரை வென்றனை; நின் மூதூரிடத்தே களிறேறி வீரம் விளங்க வெற்றியுலாவும் வருகின்றனை!
பகைவரது குருதிக் கறையாலே சிவந்த முனையைக் கொண்டது நின் வாள். அந்த நின் வாளானது, நின்பால் மென்மேலும் வந்துவந்து மோதியவரான பகையரசரின் உடலங்களை எல்லாம் ஊடறுத்துச் சென்று, அவரையெல்லாம் வெட்டி வீழ்த்திற்று. வெல்லுவதற்கு அரியவரான அப் பகையரசரது மார்பகங்கள் நின் வாளாலே பிளக்கப் பட்டுப் புண்களாயின. அப் புண்களினின்றும் ஒழுகிய குருதிப் பெருக்கினாலே, நீலமணியினது கிருநிறத்தைக் கொண்டதாய் இருந்த கழியின் நீரானது, தன் நிறத்தால் மாறுபட்டுக் குங்குமக் கலவைபோலக் கருமைகலந்த செந்நிறம் பெற்றும் தோன்றியது!
இங்ஙனமாக, நின்னைப் பகைத்தோரை எல்லாம் அடியோடும் வென்று அழித்தனை; அவர்தம் காவல் அரண்களையும் சிதைத்தனை; அவரை எல்லாம் வெற்றியும் கொண்டனை! வல்லமையாலே மேம்பட்டு விளங்கும் சிறப்போடே கூடிய, அத்தகைய உயரிய போர்ச்செயல் முயற்சியைக் கொண்டோனே! போர்மறவர்கள் மிகப்பலராக மொய்த்துக் காத்ததும், திரண்ட பூக்கள் கொண்டதுமாகிய கடம்பினது, காவலையுடைய அடியினை முற்றவும் வெட்டிவிடுமாறு, நீயும் நின் படைமறவரை அந்நாளிலே ஏவினை! அவரும், அவ்வாறே சென்று அதனை வெட்டிக் கொணர்ந்தனர். பிற வெற்றி முரசங்களை எல்லாம் தன் முழக்கொலியாலே வெற்றி கொண்டு முழங்குவதான நினக்குரிய வெற்றிமுரசினையும் அக்கடம்பின் அடிப்பகுதியாலே நீதான் செய்துகொண்டனை. பன்னாடையாலே வடிகட்டும் கள்ளினது மணம் கமழுகின்ற, பனம்பூவினால் ஆகிய மாலையை அணிந்தோனே! போர்க் களத்திலே பகைவரைக் கொன்றொழிக்கும் தானைவீரர்களின் பெருக்கினையும் உடையோனே! நெடுஞ்சேரலாதனே!
கடலினிடத்தே உள்ளவரான அப் பகைவரை வெற்றி கொண்டு, நீ நின் மார்பிடத்தே சூடிக்கொண்ட அந்த வெற்றி மாலையானது, நீ ஊர்கின்ற நின் போர்க்களிற்றது நெற்றிவரைக்கும் நீண்டு தொங்கும்! அப்படித் தொங்குதலாலே, அதன் நெற்றிப்பட்டத்தோடும் அதுதானும் கலந்தாற்போலவும் விளங்குகின்றதே! வெற்றிப் புகழாலே உயர்ச்சியுற்ற கொம்புகளைக் கொண்டதும், போரிற் பின்னடைதல் என்னும் பழியினின்று முற்றவும் நீங்கியது மான, அக் களிற்றது கழுத்திலே பொன்னரிமாலையும் அத்துடன் சேர்ந்து விளங்குகின்றதே! அதன் பிடர்மேல் அமர்ந்தோனாக நீயும் அழகுடனே வெற்றியுலா வருகின்றன! பொலிவோடு அப்படி உலாவரும் நின்னைப் ‘பலரும் புகழத் தக்க செல்வத்தைக் கண்டானொரு வறியவனைப் போலப்’ பெருமகிழ்ச்சியோடே யானும் இன்று இனிதாகக் கண்டு மகிழ்ந்தேனே!
முள்ளு முருக்கின் மரங்கள் அடர்ந்த பக்கமலைச்சாரலிலே படுத்து உறங்கும் கவரி மானானது, பகற்காலத்தே தான் காட்டிடையே சென்று மேய்ந்த நரந்தம் புல்லையும், பருகிய பரந்து விளங்கும் அருவி நீரையும், தன் கனவிடத்தேயும் கண்டு இன்புற்றபடியே இனிதாக உறங்கியபடியிருக்கும் சிறப்பைக் கொண்டது, மேலோர் நிறைந்த பெரும்புகழ் இமையம்!
வடக்கின் கண்ணே அத்தகைய சிறப்பினதான இமையமும், தெற்கின் கண்ணே தென்குமரியும் ஆகிய இவ்விரண்டனுக்கும் இடைப்பட்டதாகிப் பரந்துகிடக்கின்றதான இந்த நாவலந்தீவிலுள்ள மன்னர்கள் பலருள்ளும், தம்மைத்தாமே செருக்கோடும் உயர்த்துச் சொன்னாரது மறவுரைகள் எல்லாம் கெட்டழியுமாறு, அவர்களை எல்லாம் களத்திலே தோல்வியுறச் செய்து சிறைப்படுத்துக் கொணர்ந்த வெற்றியாகிய, பலரும் புகழும் வெற்றிச் செல்வத்தைக் கொண்டோனே!
நீதான் களிற்றின் மேலோனாகி வெற்றி உலாவந்த அந்த அழகிதான காட்சியை யானும் இனிதாகக் கண்டு, என் உள்ளமும் மகிழ்ச்சியடைதலை உற்றேனே.
சொற்பொருள் : வரை மருள் புணரி – மலையோ என மயக்கந் தருமாறு உயர்ந்தெழுந்த பேர் அலைகள். துளக்கம் – விளக்கம். கமஞ்சூல் – நிறைவுற்ற சூல்; முதிர்ந்த சூல்; உயர்ந்த அலைகளாலே விளங்கும் கடலை இப்படி உவமிக்கின்றனர். நளி – செறிவு. மாக்கடல் – பெருங்கடல்: கருங்கடலும் ஆம். ஏமம் – பாதுகாவல். ‘சூருடை முழு முதல்’ என்றது, சூரனைத் தானாகக்கொண்டமாவினது அடிமரத்தை. விறல் – வெற்றியுடைமை. எஃகம் . வாள். ‘அருநிறம்’ என்றது. எளிதாக வெல்லற்கரிய வலிய மார்பகம் என, அவரது போர் வலிமையைக் குறித்ததாகும். மணி – நீலமணி. மலைக் கலவை – குங்குமக் கலவை. முரண் – மாறுபாடு. மொசிதல் – மொய்த்தல். திரள் . உருட்சியமைந்த. கடி – காவல். துமிதல், தடிதல் – வெட்டுதல்; துணித்தல். ‘வென்று’ என்றது. வஞ்சனையால் அன்றிப் போர்க்களத்தே எதிரிட்டுச் சென்று கொண்ட நேரிடை வெற்றியைக் குறிப்பதாகும்.
ஆரம் – முத்தாரம் – சந்தனத தேய்வையும் ஆம். கவிர் முள்ளு முருங்கை. கவரி – மானினத்துள் ஒரு வகை. மீக்கூறுநர் – உயர்த்துக் கூறப்படுவோர். துவன்றிய – தோன்றிய; நிறைந்த நரந்தம் – ஒருவகை நெடியுடைய புல்வகை. மறம் – மறத்தகைமை.
விளக்கம் : முருகப்பெருமான் கடலிடைச் சென்று சூரனை அழித்த சிறப்போடு, சேரலாதன் கடலிடைச் சென்று பகைவரை வெற்றிகொண்ட சிறப்பையும் ஒப்பிட்டுக்கூறி மகிழ்கின்றார் புலவர். ‘பலர் மொசிந்து ஓம்பிய கடம்பு’ என்றது, பகைமறவர் மிகப்பலராகச் சூழ்ந்து நின்று கருத்தோடுங் காத்த கடுங்காவலையுடைய கடம்பு என்றதாம்; அதனை அழித்த சிறப்பு, சேரமானின் வெற்றியில் குறிப்பிட்டுப் பேசுதற்குரிய புகழுடைய பெரு வெற்றியாயிற்று.
‘கடம்பின் பெருவாயில் நன்னன்’ என்பான் வேறு, இக் கடம்பினைக் காவன்மரமாகக் கொண்டிருந்தார் வேறு. ‘கடம்பின் பெருவாயில்’ என்பது ஓர் ஊர். சேரலாதனது கடலிடைப் பெற்ற இவ் வெற்றிச் செய்தியால், அந்நாளைத் தமிழரசர்கள் வலிமைமிக்க கடற்படையினையும் அமைத்துத் தமிழ்நாட்டைக் கடற் கொள்ளையரிடமிருந்து காத்து வந்தனர் என்பது விளங்கும்.
‘பழிதீர் யானை’ – களத்திற் பின்னடைந்தது என்னும் பழிச்சொற்கு உட்படாமல், முன்னேறிச் சென்றே வெற்றி ஈட்டிய வலிய போர்க்களிறு, ‘போரடுதானை’ எனச் சேரப் படைமறவரின் போர்மறச் செவ்வியும் கூறப்பெற்றுள்ளது.
‘பலர் புகழ் செல்வம்’ ஆவது, அறநெறி பிழையாதே முயன்று ஈட்டிக் கொணர்ந்த செல்வம்; இங்கே அது பகை வரை முறையாக வெற்றிகொண்ட புகழையும், அவர்பால் திறையாகப் பெற்றவும், அவரிடமிருந்து கைப்பற்றிக் கொணர்ந்தவுமான பெரும்பொருளையும் குறிக்கும்.
“வடவிமயம் முதலாகத் தென்குமரி ஈறாக இடைப்பட்டுக் கிடக்கும் இப் பாரதப் பெருநிலப்பரப்பு முழுமையுமே சேரலாதனின் பெரும்புகழ் பரவிநின்றது” என்பது, அந் நாளைத் தமிழ் அரசரின் போராண்மை மேம்பாட்டை எடுத்துக் கூறுவதுடன், அக் காலத் தமிழர் இந்நாவலந் தீவைத் தமக்குரிய தொன்றாகவே கண்டுவந்த மனப்பண்பையும் காட்டுவதாகும்.
இவனது கடம்பறுத்து வெற்றிகொண்ட புகழ்ச் செயலினை அகநானூற்று 347ஆம் செய்யுளுள், ‘மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய பண்ணமை முரசின்’ எனவும், ‘சால்பெருந் தானைச் சேரலாதன்’ எனவும் போற்றுவர் மாமூலனார். சிலப்பதிகாரத்து, இளங்கோவடிகளாரும் இதனை வியந்து கூறியுள்ளனர் (சிலம்பு 25 : 1).
‘ஆரியர் அலறத் தாக்கிப், பேரிசைத் தொன்று முதிர் வடவரை வணங்குவிற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்’ எனப் பரணரும் (அகம் 396), ‘முந்நீர் ஒட்டிக் கடம்பெறிந்து, இமயத்து முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து’ என மாமூலனாரும் (அகம் 127) குறிப்பிடுவன, இவனது இவ் வெற்றிப் புகழ்ச் செயல்கள் மெய்யாதலையே சான்று கூறி மேலும் உறுதிப்படுத்துவனவாகும்; இவன் புகழ், இதனால் எங்கணும் பரவிய பெரும் புகழ் ஆதலையும் இவை காட்டும்.
12. மறம் வீங்கு பல்புகழ்!
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்; ஒழுகுவண்ணம். தூக்கு – செந்தூக்கு. இதனாற் சொல்லியது; சேரலாதனின் வென்றிச் சிறப்பும்; திருவோலக்கத்தின் சிறப்பும்.
[மன்னர்க்குப் பிறபிற வழிகளானே வந்தடையும் புகழினுங் காட்டில், மறமேம்பாட்டாலே வந்தடையும் புகழே மிகமிகச் சிறப்புடையதாகும். இதனை வலியுறுத்தி உரைப்பதே போன்று அமைந்த சொற்றொடர் நயத்தாலே, இப் பாட்டிற்கு ‘மறம் வீங்கு பல்புகழ்’ என்பதைப் பெயராக அமைத்தனர்.]
வயவர் வீழ வாளரின் மயக்கி
இடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்பக்
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே!
நாரணி எருத்தின் வாரல் வள்ளுகிர்
அரிமான் வழங்கும் சாரல் பிறமான் 5
தோடுகொள் இனநிரை நெஞ்சதிர்க் தாங்கு
முரசமுழங்கு நெடுநகர் அர்சுதுயில் ஈயாது
மாதிரம் பனிக்கும் மறம்வீங்கு பல்புகழ்
கேட்டற் கினிது நின் செல்வங் கேட்டொறும்
காணடல் விருப்பொடு கமழுங் குளவி 10
வாடாப் பைம்மயிர் இளைய வாடுநடை
அண்ணல் மழகளிறு அரிஞிமிறு ஒப்பும்
கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி
வந்தவண் இறுத்த இரும்பேர் ஓக்கல்
தொல்பசி யுழந்த பழங்கண் வீழ 15
எஃகுபோழ்ந் தறுத்த வால்நிணக் கொழுங்குறை
மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனையமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தின் இருஞ்சிற கன்ன
நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை 20
நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ
வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள்
வசையின் மகளிர் வயங்கிழை அணிய
அமர்புமெய் யார்த்த சுற்றமொடு
நுகர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே. 25
நின்னோடும் மாறுபட்டோரான வலிமையாளர்கள் பலரும் போர்க்களத்திலே வீழ்ந்துபடுமாறு, நின் வாள் மறவரினாலே அவரை எல்லாம் அழித்து, நீயும் வெற்றி கொண்டனை. நினக்கே உரித்தாகிய இடத்தைத் தாம் கவர்ந்துகொள்வதற்கு நினைத்தாரும், அரசச் சுற்றத்தைக் கொண்டாருமாகிய கடம்பரின் தலைவனே அஞ்சி நடு நடுங்குமாறு, அவர்க்கு உரித்தான கடலிடைத் தீவிடத்தேயும் படையோடுஞ் சென்றனை, அவரை முற்றவும் அழித்து, அவர்தம் காவன் மரமாகிய கடம்பினையும் அடியோடு வெட்டிக் கொணர்ந்த வஞ்சின வேந்தனே!
பிடரி மயிராலே அழகுபெற்று விளங்கும் கழுத்துப் புறத்தையும், நெடியதும் கூரியதுமான நகங்களையும் கொண்டதான சிங்கவேறானது இறைதேடித் திரியும் மலைச் சாரலிடத்தே, தொகுதியாக வாழ்கின்ற பிற விலங்கினங்களின் கூட்டம் எல்லாம் நெஞ்சம் துணுக்குற்றவாய் நடுங்கி அலமரும். அதனைப்போலவே, முரசுமுழங்கும் நெடிய அரணிடத்தே உள்ளாரான நின்னைப் பகைத்த வேற்று அரசர்கள் பலரும் கண்ணுறக்கம் அற்றாராய், நினக்கு அஞ்சினராய்ப் பெரிதும் நடுங்கிக் கொண்டிருக்க, மறமேம்பாட்டினாலே மிக்கு விளங்கித் திசையனைத்தும் நடுக்கமுறச் செய்யும் நின்னது மறப்புகழும் கேட்பதற்கு இனிதாயுள்ளது. அத்தகையதாகிய நினது வெற்றிச் செல்வத்தைப்பற்றிப் பிறர் எடுத்துச் சொல்லக் கேட்டபோதெல்லாம், நின்னை நேரிலே காணுதல் வேண்டும் என்னும் விருப்பத்தையே யாமும் அடைந்தோம்.
உதிராத பசிய மயிரையும், இளமைப் பருவத்தையும், அசைந்தசைந்து. செல்லுகின்ற தளர்ந்த நடையினையும், தலைமைப் பாட்டினையும் கொண்டதான தன்னுடைய இளங்களிறு, ஒழுகும் மதநீரோடே நிற்பதனைக் கண்ட கன்றோடும் சேர்ந்தபடியே நின்ற அதன் பிடியானது, குன்றிடத்தேயுள்ள மணங்கமழும் காட்டு மல்லிகைக் கொடியைப் பிடுங்கி, அம் மதநீரிலே மொய்த்த வண்டினங்களை ஒட்டிய படியே இருக்கும். அத்தகைய குன்றுகள் பலவற்றையும் கடந்து, இவ்விடத்தே நின்னைக் காணக் கருதினமாக யாமும் விரும்பி வந்தடைந்தோம்.
நின் வஞ்சிநகரின் ஒரு பக்கத்தேயுள்ள அவ்விடத்தே யாம் வந்து தங்கியதும், எம் மிகப்பெரிய சுற்றத்தினது, தொல்பசியாலே வருந்திய வருத்தமெல்லாம் அடியோடே வீழ்ந்துபட்டது. வாள் புகுந்து அறுத்த, வெள்ளிய நிணமான கொழுத்த ஆட்டிறைச்சியின் தசைத்துண்டங்களை இட்டுச் சமைத்த, வெண்ணெல் அரிசியினாலே ஆகிய வெண்சோற்றையும், அரும்பினாலே அமைத்த கள்ளின் தெளிவையும், யாங்கள் எல்லாம் நிரம்ப உண்ணுமாறு நீயும் செய்தனை.
பருந்தினது நனைந்த பெருஞ்சிறகைப் போல்க் காணப் பெற்றதும், மண்ணாலே தின்னப் பெற்றுச் சிதைந்ததும் ஆகிய, கந்தல்பட்ட எம் உடைகளைக் களைந்துவிட்டு, நூலாக் கலிங்கமாகிய பட்டாடைகளைத் தம் வெள்ளிய அரையினிடத்தே, எம் சுற்றத்தார் கொளுவிக் கொள்ளுமாறும் செய்தனை!
இருண்ட கடைசுருண்டு விளங்கும் கூந்தலையும், வளைந்த மூங்கிலைப்போல விளங்கும் மென்மையான தோள்களையும் கொண்டோரான, குற்றமற்ற பாண்மகளிர் எல்லாரும் ஒளி விளங்கும் அணிகலன்களையும் அணிந்திருப்பார் ஆயினர்!
உடலோடே சேர்த்துக் கட்டி வைத்தாற்போலே, என்பால் விருப்போடு என்னைப் பிரியாதேயே உடன்வரும் பாண் சுற்றத்தோடுங்கூடி நின்றவனாகப், பேராரவாரத்தை உடையதாகிய நினது ‘திருவோலக்க இருக்கை’ என்னும் மகிழ்ச்சியான காட்சிதானும், இப்போது கண்ணாரக் கண்டு நுகருதற்கும் எமக்கு மிகமிக இனிதாயிருக்கின்றது, பெருமானே!
நின் மறம் வீங்கு பல்புகழ் முன்னர்க் கேட்டற்கு இனிதாயிருந்தது; நின் பெருங்கலி மகிழ்வாகிய இதுதான் இன்று கண்ணாற் காணற்கும் இனிதாயுள்ளது என்பதாம்.
சொற்பொருள்: வயவர் – வலிமையாளர். சேரலாதனை எதிர்த்துக் களத்திற்கு வருவதற்கும் பேரளவு வலிமை வேண்டும் என்பதனாலே, அவ்வாறு வலிமையோடும் துணிந்து வந்தாரை ‘வயவர்’ என்றனர். அவர் பட்டு அழியவே, பிறர் அஞ்சித் தாமே பணிந்துபோவாராயினர் என்று கொள்க. வாளர் – வாள் மறவர். மயக்கி – சிதைத்து. கடும்பு – சுற்றம்; படைஞர், அமைச்சர், ஒற்றர் ஆகியோர். ‘தலை’ என்றது, தலைவனை.
தார் – பிடரி மயிர்; மாலைபோலக் கழுத்துப் புறத்தே தூங்குதலால் ‘தார்’ என்றனர். வார் – நெடிய; ‘அல்’: அசை வழங்கல் – திரிதல். – தோடு – தொகுதி. துயில் ஈயாது – துயில் பெறாது. மாதிரம் – திசைகள் பல் புகழ் – பலவான புகழ்; பல களத்தும் கொண்ட வெற்றிப் புகழும் ஆம். குளவி – காட்டு மல்லிகை. வாடா – உதிராத; பிறந்த போதுள்ள மயிர் உதிர்ந்து வேறுமயிர் புதுவதாக முளையாத. பைம் – பசுமையான; பசுமை என்றது மென்மையையும் அடர்த்தியையும் குறித்தது. ஆடுநடை அசைந்தசைந்து நடக்கும் தளர் நடை. அண்ணல் – தலைமை.
ஞிமிறு – வண்டு, பிடிய – பிடியைக் கொண்ட நீந்தி – முயற்சியோடும் மெல்லமெல்லக் கடந்து சென்று. தொல் பசி – பழம் பசி, தொடர்ந்து வருத்திய பசித்துன்பம். பழங்கண் – வருத்தம். எஃகு – வாள். வால் – வெண்மையான. மையூன் – ஆட்டுத் தசை. வெண்ணெல் – ஒருவகை நெல்; வெள்ளைச் சம்பா நெல் ஆகலாம்; தென்னாட்டுப் பகுதியிலே ‘வெள்ளை’ என வழங்கப்படும் நெல்வகையும் ஆகலால். நனை – பூவரும்பு. தேறல் – கள்ளின் தெளிவு. இருஞ்சிறகு – பெரிய சிறகு. சிதாஅர் – கந்தல்பட்ட துணி. நூலாக் கலிங்கம் – பட்டு; நூலாலாகிய கலிங்கமும் ஆம். வாங்கு – வளைந்த. வணர் – சுருண்ட. வகையின் – குற்றமற்ற; குற்றமாவது, பிறர் பழிக்கத்தக்க குறைபாடு உடைமை. மெய்யமர்பு யாத்த – உடலோடு விரும்பிக் கட்டிய. கலி – ஆரவாரம்; பெருங்கலி – அரசனது ஆரவாரமிக்க திருவோலக்கக் காட்சி.
விளக்கம் : கேள்வியானே மட்டுமே நின்னைப்பற்றி அறிந்து கற்பனையாலே இன்புற்ற யாங்கள், நின்னாலே பெரிதும் உபசரிக்கப்பட்டு, எம் துயர் முற்றத் தீர்ந்தேமாய், நின் திருவோலக்கக் காட்சியைக் கண்டும் பெரிதும் இன்புற்றனம் என்பதாம். சிங்கவேறு வேட்டங்கருதிக் காட்டிலே வெளிப்படின், பிற விலங்கினம் மந்தைமந்தையாகச் சேர்ந்து இருப்பினும், அதற்கு அஞ்சி நடுநடுங்குமாறு போலச், சேரலாதன் படையொடு, புறப்படின், பகையரசர் பலராயினும் அவர் நெஞ்சம் நடுங்குவர் என அவன் மறமேம் பாட்டைக் கற்பித்துக் கூறினர். களிற்றது மதநீரிலே மொய்த்த ஞமிறுகளைக் காட்டு மல்லிகையைப் பிடுங்கி ஒட்டும் பிடியையுடைய குன்று என்றது, அவையும் பிறர்க்கு ஊறு செய்யாவாய் இன்புற்றிருக்கும் என்பதாம். கொலைவல் கொடியரான ஆறலை கள்வர் எவரும் இலர் எனச் சேரலாதனின் காவற்சிறப்பைக் கூறியதுமாம். அன்பாலே செறிவுற்ற அவன் தேவி அவ்வாறு காதற்பேரன்பினைக் கொண்டவள் என உள்ளுறுத்துக் கூறியதும் ஆம்.
தொல் பசியுழந்த பாண்சுற்றத்தினர் பெற்ற புது வளமை, நெடுஞ்சேரலாதனின் கொடைமனச் செவ்வியைச் காட்டுவதாகும்.
சிதைந்து மண்தின்னப் பெற்று விளங்கும் அழுக்காடைக்கு நனைந்த பருந்தின் சிறகை உவமித்தனர். ‘கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன பாறிய சிதாரேன்’ எனப் பிறசான்றோரும் இந்த உவமையைப் பயன்படுத்துவர் (புறம் 150 – வன்பரணர்).
‘இரும்பேர் ஒக்கல்’ என்பதற்கு வறுமையாலே மேனி நிறம் கருமைப்பட்டுப்போன பெரிய பாண் சுற்றம் எனவும் பொருள் கொள்ளலாம்.
இப் பாட்டு இப் புலவர் பெருமானும் பாணச் சுற்றத் தோடே கூடியவராகச் சென்றனர் என்பதனையும், இவரால் அவர்களும் உபசரிக்கப் பெற்றனர் என்பதனையும் காட்டும். ஊனுணவு அந்தணரும் அந்நாளிற் கொண்டது என்பதும் அறியப்படும்.
13. பூத்த நெய்தல்!
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கும். வஞ்சித்தூக்கும். இதனாற் சொல்லியது : சேரலாதனின் வெற்றிச் சிறப்பும் சாவற் சிறப்பும்.
[தம்மை உண்ணுவதற்கு வந்துள்ள எருமைகளைத் தம் இனிமையாலும் மிகுதியாலும் தம்பாற் கவர்ந்து, வேற்றிடம் போகாதபடி தடுக்கும் நெய்தல் பூக்கள் என்று உரைத்த நயமான உவமையினாலே இப் பாட்டு இப் பெயரால் வழங்கப்படுவதாயிற்று. சேரலாதனும் அவ்வாறே தன்னை அடைந்தவர் பிறரை எண்ணாதவாறு வரையின்றி வழங்கும் தன்மையன் என, அவன் கொடைச்சிறப்பையும் உய்த்து உணரவைத்தனர். இதன்கண் வஞ்சியடிகள் விரவி வந்தமையால் வஞ்சித் தூக்கும் இதற்குச் சொல்லப்பட்டது.]
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்
ஏறு பொருதசெறு உழாதுவித்துநவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங்கண் எருமையின் நிரைதடுக் குநவும்
கலிகெழு துணங்கை யாடிய மருங்கின் 5
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்
ஒலிதெங்கின் இமிழ்மருதின்
புனல்வாயிற் பூம்பொய்கைப்
பாடல்சான்ற பயங்கெழு வைப்பின்
நாடுகவினழிய நாமந் தோற்றிக் 10
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்க் தியங்க 15
ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
தாதெரு மறுத்த கலியழி மன்றத்து
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல்தபுத்து
உள்ளுநர் பனிக்கும பாழா யினவே
காடே கடவுள் மேன, புறவே 20
ஓள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே அவ்வனைத் தன்றியும் ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறந் தருநர் பாரம் ஓம்பி
அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது 25
மழை வேண்டு புலத்து மாரநிற்ப
நோயொடு பசியிகந் தொரீஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே!
தெளிவுரை : கோடைக் காலத்தே ஆடுகளைக் கூட்டிக் கிடைமறித்த நீரற்ற வறண்ட வயல்களுள் மழைக்காலத்தே நீர் மிகுதிப்பட்டு ஆரல்மீன்கள் கலித்துப் பல்கிப் பிறழத் தொடங்கும். ஆனேறுகள் தம்முட் பொருதலினாலே சேறுபட்ட வயல்கள். மீண்டும் உழுது பண்படுத்தாமலேயே விதைப்பதற்கான பக்குவத்தையும் அடைந்திருக்கும். கரும்புப் பாத்திகளிலே பூத்துள்ள நெய்தல் மலர்கள், பெருங்கண்களை உடையவான எருமைக் கூட்டத்தை, வேற்றிடம் நோக்கி உணவுகருதிப் போகாதபடி தடுப்பனபோல நிறைந்திருக்கும். ஆரவாரம் பொருந்த இளமகளிர் துணங்கையாடி மகிழ்ந்த வீட்டின் புறங்களிலே, வளைந்த தலையினவான கிழட்டுப் பசுக்கள், ஆடும் அம் மகளிரது தழையுடைகளினின்றும் சோர்ந்து வீழ்கின்ற ஆம்பல்மலர்களை உண்டபடியே தம் பசியாறிக்கொண்டிருக்கும்.
தழைத்து வளர்ந்துள்ள தென்னைகளையும், பல்வேறு பறவையினங்களும் தங்குதலினாலே ஒலியெழுந்தபடி இருக்கும் மருதமரங்களையும், வயல்களுக்கு நீர்பாய்ச்சு தற்பொருட்டாக அமைந்த வாய்க்கால் தலைப்புக்களையும், பூக்கள் மலிந்துள்ள பொய்கைகளையும் கொண்டனவாக, வளத்துடன் நின் பகைவரது ஊர்கள் பலவும் விளங்கும்.
பகையரசரது வளமான அத்தகைய ஊர்கள் பலவும் வளம் சிதைந்து போகுமாறு, நீதான் அச்சத்தைத் தோற்று வித்தாயாய், அவ் அரசரது ஊர்கள்மேற் படையெடுத்தனை! சிவப்புற்ற கண்களோடுஞ் சென்றனை! நீ தாக்கி அழித்த அப் பகையரசரது அரண்களைக் கொண்ட ஊர்கள் எல்லாம், தம்பழைய தன்மை கெட்டனவாய், அழிவையும் அடைந்தனவே!
கூற்றத்தால் தாக்குண்டு உயிரைப் பறிகொடுத்த பின்னர் எஞ்சிக்கிடக்கும் வெற்றுடலானது, கணத்துக்குக் கணம் தானாகவே சிதைந்துகொண்டே போகும். அதுபோல தத்தம் தலைவர்களை இழந்துவிட்ட பகைவர் நாட்டு அரண்களும் தமக்குத் தாமாகவே சிதைவுற்று அழியலாயினவே!
மலர்ந்த பூக்களோடும் கூடியவான கரும்பு வயல்கள் தம் பொலிவிழந்தனவாய்ப் பாழ்பட்டுப் போயினவே! அவ் விடங்களிலே, முறுக்கிய காய்களோடுங் கூடிய விடத்தேரை மரங்களோடு, கரிய உடைமரங்களும் நீண்டு வளரத் தொடங்கி விட்டனவே! மேலும், முனை பிளவுபட்ட தலை மயிரைக் கொண்ட பேய்ம்மகள், ‘கழுது’ என்னும் பேயின் மேல் ஏறிக்கொண்டு, அவ்விடங்களிலே சுற்றித் திரிபவளும் ஆயினளே! விளைநிலங்கள் எல்லாமும் நெருஞ்சிச்செடி பரந்து செறிந்துகிடக்கும் பாழ்பட்ட இடங்களாகவும், புழுதி பட்ட பாழிடங்களாகவும் முற்றவும் மாறிப் போயினவே!
பூந்தாதாகிய எருவை இழந்தனவும், மக்கள் வந்து சேர்ந்து ஒன்றுகூடுவதாலே எழும் ஆரவாரத்தை இழந்தனவும் ஆயின, அவ் ஊர் மன்றங்கள்! வேறு புகலிடம் அற்றோரான சிலர், தம் உள்ளத்து எழுச்சி அழிந்த நிலையினராக, அம் மன்றங்களுக்கேனும் செல்லக் கருதுவர். அப்படிச் செல்லக் கருதும் அச் சிலரது எஞ்சியுள்ள மனவலிமையையும் கெடச்செய்து, மற்றும் செல்லலாம் எனக் கருதுவாரது மனத்தையும் நடுக்கமுறச் செய்யும் கொடிய பாழிடங்களாக அவை எல்லாமும் உருமாறிப் போயினவே!
நின் நாட்டகத்தேயோ –
பெரும் காட்டிடம் எல்லாம் கடவுள்களுக்குரிய கோயில்கள் விளங்கும் புண்ணியத் தலங்கள் ஆயின! சிறுகாட்டிடம் எல்லாம், ஒளிகொண்ட அணிகலன்களை அணிந்தாரான தத்தம் இளமகளிரோடுங் கூடியவராக, நின் படைமறவர்கள் ஆடிக்களித்து இன்புறுகின்ற படைநிலைகள் ஆயின! காடும் புறவும் அல்லாத பெருவழிகளும், ஆறலைக்கும் கள்வரும் பிற இடையூறுகளும் அற்றவாய், வழிநடப்பார் அச்சமின்றிச் செல்லுவதற்கு ஏற்றவையாக உள்ளன!
அஃதன்றியும் –
தானியங்களைக் கொண்டு விற்கும் வாணிகரது தொழில்கள் முட்டுப்பாடு இல்லாதே நடைபெறுமாறு, அவர்தம் குடும்பங்களையும் நீதான் காத்து வருகின்றன! தமக்கு உட்பட்ட வரிசையாளரைக் காக்கும் காணியாட்சியாளராகிய வேளாளரது சுற்றங்களையும் நன்கு பேணிக் காத்து வருகின்றன!
நின் ஆட்சியது நலத்தினாலே, செவ்வாய் சென்றதன் பக்கத்திலே சுக்கிரன் செல்லாதபடியாகவும் செய்து வளப்படுத்தி வருகின்றன. அதனாலே, மழையும் விரும்பும் பகுதி
ப.-3 களிலே எல்லாம் தவறாமற் பெய்து நின் நாட்டைஎப்போதும் வளப்படுத்தி வருகின்றது.
இவ்வாறாக, நின்னாற் காக்கப் பெறுகின்ற நாடுதான், நோயோடு பசியும் நீங்கியதாக, வளர்த்தால் பொலிவுபெற்றதாக விளங்குகின்றதே!
(பகை நாட்டின் அழிவையும், சேரலாதன் நாட்டின் சிறப்பையும் கூறி, அவனது மறமாண்பையும் நாடுகாவல் சிறப்பையும் வியந்து போற்றுகின்றனர்.)
சொற்பொருள் : தொறுத்த ஆடுகளைக் கிடைகட்டிய ஆரல் – ஆரல் மீன்; கார்த்திகை நட்சத்திரம். நெய்தல் – நெய்தற்பூக்கள்; ஒருவகை நீர்ப்பூக்கள். இருங்கண் – கருமையான கண்; பெரிய கண்ணுமாம். கலி – ஆரவாரம். ஆம்பல் – ஆம்பற் பூக்கள்; இவை துணங்கை மகளிரது தழையுடைகளில் இட்டுக் கட்டியிருப்பன; அவர் ஆடியபோது உதிர்ந்தன. ஒலித்தல் – தழைத்தல். இமிழ் மருது – பறவையினத்து ஆரவாரத்தோடே விளங்கும் மருது.
வைப்பு – ஊர்கள். புனல் வாயில் – வயிலிடை விளங்கும் பாய்சால்களின் தலைப்பகுதி; வாய்த்தலை எனவும் கூறப்பெறும். மூதா – முதிய பசு; முதுமையால் தொலைதூரஞ் சென்று மேய்தற்கு இயலாத கிழட்டுப்பசு. துணங்கை – மகளிரது கூத்துவகையுள் ஒன்று; இரு கைகளையும் மடக்கியவாறு விரல்களாலே அடித்தடித்துக் குதித்தாடும் ஒருவகை மகிழ்ச்சிக் கூத்து.
கவின் – அழகு. நீரழி பாக்கம் – நீர்வளத்து மிகுதியாலே அழிவெய்தக்கூடிய பாக்கம்; பகைவரால் எளிதாக அழித்தற்கு முடியாதது என்பதாம். ‘பாக்கம்’ என்பது நெய்தல் நிலத்து ஊர்ப் பெயர்; அது மருதநிலத்து ஊருக்கு மருவி வந்தது . நெய்தலடுத்த மருதமும் ஆம். கூற்றம் – கூறுபடுத்துவது. திரிகாய் – முறுக்கிய காய். விடத்தேர் – விடத்தேரை என்பதொரு முள்மரம். கார் உடை – கரிய உடைமரம்; முள் மரத்துள் ஒருவகை. சுவை – பிளவுபட்ட. ஊரிய- பரந்த. நெருஞ்சி – நெருஞ்சி முள்ளின் செடி. பறந்தலை . பாழிடம். மறுத்த-விலக்கிய. உள்ளம் – ஊக்கம். பனிக்கும் – நடுக்குறச் செய்யும்.
மேன – மேயின; விரும்புதற்கேற்ற தன்மை பெற்றன. புறவு – சிறுகாடு, ‘மகளிரொடு மள்ளர் மேன’ என்றது அவர் தாம் போரொழிந்தாராய் இன்பக் களியாட்டுக்களில் திளைத்படியே இருந்தனர் என்றதாம். ஆறு – வழி. பகர்நர் – விலை கூறி விற்போர். குடிபுறந்தருநர் – காணியாளர். வரிசையாளர் – அவரிடம் வாரத்துக்கு நிலத்தைப் பெற்றுப் பயிரிடும் உழவர் குடியினர். புலத்து – இடத்து. பாரம் – குடும்பம்; ‘பகடு புறந்தருநர் பாரம் ஒம்பி’ எனப் புறப்பாட்டினும் வரும் (புறம். 35). அழல் – செவ்வாய். மழைக் கோளான சுக்கிரனோடு செவ்வாய் ஒன்று சேரின் நாட்டிலே மழைவளம் திரிந்து வறட்சியுண்டாகும் என்பர்.
விளக்கம் : ‘மூதா ஆம்பல் ஆர்கவும்’ என்றது, பெருக ஆம்பல்சூடிக் களித்தாடும் இளமகளிரைக் கொண்ட ஊர்கள் என, அவற்றின் இன்பச்செழுமை கூறியதாம். ‘கூற்று அடூஉ நின்ற யாக்கை’ யானது கணத்துக்குக்கணம் தானே கெட்டு அழியுமாறுபோலச் சேரலாதனாலே தலைவர்களை இழந்துவிட்ட பகைப்புலங்களும் நாளுக்குநாள் தாமே தம் தன்மையிற் கெட்டுத் தம் அழகழியும் என்றனர்.
‘நீரழி பாக்கம்’ என்றது, ‘தண்புனற் பூசல் அல்லது, நொந்து, களைக வாழி வளவ என்று, நின் முனைதரு பூசல் கனவினும் அறியாது (புறம். 42)’ என விளங்கும் நாட்டு வளமை. அரசனிருக்கும் ஊருக்கும் ‘பாக்கம்’ பெயராதலைக் ‘கட்கொண்டிக் குடிப்பாக்கத்து நற்கொற்கை’ (மதுரைக் காஞ்சி 137-8) என்பதனால் அறியலாம்.
கூலம் பகர்நர் குடிபுறந்தருதலை ஆற்றின் செவ்வியாலே நிகழ்வதாகவும், குடிபுறந்தருநர் பாரமோம்புதலை மழை வளத்தாலே நிகழ்வதாகவும் கூட்டி உரைப்பர். 1-10 அடிகளால் பகைவரது நாட்டின் பழைய வளமான நிலையினையும், 11-19 அடிகளால் அந் நாடுகள் தாம் அழிந்துபோயின தன்மையினையும், 20-28 அடிகளால் சேரலாதனால் காக்கப் பெறுகின்ற நாட்டினது வளத்தையும் முறையே உரைத்தனர்.
‘நோயொடு பசியிகந்து’ என்பதே ஒரு நல்லாட்சியின் குறிக்கோளாக அமைதல் சிறப்புடைத்து என்பதும், இதனால் பெறப்படும். இது என்றைக்கும் பொருந்தும் நீதியுமாம்.
‘தாதெரு மறுத்த கலியழி மன்றத்து, உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து, உள்ளுநர் பனிக்கும் பாழாயினவே’ என்னும் அடிகள், போரழிவின் கொடுமையை மிகவும் தெளிவாக எடுத்து விளக்கிக் கூறுவதாகும்.
‘நீறாடு பறந்தலை’ – புழுதிபட்டுபோன பாழிடம்; வயல்கள் பண்படுத்திப் பயிரிடுவாரை இழந்ததனாலே, நெருஞ்சி படர்ந்து, புழுதிபட்டுப்பாழிடங்கள் ஆயின என்பதாம்.
14. சான்றோர் மெய்ம்மறை!
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்; ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும், தூக்கு; செந்தூக்கு. இதனாற் சொல்லியது: சேரலாதலின் பலவான குணநல மேம் பாடும், போராற்றற் சிறப்பும்.
[தன் படைமறவரை. ‘மெய்புகு கவசத்தைப் போலத்’ தான் பேணிக்காக்கும் தன்மையாளன் சேரலாதன் என வியந்து கூறிய ‘சான்றோர் மெய்ம்மறை’ என்னும் சிறப்பு நோக்கி, இப்பாட்டு இப் பெயரால் அழைக்கப்படுவதாயிற்று. ‘சொற்சீர் அடி’ என்பது, அளவடியிற் குறைந்தும், வஞ்சி ஒசையின்றி அகவ்ல் ஒசை பெற்றும் வருவதனை. இங்கு ‘அளப்பரியையே’ என்னும் இரண்டாவது அடி இவ்வாறு வருதலால் சொற்சீர் வண்ணமும் கூறப்பட்டது. இதனைப் ‘பரவற்கண் வந்த செந்துறைப் பாடாண் பாட்டு’ எனவும் உரைப்பர். இதனை ‘வாழ்த்தியல்’ என உரையாசிரியர் நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவர்.)
நிலம்நீர் வளிவிசும்பு என்ற நான்கின்
அளப்பரி யையே!
நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல்
ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை!
போர்தலை மிகுந்த ஈரைம் பதின்மரொடு 5
துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை
அக்குரன் அனைய கைவண் மையையே!
அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர்ரீ டழித்த செருப்புகன் முன்ப!
கூற்றுவெகுண்டு வரினும் ஆற்றும்ஆற் றலையே! 10
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
நோன்புரி தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை!
வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும்
வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்கீர் ஓதிக் கொடுங்குழை கணவ! 15
பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படையேர் உழவ! பாடினி வேந்தே!
இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடலக வரைப்பினிற் பொழின்முழு தாண்டநின்
முன்றிணை முதல்வர் போல நின்றுநீ 20
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅ லியரோவிவ் வுலகமோ டுடனே.
நிலமும் நீரும் காற்றும் வானமும் எனச் சொல்லப்படுகின்ற நாற்பெரும் பூதங்களையும்போல, நீதானும் பிறரானே அளவிட்டு அறிந்து உரைப்பதற்கும் அரியவனாக உள்ளனை! நாளும் கோளும் திங்களும் ஞாயிறும் மிக்க பெருந்தீயுமாகிய ஐந்தும் ஒருங்கே தம்முட் கலந்தாற் போன்றதொரு விளக்கத் தினையும் உடையை! ‘போரிடுதலே இனித் தலையாயது’ எனப் போரை மேற்கொண்டாரான நூற்றுவர்க்குத் துணையாக அமைந்து, இறுதிவரைக்கும் போராடிய துணிவுடையோனும், ஆண்மையாளனுமாகிய அக்குரனைப் போலக் கை வண்மையினையும் பெரிதும் உடையை!
வஞ்சனையால் அல்லாதே, களங்களில் எதிர்சென்று போரிட்டு வென்ற தன்மையாலே தும்பை சூடியவராக, நின்னோடும் பகைத்துப் போரிடற்கு மேல்வந்த பகைவர்களது போர்த்திறனையும் பெருமிதத்தையும் அழியச்செய்த, செருவேட்டலையே இயல்பாகக் கொண்ட வலிமையாளனே! கூற்றமே வெகுண்டு எதிர்த்து வந்தபோதும், அதன் ஆற்றலையும் அழித்து, அதனையும் வெற்றிகொள்ளுகின்ற போராற்றலைக் கொண்டவனே!
எழுவரான முடியுடைய மன்னர்களை எல்லாம் வென்று, அவர்களது முடிப்பொன்னாலே செய்துகொண்ட ஆரம் பொருந்தியதும், வெற்றித்திருமகள் விரும்பி வாழ்வதுமான மார்பினையும், வலியமைந்த பெருத்த கைகளையும் கொண்டோனே! போராடும் நின் படைமறவர்க்கு மெய்க்கவசம் போல விளங்கி, களங்களிலே அவரைத் தாங்கிக் காத்து, வரும் பகைப்படையை எல்லாம் எதிர்நின்று தாங்கிக் களத்தையே நினதாக்கிக் கொள்ளும் சிறப்புடையோனே!
வானத்து உறைவோரான தேவமகளிரும், ‘அழகாலே அவளை ஒப்பானவள் யானே யானே’ என்று கூறித் தங்க ளுக்குள்ளே பூசலிட்டு மாறுபாடு கொள்ளுகின்ற பேரழகினையும், ஒளிவிளக்கம் பொருந்திய அணிகலன்களையும், தம் ஒளியாலே மறையச்செய்தப்டி வண்டினம் மொய்க்கின்றதும் கடைசுருண்டு தாழ்ந்து தொங்குகின்றதுமான கூந்தலையும், வளைவான குண்டலங்களையும் உடையோளான அரசமா தேவியின் கணவனே!
பலவாகிய போர்க் களிறுகளின் தொகுதியோடு, வெற்றிக்கொடிகள் அசைந்தாடிக் கொண்டிருக்கும் படையாகிய ஏரைக்கொண்டு, பகைப்படையினரை எல்லாம் உழுதழித்து வெற்றிகொள்ளும் படையேர் உழவனே! பாடுதற்கு இனிதானவனாகிய வேந்தனே!
ஒளிவிளங்கும் மணிகள் நெருக்கமாகப் பதிக்கப்பெற்ற பொற்கலன்களை அணிந்தோராகத், தம் ஆணைச் சக்கரத்தைச் செலுத்திக், கடலாற் சூழப்பெற்ற பூமியாகிய இந்த நாவலந் தண்பொழில் முழுதையும் ஆட்சிசெய்தவரான நின் சேரர்குலத்து முன்னோர்களைப் போலவே, நீயும் நிலையான புகழாலே மேம்பட்டோனாக, இவ்வுலகிலே என்றும் நிலை பெற்று நிற்பாயாக!
கெடாத நல்ல புகழோடும் நிலைபெற்று, இவ்வுலகத்தோடுங்கூட, நீயும் கெடாத் நல்ல புகழை நிலைபெறச்செய்து, இன்னும் நெடுங்காலம் வாழ்வாயாக, பெருமானே!
சொற்பொருள் : நிலம் நீர் வளி விசும்பு என்பன நாற் பெரும் பூதங்கள்; இவை இவ்வளவின என்று அளவிட்டு அறிதற்கு அரியன; இவற்றின் உறவாலேயே உலகப் பொருள்கள் பலவும் உண்டாயின. ‘இரு முந்நீர்க் குட்டமும், வியன் ஞானத்து அகலமும், வளிவழங்கு திசையும், வறிது நிலைஇய காயமும் என்றாங்கு அவையளந்து அறியினும் அளத்தற்கு அரியை’ எனப் புறநானூற்றினும், அளவிறந்த பேராற்றலுக்கு இவற்றை உவமையாககி உரைப்பர் (புறம். 20 – குறுங்கோழியூர் கிழார் பாட்டு). நிலம் நீரினும், நீர் வளியினும், வளி விசும்பினும் சென்று ஒடுங்கும். ‘தீ’ ஒளியுடைத்தாதலின் அதனைக் கோளோடு சேர்த்துக் கூறினர்.
‘நாள்’ என்பது அசுவனி முதலாகக் கூறப்படும் 27 நட்சத்திரக் கூட்டங்களையும், ‘கோள்’ என்பது ஞாயிற்றையும் திங்களையும் நீக்கி நின்ற செவ்வாயும் புதனும் வியாழனும் வெள்ளியும் சனியும் ஆகியவற்றையும் குறிப்பன. பஞ்ச பூதங்களுள் தீயினைக் ‘கனையழல்’ என இதனோடுங் கூட்டிக் கூறினர். இவையனைத்தும் ஒருங்கே சேரின் உண்டாகும் மிகப் பேரொளியினைக் கற்பித்து, அதற்குச் சேரலாதனின் பெரும் போர்ப் புகழினை உவமித்தனர்.
தலைமிகுத்தல் – மேற்கொள்ளல். துப்பு – துணைவலி. துறை போதல் – இறுதிவரையும் பிரியாதே துணையாக நிற்றல், ‘அக்குரன்’ என்பான் பாரதப் போரில் நூற்றுவர்க்குத் துணையாக விளங்கிய ஒரு மாவீரன்; வள்ளன்மை மிக்கவன். அக்ரூரன் என்பார் வேறு இவன் வேறு. துணிவு – மனவூக்கம்; மனவூக்கம் இல்லாதபோது ஆண்மையானது சிறத்தல் இல்லையாதலின், ‘துணிவுடை ஆண்மை’ எனக் கூறினர்.
தும்பைப் பகைவர் – புகழ் குறித்துக் கடும்போரைச் செல்யும் மிகுவலி கொண்டாரான பகைவர்; அவர் வலிமிகுதியைக் குறிப்பவர், ‘அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்’ என்றனர்; அதற்கு முன்பேயும் பலப்பல வெற்றிப்போர்களைச் செய்து சிறப்புற்ற மாவலிமையும் செருக்கும் கொண்டவர் என்பதாம். கூற்று – உயிரை உடலினின்றும் கூறிட்டுப் பிரிப்பது; அது வெகுண்டு வரினும் தோற்றோடச் செய்யும் ஆற்றலுடையான் என்றது, சேரலாதனின் போராண்மையை வியந்து கூறியதாகும். ‘பகையெனிற் கூற்றம் வரினும் தொலையான்’ எனக் கபிலரும் இவ்வாறே உவமிப்பர் என்ப.(குறிஞ்சிக் கலி 43)
எழுமுடி – ஏழரசர் திருமுடிகள். திரு – வெற்றித்திருமகள். நோன்மை – வலிமை. சான்றோர் – படைமறவர்; புகழோடு சாதலே நிலையான செவ்வியுடைத்து ஆதலின் படைஞரைச் சான்றோர் என்றனர். அவர்க்கு மெய்ம்மறை எனவே, அவரை அழியவிட்டுத் தான் வெற்றிதேடலைக் கருதாது, அவர்க்குக் காவலாகித் தானே முனைமுகத்து நிற்கும் மாவீரன் இவன் என்பதாம்.
‘வானுறை மகளிர்’ என்றது அரம்பையரை. நலன் – நல்லழகு, பூச்சாலும் புனைவாலும் அல்லாதே இயல்பாகவே அமைந்துள்ள அழகு. வயங்கல் – விளங்கல். ‘கொடுங்குழை’ என்றது சேரமாதேவியை. இது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை; கொடுங்குழையை உடையாள் என விரியும்.
தொகுதி – கூட்டம். பாடினி வேந்தே – பாடற்கு இனிதாகிய பல சிறப்புக்களும் கொண்ட வேந்தனே. பாடினி மகிழ்வுற்றாளாகப் போற்றிப் பாடுதலைச் செய்ய, அதனைக் கேட்டு உவக்கும் வேந்தனே எனினும் பொருந்தும். மிடைதல் – நெருங்கப் பதித்தல். வரைப்பு – உலகம். தவலல் – தாழ்தல். உலகொடு – உலகிடத்து; வேற்றுமை மயக்கம்.
விளக்கம் : ‘நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆரளவின்றே’ எனப் பெரும் பூதங்களின் அளவற்ற தன்மையைப் பிறரும் கூறுவர் (குறுந்தொகை 3 – தேவகுலத்தார் பாட்டு). பொறுத்தலில் நிலத்தைப் போன்றும், அருளும் தன்மையில் நீரைப் போன்றும், வலிமையிற் காற்றைப் போன்றும், ஆராய்வில் வானைப் போன்றும் அளவிறந்த ஆற்றலுடையான் எனப் பொருத்திக் காண்க.
‘கடலக வரைப்பின் இப் பொழின் முழுதும் ஆண்ட நின்முன் திணை முதல்வர்’ என்றது, சேரலாதனுக்கு முற்பட்ட பலகாலத்தும், சேர மன்னருட் பலர் இந்த நாவலந் தீவினை முற்றவும் கைக்கொண்டு ஆண்டுவந்தனர் எனக் கூறியதாம். தவாஅலியர் – கெடாமல் என்றும் புகழோடே விளங்கு வாயாக! குடிச்சிறப்பைக் கூறி, அதனை மேலும் ஒளிபெறச் செய்த இவன் தனிச்சிறப்பையும் வியந்து பாராட்டினர்.
15. நிரைய வெள்ளம்!
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு, வண்ணம்; ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : நிரைய வெள்ளம். இதனாற் சொல்லியது : சேரலாதனின் வெற்றிச் சிறப்பும் நாடுகாவற் சிறப்பும்.
[சேரலாதனின் படைப்பெருக்கத்தின் வலிமையைக் கூறுவார், பகையரசர்க்கு நிரைய பாலரைப்போலத் தோன்றி அழிவை விளைவிப்பவர் எனச் சிறப்பித்த நயம்பற்றி இப் பாட்டிற்கு இப் பெயரைத் தந்தனர்.]
யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து
முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதின்மரம் முருக்கி
நிரைகளிறு ஒழுகிய நிரைய வெள்ளம்
பரந்தாடு கழங்கழி மன்மருங் கறுப்பக் 5
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
அழல்கவர் மருங்கின் உருவறக் கெடுத்துத்
தொல்கவின் அழித்த கண்ணகன் வைப்பின்
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
பீரிவர்பு பரந்த நீரறு நிறைமுதற் 10
சிவந்த காந்தள் முதல்சிதை மூதிற்
புலவுவில் உழவிற் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பின்
அறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தகின்
பகைவர் நாடும் கண்டுவந் திசினே! 15
கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க்
கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்துச்
சீர்பெறு கலிமகிழ் இயம்பும் முரசின் 20
வயவர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை!
தாரணிந் தெழிலிய தொடிசிதை மருப்பின்
போர்வல் யானைச் சேர லாத!
நீவா ழியரிவ் வுலகத் தோர்க்கென
உண்டுரை மாறிய மழலை நாவின் 25
மென்சொற் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த
வெய்துற வறியாது நந்திய வாழ்க்கைச்
செய்த மேவல் அமர்ந்த சுற்றமொடு
ஒன்றுமொழிக் தடங்கிய கொள்கை யென்றும்
பதிபிழைப் பறியாது துய்த்தல் எய்தி 30
நிரையம் வொரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும் பலர்புகழ் பண்பின்
நீபுறக் தருதலின் நோயிகந் தொரீஇய
யாணர்நன் னாடுங் கண்டுமதி மருண்டனென்
மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க் கெஞ்சாது 30
ஈத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பின்
புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி
ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்
நெடியோன் அன்ன நல்லிசை
ஒடியா மைந்த! நின் பண்புபல நயந்தே! 40
தெளிவுரை : சேரலாதனே! மேகங்கள் தவழ்ந்து வந்து தங்கும் உயரமான மதிற்கவர்களையும், அவற்றை அடுத்ததாக விளங்கும் காவற்காடுகளையும் அழித்தவராய், வரிசை வரிசையாகச் செல்லும் போர்க்களிறுகளோடு, பகைத்தார்க்கு நிரயத் துயரையே தருகின்ற நின் படை வெள்ளமானது, நாற்றிசையும் பரந்தபடியாகப் போர்மேற் கொண்டு செல்லும். சென்று, தாம் ஆடிக் குறிகண்ட கழங்கினது செய்தியாலே உள்ளம் உரம் அழிந்தாராய்த், தத்தம் அகநகரிடத்தே செயலற்றபடி தங்கியிருக்கும் மன்னர்களின் சுற்றமாகிய படையணிகளை அழிக்கும். அங்ஙனம் அழித்து, நீதான் கைக்கொள்ளக் கருதிய பகைநாட்டினிடத்தே, ஓர் யாண்டுக் காலம் கழியும் வரையிலும் நின் படை தங்கியிருக்கும். அக்காலத்தே, போர் முனைப்பட்ட பகைவரின் ஊர்களைத் தீப்பரவக் கொளுத்தி அழித்தலையும் அது செய்யும். அணுகுதற்கரிய சீற்றத்தோடும் அவ்வாறு தீயிட்டுக் கொளுத்துதலாலே உயர்ந்து எழுந்த நெருப்புச் சுடர்கள், காற்று மோதலினாலே கொடிவிட்டு மேலெழும் நிறம் அமைந்த புகையானது பிசிராக உடைந்து கெட, இடங்கள் எல்லாம் தீவாய்ப்பட்டு வெந்து அழிவெய்தும். அங்ஙனமாக, வெந்தழிந்த ஊர்களைப் போலவே, தீக்கொளுவாத இடங்களையும் உருக்குலையுமாறு நின் படை அழியச் செய்யும். இவ்வாறு, தம் பழைய அழகான தன்மை எல்லாமே அழிந்துபட்ட இடமகன்ற ஊர்களையும்-
வெண்ணிறப் பூக்களோடும் காணப்படுகின்ற வேளைச் செடிகள் விளங்கவும், பசுமையான சுரைக் கொடிகள் தழைத்துப் படர்ந்திருக்கவும், பீர்க்கங் கொடிகள் மேலேறிப் படர்ந்திருக்கவும், வேரோடுங் காய்ந்து அழிந்துபோன செங்காந்தட் செடிகள் நீர்ச்சால்களிடத்தே நிறைந்திருக்கவும் விளங்கும், புலவு நாற்றமுடைய வில்லாலே உயிர்க் கொலை செய்யும் புல்லிய கள்வர்கள் தங்கியிருக்கும், புல்லே இலையாக வேயப்பெற்ற பாழ்வீடுகளே உள்ள ஊர்களையும், அவை எல்லாம் உடையவாயின
பகைத்தாரது புலங்களை இவ்வாறாக அழிக்கின்ற நினது மறமாண்பினைத் தம்முடைய அறியாமையினாலே மறந்து, நின் பகைமையினை ஏறட்டுக் கொண்ட அப் பகையரசரது நாடுகளைப் பார்த்தவாறே, இங்கே நின் நாட்டிடத்தேயும் வந்தேன்.
கடல்படு பொருள்களும், மலைபடு பொருள்களும், ஆறு பாயும் முல்லை மருதமாகிய நிலங்களிலே விளைகின்ற பொருள்களும், இவையல்லாத பிறநாட்டுப் பொருள்களும் ஆகிய பல்வகை வளங்களும் முட்டாதே பெறப்படுகின்ற, நின் அகன்ற நல்ல நாட்டிலுள்ள, விழாக்கள் ஓய்தலை அறியாத, முழவுகள் சதா முழங்கியபடியே யிருக்கும் மூதூர்களையும் கண்டேன்.
பலவகைப்பட்ட இனங்குறிக்கும் கொடிகளின் நீழலிலே பலவகைப் பொருள்கள் குவிந்து கிடப்பதும், பொன்னை மிகவுடையதுமான கடை வீதிகளிலே, வெற்றியும் கொடையும் பற்றிய செய்திகளை அறிவிக்க முழங்கும் முரசின் ஒலிகளையும் கேட்டேன். வலிமை மிகுந்த மறவர்களுக்குத் தலைவனே! பரிசிலரின் செல்வமாக விளங்குபவனே! தொடி சிதைவுற்றும், மாலையணிந்தும், உயர்ந்தும் விளங்கும் கொம்புகளையுடைய, போரிலே வல்லவான யானைகளைக் கொண்ட படையினை உடையவனாகிய சேரலாதனே!
பகைமை முதலானவற்றாலே மனத்துயரம் ஏதுமின்றிப் பலவகையான நலமும் பெருகியுள்ள இனிதான வாழ்க்கையினையும், வாய்மையே என்றும் பேசுதலையும், புலன்கள் ஐந்தும் அடங்கிய ஒழுக்கத்தையும், நிரயம் எய்தா வகையிலே தீதுகளை முற்றவும் நீக்கிய அறவேட்கையினையும் கொண்டோர் உயர்ந்தோர்! அவர், தாம் விரும்பி மேற்கொண்ட நல்லறங்களையே, தாமும் விரும்பி மேற்கொண்ட தம் சுற்றத்தாருடனே, தாம் வாழும் பதியைவிட்டு நீங்கிச் செல்லும் குற்றத்தை, அறியாதவர். அவர், தாம் விரும்பியவற்றை எல்லாம் இனிதாக நுகர்ந்தவராக, நினக்குரிய தம் ஊர்களிலேயே விரும்பி வாழ்ந்திருக்கின்றனர்.
பலரும் புகழும் பண்பினை உடையோனாகிய நீதான் காத்து ஓம்பி வருதலினாலே, நோயேதுமின்றி விளங்கும் புதுவருவாயினையுடைய நின் நல்ல நாட்டையும் கண்டேன்.
அளவிறந்து உண்டதனாலே மயங்கிப் பேச்சுத் தடுமாறியதனாலே, குழறும் மழலை நிரம்பிய நாவினாலே மென் சொற்களை வழங்குபவர், இசைக் கருவிகள் கொண்ட பையினைக் கையிற்கொண்டோரான பாணர்கள். அவர்கள். திருத்தமான தம் யாழினை இசைத்து மீட்டியபடியே, ‘இவ்வுலகத்தோரின் நல்வாழ்வின் பொருட்டாக நீ நெடிது வாழ்வாயாக’ என்று பாடிநிற்க, நீதான் எழிலோடும் வீற்றிருக்கும், நின் திருவோலக்க நிலையினையும் கண்டேன், பெருமானே!
இம் மண்ணுலகிலே வாழும் நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம் குறைவின்றிக் கொடுத்துக் கொடுத்துக் சைஓய்தல் என்பதே இல்லாத பெருங் கொடையினையும், மிகுதியான வன்மையினையும் உடைமையினாலே, அறிவாலும் ஒழுக்கத்தாலும் உயர்ந்த குடிகட்குப் பெருமையுடைய பொருள்களைத் தந்து இன்பத்தைச் செய்கின்ற திருமாலைப்போல, நல்ல புகழிலே சற்றும் குறைவுபடாத வலிமையினை உடையவனே!
நின் பண்புகள் பலவற்றையும் காணுதற்கு விரும்பிய விருப்பத்தாலேயே, யாமும் மேலே சொல்லப்பட்டவரான நின் பகைவரது, நின்னைப் பகைத்தலாலே அழிவெய்திய நாட்டுப் பகுதிகளையும், நின்னைப் போற்றுதலாலே செழித்து விளங்கும் நாட்டுப் பகுதிகளையும் கண்டோம். அவற்றைச் செய்தருளிய நின்னையும் கண்டு, அந்த இன்பத்தாலே மதி மயங்கியும் போயினோம், பெருமானே! (மதிமயக்கம் பகைவர்க்குச் செய்த கொடுமையையும், நாட்டவர்க்குச் செய்த அருளையும் கருதியதாம்.)
சொற்பொருள் : தலைப்பெயர்தல் – கழிதல். இறுத்தல் – தங்குதல். துன்னல் – நெருங்கிச் சேரல். மரம் – காவற் காட்டிலுள்ள மரங்கள்; கணைய மரமும் ஆம்; கணைய மரமாயின் கோட்டைக் கதவுகளுக்கு வலுவூட்டக் குறுக்காகப் பின்பக்கமாக இடப்பெற்றுள்ள வலிய மரம் எனக் கொள்ளுக. முறுக்கி – அழித்து. ஒழுகல் – ஒன்றன்பின் மற்றொன்றாக இடையீடின்றித் தொடர்ந்து நிரைபடப் போதல். நிரைய வெள்ளம் – நிரையக் காவலர் போன்ற படைப் பெருக்கம்; நிரையக் காவலர் கொள்ளக் கருதிய உயிரைக்கொண்டே மீள்வதுபோலத் தாம் கொள்ளக் கருதிய பகைநாட்டைக் கொண்டே மீளும் படைப் பெருக்கம் என்க. நிரைய வெள்ளம் – நிரை நிரையாக, அணியணியாக, வரிசைப்படச் செல்லும் தானைப் பெருக்கமும் ஆம்.
கழங்கு – கழற்சிக்காய்; இதனை ஆடி, ஒற்றையாக வரின் வெற்றி கிட்டும் எனவும், இரட்டையாக வரின் தோல்வி நேரும் எனவும் நிமித்தம் காணல் பண்டைய மரபு. மன்மருங்கு – அரசச் சுற்றம். கொடிவிடுதல் – தீ கொழுந்து விட்டு எரிதல். குரூஉப் புகை – செந்நிறத்தோடு கூடியெழும் புகை. உருவற – பழைய தன்மை அழிந்துபட கண்ணகன் – இடமகன்ற.
வேளை – நல்வேளை என்னும் குறுஞ்செடி. கலித்து – தழைத்துப் பெருகி. இவர்பு – பற்றிப் படர்ந்து. முதல் – வேர்ப்புறம். மூதில் – பழையதாகிய வீடு. புலவுவில் – புலவு நாற்றங்கொண்ட வில்; வில்லால் அடித்துங் கொல்லுதல் உண்டாதலின் அதுவும் புலவுநாற்றம் கொண்டதாயிற்று. புல்லாள் – புன்தொழிலால் வாழும் ஆறலை கள்வர். புல்விலை – பனை தென்னை முதலியவற்றின் ஓலை; ‘புல்லே ஓலையாகக் கொண்டு வேய்ந்த’ என்றும் கூறுவர்.
பகைப்படை மறவருள் ஓடி உயிர் பிழைத்தார், வாழ்தற்கு வகையற்றோராய்க் காட்டுப்புறத்துப் பாழ்ப்ட்ட ஊர்களிலே மறைந்து வாழ்ந்து, ஆறலைத்து உண்ணும் கள்வரும் ஆயினர் என்க. அரம்பு – குறுங்காட்டரண். துப்பு எதிர்தல் – வலியவரே போலச் செருக்கிப் போருக்கு எழுதல். ‘யாற்றவும்’ என்றது. மருதத்தும் முல்லைப்பகுதியிலும் கிடைக்கின்றவான பொருள்களைக் குறித்தன. பிறவும் – பிற நாட்டுப் பொருள்களும்; சேர நாட்டிலே கிடைக்காத சிறப்புப் பொருள்களும். நல்நாடு – நாடா வளமுடைய நாடு. நியமம் – கடைத்தெரு.
வெறுக்கை – செல்வம், தார் – மாலை. ‘நீ வாழியர் இவ் உலகத்தோர்க்கு’ என்றது, ‘இவ்வுலத்தோர் நல்வாழ்வு அடைதலின் பொருட்டாக நீ நெடுங்காலம் வாழ்வாயாக’ என்றதாம். மென்சொல் – மென்மையான சொற்கள். கலப்பை – இசைக் கருவிகள் இட்டுள்ள பை. தொண்ட – தொடுத்திசைக்கும் இசை. வெய்துறவு – துயரம். மேவல் அமர்ந்த – விரும்பியபடியே அமைந்த ஒன்று மொழிதல் – ஒரே பேச்சாகவே பேசுதல்; வாய்மை தவறாமை. அடங்கல் – புலன், உணர்வுகளை அடக்கி இருத்தல். கொள்கை – கோட்பாடு.
பதி பிழைத்தல் – வாழ்கின்ற பதியிலே வாழவியலாது வேறு பதி நோக்கிப் போதல். நிரையம் ஒரீஇய – தம்முடைய ஒழுக்கச் செவ்வியாலே நிரையஞ் செல்லாதவாறு தடுத்துக் கொண்ட புரையோர் – உயர்ந்தோர். நோய் – நோயும் பசியும். யாணர் – புது வருவாய். மதிமருளல் – மதி மயங்குதல்; ஆனந்த மிகுதியாலே மயங்கி நிற்றல். மண்ணுடை ஞாலம் – மண்ணணுச் செறிவாலே அமைந்த நிலவுலகம். எஞ்சாது – எதையும் தனக்கென மறைத்து வைத்துப் பேணியிராது. ஏமம் – இன்பம். நெடியோன் – திருமால். மைந்து – வலிமை.
விளக்கம் : சேரலாதனின் பேராண்மையினை அவனைப் பகைத்ததனாலே அழிபாட்டை அடைந்த நாட்டின் நிலையைக் கூறுவதனாலும், அவனது செங்கோன்மையினை அவன் நாட்டது பெருவளத்தை உரைப்பதனாலும் எடுத்துக் கூறினர்.
பழைமையான வீட்டது அழிவடைந்த காட்சி சிறந்த சொல்லோவியம் ஆகும். ‘உண்டு உறை மாறிய மழலை’ என்றது, கள்ளுண்டலினாலெ பேச்சு மாறுபட்ட பொருளற்ற சொற்கள் என்றதாம்.
வென்றி வேந்தன் தன் நாட்டிற்கு மீண்டதும், தன் படைமறவர்க்கும் பிறர்க்கும் தான் திறைகொண்ட பெரும் பொருளையும் வழங்கிவருதல் பழந்தமிழர் அரசர் மரபு. அதனைப் பெறுகின்ற மறவர்கள் கடைத்தெருக்களிலே கூடித் தாந்தாம் விரும்பியவற்றை விலைக்குக் கொள்ளுவர் என்று அறிதல் வேண்டும்.
‘நெடியோன் அன்ன நல்லிசை ஒடியா மைந்த’ எனச் சேரலாதனைத் திருமாலுக்கு ஒப்பிட்டனர். காவல் தொழிலினனான திருமாலையொட்டிக் காவற் பணிபூண்ட மன்னர் மரபினரை எல்லாம் திருமாலின் அம்சமாகக் கொள்வது பண்டைய மரபு.
‘சீர்கெழு விழவின் நெடியோன்’ என்பது கடலிடைச் சூரனை வென்று, சீர்கெழு செந்திற்பதியிலே வீற்றிருக்கும் குமரவேளையும் குறிப்பதாகலாம்.
16. துயிலின் பாயல்!
துறை : செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : துயிலின் பாயல். இதனாற் சொல்லியது : சேரலாதனின் வெற்றிச் சிறப்பும், அவன் தன் தேவியோடு கூடியிருப்பதான இன்பநிலைச் சிறப்பும்!
[‘எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப் புரையோர் உண்கண் துயிலின் பாயல் பாலும் கொளாலும் வல்லோய்’ எனச், சேரலாதனின் இல்வாழ்வின் இன்பநிலைச் செவ்வியைக் கூறிய நயத்தால், இப்பாட்டிற்கு இப் பெயரைத் தந்தனர்.)
கோடுறழ்ந் தெடுத்த கொடுங்கண் இஞ்சி
நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல்
துஞ்சுமரக் குழாம் தவன்றிப் புனிற்றுமகள்
பூணு ஐயவி தூக்கிய மதில
நல்லெழில் நெடும்புதவு முருக்கிக் கொல்லுபு 5
ஏமம் ஆகிய நுனைமுரி மருப்பிற்
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
மரங்கொல் மதகளிறு முழங்கும் பாசறை
நீடினை யாகலின் காண்குவந் திசினே!
ஆறிய கற்பின் அடங்கிய சாயல் 10
ஊடினும் இனிய கூறும் இன்னகை
அமிர்துபொதி துவர்வாய் அமர்த்த நோக்கிற்
சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உரியள்
பாயல் உய்யுமோ தோன்றல்? தாவின்று
திருமணி பொருத திகழ்விடு பசும்பொன் 15
வயங்குகதிர் வயிரமோ டுழந்துபூண் சுடர்வர
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்
புரையேர் உண்கண் துயிலின் பாயல்
பாலுங் கொளாலும் வல்லோய்நின்
சாயன் மார்பு நனியலைத் தன்றே. 20
தெளிவுரை : மலைகளின் முடிகளோடும் மாறுபாடு கொள்ளுவதுபோல மிகவும் உயரமாகவும், வளைந்த இடங்களை உடையவாகவும் அமைந்தன பகைநாட்டுப் புறமதில்கள். ஒரு நாட்டையே கண்டாற்போலப் பரந்து விளங்கும், அம்புக் கட்டுகளைக் கொண்டவான அகன்ற இடை மதில்கள். கோட்டைக் கதவுகளிலே தொங்கலாக அமைக்கப்பெற்ற கணையமரங்கள் பலவாகச் செறிக்கப் பெற்றிருக்கும். ஈன்றதன் அணிமையை உடையவளான பெண், தனக்கும் தன் சேய்க்கும் பேய்க்குற்றம் வராதபடிக்குப் பூசிக்கொள்ளும் ஐயவி அல்லாத, ‘ஐயவித் துலாம்’ என்னும் படைக் கருவிகளும் அவ்விடத்தே இருந்தன.
நீதான். நின் களிற்றுப் பெரும்படையோடும் அவ் அரண்களைக் கொள்ளக் கருதினையாகச் சென்றனை. நின் களிறுகள் அக் கோட்டை மதில்களிலுள்ள அழகான நல்ல நெடுங்கதவுகளை எல்லாம் மோதிச் சிதைத்தன. அதனாலே தம் கொம்புகளின் முனைப்பகுதி முறிபட்டுப்போன சில களிறுகள், குறுங்கோட்டினவாய்ப் பன்றி ஏறுகளேபோலத் தோன்றின. எனினும், மதநீரைச் சொரிவனவாகிக், கடுஞ் சினத்தை மிகுத்தனவுமாகி, அக் கோட்டைக் கதவுகளுக்கு இட்டிருந்த கணையமரமும் துலாமரமுமாகிய காவல்களை எல்லாம் மோதி அழித்தன. அவ்வாறு அழித்த அக்களிறுகள் தம் சினம் தணியாவாய், மேலும் பிளிறிக்கொண்டே இருக்கின்ற பாசறையினிடத்தே, நீயும் நெடிதுகாலமாகவே தங்கியிருப்போனாக உள்ளனை. அதனாலே, யானும் நின்னைக் காணுதற் பொருட்டாக இவ்விடத்திற்கே ளந்துள்ளேன், பெருமானே!
அறக் கற்பை உடையவள், அடக்கத்தோடுங் கூடிய பெண்மையைக் கொண்டவள், நின்னுடைய அரசமாதேவி, நின்னோடும் ஊடிச்சினந்த காலத்தும் இனிய சொற்களே பேசுகின்ற இயல்பினள் அவள். இனிதான இளமுறுவலையும், வாயூறலாகிய அமுதத்தையும் கொண்ட சிவந்த வாயினள் அவள். அமர்த்த கண்களையும், ஒளி சுடரிடுகின்ற நெற்றியையும் பெற்றவள் அவள். நின் தேவியான அவள்தான் நின்னைப் பிரிந்து உறைதலாலே ஏற்பட்ட தன் துயரத்தைப் பொறுக்க மாட்டாதாளாயினள். நின்னையே நினைந்து நினைந்து வருந்தும் வருத்தத்தினளும் ஆயினள்!
தோன்றலே அழகிய மணிகள் இழைக்கப் பெற்றதும், ஒட்டற்ற பசும்பொன்னாலே செய்யப்பெற்றதுமான பூண் ஆரமானது, விளங்கும் கதிர்களைக் கொண்ட வயிரமணிகளோடும் மாறுபட்டுச் சுடரிட்டுக் கொண்டிருக்கத் திகழ்வது நின் தேவியது அழகிய மார்பகம். கற்பிற் சிறந்தாளான அவள்தான்—
ஏழு அரசர்தம் முடிப்பொன்னலே செய்யப்பெற்ற வெற்றியாரம் விளங்குவதும், வீரத்திருமகள் நிலையாக வீற்றிருப்பதுமாகிய சிறப்பைக் கொண்ட நின் மார்பினிடத்தே, தன் மையுண்ட கண்கள் துயிலுவதற்கான இனிய பாயலைப் பெறுவாளோ? செய்வினை கருதிச் சென்ற காலத்திலே அவளைப் பிரிந்து தங்குதலும், மீட்டும் மனைக்கண்ணே வந்து வாழ்கின்ற காலத்திலே அவளைத் தழுவிக் கொள்ளலுமாகிய இருவகையிலுமே வல்லமை யாளனே! நின் ஆண்மைபொருந்திய மார்பின் நினைவுதான் இதுகாலை நின் தேவியைப் பெரிதும் வருத்துகின்றது!
ஆதலினாலே, அவள்தான் தான் கொண்ட பாயலினிடத்தே கிடந்தும் இனிப் பிழைத்து எழுவாளோ? அதுதான் அரிதாகலின், நீதான் விரையச்சென்று அவளைக் காத்தருள் வாயாக, பெருமானே!
சொற்பொருள் : கோடு – மலைச்சிகரம். உறழ்தல் – மாறு படல். கொடுங்கண் – வளைந்த இடம். இஞ்சி – புறமதில். ஐயவி – மகப்பேறு பெற்றாள் பூசுவது பேய்ப்பகையாகிய ஐயவி: இங்கே குறிப்பிடப்பெறுவது ஐயவித்துலாம் என்னும் படைக்கருவிகளுள் ஒன்று. ‘கோடுபுரந்து எடுத்த’ எனக் கொண்டு, மதிலற்ற இடங்களை மலைச்சிகரங்கள் மதில்போற் காத்துப் பேணிக்கொள்ள எனப் பொருள் கொள்ளலும் பொருந்தும்.
கணைதுஞ்சல் – கணை ஓய்ந்திருத்தல். புதவு – புதை கதவம். ஏனம் – பன்றியின் ஏறு. மழகளிறு – இளங்களிறு. பொத்தி – மூண்டு வந்திசின் என்னும் வினையோடு சென்று முடிந்தது.
ஆறிய கற்பு – அறக் கற்பு: துயரைச் சகித்துக்கொள்ளலும், சகிக்கவியலாத எல்லைக்கண் உயிரைத் துறத்தலும் இது. அடங்கிய சாயல் – அடக்கமான பெண்மை நலம்; பரத்தையரைப் போலப் பூசி மினுக்காது அளவாக ஒப்பனை கொண்டு ஒழுகும் கற்புடைய மகளிரது தன்மை. ஊடற் காலத்தும் இனிய கூறும் செவ்வியுடையாள் என்றது, எதனாலும் தன் கணவனைப் பழித்துரைக்க மனம் ஒவ்வாத சிறப்புடையாள் என்றற்கு. அவள் பாயலே துணையாயினாள் என்றது, அத்துணைக்குப் பிரிவின் மெலிவால் தளர்ந்தாள் என்றதாம்.
‘புறத்துறையிற் பெறுகின்ற வெற்றியே கருதினை: அகத்துறையிற் பெறுகின்ற இன்பத்தை மறந்தனை; அதனால், நின் தேவியையும் இழந்துவிடப் போகின்றனை’ என்கின்றன்ர். தோன்றல் – பெருமையிற் சிறந்தோன்: அண்மை விளி.
நின் மார்பிடத்தே கண் துயிலும் இனிய பாயலின் நினைவினள்; ஆதலின் பிற பாயலிற் படுத்தும் கண் உறங்காத நிலையினள் ஆயினள் என்றதாம். ‘புரையோர்’ என்னும் பன்மை, காதற் பரத்தையரைக் குறித்தது என்பர்; அவன் தேவியை குறித்தது என்பதே பொருத்தமாகும்.
விளக்கம் : “நாடு கண்டன்ன” என்றது, இடத்தின் அகற்சி நோக்கிக் கூறியதாகும்; நெடுநாட்பட அடைமதிற் பட நேரிட்ட காலத்தும், விளைத்துக் கோடற்கு வயலும் குளமும் உளவாகச் சமைத்து வைத்துள்ள தன்மை. துஞ்சு மரம் – கணையமரம்.
‘பால்’ என்றது, இல்லுறை காலத்து மார்பைத் தழுவக் கொடுத்தலையும், ‘கொளா அல்’ என்றது, பிரிவுக் காலத்து அதனைத் தன்பாற் கொண்டுபோதலும் ஆம்.
17. வலம்படு வியன் பணை!
துரை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு : செந்தூக்கு. பெயர் : வலம்படு வியன்பணை. இதனாற் சொல்லியது: சேரலாதனின் அருளுதற்செவ்வியும் வென்றிமேம்பாடும்.
[“போரினைச் செய்து வருத்தமேதும் அடையாதே. பகைவர் தாமே ஒலியைக் கேட்டவளவிலே வெருவியோடு மாறு முழங்குவதாய், அரசனுக்குத் தன் முழக்கத்தாலேயே வெற்றியினை வாய்க்கப்பண்ணும் முரசம்’ என்று முரசத்தை நயமுறச் சிறப்பித்துக் கூறியதனால், இப் பாடலுக்கு இது பெயராயிற்று.]
புரைவது நினைப்பிற் புரைவதோ இன்றே
பெரிய தப்புந ராயினும் பகைவர்
பணிந்துதிறை பகரக் கொள்ளுனை யாதலின்
துளங்குபிசிர் உடைய மாக்கடல் நீக்கிக்
கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்டணை 5
ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்க்
கடிப்புக் கண்ணுறூஉம் தொடித்தோள் இயவர்
நனந்தலைப் பைஞ்ஞிலம் வருகவிக் நிழலென
ஞாயிறு புகன்ற தீதுசீர் சிறப்பின் 10
கடுங்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின்
விசும்புதோய் வெண்குடை நுவலும்
பசும்பூண் மார்ப! பாடினி வேந்தே!
அலைகின்ற அலைகளானவை கரையிடத்தே வந்து மோதிச் சின்னஞ்சிறு திவலைகளாக உடைந்து போகும்படியாகப் பெருங்கடலினைக் கலமேறிக் கடந்தும் சென்றனை. அவ் விடத்துப் பகைவரது காவன் மரமாகியிருந்த கடம்பினை அறுத்துக் கொணர்ந்து, அதனால் நினக்குரிய வெற்றி முரசத்தையும் செய்துகொண்டனை. “வெற்றியுண்டாக” என ஒலிக்கின்ற அப் பெரிய முரசுக்குப், பகைவரை வெல்வோரான நின்படை மறவர், களத்தினின்றும் மீண்டும் வந்ததும், அரிய பலியினை ஊட்டிப் போற்றிப் பரைசுவர். அங்ஙணம் வந்து அவர்கள் பரைசுமாறு, முரசின்கண்ணிடத்தே குறுந்தடி கொண்டு அறைந்து முழக்குவோரான, தொடியணிந்த தோள்களையுடைய இயவர்கள் முழக்கியபடியே இருப்பார்கள்.
ஞாயிறு தன் பகையாகிய இருளினைக் கெடுப்பதனை விரும்பியதாகச் செல்லுகின்ற குற்றமற்ற சிறப்பினையும், நீரைக்கொண்ட மேகக்கூட்டங்கள் திரண்டு எழுந்து பரவுகின்ற பரப்பினையும் உடையது வானம். அதனைத் தோய்ந் தாற்போலே உயர்ந்து விளங்குவது நின் வெண்கொற்றக் குடை. அதனைச் சுட்டிக்காட்டி, “தமக்கு அரண் யாதினையும் காணாதே திக்கனைத்தும் தேடியலைகின்றவரான விரிந்த இடத்தையுடைய பசுமையான நிலத்தே வாழ்கின்ற மக்கள் எல்லாரும் இந் நிழலின்கண்ணே வத்தடைவீராக’ எனச் சொல்லுவதுபோல, அம் முரசின் முழக்கமும் ஒலித்தபடியேயிருக்கும்!
பசிய பொற்பூணினை அணிந்த மார்பினை உடையோனே! பாடினிக்கு வரிசை அறிந்து சிறப்புச் செய்யும் வேந்தனே! நின் பகைவர், பெரும் பிழையினையே செய்தனராயினும், அதனை உணர்ந்தாராய் வந்து நின்னைப் பணிந்துநின்று திறை செலுத்தினராயின் அவரையும் பொறுத்து, அவர் தரும் அப் பொருளையும் ஏற்றுக் கொள்ளுகின்றன. ஆதலினாலே, நின்னது அருளுக்கு ஒப்பாவது ஒன்றனை நினைப்போமானால் அதுதான் யாதொன்றும் இல்லை, பெருமானே!
சொற்பொருள் : புரைவது – ஒப்பாவது. பகர – இன்னது தருவோம் எனக் கூறிச் செலுத்த. துளங்கல் – அசைதல். பிசிர் – சிறு திவலை. மாக்கடல் – பெருங்கடல்; கருங்கடலும் ஆம். கடம்பு – கடப்ப மரம்; பகைவரது காவன் மரம். வியன் பணை – பெரிய முரசம். ஆடுநர் – போராடும் மறவர். பலி – பலியிட்டுப் படைப்பன. கடிப்பு – குறுந்தடி. இயவர் – முரசு முழக்குவோர். அரணம் – காவலிடம். மாதிரம் . திசை. துழைஇய – தேடியாராய்ந்த கருவுதல் – திரளுதல். கணம் – கூட்டம். மழை – மேகம். கால் – காற்று. கொட்கும் – நிலவும். நுவலும் – எடுத்துரைக்கும். பசும்பூண் – பசும் பொன்னாலே செய்யப்பெற்ற பூண். பாடினி – பாடும் பாண் மகள்.
விளக்கம் : கடலிடையுள்ள பகைவரை வெற்றிகொண்டான் என்பது தோன்ற, ‘மாக்கடல் நீக்கி’ என்றனர். பெரிய தப்புநர் – பெரிதான தப்புச் செய்தவர். அவரை முற்றவும் அழித்தலே செய்தற்கு உரியதாயினும், அவரும் பணிந்து திறை பகர, அவரையும் பொறுத்தருளிய பெருந்தன்மை கொண்டோன் சேரலாதன் என்பதுதோன்றக் ‘கொள்ளுநை’ என்றனர்.
வலம்படு வியன்பணை – வெற்றியை ஒலிக்கின்ற பெரிய முரசம். ‘வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன்’ எனப் புறப்பாட்டுக் கூறுவதும் காண்க (புறம் 60), போர்க்களத்திலே நாற்றிசையும் சுற்றிச் சுழன்று போரிடுவர் மறவர்; ஆதலின் அவரை ‘ஆடுநர்’ எனச் சிறப்பித்தனர். அவர் கால் பெயர்த்துவைத்துப் போரிடும் வரிசை முறைமையினை ஆடுதல் எனக் கூறியதும் ஆகும்.
‘பொன்புனை உழிஞை சூடி மறியருந்தும் திண் பிணி முரசம்’ (பு. வெ. மாலை 98) எனப் பலியிடலைப் பிறர் தெளிவு படக் கூறுதலுங் காண்க.
‘அமிழ்து’ – மழைநீர். ‘பாடினி வேந்தே’ என்றது, பாடினியின் பாட்டைக் கேட்டு உவந்து வரிசையளித்துச் சிறப்பித்த வேந்தனே என்றதாம்.
18. கூந்தல் விறலியர்
துறை : இயன்மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு பெயர் : கூந்தல் விறலியர். இதனாற் சொல்லியது: சேரலாதனின் கொடைச் சிறப்பு.
[‘சமையல் தொழிலுக்கு வருகவென்று, கூத்திற்குத் தம்மை ஒப்பனை செய்தபடியே இருக்கும் ஆடல் விறலியரையும் அழைத்த, சிறந்த விருந்தோம்பும் பண்பு நயத்தாலே இப் பாட்டிற்குக் ‘கூந்தல் விறலியர்’ என்பது பெயராயிற்று.]
உண்மின் கள்ளே அடுமின் சோறே
எறிக திற்றி ஏற்றுமின் புழுக்கே
வருநர்க்கு வரையாது பொலங்கலரந் தெளிர்ப்ப
இருள்வணர் ஒலிவரும் புரியவிழ் ஐம்பால்
ஏந்துகோட் டல்குல் முகிழ்நகை மடவரல் 5
கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே
பெற்ற துதவுமின் தப்பின்று பின்னும்
மன்னுயிர் அழிய யாண்டுபல துளக்கி
மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட
தண்ணியல் எழிலி தலையாது மாறி 10
மாரி பொய்க்குவ தாயினும்
சேர லாதன் பொய்யலன் நசையே!
கள்ளினை உண்பீராக. சோற்றினைச் சமைப்பீராக. தின்னப் பெறுவதற்கு உரிய ஊனின் துண்டங்களை அறுப்பீராக. புழுக்குதற்குரிய பருப்புவகைகளை உலையிடத்தே ஏற்றுவீராக. இருண்டதும், கடை சுருண்டதும், தழைத்து முடியவிழ்ந்து ஐவகைப் பகுப்பாக முடிக்கப் பெறுவதுமாகிய கூந்தலைக் கொண்டோரே! ஏந்திய பக்கத்தைக் கொண்ட அல்குல் தடத்தைக் கொண்டோரே! முகிழ்த்த இளநகையினையும் இளமைப் பருவத்தினையும் உடையவராய்க் கூந்தலழகால் மிக்கவராக விளங்கும் விறலியரே! இன்னும் வருவாருக்கும் வரையாது உணவு அளித்தலின் பொருட்டாக, நீவிர் அணிந்திருக்கும் பொற்றொடிகள் ஒலிசெய்ய, நீவிரும் சென்று அடுப்படியிலிருந்தபடி சமைத்தலைச் செய்வீராக!
நம்மை நாடி வருகின்ற புதியவருக்கு உணவளித்தலே அல்லாமல், நாம் சேரலாதனிடமிருந்து பெற்ற செல்வங்களிலும் அவர்க்குச் சிறிது தருவீர்களாக. பின்னும், அது தவறாகாது. மண்ணணுச் செறிந்த இந்த உலகைக் காத்தலை மேற்கொண்ட தண்மையான இயல்பைக்கொண்ட மேகங்கள், தாம் பெய்தலைச் செய்யாவாய் மாறுபடலாம். அதனால் நிலைபெற்ற உயிர்கள் பலவும் அழிவை அடையலாம். பலவாண்டுகளாக, இவ்வாறு மழை பொய்த்தலாலே உலகுயிர்கள் வருத்தமுற்ற போதிலும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பின்னும் பின்னும் நம் விருப்பம் பொய்ப் படுமாறு நமக்கு ஏதேனும் தாராதிருப்பான் அல்லன். மீள மீளச் சென்றாலும் நிரம்பத் தருவான். ஆதலினாலே, பெற்ற செல்வத்தைப் பிறருக்கும் உவந்தளித்து அனைவரையும் மகிழ்விப்பீராக!
சொற்பொருள் : கள் – மது. திற்றி – தின்னற்கு உரியவான ஊன் துண்டங்கள். ஒலிவரல் – தழைத்தல். அடுப்பு வழங்குக – அடுப்படித் தொழிலிலே ஈடுபடுக. சேரலாதனிடம் பரிசில் பெற்றுவரும் பர்ணர் தலைவனது களிப்பின் வெளிப்பாடு இது. நாடு வறங்கூர்ந்த காலத்தும் சேரலாதன் நமக்கு உதவிக் காப்பான் என்று உரைக்கும் உறுதிச்சொல் சேரலாதனின் தண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். தண்ணியல் – தண்ணிதாம் இயல்புடைய. இரவலனே புரவலனாகிப் பிறரை உபசரிக்கின்ற் செவ்வி இதன்கண் காணற்கு உரியது. இது சேரலாதனின் வண்மைமிகுதியைப் போற்றுவது ஆகும்.
19. வளனறு பைதிரம் !
துறை : பரிசிற்றுறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும், தூக்கு: செந்தூக்கு. பெயர்: வளனறு பைதிரம். இதனாற் சொல்லியது: சேரலாதனின் வெற்றிச் சிறப்பும் அவன் குலமகளோடு நிகழ்த்தும் இல்வாழ்வின் இன்பச் செவ்வியும்.
[பாசறைக்கண் உள்ளான் தலைவன். அவன்பாற் சென்று, பாணன் தலைவியின் பிரிவுத்துயரத்தைப் போக்கி உதவுமாறு இரக்கின்றான். இத் துறையமைதியினாலே இப் பாட்டு ‘பரிசில் துறைப் பாடாண் பாட்டு’ ஆயிற்று: ‘அவ்வினை மேவலையாகலின்’ எனவும், யார் சொல் அளியை’ எனவும் சொற்சீர் வந்தமையால், ‘சொற்சீர் வண்ண’மும் கூறப்பட்டது. ‘வாழ்தல் ஈயா’ என்னும் அடையின் சிறப்பால் வளனறு பைதிரம்’ என்னும் பெயர் அமைந்தது.]
கொள்ளை வல்சிக் கவர்காற் கூளியர்
நல்லுடை நெடுநெறி போழ்ந்துசுரன் அறுப்ப
ஒண்பொறிக் கழற்கான் மாறா வயவர்
திண்பிணி எஃகம் புலியுறை கழிப்பச்
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய 5
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர்
கடிப்புடை வலத்தர் தொடித்தோள் ஒச்ச
வம்புகளை வறியாச் சுற்றமோ டம்புதெரிந்
தவ்வினை மேவலை யாகலின் 10
எல்லு நனியிருந் தெல்லிப் பெற்ற
அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும்
கனவினுள் உறையும் பெருஞ்சால்பு ஒடுங்கிய
நாணுமலி யாக்கை, வாணுதல் அரிவைக்
கியார்கொல் அளியை 15
இனந்தோ டகல வூருடன் எழுந்து
நிலங்கண் வாட காஞ்சில் கடிந்துநீ
வாழ்தல் ஈயா வளனறு பைதிரம்
அன்ன வாயின பழனந் தோறும்
அழன்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து 20
நெல்லின் செறுவின் நெய்தல் பூப்ப
அரிநர் கொய்வாள் மடங்க வறைநர்
தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த
இன்றோவன்றோ தொன்றோர் காலை
நல்லம னளிய தாமெனச் சொல்லிக் 25
காணுநர் கைபுடைத் திரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே.
பகைப்புலத்தைக் கொள்ளை யிடலாலே கிடைத்த உணவையும், வினைநோக்கி மேற்செல்லலையே விரும்பும் கால்களையும் கொண்டவர் நின் கூளிப் படையினர். அவர்தாம் கற்களைக் கொண்டதான நெடிய மலைப்பகுதிகளைப் பிளந்து, சுரத்திடத்தே படைசெல்வதற்கான வழியினை அமைப்பர். ஒள்ளிய பொறிகளைக் கொண்ட கழல்களைக் கால்களிலே இட்டுச் செல்பவரான, முன்னிட்ட அடியைப் பின்னிடலையே அறியாதவரான நின் போர் மறவர்கள், அவ் வழியாகச் சென்று பகைவரை வெற்றிகொள்ளக் கருதுவர். காம்போடு திண்ணிதாகக் செறிக்கப்பெற்ற வாட்படையைப் புலித்தோல் உறையினின்றும் கழித்துச் செம்மை செய்வர். பகைவரது குருதியாற் சிவப்பெய்தும் போர்க்களத்தை நாடிச் செல்லுகின்ற விருப்பத்தோடு, கூலங்களுள் ஒன்றாக நிரம்பிய நிறமுள்ள செந்தினையைக் குருதியோடும் கலந்து தூவிப் போர்முரசுக்கு இயவர் நாட்பலி இடுவர். அதன் பின்னர், நீராட்டப்பெற்று வந்ததும், வார்க்கட்டு அமைந்ததுமான முரசத்தின் கண்ணிடத்தை மீளவும் ஒழுங்குசெய்வர். அதன் பின் தம் வலக்கையிலே குறுந்தடியை ஏந்தியவரான முரசு முழக்குவோர், தொடியணிந்த தம் தோள்களை ஓச்சியவராக அம் முரசினை அடித்தும் முழக்குவர். அம் முழக்கினைக் கேட்டதும், தம் கைச்சரடுகளைக் களைதலறியாத படைத் தலைவர் முதலியோருடன், அம்புகளை ஆராய்ந்தவாறு, நீயும் அப் போர்ச் செயலையே மேலும் விரும்பியவனாக இருக்கின்றனை!
நீதான் அவ்வாறு போர்வினையையே விரும்பிய உள்ளத் தினன் ஆதலினாலே, பகலில் நின் பிரிவைப் பெரிதும் ஆற்றி யிருந்தும், இரவின்கண் அரிதாகப்பெறுகின்ற துயிலிடத்துக் கனவினுள், தான் நின்னைக் காணப்பெற்றதான அந்தச் சின்னஞ்சிறு மகிழ்ச்சியினால் மட்டுமே உயிரைத் தாங்கியபடி மனைக்கண்ணே தங்கியிருப்பாள் நின் அரசமாதேவி. பெரிதான சால்பினையும், உடல் மெலிவாலே எழுகின்ற ஊரலரால் நாணம் நிரம்பி ஒடுங்கிய உடம்பினையும், ஒளி பொருந்திய நுதலினையும் உடையவள் அவள்! அவள்பால், நீதான், நின் நினைவைச் செலுத்தினா யல்லை! ஆதலின், அவளுக்கு நீதான் யாரோகாண்! நீதான் அளிக்கத்தக்கவனாவாய்!
நின்னைப் பகைத்தோர் நாட்டிலுள்ள மக்கள் அனைவருமே, அவர்தாம் பேணிக்காத்த ஆடும் மாடும் ஆகியவை எல்லாம் தொகுதி தொகுதியாகத் தம்மைக் காப்பாரின்றி நாற்புறமும் பரந்தோடிப் போகத், தாமும் ஊரூராகத் திரண்டெழுந்து, தத்தம் ஊர்களைவிட்டு அகன்று போவாராயினர். உழவுத்தொழிலைக் கைவிட்டவராக, அவரெல்லாம் “தத்தம் உயிர்பிழைக்கும் பொருட்டாசுத் தத்தம் ஊர்களை விட்டு நீங்கியமையால், அவ்வவ்வூர்களிலிருந்த விளைநிலங்கள் எல்லாமே வாட்டமுற்றன. அவருள் எவருமே உயிர்வாழ்ந்திருத்தல் என்கின்ற ஒரு தன்மையை நீயும் அவர்க்குத் தாராமையினாலே, நின்னைப் பகைத்தோரது நாடுகள் எல்லாமே வலிமைகெட்டு அழிந்துபோன தன்மையாயின.
வயல்களைச் சார்ந்துள்ள நீர்நிலைகளுள் முன்காலத்தே அழலைப்போலச் செந்நிறத்தோடே விளங்கும் செந்தாமரை மலர்கள், ஆம்பல் மலர்களோடும் சேர்ந்து மலர்ந்திருந்தன. நெல்விளையும் வயல்களிலே நெய்தல்மலர்கள் பூத்திருந்தன. விளைந்த நெற்கதிரை அரிவாரது கொய்யும் வாள் இவற்றாலே தம் வாய் மடங்கிப் போயின. கரும்பு வெட்டுவோர் சாற்றைப் பிழிகின்ற எந்திரத்திலுள்ள சாறுபாயும் பத்தல் சிதைந்து போயிற்று. இந்நிலை இன்றைக்கோ அன்றைக்கோ அன்று: தொன்றுதொட்டே இத்தகைய வளங்களாலே அந்நாடுகள் மிக நல்லவையாகவே இருந்தன. இப்போது நின்னைப் பகைத்தலினாலே அழிவுற்ற அவற்றின் அழிவைக் கண்டோரெல்லாம், தத்தம். வாயாரச் சொல்லிச் சொல்லித் தம் கைகளை மார்புக்கண்ணே அறைந்து இரக்கங்கொள்வர்! பலவகை வளன்களாலும் மாட்சியுற்றிருந்த அவர்தம் வள நாடுகள், இப்போது, கெட்டு அழிந்த தன்மையை உடையவாயின, பெருமானே! இனியேனும், நின்போர்வினையை மேற் கொள்ளுதலை மறந்தாயாய், நின் தேவியுடன் இனிதே கூடி இருப்பாயாக!
சொற்பொருள் முதலியன : கொள்ளை வல்சி – கொள்ளை யிட்டுப் பெறலாலே கிடைக்கும் பொருள்களாற் கொள்ளும் உணவு. கூளியர் – கூளிப்படையினர். இவர் படையணிகட்கு முற்படச்சென்று அவை செல்லுவதற்கேற்ற வழியமைத்துத் தருபவர். ‘கவர்காற் கூளியர்’ என்றது, அவர் மென்மேற் சென்றுகொண்டே இருப்பவராதலினால். ‘கூர்நல் அம்பின் கொடுவிற் கூளியர், கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில் கொள்பதம் ஒழிய வீசிய புலனும்’ என இவரைப் பற்றிக் கல்லாடனாரும் (புறம், 23) கூறுவர். கவர்கால் – செலவையே விரும்பின கால்; ‘கவர்வு விருப்பாகும்’ என்பது தொல்காப்பியம் (சொல் 362). கல்லுடை நெடுநெறி – கற்களையுடைய நெடிய வழி: இது மலைப்பாங்கில் அமைந்த வழி. ‘நெடுநெறி போழ்ந்து’ என்றது, குறுக்கிட்ட பாறை முதலான தடைகளை உடைத்து வழிசெய்து என்றதாம். ‘சுரன் அறுப்ப’ என்றது அமைத்த வழியானது சுரனை ஊடறுத்துச் செல்வதுபோல அமைந்து விளங்க என்றதாம். பொறி – அரும்பு வேலைப்பாடுகள்; கழல் – வீரக்கழல். ‘ஒண்பொறிக் கழல்’ என்பது ஒள்ளியவான மறச்செயல்கள் பொறிக்கப்பெற்ற கழலும் ஆம். திண்பிணி -திண்ணிதாகப் பிடியோடு பொருத்தப்பெற்றுள்ள தன்மை. புலியுறை – புலித்தோலாற் செய்யப்பெற்ற வாளுறை. செங்களம் – குருதியாற் சிவப்புற்ற களம். எஃகம் – வாள்; ‘வேல்’ எனின் உறைகழித்தல் என்றது பொருந்தாது. கண்பெயர்த்தல் – கண்ணிலிடும் மருந்தைப் பெயர்த்திடுதல். மண்ணுறல் – நீராட்டப் பெறுதல். வம்பு – கைச்சரடு. சுற்றம் – படைத்தலைவர் முதலாயினோர். அவ்வினை – அழகிய தான போர்வினை.
எல் – பகற்பொழுது. ‘நனி இகந்து’ என்றது, பெரிதும் துயரை மறந்து ஆற்றியிருந்து என்றதாம். எல்லி – இரவுப் பொழுது. ‘சிறு மகிழ்’ என்றது, அவனோடு கொண்ட உறவு கனவாக மட்டுமே அமைதலால்; அதுதான் உயிர்தரித்திருக்க உதவுவதாயிற்று! அதுவுமின்றெனில் அவள் என்றோ மாய்ந் திருப்பாள் என்றதாம். ஒடுங்கிய நாணுமலி யாக்கை’ என்றது, பிறர் தன் கணவனைப் பழிக்க, அது கேட்கப் பொறாதும், அதனைத் தடுக்கவியலாதும் தன் நிலைக்கு நாணிய வளாக ஒடுங்கியிருக்கும் உடல்நிலை. ‘வாணுதல்’ என்றது அவளுடைய பழைய அழகினை; இதுபோது அதுதான் பசலையால் உண்ணப்பட்டுப் பொலிவழிந்திருக்கின்றது என்பதாம். அவளை இன்புறுத்தி உயிரைக் காவாது நீதான் இவ்வாறு பாசறையே இருப்பிடமாக வாழ்வதுதான் அரசமுறையோ என்பார், ‘யார் கொல் அளியை?’ என்றனர்.
இனம் – ஆனினம்; அவை “தோடு அகல” என்றது, காப்பாரற்றமையால் தொகுதிதொகுதியாகத் தாமே ஊரை விட்டு அகன்றவாய் நாற்புறமும் பரந்துசெல்ல என்றதாம். ஊருடன் – ஊரவர் அனைவரும்; இஃது போர்மறவரல்லாத பிறரும் மேல்வரும் சேரலாதனின் படைவரவுக்கு அஞ்சியவராகத் தம் ஊரைவிட்டு அகன்றதான அச்சத்தன்மை கூறியதாம். நிலம் கண் வாட – விளைநிலங்கள் தம்மைப் பேணும் உழவரற்றமையாற் காய்ந்துபோக. நாஞ்சில் – கலப்பை. பைதிரம் காடுகள். பழனம் – வயலும், வயலடுத்த நீர்நிலையும். அரிநர் – கதிரரிவோர். கொய்வாள் – கதிரரி வாள்; இது வளைவானது. அறைநர் – கரும்பு வெட்டுவார். பத்தல் – எந்திரத்திலிருந்து சாலுக்குக் கருப்பஞ் சாற்றைக் கொண்டு செல்லும் தூம்புடைய தோற்கருவி. தொன்றோர் காலை தொன்றுதொட்டே. நல்ல – நல்வளம் உடையவா யிருந்தன. ‘கைபுடைத்து இரங்கலாவது’ அழிபாட்டின் கொடுமையைக்கண்டு மனம்தாளாமல் கையால் மார்பில் அடித்தவாறு வருந்துதல். ‘மாண்டன பல’ முன்பு: ஆயின் இனி, அவையெல்லாம் ‘மாணா மாட்சிய’ ஆயின வென்று முடிக்க.
நின்னைப் பகைத்தோர் அரசர்; எனினும், நீதான் அவர் நாட்டையே முற்றவும் அழித்து, மக்களை அலைக்கழியவிடுதல் பொருந்துமோ என்பார்போலச் சேரலாதனைப் பகைத்தவர் நாட்டின் பேரழிவைக் கூறுவதன் மூலம், அவன் போர் மறத்தை உணர்த்துகின்றார். ‘இதனைச் செய்யும் நீதான் நின் தேவியின் அழிவை நினைப்பாயோ?’ என்று வருந்தி உரைப்பதுமாகலாம்.
‘மாணா மாட்சியாகிய’ என்றது, மேலும் அவர்தாம் தம் நாட்டை வளப்படுத்தும் வன்மையைப் பெறாதவாறு, நீதான் வலியவரான ஆடவரை முற்றவும் அழித்ததனாலும், எவரையும் சென்று தொழில் செய்வதற்கு இசைவளிக்காத தனாலும், அவை வளனறு பைதிரமாகவே இனி என்றும் விளங்கும் போலும் என்பதாம்.
இதனுற் சேரலாதனின் பாசறை இருக்கையும், பகை யொழிக்கும் மறமாண்பும் உரைத்து, தேவியின் நலிவையும் சொல்லி, இப் போர்மறச்செயலை நிறுத்திவிட்டுத் தேவியைக் காத்தருளச் செல்லுமாறும் குறிப்பாக உரைக்கின்றனர்.
20. அட்டுமலர் மார்பன் !
துறை : இயன்மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும். பெயர் : அட்டுமலர் மார்பன். இதனாற் சொல்லியது : சேரலாதனின் போர் மறமும் கொடை மறமும்.
[சேரலாதனின் இயல்புகளைக் கூறி வாழ்த்தியமையால் இது ‘இயன்மொழி வாழ்த்து’ ஆயிற்று. “இரு முந்நீர்”, ‘முரணியோர்’, ‘கடிமிளை’, ‘நெடுமதில்’ எனவெழுந்த வஞ்சி யடிகளான் வஞ்சித் தூக்கும் ஆயிற்று. செருக்கினாற் கொண்ட மகிழ்வினை, ‘அடாஅ அடுபுகை அட்டுமலர் மார்பன்’ என்று நயம்படக் கூறிய சிறப்பால், இப் பாட்டுக்கு இது பெயராயிற்று. சேரலாதனிடம் பரிசில் பெற்றுச் செல்வானாகிய பாணன் ஒருவன், இடைவழியிலே எதிர்ப்பட்டான் ஒரு பாணனுக்குச் சேரலாதனின் கொடைத் திறத்தை எடுத்துச்சொல்லி, அவனிடம் செல்லுமாறு வழிப் படுத்துவதாக அமைந்த பாட்டு இது.]
நுங்கோ யாரென வினவின் எங்கோ
இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன்; வாழ்கவவன் கண்ணி! 5
வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே
கனவினும் ஒன்னார்தேய வோங்கி நடந்து 10
படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டும்
கடாஅ யானைக் கணநிரை யலற
வியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து
புலவர் ஏத்த வோங்குபுகழ் நிறீஇ
விரியுளை மாவுங் களிறுந் தேரும் 15
வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக்
கடிமிளைக் குண்டு கிடங்கின்
நெடுமதில் நிலைஞாயில்
அம்புடை யாரெயில் உள்ளழித் துண்ட
அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன் 20
எமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும்
பரிசின் மாக்கள் வல்லா ராயினும்
கொடைக்கடல் அமர்ந்த கோடா நெஞ்சினன்
மன்னுயிர் அழிய யாண்டுபல மாறித்
தண்ணியல் எழிலி தலையா தாயினும் 25
வயிறுபசி கூர வீயலன்
வயிறுமா சிலீயரவ னீன்ற தாயே!
“நும் கோமான்றான் யாரோ?” என்று என்னைக் கேட்பாயாயின், எம் கோமான், பெருங்கடல் நடுவேயிருக்கும் தீவிடத்திலிருந்தபடியே, தன்னைப் பகைத்தோரை,அவரிருந்த அவ்விடத்திற்கே சென்று வெற்றிகொண்டு, அவர் தம் காவன் மரமாகிய கடம்பினையும் அடியோடு வெட்டியழித்த கடுஞ்சினத்தையும் வலிமையையும் உடையவனாகிய நெடுஞ் சேரலாதன் ஆவான். அவன் தலையிற் சூடியிருக்கும் தலைமாலை என்றும் வாழ்வதாக! *
தனக்கு மாறுபட்டார். அவர்தம் நாட்டிடத்தே தனக்கு மாறுபாடாகச் செய்யும் பகைச்செயல்களுள், வெயிலிடத்துக் காணப்பெறும் சிறு துகளினளவுக்குச் சிறிய செயல்களையுங்கூட, அவை அவர்கட்குப் பயன்படுமாறு விட்டுவைத்தலை அறியாதவன் அவன்! தன் கண்ணெதிரே தனக்கு அன்பரைப் போல. உவப்புக் காட்டித், தம் நெஞ்சகத்தே மலர்ந்த உவப்போடு அன்பு செய்தறியாத உட்பகை கொண்டாரது நாட்டிடத்தும், கனவிற்கூடத் தன் பகை முடித்தலாகிய செயலினைச் செய்து முடித்தலன்றி, அதனைப் பொய்த்தல் என்பதனையே அறியாதவன் அவன்!
தன்னைப் பகைத்தோர் அழிவெய்துமாறு, வெற்றிப் பெருமிதத்துடன் அவர் நாட்டினுள் தன் படையைத் தானே முன்னின்று நடத்திச் சென்று அப் பகைவரை அழித்தான். வடித்தமைத்த மணிகள் ஒலிமுழங்கும் மதயானைத் திரளாகிய, பகைவரது யானைப்படைகள் எல்லாம் சேரலாதனுக்கு எதிர்நிற்க இயலாவாய் அலறிக்கொண்டே சிதறியோடின. அகன்ற பெரிய நிலப்பரப்பினையுடைய பகைவேந்தரது பெருநாடுகளை எல்லாம் வென்று அவனே கைக் கொண்டான். புலவர்கள் அவன் வெற்றிச் செவ்வியைப் போற்றிப் பாடத் தன் ஓங்கிய புகழையும் அவன் நிலைபெறச் செய்தான்.
வயிரியர் கண்ணுளர் என்னும் இருதிறக் கூத்தர்க்கும், விரிந்த தலையாட்டமணிந்த குதிரைகளையும், களிறுகளையும், தேர்களையும், தனக்கென அவற்றை வைத்துக்கொள்ளானாய் வழங்கினான். காவற்காடும், ஆழ்ந்த கிடங்கும், நெடிய மதிலும், நிலைபெற்ற ஞாயிலும், அம்புக்கட்டு உடைமை யாலே எளிதிற் கடத்தற்கரிய இடைமதிலும் கொண்டு அமைந்த பகையரசரின் அரண்களைக் கடந்து உட்புகுந்து, அவற்றை எல்லாம் அழித்தான். அவ்விடங்களை எரியிட்டும் கொளுத்தினான். அதன்பின்னரே தான் உணவு கொள்ளலையும் செய்தான். சோறு சமைத்தலால் அல்லாமல், ஊரைச் சுடுதலாலே எழுந்த புகையானது படிந்த, பகைவரை அழித்த வெற்றிச் செருக்கினாலே விரிந்து மலர்ந்த மார்பினை உடைய வனாகவும் அவ்விடங்களிலே அவன் திகழ்ந்தான்!
என்னைச் சார்ந்தவர்களுக்கும், என்னைப்போலவே அவனை நாடியவராக வந்திருந்த பிற பாணர்களுக்கும், மற்றும் அவனை நாடியவராக வந்திருந்த பிறபிற கலைஞர் யாவர்க்கும், அவர்தாம் எத்தன்மையராயினும், அப்பரிசில் மாக்கள். தாம் பரிசில் பெறக் கருதிய கலைதுறையிலே வல்லமை அற்றவராயினும், அவற்றையெல்லாம் ஆராயானாய்த், தன்பால் வந்து இரந்தோர்க்கெல்லாம் வாரிவாரிக் கொடுத் தலையே தனக்குரிய கடமையாக விரும்பியவன், செம்மை நிறம்பாத நெஞ்சினனான சேரலாதன் ஆவான்!
நிலைபெற்ற உயிரினம் அனைத்துமே அழிந்து போமாறு பலவான ஆண்டுகளாகக் குளிப்பைத் தருதலையடைய மேகங்கள் மழையினைப் பெய்யாவாய் மாறுபட்டுப் போயினும், தான், தன்னை வந்திரந்த வறியவர்க்கு, அவர்தம் வயிற்றிடத்தே எழுகின்ற பசித்தீயானது மிக்கெழுமாறு குறைவாகக் கொடுத்தல் என்பதனையும் அறியாதவன் அவன்!
இத் தன்மையனாகிய சேரலாதனைப் பெற்றெடுத்த அவன் தாயாகிய வேண்மாள் நல்லினி தேவியார், தன் வயிறு என்றும் குற்றமில்லாதவளாக, என்றும் நிலைபெற்றுப் புகழுடன் விளங்குவாளாக!
சொற்பொருளும் விளக்கமும் : ‘வினவின்’ என்றது, வினவியவனின் கூற்றை எடுத்து மொழிந்ததாம். இருமுந்நீர் – பெருங்கடல். துருத்தி – தீவு. தலைச்சென்று – மேற்சென்று செயலை முடித்து. தடிதல் – வெட்டுதல். முன்பு – வலிமை. கண்ணி – தலைமாலை; அதனை வாழ்த்தியது, அது வெற்றி பெற்ற பின்னர்ச் சூட்டிய அடையாள மாலை என்பதனால்.
மாறிய வினை – மாறுபட்ட செயல்; பகைவினை. வாய்ப்பு – மெய்யாகப் பயன்படல். தன்னை நேராகப் பகைத் தோரையும், நேரில் அன்புகாட்டி உள்ளத்தே பகைகொண்டு மறைவாகப் பகைச்செயல்களில் ஈடுபட்டோரையும் ஒருங்கே அழித்தலில் தவறாதவன் சேரலாதன் என்பதாம். இதனாற் சேரலாதனிடம் திறன்மிக்க ஒற்றர்படையினரும் இருந்தனராதல் விளங்கும்.
‘ஒன்னார் தேய ஓங்கி நடந்து’ என்றது, வெற்றியின் உறுதியோடே படைநடத்திச் சென்ற அவனுடைய செம் மாந்த நடையழகை வியந்ததாம். அந் நடையைக் காணும் பகைவர் தம் மனவலிகெடத் தாமே எதிர்நிற்க அஞ்சியவராக அழிந்துபடுவர் என்பதுமாம். ‘ஏறுபோற் பீடுநடை’ என்றதும் இது. படியோர் – பகையரசர்; பிரதியோர் என்னும் வட சொல் திரிபு. வடிமணி – வடித்துச் செய்த மணி; வடித்தல் – வார்த்தல். ‘வியலரும் பரப்பின் மாநிலம் கடந்து’ என்றது, அரணிடங்களையன்றிப் பிற நாட்டுப் பகுதிகளையும் கைக் கொண்டு என்றதாம். ‘விரியுளை மாவும், களிறும், தேரும் ஒம்பாது வீசி’ என்றது, பகைவரிடமிருந்து கைப்பற்றிய அவற்றைத் தன் படைக்குப் பயன்படுமெனப் பேணுதலின்றி, இரவலர்க்குத் தானங்கொடுத்து என்றதாம். ‘வீசி’ என்றது, அவற்றை மதித்துக் கொள்ளாது தாராளமாகக் கொடுத்ததைக் குறிப்பதாம். அவற்றைப் பொருட்டாக்காத வளவுக்குச் சேரலாதனிடம் அவை மிகுதியாக முன்பே இருந்தன வென்பதாம். ‘புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ’ என்றது, பொய்யா நாவிற் புலவர் போற்றிப் பாடப்பாட ஓங்கும் புகழை, அது என்றும் சிதையாவாறு தன் செயலால் நிலைபெறுத்தி என்றதாம்.
‘வயிரியர் கண்ணுளர் என்பார் இருவகைப்பட்ட கூத்து இயற்றுவோர் ஆவர். இவர் அவனைக் களத்திடத்தே கண்டு இன்புறுத்த மகிழ்ந்த சேரலாதனும், அவ்விடத்தே கிடைத்த குதிரையும், யானையும், தேருமாகியவற்றை அவர்க்கு வழங்கினான் என்க. “கடிமிளை” முதலியன செப்பமாகப் பொருந்தியிருந்தும் அவ்வரண்கள் அவரைத் காத்தில என்னும் குறிப்புத் தோன்ற, அவற்றை எளிதிற் கடந்த சேரலாதனின் செயலை உரைத்தனர்.
‘உள் அழித்து உண்ட’ என்றது, அதுகாறும் உண்டிலன் என, அவனது கடுஞ்சினத்தின் தன்மையைப் புலப்படுத்தியதாம். ‘அடாஅ அடுபுகை அட்டு மலர் மார்பன்’ என்றது, அதனைத் தானே முன்னின்று நிகழ்த்தி, அந்த அழிவினைக் கண்டு பூரித்து மகிழ்ந்த நிலையை உரைத்ததாம்.
‘எமர்’ என்றது, தன்னையும் தன்னைச் சாந்தோரையும். ‘பிறர்’ என்றது. பிற பாணர் கூட்டத்தினரை. ‘யாவரையும் என்றதும் மற்றும் வந்து பரிசில் வேட்டு நின்ற பிறதுறைக் கலைஞரை. வல்லாராயினும் – வன்மை அல்லாதாராயினும். ‘வயிறு பசிகூர ஈயலன்’ என்றது, என்றும் வயிறு பசிகூராத படி, பேரளவு செல்வத்தை நல்குவான் என்றற்காம். ‘ஏனோர் பசிபோக்கும் அவனைப் பெற்ற தாயின் வயிறு என்றும் குற்றமிலது ஆகுக என்று வாழ்த்துகின்றனர். சான்றோனைப் பெற்ற தாயின் வயிற்றை வாழ்த்தல் பழைய மரபு. ஈன்ற வயிறே இதுவே, தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே’ எனத் தாயர் கூறும் மரபு காண்க- (புறம் 84).
பிள்ளைகள் பலவற்றைப் பெறினும், அவற்றால் எல்லாம் சிறப்பு அடையாது, சான்றோன் ஒருவனைப் பெற்றபோதே சிறப்பு அடையும் தாய்வயிறு என்பது கருத்தாகும். ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்னும் குறளையும் நினைவு கொள்க. சான்றோன் – களத்தே வீழ்ந்த மறவன்; நாட்டு நலங்கருதித் தன்னுயிர் தருதலின் சான்றாண்மை உடைமை உணரப்படும்.
புலவர்கள் பாட்டுடைத் தலைவனையும், அவன் மனைவியையும் வாழ்த்தல் இயல்பு. ஆயின், இங்கே அவனைப் பெற்ற தாயின் வயிற்றையும் மனம் உவந்து வாழ்த்துகின்றனர்! அந்தத் தாயின் வயிறும் இத்தகைய சான்றாளனைப் பெற்றதனாலே புகழ்பெற்றது என்பது கருத்து.
வீரச் செறிவினேர் பலரது வரலாறுகளை நாம் நோக்கினால், அவரைப் பெற்ற தாயரது சிறப்பே அவரை அவ்வாறு உருவாக்கியது என்று அறியலாம். சின்னஞ்சிறு வயதிலே அவர் அவர்களது ஒழுக்கத்தை உருவாக்கும் திறனும், உள்ளத்தே பெய்கின்ற மறமாண்புமே நிலைபெற்று வளர்ந்து செழித்து அவர்களே உயர்த்துகின்றன.
இதுபற்றியே பதிற்றுப்பத்துப் பதிகங்கள் எல்லாம் தந்தையின் பெயரையும் தாயின் பெயரையும் குறிப்பிடு கின்றன. இது மிக நல்ல மரபு: பிற்காலத்தே நழுவவிட்ட மரபு.
பழந்தமிழ்ப் பெண்களின் மறமாண்புச் செய்திகளைப் புறப்பாடல்கள் பலவும் உணர்த்தும்.
பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கௌதமனார் பாடியது
மூன்றாம் பத்து
பதிகம்
[பாடியவர் : ஆசிரியர் பாலைக் கௌதமனார் பாடப் பட்டோன் : பல்யானைச் செல்கெழு குட்டுவன். பாடிப் பெற்ற பரிசில் : நீர் வேண்டியது கொண்மின்’ என்றான் குட்டுவன். “யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகவேண்டும்” என்றனர் கௌதமனார். குட்டுவன், பார்ப்பாரிற் பெரியோரை ‘அதற்குரிய வழி யாது?’ எனக் கேட்டு, அவர் கூறியபடியே ஒன்பது பெருவேள்விகளை இயற்றுவித்தான். பத்தாம் வேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் அங்கிருந்தார் காணாராயினர். அவர்கள் தாம் விரும்பியவாறே சுவர்க்கம் புகுந்தனர். இவன் அரசு வீற்றிருந்த காலம் இருபத்தைந்து யாண்டுகள்.]
இமைய வரம்பன் தம்பி அமைவர
உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ
அகப்பா வெறிந்து பகற்றி வேட்டு
மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்துக் 5
கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி
இருகடல் நீரும் ஒருபகல் ஆடி
அயிரை பரைஇ ஆற்றல்சால் முன்போடு
ஒடுங்கா நல்லிசை உயர்ந்த கேள்வி
நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த 10
பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்
கெளதமனார் பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்,
(1) | அடுநெய்யாவுதி, | (2) | கயிறுகுறு முகவை, |
(3) | ததைந்த காஞ்சி, | (4) | சீர்சால் வெள்ளி, |
(5) | கானுணங்கு கடுநெறி, | (6) | காடுறு கடுநெறி, |
(7) | தொடர்ந்த குவளை, | (8) | உருத்துவரு மலிர்நிறை, |
(9) | வெண்கை மகளிர், | (10) | புகன்ற வாயம். |
இவை பாட்டின் பதிகம்.
தெளிவுரை: இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன். அவன், உம்பற் காட்டுப்பகுதியை அது தன் ஆணைக்கு அடங்கி அமைந்துவருமாறு, அவ்விடத்தே தன் ஆட்சியை நிறுவியவன்; ‘அகப்பா’ என்னும் கோட்டையை அழித்து, ஒரு பகற்போதிற்குள்ளாகவே அதனைத் தீயிட்டுக் கொளுத்தியவன். தன் அறிவோடு ஒத்திருந்தாரான முறைமையுடைய பெரியோரைத் தழுவிக்கொண்டு அரசாண்டவன். இடமகன்ற நிலப்பரப்பை யுடைய தன் நாட்டு நிலத்தைத் தன் நாட்டவருக்கு அவரவர்க்குரிய எல்லையை அளந்து வகுத்துக்கொடுத்து ஒழுங்கு செய்தவன். கருமையான களிற்றியானைகள் பொருந்திய தன் களிற்றுப்படையை நெடிதாக்கி, மேல்கடலும் கீழ் கடலும் என்னும் இருகடல் நீரையும் ஒரு பகற்காலத்துள்ளேயே அவற்றின் மூலம் கொணர்ந்து, அயிரை மலையிடத்தே கோயில்கொண்டிருந்த தேவியை நீராட்டி வழிபட்டுப் போற்றியவன். ஆற்றல்மிகுந்த வல்லமையோடு, குறைவற்ற நற் புகழைக்கொண்டு விளங்கியவன். உயர்ந்த கேள்விஞானத்தைப் பெற்றவரான நெடும்பாரதாயனார் என்னும் முனிவர் முன்னின்று வழிகாட்டத், தன் இல்லறத்தைத் துறந்து, துறவுபூண்டு காட்டிற்குச் சென்று தவமியற்றியவன், இத்தகையானாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கெளதமனார் பத்துப்பாட்டுக்களால் போற்றிப் பாடினார்.
சொற்பொருளும் விளக்கமும் : அமைவர – அமைந்துவர; அஃதாவது, அவ்விடத்துள்ள எதிர்ப்புக்களை அழித்து வெற்றி கொண்டு என்பதாம். ‘உம்பற்காடு சேரநாட்டின் ஒரு பகுதி; ‘காடு’ என்னுஞ் சொல் அப் பகுதியின் முல்லைநிலப் பகுதியாகிய தன்மையை விளக்கும். ஊழ்தல் . பொருந்துதல். அகப்பா – ஓர் வலிய அரண். முதியர் – பெரியோ (அறிவாலும் வயதாலும்). மண்வகுத்தல் – நிலத்தை அளந்து பகுத்து அவரவர்க்கு உரிமை செய்தல் புணர்நிரை – பொருந்திய நேரான வரிசை. நீட்டி – நெடிதாக விளங்கச் செய்து. கீழ்கடல் மேல்கடல் என்னும் இரண்டனுக்கும் இடையே யானைகளை ஒன்றன்பின் ஒன்றாக நெடுகிலும் நிற்கச் செய்து, இருகடல் நீரையும் கொணர்ந்து, அயிரைமலைக் காளிக்குத் திருமுழுக்காட்டிப் போற்றியவன் என்றனர். முன்பு – வல்லமை, இப் பெருஞ்செயலால் இவன் ‘பல்யானைச் செல்கெழு குட்டுவன்’ என்னும் பெயரைப் பெற்றனன்; குட்டுவன் – குட்டநாட்டிற்கு உரியவன்; இவன் இயற்பெயர் தெரிந்திலது, அது இதுவுமாகலாம். கேள்வி – கேள்விஞானம்; வேதங்களைப் பாடம் கேட்டுப் பெற்ற வேதஞானம்; பாரதாயனார் – பாரத்துவாசர் மரபில் தோன்றிய பார்ப்பன முனிவர். முந்துற – முற்பட்டுச் செல்ல காடுபோதல் – துறவு பூண்டு, காட்டிற்குத் தவமியற்றப் போதல்; அரசை மகனுக்கு அளித்து ஆன்மநலம் கருதித் துறவு பூண்டு செல்லல்.
‘உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ’ என்றதனால், இடையில் அது சேரரின் கையிலிருந்து சென்றதாதல் வேண்டும். ‘மதியுறழ் மரபின் முதியர்’ என்றது பாண்டியரைக் குறித்ததுமாகலாம். அவரைப் போலவே இவனும் நிலத்தை அளந்து ஒழுங்கு செய்து அரசிறை விதித்தான் எனலாம். ‘இருகடல் நீரும் ஒருபகல் ஆடி’ என்றது, இவனே நீராடித் தன் பெருமையை உலகுக்கு உணர்த்தியதாகவும் கொள்ளப்படும். ‘உருகெழு மரபின் அயிரை மண்ணி, இரு கடல் நீரும் ஆடினோன்’ எனச் சிலம்பு கூறுவதும் ஒப்பு நோக்குக- (சிலம்பு. 28). ஆரிய முனிவர்கள் இவனிடம் செல்வாக்குப் பெற்றிருந்ததும், அவருட் சிலர் தமிழ்ச் செய்யுள் செய்யும் அளவு புலமை பெற்றிருந்ததும் இதனால் அறியப்படும் செய்திகள்.
சேர மன்னருட் சிலர் தம்முடைய ஆன்ம விசாரங் கருதிப் பார்ப்பன அறிஞரைக் குருவாக ஏற்றிருந்தனர் என்பதும், அவர்கள் மூலம் வடமொழியறிவும், வடமொ யாளரின் வேள்வியும் ஞானமும் பற்றிய அறிவும் பெற்று விளங்கினர் என்பதும் இதனால் அறியப்படுகின்றது.
21. அடுநெய் ஆவுதி ?
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர் : அடுநெய் யாவுதி. இதனாற் சொல்லியது: அவன் நாடுகாவற் சிறப்புச் சொல்லி வாழ்த்தியது.
[பெயர் விளக்கம் : இவன் பல வேள்விகளைச் செய்தவன். இவன் விருந்தினரை உபசரித்தலையும் ஒரு வேள்வியாக்கி, ‘ஆள்வினை வேள்வி’ என்று ஒரு துறையாகக் கூறினர். இந்த நயம்பற்றி இப் பாடலுக்கு இது பெயராயிற்று.]
சொற்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சமென்
றைந்துடன் போற்றி அவை துணையாக
எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை யன்ன சீர்சால் வாய்மொழி
உருகெழு மரபிற் கடவுட் பேணியர் 5
கொண்ட தீயின் சுடரெழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதி
வருநர் வரையார் வார வேண்டி
விருந்துகண் மாறா துணீஇய பாசவர்
ஊணத் தழித்த வானிணக் கொழுங்குறை 10
குய்யிடு தோறும் ஆனா தார்ப்பக்
கடலொலி கொண்டு செழுநகர் நடுவண்
நடுவண் எழுந்த அடுநெய் யாவுதி
இரண்டுடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி 15
ஆர்வளம் பழுனிய வையந்தீர் சிறப்பின்
மாரியங் கள்ளின் போர்வல் யானைப்
போர்ப்புறு முரசம் கறங்க வார்ப்புச் சிறந்து
நன்கலந் தரூஉம் மண்படு மார்ப!
முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர் 20
புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக்
கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம்
மிதியற் செருப்பின் பூழியர் கோவே!
குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை!
பல்பயந் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு 25
நீரறல் மருங்கு வழிப்படாப் பாகுடிப்
பார்வல் கொக்கின் பரிவேட் பஞ்சாச்
சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய
நேருயர் நெடுவரை அயிரைப் பொருந!
யாண்டுபிழைப் பறியாது பயமழை சுரந்து 30
நோயின் மாந்தர்க் கூழி யாக
மண்ணு வாயின் மணங்கமழ் கொண்டு
கார்மலர் கமழும் தாழிருங் கூந்தல்
ஒரீஇயின போல விரவுமலர் நின்று
திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண் 35
அலங்கிய காந்தள் இலங்குநீர் அழுவத்து
வேயுறழ் பணைத்தோள் இவளோடு
ஆயிர வெள்ளம் வாழிய பலவே!
தெளிவுரை : சொல்லிலக்கண நூலும், பொருளிலக் கணத்தைச் சொல்லும் நூலும், சோதிட நூலும், வேத லும், இவற்றைக் கற்று உணர்ந்து உள்ளே அடங்கிய நெஞ்சமும் என்னும் இவை ஐந்து. இவ்வைந்தினையும் ஒருங்கே போற்றியவர்: இவற்றால் அடைந்த தெளிவையே வாழ்விற்குரிய உறுதுணையாகக் கொண்டவர்; பிறவுயிர்கட்கு அவற்றால் வருத்தஞ் செய்தலைக் கருதாமல், விளக்கமுற்ற கோட்பாட்டினால், காலைக் கதிரவனைப் போலும் சிறப்புப் பொருந்தியவர்: என்றும் பொய்த்தலற்ற வாய்ம்மை உரைகளைக் கொண்டவர், முனிவர்கள். உட்குப் பொருந்திய மரபினையுடைய கடவுளைப் பரவுவதற்காக, அம் முனிவர்கள் மேற்கொண்ட வேள்வித்தீயின் சுடரானது கொழுந்துவிட்டு மேலெழும்போதெல்லாம், அவ் விருப்பமானது தம் உடலின் கண்ணும் சுடரிட்டு எழுந்து பரந்தாற்போலக் காணப்படும், பெரிய பொருளைத் தருவதான ஆவுதிப் புகையும்.
தம்பாற் பரிசில் பெறுதற்பொருட்டாக வருபவர். இவ்வளவென்னும் ஒரு வரையறையில்லாமல், தாம் வேண்டுமளவும் வயிறார உண்ணுதலை விரும்பியும், வந்த விருந்தினர் தம்மைவிட்டு அகன்று வேற்றிடம் போகாதாராயிருந்து உண்ணலின் பொருட்டாகவும், ஆட்டு வாணிகர் ஊனைக் கொந்தும் கட்டை மேலாக வைத்துக் கொந்திய, நல்ல நிணம் பொருந்திய கொழுமையான இறைச்சித் துண்டுகளை வேகவைத்துத் தாளிக்குந்தோறும், மிகுதியாக எழுகின்ற ஆர்ப் பொலியானது கடலொலிபோல ஒலிக்க, செழுமையுடைய மாளிகையின் நடுவிடத்தே வைத்து உணவினைச் சமைக்கும் போது, புகையெழுந்த அடிசிலினிடத்துப் பெய்த நெய்யினின்று எழும் ஆவுதிப் புகையும்,
இரண்டும் ஒன்றுகலந்து கமழுகின்ற நாற்றத்தோடு, வானத்தே நிலைபெற்றுள்ள கடவுளும் விருப்பங்கொள்ளத் தகுந்தபடி பேணி, கொடுக்கக் குறைபடாத நிறைந்த செல்வத்திலே நின்று முதிர்ந்த குற்றமற்ற சிறப்பினையும், மழை போலச் சொரியும் அழகிய மதநீரைக் கொண்ட போர்த் தொழில் வல்ல யானையின் மேலாக இருக்கும் ஏற்றுரி போர்த்த போர்முரசம் ஒலிமுழங்க, ஆரவாரம் மிக்குச்சென்று பகைவர்நாட்டு நன்கலங்களை யெல்லாம் கவர்ந்துகொணரும் அவர் நாட்டு மண்படிந்த மார்பினைக் கொண்டவனே!
முல்லைப்பூக் கண்ணியை அணிந்தவரான பலவாகிய ஆனிரைகளை உடையவரான கோவலர்கள், புல் மிகுதியாக வுடைய பரந்த புலத்திலே தம் பலவான பசுக்களையும் பரவலாக மேயவிட்டுக், கற்கள் உயர்ந்த காட்டிடத்தே ஒளி திகழும் மணிகளைப் பொறுக்கிப் பெறுகின்ற தன்மையுடைய மிதியாகிய செருப்பில்லாதே, செருப்பென்னும் மலையினை யுடைய பூழிநாட்டினர்க்கும் வேந்தனாகத் திகழ்பவனே! பல வெற்றி மலர்க்கண்ணிகளையெல்லாம் குவியச் சூடியவரான மழவர்க்குக் கவசத்தைப் போன்று விளங்குபவனே!
பலவான பழங்களைக் கொண்டுள்ள, நல்ல பயன் கெழுமிய நெடிய உச்சியையுடைய, நீர் போதரும் பக்கத்தே மேலேறிச் செல்லுதற்கியலாத, சேய்மையிலிருந்தே நுனித்துப் பார்க்கும் பார்வையையுடைய கொக்கின் பரிவேட்டத்திற்கு அஞ்சாத, சிறப்புடைய நாட்டிடையே, பகைவர் போரியற்றா வாறு குறுக்கிட்டுக் கிடக்கும், அயிரை யென்னும் நேரிதாக உயர்ந்த நெடிய மலைக்கு உரியோனகிய தலைவனே!
ஓர் யாண்டேனும் பொய்த்தலை அறியாது மழைபெய்து பயன் விளைத்தலாலே, மாந்தர்க்கு யாண்டுகள் நோயற்ற காலமாகக் கழிய, எண்ணெய் பூசாவிடத்தும் நறுமணமே கமழ்தலைக் கொண்டதாய்க், கார்காலத்து மலரான முல்லையின் நறுமணத்தைக் கமழ்ந்து கொண்டிருக்கும், தாழ்ந்த கரிய கூந்தலையும், நாளத்தின் நீங்கியனபோல, இரவுப் போதிலும் மலர்ச்சி நிலைபெற்று, அழகிய முகத்திடத்தே சுழலும் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களையும், அசைகின்ற காந்தள் மலர்கள் விளங்கும் கரையையுடைய நீர்யாற்றின் கரையிடத்தே நின்ற மூங்கிலையொப்ப விளங்கும் பெருத்த தோள்களையுமுடைய, நின் தேவியாகிய இவளுடனே கூடி யிருந்தவனாக, நீதான் பலவாயிர வெள்ளம் ஆண்டுகள் வாழ்வாயாக, பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும் : சொல் – சொல்லிலக்கண நூல். பெயர் – பொருளிலக்கண நூல். நாட்டம் – சோதிட நூல். கேள்வி – வேதம். நெஞ்சம் – மனம். எவ்வம் – உயிர் வருத்தம். சூழ்தல் – கருதுதல். கொள்கை-ஒழுக்கம்; விரதம். காலை – சூரியன்; இவன் தான் தோன்றலில் பொய்த்தல் இலன்; இவ்வாறே வாய்மையும் என்றும் பிறழ்தல் கூடாது என்பதாம். சீர்- சீர்மை. உரு – உட்கு. எவ்வம் சூழாக் கொள்கையும், காலையன்ன வாய்மொழியும் உடையவர் என்க; இவரே யாகஞ் செய்வதற்குரியவர். பேணியர் – பேணும் பொருட்டாக. தீ – யாகத் தீ. சுடர் – நெருப்புக்கொழுந்து. விரும்பு – விருப்பு. வேள்வி – ஒன்றை விரும்பி வேட்பது; அவ் விருப்பம் மெய்யாவதுபோலப் பரந்த பெரும்பெயராவுதியும் ஆம். பெரும்பெயர் ஆவுதி – பெரும்பொருளைத் தருவதான ஆவுதி; பெரும்பொருளாவது கடவுளரால் மட்டுமே தரப்படுவது. வேள்வி செய்வார்க்கு வேண்டிய தகுதிகள் முறையே சொல்லப்பெற்றன. அவை ‘சொல், பெயர், நாட்டம், வேள்வி, நெஞ்சம் என்னும் ஐந்தையும் ஒருங்கே போற்றி, அவையே துணையாகப் பிறவுயிருக்கு எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கையும், காலையன்ன சீர்கால் வாய் மொழியும்’ கொண்ட தன்மை; இவ்வாறு, இவரான் மட்டுமே செய்வது வேத வேள்வி.
வருநர் – வரும் பரிசிலர். வாரல் . அளவின்றி வேண்டுமளவுகொள்ளல். விருந்து கண்மாறல் – விருந்தினர் இவ்விடம் வேண்டாவென்று பிறவிடம் நோக்கிப் போதற்கு முற்படல், பாசவர் – ஆட்டு வாணிகர். ஊனம் – ஊனைக் கொந்தும் மணைக்கட்டை. சோறும் கறியும் சேர்த்துச் சமைத்த உணவு இது. குய்யிடல் – தாளித்தல். ஆனாது ஆர்ப்ப – சட்டியிலிடும்போது ஒலி மிக்கு எழ. நகர் மாளிகை. மை – புகை. அடும் நெய்யாகிய ஆவுதிப் புகை இடையறாதே எழுந்து கொண்டிருக்கும் என்க. குட்டுவன் வேத வேள்வியும் இயற்றுவித்தான்; விருந்து புரந்தரலாகிய வேள்வியும் இயற்றுவித்தான்; இரண்டின் வேள்விப் புகையும் ஒன்றுகூடி ஒருங்கெழுந்து அவனரண்மனையிற் பரவின என்பதாம்.
‘கடவுளும் விழைதக’ என்றது, அக் கடவுளரும் அதன் சிறப்பை வியந்து, சேரனுக்கு வரந்தரலை விரும்பி வந்து அவன் மாளிகையை அடைந்திருக்க என்றதாம்; கேள்வித் தீயில் இடப்பெறும் அவியுணவைப் பெறுதலே விரும்பி அவர் வருவர் என்றும் கொள்க. தீயில் நெய்யும் ஊனும் சொரிந்து இயற்றும் வேள்விப் புகையும், சட்டியில் ஊனும் நெய்யும் இட்டுப் புலாலுணவு தாளிக்கும் தாளிதப் புகையும் ஒரே மணத்தைச் செய்தனவென்னும் நயத்தை அறிந்து இன்புறுக. ‘ஆர்வளம் பழுனிய’ என்றது, கொடுக்கக் கொடுக்கக் குறையாத நல்வளம் நிறையப் பெருகி முதிர்ந்த என்றதாம். கடவுளர் ‘நாற்ற உணவினர்’ ஆதலின் இரண்டின் கலந்த நாற்றத்தையும் விரும்பி உண்டனர் என்பதும் கொள்க. ‘மண்படு மார்ப – பகைவர் நாட்டு மண்படும் மார்பினன்’, எனக், குட்டுவன் அவர் நாட்டைத் தான் கொண்டதுபற்றிக் கூறியுதாம்.
முல்லைக் கண்ணி – முல்லைப்பூவாலான தலைமாலை, முல்லை நிலத்தாரான அவர்தம் நிலத்துக்குரிய பூவினைக் கண்ணியாகத் தொடுத்து அணிந்தனர் என்க. பல்லான் – பல லாகிய ஆநிரைகள்: பலவென்பது பலவகைச் சாதிகளைக் குறிக்கும். வியன்புலம் – பரந்த நிலம். பரப்பி – பரவலாக மேயவிட்டு. கல் – முனை கூரிய கல். கடம் – காட்டுப்பகுதி. ‘கடத்திடைக் கதிர்மணி’ உண்டென்பார், கோவலர் அதனைப் பெறுவதனைக் கூறினார். செருப்பு – செருப்புமலை. குவியற் கண்ணி – வெட்சிமுதல் வாகை ஈறாகிய போர்க் கண்ணி. மழவர் – இவர் கொங்கு நாட்டு மறவருள் ஒரு சாரார்: குதிரைப் போரில் வல்லவர்; இவர்க்கு மெய்ம்மன்ற யாயது, இவர்க்குப் பிறரால் வரவிருந்த துயரைப் போக்கிக் காத்தது. மெய்ம்மறை – கவசம்: மெய்யை மறைப்பது.
பல்பயம் – பலவகைப் பழங்கள். தழீஇய – பொருந்திய. பயம், பயனுமாம்; அவை பயனுடைய மரம், செடி, கொடி முதலியன. அயிரை, மலையையும் ஒருவகை மீனையும் குறிக்கும். கொக்கின் பரிவேட்புக்கு அஞ்சுவது அயிரை மீன்; அஞ்சாதது அயிரை மலை நீர் போதரும் பக்கத்தே மேலேறிச் செல்வது அயிரை மீன்; செல்லாதது அயிரை மலை. அயிரை மலை கடந்து போதற்கு அரிதாதலின் பகைவர் முனைகெடக் குறுக்கே கிடப்பது என்றனர்.
பயம் – நன்மை. ‘ஊழி, மாந்தர்க்கு நோயில் ஊழியாக’ என்று கூட்டிப் பொருளுரைக்க. மண்ணாவாயின் மணம் கமழ்தல் கூந்தலின் இயற்கையான நறுமணத்தால்; உயர் சாதிப் பெண்ணின் கூந்தல் நறுமணம் கமழும் என்பர். ‘அரிவை கூந்தலின் நறியவும் உளவோ’ (குறு 2) என்பதும் காண்க. ‘மண்ணாவாயின’ தன்மை, தன் தலைவன் போர்வினை மேற்கொண்டானாகத் தன்னைப் பிரிந்து உறைதலால். மண்ணியபோது கார்மலராகிய முல்லை பெய்யப் பெறுதலின் முல்லைமணம் கமழும் கூந்தல் என்றனர். ‘இரவு கூம்பாது நிலைத்திருக்கும் தாமரை மலருண்டெனின், அது அவள் திருமுகத் தலமரும் பெருமழைக்கண்’ என்க. இது கண் உறக்கம் பெறாதநிலையாற் சிவப்புற்ற தன்மையைக் குறித்துக் கூறியதாம். ஒரீஇயினபோல – குளத்தினின்றும் நீங்கிப் போயினபோல. ‘இவளோடு’ என்றது, குட்டுவன் தேவியோடு இருந்த சமயமாதலால், அவளைச் சுட்டிக் கூறிய தாகும். வெள்ளம் – பேரெண்.
22. கயிறுகுறு முகவை !
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும், தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் : கயிறுகுறு முகவை. இதனாற் சொல்லியது : சேரனின் வெற்றி மேம்பாடு.
[துறை விளக்கம் முதலியன : ‘சீறினை’ ஆதலின் நாடு கெழு தண்பணை பாழாகும் எனப் போர்புரிதற்குச் செல்லும் செலவின் விளைவை மேலிட்டுக் கூறியமையால், வஞ்சித் துறைப் பாடாண் பாட்டுஆயிற்று. ‘உழைப் பொலிந்த மா’ என்பது முதலாகிய நாலடியும், “கடிமிளை” என்பது முதலாகிய இரண்டடியும் வஞ்சியடியாய் வந்தமையான் வஞ்சித் தூக்கும் கூறினர். சில ஊறிய நீர்வாய்ப் பத்தற் கயிறு குறுமுகவை’ எனத் தன்னால் நீர் வாங்குவது பெரிதன்றித், தன் கயிற்றையே நின்று வாங்கப்படும் முகவை எனக் கோடை வெம்மையின் நீரற்ற தன்மையைக் கூறிய சிறப்பால் இப் பாட்டுக்கு இப் பெயரைத் தந்தனர்.]
சினனே காமம் கழிகண் ணோட்டம்
அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை
தெறல்கடு மையொடு பிறவுமிவ் வுலகத்
தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும்
தீதுசேண் இகந்து நன்றுமிகப் புரிந்து 5
கடலுங் கானமும் பலபயம் உதவப்
பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது
மையில் அறிவினர் செவ்விதின் நடந்துதம்
அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய 10
ஊழி உய்த்த உரவோர் உம்பல்
பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச்
சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தற்
கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்
ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த 15
வேல்கெழு தானை வெருவரு தோன்றல்
உளைப்பொலிந்த மா
இழைப்பொலிந்த களிறு
வம்புபரந்த தேர்
அமர்க் கெதிர்ந்த புகன் மறவரொடு 20
துஞ்சுமரங் துவன்றிய மலரகன் பறந்தலை
ஒங்குநிலை வாயில் தூங்குபு தகைத்த
வில்விசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
நெடுமதில் நிரைப்பதணத் 25
தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த
பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ
போர்த்தெறிந்த பறையாற் புனல்செறுக் குநரும்
நீர்த்தரு பூசலி னம்பழிக் குநரும்
ஒலித்தலை விழவின் மலியும் யாணர் 30
நாடுகெழு தண்பணை சீறினை யாதலின்
குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றிப்
பாயிருள் அகற்றும் பயங்கெழு பண்பின்
ஞாயிறு கோடா நன்பகல் அமயத்துக்
கவலை வெண்ணரி கூஉமுறை பயிற்றிக் 35
கழல்கட் கூகைக் குழறுகுரற் பாணிக்
கருங்கட் பேய்மகள் வழங்கும்
பெரும்பா ழாகுமன் அளிய தாமே.
தெளிவுரை : இவ்வுலகத்தே, அறந்தெரிந்து செலுத்துவதற்கு உரியதான அரசனது ஆணைச்சக்கரத்திற்கு அளவு கடந்த சினமும், அளவுகடந்த காமமும், மிக்க கண்ணோட்டமும், பேர் அச்சமும், பொய்ச் சொல்லும், அன்பு மிகவும் உடைத்தாயிருத்தலும், குற்றவாளியரைக் கடுமையாகத் தண்டித்தலும், இவை போன்ற பிறவும் தடைக் கல்லாக நிற்பனவாகும். ஆகவே, இத் தீமைகளெல்லாவற் யும் நம்மை நெருங்காதபடிக்கு நீக்கியவராக, நன்மையான வற்றையே மிகவும் செய்து, நாட்டு மக்கள் எல்லாரும் தம் போற் பிறரை வருத்தாமலும், பிறருக்கு உரித்தான பொருளைத் தாம் விரும்பாமலும் குற்றமல்லாத அறிவுடைய வராகச் செவ்வையாக நடப்பவர்களாய்த், தம்பால் அன்பு செய்து வாழ்கின்ற துணைவியரைப் பிரியாமல், தம்மை நாடி வந்தோருக்குத் தம்மிடமுள்ளதைப் பகுத்து உண்டு, முதுமை பெற்ற யாக்கையும் நோயும் இல்லாதவராய்த் தம் வாணாளைக் கழிக்குமாறு, கடலும் காடும் பலவான பயன்களையும் தந்து உதவ, நெடிது காலம் ஆட்சி செலுத்திய வரான, அறிவும் ஆற்றலுமுடையவரான பேரரசர்களின் வழித்தோன்றலே!
இரும்பாற் செய்த குந்தாலியாலே திண்ணிய பிணிப்பை யுடைய வன்னிலத்தை உடைத்ததுத் தோண்ட, அண்டுச் சிதறினாற்போலச் சிறிதே ஊறிய நீரினையுடைய குழிகளில், கயிறுகட்டி நீரைச் சேந்தும் குறுகிய முகவையை நெருங்கச் சூழ்ந்து மொய்த்து நிற்கும் பசுக்களையுடைய, கொங்கரது நாட்டை வென்று தன்னாட்டோடு அகப்படுத்திக் கொண்ட, வேல்வீரர் நிரம்பிய தானைப் பெருக்கத்தையுடைய, பகைவர்க்கு அச்சத்தை விளைவிக்கும் தோன்றலே!
தலையாட்டத்தால் பொலிவுற்று விளங்கும் குதிரைகள்; அணிகளால் அழகுற்றுத் தோன்றும் களிறுகள்: தேர்ச்சீலைகள் விரிக்கப்பெற்று அழகுடன் விளங்கும் தேர்கள்: போர் புரிதற்கென முற்பட்டாரான போர் விருப்பத்தைக் கொண்ட போர்மறவர்கள் என்னும், இந்நால்வகைப் படையோடும் கூடியவனாக நீதான் பகைவர் நாட்டுட் புகுந்தனை.
பரந்து அகன்ற வெளியிடத்தே, உயர்ந்த நிலையினை உடையதான கணையமரம் செறிக்கப்பெற்ற கோட்டை வாயில் அமைந்திருந்தது. அவ்விட்த்தே, எந்திரவிசையுடன் கூடிய விற்கள் பொருத்தப்பெற்ற, சிறந்த சிறப்பினையுடைய ஐயவித்துலாம் தொங்கவிடப் பெற்றிருந்தது. அப் பறந்தலையை அடுத்ததாகக் காவற்காடும் ஆழ்ந்த கிடங்கும் விளங்கின. நெடிய மதிலின் உட்புறத்தே நிரல்பட அமைந்த பதணங்கள் விளங்கின. தலைமையும் பெருமையுமுடைய ‘அகப்பா’ என்னும் அவ்வரணை அழித்து நீ தான் வெற்றி கொண்டனை. பொன்னாற் செய்த உழிஞை மாலையினையும் குடிக்கொண்டனை. இத்தகைய, போர்க்களத்தே வெற்றியே பெறுதலையுடைய குட்டுவனே!
ஏற்றுரி போர்த்துள்ள பறையை அறைந்து மக்களை வருவித்து மிக்குவரும் புனலைத் தடுத்து நிறுத்துவோரும், புதுநீர் விளையாட்டின்போது எழுகின்ற ஆரவார ஒலியினலே அம்பேவற் பயிற்சி செய்வார் எழுப்பும் ஒலியை அடக்கு வாரும், ஒலிகளையுடைய விழாக்களிலே திரண்டு கூடி மகிழ்வோருமாக, புதிய வருவாயினையுடையதாகத் திகழ்வன பகைவர் நாடுகள். அந் நாடுகளிலுள்ள தண்மை பொருந்தி விளைநிலங்கள் எல்லாம், நீ தான் அவர்பாற் சீற்றங் கொண்டனை யாதலினாலே பாழ்நிலங்களாக மாறிப்போகும். மேற்குத்திசையிலே சென்று மறைந்து காலையில் மீண்டும் கிழக்குத்திசையிலே எழுந்து தோன்றி, இந் நிலவுலகிற் பரவியிருந்த இருளைப் போக்கும் பயன் பொருந்திய பண்பினை யுடையது ஞாயிறு. அது ஒருபக்கமும் சாயாமல் நிற்கின்ற உச்சிப்பொழுதாகிய நண்பகற் காலத்தே, கவர்ந்த வழிப்பக்கங்களில் நின்றுகொண்டு வெண்மையான நரிகள் முறையிட்டுக் கூவுதலை மேற்கொள்ளும். அக் குரலுக் கேற்பத் தாளமிடுதலைப்போலப் பதுங்கிய கண்களையுடையவான கூகை குழறா நிற்கும். கருங்கண்களை யுடையவளான பேய் மகள் திரிந்துகொண்டிருப்பாள். இத்தகைய பெரிதும் பாழ்பட்ட நிலங்களாக, அம் மருதவள நிலங்கள் மாறிப் போகும். அவைதாம் இரங்கத்தக்கன, பெருமானே!
சொற்பொருள் : கண்ணோட்டத்தின் முன்னின்ற ‘கழி’ என்னும் உரிச் சொல்லைச் சினன் முதலியவற்றிற்கும் கூட்டிப் பொருள் கொள்க. அரசவினைக்கண் இவை யாவும் வேண்டுவதே! எனினும், இவை அளவிறப்பின் அதனாற் கேடும் வந்து சூழும் என்பதாம். ‘அச்சம் உடையார்க்கு அரணில்லை’ (குறள் 534) என்பதனால், அச்சத்தின் தீமை பெறப்படும்; அது அரசனின் உளத்திண்மையைச் சிதைத்தலின் குற்றமா யிற்று, இஃதன்றி ‘அஞ்சுவதஞ்சல் அறிவார் தொழில்’ என்றதனால் அஞ்சவேண்டுமவற்றுக்கு அஞ்சுதல் விலக்கப்படுவதன்று என்பதும் அறிதல்வேண்டும். தெறல் – தண்டித்தல். அறம் தெரி திகிரி – அறம் நிலைபெறப் பொருட்டாக ஆராய்ந்து செலுத்தப் பெறும் அரசமுறைமை. வழியடை – தடை. சேணிகந்து – நெடுகிலும் கைவிட்டு ஒதுக்கி. மை – குற்றம். பாத்து – பகுத்து. ஊழி – நெடுங்காலம். உரவோர் – அறிவும் ஆற்றலும் உடையோர்; குட்டுவனின் முன்னோர். உம்பல் – வழித்தோன்றல், அரசு முறை கோடாது நடைபெறுதலால் மக்களும் நெறிபிறழாதாராய் ஒழுகுவர் என்பார், அவர்தம் ஒழுக்க நெறியையும் காட்டினார். இவை இரண்டும் பொருந்த ஆட்சி செய்தவர் குட்டுவனின் முன்னோர் ஆவர்.
பொன் – இரும்பு; கரும்பொன். கணிச்சி – குந்தாலி; பாறையுடைக்கும் கருவி. திண்பிணி – திண்மையான பிணிப்புடைய பாறை; பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. பிணி – பிணிப்பு முதனிலைத் தொழிற்பெயர். உடைத்து – உடைக்க சிரறுதல் – சிதறுதல். சில -சிறிது; சின்மை. சிறுமைப் பொருளது. பத்தல் – குழி; சிறு கிணறு. மிக ஆழத்து அமைத்து சிறிதளவே நீருள்ள கிணறு; ஆதலின் குறுமுகவையிற் கயிறுகட்கு நீரைச் சேந்த முற்படுங்காலத்துப் பலசமயங்களில் வெறுங் குறுமுகவையே மேலே வர, நீர்க்கு அவாவி நிற்கும் ஆணினம் அதனை மறைத்துக்கொண்டே போய் நிற்கும் என்க. ‘குறுமுகவை’ என்றதனால், நெடுங்கயிறு என்று கொள்க. “கொங்கர் – கொங்குநாட்டார்; இவர் நாடு சேரநாட்டைச் சார்ந்து விளங்கியது; சில சமயங்களில் பாண்டிநாட்டாரும் கொங்கு நாட்டை ஆண்டனர். வேல் கெழு தானை – வேல்மறவரை யுடைய தானை. கொங்கையும் குட்டுவன் தன் ஆட்சிக்கீழ்க் கொண்டிருந்தான் என்பதாம்.
உளை – தலையாட்டம், இழை – வெற்றிப்பட்டம், பொன்னரிமாலை முதலியன. வம்பு – தேர்ச்சீலை, எதிர்ந்த – முற்படுகின்ற. புகல் -விருப்பம்; அது போரியற்ற வேண்டுமென்பது. துஞ்சுமரம் – கணையமரம்; மதிற் கதவுகட்குப் பின்பக்கமாக அவற்றுக்கு வலிமையாக அமைக்கப்படுவது. துவன்றிய – செறிக்கப்பெற்ற. மலர் அகன் பறந்தலை – மிக அகன்ற வெட்டவெளி: இதனைச் செண்டுவெளி என்பர். “மலரகன்” என்றது ஒருபொருட் பன்மொழி. இது புறமதிலுக்கும் அகமதிலுக்கும் இடையே அகழியை அடுத்ததாக அமைந்துள்ள வெளி; புறமதிலைக் கடந்து வரும் பகைவர் இதன்கண் விளங்கும் வீரருடன் கடும்போரிட்டு வென்ற பின்னரே அகமதிலை நெருங்கவியலும். நிலை – வாயிற்படி. தூங்குபு – தூங்கும்படியாக. வில்விசை – வில்லாகிய எந்திரம்: இது தானே இயங்கிப் பகைவர்மேல் அம்புமாரி பொழிவது. ஐயவி – ஐயவித்துலாம் என்னும் மதிற்பொறி. கடிமிளை – காவற்காடு; இதன்கண் வீரர் மறைந்திருந்து வரும் பகை வரைத் தாக்குவர். குண்டு – ஆழம். கிடங்கு – அகழி. பதணம் – அகமதிலின் உட்புறத்தே வரிசையாக நாற்புறமும் அமைந்துள்ள காவன் மேடைகள். அண்ணல் – தலைமை. கோடு – உச்சி. அகப்பா – கோட்டையின் பெயர்: இத்துணைக் கடுங்காவலமைந்த மதிலைத் தன் நாற்பெரும் படையுடன் சென்று கைப் பற்றினான் குட்டுவன் என்பதாம். ‘குட்டுவன் அகப்பா வழிய நூறிச் செம்பியன், பகற்றீ வேட்ட ஞாட்பு (நற். 14)” என்று இதனை மீளப் பாண்டியன் கைப்பற்றிய செய்தியை மாமூலனார் குறிப்பிடுவர். இதனால் இவ்வரண் கடுங்காவல் மிகுந்ததென்பதும்; இதனைக் கைப்பற்றல் சிறந்த வெற்றிச் செயலாகக் கருதப்பட்டதென்பதும் விளங்கும். உழிஞை என்பது ஒருவகைக் கொடி; பொற்கொற்றான் என இந்நாளில் வழங்கப்பெறும். “உழிஞைப் போர்” ஆதலால் வெற்றி கொண்டதும் பொன்னாற் பெய்த உழிஞைப் பூவைச் சூடினான் என்க.
‘போர்த்து’ என்றது, ஆனேற்று உரியைப் போர்த் திருப்பதனைக் குறிப்பிட்டதாம். பறையால் – பறை யோசையால். புனல் செறுக்குநர் – தடைமீறிப் போகும் புதுப்புனற் பெருக்கை அடைத்து நிறுத்துவார். நீர்த்தரு பூசல் – நீர் விளையாட்டால் எழுகின்ற ஆரவாரம். அம்பு அழிக்குநர் – அம்பு எய்யும் பயிற்சி பெறுவார், வில்வளைத்து நாணேற்றி எழுப்பும் நாணொலியையும், அம்பைச் செலுத்துங் காலத்து எழுகின்ற ஒலியையும் இல்லையாக்குவோர். தலை – இடம். விழவு – விழா மலிதல் – சிறத்தல். யாணர் – புது வருவாய். தண்பணை – மருதநிலம். நண்பகல் – நடுப்பகல், கவலை – கவர்த்தவழி. கழல்கண் – கழன்று விழுதலைப்போலத் துருத்திக் கொண்டிருக்கும் கண். கூகை – பேராந்தை; கோட்டான். பாணி – தாளம். வழங்கும் – திரியும். நின்னைப் பகைத்தோன் வளநாட்டுப் பகுதிகள், நின்னால் அழிக்கப் பெற்றவாய், நரியும் கூகையும் பேய்மகளும் நண்பகற் போதிலேயே திரிதலையுடைய பெரும் பாழிடங்களாகும்; ஆகவே, அவைதாம் எம்மால் இரங்கத்தக்கன என்பதாம்.
23. ததைந்த காஞ்சி !
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : ததைந்த காஞ்சி. இதனாற் சொல்லியது : சேரனது போர்மற மாண்பு ஆகும்.
[பெயர் விளக்கம் முதலியன : மகளிர், காஞ்சியினது தளி ரும் முறியும் தாதும் பூவும் கோடலாற் சிதைவுபட்டுக் கிடக்கின்ற நிலையைக் கூறிய சிறந்த காட்சிநயத்தால் இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது. துறை விள்க்கம் முற்பாட்டில் கூறப்பெற்றது. போரிடற்கு எழுவானது செயலைப் பகைவரது அழிவை மேலிட்டுக் கூறிப் போற்றியதனக் காண்க.]
அலந்தலை உன்னத் தங்கவடு பொருந்திச்
சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து
நிலம்பை தற்ற புலங்கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து மறுகுசிறை பாடும் 5
வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப்
பொன்செய் புனையிழை யொலிப்பப் பெரிதுவந்து
நெஞ்சுமலி யுவகையர் உண்டுமலிந் தாடச்
சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ 10
நின்னயந்து வருவேங் கண்டனம் புன்மிக்கு
வழங்குநர் அற்றென மருங்குகெடத் தூர்ந்து
பெருங்கவின் அழிந்த வாற்ற வேறுபுணர்ந்து
அண்ணன் மரையா அமர்ந்தினி துறையும்
விண்ணுயர் வைப்பின் காடா யினநின் 15
மைந்துமலி பெரும்புகழ் அறியார் மலைந்த
போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின்
மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு
முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புறழ் அடைகரை 20
நந்து நாரையொடு செவ்வரி யுகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை
அழன்மருள் பூவின் தாமரை வளைமகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்
அறாஅ யாணரவர் அகன்றலை நாடே. 25
தெளிவுரை : இலையற்றதாய் உலர்ந்துபோன உச்சியையுடைய உன்னமரத்தினது அழகிய கவடுபட்ட கிளை யிடத்தே தங்கியிருந்தபடி, சிள்வீடு என்னும் வண்டுகள் கரையும்படிக்குப் பெரிதான பஞ்சம் வந்துற்றது. அதனாலே நிலம் பசுமை நீங்கிற்று; வயல்கள் விளைவின்றிக் கெட்டன. அத்தகைய வறட்சிக்காலத்தினும், நரம்பினாலே இழுத்துக் கட்டப் பெற்ற யாழ் முதலியவான இசைக்கருவிகளை இட்டுக்கட்டிய பையினைக் கொண்டவராய், நின் நகரத்தேயுள்ள ஊர் மன்றத்துக்குச் சென்றோம். அவ்விடத்தே, தெருக்களின் இருபுறத்துமுள்ள வீடுகள்தோறும் பாடிச் சென்றோம். அப்படிப் பாடிய கூத்தரும் பாணருமாகிய எம் கூட்டத்தாரது கடுமையான பசிநோய் நீங்குமாறு, பொன்னாற் செய்யப் பெற்ற புனைதற்கு உரிய அணிகலன்கள் ஒலிமுழங்கிக் கொண்டிருக்கப், பெரிதான உவப்புடனே, நெஞ்சத்தே மிக்கெழுந்த உவகையினை உடையவராக, எம்மவர் உண்டு, அம் மகிழ்ச்சி யினாலே பெரிதும் ஆடிக் களிக்குமாறு, சிறிது கள்ளையே உண்ட மகிழ்ச்சியைக் கொண்டவனாயினும், பெரிய அணி கலன்களை நீதான் வழங்கினை. போரிலே எதிரிட்ட பகைவரைக் கொல்லும் வன்மைகொண்டு தானைமறவரையும், பொன்னாற் செய்யப்பெற்ற பனம்பூமாலையையும் உடையவனாகிய குட்டுவனே!
மருத மரங்கள் தம்பாற் பல்வேறான பறவையினமும் தங்கியிருந்தபடி ஒலி செய்திருக்க உயரமாக வளர்ந்திருக்கும்; செறிவுடைய பெரும் பரப்பிடமாகிய மணல் மிகுந்த பெருந்துறையிடத்தே இருந்த காஞ்சியினிடத்தே முருக்க மரங்கள் தாழ்ந்து பூக்களைச் சொரியும்; அதனாலே அவ் அடைகரைப் பகுதியெல்லாம் உயர்ந்த நெருப்புப் பரவியிருப்பதுபோலத் தோன்றும். அவ்வடைகரைப் பகுதிகளிலே சங்கினம் நாரையோடு செவ்விதான கோடுகளைச் செய்தபடி உலவிக் கொண்டிருக்கும். கழனிகட்கு வாயிலைப் போல அமைந்த, பொய்கையைச் சார்ந்த விளைநிலத்திலே, நெருப்பைப்போல விளங்கும் செந்தாமரை மலர்களும், வளையணிந்த விளையாட்டு மகளிர் பறிக்காதே மலர்ந்திருக்கும் ஆம்பல் மலர்களும் விளங்கும். இவற்றோடும் நீங்காத புதுவருவாயினை உடையதாகவும், நின்னைப் பகைத்தோரது அகன்ற இடத்தையுடைய நாடுகள் காணப்படும்.
இனி, அப்பகைவர் நாடுதான், நின்னைப் பகைத்ததால் அழிந்து பட்டது. நின் வலிமிகுந்த பெரும்புகழை அறியாராய் நின்னோடும் போரிட்டவரான, போரினை எதிரேற்ற பகைவேந்தர், நின் தூசிப்படைக்கே ஆற்றாதாராய்த் தம் நாட்டை யகன்று ஓடிப் போயினர். அதனால் அவர்கள் நாட்டில் போக்குவர்வு புரிவார் யாரும் இலராயினர். அதனால் வழிகள் புல்மிகுந்தவையாய், இருந்த இடம் தெரியாதபடி மறைந்து கெட்டன. அவ்விடங்களின் பண்டைப் பேரழகும் அழிந்தது. அவ்வழிகளிலே, தம் ஏறுகளோடு கூடியவையாய்ப் பெருமையுடைய காட்டுப்பசுக்கள் விருப்போடு இனிதாகத் தங்கியிருந்தன. வானுயரத்திற்கு நிமிர்ந்த மாடங்களையுடைய ஊர்களைக்கொண்ட நாட்டுப்பகுதிகள் எல்லாம் காட்டுப்பகுதிகளாக மாறின. அவற்றையெல்லாம், நின்பாற் பரிசில் பெற விரும்பி வருவோமாகிய யாமும் வழியிடையே கண்டனம், பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும் : அலந்தலை – அலந்த தலை; உலர்ந்த தலைப்பகுதி. உன்னம் – ஒருவகை மரம். கவடு – கவறுபட்ட கிளைப்பகுதி. சிதடி – சிள்வீடு; கவட்டிடையமர்ந்து மரத்தைத் துளைக்கும் வண்டு; அதுதான் கரைதற்குக் காரணம் மரம் காய்ந்து துளைப்பதற்குக் கடுமையாகத் தோன்றியதனாலாம். வறம் – பஞ்சம். பைது – பசுமை. புலம் – விளைவயல். வாங்குபு – இழுத்து. தகைத்த – கட்டிய. கலப்பை – கலங்கள் பெய்த பை. மன்றம் ஊர்மன்றம். மறுகு – தெரு. சிறை – இருபக்கமும். வயிரிய மாக்கள் – பாணர் கூத்தர் முதலியோர். கடும்பசி – நெடுநாள் நின்ற பெரும்பசி. அது தீர ‘மலிய உண்டு’ என்றனர். மகிழ் – கள்! பேருணவழித்துப் பசிபோக்கியதுடன் பெருங்கலம் வீசிப் பரிசிலும் நல்கினான் என்றனர். இனி, “நாட்கள் உண்டு நாண்மகிழ் மகிழின், யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே” (புறம் . 123) என்னுமாறு போலக், கள்வெறியால் அவற்றைத் தந்தானல்லன் என்பார், ‘சிறுமகிழானும்’ என்றனர். ‘பெருங்கலம் வீசல்’ அவன், தன் தகுதிநோக்கிச் செய்ததாகும்.
மருது – மருதமரம். இழிழ்தல் – இனிதாக ஒலித்தல். நளி – செறிவு. துறை – நீரில் இறங்குதற்குரிய நீர்த்துறை. காஞ்சி – ஒருவகை மரம்; காஞ்சிரம் என்றும் சிலர் கூறுவர். முருக்கு – முள்ளுமுருக்க மரம்; இதன் பூக்கள் தீப்போற் சிவந்த நிறமுடையன; வெள்ளைப் பூக்களைக் கொண்டவையும் உள்ளன; இங்குக் குறித்தது சிவப்புப் பூக்களையுடைய மரம்; இதனைக் கல்யாண முருங்கை என்பர். தாழ்பு – தாழ்ந்து தொங்குதல். உறழ் – ஒத்த; உவம உருபு. செந்நிறப் பூக்கள் படிந்திருத்தலால் பொய்கைக் கரை நெருப்புப் படிந்தாற் போலத் தோற்றியது என்றனர். கழனி வாயில் பழனம் – வயல்களுக்கு முன்பக்கமாக அமைந்துள்ள குளம்; மருத நிலத்து இவை பரவலாகக் காணப் பெறுவன. படப்பை – விளை நிலங்கள். ‘மருள்’ – உவம உருபு. வளைமகள் – வளையணிந்த குறுமகள். குறுதல் – பறித்தல். குறுமகளிர் தழையும் பூவும் கொய்து விளையாட்டயர்தலால் சிதைந்த காஞ்சி என்க; இந் நயம்பற்றி இப்பாட்டின் பெயர் அமைந்தது என்பர். இவை, குட்டுவனோடு போரிடா முன்னர் விளங்கிய பகைவர் நாட்டு வளங்களாம்.
நயந்து – விரும்பி; விருப்பம் ஆவது, சேரலாதன்பாற் பரிசில் பெறுதல். வழங்குநர் – வழிச் செல்வார். மருங்கு – வழி. தூர்ந்து – இல்லையாகும்படி புல்லால் மூடப்பெற்று. கவின் – அழகு. ஆற்ற – வழியிலுள்ள. ஏறு – மரையாவின் ஏறு; மரையா – காட்டுப்பசு. அமர்தல் – விரும்புதல். வைப்பின – ஊர்களையுடைய நாடு. வைப்பு – ஊர். மைந்து – வலிமை. மலிதல். மிக்குப் பெருகுதல். பெரும் புகழ் – பெரிதாக எழுந்த புகழ்; அது மறம் வீங்கு பெரும் புகழ் என்பவர், மைந்து மலி பெரும்புகழ் என்றனர். மலைதல் – போரிடல். போரெதிர் வேந்தர் – போருக்கு எதிர்ப்பட்ட பகைவேந்தர். தார் – தூசிப் படை.
முன்னர் யாம் கண்ட வளநாடு, இடையில் நின்னைப் பகைத்த பொருந்தாச் செயலின் பயனால், இப்போது காடாகக் கிடந்த அவல நிலையைக் கண்டு வந்தோம் என்பதாம்.
‘முருக்கு தாழ்பு எழிலிய’ என்பதற்கு, முள்ளு முருக்கின் பூக்கள் நீரிலே தங்குதலாலே அழகுபெற்ற எனவும் ‘நெருப்பு உறழ் அடைகரை’ என்பதற்கு, நெருப்பை யொத்த நீரை ஆடைந்த கரை எனவும் பொருளுரைப்பர். இவையும் பொருந்தும்.
24. சீர்சால் வெள்ளி!
துறை : இயன்மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு செந்துக்கு. பெயர் : சீர்சால் வெள்ளி. இதனாற் சொல்லியது : குட்டுவனின் பெருமையும் கொடைச் சிறப்பும்.
[பெயர் விளக்கம் முதலியன : சேரனின் இயல்புகளாயின பலவற்றையும் சொல்லி வாழ்த்தலின் இயன்மொழி வாழ்த்து ஆயிற்று. ‘வெள்ளி வறிது வடக்கு இறைஞ்சுதல்’ மழைவருங் குறிப்பு. அதுவும் பொய்யாய்ப் போனது என்பவர், அதனையடுத்துக் குட்டுவனின் சோறு அளிக்கும் கொடைத்திறனைக் கூறி வியந்தனர். ‘வறிது வடக்கு இறைஞ்சிய’ என்னும் அடைச்சிறப்பால் இப் பாட்டு இப் பெயர் பெற்றது.]
நெடுவயின் ஒளிறு மின்னுப்பரங் தாங்குப்
புலியுறை கழித்த புலவுவாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலனுயர்த் தேந்தி
ஆரிரண் கடந்த தாரரும் தகைப்பில்
பீடுகொள் மாலைப் பெரும்படைத் தலைவ! 5
ஒதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றலென் றாறுபுரிந் தொழுகும்
அறம்புரி யந்தணர் வழிமொழிக் தொழுகி
ஞாலம் நின்வழி யொழுகப் பாடல்சான்று
நாடுடன் விளங்கும் நாடா நல்லிசைத் 10
திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ!
குலையிழி பறியாச் சாபத்து வயவர்
அம்புகளை வறியாத் தூங்குதுளங் கிருக்கை
இடாஅ வேணி யியலறைக் குருசில்!
நீர்நிலக் தீவளி விசும்போ டைந்தும் . 15
அளந்துகடை யறியினும் அளப்பருங் குரையைநின்
வளம்வீங்கு பெருக்கம் இனிதுகண் டிகுமே
உண்மரும் தின்மரும் வரைகோள் அறியாது
குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோறு
அடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின் 20
எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும்
கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி
வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர
வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக் 25
கலிழுங் கருவியொடு கையுற வணங்கி
மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும்
கொண்டல் தண்டளிக் கமஞ்சூன் மாமழை
காரெதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே! 30
தெளிவுரை : நெடுந்துாரத்து வானத்திடத்தே ஒளி விட்டு விளங்கும் மின்னலானது தோன்றிப் பரந்தாற்போல, புலித்தோல் உறையினின்றும் நீக்கிய புலவுநாற்றம் நாறும் முனையைக் கொண்ட வாளினை, நின் ஏவலுக்குட்பட்டவரான போர்மறவர்கள் வலக்கையிலே உயர்த்துப் பிடித்தவராகச் சென்று, பிறராற் கடத்தற்கரிய பகை அரணினை வெற்றி கொள்வர். இவ்வாறு, தூசிப்படையும் பகைவரது படை வகுப்பால் வெல்லற்கரிதாக விளங்கும் இயல்பினைக் கொண்டிருக்க விளங்கும், பெருமை கொண்ட வெற்றி மாலையினை அணிந்த, பெரும்படைக்குத் தலைவனாக விளங்குவோனே!
ஒதலும், வேட்டலும், அவை பிறரைச் செய்வித்தலும், (ஒதுவித்தல், வேட்பித்தல்) ஈதலும், ஏற்றலும் என்று சொல்லப்படும் அந்தணர்க்கு உரியவான ஆறு ஒழுக்கங்களைப் புரிந்தவராக ஒழுகிவருகின்ற, அறத்தொடு பட்டவையே விரும்பிச் செய்யும் அந்தணர்களது சொல்லுக்கு, ‘அவ்விதமே’ என்று கூறி, அவ்வாறே நடந்தும் வருவாய். ஆனால், இவ்வுலகமோ நின்னைப் பணிந்து நின் ஆணைப்படியே ஒழுகி வரும், பொய்யா நாவிற் புல்வர் பாடும் பாடல்களால் நிறைந்துள்ளோனே! நாடு முழுவதும் பரவி விளங்கும் ஆராயப்படாத நல்ல புகழினைப் பெற்றுள்ளோனே! திருத்தமான அணிகளை அணிந்துள்ள தேவியின் கணவனே!
பூட்டிய நாணின் இறக்குதல் அறியாத வில்லைக் கொண்டோரான படைமறவர்கள், தம் அம்புகளைக் களைதல் எப்பொழுதென்பதனை அறியாதவராக இருக்கும், ஏணி இடப்படாது செறிந்து அசைகின்ற பாசறை இருப்பை உடையோனே! அளவிடப்படாத பெரிய எல்லையினையுடைய, பாசறைக்குரியவான இயல்பெல்லாம் பொருந்திய, பாசறையையுடைய குருசிலே!
நீரும் நிலமும் தீயும் காற்றும் வானமும் என்னும் ஐந்து பெரும்பூதங்களின் பரப்பின் அளந்து அவற்றின் முடிவை அறிந்தாலும், அளந்தறிதற்கு, இயலாத பெரும் ஆற்றலைக் கொண்டவனாக விளங்குவோனே! நின் வளமானது பெருகும் பெருக்கத்தை யாமும் இனிதாகக் கண்டோமே!
விளங்குகின்ற கதிரவனின் கதிர்கள் விரிந்து வானகமெங்கனும் ஒளிவீசி நிற்க, வடதிசைப் பக்கமாகச் சிறிதளவே சாய்ந்துள்ள சிறப்புப்பொருந்திய ‘சுக்கிரன்’ என்னும் கிரகமானது, பயன் பொருந்திய பிறவான கிரகங்களோடு மழை பெய்வதற்கு உரியதான நல்லநாளிலே பொருந்தி நிற்க, நீரைச் சொரியும் மேகத் தொகுதியோடு நாற்றிசையும் பொருந்தக் கவிந்து, உலகில் நிலைபெற்ற உயிர்களை எல்லாம் காக்கும் பொருட்டாக, வலமாக எழுந்து ஒலிக்கின்ற கீழ்க் காற்றால் கொணரப்பெற்ற தண்மையான நீர்த்துளிகளைக் கொண்டவும், நிறைசூலைக் கொண்டவுமான கரிய மேகங்கள், கார்காலம் எதிர்ப்படுகின்ற, தான் பெய்தற்குரியதான பருவத்தை மறந்து பெய்யாமற் போனாலும்,
உண்போரும் தின்போருமாக அளவோடு கொள்ளுதலை அறியாதவராய் மயங்கும்படிக்கு, ஒலிக்கும் பூண் மழுங்கிப் போன உலக்கையினாலே அரிசியைக் குற்றிச் சமையலைச் செய்கின்ற அடுக்களை இடந்தோறும், இலைகளோடும் கூடிய சேம்பின் கிழங்குகள் மேலெழுந்து துள்ளச் சமைத்தலையுடைய மிடாவினிடத்தே, வாளாற் கொந்திய சிவந்த இறைச்சித் துண்டுகளுடனே கூடியதும், யாவரும் கண்டதும் மதிமயங்கத் தக்கதுமான, குறையாத உணவினை வழங்கு வோனே! நின் வலிமைதான், நீங்காத புதுவருவாயினை உடையதாக வாழ்வதாக!
சொற்பொருளும் விளக்கமும் : நெடுவயின் – நெடுந்துாரத்துள்ள வானம். ஒளிறு – ஒளிவிடும். மின்னு – மின்னல். பரந்தாங்கு – தோன்றி நாற்புறமும் பரவினாற்போல. மின்னல் வானத்தே தோன்றி நாற்புறமும் ஒளியோடு பரந்தாற் போலக் குட்டுவனும் சேர்நாட்டிடைத் தோன்றித் தன் மறப்புகழால் எப்புறமும் பரவிய பெருமையினன் ஆயினான் என்க. புலியுறை – புலித்தோலாற் செய்த உறை. எஃகம் – வாள்; வேலுமாம். ஏவலாடவர் – அரசனது ஏவலைச் செய்யும் ஆடவரான மறவர். வலனுயர்த்து ஏந்தல் – வலக்கையிற் பற்றி உயரத் தூக்கியபடி ஏந்தி வருதல்; இது வெற்றிப் பெருமிதத்தைக் காட்டுவது. ஆரரண் – பிறரால் எளிதிற் கடத்தற்கரிய அரண். தார் – தூசிப்படை. தகைப்பு – படை வகுப்பு. பீடு -பெருமை. மாலை – இயல்பும் ஆம். பிற்ரால் கடத்தற்கரிய பகைவரின் அரணத்தை நின் தூசிப்படையே சென்று எளிதில் கடந்து வெற்றி பெறும் என்றதாம்.
ஒதல் ஒதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்பன அந்தணர்க்குரிய அறுதொழில்கள் என்பர். புரிதல் – விரும்பிச் செய்தல். வழிமொழிந்து ஒழுகி – பணிந்து நடந்து. ஞாலம் – உலகம். சான்று – நிறைந்து. நாடா நல்லிசை – ஆராயப்படாத நற்புகழ்; அனைவரும் ஏற்கும் நற்புகழ். இயல்மொழி – இயல்புடைய பேச்சு. திருந்திழை – திருத்தமான அணிகள்; இவை அணிந்த தேவியைச் சுட்டியது.
குலை – நாண். சாபம் – வில். தூங்கு துளங்கு இருக்கை – செறிந்து அசையும் பாசறை இருக்கை; மறவர் நெருக்கத்தால் பாசறைக் கூடாரமும் அசைந்தது என்க. அறை – பாசறை. குருசில் – உபகாரகுணம் உள்ளவன். ஏணி – எல்லை. இடாத ஏணி – அளவிடலாகா எல்லையுடையது. இது போருக்குரிய தயார் நிலையிலிருக்கும் பாசறையின் நிலையைக் கூறியது.
கடை அறிதல் – முடிவான எல்லையை அறிதல். ‘குரை’, அசை. வீங்கல் – பெருகல். கண்டிகும் – கண்டோம். ‘வளம் வீங்கு பெருக்கம்’ என்றது, குட்டுவன் தன் மறமாண்பால் பகைவரை வென்று பெற்ற வளமைப் பெருக்கத்தை. உண்மர் – உண்ணற்குரியன உண்போர். தின்மர் – தின்னற்குரிய தின்போர்; தின்னல் பற்களாற் கடித்து விழுங்கல். வரைகோள் – கொள்ளும் எல்லை. குரைத்தொடி – ஒலிக்கும் பூண்; உலக்கை ஓச்சும்போது உரலிற்பட்டு ஒலி முழக்கும் பூண்; ‘மழுகிய’ என்றது ஓயாது குற்றுதலால். வயின் – இடம்; இங்கே சமையலறை. அடை – இலை. ‘சேம்பு எழல்’ கொதிக்குங் காலத்துக் கிழங்கு மேலெழுந்து துள்ளல்: இதன் பின்னரே அரிசியிடுவர். எஃகு – வாள். வாடாச் சொன்றி – குறைவற்ற உணவு. கதிர் – கதிரவன். வறிது – சிறிது. இறைஞ்சுதல் – சாய்தல்; இது கார்காலத் தொடக்கத்து நிகழ்வது. ‘பயங்கெழு பொழுது’ – மழையாகிய பயனைத் தருதற்குப் பொருந்திய பிற கோள்நிலை அமைந்த பொழுது, கலிழும் – சொரியும். கருவி – தொகுதி. கையுற – நாற்றிசையும் வனத்தே பொருந்த. புரைஇய – காத்தற் பொருட் டாக. கொண்டல் – கீழ்காற்று. கமஞ்சூல் – நிறைசூல். மாமழை – கார்மேகம்.
25. கானுணங்கு கடுநெறி!
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணமும், சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்துக்கும். பெயர் : கானுணங்கு கடுநெறி. இதனாற் சொல்லியது : குட்டுவனின் வென்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம் முதலியன : நீ தேரோட்டிய பகைவர் நாடு இவ்வாறு அழிந்ததென எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறியமையால், வஞ்சித்துறைப் பாடாண் ஆயிற்று. ‘மாவடிய’ எனத் தொடங்குவது முதலாகிய மூன்றடிகளும் வஞ்சியடிகளாதலான் வஞ்சித்தூக்கும் ஆயிற்று. மழை இல்லாது போயினதால் வானம் வெப்பமிகுதியினை உடையதாய்த் தீய்ந்த கடிய வழி என்று கூறிய சிறப்பால் இப் பாட்டு இப்பெயரைப் பெற்றது.]
மாவாடியபுலன் நாஞ்சில்ஆடா
கடாஅஞ்சென்னிய கருங்கண்யானை
இனம்பரந்தபுலம் வளம்பரப்பறியா
நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி
நீ, உடன்றோர் மன்னெயி றோட்டி வையா 5
கடுங்கால் ஒற்றலிற் சுடர்சிறந் துருத்துப்
பசும்பிசிர் ஒள்ளழல் ஆடிய மருங்கின்
ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி
முனையகன் பெரும்பா ழாக மன்னிய
உருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை 10
வரையிழி யருவியின் ஒளிறுகொடி நுடங்கக்
கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ
நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே.
தெளிவுரை : இடிபோல ஒலிமுழங்கும் முரசினோடு, பெரிய மலையினின்று அதன் பக்கத்தே வீழும் அருவியினைப் போன்று ஒளியுடன் விளங்கும் கொடியானது அசைந்து கொண்டிருக்க, விரைந்த செலவையுடைய பறவையினைப் போன்ற விரைவுடனே, நீ நின் நெடிய தேரை ஓட்டிச் சென்ற பகையரசரது பரந்தஇடத்தினையுடைய நாடானது
நின் குதிரைப்படைகள் புகுந்து போரிட்ட வயற்புறங்களிலே இனிக் கலப்பைகள் உழவைச் செய்ய மாட்டா; மதமொழுகும் தலையினையும் கொடுமையினையுமுடைய நின் யானைக்கூட்டங்கள் பரந்த வயற்புறங்கள் இனித் தம்பால் வளமை பரவுதலை அறியா நிலையை அடைந்தன. நின் படை வீரர் சேர்ந்திருந்த மன்றங்கள் கழுதைகள் சென்றிருக்கும் பாழிடங்களாயின. நின்னால் கோபிக்கப்பெற்ற பகைவரது நிலைபெற்ற மதில்கள் காவல் வேண்டாதவாறு அழிவடைந்தன. கடுமையான காற்று மோதுதலாலே நீ இட்ட தீயானது சுவாலை மிகுந்து சினங்கொண்டதாய்ப் பசும் பிசிரையுடைய ஒள்ளிய அழலாகப் பற்றி எரிந்த பக்கங்கள், ஆண்டலைப் பறவைகள் திரிந்து கொண்டிருக்கும், கானம் தீய்ந்துபோன கடத்தற்கரிய வழியினைக்கொண்ட, ஆறலைகள்வர் வழிப்பறி செய்யும் போர் முனைகளைக் கொண்ட, அகன்ற பாழிடங் களாக நிலைபெற்றன, பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும் : உரும் – இடி. உறழ்பு – ஒத்து. இரங்கல் – ஒலித்தல். வரை – பக்கமலை. ஒளிறு – விளங் கும். நுடக்கம் – அசைவு. கடும்பரி – விரைந்த செலவு. சிறகு – சிறகையுடைய பறவை; சினையாகு பெயர். கதழ்வு – விரைவு. கடும்பரி – விரைந்த செலவு: கடும் செலவையுடைய குதிரையும் ஆம்; அப்போது, கடுமையான விரைவோடு செல்லுதலையுடைய குதிரைகள் பறவையைப்போலப் பாய்ந்து செல்ல நீ நெடுந்தேர் ஓட்டினை என்று கொள்க. அகைப்ப – ஒப்ப. பிறர் – பகைவர். இனி அந்நாடு அடைந்த பாழ் நிலையைக் கூறுகின்றனர்.
கடுங்கண் – கொடிய தாகிய சினம். நாஞ்சில் – கலப்பை. வளம் பரப்பு அறியா – வளத்தை மிகுதியாகத் தருதலை ஒழிந்தன. உடன்றோர் . சினங்கொண்டோர். மன் எயில் – நிலைபெற்ற கோட்டை. தோட்டி – காவல்; மதில் அழிந்து பாழாயினமையின் காவல் வேண்டா நிலை பெற்றது. கடுங்கால் – பெருங்காற்று. ஒற்றல் – மோதியடித்தல். சுடர் – தீக்கொழுந்து. சிறந்து – மிகுந்து. உருத்து சினந்து. பசும் பிசிர் – பசிய பிசிர், தீப்பற்றி எரியுங்காலத்துக் காற்றில் மேலே பரந்து செல்லும் துகள்கள். ஒள் அழல் – மிக்க தீ, ஆடிய – கொளுத்திய. மருங்கு – பக்கம்.
26. காடுறு கடுநெறி !
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும், தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்துக்கும். பெயர் : காடுறு கடுநெறி. இதனாற் சொல்லியது : குட்டுவனின் வென்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம் முதலியன : புலமானது நெருஞ்சி படர்ந்து காடாய்ப் போனது என நெறியின் பாழடைந்த தன்மையைக் கூறிய சிறப்பால் இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது. ‘நற்புலம் காடுற்றது’ எனக் குட்டுவனின் பகைவர் நாட்டழிவினை, அவன் எடுத்துச் செலவின்மேலிட்டுக் கூறினமையால், இது வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு ஆயிற்று. “தேர் பரந்த” என்பது முதலாக வரும் மூன்றடியும் வஞ்சியடி யாகலான் வஞ்சித்தூக்கும் ஆயிற்று.]
தேஎர்பரந்தபுலம் ஏஎர்பரவா
களிறாடியபுலம் நாஞ்சிலாடா
மத்துரறியமனை யின்னியமிமிழா
ஆங்குப், பண்டுநற் கறியுநர் செழுவளம் நினைப்பின்
நோகோ யானே நோதக வருமே 5
பெயன்மழை புரவின் றாகிவெய் துற்று
வலமின் றம்ம காலையது பண்பெனக்
கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ
மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப்
பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக் 10
காடுறு கடுநெறி யாக மன்னிய
முருகுடன்று கறுத்த கலியழி மூதூர்
உரும்பில் கூற்றத் தன்னநின்
திருந்துதொழில் வயவர் சீறிய நாடே.
தெளிவுரை : நின் பகைவர் நாட்டிலுள்ள செல்வர்களின் தேர்கள் பரவிச்சென்றதனாலே சேறுபட்ட வயற்புறங்கள், பின்னர் ஏர்கள் சென்று பரிந்து உழுதலை வேண்டாவாயிருக்கும். பன்றிகள் தம் கொம்புகளாற் கிளறிய கொல்லைப் புறங்கள் ஏறுபூட்டி உழுதலைப் பின்னர் வேண்டாவாக விளங்கும். தயிர் கடையும் மத்தின் ஒலிமுழக்கம் எழுகின்ற ஆய்ச்சியரின் மனைகளிலே, இனிய வாச்சியங்களின் முழக் கிசை கேட்கப்படாதே போகும். இவ்வாறாக அந்நாடு முன்பு விளங்கிய செழுமையான வளத்தினது தன்மையைக் கண்டு நன்கறிந்தவர்கள், இப்போது அதனை நினைப்பாராயின், நினைக்கும் நெஞ்சம் நோவத்தக்க வருத்தமே உண்டாகும். யானும் அதனை எண்ணியே வருந்தா நிற்கின்றேன்.
காலத்தாற் பெய்தலையுடைய மழைதான் பெய்யாமற் பொய்த்தமையாலே, வெம்மையானது மிகுதிப்பட்டு நாடு நலம் பயப்பது இன்றாயிற்று. ‘இதுதான் காலக் கோளாற்றின் பண்பாகும்’ என்று சொல்லியவராக, அந்நாட்டு மக்களும், பனித்த கண்களிலே துளிர்த்தநீரை மிகத் தாங்கியவராகத், தம் கைகளைப் புடைத்தவுராக, நெஞ்சத்தேயும் மெலிவுற்ற தன்மையராயினர். இவ்வாறு அவர்கள் வருத்தத்தை அடையுமாறு, பீர்க்கங் கொடிகள் படர்ந்த வேலிசூழ்ந்த பாழ்மனைகளும், நெருஞ்சி பரந்த காடுபட்ட கடத்தற்கரிய வழிப்பகுதிகளுமாக அவ்விடங்கள்தாம் நிலை பெற்றன, பெருமானே!
முருகப் பெருமான் வெகுண்டு பொருது அழித்தலாலே செல்வக் களிப்பை இழந்துபோன மூதூர்களைப் போல, பிறராலே நலிவுறுதல் என்பதில்லாத கூற்றத்தைப் போலும் வலிமையுடையவரான, நின்னுடைய திருந்திய தொழிலையுடைய படைமறவர்கள் வெகுண்டு பொருதழித்த நாடுகளின் நிலைதான் இவ்வாறு அழிவுடைத்தாயின, பெருமானே! என்பதாம்.
சொற்பொருளும் விளக்கமும் : தேஎர் – தேர்கள்: இவை பரந்த புலம் என்றார், அவை மிகுதியாக நிறைந்திருந்த நிலையை உரைத்தனர். தேர்ச் சக்கரங்கள் ஓடியோடிச் சேறுபட்ட வயல்கள் உழாதேயே விதைத்தற்குரிய பக்குவத்தை அடைந்தன என்று, தேர்களின் மிகுதியையும், அவற்றைச் செலுத்தும் வலனுடையாரின் பெருக்கையும் உரைத்தனர். களிறு – ஆண் பன்றி; களிறாடிய புலம்; என்றது, பன்றிகள் உழுத தரிசாகக் கிடந்த கொல்லைப் பகுதிகளை; அவைதாம் அப்படியே புழுதிபட்டு மீண்டும் உழாதே வித்துதற்குரிய தன்மையடைந்தன என்பதாம். ‘மத்து உரறிய மனை இன்னியம் இமிழா’ என்றது, மத்தொலியின் மிகுதியைக்கூறி, அவ்விடத்துள்ள பாற்பயனின் செழுமையை உரைத்ததாம். இவ்வளன் எல்லாம் இப்போது அவ்விடத்து இல்லையாயின என்றனர், ‘நினைப்பின் யான் நோகு’ என்றனர். நாஞ்சில் – கலப்பை. பண்டு – பண்டிருந்த வளமை; காலவாகுபெயர். ‘நோதக வருமே’ என்றது. பண்டு அறிந்தார் யாவரேயாயினும், இன்று இந்நிலை காணின் அப் பண்டைய நிலைதான் கெட்டதனை நினைந்து வருந்தாதிரார் என்பதாம்.
நின்னால் அழிவுற்ற அந்நாட்டிற்கு மேலும் வருத்தம் தருவதுபோலத் தெய்வமும் கொடுமை செய்தது என்பார், காலத்தாற் பெய்தற்குரிய மழையுங்கூடப் பெய்து புரத் தலின்றி, எங்கணும் வெம்மை மிகுதிப்படச் செய்தது என்றனர். புரவு – காத்தல். வெய்துற்று – வெம்மையை மிகுதியாகப் பெற்று, வலம் – நன்மை. பனித்தல் – துளித்தல். மலிர் – மிக்க நீர். புடையூ – புடைத்து. சிறுமை – துன்பம்: வறுமைத் துயரம். காடுறு – காடாகப் பெரிதும் முளைத் தடர்ந்த நிலை; இது அழித்துப் பண்படுத்தற்கு இயலாது போயினமையால். ‘காலையது பண்பெனக், கண்பனி மலிர் நிறை தாங்கிக், கைபுடையூ, மெலிவுடை நெஞ்சினர், சிறுமை கூர’ என, அந்நாட்டு மக்களின் துயரமிகுதியைக் கூறினர். பெருமைப்பட வாழ்ந்த அவர், சேரனால் வந்துற்ற அழிவையும், தொடர்ந்து மழை பொய்த்தலினால் வந்துற்ற கொடுமையின் நிலையையும் கண்டு வெதும்பித், தம் நெஞ்சுறுதியையும் இழந்தவராக ‘காலத்தின் பண்பு இது போலும்!’ எனக் க்ருதி வருந்தி நைவாராயினர் என்பதாம்.
முருகு – முருகப் பிரான். உடன்று . வெகுண்டு. கறுத்த – சினங்கொண்டு சென்று அழித்த. கலியழி மூதூர் – ஆரவாரம் அழிந்த பழைய ஊர்: ஆரவாரம் அழிதலாவது மக்கள் ஆழிந்தும் வளமை கெட்டும்பாழுற்றதனால்: இது முருகனைச் சினந்து பகைத்ததனாலே, அவன் படைஞரால் வந்துற்ற நிலை. உரும்பில் – பிறரால் நலிவுபட்டு மனக் கொதிப்புப் படாத வன்மை; உரும்பு – வெம்மை. ‘திருந்து தொழில் வயவர்’ என்றது. அவர்தாம் போரியற்றத் தகுதியிலாரை யாதும் துன்புறுத்தலைச் செய்யாதே, அறப் போரியற்றும் தொழில்முறை உடையவர் என்பதனால்.
27. தொடர்ந்த குவளை !
துறை : செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : தொடர்ந்த குவளை. இதனால் சொல்லியது : குட்டுவன் தன் நாட்டினைக் காத்து வந்த நல்ல சிறப்பு.
[பெயர் விளக்கம் : அரசனைப் புகழ்தற்கண் வந்த பாடாண் பாட்டாய்ச் செந்துறையில் அமைந்தது இது. பகையரசரின் நாட்டது அழிவைக் கூறுகின்ற வகையானே குட்டுவனின் போராண்மையையும் வாழ்த்தினர். ஆண்டுகள் தோறும் இட்டு ஆக்க வேண்டாது, தொண்டு இட்டதே ஈடாக எவ்வாண்டிற்கும் தொடர்ந்துவரும் குவளை எனக் குறிப்பார், ‘தொடர்ந்த குவளை’ என்றனர். இந்தச் சிறப்பாலே இப் பாட்டிற்கும் இது பெயராயிற்று.]
சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலின்
தொடர்ந்த குவளைத் தூநெறி யடைச்சி
அலர்ந்த வாம்பல் அகமடி வையர்
சுரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி
அரிய லார்கையர் இனிதுகூ டியவர் 5
துறைநணி மருத மேறித் தெறுமார்
எல்வளை மகளிர் தெள்விளி யிசைப்பிற்
பழனக் காவிற் பசுமயி லாலும்
பொய்கை வாயிற் புனல்பொரு புதவின்
நெய்தன் மரபின் நிரைகட் செறுவின் 10
வல்வா யுருளி கதுமென மண்ட
அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப
நல்லெருது முயலும் அளறுபோகு விழுமத்து
சாகாட் டாளர் கம்பலை யல்லது
பூசல் அறியா நன்னாட்டு 15
இயானர் அறாஅக் காமரு கவினே.
தெளிவுரை : ஒளி பொருந்திய வளையல்களைஅணிந்தவரான இளமகளிர், இடையறவில்லாதே தொடர்ந்து மலர்ந் திருக்கும் வேளையினது முழுப்பூவைச் சேர்த்து, ஆம்பலின் மலர்ந்த பூக்களை அவற்றின் இடையிடையே அமையுமாறு வைத்துத் தொடுத்த தழையுடையினை உடுத்தவராகச் சென்று, சுரிந்த தலைமயிரிற் பூவால் தொடுக்கப்பெற்ற கண்ணியைச் சூடியவராகக், கள்ளுண்ணும் இயல்பினராக, அவர்கள் இனிதே கூடியிருக்கும் நீர்த்துறைக்கு அணித்தாகவுள்ள மருதமரத்தின் மேலாக ஏறிநின்று நெற்கதிர்களைக் கொய்யவரும் புட்களை ஓட்டுதற்காக விளிக்குரலெடுத்து இசைப்பார்கள். வயலருகேயுள்ள பொழில்களில் தங்கியிருக்கும் பசுமை நிறமுடைய மயில்கள் அவ் விளிக்குரலை அவர் இசைக்கக் கேட்டதும், ஆடலேச் செய்யத் தொடங்கும். அதனைக் கண்டு மக்கள் செய்யும் ஆரவாரமும்—
பொய்கை வாயிலிடத்தேயுள்ள, புனலாலே தாக்கப்படும் கதவின்வழிக் கசிவு ஒழுகிச்செல்லும் கால்களிற் பூத்திருக்கும் நெய்தற்பூக்களை ஊதும் முறைமையினை உடையவாய், நிரை நிரையாக ஆரவாரித்துச் செல்லும் வண்டினம் நிறைந்த வயலிடத்துச் செல்லும் வலிய வாயையுடைய வண்டிச் சக்கரமானது, சேற்றினிடத்தே பட்டுச் சட்டென அழுந்திவிட, அவ் வண்டியைச் செலுத்துவோர், தம் இருக்கையினின்றும் துள்ளிக் கீழே குதித்தவராக, எருதுகளை உரப்பிச் செலுத்த, அந் நல்ல எருதுகளும் முயன்று வலித்து அச் சேற்றுப் பகுதியைவிட்டு வண்டியை இழுத்துப் போகும். அவ் வருத்தத்திடையே, அவற்றை ஊக்குமாறு வண்டியைச் செலுத்துவோர் செய்யும் ஆரவாரமும் ஆகிய, இவ் ஆரவாரங்களையல்லாமல் வேறானதொரு பேராரவாரத்தைக் கேட்டறியாத நல்லவளநாட்டின் புதுவருவாய் குறைபட்டுப் போகாத அனைவரும் விரும்புதற்குரிய அழகானது, நீதான் வெகுண்டனையாய்ச் சினந்து பார்த்ததனாலே, இதுகாலை சிதைந்து போவதாயிற்று, பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும் : தொடர்ந்த குவளை ஆண்டுதோறும் பயிரிடுதலை வேண்டாது, முதலில் இட்டதே ஈடாகத் தொடர்ந்து தழைத்து மலரும் குவளை; இந்தக் கருத்தினைக் கூறும் சிறப்பாலே இப்பெயரை இப்பாட்டுப் பெற்றது. தூநெறி – புறவிதழ்கள் களையப்பெற்ற முழுப்பூ. அடைச்சி – நிறையச் சேர்த்து. ஆம்பல் – அல்லிப் பூ. அக மடிவை – நடுநடுவே தைத்துத் தொடுக்கப்பெற்ற தழையுடை; பசிய தளிரும், நீலக் குவளையும், சிவந்த அல்லி மலருமாகத் தொடுத்த தழையுடை; மயிலின் தோகையொப்ப விளங்கும் என்க; இதனையுடுத்த அவர் துறையணி மருதத்து ஏறிக் குரலெழுப்பத், தம்மினம் என மயங்கிய மயிலினம் தாமும் ஆடலைத் தொடங்கின என்க. எல் – ஒளி. தெள்விளி – தெளிந்த விளிக்குரல். பழனம் – வயல். கா – சோலை. இயவர் – இசைபாடுவோர்; இனி கூடு இயவர் . சுருதியோடு இனிதாகப் பொருந்துகின்ற வாச்சியங்களைக் கொண்டோ ரான இயவரும் ஆம். ‘குவளைக் கூம்பவிழ் முழுநெறி புரள் வரும் அல்குல்’ (புறம் 116) எனக் குவளை மலரைத் தழையுடையிற் சேர்த்தலைப் பிறரும் கூறுவர்; இனிக் குவளைத் தூநெறியைக் கூந்தலிற் சேர்த்து எனக் கொள்வாரும் உளர்.
பயிரை உழக்கும் மயிலினத்தைக் கடிவாரான இளமகளிர், மருதமரக் கிளைகளில் ஏறி நின்றவராக விளிக்குரலைச் செய்ய, அதனைக் கேட்ட மயிலினம் வெருவியோடாவாய் மகிழ்ந்து ஆடா நிற்கும் எனவும், அக் காட்சியைக் காண்பார் அதன் தன்மையைக் கண்டு ஆரவாரித்து இன்புறுவர் என்பதும் கொள்க. இவ்வாறு களித்துச் செய்யும் கம்பலையன்றி, வேறு பூசலையறியாத வளநாடு என்பதும் இதனால் அறியப்படும்.
‘பொய்கை வாயில்’ என்றது. பொய்கையின் கண்ணே மிகுதிப்பட்ட நீர் வழிவதற்காக அமைந்திருக்கும் மதகுப் புறத்தை. அம் மதகுகளின் மேலாக மிகுதிப்படும் நீர் வெளிப்பட்டுப் போகும். வெள்ளம் பெருகிற்றாயின், மதகுகளையும் திறந்து விடுதற்கேற்றவாறு கதவுகளை அமைத்திருப்பர். அக் கதவுகளின் இடைவெளிகளின் வழியாகக் கசிந்து செல்லும் நீர் ஓடும் கால்களிலே நெய்தற்பூக்கள் நிறைந்திருந்தன என்க. செறுவிடை வண்டி செல்வது கூறியது, அறுவடைக்குப் பின்னர் என்க. அறுவடைக்குப் பின்னர் காய்ந்து கிடக்கவேண்டிய வயற்புறமும் நீர்வள மிகுதியால் சேறுபட்டுக் கிடந்தது என்கின்றனர். வண்டிச் சக்கரம் சேற்றிற் சிக்க, அதனைச் செலுத்துவார் எருதுகளைச் செலுத்தச் செய்த ஆரவாரம் என்றது, இந் நாளினும் கிராமங்களிற் கேட்கக் கூடியதாகும். ‘உருளி அல்லற்பட்டுக் கதுமென மண்டியது’ வண்டியில் நெற்பாரம் மிகுதியா யிருந்ததனால் என்க. கள் – வண்டு. உருளி – சக்கரம். புதவு – கதவு. நிறை – வரிசை. மண்ட – அழுந்த அள்ளல் – சேறு. முயலும் – முயலுதற்குக் காரணமான. நெய்தல் – நீர்ப்பூ வகையுள் ஒன்று; வைகறையில் மலர்வது. ‘நல்எருது’ என்றது, அல்லற்பட்ட வல்வாய் உருளையையும் இழுத்துச் செல்லும் வலிமையுடைய எருது என்றதாம். ‘அள்ளல் தங்கிய பகடுறு விழுமம், கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே’ என, மதுரைக்காஞ்சி யாசிரியரும் இதனை உரைப்பர் (259 – 60). இவ் வாரவாரமன்றி வேறு பூசலால் உண்டாகும் ஆரவாரமில்லாத வளநாடு என்க. சிவத்தல் – வெகுளல்; கோபித்தல். ‘நோக்கலின்’ என்றது. அவன் நோக்கவும், அவன் படைமறவர் சென்று வினைமுடித்தனர் என்றற்காம்; அவன் நேரிற் சென்றானல்லன் என்றதுமாம்.
- உருத்துவரு மலிர்நிறை !
துறை : நாடு வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : உருத்துவரு மலிர்நிறை. இதனாற் சொல்லியது : குட்டுவனின் நாடுகாவற் சிறப்பு.
பெயர் விளக்கம் : நாடு காத்தலின் சிறப்பினை வியந்து குட்டுவனைப் பாராட்டிப் பாடுதலால் நாடு வாழ்த்து என்றனர். தழைகளைச் சூடியபடியே சினந்து வருகின்ற பெரு வெள்ளமானது, தன்னை வயல் பொறுக்குமாறு காணவென்று போர்வேட்டு வருவோரைப்போல் வந்தது என்று கூறிய சிறப்பால்,இப்பாட்டு, ‘உருத்துவரு மலிர்நிறை’ எனப் பெயர் பெற்றது.]
திருவுடைத் தம்ம பெருவிறற் பகைவர்
பைங்கண் யானைப் புணர்நிரை துமிய
உரந்துரங் தெறிந்த கறையடிக் கழற்கால்
கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப
இளையினிது தந்து விளைவுமுட் டுறாது 5
புலம்பா வுறையுள் நீதொழில் ஆற்றலின்
விடுகிலக் கரம்பை விடரளை நிறையக்
கோடை நீடக் குன்றம் புல்லென
அருவி யற்ற பெருவறற் காலையும்
நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச் 10
சீருடை வியன்புலம் வாய்புரந்து மிகீஇயர்
உவலை குடி யுருத்துவரு மலிர்நிறைச்
செந்நீர்ப் பூசல் அல்லது
வெம்மை யரிதுநின் அகன்றலை நாடே.
தெளிவுரை : கோடையின் வெம்மையானது நீட்டித்தலினாலே குன்றிடமெல்லாம் பொலிவிழந்து தோன்றின. அருவிகள் நீர் வற்றியவாய் உலர்ந்தன. இத்தகைய பெருவறட்சி ஏற்பட்ட காலத்திலும், கரையளவும் உயர்ந்தபடி நீரானது பெருகி வழிந்துசெல்லுவதாக விளங்கிற்று அகன்ற இடத்தை யுடைய பேரியாறு. அதன் கரைமருங்குள்ள சிறப்புடைய அகன்ற விளைநிலப் பரப்பெல்லாம், தம்மிடமெங்கணும் நீர்நிறைந்து வாய்க்காலளவுக்குத் தாமும் நிரம்பப்பெற்றன. மேய்ச்சலுக்கு விடப்பெற்ற கரம்பை நிலங்களிலுள்ள வெடிப்புகளெல்லாம் நீரால் நிறையப்பெற்றன. தழைகளைத் தன் மேற்புறத்துச் சூடிக்கொண்டதாகச் சினங்கொண்டாற் போல விரைந்துவருகின்ற மிக்க வெள்ளமாகிய செந்நீரிடத்தே, புதுப்புனல் ஆடுவாரும், கரைகாப்பாருமாக, மக்கள் செய்யும் ஆரவாரத்தையல்லாமல், நின் பரந்த இடத்தையுடைய நாட்டினிடத்தே, வேற்றாரின் படையெடுப்பால் தோன்றும் வெம்மையென்பது உண்டாதற்கு அரிதாகும் , பெருமானே! n
பெரு வளமை கொண்டாரான பகைவர்களது பசிய கண்களையுடைய யானைப்படைகளின் தொடர்ந்த வரிசை முற்ற அழியுமாறு, தமது வலிமையைச் செலுத்தி எறிந்த, குருதிச் கறைபடிந்த பாதங்களையும், கழல்விளங்கும் கால்களையும், விரைந்த செலவையுமுடைய பெருமறவர்கள், மிக்க விசையுடன் செலுத்தும் தம் விற்றொழிலையே மறக்குமாறு, காவற்றொழிலை இனிதாகச் செய்து, விளைபொருள்கட்குக் குறைவில்லாமற்படிக்கும் செய்து, அவர்கள் தமக்கு இனியவரைப் பிரிந்து வாழ்தலின்றிக் கூடியேயிருக்கின்ற நிலையினராகுமாறு, நீதான் நின் ஆட்சித்தொழிலைச் செய்து வருகின்றனை. ஆதலினாலே, நின் நாடு மிக்க திருவினை உடை தாயிருப்பது, பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும்: விடு நிலம் – மேய்ச்சலுக்கு விடப்பெற்ற ஊர்ப் பொதுநிலம். கரம்பு – வேறு எதுவும் விளையாத தரிசு நிலம். விடர் அளை – வெடிப்பின் வாய். கோடை- கோடைக்காலம். குன்றம் – மலைப்பகுதி. புல்லெனல் – பொலிவழிதல். வறற்காலை – வறட்சிக்காலம். கரைநிவந்து – கரையளவுக்கு உயர்ந்து. நனந்தலை அகன்ற இடம். பேரியாறு; ஆற்றின் பெயர். சீர் – சிறப்பு; இது – ஆற்றுப் பாய்ச்சலுள்ள பகுதியிலே அமைதலால். வியன் புலம் – அகன்ற வயற்பகுதிகள். வாய் – வாய்க்கால்; இடம். மிகீஇயர் – மிக்கதாக. உவலை-தழை. உருத்து – சினந்து. செந்நீர் – சிவப்பான புது வெள்ளம். பூசல் – ஆரவாரம். வெம்மை – கொடுமை. அகன்றலை – பரந்த இடத்தைக் கொண்ட நாடு; குட்டுவனது நாட்டுப்பகுதி. தமிழகத்தின் பிற பகுதிகளிற் கோடைக் காலம் நீடித்து வருத்துகின்ற ஆனியும் ஆடியுமாகிய மாதங்களில், சேரநாட்டுப் பக்கத்தே தென்மேற்குப் பருவக்காற்றால் பெருமழை பெய்யும்; இதனையே நயமாகக் கூறுகின்றனர். நீர்வளத்தால் உண்டாகும் பேராரவாரத்தை யல்லாமல், நீரற்று வெம்மையால் வாடித் துன்புறும் நிலையற்ற, வளநாடு என்று கொள்க.
திரு – செல்வம்; இயற்கை செயற்கை வளங்கள். விறல்- வல்லமை; வீறுடைமை. புணர் நிரை – தொடர்ந்து செல்லும்வரிசை. துமிய – துண்டுபட்டு அழிய. உரம் – வலி துரந்து – செலுத்தி. கறை – குருதிக்கறை. கழல் – வீரக்கழல். கடு – விரைவுடைய. மா – பெரிய. மறவர் – போர்மறவர். கதழ்வு – விரைவு. தொடை – அம்புதொடுத் தெய்யும் செயல். இளை தந்து – காத்து. முட்டுறல் – குறைபாடு உண்டாதல். புலம்பா உறையுள் – பிரிவற்றுத் தங்கியிருத்தல். தம் அம்புகளாலே பகைவரது களிற்றுப்படை நிறையை அழிக்கும் திறனுடைய பெருமறவர் எல்லாரும், நீதான் நின் நாட்டை இனிதாகக் காத்தலினாலே, தம் அம்புசெலுத்தும் தொழிலையே மறந்தாராயினர் என்பதாம். காட்டாற்றுப் புதுவெள்ளம் தழைகளையும் தன் மேற்கொண்டு மிகுவிரைவோடு வருதலின், ‘ உவலை சூடி உருத்துவரு மலிர்நிறை’ என்றனர்.
29. வெண்கை மகளிர் !
துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: வெண்கை மகளிர். இதனாற் சொல்லியது:குட்டுவனின் வென்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம்: ’வரம்பில் தானை பரவா ஊங்கென’ எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறியதனால் வஞ்சித்துறைப் பாடாண் ஆயிற்று. வெறுங்கையராய் மகளிர் வெண்குருகு ஒப்புவர் என்பதனை, ‘வெண்கை மகளிர் வெண்குருகு ஒப்பும்’ எனக் கூறிய நயம்பற்றி இப்பாடல் இத்தலைப்பைப் பெற்றது.]
அவலெறி உலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
தடந்தாள் நாரை யிரிய அயிரைக்
கொழுமீன் ஆர்கைய மரந்தொறுங் குழாஅலின் 5
வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும்
அழியா விழவின் இழியாத் திவவின்
வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ
மன்றம் நண்ணி மறுகுசிறை பாடும்
அகன்கண் வைப்பின் நாடுமன் அளிய 10
விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர்புதை மாக்கண் கடிய கழற
அமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும்
பெரும்பல் யானைக் குட்டுவன்
வரம்பில் தானை பரவா வூங்கே. 15
தெளிவுரை: அவலிடித்த உலக்கையினைப் பக்கத்தேயிருந்த வாழைமரத்திலே சார்த்திவிட்டு, வளையணிந்த கையினைக் கொண்டவரான இளமகளிர், வள்ளைப்பூவைச் சென்று கொய்வார்கள். இத்தகைய வளமுடைய, வளைந்த நெற்கதிர்களையுடைய விளைவயல்களிற் பரவியிருந்து மேய்கின்ற பெரிய கால்களையுடைய நாரைகள், அம் மகளிர்க்கு அஞ்சி அவ்விடத்தை விட்டு அகலும். அடுத்து, அவைதாம் அவ் வயல்களிற் பற்றிய அயிரைக் கொழுமீன்களை உண்பனவாக, அவ்வயல்களை அடுத்துள்ள மரங்களிற் சென்று கூட்டமாகத் தங்கியிருக்கும். வளைகளும் அணியப்பெறாத கைகளை உடையவரான சிறுமகளிர், அவ் வெண்குருகுகளை ஓட்டி விளையாடுவர். கெடாத விழாக்களிலே, சுருதி இறங்காத நரம்புக் கட்டினையுடைய யாழுடன் கூடியவரான கூத்தர்கள், பண்களை நன்றாகப் பொருந்த அமைத்து இசை எழுப்பியவராக, அவ்வூர் மன்றங்களைச் சென்றடைந்தவராக அங்குள்ள தெருக்களின் பக்கமாகப் பாடியபடி செல்வர். இத்தகைய வளத்தையும் ஆரவாரத்தையும் உடையவாயிருந்த நின் பகைவரது அகன்ற இடத்தைக் கொண்ட ஊர்களை யுடைய நாடுகள்தாம், இந் நாளிலே இரங்கத்தக்கவை ஆயினவே!
ஒன்றாக விரவிய பல்வேறு வகைப்பட்ட தானியங்களோடு குருதியைக் கலந்த பலியுணவைப் பலியாக ஏற்க விரும்புவதும், மயிரோடுங்கூடிய எருதின் தோலாற் போர்க்கப் பெற்றதும், கருமையான கண்ணை உடையதுமான போர் முரசம் கடுமையாக ஒலிக்கப், போரினை மேற்கொள்ளலை நேராகத் தானே மேற்கொண்டவனாகச் சென்று, அப்பகைவர்களது கடத்தற்கரிய கோட்டையைக் கைக்கொள்ளும், பெருமையுடைய பலவான யானைப்படைகளை உடையவனாகிய குட்டுவனான நின் எல்லையற்ற படைகள் சென்று பரவா முன்னர், அந் நாடுகள் அத்தகைய வளமுடையவாயிருந்தன. அவைதாம், இதுகாலைத் தம் அழகழிந்தவையாய் இரங்கத் தக்கவை யாயின, பெருமானே!
சொற்பொருள் விளக்கம்: அவல் – நெல்லவல். வாழை சேர்த்து – வாழை மரத்திலே சார்த்திவைத்து. வள்ளை – ஒரு வகை நீர்ப்பூ. முடந்தை – வளைவு. தடந்தாள் – பெரிய கால். இரிய – அஞ்சி அகல. மகளிர் வயற்புறங்களுள் இயங்கி வள்ளைப்பூக் கொய்ய, அவர்க்கஞ்சிய நாரைகள் பறந்து அகன்றன என்பதாம். ‘அயிரைக் கொழுமீன் ஆர்கைய’ என்றது, அயிரையின் கொழுவிய மீனைத் தின்னும்பொருட்டு என்பதாம். சிறுமீன்களை இவை பற்றா என்றதுமாம். ’மரந் தொறும் குழாலின்’ என்றது, வெண் குருகினம் மரங்கள் தோறும் கூடியிருத்தலின் என்றதாம். அவற்றைக் காணும் வெண்கை மகளிர் அவற்றை ஓட்டி அவை ஆரவாரத்தோடு பரத்தலைக் கண்டு மகிழ்வர் என்பதாம். ‘அழியா விழவு’ கெடாத விழவு; இது விழவுகள் உரிய காலத்தே தவறாமல் நிகழ்ந்தன என்பதாம். ‘இழியாத் திவவின் வயிரியமாக்கள்’ என்றது, நரம்புக் கட்டுக்கள் குலையாத யாழையுடைய வயிரிய மாக்கள் என்றதாம். இவர் முதற்கண் ஊர்மன்றத் தைச் சென்றடைந்து பாடிய பின்னர், தெருக்களின் பக்கங்களிலும் பாடிச்செல்வர் என்பதாம். மகளிருள் இருவகை யினரைக் கூறுகின்றனர். ‘வள்ளை கொய்யும் வளைக்கை மகளிர்’ ஒரு சாரார். ’வெண் குருகு ஓப்பும் வெண்கை மகளிர்’ ஒரு சாரார்; இவருள் பருவத்தால் சிறுமியர் வெண்கை மகளிர் என்பர்.
இனி, அவலிடிக்கும் இளமகளிர், அதனைக் கைவிட்டுச் சென்று வள்ளைப் பூக்களைக் கொய்து தங்களைப் புனைதலில் ஈடுபடுவர் எனவும், வெண்கை மகளிர் மரங்களிலிருந்த வெண்குருகுகளை ஓட்ட, அவை ஆரவாரித்து எழுதலால், வளைந்த நெல்லின் விளைவயலுள் பரந்த தடந்தாள் நாரைகளும் அஞ்சி அகன்றுபோம் எனவும் கொள்ளலாம். இவற்றால் எழும் ஆரவாரமன்றி, மக்கள் ஊரைவிட்டு வெளியேறிச் செல்லும் ஆரவாரம் எழாத வளநாடு என்பதாம். கடியகழற – கடுமையாக ஒலிக்க; ஒலியின் கடுமை அரசனின் கடுஞ்சினத்தை வெளிப்படுத்துவதாம். மாக்கண் – கரிதான கண்; கண் – முரசிடத்து அறையப்படும் இடம். கழற ஒலிக்க ஒலியின் மூலம் மறவர் போருக்குரிய அழைப்பை அறிவராதலின் ‘கழற’ என்றனர். நேரிகந்து – ஒப்பற்று; போரினை எதிரேற்றுக் கொள்வதிலே ஒப்பற்று; இது தம்பாலுள்ள மறமாண்பினால் ஆகும். ‘ஆர் எயில்’ பகைவரால் எளிதில் கடத்தற்கரிய கோட்டைகள். வரம்பில் எல்லையற்ற பெருக்கம். தானை பரவுதல் – படை பகை நாட்டைக் கைப்பற்றி நாற்புறமும் பரவி நிற்றல். வெண்கை மகளிர் – வெண்சங்கு வளைகளணிந்த கையினரான மகளிரும் ஆம்; இனி அடுதல் முதலிய தொழிலைச் செய்தறியாத கையினையுடைய சிறு மகளிர் எனலும் பொருந்தும். ’வளையைக் கையிலே அணிந்த மகளிர் வள்ளையைக்கொய்யச் சென்றனர்’ என்று கூறிய நயத்தை உணர்க. வயிரிய மாக்கள் -கூத்தர்.
‘இதில், இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் துறக்கம் வேண்டினார் என்பது குறிப்பு வகையால் கொள்ள வைத்தலின் இது வஞ்சிப் பொருள் வந்த பாடாணாயிற்று’ என்பர் நச்சினார்க்கினியர் (தொல்-புறம். 25 உரை). ‘வெண்கை மகளிர் வெண்குருகை ஓட்டினாற்போல், நீயும் எம் உயிரைத் துறக்கம் போகச் செலுத்துக’ என்பது குறிப்பு.
30. புகுன்ற வாயம் !
துறை: பெருஞ்சோற்று நிலை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: புகன்ற வாயம். இதனாற் சொல்லியது:குட்டுவனின் வென்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம்: ‘வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றை ஞான்று, போர் குறித்த படையாளரும் தானும் உடன் உண்டான் போல்வதோர் முகமன் செய்வதற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின பெருஞ் சோற்று நிலை’ என்பது, தொல்காப்பியப் புறத்திணை இயலுள் நச்சினார்க்கினியரால் கூறப்படுவது. அதனைக் குறித்துப் பாடிய இப்பாட்டு அதனால் பெருஞ்சோற்று நிலை என்னும் துறையாற் குறிக்கப்பெற்றது. புகன்ற வாயம் என்றது, முன்பு மணல் அணைக்கு நில்லாத பெருவெள்ளத்தினை அணை செய்து முடித்த, விருப்பத்தையுடைய ஆயம் என்றவாறாம். இச்சிறப்பால் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது.]
இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளும்
அல்குறு கானல் ஓங்குமணல் அடைகரை 5
தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல்
இலங்குநீர் முத்தமொடு வார்துகிர் எடுக்கும்
தண்டகடற் படப்பை மென்பா லனவும்
காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர்
செங்கோட் டாமான் ஊனொடு காட்ட 10
மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்
குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்
கால மன்றியும் கரும்பறுத் தொழியா
தரிகா லவித்துப் பலபூ விழவிற் 15
றேம்பாய் மருத முதல்படக் கொன்று
வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச்
சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம்
முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயரும் 20
செழும்பல் வைப்பிற் பழனப் பாலும்
ஏன லுழவர் வரகுமீ திட்ட
கான்மிகு குளவிய வன்புசேர் இருக்கை
மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலந் தழீஇய புறவணி வைப்பும் 25
பல்பூஞ் செம்மற் காடுபய மாறி
அரக்கத் தன்ன நுண்மணற் கோடு கொண்
டொண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும்
பணைகெழு வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து 30
கடலவும் காட்டவும் அரண்வலியார் நடுங்க
முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக்
கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்
தருந்திறன் மரபிற் கடவுட் பேணியர்
உயர்ந்தோன் ஏந்திய அரும்பெறற் பிண்டம் 35
கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி
எறும்பு மூசா விரும்பூது மரபிற்
கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார
ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற் 40
பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவர்
உருமுநிலன் அதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து
பெருஞ்சோ றுகுத்தற் கெறியும்
கடுஞ்சின வேந்தேநின் றழங்குகுரன் முரசே
நெய்தல் நிலவளம்:
தெளிவுரை: பூங்கொத்துக்கள் செறிந்த ஞாழல் மரங்களை யுடைய கரையினிடத்தே பொருந்திய பெரிதான நீர்த்துறை யிடத்தே, நீலமணியாற் செய்யப்பெற்ற கலத்தைப்போல விளங்கும் கரிய விதழ்களையுடைய நெய்தற்பூக்களைக் கொண்ட, அதன் பசுமையான இலைகள் விளங்கும், குளிர்ந்த கழியிடத்தே துழாவிப் பெற்ற மீன்களை யுண்டுவிட்டுப், புன்னை மரத்தினது வெண்ணிறப் பூக்கள் நிறைந்த கிளை களிலே சென்று குருகினம் தங்கியிருக்கும். அத்தகைய புன்னைமரச் சோலைகளையுடையதும், தங்குதல் பொருந்திய கடற்கரைச்சோலை யென்னப் படுவதுமான, மணல்மேடுகள் விளங்கும் அடைகரையிடத்தே, தாழப் படர்ந்திருக்கும் அடும்பின் கொடிகளை மோதிய கடற்சங்குகள் ஒலிசெய்யும். அவ்வொலியைக் கேட்டு அங்கு வந்தடையும் மீனவர், விளங்கும் தன்மையுடைய முத்துக்களோடு, நீண்ட பவழங்களையும் எடுத்துச் செல்வர். இத்தகைய குளிர்ச்சியான கடற்கரைப் பக்கங்களையுடைய மென்மைப் பகுதி நிலங்களும்—
பாலை நிலவளம் :
காந்தளின் அழகிய மலரால் தொடுத்த கண்ணியைச் சூடியவரும், கொலை செய்தற்குரிய வில்லைக் கையேந்திய வருமான வேட்டுவர்கள், செவ்விய கொம்புகளையுடைய காட்டுப் பசுவின் இறைச்சியோடு, காட்டிலுள்ள மதத்தையுடைய யானைகளின் வெண்கொம்புகளையும், பொன்வள முடைய கடைத் தெருவுக்குக் கொண்டுசென்று, ஆண்டுத் தாம் பெறுகின்ற கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும், குன்றங் களிடையே அமைந்துள்ள பாலை நிலத்தவான ஊர்களும்—
மருத நிலவளம் :
உரியதான காலமல்லாத காலத்தேயும் கரும்பினை அறுத்தறுத்துச் சேர்ப்பாரின் ஆரவாரமும், நெற்கதிர் முற்றியதனை அறுத்துக் குவித்த போரினைத் தள்ளி அடிப்பாரது ஆரவாரமும், பலவகைப் பூக்களைக் கொண்டு விழா நிகழ்த்துவாரது ஆரவாரமும், தேன் பாயும் மருதமரத்தை அடியோடு சாயுமாறு வெட்டிச் சாய்ப்பாரது ஆரவாரமும், நுரைகளால் வெண்மையான மேற்பரப்பைக் கொண்ட செம்புனல் பரந்து இடங்கள் தோறும் வெள்ளமாகப் பரவுங் காலத்து எழும் ஆரவாரமும், பல வைக்கோற் புரிகளாலே சூழ்ந்த மணற்கோட்டைகளை வெள்ளம் கரைத்துப் போக அவ்வெள்ளத்தை ஆரவாரத்தோடு தடுக்கும் முயற்சியின்போது எழுகின்ற விருப்பங்கொண்ட கூட்டத்தின் ஆரவாரத்தோடு, முழவொலியின் முழக்கமும் சேர்ந்து எழுகின்ற மூதூர்க்கண் எடுக்கப்பெறும் விழவினைக் காண்பதன் பொருட்டாகச் செல்லும் மக்களின் ஆரவாரமும் பொருந்திய செழுமையான ஊர்கள் பலவற்றைக் கொண்ட மருதநிலப் பகுதியும்—
குறிஞ்சி நிலவளம்:
தினைக்கொல்லையை உழுகின்ற உழவர்கள், தம் குடிசை மேல் போடப்பெற்றிருக்கும் வரகின் வைக்கோல் மேலாக இட்ட மணமிக்க காட்டு மல்லிகைக் கொடிகளைப் பொருந்தியதும், வன்னிலத்தைச் சேர்ந்த குடியிருப்பை உடையதுமான குடியிருப்பை உடையவர்கள். அவர்கள், மெல்லிய தினையின் மாவினைத் தமக்குள் முறைமுறையே பகுத்துக் கொள்வர். இத்தகைய மலை சூழ்ந்த புன்புலத்தைக் கொண்டவான மலைநாட்டு ஊர்களும்—
முல்லை நிலவளம்:
பலவகைப் பூக்களும் உதிர்ந்து வாடிக்கிடக்கின்ற காடானது, தான் பயன் தருதலினின்றும் மாறிப்போனதாக, செவ்வரக்கைப் போல விளங்கும் நுண்மணலைத் தன்பாற் குன்றுகளைப் போல மேடிடும்படியாகக் கொண்டதாக ஒள்ளிய நுதலையுடையவரான இளமகளிர் கழற்சிக்காயோடு திரிந்து கொண்டிருக்கும், வானளாவும் உயர்ந்து வளர்ந்த மரங்களையுடைய காடுகள் பொருந்திய முல்லை நிலத்து ஊர்களும், பிற நிலத்து ஊர்களும்—
முரசுகள் பொருந்தியவரான முடியுடை வேந்தர்களும், பதினெண் குடியினரான வேளிர்குலத் தலைவர்களும், நின் ஆணையாகிய அவ்வொன்றனையே தாமும் சொல்லியவராக, நினக்கு அடங்கியோராக விளங்குவர். கடலிடத்தும், காட்டிடத்தும் அரணங்களைப் பெற்றுள்ளோர் என்னும் வலிமையாளர்களும், நின் பேரைக் கேட்ட மாத்திரத்தானே நடுங்குவர். வலிமைமிக்க நினது வெற்றி முரசத்தினது கடுமையான முழக்கமானது வானத்தளவுக்கும் அடைந்த தாய் எப்புறமும் எதிரொலி செய்யும். கடுமையான சினம் தோன்றுமாறு முழங்கும், மந்திரத்து அரிய திறலையுடைய மரபினைக்கொண்ட கடவுளாகிய கொற்றவையை வழிபடும் பொருட்டு, அவ் வழிபாட்டை நிகழ்த்தும் உயர்ந்தோன் தன் கையிலேந்திய அரிதாகப் பெறுதலையுடைய திரளையினைக் கண்டதும், அக்கொற்றவையின் ஏவற்பணி புரிவாளான கருங்கண்களையுடைய பேய்மகளானவள் கைபுடைத்தவளாக நடுநடுங்கியபடி நின்றனள். அங்ஙனமாக இரத்தங்கலந்த பிண்டங்களைத் தூவி வழிபாடாற்றிய, நிறைந்த கள்ளினாலே உண்டாகிய மகிழ்வைக் கொண்ட பெரிய பலியூட்டினை நீ செய்தனை. எறும்பும் மொய்க்காத வியக்கத்தக்க சிறப்பினையுடைய அப்பலிச்சோற்றைக் கரிய கண்களையுடைய அண்டங் காக்கைகளுடனே பருந்துகளும் மிகுதியாக இருந்து உண்டு செல்லும்—
பகை மறவர்க்கு அஞ்சிப் புறமிட்டு ஓடாத மறச் செவ்வியையும், வீரச் செயல்கள் பொறிக்கப் பெற்ற கழல் விளங்கும் கால்களையும் உடையவரும், பெரும் போர்களை வென்று பகைவரை யழித்த சிறப்பினரும், மேலும் போர்க்குச் செல்லுதலையே விருப்பமாகக் கொண்டிருப்போருமாகியவர் நின் படைமறவர்கள். அவர்கள், இடியிடித்து நிலப் பகுதியை அதிரச் செய்வதுபோன்ற கடுங்குரலோடு. யாழிசையோடு கலந்து ஆரவாரக் குரலை எழுப்புவர். அங்ஙனம் அவர் ஆரவாரிக்கப் பெருஞ் சோறாகிய பலியூட்டை அளித்ததற்கு முரசினை முழக்குவோனாகிய, கடுஞ்சினத்தை யுடைய வேந்தனே! நின் ஒலித்தலையுடைய வெற்றி முரசானது என்றும் இவ்வாறே முழங்குவதாக!
சொற்பொருள் விளக்கம்: இணர் – பூங்கொத்து. தகை தல் – நெருக்கமாக விளங்கல். மணி – நீலமணி. மா – கரிய. பாசடை – பசுமையான இலை. பனிக்கழி – குளிர்ந்த கழியிடம். துழைஇ – துழாவி. அங்குப் பற்றிய மீன்களை யுண்டு. வாலிணர் – வெண்ணிறப் பூங்கொத்துக்கள். படுசினை – பொருந்திய கிளைகள். குருகு -நீர்ப்பறவை வகை: வெண்குருகு என்று முன்பாட்டிலும் கூறப்பெற்றது. இறைகொள்ளல் – தங்கியிருத்தல். அல்குறுதல் – தங்குதல். கானல் கானற்சோலை. ஓங்குமணல் – உயர்ந்த மணல் மேடு. அடைகரை – நீரினை அடையும் கரைப்பகுதி; ஆற்றுத் துறை போல்வது. அடும்பு – அடும்பங்கொடி. தாழ் அடும்பு என்றது, அது கழி நீருள் தாழ்ந்து தொங்குவதை. வளை – சங்கு. ஞரலல் -ஒலித்தல். துகிர் – பவளம். முத் தெடுக்கச் சங்கினை எடுப்பார்க்கு அதனுடன் பவளக்கொடியும் சேர்ந்துவரும் வளத்தைக் குறிப்பார், ‘முத்தமொடுவார் துகிர் எடுக்கும்’ என்றனர். இதனாற் கடல்படு பொருளின் பெருக்கம் உரைக்கப் பெற்றது. ’அலையால் மோதுண்டு தாழடும்பிற் சிக்கிய சங்கின் குரலைக் கேட்டு வந்தோர், முத்தும் பவளமும் பெற்றனர்’ என்றது, அடை கரைக் கானலிற் புன்னையம் பெருநிழலில் வெண்குருகோப்பி விளையாடிய இளமகளிர், தாம் எதிர்பாராதேயே முத்தும் பவளமும் அடைகின்ற பெருவளத்தைக் கொண்டன நெய்த னிலத்து ஊர்கள் என்பதாம்.
காந்தள் – காந்தளுள் ஒன்றாகிய செங்காந்தட் பூ; இவற்றை மகளிர் சூடார்; எனினும் கொலைவில் வேட்டுவர், தம் கொடுமை தோன்ற இவற்றைச் சூடுவர் என்றனர். கொலைவில் – கொலைக் கருவியாகிய வில்; பல உயிர்க் கொலைகட்குக் காரணமாகிய வில். வேட்டுவர் – வேட்டமாடி வாழ்வோரான மலைநாட்டவர். செங்கோடு – சிவந்த கொம்பு. ஆமான் – காட்டுப் பசு. பொன்னுடை நியமம் – செல்வ வளமுடைய கடைத்தெரு; இது வஞ்சிமூதூர்க் கடைத்தெரு ஆகலாம். பிழி – கள். நொடை – விலையாகத் தரும் பொருள். புன்புலம் – பாலைநிலம். ‘குன்றுதலை மணந்த’ என்றது, இது குன்றந் திரிந்த பாலை என்பதற்கு.
காலம்- உரிய பருவ காலம். ஒழியாது – தீராது; அவ்வளவு மிகுதி என்றபடி. அரிகால் – நெல்லரியப் பெற்ற நிலப்பகுதி; அவித்தல் – போரழித்தல்; அரிகாற் பகுதியை உழக்கி உழுது சேறுபடுத்தியும் ஆம். பல பூ விழவு -பல பூக்களால் கொண்டாடப் பெறும் விழாக்கள்; விழாவுக்குப் பல பூக்கள் பயன்படுத்தப் பெற்றமை அறியப்படும். தேம் – தேன். ‘தேம்பாய் மருதம்’ என்றது, மருதம் புதுப்பூக்களுடன் விளங்கியதனைக் குறித்தற்கு. வண்டினம் மொய்க்கும் மருதமும் ஆம்; தேன் – வண்டு. பாய்தல் – மிக்குச் சொரிதல்; முதல்படக் கொன்று – அடியோடு வீழ வெட்டி. ’வெண் தலைச் செம்புனல்’ வெண்மையான நுரைகளைப் போர்த்து வருகின்ற சிவந்த புதுப்புனல். வாய் – இடம்; வாய் மிகுத்தல் – இடமெங்கணும் மிக்குப் பெருகுதல். பதப்பர் – மணல் மேடாகிய கரை: பலசூழ் – பல வைக்கோலும் தழையுமாகச் சூழ்ந்திருக்க அமைக்கப் பெற்ற; இவை மணல் அரியுண்டு போகாமலிருக்க அமைப்பது; எனினும் புது வெள்ளம் இதனையும் அரித்துக் கரைக்கு மென்பார், ‘பரிய’ என்றனர். சிறை கொள்பூசல் – வெள்ளத்தை கரையுடைத்துப் போகாதபடி தடுப்பதன்கண் எழுகின்ற மக்களின் ஆரவாரம் புகன்ற – விரும்பிய. ஆயம் – கூட்டம் காணூஉப் பெயரும் – காணும் பொருட்டாகச் செல்லும். வைப்பு – ஊர்கள்; பழனப்பால் – மருதநிலப்பகுதி.
ஏனல் – தினைக்கொல்லை. வரகு மீது இட்ட – வரகின் வைக்கோலைக் கூரை மேலாகப் பரப்பிய. கான் குளவி – காட்டு மல்லிகை ; கான் – மணமும் ஆம்; அப்போது கான்மிகு குளவிய என்பது மணமிக்க காட்டு மல்லிகைக் கொடிகளையுடைய எனப் பொருள்படும். வன்புசேர் – வன்புலஞ் சேர்ந்த. இருக்கை – இருப்பிடம்; குறிச்சி. நுவணை – மாவு. முறைமுறை பகுக்கும் – இன்னாருக்கு இவ்வளவு என்றவாறு முறைப்படி பகுத்தல்; தினைப் பயிரைக் கூடியே செய்த குன்றவர், விளைந்து கொண்ட தினையை மாவாக்கித் தமக்குள் பகுத்துண்ணும் கூட்டு வாழ்க்கை முறையைக் கூறியது இது. புன்புலம் – புல்லிய நிலங்கள் பொருந்திய பகுதி. புறவு-காடு. வைப்பு – ஊர்கள்.
செம்மல் – காய்ந்து சிவந்த சருகுகள். பயம்-பயன். மாறி – மாறுபட்டு; இல்லையாகப் போய்; இது கோடையின் வெம்மையால். அரக்கம் – செவ்வரக்கு. கோடு கொள்ளல். குன்றமாக அமைதல்; இது காற்றால் ஏற்படுவது. ‘கழலொடு’ – கழற்சிக்காயொடு; இது பிரிந்த காதலரின் வரவைக் கழலாற் காணும் பொருட்டுக் கொள்ளல். ‘மகளிர் கழலொடு மறுகும்’ என்றதற்கு, ‘மகளிர் கழலணிந்த இளைஞரான தம் காதலரோடுங் கூடியவராக உடன் போக்கிற் செல்லும்’ என்றலும் பொருந்தும். கடறு – காடு. ‘பிறவும்’ என்றது இவையல்லாத பிறவான ஊர் மக்களை.
இது, குட்டுவன் தன் வெற்றியின் நினைவாகக் கொற்றவைக்குப் பெரும் பலியூட்டிய சிறப்பைக் கூறுவது. பணை- முரசம். வேந்தர் – முடியுடைய மூவேந்தர். வேளிர் – வேளிர் குலத்தவராகிய குறுநில மன்னர். ‘இவர் ஒன்று மொழிய, கடலவும் காட்டவும் அரண்வலியார் நடுங்க’ என்று கொள்க. முரண் – மாறுபாடு ; வலிமை. அதிர-எங்கணும் எதிரொலிக்க. ‘அருந்திறல் மரபின் கடவுள்’ என்றது, போர்க்குரிய கொற்றவையை; இவள் அயிரை மலைக்கண் கோயில் கொண்டிருப்பவள் ஆகலாம். உயர்ந்தோன்- பூசாரி. பிண்டம் – சோற்றுருண்டை. நெய்த்தோர் – இரத்தம். தூஉய-தூவிக்கலந்த. மகிழ் – கள். இரும்பலி –பெரும்பலி. மூசல் – மொய்த்தல், இறும்பூது- வியக்கத்தக்க பெருமிதம். ஆர – உண்ண. தெய்வத்திற்கிடும் பிண்டத்தைக் காக்கையும் பருந்தும் உண்ண, அவற்றை அத்தெய்வம் ஏற்றதாகக் கொள்ளல் மரபு; இம்மரபு இன்றும் தமிழ் மக்களிடையே நிலவக் காணலாம்.
ஓடா – புறமிட்டு ஓடாத. பூட்கை – மறக் கோட்பாடு. ஒண்பொறி – ஒள்ளிய செயல்கள் பொறிக்கப் பெற்ற; இனி ஒள்ளிய அரும்பு வேலைப்பாடுகளும் ஆம். ததைந்த – அமித்த. புகல்தல் – விரும்பல். உருமு – இடி. கொள்ளை – யாழிசை. பெருஞ்சோறு – பெரிய பலியூட்டு. உகுத்தற்கு – அழித்தற்கு. தழங்குதல் – ஒலித்தல்; ‘நின் தழங்கு குரல் முரசம் என்றும் இவ்வாறே முழங்குக’ என்று வாழ்த்துகின்றனர். இதனைப் போர்மேற் செல்லும் மன்னன் கொற்றவையைப் பேணியவனாகத் தன் வீரர்க்கு அளிக்கும் பெருஞ்சோற்று நிலை என்றும் கொள்வர்.
பெருஞ்சோற்று நிலையைப் பற்றிய தெளிவான கருத்து இப்பாட்டாலே அறியப்படுகின்றது. பண்டைத் தமிழ் அரசர்கள் தம்மளவிலேயும் பெருமறவராக விளங்கினார்கள். பேரறிஞர்களாகவும் பெருங் கொடையாளர்களாகவும் பெரும் மனிதாபிமானம் உள்ளவர்களாகவும் விளங்கினர்.
இத்தகைய எல்லாம் சிறப்புற அமைந்து விளங்கிய செவ்வியினாலேதான் அவர்களின் புகழ் காலவெள்ளத்தையும் கடந்து நிலைத்து நிற்கின்றது. பண்டைப் புலவர்கள் போற்றுதற்குரிய செவ்வியும் இந்தச் சிறப்புத்தான், வெம்மையும் தண்மையும் ஒன்று கூடிய நிலை. போர்க்களத்திலே கொடிய வெம்மை; மக்களிடத்திலே அளவற்ற தண்மை; இந்த இணைவுதான் பெருமை தந்தது, புகழைத் தந்தது. புலவர்களைப் பாடவும் வைத்தது!
மேல்நிலை ஆட்சிப் பொறுப்பிலே அமர்வோர் என்றும் போற்றிக் கொளற்குரிய ஆட்சிச் சால்பும் இதுவே யாகும். இதனைப் பிற சங்கப் பாடல்களும் உரைக்கும்.
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது.
நான்காம் பத்து
பதிகம்
ஆராத் திருவிற் சேர லாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி யீன்ற மகன்; முனை
பனிப்பப் பிறந்து பல்புகழ் நிரீஇ வளர்த்து
ஊழின் ஆகிய உயர்பெருஞ் சிறப்பின் 5
பூழி நாட்டைப் படைஎடுத்துத் தழீஇ,
உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச்செருவி னாற்றலை யறுத்து அவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து
குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச் 10
செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றிக்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேறலைக்
காப்பியாற்றுக் காப்பியனார்
பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்,
(1) | கமழ்குரற்றுழாய், | (2) | கழையமல் கழனி, |
(3) | வரம்பில் வெள்ளம், | (4) | ஒண்பொறிக்கழற்கால், |
(5) | மெய்யாடு பறந்தலை, | (6) | வாள்மயங்கு கடுந்தார், |
(7) | வலம்படு வென்றி, | (8) | பரிசிலர் வெறுக்கை, |
(9) | ஏவல் வியன்பணை, | (10) | நாடுகாண் அவிர்சுடர் |
பாடிப்பெற்ற பரிசில் : நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத், தான் ஆள்வதிற் பாகங்கொடுத்தான் அக்கோ.
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
அளவற்ற புகழ்ச் செல்வத்தைக் கொண்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவனுக்கு வேளாவிக் கோமான் பதுமனின் மகளான ‘பதுமன் தேவி’ பெற்றுத் தந்த மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். அவன்—
போர்முனையிடத்தே பகைத்து வந்தாரான வேற்றரசர் படைகள் எல்லாம், தன் தோற்றத்தாலேயே அஞ்சி நடு நடுங்குமாறு வீரப்பொலிவுடன் பிறந்தவன். தன் போராண்மையாலும், நாடுகாவல் திறனாலும் தன் குடியின் பலவான புகழையும் வளர்த்தவனாக விளங்கியவன். முறைமையினலே உண்டானதாகிய பூழிநாட்டைப் படையெடுத்துச் சென்று வென்று தன் நாட்டோடுஞ் சேர்த்துக் கொண்டவன். உருட்சியான பூக்களையுடைய கடம்பினைக் கொண்ட கடம்பின் பெருவாயில் என்னுமிடத்திலே இருந்தோனாகிய நன்னனை, அவனுடைய நிலையான போர் ஆற்றலையே முற்றவும் அறுத்து வெற்றி கொண்டவன். பொன்னைப்போல விளங்கும் பூக்களைக் கொண்ட அவனது காவன்மரமான வாகைமரத்தை வேரொடும் வெட்டியழித்தவன். போர்க் களங்களிலே பாய்ந்தோடிய குருதியாகிய சிவந்த வெள்ளம் யானைகளையும் இழுத்துச் செல்லுமாறு, பல பெரும் போர்களையும் செய்து பகைவரை அழித்து வெற்றி கொண்டவன். குருதியாற் சிவந்த அக் களங்களிலே கள வேள்விகளைச் செய்தும் புகழடைந்தவன். தளர்ந்த குடிகளைத் திருத்தி வாழச் செய்தவனும், வெற்றியே அடைபவனும் ஆகிய வெற்றியாளன் அவன். அத் தகையானாகிய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனர் பத்துப் பாட்டுக்களால் போற்றிப் பாடினர்.
சொற்பொருள் முதலியன : சேரலாதன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். ‘முனை பனிப்பப் பிறந்து’ என்றது. தோன்றிற் புகழொடு தோன்றுக என்றபடி தோற்றப் பொலிவோடு பிறந்ததாம். பனித்தல் – நடு நடுங்கல். ஊழ் – முறைமை. ஆராத்திரு – நுகரநுகர விருப்பந்தீராத இனிய செல்வம். இவனது நன்னனை அழித்த வெற்றியை ‘இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், பொன்பூண் நன்னன் பொருது களத்தொழிய, வலம்படு கொற்றந்தந்த வாய்வாள், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்’ எனக் கல்லாடனாரும் குறிப்பர் (அகம் 199).
31. கமழ்குரல் துழாஅய் !
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : கமழ்குரல் துழாய். இதனுற் சொல்லியது: சேரமானின் மாட்சிமை யெல்லாம் உடன் எடுத்துப் புகழ்ந்தவாறு.
[பெயர் விளக்கம் : துழாயின் தழைக்கொத்துக்களாலே கட்டிய மாலையினை அணிபவன் திருமால். துழாயின் தழைக்கும் நறுமணம் உண்டு. இதனைக் ‘கமழ்குரல் துழாய் அலங்கற் செல்வன்’ என்று சொல்லிய சொல்லாட்சி நயத்தாலே இப் பாட்டு இப் பெயரைப் பெற்றது. ‘நக்கலர் துழாய் நாறுஇணர்க் கண்ணியை’ எனப் பரிபாடலும் இதனைக் கூறும் (பாடல் 4.). பிற பூக்களாலே நறுமணத்தை உடையன; துழாயோ தன் தழையையே நறுமணமாகக் கொண்டது என்னும் சிறப்புத் தகைமையையும் அறிந்து போற்றல் வேண்டும். கபத்தை அறுக்கும் தன்மையுடைய இதனை அலைகடல் துயில்வோனான மாயோனுக்கு உவப்புடைய தாக்கியதும் சிறப்பாகும். இதனைப் பற்றிய கதையினைத் திருமாலைப் பற்றிய பழங்கதைகள் சுவைபடக் கூறுவதும் கண்டு மகிழ்க.]
குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்குக்
கைசுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனந்தலை ஒருங்கெழுந்து ஒலிப்பத்
தெள்ளுயர் வடிமணி எறியுநர் கல்லென 5
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டூது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய்
அலங்கம் செல்வன் சேவடி பரவி
நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர 10
மணிநிற மையிருள் அகல நிலாவிரிபு
கோடுகூடு மதியம் இயலுற் றாங்குத்
துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்டு
ஆண்கடன் இறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு
கருவி வானம் தண்தளி தலைஇய 15
வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய
பனிவார் விண்டு விறல்வரை யற்றே;
கடவுள் அஞ்சி வானத் திழைத்த
தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட
எழூஉநிவந் தன்ன பரேரெறுழ் முழவுத்தோள் 20
வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து
வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
வண்டன் அனையைமன் நீயே! வண்டுபட
ஒலித்த கூந்தல் அறஞ்சால் கற்பின்
குழைக்குவிளக் காகிய ஒண்ணுதல் பொன்னின் 25
இழைக்குவிளக் காகிய அவ்வாங்கு உந்தி
விசும்புவழங்கு மகளி ருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள்நின் தொன்னகர்ச் செல்வி!
நிலனதிர்பு இரங்கல வாகி வலனேர்பு
வியன்பணை முழங்கும் வேன்மூசு அழுவத்து 30
அடங்கிய புடையல் பொலங்கழல் நோன்தாள்
ஒடுங்காத் தெவ்வர் ஊக்கறக் கடைஇப்
புறக்கொடை எறியார்நின் மறப்படை கொள்ளுநர்!
நகைவர்க்கு அரண மாகிப் பகைவர்க்குச்
சூர்நிகழ்ந் தற்றுநின் தானை! 35
போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே.
தெளிவுரை: குன்றங்கள் பலவும் தன்மேலாகப் பொருந்தி நிற்கவும், பலவகைக் கடல்படு பொருள்களும் தன்னிடத்தே திரண்டுள்ள கடலானது தனக்கு ஆடையாக விளங்கவும் அமைந்தது மண்ணணுச் செறிந்த இவ்வுலகம். இதனிடத்துள்ள மாந்தரனைவரும் ஒருசேரத் தம் கைகளை மேலே எடுத்தவராகத் தம் குறைபாட்டைச் சொல்லிக் கதறும் ஆரவாரமானது, வேறுபட்ட நால்வகைத் திசைகளினும் ஒருசேரப் பரந்தொலிக்கும். தெளிந்த ஓசையினையும் உயர்ந்த வேலைப்பாட்டையும் கொண்ட மணியினை அடிப்பவர் கல்லென்னும் ஒலியை எழுப்புவர். உண்ணாவிரதத்தோடு நோன்பிருக்கும் மக்கள் கூட்டத்தினர், பசிய நிலப்பாங்கிலே அமைந்த குளிர்ந்த நீர்த்துறைகளிற் சென்று நீராடியவராக வழிபடுவதற்கு வருவர். வண்டினம் மொய்த்துத் தேனூதும் அழகிய தாரினை யணிந்ததும், திருமகள் பொருந்தியதுமான மார்பினையும், காண்பார் கண்களைத் தன்னொளியாலேயே கூசச்செய்யும் ஒளிகொண்ட சக்கரப் படையினையும், மணம் வீசும் கொத்துக்களையுடைய துளசி மாலையணிந்த சிறப்பினையும் உடையவன் திருமால். செல்வனாகிய அத்திருமாலின் சிவந்த அடிகளைப் பரவிய பின்னர், இவர்களனைவரும் தத்தம் நெஞ்சகத்தே நிறைவுபெற்ற உவகையுடையவராகத் தாந்தாம் வாழும் ஊர்கட்குத் திரும்பிச் செல்வர். அவர்கள். அங்ஙனம் வணங்கிச் செல்லுமாறு—
நீலமணியைப் போன்ற நிறத்தைக் கொண்ட காரிருளானது அகலும்படியாகத், தன் நிலவுக் கதிர்களைப் பரப்பிய வண்ணம், தன் இருமுனைகளும் ஒன்றுகூடி விளங்கும் முழுமதியானது வானகத்தே தவழ்ந்து, செல்லலுற்றாற்போல் வறுமையால் வாடிய குடிமக்களின் சிறந்த ஒழுக்கத்தினைத் திருத்தமுறச் செய்தவனாக, முரசத்து முழக்கினைக்கொண்டு, நின் ஆண்மைக்குரிய கடமையைச் சீருறச் செய்து முடித்தனை! பூண்கள் விளங்கும் நின் அகன்ற மார்பகமானது, தொகுதிகொண்ட மேகங்கள் குளிர்ந்த மழையினை பெய்யத் தலைப்பட்டதும், வடக்குத் தெற்காகக் குறுக்கிட்டுக் கிடப்பதும், மேகங்களைத் தடுக்கும் உச்சியையுடையதும், அழகினை யுடையதுமான, பனி நிறைந்த திருமாலின் சிறந்த மலையான வேங்கடமலையைப் போன்றதாகும், பெருமானே!
கடவுளரின் தாக்குதலுக்கு அஞ்சிய அசுரர்கள் வானத்திடத்தே அமைத்த, தொங்கும் கோட்டைகளின் கதவங்கட்குக் காவலாகக் கொண்ட கணைய மரங்களைப் போல, நேராக நிமிர்ந்து விளங்கும் பருத்த அழகிய வலிமிக்க முழவைப்போன்று விளங்கும் தோள்களை உடையவனும், வெண்மையான அலைகள் விளங்கும் கடலாலே சூழப்பெற்ற இவ்வுலகத்துத் தன் வளவிய புகழை நிலைபெறச் செய்தவனும், வகைமையாற் சிறந்த செல்வத்தை உடைவனுமான ‘வண்டன்’ என்பானை நீயும் ஒத்தவனா யிருக்கின்றனை! வண்டினம் மொய்க்குமாறு நறுமணத்தைக் கொண்டதும், தழைத்து நீண்டதுமான கூந்தலையும், அறம் நிரம்பிய கற்பினையும், காதுகளின் குழைகட்கு விளக்கம் தருவதாக விளங்கும் ஒளியுடைய நெற்றியையும், பொன்னின் அணிகலனுக்கு விளக்கந் தருவதாகிய அழகிய வளைந்த கொப்பூழினையும் கொண்டவள், வானகத்தே உலவும் கற்புடைய மகளிர் எழுவருள்ளும் சிறந்தவளான செம்மீனாகிய அருந்தியைப் போன்றவள், நின்னுடைய தொன்மைவாய்ந்த அரண்மனைக்குச் செல்வியாக விளங்கும் நின் தேவியாவாள்.
நின் போர்முரசு நிலத்து மக்கள் அதிர்ச்சிகொள்ளுமாறு என்றும் ஒலித்தலைச் செய்யாது. வெற்றிக் களத்தேயே எழுச்சி பெற்று அகன்ற நின் முரசம் வெற்றியை மேற்கொண்டு முழங்குவதாகும். வேற்படைகள் தம்முள் நெருங்கிய போர்க்களத்தே, ஒடுங்கிய பனம்பூ மாலையினையும், பொற்கழலினையும், வலிய கால்களையும் உடையவரான நின் படைமறவர், அடங்காத பகைவரது ஊக்கம் எல்லாம் அறவே அழியுமாறு, அவர்களைக் களத்தினின்றும் தோற்று ஓடச் செய்வர். அவ்வாறு அவர்கள் புறங்கொடுத்து ஓடும்பொழுது, அவர்களின் முதுகின்புறத்தே, தம் கைவேலை நின் மறவர் படைத்தலைவர்கள் ஒருபோதுமே எறிந்து அறிய மாட்டார்கள்! நின்பால் அன்பு உடையவர்களுக்குத் தாம் காவலரணைப் போல அமைந்து அவரைக் காத்தும், நின் பகைவருக்குச் சூர்த்தெய்வத்தைப்போல அச்சந்தரக் கடுமைகாட்டியும் விளங்குவது, நின் தானை! இவ்வாறாகப் போர்த்தொழிலிலேயும் ஆட்சி நலத்திலேயும் மேம்பட்டு விளங்குவோனாகிய தலைவனே! நீதான் பலவகையினும் மாட்சிமைப்பட்டாய். நீ வாழ்க!
சொற்பொருளும் விளக்கமும்: தலைமணத்தல் – பொருந்தியிருத்தல். தலை – இடம். மணத்தல் – கூடியிருத்தல். குழூஉ திரண்டுள்ள. மண்கெழு ஞாலம் – மண்ணணுச் செறிந்த உலகம். ஓராங்கு – ஒரு சேர. மாதிரம்-திசை. நால்வேறு நனந்தலை – நால் வேறாகப் பரந்துபட்ட அகன்ற இடம். தெள் – தெளிவு; ஒலியிற் குற்றமற்ற தன்மை. உயர்வு – சிறப்பு. வடித்தல் – வார்த்தல். எறியுநர் – அடிப்போர். கல்லென – கல்லென்னும் ஒலியெழ மணியை முழக்க. உண்ணா – உண்ணாத. பைஞ்ஞிலம் – பசிய இடம்; இடத்துள்ள மாந்தர்; இவர் நோன்பு ஏற்றோர். ஞெமர்தல் – அமர்தல். திகிரி – சக்கரம். கண்பொரல் – ஒளி மிகுதியாற் காண்பார் கண்களைக் கூசச்செய்தல். குரல் – கொத்து; இது கொத்தான தழையுமாம்; துளசி மாலை கட்டுவோர் இன்றும் தழையைக் கொத்தாக வைத்தே கட்டுதலைக் காணலாம்; பூங்கொத்துமாம். அலங்கல் – பெரிய மாலை; அசைந்தாடும் மாலை. செல்வன் – திருமால்; செல்வியின் கணவன். துஞ்சுபதி – வாழும் ஊர்.
மணி – நீலமணி. மணிநிறம் – கருநீலநிறம். மையிருள் -காரிருள். நிலாவிரிபு – நிலாக் கதிர்கள் பரவி. கோடு-முனை. கூடுதல் – ஒன்று சேரல்; மூன்றாம் பிறைக் காலத்தே இரு முனை கொண்ட பிறையாக விளங்கிய தன்மைகெட்டு முழு மதியமான நிலைமை. இயலுறல் – தவழ்ந்து செல்லல். துளங்குதல் – அலைதல்; வறுமையால் வாடியலைந்த நிலை. விழுத்திணை – சிறந்த ஒழுக்கம். திருத்தி – திருத்தமுற அமைத்து; அவர் நிலை உயர்வதற்கு வேண்டியன உதவி. முரசு கொண்டு – முரசத்தின் முழக்கினை மேற்கொண்டு; பகைவர் முரசங்களைக் கைக்கொண்டு எனலும் பொருந்தும். கிளர்தல் ஒளி செய்தல். பூண் – பூணப்படும் பேரணி. வியன் மார்பு – அகன்ற மார்பு. கருவி – தொகுதி. வடதெற்கு விலகி – தென் வடலாகக் குறுக்கே அமைந்து. விலகு தலைத்து – மேகங்களைத் தடுக்கும் தலைப்பக்கத்தை உடையது. எழிலிய – அழகிய; மேகங்களைக் கொண்ட எனலும் ஆம். விண்டு வரை – விட்டுணுவுக்குரிய மலை; இது வேங்கடமலையினை; அன்றித் திருமால் குடிகொண்டிருக்கும் நம்பிமலை யெனினும் பொருந்தும். ‘ஆண்கடன் இறுத்தல்’ என்றது, போரில் உதவிய தன் மறவர்க்கு வரிசையும் பரிசும் அளித்து என்றதாம்.
கடவுள் – கடவுளர்: தேவர்: அனைத்தும் கடந்தவர். இழைத்த – அமைத்த: கட்டிய. தூங்கல் – தொங்கல். கதவம் – கதவு. எழூஉ – கணைய மரம். நிவத்தல் – நேரிதாக உயர்தல். பரேர் எறுழ் – பருத்த அழகிய வலிமை கொண்ட முந்நீர் – கடல். வண்புகழ் – வளவிய புகழ்; வண்மையான புகழும் ஆம். வகை சால் செல்வம் – எல்லா வகையானும் நிறைந்த சிறப்பமைந்த செல்வம். வண்டன் – ஒரு சிறந்த மாவீரன்.
ஒலித்த – தழைத்த; செழுமையான. அறஞ்சால் கற்பு அறநெறி நிரம்பிய கற்பு: அறநெறியாவது, இல்லற வொழுக்கம். குழை – காதணி. அவ்வாங்கு – அழகிய வளைந்த. உந்தி – கொப்பூழ். விசும்பு வழங்கு மகளிர் – சப்த கன்னியர் எழுவர்; செம்மீன் – சிவந்த விண்மீன். தொன்னகர்- பழைமைச் சிறப்பு வாய்ந்த அரண்மனை. செல்வி – செல்வமாக விளங்குபவள்; கோப்பெருந்தேவி. ‘தொன்னகர்ச் செல்வி’ என்றதனால், இவள் வஞ்சி நகரத்தாள் என்றும் கருதலாம்.
நிலன் – நிலத்து மக்கள்: இவர் நார்முடிச் சேரலின் நாட்டவர்; ‘அவர் அதிர்பு இரங்கல’ என்றது, அவரை வருத்திக் கொடியனெம் இறையெனும் பெயரை என்றும் பெற்றிலன் என்பதாம். வலன் – வெற்றி. ஏர்பு – எழுந்து. வியன்பணை – அகன்ற முழவு. வேல் – வேற்படைஞர். மூசுதல் – நெருங்குதல். புடையல் – மாலை. பொலம்- பொன். நோன்மை – வலிமை. ஒடுங்காத் தெவ்வர் – அடங்காது எதிர்த்து நின்ற பகை மறவர். ஊக்கற – ஊக்கம் அற்றுப் போக. கடைஇ – செலுத்தி; ஓட்டி. புறக்கொடை எறியார்- புறத்தே படுமாறு வேலினை எறியமாட்டார். மறப்படை கொள்ளுநர் – மறவர் படையின் தலைமை கொண்டவர்.
நகைவர் -நண்பர். அரணம் – காவல். சூர் – சூர்த் தெய்வம். குருசில் – தலைவனே. பலவே மாண்டனை – பலவானும் மாட்சிமைப்பட்டனை; மாட்சியாவது போர்க் களத்தும் ஆட்சியிடத்தும் பெற்ற தகைமை சிறந்த புகழ்.
அவன் போர் மறவரின் மறமாண்பை வியந்து கூறிப் பாராட்டியும், அவன் தேவியின் கற்பு மேம்பாட்டைப் போற்றிக் கூறியும், அவன் காவற்சிறப்பைப் புகழ்ந்தும் அவனது செவ்வியைப் போற்றுகின்றார். அவனையும் வாழ்த்துகின்றார்.
- கழையமல் கழனி !
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம்: தூக்கு: செந்தூக்கு. பெயர்: கழையமல் கழனி. இதனாற் சொல்லியது:சேரலின் பலவான குணநலன் களையும் உடனெண்ணிப் புகழ்ந்து, அவற்றுள் அவனது பொறையுடைமையைச் சிறப்பாகப் புகழ்ந்தது.
[பெயர் விளக்கம்: வளமையைக் குறிப்பார். வயல்களிலேயுள்ள நெற்றாள்கள், தம் பருமையாலும் உயர்ந்து வளர்ந்துள்ள தம் நெடுமையாலும் மூங்கிலைப் போலத் தோற்றுவன என்பாராய்க், ‘கழை யமல் கழனி’ எனச் சிறப்பித்துக் கூறியுள்ளனர். இந்நயத்தால் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது. இதனால், சேரநாட்டு வளமைப் பெருக்கமும் அறியப்படும்.]
மாண்டனை பலவே போர்மிகு குருசில்நீ
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்
முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற
மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று
துப்புத்துவர் போகப் பெருங்கிளை உவப்ப 5
ஈத்தான்று ஆனா இடனுடை வளனும்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபுந
கொன்னொன்று மருண்டனென் அடுப்போர்க் கொற்றவ!
நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப் 10
பெருமலை யானையொடு புலங்கெட விறுத்துத்
தடந்தாள் நாரை படிந்திரை கவரும்
முடந்தை நெல்லின் கழையமல் கழனிப்
பிழையா விளையுள் நாடகப் படுத்து
வையா மாலையர் வசையுநகர்க் கறுத்த 15
பகைவர் தேஎத் தாயினும்
சினவா யாகுதல் இறும்பூதால் பெரிதே!
தெளிவுரை: போர்க்களத்திலே எதிரிட்டு வந்தாரான பகைவரினும் மேம்பட்டு விளங்கும் போர்த்தலைவனே! நீதான் முன் சொன்னாற்போலப் பலவகையானும் மாட்சியுற்றனை! திசையனைத்தும் விளங்கச் செய்யும் நற்குண நிறைவும், நடுவு நிலைமையும் கொண்டவன் நீ. முத்துக்களையுடைய கொம்புகளைக் கொண்ட இளங்களிறுகள் பிளிற்றொலியைச் செய்யப், போர்விருப்பம் மிக்கெழுந்தாராகச் செல்லும் நின் தூசிப் படை மறவர்கள், பகைவர் நாட்டின் முடிவிடம் வரைக்கும் செல்வர். தம் வலிமையின் கண் முற்றவும் உயர்ந்து நிற்கவும், தம் பெரிய பாணரும் கூத்தரும் முதலான சுற்றத்தார் உவப்படையவும், இவர் நாட்டுச் செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டுவந்து கொடுத்தும்: மகிழ்வர். அவ்வாறாகக் கொடுத்தும் குறைவு படாத செல்வத்தை யுடைய வளமையும், தளர்ந்த குடிகளைத் திருத்தி வளமையாக்கிய சிறந்த வெற்றியுமாகிய இவற்றை எல்லாம் எண்ணிக் காணப் புகுந்தால், இட்டு எண்ணிக் காண்பதற்கு இடப்படும் கழற்சிக் காய்களும் போதாவாகுமே! பகைவரைக் கொல்லும் போர்த்தொழிலிலே வல்லவனாகிய கொற்றவனே! நின் பண்புகளுள் ஒன்றைமட்டும் எண்ணி யானும் வியந்தேன், பெருமானே!
‘நெடுமிடல் அஞ்சி’ என்பான் நின்னொடும் போர்மேற் கொண்டான். அவன் அழியுமாறும், அவனுடைய கொடிய வலிமை கெடுமாறும், பெரிய மலைபோல விளங்கும் நின் யானைப்படையோடும் சென்று, நீதான் நாட்டுப்பகுதிகளின் வளமை கெடுமாறு பாசறையிட்டுத் தங்கினாய். பெரிய கால்களையுடைய நாரையானது தங்கித் தனக்குரிய மீனாகிய இரையைக் கவர்ந்து செல்லுகின்ற நீர்வளத்தைப் பெற்ற, வளைந்த கதிர்களைக் கொண்ட நெற்பயிரின், மூங்கிலைப்போல விளங்கும் தாள்கள் நெருங்கியிருப்பதான வயல்களையுடைய, விளைச்சல் தவறாத அவன் நாட்டையும் கைப்பற்றிக் கொண்டாய். ஒன்றானும் வகையோடு பொருந்தி நடவாத மயக்கத்தை உடையவரான பகைவர்கள், நின்னோடு செற்றம் கொண்டாடாது ஒழிந்திருக்க வேண்டும் கால அளவு வரையினும் அதனை மேற்கொள்ளாராய்த், தம் சினத்தைக் காட்டுதலே தொழிலாகக் கொண்டிருந்ததனாலே, நின்னால் அழிவெய்தினர். நீயும் அவர்களை வென்று கைக்கொண்ட தன்றி, அவர்கள் நாட்டிடத்து மக்களிடத்தே யாதும் சினங் கொண்டு, அவரைத் துன்புறுத்தாதவனாகவும் விளங்கினாய். இதுதான் பெரிதும் வியத்தற்கு உரியது, பெருமானே!
சொற்பொருள் விளக்கம்: போர்மிகு குருசில் – போர்த் தொழிலில் மிக்கு விளங்கும் தலைவனே! மாதிரம் திசை. சால்பு – நற்குணங்கள். செம்மை – நடுநிலை பிறழாத தன்மை; சால்பும் நடுநிலையுள் அடங்கும். எனினும், அரசர்க்குச் செங்கோன்மை பிற நற்குணங்களினும் சிறப்புற அமைய வேண்டுவதாகலின் தனித்துக் கூறினார். மழகளிறு – இளங் களிறு. பிளிறல் – குரல் எழுப்பல். மிக்கெழு கடுந்தார் – மிகுதியாக எழுந்த கடிய விரைவையுடைய தூசிப்படை. துய்த்தலை – முடிவிடம்; எல்லை. ‘துப்பு துவர் போக’ – வலியின்கண் முற்றவும் உயர்ந்து நிற்க. கிளை – பாணரும் கூத்தரும் போன்ற இரவன் மாக்களை. வளன்-செல்வம். கழங்கு – கழற்சிக்காய். தபுதல் – கெடுதல். வலம்படு வென்றி – போர்வெற்றிச் செயலொடு பொருந்திய குடிகாத்தலாகிய வெற்றி. மருட்சி – மயக்கம்; வியப்பு.
‘நெடுமிடல்’ என்றது அஞ்சியின் பெயரடை; நெடிய வலியுடையவன் என்பதாம்; இயற்பெயராகவும் கொள்வர். இவ்வாறே கொடுமிடல் என்றதும், கொடிய போர்வலிமை எனவும், அஞ்சியின் உடன்பிறந்தான் எனவும் கருதப்படும். இவர்கள் அஞ்சியின் மரபினர். சேர நாட்டார்க்கு உட்பட்ட குறுநில மன்னர்; சேரவரசர் குடியினைச் சார்ந்தவர். இவர்களுட் சிறந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சியாவான். இனி, இந்நெடுமிடல் என்பான் அரிமண வாயில் உறத்தூரிடத்தே, பசும்பூட் பொருந்தலரை வென்றான் என்பதனைப் பரணர் பாட்டால் அறியலாம் (அகம் 261). புலம் கெட்டது இவன் அழிக்கக் கருதியதனா லன்று; பெருமலை யானையொடு வந்து பாசறையிட்டுத் தங்கியதனால் அது அழிவுற்றது என்றதன் நயத்தைக் காண்க. வசையுநர் – பகைவர். முடந்தை – வளைந்த; இது கதிரின் பாரம் தாங்காது தலை சாய்ந்த நிலை. நெல்லின் கழை – நெற்றாள்; அதுதான் மூங்கிலைப்போல விளங்கிற்றென்பார் ’கழை’ என்றனர். இச்சிறப்பாலே இப்பாட்டு ’கழையமல் கழனி’ எனப் பெற்றது. ‘பிழையா விளையுள் நாடு – தப்பாத விளைச்சலையுடைய நாடு. வசையுநர்க் கறுத்த – பகைவரைக் கோபித்த. ‘சினவாயாகுதல்’ என்றது, அவர்தாம் அத் தன்மையர் எனினும், நீதான் அவரைச் சினந்து கொள்வா யல்லை என்றதாம். இது, அவரும் பணிந்து திறை செலுத்தின ராயின், அவரையும் பொறுத்து ஆட்கொள்ளும் தன்மையன் என்ற தாம். இனி, அந்நாட்டு மக்கள்பாற் சினவாய் என்பதும் பொருந்தும். இதனால் அவன் பலவகைக் குணங் களுள்ளும் பொறையே சிறந்த குணமாதலைக் கூறினார். அரசனுக்குப் பொறை சிறப்பாதலைப் ’போற்றார்ப் பொறுத்தலும்’ என முரஞ்சியூர் முடிநாகராயரின் புறப்பாட்டு வாக்காலும் (புறம்.2), ’பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்’ என்னும் கலிப்பாட்டு விளக்கத்தானும் (நல்லந்துவனார் – நெய்தற்கலி 16) அறிக.
33. வரம்பில் வெள்ளம் !
துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம்: தூக்கு: செந்தூக்கும் வஞ்சித் தூக்கும். பெயர்: வரம்பில் வெள்ளம். இதனாற் சொல்லியது:நார்முடிச் சேரலின் போர்வெற்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம்: கடல் நீரின் மிகுதியை ‘வரம்புடைய வெள்ளம்’ என்று ஆக்கி, சேரலின் தானை வீரர் பெருக்கத்தை ‘வரம்பில் வெள்ளம்’ என அதனினும் மிகுதியுடையதாக வியந்து கூறிய உவமைநயத்தால் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது.
இயங்குகின்ற இரு படைகளது எழுச்சியின் ஆரவார ஒலியென இதனைக் கொண்டு, இஃது ‘இயங்குபடை அரவம்’ என எடுத்துக் காட்டுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.8.உரை.)
‘கடிமரத்தான்’ என்பது முதலாக வரும் மூன்றடிகள் வஞ்சியடிகளாதலின் ‘வஞ்சித் தூக்கும்’ கூறப்பெற்றது.
‘வரம்பில் வெள்ளம் கருதினென்’ என எடுத்துச் செலவை மேலிட்டுக் கூறியதனாலே வஞ்சித் துறைப் பாடாண் பாட்டு’ என்றனர்.]
இறும்பூதால் பெரிதே கொடித்தேர் அண்ணல்
வடிமணி அணைத்த பணைமருள் நோன்தாள்
கடிமரத்தால் களிறணைத்து
நெடுநீர துறைகலங்க
மூழ்த்திறுத்த வியன்தானையொடு 5
புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்
வாள்மதி லாக வேல்மிளை உயர்த்து
வில்விசை உமிழ்ந்த வைம்முள் அம்பின்
செவ்வாய் எஃகம் வளைஇய அகழிற்
காரிடி உருமின் உரறு முரசின் 10
கால்வழங்கு ஆரெயில் கருதின்
போரெதிர் வேந்தர் ஒருஉப நின்னே!
தெளிவுரை: கொடிகள் விளங்கும் தேர்ப்படைகளை உடையவனாகிய தலைமையாளனே! நின் போர்ச்செயல்தான் வியப்பினால் பெரிதே யாகும். திருந்திய மணிகளைப் பக்கத்திலே கொண்ட, துடியையொத்த வலிய தாளையுடைய களிற்றினைப் பகைவரது காவன்மரத்திலே கொண்டுபோய்க் கட்டினை. ஆழமாகிய நிரையுடைய நீர்த்துறைகள் எல்லாம் கலங்குமாறு மொய்த்துச்சென்று, முற்பட்டுத் தங்குவது நின் தூசிப்படை. அதனோடு பகைவர் நாடு கெடும்படியாக, எல்லையற்ற வெள்ளம்போன்ற நின் பெரும் படையானது வளைந்து வளைந்து அணிவகுத்துச் செல்லும். அப்படை மறவர்தம் வாட்படையே நினது கோட்டை மதிலாகவும் உயர்ந்த வேற்படையே நினது காவற்காடாகவும், விற்கள் விசையோடு வெளிப்படுத்தும் கூர்மையான முள்போன்ற அம்புகளும், சிவந்த முனையுடைய பிற படைக்கருவிகளும் நின்னைச் சூழ்ந்திருக்கும் அகழியாகவும் கொண்டவனாக, நீ பாசறையிட்டுத் தங்குவாய். கார்காலத்தே இடிக்கும் இடியினைப்போல ஒலிக்கின்ற முரசினையுடையதும், காலால் நடக்கின்ற சிறப்பையுடையதுமான, நின் பகைவரால் கடத்தற்கரிய அரணைப்பற்றிக் கருதினால், நின்னோடு போர்செய்யக் கருதிய வேந்தர்கள், நின் வலிமைக்கு முன் எதிர்நிற்க மாட்டாராய்த் தம் மனவலி அழிந்தாராக ஓடி ஒளிவர். இதுதான் பெரிதும் வியக்கத்தக்கது பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும்: அண்ணல் – தலைமைப்பாடு கொண்டவன். வடிமணி – திருந்திய ஒலியைச் செய்யும் மணி; வார்த்துச் செய்த மணியும் ஆம். அணைத்த- இருபக்கமும் தொங்கக் கட்டியிருக்க விளங்கும். பணை – அடி; உடுக்கை. நோன்மை – வலிமை. கடிமரம் – காவல்மரம். பகைவரது காவன்மரத்தில் களிற்றைக் கட்டுதல் அவரைத் தான் வெற்றி கொண்டதனைக் காட்டும் அடையாளமாம்; அவர் அதனைத் தடுக்க முற்பட்டுப் போரியற்ற வேண்டும்; அல்லது பணிந்துபோக வேண்டும். இரண்டுமன்றி ஓடி மறைபவர் மறப்பண்பினர் ஆகார். ‘நெடுநீர துறை கலங்க’ என்றது, பகைவர் நாட்டிலுள்ள நீர்நிலைகளை அழித்தலைக் கூறியது; இவ்வாறு அழித்தலைச் செய்வர் என்பதனைக் ‘கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப் பெரும்புனல் வாய் திறந்த பின்னும் என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறும். மூழ்த்தல் – மொய்த்தல். வகைவகை யூழூழ் கதழ்ம்பு மூழ்த்து ஏறி’ என வரும் பரிபாடல் அடியும் நோக்குக. (பரி. 10 : 18). வியன் தானை – பரந்த தானை; இது பகைவர் நாட்டு எல்லையுள் முற்படச் சென்றுவிட்ட தூசிப் படையை. ‘புலங் கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்’ என்றது, தொடர்ந்து வரும் பெரும் படையினை. கரையினையுடைய கடலினும் பெரிதாகப் பரவிச்சென்ற பெரும் படை என்பவர், ‘வரம்பில் வெள்ளம்’ என்றனர். ‘கால் வழங்கு ஆரெயில்’ – கால்களால் திரிதரும் கடத்தற்கரிய அரண்: படை மறவரே அரணாகச் சூழ்ந்திருந்தனர் என்பதாம். போரினைச் செய்ய வேண்டாதே, படை சென்றதும் பகைவர் ஓடி மறைந்தது வியப்புத்தருவது என்றனர்.
34. நுண்பொறிக் கழற்கால் !
துறை : தும்பை யரவம். வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும். பெயர் : ஒண்பொறிக் கழற்கால். இதனாற் சொல்லியது : நார்முடிச் சேரலின் வென்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம் : ‘தும்பை’ என்பது, மைந்து பொருளாக வேந்தனைச் சென்று தலையழிக்கும் சிறப்பிற்று. ‘அரசுபடக் கடக்கும்’ என, வென்றி கோடலே கூறினமை யான் ‘தும்பைத் துறை’ ஆயிற்று: ‘ஒரூஉப’ எனப் படை எழுச்சி மாத்திரமே கூறினமையின், அதனுள் “அரவம்” ஆயிற்று.
“செல்வுளைய” முதலாக வரும் அடிகள் இரண்டும் வஞ்சியடிகள்; ஆதலின் வஞ்சித்தூக்கும் ஆயிற்று. தாங்கள் ஆற்றிய சிறந்த போர்த்தொழிலைப் பொறித்தலையுடைய ஒள்ளிய வீரக்கழல் அணிந்த கால் என விசேடித்து உரைத்தலின், இப் பாட்டிற்கு இது பெயராயிற்று.]
ஒரூஉப நின்னே ஒருபெரு வேந்தே!
ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால்
இருநிலம் தோயும் விரிநூல் அறுவையர்
செவ்வுளைய மாவூர்ந்தும்
நெடுங்கொடிய தேர்மிசையும் 5
ஓடை விளங்கும் உருகெழு புகர்நுதல்
பொன்னணி யானை முரண்சேர் எருத்தினும்
மன்னிலத் தமைந்த……………..
மாறா மைந்தர் மாறுநிலை தேய
முரைசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழ 10
அரைசுபடக் கடக்கும் ஆற்றல்
புரைசால் மைந்த நீ யோம்பன் மாறே!
தெளிவுரை : ஒப்பற்றோனாகிய பெருவேந்தனே! போர்க் களத்திலே பகைவர்க்குப் புறங்கொடுத்து ஓடாத மேற்கோளினையும், தாம் முன்னர்ப் போர்த்தொழில்களைச் செய்து சிறப்புற்ற ஒள்ளிய செயல்கள் பொறிக்கப்பெற்ற கழலணிந்த கால்களையும், பெரிய நிலத்திலெ தோயுமாறு தொங்கக் கட்டிய விரிந்த நூலாடையினையும் உடையவர் நின் பகைவர் . அவர்கள் சிவந்த பிடரிமயிரினையுடைய குதிரைகளை ஊர்ந்த படியும், நெடிய கொடி பரக்கும் தேர்களைச் செலுத்தியபடியும், முகபடாம் விளங்கும் அச்சம் பொருந்திய புள்ளிகளைக் கொண்ட நெற்றியினையுடைய, பொன்மாலை அணியப்பெற்ற யானைகளின் வலிமை பொருந்திய பிடரின்கண் அமர்ந்து அவற்றைச் செலுத்தியபடியுமாக, நின்னை எதிர்த்துப் போரிடு தற்கும் முற்பட்டனர். பொருந்திய நிலத்தின்கண் அமைந்த மாறுபடாத வல்லமையுடையவரான அவர்களின், நினக்கு மாறுபட்டெழுந்த போர் நிலையானது கெடவும், முரசங்களின் ஒலி முழக்கையுடைய பெரும் போரானது அவர்கள ளவில் சிதைந்து போகவுமாக, களத்தின்கண் ஆரவாரவொலி எழும்படியாக, அவர்களின் அரசர்கள் பட்டு வீழுமாறு கொன்று, நீதான் அப் போர்களிலே வெற்றி பெற்றனை! அத்தகைய போராற்றலால் உயர்வடைந்த வல்லாளனே! நீ, நின் படைமறவரைக் காக்கும் சிறந்த முறையினாலேதான் அவர்கள் நினக்குத் தோற்றோராக நினக்கஞ்சி நின்னைவிட்டு அகன்றனர் என்பதாம்.
சொற்பொருளும் விளக்கமும் : ஓடா – போரிற் புறங் கொடுத்து ஓடாத. பூட்கை – மேற்கோள். ஓடாப் பூட்கை தளர்வற்ற மேற்கோளும் ஆம். ஒண் பொறிக் கழல் – ஒள்ளியவான செயல்கள் பொறிக்கப் பெற்ற கழல்; இவ் விரண்டுங் கூறியது, அப் பகைவரும் மறமாண்பிற் சிறந்தவர் என்பதற்காம், ஓடை – நெற்றிப் பட்டம். உரு – அச்சம். எருத்து – பிடர். மாறா மைந்து – மாறுபடாத வலிமை; மாறுபடல் வலிமை குன்றல். மாறுநிலை – மாறுபட்ட பகைமைத் தன்மை. தேய – கெட பகைமைத் தன்மை கெடல், அவர் தோற்று அழிந்ததனால். பெரும்சமம் – பெரும்போர். ஆர்ப்பு – ஆரவாரம்; இது நார்முடிச் சேரலின் களவரவைக் கண்டதும், அவன் படைமறவரின் ஊக்க எழுச்சியாலும், பகைமறவரின் அச்ச எழுச்சியாலும் அவர்களால் எழுப்பப்படுவது. அரைசு – அரசர். புரைசால் – மிகவுயர்வு அமைந்த. மைந்து – வலிமை. மைந்த – வலிமை உடையோனே ஒம்பல் – காத்தல்; படைமறவரைப் பேணிக் காத்தல். பகையரசரின் பண்டைச் சிறப்பும், நாற்படை நலமும் கூறியது, அவை அவரால் நின்னோடு பகைத்தலாலே ஒழிந்தன என்பதற்காம். நினக்கு அஞ்சி ஒடியதனால், அவர்களின் ஓடாப் பூட்கை கெட்டது; ஒண்பொறிக் கழல் சிறப்பிழந்தது. அவற்றால் அவர்கட்கு உண்டாயிருந்த பெருமை நின்னைப் பகைத்தலால் அழிந்தது என்றதுமாம்.
35. மெய்யாடு பறந்தலை!
துறை : வாகைத்துறைப் பாடாண்பாட்டு, வண்ணம் : ஒழுகுவண்ணம் தூக்கு : செந்தூக்கு. பெயர் : மெய்யாடு பறந்தலை. இதனாற் சொல்லியது : சேரலின் வென்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம் : ‘உரைசான்ற நின் வென்றி’ என்று கூறியதனாலே வாகைத்துறைப் பாடாண் பாட்டு ஆயிற்று.
‘தலை துமிந்து எஞ்சிய மெய்யும் எழுந்து ஆடியபடியிருக்கும் கொடுமையுடைய போர்க்களம்’ என விசேடித்துக் கூறிய நயத்தாலே இப்பாட்டிற்கு இது பெயராயிற்று.
“குறையுடல் எழுந்தாடுவது ஒரு பெயர் உடையார் பலர் பட்டமை வழியன்றே: அவ்வாற்றாற் பலர் பட்டமை தோன்றக் கூறிய சிறப்பானே. இதற்கு ‘மெய்யாடு பறந்தலை’ எனப் பெயராயிற்று” எனக் கூறுவர் பழைய உரைகாரர்.)
புரைசால் மைந்தநீ ஓம்பன் மாறே
உரைசான் றனவால் பெருமநின் வென்றி
இருங்களிற் றியானை இலங்குவான் மருப்பொடு
நெடுந்தேர்த் திகிரி தாய வியன்களத்து
அலகுடைச் சேவற் கிளைபுகா வாரத் 5
.
தலைதுமிந்து எஞ்சிய மெய்யாடு பறந்தலை
அந்திமாலை விசும்புகண் டன்ன
செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்துப்
பேஎய் ஆடும் வெல்போர்
வீயா யாணர் நின்வயி னானே! 10
தெளிவுரை : உயர்ச்சி மிக்க வல்லாளனே! நீதான் நின் படை மறவரை முறையாகப் பேணிக் காத்தலினாலே நின் வெற்றியின் பெருமையானது, புகழ்நிறைந்த தன்மை யுடையது ஆகியது. பெரிய களிற்றியானைகளின், விளங்கும் வெண்கொம்புகளோடு, நெடுந்தேர்களின் சக்கரங்களும் பரந்தோடினவாகிய பெரிய போர்க்களத்திலே, தம் பெண் பருந்துகளோடும் கூடியவையாய்ச், சேவல்களின் இனம் புகுந்து, வீழ்ந்து பட்டோரின் உடலங்களை நிறையத் தின்றபடியிருக்கும். அவ் வேளையிலே, தலை வெட்டப்பெற்று எஞ்சியிருந்த ஒர் உடலமானது, போர்க்களத்தின் உட்பகுதியாகிய பக்கத்தே எழுந்து நின்று ஆடத் தொடங்கிற்று. அந்தி மாலைப் பொழுதிலே, செவ்வானத்திற் கண்டாற்போன்று செவ்வொளி கொண்டதான குருதி பரவியிருக்கும் சிவந்த மன்றத்திடத்தே, அவ்வுடலின் ஆட்டத்திற்கேற்பப் பேய்களும் ஆடத்தொடங்கின. இதனால், வெற்றிப் போரால் வந்தடையும் குறையாத புதுவருவாய் எல்லாம் நின்னிடத்தே வந்தடைந்தன. பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும் : புரைமை – உயர்ச்சி. புரைசால் – உயர்ச்சி மிக்க; உயர்ச்சியாவது பகைவரையும் அவர் பணிந்த காலத்து அவர் உயிரைக் காத்து, அவர் தீங்கைப் பொறுத்தல். உரை சான்றன – புகழ் நிறைந்தவாயின; புகழால் சிறப்புற்றன. வென்றி – வெற்றி. வான் மருப்புவெண் மருப்பு: களிறுகள் சினத்தோடு நிலத்தைச்சேரப் பகைவரைக் குத்துதலாலும், தேர்களின் சக்கரங்களாலும் எங்கணும் அவ் வடையாளங்கள் பரந்து கிடந்த பெருங்களம் என்க: இதனாற் போரது கடுமை பெறப்படும். “தலை துமிந்து எஞ்சிய மெய்ஆடு பறந்தலை’ என்பதன் பொருள் முன்னர்க் கூறப்பெற்றது இனித் தம் தலை துணிபட்டவர் போக எஞ்சிய படைமறவர் தம் ஆற்றலழிந்தாராக, அவர் உடலங்கள் மட்டும் தம்மைக் காத்தற்குப் போராடிக் கொண்டிருக்கும் பாழிடம் என்பதும் ஆம். தோல்வியால் நெஞ்சழிந்த அவர், தம் உடலைக் காக்கப் போராடுதல் இழிவாகும்; இஃது அவர்தம் பண்டைச் சிறப்பை யெல்லாம் கெடுக்கும். களத்தின் நடுவிடம் மன்று போலத் திகழ்ந்து நாற்புறத்தாரும் கூடுதற் கிடமாதலின் “மன்று” என்றனர். ‘செஞ்சுடர் கொண்ட குருதி மன்றம்’ என்றது, மாலைக்காலத்தே செஞ்சுடரைத் தானும் கொண்டு விளங்கிய குருதி வெள்ளம் நிரம்பிய மன்றம் என்பதால். அம் மன்றத்துப் பேய் ஆடுதல், நிணமும் குருதியும் நிறையக் கிடைத்து, அற்றை உண்ட களிவெறியால் என்க. பேய்கள் கூத்தாடும் வெற்றிப் போர் இடையறாத, புதுவருவாயை உடையவன் சேரல் என, அவனது போர்மறமாண்பு உரைக்கப்பெற்றது. ‘நின்வயினானே’ என்றது, இவ் வெற்றி நலம் அனைத்தும் சேரலது சொந்த ஆண்மையால் பெற்றதே யன்றிப், பிறர் உதவியாலன்று என்பதற்காம். யாணர் – புதுவருவாய்; அது இங்கே போர் வெற்றியாகிய சிறப்பைக் குறித்தது: ஈடுபடும் பெரும்போர்களுள் எல்லாம் வெற்றியே பெறுதலின், அதன் உறுதிபற்றி, ‘வீயா யாணர் என்றனர்.
36. வாள்மயங்கு கடுந்தார் !
துறை : களவழி. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு பெயர் : வாள்மயங்கு கடுந்தார். இதனாற் சொல்லியது : சேரலின் வென்றிச் சிறப்பு.
[களவழியாவது போர்க்கள நிகழ்ச்சிகளை வியந்து கூறி வாழ்த்துதல். அவ்வாறு இப்பாட்டு அமைந்துள்ளது. ஆதலின் ‘மிகுதி வகையால் தன் போர்க்களச் சிறப்புக் கூறினமையின் துறை களவழி யாயிற்று’ என்பது பழையவுரை.
இருதிறப் படைஞரும் தம்முள்ளே கலந்து போர் செய்யும் போது, இருசாராரின் வாட்களும் தம்முள்ளே, கலந்து, இஃது இச் சாராரது என இனந்தெரிந்து கொள்ளாதபடி மயங்குதல் இயல்பு. அதனை வியந்து, ‘வாள்மயங்கு கடுந்தார்’ என்றமையால் இப் பாட்டிற்கு இதுவே பெயராயிற்று.
வீயா யாணர் நின்வயி னானே
தாவா தாகும் மலிபெறு வயவே
மல்லல் உள்ளமொடு வம்பமர்க் கடந்து
செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று
பனைதடி புலத்தின் கைதடிபு பலவுடன் 5
யானை பட்ட வாண்மயங்கு கடுந்தார்
மாவும் மாக்களும் படுபிணம் உணீஇயர்
பொறித்த போலும் புள்ளி எருத்திற்
புன்புற எருவைப் பெடைபுணர் சேவல்
குடுமி எழாஅலொடு கொண்டுகிழக்கு இழிய 10
நிலமிழி நிவப்பின் நீள்நிரை பலசு மந்து
உருவெழு கூளியர் உண்டுமகிழ்ந் தாடக்
குருதிச் செம்புனல் ஒழுகச்
செருப்பல செய்குவை வாழ்கநின் வளனே!
தெளிவுரை : இடையீடுபடாத போர்வெற்றியாகிய வருவா யினையுடைய நின்னிடத்து, மிகுதி பெற்ற வலிமை என்பதும் என்றும் கெடாதே நிலவும். வளமான நெஞ்சுரத்தோடு பகைவரின் புதிதுபுதிதான போர்முறைகளை எல்லாம் எதிர்த் தழித்து, அவரை வென்று, போரில் மேம்பட்ட வலியினையுடைய நின் மறவரோடும், அப் பகைவரின் நாட்டிற்கே சென்று அவரை அழிப்பவன் நீயாவாய். பனைமரங்கள் வெட்டப் பெற்றுக் கிடக்கும் ஒரு கொல்லைப் புறத்தைப் போலப் பலவான யானைகளின் துதிக்கைகள் வெட்டப் பெற்றுக் கிடக்கின்ற, வாட்கள் ஒன்றோடு ஒன்று கலந்த முன்னணிப் படைப்போரிலேயே, வீரர்களும் குதிரைகளும் யானைகளுமாகிய பட்டு வீழ்ந்த பிணங்களை உண்ணும்பொருட்டாகப், பொறித்து வைத்தாற்போன்ற புள்ளிகளையுடைய கழுத்தினையும், புல்லிய மேற்புறத்தினையுமுடைய கழுகினது பெட்டையோடு சேர்ந்த சேவல்கள், உச்சிக்கொண்டையினையுடைய எழாஅல் என்னும் பறவைகளோடு, வானத்திலிருந்து கீழாக இறங்கி வரும். பாரமிகுதியாலே நிலம் சரிவதற்குக் காரணமான பிணக்குவியல்களின் நெடிய வரிசைகள் பலவற்றைச் சுமந்துகொண்டு, அச்சம் பொருந்திய கூளிப்பேய்கள் அவற்றை உண்டவையாய் மகிழ்ச்சியோடு ஆடும். குருதியாகிய செம்புனல் ஆற்றொழுக்கைப் போலப் பாய்ந்துகொண்டிருக்கும். இத் தன்மைவாய்ந்த கொடும் போர்கள் பலவற்றை நீயும் செய்குவை! இவற்றால் வந்தடையும் நின் வளமை நிலைத்து வாழ்வதாக, பெருமானே!
சொற்பொருளும் விளக்கம் : வீயா யாணர் – கெடாத புதுவருவாய். வயின் – இடம். தாவாது – கெடாது. வயவு – வலிமை. மலிபெறு வயவு – நாளுக்குநாள் மிகுதிபெறுதலைக் கொண்ட வலிமை. மல்லல் – வளம். உள்ளம் – உள்ளத்தின் உரம், மணவூக்கம். வம்பமர் – புதிதான போர்; பழம் பகை வரேயன்றிப் புதியராக வந்து பகைத்தவர் செய்யும் போர்: இவர் வடபுலத்திலிருந்து வந்தாராகலாம். கடந்து – எதிர் நின்று பொருது வெற்றிகொண்டு. முன்பு – வலிமை. தலைச்சென்று – பகைவரது நாட்டெல்லைக்குட் சென்று. தடிதல் – வெட்டல். தடிபு வெட்டப்பட்டு. வாள் மயங்கல் – இருதிற படையினரின் வாட்களும் தம்முட் கலத்தல். கடுந்தார் – கடுமையான தூசிப்படையினர். மாக்கள் – போர் மறவர். படுபிணம் – களத்திலே பட்டு வீழும் பிணம். பிணம் – உயிரற்ற உடல்கள். உணீயர் – உண்ணும் பொருட்டு. எருவை – கழுகு, இதனைத் தலை வெழுத்து உடல் செந்நிறமாயிருக்கும் பருந்தென்பர் (புறம். 64). ‘பொறித்த போலும் வானிற எருத்தின் அணிந்த போலும் அஞ்செவி எருவை’ என்று அக நானூறு கூறும் (அகம். 193). எழாஅல் – இராசாளி’ இது பருந்து வகையுள் ஒன்று. குடுமி – உச்சிக் கொண்டை. நிவப்பு – உயர்ச்சி. நிரை – வரிசை. பிணக் குவியல்களின் பாரத்தால் நிலம் சரிந்தது என்றது, களத்தின் கொடுமையைக் காட்டுதற்கு உரு எழு – அச்சம் எழுதற்கு ஏற்ப உருவம் அமைந்த தன்மை, கூளியர் – குட்டைப் பேய்கள். குருதிச் செம்புனல் – குருதியாகிய செம்புனல். வளன் – வெற்றி, பிற வளங்களும் ஆம்.
‘பருந்தும், எழாலும், பேய்களும் உண்டுகளிக்கப் பெரும் போரிடைப் பலர் பட்டு வீழ்ந்தனர்; அவ்வுடலங்கள் வரிசை வரிசையாகக் குவிந்துகிடக்க நிலமும் சரிந்தது’ என்பது, கொடிய போரினது நிகழ்வைக் காட்டும்.
களிறுகள் பலவற்றின் துதிக்கைகள் துண்டிக்கப்பட்டு வீழ்ந்ததனைப் ‘பனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன் யானைபட்ட’ எனக் கூறும் உவமை நயத்தை அறிந்து இன்புறுக.
37. வலம்படு வென்றி !
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு, பெயர் : வலம்படு வென்றி. இதனாற் சொல்லியது: சேரலாதன் குணங்களைப் புகழ்ந்து அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்தியது.
[பெயர் விளக்கம் : மென்மேலும் பலவான போர்களிலும் வெற்றி அடைவதற்குரிய அடிப்படை வலியாவது, ‘துளங்கு குடி திருத்தல்’ ஆகும். ஆகவே, அதனைச் செய்தலின் மூலம் வலம்படு வென்றியினன் ஆயினான் எனச் சிறப்பித்த நயம்பற்றி, இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.]
வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை!
வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்தப்
பகைவர் ஆரப் பழங்கண் அருளி
நகைவர் ஆர நன்கலம் சிதறி
ஆன்றவிந்து அடங்கிய செயிர்தீர் செம்மால்! 5
வான்தோய் நல்லிசை உலகமொடு உயிர்ப்பத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
மாயிரும் புடையல் மாக்கழல் புனைந்து
மன்னெயில் எறிந்து மறவர்த் தரீஇத்
தொன்னிலைச் சிறப்பின் நின்னிழல் வாழ்நர்க்குக் 10
கோடற வைத்த கோடாக் கொள்கையும்
நன்று பெரிது உடையையால் நீயே
வெந்திறல் வேந்தே! இவ் வுலகத் தோர்க்கே.
தெளிவுரை : பெருமானே! வாய்மையே பேசும்வாயினரான புலவர்கள் நின் புகழைப் போற்றிப் பாடுவர். நின் பகைவர்களுக்கு நிறைந்த துன்பத்தை நீ அளிப்பாய். நின்பால் அன்புடையார்க்கு நல்ல அணிகலன்களைத் தருவாய்! நற்குணங்கள் பலவும் அமையப்பெற்றுச் சான்றோர்க்குப் பணியும் பணிவுடன், ஐம்புல இச்சைகளும் அடங்கிய குற்றம் தீர்ந்த தலைமையாளனே! வானளாவும நற்புகழானது உலகம் உள்ளளவும் கெடாது நிற்குமாறு, வறுமை போன்றவற்றால் தளர்வுற்ற குடிகளைத் திருத்தி முன்போற் செழுமையுறச் செய்தனை. நீதான் மேலும் பல வெற்றிகளைப் பெறுவதற்குக் காரணமான சிறந்த ஒரு வெற்றியினையும் அதன்மூலம் பெற்றாய். கரிய பெரிய பனந் தோட்டு மாலையினையும், சிறந்த கழலினையும் புனைந்து சென்று, பகைவரது நிலைபெற்ற அரணினை அழித்து வென்றாய். அப் பகைவரது வீரர்களைச் சிறைப்பற்றிக் கொணர்ந்தாய். தொன்மையான நிலையைக் கொண்ட சிறப்பினோடு, நின் நிழலிலே வாழ்பவருக்கு ஒப்ப, அவருக்கும் கொடுமை இல்லாதபடி அவரையும் திருத்தி வைத்த மாறுபடாத கொள்கையினையும், மற்றும் நற்பண்புகளையும் நீ மிகப் பெரிதும் உடையை! இவற்றால் வெவ்விய திறனமைந்த வேந்தனே! இவ்வுலகத்தோரின் பொருட்டாக நின் வளனும், நின் வாழ்நாளும் என்றென்றும் நிலைத்து வாழ்வனவாகுக!
சொற்பொருளும் விளக்கமும் : வாழ்க்கை – வாழ்நாள். வாய்மொழி – வாய்மை பிறழாத சொல். ‘வாயர்’ – வாய்மை பேசுவோர்; புலவர்: இவர் பொய்யா நாவினர். பழங்கண் – துன்பம். ஆர – நிரம்பப் பெற. நகைவர் – அன்புடையார்: இவர் பாணரும் கூத்தருமான பரிசிலர். கலம் – அணிகலம். சிதறி – எடுத்து வீசி; இது அவன் அளித்த மிகுதியைப் புலப் படுத்துவது. நல்லிசை – நற்புகழ். ஆன்று – அமைந்து. அலிந்து – பெரியோரைப் பணிந்து. அடங்கல் – புலனடக்கம் கொள்ளல். இதனை, ‘ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் எனவரும் புறப்பாட்டாலும் அறிக (புறம் 191). உலகமோடு உயிர்த்தல் – உலகம் உள்ளளவும் நிலைபெறுதல். துளங்கு குடி – வீழ்ந்த குடி, கெட்டகுடி. திருத்தல் – உயரப் பண்ணல். புடையல் – மாலை; இருபுடையும் தூங்கவமைந்த நெடிய மாலை. மாக்கழல் – சிறந்த வீரக்கழல். ‘மறவர்’ என்றது பகைநாட்டு மறவரை. தரீஇ கைப்பற்றிக் கொணர்ந்து. கோடற வைத்தல் – அறவே கொடுமையில்லாதபடி பேணி வைத்தல். கொள்கை – கோட்பாடு. ‘வெந்திறல்’ வெம்மையான பேராற்றல், பகைவரையழிக்கக் கருதிய போதும்; “சீர்சால் செம்மல்” வேண்டியவர்க்கு அருளும்போதும் எனக் கொள்க நன்று – நற்பண்புகள். உலகத்தோர்க்கு – உலகத்தோர்க்காக; அவர் வாழுமாறு.
38. பரிசிலர் வெறுக்கை !
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : பரிசிலர் வெறுக்கை. இதனாற் சொல்லியது : சேரலின் கொடைப் பெருமிதம்.
[பெயர் விளக்கம் : பரிசில் நாடி வருவாருடைய, சேமித்து வைத்த செல்வத்தைப்போல் விளங்கினான் எனக் குறிப்பார், ‘பரிசிலர் வெறுக்கை’ என்றனர். அவனையே செல்வமாகக் கூறிய நயத்தால் இப் பாட்டிற்கு இது பெயராயிற்று.]
உலகத் தோரே பலர்மன் செல்வர்
எல்லா ருள்ளும்நின் நல்லிசை மிகுமே
வளந்தலை மயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்!
எயில்முகம் சிதையத் தோட்டி ஏவலின் 5
தோட்டி தந்த தொடிமருப் பியானைச்
செவ்வுளைக் கலிமா ஈகை வான்கழல்
செயலமை கண்ணிச் சேரலர் வேந்தே!
பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை!
வாள்துதல் கணவ மள்ளர் ஏறே! 10
மையற விளங்கிய வடுவாழ் மார்பின்
வசையில் செல்வ! வான வரம்ப!
இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம்
தருகென விழையாத் தாவில் நெஞ்சத்துப்
பகுத்தூண் தொகுத்த ஆண்மைப் 15
பிறர்க்கென வாழ்தல் யாகன் மாறே!
தெளிவுரை : பலவகைப்பட்ட வளங்களும் தம்மில் கலந்து விளங்குகின்ற நாட்டை, அவை நாளும் முறையே கிடைக்குமாறு திருத்திச் செம்மை செய்த, களங்காயால் தொடுக்கப்பெற்ற கண்ணியினையும், நாரால் செய்யப் பெற்ற முடியினையுமுடைய சேரமானே! பகையரசருடைய மதில் இடங்கள் சிதைந்து அழியுமாறு, நீதான் நின் யானைப் படைகளைச் செலுத்தும் மறவரை ஏவினை. நின் ஏவலின் படிக்குச் சென்ற அவரும், அவ்வாறே அவற்றை வென்று, அந் நாடுகளின் காவலையும் நினக்குத் தந்தனர். அத்தகைய தொடியணிந்த மருப்பினையுடைய யானைப்படையும், சிவந்த பிடரிமயிரைக் கொண்ட செருக்குடைய குதிரைப்படையும் உடையோனே! பொன்னாற் செய்த உயர்ந்த கழலையும், செயற்பாடமைந்த கண்ணியையும் அணிந்த சேரநாட்டு மறவர்க்கு வேந்தனே! பரிசின் மாக்கள் வாழ்வதற்கு வேண்டும் செல்வமாக விளங்குவோனே! பாணர்கள் பாடிப் போற்றும் நாளோலக்கத்தை உடையவனே! ஒளிபொருந்திய நுதலை உடையாட்குக் கணவனே! போர்வீரர்க்குள் சிங்க வேறு போன்றவனே! குற்றமற விளங்கிய போர்ப்புண்ணின் வடுவானது நிலைத்திருக்கும் மார்பினைக் கொண்டோனே! குற்றமற்ற செல்வத்தை உடையோனே! ‘வானவரம்பன்’ என்னும் பெயரைக் கொண்டோனே! இனியவையான பல பொருள்களைப் பெற்றனமாயின், அவற்றைத் தனித்தனியாக யாமே நுகர்வோம்; எம்பால் அவற்றைத் தருக” என்று தானே கொள்ளுதற்கு விரும்பாத, கெடாத நெஞ்சத்தைக் கொண்டோனே! பிறருக்குப் பகுத்துண்ணும் உணவைத் தொகுத்து. அனைவருக்கும் பகுத்துத் தந்த ஆண்மையாளனே! நீதான் பிறர்க்கெனவே வாழ்கின்றன. ஆதலினாலே, உலகத்தே வாழ்வோருட் செல்வம் உடையோர் பலராயினும், அவர் எல்லாரும் பெற்றுள்ள புகழ்களுள் நின் நல்ல புகழே மேம்பட்டு நிற்கும்; இதனை அறிவாயாக, பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும் : நல்லிசை – நல்ல செயல்களாலே வந்தடையும் புகழ். தலைமயங்கல் – ஒன்று கலத்தல். எயின் முகம் – மதிலிடம். தோட்டி – அங்குசம்: அதைக் கொண்டு களிற்றைச் செலுத்தும் மறவர்க்கு ஆயிற்று. தோட்டி – காவல். தொடி – பூண். . உளே – பிடரி மயிர். கலி – மனச் செருக்கு. வான் கழல் – சிறந்த கழல்; சிறப்பு போர் வெற்றியால் வந்தது. ஈகை – பொன். செயல் – செயற்பாடு. சேரலர் . சேரநாட்டார்: சேர நாட்டு மறவரும் ஆம். வாள் – ஒளி. மள்ளர் – போர் மறவர். மை – குற்றம்; குற்றமாவது புறப்புண்படல். வடு – புண் காய்ந்த தழும்பு. வாழ் மார்பு – நிலைத்திருக்கும் மார்பு, வசை – வசைச் சொல்; குற்றம். ‘வானவரம்பன்’ பெயர். இனியவை – இனியவான பல பொருள்கள். விழைதல் – விரும்பல். தாவு – கெடுதல். பகுத்தூண் தொகுத்தல் – பகுத்துண்ணும் உணவை அரசிறையாகப் பெற்றுத் தொகுத்து, மீண்டும் அவற்றைத் தன் மறவர் முதலியோருக்குப் பகுத்து அளித்தல். பரிசிலர் -புலவரும் பாணரும் கூத்தரும் முதலியவரான கலைஞர்; இவர் தம் தொழிலைக் காட்டிப் பரிசிலாகவே பொருளைப் பெற வருபவர் ஆதலின் ‘பரிசிலர்’ என்றனர். ‘இரவலர்’ என்பார் வேறு.
’களங்காய்க் கண்ணியும் நார்முடியும் பூண்டது’ ஒரு காரியம் பற்றி வஞ்சினம் உரைத்து, அது முடிக்கும்வரை என்க; அதனை முடித்தபின் பனம்பூக் கண்ணியும் பொன் முடியும் புனைந்தனன் இவன். இவனுடைய இச்செயல் நன்னனை வென்றதாகலாம் என்பர். இந் நன்னன் ஆனைமலைப் பகுதியிலிருந்தவன்; சேரலால் அழிக்கப் பெற்றவன் என்பர். ‘பிறர்க்கெனவே நீ வாழ்தியாதலால், எல்லாருள்ளும் நின் நல்லிசை மிகும்’ என்று உவப்புடன் வாழ்த்துகின்றார் புலவர்.
39. ஏவல் வியன்பணை !
துறை: வாகை. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: ஏவல் வியன்பணை. இதனாற் சொல்லியது: சேரலின் கொடையும் வென்றியும் ஆகிய சிறப்புக்கள்.
[பெயர் விளக்கம்: அவன் கொடைக்கு அவன் போரில் பெற்ற வெற்றிகளே அடிப்படையாக அமைதலின் வாகைத்துறை ஆயிற்று. சேரலனன்றியும் அவன் படைமறவரும் கொடையாளர்களாக விளங்கின சிறப்பும் கூறுகின்றனர். ‘எடுத்து எறிந்து இரங்கும்’ என்னும் அடையின் சிறப்பால், இப்பாட்டுக்கு இது பெயராயிற்று.]
பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே
எமக்கிலென் னார்நின் மறங்கூறு குழாத்தர்
துப்புத்துறை போபிய வெப்புடைத் தும்பைக்
கறுத்த நெவ்வர் கடிமுனை அலற
எடுத்தெறிந்து இரங்கும் ஏவல் வியன்பணை 5
உருமென அதிர்பட்டு முழங்கிச் செருமிக்கு
அடங்கார் ஆரரண் வாடச் செல்லும்
காலன் அனைய கடுஞ்சின முன்ப!
வாலிநின், நூலின் இழையா நுண்மயிர் இழைய
பொறித்த போலும் புள்ளி எருத்தின் 10
புன்புறப் புறவின் கணநிரை அலற
அலந்தலை வேலத்து உலவை யஞ்சினைச்
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்
இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்து
அவிரிழை தைஇ மின்னுமிழ்பு இலங்கச் 15
சீர்மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்! நின் போர்நிழல் புகன்றே.
தெளிவுரை: வெப்பையுடைய தும்பைமாலையைச் சூடியவராக, நின்பால் வெகுண்டெழுந்த பகைவர், அச்சம் பொருந்திய போர்முனையிடத்தே கெட்டு அலறியோடும்படியாகக் கடிப்பினை ஓச்சியடித்தலாலே முழங்கும், நின் போர் மறவரை ஏவுகின்ற அகன்ற முரசமானது. இடிக்குரலைப் போல அதிர்ந்து முழங்கப், போர்வெறி மிகுந்து நினக்கு அடங்காராக நின்னை எதிர்த்த பகைவரின், பிறரால் கடத்தற்கரிய அரணிடம் அழியுமாறு அவர்மேற் படைகொண்டு போரிடச் செல்லும். காலனையொத்த, போர்த்தொழில் துறையெல்லாம் முற்றவும் பயின்று தேறிய, கடுஞ்சினமும் வலிமையும் கொண்டோனே!
சிதைந்த உச்சியையுடைய வேலமரத்தின் உலர்ந்த கிளைகளிலே, பொறித்தது போலும் புள்ளிகளைக் கொண்ட கழுத்தையும், புல்லிய முதுகுப்புறத்தையுமுடைய புறாவின் கூட்டங்கள் அஞ்சித் தம் ஒழுங்குகெட்டுச் சிதறிப்போக வெண்மையாக, நூலாலே இழைக்கப்படாத நுண்மையான மயிர் போன்ற இழையையுடைய சிலந்திப் பூச்சிகள் தொடுத்த அசைகின்ற வலையைப்போல விளங்குகின்ற மணிகளை விளிம்பிலே பதித்த, பசும்பொன்னாலாகிய கட்டிடத்தே, ஒளிவிளங்கும் இழைகளிற் கோக்கப்பெற்று, மின்னலைப்போல் ஒளிசெய்தபடி விளங்கச் செய்தமைத்த. சிறப்பு மிகுந்த முத்துவடம் தைக்கப் பெற்ற நார்முடியணிந்த சேரலே!
நின் மறமாண்பே கூறுதலன்றிப் பிறர் மறத்தைக் கூறுதலற்ற நின் படைமறவரும், நின்னுடைய போர்ச்செயலாகிய நிழலையே விரும்பி வாழ்பவர். ஆயினும், நீ பிறர்க்கு உரியவனாக வாழ்கின்றனை யாதலினாலே, அவரும், எமக்கு இல்லையென்று சொல்லாராக ஈவார்கள்!
சொற்பொருளும் விளக்கமும்: எமக்கு இல் என்னார் – எமக்கு இல்லையென்று சொல்லமாட்டார்கள்; வெற்றிப்போர்களின் முடிவிற்பெற்ற பெருவளத்தை உடையவராதலாலும், தம் தலைவனைப் போன்றே தாமும் பிறர்க்கென வாழ்தலை விரும்புபவராதலாலும் அவரும் இரப்பார்க்கு இல்லை என்று கூறமாட்டார் என்று கொள்க. குழாத்தர் – குழுக்குழுவாக விளங்கும் படைமறவர். துப்பு – வலிமை. போகிய – தேர்ந்த. வெப்பு – வெம்மை; என்றது போரின் கடுமையை. தும்பையணிந்து போர்மேற் செல்லல் புகழ் கருதிச் செல்லும் போரிடத்து என்று கொள்க. கறுத்தல் – சினமுறல். தெவ்வர் – பகைவர். கடிமுனை – அச்சந்தரும் போர்முனை. ‘ஏவல் வியன் பணை’ – ஏவலை எடுத்துரைக்கும் பெரும் பணை; ‘பணை’ போர் முரசம். உரும் – இடி. அதிர்பட்டு – அதிர்ந்து. செருமிகல் – போர் விருப்பம் மிகல். முன்பு – வலிமை. காலன் – கூற்றுவன். வாலிதின் – வெண்மையாக. புறவு – புறா. அலந்த தலை – சிதைந்த தலைப்புறம். உலவை – உலர்ந்திருக்கும் நிலை. போர்வை – வலை. புறவின் கணநிரை அலறியதற்குக் காரணம், சிலந்தி வலையைத் தமக்கிட்ட வலையெனக் கருதிய மயக்கத்தால் ஆகலாம். முத்தம் – முத்துக்கள். படலம் – தகடு. தைஇய – சூழவமைத்த. போரை ‘நிழல்’ என்றது, அதுதான் சேரலின் மறவர்க்கு ஆக்கந்தருதலால். சேரல் அணிந்த நார் முடிக்கு இங்கே விளக்கந் தருகின்றனர். ‘சிலம்பி கோலிய என்பது முதல் முத்தந் ‘தைஇய’ என்பது முடிய அம்முடியின் அமைதியைக் கூறுகின்றனர்.
‘கொலைவல் வேட்டுவன் வலை பிரிந்து போகிய. கானப் புறவின் சேவல், வாய்நூற் சிலம்பி அஞ்சினை வெரூஉம்’ என்பது நற்றிணை (189). வெப்புடைத் தும்பை – வெப்புக் குணமுடைய தும்பையும் ஆம். வலையைப் ’போர்வை’ என்றது, அதுதான் மேலே போர்த்தபடி அமைந்திருத்தலால்.
40. நாடு காண் அவிர்சுடர் !
துறை: விறலியாற்றுப் படை. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர்: நாடுகாண் அவிர் சுடர். இதனாற் சொல்லியது: சேரலின் கொடைச் சிறப்பு.
[பெயர் விளக்கம்: விறலியை ஆற்றுப்படுத்துவது போலக் கூறலால் விறலியாற்றுப்படை ஆயிற்று. யானைகள் சினத் தீ எழச் செல்லுங்காலத்தே எழுகின்ற சிவந்த புழுதிப்படல் மானது, நாடனைத்தும் காணக்கூடிய தன்மைத்தாகக் காட்டிற் பற்றிய தீப்படலம் போன்றது என்று கூறினர். இவ்வுவமை நயத்தால் இப்பாட்டிற்கு இது பெயராயிற்று.]
போர்நிழல் புகன்ற சுற்றமொடு ஊர் முகத்து
இறாஅ லியரோ பெரும! நின் தானை
இன்னிசை இமிழ்முரசு இயம்பக் கடிப்பிகூஉப்
புண்தோள் ஆடவர் போர்முகத்து இறுப்பக்
காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல் 5
வந்திறை கொண்டன்று தானை; அந்தில்
களைநர் யாரினிப் பிறரெனப் பேணி
மன்னெயில் மறவர் ஒலியவிந்து அடங்க
ஒன்னார் தேயப் பூமலைந்து உரைஇ
வெண்தோடு நிறைஇய வேந்துடை அருஞ்சமம் 10
கொன்றுபுறம் பெற்று மன்பதை நிரப்பி
வென்றி ஆடிய தொடிதோள் மீகை
எழுமடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்
பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன்
சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த 15
தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்
புன்கால் உன்னம் சாயத் தெண்கண்
வறிதுகூட்டு அரியல் இரவலர்த் தடுப்பத்
தான்நா உண்ட நனைநறவு மகிழ்ந்து
நீர்இமிழ் சிலம்பின் நேரி யோனே! 20
செல்லா யோதில் சில்வளை விறலி
மலர்ந்த வேங்கையின் வயங்கிழை அணிந்து
மெல்லியல் மகளிர் எழில்நலம் சிறப்பப்
பாணர் பைம்பூ மலைய இளையர்
இன்களி வழாஅ மென்சொல் அமர்ந்து 25
நெஞ்சுமலி உவகையர் வியன்களம் வாழ்த்தத்
தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று
பாகர் ஏவலின் ஒண்பொறி பிசிரக்
காடுதலைக் கொண்ட நாடுகாண் அவிர்சுடர்
அழல்விடுபு மரீ இய மைந்தின் 30
தொழில்புகல் யானை நல்குவன் பலவே.
தெளிவுரை: பெருமானே! இனிதாக இசை இமிழ்தலையுடைய போர்முரசங்கள் முழக்கமிட, அவற்றைக் குறுந்தடியாலே ஓச்சி அடித்துக்கொண்டு, தோளில் புண்பட்டோரான முரசுமுழக்கும் தொழிலோர்கள், போர்க்களத்தின் முன்னணியிலே நிற்க, நின் தூசிப்படையானது காய்த்த கரந்தையும் மாக்கொடியும் படர்ந்த விளைவயலிடத்தே வந்து தங்கிற்று. ஆதலானே, நின்னுடைய தானை மறவர்கள், போரிடத்தே உண்டாகும் ஆக்கத்தை விரும்பியவராக விளங்கும் சுற்றத்தாருடனே சேர்ந்து, போர் நிகழ்த்தற்குரிய பகைவர்களின் ஊர்முனையிடத்தே சென்று, தங்காது ஒழிவாராக. இனி, எமக்கு அரணாக நின்று எம்மைக் காப்பாற்றுவார் பிறர் யாருமிலர் என்றெண்ணித் தம் உயிரைப் பேணிக் கொள்ளலை விரும்பியவராக, வெளிப்புறத்துப் பகைமறவர் எல்லாரும் தம்காவலைவிட்டு நீக்கினர். மறமாண்புடையோரால் காக்கப் பெறும் நிலைபெற்ற பகைவரது மதிலிடங்களும் போராரவார மில்லாது ஒலியவிந்து அடங்கிக் கிடக்கின்றது.
போருக்குரிய தும்பைப் பூவைக் சூடியவராகச் சென்று, வெள்ளிய பனந்தோட்டால் நிரல்படத் தொடுத்த மாலை யணிந்தவராகச் சேரவரசுக்குத் தாமே உரியவரெனக் கூறியவராக எதிர்த்த வேந்தருடைய, பிறரால் எளிதாக வெல்லுதற்கரிய போரைக் கொன்று, அவரைப் புறமிட்டு ஓடச் செய்து, அவராற் போக்கப் பெற்ற சேரநாட்டுக் காவன் மக்களை மீளவும் அப்பகுதிகளிலே குடிபுகச் செய்து நிரப்பி வெற்றிக் குரவையாடிய, தொடிவிளங்கும் தோள்களையும், மேம்பட்ட கையினையும் உடையோனே! பகையரசர் எழுவரது முடிப்பொன்னாற் செய்த வெற்றிப் பதக்கமணிந்த, வீரத்திருமகள் விரும்பித் தங்கியிருக்கும் மார்பினையும், பொன்னாற் செய்த அழகிய தலைக்கண்ணியையும் உடையோனே! பொன்னாலாகிய தேரினையுடையவனாகிய நன்னன் என்பானின், ஒளிசுடரும் பூக்களையுடைய வாகையென்னும் காவன்மரத்தை அடியோடு வெட்டியவனே! முன்னணிப் படையினர் மிகுதியாகவுடைய வலிமைமிகுந்த நார்முடிச் சேரலே!
தெளிந்த கள்ளிலே களிப்பானது மிகுதியாகாதவாறு அதற்கேற்ற பொருள்களைக் கூட்டிய ‘அரியல்’ என்னும் கள்ளானது, தன்னையுண்டு மகிழும் இரவலர்களை வேற்றிடம் நோக்கிச் செல்லவிடாதே தடுத்து நிறுத்தும். அவரோடிருந்து தான் தனக்கெனக் கொணர்ந்த பூவரும்புகளாலே சமைக்கப்பெற்ற நறவினையுண்டு களிப்புற்றவனாக விளங்கும், பகைவர் நிமித்தம் காணும்வழி புல்லிய காலையுடைய உன்னமரமானது அவர் தோற்பது உறுதியென்பது போலச் சாய்ந்தே காட்ட, அருவிநீர் வீழ்தலாலே ஒலியுடைத்தா யிருக்கின்ற மலையாகிய நேரிமலைக்கு உரியோன் அவன்.
சிலவாகிய வளைகளை அணிந்துள்ள விறலியே! மலர்ந்த வேங்கையைப்போல விளங்கும் மென்மையான இயல்பினை யுடைய ஏனைய விறலியர் விளங்குகின்ற இழைகளை அணிந்தவராகத் தம் அழகுநலமாகச் சிறப்பெய்த, பாணர்கள் பசும்பொன் பூமாலையைச் சூட, ஏவலிளையர் இனிய களிப்பாற் குறையாத மென்சொற்களை விரும்பிச் சொல்லி, நெஞ்சு நிறைந்த உவகையினை உடையவராகப் பெரிய போர்க்களத்தின் சிறப்பை வாழ்த்துவர். பாகர் தோட்டியாற் குறிப்பிடுகின்ற குறிப்புக்கட்குத் தவறாமல், தொடியாகிய பூண்செறித்த படியே நின்று, தம்மால் எழுப்பப்படும் ஒள்ளிய புழுதித் துகள்கள் தீப்பொறிகளைப் போல நாற்புறமும் சிதறக், காட்டிடத்தே எழுந்த நாடனைத்தும் காணுமாறு விளங்கும் காட்டுத் தீயைப்போலும் கொடியதான சினத்தீயைக் கைவிட்டு, அப்பாகரது ஏவலைப் பொருந்தியமைந்த வலிமையினையும், போர்த் தொழிலை விரும்பும் இயல்பினையுமுடைய யானைகள் பலவற்றை அவன் நல்குவான். அவனிடத்தேயே செல்வாயாக! சொற்பொருளும் விளக்கமும்: ‘போர் முரசம் இன்னிசை இமிழ்தல் ஆவது, போர் விருப்புடையவரான மறவர்க்கு அது இனிதான இசையாகி விளங்குதலால். கடிப்பு – குறுந்தடி; குணில். இகூஉ – புடைத்துக் கொண்டு. புண்தோள் ஆடவர் – முரசைச் சுமந்து சுமந்து தோளிற் புண்பட்ட முரசு முழக்கும் தொழிலோர். போர்முகத்து – போரின் முன்னணிப்புறத்து. இறுப்ப – நிற்க. கரந்தை – கரந்தைச் செடி. மாக்கொடி – கரிய கொடி. விளைவயல் – நெல் விளையும் வயல். இறை கொள்ளல் – தங்கல். களைநர் – துன்பங் களைவோர். பிறர் – தம் மன்னரல்லாத பிறர்; தம் மன்னராற் காக்கவியலாது என்று முடிவு செய்ததனால், ‘களைநர் பிறர் யார்?’ என்று கருதலாயினர். பேணி – தம் உயிரைப் பேணியவராக. ஒன்னார் – பகைவர். ஒலி அவிந்து அடங்க – ஒலியவிந்து ஒடுங்கிக் கிடக்க; இஃது அவரும் அஞ்சியவராகத் தளர்ந்தமை கூறியதாம். எயிற் புறத்துப் போர், அதற்குரிய பகைவர் அஞ்சியகலுதலால் நிகழாதேயே சேரலுக்கு வெற்றியாக முடிந்தது என்பதாம்.
பூ – தும்பைப்பூ. மலைந்து – சூடி. உரைஇ – வஞ்சினங் கூறி. தோடு – பனந்தோடு. நிரைஇய – வரிசையாக வைத்துக் கட்டிய. அருஞ்சமம் – வெல்லுதற்கரிய போர். கொன்று – அழித்து. போர் கொல்லல் – போரிடற்கு வந்த படைமறவரை அழித்தல்; போரூக்கத்தைக் கெடுத்தலும் ஆம். புறம் பெறல் – பகைவர் புறமிட்டு ஓடுதலை மேற்கொள்ளுமாறு போரிடல். மன்பதை – மறவர் கூட்டம்; இவர் சேரநாட்டுக் காவன்மறவர்; பகைவரால் அவ்விடத்தை விட்டு ஓட்டப் பெற்றவர். வென்றியாடல் – வெற்றிகொண்டு, அக்களிப்பாலே தோளோச்சி யாடல். திரு – வெற்றித் திருமகள். பொலந்தேர் – அழகிய தேர். கடிவாகை – காவல்மரமான வாகை. முதல் – அடிமரம். தார் – தூசிப்படை.
உன்னம் – உன்னமரம். சாய – சாய்ந்துகாட்ட. வறிது – சிறிது. அரியல் – அரித்துக் கூட்டிய; தெண்கள் – தெளிவாகிய கள். நீர் – அருவிநீர். சிலம்பு – மலை. நேரியோன் – நேரிமலைக்கு உரியவன். ‘வயங்கிழையணிந்து, மலர்ந்த வேங்கையின் எழில் நலஞ் சிறப்ப’ என்று கொள்ளுதலும் பொருந்தும். களி – களிப்பு. வியன் களம் – பரந்த போர்க்களம். தொழில் – போர்த்தொழில். புகல் – விரும்பும் விருப்பம். சினங்கொண்ட யானைகள் காலாற் கிளைத்துச் சிதறலால் எழுந்த புழுதிப் படலமானது. காட்டுத் தீயை நாடனைத்தும் காணுமாறுபோல, நாடனைத்தும் காணக்கூடிய தன்மைத் தாயிருந்தது என்பதாம். இச்சிறந்த உவமையால் இப்பாட்டு நாடு காண் அவிர் சுடர் எனப் பெற்றது.
இப்பாட்டின் 17ஆவது அடியில் ‘உன்னம் சாய’ என்று வருவதனை ‘உன்னநிலை’ என்னும் துறைக்கு உரியதாகவும் கொள்வார்கள். ‘உன்ன நிலை’ என்பது போரிலே வெற்றி பெறுவோமா என்று படை மறவர்கள் நிமித்தம் பார்த்தல் ஆகும். இது வேந்தன் ஏவலாற் செய்வதன்று.
‘எம் வேந்தனுக்கு நீ வெற்றி கொடுப்பாயாக; கொடுத்தால் யாம் நினக்கு இன்னது செய்வோம்’ என்று வேண்டிக்கொண்டு பணிதலும் இதில் ஒரு வகையாகும். வேந்தன் வெற்றி பெற்றதும், மறவர் தாம் சொன்னவாறே வந்து பலிக்காணிக்கையைச் செலுத்திப் பலிக்கடன் கழிப்பார்கள்.
‘எம் வேந்தனுக்கு ஆக்கம் உண்டாயின் அக்கோடு பொதுளுக; பகைவனுக்கு ஆக்கம் உண்டெனின் அக் கோடு படுவதாக’ என்று சூளுரைத்து நிமித்தம் காண்பர் சிலர். கோடு பொதுளின் உற்சாகமாகப் போருக்குச் செல்வார்கள்.
கோடு பட்டுப் போமாயின் மனத்தே ஊக்கம் இழந்தவராய்ப் போர்முகம் சென்று, வீரப் போரியற்றி வீழ்ந்து படுவர்.
இப்படி நிமித்தம் காணலும் வேண்டலுமாகிய மரபினுக்கு, ‘உன்னநிலை’ என்று இலக்கணம் வகுத்திருக் கிறார்கள்.
தொல்காப்பியப் புறத்திணை இயலும். புறப்பொருள் வெண்பாமாலையும் இதன் தகைமையை விளக்கி உரைக்கின்றன.
போர் மறவர்கள் களம்புகுமுன் இவ்வாறு தெய்வ நம்பிக்கையுடன் நிமித்தம் காணும் மரபு, பண்டைத் தமிழர் மேற்கொண்டிருந்த மரபே ஆகும்.
இந்நன்னனோடு இவன் செய்து முடித்த போர் வெற்றியையே இதன் பதிகமும் எடுத்துக் கூறுகின்றது.
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக்
கரணம் அமைந்த காசறு செய்யுட்
பரணர் பாடியது
ஐந்தாம் பத்து
பதிகம்
வடவர் உட்கும் வாள்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
கானவில் கானம் கணையின் போகி 5
ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை
இன்பல் அருவிக் கங்கை மண்ணி
இனந்தெரி பல்லான் கன்றொடு கொண்டு
மாறா வல்வில் இடும்பில் புறத்திறுத்து
உறுபுலி யன்ன வயவர் வீழச் 10
சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து
பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி
வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர் 15
பல்லிருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி வெந்திறல்
ஆராச் செருவின் சோழர்குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்து இறுத்து
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்துக் 20
கெடலருந் தானையொடு
கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக்
கரணம் அமைந்த காசறு செய்யுள்
பரணர் பாடினார் பத்துப் பாட்டு.
செங்குட்டுவன் அரசு வீற்றிருந்த காலம் : ஐம்பத்தைந்து ஆண்டுகள். பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு. வாரியையும் செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலையும். பாட்டின் பெயர்கள்: சுடர்வீ வேங்கை, தசும்பு துளங்கு இருக்கை, ஏற ஏணி, நோய்தபு நோன் தொடை, ஊன் துவை அடிசில், கரைவாய்ப் பருதி, நன்னுதல் விறலியர், பேரெழில் வாழ்க்கை, செங்கை மறவர், வெருவரு புனற்றார் என்பன.
தெளிவுரை: வடபுலவரசரும் அச்சமுற விளங்கிய வானளாவிய வெற்றிக்கொடியினைக் கொண்டவன், குடநாட்டாரின் கோமானாக விளங்கியவன், சேரமான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவனுக்குச் சோழன் மணக்கிள்ளி பெற்றெடுத்த மகள் ஈன்ற மகன் செங்குட்டுவன் ஆவான். இவன் கடவுள் தன்மைபெற்ற பத்தினித் தெய்வத்திற்குச் சிலையெடுப்பதற்குரிய கல்லினைக் கொள்ள விரும்பியவனாகக், கானலைக் கொண்டிருந்த காட்டுவழியே கணையைப்போல விரைந்து சென்றான். ஆரியரின் தலைவனைப் போரிலே வீழ்த்தினான். பெரும்புகழுடைய இனிய பல அருவிகளைக்கொண்ட கங்கையின் தலைப்பகுதிக்குச் சென்றான். நல்லினத்தைச் சார்ந்தவை எனத் தெரிந்த பல ஆனினங்களை அவற்றின் கன்றுகளோடும் கைப்பற்றிக் கொண்டான். தம் இலக்கு மாறாது அம்புகளைச் செலுத்தி வெல்லுகின்ற வலிமையான வில்லாளர்களுடனே இடும்பாவனத்தின் ஒரு புறத்தே பாசறையிட்டுத் தங்கினான். வலிய புலிபோன்ற வல்லமையாளர்கள் இறந்தொழியுமாறு, சிறிய பூங்கொத்துக்களைக் கொண்ட நெய்தல் பூக்களையுடைய வியலூரை அழித்தான். பின்னர்க் கரையின் எதிர்ப்புறத்தை அடைந்து அங்கிருந்த கொடுகூரையும் அழித்து வென்றான். ‘பழையன்’ என்பவன் காத்துவந்த, கருங்கிளைகளைக் கொண்ட வேம்பினது முழவுபோன்ற அடிமரத்தை வெட்டி அவனையும் வென்றான். தூய மங்கலவணிகளை அதனாலே இழந்துபோனவரான பல பெண்டிரின் நறுமணங் கொண்ட பலவாகிய கரிய கூந்தலைக் களைந்து, அவற்றால் திரிக்கப்பெற்ற கயிற்றினாலே யானைகளை வண்டியிற் பூட்டி, அக் காவல்மரத்தைத் தன் கோநகர்க்கு எடுத்துச் சென்றான். வெம்மையான வலிமையினையும், இடையறாது செய்யும் போரினையும் கொண்டவரான சோழர் குடியினரின் அரசுரிமைக்கு உரியவர்களான ஒன்பதின்மரும் ஒருங்கே பட்டு வீழுமாறு, அவர்களை நேரிவாயில் என்னுமிடத்து நிகழ்ந்த போரிலே வென்று, நேரிவாயில் என்னுமிடத்தே தங்கினான். அச்சோழர் குடியினரோடு நிலையான நாள்தோறும் செய்யும் போரினைத் தொடர்ந்து செய்து, அவர்கள் தலைவனையும் கொன்றான். இப்போர்களினாலும் கெடுதல் இல்லாதே விளங்கிய அரிய படைப்பெருக்கத்தோடும், கடலும் பின்னிடுமாறு சென்று, அவ்விடத்துப் பகைவரையும் தோற்றோடச் செய்தான். அச்சிறப்புடைய செங்குட்டுவனைக் கரணம் அமைந்த காசறு செய்யுட்களைச் செய்வோரான பரணர் பத்துப் பாட்டுகளாற் பாடினார்.
சொற்பொருளும் விளக்கமும்: வான்தோய் வெல்கொடி மிகவுயர்ந்த வெல்லுங் கொடியையுடைய; வான்றோய்: இலக்கணை வழக்கு. ’கடவுள் பத்தினி’ என்றது கண்ணகியை. கணையின் போகி – அம்பைப் போல விரைந்து சென்று. ‘ஆரிய அண்ணல்’ – என்றது ஆரிய மன்னருள் தலைவனாக நின்று போரிட்டவனை. ‘மண்ணி’ என்றது, கொண்ட கல்லை நீர்ப்படை செய்து என்றதும் ஆம். வல்வில் – வலிய விற்றொழில்; இது பல இலக்குகளை ஊடுருவிச் செல்லுமாறு கணையைப் போக்கும் திறன். உறுபுலி – வலிமிக்க புலி. வயவர் – வீரர். வியலூர் – இது நன்னன் வேண்மானுக்கு உரியது. ‘நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான், வயலை வேலி வியலூர்’ என்று, இதனை (அகம் 67) மாமூலனார் உரைப்பர். ‘கொடுகூர்’ வியலூர்க்கு மறுகரையிலிருந்தவூர்: இவையிரண்டும் ஆற்றங்கரையூர்கள். ‘பழையன்’ ஒரு குறு நில மன்னன்: பாண்டிய நாட்டு மோகூர்க்குத் தலைவனாக விளங்கியவன். இவனுக்குரிய காவன் மரம் வேம்பு. முரற்சி – திரித்த கயிறு. பெண்டிர், கணவரை யிழந்தபின் வாலிழை கழிப்பர் என்றனர் (15). இதனை, ’மெல்லியன் மகளிரும் இழை கழித்தனரே’ எனவரும் புறப்பாட்டடியும் விளக்கும். ‘வாலிழை’ முத்தாரம் என்றும் உரைப்பர்; மங்கல அணியாதலே பொருத்தம். முழாரை – முழவைப் போன்ற பருத்த அடிமரத்தையுடைய. ‘குஞ்சரவொழுகை பூட்டி’ என்றது, பழையனின் களிறுகளை, வண்டிகளை இழுக்கும் எருமைக் கடாக்களைப் போலப் பூட்டி என்பதாம். ஆராச்செரு – செய்து செய்து அமையாத செரு. சோழர் குடிக்குரியோரை இவன் வென்றதனை, ‘சூடா வாகைப் பறந் தலை யாடுபெற ஒன்பது குடையும் நண்பகல் ஒழித்த பீடில் மன்னர்’ எனப் பரணர் அகநானூற்றுள்ளும் குறிப்பிடுவர். ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரிவாயில் நிலைச் செரு வென்று, நெடுந்தேர்த் தானையோடு இடும்பிற் புறத்திறுத் துக், கொடும்போர் கடந்து’ என இதனைச் சிலப்பதிகாரம் குறிக்கும். நேரிவாயில் உறையூர்க்குத் தெற்கிலிருந்த ஒரூர் என்பர் சிலப்பதிகார அரும்பத உரைகாரர். நிலைச்செரு என்பது நாடோறும் தொடர்ந்து செய்யும் போர்.
41. சுடர்வீ வேங்கை !
துறை: காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: சுடர்வீ வேங்கை. இதனாற் சொல்லியது: செங்குட்டுவனின் போர்முறச் சிறப்பு.
[பெயர் விளக்கம்: ‘வயக்களிறு வரை சேர்பு எழுந்த’ என்னும் அடையின் சிறப்பாலே, ’சுடர்வீ வேங்கை’ என்பது இப்பாட்டின் பெயராயிற்று. சுடர்வீ வேங்கையைப் புலி யெனவே மயங்கி அதனை அழித்தற்பொருட்டாகச் சினந்து வந்தது வயக்களிறு என்று கொள்க. பகைபோலும் தோற்றத்தைக் கண்டே சினஞ்செருக்கி அதனை அழித்த வயக்களிறு ஆதலின், பகைச் செருவில் எதிர்ப்படும் பகைவரையும் தவறாதே அழித்து வெற்றி கொள்ளும் என்பதாம்.
இதன்கண் கூறப்பெற்றது : செங்குட்டுவனின் வென்றிச் சிறப்பு, ‘நின் கடலுழந்த தாள் தாவல் உய்யுமோ?’ என்று கூறியதனாலே காட்சி வாழ்த்து எனப்பெற்றது.]
புணர்புரி நரம்பின் தீந்தொடை பழுனிய
வணரமை நல்யாழ் இளையர் பொறுப்பப்
பண்ணமை முழவும் பதலையும் பிறவும்
கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக்
காவில் தகைத்த துறைகூடு கலப்பையர் 5
கைவல் இளையர் கடவுள் பழிச்ச
மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு
வரைசேர்பு எழுந்த சுடர்வீ வேங்கைப்
பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்
மாயிருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச் 10
சேஎ ருற்ற செல்படை மறவர்
தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு
வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்
மழைபெயல் மாறிய கழைதிரங்கு அத்தம்
ஒன்றிரண்டு அலபல கழிந்து திண்தேர் 15
வசையில் நெடுந்தகை! காண்குவந் திசினே
தாவ லுய்யுமோ மற்றே தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முரசுடைப் பெருஞ்சமத்து அரசுபடக் கடந்து
வெவ்வர் ஒச்சம் பெருகத் தெவ்வர் 20
மிளகெறி உலக்கையின் இருந்தலை இடித்து
வைகார்ப் பெழுந்த மைபடு பரப்பின்
கடும்பரிப் புரவி ஊர்ந்தநின்
படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே!
தெளிவுரை: இசை புணர்தற்குரிய முறுக்கமைந்த நரம்பினைக் கொண்ட, இன்னிசையைச் செய்யும் நல்ல யாழ்களை ஏவலிளையர் சுமந்தபடியிருந்தனர். பண்ணுதலமைந்த முழாவும். ஒருகண் மாக்கிணையும், பிறவான இசைக்கருவிகளும், மூங்கிற்கணுவை இடையிட்டறுத்துச் செய்த பெருவங்கியம் என்னும் கருவியோடு ஒருங்கே சேர்த்துக் காவடித்தண்டின் ஒருபக்கத்தே கட்டினர். காவடித்தண்டின் மறுபக்கத்தே ஆடற்றுறைக்கு வேண்டிய கருவிகள் எல்லாம் கூடின மூட்டையைக் கட்டிச் சுமந்தனர். இவ்வாறாக வரும் இசைத்துறை வல்ல இளைஞர்கள் தாம் செல்லும் வழியில் தமக்கேதும் தீங்கு நேராமற் படிக்குக் கடவுளையும் வேண்டிப் பரவினர்.
வலிமிகுந்த களிறானது பக்கமலையைச் சார்ந்தபடி வளர்ந்ததும், ஒளிசுடரிடும் பூக்களை உடையதுமான வேங்கை மரத்தை, மறம் பொருந்திய புலியின் குழுமிய மயிர்த் தோற்றமென நினைத்தது. அதனாற் சினங்கொண்டதாகிப் பூக்களையுடைய அவ்வேங்கையின் பொலிவுடைய பெரிய கிளையை வளைத்துப் பிளந்து ஒடித்துத் தன் பெரிய கருந்தலையிலேயும் அழகுறச் சூடிக்கொண்டது. அணிகளாகச் சேர்தலையுற்ற பகைவர்மேற் செல்லுதலை இயல்பாக உடையவரான படைமறவரோடு போரை ஏற்றுக்கொண்டு ஆர வாரித்தாற்போலச், சுரபுன்னைகள் நிறைந்த பெரிய காட்டகம் எல்லாம் எதிரொலிக்குமாறு, அக்களிறு பிளிறலையும் செய்தது.
தாம் சொல்லிய வஞ்சினம் சிறிதும் தப்பாதவாறு, அதனைச் செய்துமுடித்த சிறப்பினை உடையவரான, ஒரே பேச்சாகவே எதனையும் பேசும் இயல்பினரான நின் மறவர்கள், போர்முரசம் முழங்குதலையுடைய பெரிதான போர்க்களத்திடத்தே, எதிர்த்துநின்ற பகையரசர் பட்டழியுமாறு அவரை வெற்றிகொள்வர். வெம்மையினது மிகுதியானது பெருகுமாறு அப்பகையரசரின் பெருந்தலைகளை, உலக்கையால் மிளகை இடிப்பதுபோல இடித்துச் சிதைப்பார்கள். அதனாலே இடையறாத ஆரவாரவொலி எழுகின்ற கருநிறங் கொண்ட கடற்பரப்பைப்போல, எடுத்தெறியும் குறுந்தடியாலே முழக்கப்படுகின்ற அகன்ற கண்ணையுடைய முரசமானது, வெற்றியாலுண்டான புகழொலியோடும் கூடியதாக ஒருங்கே முழக்கத்தைப் பொருந்த, அக்களத்திடமெல்லாம் விளங்கும். ஒலிக்கின்ற அலைகளையுடைய குளிர்ச்சி வாய்ந்த கடலானது காற்றால் மோதுண்டு, ஒலித்தலையுடைய சிறுசிறு பிசிர்களாகச் சென்று உடையுமாறுபோல, வெள்ளிய தலையாட்டமணிந்த, விரையச் செல்லுங் குதிரையை ஊர்ந்து சென்று போருட்டற்றிப் பகைப்படையைச் சிதறடித்து நின் தாள்கள் வருந்துதலினின்றும் உய்யுமோ? அதனைச் சொல்வாயாக, பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும்: புணர்புரி நரம்பு – இசை புணர்தற்குரிய முறுக்குடைய நரம்பு. தீந்தொடை – இனிதாகத் தொடுக்கும் இசை; இதனைச் செவ்வழிப்பாலை என்பர். வணர் – வளைவு: இது கோட்டின் வளைவு: ‘வணர் கோட்டுச் சீறியாள், (புறம்.15) பண் – பண்ணுதல். கண்ணறுத் தியற்றிய தூம்பு – பெருவங்கியம். கலப்பை – கலங்கள் பெய்த பை. துறை – ஆடற்றுறை; இசைத்துறையும் ஆம். கடவுளைப் பழிச்ச – கடவுளைப் பராவிப் பாட; இங்குக் கடவுள் என்றது காடுறை கடவுளை. இது வழியிடை ஏதம் உறாமற்படிக்குக் காத்தலை வேண்டியாம். வயம் – வலிமை. வரை – பக்கமலை. வீ – பூ. சுடர்வீ – நெருப்புச் சுடர் போலத் தோன்றும் பூ. குழுஉக்குரல் – குழுமிய மயிர்க்கற்றை. பூவுடை – பூக்களையுடைய மிலைச்சல் – அணிந்து கொள்ளல். சேருற்ற – திரண்ட. செல் – பகைமேற் செல்லும். தண்டு – ஓர் படைக் சுருவி; படையணியும் ஆம். வலம் – வெற்றி. வழை – கரபுன்னை. அமல் – செறிந்துள்ள சிலம்பல் – எதிரொலி செய்தல்.
பூத்த வேங்கை பகையாதபோதும், வேங்கையென்னும் தோற்றம் பற்றி அதனைச் சிதைத்த களிற்றின் பகை முடிக்கும் வன்மைபோலத் தன்னைப் பகைத்தாரையும் தான் சிறிது ஐயுற்ற காலத்து முற்ற அழிப்பவன் செங்குட்டுவன் என்க.
அத்தன்மையான, மழை பெயலற்றதனாலே தம் தன்மை கெட்டுப்போன மூங்கில்கள், பசையற்று வளர்ந்துபோய்க் கிடக்கும் காட்டு வழிகள். அவற்றுள் ஒன்றோடு இரண்டோ அன்று; பலவற்றையும் கடந்து, திண்ணிய தேர்களையுடைய குற்றமற்ற நெடுந்தகையாகிய நின்னைக் காணற்பொருட்டாக, யானும் என் சுற்றத்தாருடன் வந்தேன்.
கழை திரங்கல் – மூங்கில்கள் பசையற்று வாடிப்போதல். அத்தம் – காட்டுவழி. வசை – குற்றம்; பழிச்சொல். தாவல் – வருந்துதல் தாவாது – தப்பாதபடி. வஞ்சினம் – நெடு மொழி: ‘இன்னது செய்யேனாயின் இன்ன குற்றமுடையவனாகுவேன்’ என்பதுபோலக் கூறுதல். ஒன்று மொழிதல் – சொல்லுதலைச் செய்யும்படி மட்டுமே சொல்லுதல். அரசுபட – அரசர்கள் பட்டுவீழ. வெவ்வர் – வெம்மையாளர். ஓச்சம் . ஆக்கம். தெவ்வர் – பகைவர். வைகார்ப்பு – ஒருகாலும் இடையுறாதே தங்கின ஆர்ப்பொலி. காலுளை – காற்றாலே வளை தலையுடைய வலம்படுகீர்த்தி – வெற்றியாலுண்டான புகழொலி. கடும்பரிப் புரவி – விரையச் செல்லலையுடைய குதிரை.
‘மறப்புலி குழுஉக் குரல் செத்து’ (7) என்பதற்கு மறத்தையுடைய புலிக்கூட்டத்தினது குரலாகக் கருதி எனவும் உரைக்கலாம். அப்போது, பாணர் கடவுளைப் பாடவும், அக்குரலைக் கேட்டுப் புலிக்குரலெனச் சினந்து வந்த களிறு, பூத்த வேங்கையின் கிளையை முறித்துத் தன் தலையிற் சூடியபடி, சுரபுன்னை செறிந்த காட்டிடத்தே பிளிறலைச் செய்திருக்கும் காட்டுவழிகள் என்க. வேங்கைமரத்தின் கிளையை ஏந்திய களிற்றுக்குத் தண்டுடை வலத்தரை உவமை கூறினார். ஒன்று மொழி மறவர் – தம் தலைவர் கூறியவாறே தாமும் கூறும் மறவர் என்பர். ‘கடும்பரிப் புரவி’ என்றதனை ‘விரையச் செல்லும் பரியாகிய புரவி’ என்று கொண்டு, ‘‘பரி’ ஒடம் எனவும் பொருளுரைக்கலாம்; இது அவன் கடலிடைப் பகைவரை வென்ற்தனைக் குறிப்பதுமாகும். தாள். பாதங்கள்; முயற்சியும் ஆம்.
42. தசும்பு துளங்கு இருக்கை !
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு செந்தூக்கு. பெயர்; தசும்பு துளங்கு இருக்கை. இதனாற் சொல்லியது; செங்குட்டுவளின் கொடையும் வென்றியும் ஆகிய சிறப்புக்கள்.
[பெயர் விளக்கம் : வெற்றிவிழாவின் மகிழ்வினைக் குட்டுவனும் அவன் மறவருமாகக் கொண்டாடுகின்றனர். அது காலைக் கள்ளின் வெறியாலே அவர்கள் கூத்தாட, அவர் கைகளில் இருந்த குடங்களிலுள்ள கள்ளும் கூத்தாடிற்று. அத்தகைய இருக்கை என்ற நயத்தால் இப்பாட்டுக்கு இது பெயராயிற்று.]
இரும்பனம் புடையல் ஈகை வான்கழல்
மீன்தேர் கொட்பின் பனிக்களம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது 5
தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும! நன்னுதல் கணவ!
அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ!
மைந்துடை நல்லமர்க் கடந்து வலந்தரீஇ
இஞ்சிவீ விராய பைங்தார் பூட்டிச் 10
சாந்துபுறத்து எறிந்த தசும்புதுளங் கிருக்கைத்
தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்து
கோடியர் பெருங்கிளை வாழ ஆடியல்
உளையவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின் 15
மன்பதை மருள அரசுபடக் கடந்து
முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர்
ஒளிறுகிலை உயர்மருப்பு ஏந்திய களிறுர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்தநின்
தேரொடு சுற்றம் உலகுடன் மூய 20
மாயிருந் தெண்கடல் மலிதிரைப் பெளவத்து
வெண்தலைக் குரூஉப்பிசிர் உடையத்
தண்பல வரூஉம் புணரியிற் பலவே.
தெளிவுரை : கரிய பனந்தோட்டாலாகிய மாலையையும்: பொன்னாற் செய்த பெரிய வீரக்கழலையும்; மீனைப்பிடிக்கின்ற சூழ்ச்சியோடு சிறற்பறவையானது குளிர்ந்த களத்து நீருட் பாய்ந்து மூழ்கி மேலெழுந்த காலத்துத் தோன்றும் அதன் வாயலகைப்போல, வெள்ளூசியானது மூழ்கி மூழ்கி எழுந்து செயற்படுதலாலே தைக்கப்பெற்ற நெடிய தழும்பு பரந்த போர்ப்புண்ணின் வடுவானது பொருந்திய மார்பினையும்; அம்புகளாற் புண்பட்ட உடம்பினையும் உடையவர்களாகப், போர்மேற்கொண்டு வந்தோரல்லாத பிறருடன் தும்பை சூடிப் பொருதலை மேற்கொள்ளாது, போர் குறித்தாருடனேயே போர்செய்த மாட்சியும் உடையவராகிய, அத்தகையவரான மறக்குடிச் சிறந்தோர்க்குத் தலைவனே! நல்ல நெற்றியுடையாளான வேண்மாளின் கணவனே! தலைமை சான்ற யானைகளையும் எதிர்நின்று அழிக்கும் போராற்றல் மிக்க குட்டுவனே!
பகைவருடன் செய்த வலிமையுடைய நல்ல போரிலே, அப்பகைவரை எதிர்நின்று பொருது வெற்றிகொண்டு, நின் வீரர்களுக்கு வெற்றிப்புகழைத் தந்தனை! இஞ்சியும் பூவும் விரவிய பசிய தாரினைப் பூட்டிச், சந்தனம் புறத்தே பூசப் பெற்ற கட்குடம் அசையும் இடத்திலுள்ள, இனிய சேறாக விளைந்து முதிர்ந்த, நீலமணியின் நிறத்தைக் கொண்ட கள்ளினைத் தனக்கென மட்டுமே பேணி வைத்துக்கொள்ளாது, அதனைப் பிறர்க்கும் கொடுத்தலாலே, அவர் எல்லாரும் வளவிய களிப்புச் சுரந்து நிறைபவராயினர். கூத்தரது பெரிய சுற்றமானது வாழ்வினைப் பெறும்படியாக, அசையும் இயல்பினையுடைய தலையாட்டமணிந்து விளங்கும் செருக்குடைய குதிரைகளை நீ வழங்கினாய். அந்த நின் கொடைச் செயலை நினைந்தால்—
கண்டும் கேட்டும் அறிந்த மக்கள் வியப்படையும்படியாகப் பகையரசு அழிவெய்துமாறு போரினை வென்றனை. முற்பட்ட போர்வினையானது எதிர்வரப் பெறுதலைக் காணும் பொருட்டாக, நின் தேர்மறவரோடு கூடிய ஏனை மறவர் சுற்றமெல்லாம் உலகமெங்கணும் மொய்த்தபடி நிற்பாராயினர். ஒளிறுகின்ற நிலையையுடைய உயர்ந்த மருப்புக்களை ஏந்திய களிற்றுயானைகளின் மேலாக ஊர்ந்தபடி செல்லும், மானத்தையுடைய வலிமிக்க வீரரோடு, பிற மன்னர்களும் நின் வெற்றியைப் போற்றிப் பாராட்டினர். கரிய பெரிய தெளிந்த கடலினது மிக்க திரைகளையுடைய பரப்பில், நுரையாகிய வெள்ளிய தலையினையுடைய நிறமுள்ள பிசிர்களாகச் சென்று கரைக்கண் மோதி உடையும்படியாகத், தண்ணிய பலவாக வரூஉம் அலைகளைக் காட்டினும், நீ அன்று வழங்கிய குதிரைகள் பலவாகும், பெருமானே!
சொற்பொருள் விளக்கம் : இரும் பனம் புடையல் – கரிய பனந்தோட்டாலான மாலை. ஈகை – பொன். வான்கழல் – சிறந்த கழல்; பெரிய கழலுமாம். கொட்பு – சுழற்சி. கயம் – குளம். சிரல் – சிரற்பறவை. நெடுலசி – நீண்ட கூர்மை பரவிய தழும்பு. அம்புசேர் உடம்பினர் – அம்பு தைத்த வடுவிளங்கும் உடலினர். ‘தும்பை’ வெற்றி குறித்துச் செல்லும் போருக்குரிய அடையாள மாலை. ‘நன்னுதல்’ என்றது, வேண்மாளை.
மைந்து – வலிமை, வஞ்சனையாற் பகைவரை வெற்றி கொள்ளாது, அவர் படையோடு எதிரிட்டு மோதிப் போரிட்டதனால், ‘நல்லமர்’ என்றனர். வலந்தரல் – வெற்றியைத்தரல்; படைமறவர் திறனை உடையவரேனும், வெற்றிக்குக் குட்டுவனின் தலைமையே சிறந்த காரணமாதலால், அவன் வெற்றியைத் தந்ததாகக் கூறினார். திறனுடைத் தலைமை பெறாதவிடத்துச் சிறந்த படைப் பெருக்கமும் சிதைவுறும் என்பது தெளிவு. கட்குடத்திற்கு இஞ்சியும் பூவுமாகக் கலந்து கட்டிய மாலையைச் சூட்டியிருப்பர் என்பது இதனால் அறியப்படுகின்றது. மது நுகர்தற் காலத்து இடையிடைக் கறித்து இன்புறுதற்கு இஞ்சியும், மோந்து இன்புறுதற்குப் பூவும் பயன்பட்டன. சாந்து – சந்தனச் சேறு; இதனைப் புறத்தே பூசுதல் நறுமணத்திற்கும் பானைத் கசிவைத் தடுத்தற்கும் ஆம். தசும்பு – கட்குடம். துளங்கல் – அசைதல். இருக்கை – களித்தற்குரிய இருப்பிடப் பகுதி. கட்குடம் அசைந்தாடலாவது, கள்ளுண்பார் களிவெறியால் ஆட அவரோடு அவர் கைக்குடங்களும் ஆடும் என்பதாம். தீஞ்சேறு – இனிதான வண்டற்சேறு; சுவையுமாம். விளைந்த – முதிர்ந்த. மட்டம் – கள். ஓம்பா ஈகை. தனக்கென வையாது பிறர்க்குத் தந்து மகிழும் கொடை. வண்மகிழ் – வளவிய மகிழ்ச்சி. கோடியர் – கூத்தர். கிளை – சுற்றம். ஆடியல் உளை – அசையும் இயல்புடைய தலையாட்டம். கலி – மனச்செருக்கு. பொழிந்தவை – கணக்கின்றி வழங்கியவை. பாசறைக்கண் அவன் வெற்றியைப் பாடியவர்க்கும், கூத்து நிகழ்த்தி இன்புறுத்தியவர்க்கும், தான் பகைவரிடமிருந்து கைப்பற்றிய குதிரைகளைச் சேரமான் அளவின்றி வழங்கினான் என்பதாம்; தனக்குப் பயன்படும் அவை அக் கூத்தர்க்குப் பயன்படாவென அறிந்தும் அவன் வழங்கியதனாலே, இதனைக் கள்ளுண்ட மகிழ்விலே செய்த செயலென்று கூறுகின்றார் போலும்!
மன்பதை – மக்கள்; இவர் பகையரசர் நாட்டு மக்களும்; அடுத்திருந்த பிறநாட்டு மக்களும். மருளல் – வியப்பால் மயங்கல். கடந்து – வென்று. முந்துவினை – முற்படும் வினை; அது பகைவரை அழித்தல். எதிர்வரப் பெறுதல் .- மீளவும் வந்தெய்தப் பெறுதல்; வந்த போர்வினை முடிந்ததாதலின், இனி அடுத்துவரும் போரினை எதிர்நோக்கிப் படைஞர் திரண்டனர் என்பதாம். ஒளிறு நிலை உயர் மருப்பு – ஒளி நிலைபெற்று உயர்ந்த கொம்பு. ‘இதனை ஏந்திய களிறூர்ந்து வந்த மானமைந்தர்’ எனவே, அவர் குட்டுவனுக்குப் பணிந்து திறை செலுத்தும் மன்னரின் படைத்தலைவர்கள் எனலாம்; இவர் போரில் நேரிற் கலவாது வெற்றியைப் பாராட்ட வந்தவர். மன்னர் – அத் தலைவர்களின் மன்னர்கள். ‘தேரொடு சுற்றம்’ என்றது, தேர்ப்படை முதலான பிற படைகளையும். மூய – மொய்த்து நிறைய. மாயிருந் தெண்கடல் – கரிய பெரிய தெளிந்த கடல். மலிதிரைப் பெளவம் – திரை மிகுந்த பரப்பு. குரூஉ – நிறம். பிசிர் . சிறுதுளி. புணரி – அலை. இனி, இது தான் சேரமான் கடலிடைப் பகைவரை அழித்துத் திரும்பிய காலத்து. கரைப்பகுதியின்கண் நின்று அவனையும், அவனுடன் சென்ற படைமறவரையும் பிறர் வரவேற்ற சிறப்பைக் குறிப்பதாகவும் கொள்வர். தெளிந்த கடலின் பரப்பின் மேலாகப் பொங்கியெழும் அலைகள் கரையிற் சென்று மோதிப் பிசிராக உடைதலைப் போலக், கடலிடைத் தீவிலிருந்த வலிய பகைவரும் சேரனோடு பகைகொள்ள அழிந்து சிதறினர் என்பதுமாம். ‘தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்’ என்றது, அக் கடற்பகைவரிடமிருந்து கைப்பற்றிய திராட்சை மதுவுமாகலாம். அவர்கள் படையெடுப்பிற்காகக் கொணர்ந்து சேமித்த குதிரைகளையெல்லாம் கொணர்ந்து பாணர்க்கும் கூத்தர்க்கும் வழங்கினான் என்பதனால், அவன் படைமறவர் அவற்றைத் தமக்கு வேண்டாத அளவுக்குப் பெரிதாகவே பெற்றிருந்தனர் என்பதுமாம்.
43. ஏறா ஏணி!
துறை : இயன் மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு: செந்தூக்கு. பெயர் : ஏறா ஏணி. இதனாற் சொல்லியது : செங்குட்டுவனின் செல்வக் களிப்பு.
[பெயர் விளக்கம் : கள்ளுப் பானையை வைக்கின்ற கோக்காலியை ஏழு ஏணி என்று கூறிய உவமச் சிறப்பால், இப் பாட்டு இப் பெயரைப் பெற்றது. செங்குட்டுவனின் இயல்புகளை விதந்து எடுத்துக் கூறி அவனை வாழ்த்துதலால், துறை இயன்மொழி வாழ்த்து ஆயிற்று.]
கவரி முச்சிக் கார்விரி கூந்தல்
ஊசல் மேவல் சேயிழை மகளிர்
உரல்போல் பெருங்கால் இலங்குவாள் மருப்பின்
பெருங்கை மதமாப் புகுதரின் அவற்றுள்
விருந்தின் வீழ்பிடி எண்ணுமுறை பெறாஅக் 5
கடவுள் நிலைய கல்லோங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமய மாகத்
தென்னங் குமரியொடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச்
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த 10
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!
இரும்பணை திரங்கப் பெரும்பெயல் ஒளிப்பக்
குன்றுவறம் கூரச் சுடர்சினம் திகழ
அருவி அற்ற பெருவறற் காலையும்
அருஞ்செலல் பேராற்று இருங்கரை உடைத்துக் 15
கடியேர் பூட்டுநர் கடுக்கை மலைய
வரைவில் அதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்து
ஆர்கலி வானம் தளிசொரிங் தாஅங்கு
உறுவர் ஆர ஒம்பாது உண்டு
நகைவர் ஆர நன்கலம் சிதறி 20
ஆடுசிறை அறுத்த நரம்புசேர் இன்குரல்
பாடு விறலியர் பல்பிடி பெறுக,
துய்வீ வாகை நுண்கொடி உழிஞை
வென்றி மேவல் உருகெழு சிறப்பின்
கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக 25
மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக்
கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே என்றும் இகல்வினை
மேவலை யாகலின் பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின் 30
தொலையாக் கற்ப நின் நிலைகண் டிகுமே
நிணம்சுடு புகையொடு கனல்சினம் தவிராது
நிரம்பகல்பு அறியா ஏறா ஏணி
நிறைந்து நெடிதிராத் தசும்பின் வயிரியர்
உண்டெனத் தவாஅக் கள்ளின் 35
வண்கை வேந்தே! நின் கலிமகி ழானே.
தெளிவுரை : கவரிமானது கொண்டை முடிபோல முடித்த உச்சிக் கொண்டையையும், கார்மேகம் போல விரிந்த கூந்தலையும் கொண்டவரான, ஊசலாட்டை விரும்புவோரான, செவ்விய இழைகளையணிந்த இளமகளிர், உரலைப் போற் பெருத்த கால்களையும், விளங்கும் கொம்புகளையும், பெரிய கைகளையும் உடையவான மதயானைகள் தாமிருக்கும் காட்டுப்பக்கத்தே புகுந்தனவானால், அவற்றுள் புதியவாய் வந்து இளங்களிறுகளாலே விரும்பப்படுகின்ற பிடியானைகளை மட்டுமே எண்ணிக் காண முயல்வர். அவற்றையே எண்ண முயன்றும், எண்ணிக் காண வியலாமையால், தாம் எண்ணிக் காணும் அந்த ஆர்வத்தையே சைவிடுவர். இத்தன்மையுடையதும், கடவுளர் தங்கும் நிலைகளையுடையதும் கற்களாலே உயர்ந்த நெடுவரைகளைக் கொண்டதுமான் இமயமலையே வடதிசை எல்லையாகத், தெற்கின்கண் குமரித் துறை தென்னெல்லையாக, இவற்றுக்கு இடைப்பட்ட நாடுகளிலுள்ள அரசர்களது போர்முரசம் முழங்குதலையுடைய பெரும் போர்கள் பலவும் கெட்டழியவும், அவர்களை நீ வென்றதனாலே உண்டாகிய ஆர்ப்பொலி எழவும், சொல்லப்படுதற் கேற்ற புகழுடைய அப் பலவரசரின் நாடுகளது தொன்மையான அழகனைத்தையும் அழித்த, போராடு தலையே தொழிலாகவுடைய படைஞரையும், பொன் மாலையினையும் உடையவனை குட்டுவனே!
காட்டிடத்தேயுள்ள பெரிய மூங்கில்களும் வாடி உலர்ந்து போமாறு, பெரும் பெயலானது பெய்யாமற் பொய்த்தது; அதனாலே அன்றிடமெல்லாம் பசுமையற்று வெம்மை அடைந்தன; ஞாயிற்றது சினத்தீ எப்புறமும் விளங்கியது; அருவிகள் நீரற்றவையாய் இல்லையாயின; இத்தகைய பெரிய வற்கடக் காலத்தும், கடத்தற்கரிய நீர்ச்செலவை உடையதாயிருப்பது நினக்குரிய பேரியாறு. அதுதான் தன் இருபாலுமுள்ள பெரிய கரைகளை உடைத்துக் கொண்டு செல்லுமாறும், புதிய ஏரைப் பூட்டும் நின் நாட்டு உழவர்கள் கொன்றைப் பூவைச் சூடிக் கொள்ளுமாறும், நிறைந்த முழக்கையுடைய மேகங்கள், எல்லையற்றபடி மின்னியதிர்கின்ற இடிமுழக்கைச் செய்து, பெய்தலை மிகுதியாகத் தொடங்கி, மழைநீரைப் பொழியும். அதனைப் போல—
நின்னையடையும் இரவலர்கள் ஒம்பாது நிரம்ப உண்டு மகிழுமாறு பெருஞ்சோறு வழங்கியும்; இன்பச்சுவை தரும் பாணரும் கூத்தரும் முதலாயினோர்ச்கு நல்ல அணிகலன்களைப் பரிசிலாக வழங்கியும்; ஆடுகின்ற சிறையையுடைய கின்னரிப் பறவையின் இசையையும் வென்ற நரம்பின் இசையோடு பொருந்த இனிய குரலாற் பாடும் விறலியர் பல பிடி யானைகளைப் பரிசிலாகப் பெறுக என்று வழங்கியும்; மேலே துய்யினைக் கொண்ட பூக்களையுடைய வான்கப்பூவும், நுண் கொடியாகிய உழிஞையின் பூவும் கலந்து சூடுகின்ற, வெற்றி பெறுதலிலே கொண்ட விருப்பும், பகைவர்க்கு அச்சத்தைத் தருகின்ற வலிமைச் சிறப்பும், பகைப்புலத்தே சென்று கொள்ளையிடலையு முடைய வீரர்கள், கொல்லும் களிறுகளைப் பெறுவாராக என்று வழங்கியும்; கணுக்களையுடைய நுண்கோலைக் கைக்கொண்டு, ஊர் மன்றத்தேயிருந்து, பாடற்குரிய தலைவனின் புகழ்களைத் தெரிந்து, தெருக்களின் இரு மருங்கும் அவற்றைப் பாடிச்சென்றபடி களம் வாழ்த்தும் அகவலன் குதிரைகளைப் பெறுக என்று வழங்கியும், நீதான் இதுகாலை மகிழ்வோடிருக்கின்றன. போரிடுதலாகிய செயலை விரும்புதலை உடையை நீ! ஆதலினாலே-
நின்னைப் பகைத்தோரும், தம் உளத்தெழுந்த வியப்பைத் தாங்காமாட்டராய் வாய்விட்டு புகழ்ந்த தூங்கலோசைத்தாகிய பாட்டிற்கு ஏற்ப முழங்கும் முழவினையுடைய, கெடாத கல்வியினையும் உடையோனே! நிணத்தைச் சுடுகின்ற புகையின் நாற்றத்தோடு, சனலானது தன் சினத்தைத் தவிராதாக மேலெழுகின்ற, நிரம்புதலும் அகலுதலும் அறியாத ஏறா ஏணியாகிய கோக்காலியின்மேல் வைக்கப் பெற்றுள்ள நிறைந்த கள்ளால் நிறைந்தும் நெடிதுநேரம் அவ்வாறே நிறைந்தபடி இராத கட்குடங்களிலிருக்கும், பாணர் முதலானோர் உண்டதன் பின்னரும் குறையாத கள்வளத்தையுடைய நின் திருவோலக்கத்தின் கண்ணே, நின் செல்வநிலை எல்லாம் கண்டேம். வளவிய கொடையுடைய வேந்தே, நீதான் வாழ்வாயாக!
சொற்பொருளும் விளக்கமும் : கவரி – கவரிமானின் மயிர். முச்சி – கொண்டை முடி. கவரி முச்சி – கவரிமானின் கொண்டை முடிபோலும் கொண்டை முடியும் ஆம். ஊசல் மேவல் – ஊசலாட்டை விரும்புதல், சேயிழை – செவ்வணிகள். இலங்கு வாள் மருப்பு – விளங்கும் ஒளிபொருந்திய கொம்பு. விருந்தின் வீழ்பிடி – எண்ணும் மகளிர்க்கு விருந்தாகி அவர் எண்ணிக்கான விரும்பிய இளம்பிடிகளும் ஆம். அவற்றை மட்டும் எண்ணியது தங்களைப் போலும் நடக்கும் நடையினது ஒப்புமை கண்ட மகிழ்வால் என்க. எண்ணு முறை – சங்கு, பற்பம் உள்ளிட்ட தொகை. பெறாஅ – பெறாராக; எண்ணிக்கை மேலும் மிகுதலால். கடவுள் . கடவுளர்கள்: முனிவர்களும் ஆம். சொல் பல நாடு – சொல்லப்படும் பல நாடுகளும் ஆம்; இவற்றை ஐம்பத்தாறு தேயங்கள் எனப் புராணங்கள் கூறும். ‘இமயத்திற்கும் குமரிக்கும் இடைப்பட்ட நாடுகள் எல்லாவற்றையும் வென்றனன்’ என்றது, எதிர்த்தோரைப் போராலும், அஞ்சியடங்கியோரைத் தன் அருளாலும் வென்றனன் என்பதாம். ‘பொலந்தார்’ பொன் மாலை.
பணை – மூங்கில். திரங்கல் – பசுமையற்றுக் காய்தல். பெயல் ஒளித்தல் – மழை பொய்த்தல். வறங் கூரல் – வறட்சியடைதல். சுடர் சினம் திகழ – ஞாயிறு சினத்தோடு கடுமை மையாக விளங்க. வறங்காலை – வறட்சிக்காலம். அருஞ் செலற் பேரியாறு – கடத்தற்கரிய நீர்ச் செலவையுடைய பேராறு. கடியேர் – புதிய ஏர்: ‘நாளேர்’ என்பர். கடுக்கை – கொன்றை. வரைவில் அதிர் சிலை முழங்கி – எல்லையற்று அதிர்வின்றி இடிமுழக்கை மேற்கொண்டு. தளி – மழைத் துளி. பிறநாடெல்லாம் வறங்கூர்ந்த காலத்தும் நின் நாடு மழைவளத்தாற் குன்றாதிருப்பது என்பதாம்.
உறுவோர் – வந்தடையும் இரவலர். நகைவர் – நகையாடற்குரியவான கூத்து நிகழ்த்துவோர்; நகை வேழம்பரும் ஆம். ‘ஆடு சிறை யறுத்த நரம்பு’ என்றது, ‘கின்னரப் புள் தன் சிறைகளை ஆட்டியிசைக்கும் இன்னிசையினையும் வெற்றி கொண்ட நரம்பினின்றெழும் இசை’ என்றதாகும். ‘இன் குரல் பாடும் விறலியர்’ – இனிய குரலால் தலைவனின் புகழை எடுத்துப் பாடும் பாடினியர். உழிஞை – உழிஞைக் கொடி; கொற்றான் கொடி; இதன் கொடி நுண்மையாகக் கம்பி போல விளங்கும்; பூக்கள் வெண்ணிறத்தோடு அழகாக இருக்கும். உருகெழு சிறப்பு . பகைவருக்கு அச்சந்தரும் போர் மறச் சிறப்பு, கொண்டி – கொள்ளைப் பொருள். கண்டி நுண்கோல் – கணுக்களையுடைய நுண்கோல்; இதனைப் பிறப் புணர்த்துங்கோல் என்பர். சிறை – பக்கல். மறுகு – தெரு. அகவலன் – பாடும் பாணன்; அகவுதலையுடையோன். பகைவர் மதிலை வளைத்தற்குச் செல்வார் உழிஞைப் பூச் சூடுவர்; வென்றார் வாகை சூடுவர்; இவர் இரண்டும் சூடியது தம்முடைய வெற்றியிலே கொண்ட உறுதிப்பாட்டினால் என்று கொள்க. ‘மறுகு சிறை’ என்பது இசைத்துறையுள் ஒன்று எனவும் கூறுவர். ‘நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச் சினங்கெழு தானைத் தித்தன் வெளியன் (அகம்.154)’ எனப் பிறரும் இவரைப் பற்றி உரைப்பது காண்க.
‘பகைவரும் தாங்காது புகழ்ந்த தொலையாக் கற்ப’ என்றது, இவனுடைய கல்வியும், போர்த்துறைப் பயிற்சியும் முதலாயின கண்ட பகைவரும், தம்மை மறந்து அளவின்றிப் புகழ்தலைச் செய்யுமாறு சிறந்த அறிவினன் என்பதாம். கற்ப – கல்வியுடையாய். தூங்கு கொளை முழவு – தூங்கலோசைத் தாகிய முழவு. இது, கள்ளுண்டு மகிழ்பவரது ஆடலுக்கு ஏற்பு முழங்கும். ‘நிணஞ்சுடு புகை’ – நிணத்தைச் சுடும் புகை; நிணஞ்சுடுதல் ‘கள்ளுண்பார் இடையிடையே கடித்துக் கொள்ளற்கு.’ கட்குடம் வைக்கும் கோக்காலிக்கும் ஏணி யென்பது பெயராதலின், அதனை ஏறா ஏணி என்றனர். இவ் வேணி இருபக்க முடையதாய்க் குறிப்பிட்ட அகற்சி மிகாதும், இருபக்கமும் ஒன்று சேராதும், இடையிற் கம்பிடப் பெற்று விளங்கும்; ஆதலின் ‘நிரம்பகல்பு அறியா ஏணி’ என்றனர். ‘தசும்பு நெடிது நிறைந்தபடியே இராது’ என்றது, வருவார் அடிக்கடி எடுத்துக் குடித்தலால்; நிரப்ப நிரப்பக் குடிப்பாரும் எடுப்பராதலின், அது நிறைந்தபடியே நெடிது இராது என்பதாயிற்று. உண்ண வுண்ணப் பானை நிரப்பப்படுதலைத், ‘தவாஅக் கள்ளின்’ என்று சிறப்பித்தனர்.
- நோய்தபு நோன்தொடை !
துறை : செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : நோய்தபு நோன் தொடை. இதனாற் சொல்லியது : செங்குட்டுவனை நெடிது வாழ்வாயாக என வாழ்த்தியது.
[பெயர் விளக்கம் : நின்னைப் புகழுதற்குக் காரணமாக விளங்கும் நோயில்லாத யாக்கையாகிய பெரிய உடம்பு என்று சொல்லிய நயத்தால், இப் பாட்டிற்கு இது பெயராயிற்று.]
நிலம்புடைப் பன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ
வான்தோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்
பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசிக்
கலம்செலச் சுரத்தல் அல்லது கவினும் 5
களைகென அறியாக் கசடில் நெஞ்சத்து
ஆடுநடை அண்ணல்நின் பாடுமகள் நாணியர்
காணி லியரோகிற் புகழ்ந்த யாக்கை
முழுவலி துஞ்சு நோய்தபு நோன்தொடை
நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை 10
சேணன் ஆயினும் கேள்என மொழிந்து
புலம்பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு
அரண்கள் தாவுறீஇ அணங்குநிகழ்ந் தன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணிந்தவன் வேம்புமுதல் தடிந்து 15
முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி
ஒழுகை உய்த்த கொழுவில் பைந்துணி
வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை
கவலை கவற்றும் குராலம் பறந்தலை
முரசுடைத் தாயத்து அரசுபல ஒட்டித் 20
துளிங்குநீர் வியலகம் ஆண்டினிது கழிந்து
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே.
தெளிவுரை : நிலத்தை இடிப்பதைப் போன்றதான பெரிதான முழக்கத்தோடே முரசங்கள் முழக்கமிடுகின்றன. வானத்தைத் துடைப்பதுபோல எடுத்த வெற்றிக்கொடிகள் வானளாவ உயர்ந்து பறக்கின்றவை போலத், தேரின் மேலாகப் பறந்தபடி அசைந்து கொண்டிருக்கின்றன. ஈடுபட்டது பெரும் போரேயாயினும், அதனையும் எதிரேற்றுச் சென்று வெற்றிகொண்டனை. அதனாலே கிடைத்த பொருள்களை அரும்பொருள்கள் எனப் பேணிக்காவாது அனைவருக்கும் வழங்கின. அக் கலங்கள் பலரிடமும் பரவிச் செல்லுமாறு பகுத்து அளித்தன. இஃதன்றிக் கனவினும் எனக்குற்ற இத்துயரைக் களைகவெனப் பிறரைக் கேட்டறியாத குற்றமில்லாத நெஞ்சினையும், வெற்றியாடலாற் பிறந்த பெருமிதங்கொண்ட் நடையினையும் கொண்ட தலைவனே!
நுண்ணிய கொடியாக விளங்கும் உழிஞையின் பூவைச் சூடியவனான, வெல்லுகின்ற போரைச் செய்யும் அறுகை என்பான் தொலைவிடத்தே இருந்தானாயினும், அவனை நின் நண்பன் எனப் பலரிடமும் சொன்னாய். அவன், மோகூர்ப் பழையனுக்கு அஞ்சியவனாகத் தன் நாட்டைவிட்டு அகன்று ஒளித்துக் கொண்டான். அதனால், உண்டான நீக்கவியலாப் பழிச் சொல்லின் பொருட்டாக, அம் மோகூர் மன்னனுக்குரிய அரண்களைத், தெய்வத்தால் உற்ற கேடென்னுமாறுபோலச் சென்று அழித்தன. காவலையுடைய அவன் முரசினைக் கைக் கொண்டனை! அவன் உரைத்த வஞ்சினத்தை ஒழித்து அடிமை கொண்டனை! அவனுக்குரிய காவல்மரமாகிய வேம்பினை அடியோடு வெட்டிச் சாய்த்து, முரசு செய்தற்கேற்ற சிறுசிறு துண்டங்களாகவும் தறித்துக் கொண்டனை. அவற்றை, அம் மோகூரானின் களிறுகள் பலவற்றைக் கடாக்களாகப் பூட்டிய வண்டியிலிட்டு, வஞ்சி நகரத்திற்கும் கொணர்ந்தவனே!
கொழுப்பு இல்லாத பசிய இறைச்சித் துண்டங்களை வைத்த இடத்தை மறந்துபோன, துய்போன்ற உச்சிக் கொண்டையமைந்த தலையுடைய கூகைச் சேவலைக், கவலையடையச் செய்தபடி வருத்துகின்ற பெண் கோட்டானையுடைய இடுகாட்டிடத்திலே, முரசினையுடையவரும், வழி வழித் தொடர்ந்து உரிமைபெற்று அரசுசெலுத்தி வருவோமான அரசர் பலரை வென்று, அசைவற்ற அலைகளையுடைய கடலாற் சூழப்பெற்ற பரந்த இந் நிலமண்டலத்தை ஆட்சி புரிந்து, இனிதாகத் தம் வாணாளைக் கழித்து இறந்த மன்னரை இட்டுப் புதைக்கும் வன்னிமன்றத்து இடுகாட்டிடத்தே, தாழியானது, நின் யாக்கையாகிய நோயில்லாத பெரிய உடம்பைக் காணாதொழிவதாக!
ஆயின், நின்னைப் புகழ்ந்த, நின்னைப் பாடும் பாடினியே, மிக்க வலிமை பொருந்தியதும், நோயில்லாததுமான யாக்கையாகிய நின் பெரிய உடம்பினைக காண்பாளாக! எனவே நீயும் நீடுழி வாழ்க!
சொற்பொருளும் விளக்கமும் : புடைத்தல் – இடித்துத் தகர்த்தல். ஆர்ப்பு – முழக்கொலி. துடையூ – துடைத்து. நுடங்க – அசைந்தாட அமர்கடந்து – போரை வெற்றி கொண்டு. கலம்செல – கலம் பிறரிடத்தே கெல்ல. ஆடுநடை – வெற்றியின் பெருதமித நடை.
‘உழிஞை சூடிய அறுகை’ என்றது, மோகூரான வெல்லக் சருதிச் சென்ற அறுகை என்றதாம். சென்ற போர்களுள் எல்லாம் வெற்றியே பெற்ற இவன், மோகூரானோடு போரிட்டபோது தோற்று ஒடி ஒளியவும் நேர்ந்தது என்க. இதனால், அவனை நண்பனாகக் கொண்ட தனக்கும் பழியெனக் காண்ட குட்டுவன், தான் படையோடு சென்று மோகூர் மன்னனின் அரண்களை அழித்து, அவனை வெற்றி கொண்டான், என்பதாம். ‘அணங்கு நிகழ்ந்தன்ன’ என்றது. எவ்வாற்றானும் தடுக்கவியலாதபடி நிகழ்ந்த செயல் என்னுமாறு என்பதாம்.
கொழுவில் – கொழுப்பற்ற. துணி – இறைச்சித்துண்டு. தலை – இடம். துய்த்தலைக் கூகை – துய்போன்று கொண்டையைத் தலையிலுடைய கூகைச் சேவல். கவலை கவற்றல் – கவலைப்படவைத்து வருத்தல். தாயம் – வழிவழி வரும் உரிமை. துளங்கல் – அசைதல். பறந்தலை – இடுகாடு. தாழி – வாய் அகன்ற மட்பானை. வன்னி மன்றம் – வன்னிமரம் நிற்கும் மன்றம்; ‘சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு, மடைதீ யுறுக்கும் வன்னி மன்றம்’ என இதனை மணிமேகலை கூறும்.
45. ஊன்துவை அடிசில் !
[துறை : செந்துறைப்பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : ஊன்றுவை அடிசில். இதனாற் சொல்லியது: செங்குட்டுவனின் வென்றிச் சிறப்பு.
பெயர் விளக்கம் : அரசனுக்குச் சோறுவேறு படைமறவருக்குச் சோறு வேறு என்று உணவைப் பிரித்துக் கொள்ளாது அனைவருக்கும் ஒரே சோறாக அடப்படும் ஊன்றுவை அடிசில் என்னும் சிறப்பைச் சொல்வதால் இப்பாட்டிற்கு இது பெயராயிற்று.]
பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்
புற்றடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின்
நொசிவுடை வில்லின் நொசியா நெஞ்சின்
களிறெறிந்து முரிந்த கதுவாய் எஃகின்
விழுமியோர் துவன்றிய அகன்கண் நாட்பின் 5
எழுமுடி மார்பின் எய்திய சேரல்!
குண்டுகண் அகழிய மதில்பல கடந்து
பண்டும் பண்டும்தாம் உள்ளழித்து உண்ட
நாடுகெழு தாயத்து நனந்தலை அருப்பத்துக்
கதவம் காக்கும் கணையெழு அன்ன 10
நிலம்பெறு திணிதோள் உயர ஒச்சிப்
பிணம்பிறங்கு அழுவத்துத் துணங்கை ஆடிச்
சோறுவேறு என்னா ஊன்துவை யடிசில்
ஓடாப் பீடர் உள்வழி இறுத்து
முள்ளிடுபு அறியா ஏணித் தெவ்வர் 15
சிலைவிசை அடக்கிய மூரி வெண்தோல்
அனைய பண்பின் தானை மன்னர்
இனியார் உளரோ? நின் முன்னும் இல்லை
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
விலங்குவளி கடவும் துளங்கிருங் கமஞ்சூல் 20
வயங்குமணி இமைப்பின் வேலிடுபு
முழங்குதிரைப் பனிக்கடல் மறித்திசி னோரே.
தெளிவுரை : பொன்னாற் செய்யப்பெற்ற அழகான தும்பைப் பூவையும், பொறிகளோடு கூடிய அம்பறாத் தூணியிடத்தே, புற்றுள் அடங்கியிருக்கும் பாம்புகளைப்போல ஒடுங்கியிருக்கும் அம்புகளையும், வளைந்த வில்லையும், அஞ்சி ஒடுங்காத மனஎழுச்சியையும், களிறுகளை எறிதலாலே முனை முறிந்த வடுப்பட்ட வேலையும் உடையவர் நின் சிறந்தமறவர்கள். அவர்கள் நெருங்கிச் செய்கின்ற அகன்ற போர்க்களத்தை நினக்கே உரியதாகக் கொண்டு வெற்றி பெற்றன. பகையரசர் எழுவரது முடிப்பொன்னாற் செய்யப்பெற்ற ஆரத்தை மார்பிடத்தே அணிந்துள்ள சேரமானாகிய செங்குட்டுவனே!
ஆழமான அகழிகளையுடைய மதில்கள் பலவற்றைக் கைப்பற்றி வென்று, அவற்றின் உட்புகுந்து, அங்குள்ளவற்றை அழித்த, நாடாட்சிக்கு உரியதாக அமைந்த அகன்ற உள்ளிடத்தையுடைய அவ்வரண்களின் கதவுகளைக் காக்கும் கணையமரத்தைப்போல உறுதியுடன் விளங்கும். பகைவர் நாடுகளைக் கைப்பற்றும் திண்மையான தோள்களை உயரத் தூக்கி வீசிப் பிணங்கள் குவிந்து கிடக்கின்ற போர்க்களத்திலே, முன்னம் பல காலங்களிலும் துணங்கைக் கூத்தினை ஆடியும்-
அரசனுக்குரிய சோறு வேறென்னாது அனைவருக்கும் ஒன்றாகவே சமைத்த, ஊன்குழையச் சமைத்துள்ள ஊன் சோற்றைப் பகைவர்க்கு அஞ்சிப் புறமுதுகிடாத வீரர்க்கு அவருள்ளம் விரும்புமாறு பெருவிருந்தாக அளித்தும்-
பகைவரது படைவரவைத் தடுக்கும் பொருட்டாக முள் வேலி இடுதலை அறியாத எல்லைப்புறத்தையும், பகைவரது விற்களிலே தொடுத்தெய்யப்படும் விசையமைந்த அம்புகளைத் தடுக்கும் வலிய வெண்மையான கேடகத்தையும், அவற்றுக்கேற்ப அமைந்த மறப்பண்பால் மிகுந்த தானையையும் உடையவரான மன்னருள்ளே.
மேகங்கள் முகந்து கொள்ளலாற் குறையாமலும், ஆற்றுநீர் மிகுதியாகப் பாய்தலாலே கரைகடவாமலும், குறுக்கிடும் காற்றுத் திரட்டும் அலைகளாலே எழுதலையுடைய கருமையும் நிறைசூலுமுடைய மேகங்களைப்போல முழக்கமிடும் அலைகளோடும் கூடிய குளிர்ச்சியமைந்த கடலிடத்தே, விளக்கமுடைய செம்மணிபோலும் ஒளியினைக் கொண்ட வேற்படையைச் செலுத்தி, அக்கடலிடத்திருந்த பகைவரை எதிர்த்தழித்தோர், நின் முன்னோருள்ளும் யாருமில்லை இப்பொழுதும் நினக்கு ஒப்பாவார் யாருமில்லை!
சொற்பொருளும் விளக்கமும் : பொலம் – பொன். தும்பை – தும்மைப்பூ. பொறி – பூத்தொழில் வேலைப்பாடு; அரும்பு வேலைப்பாடும் ஆம் தூணி – அம்பறாத் தூணி. செயலற்றுக் கிடக்கும் அம்புகளைப் ‘புற்றடங்கு அரவின் ஒடுங்கிய’ என்றனர்; அவை வெளிப்படின் புற்றினின்றும் சீறிப் பாய்ந்து செல்லும் பாம்புகளைப்போல எதிரிகளைத் தேத்துக் கொல்வன என்பதனால். அம்புமுனைகள் நஞ்சிற்றோய்க்கப் பெறுவனவாதலால், இவ்வுவமை மிக்க பொருத்தமுடையதுமாகும். நொசிவு – வளைவு; போர்க்குத் தயாராக இருக்கும் நிலை. நொசியா நெஞ்சு – பகைவரின் போர்த்திறன் முதலியவற்றைக் கேட்டதனாலே சோர்வுற்று மடியாத நெஞ்சுறுதி. கதுவாய் எஃகம் – முனைமுரிந்த வேல்; அதுதான் களிறெறிந்து பெற்ற சிறப்பினை உடையது என்றனர், அதனைத் தாங்கிய மறவரின் போர்த்திறனைக் காட்டுதற்கு. விழுமியோர் – சிறந்தோர்; முறை பிறழாதே போரிடுவோர். அகன்கண் – அகன்ற இடத்தையுடைய நாட்பு – போர்க்களம். எழுமுடி மார்பின் எய்திய சேரல் – பகையரசர் எழுவரது முடிப்பொன்னால் அமைந்த வெற்றியாரம் பொருந்திய மார்பினையுடைய சேரமான். ‘ஞாட்பு’ என்பது நாட்பென்று வந்தது; அகன்கண் ஞாட்பின்கண் எழுமுடியரசரைவென்று பெற்ற அவர் முடிப்பொன் எனினும் ஆம்.
குண்டுகண் அகழி – ஆழமான இடத்தைக் கொண்ட அகழி – அகழப்பெற்ற பள்ளம். கடந்து – வென்று கைப்பற்றி. உள் உண்டு அழித்த – உள் மதிலிடத்துச் சென்று, அங்குள்ள பொருள்களைக் கொண்டும் அழித்தும் கைப்பற்றிய. தாயம் – வழிவழி வரும் உரிமை. கணையெழு – திரட்சிமிக்க கணையமரம்; கதவுக்கு வலுவாகப் பின்புறத்துக் குறுக்காக இடப் பெறுவது. ஊன் துவை அடிசில் – ஊனும் அரிசியும் குழையச் சமைத்த புலவு. பீடர் – பீட்டை உடையவர்; துணங்கை – ஒருவகைக் கூத்து. இது சேரமான் தன் வீரர்களுகுப் பெருவிருந்து அளித்த சிறப்பைக் கூறுவது; அனுவம் அவ்விடமிருந்து உண்ணல் மேலும் சிறப்பாகும்.
முள் – முள்வேலி. இடுபறியா – இடுதலை அறியா. ஏணி – எல்லைப்புறம்; நனியிரு முந்நீர் ஏணியாக (புறம் 35) என வருதலும் காண்க. தெவ்வர் – பகைவர். சிலை. வில். விசை – விசைத்து எய்யப் பெறும் அம்புகள். மூரி வெண்தோல் – மூரிப்பமைந்த எருத்தின் வெண்தோலால் அமைந்த கிடுகு; கிடுகு – கேடகம். விலங்குதல் -குறுக்கிடல். வளி கடவும் – காற்று மோதிச் செலுத்தும். துளக்கம் – அசைவு. வயங்குமணி இமைப்பின் வேல் – விளங்கும் செம்மணி போல ஒளிசிதறுகின்ற வேல்; இது பகைவரைக் குத்தியழித்துக் குருதிக்கறை நிலவிய வேலென உணர்த்தும். கமஞ்சூல் – நிறைசூல். வேலிடுபு – வேலை ஏற்றி நடப்பித்து என்பதாம். முன்னும் இல்லை – முற்காலத்தும் யாரும் இல்லை.
46. கரைவாய்ப் பருதி !
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு: பெயர் : கரைவாய்ப் பருதி. இதனாற் சொல்லியது : குட்டுவனின் கொடைச் சிறப்பு.
[பெயர் விளக்கம்: ‘பலவாய போர்களிலும் வெற்றி கொண்ட கொல்களிற்றினைக் கண்டதும் அஞ்சிச் சிதறியோடிய பகைமறவர் பலரையும், குட்டுவனின் தேர்ச் சக்கரம் விரையச் செல்லுங்காலத்தே தன் அடிப்படுத்துத் தலை துணித்தது’ என, அதற்கும் களத்தே வெற்றி கூறிய நயத்தால் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது.]
இழையர் குழையர் நறுந்தண் மாலையர்
சுடர்நிமிர் அவிர்தொடி செறிந்த முன்கைத்
திறல்விடு திருமணி இலங்கு மார்பின்
வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேரியாழ் மாலை பண்ணிப் 5
பணியா மரபின் உழிஞை பாட
இனிதுபுறக் தந்துஅவர்க்கு இன்மகிழ் சுரத்தலின்
சுரம்பல கடவும் கரைவாய்ப் பருதி
ஊர்பாட் டெண்ணில் பைந்தலை துமியப்
பல்செருக் கடந்த கொல்களிற் றியானைத் 10
கோடுநரல் பெளவம் கலங்க வேலிட்டு
உடைதிரைப் பரப்பின் படுகடல் ஒட்டிய
வெல்புகழ்க் குட்டுவன் கண்டோர்
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே|
தெளிவுரை : வண்டினம் மொய்க்கும் கூந்தலான முடியைப் புனைந்தோரான பாண்மகளிர், இழைகளையும், குழைகளையும், நறுமணங்கொண்ட குளிர்ந்த மாலைகளையும் அணிந்தோராகவும், ஒளிமிக்கதாய் விளங்கும் வளையல்களைச் செறித்த முன்னங் கையினராகவும், ஒளிக்கதிர்களை மிகவும் உமிழ்கின்ற அழகிய மணிகள் பதித்து விளங்கும் மாலை புனைந்த மார்பினராகவும் வந்து, நரம்புத்தொடையினையுடைய பேரியாழினிடத்தே பாலைப்பண்ணை அமைத்தவராகப் பகைவர்க்குப் பணியாத மரபினையுடைய உழிஞைத்திறனைப் போற்றிப் பாடுவர். அவர்கள் பாடலைக்கேட்டு, இன்முகத் தோடு அவர்ளுக்குப் பரிசிலளித்துப் பேணியவாறு, இனிய கள்ளையும் அவர்களுக்கு வழங்கி மகிழ்பவன்;
சுரநெறிகள் பலவற்றினும் செலுத்தப் பெறும், முன்னர்க் களங்களிற் சென்ற காலத்துக் குருதிக்கறை சோய்ந்த விளிம்பைக் கொண்ட தேர்ச்சக்கரங்கள், தாம் செல்லுங்காலத்தே எண்ணிலடங்காப்பகைமறவர் தலைகளைக் கீழ்ப்பட்டு நசுங்குமாறு செல்லப், பல போர்களை நிகழ்த்தி வென்ற, பகைவரைக் கொல்லும் இயல்பு உடைய களிற்று யானைகளை உடையவன்;
சங்கினம் முழங்குகின்ற கடலானது கலங்குமாறு வேற் படையைச் செலுத்தி, உடைந்தலையும் அலைப்பரப்பையுடைய ஒலிகடலிடத்தேயிருந்து பகைத்தோரைத் தோற்ரறொடச் செய்த வெற்றியால் உளதாகிய பெரும்புகழுடையவன் செங்குட்டுவன். அவனைப் பாடிச் சென்று கண்டோர், மீண்டும் மற்றெவர்பாலும் செல்லோம் என்பதையே எண்ண மாட்டார்கள். (அவர்கள் நிரந்தரமாக வாழுமளவுக்கு அவன் பெரும் பரிசில்களை நல்குவான் என்பதாம்.)
சொற்பொருளும் விளக்கமும் : இழை – அணிகலன்கள். குழை – காதணிகள். நறுந்தண்மாலை . நறுமணமும் தண்மையும் கொண்ட பூமாலை. சுடர் நிமிர் அவிர் – ஒளிமிக்குப் பரவும். திறல் – நிறமான ஒளி; மணி – செம்மணி. மகளிர் – பாடினியராகிய பாண்மகளிர். பணியா மரபு – பகைவர்க்குப் பணிந்து போகாத இயல்பு. தொடைபடு – தொடுத்தல் பொருந்திய. பேரியாழ் – நால்வகை யாழுள் ஒன்று; பிற செங்கோட்டியாழ், மகரயாழ், சகோடயாழ் என்பன. பாலை பண்ணி – பாலைப்பண்ணை அமைத்து. இன்மகிழ் – இனிய கள்: இனிய மகிழ்வு சுரக்க வீற்றிருத்தலும் ஆம். கரைவாய்ப் பருதி – கரைதலோடு செல்லும் இடத்தையுடைய சக்கரமும் ஆம்; பருதி செல்லும்கால் ஒலியெழும் என்பது உண்மை; தேய்ந்த முனைகொண்ட சச்கரமும் ஆம். ஊர்பாட்டு – ஊர்ந்து செல்லுங்காலத்து. துமிய – அற்று வீழ; நசுங்க. கோடு – சங்கு. நரல்தல் – ஒலித்தல். படுகடல் – ஒலிக்கும் கடல். வெல்புகழ் – வெற்றிப்புகழ்; பிற புகழ்களை வெல்லும் புகழும் ஆம். செல்குவம் எனனார் – இனிப் பிறிதோரிடம் செல்வேம் என்னமாட்டார்; அவ்வள்வு பெருஞ்செல்வத்தைக் குட்டுவன் அளிப்பான் என்பதாம்.
47. நன்னுதல் விறலியர் !
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: நன்னுதல் விறலியர். இதனாற் சொல்லியது : செங்குட்டுவனின் கொடையும் வருவாயும் பற்றிய சிறப்பு.
[பெயர் விளக்கம்: விறலியரது அழகினை அவரது துதலின் மேலிட்டு வியந்து கூறிய சிறப்பால் இப்பாட்டு அப்பெயரைப் பெற்றது.]
அட்டானானே குட்டுவன் அடுதொறும்
பெற்றனாரே பரிசிலர் களிறே
வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு நெருவின்
சொரிசுரை கவரும் நெய்வழிபு உராலின் 5
பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல
நன்னுதல் விறலியர் ஆடும்
தொன்னகர் வரைப்பின்அவன் உரையா னாவே!
தெளிவுரை : வந்த பகைவரைக் கொன்றும், அதுதான் போதுமென்று அமைந்திருப்பான் அல்லன் செங்குட்டுவன். மீளவும் அவன் எஞ்சிய பகைவரைப் பொருது அழித்தலிலேயே ஈடுபடுவான். அங்ஙனம் அவன் தான் பொருதுந்தோறும், அவன் களத்தைப் பாடிச் சென்றவரான பரிசிலர் களிறுகளையே பரிசிலாகப் பெற்றனர்.
மலையின் மேற்பகுதியினின்று வீழ்ந்தொழுகும் அருவியைப் போல, மாடங்களின் மேற்பகுதிகளிலிருந்து காற்றால் அசைந்தாடும் கொடிகள் தூங்கும் தெருவினிடத்தே, சொரிதற்குரிய சுரையைக் கொண்டிருக்கும் திரிக்குழாய், நெய்யானது கரையிடத்தே நிரம்பி மேற்புறமாக வழிந்து பரவுதலாலே, காலையுடைய விளக்கைப்போலப் பருத்துள்ள நெருப்புச் சுடரினை எரிய விடுவதாயிருக்கும். அழகிய நெற்றியுடையவரான விறலியர், அவ்வொளியிலே ஆடுகின்ற ஆடரங்கத்தையுடைய பழைதான மாளிகையிடத்தே எங்கணும், அவனைப் பற்றிய புகழுரைகளே மிகுதியா யுள்ளனவே!
சொற்பொருள் விளக்கம் : செங்குட்டுவன் போர் வினையிலே ஈடுபாடும், தன் பகைவரை முற்றவும் ஒழித்தலிலே கருத்தும் கொண்ட மறமேம்பாட்டினன் என்றது இது. இதனையே,
ஐயைந்து இரட்டி சென்றதற் பின்னும்
அறக்கள் வேள்வி செய்யாது யாங்கனும்
மறக்கள வேள்வி செய்வோய் ஆயின!
எனச் சிலம்பும் கூறுகின்றது (கா. 28. 130-32). மாடங்களின் மேலாக அசைந்தாடும் கொடிக்கு வரைமிசை வீழும் அருவியை உவமித்தலை, ‘வேறு பல் துகிலின் நுடங்கி, இழுமென இழிதரும் அருவி’ எனத் திருமுகாற்றுப்படையினும் காணலாம்.
கரை – உட்டுளை. ‘பரூஉச்சுடர் அழல’ என்றது, இடப் பெற்ற திரியின் அளவைக் கடந்து, சுரை கடந்து மேலே வரவிய நெய்யினும் பற்றிப் பெருஞ்சுடராக எரிதல்.
தொன்னகர் – பழைதான மாளிகைகள். ‘விறலியர் ஆடும் தொன்னகர் வரைப்பு’ என்றது, அவன் வென்று கொண்ட பகைமன்னர் அரண்மனையிலே, அவனைப் போற்றிக் கொண்டாடும் வெற்றிவிழாச் சிறப்பைக் கூறியதாகும்.
48. பேரெழில் வாழ்க்கை!
துறை; இயன்மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு,. பெயர் : பேரெழில் வாழ்க்கை. இதனாற் சொல்லியது: செங்குட்டுவளின் இயல்புகளை விதந்து கூறி வாழ்த்தியது.
[பெயர் விளக்கம் : வேனிலில் பொழிலிடத்தே சென்று வதிதலான வாழ்கையின் செவ்வியைப் பேரெழில் வாழ்க்கை என நயமாக உரைத்ததனாலே இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.]
பைம்பொன் தாமரை பாணர்ச் குட்டி
ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டிக்
கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ!
ஆண்டுநீர்ப் பெற்ற தாரம் ஈண்டிவர் 5
கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும்
கல்லா வாய்மையன் இவனெனத் தத்தம்
கைவல் இளையர் நேர்கை நிரைப்ப
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
முனைசுடு கனையெரி எரித்தலின் பெரிதும் 10
இதழ்கவின் அழிந்த மாலையொடு சாந்துபுலர்
பல்பொறி மார்ப! நின் பெயர்வா மியரோ;
நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவின்
பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை 15
மேவரு சுற்றமோடு உண்டினிது நுகரும்
தீம்புனல் ஆய மாடும்
காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே.
தெளிவுரை : பசும் பொன்னாலாகிய தாமரைப் பூக்களைப் பாணர்களுக்குச் சூட்டியும், ஒள்ளிய நுதலினரான விறலியருக்குப் பொன்னாரங்களைப் பூட்டியும், கெடாத பலவான புகழ்களை நிலைபெறுத்தி, கடல்நீர்ப் பரப்பின் வழிக் கடலுள்ளும் சென்று, கடலிடத்திருந்து தொல்லை தந்தாரான பகைவரோடு அரிய போரைச் செய்த, குளிர்ந்த கடற்றுறையினை உடையவனாகிய, பரதவனே!
அக் கடலிடத்தே, கொள்ளையிட்டு அவர் சேர்த்து வைத்திருந்த பொருள்களை எல்லாம் இவ்விடத்தே கொணர்ந்தனை. கொணர்ந்து இவ் விரவலர்களின், நின்புகழ் முழுதையும் தம்முள் அடக்கிக் கொள்ளாத பாட்டிற்குரிய பரிசிற்பொருளாக அவற்றை மிக எளிதாகக் கொடுத்தனை. ‘அங்ஙனமாகக் கொடுக்கும் இச் செங்குட்டுவன், வரும் பரிசிலரது தகுதிகளை ஆராய்ந்து அவற்றுக்கேற்பப் பரிசில் அளிப்பதென்பதனைக் கல்லாத வாய்மையாளன்’ எனத் தம் இசைத்தொழிலிலே வல்லாரான இசையாளர்கள் பாராட்டியவராகத் தங்கள் கைகளை வரிசையாக நீட்டுவர்.
ஆன்றோர்க்கு வணங்கிய மென்மையினையும், பகைவர்க்கு வணங்கியறியாத ஆண்மையினையும், பகைப்புலத்துப் போர் முனைப்படும் ஊர்களை எரித்தலாலே எழும் மிக்க தீயழல் எரித்ததாலே, இதழது அழகனைத்தும் பெரிதும் கெட்டழிந்த மாலையோடு சாந்தமும் காய்ந்துபோய்ப் பல பொறிகளாக விளங்கும் மார்பினையும் உடையவனே!
நினக்கு உரியதான மலையிடத்தே தோன்றி, நின் கடலிடத்தேயே சென்று கலக்கும் ஆற்றின்கண், மிக்கபுனல் வருங்காலத்தே நிகழ்த்தப்பெறுகின்ற இனிய புனலாட்டு விழவினிடத்தே, பொழிலிடத்தே தங்கியிருந்து வேனில் விழாக்கொண்டடும் பேரழகினையுடைய இல்வாழ்க்கையினை நீ உடையை! அவ் வாழ்க்கைக்கண்ணே விரும்பிச் சூழ்கின்ற சுற்றத்தாரோடும் கூடியிருந்து உண்டு, இனிதாக நுகரும் இயல்பும் உடையை! இனிதான புனலிடத்தே ஆய மகளிர் விளையாடியபடியிருக்கும் காஞ்சியென்னும் ஆற்றின் பெருந்துறைக்கண் பரந்து கிடக்கும் மணலினும் பல்லாண்டுகள் நீயும் வாழ்வாயாக, பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும் : பைம்பொன் – பசும்பொன். பைம்பொன் தாமரை – பசும் பொன்னாலாகிய தாமரைப் பூக்கள். பாணர்ச் சூட்டி – பாணர்க்குப் பரிசிலாக அணிவித்து: இஃது இக்காலத்து ‘மெடல்’ அணிவிப்பதுபோன்று அணிவிக்கும் சிறப்பாகலாம். ஒண்ணுதல் விறலியர் – ஒளியுடைய நெற்றியினரான விறலியர்; நெற்றி ஒளியுடைய தென்றது அவர்தாம் நல்லழகினையுடையவர் என்பதற்காம். ஆரம் – பொன்னரி மாலை; இதுவும் பரிசிலாகத் தருவது. கெடலரும் பல்புகழ் – கெடுதலில்லாத பலவான புகழ்கள்; அஃதாவது பொய்மையான புகழ் அன்று என்பதாம். நிலைஇ நிலைபெறுத்தி. நீர் புக்கு – கடலுள் சென்று. ‘கடலோடு உழந்த’ என்றது, கடற்கண் தொல்லை தந்த பகைவரோடு போரிட்டு வென்ற என்றதாம். பனித்துறை – குளிர்ச்சியான கடற்றுறை, தாரம் – செல்வம்; இது அப் பகைவரிடமிருந்து அவரை வென்று கைப்பற்றிய பல பொருள்கள். கொள்ளாப் பாடல் – புகழை முற்றவும் கொண்டிராத பாடல்; பொருட் செறிவு இல்லாப் பாடலும் ஆம்; இசையோடு பொருந்தாத பாடல் எனினும் பொருந்தும். கல்லா – தரமறிந்து பிரித்துப் பரிசில் தருதலை அறியாத நிலை; தனக்கெனப் பேணி வைத்துக் கொள்ளாத நிலையும் ஆம். வாய்மை – உள்ளத்தை மறைக்காத தன்மை. ‘கை நேர் நிரைப்ப – கைகளை வரிசை வரிசையாக நீட்ட; பரிசில்ர் அத்துணைப் பெருந்தொகையினர் என்பதாம்.
வணங்கிய சாயல் – பணிந்த மென்மை; பணிதல் ஆன்றோர் மாட்டும், சிறந்த நட்பினர் மாட்டும் என்க. முனை – போர்முனை. கனையெரி – கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு. இதழ் – பூவிதழ்; குட்டுவனின் மார்பினிடத்து மாலையிலுள்ள பூதவிழ்கள். சாந்து – சந்தனம். பொறி – பொறிந்த சாந்தம். ஊரழலின் வெப்பத்தாலே மார்பின் சாந்தம் காய்ந்து பொறிப்பட்டு உதிரலாயிற்று என்க. நின் மலை – நினக்குரிய மலை; நின் கடல் – நினக்குரிய கடல்; எனவே, இடைப்பட்ட நிலமும் நினக்கு உரியதென்றனர். தீநீர் விழா – இனிதான் புதுப்புனல் விழா. ‘சுற்றம்’ என்றது, அரசியற் கருமத் தலைவரும் அகவாழ்வுத் துணைவியும், பிறருமாகிய சுற்றத்தினரை. ‘இனிது நுகரும்’ என்றது, பொருள் தான் செலவழிதலைப் பற்றிக் கருதாது, அவ்வாறு செலவாதலிலே இனிமைகண்டு நுகரும் என்றதாம்; இஃது அளவற்ற வளனுடைமையைக் குறிப்பதாகும். காஞ்சியம் பெருந்துறை – காஞ்சியாற்றின் பெரிய நீர்த்துறை; இவ்வாறு இந்நாளையக் கொங்கு நாட்டுப் பேரூர்க்கருகில் செல்கிறது; ‘நொய்யல்’ என்னும் பெயரையும் கொண்டுள்ளது.
ஆசிரியர் பரணர் செங்குட்டுவன வாழ்த்தும்போது, ‘நிவந்து கரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றை’க் குறிப்பிடாமல், காஞ்சியாற்றைக் குறிப்பதற்குக் காரணம் ஏதேனும் இருத்தல் வேண்டும்; இது சிந்தித்தற்குரியது.
49. செங்கை மறவர் !
துறை : விறலியாற்றுப் படை. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : செங்கை ம்றவர். இதனாற் சொல்லியது : குட்டுவனது வரையாத ஈகைச் சிறப்பு.
[பெயர் விளக்கம் : ‘நெய்த் தோர் தொட்ட செங்கை மறவர்’ என்று, அவர் பகைவர்பால் தாம் செலுத்திய வேல் முதலாயினவற்றால் அப் பகைவரை வீழ்த்தி, மீளவும் அவற்றைத் தாம் பறித்துக்கொள்ளுங் காலத்தே, அவற்றிற் படிந்தும், குத்து வாயினின்றும் ஒழுகியும் பெருகிய பகைவரது குருதியாற் சிவந்த கையினரான மறவர் என, அவரது மறமாண்பைப் புனைந்து கூறிய சிறப்பால், இப்பாட்டிற்கு இது பெயராயிற்று.]
யாமும் சேறுகம்; நீயிரும் வம்மின்
துயலும் கோதைத் துளங்கியல் விறலியர்!
கொளைவல் வாழ்க்கைதும் கிளையினிது உணீ இயர்;
களிறுபரந்து இயலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப 5
எஃகுதுரந்து எழுதரும் கைகவர் கடுந்தார்
வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்
வலம்படு குழூ உநிலை அதிர மணடி
நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் 10
நிறம்படு குருதி நிலம்படர்ந்து ஓடி
மழைநாள் புனலின் அவல்பரந்து ஒழுகப்
படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து
படுகண் முரசம் நடுவண் சிலைப்ப
வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக் 15
கருஞ்சினை விறல்வேம்பு அறுத்த
பெருஞ்சினக் குட்டுவன் கண்டனம் வரற்கே.
தெளிவுரை : களிற்றுப் படையிலுள்ள களிறுகள் பரந்து செல்லும்; விரைந்த செலவைக் கொண்ட குதிரைகள் தம்மைச் செலுத்தும் மறவரைச் சுமந்தபடி கடிதாகச் செல்லும்; விளங்குங் கொடிகள் அசையச் செல்லும் தேர்கள் வழியின் தன்மைக்கேற்ப விலகிச் சுழன்றபடியே செல்லும்; வேற்படை செலுத்தியபடி போர் எழுச்சி மேற்கொண்டு வருகின்ற பகையரசரது முன்னணிப் படையினது, இருபக்கமாகவும் வரும் பக்கப்படைகளைப் பொருது அழித்து வெற்றி கொள்ளும், கடுமையான தூசிப்படையினைக் கொண்டவர்; இத் தகையரான, போர்க்களங்களிலே வெற்றி யொன்றனையே பெறுகின்றவரான மறஞ்சிறந்த இருபெரு வேந்தரும், வேளிர்குலத் தலைவர்களும், தம்முள்ளே அறுகையை வெற்றி கொள்ளுதலாகிய ஒன்றையே கூறியபடி, தம் படை யணிகளுடனே ஒன்றுபட்டு வந்தனர். மிகுதியான அப்படைப் பெருக்கின் வலிமையினாலே செருக்குடையவனாக, அவரோடு தானும் கூடியவனாக வந்தனன் மோகூர் மன்னனாகிய பழையன்; அப் பழையனின், வெற்றியைத் தரும் படைமறவர் கூட்டமெல்லாம் கலந்து சிதையுமாறு, நெருங்கித் தாக்கி அழித்தவன் செங்குட்டுவன்.
பகைவரை எறிந்து மீளப்பறித்த வேற்படைகளை ஏந்தி வருதலாலே, குருதியளைந்த சிவந்த கையினராக வரும் படை மறவருடைய, மார்பிற்பட்ட புண்களிலிருந்து வழியும் குருதியானது. அப் போர்க்களத்தின் நிலத்திற் பரவி ஓடியது; மழைநாளிற் செல்லும் புனலொழுக்கைப்போலப் பள்ளங் களிற் பரந்து அக் குருதிவெள்ளம் செல்லலாயிற்று; பட்டு வீழும்மறவர் பிணங்கள் எப்புறமும் குவிந்தன; பலவற்றையும் அவ்வாறு பாழ் செய்தான் குட்டுவன்; ஒலிக்கின்ற கண்ணையுடைய அவனுடைய வெற்றிமுரசமானது போர்க்களத்தின் நடுவிடத்தேயிருந்து, வெற்றியை அறிவித்தபடி முழங்கத் தொடங்கியது; பகைத்துவந்த அப்பழையனது படைவளம் முற்றவும் அழிந்தது; இருந்து வாழ்தற்குரியவரான இளமை கொண்ட மறவர் பலரும் அக்களத்திற் பட்டு வீழ்ந்தனர்; மேலும், அப் பழையன்மேற்சென்று, அவன் நாட்டுட்புகுந்து அவனுக்குரிய காவல் மரமான கரிய கிளைகளையும் வன்மை யினையுமுடைய வேம்பினையும் செங்குட்டுவன் வெட்டி வீழ்த்தினான்; அத்தகைய பெருஞ்சினத்தைக் கொண்டவன் செங்குட்டுவன். அவனைக் கண்டு வருவதற்காக
அசைந்தபடி தொங்கும் கூந்தலையும், அஞ்சுகின்ற இயல் பையுமுடைய விறலியரே! யாமும் அவன்பாற் செல்கின்றேம்; நீவிரும் அவனிடத்தே வருக. பாடலின் வன்மையாலே வாழும் வாழ்க்கை நெறியினையுடைய நும் கூட்டத்தவர். இனிதாக உண்டு களிப்பாராக!
சொற்பொருளும் விளக்கமும்: களிறுகள் அசைந்தசைந்து செல்லும் இயல்பினவாதலின் அவை செல்லுதலைப் பரந்து இயல என்றனர்; போர்த் தொழிலுக்கேற்ற பயிற்சிகளால் மிகுதியும் தேர்ந்தவைபற்றிக் குதிரைகளைக் கடுமாஎன்றனர். அவற்றைச் செலுத்தும் வீரரன்றியும், அவையும் தம்செலவு வேகத்தால் மிதித்தும் கடித்தும் பகை மறவரை அழித்தலைச் செய்வன என்பதாம். ‘தேர் திரிந்து கொட்ப’ என்றது, தேர்தான் நெறியின் சால்புக் கேற்பச் சுழன்று விலகிவிலகிச் செல்வதைக் கூறியதாம்; இது நெறிதான் செம்மையற்ற நெறியென்பதையும் உணர்த்தும். பக்கப்படையைத் தாக்கியழித்தலின் போது துணைப்படை தானே ஒழிதலும், உட்படை நெருககுண்டு சிதைதலும் நேர்தலின், ‘கைகவர் கடுந்தார்’ என்றனர்; கைகலந்த போரைச் செய்யும் கடுமையுடைய முன்னணிப் படையும் ஆம். தாரையும் போரையும் உடையவரான வேந்தரென்று பகைவரைச் சிறப்பித்து, அவரை வென்ற குட்டுவனின் மேலான வலிமையை விளக்க முற்படுகின்றார் பரணர்.
இனிக் ‘கைகவர் நெடுந்தார்’ என்பதற்கு, ‘மாற்றார் படையிலே வகுத்து நிறுத்தின கைகளைச் சென்று கவருகின்ற கடிய தூசிப் படை’ என்னும் பழையவுரையும் பொருத்தும். இவர் அனைவரும், கொங்கு நாட்டை வெற்றி கொள்ளக் கருதிப் படையொடு வந்தவர் என்று கொள்க. முடிவேந்தரது படைத்திரளும் வேளிரது படைத்திரளும் துணைவருதலால் மொய்வளஞ் செருக்கி மொசிந்துவந்த மோகூர்ப் பழையன் என்றும் கொள்க. இவன் வெற்றிபெறக் கருதியவன் அறுகையாவான்; இவ் அறுகை குட்டுவனின் நண்பன். ‘மொய்’ – வலிமை. மொய்வளம் . படை வலிமையாகிய வளமை. இந்தச் செருக்கினாலே ஏற்பட்ட களிப்பே பழையன் சேரனைப் பற்றி ஆராயாதும், உரிய படை வகுப்புக்களைச் செய்து தற்காவாதும், அழிவினைத் தானே தேடுதற்குக் காரணமாயின என்பதுமாம்.
நெய்த்தோர் – குருதி. செங்கை – குருதியாற் சிவந்த கை. நிறம் படு குருதி – மார்பிற்பட்ட புண்களிலிருந்து வழியும் குருதி இதனால், அவருடைய மறமாண்பும் கூறினார். அவல் – பள்ளம். படுபிணம் – பட்டு வீழ்தலாற் பிணமான மறவரின் உடல்கள். படுகண் முரசம் – ஒலிக்கும் கண்ணைப் பெற்றுள்ள முரசம். நடுவண் – களத்தின் நடுவிடத்தே. ‘பாழ் பல செய்து’ என்றது பட்டு வீழும் மறவரோடு, களிறும் மரவும் தேருமாகிய பலவும் உடன் சிதைந்து வீழ்தலின். ‘வளன் அற’ என்றது மோகூரானது படைவலி மட்டுமன்றிக் குட்டுவனின் படைமறவர் அவன் கோநகருட் புகுந்து அவ்ன் செல்வங்களையும் கொள்ளை கொண்டனர் என்றதாம். இதனை நயமாக மேலும் கூறுவார். வேம்பு அறுத்ததனைக் கூறினார். ‘வேம்பு’ பழையனின் காவல்மரம். இவ்வாறு அழிபாடைதலில் வீரரன்றி நாட்டு மக்களும் பலராக இருத்தலைக்கூறுவார், ‘பெருஞ்சினக் குட்டுவன்’ என, அவன் நிலையைக் கூறினர். மோகூரானையும், அவன் நாட்டையும், மறவரையும் அழித்தல் என்னும் பெருஞ்சினமன்றிப் பிறவற்றை எண்ணாதவன் என்றதாம்.
‘துயலும் கோதை’ என்றது, பின்னித் தாழவிடப்பெற்ற தலைமயிர் என்றதாம். துளக்கம் – அச்சம்; அது பெண்மைப் பண்புகளுள் ஒன்று. கொளை பாட்டு. பழையனை வென்ற வெற்றிச் சிறப்பைக் கூறியது. அவனிடமிருந்து கவர்ந்த பெருஞ்செல்வம் செங்குட்டுவனிடம் மிகுதியாக உளதாதலால், அவன் நிறைய வழங்குவான் என்பதற்காம்.
50. வெருவரு புனற்றார்!
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கு. பெயர் : வெருவரு புனற்றார். இதனாற் சொல்லியது: செங்குட்டுவன் போர் வேட்கையே மிகுந்தானாயிருந்த தன்மையினை.
[பெயர் விளக்கம் : பகை துறந்து பணிந்து தன்னை அடைந்து ஒழுகுவாரும், பகைவர்க்கு நேர்ந்த அழிவைக் கண்டு, அவன் வெற்றி மாலையைக் காணுந்தோறும், தம் பகையை எண்ணி அச்சங்கொண்டவராய் மேலும் பணிந்து போதலைக் கைக்கொள்வர் என உரைத்த நயத்தால், இப் பாட்டு இப்பெயரைப் பெற்றது.]
மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக்
கான்மயங்கு கதழுறை ஆலியொடு சிதறிக்
கரும்பமல் கழனிய நாடுவளம் பொழிய
வளங்கெழு சிறப்பின் உலகம் புரை இச்
செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர்நிறைக் 5
காவிரி யன்றியும் பூவிரி புனலொரு
மூன்றுடன் கூடிய கூடல் அனையை;
கொல்களிற்று, உரவுத்திரை பிறழ அவ்வில் பிசிரப்
புரைதோல் வரைப்பின் எஃகுமீன் அவிர்வர
விரவுப்பணை முழங்கொலி வெரீஇய வேந்தர்க்கு 10
அாண மாகிய வெருவரு புனற்றார்
கல்மிசை யவ்வும் கடலவும் பிறவும்
அருப்பம் அமைஇய அமர்கடந்து உருத்த
ஆள்மலி மருங்கின் நாடகப் படுத்து
நல்லிசை நனந்தலை இரிய ஒன்னார் 15
உருப்பற நிரப்பினை யாதலின் சாந்துபுலர்பு
வண்ணம் நீவி வகைவனப்பு உற்ற
வரிஞிமிறு இமிரும் மார்புபிணி மகளிர்
விரிமென் கூந்தல் மெல்லணை வதிந்து
கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப் 20
பொழுதுகொள் மரபின் மென்பிணி அவிழ
எவன்பல கழியுமோ பெரும; பன்னாள்
பகைவெம் மையின் பாசறை மரீஇப்
பாடரிது இயைந்த சிறுதுயில் இயலாது
கோடுமுழங் கிமிழிசை எடுப்பும் 25
பீடுகெழு செல்வம் மரீஇய கண்ணே.
தெளிவுரை : தன் முழக்கத்தினாலே, பெரிய மலையிடத்தேயுள்ள விலங்கினத் தொகுதியெல்லாம் நடுங்குமாறும், காற்றுக் கலந்து மோதுதலாலே விரைவுடன் பெய்யும் துளிகளை உடையதாகவும், ஆலங்கட்டியோடுங் கூடியதாகவும், மேகமானது மழையைப் பொழிந்தது; அதனாலே, கரும்புகள் நெருங்கிய கழனிகளையுடைய மருதநிலப் பகுதிகள் வளத்தைப் பெருகச் சுரந்தன; மேலும் பலவகை வளங்களும் பொருந்திய சிறப்பினையுடையதாக இவ்வுலகம் விளங்குமாறு மழைதான் இவ்வுலகத்தைக் காத்து வரும்; நேர்கிழக்காக ஒடிச்செல்லும் கலங்கிய நீர் நிறைந்த வெள்ளத்தையுடைய காவிரியாற்றை யன்றியும், ஆன்பொருநையும், குடவனாறும் பூக்கள் நிறைந்த புனலுடையவாய்க் கலக்க, ஒப்பற்ற அம் மூன்றாறுகளும் ஒன்றாகக்கூடிய முக்கூடலின் தன்மையை நாடு புரத்தலின் நீதான் ஒப்பவனாவாய்.
போரிற் பகைவரைக் கொல்லும் இயல்புடையவான களிறுகள் பரந்த கடலலைகளைப்போல அசைந்துவரும்; வலிய வில்லாகிய படையினைக் கொண்டோர், அவ்அலைகள் உடைந்து சிதறும் துளிகளைப்போல நாற்புறமும் பரவுவர்; உயர்ந்த தோற்கிடுகின் விளிம்பின் மேலாக வேற்படையாகிய மீன்கள் ஒளி செய்தபடி விளங்கும்; இவற்றின் ஆரவாரத்தோடு கலந்தெழும் நின் போர்முரசத்தின் ஒலியைக்கேட்டுப் பகையரசர் அஞ்சுவர். அஞ்சிய அவர்கள் நின்னைப் புகலாக வந்தடைவர். அவர்கட்கு நீயும் அரணாக விளங்கி, அவர்களைக் காப்பாய். பகைவர்க்கு அச்சந்தரும் நின் தூசிப்படையாகிய வெள்ளமானது, மலையிடத்தும் கடலிடத்தும், பிற விடத்தும் உள்ளவான அரண்களிடத்தே பொருந்திய போர்களை வெற்றி கொள்ளும். உட்குப் பொருந்திய மறவர்களை யுடைத்தாயிருந்த அந்நாடுகளைக் கைப்பற்றும். இவ்வாறாக நின்னைப் பகைத்தோரது நல்ல புகழனைத்தும் கெட்டழியுமாறு, நீதான் அவரையழித்து, அவரது சினத்தை முற்ற அவியுமாறும் செய்தனை.
ஆதலினாலே, மார்பில் பூசிய சந்தனம் புலருமாறும், நெற்றித் திலகமும் கண் மையுமாகிய வண்ணங்கள் துடைக்கப்படவும், பலவகையான அழகுபொருந்திய கோடுகளைக் கொண்ட வண்டினம் ஒலிக்கும் நின் மார்பினாற் பிணிக்கப் பெற்ற மகளிரது, விரிந்த மெல்லிய கூந்தலாகிய மெல்லணையிலே தங்கி வருந்துகின்ற காமமாகிய நோயை நீக்கும் பொருட்டாக, அவரது மார்பைச் சேர்ந்திருக்கும் கூட்டத்தாலே இராப்பொழுதைப் பயன்கொள்ளும் முறைமையினாலே உண்டான மெல்லிய சிறு துயிலானது, நீங்குவதற்கு நாள் எவ்வளவு பலமாகக் கழியுமோ, பெருமானே!
பலவான நாட்களும் பாசறையிடத்தேயாகத் தங்கியிருத்தலாலே, சங்கு முழங்கும் முழக்கமும், பிற கருவிகள் எழுப்பும் இசை முழக்கமும் எழுப்பும், பெருமைபொருந்திய படையாகிய செல்வத்தின்பால் பழகிய நின் கண்கள், பகைவரிடத்தே உண்டாகிய சினமிகுதியினாலே, உறங்குதல் அரிதாகிப் பொருந்திய சிறுதுயிலை மேற்கொள்ளலும் இயலாது.
சொற்பொருள விளக்கம் : மாமலை – பெருமலை; கருமலையும் ஆம். முழக்கம் – இடிமுழக்கம். பனிப்ப – நடுங்க; இடியோசையாலும், மழை நீரால் உண்டான குளிராலும் நடுங்க. கால் – காற்று. ‘கான் மயங்கு’ ‘காட்டிடமெல்லாம் இடம் தெரியாவாறு மயக்கத்தைச் செய்ய’ எனலும் ஆம்; பெரு மழை பொழிதலால் காட்டின் பகுதிகளை அறிந்துணர இயலாவாயின என்க. ‘வளங்கெழு சிறப்பு’ என்றது பிறவாகிய வளங்களை; இவை மலைபடுபொருளும், காடுபடுபொருளும், கடல்படு பொருளும் ஆகியன; நாடுபடு பொருளைக் ‘கரும்பமல் கழனிய நாடு வளம் பொழிய’ எனத் தனித்துக் கூறியது, அதுவே சிறப்பானது என்பதனால். செங்குணக்கு – நேர் கிழக்கு. கலுழி – கலங்கல். பூவிரி புனல் – பூக்களால் வேயப்பெற்றாற்போல வரும் புதுப்புனல். கூடல் – காவிரியும், குடவனாரும், ஆன்பொருநையும் கூடுமிடம்; இதனை முக்கூடல் என்பர்; இங்கே பழைதாகிய சிவாலயம் ஒன்று உளதென்பர் டாக்டர். உ. வே. சா. காவிரியல்லாமலும், மூன்றுடன் கூடிய கடலை ஒப்பாவாய் என்பதாம்.
உரவு – வலிமை. பிசிர் – சிறுதுளி, பண்ணை – முரசம். தார் – தூசிப்படை. கல் – மலை. உருத்தல் – உட்குப் பொருந்தல்; செங்குட்டுவனின் படைப் பெருக்கத்தை இவ்வாறு வெள்ளத்திற்கு ஒப்பிடுகின்றார் பரணர். மலையையும் கடலையும் பிறவற்றையும் அரண்களாகக் கொண்டு செருக்கியிருந்த பகைவரையும் வென்றான் என்றனர். ஆள் – போர் வீரர். நல்லிசை – நல்ல புகழ் பண்டு பெற்ற வெற்றிப் புகழ்; அது தான் செங்குட்டுவனைப் பகைத்தாலலே அழிந்ததென்பர். ‘நல்லிசை இரிய’ என்றனர். உருப்பு – வெப்பம்; இவ்விடத்து வெகுளிக்கு ஆயிற்று.
சாந்தம் புலர்தலும், வண்ணம் கலைதலும், வனப்பு அழிதலும் புணர்ச்சிக்கண் இயல்பாம்; ஆதலின் அவற்றைக் கூறினார். கூந்தல் மெல்லணை – கூந்தலாகிய மெல்லணை. சிறு துயில் – மெல்லிய உறக்கம். ‘மென்பிணி’ என்றது, புணர்ச்சி யெல்லைக்கண், அப் புணர்ச்சி கலையலானே வந்த சிறு துயிலை. கண்ணைப் பூவென்னும் நினைவினனாய்ப் பிணிய விழவெனப் பூத்தொழிலாற் கூறினான் என்றும் கூறுவர்.
பன்னாள் – பலவான நாட்கள். மரீஇ – தங்கியிருந்து. கோடு – சங்கம். பீடு – பெருமை. சிறுதுயில் – மென் துயில். வெம்மை – சினத்தீ. ‘பாடரிது இயைந்த சிறு துயில்’ என்றது, இராப் பொழுதெல்லாம் பகைவரை வெல்வதன் பொருட்டாக உள்ளத்திற் சென்ற சூழ்ச்சியின் முடிவிலே அரிதாகப்படுதல் பொருந்திய சிறுதுயில்’ என்றதாம். ‘தார்ப் புனலை ஒன்னார் உருப்பற நிரப்பினை’ என எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால், வஞ்சித்துறைப் பாடாண் ஆயிற்று.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக்
காக்கை பாடினியார்
நச்செள்ளையார் பாடியது
ஆறாம் பத்து
பதிகம்
குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்
ண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்டு ஒரூர் ஈத்து 5
வான வரம்பனெனப் பேரினிது விளக்கி
ஏனை மழவரைச் செருவில் சுருக்கி
மன்னரை ஒட்டிக்
குழவிகொள் வாரின் குடிபுறக் தந்து
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் 10
ஆடுகோட் பாட்டுச் சேர லாதனை
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம் : வடுவடு நுண்ணயிர், சிறு செங்குவளை, குண்டுகண்ணகழி, நில்லாத்தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி, ஏவிளங்கு தடக்கை, மாகூர் திங்கள், மரம்படு தீங்சனி. இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில் கலன் அணிக என்று அவர்க்கு ஒன்பதுகாப் பொன்னும் நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக் கோ. கா – ஓர் எடையின் பெயர். காணம் – அக்காலத்து வழங்கிய பொற்காசு.
மேற்றிசை நாடான குடநாட்டிற்குரிய கோமகன் நெடுஞ்சேரலாதன். அவனுக்கு வேளாவிக் கோமானின் மகளாகிய தேவி பெற்றுத் தந்த மகன் ஆடுகோட் பாட்டு நெடுஞ்சேரலாதன். இவன்,
திருடிக் கொள்ளப்பட்டுத் தண்டகாரண்யத்தே போன தனக்குரிய மலையாடுகளைத் திரும்பவும் மீட்டுத் தொண்டிக்குக் கொண்டு வந்தவன். தன்னைப் போற்றிய பார்ப்பாருக்குக் கபிலைநிறப் பசுவையும் குடநாட்டுப் பகுதியுள் ஓர் ஊரையும் தானமாகத் தந்தவன். ‘வானவரம்பன்’ என இனிதாகப் புகழோடும் விளங்கியவன். அப் பெயரை மேலும் விளக்கமுறச் செய்வான்போலத் தனக்கு உட்படாதவரான மழவரைப் போரிலே வெற்றி கொண்டு அவர் வன்மையைக் குன்றச் செய்தவன். தன்னைப் பகைத்துப் படையொடும் வந்தாரான பிற மன்னர்களையும் தோற்று ஓடச்செய்தவன். குழவியைப் பேணிக்கொள்ளும் தாயைப்போலத் தன் குடி மக்களைப் பாதுகாத்தவன். அறமே விரும்புதல் கொண்ட நன்மை பொருந்திய நெஞ்சத்தை உடையவன்.
இந்த ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைத் தாம் யாத்த செய்யுட்கள் பலவாகக் கொண்டு புகழ்பெற்றவரும், புலனடக்கம் கொண்ட கொள்கையினருமான, காக்கை பாடினியார் நச்செள்ளையார் பத்துப் பாட்டுகளாற் பாடினார்.
அவைதாம், ‘வடுவடு நுண்ணயிர்’ முதலாக, ‘மரம்படு தீங்கனி’ என்பது இறுதியாக அமைந்தவை.
சொற்பொருளும் விளக்கமும் : குடக்கோ – குடநாட்டரின் கோமான்; குடநாடு என்பது சேரநாட்டுள்ளே ஒரு பகுதியாகும். தண்டகாரணியம் என்பது மத்திய பாரதத்தின் கண் உள்ள ஒரு காட்டுப் பகுதி. ஒருகாலத்தே இங்கே ஆரியவரசரின் ஆதிக்கம் மிகுதியாக இருந்தது. அவருட் சிலர் மேலைக் கடற்கரைப் பகுதியிலுள்ள இச்சேரமானின் மலைப்பகுதிகளுட் புகுந்து, இவன் குடிகட்குரிய ஆடுகளைக் கவர்ந்து செல்ல, அவர்களை அழித்து ஆடுகளை மீட்டுவந்தான் இவன். இச் சிறந்த செயலால் இவ் வெற்றி குறிக்கும் ‘ஆடு கோட்பாட்டு’ என்பது இவன் சிறப்புப் பெயராயிற்று. ஆடு திருடிய ஆரியக்கள்வரை அவர்க்குரிய மலைப்பகுதிகளுக்கே சென்று வளைத்துக் கொன்று ஆடுகளை மீட்டுவந்தவன் இவன். கபிலை – கயிலை நிறம் : சாம்பல் நிறம். மழவர் . மறக்குலத்தோருள் ஒரு சாரார்; தகடூர்ப் பகுதியுள் இருந்தவர். நயன் – இனிமை. புரந்தரல் – காத்தல்.
‘பார்ப்பார்க்குப் பசுவும் ஊரும் அளித்தான்’ என்றது, ஆரியக் கள்வரைக் கொன்றவனேனும், ஆரியப் பார்ப்பாரும் தன்னை இரந்து நின்றவிடத்து, அவருக்கு வாழ்வளித்துப் பேணிய கருணையாளனும் இவனாவான் என்றதாம்.
குடிபுறங்காத்தல் எவ்வாறு அமைதல் சிறப்பு என்பதனைக், ‘குழவி கொள்வாரின் குடிபுறந் தந்து’ என்னும் பண்டையத் தமிழக மன்னரது அரசியல்நெறி நன்கு விளக்குவதாகும்.
51. வடுவடு நுண்ணயிர் !
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும். பெயர் : வடுவடு துண்ணயிர். இதனாற் சொல்லியது : சேரலாதனின் மென்மையும் வன்மையும்.
[பெயர் விளக்கம் : ‘தாங்குநர் தடக்கை யானைத் தொடிக் கோடு துமிக்கும்’ என்று, எதிர்ப்படை மறவர்மேற் போருக்குச் செல்லுதலைக் கூறினமையால், இஃது எடுத்துச் செலவின் மேற்றாய் வஞ்சித்துறைப் பாடாண் ஆயிற்று.
“‘அரவழங்கும்’ என்பது முதலாக இரு குறளடியும், ‘பந்தரந்தரம் வேய்ந்து’ என ஒரு சிந்தடியும், ‘சுடர் நுதல்’ என்பது முதலாக இரண்டு குறளடியும், ‘மழை தவழும்’ என்பது முதலாக நான்கு குறளடியும் வந்தமையின் வஞ்சித் தூக்கும் ஆயிற்று” என்று பழையவுரை கூறுகின்றது.
‘வடுவை மாய்க்கும் நுண்ணயிர்’ என்று கூறிய சிறப்பால் இதற்கு, ‘வடுவடு நுண்ணயிர்’ என்பது பெயராயிற்று.]
துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர
விளங்கிரும் புணரி உருமென முழங்கும்
கடல்சேர் கானல் குடபுலம் முன்னிக்
கூவல் துழந்த தடந்தாள் நாரை
குவியினர் ஞாழல் மாச்சினைச் சேக்கும் 5
வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பின்
அடும்பமல் அடைகரை அலவன் ஆடிய
வடுவடு நுண்ணயிர் ஊதை உஞற்றும்
தூவிரும் போந்தைப் பொழிலணிப் பொலிதந்து
இயலினள் ஒல்கினள் ஆடும் மடமகள் 10
வெறியுறு நுடக்கம் போலத் தோன்றிப்
பெருமலை வயின்வயின் விலங்கும் அருமணி
அரவழங்கும் பெரும்தெய்வத்து
வளைஞரலும் பனிப்பெளவத்துக்
குணகுட கடலோடு ஆயிடை மணந்த 15
பந்தர் அந்தரம் வேய்ந்து
வண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல்
நனையுறு நறவின் நாடுடன் கமழச்
சுடர்நுதல் மடநோக்கின்
வாள்நகை இலங்கெயிற்று 20
அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள்வேல் அண்ண்ல் மெல்லியன் போன்மென
உள்ளுவர் கொல்லோ நின் உணரா தோரே?
மழைதவழும் பெருங்குன்றத்துச் 25
செயிருடைய அரவெறிந்து
கடுஞ்சினத்த மிடல்தபுக்கும
பெருஞ்சினப்புயல் ஏறுஅனையை
தாங்குநர், தடக்கையானைத் தொடிக்கோடு துமிக்கும்
எஃகுடை வலத்தர்நின் படைவழி வாழ்நர் 30
மறங்கெழு போங்தை வெண்தோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்தூறு அளப்பத்
தூக்கணை கிழித்த மாக்கண் தண்ணுமை
கைவல் இளையர் கையலை அழுங்க
மாற்றருஞ் சீற்றித்து மாயிருங் கூற்றம் 35
வலைவிரித் தன்ன நோக்கலை
கடியையால் நெடுந்தகை! செருவத் தானே.
தெளிவுரை : அசையும் நீர்ப்பரப்பையுடைய கடலின் பரந்தவிடமெல்லாம் கலங்குமாறு காற்று மோதியது. அதனாலே எழுந்து விளங்கும் பெரிய அலைகள் இடியேற்றைப் போல் முழக்கஞ் செய்தன. மேற்றிசைப் புறத்துக் கடலை யொட்டியிருந்த கானற்சோலையை நோக்கி நீயும் செல்லலுற்றன. பள்ளப்புறங்களிலே துழாவித் தனக்குரிய இரையாகிய மீனைப்பற்றி உண்ட பெரிய கால்களையுடைய நாரையானது, வண்டுகள் மொய்த்தபடி தங்கியிருக்கும் குவிந்த பூங்கொத்துக்களையுடைய ஞாழல் மரத்தின் பெரிய கிளையிலே சென்று தங்கியிருக்கும். அத்தகையதும், அடும்பின் கொடிகள் நெருங்கியிருந்ததுமான தண்ணிய கடற்பரப்பினைச் சார்ந்த அடைகரைப் பக்கத்தே, நண்டுகள் அலைதலால் ஏற்பட்ட வடுக்களை மறைக்கும் நுண்மணலை ஊதைக் காற்றானது எறிந்துகொண்டிருக்கும். அத் தன்மையுடைய தூய பெரிய பனைமரச்சோலையிலே சென்று, நின்னை ஒப்பனையாற் புனைந்த அணிகள் பலவும் ஒளிவிட்டு விளங்க, நீயும் கொலு வீற்றிருந்தன.
நடந்தவளாகவும் அசைந்தவளாகவும் ஆடல்செய்யும் இளமகள் ஒருத்தி, வெறியயர் களத்திடத்தே தோன்றி மருளேற்று அசைந்தாடுவது போல, இடங்கள்தோறும் குறுக்கிட்டுக் கிடக்கும், அரிய மணிகளையுடைய பாம்புகள் செல்லும் பெருமலையாகிய பெருந்தெய்வமும், சங்கினம் முழங்கும் குளிர்ந்த தென்கடலும் கீழ்க்கடலும் மேலைக்கடலும் என்னும் அவ் வெல்லைக்கு உட்பட்ட நிலத்து வாழ்வோரான அரசரும் சான்றோரும் பந்தரிடத்தே கூடியிருந்தனர். பந்தரின் மேற்பக்கத்தே தொங்கவிடப் பெற்றிருத்தலாலே, வளவிய தம் அரிய பிணிப்பு அவிழ்ந்தவான கண்களைப்போல விளங்கும் நெய்தல் மலர்கள், தேன் பொருந்திய நறவம் பூக்களோடுஞ் சேர்ந்து, அந் நாட்டுப்புறமெங்கணும் மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. ஒளி திகழும் நெற்றியையும் மடமை விளங்கும் நோக்கத்தையும், மிக்க ஒளிவிளங்கும் பற்களையும், வாயூறலாகிய அமுதம் நிரம்பிய சிவந்த வாயினையும், அசையும் நடையினையும் உடையவரான விறலியரின் பாடல்களை நிரம்ப விரும்பியவனாக, நீயும் தங்கியிருந்தனை. அதனாலே, வெள்ளிய வேலேந்திய அண்ணலாகிய சேரலாதன் இன்ப நாட்டத்தினனாதலின், வெற்றி கொள்வதற்கு எளியன் போலும்!” என்றும், நின்னைச் சரியாக உணராதோர் நின்னைக் குறித்து நினைப்பார்களோ?
[‘உள்ளுவர் கொல்லோ நின் உணராதோர்’ என ஐயத்தை எழுப்பி, அவ்வாறு உள்ளார் என்பாராக, அவனது மறமாண்பைத் தொடர்ந்து கூறுகின்றனர்.]
மேகங்கள் தவழ்கின்ற பெரிய மலையினிடத்து வாழும் நஞ்சையுடைய பாம்புகளைத் தாக்கி அச்சமுறச் செய்து கடுஞ்சினத்தைக் கொண்ட அவற்றினது வலியை அழிக்கும், பெரிய முழக்கத்தையுடைய இடியேற்றை ஒப்பவன் நீயாவாய்!
போர்க்களத்தே தம்மை எதிர்த்தாரது பெரிய கைகளையுடைய யானைகளின் தொடியணிந்த கொம்புகளை வெட்டி வீழ்த்தும் வாளினைக் கையேந்திய வெற்றி மறவர்கள், நின் படையாக அமைந்து, அதன் மூலமாக வாழ்க்கை நடத்துவோராவர்.
பனையின் வெண்மையான தோட்டினாலாகிய கண்ணியைப் புனைந்திருந்தும், அதுதான் பகைவரைக் கொல்லுங்காலத்தே பாய்ந்த குருதியால் தன் நிறம் செந்நிறமாக வேறுபட்டு, நின் மறத்தன்மையொடு பொருந்தித் தோன்ற விளங்கும் கண்ணியை உடையையாயிருப்பாய். அதனை ஊன் துண்டமெனப் பிறழக்கருதிய பருந்தொன்று, அதனைக் கவர்தற்குரிய சாலவளவை அளந்தபடி வட்டமிட்டபடி யிருக்கும். நின்னால் தூவப்பெற்ற கணைகள் கிழித்த கரிய கண்ணையுடைய பகைமறவரின் தண்ணுமைகள, அவற்றை முழக்குந் தொழில்வல்ல இளைஞரின் கையால் அறையப்படுதலின்றி ஒழிந்துபோழ். ஏனையோரால் மாற்றற்கரிய சீற்றத்தைக் கொண்ட மிகப்பெரிய கூற்றமானது, உயிர்களைக் கவருவதற்கு வலைவிரித்தாற்போல, நின் பார்வையும் அப்பகைவரை நோக்கிச் செல்லும். நெடுந்தகையே! போர்க்களத்திலே, நீதான் எத்துணைக் கடுமையாக விளங்குகின்றன!
சொற்பொருள் விளக்கம் : துளங்கு நீர் – அசையும் நீர். வியலகம் – பரந்த நீர்ப்பரப்பு. கலங்குதல் . மேல்கீழாகக் கலங்குதல். சால் – காற்று. பொர – மோதியடிக்க. இரும்புணரி – பெரிய அலைகள். உரும் – இடி. கானல் – கானற் சோலை. குடபுலம் – மேலைக்கரை நாட்டுப் பகுதி. முன்னி – அடைந்து. கூவல் – பள்ளம். துழந்த – துழாவய. ஞாழல் – சுரபுன்னை. மாச்சினை . பெரிதான கிளை. சேக்கும் – தங்கும். இறை கொள்ளல் – தங்கியிருத்தல். அடும்பு – அடும்பங் கொடி. அடைகரை – மக்கள் இறங்கும் துறையுடைய கரைப்பகுதி. அலவன் – நண்டு. வடு – கோடு. அயிர் – நுண் மணல். ஊதை – வாடைக் காற்று. உஞற்றும் – முயன்று வீசும். தூவிரும் – தூய பெரிய. போந்தை – பனை. அணிப் பொலிதந்து – அணிகள் அழகுடன் விளங்கப் பொலிவுடன் வீற்றிருந்து.
இயலல் – நடத்தல். ஒல்கல் – அசைந்தாடல். மடமகள் – இளமகள். வெறியுறு நுடக்கம் – செல்வமேற்று ஆடுதலால் உண்டாகும் அசைந்த ஆட்டம். பெருமலை – இமயம். வயின் வயின் – இடங்கள்தோறும். விலங்கும் – குறுக்கிட்டுக் கிடக்கும். பெருந்தெய்வத்து – பெருந்தெய்வத்து வாழ்வோரும். வளை ஞரலும் – சங்கினம் முழங்கும். பனிப் பெளவம் – குளிர் கடல்; தென்கடல் மணந்த – ஒருங்கே கலந்து கூடியிருந்த, அந்தரம் – மேற்பக்கம். வண்பிணி – வளவிய பிணிப்பு. நறவு – நறவம்பூ. நெய்தற்பூவும் நறவம்பூவும் கண்போல விளங்குவன; இவற்றைக் கலந்து தொடுத்த மாலைகளாலே பந்தரின் மேற்பக்கம் வேயப்பெற்றிருந்தது என்க; இக் காலத்தும் பந்தரின் மேற்புறத்து வரிசைவரிசையாக மாலைகளைத் தொங்கவிடுவதனைக் காணலாம். மடநோக்கு – மடபம் பொருந்திய பார்வை. வாள் நகை – ஒளியுடைய பற்கள். அமிழ்து – வாயமுதம். பொதிதல் – நிரம்பியிருத்தல். துவர் வாய் – சிவந்த வாயிதழ்கள். அசைநடை – அசைந்து அசைந்து நடக்கும் நடை. சான்று – மிகவும் விரும்பி. நீடினை – நெடிதே தங்கினை. வெள்வேல் – வெள்ளிய வேல். மெல்லியன் – சிற்றின்பத்தே எளியன். நின் உணராதோர் . நின் போர் மறத்தை உணராதோரான பகைவர்.
மழை – மேகம். செயிர் – குற்றம்; அது நஞ்சுடைமை. அரவு – பாம்பு. எறிந்து – தாக்கி. மிடல் – வலிமை. புயல் ஏறு – இடியேறு. தாங்குநர் – தடுத்துப் போரிடும் பகைவர். தொடி – பூண். துமிக்கும் – வெட்டி வீழ்த்தும். எஃகு – வாள். வலத்தர் – வெற்றியுடையார். படைவழி வாழ்நர் – படைஞராகப் பணியேற்று வாழ்வோர். ‘நீயும் அரவெறியும் பெருஞ்சினப் புயலேறனையை; நின் படைவழி வாழ்நரும் யானைத் தொடிக்கோடு துமிக்கும் எஃகுடை வலத்தர்’ என்று மற மாண்பை எடுத்துக் கூறுகின்றனர்.
போந்தை – பனை. வெண்தோடு – குருத்தோலை; ஆகு பெயரால் மாலையை உணர்த்திற்று. நிறம் பெயர்தல் நிறம் மாறுபடுதல். ஊறு அளப்ப – உறுதற்கான கால வளவை ஆராய. துரகணை – தூவும் கணகள். மாக்கண் – கரிய கண்ணிடம். கைவல் – தொழிலில் வல்லவரான். கையலை அமுங்க – கையால் அறையப்படுதலற்று ஒய்ந்து போக. மாயிரும் கூற்றம் – கொலைத் தொழிலிலே மிகப் பெரிய வன்மையுடையதான கூற்றம். வலைவிரித்தல் – உயிர்ப் பறவைகளைப் பற்றற்கு வேடன் புள்ளினத்தைக் கவர வலை விரித்தான், கூற்றுவன் உயிர்களை ஒருங்கே கவர வலை விரித்தாற்போல என்க. நேர்க்கலை – நோக்கத்தை உடையை; முற்றெச்சம். நோக்கமே வலையாயிற்று; அதன் எல்லைக்குட்பட்ட பகைவர் தப்புதல் அரிது என்பதும் ஆம்.
52. சிறு செங்குவளை !
துறை : குரவைநிலை. வண்னம்: ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : சிறு செங்குவளை.
[பெயர் விளக்கம் : ‘அவள் நின்று நின்னை எறிதற் பொருட்டாக ஒக்கிய சிறு செங்குவளை‘ எனக் கூறிச், ‘சிறு’ என்னும் சொல்லால், அவளது மென்மைத் தன்மையை நுட்பமாகப் புலப்படவைத்த சிறப்பால், இப் பாடல் இப் பெயரைப் பெற்றது.
இதனாற் சொல்லியது : சேரலாதனின் கைவண்மையும், வென்றி மேம்பாடும் அவற்றோடு இணைந்த இன்பச் செவ்வியும் ஆம்.
துணங்கையாடுதல் காரணமாகப் பிறந்த ஊடலின் பொருளைத் கொண்ட பாட்டு இது; ஆதலால் துறை ‘குரவை நிலை’ ஆயிற்று.]
கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி
அருங்கலந் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் திசைதிரிந் தாங்கு
மையணிந்து எழுதரு மாயிரும் பல்தோல்
மெய்புதை அரணம் எண்ணாது எஃகுசுமந்து
முன்சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க
உயர்நிலை உலகம் எய்தினர் பலர்பட
நல்லமர்க் கடந்தநின் செல்லுறழ் தடக்கை 1O
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய
மலர்பறி யாவெனக் கேட்டிகும் இனியே
சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து
முழாஇமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை யாகச்
சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்துநீ 15
நளிந்தனை வருதல் உடன்றன ளாகி
உயவும் கோதை யூரலந் தித்தி
ஈரிதழ் மழைக்கண் பேரியல் அரிவை
ஒள்ளிதழ் அவிழகம் கடுக்கும் சீறடிப்
பல்சில் கிண்கிணி சிறுபரடு அலைப்பக் 20
கொல்புனல் தளிரில் நடுங்குவனள் நின்றுநின்
எறியர் ஒக்கிய சிறுசெங் குவளை
ஈயென இரப்பவும் ஒல்லாள் நீஎமக்கு
யாரை யோஎனப் பெயர்வோள் கையதை
கதுமென உருத்த நோக்கமொடு அதுநீ 25
பாஅல் வல்லா யாயினை பாஅல்
யாங்குவல் லுநையோ? வாழ்கநின் கண்ணி!
அகலிரு விசும்பில் பகலிடம் தரீஇயர்
தெறுகதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று
உருபுகிளர் வண்ணம கொண்ட 30
வான்தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே.
தெளிவுரை : கொடிகள் அசையும் நிலையுடையவும், எதிர்ப்பட்ட பகைவரைக் கொல்லும் சினமுடையவுமான களிறுகள்,செறிவோடு பகைப்படைகளை நோக்கி ஒருபுறமாகச் சென்றன. வடித்த மணிகளையுடைய நெடுந்தேர்கள் வேறு பக்கங்களிற் பரவலாகச் சென்றன. பகைப் படையணிகளை ஊடறுத்துச் செல்லும் இவை, அருங்கலன்களைத் தருதற் பொருட்டாகக் கடலின் மேலாக மிதந்து செல்லும் பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல்களைப்போலத் தாந்தாம் திசை திரிந்தவாய்ச் சென்று கொண்டிருந்தன. கருமை நிறத்தை மேற்கொண்டு எழுதலையுடைய மிகப்பெரிய பலவான கேடகங்களுடன், வேலும் வாளும் ஏந்திக் கொண்டவராக, முன்னணிப் போரிலே ஈடுபட விரும்பி எழுந்தாரான வன்கண்மையுடைய படைமறவர்கள், தம் மெய்யை மூடும் கவசங்களைப் பற்றி நினையாதவராக, அவையின்றியே பகைப்படையணிகளை ஊடறுத்துச் சென்றனர். நோலாமைக்கு ஏதுவாகிய அவர்களது தும்பை மாலைகள், பகைப் படையணிகளின் இடையிடையே விளங்கித் தோன்றின. அதனால் வீழ்ந்துபட்ட பகைமறவர் பலரும், உயர்நிலை உலகத்தை அடைந்தனர். இவ்வாறு அறநெறியோடு பொருந்திய நற்போரைச் செய்து மேம்பட்டவன் நீ. “இடியினும் மாறுபட்டதான நின் பெரிய கையானது, இரப்போர்க்கு ஈதலின் பெரிய கையானது, இரப்போர்க்கு ஈதலின் பொருட்டாக மட்டுமே கவியும்; அன்றிப் பிறரை இரத்தற் பொருட்டாக என்றும் மலர்தலை அறியாதது என்று, சான்றோர் உரைக்கக் கேட்டுள்ளேம், பெருமானே!
இனியே,
ஒளிர்கின்ற கால்விளக்கின் செல்வம் விளங்கும் ஒளியிலே, முழக்கிற்கு ஏற்பத் துணங்கைக் கூத்து ஆடுகின்ற மகளிர்க்குக் கைகோத்தாடும் புணையாக, சிலைத்தலையுடைய வலிய கொல்லேற்றைப் போலத் தலைக்கை தருதலையும் செய்வாய். நீ தான் அம் மகளிரோடு செறிந்து ஆடிவரு வோனாயினை! அசைகின்ற கோதையினையும், பரந்த அழகுத் தேமல் புள்ளிகளையும், குளிர்ந்த இமைகள் பொருந்திய இருண்ட கண்களையும், பெரிய இயல்பினையும் உடையாளான நின் தேவியானவள், நின் துணங்கையாட்டத்தைக் கண்டு நின்பால் ஊடல்கொண்டனள். ஒள்ளிய இதழ்விரிந்த தாமரைப் பூவைப் போன்ற தன் சிற்றடிகளிலே அணிந்துள்ள பல மணிகளைக் கொண்ட இரு சதங்கைகளும், தன் சிறுபரடுகளே வருத்துமாறு கால்கள் நடுங்கக், கரையழிக்கும் நீர்ப்பெருக்கிலே பட்டு வருந்தும் தளிரைப்போல நடுங்கியவளாக நின்றபடி, நின்னை எறிதற்காகப் சிறிய செங்குவளை மலரினை ஒச்சினாள். அதனைக் கண்ட நீதான், அதனைத் தருக என்றபடி நின் கைகளை விரித்தாயாய் இரந்து நின்றனை. அந்த நின் செயலாலும், அவள் தன் சினங் குறையாதாளாயினள். அம் மலரை நினக்குத் தராதவளாக, ‘நீதான் எமக்கு எவ்வுறவினை உடையையோ?’ என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டுச் செல்லலானாள். அவள்கையிடத்தேயே அச் செங்குவளை மலரும் விளங்கிற்று.
திடுமெனக் கோபித்த பார்வையோடு சென்று, அக் குவளை மலரை அவள் கையினின்றும் பறித்துக் கைப்பற்றிக் கொள்ளுதற்கு, வல்லமை இல்லாதவனாக நீயும் அவ்வேளையில் ஆயிருந்தனை!
அகன்ற பெரிய வானத்தே பகற்காலத்திற்கு இடமுண்டாதலின் பொருட்டாகச், சுடுகின்ற கதிர்களைப் பரப்பி விளங்கும் அச்சம் பொருந்திய ஞாயிற்றினுடைய உருவத்தையும், விளங்குகின்ற வெண்மை வண்ணத்தையும் கொண்ட வெண்கொற்றக் குடையினையுடைய வேந்தர்களின், வானளாவ உயர்ந்த கோட்டை மதில்களைக் கைப்பற்றிக் கொள்ளுதற்கு, நீதான் எவ்வாறு வல்லமை உடையை யாயினையோ? நின் கண்ணி வாழ்வதாக, பெருமானே!
சொற்பொருளும் விளக்கம்: கொடியேந்திப் பகைப் படையணிகளூடாகப் புகுந்து ஊடறுத்துச் செல்லும் களிறுகட்கும் தேர்கட்கும் கடலிடையே திசை திரிந்து செல்லும் கலங்களை உவமை கூறினர். திசை திரிந்தாலும், அவை செல்லும் திசைக்கே முடிவிற் சென்று சேர்வதுபோல, இவையும் பகைப் படியணிகளைச் சிதைத்தபின் மீண்டும் ஒன்றுகூடும் என்பதாம். ’களிறு மிடைந்து’ என்றது, அவை பகைப்படைக் களிறுகளைத் தாங்கிச் செறித்து அழித்து என்றது ஆம். ‘ஊர்ந்த தேரே, சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த கடுஞ்செலற் கொடுந்திமில் போல (அகம்.330) எனப் பிற சான்றோரும், தேர்ச்செலவைக் கடலிடைச் செல்லும் கலங்களின் செலவுக்கு ஒப்பிடுவர். இதனாற் கடல்போற் பெரும்படை உடைய பகைவர் என்பதும் பெறப்படும். நுடக்கம் – அசைவு. நிலைய – நிலைகளையுடைய. மிடைந்து – செறிந்து வடிமணி – வார்த்தமைந்த மணி. அருங்கலம் – நம் நாட்டில் கிடைத்தற்கரிய அணிகலம். நிவத்தல் – மிதத்தல். வங்கம் – கப்பல்கள். மை – கருமை. தோல் – கிடுகு: கேடகம். மெய் புதை அரணம் – கவசம். எஃகு – வேலும் வாளும் பிறவும். வன்கண் ஆடவர் வன்கண்மை உடையரான மறவர்; அவர் மெய்புதை அரணம் எண்ணாது எழுந்தது, அவர்தம் ஆற்றலிற் கொண்ட உறுதிப்பாட்டினால். தும்பை – தும்பை மாலை. எவ்வழி – எவ்வழியும், எப்புறமும். ‘தும்பை வழி விளங்க’ என்றது, பகைப்படை மறவர்கள் பட்டு வீழ்ந்தனர் என்றதாம். ‘உயர்நிலை உலகம் எய்தினர் என்றது, அவரும் மறப் போராற்றி மாண்டனர் என்றதாம்; இதனால் அவர்க்கும் அருளிச்செய்த அருளுடைமை தோன்றக் கூறினர். நல்லமர் – நற்போர்; இது எதிர் நின்று பொருது வெற்றி பெறும் போர்; சூழ்ச்சித் திறனால் பகைவரை அழிப்பதன்று. செல் – இடியேறு; போரில் நாகமனைய கொடிய பகைவரைத் தன் கைத்திறனால் வென்றமை தோன்றச் ’செல்லுறழ் தடக்கை’ என்றனர். ’ஈயக் கவிதலன்றி, ஏற்க மலராத கை’ என்று அவனுடைய வலிமையைக் கூறினர்.
பாண்டில் – கால்விளக்கு. திரு நாறு விளக்கம் – செல்வ நலம் தோன்றுமாறு காட்டும் விளக்கொளி. துணங்கை – ஆடவரும் மகளிரும் கைகோத்தாடும் ஒருவகைக் கூத்து. தழூஉப் புணையாக – கைகோத்தாடும் துணையாக. சிலைப்பு – முழக்கம். தலைக்கை தரல் – முதற்கை தருதல்; இது மரபு. நளிந்தனை வருதல் – கைகோத்தாடிய அப் பெண்ணுடன் நெருங்கிச் சேர்ந்தபடி ஆடிவருதல். உயவுங் கோதை – அசையும் தலைமாலை. ஊரல் – படர்தல். தித்தி – தேமற் புள்ளிகள். ‘ஒள்ளிதழ் அவிழகம் கடுக்கும் சீறடி’ என்றது. அவளது மென்மையினை விதந்து கூறியதாம். கிண்கிணி -சதங்கை. அது பரட்டை வருத்தல், அவள் நிலைகொள்ளா தாளாகச் சுழன்று அங்குமிங்கும் நடத்தலால். உடலுதல் – சினங் கொள்ளல்; இங்கே ஊடற் சினம். ‘அரிவை’ என்றது சேரமா தேவியை. அவள் வருந்தி நெஞ்சழிந்த நிலைக்குச் செல்புனலிடைச் சிக்கி அலமரும் தளிரினை உவமித்தனர்; அத்துணை அவலங்கொண்டு கலங்கினாள் என்பதாம். எறியர் – எறியும் பொருட்டாக. சிறுசெங்குவளை – சிறிய செங்குவளை மலர்; இது தலைக் கோதையினின்றும் எடுத்துக் கொண்டதாகலாம். அதனைக் கண்டவன், அவள் சினத்தைத் தணிவிக்கும் பொருட்டு. ‘ஈ’ என இரந்து நின்றனன். அவளோ, அதனைத் தன் புதிய காதலிக்குத் தருதற்குக் கேட்பான்போலும் எனக் கருதியவளாக, அதனையும் தாராளாயினள். அங்கு நிற்கவே விரும்பாதவளாக, அவ்விடம் விட்டு அகன்றும் போயினள் என்க. ’நடுங்குவனள்’-முற்றெச்சம்: நடுங்குதற்குக் காரணம், சேரலாதன் துணங்கை மகளோடு நளிந்தவனாக ஆடிவருதலைக் கண்டதனால் உற்ற ஊடற் சினம்.
திடுமென – விரைய. உருத்த நோக்கம் – கோபித்த பார்வை. ‘வல்லாய் ஆயினை’ என்றது, அதனைக் கைப்பற்றின் அவள் சினம் மேலும் மிகுதலறிந்து, அவள்பாற் கொண்ட காதலால், அவளுக்குத் துன்பம் இழைக்காதபடி: அவளைப் போகவிடும் மென்மை உடையவனாயினன் என்பதாம். இந்த ’வல்லமை’, அருளால் அன்புடையார் செய்யும் பிழையைப் பொறுத்தலைச் செய்யும் அவனது எளிமையைக் கூறிய தாம். இனிப் ‘பிறர்பால் இரந்தறியாத நீதான் இரந்து வேண்டியும் அவள் மறுத்தனள்; அதுகண்டும் நீ சினவாயாயினை’ என, அவனது பொறுமையும் அவர்களது காதற் பெருக்கமும் தோன்றக் கூறியதுமாம்.
’ஞாயிற்று உருபு கிளர் வண்ணம் கொண்ட வெண்குடை வேந்தர்’ என்றது பகைவேந்தரை. அவர்தாம் பகைவரைத் தெருதலில் இருளைக்கடியும் ஞாயிற்றைப் போன்ற தேயாத வன்மையுடையவர் என்று குறித்தற்காம். அத்தகையாரது வான்தோய் எயிலும் கொண்டது சேரலாதனின் மேம்பட்ட மறமாண்பை விளக்கும்.
53. குண்டுகண் அகழி!
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: குண்டு கண் அகழி. இதனாற் சொல்லியது: அடைந்தார்க்கு அருளுதலும் அவன் வென்றிச் சிறப்புமாகிய செய்திகள்.
[ ‘கோள் வல் முதலைய’ என்னும் அடைச்சிறப்பால் இச்செய்யுட்கு இது பெயராயிற்று.]
வென்றுகலம் தரீஇயர் வேண்டுபுலத்து இறுத்து அவர்
வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப
நல்கினை யாகுமதி எம்மென்று அருளிக்
கல்பிறங்கு வைப்பின் கடறுஅரை யாத்தநின்
தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயின் 5
செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்
கோள்வல் முதலைய குண்டுகண் ணகழி
வானுற ஓங்கிய வளைந்துசெய் புரிசை
ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி 10
நின்னின் தந்த மன்னெயில் அல்லது
முன்னும் பின்னும்நின் முன்னோர் ஓம்பிய
எயில்முகப் படுத்தல் யாவது? வளையினும்
பிறிதுஆறு செல்பதி! சினங்கெழு குருசில்!
எழுஉப்புறந் தரீஇப் பொன்பிணிப் பலகைக் 15
குழூஉநிலைப் புதவின் கதவுமெய் காணின்
தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி
வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்
ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி
மேம்படு வெல்கொடி நுடங்கத் 20
தாங்க லாகா ஆங்குநின் களிறே.
தெளிவுரை: பகைத்தோரது நாட்டை வென்று, அவருடைய அரிய கலன்களைக் கொணர்தலின் பொருட்டாகச் செல்லக் கருதிய நாட்டிடத்தே சென்று நீயும் தங்குவாய். அவ்வண்ணம் நீதான் சென்று தங்கிய காலத்தே, அப் பகைவர் நினக்கு அஞ்சியவராக நின்னைப் பணிந்து, ‘எமக்கும் அருள் செய்தவனாக விளங்குக, பெருமானே’ என்று கூறிய படி, குன்றாத புதுவருவாயுடைய தம் நாட்டையே நினக்குத் திறையாகக் கொடுப்பர். நீதான் அவர்க்கு அருள் செய்தாயாய், அவர் கொடுத்த செல்வங்களைப் பெற்று, அவர் நாட்டை அவர்க்கே தந்துவிட்டு, மலைகள் விளங்கும் நாட்டகத்தே யுள்ளதும், காடு சூழ்ந்துள்ளதுமான, பழம் பெருமையுடைய நின் மூதூர்க்குச் செல்லத் தொடங்குவாய். அவ்வாறு செல்வாயாயின்,
செவ்வையான மூட்டுவாய் அமைந்த சிலம்புகளோடு, அணியாகத் தொகுக்கப்பெற்ற தழையாடையும் தூங்கிக் கொண்டிருப்பதும், எந்திரப் பொறிகளாலே காக்கப் பெறுவதும், அம்புகளைடைய கோட்டை வாயில்; வீழ்ந்தவரைப் பற்றி உணவாக்கிக் கொள்ளும் முதலைகளையுடைய ஆழமும் அகலமும் கொண்ட அகழி; வளைவு வளைவாகக் கட்டப்பெற்று வானளாவ உயர்ந்து விளங்கும் மதில்; இவற்றை உடையது இக்கோட்டை. இதுதான் மனம் பொருந்தாதாராக வந்துமுற்றிய பகையரசரது போர்முனை கெடுமாறு குறுகிட்டதாய், நின்னாற் கைக்கொண்டு தரப் பெற்ற துணையரசரின் எயிலாகும். அன்றியும், நின் முன்னோர்கள் முன்னும் பின்னும் தொடர்ந்து காத்துவந்த கோட்டையுமாகும்; அதனாலே நின் படையணிகளை இதற்கு நேராகச் செலுத்துதல்தான் யாதாய் முடியும்? எண்ணி யருள்க!
சினம் பொருந்திய தலைவனே! நேராகச் செல்வதன்றிப் பிறிதொரு வழிதான் வளைந்து நீளுமாயின், அப் பிறிதொரு வழியாகவே நீயும் செல்வாயாக. நேராகச் சென்றால், கணைய மரத்தால் பின்பக்கம் வலிமை சேர்க்கப் பெற்று, இரும்பாணி களாலே இறுகப் பிணிக்கப் பெரிய பலகைகளால் அமைக்கப் பெற்ற, பற்பல நிலைகளையுடைய கோட்டைக் கதவுகளைப் புள்ளியமைந்த நெற்றிகளையுடைய நின் களிறுகள் மெய் பெறக்காணலும் நேரும். அவ்வாறு, மெய்பெற நேரிற் காணின், வண்டினம் பாய்ந்துண்ணும் மதநீர் ஒழுக்கோடு, பாகரின் குத்துக் கோலைக் கடந்து சென்று, வேங்கை மரத்தைப் புலியென மருண்டு சென்று தாக்கியழித்தலினாலே வடுப் பட்டு விளங்கும் புள்ளியமைந்த நெற்றிகளையுடைய நின் போர்க்களிறுகள். உயர்ந்த தம் கைகளைச் சுருட்டியபடி, பாகரேந்தும் தோட்டியையும் மதியாது சென்று, தம் மேலாக மேம்பாட்டுடன் விளங்கும் வெற்றிக் கொடியானது அசைந்தாடுமாறு, அம் மதிற்கதவுகளை மோதிச் சிதைக்கத் தொடங்கும். அவ்வேளை, அவற்றை அடக்குதல் இயலாது. பெருமானே!
சொற்பொருள் விளக்கம்: கலம் – அணிகலம் முதலாம். செல்வம். தரீஇயர் – கொணரும் பொருட்டாக. வேண்டு புலம் – செல்லுதற்கு விரும்பிய நாடு. இறுத்து -தங்கி. வாடா யாணர் நாடு – குன்றாத புது வருவாயினை உடைய நாடு. நல்கல் – அருள் செய்தல். கல்பிறங்கும் – மலை விளங்கும். வைப்பு – நாட்டுப்பகுதி. கடறு – காடு. அரை யாத்த – சூழ்ந்துள்ள. தொல்புகழ் – பழைய புகழ். மூதூர் – தொன்னகரம்; வஞ்சி. பகைவர் நாட்டை “வாடா யாணர் நாடு” என்று சிறப்பித்தது, அச் செல்வ வளத்தாலே செருக்கிச் சேரனைப் பகைத்தவர் அவர் என்பதற்காம்; அதனை யறிந்தவன் அவர் செருக்கழிந்தாராய்ப் பணிந்துபோக, அவர் தந்த திறையைக்கொண்டு, அவர்க்கு நட்பு அருளித் திரும்பினான் என்று கொள்க. இப்பொருளை ஏற்றார்க்கு இனிது வழங்குவானாதலின் ’ஈதற் பொருட்டாகவே இப் படையெழுச்சி’ என்றும் கொள்ளலாம். அரையிற் கட்டிய துணி உடலைச் சூழக் கிடந்து காத்தாற்போலச் சூழ்ந்து விளங்கிக் காத்தலின் ‘கடறு அரையாத்த’ என்றனர். ’கடல்பிறங்கு வைப்பின் மூதூர்’ ஆதலானும், ’கடறு அரை யாத்த மூதூர்’ ஆதலானும், சிறந்த காப்புடைய பேரூர் என்பதும், அழிவற்றுத் தொடர்ந்து நெடுங்காலமாக நிலவிவரும் மூதூர் என்பதும் கூறினார். ‘நல்கினை யாகுமதி எம்’ என்றது, அவ்வரசரை அழிக்க ’வெகுண்டு வந்தவனாதலின்’, தமக்கு வாழ்வருளிக் காக்குமாறு வேண்டினர் என்றதாம்.
செம்பொறி, – சிறப்பாகப் பொறிக்கப்பெற்ற சிலம்பின் மூட்டுவாய். கோட்டை வாயிலில் வெற்றித் திருமகளின் நினைவாகத் தம் வெற்றிச் செய்திகள் பொறித்த சிலம்புகளையும், தழையாடையும் புனைந்த பாவை ஒன்றனையும் தொங்க விடுவது பண்டைய மரபு என்பர். இனி, முற்றவரும் பகைவர்க்கு அறைகூவலாக, ‘எம்மை எதிர்ப்பார் யாருமிலர்? அனைவரும் சிலம்பும் தழையுடையும் கொள்ளும் மகளிரே’ என அறிவிப்பதன் சின்னமாக இப்படிப் பாவையைத் தூங்க விடுவதும், மதிலைப் பொருதும் பகைவர் முதற்கண் அதனை அறுத்து வீழ்த்திய பின்னரே போர் தொடங்குவர் என்பதும் பண்டை மரபாகும் என்பர். ‘எந்திரத் தகைப்பு’ என்றது, பகைவரைத் தாமே தாக்கியழிக்கும் காவற்பொறிகள். அம்புடை வாயில் -புதையம்புகளையும், கோட்டைக் கதவம் திறந்து உட்புகும் பகைவர்மீது தாமே சென்று பாயும் அம்புகளையும் உடைய வாயில்; இது புறமதிலின் சிறப்புக் கூறியது. இதனையடுத்துக் கிடப்பது புறமதிலின் ’கோள்வல் முதலைய குண்டுகண் அகழி’ யாகும். ‘கராஅங் கலித்த குண்டுகண் அகழி ’எனப் புறப்பாட்டுக் (புறம் 37) கூறுவதும் காண்க. குண்டு – ஆழத்தையுடைய. கண் – அகன்ற இடத்தையுடைய. அகழி – அகழ்ந்தமைந்த, கோட்டைக்குள் கிடங்கு. ’வளைந்து செய் புரிசை’ என்றது, இடையிடையே வீரர் நின்று போரிடற்கு ஏற்ற வளைவுகளுடன் அமைக்கப் பெற்ற கோட்டையினை. முனை – போர்முகம். விலங்கி – குறுக்கிட்டு. மன்னுதல் – நிலைபெறுதல். எயின் முகப் படுத்தல் – கோட்டைக்கு நேராகச் செல்லுதல். ‘யாவது – எதனாலோ? என்றவர், அடுத்து அதனை மறுத்ததற்கான காரணத்தை உரைக்கின்றார்.
’சினங்கெழு குரிசில்’ என்றது, நகைவர் பணிந்து திறை தந்த பின்னரும் தணியாத சினத்துடன் சென்று கொண்டிருந்தவன் சேரன் என்பதாம்; இது பகைவர் முன்னர்ச் செருக்கியிருந்த நிலைகளை நினைதலால் ஏற்பட்டதாம்; அவர் பணிந்து திறை தந்ததன் பின்னரும், அவன் கொண்ட பெருஞ் சினம் தணிந்திலது என்பதாம். குரிசில் – தலைவன். வளையினும் – சுற்றி வளைத்தவாறு செல்லினும். செல்மதி – செல்வாயாக. எழு – கணையமரம். பொன் – இரும்பு. குழூஉநிலை – குழுமிய நிலை; நிலை – வாயிற்படி. புதவு – வாயில். தேம் – வண்டினம். கைநீவி – கைகடந்து. வேங்கை வென்ற – வேங்கை மரத்தை மோதிச் சாய்த்த. பொறி – புள்ளி; வடுவு மாம். கிளர்தல் – விளங்குதல். புகர் – புள்ளி. தோட்டி யானையைச் செலுத்தும் அங்குசம்; தோட்டி காவலும் ஆம்; அப்பொழுது ’தோட்டி நீவி’ என்பதற்குக் ‘கோட்டைக் காவலர்களது எதிர்ப்பையும் கடந்து சென்று’ எனக் கொள்க. தாங்கலாகா – தடுத்தற்கு இயலாத.
‘வேங்கை வென்ற பொறிகளர் புகர்நுதல்’ என்பதற்கு, ‘நிறத்தால் வேங்கை மலரை வென்ற புள்ளிகள் விளங்கித் தோன்றுகின்ற நெற்றி’ எனவும் கொள்வர். ‘புகர் நுதல்’ வாளா பெயர் மாத்திரையாய் நின்றது எனவும் கூறுவர்.
54. நில்லாத் தானை !
துறை: காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: நில்லாத் தானை. இதனாற் சொல்லியது: அவன் கொடைச் சிறப்பும் தம் குறையும் கூறி வாழ்த்தியவாறு
[பெயர் விளக்கம்: ‘காலாள் முதலாயினவற்றைத் தர மல்ல வென்று கழித்துநின்று, யானை காணின் நில்லாது மேற்செல்லும் தானை’ என்று கூறிய சிறப்பால், இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.]
வள்ளியை என்றலின் காண்குவந் திசினே :
உள்ளியது முடித்தி! வாழ்கநின் கண்ணி!
வீங்கிறைத் தடைஇய அமைமருள் பணைத்தோள்
ஏந்தெழில் மழைக்கண் வனைந்துவரல் இளமுலைப்
பூந்துகில் அல்குல் தேம்பாய் கூந்தல் 5
மின்னிழை விறலியர் நின்மறம் பாட
இரவலர் புன்கண தீர நாள்தொறும்
உரைசால் நன்கலம் வரைவில் வீசி
அனையை யாகல் மாறே எனையதூஉம்
உயர்நிலை உலகத்துச் செல்லாது இவணின்று 10
இருநில மருங்கின் நெடிதுமன் னியரோ!
நிலம்தப இடூஉம் ஏணிப் புலம்படர்ந்து
படுகண் முரசம் நடுவண் சிலைப்பத்
தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்
ஏவல் வியங்கொண்டு இளையரொடு எழுதரும் 15
ஒல்லார் யானை காணின்
நில்லாத் தானை இறைகிழ வோயே
தெளிவுரை: பகைத்தோரது நிலப்பரப்புக் குறைவு படுமாறு, அவரது நாட்டகத்தே செல்வாய்; அவர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிற் பாசறைகளை அமைப்பாய்; ஒலிக்குங் கண்ணையுடைய போர்முரசமானது அப் பாசறைகளின் நடுவே அமைந்திருந்து முழங்கும்; அம் முழக்கம் படை மறவரை ஏவ, அதனைக் கேட்ட அம் மறவரும் தம் வலக்கைகளில் தண்டுகளை ஏந்தியவராகப், பகைவர்க்கு அச்சத்தைச் செய்யும்பொருட்டு எழுவர். அம் முரசொலியின் ஏவலை மேற்கொண்டவராக அவர் பகைவரை நோக்கிச் செல்வர். இளையவரான மறவர் துணையோடு போர்க்கெழுந்த பகைவேந்தரின் யானைப்படையைக் கண்டால், நொடிப் பொழுதேனும் நில்லாது சென்று, அவற்றைத் தாக்கி யழிப்பர். அத்தகைய மறத்தையுடைய தானைக்கு அரசனாக விளங்கும் உரிமையினை உடையோனே!
நீதான் வள்ளன்மை உடையை என்று சான்றோராற் பாராட்டிக் கூறப்படுதலினாலே, யானும் நின்னைக் காணற் பொருட்டாக வந்துள்ளேன். யான் கருதியதையும் முடித் தருள்வாயாக. நின் கண்ணி வாழ்வதாக.
அகன்ற சந்து பொருந்திய வளைகளணிந்த, பெருத்த மூங்கிலைப் போலும் பருத்த தோள்களையும், உயர்ந்த அழகினையுடைய குளிர்ச்சி பொருந்திய கண்களையும், தொய்யில் எழுதப்பெற்றுப் பூரித்து வருதலையுடைய இளங் கொங்கைகளையும், பூத்தொழில் விளங்கும் துகில் பொருந்திய அல்குற் பகுதியையும், வண்டினம் மொய்க்கும் கூந்தலையும், மின்னலிடும் அணிகளையும் கொண்டோர் விறலியர். அவர் தாம் நின் போர்மறத்தைப் போற்றிப் பாடுவர். அதனைக் கேட்டாயான நீயும் அவ்விறலியருக்கும், அவரோடு சேர்ந்த பாணர் முதலாயின பிற இரவலருக்கும் அவரது வறுமைத் துயரம் முற்றத்தீருமாறு, புகழமைந்த நல்ல அணிகலன்களை நினக்கெனப் பேணி வையாது, நாள்தோறும் வழங்கியபடி இருப்பாய். நீதான் அத் தன்மையினன்! ஆதலினாலே, எத்துணைச் சிறிதளவு காலமேனும் துறக்கமாகிய உலகினுக்குச் செல்லாதவனாக, இந்த அரச வாழ்விலேயே நிலை பெற்றிருப்போனாக, இப்பெரிய உலகினிடத்தேயே நீயும் நெடுங்காலம் வாழ்வாயாக!
சொற்பொருளும் விளக்கமும்: தப – குறைய. ஏணி எல்லை. படர்ந்து – சென்று. படுகண் – ஒலிக்கும். கண்ணிடம். ‘நடுவண்’ என்றது பாசறைகளின் நடுவிடம் என்றவாறாம். சிலைத்தல் – முழங்கல். தோமரம் – தண்டாயுதம். நாமம் அச்சம். செய்ம்மார் – செய்வதற்காக; மாரீற்று முற்று. ஒல்லார்- பகைவர். ‘நாமம் செய்ம்மார்’ என்றது, படையொடு வரும் பகைவருக்குத் தம் மறமாண்பு புலப்படச் செய்தபடி என்றதாம். இது பிற படைகளை ஒதுக்கி, முதற்கண் யானைப் படை புகுந்ததனைக் குறித்துக் கூறியதுமாம். வியம் – ஏவல்.
வள்ளலாவார், ‘முன்னம் முகத்தின் உணர்ந்து அவர் இன்மை தீர்த்தலை’ இயல்பாக உடையராதலின், ‘உள்ளியது முடித்தி’ என்றனர். முடித்தி – முன்னிலை ஏவல் வினை.
வீங்கு இறை – பெருத்த சந்துப் பகுதி. தடைஇய – பருத்த. அமை – மூங்கில். ஏந்தெழில் – உயரிய அழகு. வனைந்து வரல் – பூரித்து எழுதல். மின்னிழை – மின்னலிடும் அணி வகைகள். புன்கண் – வறுமைத் துயரம். வரைவில் – தனக்கெனப் பேணி வைத்தல் இல்லாது. மன்னியர் – நிலை பெறுவாயாக.
- துஞ்சும் பந்தர் !
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: துஞ்சும் பந்தர். இதனாற் சொல்லியது: சேரன் உலகு காத்தலும், தன் குறையும் கூறி வாழ்த்தியது.
[பெயர் விளக்கம்: நன்கல வெறுக்கை துஞ்சும் என்ற சிறப்பால் இதற்குத் ‘துஞ்சும் பந்தர்’ என்பது பெயரா யிற்று.]
ஆன்றோள் கணவ! சான்றோர் புரவல!
நின்னயந்து வந்தனென்; அடுபோர்க் கொற்றவ!
இன்னிசைப் புணரி இரங்கும் பௌவத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்
கமழும் தாழைக் கானலம் பெருந்துறைத் 5
தண்கடல் படப்பை நன்னாட்டுப் பொருந
செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை
வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை!
குடவர் கோவே! கொடித்தேர் அண்ணல்
வாரா ராயினும் இரவலர் வேண்டித் 10
தேரின் தந்துஅவர்க்கு ஆர்பதன் நல்கும்
நசைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்
வேண்டுவ அளவையுள் யாண்டுபல கழியப்
பெய்துபுறந் தந்து பொங்க லாடி
விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் 15
சென்றா லியரோ பெரும! அல்கலும்
நனந்தலை வேந்தர் தாரழிந்து அலற
நீடுவரை அடுக்கத்த நாடுகைக் கொண்டு
பொருதுசினம் தணிந்த செருப்புகள் ஆண்மைத்
தாங்குநர்த் தகைத்த ஒள்வாள் 20
ஓங்கல் உள்ளத்துக் குருசில்நின் நாளே!
தெளிவுரை: பெண்மையின் மாண்புகளாலே நிரம்பிய நங்கையின் கணவனே! சான்றோரைக் காத்துதவும் தலை வனே! நின்னைக் காண்பதனையே விரும்பி வந்தேன். பகைவரைக் கொல்லும் போரைச் செய்கின்ற கொற்றவனே! இனிதாக ஒலித்தலைச் செய்யும் அலைகள் ஒலிசெய்கின்ற, கடல் வழியாக வந்த நல்ல கலன்களாகிய செல்வம் தொகுக்கப்பெற்றுக் கிடக்கும் பண்டசாலைகள் பொருந்திய, தாழைப் பூவினது நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும் கானற் சோலையிடத்தமைந்த பெருந்துறையினைக் கொண்ட, தண்ணிய கடற்கரைப் பகுதியாகிய நல்ல நாட்டின் தலைவனே! தன்னிற் கலந்த சிவந்த ஊன்கறி தோன்றாவாறு நன்றாக அரைக்கப்பெற்ற துவரையின் வெண்மையான துவையலையும், வெள்ளூன் கலந்த சோற்றையும் உண்ணும் மழவர்க்கு, மெய்புகு கவசத்தைப் போன்றவனே! குடநாட்டாரின் கோமானே! கொடி விளங்கும் தேரையுடைய அண்ணலே!
நின் நாட்டில் வறுமை யாதும் இல்லாமையாலே நின்னை நாடி இரந்து நிற்பவர் வாராது போயினும், ஈத்து உவக்கின்ற அந்த இன்பத்தை விரும்பியவனாகப், பிற நாட்டின் கண் உள்ளாரைத் தேரேற்றிக் கொணர்ந்து, அவர்க்கு மிகுதியான உணவைக் கொடுத்து ஆதரிக்கும், கேட்டார் மீளவும் கேட்டலை விரும்பும் வாய்மொழியினையுடைய, புகழமைந்த தோன்றலே!
பெருமானே! அகன்ற இடத்தை உடையவரான பகை வேந்தர்கள் தம் தூசிப் படைகள் அழிந்து போதலினாலே ஆற்றாதாராய்ப் புலம்ப, நெடிய மலைப்பக்கத்தைச் சார்ந்திருந்த அவர்தம் நாடுகளையெல்லாம் கைப்பற்றி, அதன் பின்னரே அவரைப் பொருதும் சினம் தணிந்தவனாகிய, போரை விரும்பும் ஆண்மையையும், எதிர்வந்து தடுக்கும் பகைமறவரை அழித்த ஒள்ளிய வாளையும், ஊக்கமிக்க உள்ளத்தையும் உடையவனாகிய குருசிலே!
நின்னுடைய வாழ்நாள், வேண்டிய கால அளவினுள்ளாக, யாண்டுகள் பலவாகக் கழிய, மழையைப் பெய்து உயிர்களைக் காத்துப் பின்னர் மேலோங்கிப்பறக்கும் பிசிராய்க் கழிந்து, மலையுச்சியைச் சேர்ந்த வெண்மேகத்தைப் போலச் சென்று கெடாது ஒழிவதாக, பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும்: ஆன்றோள் – பெண்மை நலன் எல்லாம் அமைந்தவள்; அவள் சேரமாதேவி. மான்றோர்- பெரியோர்; போரியல் பிறழா மறவரும் ஆம். புரவலன் – புரத்தலின் வல்லவன். கொற்றவன் – கொற்றத்தை உடையவன்; கொற்றம் – வெற்றி. புணரி – அலை. இரங்கும்- ஒலிக்கும். பௌவம் – கடல். வெறுக்கை – செல்வம். பந்தர் பண்டகசாலை. துஞ்சும் – தொகுக்கப் பெற்றுக் கிடக்கும். கானல் – கானற் சோலை. படப்பை – சார்ந்துள்ள நிலப்பகுதி. பொருநன் – நெய்தல் தலைவன். முதிரை – துவரை முதலாயின. ’அரைத்துக் கரைத்தமையில் செவ்வூன் தோன்றாத் தன்மையடைந்த வெள்ளிய பருப்புத் துவையல்’ என்பார், ‘செவ்வூன் தோன்றா முதிரை வெண்துவை’ என்றனர். மழவர் – மழகொங்கு நாட்டார். ’வாலூன் வல்சி மழவர்’ என்றது, வெள்ளூனையே உணவாகக் கொள்ளும் மழவர் என்றதாலும் ஆம்; சோற்றினும் மிகுதியாக ஊனை உண்பவர் என்று கொள்க. மெய்ம்மறை கவசம். குடவர் – குட நாட்டார். கோ- தலைவன். அண்ணல் – பெருமையாற் சிறந்தவன். தேரின் – தேர் மூலமாக. ஆர்பதன் – மிகுந்த உணவு. நகைசால் – விருப்பத்தை மிகுவிக்கும். இசைசால்- புகழ் மிகுந்த. நனந்தலை – அகன்ற இடம். தார் – தூசிப்படை; முற்பட விரையச் செல்லும் முன்னணிப் படை. பொருது சினம் – பொருதலாகிய சினம்; அஃது பகைவரை அழித்தலும் மறைந்தது. என்பார், ’தணிந்து’ என்றனர். புகலல் – விரும்பல். ஓங்கல் – உயர்தல். பொங்கல் – பொங்கும் பஞ்சுப் பொதி போலப் பிசிர்பட்டுப் போதல் ; வெண்மேகத்திற்கு இது இயல்பு.
56. வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி!
துறை: ஒள்வாள் அமலை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு செந்தூக்கு. பெயர்: வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி. இதனாற் சொல்லியது: சேரனின் வென்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம்: மாற்றுவேந்தர் அஞ்சித் தங்கள் மெய்யை மறந்த வாழ்வு வேந்து மெய்ம்மறந்த காரணத்தால் வந்தது. இச்சிறப்பால் இப்பாடல் இப்பெயரைப் பெற்றது.
தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன், வெற்றிக் களிப்பாலே, தேர்த்தட்டிலே நின்று போர்த் தலைவரோடு கைபிணைந்து ஆடும் குரவை, ‘ஒள்வாள் அமலை’ எனப்படும் (தொல். புறத். 21. உரை).
இதனாற் சேரலாதன் போர்மறத்திலேயே பெரிதும் விருப்புடையன் என்பதும், தன் வெற்றியிலும், தன் படையாண் மையிலும் உறுதியுடையவன் என்பதும் விளங்கும்.]
விழவுவீற் றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லா னல்லன்; வாழ்கஅவன் கண்ணி!
வலம்படு முரசம் துவைப்ப வாளுயர்த்து
இலங்கும் பூணன் பொலங்கொடி உழிஞையன் 5
மடல்பெரு மையின் உடன்றுமேல் வந்த
வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத்து ஆடுங் கோவே.
தெளிவுரை: விழவானது பெருமையோடும் விளங்கிய அகன்ற தன் ஊரினிடத்தே, கூத்தரது முழவொலியின் முன்னர் ஆடும் தொழிலில், நம் சேரலாதன் வல்லான் அல்லன். அவன் தலைக்கண்ணி வாழ்வதாக!
வெற்றியுண்டாதற்குக் காரணமான முரசம் பெரிதும் முழக்கஞ் செய்யத் தன் வாளை உயர்த்தவனாகவும், விளங்கும் பூண்களை அணிந்தவனாகவும், பொன்னாற் செய்த உழிஞைக் கொடியைச் சூடியவனாகவும், தம் அறியாமை மிகுதியாலே பகைகொண்டு படையெடுத்து வந்த பகைவேந்தர், தம் உடம்பை மறத்தற்குக் காரணமான வெற்றிச்செல்வம் அழிந்து கெட்ட போர்க்களத்திலே, ஆடுதலில் மட்டுமே அவன் வல்லவன் ஆவான்!
சொற்பொருளும் விளக்கமும்: ‘விழவு வீற்றிருந்த வியலுள்’ என்றது சேரலாதனது கோநகரை; அங்கு கூத்தரோடு கலந்து ஆடுவான் அல்லன். கோடியர் – கூத்தர். வியனுள் – அகன்ற ஊர்; பேரூர். கோடியர் முழவின் முன்னர் ஆடல் வல்லான் அல்லன் என்பதனால், பெருமைக்கு யாதும் குறைவில்லை என்பார், ‘வாழ்க அவன் கண்ணி’ என்கின்றனர். வலம்படு முரசம் – வெற்றியுண்டாதற்குக் காரணமான முரசம்; இதன் முழக்கம் படைஞரை ஊக்கிப் போர்க்களத்து வெற்றியீட்டச் செலுத்தலால், வெற்றி முரசம் ஆயிற்று. துவைப்ப – பெரிதும் முழங்க. பொலங்கொடி உழிஞையன்- பொற்கொடி போன்ற கொடியைக் கொண்ட உழிஞையின் பூவைச் சூடியவனும் ஆம். உழிஞை – கொற்றான். பொலங்கொடி உழிஞை – பொற் கொற்றான். மடம் – அறியாமை. மெய்ம்மறந்த வாழ்ச்சியாவது தம் உடம்பைக் கைவிட்டு மறந்து வீரசுவர்க்கத்தே சென்று வாழ்தல். போர்க்களத்திலே ஆடும் கோ, கோடியர் முழவின் முன்னர் ஆடல் வல்லான் அல்லன் என்கின்றனர். வீந்துகு போர்க்களம் – பகைவர்பட்டு வீழும் போர்க்களம்:
தம் அறியாமையாலே செருக்கிப் போர்க்கெழுந்தவரான பகைமன்னரை அழித்து வெற்றியடைந்து, அக் களத்திலே நின்று, தன் வாள்வீரர்களுடன் வெற்றிக் கூத்தாடுவதற்குச் சேரலாதன் வல்லவனேயல்லாமல், கூத்தர் முன்பாக நின்று களிக்கூத்து ஆடிக் களித்தலில் வல்லவன் அல்லன் என்பதாம்.
57. சில்வளை விறலி !
துறை: விறலியாற்றுப் படை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: சில்வளை விறலி. இதனாற் சொல்லியது: சேரலாதனின் வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும்.
[பெயர் விளக்கம்: பல்வளை இடுவது பெதும்பைப் பருவத்து மரபு. அஃதன்றிச் சில்வளையிடும் பருவத்தாள் என்றனர். இதனால் ஆடல் முதலிய துறைக்கு உரியளாகிய இளமைப் பருவத்தாள் என்பது விளங்கும். இச்சிறப்பால் இப்பாட்டிற்குச் ‘சில்வளை விறலி’ என்பது பெயராயிற்று.
விறலியை ஆற்றுப்படுத்தலினால் விறலியாற்றுப் படை ஆயிற்று.]
ஓடாப் பூட்கை மறவர் மிடல்தப
இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக்
குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே
துணங்கை ஆடிய வலம்படு கோமான்
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச் 5
செல்லா மோதில்? சில்வளை விறலி!
பாணர் கையது பணிதொடை நரம்பின்
விரல்பவர் பேரியாழ் பாலை பண்ணிக்
குரல்புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி
இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த 10
வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை
ஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசை
ஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புன்கண் அஞ்சும்
புரவெதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே.
தெளிவுரை: சிலவாகிய வளைகளை யணிந்தவளான விறலியே! மென்மையான நிலத்திடத்தே யமைந்த வழியாக, நின் சிறிய காலடிகளாலேயே நடந்து செல்லலாம்; வருகின்றாயோ?
ஒள்ளிய நெற்றியை உடையவரான சேரமானின் காதன் மகளிர் இளமையும் துணையாகும் தன்மையும் உடைய புதல்வரான நல்ல செவ்வத்தைச் சேரமானுக்குப் பெற்றுத் தந்தவர்கள். தொழில்வளமை பொருந்திய காற்சிலம்புகளையும், அடக்கத்தாலே சிறந்த ஒழுக்கத்தையும், நிறைந்த அறிவையும், தம் ஒழுகலாற்றால் உண்டாகிய கெடாத புகழையும் உடையவர்கள் அவர்கள். அவர்கள் புலவியாற் சினமுற்றுப் பார்க்கும் பார்வையினுங் காட்டில், இரந்து வந்தாரது வறுமையாற் பொலிவிழந்துபோன பார்வைக்கு மிகவும் அஞ்சுகின்றவன் சேரலாதன். நம்மைக் காத்தலை மேற்கொண்டு ஒழுகுவோனாகிய அத்தகு சிறப்பினன் அவன்!
பாணரது கையிடத்தாகிய, தாழக்கட்டிய நரம்பினைக் கைவிரலாலே மீட்டி வாசித்தலை விரும்பும் பேரியாழி னிடத்தே, பாலைப் பண்ணை எழுப்பியவாறு, குரல் என்னும் நரம்போடு ஒன்றுபட்ட இனிய இசைப்பகுதியிலே, தழிஞ்சி யென்னும் துறை பொருளாகவமைந்த பாட்டினைக் குரலெடுத்துப் பாடியபடி சென்று, அவனைக் கண்டு வருவதற்கு யாமும் செல்வோம்.
போர்க்களத்திலே தன் வெற்றி வீரர்களோடு துணங்கைக் கூத்தாடிய, வெற்றி பொருந்திய சேரமானாகிய கோமான், போரிற் புறங்கொடுத்து ஓடாத மேற்கோளைக் கொண்டவரான பகைவீரரது வலி கெடும்படியாக, அவரோடு போரிட்டு, அவரை அவர் வலிகெடும்படியாக அழித்தலினாலே பாய்ந்த அவர் குருதியானது, தான் அணிந்துள்ள பெரிய பனந்தோட்டு மாலையோடு பெரிய வீரக் கழலையும் சிவக்குமாறு துளிக்கும், புலவு நாற்றத்தைக் கொண்ட போர்க்களத்திடத்துப் பாசறைக்கண்ணே இருக்கின்றான். அவனிடம் செல்வோம். (அப்பகைவரை அழித்துப் பெற்ற செல்வங்களை அவன் நமக்கு வாரி வழங்குவான் என்பது குறிப்பு.)
சொற்பொருளும் விளக்கமும்: வகுந்து – வழி: ‘வகுந்து செல் வருத்தத்து வான்துயர் நீங்க’ (சிலம்பு: 14:17.); நிலத்தை ஊடறுத்து அமைந்துகிடப்பதாகலின் வகுந்து என்றனர். சில்வளை விறலி – சிலவாகிய வளைகளையேயுடைய விறலி: ‘சில்வளை’ இளமைப் பருவத்தார் அணிவது. சீறடி – சிறிய அடி. ‘செல்லாமோ’ என்றது, ‘செல்வோம் வருக’ என்னும் பொருள்பட நிற்பது. கையது – கையிடத்தாகிய ; குறிப்பு முற்றெச்சம். பணிதொடை – தாழக் கட்டிய கட்டினையுடைய ‘விரல் கவர்-யாழ்’ என்றது, வாசித்து வாசித்துப் பழகியதனாலே எடுத்ததும் வாசிக்கத் தூண்டும் கை பழகிய யாழ் என்பதாம்.
தழிஞ்சி – வேந்தர் தம் படையாளர் முன்பு போர்செய்துழிக் கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக்கொண்டு அழிந்தவர்களைத், தாம் சென்று பொருள் கொடுத்தும் வினாவியும் தழுவிக்கோடல்; தழிச்சுதல் தழிஞ்சி யாயிற்று. ’அழிகுநர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக், கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று’ (புற. வெ. 55) துணைப் புதல்வர் – துணையாகும் புதல்வர்; முதுமைக்கண் உதவியும், தந்தைக்கு ‘இவன் தந்தை என் நோற்றான் கொல்?’ என்னும் புகழும் தேடித் தருதல்பற்றிப் புதல்வரைத் ‘துணை’ என்றனர். நல்வளம் – நற்செல்வம்; நற்புதல்வரே நற்செல்வம் என்பது கூறினார். “இம்மை யுலகத்து இசை யொடும் விளங்கி, மறுமை உலகமும் மறுவின்றெய்துப, செறு நரும் விழையும் செயிர்தீர் காட்சிச், சிறுவர்ப் பயந்த செம் மலோர்” என, இவராற் பெறும் சிறப்பைக் கூறுவர் ஆசிரியர் செல்லூர்க் கோசிகன் கண்ணனார் (அகம்.66). இத்தகைய புதல்வரைப் பெற்றுத்தந்த மகளிர் போற்றற்கு உரியர் என்பது தெளிவு. குடைச்சூல் – சிலம்பு; உட்டுளை உடைத்தாய்ப் பரல் பெய்யப்பெற்று விளங்கலின் இப்பெயர் பெற்றது. வளம் – தொழில் வளம். அடங்கிய கொள்கை- தம் கணவர் விருப்பையே தம் விருப்பாகக் கொண்டு, தம்மளவில் மனமொழி மெய்களால் அடங்கியொழுகும் ஒழுக்கம். ஆன்ற அறிவு – நிறைந்த அறிவு; பெண்பாலார்க்கு அறிவின் இன்றியமையாயை இது வலியுறுத்தும். ‘தோன்றிய நல்லிசை’ என்பது, ‘புகழ் புரிந்த இல்வாழ்வு’ என்பதனைக் குறித்தற்கு. மனைமகளிரின் தன்மை இவற்றால் விளக்கப்பட்டது. துனி முற்றிய ஊடற்சினம்; அதனைத் தணிவித்துக் கூடல் கணவர் தம் கடமையாகும்; அதனைக் காட்டிலும் இரவலர் புன் கண்மை கண்டு அஞ்சும் அருளாளன் சேரலாதன் என, அவன் கொடைச் சிறப்பையும் கூறினர்; இதனால் அவன் நம் துயரையும் தவறாமல் தீர்ப்பான் என்பதும் கூறினதாகக் கொள்க. எதிர் கொள்வன் – ஏற்றுக் கொள்வோன்.
துணங்கை – துணங்கைக் கூத்து. பூட்கை – மறவரின் வெற்றியே பெறுவேம் என்னும் மனவுறுதி. மிடல் – வலிமை. புடையல் – மாலை. பனிற்றும் – துளிக்கும். புலால் – புலால் நாற்றம். களம் – போர்க்களம்; அதனையடுத்த பாசறையைக் குறித்தது; கங்கையிடைச் சேரி என்றாற்போல.
பகைவரை அழிக்கும் கடுஞ்சினத்தினன் எனினும் இரவலர்க்குப் பெரிதும் உதவும் அருளாளன் என்றனர். ‘மகளிர் துனித்த கண்’ என்றது. அவன் அவரைப் பிரிந்து நெடுங்காலம் பாசறையிடத்தானாக இருத்தலால். அவர் துயர் தீர்க்க உடனே மீள்தலினும், இரவலர்க்குற்ற வறுமைத் துயரைத் துடைக்கவே விரைபவன் என்றனர். கடுமை, காதன்மை, அருளுடைமை என்னும் மூன்றானும் சிறந்தோன் சேரலாதன் என்பதாம்.
‘மெல்லிய வகுந்த’ என்றது, வழிதானும் கடுமையற்றது அதனால் எளிதே செல்லலாம் எனக் கூறியதாம்.
58. ஏவிளங்கு தடக்கை !
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: விளங்கு தடக்கை. இதனாற் சொல்லியது: சேரனின் செல்வப் பெருக்கமும் கொடைச் சிறப்பும்.
ஆடுக விறலியர்; பாடுக பரிசிலர்;
வெண்தோட்டு அசைத்த ஒண்பூங் குவளையர்
வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்
செல்லுறழ் மறவர்தம் கொல்படைத் தரீஇயர்
இன்றினிது நுகர்ந்தன மாயின் நாளை 5
மண்புனை இஞ்சி மதில்கடந் தல்லது
உண்குவம் அல்லேம் புகாவெனக் கூறிக்
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய்படுபு அறியா வயங்குசெந் நாவின்
எயிலெறி வல்வில் ஏவிளங்கு தடக்கை 10
ஏந்தெழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை
வான வரம்பன் என்ப கானத்துக்
கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் 15
சீருடைப் பல்பகடு ஒலிப்ப பூட்டி
நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கின்
அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே.
தெளிவுரை: இடியை யொத்துப் பகைவரைத் தம் நெற்றி முழக்கத்தாலேயே தாக்கி அழிவடையச் செய்பவர் சேரமானின் படைமறவர்கள். அவர்கள் வெண்மையான பனந்தோட்டினாலே கட்டிய ஒள்ளிய குவளைப்பூ மாலையினை அணிபவர்; வாளது வாயாலே வடுப்பெற்ற மாட்சி பொருந்திய தழும்புகள் கொண்ட உடலினர். அவர்கள், பகைவரைக் கொல்லுதற்குரிய தத்தம் படைக்கருவிகளை ஏந்தியபடியே வருவர். வந்து –
“இன்று இனிதான பலவற்றையும் உண்டேமாய் இன்புற்றேம் ஆயினும், இனி நாளைக்கு, மண்ணாலே கட்டப்பெற்று உள்ளவான பகைவேந்தரது கோட்டைமதில்களைக் கைப்பற்றிய பின்னரன்றி யாம் உணவு உண்ணுவே மல்லேம்” என வஞ்சினம் உரைத்து எழுவர். தாம் சூடியுள்ள கண்ணிக்கு ஒப்பப் போர்வினை செய்தலைக் கருதிய அத்தகைய மறவர்களை உடைய பெருமகன், சேரன் –
தாம் சொல்லிய சொற்கள் பொய்யாதலை என்றும் அறியாமையாலே. விளக்கம் அமைந்த செவ்விய நாவினையும், பகைவரது மதில்களைத் தாக்கியழிக்கும் வலிய வில்லும் அம்பும் ஏந்தி விளங்கும் பெரிய கையினையும், உயர்ந்த அழகிய மார்பினையும் உடையவராகிய அம்மறமாண்பினர்க்கு மெய்ம்மறை யென்னும் கவசத்தைப் போன்று காவலாக விளங்குபவன் வானவரம்பனாகிய சேரன்” என்று சொல்வார்கள்.
கானத்திடத்தே ஒலிசெய்தபடியிருக்கும் சிள்வீடு என்னும் வண்டுகளைத், தமது பொரிந்த அடிப்பகுதியிடத்தே கொண்டன சிறுசிறு இலைகளையுடைய வேலமரங்கள். அவை மிகுதியாகத் தோன்றுவது புன்செய்ப் பகுதி நிலம். அதனிடத்தே உழுது வித்திப் பயிர்செய்பவர் வலியமைந்த கையினையுடைய உழவர்கள். அவர்கள் சிறப்புடைய பல பகடுகளை, அவற்றின் கழுத்து மணிகள் ஒலிக்கப் பூட்டி உழுவர். அவர்களின் கலப்பைகள் சென்ற கொழுவழியின் பக்கத்தே, அசைகின்ற ஒளிக்கதிர்களையுடைய சிறந்த மணிக் கற்களை அவர்கள் பெறுவார்கள். இத்தகைய அகன்ற இடமமைந்த ஊர்களையுடைய நாட்டிற்கு உரியவன் சேரமான். விறலியர்களே! அவன் உவக்குமாறு நீவிர் ஆடு வீராக! பரிசின் மாக்களே! அவன் புகழையெடுத்து நீவிர் பாடுவீராக!
சொற்பொருளும் விளக்கமும்: தோடு – பனங்குருத்து. பூங்குவளை – அழகிய குவளை மலர்; செங்குவளையும் ஆம். ‘குவளையர்’ என்பது முற்றெச்சம். முகம் – கூர்வாய். பொறித்தல் – தாக்கிப் புண்படுத்தல். அசைத்த – கட்டிய. மாண்வரி மாட்சியுடைய தழும்பு: மாட்சி போரிற்பெற்ற விழுப்புண்ணின் வடுவென்னும் சிறப்பினால். யாக்கை – உடம்பு. யாக்கையர் – யாக்கையராகிய மறவர். செல் – இடியேறு. பகைவராகிய அரவுகளைத் தம் போர்முழக்கத்தாலேயே நெஞ்சுட்கச் செய்து புறங்காணும் சிறப்பினர் என்பதனால், ’செல்லுறழ் மறவர்’ என்றனர். கொல்படை – கொல்லற் குரிய படைக்கலன். தரீஇயர் – கைப்பற்றிவரும் பொருட்டு; செய்யியர் என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மறவர் போரைக் குறித்த செலவின்கண், தம் படையை எடுக்குங் காலத்தே சூளுரைத்தவராக எடுப்பது மரபு. ”நீளிலை எஃகம் மறுத்த உடம்பொடு. வாரா உலகம் புகுதல் ஒன்றெனப் படைதொட்டனனே குருசில்” எனத் தலைவ னொருவன் வஞ்சினமுரைத்தலைப் புறநானூற்றுட் காணவாம் (புறம்.341). மண்புனை இஞ்சி – அரைத்த மண்ணாலே அமைந்த இஞ்சி; இஞ்சி – மதிலுறுப்புகளுள் ஒன்று; அரைத்த மண்ணால் சுவர் எழுப்பலைப் புறநானூறு, ‘அரைமண் இஞ்சி’ (புறம் 341) எனக் கூறும். இனி, வெண்தோட்டு அசைத்த ஒண்பூங் குவளையராகிய மறவர், தம்மைப் பகைத்து மேல் வந்தாரான, வாள் முகம் பொறித்த மாண்வரி யாக்கையரான செல்லுறழ் மறவர்தம் கொல்படையைக் கைக்கொள்ளும் பொருட்டுக் கூறிய வஞ்சினமாகவும் கொள்ளலாம்.
மதில்கடத்தல் – மதிலையழித்துக் கைக்கொள்ளுதல். புகா -உணவு. கண்ணி – தலைக்கண்ணி ; இது உழிஞைமாலை. கண்ணிய – கருதிய. வயவர் – மறவர். தாம் சூடிய கண்ணிக் கேற்ப வினைசெய்தலைக் கருதிய வயவர் என்க. படுபு – பட்டு; செய்பு என்னும் வினையெச்சம். வஞ்சினம் கூறியவழி, அது பிழைபடலின்றி வினையை முடிப்பவராதலின் ‘பொய்படுபு அறியா வயங்கு செந்நாவினர்’ என்றனர். வயங்கல் – விளங்கல். எயில் எறி – மதிலைத் தகர்க்கும். வல்வில் – வலியமைந்த வில். ‘எயில் எறி வல்வில்’ எனவே வில்லின் சிறப்பு விளங்கும். ஏ – அம்புத் தொழில். ‘ஏவிலங்கு தடக்கை’ – அம்பை ஏவும் தொழிலுக்குரிய கூறுபாடுகள் எல்லாம் விளங்கும் தடக்கையும் ஆம். ஏந்தெழில் – உயர்ந்த அழகு: நிமிர்ந்த மார்பெழிலும் ஆம். ஆகம் – மார்பு. மெய்ம்மறை – கவசம்; அவ்வாறு காப்பவன் என்பது பொருள். தன் படைமறவர் பகைப்படை மறவரால் பெரிதும் தாக்கப் பெற்ற வழித், தானே சென்று அப்படையினது செருக்கைக் கெடுத்துத் தன் படைமறவரைக் காப்பவன் சேரனென்பதும் ஆம். வானவரம்பன் – வானத்தை எல்லையாகக் கொண்டவன்; மலைநாட்டானாகிய சேரலாதன்.
கானம் – காடு. இசை கறங்கு இதடி – இசைப்பது போல ஒலிக்கும் சிள்வீடு. அரை – மரத்தின் அடிப்பகுதி. சிறிஇலை – சிறிதான இலைகள்: வேலம் – கருவேலமரம். பெரிய தோன்றும் – மிகுதியாகத் தோன்றும்; ‘பெரிய கட்பெறினே, யாம் பாடத் தான் உண்ணும் மன்னே’ (புறம் 235) என வருவது காண்க. பகடு சீருடையதாதல், புன்செய்ப் பகுதி உழவிற்குச் சிறந்த தகுதி உடைத்தாதல். ‘பகடு ஒலிப்ப’ என்றது, பகடுகளின் கழுத்திற் கட்டியுள்ள மணிகள் ஒலி செய்ய என்றதாம். ‘கொழுவழி மருங்கு’ என்றது, கொழுப் பிளந்து சென்ற உழவுசாலின் இரு பக்கத்தையும். அலங்கல் அசைதல்; விட்டுவிட்டு ஒளிர்தல். திருமணி – அழகிய மணி; செம்மணியும் ஆம். வைப்பு – ஊர். வைப்பின் நாடு – ஊர்களையுடைய நாடு என்க; உழுவோர் தாம் பெறும் விளையு ளாகிய பிற்பயனை யன்றியும், அப்போதுதானே சிறந்த மாணிக்கக் கற்களையும் பெறுகின்ற வள நாடு என்க. விறலியர் – பாண்மகளிருள் கூத்து இயற்றும் மகளிர். பரிசிலர் – பாணரும் புலவரும் பிறருமாகியவர்; இவர் தம் புலமையைக் காட்டிப் பரிசில் பெறுவாரேயன்றி, இரந்து உண்ணும் இரவலராகார் என்க.
59. மாகூர் திங்கள்!
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: மாகூர் திங்கள். இதனாற் சொல்லியது: சேரலாதனின் வென்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம்: மாசித்திங்கள் விலங்குகளும் நடுங்கும் குளிரை உடையதென்று கூறிய சிறப்பால், இப்பாட்டு, இப் பெயரைப் பெற்றது.]
பகல்நீடு ஆகாது இரவுப்பொழுது பெருகி
மாசி நின்ற மரகூர் திங்கள்
பனிச்சுரம் படரும் பாண்மகன் உவப்பப்
புல்லிருள் விடியப் புலம்புசேண் அகலப்
பாயிருள் நீங்கப் பல்கதிர் பரப்பி 5
ஞாயிறு குணமுதல் தோன்றி யாஅங்கு
இரவல் மாக்கள் சிறுகுடி பெருக
உலகம் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை! வீற்றிருங் கொற்றத்துச்
செல்வர் செல்வ! சேர்ந்தோர்க்கு அரணம் 10
அறியாது எதிர்ந்து துப்பில் குறையுற்றுப்
பணிந்துநிறை தருபநின் பகைவ ராயின்
சினம்செலத் தணிமோ? வாழ்கநின் கண்ணி
பல்வேறு வகைய நனந்தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் 15
ஆறுமுட் டுறாஅது அறம்புரிந்து ஒழுகும்
நாடல் சான்ற துப்பின் பணைத்தோள்
பாடுசால் நன்கலம் தரூஉம்
நாடுபுறந் தருதல் நினக்குமார் கடனே.
தெளிவுரை: மாசித் திங்களிலே பகற்பொழுது நெடிதா யிராது. இரவுப்பொழுது பெருகியிருக்கும். அக்காலத்து இரவுப் போதிலே விலங்கினங்களும் குளிர் மிக்கதனாலே வருத்தமுறும். அத்தகைய காலத்தே நடுக்கத்தையுடைய காட்டு வழியூடே செல்ல நினைப்பான் பாண்மகன். அவன் உவப்படையுமாறு, புல்லிய இருளானது மறைந்து விடியற் காலமும் வரும். இருளாலும் பனியாலும் வருந்திய வருத்தம் நெடிதகன்று போய்விடவும், பரந்துள்ள இருள் அகலவும், ஞாயிறானது தன் பலவாகிய கதிர்களைப் பரப்பியபடி, கீழ்த்திசை வானத்திலே எழுந்து தோன்றும். அவ்வாறு ஞாயிறு தோன்றினாற் போல –
இரத்தலையே வாழ்வியலாகக் கொண்ட மக்களின் சிறுமைப்பட்ட குடிவாழ்க்கை யானது, செல்வத்தால் பெருக்கம் அடையுமாறு, உலகைக் காத்துப் பேணிய, மேம்பட்ட கல்வியறிவைக் கொண்ட, வில்வீரனின் மெய்ம் மறையே! வீறும், பெருங் கொற்றமுமுடைய செல்வர்களான வேந்தர்க்கெல்லாம் பெருவேந்தனாக விளங்கும் செல்வனே! புகலென அடைந்தவர்க்குக் காப்பாளனாக விளங்குவோனே!
பல்வேறு வகையான அகன்ற நாடுகளிலிருந்து வந்து தாக்கனவும், மலையிடத்திருந்து பெற்றனவும், கடலிடத்திருந்து கொணர்ந்தனவும் ஆகிய செல்வப் பொருட்களை எல்லாம், அவரவர்க்குப் பகுத்தளிக்கும் அறமுறையானது தடைப்படாமல், அறவாட்சி செய்து வாழ்வோனே! பகை வரும் ஆராய்தற்கமைந்த வலிமை பொருந்திய, பருத்த தோள்களை உடையோனே! பெருமையமைந்த நல்ல அணிகலன்களை நினக்குத் நிறைப் பொருளாகக் கொண்டு தரும் நாடுகளை, நின் நாட்டைப்போலவே பேணிக்காத்தலும் நின் கடனாகுமன்றோ!
நினக்குப் பகைவராக விளங்கிய வேந்தர், நின் வலியினை அறியாராய், நின்னை எதிர்த்துப் போரிட்டு, அதனில் தோற்றதனாலே குறைபாடடைந்து, நின்னைப் பணிந்து, நினக்குரிய திறைப்பொருளைத் தருவாராயின், அவர்தம் பழைய பகைச் செயலைப் பொறுத்து, அவரை அழித்தலே குறியாகச் சென்ற நின் சினத்தையும் தணிவித்துக் கொள்வாயாக! நின் கண்ணி வாழ்வதாக!
சொற்பொருளும் விளக்கமும்: பகல் – பகற்போது. நீடு ஆகாது – நெடிதாக ஆகாமல். பெருகி – பெருக்க மடைந்து. மாசித்திங்கள் பின்பனிக்காலம் ஆகும்; குளிர் மிகுந்த காலம். இது: இக்காலத்து இரவுப்போதில் இரை தேடற்குரியவான விலங்கினங்களும், குளிரால் நடுங்கியவையாய், இரைதேடச் செல்லாவாய்ப் பனியாலும் பசியாலும் வருத்தமுறும். மீளவும் ஞாயிறு கீழ்த்திசை வானத்தெழலும், குளிரின் துன்பமும் இருளின் செறிவும் அகலும் என்பதாம். தன் வறுமை மிகுதியாலும், அதனைப் போக்குபவன் சேரலாதன் என்னும் உறுதியாலும். அப்பனிச்சுரத்தையும் இரவிற் கடந்து செல்வான் பாண்மகன் என்பதாம்.
இரவன்மாக்கள் – இரத்தலே தொழிலாக உடைய மாக்கள்; இவர் பரிசின் மாக்களினும் வேறானவர்; தம் திறனால் மகிழ்வித்துப் பரிசில் பெறக் கருதலின்றித், தம் வறுமையைக் காட்டி இரந்துபெறும் பொருளால் வாழ்வு நடாத்துவோர் இவராவர். சிறுகுடி – சிறுமைத் துயருட்பட்ட குடிவாழ்க்கை. சிறுமை, பொருளற்றதனாலே விளைவது: அது பசியும் பிறபிற துயரமும். பெருகல் – சிறுமை அகன்று பெருக்கமுடன் வாழ்தல். உலகம் – தன் நாட்டின் உயிரினங்கள். தாங்கிய – பேணிக் காத்த. கற்பு – கற்பன கற்றறிந்த அறிவுத் திறன். மெய்ம்மறை – கவசம். வில்லோர்-வில்லாளர். வீறு – தனிச் சிறப்பு. இரும் – பெரிய. கொற்றம் – வெற்றி. செல்வர் – செல்வமுடையோர்; அரசர். அரணம் – பாதுகாப்பு – ஞாயிறு தோன்றியதும் இருளும் குளிரும் அகன்றுபோக, உயிரினம் மீளவும் நலமுற்றாற் போலச்சேரலாதன் தோன்றியதும் இரவலர் சிறுமை கெட்டு அவரும் பெருங்குடியினராயினர் என்பதாம்; இதனால், அவன் கொடைச் சிறப்புக் கூறப் பெற்றது.
‘பல்வேறு வகைய நனந்தலை’ என்றது, பலவகைப்பட்ட அகன்ற நாடுகளை; இவை மொழிவேறுபட்ட பலவகை நாடுகளையும் குறிப்பதாகலாம். பண்ணியம் – பண்டங்கள். பகுக்கும் ஆறு – மக்களுக்குப் பகுத்தளிக்கும் முறைமை, முட்டு – குறைவு. அறம்புரிந்து ஒழுகல் – செங்கோன்மை நடாத்தி வாழ்தல். நாடல் – ஆராய்தல். துப்பு – வலிமை. பணைத்தோள் – பெருத்த தோள். பாடுசால் – பெருமை மிகுந்த. கலம் – அணிகலன். ‘தரூஉம் நாடு’ என்றது, திறையளக்கும் நாடுகளை. புறந்தருதல் – காத்தல்; அவையும் வளமும் அமைதியும் உடையவாமாறு செய்து உதவுதல். ‘மார்’ – அசை.
அறியாது – தம் வலியும் நின் வலியும் ஆய்ந்தறியாது. துப்பு – வலிமை. துப்பில் குறையுற்று – களத்தில் தோற்றதனால், முன்னிருந்த வலிமையும் கெட்டுப்போய்க் குறைபாடு அடைந்து. தணிமோ – தணிவாயாக. இதனாற் போரில் தோற்றுப் பணிந்தோரையும காத்துப் பேணுதலான கடமையினை வலியுறுத்தினர்.
- மரம்படு தீங்கனி !
துறை: விறலியாற்றுப் படை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: மரம்படு தீங்கனி. இதனாற் சொல்லியது: கொடைச்சிறப்பும் வென்றிச்சிறப்பும்.
[பெயர் விளக்கம்: ‘புறத்து வன்மையால் அரிவாளும் போழமாட்டாத தீங்கனி’ என்பவற்றுள், புல்லின் வகையினவாகிய பனை முதலியவற்றின் தீங்கனியை நீக்குதற்கு, ’மரம் படுகனி’ என்று கூறிப், ’பலாப்பழம்’ என்று பெயர் வைத்த சிறப்பால், இப்பாட்டு இப்பெயர் பெற்றது.]
கொலைவினை மேவற்றுத் தானை; தானே
இகல்வினை மேவலன் தண்டாது வீசும்;
செல்லா மோதில் பாண்மகள் காணியர்!
மிஞிறுபுறம் மூசவும் தீஞ்சுவை திரியாது
அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி 5
அஞ்சேறு அமைந்த முண்டை விளைபழம்
ஆறுசெல் மாக்கட்கு ஓய்தகை தடுக்கும்
மறாஅ விளையுள் அறாஅ யாணர்த்
தொடைமடி களைந்த சிலையுடை மறவர்
பொங்குபிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி 10
வருங்கடல் ஊதையின் பனிக்கும்
துவ்வா நறவின் சாயினத் தானே.
தெளிவுரை: புறத்தே வண்டினம் மொய்த்திருக்கும்; தீவிய சுவையில் மாறுபடாமல் இருக்கும், அரிவாளால் அறுக்கமாட்டாத வலிய தோலுடையவாய் மரத்திலே உண்டாகிய இனிய கனியாகிய, அழகிய தேன் பொருந்தி யிருக்கும், முட்டையின் வடிவம்போல் விளங்கும் முற்றிய பலாப்பழங்கள். அவை வழிச்செல்வார்க்கு உணவாகி, அவருடைய வழிநடைக் களைப்பைப் போக்கும். மாறாத விளைச்சலைத் தரும் வயல்களாலே நீங்காத புதுவருவாயினைக் கொண்டதாயுமிருக்கும். அம்பு தொடுத்து எய்வதில் மடிதலில்லாத வில்லுடைய காவன்மறவர்கள், பொங்குகின்ற நுண்திவலைகளை யெறியும் அலைகளோடும் படிகின்ற வெண் மேகத்தோடும் கலந்து வருகின்ற கடற்காற்றாலே குளிர் மிகுந்தவராக நடுக்கங்கொள்ளும், நறவென்னும் ஊரின் கண்ணே, இப்போது சாயலையுடைய மகளிர் கூட்டத்தோடு களித்தபடி இருக்கின்றனன்.
அவன் தானையோ பகைவரைக் கொல்லுதலாகிய போர்த் தொழிலையே விரும்பும் இயல்பினது. அவனும் சாயினத்தான் ஆயினும், பகைவரைப் பொருதுகின்ற போர்த் தொழிலையே விரும்புபவன். ஆதலால், அவனை இப்போது சென்று காணின், அருங்கலன்களை வரையாது வழங்குவான். ஆதலினாலே, பாண்மகளே! அவனைக் காணுதற்குச் செல்வோமாக.
சொற்பொருள் விளக்கம்: ‘புறம் மிஞிறு மூசவும்’ என்றது, மணத்தின் இனிமையாற் கவரப்பெற்ற வண்டினம், புறத்தே மொய்த்தபடி இருக்கவும் என்றதாம். ‘தீஞ்சுவை திரியாது’ என்றது, அழியக் கனிந்து உண்ணத் தகாதபடி மாறுபடாததாய் என்றதாம். அரம் – அரிவாள். போழ் கல்லா – பிளக்கமாட்டாத உறுதியான தோலையுடைய. தீங்கனி – இனிய பலாக்கனி. ‘மரம்படுகனி’ என்றது, புல்லினத்துப் பனம்பழம் போன்ற புறக்காழனவாய கனிகளை விலக்குதற்கு. சேறு – பழச்சாறு. முண்டை – முட்டை. (தொல். எச்ச.7). பலாப்பழத்தின் வடிவைக் குறிப்பதற்கு முண்டை விளை பழம் என்றனர். ஓய்தகை – ஓய்ந்துபோன தன்மை; ஓய்ந்துபோனது வழிநடை வருத்தத்தால். விளையுள் – விளைவயல்கள்; ’மறாஅ விளையுள்’ என்றது என்றும் மாறாதே விளையும் வளவயல்கள் என்பதற்காம். அறாஅ யாணர் – கெடாத புதுவருவாய். தொடை – தொடுத்தல். மடி – சோம்பல். களைந்த – போக்கிய. பிசிர் – நுண்துளிகள். புணரி – அலை. மங்குல் வெண்மேகம். மயங்கிவரல் – கலந்துவரல். ஊதை – வாடைக் காற்று.
வழிச்செல்வாரின் களைப்பைப் பலாப்பழம் போக்கும் என்றது. அவன் நாட்டுமரமும் அருளுடையது என்பதற்காம். இனி, வழியிடையே இவ்வாறு நிழல் தருவதற்கும் பழந்தருவதற்கும் பலவகை மரங்களை வைப்பது மரபு எனலும் கொள்ளப்படும். சாயினம் – ஆயமகளிர்: இவர் தம் ஆடலும் பாடலும் காட்டி மன்னனை மகிழ்விப்பவர்.
மன்னன் சாயினத்துள்ளான்; அவன் மறவரும் அவனும் போர் விரும்பினர்; அடுத்து எங்காயினும் சென்றுவிடலும் கூடும்; ஆகவே, இப்போதே சென்று அவனைக் கண்டு வருவேம்; அவன் பரிசில்களை வரையாது வழங்குவான் என்பதாம்.
துவ்வா நறவு – நறவு என்னும் பட்டினம். சாயினம் – மென்மை வாய்ந்த பெண்ணினம். மறாஅ விளையுள் – ‘தொல்லது விளைந்தென வளம் கரவா’ விளையுள்.
’மறாஅ விளையுள்’ வயலிடத்து விளையும் விளைச்சலெனவும், ’அறாஅ யாணர்’ கடலவும் மலையவுமாகிய பொருள்கள் எனவும் கொள்ளலும் பொருந்தும்.
”அரம் போழ்கல்லா மரம்படு தீங்கனி” என்றது, புறக் காழனவாகிய பனை முதலியவற்றின் தீங்கனியை நீக்குதற்கு. இச் சிறப்பானும், முன்னும் பின்னும் வந்த அடைச் சிறப்பானும், இதற்கு ’மரம்படு தீங்கனி’ என்பது பெயராயிற்று” என்பர் பழைய உரைகாரர்.
இதனால், போர் செய்து பெறுகின்றதான வெற்றிப் புகழையன்றி, அப்போரின் பின்விளைவாகத் தான் பெறுகின்ற பொன்னும் பொருளுமாகியவற்றில் சேரமான் மனங் கொள்வானல்லன் என்பதும், அதனால் அவற்றைப் பேணுவானும் அல்லன் என்பதும் ஆகவே அவற்றை எல்லாம் தன்னை வந்து இரந்துநிற்பாரான இரவலர்க்கும், புகழ்ந்து பாடுவாரான பாணர்க்கும் புலவர்க்கும் வாரிவாரி வழங்கி மகிழ்வான் என்பதும் அறியப்படும்.
’மிஞிறு புறம் மூசவும், தீஞ்சுவை திரியாது, அரம்போழ் மரம்படு தீங்கனி’ எனப் பலாப்பழத்தின் இனிமைச்சுவையையும், கனிந்த நிலையையும், நறுமணத்தையும் குறித்தனர். இதனைச் ‘செம்பலா’ என்பர். இவ்வாறு வழிவருவார்க்கு உதவும் எண்ணத்தோடு வழியிடையில் பலா மரங்களையும் மற்றும் பழமரங்களையும் வைத்துப் பேணி வளர்த்தல் பண்டையத் தமிழகத்தின் சிறந்த மரபாகும். பழைய காலச் சாலைகளின் ஓரங்களிலே மிகுதியாகக் காணப்பெறும் நாவல் மரங்களும், நெல்லி மரங்களும் நிழலோடு கனியும் தரக் கருதி அறிவோடு அமைக்கப் பெற்றனவே யாகும்.
‘நெடுஞ்சேண் வந்த நீர் நசை வம்பலர், செல்லுயிர் நிறுத்த கவைக் காய் நெல்லி’ என வருவதும் காண்க – (அகம் 271).
’தொடை மடி களைந்த சிலையுடை மறவர்’ என்றது, அம்புகளைத் தொடுத்துத் தொடுத்து எய்தபடியே இருத்தலன்றிச் சிறிது பொழுதேனும் ஓய்ந்திராத வில்லையுடைய மறவர் என்றதாம். இது அவரது போராண்மை கூறியதும் ஆம்.
சாயினம் – சாயலையுடைய மகளிரினம்; இவ்ரோடு இருத்தல் பாசைறைக்கண் இரவுப்போதில் களித்திருத்தல். கொடும் போர்களின் இடையிடையே இவ்வாறு மகிழ்வான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலே கலந்து மகிழ்வது போர் மறவர்களின் மரபு ஆகும். இது அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் உள்ளதான இயல்பு.
செல்வக்கடுங்கோ வாழியாதனைக்
கபிலர் பாடியது.
ஏழாம் பத்து
பதிகம்
மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி அந்துவற்கு ஒருதந்தை
ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி ஈன்றமகன்
நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி
வெருவரு தானைகொடு செருப்பல கடந்து 5
ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனனுறப் பெற்றுஅவற்கு
ஓத்திர நெல்லின் ஓகந்தூர் ஈத்துப்
புரோசு மயக்கி 10
மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய
செல்வக் கடுங்கோ வாழியாதனைக்
கபிலர் பாடினார் பத்துப்பாட்டு.
பாடிப் பெற்ற பரிசில்: ‘சிறுபுறம்’ என்ன நூறாயிரங் காணம் பொன்னும், ‘நன்றா’ என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தலும். வாழியாதன் அரசுவீற்றிருந்தது : இருபத்தைந்து யாண்டுகள்.
பாட்டின் பெயர்கள்: 1. புலா அம் பாசறை, 2. வரை போல் இஞ்சி, 3. அருவி யாம்பல், 4. உரைசால் வேள்வி, 5. நாண் மகிழ் இருக்கை, 6. புதல்சூழ் பறவை, 7. வெண் போழ்க் கண்ணி, 8. ஏம வாழ்க்கை, 9. மண்கெழு ஞாலம், 10. பறைக் குரல் அருவி என்பன.
தெளிவுரை: சோம்பலற்ற மனவூக்கத்தோடு போர் மேற்சென்று, விளைந்த போர்களிலே பகைவரை வென்று சிறைப்பிடித்துத் தன் வஞ்சிநாட்டிற்குக் கொணர்ந்தவன்; நுட்பமான பரந்த கேள்வி ஞானத்தைக் கொண்டவன்; சேரமான் அந்துவன் சேரல். அவனுக்கு ஒரு தந்தை பெற்ற மகளான பொறையன்தேவி என்பாள் பெற்றுத்தந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
அவன், தன் நாட்டினிடத்தே பல புதிய நகரங்களை உண்டாக்கியவன்; தன்னோடும் பொருந்தாதாரான பகைவரைக் களத்தினின்றும் தோற்று ஓடச் செய்தவன்; கேட்ட மாத்திரத்தானேயே பகைமன்னர்க்கு அச்சத்தை வருவிக்கும் பெரும்படையினைக் கொண்டோனாய்ப் பல போர்களையும் செய்து வெற்றிபெற்றவன்.
புகழ்தல் பொருந்திய பெரிய வேள்விகளை இயற்றுவித்தவன்; அவற்றைச் செய்வித்த பொழுதிலேயே அறத்துறைப்பட்ட பலவான தான தருமங்களையும் செய்தவன்; மாய வண்ணன் என்பானை மனம் பொருந்தத் தன் குருவாகப் பெற்று, அவனுக்கு உயர்ந்த திறமான நெல்விளைதலையுடைய ஒகந்தூரை இறையிலியாகத் தந்தவன்; அந்தத் தனது புரோகிதனைக் காட்டிலும் தான் அறவொழுக்கங்களிலும், சாத்திர ஞானங்களிலும் மேம்பட்டவனாகி, அவனையே மயங்கச் செய்தவன்.
ஞானவளம் செறிந்த உள்ளத்தை உடையவனாக, எத்தகையதொரு மாசும் அற்றவனாக விளங்கியவன்; அத்தகையோனாகிய சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பத்துப் பாட்டுக்களாலே பாடினார்.
சொற்பொருளும் விளக்கமும்: மடியா உள்ளம் – சோம்பலற்ற மனவூக்கம். மாற்றோர் – பகைவர்; மாறுபட்டவர் மாற்றார், மாற்றோர் என்க. நெடுநுண் கேள்வி – நெடிய நுண்ணிய கேள்வி; நுட்பமான கேட்டற்குரிய பொருள்களைத் தொடர்ந்து கேட்டறிந்த ஞானநிறைவு. அந்துவன் – சேரமான் அந்துவஞ் சேரல் என்பான். ஒருதந்தை – ஒருதந்தை என்னும் பெயருடையான்; ஒரு தந்தை எனப் புகழ்பெற்றானும் ஆம். ‘பொறையன் பெருந்தேவி’ சேரமான் அந்துவனின் கோப்பெருந்தேவி அவன் இரும்பொறை மரபினன் ஆதலின், அவன் தேவியைப் பொறையன் பெருந்தேவி என்றனர்; இஃது அவள் பெயர் அன்று; அவள் பட்டப்பெயராகும். படுபடுத்தல் – ஊர்களை அமைத்தல். நண்ணார் – நாட்டகத்து உட்பகைவர்; அவரை நாட்டைவிட்டே ஓடச் செய்தான் என்பார், ‘நண்ணார் ஓட்டி’ என்றனர். ஏத்தல் – புகழ்தல். இடனுடை வேள்வி – பெரிய வேள்வி: அகன்ற யாககுண்டத் தையுடைய வேள்வி. அறத்துறைப் போதல் – அறநெறிப்பட்ட யாவும் செய்து மேம்படல். மாயவண்ணன் – மாயையே. தன் வண்ணமாகக் கொண்டவன்; திருமால்; யாகப் புரோகிதனும் ஆம். ஓத்திரநெல்; உயர்ந்த தரமான நெல்: இது தெய்வங்கட்குப் படையலிடச் சிறந்தது. ஓகந்தூர் – ஓர் ஊர். புரோசு – புரோகிதன்; அவனை மயக்கல், அவனினும் தான் அந்நூலறிவாலும் ஒழுக்கநெறியாலும் சிறந்திருத்தல். மல்லல் உள்ளம் – வளமான உள்ளம்: குறையற்ற உள்ளம். மாசு – குற்றம்; இது தன் ஒழுக்கத்தாலும் தன் அறிவு வளத்தாலும் குற்றமற்று விளங்கிய சிறப்பு.
61. புலாஅம் பாசறை !
துறை: காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. சொல்லியது: வாழியாதனின் வெற்றிச் சிறப்பும், கொடைச் சிறப்பும். பெயர்: புலாஅம் பாசறை.
[பெயர் விளக்கம்: பகைவரைப் பகற்பொழுதிற்றானே வெட்டி வீழ்த்தியதனாலே குருதிக் கறை படிந்த வாட்படைகளாலும், பகைவரைக் குத்திக் கொன்று சிறந்த போது குருதிக்கறை படிந்த கோட்டினவாய் விளங்கும் களிறுகளாலும், பாசறையே ‘புலவு நாற்றம்’ கொண்டதாயிற்று எனவுரைத்த சிறப்பால், இப்பாட்டிற்கு இது பெயராயிற்று.]
பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்
வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல்;
வைத் தன்ன வினைபுனை நல்லில்
பாவையன்ன நல்லோள் கணவன்;
பொன்னின் அன்ன பூவின் சிறியிலைப் 5
புன்மால் உன்னத்துப் பகைவன் எங்கோ?
புலர்ந்த சாந்தின் புலரா வீகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழவுமண் புலர இரவலர் இனைய
வாராச் சேட்புலம் படர்ந்தோன் அளிக்கென 10
இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன்
ஈத்தது இரங்கான் ஈத்தொறும் மகிழான்
ஈத்தொறும் மாவள் ளியனென நுவலுநின்
நல்லிசை தரவந் திசினே; ஒள்வாள்
உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை 15
நிலவின ன்ன வெள்வேல் பாடினி
முழவின் போக்கிய வெண்கை
விழவின் அன்னநின் கலிமகி ழானே.
தெளிவுரை: பலாமரத்திலே கனியப்பழுத்து வெடித்த பலாப்பழத்தின் வெடிப்பிலிருந்து ஒழுகும் தேனை. வாடைக் காற்றானது எடுத்துத் தூற்றும் வளமுடையது பறம்பு நாடு. அந் நாட்டிற் பொருந்திய பெரிய விறலினைக் கொண்டவன்; ஓவியத்தே எழுதினாற் போன்ற கைவினைத்திறம் பொருந்திய நல்ல மனையின் கண்ணே இருந்த கொல்லிப் பாவையைப் போன்ற அழகினையும், நற்பண்புகளையும் உடையாளின் கணவன்; பொன்போலும் நிறமுடைய பூவினையும், சிறிதான இலையினையும், பொலிவற்ற அடிமரத்தையும் கொண்ட உன்ன மரத்துக்குப் பகைவன்; எம் கோமான் பாரி. பூசிப் புலர்ந்த சந்தனத்தையும், குன்றாத கொடையினையும், அகன்ற மார்பினையும் கொண்டோனாகிய பெரிய வள்ளலான அவன்றான்,
முழவிடத்தே பூசிய மண்ணானது காய்தலுற்றுப் போகவும், அவனைப்போல வழங்குவார் இல்லாமையாலே இரவலர்கள் பெரிதும் வருத்தமுறவும், மீண்டும் இவ்வுலகத்திற்குத் திரும்பி வருதலற்ற மேலுலகிற்குச் சென்றுவிட்டான்.
ஒள்ளிய வாளேந்திய படைமறவரும், வண்மையுடைய களிறுகளும் சூழப், புலால் நாற்றம் பொருந்திய பாசறை யிடத்தே, நிலவைப்போல விளங்கும் நின் வெள்ளிய வேலைப் புகழ்ந்து பாடும் பாடினியானவள், முழங்கும் முழவின் தாள் வொலிக்கேற்பத் தாளத்தை அறுத்து, இசையமைதியோடு வெறுங்கையை அசைத்து அசைத்துப் பாடுகின்றாள். விழாக் களம் போல விளங்கும் நின் ஆரவாரமிக்க திருவோலக்கத் திடத்தே யானும் வந்தேன்.
‘பாரி மறைந்தானாதலின் நீதான் என்னைக் காப்பாயாக’ என்று இரத்தற்கு நின்பால் வந்தேனில்லை. நின் புகழைக் குறைத்தோ மிகுதிப்படுத்தியோ யான் கூறவும் மாட்டேன். ‘தான் கொடுத்ததனால், தன்பாலுள்ள பொருள் குறைதலைக் கருதி வாழியாதன் ஒருபோதுமே இரங்கமாட்டான்; கொடுக்குந்தோறும் கொடுக்குந்தோறும் தன் புகழ் மிகுதியாதலை நினைந்தும் தான் மகிழமாட்டான்; ஈயும் போதெல்லாம் மிகவும் வள்ளன்மையாளனாகவே விளங்குகின்றான்’ எனப் பலரும் கூறும் நினது நல்ல புகழானது, என்னையும் நின்பால் இழுத்ததனாலேயே நின்னைக் காண யானும் வந்தேன்!
சொற்பொருளும் விளக்கமும்: பசும்புண் அரியல் – புதுப் புண்போல அன்றே வெடித்த பழத்தின் வெடிப்பு வாயினின்றும் ஒழுகும் தேன். வாடை – வாடைக் காற்று; வட காற்று வாடையாயிற்று. விறல் – வெற்றிப் பெருமிதம். ‘நாடு’ என்றது பறம்பு நாட்டினை. ஓவம் – ஓவியம். வினை – தொழில்வினை. பாவை – கொல்லிப்பாவை. மனையின் சிறப்பை, ‘ஓவத்தன்ன வினைபுனை நல்லில்’ எனவும், அம் மனைக்கு உரியவளான பாரியது பெருந்தேவியின் சிறப்பை, ‘பாவையன்ன நல்லோள்’ எனவும் வியந்து போற்றிக் கூறினர். இதனாற் பாரிவேள் தன் காதன் மனைவியுடன் கூடி யிருந்து ஆற்றிய செறிவான இல்லற வாழ்வின் செழுமையினையும் கண்டு மகிழ்ந்தவர் கபிலரென்று கூறலாம். உன்னம் – உன்னமரம்; போருக்குச் செல்வார் இதனிடத்து நிமித்தங் காண்பர்; வெற்றியெனின் அது தழைத்தும், தோல்வி யெய்தின் அது கரிந்தும் காட்டுமென்பது மரபு. அது கரிந்து காட்டியபோதும், அஞ்சானாய் மேற்சென்று, பகைவரையும் வெற்றிகொண்டு, அதன் நிமித்தக் கூற்றையும் பொய்யாக்கியவன் பாரிவேள் என்பார், ‘உன்னத்துப் பகைவன்’ என்றனர் . உன்னம் – ஒருவகைக் காட்டு மரம்; மிகவும் வலிமை யுடையது. ‘மார்பிற் சாந்து புலர்வதன்றி அவன் நெஞ்சத்து ஈகையான அருள் நோக்கமானது என்றும் புலராதென்பார், ‘புலர்ந்த சாந்திற் புலரா ஈகை’ என்றனர். மலர்ந்த மார்பு – அகன்ற அழகிய மார்பு. மாவண் பாரி – பெருவண்மையாளனாகிய பாரி. ‘முழவு மண் புலரல்’ மீளவும் மண்பூசுவார் இல்லாமையால். இனைதல் – வருந்திப் புலம்பல். வாராச் சேட் புலம் – மீட்டும் வாராத தொலைவிலுள்ள நாடு; மேலுலகம்; அவன் இறந்தான் என்பது குறிப்பு.
ஒள்வாள் – ஒளியுடைய வாள். உரவு – வலிமை. புலாஅம் – புலால் நாற்றம்; இது போர்ப்புண்பட்டுப் பாசறைக் கண்ணே சிகிச்சை பெற்றுவரும் படைமறவரின் புண்களி னின்றும் எழும் நாற்றம் ஆகும். ஒள்வாள் பகைவரை வெட்டி வீழ்த்தி வீழ்த்தி அவர்தம் குருதிக்கறை படிந்து விளங்குதலாலும், உரவுக்களிறுகள் பகைவரைக் குத்தியும் மிதித்துத் தேய்த்தும் கொன்றதனாலே கோடுகளும் பாதங்களும் குருதிக்கறை படிந்து தோன்றுதலாலும் எழுந்த புலால் நாற்றமும் ஆம். இதனாற் போர் முடிந்தபின் சேரமானும் அவன் வீரரும் குழுமியிருந்த களத்தையடுத்த பாசறை இதுவெனலாம்; எனவே, களத்தினின்றெழும் புலால் நாற்றத்தையுடைய பாசறை எனலும் பொருந்தும். ’நிலவின் அன்ன வெள்வேல்’ என்றது கறை நீக்கி நெய் பூசப்பெற்றுத் திகழும் வாளினை. அதனைச் சிறப்பித்துப் பாடினி பாடினளாதலின், ‘வெள்வேல் பாடினி’ என்றனர். முழவிற் போக்குதல் – முழவிசைக்கேற்பத் தாளத்தை அறுத் திசைத்தல். வெறும் கை – வெற்றுக்கை; பொருள்களை அவி நயிக்கும் தொழிற்கை யல்லாது தாளத்திற்கு இசையவிடும் எழிற்கை. பாடினி – பாடுவாளாகிய பாண்மகள். மகிழ் – மகிழ்ந்திருக்கும் திருவோலக்கம். கலி – ஆரவாரம். “பாரி இறந்தமையால் என்னைக் காப்பாயாக என்று நின்னை இரந்து பொருள்பெறக் கருதி வந்தேனில்லை” என்பார், ‘இரக்கு வாரேன்’ என்றனர். எஞ்சிக் கூறல் – கூட்டியோ குறைத்தோ மிகைபடக் கூறுதல். ’செய்யா கூறிக் கிளத்தல், எய்யா தாகின்று எம் சிறுசெந்நாவே (புறம். 148)’ எனக் கூறினாற் போல, உண்மைப் புகழை மட்டுமே கூறிப் போற்றுதல்.
“ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்; ஈத்தொறும் மாவள்ளியன்” என்பது, வாழியாதனைப்பற்றி உலகோர் கூறும் புகழுரை. ‘அத்தகைய புகழாளனாகிய நின்னைக் கண்டின்புறும் பொருட்டாகவே யானும் வந்தேன்’ என்கின்றனர் கபிலர். ‘கொடுக்குந்தோறும் கொடுக்கப்படும் பொருள் தன்னிடமிருந்து செலவாகிறதென வருந்தான்; அதனாற் புகழ் வருவதெனவும் மகிழான்; அளவோடு கொடுத்தாற் போதுமென்றும் கருதாது வாரிவாரி வழங்குவான் சேரமான்’ என்று உலகம் கூறுவதாகக் கூறுகின்றனர். இது வாழியாதனின் பரவிய பெருமை.
இதனாற் கபிலர் பாரியின் மறைவுக்குப் பின்னரே வாழியாதனிடம் சென்றனர் என்பதும், அவன் பாரி வள்ளலின் சமகாலத்தவன் என்பதும் நன்றாக விளங்கும். வாழியாதனைப் பாராட்டும்போது, தம் நண்பனான பாரியின் நினைவைச் சற்றும் மறவாது, பிறவரசன் முன்பேயும் எடுத்துக் கூறுவது, கபிலரின் உள்ளத்தில் பாரிபாலிருந்த பெருமதிப் பையும் உறவின் செறிவையும் காட்டும். பாரியின் மனைவியைப் பற்றியும் இச்செய்யுளுட் காணுகின்றோம்; அவள், பிற்காலத்து யாது காரணத்தாலோ இறந்தாளாதல் வேண்டும்; அல்லது பாரி இறந்ததும் அவளும் அந்நிலையே இறந்தாளாதல் வேண்டும். வரலாற்றுச் சிறப்புடைய பாட்டு இது. பாரியின் வரலாற்றில் ஒரு சிறந்த குறிப்பை இச்செய்யுளால் நாம் அறியலாம். இதனாலேயே பாரி மகளிர்க்குக் கபிலரே துணையாயின நிலையும் விளங்கும்.
62. வரைபோல் இஞ்சி !
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: வரை போல் இஞ்சி. சொல்லியது : வாழியாதனின் வெற்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம்: புனல்பொரு கிடங்கின் வரைபோல் இஞ்சியை உடையவரான, தம் வலியாற் செருக்கியிருந்த வேந்தரும் நினக்குப் பணிந்து, நீ அவர் அரணை முற்றிய காலையில் திறை தருதலின்றி, நின்னை எதிர்த்துப் போரிடக் கருதார் என்ற சிறப்பால், இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது.]
இழையணிந் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு
மழையென மருளும் மாயிரும் பல்தோல்
எஃகுபடை யறுத்த கொய்சுவல் புரவியொடு
மைந்துடை ஆரெயில் புடைபட வளைஇ
வந்துபுறத்து இறுக்கும் பசும்பிசிர் ஒள்ளழல் 5
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்பு
இல்லா மயலொடு பாடிமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்
துப்புத்துறை போகிய கொற்ற வேந்தே
புனல்பொரு கிடங்கின் வரைபோல் இஞ்சி 10
அணங்குடைத் தடக்கையர் தோட்டி செப்பி
பணிந்துநிறை தருபநின் பகைவ ராயின்
புல்லிடை வியன்புலம் பல்லா பரப்பி
வளனுடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த 15
களனறு குப்பை காஞ்சிச் சேர்த்தி
அரியல் ஆர்கை வன்கை வினைநர்
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்
ஆடுசிறை வரிவண்டு ஒப்பும்
பாடல் சான்றஅவர் அகன்தலை நாடே.
தெளிவுரை: நெற்றிப் பட்டமும் பொன்னரி மாலையு மாகிய அணிகளைப் பூண்டவாகப் பலவாகிய களிற்றின் தொகுதிகள் போருக்கு எழும். மழைமேகம் என்னும்படியாக மயக்கத்தைத் தரத் தக்கவாறு, மிகப்பெரும் பலவாகிய கிடுகுகளை ஏந்தியபடியே நின் படையணிகளும் அத்துடன் எழும். பகைவரின் வாட்படைஞரையும் வேற்படைஞரை யும் முன்னாளிலே பொருதழித்த, கொய்யப்பட்ட பிடரி மயிரையுடைய குதிரைப்படையும் அத்துடனே எழும். இவற்றோடுஞ் சென்று, பகைவரின், வலியுடையதும், பிறரால் எளிதிற் கவர்தற்கு அரியதுமாகிய கோட்டை மதில்களின் நாற்புறமும் நெருங்கச்சென்று, அவற்றை வளைத்துக் கொள்வாய். நின் நாற்படை யணிகளும் அம் மதிற்புறங்களிலே தண்டுகொண்டவாய்த் தங்கியிருக்கும். பகைவர் ஊர்களை நின் படைமறவர் கொளுத்துதலாலே, பசிய பிசிரையுடை ஒள்ளிய அழலானது, ஞாயிறு பலவாகப் பெருகியதுபோன்ற மாயத் தோற்றத்தைக் கொண்டதாய்ச் சுடரிட்டு, நாற்புறமும் மேலெழுந்து வானத்தேயும் விளங்கும். பொறுக்கவியலாத மயக்கத்தோடு முழக்கத்தைச் செய்தபடியே திரிகின்ற கூற்றத்தினது இயல்பினைக்கொண்ட, மிக்க திறலோடும் போர்த்துறை பலவற்றினும் பெருஞ்சிறப்புப் பெற்றுத் திகழுகின்ற வெற்றி வேந்தனே!
தன்னுள்ளே விளங்கும் மிக்க நீரானது கரையைப் பொருதியபடியே விளங்கும் அகழியினையும், மலையைப் போலுயர்ந்த மதிலையும் கொண்டு, வந்து எதிர்த்தாரை அஞ்சச்செய்யும் வலிமையாற் சிறந்த, பெரிய கையினராகிய நின் பகைவர், நினக்குப் பணிந்தாராக ’நின்பால் வணக்கமான மொழிகளைச் சொல்லியபடியே, நினக்குத் திறைப் பொருளையும் செலுத்துவாராயின்,
புல்வளமுடைய பரந்த புலத்தின்கண்ணே, பலவான ஆநிரைகளைப் பரவலாகச் சென்று மேயுமாறு போகவிட்டு விட்டு, வளமுடைய வயலிடத்தே விளைந்த கதிர்களினின்றும் உதிர்ந்த, களத்திற் சேர்த்துத் தூற்றப்படுவதல்லாத நெல் மணிகளின் குவியலைக் காஞ்சிமரத்தின் அடியிடத்தே சேர்த்துவைத்து, அதனைக் கள்ளுக்கு விலையாக வழங்கிக் கள்ளுண்ணலைச் செய்யும் வலிய முயற்சியினை யுடையவரான உழவர், அரிய பூவாகிய ஆம்பலைச் சூடிய சென்னியினராகத் தம்பால் மொய்க்கும் அசைகின்ற சிறகினையும் வரிகளையுமுடைய வண்டினங்களை ஓட்டியபடியே யிருக்கும், அப்பகைவரின் பரந்த இடத்தையுடைய வளநாடுகள், இனி நின் காவலுக்கு உட்படுதலின், புலவர் பாடும் புகழ் பெற்றனவாகும்.
சொற்பொருளும் விளக்கமும்: இழை – நெற்றிப்பட்டமும் பொன்னரிமாலையும் போல்வனவாகிய அணிகள். எழு தரும் – போரிடலைக் குறித்து எழுந்து செல்லும். தொழுதி – தொகுதி; அணியணியாகச் செல்லும் படையமைப்பு. மழை – மழை மேகம். தோல் – கிடுகு ; அதனையுடைய தானை மறவரைக் குறித்தது. எஃகு படை – வேலும் வாளும் ஆகிய படைக்கலன்களைத் தாங்கிய பகைவரின் படைமறவரைக் குறித்தது, இவரைச் சிதைத்து விரைய மேற்செல்லும் பேராண்மைமிக்க புரவிப்படை என்பார். ‘எஃகு படையறுத்த கொய்சுவற் புரவி’ என்றனர்; இப் பகைமறவர் பகைவரின் கோட்டைப் புறக்காவலர் எனவும், இவரை முதற்கண் அழித்து மேற்சென்று கோட்டை மதிற்புறத்தை முதற்கண் சென்றடைவது விரைந்த செலவையுடைய புரவிப்படை எனவும் கொள்க. மைந்து – வலிமை; பகைவர் எயிலின் வலிமை தோன்ற, ‘மைந்து உடைய ஆர் எயில்’ எனவுரைத்து அதனை அழித்து வென்ற வாழியாதனின் வாளாண்மையைப் போற்றி உரைக்கின்றனர். பசும்பிசிர் ஒள்ளழல் – பசிய பிசிரையுடைய ஒள்ளிய நெருப்பு; இது கோட்டைப் புறத்திருந்த பகைவரிடங்களை எல்லாம் எரியிட்டுக் கொளுத்தியதனாலே எழுந்தது. ‘ஞாயிறு பல்கிய மாயம் – சுட்டெரிக்கும் வெம்மையுடைய ஞாயிறு பலவாக எழுந்ததுபோன்ற அழலின் வெம்மை மிகுதியாகிய மயக்கம். மடங்கல் – கூற்றம்; ஊழிப்பெருந்தீயாகிய வடவைத்தீயெனவும் உரைப்பர். பாடு இமிழ்பு இழிதரும் – முழக்கத்தைச் செய்தபடியே திரியும்; கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிலே பட்டுப் படீர்படீரென வெடிக்கும் பல பொருள்களோடு நாற்புறமும் பரவும் தீயினை, முழக்கத்தோடு அனைத்தையும் எரித்தொழிக்கப் புகும் கூற்றத்திற்கு ஒப்பாக்கினர். வாழியாதனின் பசையழிக்கும் கடுந்திறலின் கொடிய தன்மைக்குப் ‘பசும்பிசிர் ஒள்ளழல் ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு, ஒல்லா மயலொடு பாடிமிழ்பு இழிதரும் மடங்கல் வண்ணங்கொண்டு எழுதலை’ உவமையாகக் கூறினராகவும் கொள்ளலாம். அதுதான் எதிரிட்ட அனைத்தையுமே அழித்துத் தானே எங்கணும் வெம்மையோடு மேலோங்கி நிற்றலைப்போல, வாழியாதனும் எதிரிட்ட பகைப்படையனைத்தையும் அழித்துத் தானே எப்புறத்தும் மேலோங்கி நிற்கவல்ல கடும் போர்த்திறலினை உடையவன் என்பதாம். துப்பு – வலிமை. கொற்றம் – வெற்றி. சுவல் – பிடரிமயிர்; அது கொய்யப் பெற்று ஒழுங்குபடுத்தப் பெறுதலின் ‘கொய்சுவல்’ என்றனர்; இன்றும் இவ்வாறு கொய்து அழகுபடுத்துதல் மரபு.
‘புனல் பொரு கிடங்கு’ என்றது அகழியின் நிர்ப் பெருக்கையும் அகலத்தையும் உணர்த்தும்; அதனாலேயே அதன்பால் அலையெழுந்து கரையை மோதிப் பொருதியபடி இருந்ததென்று கொள்க. அணங்குறுத்தற்கு ஏதுவான பெருவலியினை ’அணங்கு’ என்றனர். தோட்டி செப்பல் – தோட்டி போல உடலை வளைத்துப் பணிந்தவராகப் பணிவான சொற்களை மொழிதல். அவர் படைச் செருக்கு அழிந்து போக, உயிரைப் பேணும் கருத்தினராக அஞ்சிப் பணிந்து வாழமுற்பட்டுத் தொழுதுநின்ற நிலை இது.
‘பகைவர் பணிந்து திறையளப்பின், அவர் நாடு புலவர் பாடும் புகழுடைய பெருவளத்தினதாகும்’ என்றனர். இன்றே இதுதான் அழிந்து பாழ்படும் என்பது தேற்றம். ’வளனுடைச் செறு’ என்றது, வயல்களின். வளமான நெற்பயிரின் தன்மை தோன்றக் கூறியதாகும். ’விளைந்தவை உதிர்ந்த களனறு குப்பை’ என்றது. உரியவர் கதிரறுத்துப் போயினபின், வயல்களிற் சிதறிக் கிடக்கும் நெல்மணிகளை. இவற்றைத் துடைப்பத்தால் பெருக்கிச் சேர்த்து, ஆநிரை மேய்ப்பாரும் பிறரும் கள்ளுக்கு விலையாக தந்து கள்ளுண்டு களிப்பர் என்பதாம். இதனால், அந்நாட்டின் விளைவு மிகுதி பற்றிக் கூறினர். அரியல் – கள். ’வன்கை வினைஞர்’ என்றது, உதிர்ந்த மணிகளைத் தொகுத்தற்கு எடுத்துக்கொள்ளு கடுமையான உடல் உழைப்பைக் குறித்துக் கூறியதாம். பாடல்சான்ற – புலவர் பாடும் புகழ் பெற்றன. அவர்தாம் தம் நாட்டினை இத்தகைய வளமுடையதாகக் காணல் வேண்டின், தம்மிற் செருக்காது. நினக்குப் பணிந்துபோதலே செயத்தக்கது என்று கூறுவதன்மூலம், செல்வக் கடுங்கோவின் வெற்றி மேம்பாட்டைப் போற்றிப் புகழ்கின்றார் கபிலர். அரசரது பிறவாகிய பல புகழினுங் காட்டில், பகை யழித்து மேம்படுதலாகிய களவெற்றியால் வந்தடையும் வெற்றிப்புகழே சாலச்சிறந்ததென்பது பண்டைத் தமிழரசர் போற்றிய மரபாகும்.
63. அருவி யாம்பல் !
துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: அருவி யாம்பல். சொல்லியது: வாழியாதனின் பல குணங்களையும் ஒருங்கே உரைத்து வாழ்த்தியது.
[பெயர் விளக்கம்: அடை யடுப்பு அறியா அருவியாம்பல் என, ‘ஆம்பல்’ என்னும் பேரெண்ணைக் குறித்த சிறப்பால் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது.]
பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே
பணியா உள்ளமொ டணிவரக் கெழீஇ
நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணங்கமழ் அகலம்
மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே 5
நிலம்திறம் பெயருங் காலை யாயினும்
கிளந்த சொல்நீ பொய்ப்பறி யலையே;
சிறியிலை உழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்தமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி 10
ஒருமுற்று இருவர் ஓட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே!
ஆடுபெற் றறிந்த மள்ளர் மாறி
நீகண் டனையேம் என்றனர்; நீயும்
நும்நுகம் கொண்டினம் வென்றோய் : அதனால் 15
செல்வக் கோவே! சேரலர் மருக!
கால்திரை எடுத்த முழங்குகுரல் வேலி
நனந்தலை உலகம் செய்தநன்று உண்டெனின்
அடையடுப்பு அறியா அருவி ஆம்பல் 20
ஆயிர வெள்ள ஊழி
வாழி யாத, வாழிய பலவே!
தெளிவுரை: அறுவகைப்பட்ட ஒழுக்கங்களையும் பேணி வாழ்தலை உடையவரான பார்ப்பார்க்கு அல்லாது பிறருக்குப் பணிதலை நீதான் என்றுமே அறிந்தவனல்லை! பணிதலென்ப தற்ற உள்ளவெழுச்சியோடு, நின்னுடன் அழகுறப் பொருந்தி யிருக்கும் நின் உயிரனைய நண்பர்க்கல்லாது பிறருக்குக் கண்ணோட்டஞ் செய்து அஞ்சவும் மாட்டாய்! வளைந்த இந்திர தனுசைப் போன்ற மாலையானது கிடந்து வருத்தியபடியே யிருக்கின்ற தன்மை கொண்டது, நினது நறுஞ்சாந்து பூசப் பெற்றதனாலே மணங் கமழ்ந்துகொண்டிருக்கும் பரந்த மார்பகம். அதனை, நின் உரிமை மகளிர்க்கல்லாது பிறருக்கு விரித்துக் காட்டுவதனையும் நீதான் அறிந்திலை! நிலவகைகள் தத்தம் இயல்புகளிலே நின்றும் திரிந்து கெடுகின்ற வறட்சிக் காவத்தே யானாலும், சொல்லிய சொல்லினைப் பொய்யாக்கு தலையும் நீதான் அறியமாட்டாய்!
மிகச் சிறிய இலைகளைக் கொண்டதான உழிஞைப் பூவின் மாலையைச் சூடியபடியே, பகைப்புலத்தே யிருந்து கொள்ளத் தக்க செல்வம் மிக வுண்டாகுமாறு, தண் தமிழ் மறவர்களாகிய படையினைச் செலுத்திச் சென்று, குன்றுகள் நிலை தளர்விக்கும் இடியேற்றைப்போலச் சீற்றம் கொண்டு, ஒரு வளைப்பிலேயே பகை மன்னர் இருவரைத் தோற்றோடச் செய்த, ஒள்ளிய வாட்படை மறவரால் செய்யப்படுகின்ற வாட்போரிலே மேம்பட்ட தானையினையும், வெற்றிப் போரையும் உடையோனே!
முன்னர்ப் பல போர்களையும் செய்து வெற்றி பெற்றவராக இருந்தும், நின்னோடு செய்த போரிலே அப் பகை மறவர்கள் தம் வலியழிந்து தோற்றனர். தம் பகைமை எண்ணத்தினின்றும் மாறியவராக, ’நீ கருதியதையை இனிச் செய்வோம் பெருமானே!’ எனத் தாழ்மொழி கூறியவாறு நின்னைப் போற்றிப் பணிந்தனர். நீயும், நின் முன்னோரைப் போன்றே வன்மையும் கண்ணோட்டமும் கொண்டனையாய், மேலும் பல போர்களைச் செய்று பகைவரை வென்றனை.
அதனால், சேரவரசர்களின் குடிப் பிறந்தோனே! செல்வக் கடுங்கோ வாழியாதனே! காற்றாலே எடுக்கப்பெறும் அலைகளின் முழக்கமாகிய குரலையுடைய கடலினையே வேலியாகக் கொண்ட, பரந்த இடத்தையுடையது இவ்வுலகம். இவ்வுலகத்தவர் செய்த நற்செயல்கள் என்பது உண்டாயிருக்கு மானால், இலைகள் அடுக்கியிருத்தலை அறியாத அரும் பூவின் பேராகிய ஆம்பல் என்னும் பேரைக் கொண்ட பேரெண்ணின் மேலும், ‘ஆயிரவெள்ளம்’ என்னும் ஊழியளவும், வாழியாதனே, நீதான் பல புகழோடும் கூடியவனாக நெடிதிருந்து வாழ்வாயாக!
சொற்பொருளும் விளக்கமும்: பார்ப்பார் – ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்றாற்போல, அறுவகை ஒழுக்கத்தானும் நிரம்பிய சான்றோர். இவரைப் போற்றிப் பணிதல் பண்டையோர் போற்றிய மரபு. ‘இறைஞ்சுக பெரும நின் சென்னி, சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே’ என வரும் புறப்பாட்டு அடிகளும் இம் மரபினைக் காட்டும் (புறம்.6).’பணியா உள்ளம்’ என்றது, செருக்கிய பகைவர்க்குப் பணிந்துபோக நினையாத மனவூக்கத்தை; நட்பு நிலையில் தாழ்வு படாத உள்ளமும் ஆம். கெழீஇ பொருந்தி. கண் – கண்ணோட்டம் – தாட்சணியம்; நண்பர்க்குத் தாட்சணியத்திற்காக அஞ்சுதலன்றிப் பகைவர்க்கு ஒருபோதும் அஞ்சாய் என்பார், ‘நட்டோர்க்கல்லது கண் ‘அஞ்சலை’ என்றனர். நட்டோர் தம் உரிமையாற் சிலபோது கடிந்து கூறினும், அவர்க்குப் பணிந்து போதலையே இவ்வாறு கூறினர். தார், வளைந்த இந்திர தனுசைப்போல மார்பிடத்தே விளங்குதலின், ‘வணங்கு சிலை’ என்றனர். அகலம் – மார்பு. மகளிர் – உரிமை மகளிர். ‘மலர்ப்பு’ என்றது, தழுவிக் கொள்ளத் தருதலை; இது பிறர் யாரும் பொருதற்கு முன்வராததனால், நீதான் போகத்துக்கு இடமாக அல்லாதே பொருதற்கென்று மலர்வித்தலை அறியாய் என்றதாம். நிலம் திறம் பெயர்தல் – நிலவகைகள் தத்தம் தன்மை கெட்டிட அழிதல். அத்தகைய ஒருந்தாயக் காலத்து அனைத்துயிரும் தம் நிலைகெடுதல் கூடுமெனினும், வாழியாதன் சொன்ன சொற்களைப் பொய்ப்பதிலன் என்பதாம். இது அவன் வாய்மையையும், அவன் நாட்டு வளமையையும் கூறியதுமாம்.
’உழிஞைத் தெரியல் சூடி’ என்றது, நிகழ்ந்தது உழிஞைப் போர் என்பதற்காம். கொண்டி – கொளப்படும் பொருள். தமிழ் – தமிழ் மறவர். செறித்து – நிறைந்து. ‘கொண்டி மிகைப்பட’ என்றது, பகைவருடைய மிக்க பெருஞ் செல்வ வளம் அனைத்தையும் கைக்கொண்டு என்பதாம். ‘தமிழ்’ தமிழ் மறவரைக் குறிப்பதனைத் ‘தமிழ் தலைமயங்கிய தலை யாலங்கானத்து’ எனவரும் புறப்பாட்டடியும் காட்டும் (புறம். 19.); தென்தமிழ் ஆற்றல் அறியாது மலைந்த ஆரிய அரசர் (சிலப்.26: 161.)’ எனச் சிலம்பும் பகரும். முற்று வளைப்பு. இருவர் – இரு பகைவர்; தமிழ் செறித்து இருவர் சுட்டிய என்றதனால், அவர் தமிழரல்லாத பிறமொழி பேசும் நாட்டினராகலாம்.
ஆடு – வெற்றி. அழிந்த – தோற்ற. மள்ளர் – வீரர். மாறி – பகை நீங்கி. நீ கண்டனையேம் – நீ நினைத்தது போன்றே செய்தலை உடையோம். நுகம் – வலிமை. இனும் – மேலும்.
மருகன் – குடியிற் பிறந்த மகன். சேரலர் – சேரர். கால் – காற்று : ‘கால் எடுத்த திரை’ என்று கொள்க: ‘கால் எடுத்த முழங்கு குரல்’ என்றது கடலைக் குறித்தது; வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. வெளி – எல்லை. நன்று – நற்செயல்; இதனைப் புண்ணியம் என்பர். அடை – இலை. அடுப்பு – அடுக்கியிருத்தல். ‘அருவீ’ என்பதன் ‘வீ’ குறுகி நின்றது; ‘அரிய மலர்’ என்பது பொருள். வெள்ளம் – ஓர் பெரிய எண். ஆம்பல் – ஓர் பெரிய எண். அல்லி. மிக்க நெடுங்காலம் வாழியாதன் உயிர் வாழ்வதற்கு உலக மக்கள் புண்ணியஞ் செய்திருக்க வேண்டும் என்பதாம்; இது அவரை அவன் தன் காவல் மேம்பாட்டினாலே இன்ப வாழ்வின ராக்குதலால்.
64. உரைசால் வேள்வி!
துறை:காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: உரைசால் வேள்வி. சொல்லியது: வாழியாதனின் கொடைச் சிறப்பினை, அவனது வெற்றிச் சிறப்பினோடும் சேர்த்து உரைத்தது.
[பெயர் விளக்கம்: ”அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த வேள்வி யந்தணர்” என, அந்தணரின் கேள்விச் செவ்வியையும், வேள்விப் புகழையும் கூறிய சிறப்பாலே இப் பாட்டு இப் பெயரைப் பெற்றது.]
வலம்படு முரசின் வாய்வாள் கொற்றத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் அம்ம!
அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய
உரைசால் வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு 5
இருஞ்சே றாடிய மணல்மலி முற்றத்துக்
களிறுநிலை முனைஇய தாரருந் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி
அலங்கும் பாண்டில் இழையணிந் தீமென 10
ஆனாக் கொள்கையை ஆதலின் அவ்வயின்
மாயிரு விசும்பின் பன்மீன் ஒளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு, மாற்றார்
உறுமுரண் சிறைத்தநின் நோன்தாள் வாழ்த்திக்
காண்கு வந்திசின் கழல்தொடி அண்ணல்! 15
மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
இதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி; அதனால்
பசியுடை ஒக்கலை ஓரீய
இசைமேந் நோன்றல்நின் பாசறை யானே! 20
தெளிவுரை: வெற்றிச் சிறப்புப் பொருந்திய வீரமுரசத்தையும், வாட்போரால் வாய்த்த போர் வெற்றியையும் உடையவரான பொற்பூணணிந்த வேந்தர்கள், இவ்வுலகிற் பலர் உள்ளனர்; எனினும்,
அறநெறிகளையே உரைத்தபடி விளங்கும் செவ்விய நாவினையும், விளங்கிய புகழாற் சிறந்த வேள்விகளை இயற்றி முடித்த பெருமையினையும் கொண்ட வேதக்கேள்வியினரான அந்தணர், நீ வழங்கும் அரிய அணிகலன்களை ஏற்றுக்கொள்ளுமாறு, நீ நீர்வார்த்து அவற்றை அவர்களுக்கு வழங்குவாய். அங்ஙனம், நீ வார்த்த நீர் படுதலாலே மணல்மலிந்த நின் அரண்மனை முற்றமும் பெரிதும் சேறுபட்டுப் போகுமே!
அதனாலே, அம் முற்றத்தின்கண் நிற்றலைத் தாம் வெறுத்தவாய், நின்னுடைய யானைகள், நிலைகொள்ளாதே அசைந்தபடியிருக்கும். அத்தகைய கோயில் முற்றத்தையும், ஒழுங்கான அமைப்பையும், பரிசிலரன்றிப் பிறர் செல்லுதற் கரிய காவலையுமுடைய மதிற்புறத்தையும் கொண்ட திருக் கோயிலில் உள்ளவனே! நின் திருமாளிகையின் மதிற்புறத்தே வருகின்ற கூத்தர்களைக் காணின், ”விரைவாகவே அவருக்குக் கத்தரிகையால் கத்தரிக்கப்பட்ட பிடரிமயிரையுடைய குதிரைகளையும், அசைந்து செல்லும் தேர்களையும் அவ்வவற் றிற்குரிய அணிகளை எல்லாம் அணிந்து கொடுப்பீராக” என்று நின் ஏவலர்க்குக் கூறியுள்ளோனே! அத்தகைய கொடுக்கும் கொள்கையாளன் நீயாதலின், அவ்விடத்தே –
மிகப்பெரிதான வானத்திடத்தேயுள்ள பலவான விண் மீன்களின் ஒளியும் மழுங்கிப் போகும்வண்ணம் ஞாயிறு எழுந்து தோன்றினாற்போல, நின் பகைவரின் மிக்க மாறு பாட்டை எல்லாம் சிதைத்த நின் வலிமைமிக்க முயற்சியை வாழ்த்தி, நின் பாசறைக் கண்ணேயே நின்னைக் காணும் பொருட்டாக யானும் வந்தேன்.
கழலவணிந்த வீரவளையினையுடைய தலைவனே! கருமை பொருந்திய மலர்களையுடைய கழியின் கண்ணே மலர்ந்து, நெய்தற்பூவின் இதழது வனப்புப் பொருந்திய தோற்றத்தோடு வானத்தே மேலெழுந்த கார்மேகத்தினும் காட்டில், நீதான் பெரிதான நற்பயனை இவ்வுலகுக்குப் பொழிகின்றனை!
ஆதலினாலே, பசியினையுடைய எம் உறவினரது துன்பத்தைப் போக்கிய புகழால் மேம்பட்ட தோன்றலே! நின் பாசறையிடத்தேயும் நின்னைக் காண்பதற்காக யானும் வந்தேன், பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும்: வலம்படு முரசம் – வெற்றிச் சிறப்புப் பொருந்திய தன் முழக்காலேயே பகைவரைப் பணியச்செய்து வெற்றி தேடித்தருகின்ற முரசமும் ஆம். வாய்வாள் கொற்றம் வாளாண்மையாலே வாய்த்த வெற்றி. பொலம்பூண் – பொற்பூண். அறங்கரைத்து வயங்கிய நா: அறமே எஞ்ஞான்றும் கூறிக்கூறி முழக்கிய, அற விளக் கத்தையுடைய நாக்கு. பிறங்குதல் – விளங்குதல். உரைசால். புகழ் நிறைந்த. கேள்வி – வேதம்; குருவிடம் கேட்டே அறியப்படுவது. ஏற்று – நிற்க. மணல்மலி – மணல்நிரம்பிய. முணைஇய- வெறுத்த. தார் – ஒழுங்கு. தகைப்பு – மதிற்சுவர். புறஞ் சிறை – மதிற்புறம்; புறமதிற் பக்கம். வயிரியர் – கூத்தர். அலங்கும் – அசையும். பாண்டில் – தேர். கொள்கை – கோட்பாடு. மாயிரு விசும்பு – மிகக் கருமை படர்ந்த வானம். உறுமுரண் – மிக்க மாறுபாடு. நோன்தாள் – வலிய முயற்சி. கழல் தொடி- கழல்வணிந்த வளைகள். மை படு – கருமை பொருந்திய. உயர்ந்த – வானின்மேலே உயர்ந்தெழுந்த. மழை – மேகம். பயம் – பயன். இசைமேந் தோன்றல் புகழால் மேம்பட்ட தலைவனே!
இதனாற் செல்வக் கடுங்கோ வாழியாதனின் கொடை மேம்பாடும் மறமேம்பாடும் கூறி, அவனைப் போற்றினர் கபிலர்.
அந்தணர்க்கு நீர்வார்த்து ஊரும் பொருளும் வழங்குதல் அக்காலத்தே மிகப் புகழுடையதொரு செயலாகச் சிலராற் கருதப்பட்டது என்பதும் இதனாலே விளங்கும். கபிலர். அந்தணாளராதலின், இவ்வாறு அந்தணர்க்கு வாழியாதன் வழங்கிய பெருங்கொடையினைப் போற்றினர் என்பதும் கருத்தாகும்.
அக்காலத்து அந்தணரும் தம்முடையவான ஓதல் ஓதுவித்தல் போலும் நெறிகளையே பேணி வாழ்ந்தவர் ஆவர். ஆதலின் அவர்தம் வாழ்வியலுக்கான வசதிகளை அரசரும் செல்வரும் செய்தனராதல் வேண்டும்.
65. நாள்மகிழ் இருக்கை !
துறை:பரிசிற்றுறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: நாள் மகிழ் இருக்கை. சொல்லியது: வாழியாதனது திருவோலக்கச் சிறப்போடு சேர்த்து; அவன் செல்வச் சிறப்பும் கூறினார்.
[பெயர் விளக்கம்: காலைப்பொழுதில் அரசன் வந்து கொலுவீற்றிருக்கும் மகிழ்வான திருவோலக்க இருக்கையை ‘நாள் மகிழ் இருக்கை’ என்றதனால், இப்பாட்டு இப்பெயர் பெற்றது.]
எறிபிணம் இடறிய செம்மறுக் குளம்பின்
பரியுடை நன்மா விரியுளை ஓட்டி
மலைத்த தெவ்வர் மறம்தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வில்லோர் மெய்ம்மறை! சேர்ந்தோர் செல்வ! 5
பூணணிந்து எழிலிய வனைந்துவரல் இளமுலை
மான்வரி யல்குல் மலர்ந்த நோக்கின்
வேய்புரைபு எழிலிய விளங்கிறைப் பணைத்தோள்
காமர் கடவுளும் ஆளும் கற்பின்
சேணாறு நறுநுதல் சேயிழை கணவ! 10
பாணர் புரவல! பரிசிலர் வெறுக்கை !
பூணணிந்து விளங்கிய புகழ்சால் மார்ப! நின்
நாள்மகிழ் இருக்கை இனிதுகண் டிகுமே!
தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்குச் 15
சேறுசெய் மாரியின் அளிக்கும் நின்
சாறுபடு திருவின் நனைமகி ழானே!
தெளிவுரை: போர்க்களத்திலே வெட்டுண்டு கிடக்கும் பிணங்களின்மேலே கால் இடறியதனால் சிவந்த குருதிக் கறை படிந்த குளம்பினையும், விரையச்செல்லும் செலவினையு முடைய நல்ல குதிரைக்கு, விரிந்த தலையாட்டத்தைச்சூட்டி தம்மோடு வந்து பொருதிய பகைவரின் வீரங் கெட்டழியுமாறு வென்றவரும், யாக்கை நிலையாமையை எப்போதும் தம் முடைய நெஞ்சிலே நீங்காமற் கொண்டிருப்பவருமான போர் வீரர்களின் தலைவனே! விற்படையாளருக்கு கவசம் போன்றவனே! நின்னைச் சேர்ந்தோருக்கு நீயே பெறற்கரிய பெருஞ் செல்வமாக விளங்குபவனே!
பூண்கள் அணியப்பெற்று விளங்குவனவும், முலைக் கோலம் தீட்டப்பெற்றவுமான, புடைத்து வருதலையுடைய இளையவான மார்பகங்களையும், மாட்சியான ரேகைகள் பொருந்திய அல்குல் தடத்தையும், மலர்ச்சி பெற்று விளங்கும் கண்களையும், மூங்கிலைப்போன்று அழகுபெற்று விளங்கும் விளக்கம் பொருந்திய மூட்டுக்களை உடையவு மாகிய பணைத்த தோள்களையும், விரும்பத்தக்க அருந்ததி யையும் ஆட்சிசெய்யும் கற்பினையும், நெடுந்தொலைவுக்கும் மணம் வீசுகின்ற நறிய நுதலையும் கொண்டவளான, செம்பொன் அணிகளைப் பூண்டுள்ள அரசமாதேவியின் கணவனே !
பாடிவரும் பாணர்களைப் பேணிப் பாதுகாப்போனே! வந்திரக்கும் பரிசிலர்க்கு அவரது செல்வமாகவே விளங்குவோனே! முத்தாரம் போன்ற அணிகளை அணிந்து, அதனாலே ஒளியுற்று விளங்கிய புகழ்நிறைந்த மார்பினை உடையோனே! இபிராகத் தொடுத்தலையுடைய நரம்புகளைக் கொண்டதான பாலையாழை இசத்தலிலே வல்லவன் ஒருவன், துன்பத்தைச் செய்யும் உறுப்பினைக் கொண்ட பாலைப்பண்ணை மாறிமாறி இசைத்தாற்போல, சேற்றினைச் செய்யும் மழையைப்போல மதுவை இடையறாது வார்த்து அளிக்கின்ற சிறப்புடையதும், விழவின் தன்மை பொருந்தியதும், மகிழ்ச்சியை உடையதுமான நின் நாளோலக்கச் செல்வச் சிறப்பினை, யாமும் இப்போது இனிதாகக் கண்டோம், பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும்: எறிதல்- வெட்டி வீழ்த்துதல். செம்மறு – சிவப்பான குருதிக்கறை. பரி – விரைவு; குதிரைக் கதிகளுள் ஒன்று. நன்மா – நல்ல சாதிக் குதிரை. விரியுளை – விரிந்த தலையாட்டம். மலைத்த – போரிடலில் ஈடுபட்ட. தெவ்வர் – பகைவர். மறம்தப – வலிமைகெட காஞ்சி சான்ற – நிலையாமை நிறைந்த. வயவர் – போர் மறவர். வில்லோர் – வில்லேந்திப் போரிடுகின்ற படைமறவர். பூண் – அணிகல வகை. எழிலிய – அழகு பெற்று விளங்கு கின்ற. வனைதல் – அழகுற எழுதுதல். வரல் – வளர்தல் ; குங்குமக் குழம்பினாலே மகளிர் தம் முலைமுற்றத்தும் தோள்களிலும் வரையும் கரும்பு வில் போன்ற சித்திரங்களை வனைதல் என்றனர்; இதனைத் தொய்யில் எழுதுதல் எனவும் உரைப்பர். மாண் – அழகு. வரி – இரேகைகள். அல்குல் – இடையின் பின்புறத்துத் தேர்த்தட்டுப்போலத் தோன்றும் பகுதி. நோக்கு – கண்கள். இறை – மூட்டுவாய்; சந்து. பணை – பருத்த. காமர் கடவுள் – மகளிர் விரும்பத்தக்க கடவுளான அருந்ததி. ஆளுதல் – வென்று தனக்கு அடிமைப்படுத்துதல்: அவளினும் சிறந்த கற்பினாள் என்பதாம். ‘சேயிழை’ என்றது வாழியாதனின் தேவியைக் குறித்தது.
புரவலன் – காத்தலிலே வல்லவன். வெறுக்கை – செல்வம். சால – நிறைந்த. நாள் – காலைப்பொழுது. மகிழ்-மகிழ்ச்சியுடைய. இருக்கை – வீற்றிருத்தல். கண்டிகும் – கண்டோம். தீந்தொடை – இனிதாகத் தொடுத்தல். பாலை – பாலையாழ். பையுள் – துன்பம். ‘பண்’ என்றது பாலைப்பண்ணை. பெயர்த்தல் – மாறி மாறி இசைத்தல். வெவ்வேறு சுவையைக் கொண்ட மதுவுக்குப் பாலைப்பண்ணின் வெவ்வேறு இசை அமைதிகளும் உவமை. சாறுபடு – விழாவின் தன்மை பொருந்திய. நனை – கள்; மதுவுக்குப் பொதுப்பெயரும் ஆம். ‘மாரியின்’ என்னும் உவமம் மதுக்களில் ஒரோவொன்றைக் கொடுக்கும் மிகுதிக்கு உவமம்” எனவும், ’சாறுபடு திருவின்’ என்ற உவமம் “அம் மதுக்களைப் பானம் பண்ணுங் காலத்து அலங்காரமாகக் கூட்டும் பூவும் விரையும் முதலாய பொருள்களுக்கு உவமம்” எனவும், ‘சாறு’ என்றது விழாவின் தன்மையை எனவும், ‘மகிழ்’ என்றது மகிழ்ச்சியையுடைய திருவோலக்க இருப்பினை எனவும் பழைய உரைகாரர் கூறி யுள்ளனர்.
’காஞ்சி சான்ற வயவர் பெருமகன்’ ஆகலின், தான் தேடிய செல்வத்தை வழங்கியும், காதன் மனையாளோடு சுகித்தும், மதுவைப் பெருக வழங்கிக் களித்தும், அவன் உலகியலின்ப நுகர்விலும் ஈடுபட்டுச் சிறந்தனன்’ என்றனர்.
66. புதல்சூழ் பறவை !
துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. சொல்லியது: அவன் வென்றிச் சிறப்புடன் படுத்துக் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.
[பெயர் விளக்கம்: புதல்சூழ் பறவை – கிழித்துக் குறுக் நறுக்கி வாகையோடு இடை வைத்துத் தொடுத்த பனங்குருத்து முல்லை முகைக்கு ஒப்பாகவும், வாகைப்பூ அம் முல்லையைச் சூழ்ந்த வண்டிற்கு ஒப்பாகவும் உவமம் கொள்ள வைத்துள்ள சிறப்பால், இதற்குப் ‘புதல்சூழ் பறவை’ என்பது பெயராயிற்று.]
வாங்கிரு மருப்பின் தீந்தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப்
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல!
இடியிசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார்
வேலுடைக் குழூஉச்சமம் ததைய நூறிக் 5
கொன்றுபுறம் பெற்ற பிணம்பயில் அழுவத்துத்
தொன்றுத்திறை தந்த களிற்றொடு நெல்லின்
அம்பண அளவை விரிந்துறை போகிய
ஆர்பதம் நல்கும் என்ப கறுத்தோர்
உறுமுரன் தாங்கிய தாரருந் தகைப்பின் 10
நாள்மழைக் குழூஉச்சிமை கடுக்கும் நோன்றல்
தோல்மிசைத் தெழுநரும் விரிந்திலங்கு எஃகின்
நார்புரிந் தன்ன வாளுடை விழவின்
போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்பப் 15
பூத்த முல்லைப் புதல்சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் தொடைக்குலைச் சேக்கும்
வான்பளிங்கு விரைஇய செம்பரல் முரம்பின்
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே. 20
தெளிவுரை: வளைவான கரிய கொம்பினையும், இனிய நரம்பின் தொடர்ச்சி முதிர்ந்த செவ்வியைக் கொண்ட இசை பிறத்தற்கு உரிய இடத்தையும் பெற்ற, பேரியாழினிடத்தே பாலைப்பண்ணை அமைத்து வாழியாதனிடம் பரிசிலை நாடிச் செல்வோனாகிய, முதிய வாய்மையினையுடைய இரவலனே!
இடிபோல முழக்கஞ் செய்யும் போர்முரசத்தோடு, நானும் வஞ்சினங்கூறிச் சென்று, பகைவரது வேற்படை மறவரின் கூட்டம் நிறைந்த போர்க்களத்தே அவரின் ஆற்றல் கெடுமாறு அவரை அழித்துக் கொன்று, அவர்களுள் எஞ்சியோரைப் புறங்கொடுத்து ஓடச் செய்தனன். பிணங்கள் மலிந்த அந்தப் போர்க்களத்தின் பரப்பிலே, அப்பகைவர் தோற்றுப்பணிந்து பழைய திறையாகத் தந்த களிறுகளோடு, நெல்லின் மரக்காலால் அளந்து கணக்கிடவியலாத பெரும் நெற்குவியல்களையும், தன்னை வந்து இரந்தோர்க்கு உணவுப் பொருளாகவும் வாழியாதன் தருவான் என்பர்.
தன்னைப் பகைத்து வந்தாரான பகைவரது மிக்க மாறுபாட்டைத் தடுத்து நிறுத்த வல்லதும், பகைவரால் வெல்லுதற்கு அரியதுமான படைவகுப்பினை உடையவன் வாழியாதன் பருவகால மேகக்கூட்டங்கள் தங்கியுள்ள மலைச்சிகரத்தைப் போன்ற தோற்றத்தையுடைய கேடகங்களுக்கு மேலெழுந்து சென்று, ஒளிபரந்து விளங்கும் வேல்களைக் கொண்ட வேல் மறவரை உடையவன், மாலை அசைவதுபோல அசைகின்ற வாட்களையுடைய வாள் மறவரை உடையவன், போரிடைக் கலந்து கொள்ளும் இவ்வீரர்கள் விழாக்கோலம் கொண்டனர். பனங்குருத்தை இடையிடையே வைத்துத் தொடுத்த வெற்றியிலக்கும் விரும்பும் வாகையின் மென்மலர்களாற் கட்டப்பெற்ற மாலையினை அணிந்திருந்தனர். இம் மாலைகளைப் போலத் தோற்றங் காட்டிப் பூத்திருந்த முல்லைப்புதர்களிலே வண்டினங்கள் மொய்த்தபடி இருந்தன. பின்னர், அவை அதனைவிட்டு அக்காட்டிடத்தேயுள்ள பிடாவினது மாலை போலப் பூத்துள்ள பூங்கொத்துக்களிலே சென்று தங்கியிருக்கும். அவ்வாறு அவை தங்குவதற்கு இடமாயிருப்பதும் வெண்பளிங்குக் கற்களோடு சிவந்த பரற்கற்களும் விரவிச் கிடப்பதுமான வலிய மேட்டு நிலத்திலே, விளங்கும் ஒளி பொருந்திய சிவந்த இரத்தினக் கற்களைப் பெறுவதற்கு இடமாயிருப்பதுமாகிய அகன்ற இடத்தைக் கொண்டதான ஊர்களையுடைய நாட்டிற்குத் தலைவனும் வாழியாதல் நியே ஆவாய்.
சொற்பொருளும் விளக்கமும்: வாங்குதல் – வளைதல். இருமறுப்பு – கரிய கொம்பு; யாழின் தண்டு. தீந்தொடை இனிய நரம்புத்தொடர்ச்சி. ‘இடன்’ என்றது, இசை பிறத் தற்கு உரிய இடனை. பேரியாழ் – யாழ்வகையுள் ஒன்று. பாலை – பாலைப்பண். படர்ந்தனை – நினைத்தாயாக. முதுவாய் – முதிய வாய்மை; என்றும் வாய்மையே பேசிவரும் முதிர்ந்த தன்மை. இடியிசை முரசம் – இடியோசைபோல ஓசையெழுப்பும் முரசம். ஒன்று மொழிந்து – வஞ்சினங் கூறி. ஒன்னார் பகைவர். குழூஉ – கூட்டம். சமம் ததைய – போர்ச்செயல் கெடுமாறு. நூறி – அழித்து. புறம்பெறல் – பகைவரைப் புறமிட்டு ஓடச்செய்தல். பயில் – நெருங்கிய. அழுவம்- போர்க்களப் பரப்பு. தொன்று திறை – பழைய திறை; முன்னர்த் தரவேண்டிய திறைப்பொருள். அம்பணம் – மரக் கால். விரிதல் – மிகுதல். உறைபோகிய – கணக்கிடவியலாத ஆர்பதம் – மிக்க உணவு.
கறுத்தோர்- சினந்து போர் மேற்கொண்டவரான பகைவர். உறுமுரண் – மிக்க மாறுபாடு. தங்கிய – தடுத்து நிறுத்திய. தார் – ஒழுங்கு. தகைப்பு – படைவகுப்பு. நாள் மழை – பருவகால மேகம். குழூஉ – கூட்டம். கடுக்கும் – ஒக்கும். தோன்றல் தோல் – தோற்றத்தைக் கொண்ட கேடகங்கள். மிசைத்து – மேற்பட்டு. எழுதரும் – எழுந்து தோன்றும். எஃகு – வேல். வேல்கள் கேடகங்கட்கு மேலாக உயர்ந்து தோன்றுதலைத் ‘தோல்மிசைத்து எழுதரும் எஃகு என்றனர். தார்புரிந்தன்ன மாலையசைவதுபோல. ‘வாளுடைய விழவின்’ என்றது, வாள் மறவரும் வேல்மற வரும் ஆகியோர் தம்முள் திறமைதோன்ற மகிழ்வோடும் போரிட்டுப் பயில்கின்ற விழா நாளை யாம். இதனைக் காணும் பகைவர் தாமே அஞ்சிப் பணிதலோடு, வீரர்க்கும் இதனால் ஊக்கமிகுதி பிறக்கும் என்பதுமாம். போர்படு – போர் செய்தற்குக் காரணமான. போந்து – பனங்குருத்து.
‘கடவுள்’ என்றது, வெற்றித் திருமகளை யாகலாம்; கொற்றவை எனினும் பொருந்தும். துய்வீ – மெல்லிய பூ; தூய்யையுடைய பூவுமாம். புதல் – புதர். ‘பறவை’ என்றது வண்டினத்தை. முல்லை முகைக்குப் பனந்தோடும், அதனைச் சூழ்ந்துள்ள வாகை மலருக்கு வரிகளையுடைய வண்டினமும் உவமையாகக் கொள்க. வெற்றி பெற்றார் சூடுதல் வாகைப் பூவாதல் பற்றி, அதனை வெற்றிக்குரிய கடவுள் வாழும் வாகை என்றனர்.
‘வெற்றிவிழாக் கொண்டாடியிருக்கும் காலம் ஆதலால், இரவலனே, நீயும் வாழியாதனிடமிருந்து பெரும் பரிசில் பெறுவை’ எனக் கூறி வழிப்படுத்தியதாம்.
67. வெண்போழ்க் கண்ணியர்!
துறை:பாணாற்றுப்படை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: வெண்போழ்க் கண்ணி. சொல்லியது: வாழியாதனின் கொடைச் சிறப்பு இதனாற் கூறப்பட்டது.
[பெயர் விளக்கம்: தொடுத்தற்குரிய பூவல்லாத பனங்குருத்தைத் தொடுக்கப்படும் கொன்றையோடு சேரத்தொடுத்தது பற்றி, நாறிணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணி எனக் கூறினர்; இந்த அடைச்சிறப்பால் இப் பாட்டு இப் பெயரைப் பெற்றது.]
கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
கடனறி மரபின் கைவல் பாண!
தென்கடல் முத்தமொடு நன்பலம் பெறுகுவை
கொல்படை தெரிய வெல்பொடி நுடங்க 5
வயங்குகதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்பப்
பல்களிற் றினநிரை புலம்பெயர்ந்து இயல்வர்
அமர்க்கண் அமைந்த அவிர்நிணப் பரப்பில்
குழூஉச்சிறை எருவை குருதி ஆரத்
தலைலுமிந்து எஞ்சிய ஆண்மலி யூபமொடு 10
உருவில் பேய்மகள் கவலை கவற்ற
நாடுடன் நடுங்கப் பல்செருக் கொன்று
நாறிணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணியர்
வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்
நெறிபடு மருப்பின் இருங்கன் மூரியொடு 15
வளைதலை மாந்த தாழ்கரும் பாசவர்
எஃகாடு ஊனம் கடுப்பமெய் சிதைந்து
சாந்தெழில் மறைத்த சான்றோர் பெருமகன்
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
படும்பறைத் நும்பி ஞர்நசைத் தாஅய்ப் 20
பறைபண் அழியும் பாடுசால் நெடுவரைக்
கல்லுயர் நேரிப் பொருநன்
செல்வக் கோமான் பாடினை செலினே.
தெளிவுரை: செய்யத்தகுந்த கடமைகளை யறிந்த மரபினையுடைய யாழிசைத்தலிலே வல்ல பாணனே! நீதான் வாழியாதனைப் பாடிச் சென்றனையானால், கொடுமணம் என்னும் ஊரிடத்தே செய்யப்பட்ட நல்ல அணிகலன்களோடு, பந்தர் என்னும் பேரூரிலேயிருந்து பெறப்பட்ட தெளிந்த கடலிலிருந்து கிடைத்த முத்துக்களையும், மிக்க புகழையுடைய நின் சுற்றத்தாரோடு நீயும் பெறுவாய்.
படைத்தலைவர்கள் எதிரிகளைக் கொல்லுவதற்குரிய படைக்கலன்களை ஆராய்ந்தபடி இருந்தனர். அவன் வெற்றியைச் சொல்லும் கொடியும் அசைந்து பறந்துகொண்டிருந்தது. விளக்கமான ஒளியுடைய ஊதுகொம்புகளோடுங்கூடி வலம்புரிச்சங்குகளும் ஒலித்துக் கொண்டிருந்தன. பலவாகிய போர்க்களிறுகளின் கூட்டம் கூட்டமான வரிசைகள் தாமிருந்த இடத்தைவிட்டுப் பெயர்ந்து களத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. போரிடுதற்குரிய இடமாக அமைந்ததும், வெட்டுண்ட வீரர்களின் நிணக்குவியல் கிடப்பதுமான போர்க்களப்பரப்பிலே, சிறகுகளையுடைய எருவைகளின் கூட்டங்கள் குருதியை நிறைய உண்டுகொண்டிருந்தன. தலைகள் வெட்டுப்பட்டுப்போய் எஞ்சிக் கிடந்த ஆண்மை மிக்கவையான மறவர்களின் குறையுடம்புகளோடு, அழகற்ற வடிவத்தையுடைய பேய்மகள் காண்போர்க்கு வருத்தத்தைச் செய்தபடி இருந்தாள். இவ்வாறு, பகைவரின் நாடுகள் அனைத்தும் ஒருசேர நடுக்கங் கொள்ளுமாறு, பல போர்களிலும் ஈடுபட்டுப் பகையரசரைக் கொன்றவன் வாழியாதன்.
மணம் வீசுகின்ற கொன்றை மலர்களோடு சேர்த்துத் தொடுத்த வெள்ளிய பனங்குருத்தும் கொண்ட தலைக் கண்ணியை உடையவர்கள்; வாளின் வாய் வெட்டியதனால் அமைந்த வடுக்களாகிய மாட்சிமைப்பட்ட கோடுகள் பொருந்திய உடலினைக் கொண்டவர்கள்; முறுக்குண்ட கொம்புகளையும் கரிய கண்களையும் கொண்ட ஆட்டுக்கிடாய்களோடு, வளைந்த தலைகளையுடைய பிற விலங்குகளின் தாழ்வான இழிந்த இறைச்சிகளையும் விற்பவர்கள்; ஊனை வைத்து வெட்டரிவாளால் வெட்டிச் சிதைக்கப் பயன்படுத்தும் மணைக்கட்டையைப் போன்று விளங்கும் பகைப்படையால் புண்பட்டுச் சிதைந்த மார்பினை உடையவர்கள்; அம் மார்புகளிற் பூசப்படும் சந்தனக்குழம்பையும் மறைத்தபடி அவ்வடுக்கள் தோன்ற விளங்குபவர்கள்; வாழியாதனுடைய படை மறவர்கள். அவர்களுடைய தலைவன் அவன்!
மலர்ந்துள்ள காந்தட்பூக்களைத் தெய்வத்திற் உரியவை எனக் கருதி அகன்று போகாதே, அவற்றையும் ஊதித் தேனுண்ட பின்னர், விரைந்து அவ்விடத்திலிருந்து பறக்கும் வண்டுகள், அப்பூக்களைத் தெய்வமானது விரும்புதலை யுடைத்து ஆயினமையாலே, தம்முடைய பறக்கும் பண்பினை இழந்துபோய்விடுவன வாகும். அத்தகைய பெருமை நிறைந்த நெடிய பக்கமலைகளை யுடையதாக, மிகவுயர்ந்து விளங்கும் நேரிமலைக்குரிய தலைவனும், செல்வத்தாற் சிறந்த கோமானுமாகியவன் செல்வக்கடுங்கோ வாழியாதன். அவனைப் பாடினையாகச் சென்றாயானால், நீதான் தெண்கடல் முத்தமொடு பிற நன்கலமும் பெறுகுவை.
சொற்பொருளும் விளக்கமும்: கொடுமணம் – ஓர் ஊர்; அணிகலன் செய்யும் தொழிலிற் பேர்பெற்றது. நெடுமொழி – பெரும்புகழ். ஒக்கல்- சுற்றத்தார். பந்தர் – ஓர் ஊர்; முத்துக்களுக்குப் பெயர் பெற்றது. கடன் – கடமை. வாளன் யாழிசைக்கும் தொழிலிலே வல்லானாகிய பாணன். தெண்கடல் – தெளிந்த கடல். கொல்படை – பகைவரைக் கொல்லுதற்கேற்ற படைக் கருவிகள். தெரிய – ஆராம். வெல்கொடி – வெல்லுங்கொடி; கொடியின் எழுச்சியைக் கண்டதுமே பகைவர் அச்சமுற்று நடுங்கிப் போவர் என்பதனால் ‘வெல்கொடி’ என்றனர். வயுங்கு கதிர் – விளங்கும் ஒளிக்கதிர். வயிர் – ஊது கொம்பு. வலம்புரி – வலம்புரிச் சங்கம். ஆர்ப்ப – ஒலிக்க. பல்களிற்று இன்நிரை – களிறுகளின் பலவாகிய கூட்டங்களின் வரிசை. ‘புலம் பெயர்ந்து இயல்வர’ என்றது, தாம் கட்டப்பெற்றிருந்த பந்தியை கட்டுக் களத்தை நோக்கிச் செல்பவாயின என்றதாம். அமர்க்கண் – போரிடற்கு உரிய இடம்; போரிடத்தும் ஆம். அவிர்நிணம் – நிணம் விளங்குகின்ற. எருவை – பருந்துச் சாதியுள்ள ஒன்று. துமிந்து – வெட்டுப்பட்டு. யூபம் – தூண்; இங்கே இது தலையற்ற முண்டங்களைக் குறித்தது. உருவில் – அழகற்ற. கவலை – வருத்தம். செரு – போர். கொன்று – பகைவரைக் கொன்று.
வாள்முகம் – வாளின்வாய். பொறித்த – கிழித்த. மாண்வரி – மாட்சியமைந்த தழும்புகளாகிய கோடுகள். நெறிபடு மருப்பு – முறுக்குடைய மருப்பு. இருங்கண் மூரி – கருங் கண்களையுடைய எருது; இதனை ஆட்டுக்கிடாயாகவேனும், மானேறாகவேனும் கொள்க. ஊனம் – இறைச்சியை இட்டு வெட்டும் கட்டை புண்பட்ட வீரர்தம் தழும்போடு விளங்கும் மார்புக்கு உவமை. சாந்தெழில் – சந்தனத் தேய்வை பூசுவதாற் பெறும் அழகு. சான்றோர் – படை மறவர். மாறாது- அதனை விட்டு நீங்காது. கடும்பறை – கடிதாகப் பறத்தலையுடைய. தும்பி – வண்டுகள். ‘சூர்’ என்றது முருகனை; காந்தள் என்றது செங்காந்தளை. பறைபண் அழியும் – பறக்கும் இயல்பினை இழக்கும். பாடுசால் – புகழ் நிறைந்த. வரை – பக்கமலை. நேரி – நேரிமலை. பாடுசால் நெடுவரை நேரி எனவும், கல்லுயர் நேரி எனவும் கூட்டுக.
தெய்வத்திற்குரிய காந்தளென விட்டுவிலகாது சென்று ஊதும் தும்பியினம், தம்முடைய விரையப் பறக்கும் தன்மையை இழப்பதுபோலச், சேரலாதனின் அருளுடைமை யால் மெலியனென மயங்கிச்சென்று மோதும் பகைவரினம், தம் வலியிழந்து ஒடுங்கும் என்பதாம்.
68. ஏம வாழ்க்கை !
துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு:செந்தூக்கு. இதனாற் சொல்லியது: காமவேட்கையின் ஓடாத அவன் வென்றி வேட்கைச் சிறப்பு.
[பெயர் விளக்கம்: துன்பம் இடைவிரவின இன்பமன்றி, இடையறாத இன்பமேயாய்ச் சேறலான வாழ்க்கை ஏம வாழ்க்கை; இவ்வாறு சொன்ன சிறப்பால் இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.]
கால்கடிப் பாகக் கடம்ஒலித் தாங்கு
வேறுபுலத் திறுத்த கட்டூர் நாப்பண்
கடுஞ்சிலை கடவும் தழங்குகுரல் முரசம்
அகலிரு விசும்பின் ஆகத்து அதிர
வெவ்வரி நிலைஇய எயில்எறிந் தல்லது 5
உண்ணா தடுக்கிய பொழுதுபல கழிய
நெஞ்சுபுகல் ஊக்கத்தர் மெய்தயங்கு உயக்கத்து
இன்னார் உறையுள் தாம்பெறின் அல்லது
வேந்தூர் யானை வெண்கோடு கொண்டு
கள்கொடி நுடங்கும் ஆவணம் புக்குடன் 10
அருங்கள் நொடைமை தீர்ந்தபின் மகிழ்சிறந்து
நாமம் அறியா ஏம வாழ்க்கை
வடபுல வாழ்நரின் பெரிறமர்ந்து அல்கலும்
இன்னகை மேய பல்லுறை பெறுபகொல்
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ 15
நெடுமண் இஞ்சி நீள்நமர் வரைப்பின்
ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல எழுதிச்
செவ்விரல் சிவந்த அவ்வரிக் குடைச்சூல்
அணங்கெழில் அரிவையர்ப் பிணிக்கும்
மணங்கமழ் மார்ப! நின் தாழ்நிழ லோரே. 20
தெளிவுரை: நின்னைக் காதலித்த மகளிர், நின்பிரிவால் வருந்தித் துயிலாதிருந்தமையால், அவர்களணிந்திருந்த பசும்பொன் அணிகள் நெகிழ்ந்து வீழுமாறு உடலிழைத்தனர். மண்ணாலே அமைக்கப்பெற்ற நெடுஞ்சுவர் அமைந்த பெரிய அரண்மனைப் பக்கத்தேயுள்ள ஓவியங்களைப்போலச் செயலழிந்தவராக, நெடுஞ்சுவரிடத்தே நீ பிரிந்துசென்ற நாட்களின் எண்ணிக்கையைப் பலகாலும் எழுதினவராகி, அதனாலே இயல்பிலேயே சிவந்த விரல்கள் மேலும் சிவக்கப் பெற்றாருமாயினர். அழகிய தேமலையும், சிலம்பினையும், கண்டாரை வருத்தும் அழகையும் கொண்ட அம்மகளிரது உள்ளங்களை, அவ்வாறு நின்பாற் பிணித்துக் கொள்ளும் மணங்கமழுகின்ற மார்பினை உடையோனே!
நின் தாழ்நிழலையே தமக்குப் புகலாகக் கொண்டு வாழும் நின் மறவர்கள்—
காற்றே குறுந்தடியாக மோதுதலினாலே கடலாகிய முரசம் ஒலிசெய்தாற்போல, மிக்க ஒலியையுடைய முரசமானது மிகப்பரந்த வானத்திடத்தினும் சென்று அதிர்வைச் செய்யுமாறு சென்று, வேற்று நாட்டிடத்தேயுள்ள கட்டூராகிய பாசறையின்கண்ணே தங்கியுள்ளனர். விரும்பத்தக்க கோடுகள் நிலைபெற்றுள்ள பகைவரின் மதிலை அழித்தல்லது உண்ணுதலைச் செய்யோம் என்று உரைத்த வஞ்சினத்திற்கேற்ப, அவர் உண்ணாதே கழித்த அடுக்கிய பொழுதுகளும் பலவாகக் கழிந்தன. எனினும் மனம் விரும்பும் ஊக்கத்தை உடையவராகவும், உடல் தளரும் வாட்டத்தை உடைய வராகவுமே, பகைவர் உறையுளைத் தாம் கைக்கொள்ளும் வரையினும், அவர்கள் தம் பொழுதைக் கழிப்பார்கள்.
பகைவேந்தர் ஊர்ந்து செலுத்தும் யானையது வெண் கொம்பைப் பறித்துக்கொண்டு, கள்ளுக்கடைகளை அறிவிக்கும் கொடிகள் பறந்துகொண்டிருக்கும் கடைத்தெருவுக்குள் புகுந்து, அரிய கள்ளிற்கு அக்கொம்புகளை விலையாகத் தந்து குடித்து முடித்த பின்னர், அதனாலே களிப்பு மிகுந்தவர்களாவார்கள். அச்சத்தை அறியா இன்பவாழ்க்கையினையுடைய வடபுலத்தே வாழ்வாரினும் பெரிதாக விரும்பி, நாள்தோறும் இனிய மகிழ்ச்சி பொருந்திய பல நாட்களையும் அவர்கள் பெறுவார்களோ! அவர்கள் அது பெறினன்றி நின்னைக் காதலித்த மகளிரும் இன்னகை மேய பல்லுறை பெறுதலும் அரிதாகுமே!
சொற்பொருளும் விளக்கமும்: கால் – காற்று. கடிப்பு- குறுந்தடி. வேறுபுலம் – வேற்றரசர் நாடுகள். இறுத்த – தங்கிய. கட்டூர் – பாசறை, நாப்பண் – நடு. சிலை – ஒலித்தல். கடவும் – செலுத்தும். தழங்கு குரல் – ஒலிக்கின்ற ஓசையினையுடைய. அகலிரு – மிகப் பரந்த. ஆகத்து – அகத்து; நீட்டல் விகாரம் பெற்றது. வெம்மை வரி – விரும்பத்தகுந்த வரிகள். நிலைஇய – நிலையாக வமைந்த; வரிகள் என்றது கோட்டைச்சுவரின் மீது தீட்டப்பெறும் பட்டைகளை. எயில் – மதிற்சுவர். அடுக்கிய பொழுது – ஒன்றடுத்து ஒன்றாக வரும் பொழுதுகள். புகல் – விரும்பும். தயங்கு உயக்கம் – தளரும் மெலிவு. ஆவணம் – கடைத்தெரு. நொடைமை – விலைப் பொருள். மகிழ் சிறந்த – கள்வெறியாலும் வெற்றிக் களிப் பாலும் மகிழ்ச்சி – மிகுந்தவராகி. நாமம்-அச்சம். ஏமம்- இன்பம். வடபுல வாழ்நர் என்றது போகவுலகத்துத் தேவரை. நகை – மகிழ்ச்சி. மேய – பொருந்திய. உறை உறைதற்குரிய நாள். பெறுப கொல் – பெறுவாரோ. பாயல் உறக்கம். பாசிழை – பசும்பொன் அணிகள். இஞ்சி – மதிற்சுவர். நகர் – அரண்மனை. அவ்வரி – அழகிய ரேகைகள். குடைச்சூல் – சிலம்பு. தாள் நிழலோர் – தாள் நிழல் வாழ்வோரான படைமறவர்.
69. மண்கெழு ஞாலம் !
[ துறை:வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். சொல்லியது: வாழியாதனின் ஆள்வினைச் சிறப்பினை அவன் குடிவரலாற்றோடு படுத்துச் சொல்லியவாறு.
[பெயர் விளக்கம்: பொன்ஞாலமன்றி இம் மண்ஞாலம் முழுவதும் ஆண்டார் என்பது தோன்ற, ‘மண்ஞாலம்’ என்ற சிறப்பால் இப்பெயர் அமைத்தனர்.]
மலையுறழ் யானை வான்தோய் வெல்கொடி
வரைமிசை அருவியின் வயின்வயின் நுடங்கக்
கடல்போல் தானைக் கடுங்குரல் முரசம்
காலுறு கடலின் கடிய வுரற
எறிந்துசிதைந்த வாள்
இலை தெரிந்த வேல்
பாய்ந்தாய்ந்த மா 5
ஆய்ந்துதெரிந்த புகல்மறவரொடு
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே! 10
நின்போல்,
அசைவில் கொள்கைய ராகலின் அசையாது
ஆண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம்!
நிலம்பயம் பொழியச் சுடர்சினம் தணியப்
பயங்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப
விசும்புமெய் அகலப் பெயல்புரவு எதிர 15
நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்த
இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே.
தெளிவுரை: மலையொத்த யானையின் மீதுள்ள, வானைத் தடவுவதுபோல விளங்கும் வெற்றிக் கொடிகள், மலைமீதினின்றும் வீழ்கின்ற அருவிகளைப்போல இடந்தோறும் விளங்கி அசைந்தபடி இருக்கும். கடலைப்போல ஆர்த்தெழும் தானைப் பெருக்கத்தின் கடுங்குரலை எழுப்பும் போர்முரசங்கள், காற்றாலே தாக்கப்பெற்ற கடலினது அலையொலியைப் போலக் கடுமையாக ஒலிக்கும். இவ்வாறு பகைமேற்சென்று போரிட்ட காலத்தே, பகைவரை வெட்டி வீழ்த்தியதனாலே சிதைவுற்ற வாள்களோடும். பகைவரைக் குத்தியதனாலே இலைவடிவிற் குருதிக்கறை படிந்து தோன்ற விளங்கிய வேல்களோடும், பகைப்படையைப் பாய்ந்து பாய்ந்து தாக்கியதனாற் சோர்ந்த குதிரைகளோடும், ஆராய்ந்து தெரிந்தெடுக்கப் பெற்ற போரைவிரும்பும் மறவரோடும் சென்று, மீளவும் எதிர்த்தாரான பகைவரது பட்டுவீழ்ந்த பிணக்குவியல்கள் எப்புறமும் விளங்க அவரையும் கொன்று, அப்பகைவரது கொடுங் கோலாட்சியால் கெட்டுப்போன குடிமக்களை மீளவும் அந்நாட்டிலேயே பயின்று அமைதியாக வாழுமாறு செய்த கொற்ற வேந்தனே!
நிலமெல்லாம் சிறந்த விளைவைத் தரவும். கதிரவனது வெம்மையான கொதிப்புத் தணியவும், உலகிற்குப் பயன்பொருந்திய வெள்ளியானது நல்ல கோள்களுடன் சேர்ந்து நிற்கவும், வானத்திடம் அகலவும், மழையானது பெய்து உலகைக் காத்தலை மேற்கொள்ளவும், நால்வேறான திசைப் பகுதிகளும் ஒருப்போலவே செழிப்படையுமாறு, விளங்கும் கதிர்களோடு கூடிய ஆணைச்சக்கரத்தைச் செலுத்தியவர்கள் நின் முன்னோர்.
அவரும், நின்னைப் போலவே, மாறுதலில்லாத சிறந்த கொள்கையாளர்கள். ஆதலினாலே, இம் மண்பொருந்திய உலகினைத் தளர்ச்சியின்றி ஆண்டுவந்தனர்!
சொற்பொருளும் விளக்கமும்: மலையுறழ்யானை – மலைகளைப் போலத் தோன்றும் பெரிய யானைகள். வெல்கொடி வெற்றிக் கொடி. வயின் வயின் – இடங்கள் தோறும். கால்- காற்று. கடியவுரற் – கடுமையாக ஒலிக்க. எறிந்து – பகைவரை வெட்டி வீழ்த்தி. ‘இலை தெரிந்த வேல்’ என்றது, இலை கறைப்பட்டுத் தோன்றிய வேல் என்றதாம். ஆய்ந்த – ஓய்ந்த, இவர்களிடையே ஆய்ந்து தெரிந்த, மேலும் போரை விரும்பும் மறவரோடு மேற்சென்று என்க. பிறங்க – விளங்க. பயிற்றிய – நாட்டிற் பயின்று வாழச் செய்த.
அசைவு – தளர்ச்சி. கொள்கை – கோட்பாடு. அசையாது- தளராது. மண்கெழு தளராது. மண்கெழு ஞாலம் – மண்ணணுச் செறிந்த உலகம். பயம் – விளைவு. சுடர் – ஞாயிறு. வெள்ளி – சுக்கிரன். ஆரியம்- நலந்தரும் பிறகோள்கள். விசும்பு மெய் அகல – விசும்பிடம் விரிவடைய. பெயல் – மழை. புரவு எதிரல் – உயிர்களைக் காத்தலை மேற்கொள்ளல்; நனந்தலை – பரந்த இடம்; என்றது, நாற்றிசைப்பகுதி நாடுகளையும். நந்த – விளைவால் பெருக்கமடைய ; பகையின்றி விளங்க என்பதுமாம்.
தூக்கு விளக்கம்: ‘எறிந்து சிதைந்த’ என்பது முதலாக, மறவரொடு என்பது ஈறாக நான்கடி வஞ்சியடியாய் வந்தமையால் வஞ்சிதூக்கும் ஆயிற்று.
70. பறைக்குரல் அருவி !
துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். இதனாற் சொல்லியது: வாழியாதனின் வென்றிகூறிய திறத்தானே, அவனுக்குள்ள சிறப்பினைக் கூறிப் பின்னர் வாழ்த்திய வாறும் ஆம்.
[பெயர் விளக்கம்: அருவியின் ஒலிக்குப் பறையோசையை உவமை கூறினமையானும், அதுதான் இவ்வுலகிற்கேயன்றி அவ்வுலகிற்கும் கேட்கலாயிற்று என்ற சிறப்பானும், இதற்குப் ‘பறைக்குரல் அருவி’ என்பது பெயராயிற்று.]
களிறுகடைஇய தாள்
மாவுடற்றிய வடிம்பு
சமம்ததைந்த வேல்
கல்லலைத்த தோள்
வில்லலைத்த நல்வலத்து 5
வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தைக்
குவிமுகிழ் ஊசி வெண்தோடு கொண்டு
தீஞ்சுனை நீர்மலர் மலைந்து மதஞ்செருக்கி
உடைநிலை நல்லமர் கடந்து மறங்கெடுத்துக்
கடுஞ்சின வேந்தர் செம்மல் தொலைத்த 10
வலம்படு வான்கழல் வயவர் பெரும!
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறஞ்சொல் கேளாப் புரைதீர் ஒண்மைப்
பெண்மை சான்று பெருமடம் நிலைஇக்
கற்பிறை கொண்ட கமழுஞ் சுடர்நுதல் 15
புரையோள் கணவ! பூண்கிளர் மார்ப!
தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற
வேள்வியிற் கடவுள் அருத்தினை! கேள்வி
உயர்நிலை உலகத் தையரின் புறுத்தினை
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை 20
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்!
மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறைக்குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதோறும் துவன்றும் 55
அயிரை நெடுவரை போலத்
தொலையா தாக! நீ வாழும் நாளே!
தெளிவுரை: களிறுகளைச் செலுத்திய கால்களையும், விரையச் செலுத்துதற்பொருட்டுக் குதிரைகளை வருத்திய காலின் ஓரங்களையும், பகைவரது போர்கெடுத்தற்குக் காரணமான வேலினாற் பெற்ற வெற்றியையும், உலக்கல்லை வருத்திய தோள்களையும், வில்லாற் பகைவரை வருத்திய நல்ல வெற்றியையும் உடையோனே!
வண்டினம் இசைப்பாட்டைப் பாடாத குளிர்ந்த பனையினது குவிந்த மொட்டுப்போன்ற கூரிய வெண்மையான பனங்குருத்தைச் சேர்த்துக் கட்டிய, இனிய சுனை நீரிலே மலர்ந்த குவளைமலர் மாலையை அணிந்து, வலிமிக்கு மிக்க சினத்தையுடையவரான பகையரசரது நிலையான நற்போரையும் வெற்றி கொண்டு, அவரது மறத்தையும் கெடுத்து, அவர்தம் தலைமையையும் ஒழித்தவனே! வெற்றிச் சிறப்புப் பொருந்திய சிறந்த வீரக்கழலை அணிந்தோரான சிறந்த வீரர்களின் பெருமானே!
விளையாட்டாகவேனும் பொய் சொல்லாத வாய்மையினையும், பகைவர் புறத்தே தன்னைப் பழித்தார் என்று கூறினும், அதனை கேட்டுச் சினவாத குற்றமற்ற சிறந்த அறிவினையும் கொண்டோனே!
பெண்மைப் பண்புகள் நிறைந்தவளும், பெரிய மடமென்னும் தன்மை நிலைத்திருக்கப் பெற்றவளும், கற்பாகிய திண்மை தங்கியிருக்கப் பெற்றவளும், மணங்கமழும் ஒளி சுடரும் நெற்றியினை உடையவளும் ஆகிய உயர்ந்தோளின் கணவனே! பூணாரம் கிடந்து ஒளிவீசும் மார்பினைக் கொண்டோனே! நீங்காத கோட்பாட்டைக் கொண்ட அமைச்சர் முதலான அரசச்சுற்றம் சூழ்ந்திருக்க, வேள்வியின் மூலமாகத் தேவர்களையும் அவியுணவால் உண்பித்தனை! வேதங்களை ஓதுவதன்மூலம் உயர்நிலை உலகத்தேயுள்ள முனிவர்களையும் இன்புறச் செய்தனை!
அன்பரிடத்தே வணக்கமான மென்மையினையும், பகைவரிடத்தே வணங்காத ஆண்மையினையும் உடையோனே! இளந்துணைவர்களாகிய புதல்வர்களைப் பெற்றதன்மூலம் இறந்த நின் முன்னோரைக் காத்தவனே! மற்றும் இல்லறத்திற்கே உரியவாக வரும் பழங்கடன் அனைத்தையும் செய்து முடித்தவனே! வெற்றிப் போரையுடைய தலைவனே!
சிறந்த செல்வங்களை உடைய தேவர்கள் வாழும் வானுலகத்திடத்தும் கேட்குமாறு, இழுமென்னும் ஒலியோடு வீழ்ந்துகொண்டிருக்கும், பறையோசை போன்ற குரலை யுடைய அருவியானது உச்சியிடத்துள்ள பெரிதான சிகரங்கள் தோறும் நெருங்கித் தோன்றுதற்கிடமான நின் அயிரை என்னும் நெடிய மலைபோலவே, நின் வாழ்நாளும் என்றும் அழிவில்லாததாகுக, பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும் : கடைஇய – செலுத்திய. மா – குதிரை. உடற்றிய – வருத்திய. வடிம்பு – கால்களின் ஒரம். சமம் – போர். ததைந்த – சிதைதற்குக் காரணமான, அலைத்த – வருத்திய. ‘கல்’ என்றது, இளவட்டக் கல் என்னும் லலிமையளக்கத் தூக்கிப் போடப்படும் கல்லை. கடாவா – பாடாத. பனம் போந்தை – பனையாகிய போந்தை; ஒரு பொருட்பன்மொழி. முகிழ் – அரும்பு. ஊசி – ஊசிபோற் கூர்மையான. வெண்தோடு – குருத்து. மலைந்து – சூடி, மதம் – வலி. செருக்கி – மிகுந்து. உடைநிலை – உடைய நிலை. கடந்து – வென்று. செம்மல் – தலைமை. வலம்படு – வெற்றி பொருந்திய. வான் – சிறந்த. வயவர் . வீரர்.
நகை – விளையாட்டு. புறஞ்சொல் – புறங்கூறும் பழிச்சொல். புரைதீர் – குற்றமற்ற. ஒண்மை – ஒள்ளிய அறிவு நலம். பெண்மை – பெண்மைப் பண்புகள். சான்று – நிறைந்தது. பெரூமடம் – பெரிதான மடம். கற்பு இறைகொள்ளல் – கற்பு நிலையாகத் தங்குதல். புரையோள் – உயர்ந்தோள். பூண் – பூணுரம். கொள்கை – கோட்பாடு. தொலையா – நீங்காத. சுற்றம் – அரசச் சுற்றம். கடவுள் அருத்தினை – தேவரை அவியுணவால் உண்பித்தனை. உயர் நிலை உலகம் – தேவருலகம். ஐயர் – முனிவர். கேள்வி – வேதம்.
சாயல் – மென்மை. ஆண்மை – மறமேம்பாடு. முதியர் – குலத்து முன்னோர். கடன் – கடமை. இறுத்த – செய்து முடித்த. அண்ணல் – சிறந்தோன். மாடு – செல்வம் மாடோர் – செல்வம் உடையவர்; சங்கநிதி பதுமநிதி என்னும் அழியாச் செல்வத்தை உடையவர் என்பதனால் தேவர்களை ‘மாடோர்’ என்றனர் என்பர். முழுமுதல் மிசைய – பெரிய மலையின் உச்சியிலுள்ள. கோடு – சிகரம். துவன்றும் – நெருங்கித் தோன்றும். அயிரை – அயிரை மலை.
அயிரை நெடுவரை என்றும் நிலையாக இருப்பதுபோல நீயும் அழிவின்றி என்றும் நற்புகழோடு சிறப்புற்றனையாய் இவ்வுலகிலே புகழோடும் நிலைத்திருப்பாயாக என்பதாம்.
பெருஞ்சேரல் இரும்பொறையை
அரிசில்கிழார் பாடியது.
எட்டாம் பத்து
பதிகம்
பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன்தேவி ஈன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேல் தானை அதிக மானோடு
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
முரசும் குடையும் கலனும் கொண்டு
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத்
துகள்தீர் மகளிர் இரங்கத் துப்பறுத்துத்
தகடூர் எறிந்து கொச்சிதந் தெய்திய
அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை
மறுவில் வாய்மொழி அரிசில் கிழார்
பாடினார் பத்துப் பாட்டு.
பாட்டின் பெயர்கள் : 1. குறுந்தாள் ஞாயில், 2. உருத்தெழு வெள்ளம், 3. நிறந்திகழ் பாசிழை, 4. நலம்பெறு திருமணி, 5. தீஞ்சேற்றியாணர், 6, மாசிதறிருக்கை, 7, வென்றாடு துணங்கை, 8. பிறழநோக்கியவர், 9. நிறம்படு குருதி, 10. புண்ணுடை எறுழ்த்தோள்.
பெருஞ்சேரல் இரும்பொறை அரசுவீற்றிருந்த ஆண்டுகள், பதினேழு. பாடிப் பெற்ற பரிசில், தானும் கோயிலாளும் புறம் போந்து நின்று, ‘கோயிலுள்ள எல்லாம் கொண்மின்’ என்று, காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசு கட்டில் கொடுப்ப, அவர் ‘யான் இரப்ப இதனை ஆள்க’ என்ற அமைச்சுப் பூண்டார்.
தெளிவுரை : பொய்மையற்றவன் செல்வக் கடுங்கோ வாழியாதன். அவனுக்கு அவன் மனைவியான வேளாவிக் கோமான் பதுமனின் மகள் பெற்றுத்தந்த மகன், பெருஞ் சேரல் இரும்பொறை. அவன், கொல்லிக் கூற்றத்திலுள்ள நீர்மை மிகுந்த மலையின் உச்சிப் பகுதியான இடத்திலே நிகழ்ந்த போரில், பல வேற்படை வீரர்கள் நிறைந்த படையினையுடையவனான அதிகமானோடு, சோழ பாண்டியராகிய இருபெரு வேந்தரையும் ஒருசேர வெற்றிகொண்டவன்; அவர்தம் முரசங்களையும் குடைகளையும் அணிகலன்களையும் பறித்துக் கொணர்ந்தவன்; புகழமைந்த சிறப்பினையுடைய போர்க்களத்தே களவேள்வியும் வேட்டவன்; குற்றமற்ற மகளிராகிய பகையரசரின் மனைவியர் இரங்கி வருந்துமாறு, அதிகனின் வலிமையை மீளவும் சென்று ஒழித்தவன்; தகடூர் கோட்டையை முற்றி அதனையும் கைப்பற்றியவன்; இத்தகைய புகழமைந்த அரிய வலிமையையும், ஒள்ளிய புகழையும் கொண்டவன் அவன் ஆவான். அத்தகையானாகிய பெருஞ்சேரல் இரும்பொறையைக் குற்றமில்லாத வாய்மையே மொழிவோரான அரிசில்கிழார் என்பார் பத்துப் பாட்டுகளாற் பாடினார்.
சொற்பொருளும் விளக்கமும்: கொல்லிக் கூற்றம் என்பது கொல்லி மலையைச் சூழ்ந்திருந்த நாட்டுப் பகுதி; இதற்கு உரியோனாக இருந்தவன் வல்வில் ஓரி; இவன் அதிகனுக்கும் இருபெரு வேந்தருக்கும் நண்பனாதல்பற்றி அவர் படையணிகள் இவனுக்கு உதவியாகச் சென்றிருக்கலாம்: ஓரியைச் சேரமான் அழித்த காலையில் அவனுக்கு உதவியாயிருந்தவன் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரி ஆவான்; காரியை இப்போரின் பின்னர்ச் சோழனும் அதிகனும் சேர்ந்து அழித்தனர். காரியின் அழிவுக்குப் பின்னர் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரை முற்றி அழித்தான் எனல் பொருந்தும். இப்போரின் பெருமை தோன்றத் தகடூர் யாத்திரைச் செய்யுட்கள் எழுந்துள்ளன. பதுமன் தேவி – பதுமனின் மகள். நீர் கூர் – நீர்வளம் மிகுந்த, மீமிசை – உயர்த்த மலையுச்சியில். உடனிலை வென்று – ஒருசேர வெற்றி கொண்டு. உரைசால் சிறப்பு – புகழமைந்த சிறப்பு. அடுகளம் – பகைவரை அட்ட களம். களம்வேட்டல் – அடுகளத்தில்போர்த் தெய்வமான காடுகிழாளுக்கு நிணச்சோறு சமைத்துப் படைத்து வழிபடுதல். அருந்திறல் – பகைவரால் வெற்றி கொள்ளுதற்கரிய பெருந்திறல். ஒள்ளிசை – ஒளியோடு விளங்கும் புகழ் சிறந்த புகழ்.
71. குறுந்தாள் ஞாயில்!
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கு. சொல்லியது : பெருஞ்சேரலின் வென்றிச் சிறப்புக் கூறி, அவனுக்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்தது.
[பெயர் விளக்கம் : கோட்டை மதிலின் அடியிடங்களைப் பார்க்க, அவற்றில் குறுகிக் குறுகியிருக்கும் படியையுடைய ஞாயில் என்றதனால் ‘குறுந்தாள் ஞாயில்’ என்றனர் இவ்வாறு கூறின சாதிப் பண்பாலும் படியைத் தாளென்று ஆதினபடியாலும், இதற்குக் ‘குறுந்தாள் ஞாயில்’ எனப் பெயர் தந்தனர்.]
அறாஅ யாணர் அகன்கண் செறுவின்
அருவி யாம்பல் நெய்தலொடு அரித்துச்
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பகடு உதிர்த்த மென்செந் நெல்லின்
அம்பண அளவை உறைகுவித் தாங்குக் 5
கடுந்தேறு உறுகிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாரின்
அலந்தனர் பெரும நின் உடற்றி யோரே!
ஊரெரி கவர உருத்தெழுந்து உரைஇப்
போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப 10
மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம்பழி ஊக்குநர்
குண்டுகண் அகழிய குறுந்தாள் ஞாயில்
ஆரெயில் தோட்டி வெளவினை ஏறொடு
கன்றுடை ஆயம் தரீஇப் புகல்சிறந்து
புலவுவில் இளையர் அங்கை விடுப்ப 15
மத்துக்கயிறு ஆடா வைகற்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப்
பதிபா மாக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு அற்றென அருஞ்சமத்து அருநிலை தாங்கிய புகர்நுதல் 20
பெருங்களிற்று யானையொடு அருங்கலம் தரா அர் மெய்பணி கூரா அனங்கெனப் பராவலின்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் ஊழி!
உரவரும் மடவரும் அறிவுதெரிகந் தெண்ணி 25
அறிந்தனை அருளா யாயின்
யாரிவண் நெடுந்தமை வாழு மோரே?
தெளிவுரை : பெருமானே! இடையறுதலில்லாத புது வருவாயினையுடையதும், அகன்ற இடப்பரப்பை உடையதுமான வயலிலுள்ள நெற்கதிரோடு, அரிய பூக்களைக்கொண்ட ஆம்பலையும் நெய்தலையும் ஒருசேரச் சேர்த்து, வயல்வேலை செய்யும் மகளிர் அரிவர். அங்ஙணம் அரிந்த கதிர்கள் வயலை அடுத்துள்ள களத்திலே மிகுதியாகச் சேர்ந்திருக்கும். அவற்றைப் பெரும் பகடுகொண்டு மிதிப்பித்து, மென்மையான செந்நெல்லைப் பிரித்து எடுப்பர். அந் நெல்லைத் தூற்றிப் பொலியிட்டு மரக்காலால் அளந்து அம்பாரமாகக் குவித்து வைப்பர். அங்ஙணம் விளங்கும் செந்நெல்லின் அம்பாரக் குவியலைப்போலக் கடுமையாகக் கொட்டும் இயல்பினையுடைய செங்குளவிக் கூட்டம் மொய்த்திருக்கும் கூடு தொங்கும். நின்னோடு மாறுபட்டு நின்னைச் சின்ங்கொள்ளச் செய்த பகைவர்கள், அச் செங்குளவிகளின் கூட்டைக் கலைத்த இளஞ்சிறார்கள் அவற்றால் வெருட்டி வெருட்டிக் கொட்டப்பட்டுத் துன்புற்றாற் போலத், தாமும் நின்மறவராலே தாக்கப் பெற்றுத் துன்பமுற்றனர்.
ஆயர் குடியினரின் தலைவன் கழுவுள் என்பவன். அவனுக்கு உரியதான ஊரினை எரியூட்டி அழித்தாய். அத்தீயானது ஊரைச் சுற்றிச் சூழ்ந்து, அங்கிருந்த நெற்போர்களையும் சுட்டெரித்தது.அதனின்றும் எழுந்த புகையானது நாற்றிசைகளையும் மூடி மறைத்தது. அக் கழுவுளும் அவனைச் சார்ந்தோரும் கோட்டையுட் சென்று அடைத்துக் கிடந்தாராய், வெளிவந்து போரிடலைச் செய்யாது, தம் பழியான சூழ்ச்சிச் செயல்களைப் பற்றியே முயற்சிகள் செய்தவாறிருந்தனர். ஆழமான இடத்தையுடைய அகழியாற் குழப்பெற்றதும், குறுகிய படிகளைக் கொண்டதுமான ஞாயில் என்னும் உறுப்பையுடைய அவ்வரிய, மதிலின் காவலையழித்து, நீயும் அதனைக் கைப்பற்றிக் கொண்டனை. அவ்விடத்தேயுள்ள எருதுகளோடு கன்றுகளையுடைய பசுக்களையும் கைப்பற்றி நின் படைமறவர்க்குத் தந்தனை. அவற்றைப் பெற்ற அவரும் நின்னைப் போலவே தாமும் கொடுத்தலில் விருப்பம் மிகுந்தவராகப், புலால் நாற்றம் கமழும் வில்லினையுடையராகி அம்மறவர்கள், அவற்றைத் தாமும் தம்பால் வந்திரந்தோருக்கு வழங்கி மகிழ்ந்தனர். கோட்டையினின்றும் தப்பிச்சென்ற, பகக்களின் பால் தயிர் மோர் நெய் முதலிய பயனைக் கொண்டு வாழும் ஆயர்களின் தலைவனகிய அக் கழுவுள்: தன்னைச் சார்ந்தவர் வீடுகளிலே தயிர்கடையும் மத்தின் கயிறு ஆடுதலற்று விளங்கும் காலைப்பொழுதை நினைந்தான். தன் பகைமையைக் கைவிட்டு, நின்முன் வந்து பணிந்து தலைவனங்கியும் நின்றான்.
கழுவுள் அவ்வாறு வண்ங்கவும், நீதான் அவன் தந்த இறைப்பொருளை ஏற்று அவன் ஊரைவிட்டு நின்னைப்பகைத்த வேறு அரசர்களின் நாடுகளை நோக்கிச் சென்று, அவர் ஊர்களையும் பாழாக்கினாய். புதிதாகத் தாம் சேர்த்துள்ள செல்வத்தோடு முன்னோர் சேர்த்து வைத்துள்ள பெருஞ்செல்வமும் எல்லாம் இனி அழிந்தே போயின எனக்கருதி அவர்கள் அஞ்சினர். அரிதான போரிடையே தாங்குதற்கரிய நிலையையும் தாங்கியபடி உறுதியோடு நின்றதும், புள்ளிகள் பொருந்திய நெற்றியை உடையதுமான பெருங்களிற்று யானையோடு, தம்மிடமுள்ள அருங்கலன்களையும் நினக்குத் தாரார் ஆயினர் அவர். எனினும், உடல் நடுக்கமுற்றவராக, நின்னைத் தம்மைத் தாக்கி வருத்துதற் பொருட்டு வந்த தெய்வமாகக் கொண்டு, தம்மைக் காத்தருளுமாறு வேண்டிப் பரவினர். தனக்கிட்ட பலியை ஏற்றுக்கொண்டு, அவருயிரை வருத்தாது அவ்விடம் விட்டு அகன்றுபோகும் பேயினைப் போல, நீயும் அவர் பணிந்து தந்த திறைப்பொருளை ஏற்றுக் கொண்டு, அவர் நாட்டைவிட்டு அகன்று செல்வாய். நெடுந்தகையே! நின் வாழ்நாள் வாழ்வதாக அறிவாளரையும் மடமையாளரையும் தெரிந்து, அவர்தம் அறிவின் தரத்தை ஆராய்ந்து அறிந்தாயாகி, அவரவர்க்குத் தகுந்தவாறு அருள் செய்யாதே, அனைவருக்கும் ஒருப்போலவே அருள் செய்வாயானால், இவ்வுலகிலே யார்தாம் பரிசில் வாழ்க்கையினராக வாழ்வோராக இருப்பார்கள்! இதனால், அவரவர் தகுதியறிந்து, அவரவர்க்கு ஏற்றவாறு வழங்குக. பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும் : அறாஅ யாணர் – இடையராத புதுவருவாய்; அது இடையில் தீய்வுற்றுப் போகாதே தொடர்ந்து நல்ல விளைச்சலைத் தருகின்ற தன்மை. கண். இடம். செறு – வயல். அருவி – அரிய பூக்கள்; ‘வீ’ என்பது ‘வி’ என்றாயிற்று. ஆம்பல் – செவ்வல்லி. நெய்தல் – நீல மலரினைக் கொண்ட நீர்த்தாவர வகை. செறுவினை மகளிர் – வயலில் வேலைசெய்யும் மகளிர். உழத்தியர் – உழவர் மகளிர். மலிந்த – அடுத்துள்ள. வெக்கை போரடிக்கும் களமும்; நீர்வளமிக்க வயல்களையடுத்துக் காய்ந்துள்ள மேட்டுப் பகுதியாக இருத்தலின் வெக்கை என்றனர். பரூஉப் பகடு – பெரும் பகடு; பெரிய எருமைக்கடாக்கள். மென் செந்நெல் – மென்மை வாய்ந்த செந்நெல்; மென்மை சமைத்தபின் தோன்றுவது; அதனை நெல்லுக்கு ஏற்றிக் கூறினர். அம் பணம் – மரக்கால் என்னும் அளவு கருவி. உறை – அம்பாரம். தேறு – தெறுதல்; கொட்டுதல்; விகுதி கெட்டு முதல்நீண்டது. மொசிதல் – மொய்த்தல். துஞ்சும் – தூங்கும். கிளைத்த – கலைத்த. அலந்தனர் – சிதறியோடிப் புண்பட்டு வருந்தினர். இளந்துணை மகார் – அறிவற்ற சிறுவயதுப் பிள்ளைகள். அவர் குளவிக்கூட்டைப் பின்விளைவு கருதாராய் வேடிக்கை மாகக் கலைக்க, அவற்றால் தாக்கப்பட்டுத் துன்புறுவார். அவ்வாறே நின் திறலை அறியாதே வந்து நின் கோட்டையைத் தாக்கியவரும், நின் படை மறவரால் தாக்கப்பட்டுப் புண். பட்டுச் சிதறியோடுவாராக வருந்தினர் என்பதாம்.
எரி கவர்தல் – எரியானது ஊரைச் சூழ்தல். உருத்து சினங்கொண்டு. உரைஇ – பரந்து, மாதிரம் – திசைகள். தோன்றலீயாது – வெளிப்பட்டுத் தோன்றிப் போரிடாதே. பழி – பழிச்செயல்; போர்மரபுக்கு மாறுபட்டதான செயல்; அதுதான் எயிலுள்ளிருந்து சுருங்கைவழி அனைவரும் தப்பியோடல். ஊக்குநர் – முயல்வோர். குண்டுகண் – ஆழமான இடம். குறுந்தாள் – குறுகலான படிகள். ஞாயில் – மதிலின் உறுப்புக்களுள் ஒன்று; மறைந்திருந்து கோட்டையை முற்றியவர்மேல் அம்புகளை எய்தற்கேற்ற வசதிகளமைந்த உயரமான இடம். ஆர் எயில் – எளிதாக அழித்தற்கருமையுடைய கோட்டை மதில். ஏறு – எருது. ஆயம் – பசுமந்தை. புகல் சிறந்து – விருப்பம் மிக்கு கைவிடுப்ப – தானமாகத் தர. வைகற் பொழுது – விடிகாலைப் பொழுது. நினையூ – நினைந்து; செய்யூ என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ஆன் பயன் பால் தயிர் மோர் நெய் முதலியன. ஆன் பயத்தால் வாழுநர் ஆயர் என்க; அவர்கள் தலைவன் ‘கழுவுள்’ என்பான். இவனுக்குரிய ஊர் ‘ஆமுர்’ என்பர்.
வேறுபுலம் – வேற்று நாடுகள். படர்ந்து – சென்று. பதி – அவர்தம் நாட்டு ஊர்கள். விருந்தின் வாழ்க்கை புதிதான செல்வம். பெருந்திரு – வழிவழியாக வரும் முன்னோரால் தேடி வைக்கப்பெற்ற பெருஞ்செல்வம். அருஞ்சமம் – வெல்லுதற்கரிய கடும்போர். அருநிலை – தாங்கி நிற்றற்கரியதான நிலை. புகர் – புள்ளி. அருங்கலம் – அரிய அணிகலம். பனிகூரல் – நடுக்கம் கொள்ளல். அணங்கு – தாக்கி வருத்தும் தெய்வம். பாசம் – பேய். ஊழி வாழ்நாள். உரவர் – அறிவாளர். சினந்து உயிரைக் கவர் தற்கென வந்த பேயானது, அவர் நடுக்கத்தோடிட்ட பலியை ஏற்று, அவரை விட்டு விலகுவதுபோல, நீயும் அவரைக் கொன்றழிக்கச் சென்ற சினத்தை யுடையவனா யிருந்தும், அவர் திறைப்பொருளைத் தந்து பணிந்து நிற்க, அவரைப் பொறுத்து, அப்பொருளை ஏற்று அவ்விடம் விட்டு அகன்று போவாய் என்பதாம். அவரது பணிந்து பராவும் திறை தந்துநிற்கும் நிலையைக் கண்டதும், அவருக்கு இரக்கங் கொண்டு சினந்தணிவாய் என்பதாம்.
72. உருத்தெழு வெள்ளம் !
துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு:செந்தூக்கு. சொல்லியது: பெருஞ்சேரலின் சூழ்ச்சித்திறனும் வெற்றிச் சிறப்பும்.
[பெயர் விளக்கம்: பல்லுயிரையும் ஒருங்கே கொல்லுங் கருத்துடையதுபோலச்சினந்து எழும் ஊழிப் பெருவெள்ளம் என்று கூறிய சிறப்பால் இப்பெயர் தந்தனர்.]
இயல்பெரு மையின் படைகோள் அஞ்சார்
சூழாது துணிதல் அல்லது வறிதுடன்
காவல் எதிரார் கறுத்தோர் நாடென்
முன்திணை முதல்வர்க்கு அம்பினர் உறைந்து
மன்பதை காப்ப அறிவுவலி யுறுத்தும் 5
நன்றறி யுள்ளத்துச் சான்றோர் அன்னரின்
பண்புநன்கு அறியார் மடம் பெருமையின்
துஞ்சல் உறூஉம் பகல்புகு மாலை
நிலம்பொறை ஓராஅ நீர் ஞெமரவந் தீண்டி
உரவுத்திரை கடுகிய உருத்தெழு வெள்ளம் 10
வரையா மாதிரந்து இருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்து
அஞ்சாறு புரையும் நின்றொழில் ஒழித்துப்
பொங்குபிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை 15
சினங்கெழு குருசில்! நின் னுடற்றிசி னோர்க்கே!
தெளிவுரை: நின்னைப் பகைத்தோர் தம் பகைமையே பெரிதாகக் கொண்டவராதலினால், நின்மேற் படைகொண்டு போரிட வருதற்கு அஞ்சமாட்டார்கள். அதுதான் நின்வலியும் தம் வலியும் ஆராயாது துணிந்த செயலேயாகும். அஃதல்லது, நீதான் அவரை அழிக்கச் சென்றனையாயின், அவர்தாம் பலர் ஒருங்கே கூடினும் தம்நாட்டைச் சிறிதேனும் காத்தற்கு வல்லமை யில்லாதார் என்பதனை அவரேன் அறியாதாராயினர்?
நின் குலத்தின்கண், நினக்கு முன்னே தோன்றிய தலைவர்கட்குப் பாதுகாப்பாக இருந்தவரும், மக்களினத்தைக் காப்பதற்கான அறிவுரைகளை வலியுறுத்திக் கூறுபவரும், நன்றே அறியும் உள்ளத்தவருமான சான்றோர்களைப் போன்ற நின் பண்பினை, அவர்தாம், தம் மடமையின் மிகுதியினாலே நன்றாக அறியாதாராயினர்.
அனைத்துயிரும் சாதலைப் பொருந்துவதான ஊழிக்காலப் பகற்போது கழிந்த மாலைப்பொழுதிலே, நிலத்தின் பாரமானது நீங்கும்படிக்கு, நீரானது எங்கணும் பரவலாக வந்து சேரும். வலிய அலைகள் கடுமையாக எழுந்து வருமாறு ஊழிப் பெருவெள்ளமானது சினத்தோடு பொங்கி எழும். எல்லையறியப்படாத திசையிடந்தோறும் இருளானது சேர்ந்து பரவி நிற்கும். அவ்வேளையிலே மீண்டும் அவ்வெள்ளமானது வற்றிக் காயும்படிக்கு ஆதித்தர் பன்னிருவரும் ஒருங்கே கூடித் தோன்றிக் காய்வர். அவ்வாறு காய்கின்ற அச்சூரியர்களது கூட்டத்தோடு சேர்ந்து எழுகின்ற வடவைத்தீயினை நீயும் ஒப்பாய். அவ்வடவையானது மிக்க நீர்த்துளிகளையுடைய வெள்ளத்தை வற்றச் செய்யும் பொருட்டுச் சிவந்த சுவாலைகளோடும் தோன்றும். நீயோ எல்லார்க்கும் மகிழ்ச்சியைச் செய்யும் அழகிய விழாவினைப் போன்றவன். அத்தகையனாகிய நீயும், நின் அத்தன்மையை ஒழித்துவிட்டு, நின்னோடு மாறுபட்ட பகைவருக்கு, ஊழிக் காலத்துச் சூரியரோடுங்கூடித் தோன்றும் ஊழிப்பெருந் தீயை ஒப்பவனுமாவாய்! அத்தகைய சினம் பொருந்திய தலைவனே, நீ வாழ்க!
சொற்பொருளும் விளக்கமும்: இகல் – மாறுபாடு. படை கோள் – படையெடுத்தல். சூழ்தல் – ஆராய்தல். துணிதல் – செய்தற்கு முற்படல். வறிது – சிறிது. உடன்- பலரும் உடன்கூடி. காவல் எதிரார்- காத்தற்குரிய வலிமையற்றார். கறுத்தோர்-பகைத்துச் சினங்கொண்டோர். திணை – குலம். முதல்வர் – முன்னோரான அரசர். ஓம்பினர் – பாதுகாப்பாளராக விளங்கி; முற்றெச்சம். மன்பதை – நாட்டு மக்கள் கூட்டம். அறிவு – அறிவுரை. வலியுறுத்தும் – வலியுறுத்திக் கூறும். நன்று – நன்மை; அறம். சான்றோர் – சான்றாண்மை யுடையோர்; அமைச்சர் முதலாயினோர். பண்பு – இயல்பு. மடம் பெருமையின் – மடமை மிகுதியினாலே.
துஞ்சல் உறூஉம் – இறந்துபடுதலைப் பொருந்தும். ‘பகல்’ என்றது ஊழிக்காலத்துப் பெரும்பகலை; ‘மாலை’ என்றது அதன் இறுதிப் பொழுதை. ‘ஊழி’ என்பது அனைத்தும் ஒடுங்குகின்ற சர்வசங்கார காலம். பொறை – பாரம். ஓராஅ – நீங்க; எச்சத் திரிபு. உரவுத்திரை – வலிய அலைகள். கடுகிய – கடுமையோடும் எழுந்து படர்கின்ற. உருத்து எழு – சினங்கொண்டு எழுகின்ற. வரையா – எல்லையறிய மாட்டாத. மாதிரம் – திசைகள். ஞாயிறு பட்ட – ஞாயிறு தோன்றிய. ‘அகன்று வரு’ என்றது, பன்னிரு சூரியர் ஒக்கத் தோன்றித் தம் கதிர்களை விரித்துப் பரந்து வருகின்ற வெம்மையை. மடங்கல் தீ – கூற்றமாகிய கொடுந்தீ; வடவைத்தீ. அம்சாறு – அழகிய விழா. பிசிர் – துளிகள். ‘பொங்கு பிசிர்’ என்றது ஊழி வெள்ளத்தை: வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. நுடங்கிய – அழிக்க: செய்யிய என்னும் வாய்பாட்டு வினை எச்சம்.
வடவைத்தீயை ஒத்த இரும்பொறை, சூரியர்களையொத்த தன் படைத்தலைவரோடும் சென்று, பொங்கிப் பெருவெள்ளமாக வரும் பகைவர் திரளை, ஒருங்கே அழிக்கும் வல்லமையாளன் என்பதாம்.
- நிறம்திகழ் பாசிழை !
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. சொல்லியது: பெருஞ்சேரலின் வெற்றிக்கு அடிப்படையாகிய செல்வமும் ஆண்மையும் கைவண்மையும் ஒருங்கே கூறியவாற்றான் அவன் வெற்றிச் சிறப்புக் கூறப்பட்டது.
[பெயர் விளக்கம்: தன்னின் அழுத்திய மணியினும் தன் நிறம் திகழும் பசும்பொன் இழை என்று கூறிய சிறப்பானே இதற்கு இப்பெயர் ஆயிற்று; இதில் வரும் 3,4 ஆம் அடிகள் கிடைக்கவில்லை.]
உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப்
பிறர் உவமம் ஆகா ஒருபெரு வேந்தே!
…………… கூந்தல் ஒண்ணுதல் பொலிந்த
நிறந்திகழ் பாசிழை உயர்திணை மகளிரும்
தெய்வந் தரூஉ நெஞ்சத் தான்றோர் 5
மருதஞ் சான்ற மலர்தலை விளைவயல்
செய்யுள் நாரை ஓய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார் 10
குறும்பல் யாணர்க் குரவை அயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பின்
புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!
கழைவிரிந்து எழுதரும் மழைதவழ் நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருந! கொடித்தேர்ப் பொறைய! நின் 15
வளனும் ஆண்மையும் கைவண் மையும்
மாந்தர் அளவிறந் தனவெனப் பல்நாள்
யான்சென் றுரைப்பவும் தேறார் பிறரும்
சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்என
ஆங்குமதி மருளக் காண்குவல் 20
யாங்குரைப் பேனென வருந்துவல் யானே!
தெளிவுரை: அறிவுடையோர் எண்ணினாலும், மடமை உடையோர் எண்ணினாலும், பிறருக்கு நீதான் உவமமாக வாய்த்தல் என்பதல்லது, நினக்குப் பிறர் உவமமென ஆகாதபடி ஒப்பற்ற விளங்கும் பெருவேந்தனே!
மருதத்தின் வளத்தால் நிறைந்து, பரந்த இடத்தை யுடையதாக விளங்கும் நெல்விளையும் வயல்களாகிய நன்செய் நிலங்களுள் வந்து தங்கும் நாரைகளை மகளிர் ஓட்டுவர். அங்ஙனம் ஓட்டும் மகளிர், தாம் அணிந்துள்ள பசும்பொன் அணிகளைக் கழற்றாமலேயே அடுத்தடுத்துள்ள பலவிடங்கட்கும் சென்றாராய், இரவும் பகலும் குரவைக் கூத்தாடியவராக இன்புற்றிருப்பர். காவிரி நீரால் நிறைந்து பாய்தலைப் பெற்றதும், நெடுந்தொலைவுக்கும் பரந்து காணப்பெறும் அழகினையுடையதுமான புகார் நகரத்தை உரிமையாகவுடைய செல்வனே! பூழிநாட்டாரைக் காத்துப் பேணும் கவசம் போன்றவனே! மூங்கில்கள் பரந்து உயர்ந்து வளர்வதற்கு இடமாயிருப்பதும், மேகங்கள் படிவதுமான நெடிய உச்சிகளையுடைய கொல்லிமலைக்குரிய தலைவனே! கொடிவிளங்கும் தேரினைடைய பொறையனே!
‘நின் வளமையும், ஆண்மையும், கொடையுமாகிய இவை மூன்றும் உலகத்து மாந்தரான் அளவிட்டறிய இயலாதவளவு பெருகின’ எனப் பலநாள் சென்று எடுத்துச் சொல்லியும், நின் பகைவர் தெளிவுபெற்றிலர். பிற சான்றோரும் அவர் தெளிவு பெறுவார்களோவெனச் சென்று எடுத்துக் கூறினர். அதன் பின்னரும், அவர் மதிமயங்கி விளங்கவே காண்கின்றேன். இனியும் எவ்வாறு உரைத்து அவரைத் தெளிவித்து அவரைக் காப்பது என்றெண்ணியே யானும் வருந்துகின்றேன்!
சொற்பொருளும் விளக்கமும்: உரவோர் – அறிவாளர். மடவோர் – அறிவு மடம்பட்டோர். வாயினல்லது உவமமாகப் பொருந்துதல் அல்லாது. ஒருபெரு – ஒப்பற்ற பெருமையுடைய. மருதம் – மருதத்தன்மை. சான்ற – நிறைவாகப் பொருந்திய. மலர்தலை – பரத்த இடத்தையுடைய. வயல் செய் – வயலாகிய செய்; ஒருபொருட் பன்மொழி. ஒய்யும் – ஓட்டும். பாசிழை – பசும்பொன்னாலான அணிகலன்; பச்சிலைகளால் அமைந்த உடையும் அணியும் ஆம். களையார் – களை யாராய்; முற்றெச்சம். குறும்பல் குரவை – அணித்தணித்து நெருங்க இருக்கும் குரவையாடும் இடங்கள். யாணர் – புதுமை. அயரும் – ஆடுதல் செய்யும். மண்டிய நீர் நிறைந்து பாய்கின்ற. சேய்விரி வனப்பு – நெடுந்தொலைவுக்கும் பரந்து தோன்றும் அழகு. இவனைப் ‘புகார்ச் செல்வ’ என்றதனால், ஒரு சமயம் இவன் புகார் வரைக்கும் சென்று அதனை வெற்றி கொண்டானாதலும் பொருந்தும். மெய்ம்மறை – கவசம். கழை – மூங்கில். கோடு – மலையுச்சி.
வளன் – செல்வப் பெருக்கம். ஆண்மை – மறமாண்பு. ‘மாந்தர் அளவு இறந்தன’ என்றது, மாந்தராலே அளவிட்டு அறியவும் இயலாதபடி மிகுந்தன என்பதாம். தேறார் தெளியார்; தெளிதல் நின் பெருமையறிந்து வந்து நின்னைப் பணிந்து போதல். பிறரும் சான்றோர் – பிறராகிய சான்றோரும். மதிமருளல் – மதிமயங்கல்.
பகைவரது அறியாமைக்கு இரங்குவதுபோலக் கூறி, அவர்க்கு இரங்கி அருளுமாறு அறவுரை பகர்வது இப்பாட்டு. அறியாமையால் பகைத்தாரன்றி, ஆண்மையாற் பகைத்தார் எவருமே அல்லர் என்பதாம்.
74. நலம்பெறு திருமணி !
துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. இதனாற் சொல்லியது: பெருஞ்சேரல் இரும்பொறையின் நல்லொழுக்கமும் அதற்கேற்ற நல்லறிவு உடைமையும்.
[பெயர் விளக்கம்: மணியறிவாரால் இதுவே நல்லதென்று சொல்லப்படுதலையுடைய திருமணி என்ற சிறப்பால் இப்பாடல் இப்பெயர் பெற்றது.]
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்
சாயறல் கடுக்கும் தாழிரும் கூந்தல்
வேறுபடு திருவின் நின்வழி வாழியர்
கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம் 5
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்
வரையகம் நண்ணிக் குறும்பொறை நாடித்
தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம்பொறிக்
கலவமரம் கடுக்கும் கவலைய மருப்பிற்
புள்ளி இரலைத் தோலூன் உதிர்த்துத் 10
தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டில்
பருதி போகிய புடைகிளை கட்டி
எஃகுடை இரும்பின் உள்ளமைத்து வல்லோன்
சூடுநிலை உற்றுச் சுடர்விடு தோற்றம்
விசும்பாடு மரபின் பருந்தூறு அளப்ப 15
நலம்பெறு திருமணி கூட்டும் நற்றோள்
ஒடுங்கீர் ஓதி ஓண்ணுதல் கருவில்
எண்ணியல் முற்றி ஈரறிவு புரிந்து
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற் கமைந்த அரசுதுறை போகிய 20
வீறுசால் புதல்வன் பெற்றனை, இவணர்க்கு
அருங்கடன் இறுத்த செருப்புகல் முன்ப!
அன்னவை மருண்டனென் அல்லேன் நின்வயின்
முழுதுணர்ந் தொழுக்கும் நரைமூ தாளனை
வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் 25
தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்கென
வேறுபடு நனந்தலை பெயரக்
கூறினை பெருமநின் படிமை யானே!
தெளிவுரை: யாகம் செய்வதற்குரிய வேதமுறைகளைக் கேட்டறிந்தாய். அவற்றிற்குரிய விரதங்களுள் குறைவின்றி ஒழுகினாய். வேள்வியினையும் இயற்றுவித்தனை. அதனால், தேவருலகத்தார் மிகவும் உவப்படைந்தனர். நுண்ணிய கருமணலைப்போல விளங்கும் தாழ்ந்து தொங்கும் கருமையான கூந்தலையுடையவள், திருமகளினும் வேறானவோர் திருமகளேபோல விளங்குபவள், நின் தேவி. அவள்தான் நின் கால்வழியானது நெடிது வாழும் பொருட்டாக—
கொடுமணம் என்னும் ஊரினிடத்தே செய்யப்பெற்ற தொல்வினையால் மாட்சியமைந்த அரிய பல அணிகலன்களையும், பந்தர் என்றும் ஊரிடத்தேயிருந்து பெற்றதும் பலரும் சிறந்ததெனப் புகழ்வதுமான முத்துக்களையும் கொண்டு அழகுபடுத்தினர். மலைப்பக்கத்தைச் சென்று அடைந்தும், குறுகிய பொற்றைப் பகுதிகளைத் தேடியலைந்தும், மானின் வகையினைத் தெரிந்தவர்கள் ஒரு கலைமானைப் பிடித்துக் கொணர்ந்தனர். சிதறிய செவ்விய புள்ளிகளைக் கொண்ட கலைமான் அது. கவைப்பட்ட மரக்கொம்பைப் போலத் தோன்றும் கவறுபட்ட கொம்பினையுடையது அது. அந்தப் புள்ளிமாளின் தோலையுரித்து, அதனின்றும் ஊனைப் போக்கினர். மற்றும் அதன்பாலுள்ள தீதானவற்றையும் களைந்தனர். எஞ்சிநின்ற தோலை வட்டமாக அறுத்து, ஒளிவீசுமாறு பாடஞ்செய்து கொண்டனர்.
அங்ஙனம் வட்டமாக அறுத்துக்கொண்ட மான்தோலின் ஓரங்களிலே மேலே சொல்லிய கலன்களையும் முத்துக்களையும் ஒன்றற்கொன்று இனமாகும்படி முறையே அமைத்துக் கட்டினர். கூர்மையுடைய இரும்பினாலே அத்தோலின் உட்புறத்தே வரைவதற்கு உரியவெல்லாம் முறையே வரைந்து செப்பமாக அமைத்தனர். அதன்பின்னர், யாகஞ் செய்யுஞ் தொழிலிலே வல்லோன், செவ்வொளி விட்டுவிட்டு ஒளிறும் தோற்றத்தையுடைய அதனை, நின் தேவியின் தோளிலே சூடுவதற்குரிய நிலையிலே அமையச் செய்தான். வானத்தே பறந்து திரியும் மரபினையுடைய பருந்துகள் அத்தோலை ஊனென மயங்கி அடையக் கருதின.
அத்தகைய மான்தோலோடு நல்ல ஒளிபெற்ற சிறந்த மணிகள் பொருந்திய அணிகலன்களையும் அணியப்பெற்ற நல்ல தோள்களை உடையவள்; சுருளமைந்த கூந்தலையும் ஒளியமைந்த நெற்றியினையும் உடையவள்; நின் தேவியாவாள். அவளுடைய கருவிலே தோன்றிப் பத்து மாதங்களும் முறையே நிரம்பியபின், பேரறிவு அமைந்தவனாகவும் மென்மையும் செம்மையும் உட்பட்ட பிற நற்குணங்கள் பொருந்தியவனாகவும், காவற்பணி பூண்பதற்கு அமைந்த அரசியல் துறைகளில் எல்லாம் முற்றவும் பயின்று நிரம்பியவனாகவும் விளங்கும் சிறப்புமிக்க நின் புதல்வனையும் நீதான் பெற்றனை! நின் குலம் தழைக்குமாறும் இவ்வுலகத்தோர் வாழுமாறும் நினக்குரிய அரிய கடமையைச் செய்து முடித்தவனாகிய, போரை விரும்புகின்ற தலைவனே!
நீதான் நல்ல புதல்வனை விரும்பி வேள்வி செய்தாய் என்றும், அதன் பயனாகப் புதல்வனைப் பெற்றனை என்றும் எண்ணி, யானும் மயங்குவேன் அல்லேன். நின்னிடத்தே பணி பூண்டு, தன் புரோகிதத்தொழிலை முழுதும் உணர்ந்து கடைப் பிடித்துவரும் நரைத்த முதியோனுக்கு, ‘வண்மையும், மாண்பும், வளனும், மக்கட்பேறும், தெய்வ சித்தியும், மற்றும் பிறவான நன்மைகளும் முற்செய்த தவமுடையோர்க்கே வந்தடைவனவாகும்” என்று நீயே அறிவு கூறினை! அவனது கோட்பாட்டினும் வேறுபட்டதான பரந்த இடத்தையுடைய காட்டிற்குச் சென்று தவநெறியில் ஈடுபடுமாறும் நின் தவவொழுக்கச் செவ்வியாலே எடுத்துக் கூறினை! பெருமானே, அதனையே யானும் வியக்கின்றேன்!
சொற்பொருளும் விளக்கமும்: சாய் – நுண்மை: சாய்தலும் ஆம். அறம் – அறல்பட்ட கருமணல். இருங்கூந்தல் – கருங்கூந்தல் வேறுபடு. திரு – திருவினும் வேறானவோர் திருமகள். நின் வழி – நின் குடிமரபு. வாழியர் – வாழும் பொருட்டாக; செய்யியர் என்னும் வாய்பாட்டு வினையெச்சம். கொடுமணம் – ஓர் ஊர். பட்ட -செய்து கொள்ளப்பட்ட. வினைமாண் – தொழில் வினையாலே மாட்சியமைத்த. பந்தர் ஓர் ஊர். பலர்புகழ் – பலரும் புகழ்தலையுடைய. வரையகம் – மலைச்சாரற் பக்கம். குறும்பொறை – குறிய பொற்றைப் பகுதிகள். தெரியுநர் – மான்களின் இருப்பிடத்தையும் வகையையும் தெரிந்தோரான வேடர்கள். சிரறுதல் – சிதறுதல். பொறி – புள்ளி. கவைமரம் – கவறுபட்ட மரக்கொம்பு. கடுக்கும் – ஒக்கும். கவலைய – கவறுபட்டிருத்தலைடைய. புள்ளி இரலை – புள்ளிமான். தோல் ஊன் உதிர்த்து – தோலினின்றும் ஊனைப் போக்கி. தீது – குற்றம். திகழ்விடு – ஒளி விடுகின்ற. பாண்டில் – வட்ட வடிவாக அறுக்கப்பெற்ற தோல்.
மனைவி நல்ல மகனைப் பெறுவதற்கான ஒருவகைத் தெய்வச் சாந்தி முறை இப்பகுதியிற் கூறப் பெற்றுள்ளது.
பருதிபோகிய – வட்டமாக அறுத்துக்கொண்ட. புடை – ஓரங்கள். கிளைகட்டி – முத்துக்களையும் அணிகலன்களையும் இனமாகக் கட்டி. எஃகு – கூர்மை. இரும்பு – இரும்பாலாகிய கருவி. உள்ளமைத்து – உள்ளே கீறியமைத்து. ‘வல்லோன்’ அந்தச் சாந்தி செய்தலில் வல்லவன். சூடுநிலை – சூடுதற்கான நிலைமை. சுடர்விடு – ஒளிவிடுகின்ற. விசும்பாடு மரபு – விசும்பிற் பரந்து. பருந்து ஊறு அளப்ப – பருந்து அத்தோலை மாமிசமென்று கருதிக் கைப்பற்றுவதற்கு அடையக் கருத. ’எண்ணியல் முற்றி’ என்றது பத்து மாதங்களும் நிறைந்து என்றதாம். ஈரறிவு – பேரறிவு; இம்மையறிவும் மறுமையறிவும். புரிந்து – அமைந்து. சால்பு – அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை முதலிய குணங்களின் நிறைவு. செம்மை – நடுநிலைமை. ‘அரசு துறைகள்’ படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் போல்வன. வீறு – சிறந்த சிறப்பு. இவணர் – இவ்வுலகத்தார். கடன் – கடமை. இறுத்த – செய்து முடித்த. செறுப்புகல் – போரை விரும்பும். முன்பன் – வலியுடையோன்.
மருட்சி – மயக்கம்; வியப்பு. நின் வயின் – நின்னிடத்து. ஒழுக்கும் – கடைப்பிடித்துச் செலுத்தும். மூதாளன் – முதியவன். வண்மை – கொடை. மாண்பு – சிறந்த குணங்கள். வளன் – செல்வம். எச்சம் – மக்கள். வேறுபடு – நாட்டினின்றும் வேறுபட்ட காடு; புரோகித நெறியினின்றும் வேறுபட்ட தவநெறி. நனந்தலை – பரந்த இடத்தையுடைய காடு. படிமை – தவ்வொழுக்கப் பெருமை. இதனால், பெருஞ்சேரல் இரும்பொறை இராஜயோகியாக விளங்கினன் எனலாம்.
75. தீஞ்சேற்று யாணர் !
துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: தீஞ்சேற்று யாணர். சொல்லியது: பெருஞ்சேரலின் வென்றிச்சிறப்பு.
[பெயர் விளக்கம்: இனிய பாகானது இடையறவின்றிப் புதுவரவாய்க் கிடைப்பது என்னும் நயம் தோன்றத் ’தீஞ்சேற்று யாணர்’ என்றதால், இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.]
இரும்புலி கொன்று பெருங்களிறு அடூஉம்
அரும்பொறி வயமான் அனையை! பல்வேல்
பொலந்தார் யானை இயல்தேர்ப் பொறைய!
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து
நின்வழிப் படாஅ ராயின் நென்மிக்கு 5
அறையுறு கரும்பின் தீஞ்சேற் றியாணர்
வருநர் வரையா வளம்வீங்கு இருக்கை
வன்புலந் தழீஇ மென்பால் தோறும்
அரும்பறை வினைஞர் புல்லிகல் படுத்துக்
கள்ளுடை நியமத்து ஒள்விலை கொடுக்கும் 10
வெள்வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி அறியார் தத்தம்
பாடல் சான்ற வைப்பின்
நாடுடன் ஆடல் யாவணது அவர்க்கே
தெளிவுரை: பலவாகிய வேற்படை வீரர்களோடு, பொன்மாலை யணிந்த போர்க்களிறுகளையும், விரையச் செல்லும் தேர்களையும் உடையனான பொறையனே! நீதான் பெரிய புலியைக் கொன்றுவிட்டு, அதனையடுத்துப் பெரிய களிற்றையும் தாக்கிக் கொல்லும் வரிகளையுடைய வலிய சிங்கத்தினை ஒப்பாவாய்.
இருபெரு வேந்தராகிய சோழபாண்டியரும், வேளிர்குலத் தலைவர்களும், மற்றும் பிற குடித்தலைவர்களும் நின் திருவடிக் கீழ்ப் பணிந்து, நின் ஆணையின்படியே நடவாராயின்-
நெல்வளத்தால் மிகுதிப்பட்டதாகியும், அறுக்கலுற்ற கரும்பின் இனிய பாகமாகிய புதுவளத்தினை வருவார்க்கெல்லாம் அளவின்றிக் கொடுத்திருப்பதுமாகிய, வளம்மிகுந்த ஊர்களைக் கொண்டவான அவர் நாடுகள் எல்லாம் தம் மென்புலத் தன்மைகெட்டு வன்புலத் தன்மையைத் தழுவிவிடுமே! மருதப்பகுதியாகிய மென்புலப் பகுதிகள் தோறும் அரிய போர்ப்பறைகளைக் கொண்டோராகிய போர்த்தொழிலோர், அவ்வவ்விடங்களைக் காப்பவருடன் அங்கங்கே சிறுசிறு போர்களைச் செய்தபடியிருப்பர். அங்ஙனம் போரிட்டுப் பெற்ற பொருளைக் கள்ளுக் கடைகளையுடைய தெருவிடத்தே சென்று தாம் உண்ணும் கள்ளுக்குரிய சிறந்த விலையாகவும் தருவர். உழுது வெள்வரகு உணவையே கொள்ளும் வலிய காட்டுநிலப் பகுதிகட்குச் சென்று தங்கியிருத்தலையும் அப்பகைவர் அதன்பின் செய்பவராவர். செந்நெல் அரிசியாலான உணவினை உண்டறியாதாராகிய நிலையினையும் அடைவர். இத்தகைய நிலைமையை அடைந்துவிட்ட அவர்கட்குப் புலவர்களாற் பாடுதற்கு அமைந்த சிறந்த ஊர்களையுடையவான தங்கள் நாட்டினை ஒருங்கே ஆள்வதென்பதும் எவ்வாறுதான் இனி இயலுமோ?
சொற்பொருளும் விளக்கமும்: பணிந்து போகாத பகையரசர் தம்முடைய வளநாட்டை இழந்தவராக, எஞ்சிய தம்முடைய படைமறவருடன் காட்டுப் பகுதிக்குள் சென்று மறைந்துவாழும் புல்லிய வாழ்க்கையினராகிக் கழிவர் என்றனர். இரும்புலி – பெரிய புலி. பெருங்களிறு – பெரிய போர்க்களிறு. பொறி – கோடுகள். வயமான் – சிங்கம். சிங்கம் பெரும் புலியைக் கொன்றதாயினும், அதனாற் சோரிந்து களைத்துக் கிடந்துவிடாமல், அடுத்துவரும் பெருங்களிற்றையும் கொன்றுவிடும் ஆற்றலைப் பெற்றிருப்பது. அவ்வாறே பெருஞ்சேரலும் பகைவரை ஒவ்வொருவராக அழிக்கும் ஆற்றலையுடையவன் என்பதாம். அதனாற் சோர்வு கொள்ளான் என்பதும், வெற்றி அவனதேயாகும் என்பதும் இதனால் அறியப்படும். பொலந்தார் – பொன்மாலை. இயல்தேர்- விரையச் செல்லும் தேர். வேந்தர்-சோழபாண்டியர். அறையுறு கரும்பு – அறுத்தலையுடைய கரும்பு; இதுதான் நெல் வயல்களில் பயிருக்கு இடையிடையே கிளைத்திருப்பதாகலின், நெற்கதிர் முற்றி விளைவதற்கு முன்பாக இக்கரும்புகளை அறுத்துவிடுவர் என்பதாம். பயிரின் அறுவடைக்குப் பின்னர் கரும்பு பயன்தரும். அப்படி விளையும் துணைப்பயிரான கரும்பின் மிகுதியை, அதன் சாற்றை வருவார்க்கெல்லாம் வரையாது கொடுக்கும் வளமைச் சிறப்பாற் கூறினர். இருக்கை – ஊர்கள்; இருப்பிடங்கள். வன்புலம்-காட்டுப் பகுதி. மென்பால் – மருத நிலப்பகுதி. போரின் விளைவாலும் காப்பாரின்மையாலும் மென்புலம் வன்புலமாகத் திரியும் என்று கொள்ளுக. புல்லிகல் – சிறுசிறு சண்டைகள். நியமம் – கடைத்தெரு. ‘ஒள்விலை’ என்று சொன்னது, கள்ளுக்கு உரிய விலையைக் கணக்கிட்டுத் தராமல், தம்பாலுள்ள பொருளை அதற்குப் பன்மடங்கு அதிகமாகவே அள்ளித் தருதல். வெள்வரகு – வெள்ளை வரகு; வரகுத்தானியத்துள் இது ஒருவகை: இப்போது பரவலாகக் கிடைப்பது கேழ்வரகு; இது கருஞ்சிறப்பு நிறமானது. கொள்ளுடைக் கரம்பை – உணவாகக் கொள்ளுதலையுடைய காட்டுப்பகுதி நிலம்; தோற்றோர் தம் மருதநிலத்து ஊர்களை விட்டகன்று காட்டுப் பகுதிகளிற் சென்று மறைந்து வாழும் புல்லிய வாழ்வினர் ஆவர். பாடல் சான்ற – புலவராற் பாடுதல் பொருந்திய. வைப்பு-ஊர்.
இதனாற் பகையரசரது அழிவுகூறிப் பெருஞ்சேரலது வெற்றிச் சிறப்பை வியந்து உரைத்தனர்.
‘வேந்தர்’ என்றது சோழ பாண்டியரையும், ’வேளிர்’ என்றது ஐம்பெரு வேளிரையும், ‘பிறரும்’ என்றது, இவரல்லாத பிற குறுநிலத்தலைவர்களையும், வேற்று நாட்டரசர்களையும் குறிக்கும் என்னலாம்.
76. மாசிதறு இருக்கை
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. இதனாற்சொல்லியது: பெருஞ்சேரலின் வென்றிச் சிறப்பு. [பெயர் விளக்கம்: பகைவரிடமிருந்து கொள்ளப்பெற்ற மாக்களை வரையாது வழங்கும் பாசறை இருக்கை எனச் சிறப்பித்துக் கூறியதனால், இப்பாட்டுக்கு இப்பெயர் தந்தனர்.]
களிறுடைப் பெருஞ்சமம் ததைய எஃகுயர்த்து
ஒளிறுவாள் மன்னர் துதைநிலை கொன்று
முரசுகடிப்பு அடைய அருந்துறை போகிப்
பெருங்கடல் நீந்திய மரம்வலி யுறுக்கும்
பண்ணிய விலைஞர் போலப் புண்ஒரிஇப் 5
பெருங்கைத் தொழுதியின் வன்துயர் கழிப்பி
இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்கு
ஈதல் தண்டா மாசிற்று இருக்கை
கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு
கருவி வானம் தண்தளி சொரிந்தெனப் 10
பல்விதை உழ்வின் சில்லே ராளர்
பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்
கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடுகிழ வோயே! 15
தெளிவுரை: மழைக்காலமானது கால் கொள்ளுதலைத் தொடங்கி, இடியும் மின்னலும் ஆகிய தொகுதிகளைக் கொண்ட மேகங்களும் குளிர்ந்த நீரைச் சொரியும். பலவாக விதைத்தலைத் தொடங்கும் உழவர் குடியினருள் சில ஏர்களையுடையோர், குளிர்ந்த நீர்த்துறைக்கண்ணே பூத்திருக்கும் பகன்றைப் பூவினாலே முறையாகத் தொடுக்கப் பெற்ற மாலையை அணிந்து கொள்வர். அங்ஙனம் அவர் சூடிக் கொண்டது, வெளுத்தலைப் பொருந்திய வெள்ளாடையை மேலே சூடிக்கொண்டது போன்றிருக்கும். அங்ஙனம் உழும் அவர்கள், உழவுசாலிடத்தே ஒளிக்கதிர் விளங்கும் சிறந்த மணிகளையும் பெறுவார்கள். இத்தகைய வளமுடையதும், அகன்ற இடத்தையுடையதுமான ஊர்களைக்கொண்ட சேர நாட்டிற்கு உரியோனே!
பகைவரின் போர்க்களிறுகளைக் கொண்ட பெரும் போரானது அழிவடையுமாறு, நீதான் நின் வேலினை உயர்த்தபடி, ஒளிசெய்யும் வாட்களை ஏந்திய அப் பகைமன்னர்கள் நெருங்கிப் போரிட்டு நின்ற அந்த நிலையினை அழித்து, அவரையும் கொன்றனை. நின் வெற்றிமுரசம் குறுந்தடியால் அடிக்கப்பெற்று முழக்கத்தைக் கொள்ளுமாறு, நீயும் அரிய போர்த்துறைகளை எல்லாம் சிறப்பாகச் செய்து முடித்தனை. பெருங்கடலிடத்தே சென்று வந்த மரக்கலத்தைப் பழுது பார்த்துப்பண்டங்களை விற்போரான வாணிகர், மீளவும் கடலிடைச் செல்லுதற்கேற்றவாறு அவற்றைச் செப்பனிட்டு வலிமைப்படுத்துதலைப்போல, போர் செய்தலினாலே புண்பட்ட பெருங்கையினையுடைய களிற்றுத்தொகுதியின் பெருந்துயரத்தை மருந்திட்டுப் போக்கி, அவற்றை மீளவும் போர்க் களத்திற்கேற்ற வலிமைபெறச் செய்தனை. நின்னிடத்தே வந்து இரந்தோருக்கு அவர் என்றும் வறுமை தீர்ந்து வாழுமாறு பெரும்பொருளை நல்கினை. மென்மேலும் வந்து இரப்போர்க்கும் ஈதலை ஒழியாதவனாக, பகைவரிடமிருந்து கொண்ட குதிரைகளை அவர்கட்கும் வாரி வழங்கினை. அத்தகைய நின் பாசறை இருக்கையினைக் கண்டு செல்வதற்காகவே, யானும் வந்தேன் பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும்: களிறுடைப் பெருஞ்சமம் களிறுகள் தம்முள் மோதிப் பொருகின்ற பெரும் போர்க்களப் பகுதி. எஃகு – வேல். துதைநிலை – நெருங்கி நிற்கும் நிலை. கொன்று – சிதைத்து அழித்து. கடிப்பு – குறுந்தடி. துறை – போர்த்துறை. போகி – செய்து முடித்து. நீந்திய – சென்று வந்த. மரம் – மரக்கலம். வலியுறுக்கும் – பழுது பார்த்து வலிமைப் படுத்தும். பண்ணிய விலைஞர் – பண்டங்களை விற்போர். புண் ஓரீஇப் – புண்களை மருந்திட்டுப் போக்கி, பெருங்கை – பெரிய கை. தொழுதி – கூட்டம். கழிப்பி – போக்கி. தண்டா- நீங்காத. சிதறு – வாரி வழங்குகின்ற. இருக்கை – பாசறையிருக்கை. செல்கு – செல்லும் பொருட்டு. கால்கொண்டு – மழை கால்கொண்டு. கருவி – இடி மின்னனாலாகிய தொகுதி. வானம் – மேகம். ஏராளர் – ஏர்களை உடையோர். பகன்றை – நீர்க் கொடிவகையுள் ஒன்று; வெள்ளைப்பூ பூப்பது. இப் பூமாலையை அவர் கழுத்திற் சூடிக் கொண்டது, வெளுத்த வெள்ளுடையைச் சூடியது போலத் தோற்றும் என்க. பாங்கு – முறைமை. தெரியல் – மாலை. மணி – செம்மணி. உழவர் – உழுது பயன் கொள்பவர்; அவர் அத்தொழிலைச் செய்யுங்காலத்தே எதிர்பாராதே கிடைக்கும் செம்மணிகளையும் பெறுவர் என்பதாம்; இது சேரநாட்டின் பலவகைச் செழுமையைக் குறிப்பதாம்.
77. வென்றாடு துணங்கை !
துறை: உழிஞை அரவம். வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு.
[பெயர் விளக்கம்: ஊர்களிலே யாடும் துணங்கை போலன்றிப் போர்க்களத்தே பகைவரை வென்று ஆடிய துணங்கை என்ற சிறப்பால், இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது. “பொதுப்படப் படை எழுச்சி கூறியதனை உழிஞை அரவம் என்றது, அப்படை எழுங்காலத்துக் கோட்டை மதில்மீதிற் போர்குறித்து எழுந்ததை ஒரு காரணத்தால் அறிந்து போலும்” என்பது பழையவுரை.]
எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறையன்
என்றனி ராயின் ஆறுசெல் வம்பலிர்
மன்பதை பெயர அரசுகளத் தொழியக்
கொன்றுதோள் ஓச்சிய வென்றாடு துணங்கை
மீபிணத் துருண்ட தேயா ஆழியின் 5
பண்ணமை தேரும் மாவும் மாக்களூம்
எண்ணற் கருமையின் எண்ணின்றோ இலனே!
கந்துகோள் ஈயாது காழ்பல முறுக்கி
உகக்கும் பருந்தின் நிலத்துநிழல் சாடிச்
சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர் 10
ஆபரந் தன்ன செலவின்பல்
யானை காண்பல்அவன் தானை யானே!
தெளிவுரை: வழியே செல்லும் புதியோரே! “சினத்தோடு போர்ச்செயலிலே ஈடுபடுவோனான நும் பெருஞ்சேரல் இரும்பொறை எத்துணைப் பெரும் படையணிகளை உடையவனோ?” என்று கேட்பீராயின்—
முன்பு, பல பகையரசரோடும் செய்த போர்களிலே. அவர்தம் படைமறவர் கூட்டம் அழிந்தொழியவும், அவ்வரசர்களும் அக்களங்களில்தானே செத்தொழியவும் கொன்று, அவ்வெற்றியின் களிப்பினாலே தோள்களை உயர்த்து வீசியாடுகின்ற துணங்கைக் கூத்தினை ஆடியவர் அவன் படை மறவர்கள். அப் பிணக்குவியல்களின் மேலாக உருண்டு சென்றும் தேய்ந்து போகாத சக்கரங்களை யுடைய, பண்ணுதலமைந்த தேர்களும், குதிரைகளும், காலாட்களும் இவ்வளவென எண்ணிக் காண்பதற்கான அருமையினை உடையவை. ஆதலின், யானும் அவற்றை எண்ணுதலில் ஈடுபட்டிலேன்.
கட்டுத் தறியின்கண்ணே கட்டுப்பட்டு அடங்கி நில்லாதனவும், குத்துக்கோல்கள் பலவற்றையும் அழித்தனவும். உயரத்தே வானிற் பறந்து செல்லும் பருந்துகளின் நிழல் நிலத்திலே விழக் காணின் அதனையும் தாக்குவதுமான, பரற் கற்களையுடைய உயர்ந்த வன்னிலத்திலே வாழும், நிலத்தைத் தோண்டும் படையினைக் கைக்கொண்டு செல்லும் கொங்கர்களது பசுக்கள் பரந்து செல்வதைப் போன்று பரந்து செல்லும் செலவினைக் கொண்டதுமான, பல போர் யானைகளை மட்டும் அவனது தானையிடத்தே யான் கண்டுள்ளேன்.
சொற்பொருளும் விளக்கமும்: சினப்போர் – சினத்தோடு செய்யும் போர்த்தொழிலையுடைய. பொறையன் – சேரன். ஆறு – வழி. வம்பலிர் – புதியரே. மன்பதை – காலாட்படை யினர். பெயர் – அழிய; இவ்வுலகைவிட்டு மேலுலகம் போய்ச் சேர. ஒழிய – செத்து அழிய. துணங்கை – கூத்து: தோள் ஓச்சியாடும் ஒருவகைக் களிக்கூத்து. மீபிணத்து – பிணத்து மேல். உருண்ட – உருண்டு சென்ற. ஆழி – சக்கரம். பண் அமை – பண்ணுதல் அமைந்த; பண்ணுதல் – அலங்கரித்தல். மா – குதிரை. மாக்கள் – காலாட்படையினர். கோள் ஈயாது – கட்டுப்பட்டு நில்லாது. கந்து – கட்டுத்தறி. காழ் – குத்துக் கோல். முருக்கி – பறித்து அழித்து. உகக்கும் – உயர்ந்து பறக்கும். சாடல் – மோதுதல். சேண் – உயர்ந்த. பரல்- பருக்கைக் கற்கள். முரம்பு – வலிய மேட்டு நிலம். ஈர்ம் படை – நிலத்தைத் தோண்டுதற்கான குந்தாலி போன்ற படை. கொங்கர் அளவற்ற பசுக்களை உடையோராயிருந்தனர்; இதுபற்றிச் சேரனின் யானைப்படையின் அளவைப் பரந்து செல்லும் அப்பசுக்களின் மிகுதியோடு ஒப்பிட்டுக் கூறினர். இதனாற் பெருஞ்சேரலது பெரும்படையினைப் பற்றியும் உரைத்தனர்.
78. பிறழ நோக்கியவர்!
துறை: விறலியாற்றுப்படை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. இதனாற்சொல்லியது: பெருஞ்சேரலிரும்பொறையின் வென்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம்: தம் சினத்தினது மிகுதியாலே சேரனின் படைத்தோற்றத்தினை முறையாக நோக்கியுணராது பலபடப் பிறழ்நோக்கி, அதனால் தம் அழிவுக்குத் தாமே காரணமாகிய பல்இயம் உடையவர் எனப் பகைவரைச் சிறப்பித்தனர்; இதனால் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது. விறலியைப் பெருஞ்சேரல் இரும்பொறையிடத்தே ஆற்றுப் படுத்தியமையால் விறலியாற்றுப்படை ஆயிற்று.]
வலம்படு முரசின் இலங்குவன விழூஉம்
அவ்வெள் ளருவி உவ்வரை யதுவே
சில்வளை விறலி செல்குவை யாயின்
வள்ளிதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து
மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் 5
கிளிகடி மேவலர் புறவுதொறும் நுவலப்
பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின்
வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயில் இறும்பின் தகடூர் நூறிப்
பேஎம் மன்ற பிறழநோக் கியவர் 10
ஓடுறு கடுமுரன் துமியச் சென்று
வெம்முனை தபுத்த காலைத் தம்நாட்டு
யாடுபரந் தன்ன மாவின்
ஆபரந் தன்ன யானையோன் குன்றே.
தெளிவுரை: சிலவாகிய வளையல்களை அணிந்த விறலியே! மெல்லிய இயல்பினரான மகளிர் அசைந்தசைந்து நடந்தவர்களாகச் சென்று மருதநிலத்துள்ள வள்விய இதழ்களையுடைய தாமரையின் மலர்களை, அயலேயுள்ள நெய்தற் பூக்களோடும் சேர்த்து அரிவார்கள். பின்னர்ப் புனத்தே வந்து படியும் கிளிகளை ஓட்டுவாராகச் செல்லும் விருப்பினராய்ப் புனத்திடந்தோறும் சென்று, அதற்கான குரல்களை எழுப்பு வர். இத்தகைய பலவகைப் பயன்களும் ஒருங்கே நிலைபெற்ற முல்லைநிலத்தின் கண்ணே அமைந்த ஊர்களையுடையதும், வெல்லும் போர்த்தொழிலையுடைய ஆடவர்கள் மறத்தையே விரும்பியவராகக் காத்துப் பேணுவதும், வில் வீரர்கள் நெருங்கியுள்ள காவற் காட்டை உடையதுமான தகடூர்க் கோட்டையை அழித்தவன் சேரமான். தாம் கொண்ட சினமிகுதியாலே சேரனின் படைத்திறனைப் பிறழ நோக்கியும், அச்சத்தால் நோக்கியும், அவனை எதிர்த்துநின்ற தகடூரினர், பலவகை வாத்தியங்களையும் உடையவர்கள். எதிரிட்ட போர்க்களங்களில் எதிர்த்த பகைவரைத் தோற்று ஓடச்செய்யும் கடுமையான வலிமையும் கொண்டவர்கள். அவர்களின் அந்த வலிமையானது அழியும்படியாக அவனும் அவர்மேற் படைகொண்டு சென்றான். கொடிய போர்முனையிலே அவர்களை அழித்தான். அங்ஙனம் அவன் அழித்த வேளையிலே அப்பகைவர் நாட்டிலேயுள்ள ஆடுகள் காப்பாரற்ற வையாய்ப் பரந்து நின்றாற்போல எங்கணும் பரந்து தோன்றும் குதிரைகளையும், அவர்களின் பசுக்கள் எங்கணும் பரந்து நின்றாற் போல விளங்கும் யானைகளையும் உடையவன் சேரமான். அவன் தங்கியிருக்கும் குன்றமானது—
வெற்றி பொருந்திய முரசினைப்போல ஒலியோடு விளக்கம் உடையனவாக வீழ்ந்து கொண்டிருக்கும் அழகிய வெள்ளிய அருவிகளை உடையதும், உவ்வெல்லையில் உள்ளதுமாகிய அதுவேயாகும். நீயும் அவ்விடத்தே செல்வாயாயின் அவனைக் காண்பாயாக!
சொற்பொருளும் விளக்கமும்: வலம் – வெற்றி. இலங்குவன விழூஉம் – விளக்கம் உடையனவாக வீழ்ந்துகொண்டிருக்கும். அவ்வெள்ளருவி – அழகிய வெள்ளிய அருவிகள். சில்வளை – சிலவாகிய வளைகள். வள்ளிதழ் – வளவிய இதழ்கள். மெல்லியல் – மென்மைத் தன்மை. ஓக்குதல் – அசைந்தசைந்து நடத்தல். இயலி – நடந்து. கிளிகடி மேவலர் – கிளிகடிதலை விரும்பியவராக. புறவு – முல்லை நிலம். நுவல – கிளியோப்புங் குரல்களை எழுப்ப. பல்பயன் – பலவகைப் பயன்கள்; தாமரை மருதப் பயனையும், நெய்தல் நெய்தற் பயனையும், கிளிகடிதல் முல்லைப்பயனையும் குறித்தன. கடறு – முல்லைநிலக் காடு. வைப்பு – ஊர். வெல்போர் ஆடவர் – வெற்றிப்போர் செய்த புகழுடைய ஆடவர். மறம் புரிந்து காக்கும் – மறச்செயலை விரும்பியவராகக் காத்து நிற்கும். வில்பயில் இறும்பு வில்வீரர் நெருங்கியுள்ள காவற்காடு. தகடூர் – தகடூர்க்கோட்டை; இது அதிகமானுக்கு உரியதாயிருந்தது. ஓடுறு கடுமுரண் – பகைத்து வந்தார் தோற்று ஓடுதற்குச் செய்யுமளவு கொண்ட கடுமையான வலிமை. துமிய – அழிய. பேஎம் – அச்சம். இயவர் – இயங்களை உடையோர்; போர் முரசமும் வெற்றி முரசமும் உடையோர்.
தகடூரின் பெருவளத்தையும், அதனைக் காத்து நின்ற மறவரின் பெருமறத்தையும் கூறி, அவர்தாம் சேரமானின் படைவலிமையைப் பிறழ நோக்கியதனாலேயே அழிந்தனர் எனவும் உரைத்தனர். அவ்வெற்றியோடு அவன் பாசறையிடத்தே இருத்தலால், அவனிடஞ் சென்றால் நீயும் பெரிதான பரிசில்களைப் பெறுவாய் என்று ஆற்றுப்படுத்தியதுமாம்.
79. நிறம்படு குருதி !
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு:செந்தூக்கு. இதனாற் சொல்லியது: பெருஞ்சேரலின் பல குணங்களும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த்தியது.
[பெயர் விளக்கம்: நிறம்படு குருதி அல்லாத இடங்களிற் குருதி கொள்ளாமையின், நிறங்களைத் திறக்க அவ்விடத்தே உண்டான குருதி என்றதன் சிறப்பாலே, இதற்கு இப் பெயர் ஆயிற்று.]
உயிர்போற் றலையே செருவத் தானே
கொடைப்போற் றலையே இரவலர் நடுவண்
பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி
நின்வயின் பிரிந்த நல்லிசை கனவினும்
பிறர்நசை யறியா வயங்குசெந் நாவின் 5
படியோர்த் தேய்த்த ஆண்மைத் தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப
அனைய அளப்பருங் குரையை அதனால்
நின்னொடு வாரார் தம்நிலத்து ஒழிந்து
கொல்களிற்று யானை எருத்தம் புல்லென 10
வில்குலை யறுத்துக் கோலின் வாரா
வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்தவர்
அரசுவா அழைப்பக் கோடறுத் தியற்றிய
அணங்குடை மரபின் கட்டில்மேல் இருந்து
தும்பை சான்ற மெய்தயங்கு உயக்கத்து 15
நிறம்படு குருதி புறம்படின் அல்லது
மடையெதிர் கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇக்
கேடில வாக பெருமநின் புகழே!
தெளிவுரை: விளங்குகின்ற செம்மையிலே செல்லும் நாவினையும், வணங்காத பகைவரை அழித்த ஆண்மையினையும், தொடியுடையவளான நின் தேவியது தோள்களைத் தழுவுங்காலத்தே அதனாற் கசங்கி வாடிய மாலை விளங்கும் மார்பினையும் உடையோனே!
நீதான் போர்க்களத்திடத்தே நின் உயிரைப் போற்றிக் காக்கக் கருதாது, பகைவரை மேற்சென்று அழித்தலையே கருத்தாகக் கொண்டு செயற்படுவாய். நின்னை வந்து இரந்து நிற்பாரின் நடுவே அவர்கட்குக் கொடுத்தலாற் குறையும் பொருளைப்பற்றியாதும் கருதி, அதனைக் காத்துப் பேணுதற்கு நினைக்கமாட்டாய். நின்னினும் பெரியோரைப் பேணிக் காத்தும், ‘நினக்குச் சிறியோரை அருள்செய்து காத்தும் வருபவன் நீ. நின்னிடத்தினின்றும் பிரிந்த நினது நல்ல புகழானது, தன் கனவினும் பிறரை விரும்பி அவரிடத்தே சென்று நிற்றலை அறியாது. இத்தகைய அளவிடற்கரிய சிறப்புக்களை உடையவனே!
நின்னோடும் ஒன்றுபட்டு வராதவர்கள், தம் நாட்டிடத்தேயே தங்கியிருப்பார்கள். அவர் போர்க்களத்தே ஏறியமர்ந்து வருகின்ற கொல்யானையின் பிடரிடம் பொலிவழிந்து போகுமாறு, அம்மன்னரை நீயும் கொல்வாய். அவருடைய வில்லின் நாணையும் அறுத்துச் சிதைப்பாய். அதுகண்டும் நின் ஆட்சியின் கீழாகப் பணிந்து வராதவரும், முன்பே பல வெற்றிப்போரைச் செய்தோருமாகிய வேந்தரின் வெற்றி முரசங்களின் கண்களைப் பிளந்தாய். அவரது பட்டத்து யானைகள் கதறுமாறு அவற்றின் கொம்புகளை அறுத்தாய். அவற்றைக் கொண்டு செய்தமைத்ததும், தெய்வத்தன்மை பொருந்திய இயல்பினையுடையதுமான கட்டிலைச் செய்தாய். அக்கட்டிலின்மேல் இருந்தவாறு, தும்பைப் போரின் தன்மை நிரம்பிய போரைச் செய்து வென்றமையால் தம் உடல் அசைகின்ற சோர்வினிடத்தே, தம் மார்பினைக் கிழித்து அதனின்றும் வெளிப்படும் குருதி யானது பலிபீடத்தின்மேல் வீழ்ந்தால் அல்லது, தனக்கிட்ட படையலை ஏற்றுக்கொள்ளாதவளும், அஞ்சத்தக்க இயல்பினையுடைய கடவுளுமான அயிரைமலையிலுள்ள கொற்றவைக்கு நின் மறவர் பலியூட்டுச் செய்வர். அத்தகைய கொற்றவையாள் வாழ்கின்ற அயிரை மலையைப்போல, நின் புகழும் என்றும் அழியாதாகி நிலைபெறுக, பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும்: செருவத்து – போர்க் களத்து. கொடை -கொடுத்தலாற் குறைபடும் செல்வம். பெரியோர் – வயதின் முதியோர். அளித்தி-அருள் செய்வாய். நல்லிசை – நற்புகழ். நசை – விருப்பம். வயங்குதல்- விளங்குதல்; செந்நா – செல்விய நா; அஃதாவது வாய்மையே பேசும் நா. படியோர் – படியாதாரான பகைவர். கொடியோர் – வளையணிந்த மகளிர்; என்றது அவன் தேவியை. கோதை – மாலை. ‘குரை’: அசைநிலை. ‘வாரார்’: முற்றெச்சம். நிலத்து – நாட்டில். எருத்தம் பிடரி. புல்லென – பொலிவற்றுப் போக.குலை-நாண். கோலின் வாரா – செங்கோன்மைக்கண் உட்பட்டு வாராத. கண் – அடிக்குமிடம். போழ்ந்து – கிழித்து. அரசுவா – பட்டத்து யானை. அழைப்ப – வருத்தத்தாற் கதற. கோடு – கொம்பு. அணங்கு – தெய்வத் தன்மை. உயக்கம் – சோர்வு. நிறம் – மார்பு. புறம் – படையலின் மேற்பக்கம். மடை – படையல்; சமைத்த சோறு. எதிர்கொள்ளா – ஏற்றுக்கொள்ளாத. கடவுள் – அயிரை மலையிலுள்ள கொற்றவை. அயிரை – அயிரை மலை; இதனை ஐவர் மலை என்பர் இந்நாளில்.
‘நின் புகழ் கேடிலவாக’ என்றது, ‘நீயும் கேடற்று நெடிது வாழ்க’ என்றதாம்.
80. புண்ணுடை எறுழ்த்தோள்!
துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
[பெயர் விளக்கம்: எப்பொழுதும் பொருது புண் அறாத வலிய தோள் என்ற சிறப்பால், இப்பெயர் இப் பாட்டிற்கு அமைந்தது.]
வான்மருப்பின் களிற்றியானை
மாமலையின் கணங் கொண்டவர்
எடுத்தெறிந்த விறன்முரசம்
கார்மழையின் கடிதுமுழங்கச்
சாந்துபுலர்ந்த வியன்மார்பின் 5
தொடிசுடர்வரும் வலிமுன்கைப்
புண்ணுடை எறுழ்த்தோள் புடைலவங் கழற்கால்
பிறக்கடி ஒதுங்காப் பூட்கை ஒள்வாள்
ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று உரைஇ
இடுக திறையே புரவெதிர்ந் தோற்கென 10
அம்புடை வலத்தர் உயர்ந்தோர் பரவ
அனையை ஆகன் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடிப்
புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் 15
நிலவரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்பநின் தெம்முனை யானே?
தெளிவுரை: வெள்ளிய கொம்புகளையுடைய களிற்று யானைகள், பெரிய மலைகளைப்போலக் கூட்டங் கூட்டமாகத் திரண்டு நிற்கவும், குறுந்தடிகளை எடுத்து அடிக்கப்பெற்ற வெற்றி முரசங்களின் ஒலியானது கார்காலத்து மேகங்களின் இடிமுழக்கத்தைப் போன்று மிகுதியாக ஒலிக்கவும் –
பூசப்பெற்ற சந்தனச் சாந்து உலர்ந்து போய்விட்ட பரந்த மார்பினையும், வீரவளைகள், ஒளி சுடர்விடும் வலியமைந்த முன்னங் கைகளையும், விழுப்புண் பொருந்திய வலிய தோள்களையும், பனம்பூ மாலையினையும், வீரக்கழல்கள் விளங்கும் கால்களையும், முன்வைத்த காலைப் பின்வைத்து ஒதுங்கிப்போகாத மேற்கோளினையும், ஒளியமைந்த வாளிளையும் உடையவராகவும், போரில் மனந்தளராத தன்மையராகவும் விளங்குபவர், நின் பகைவர்.
அத்தகையவரான அவர்க்கு எதிராகச் சென்று நின்று “நும்மைக் காக்கும் பாதுகாவற் பணியை மேற்கொண்டோனாகிய எம் இறைவனுக்கு நீரும் திறைஇட்டுப் பணிவீராக” என்று சொல்லி, உயர்ந்த பண்புடையாராகிய நின் தூதுவர் நின்னுடைய அத்தன்மையாதலைப் பொருந்திய அருங்குணங் களையெல்லாம் எடுத்துப் பாராட்டிக் கூறுவார்கள். நீதான் படையெடுத்துச் சென்றபோது, அவ்விடத்தே எழுகின்ற கொடிய போர்முனையிடத்தே சினங்கொண்டு போரியற்றி. இவ்வுலகத் தெல்லைவரைக்கும் நிலைபெறச்செய்த நற்புகழையுடைய அழியாத உளத்திண்மையினை உடையவனே! இவற்றைக் கேட்டும் தெளிவுறாது நின்னைப் பகைத்த நின் பகைவரது நெடிய தேர்கள் மிகவிரைவாகச் செல்லக்கூடிய வையானாலும், அவற்றிற் பூட்டப்பெற்றுள்ள குதிரைகள் வேகங்கொண்டெழுந்த காற்றினும் கடுவிரைவோடு செல்லக் கூடியவையானாலும், அவரது தேர்களின் மிகஉயர்ந்த உச்சியிலே அசைந்தாடும் அவர்தம் கொடியானது, இனியும் அவர்தம் நாட்டின் எல்லையுள்ளே விளங்கித் தோன்று மென்பதுதான் எவ்வாறு கைகூடுமோ?
சொற்பொருளும் விளக்கமும்: வான் மருப்பு – வெண் கொம்பு. மாமலை-பெருமலை. கணங்கொண்டு – கூட்டங் கொண்டு. களிற்றியானை -களிறாகிய யானை; இருபெய ரொட்டுப் பண்புத்தொகை. எறிந்த – அடித்த. விறல் – வெற்றி; முன்னர்ப் பெற்ற வெற்றிகள். மழை – மேகம். கடிது – மிகுதியாக. சாந்து – சந்தனச் சாந்து. புலர்ந்த – உலர்ந்த; சாந்து உலர்தல் நின்மேற்கொண்ட கடுஞ்சினத்தின் வெம்மையால். வியன் – பரந்த. தொடி – வீர வளை. புண் – போர்ப்புண். எறுழ் – வலி, புடையல் – பனம்பூ மாலை. பிறக்கு – பின். பிறக்குஒதுங்கல் – பின்னிடல். பூட்கை – மேற்கோள். ஒடிவில் – மனமொடிதலில்லாத. தெவ்வர் – பகைவர். புரவு – பாதுகாத்தலை. எதிர்ந்தோன் – மேற்கொண்டவன்; பெருஞ்சேரல் இரும்பொறை. வலத்தர் – வலிமையாளர். உயர்ந்தோர் – உயர்ந்த ஆற்றலுடைய தூதர். பரவ – நின் புகழைப் பாராட்டிக் கூற. ஆகன்மாறு- ஆதலினாலே.
‘பகைவரது நாட்டெல்லையுள், அவர் தேரின்மேல் அசைந்தாடிப் பறக்கும் கொடிதான் இனிப் பறக்குமோ’ என்றது. இனி, அவர்தாம் அழிந்துபோவது உறுதியல்லவோ எனச் சேரமானின் வெற்றிமேம்பாட்டை வியந்து போற்றியதாம்.
‘விறல் முரசம்’ என்றது. வெற்றி முரசினை. இது பகையரசரை வென்று, அவரது காவன் மரத்தை அறுத்துக் கொணர்ந்து செய்துகொள்ளப் பெறுவது. இதற்குப் பூசைகளும் பலியூட்டுக்களும் செய்து வழிபாடாற்றிப் போற்றுவதும் பண்டைய மரபாகும். இம்முரசத்தின் முழக்கொலியைக் கேட்டபோதிலேயே பகையரசர் பலரும், தமக்கும் அழிவு வந்ததெனக் கலங்கி நடுங்கியவராகத் திறைசெலுத்திப் பணிவதும் உண்டு. தன் முழக்கொலியாலேயே இப்படி வெற்றி தேடித் தருதலினாலே ’வெற்றி முரசம்’ என்றனர் என்பதும் பொருந்தும்.
இதன் முழக்கொலிக்குக் கார்மழையின் கடிதான இடி முழக்கத்தை உவமை கூறினதும் சிறப்பாகும். இடிமுழக்கங் கேட்டபோது பாம்புகள் அச்சமுற்றவையாய் நடுங்கித் தம் வலியிழப்பதுபோலப், பகை மன்னரும் சேரலாதனின் போர் முரசொலி கேட்டதும் மனம் நடுங்கிப் பணிவர் என்பதாம்.
“பூட்கை” என்றது மனவூக்கத்தை. ‘பூட்கை ஒள்வாள்’ என்றது. ஒள்ளிய வாளையுடையவரான படைமறவரது மனவூக்கத்தை.
’புண்ணுடை எறுழ்த்தோள்’ என்றது புண்களையுடைய வன்மையைப் பெற்ற தோள்களை எப்பொழுதும் போர் செய்தலாலே புண்ணுடைத்தாயிருக்கும் தோள்கள் என்றதனால். அவரது போர்விருப்பத்தையும், போராண்மை மிகுதியையும் உரைத்துள்ளனர். இப்படிப்பட்ட மறவர்களை உடையவனாதலின், அவன் வெற்றி பெறுதலும் உறுதி என்பதை உணர்த்தினர்.
‘கற்பு’ என்பது திண்மையைக் குறித்ததாகும். ‘திண்மை’ மனத்திண்மை. குறிக்கோளிலே அசைக்கமுடியாத உறுதி கொண்டவன் சேரமான் என்பதனால், அவனுடைய புகழும் என்றும் குன்றாதே நிலைபெற்றிருக்கும் என்றனர்.
இந்தப் பெருஞ்சேரல் இரும்பொறை தானே பெரும் புலவனாக விளங்கியவன் என்பதும், இவனே பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பதும் சிலர் கொள்ளும் முடிபாகும். இவனுடைய பாலைப் பாட்டுக்கள் இவன் புலமையினை வலியுறுத்துவனவாகும்.
பெருஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடியது.
ஒன்பதாம் பத்து
பதிகம்
குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்ற மகன்
வெருவரு தானையொடு வெய்துறச் செய்துசென்று
இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
அருமிளைக் கல்லகத்து ஐந்தெயில் எறிந்து 5
பொத்தி ஆண்ட பெருஞ்சோ ழனையும்
வித்தை ஆண்டஇளம் பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று
வஞ்சி மூதூர்த் தந்துபிறர்க் குதவி
மந்திர மரபின் தெய்வம் பேணி 10
மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரையறு வேள்விப் புரோசு மயக்கி
அருந்திறல் மரபின் பெருஞ்சதுக் கமர்ந்த
வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ
ஆய்ந்த மரபின் சாந்தி வேட்டு 15
மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல்
இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர் கிழார் பாடினார் பத்துப்பாட்டு!
பாட்டுகளின் பெயர்கள்: 1. நிழல்விடு கட்டி, 2. வினை நவில் யானை, 3. பஃறோற்றொழுதி. 4. தொழில் நவில்யானை, 5. நாடுகாண் நெடுவரை, 6. வெந்திறல் தடக்கை, 7. வெண்டலைச் செம்புனல், 8. கல்கால் கவணை, 9. துவராக் கூந்தல், 10. வலிகெழு தடக்கை.
பாடியவர்: ஆசிரியர் பெருங்குன்றூர்க் கிழார். பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை. பாடிப்பெற்ற பரிசில்: ‘மருளில் இல்லார்க்கு மருளக் கொடுக்க’ என்று, உவகையின் முப்பத்தீராயிரங் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல் வரப் பரப்பி, எண்ணற்கு ஆகர அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக், காப்பு மறம் தான் விட்டான் அக்கோ. இரும்பொறை அரசு வீற்றிருந்த காலம்: பதினாறு ஆண்டுகள்.
தெளிவுரை: இன்னிசையாக முழங்கும் வெற்றிமுரசினைக் கொண்டவன் இளஞ்சேரல் இரும்பொறை என்பவன். இவன்றான் குட்டநாட்டு அரசகுடியினனான இரும்பொறைக்கும், மையூர் கிழான் மகளான வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் மகனாகப் பிறந்தவன். பகைவருக்கு அச்சம்வரச் செய்தலையுடைய பெருந்தானையோடு, அவரையும் பகைவர்மேற் கடுஞ்சினம் கொள்ளச் செய்தவனாக, அவரோடும் களத்தை நோக்கிச் சென்றான். இருபெரு வேந்தராகிய பாண்டியரும் சோழரும், விச்சிக் கோமானும் வீழ்ச்சிபெறுமாறு, கடத்தற்கரிய காவற் காடுகளையுடையவும், மலையிடத்தவுமான அவர்க்குரிய ஐந்து கோட்டைகளையும் அழித்தவன்.
‘பொத்தியார்’ என்னும் புலவர் பெருமானைப் புரந்து வந்தோனாகிய கோப்பெருஞ் சோழனையும், போர்வித்தைகளை யெல்லாம் ஆள்பவன் என்னும் சிறப்புப் பெற்றவனாகிய இளம் பழையன்மாறனையும், அவர்களுக்கு எதிராக வைத்த தனது வஞ்சினம் உண்மையாகுமாறு வெற்றிகொண்டவன்.
வெற்றியாற் பெற்ற செல்வங்களை எல்லாம் வஞ்சி மூதூர்க்கண்ணே கொண்டு சேர்த்து, அவற்றைப் பிறர்க்கும் உதவி மகிழ்ந்தவன். மந்திரங்களோடு வழிபாடியற்றும் மரபினுக்கு இசையத் தெய்வங்களையும் வழிபட்டவன்.
மெய்ம்மை பொருந்திய அமைச்சியல் மரபுகளில் வழுவாதவனாகிய மையூர்கிழானைக், குற்றமற்ற வேள்விகளியற்றும் புரோகிதனாக, அவரினும் சிறந்தோனாக மாற்றியவன். அரிதான திறலைக் கொண்டதென்னும் மரபினை உடையவும், பெருஞ் சதுக்கத்தே வீற்றிருந்தவுமான, வெம்மையான பிறனுடைய பூதர்களைக் கொணர்ந்து, தன் வஞ்சி மூதூர்க்கும் காவல் தெய்வங்களாக நிலை பெறுத்தியவன். சான்றோர் ஆய்ந்து கூறிய மரபுகளின்படியே அப்பூதர்களுக்குச் சாந்திகளும் செய்வித்தவன்.
இவையனைத்தும் செய்ததுடன்,
தன் நாட்டகத்தே பொருந்தியிருந்த குடிகளைப் பாதுகாத்த, குற்றமற்ற செங்கோன்மை உடையவனாகவும் விளங்கினான். இந்த இனிய புகழையெல்லாம் எடுத்து முழக்கும் முரசினை உடையவனாகவும் விளங்கினான்.
இவனைப் பெருங்குன்றூர் கிழார் பத்துப் பாட்டுகளாற் பாடிப் போற்றினார் . சொற்பொருளும் விளக்கமும்: குட்டுவன் – குட்ட நாட்டினன்; குட்டநாடு சேரநாட்டுப் பகுதிகளுள் ஒன்று; சேரவரச குடியினருள் குட்டநாட்டு அரசகுடியிற் பிறந் தோனுமாம். இரும்பொறை என்பது பெயராகலாம்; அல்லது இரும்பொறை நாட்டுப் பகுதியையும் ஆண்டவன் என்பதும் பொருந்தும். ‘மையூர்’ ஓர் ஊர்; மையூர்கிழான்- மையூர்க்கு உரியவனாகிய வேளிர்குலத் தலைவன். வேண்மாள் அந்துவஞ் செள்ளை என்பாள் குட்டுவன் இரும்பொறையின் கோப்பெருந் தேவியாவாள்.’விச்சி’ ஓர் ஊர்; இதற்குரியவன் விச்சிக்கோன் என்பான்; இது மலைநாட்டகத்தது. பாரி மகளிரை இவன் மரபினருள் ஒருவன்பாற் கொண்டு சென்று கபிலர் பெருமான் பாடிய செய்யுளால் (புறம் 200) இவன் குடியைப்பற்றி அறியலாம். ஐந்தெயில் – ஐந்து கோட்டைகள்: இவை இருபெரு வேந்தர்க்கும் விச்சிக்கோனுக்கும் உரியவாக லாம். ‘ஏழெயில்’ என்றாற் போல, ஐந்து கோட்டைகளைக் கொண்டு விளங்கிய ஒரு காவலரணும் ஆம். மிளை-காவற் காடு. பொத்தி – பொத்தியார். வித்தை- போர்க்கலை; ஓர் ஊரும் ஆம்; ஒரு புலவரும் ஆகலாம். ‘பழையன் மாறன்’ பாண்டியர் படைத்தலைவருள் ஒருவன்; பாண்டிநாட்டு மோகூர்க்குத் தலைவன்; இவனுக்குரிய காவல்மரம் வேம்பு. சோழனையும் பழையன் மாறனையும் இணைத்துக் கூறியுள்ள தனால், இவனைச் சோணாட்டு மோகூர்ப் பழையன் எனவும் கொள்ளலாம்; இவன் முன்னோனைச் செங்குட்டுவன் வென்ற செய்தியைப் பதிற்றுப்பத்தின் ஐந்தாம்பத்துப் பதிகத்தால் அறியலாம். வஞ்சினம் – சபதம். மந்திர மரபு – மந்திர உச்சாடனங்களால் தெய்வங்களை அழைக்கும் மரபு. மையூர் கிழான் – மையூர்வேள்; இவனுக்குத் தாய்மாமன்; இவனுக்கு அமைச்சனாகவும் குலகுருவாகவும் வீற்றிருந்த சிறந்த கல்வி உடையோன். புரோசு மயக்கி – புரோகிதரினும் சிறந்தோனாக, வேள்வித் தலைவனாகச் செய்து என்பதாம். ‘பெருஞ் சதுக்கத்தமர்ந்த வெந்திறல் பூதரைத் தந்து இவண் நிறீஇ’ என்றது, புகார்க்கண் காவல் தெய்வங்களாக இருந்து, புகார் அழிவுக்குப்பின் மறைந்திருந்த பூதர்களை, மந்திரமரபினால் அழைத்துத் தன் வஞ்சிநகரிடத்தே நிலைபெறச்செய்து என்பதாம். சாந்தி – தெய்வங்களுக்குப் படையலிட்டுப் போற்றும் விழா. பெருங்குன்றூர் கிழார்: வேளாண்குடிப் பெரும் புலவருள் ஒருவர். வையாவிக்கோப் பெரும்பேகன், சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி ஆகியோர் காலத்தவர்.
81. நிழல்வீடு கட்டி!
துறை: முல்லை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: நிழல்விடு கட்டி. இதனாற் சொல்லியது: காமவேட்கையிற் செல்லாத இளஞ்சேரலின் வென்றி வேட்கை.
[பெயர் விளக்கம்: பகை நாட்டுள் கொள்ளைகொண்ட பொன்னை உருக்கிக் கட்டிகளாக வார்த்து, ஒளிவிடும் அப்பொற்கட்டிகளைத் தானைவீரர்க்கு அளித்தனன் எனக் கூறிய சிறப்பால் இப்பெயர் அமைந்தது. ‘அழல் வினை அமைந்த’ என்னும் அடைச் சிறப்பானே ‘நிழல் விடு கட்டி’ என்று பெயராயிற்று என்பது பழைய உரைக் குறிப்பு.]
உலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்
வண்ணக் கருவிய வளங்கெழு கமஞ்சூல்
அகலிரு விசும்பின் அதிர்சினம் சிறந்து
கடுஞ்சிலை கழறி விசும்படையூஉ நிவந்து
காலை யிசைக்கும் பொழுதொடு புலம்புகொள 5
களிறு பாய்ந்து இயலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
அரசுபுறத் திருப்பினும் அதிர்விலர் திரிந்து
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
மாயிருங் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத் 10
தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூ உக்
கெடாஅ நல்லிசைத் தங்குடி நிறுமார்
இடாஅ ஏணி வியலறைக் கொட்ப
நாட்டிப் படுத்தலின் கொள்ளை மாற்றி 15
அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி
கட்டளை வலிப்பநின் தானை உதவி
வேறுபுலத் திறுத்த வெல்போர் அண்ணல்!
முழவின் அமைந்த பெரும்பழம் மிடைந்து
சாறயர்ந் தன்ன காரணி யாணர்த் 20
தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்தித்
காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவலர் இரவலர்க் கீயும்
சுரும்பார் சோலைப் பெரும்பெயல் கொல்லிப்
பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து 25
மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை ஆயத்துத்
நன்னிறம் கரந்த வண்டுபடு கதுப்பின்
ஓடுங்கீர் ஓதி யொண்ணுதல் அணிகொளக்
கொடுங்குழைக் கமர்ந்த நோக்கின் நயவரப்
பெருந்தகைக் கமர்ந்த மென்சொற் றிருமுகத்து 30
மாணிழை யரிவை காணிய வொருநாள்
பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்
முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது
தூவெதிர்ந்து பெறாஅத் தாவில் மள்ளரொடு
தொல்மருங் கறுத்தல் அஞ்சி யரண்கொண்டு 35
துஞ்சா வேந்தரும் துஞ்சுக
விருந்து மாக நின்பெருந் தோட்கே!
தெளிவுரை : உலகத்தைக் காக்கின்ற சிறப்புடையதும், அச்சம் பொருந்திய சிறப்பினைக் கொண்டதும், அழகியலும், தொகுதி கொண்டதும், வளம்கெழுமிய நிறைந்த நீரைக் கொண்டதுமாகிய மேகமானது, அகன்றதும் பெரியதுமான வானத்திடத்தே அதிரலைச் செய்யும் தன் சினத்திலே மிக்கதாகிக், கடுமையான முழக்கத்துடன்கூடி இடித்துக்கொண்டு மேலெழுந்து விசும்பினை அடைந்து, கார்காலத்தை அறிவிக் கின்றதான பருவத்தின் தோற்றத்தையும் செய்தது. அதனால். உலகுயிர்கள் எல்லாம் வருத்தங் கொள்பவாயின.
களிறுகள் நாற்புறம் பரந்தவாகச் சென்று கொண்டிருக்கின்றன. விரைந்த செலவையுடைய குதிரைகளை அவற்றின்மேல் ஏறிச்செலுத்துவோர் இழுத்துப்பிடித்து அடக்கிச் செலுத்தியபடி இருக்கின்றனர். ஒளி செய்யும் கொடிச் சிலைகள் அசைந்தாடத் தேர்கள் எப்புறமும் திரிவனவாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. இத்தகைய போர் முயற்சிகளுடன் பகையரசு நினக்குப் புறத்தே வந்து பாசறையிட்டுத் தங்கியுள்ளது. எனினும், இதனால் சற்றும் அதிர்வற்றவராக விளங்குகின்றனர் நின் மறவர்கள். ஓரிடமென அமைந்திராராய் பாசறையைச் சுற்றித் திரிந்தபடி காத்துவரும் வலிமை கொண்டோராய்த் திகழ்கின்றனர். மிகக் கரியதான அந்த இரவுப் பொழுதினும், அவரணிந்துள்ள வீரவளைகள் ஒளி செய்த வண்ணம் திகழ்கின்றன. அவற்றைத் தோள்களிற் செறித்தவராகக் கைகளை உயரத் தூக்கியவராகப், போர்செய்தலில் விருப்பஞ் சிறந்தவராக. ஒவ்வொருநாளும் தாம் செய்யும் போர் அன்றைக்குள்ளேயே முடிதல் வேண்டும் என்னும் வேட்கையினராக அவர்கள் விளங்குகின்றனர். தம் மறமாண்புகளை ஒருவருக்கொருவர் நெடுநேரம் சொல்லிக் கொள்பவராகக், கெடுதலற்ற நற்புகழை கொண்ட தம் மறக்குடியின் புகழை நிலைநிறுத்தும் பொருட்டாக, எல்லையிட்டுக் கூறவியலாத பரந்த நின் பாசறைக்கண்ணே சுழன்று திரிந்தபடி விளங்குகின்றனர். அவ்வாறே அவர் விளங்க –
நீயும் பகை நாட்டார்மேற் சென்றனையாய், அவர் நாடுகளை வென்று நின் அடிக்கீழ்ப்படுமாறு அவற்றை வெற்றி கொண்டனை. அடிப்பட்ட நாடுகளை வென்றோர் கொள்ளையிடுதல் என்னும் வழக்கத்தினை மாற்றினை. வெற்றி தேடித் தந்தவரான நின் மறவர்க்கு அழல்வினையிலே அமைந்த ஒளிவிடுகின்ற கட்டிகளாக உருக்கி வார்த்துக்கொண்ட தங்கக் கட்டிகளை, அத்தானை மறவர்களின் மேம்பாடுகளை அறிந்தார் எடுத்துக்கூற, அதற்கேற்ப அவர்க்கு வழங்கி உதவினை! இவ்வாறாக வேற்று நாட்டிடைப் பாசறையில் தங்கிய, வெல்லும் போராற்றலில் மிகுந்த தலைவனே!
முழவினைப் போன்றதாகத் தன் உருவத்தால் பெருத்து விளங்கிய பலாப்பழத்தினை உண்டு விழாவயர்ந்தாற் போலக், கருமை பொருந்திய அழகிய மூங்கிற் குழாயிடத்தே இடப்பெற்று முற்றிய இனிதான கள்ளைப் பருகியவராய்க், காந்தளின் அழகிய தலைக்கண்ணியைச் சூடியவரான செழுமைகொண்ட குடிப்பிறந்தோருமான செல்வர்கள், மிகுதியான மகிழ்ச்சியைக் கொண்டவர்களாய், தம்மை வந்து இரந்தவர்களுக்கும் அக்கள்ளை உண்ணத் தந்து மகிழ்வர். அத்தகைய சிறப்பினதும், சுரும்பினம் ஆரவாரிக்கும் பெரும் பெயலைக்கொண்டு விளங்குவதுமான சிறப்பினை யுடையது நினக்குரிய கொல்லிமலை.
இருவாட்சி மலரோடும் பச்சிலை மலர்களான செண்பக மலர்களையும் மகிழ்வோடு சூடிக் கொண்டவர்; மின்னல் ஒளியுமிழ்ந்தாற்போல ஒளி பரப்பும் அணிகலங்களைப் பூண்டவர், ஆயமகளிர். அவரிடத்தே நின் பிரிவால் மாறுபட்ட தன் நிறத்தை மறைத்தவளாக, வண்டு மொய்க்கும் கூந்தலையும், அதன்கண் முடிக்கப்பெற்ற சுருளென்னும் அணியையும் அழகமையப் பூண்டவளாக, வளைந்த குண்டலங் களையும், அவற்றோடு பொருதுநின்ற கண்களையும், விருப்பமுண்டாகத் தன் பெருந்தகைமைக்குப் பொருத்தமாகப் பேசும் மென்மையான சொற்களையும், அழகிய திருமுகத்தினையும், மாட்சிமைப்பட்ட அணிகளையும் கொண்டவளாக விளங்குபவள் நின் சேரமாதேவி. அவளைச் சென்று காணும் பொருட்டாக, ஒருநாளேனும் தலைவனே, நின் குதிரைகள் நின் நெடுந்தேரின்கண் பூட்டப் பெறுவனவாக!
அவ்வாறு நீதான் நின் மாதேவியைக் காணச் செல்வதனாலே, நின்னோடு பொருதிய போர்முனையையும் விட்டுச் சென்றவராக, நின் முன்பாக வந்து வணங்கியும் போகாதவராக, நின்னோடு பொருதலையே கருதியும் அதனைச் செய்யப் பெறாதவராக, வலியற்று விளங்கும் தம் மறவரோடு தம் பழமையாக வரும் குலத்தினையும் நீதான் அழித்தலைச் செய்வாயென அஞ்சியவராக அரணிடத்தேயே தம் இருப்பிடமாகக் கொண்டு, நீ அதனைத் தாக்குதலை நோக்கித் துஞ்சாதிருப்பாராகிய வேந்தரும், தம் அச்சத்தை மறந்தாராகித் துயில் கொள்வாரக. நின் பெருத்த தோள்கட்கு, நின் தேவியைத் தழுவிப் பெறுகின்ற விருந்தும் வாய்ப்பதாக, பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும்: புரக்கும் – பாதுகாக்கும். உருகெழு – அச்சம் பொருந்திய. கமஞ்சூல் – நிறைந்த சூல்; நீரான் நிறைந்து விளங்கும் நிலை. வண்ணம் – அழகு; கார் வண்ணம். கருவி – தொகுதி. கமம் – நிறைவு. சிலைத்தல் – முழங்குதல். நிவத்தல் – மேலெழல். காலை – கார்காலம். பொழுது – பருவம். புலம்பு – வருத்தம்.
பாய்ந்து இயல – பரந்து செல்ல. கடுமா – விரைந்து செல்லுங் குதிரைகள். நுடங்க – அசைய். அதிர்வு – நடுக்கம். வாயில் – இடம். வாயில் கொள்ளா – ஓரிடத்தில் நிலைகொள்ளாத. மைந்து – வலிமை. சுடர் வரல் -ஒளியெறித்தல். மீகையர் – மேலெழுந்த கையினர். புகல் – விருப்பம். நாளும் – நாள்தோறும். நிறுமார் – நிலைபெறுத்தும் பொருட்டு ஏணி – எல்லை. அறை – பாசறை.
நாடு – பகைவர் நாடு. அடிப்படுத்தல் – வென்று அடிமை கொள்ளல். கொள்ளை மாற்றல் – கொள்ளையிடல் என்னும் மரபினை மாற்றல்; அடிப்பட்டபின் அந்நாடும் தனதாகவே யாதலின், அதனைக் காக்கும் கடமையோனும் தானே யாதலின், அந்நாட்டைக் கொள்ளையிடல் பொருந்தாது என மாற்றினன் என்க. ஆயின் பகைவர் திறையளந்த பொன்னை மட்டும் கட்டிகளாக்கித் தன் படைமறவர்க்கு வழங்கினான் என்க. கட்டளை – தரம். வலித்தல் – ஆய்ந்து கூறல். புலம் – நாடு.
முழவு – மத்தளம், ‘பெரும்பழம்’ என்றது பெரிதான பலாப்பழத்தை. மிசைந்து – உண்டு. சாறு – திருவிழா. அயர்தல் – கொண்டாடுதல். கார் – கருமை. தூம்பு – மூங்கிற் குழாய். பழுனிய – முற்றிய. தீம்பிழி – இனியர்கள். கண்ணி தலைமாலை கலிமகிழ் – மிக்க மகிழ்ச்சி. மேவார் – பொருந்திய வராய். சுரும்பு – வண்டினம். பெயல்-மழை.
‘பெருவாய் மலர்’ என்றது இருவாட்சி மலரை. பசும்பிடி – பச்சிலைக் கொத்து; சண்பகக் கொத்தும் ஆம். ‘நிறம் கரந்து’ என்றது, பிரிவால் மாறுபட்ட தன் மேனிவண்ணத்தை மறைத்துக் கொண்டு என்றதாம். கதுப்பு – கூந்தல். ‘ஒடுங்கீர் ஓதி’ என்றது சுருளென்னும் தலையணியினை. அணி கொளல் – அழகு கொள்ளல். குழை – குண்டலம். நயவர் – விருப்பம் உண்டாக. தகை – தகைமை ; மேம்பாடு. திரு முகம் – அழகிய முகம். ‘மாள’: முன்னிலை யசை. முனை – போர்முனை. முன்னிலைச் செல்லல் – முற்போந்து பணிந்து போதல். தூ – வலி. பெறாஅ – வெற்றி பெறாத. தாவில் – வலியற்ற. மள்ளர் – போர் மறவர். தொல் மருங்கு – பழையதாக வரும் தம் குலம். அரண் கொண்டு – அரணிடத்துப் புகுந்திருத்தலை மேற்கொண்டு. ‘துஞ்சா வேந்தர்’ என்றது, பகையரசரை. விருந்து – புதியவின்பம்; இதுபிரிவால் வாடியிருந்தாளைச் சென்று தழுவுதலால் உண்டாவது.
இஃது, அவன் அரிவையான சேரமாதேவியின் கற்பு முல்லை பற்றி வந்தது; இதனால் துறை முல்லை ஆயிற்று என்பது பழைய உரைக் குறிப்பு.
82. வினைநவில் யானை !
துறை: காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணமும், சொற்சீர் வண்ணமும். தூக்கு: செந்தூக்கு. பெயர்: வினைநவில் யானை. இதனாற் சொல்லியது: இளஞ்சேரலின் வென்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம்: ‘நின்னைக் காண்கு வந்திசின்’ என்று கூறி வாழ்த்துதலால் காட்சி வாழ்த்து ஆயிற்று. ‘முன்னே போர்வினை செய்து பழகின யானை’ எனவும், ‘முன்னின்ற செல்சமஞ் தொலைத்த யானை’ எனவும் கூறிய சிறப்பால் இப்பெயர் வந்தது.]
பகை பெருமையின் தெய்வஞ் செப்ப
ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல்சமந் தொலைந்த வினைநவில் யானை
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி 5
வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல
மறவர் மறல மாப்படை யுறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை
இன்ன வைகல் பன்னா ளாக
பாடிக் காண்கு வந்திசின் பெரும!
பாடுநர், கொளம்கொளக் குறையாச் செல்வத்துச்செற்றோர்
கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றேர்
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
புகன்று புகழ்ந்து அசையா நல்லிசை 15
நிலந்தரு திருவின் நெடியோய், நின்னே!
தெளிவுரை: நின் மெற்கொண்ட பகையினது பெருமை காரணமாகத் தமக்கு நின்னால் யாதேனும் தீங்கு நேரற்கு அஞ்சியவரான நின் பகைவர்கள், தம் குல தெய்வங்களை வழிபட்டு வேண்டிக் கொள்வர். நின் படைமறவர் அரிதாகத் தங்கியிருத்தற்கு அஞ்சாததும், ஆயின் நின் பகைவர் நெருங்குதற்கு அஞ்சத்தக்கதுமான பாசறைக்கண்ணே நீயும் தங்கியுள்ளனை. அவ்விடத்தே பலவான கொடிகள் அசைந்தாடிப் பரந்தவண்ணம் உள்ளன. வலியோடு முன்னர்ப் பகைத் தெழுந்தாரது போர்களைத் தொலைத்த போர்வினைப் பயிற்சியுடைய யானைகள். மதத்தினை ஒழுகவிட்டவாய்க், கடுஞ்சினம் மூளப்பெற்றவாய், வண்டினம் மொய்க்கும் சென்னியினவாய்த், தத்தம் பிடிகளோடும் கூடியவாய்த் திரிந்து கொண்டிருக்கின்றன. நின் படைமறவர் மாறுபட்டு நிற்கின்றனர். நின் குதிரைப்படைகள் சேணமிட்டவையாய் நிற்கின்றன. நின் தேர்களில் கொடிகள் அசைந்தாடிப் பறந்து கொண்டிருக்கின்றன. கேடகங்கள் ஒன்றோடொன்று உரைசுதலால் ஆரவாரம் எழுந்தபடி இருக்கின்றது. பகைவரின் காவற்காடுகளைச் சுட்டெரித்து நின் மறவர் குளிர்காய்ந்தபடி யுள்ளனர். இவ்வாறு நெடுநாட்கள் அவர்கள் பாசறையிலே இருந்து வருகின்றனர். இத்தகைய நாட்களும் பன்னாளாகக் கழிந்து கொண்டிருக்கின்றன.
நின் புகழைப் பாடிவருவோரான பாணரும் புலவரும் தாமாகவே வேண்டுமளவு எடுத்துக்கொண்டு போகப்போகவும் குறையாத செல்வத்தை உடையோனே! நின்னைச் சினந்து வந்தோர் போரிடையிற் கொல்லக் கொல்லக் குறையாது மீளவும் பெருகும் படைப்பெருக்கினை உடையோனே! நின் கொடையினையும், செம்மையினையும். பிறவான சால்புகளையும், மறமேம்பாட்டையும் விரும்பிப் புகழ்ந்து, சான்றோர் நாளும் போற்றுதலில் குறைவுபடாத நற்புகழைக் கொண்டோனே! நிலம் தருகின்ற திருவினைக் கொண்ட நெடியோனாகிய திருமாலைப் போன்றோனே! நின்னைப் பாடிக் காண்பதன் பொருட்டாக, யானும் வந்தனென் பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும்: பெருமை – மிகுதி. தெய்வம் – வழிபடு தெய்வம். செப்ப – தம்மைக் காக்குமாறு முறையிட்டுக் கொள்ள. இறை – தங்குதல். கட்டூர்- பாசறை. முன்பு – வலிமை. செறுநர் – பகைவர். செல்சமம் – கழிந்த போர். வினை – போர் வினை. நவில் யானை – பயின்ற யானை. கடாஅம் – மதநீர். பொத்தி – மூளப்பெற்று. ‘பிடி புணர்ந்து இயலினும் மதநீர் மாறாதாயிற்று’ என்றது அத்துணைச் சினம் கொண்ட யானைகள் எனற்கு. மறல – மாறு படல்; போரின்றி வாளாவிருத்தல் பொறாராய் மனங்கவலல். மா – குதிரை. தோல் – கேடகம். காடு – காவற்காடு. புடை – பக்கம். கை காய்த்தல் – குளிர் பொறுக்க மாட்டாராய்க் கைகளை நெருப்பிற் காட்டிச் சூடேற்றல்.
காண்கு – காணற்பொருட்டு. பாடுநர் – பாடி வருவாரான புலவரும் பாணரும். செற்றோர் – பகைவர். தானை – படைவீரர். சான்றோர்- சான்றாண்மையாளர். வண்மை – கொடைக் குணம். செம்மை – நடுநிலை பிறழாச் செங்கோன்மை. சால்பு – அன்பும் அறனும் பிறவுமாகிய நற்பண்புகள். மறன் – வீரச்செறிவு. புகன்று- விரும்பி. அசையா – குறைவு படாத. நல்லிசை – நற்புகழ். எனக்கும் நின் கருணையாற் பரிசில் பல நல்கி உதவுக என்பது கருத்து.
83. பஃறோற் றெகுதி !
துறை: தும்பை யரவம். வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: பல்தோல் தொகுதி. இதனாற்சொல்லியது: சேரனின் படையெழுச்சியது சிறப்பு.
[பெயர் விளக்கம்: மழை மேகங்களோடு ஒப்பான களிறுகளோடு தோல்களின் தொகுதிகளையும் ஒப்பிட்டுப் பெரியவாகக் கூறிய சிறப்பால் இப்பெயர் அமைத்தனர்.]
கார்மழை முன்பின் கைபரிந் தெழுதரும்
வான்பறைக் குருகின் நெடுவரி பொற்பக்
கொல்களிறு மிடைந்த பஃறோற் றொழுதியொடு
நெடுந்தேர் நுடங்குகொடி அவிர்வரப் பொலிந்து
செலவுபெரி தினிதுநின் காணு மோர்க்கே: 5
இன்னா தம்ம! அதுதானே பன்மாண்
நாடுகெட எருக்பி நன்பலம் தரூஉம்நின்
போரருங் கடுஞ்சினம் எதிர்ந்து
மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே!.
தெளிவுரை: கார்மேகங்களின் முன்பாக ஒழுங்கு குலைந்தவாய் எழுந்து செல்லும், வெண்ணிறச் சிறகுகளையுடைய பறவைகளின் நெடிய வரிசையைப் போலப், போரிற் பகைவரைக் கொல்லும் களிறுகள் நெருங்கிய, பலவகைக் கேடகங்களைத் தாங்கிய மறவரின் கூட்டத்தோடு, செல்லும் நெடுந்தேர்களின் மீது விளங்கும் அசைந்தாடும் கொடிகள் விளக்க முடையவாக அழகுடன் தோன்ற, நீ செல்லும் படைச்செலவு நின்னைக் காண்பவர்க்குப் பெரிதும் இனிதாவ தேயாகும், ஆனால், அதுதான்-
பலவகை மாண்புகளையும் கொண்ட பகைநாடுகள் கெடுமாறு அழித்து, அவர் நாட்டு நன்கலங்களையும் கவர்ந்து தரூஉம் நின் போர்ச்செலவாகிய தடுத்தற்கரிய சினத்தின் செயலாதலால், நின்னை எதிர்த்தாராக, நினக்கு மாறுபாடு கொள்ளும் வேந்தரது பாசறைக்கண் உள்ளாரான பகை மறவர்க்குத் துன்பந் தருவதாயிருக்கும் பெருமானே! இது தான் என்னையோ?
சொற்பொருளும் விளக்கமும்: கிடுகேந்திய வீரர் கூட்டத்தோடு செல்லும் களிற்றின் தொகுதிகளைக் கார் மேகத்தின் தன்மைக்கு ஒப்பிட்டனர். கிடுகுகளின் தொகுதியும் களிறுகளும் செல்வது அலையலையாகக் கார்மேகம் வானிற் செல்வதுபோல நிறைந்திருந்தன என்க. அவற்றுக்கு முற்பட்டுச் செல்லும் தேர்களின் வரிசைகளைக் கார்மேகங்களுக்கு முன்னாக வளைவுவளைவான வரிசையோடு செல்லும் பறவைகளின் செலவுக்கு ஒப்பிடுகின்றனர்.
கார் மழை – கார்மேகம்; கார்காலத்து மழைமேகமும் ஆம். கைபரிதல் – ஒழுங்கு குலைதல். எழுதரும் – செல்லும். வான்பறை – வெண்சிறகு. குருகு – கடற்குருகு; கொக்கினத்துள் ஒன்று. நெடுவரி – நெடிய வரிசை. பொற்ப – ஒப்பாகத் தோன்ற. தோல் – கேடகம்: இதன் நிறம் கருப்பு என்பது இதனால் விளங்குதலால், இருப்புத் தகடாற் செய்யப்பெற்றதாகலாம்; தொடக்ககாலத்தில் தோற்கேடகங்களே வழக்கிலிருந்ததனால் ’தோல்’ என்று பெயரையும் இது பெற்றிருக்கலாம். மிடைதல் -நெருங்கல்; களிறுகளும் கிடுகுடைப் படைமறவரும் நெருங்கிச்சென்றனர் என்பதாம். நெருக்கம் திரளின் மிகுதியினால் ஏற்பட்டது என்க. அவிர்வர – ஒளியிட்டு விளங்க. பொலிவு – அழகு. காணுமோர்-காண்போர். ’தானே’ என்பது இசைநிறை. பன்மாண் – பல வகை மாண்புகள். எருக்கல் – அழித்தல்; வெம்மையால் அழியச் செய்தல். எதிர்ந்து – எதிர்த்து வந்து. மாறுகொள் வேந்தர் – பகைகொண்ட வேந்தர்.
[தும்பை அரவம்: இருபெரு வேந்தரும் புகழ்குறித்துச் செய்வதற்குக் குறித்த போரின்கண், அவர்தம் படையெழுச்சியிடையே எழும் ஆரவாரம்.]
இதனாற் சேரமானின் படைப் பெருக்கின் மிகுதி கூறினார்; புகழ் குறித்துப் போர்மேற்கொள்ளும் அவனது மறமேம்பாடும் கூறினார்.
84. தொழில் நவில் யானை !
துறை: வாகை. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: தொழில் நவில் யானை. சொல்லியது: சேரமானின் வெற்றிப் பெருமிதம்.
[பெயர் விளக்கம்: போர்க்குரிய யானையென அதன் பயிற்சியாலும், முன் பழக்கத்தாலும் பெயர்பெற்ற யானை தொழில் நவில் யானையாகும். இச்சிறப்பாலும், ‘மேகமுழக்கினைப் போர்முரசத்தின் முழக்கமெனக் கருதிக் கட்டுத்தறியி னின்றும் அவிழ்த்துக்கொண்டு செல்லும்’ என்னும் அடைச்சிறப்பாலும் இப்பெயர் தந்தனர். சேரனின் வென்றிச் சிறப்பைக் கூறியதனால் வாகைத் துறையாயிற்று.]
எடுத்தேறு ஏய கடிப்புடை அதிரும்
போர்ப்புறு முரசம் கண்ணதிர்ந் தாங்குக்
கார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி
நுதலணந் தெழுதரும் தொழில்நவில் யானைப்
பார்வல் பாசறைத் தருஉம் பல்வேல் 5
பூழியர் கோவே! பொலந்தேர்ப் பொறைய!
மன்பதை சவட்டும் கூற்ற முன்ப!
கொடிநுடங் காரெயில் எண்ணுவரம் பறியா
பன்மா பரந்த புலமென் றெண்ணாது
வலியை யாதல்நற் கறிந்தன ராயினும் 10
வார்முகில் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன்
கான்முனை மூங்கில் கவர்கிளை போல
உய்தல் யாவதுநின் உடற்றி யோரே!
வணங்கல் அறியார் உடன்றெழுந்து உரைஇப்
போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பெழுந்து நுவல 15
நோய்த்தொழில் மலைந்த வேலீண்டு அழுவத்து
முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொடு
உரும்எறி வரையின் களிறுநிலம் சேரக்
காஞ்சி சான்ற செருப்பல செய்துநின்
குவவுக்குரை இருக்கை இனிதுகண் டிகுமே. 20
காலை மாரி பெய்துதொழி லாற்றி
விண்டு முன்னிய புயல்நெடுங் காலைக்
கல்சேர்பு மாமழை தலைஇப்
பல்குரல் புள்ளின் ஒலியெழுந் தாங்கே!
தெளிவுரை: எடுத்து எறிதலைப் பொருந்திய குறுந்தடியால் தாக்குண்டு அதிர்தலைச் செய்யும், தோலால் போர்க்கப்பெற்ற முரசத்தினது, கண்ணிடத்திருந்து அடிக்கப்பட்ட ஒலியானது எழுந்தாற்போலக் கார்காலத்து மேகங்கள் இடிமுழக்கினைச் செய்தாலும், கட்டுத்தறியினின்றும் கட்டவிழ்த்துக்கொண்டு, நெற்றியை நிமிர்த்தபடி போர்க் களத்தை நோக்கி புறப்படும், போர்த்தொழிலிற் புகழுடைய யானைகளையும். பகைவரை ஒற்றியிருந்து பார்த்தறிதற்கு உரியவராகப் பாசறைக்கண் இருக்கும் பலரான வேற்படை வீரர்களையும் கொண்ட, பூழிநாட்டரின் கோமானே! பொன்னணிகளாற் புனையப்பெற்ற தேரினையுடைய இருஞ்சேரல் இரும்பொறையே! பகைமறவர் கூட்டமாகிய அதனை அழித்தலிலே, மக்களைத் தவறாது கொல்லும் கூற்றத்தைப்போன்ற பிழைத்தலற்ற வலிமையினைக் கொண்டோனே!
நின் பகையரசர்க்கு உரியவான கொடிகள் பறக்கும் கடத்தற்கரிய கோட்டைகள் எண்ணிப்பார்த்து முடிவுகாண முயலாதபடி மிகப் பலவாகும். குதிரைகளும் யானைகளும் பகைப்புலத்தில் பலவாகப் பரந்துள்ளன. அத்தகையதேனும், ’இப்புலம் கொள்ளுதற்கரிய ஒன்றென்று’ எண்ணார் நின் பகைவர். அவரினும் நீ வலிமையுடையை. இதனை அவரும் நன்றாக அறிந்துள்ளனர். எனினும், நின்னை வணங்கி வாழ்தலை அவர் உணராராயினர். நின்னோடு மாறுபட்டு எழுந்து உலவிப் போரிடவும் துணிந்தனர். நெடுமேகம் போன்ற தோற்றத்தையும், இடியனைய முழக்கையும் உடையவான இளங்களிறுகள், வலிமை மிகுந்தவாய்ச் செல்லுங் காலத்து, அவற்றின் காலடிப்பட்ட முளைத்த மூங்கில்கள் தம் கிளைகளோடும் அழிவெய்தும். அதனைப்போலவே, நின்னை பகைத்தோரும் தம் கிளையோடும் அழிவை அடைவர்!
தோலாற் போர்த்தலையுடைய தண்ணுமைகளின் ஆர்ப்பொலியானது எழுந்து போரினை மேற்கொள்ளுமாறு ஏவிற்று. படைமறவரும் துன்பத்தையுடைய தொழிலான போரிடுதலைச் செய்தனர். வேற்படைகள் நெருங்கிய அத்தகைய போர்க்களத்திலே, போரை விரும்புகின்ற விருப்பத்தினையும் நீங்காத வலிமையினையும் உடையவரான மறவர்கள், சாவினை ஏற்று நிலத்தே வீழ்ந்தனர். இடியினால் தாக்குண்ட மலைகளைப்போலக் களிறுகள் நிலத்தே பட்டு வீழ்ந்தன. நிலையாமையே பொருந்திய இத்தகைய போர்கள் பலவற்றைச் செய்து வெற்றிபெற்றவரான நின்படைமறவர் கூடி நின்று ஆரவாரிக்கும் பாசறையிருக்கையினை, யாமும் இனிதாகக் கண்டோம்.
பெய்தற்குரிய காலத்தே மழை பெய்து, அதனால் உழவு முதலாகிய தொழில்கள் முறையே நிகழச்செய்து, மலையினை அடைந்த மேகமானது, நெடுங்காலம் அம்மலையிடத்தேயே தங்கியிருந்து பின்னர்ப் பெருமழையையும் பெய்யத் தொடங்கவும், அதனால் களிப்புற்ற பலவகைக் குரல்களையுடைய பறவைகளின் ஆர்ப்பொலி எழுந்தாற்போல, நின்னைச் சூழ ஆரவாரித்திருக்கும், நின் மறவர் திரளின் ஆரவாரமான இருப்பினையும் யாம் இனிதாகக் கண்டேம்!
சொற்பொருளும் விளக்கமும்: ஏறுஏய் – எறிதலைப் பொருந்திய. கடிப்பு – குறுந்தடி; முரசினை முழக்குவதற்குப் பயன்படுவது. போர்ப்புறு முரசம்- கொல்லேற்றுத்தோலால் போர்க்கப் பெற்றுள்ள வெற்றி முரசம். கண் – அடிக்கும் இடம்; முரசின் நடுப்பாகம். அதிர்தல் – விட்டு விட்டு ஒலித்தல். கார்மழை – கார்காலத்து மேகம். முழக்கு – இடிமுழக்கம். வெளில் – கட்டுத்தறி. நீவி – கட்டினை அறுத்து. அணந்து – நிமிர்ந்து. தொழில்நவில் – தொழிற் சிறப்புடையதென்று சொல்லப்படுகின்ற. பார்வல் – பார்வை; ஆகு பெயராய்ப் பார்த்தற்குரிய இடங்களைக் குறித்தது. பூழியர் – பூழி நாட்டார். பொறை – இரும்பொறை நாட்டினனே. சவட்டும் – அழிக்கும். முன்பு – வலிமை. கூற்றம் – உயிரைக் கூறுபடுத்துவது.
நுடக்கம் – அசைவு. பல்மா – பலவான குதிரைகளும் யானைகளும். புலம் – பகைப்புலம். வார்முகில் – நெடிய கருமேகம்; தோற்றத்தாலும் முழக்கத்தாலும் களிறுக்குஉவமை. மழக்களிறு – இளம்பருவத்து ஆண் யானைகள். கால் கவர் – காலால் அகப்படுத்தப்பெற்ற. உய்தல் – பிழைத்தல். உடற்றியோர்- போரிடத் துணிந்த பகைவர்.
நின்னை எதிர்த்த பகைவர் மழகளிற்றின் காலிடை அகப்பட்ட மூங்கில்போலக் கிளையோடும் அழிந்து போவர் என்பதாம். இதனை அறிந்தும், அவர்கள் நின்னைப் பணிந்து போகாதிருக்கின்றனரே என்றதுமாம். உய்தல் யாவது என்றது, அழிதலின் உறுதிபற்றிக் கூறியதாம்.
‘தண்ணுமை’ ஒரு வகை முரசம்; மத்தளம் என்பர். ஆர்ப்பு – ஆர்ப்பு ஒலி. நுவல -சொல்ல; சொல்வது போர்க்கு எழுமின் என்பது. நோய்த்தொழில் – துன்பந்தரும் தொழிலாகிய போர்த்தொழில்; போரிடும் இருசாராருக்கும் துன்பந் தருவதாகலின் நோய்த்தொழில் என்றனர். ஈண்டு – பெருகிய. மைந்தர் – வலிமையுடையரான வீரர். முனை – போர்முனை. புகல் – விரும்புகின்ற. புகல்வின் – விருப்பத்தையுடைய. உரும் – இடி. எறி – தாக்கிய. காஞ்சி – நிலையாமைபற்றிய சிந்தனை. இதனைப் போர்க்களத்து வீரருக்கு ஏற்றிக் கூறினர். குரை – ஆரவாரம். குவவு – வீரர் கூட்டம். இருக்கை – இருப்பு, மாரி – மழை. காலை – காலம். மழை பெய்யத் தலைப்பட்டதும் புள்ளினங் களிப்பால் ஆரவாரித் தாற்போல், வெற்றி கொண்ட வீரர்களும் கூடி நின்று ஆர்ப்பரித்தனர் என்க.
85. நாடுகாண் நெடுவரை !
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. இதனாற் சொல்லியது: இரும்பொறையின் முன்னோரது கொடைச் சிறப்போடு சேர்த்து, அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறு ஆம்.
[பெயரும் விளக்கமும்: தன்மேல் ஏறிநின்று நாட்டைக் கண்டு இன்புறுவதற்கு ஏதுவாகிய உயர்ச்சியுடைய மலை என்றதன் சிறப்பால் இப்பெயரைத் தந்தனர்.]
நன்மரம் துவன்றிய நாடுபல தரீஇப்
பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
இட்ட வெள்வேல் முத்தைத் தம்மென
முன்திணை முதல்வர் போல நின்று 5
தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கின்
கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரைச்
சூடா நறவின் நாள்மகிழ் இருக்கை
அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் 10
உவலைச் கூராக் கவலையில் நெஞ்சின்
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே.
தெளிவுரை: “நல்ல மரங்கள் நெருக்கமாகச் சேர்ந்துள்ள நாடுகள் பலவற்றையும் வென்று வருவீராக! பொன்னாற் செய்யப்பெற்றதும், புனைதல் தொழில் விளங்குவதுமாகிய பெரிய பூணாரத்தை உடையவன்; என்னோடும் பொருந்தாத ஒரு மேற்கோளையும் கொண்டவன் சோழர் பெருமான். அவனை வென்று, அவன் படையினர் நமக்குப் பணிந்து களத்திலே இட்ட வெள்ளிய வேல்களையும் முன்னே கொண்டு வருவீர்களாக!” என்று நின் மறவரை நீதானும் ஏவினை.
நின் குலத்து முன்னோனான செல்வக்கடுங்கோ வாழியாதனைப் போலவே நீயும் அறநெறிக்கண்ணே நிலைபெற்றனை! இனிய சுவையுடைய நீரால் நிலைத்துள்ள சுனைகளையுடையதும், சிறந்த வளங்களைக் கொண்ட பக்கமலைச் சாரல்களை யுடையதும், மலையுச்சிகள் பலவாகப் பரந்து கிடப்பதுமான நாடனைத்தையும் காணக்கூடிய நெடியவரையிடத்தே யுள்ளது நறவுப் பேரூர். அதனிடத்தே நாள்தோறும் நிகழும் நின் மகிழ்வான கொலுவிருக்கையும் நிகழும். அவ்விடத்தே நின்னைக் காணவந்துள்ளாரான நினக்கு உட்பட்ட குறுநில வரசரும், அவையினரும் நின்னைப் பணிந்து நின் தொழில் கேட்டிருப்பர். அவ்விடத்தே, நீயும் அறங்கள் பலவற்றையும் விரும்பிச் செய்திருப்பாய். விளங்கிய மறச்செயல்களை மேற்கொள்ளும் கோட்பாட்டுடனும் இருப்பாய்.
விளங்கிய செவ்விய நாவினையும், இழிவு மிகுதிப்படாத கவலையற்ற நெஞ்சினையும், நல்ல புகழையும் உடையவர் கபிலர் பெருமான். அவர், உண்மை விளங்கச் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடினர். அவன் அவருக்கு நன்றா என்னும் குன்றின்மீது ஏறி நின்றவனாகத், தன் கண்ணிற் கண்ட ஊர்களை எல்லாம் வழங்கினான். அவன் வழங்கியதனாற் கபிலன் பெற்ற ஊர்களிலும் பலவாக, நின் பகைவர் தோற்று நிலத்திலிட்ட வேல்களும் விளங்கினவே!
சொற்பொருளும் விளக்கமும்: திணை – குலம். முதல்வர் – முன்னோர்; குலத்து முன்னோர். திருமா மருங்கு – பெருவளங் கொண்ட மலைப்பக்கங்கள். கோடு – மலையுச்சி; சிகரம். நறவு – ஒருபூ ; சூடா நறவு – ’நறவு’ என்னும் ஊர். நறவு- கள்ளும் ஆம்; அப்போது கள்ளையுடைய நாள்மகிழ் இருக்கை என்க. அரசவை பணிய – அரசும் அவையும் பணிந்து போற்ற. புரிதல் – விரும்பிச் செய்தல். வயங்குதல் – விளங்குதல்.
’அறம் புரிந்து மயங்கிய மறம்புரி கொள்கை’ என்பதற்கு அறத்தின்மாறுபட்டாரை அழித்து மறச்செயலாற்றும் கோட்பாட்டினால் அறநெறி நிலைநிற்கச் செயல்புரிந்து விளங்கிய தன்மை எனவும் பொருள் கூறலாம். கொள்கையைப் பாடிய கபிலன் என, இப்புகழைச் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு ஏற்றியும் கூறலாம். உவலை – இழிவு. கூர்தல் – மிகுதல். நனவின் – மெய்யாக
இளஞ்சேரலிரும்பொறை ’சென்னியர் பெருமானை வென்று வருக’ வென்று ஏவினன். அவன் படையெறிந்து ஆற்றாது சோழப் படையினர் களத்திற் படையெறிந்து ஓடினர். அவர் அவ்வாறு போட்டுச்சென்ற வேலின் அளவு, செல்வக்கடுங்கோ தன்னைப் பாடிய கபிலனுக்கு வழங்கிய ஊரினும் பலவாகும் என்பதாம்.
86. வெந்திறல் தடக்கை !
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. சொல்லியது: இளஞ்சேரலிரும்பொறையின் போர் வன்மையும், மென்மையும்.
[பெயர் விளக்கம்: ’உறல் உறு குருதிச் செருக்களம் புலவக்கொன்று, அமர்க் கடந்து’ என்னும் முன் நின்ற அடைச் சிறப்பாலும், கையினை வெந்திறல் தடக்கை எனச் சிறப்பித்துக் கூறியமையானும், இப்பாட்டிற்கு இப்பெயரைத் தந்தனர்.]
உறலுறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்றமர்க் கடந்த வெந்திறல் தடக்கை
வென்வேற் பொறையன் என்றலின், வெருவர
வெப்புடை ஆடூஉச் செத்தனென் மன்யான்;
நல்லிசை நிலைஇய நனந்தலை உலகத்து 5
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்
பாடுநர் புரவலன் ஆடுடை அண்ணல்
கழைநிலை பெறாக் குட்டத் தாயினும்
புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த 10
பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்துவரு வானி நீரினும்
தீந்தண் சாயலன் மன்ற தானே!
தெளிவுரை: ‘பகைவரது வெட்டுப்பட்ட உடல்களினின்றும் ஒழுகுதலுறுகின்ற செந்நீராற் செருக்களம் புலவு நாற்றத்தை உடையதாகுமாறு, அவரைக் கொன்றுகுவித்த வெம்மையான திறலினைப்பெற்ற பெரிய கையினை உடையோனே! வெற்றி வேலினை ஏந்திய பொறையனே!’ என்று பலரும் அவனைக் கூறுதலால், யானும் ‘அஞ்சத்தக்க கொடுமையினையே தொழிலாகவுடைய ஓர் ஆண்மகன்’ என்றே அவனைப்பற்றி முன்பெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தேன்.
அவன் நல்ல புகழாலே நிலைபெற்ற பரந்த இடத்தையுடையது இவ்வுலகம். இதனிடத்தே வறுமையாளரின் வறுமைத் துன்பம் அறவே அகன்று போகுமாறு கொடுக்கும் அறச் செயலை நாடுதலைப் பொருந்திய அன்புடைய நெஞ்சத்தோடு, தன்னைப் பாடிவருவாருக்குப் புரவலனாகவும் அவன் விளங்குவான். வெற்றிபொருந்திய ஒழுக்கத்தையுடைய தலைவன் அவன். ஓடக்கோலும் நிலைக்கமாட்டாத ஆழத்தை உடையதாயினும், புனலிற் பாய்ந்தாடும் மகளிர் குதித்து ஆடுதலாலே கழன்று வீழ்ந்த பொன்னாற் செய்யப்பெற்ற அழகிய காதணிகள், நீருக்கு மேலேயிருந்து காண்பாருக்கும் தெளிவாகத் தோன்றுவதும், சந்தனமரங்களை அடித்துக் கொண்டு வருவதுமான வானியாற்றுத் தெளிந்த நீரினுங் காட்டில், அவன் குளிர்ந்த இனிய மென்மையினன் என்பதனையும் இப்போது யானும் அறிந்தேன்!
சொற்பொருளும் விளக்கமும் ; உறல் உறு குருதி – ஒழுகுதல் உறுகின்ற குருதி; குருதி – செந்நீர். புலவ – புலால் நாற்றம் எழ. அமர்க்கடந்த – போரிலே வஞ்சியாது எதிர்நின்று வெற்றி பெற்ற. வெந்திறல் – கோடிய போர்த்திறல். தடக்கை – பெரிய கை. பொறையன் – பொறையர் மரபினன். வெருவர – அஞ்சும்படியாக. ஆடூஉ -ஆண்மகன். ‘மன்’ ஒழியிசைப் பொருளில் வந்தது; இப்போது அவ்வெண்ணம் ஒழிந்தது என்பதாம். நனந்தலை – பரந்த இடம். இல்லோர் – பொருளற்றோர்; வறியவர். புன்கண் – துன்பம். நாடல் ஆராய்தல். சான்ற – அமைந்த. ஆடுநடை – வெற்றி யொழுக்கம். கழை – ஓடக்கோல். குட்டம் – ஆழம். பூங்குழை – அழகிய குண்டலம் என்னும் மகளிர் காதணி. வானி – ஓர் யாறு; சேரநாட்டது. சாயல்- மென்மை.
வானியாற்றுத் தெளிந்த நீரின் தன்மையும் தெளிவும் போல, இளஞ்சேரலும் இரவலர் பாடுநர்மாட்டுத் தண்ணளியும் அன்பும் உடையவன் என்பதாம். பகைவருக்கு வெம்மையாளனாகிய அவன் எம்போல்வாருக்கு அன்பினனாதலையும் கண்டேன் என்பதுமாம்.
87. வெண்தலைச் செம்புனல்!
துறை: விறலியாற்றுப்படை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: வெண்தலைச் செம்புனல். இதனாற் சொல்லியது: இளஞ்சேரலின் அருட் சிறப்பு.
[பெயர் விளக்கம்: ’வெண்தலைச் செம்புனல்’ என முரண்படக் கூறியவற்றானும், முன்னின்ற அடைச்சிறப்பானும் இப்பெயரைத் தந்தனர்: ‘சென்மோ பாடினி’ என விறலியை ஆற்றுப்படுத்திக் கூறலால் விறலியாற்றுப்படை ஆயிற்று.)
சென்மோ பாடினி! நன்கலம் பெருகுவை
சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து
தெண்கடல் முன்னிய வெண்தலைச் செம்புனல்
ஒய்யும் நீர்வழிக் கரும்பினும்
வல்வேற் பொறையன் வல்லனால் அளியே
தெளிவுரை: சந்தன மரங்களையும் அகில் கட்டைகளையும் பொங்கும் நுரையோடு சேரச் சுமந்தவாறு தெளிந்த கடலை நோக்கிக் செல்வது யாறு. வெண்மையான மேற்பரப்பை யுடைய சிவந்த புனலாகச் செல்லும் அதன் நீரோட்டத்தினைக் கடக்கச் செலுத்தப்படும் வேழக் கரும்பாலாகிய தெப்பத்தைக் காட்டினும், வலிய வேற்படை ஏந்தியவனாகிய பொறையன் அருள்செய்தலில் வல்லவனாவான். ஆதலால் விறலியே! நீயும் அவனிடத்தேயே செல்வாயாக; சென்றால் நல்ல அணிகலன்களை நீயும் பரிசிலாகப் பெறுகுவை!
சொற்பொருளும் விளக்கமும்: கலம் – அணிகலன். சந்தம்- சந்தனம். பூழில் – அகில். தெண்கடல் – தெளிந்த கடல்: செம்புனல் – சிவந்த புதுப்புனல். ஒய்யும் – செலுத்தும். கரும்பு – வேழக் கரும்பாலான ஓடம். அளி – அளித்தால்.
வேழக்கோற் புணை ஆற்றுநீரைக் கடத்தற்குப் பயன்படுவதுபோல, இரவலருக்குச் சேரனும் வறுமை வெள்ளத்தைக் கடந்து கரையேறுவதற்கு உதவுவான் என்றனர்.
88. கல்கால் கவணை !
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: கல்கால் கவணை. இதனாற் சொல்லியது: இளஞ்சேரலின் கொடைச் சிறப்பும் இன்பச்செவ்வியும் உடன்கூறி வாழ்த்தியது.
[பெயர் விளக்கம்: கற்களைக் கான்றாற்போல இடையறாது விடும் கல்லெறி வில்லாகிய கவணை என்ற கூறிய அடைச்சிறப்பால் இப்பெயரைத் தந்தனர்.]
வையகம் மலர்ந்த தொழின்முறை ஒழியாது
கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து
தெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்துத்
தம்பெயர் போகிய ஒன்னார் தேயத்துத்
துளங்கிருங் குட்டம் தொலைய வேலிட்டு 5
அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து
பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று
நாம மன்னர் துணிய நூறிக்
கால்வல் புரவி அண்டர் ஒட்டிச்
சுடர்வீ வாகை நன்னன் தேய்த்துக் 10
குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோடு
உருகெழு மரபின் அயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்
கொற்றம் எய்திய பெரியோர் மருக!
வியலுளை அரிமான் மறங்கெழு குருசில்! 15
விரவுப்பனை முழங்கும் நிரைதோல் வரைப்பின்
உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை
ஆரெயில் அலைத்த கல்கால் கவணை
நாரரி கறவின் கொங்கர் கோவே!
உடலுநர்த் தபுத்த பொலந்தேர்க் குருசில் 20
வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந!
நீநீடு வாழிய பெரும! நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்றருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய
புனல்மலி பேரியாற்று இழிதந் தாங்கு 25
வருகர் வரையாச் செழும்பல் தாரம்
கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப
ஓவத் தன்ன உருகெழு நெடுநகர்ப்
பாவை யன்ன மகளிர் நாப்பண்
புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு 30
தண்கமழ் கோதை குடிப் பூண்சுமந்து
திருவிற் குலைஇத் திருமணி புரையும்
உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து
வேங்கை விரிந்து விசும்புறு சேண்சிமை
அருவி அருவரை யன்ன் மார்பின் 35
சேண்நாறு நல்லிசைச் சேயிழை கணவ!
மாகம் சுடர மாவிசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பன்னாள்!
ஈங்குக் காண்கு வந்தனென் யானே
உறுகால் எடுத்த ஓங்குவரல் புணரி 40
நுண்மணல் அடைகரை உடைதரும்
தண்கடல் படப்பை நாடுகிழ வோயே!
தெளிவுரை : இவ்வையகமானது நானிலப் பகுதியாக அமைந்து வளம்பெற்ற காலத்திருந்தே, அரசுத் தொழிலில் முறைமை நீங்காது ஆண்டு வந்தவர் நின் முன்னோர். விந்தை யென்னும் கடவுளுடைய பெயரைக் கொண்டதான விந்தாடவி என்னும் காட்டுப்பகுதியோடு கூடியதாக விந்திய மலையும் உயர்ந்து நிற்கின்றது. தெளிந்த நீரையுடைய கடலாற் சூழப்பட்டு உள்ளது அகன்ற இடத்தையுடைய இவ்வுலகம்.
இதன்கண்ணே, தம் புகழ் பரவப்பெற்ற பகைவரின் தேயத்தும் சென்று, அவர்க்குரிய அசையும் பெருங்கடலினது பெருமை கெடுமாறு வேற்படையைச் செலுத்தினன் ஒருவன். தெய்வத்தன்மையுடைய கடம்பாகிய பகைவரது காவன் மரத்தை வேரோடும் வெட்டி வீழ்த்தினான் ஒருவன். போரிடுதற்கான முரண்பாட்டை அடைந்தவனாகிய கழுவுள் என்பானைப் புறங்கொடுத்துத் தோற்றோடச் செய்தான் ஒருவன். அஞ்சத்தக்க வலிகொண்ட பகைமன்னர்களை எல்லாம் அவர் வெட்டுண்டு வீழ அழித்து வெற்றிபெற்றான் ஒருவன். காற்றினும் கடிதாகச் செல்லுதற்கு வல்லவராகிய யாதவரைத் தோற்றோடுமாறு செய்தான் ஒருவன். ஒளி சுடரும் பூக்களைக் கொண்ட வாகையினைக் காவன்மரமாக உடையவனாகிய நன்னனைக் கொன்றான் ஒருவன்! பகைவரது குருதியைத் தூவிக்கலந்த குருதிச் சோற்றுக் குன்றத்தோடு அஞ்சத்தக்க முறைமையினையுடைய அயிரை மலையிலுள்ள துர்க்கைக்குப் படையலிட்டுப் போற்றினான் ஒருவன். பிற வேந்தர்களும் வேளிர்களும் தமக்குப் பணிந்து பின்னிற்குமாறு இவ்வாறு வெற்றிப் புகழினை அடைந்தவர் நின் முன்னோரான நின் குலத்துப் பேரரசர்கள்.
அவர்கள் வழிவந்தவனே! விரிந்த பிடரி மயிரைக் கொண்ட ஆண்சிங்கத்தினது மறத்தன்மையைப் பொருந்திய தலைவனே!
ஒன்றோடொன்று விரவியபடி பலவகையான முரசங்களும் முழங்குவதும், வரிசையாக அமைந்த கேடகத்தைத் தாங்கிய தரைப்படை காத்து நிற்கும் எல்லைப்புறத்தை யுடையதும், வலிகொண்ட களிற்றின்மீது அமர்ந்தபடி நின் வெற்றிக்கொடியை யானைமறவர் உயர்த்துப் பிடிக்க, அது தான் அசைந்தாடிக் கொண்டிருப்பதுமான், பாசறை யிடத்தே வீற்றிருப்பாய். அப் பாசறையிடத்திருந்து இடை யறாது கல்லெறி பொறியினின்றும் எறியப்படும் கற்களாற் பகைவரது கடத்தற்கரிய அரணிடத்தே உள்ளாரையும் வருத்துகின்றவனே! நாரினாலே அரிக்கப்பெற்ற கள்ளினை யுடைய கொங்கு நாட்டினரின் கோமானே!
நின்னோடும் பகைத்து வந்தாரை எல்லாம் அழித்த சிறப்புடைய பொற்றேரினையுடைய தலைவனே!
சங்கினங்களைக் கொண்ட கடலாகிய முழவின் ஒலியானது ஓயாதே விளங்கிக் கொண்டிருக்கின்ற தொண்டிப் பட்டினத்தாரின் வேந்தனே! நீதான் நெடுங்காலம் வாழ்வாயாக!
ஆராவாரித்தலையுடைய தும்பைப் போரிலே நினக்கு வெற்றி தேடித்தருதலின் பொருட்டாக, நேராகவே நின்னிடத்தே தோன்றி வந்து, நீக்குதற்கரிய வலியுடைய தெய்வங்களின் தொகுதியெல்லாம், நின் கருத்தை வினவியபடியிருக்கும் சிறப்பை உடையாய்!
அத்தெய்வக்கூட்டம் சேர்ந்திருக்கும் அயிரை மலையில் தோன்றி வருகின்ற, புனல்மலிந்த பேரியாறானது நிலத்தை நோக்கி இறங்கிவந்து உதவுமாறுபோல, நின்பால் வந்து இரக்கும் இரவலர்க்கு வரையாது கொடுத்தற்குரிய செழுமையான பலவாகிய பண்டங்களும், அவர்தாம் கொள்ளக் கொள்ளக் குறையாதே இடங்கள்தோறும் மிக்குப் பெருகுவனவாக! சித்திரத்தே தீட்டினாற்போல அழகுபொருத்தியதாக விளங்கும் நெடிய நின் அரண்மனையின் கண்ணே, சித்திரப் பாவை போன்ற பணிமகளிரின் நடுவிலே—
தன் பிரிவு நோயைச் சொல்லிய மாண்பமைந்த பொறிந்துபோயின தன்மையாற் பொலிவுபெற்ற சந்தனக் குழம்பு விளங்கும் மார்பினள்; குளிர்மணம் கமழும் மலர் மாலையைத் தன் கூந்தலிலே சூடியிருப்பவள்; பல்வேறு அணிகளையும் மிகுதியாகப் பூண்டு அவற்றைச் சுமந்து வருபவள் போல விளங்குபவள்; அழகிய இந்திரவில்லானது விளங்க, அழகிய நீலமணிபோல விளங்கும் நிறம்பொருந்திய தொகுதி கொண்ட பெரிய மேகங்கள் சேர்ந்ததும், வேங்கை மரங்கள் பூத்து இதழ் விரிந்துள்ளதுமாக விளங்கும், வானத்தைத் தொடுவது போன்ற உயர்ந்த சிகரங்களினின்றும் வீழ்கின்ற அருவியானது, அரிய மலைப்பக்கத்தே வீழ்வதுபோல மார்பிடையே ஓடியபடியிருக்கும், நெடுந்தூரம் விளங்கித் தோன்றும் நல்லபுகழையுடையவள், நின் தேவி. அச் சேயிழை யாளின் கணவனே!
மிக்க காற்றானது எழுப்பிய, உயர்ந்து வருதலையுடைய அலையானது, நுண்மணல் பொருந்திய அடைகரையிடத்தே சேர்ந்து சிறுதிவலைகளாக உடைந்து போகின்ற தன்மையினை யுடைய, குளிர்ச்சி கொண்ட கடற்பக்கத்தையுடைய நாட்டின் தலைவனே! நின்னை நின் அரண்மனையிற் காணாதே. நின்னைக் காணும் பொருட்டாக இப் பாசறையிடத்தேயும் யான் வந்துள்ளேன்! அவள்பாற் சென்று அவளுக்கு உதவுவாயாக! எட்டுத் திசையும் ஒளிபெற்று விளங்கப் பெரிய வானிடத்தே உயர்ந்து செல்லும் ஞாயிற்றைப்போல, நீயும் பலகாலம் சிறப்போடும் விளங்குவாயாக!
சொற்பொருளும் விளக்கமும் : மலர்தல் – புதுமலர்ச்சி பெறுதல்; வளமுறுதல். தொழில் – அரசுத் தொழில்; அது செம்மையின் வழுவாது ஆட்சி நடாத்தல். ‘கடவுள்’ என்றது விந்தா தேவியை; இவள் துர்க்கை. கல்-மலை. தெண்கடல் – தெளிந்த கடல். வளைஇய – சூழ்ந்த மலர்தலை உலகம் – பரந்த இடத்தையுடைய உலகம்; வடதிசைக்கண் விந்திய மலை உயர்ந்து நிற்கவும், முப்புறமும் கடலாற் சூழப் பட்டிருக்கவும் விளங்கும் தென்னிந்தியப் பகுதியைக் குறித்தது. பெயர் போகிய – புகழ் பரவிய ஒன்னார். பகைவர். துவங்கல் – அசைதல். குட்டம் – கடல். தொலைய கெட; இது கடற்கொள்ளையரை வென்றதைக் குறித்தது; கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்பதும் நினைக்க. அணங்கு – வெற்றித் தெய்வம். கடம்பு – கடம்பர்க்குரிய காவன் மரம்; கடம்பறுத்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பர் (பதிற். 2 :12-13). பொருமுரண் போர், செய்வதற்குரிய வலிமை. கழுவுள் – காமூர்க்குரிய இடையர்குடித் தலைவன். நாம் – அச்சம். துணிய – துணிபட அண்டர் – இடையர்; இவரை ஓட்டியவன் பெருஞ்சேரல் இரும்பொறை. வாகை -நன்னனின் காவன் மரம்: நன்னனை அழித்தவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல். அயிரை- அயிரை மலையிலுள்ள கொற்றவை; இவளைப் பரவியவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன். பின்வருதல் – பணிந்து வருதல். பெரியோர் – குலத்து முன்னோரான பெருவேந்தரை. உளை – பிடரிமயிர். அரிமான் – சிங்கம். குருசில் – தலைவன்.
விரவுப்பணை முழங்கும் – பல்வேறான முரசங்களும் கலந்து ஒலிக்கும். தோல் – கிடுகு; அதனை ஏந்தி நிற்பாரான வீரரைக் குறிக்கும்.உரவு வலிமை. நுடங்கும் – அசைந்தாடும். பாசறை – கட்டூர். அலைத்த- வருத்திய காலுதல் – கக்குதல். கல்கால் கவணை – கற்களைக் கக்குமாறுபோலத் தொடர்ந்து எறிந்தபடியிருக்கும் கவணை என்னும் கல்லெறி பொறி, நார் – பன்னாடை. நறவு – கள். உடலுநர் -பகைத்தோர். தடித்த – அழித்த; வெட்டி வீழ்த்திய பொலம் – பொன். வளை – சங்கம். வளைகடல் முழவு- வளைகளைக் கொண்ட கடலின் முழவுபோன்ற ஒலி முழக்கம். தொண்டி- தொண்டிப் பட்டினம். துவைத்தல் – ஆரவாரித்தல். தும்பை. தும்பைப் போர்; இருபெரு வேந்தரும் புகழ் கருதிப் போராடும் போர். நனவுற்று – நனவிலே வந்து தோன்றி. மாற்றரும் – நீக்குதற்கரிய வலியுடைய. தெய்வத்துக் கூட்டம் – கொற்றவையும் அவள் ஏவலருமாகிய கூட்டம். முன்னிய – தங்கிய. இழிதந்தாங்கு – விரைந்து இறங்கி வரு தலைப்போல; புனல்மலி பேரியாறு மலையினின்றும் விரைந்தோடி வந்தாற்போல இரவலரும் நின்னை நாடி வருவர் என்பதாம். வரை – அளவு; எல்லை. ஓவம் – ஓவியம். நகர்- அரண்மனை. பாவை – கொல்லிப் பாவைபோல விளங்கும் அழகிற் சிறந்த பணிமகளிர்.
புகன்ற – சொல்லிய. பொறி – பொறிந்த துகள்கள். சாந்தம் – சந்தனக் குழம்பு. கோதை – தலைமாலை. பூண் – பூண் பவை அணிகலன்கள். திருவில் – இந்திரவில். திருமணி- அழகிய நீலமணி புரையும் – ஒக்கும். கருவிய – தொகுதி கொண்ட. மழை – கார்மேகம். வரை – பக்கமலை. சேண்நாறு நல்லிசை- நெடுந்தொலைவுக்கும் பரவிய நல்ல புகழ்: அது கற்பின் செவ்வி- சேயிழை – செவ்வையான அணிகலன் உடையாள்: தேவியைக் குறித்தது; அன்மொழித் தொகை. கால் காற்று. புணரி – அலை. படப்பை – கடற்கரை நாட்டுப் பகுதி.
சோல் பாசறையிடத்துள்ளான். அவன் பிரிவுக்கு ஆற்றாளாகத் தேவி வருந்துகின்றாள். தன் குறையை மறைக்கப் பூசிப் புனைந்து கொள்ளுகின்றாள். எனினும் அவள் மார்புச் சாந்தம் காய்ந்து பொறிபடுகின்றது. அவள் கண்களின்றும் பெருகி வழிந்தோடும் நீர் மார்பிடை வீழ்ந்து, இரு நகில்களுக் இடையே பாய்ந்து ஓடுகின்றது. இதனை நயமாக, இந்திர வில்லிட்டு, நீலமணிபோலத் தொகுதி கொண்டு, வானை முட்டும் மலைமுகட்டைச் சேர்ந்து மழை பொழிந்ததாக, அதனால் பக்க மலையிடத்தே அருவி வீழ்வதற்கு உவமித்து உரைக்கின்றனர். மாகம்-திசை. உகக்கும் – உயர்ந்து செல்லும்.
கார் தோன்றியது; இனியும் அவள் பிரிவுத் துயரத்தினை பொறுத்திருக்கல் ஆற்றாள் என்பதும் ஆம்.
89. துவராக் கூந்தல் !
துறை: காவன்முல்லை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. இதனாற் சொல்லியது : இளஞ்சேரல் இரும்பொறையின் நாடுகாவற் சிறப்புக் கூறியது.
[பெயர் விளக்கம்: எப்பொழுதும் தகரச் சாந்து முதலியன தடவுகையால் ஈரம்புலராத கூந்தல் என்று உரைத்த சிறப்பால் இப்பாட்டுப் இப்பெயர் பெற்றது. நாடுகாவலைக் கூறியமையால் காவன்முல்லை ஆயிற்று.)
வானம் பொழுதொடு சுரப்பக் கானம்
தோடுறு மடமான் ஏறுபுணர்ந்து இயலப்
புள்ளும் மிஞிறும் மாச்சினை யார்ப்பப்
பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது
பல்லான நன்னிரை புல்லருந்து உகளப் 5
பயங்கடை அறியா வளங்கெழு சிறப்பின்
பெரும்பல் யாணர்க் கூலம் கெழும்
நன்பல் ஊழி நடுவுநின்று ஒழுகப்
பல்வேல் இரும்பொறை! நின்போல் செம்மையின்
நாளின் நாளின் நாடுதொழுது ஏத்த 10
உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செருமேந் தோன்றி
நோயிலை யாகியர் நீயே நின்மாட்டு
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு,அறியாது
கனவினும் பிரியா உறையுளொடு தண்ணெனத் 15
நகரம் நீவிய நுவராக் கூந்தல்
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து வாழ்நாள் அறியும் வயங்குசுடர் நோக்கத்து மீனொடு புரையும் கற்பின்
வாணுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே. 20
தெளிவுரை : பலவான வேற்படை மறவர்களையுடைய இரும்பொறையே; நின் ஆட்சிமுறைதான் மிகச்செவ்விது. அதனாலே, மழையும் காலத்தோடு தவறாமற் பெய்கின்றது. காட்டிடத்தே. கூட்டங்கொண்ட இளமான்கள் தத்தம் ஏறுகளோடும் கூடியவையாய்த் திரிகின்றன. பறவையினங் களும் வண்டினங்களும் பெரிய மரக்கிளைகளிலே அமர்ந்து ஆரவாரிக்கின்றன. பழங்களும் கிழங்குவகைகளும் மக்களும் பிறவும் உண்ணுதலால் ஒழிதலை அறியாவாய் மிகுந்திருக்கின்றன. பலவகைப்பட்ட பசுக்களைக் கொண்ட நல்ல மாட்டு மந்தைகள் புல்லை மேய்ந்துவிட்டுத் துள்ளி மகிழுகின்றன. விளைபயன் அறுதலை அறியாதபடி வளம்பொருந்திய பலவகைத் தானியங்களும் எங்கணும் நெருங்கிக் கிடக்கின்றன. இவை எல்லாம் நல்லபல ஊழிகளாக நடுவுநிலையோடு நிலையாக நிகழ்ந்து வருகின்றன. நாள்தோறும் பல நாட்டு மக்களும் தொழுது போற்றுகின்றனர். உயர்நிலை உலகத்தே உயர்வு பெற்றோராகிய தேவர்களும் நின்னைப் போற்றுகின்றனர்.
ஆட்சியை நடத்துதலிலே பிழைத்தலின்றியும், போர்க் களங்களிலே பகைவரை வெல்லும் வெற்றியால் மேம்பட்டுத் தோன்றியும், நீதான் எவ்வகைத் துன்பமுமின்றி விளங்குவாயாக!
நின்னிடத்தே அன்பு பூண்டு அடங்கிய நெஞ்சம் எந்நேரமும் குற்றப்படுதலை அறியாதவள்; கனவினும் நின்னைப் பிரியாதே உறையும் வாழ்க்கையினள்; குளிர்ச்சியாகத் தகரச்சாந்து தடவிய ஈரம் புலராத கூந்தலையுடையவரான மணமகளிரால் பார்க்கப்படுவதும், பின்னரும் தம் வாழ் நாளின் அளவை அறிவதற்குப் பார்க்கப்படுவதுமாகிய, விளங்கும் ஒளியுடைய அருந்ததி என்னும் விண்மீனோடு ஒப்பாகும் கற்பினை உடையவள்; ஒளிபொருந்திய நெற்றியை உடையவள்; நின் தேவி யாவாள்!
அவளோடும் அழகு பொருந்தக் கூடிவாழ்பவனாக, நீயும் நெடுநாள் நோயின்றி வாழ்வாயாக!
சொற்பொருளும் விளக்கமும் : வானம் – மழை. பொழுதோடு – காலத்தோடு; அதாவது பெய்வதற்குரிய காலத்துப் பெய்தல். சுரப்ப – பெய்ய. தோடு – தொகுதி; கூட்டம். மடம் – இளமை. ஏறு – ஆண்மான். புணர்ந்து – கூடியவை யாய். இயல் – திரிய. ஞிமிறு – வண்டு. மாச்சினை – பெரிய மரக்கிளை. மிசையறவு – மிசைதலால் அற்றுப் போதல்; உண்ணல். பல்லான் – பலவகைப் பசுக்கள். உகள் – துள்ளித் திரிய. பயங்கடை – விளைவறுதல். யாணர் புதுவருவாய். கூலம் – தானிய வகைகள். ஊழி – ஊழிக்காலம்; நெடுங் காலம். நடுவுநின்று – நடுநிலையோடு நிலைபெற்று. நாடு- நாட்டு மக்கள். உயர்நிலை உலகம் – வானுலகம். உயர்ந்தோர் – தேவர்; உயர்நிலை பெற்றோரும் ஆம். அரசியல் ஆட்சியொழுக்கம். பிழையாது – பிழைபடாது. மேந்தோன்றி- மேம்பட்டு விளங்கி ஆகியர் – ஆகுக; வியங்கோள் முற்று. புகர் – குற்றம். கனவினும் பிரியா உறையுள் – கனவிலும் தம் காதலரைப் பிரியாதே கூடியுறைவதாக இன்புறுதல்; நனவினும் அவ்வாறே கூடியிருத்தலும் ஆம். மயிர்ச்சாந்து கூந்தலுக்குத் தடவும் மணநெய். துவரா – உலராத. வதுவை மகளிர் – மணப்பெண்கள்.
அருந்ததியை ‘வாழ்நாள் அறியும் வயங்கு சுடர்’ என்றமை அறிக. மணக்காலத்து அவளின் ஆசியால் தாமும் கற்புடைமை பூண்டு உயர்தல் வேண்டும் என்று நினைத்து அருந்ததியைப் பார்க்கும் மகளிர், பின்னரும் தம்முடைய பிரியாது உறையும் கற்புவாழ்வு நீடித்தலை அறிதற்கும் அவளையே நோக்குவர் என்பதாம். அவள் தோற்றம் மறையின் தம் வாழ்வும் முடியும் என்பது மகளிரது நம்பிக்கை. வாள்நுதல் – ஒளிபொருந்திய நெற்றியையுடைய.அரிவை பெண். காண்வர – அழகு பொருந்த.
90. வலிகெழு தடக்கை !
துறை : காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்.
[பெயர் விளக்கம்: ‘மாண்வினைச் சாபம் மார்புற வாங்கி, ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை’ எனக் கையின் செவ்வியைச் சிறப்பித்தமையால் இப்பெயர் அமைத்தனர்.]
மீன்வயின் நிற்ப வானம் வாய்ப்ப
அச்சற்று ஏமமாகி இருள்தீர்ந்து
இன்பம் பெருகத் தோன்றித் தம்துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்றுக்
கழிந்தோர் உடற்றும் கடுந்தூ அஞ்சா 5
ஒளிறுவாள் வயவேந்தர்
களிறொடு கலந்தந்து
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
அகல்வையத்துப் பகலாற்றி
மாயாப் பல்புகழ் வியல்விசும்பு ஊர்தர 10
வாள்யுலி வறுத்துச் செம்மை பூஉண்டு
அறன்வாழ்த்த நற்காண்ட
விறன்மாந்தரன் விறல்மருக!
ஈரம் உடைமையின் நீரோர் அனையை!
அளப்பரு மையின் இருவிசும்பு அனையை! 15
கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை!
பன்மீன் நாப்பண் திங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை!
உருகெழு மரபின் அயிரை பரவியும்
கடலிகுப்ப வேலிட்டும் 20
உடலுநர் மிடல்சாய்த்தும்
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவிப்
பெற்ற பெரும்பெயர் பலர்கை இரீய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்!
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே! 25
மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே!
எழாஅத் துணைத்தோள் பூழியர் மெய்ம்மறை?
இரங்குநீர்ப் பரப்பின் மாந்தையோர் பொருந!
வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய
விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே! 30
உரவுக்கட லன்ன தாங்கருந் தானையொடு
மாணவினைச் சாபம் மார்புற வாங்கி
ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை
வார்ந்துபுனைந் தன்ன ஏந்துகுவவு மொய்ம்பின்
மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில் 35
ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேற்கொண்டு
காழெஃகம் பிடித்தெறிக்கு
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மைக்
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வீங்குபெருஞ் சிறப்பின் ஓங்குபுக ழோயே! 40
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்
பழன மஞ்ஞை மழைசெத்து ஆலும்
தண்புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி
வெம்போர் மள்ளர் தெண்கிணை கறங்கக்
கூழுடை நல்லில் ஏறுமாறு சிலைப்பச் 45
செழும்பல இருந்த கொழும்பல் தண்பணைக்
காவிரிப் படப்பை நன்னாடு அன்ன
வளங்கெழு குடைச்சல் அடங்கிய கொள்கை
ஆறிய கற்பின் தேறிய நல்லிசை
வண்டார் கூந்தல் ஒண்டொடி கணவ! 50
நின்னாள், திங்கள் அனைய வாக; திங்கள்
யாண்டோர் அனைய வாக: யாண்டே
ஊழி யனைய வாக; ஊழி
பதிற்றுப்பத்து தெளிவுரை
வெள்ள வரம்பின ஆக; என உள்ளிக்
காண்கு வந்திசின் யானே: செருமிக்கு 55
உருமென முழங்கும் முரசின்
பெருநெல் யானை இறைகிழ வோயே!
தெளிவுரை : வானத்துக் கோள்கள் அவையவை மழை பெய்வதற்கு உரியவான இடங்களிலே முறையாக நிற்க, அதனால் மழையும் முறையாகப் பெய்யும். அதனால், எங்கணும் வளம்பெருக, உயிர்கள் அச்சமற்றுத் துன்பத்தின் நீங்கி இன்பத்தில் திளைக்க, அவைகட்குக் காப்பாளனாக அமைந்தவன். எங்கணும் இன்பம் பெருகுதற்குச் செய்வதற் கென்றே தோன்றியவன். தமக்குத் துணையாக அமைந்த துறையினிடத்தே யாதும் குறைவின்றி அனைத்தையும் நிறைவாகக் கற்றவன்.
மிகுதியான ஆற்றலுடைய பகைவர் செய்யும் போரிடத்தே, அவரது கடுமையான வலிமைக்கு அஞ்சாதே எதிர் நின்று,ஒளி செய்யும் வாளையுடைய அவ்வெற்றி வேந்தரது போர் யானையோடு, அவரது கலங்களையும் பறித்து வரும் வெற்றிச்சிறப்புடையவன். அவரிடமிருந்து பறித்து அவற்றை அவர் பணியவும் மீளவும் அவருக்கே தந்து, ‘யாம் பழைய நட்பினேம்’ என நட்புக்கூறி, அவர்க்கு அருள்பவன். அவரும் பின்னர்த் தன் ஏவலின்படி கேட்டு நடக்க, அகன்ற உலகிடத்தே கதிரவனைப்போல நடுநிலையோடு நின்று ஆட்சிசெய்தவன்.
கெடாத தன் பலவான புகழ்களும் அகன்ற வானிடத்தும் சென்று பரவுமாறு, தன் வாளின் வலிமையாலே பகைவரை அழித்துச் சிறந்தவன். செம்மையே பூண்டு ஒழுகியவன். அத்தகையோனாகி, அறக்கடவுளும் தன்னை வாழ்த்த, நன்னெறியோடு அரசாண்ட வெற்றியாளனாகிய மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் ஆற்றலமைந்த குடிவழியில் தோன்றியவனே!
அனைத்துயிரிடத்தும் குளிர்ச்சியான அன்புடைமை பாராட்டுதலை உடைமையினாலே நிதான் நீரினை ஒப்பவனாவாய். நின் திறந்தான் அளந்தறியப்படாத அருமையினை உடைத்தாதலினாலே பெரிதான வானத்தை ஒப்பவனாவாய். இரவலர் கொள்ளக் கொள்ளக் குறைவுபடாச் செல்வ வளத்தை உடைமையினாலே கடலினை ஒப்பவனாவாய்.
பலவான விண்மீன்களுக்கு இடையே பொலிவோடு தோன்றும் திங்களைப்போல, நீயும் பொலிவுபெற்ற நின் அரசச் சுற்றத்தோடுங் கூடியவனாக, அவர்களிடையே அவர்கட்கும் மேம்பட்டுப் பொலிவோடும் தோன்றுகின்றனை!
அச்சம் பொருந்திய மரபினையுடைய அயிரைமலைக்கண் கோயில் கொண்டிருக்கும் கொற்றவையை வழிபட்டும், கடலின் செருக்கு அழியுமாறு வேலினை ஏவியும், மாறுபட்டுப் போரிட வந்தாரது வலிமையை அழித்தும் விளங்குவாய்!
மலையிடத்துள்ளவும், நிலத்திடத்துள்ளவுமான பகையரசரது அரண்களைக் கைக்கொண்டு, அதனாற் பெற்ற பெருமை வாய்ந்த பலபொருள்களையும், நின்னை இரந்துவந்த பலர்க்கும் ஈத்த, வெற்றிச் செல்வத்தினையுடைய வலிமையாளரின் வழித் தோன்றியவனே!
வெல்லக் கட்டியுடன் வேகவைத்துப் பெறும் உணவினை உண்பாராகிய கொங்கரின் கோமானே! கள்ளாகிய உணவினை யுடையவரான குட்டநாட்டாரின் ஆண்சிங்கமே! புறமிட்டார்மேற்படை கொண்டு செலுத்தாத இரு தோள்களையுடையவரான பூழிநாட்டாருக்குக் கவசம் போன்றவனே! ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய மாந்தைப் பட்டினத்து மக்களின் மன்னனே! வெள்ளிய பூக்களையுடைய வேளையோடு சுரைக் கொடிகளும் பின்னிக்கிடக்கும், பல மொழிகளைக் கலந்து பேசும் மறவர் நிறைந்துள்ள பாசறையிடத்து உள்ளாரின் வேந்தனே!
பகைவரால் தடுத்தற்கரிய வளமிகுந்த கடலைப்போன்ற பெரிய தானையினை உடையவனே! மாட்சி கொண்ட செய்வினைத் தொழிலையுடைய வில்லை நிறுத்தி, மார்போடும் பொருந்துமாறு இழுத்து வளைத்து, அவ்வில்லின் நாண் பொருதலாலே ஏற்பட்ட காய்ப்பு விளங்குகின்ற வலிமை பொருந்திய பெரிய கையினை உடையோனே! ஒப்ப வகுத்துப் புனைந்தாற்போல விளங்கும் உயர்ந்து திரண்ட தோள்களை உடையவனே! விண்மீன்கள் பூத்தாற்போல மணிகளால் இழைக்கப்பெற்று விளங்கும் வட்டச் சேணத்தையுடையதும், அழகிய கவரிமயிராலாகிய குச்சியை அணிந்துள்ளதுமான, பாய்ந்து செல்லும் போர்க்குதிரைமேல் ஏறிக்கொண்டவனாகக், காம்பையுடைய வேலைப் பிடித்துப் பகைவரை நோக்கிச் செலுத்தி, அவருக்குத் துன்பஞ் செய்தலிலே விருப்பமும், நீங்காத போராண்மையும் கொண்டவனே! நிலையாமையை நன்கறிந்த மறவர்களின் பெருமானே! மிக்க பெருஞ்சிறப்பினாலே ஓங்கும் புகழினை உடையோனே!
வயல்களை உழுகிறவரான உழவர்கள் தண்ணுமைப் பறையை முழக்கினால், அதனை மேகத்தின் இடிமுழக்கமாகக் கொண்டு மருதநிலச் சோலையிலுள்ள மயில்கள் ஆடத் தொடங்கும். குளிர்புனலிலே ஆடிக்களிப்போரது ஆரவாரத்தோடு கலந்தாற்போலக் கொடும்போரைச் செய்யும் படை மறவரது தெளிந்த ஓசைகொண்ட கிணைப்பறையும் சேர்ந்து முழங்கும். செல்வம் பொருந்திய நல்ல வீடுகளிலேயுள்ள ஆனேறுகள் ஒன்றோடொன்று மாறுபட்டு முழக்கமிட்டிருக்கும். செழுமையான பலவகை நலங்களும் நிலையாகவிருந்த, கொழுமையான பல குளிர்ச்சியான வயல்களைக் கொண்ட காவிரியாற்றின் பக்கங்களைக்கொண்ட நல்ல சோணாட்டைப் போன்றவள்; அழகு பொருந்திய, உள்ளிடு பரல்கள் அமைந்த சிலம்புகளையும், அடக்கமான கொள்கைகளையும், அறக்கற்பினையும், தெளிவான நற்புகழையும் கொண்டவள்; வண்டு மொய்க்கும் கூந்தலையும், ஒளிபொருந்திய வரைகளையும் கொண்டோளான நின் சேரன்மாதேவி. அவளின் கணவனே!
போர்க்களத்தே பகைவரினும் மேம்பட்டு இடிபோல முழங்கும் வெற்றி முரசத்தையும், பெரியவான நல்ல யானைப் படையினையும், தலைமைக்குரிய உரிமையினையும் உடையோனே! நின் வாணாளின் ஒவ்வொரு நாளும், மாதத்தை யொத்த காலவளவினை உடையதாகுக! நின் வாணாளின் ஒவ்வொரு மாதமும் யாண்டை யொத்த காலவளவினை உடையதாகுக!
அந்த ஆண்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் ஊழிக் காலத்தின் அளவினை உடையனவாகுக! அவ்வூழிகள் ஒவ்வொன்றும் வெள்ளம் போன்ற காலவரம்பினை உடையன வாகுக!” என நினைந்து வாழ்த்தியபடியே, நின்னைக் காண்பதற்கென யானும் வந்துள்ளேன், சேரமானே!
சொற்பொருளும் விளக்கமும்: மீன் – விண்மீன். வயின்- இடம். வானம் – மழை. வாய்ப்ப – பெய்ய. அச்சற்று – அச்சமற்று. ஏமம் – பாதுகாப்பு. இருள் – துன்பம். தம்துணை – தமக்குரிய துணையாக அமைந்த: துணையென்றது அரசனுக்குரிய ஆட்சியுறுப்புக்களை. நிறைய – நிறைவாக. கற்று – கற்றறிந்து. சுழி – மிகுதி. உடற்றும் – போரிடும். கழிந்தோர் -வளமிகுந்த பகையரசர்; வினையாலணையும் பெயர். தூ – வலிமை. ஒளிறு – விளக்கம். வயம் – வலிமை. களிறு – போர்க்களிறு. கலம் – அணிகலன்கள். தொன்று மொழிதல் – பழமை பாராட்டல்; பழைய நட்புறவை மீண்டும் புதுப்பித்தல். பகல் – நடுநிலைமை. செம்மை – செவ்விய பண்புகள். விறல் – வெற்றி மேம்பாடு. நற்கு – நன்கு; வலித்தல் விகாரம். அறன் – அக்கடவுள்.
ஈரம் – அருள் நெஞ்சம். ’அளப்பு அருமை’ என்றது அவனது திறத்தை. ‘கொளக்குறைப்டாமை’ என்றது அவனது செல்வத்தை. நாப்பண் – நடுவே. பூத்த – பொலிவு பெற்ற. சுற்றம் – அரசச்சுற்றமும்; உறவினருமாம். உருகெழு மரபு: அச்சந்தருதலையுடைய முறைமை. அயிரை – அயிரை மலைக்கண்ணுள்ள கொற்றவை. இகுப்ப – பெருமை குன்ற. உடலுநர் – பகைத்துப் போரிட்டோர். மிடல் – வலிமை. அருப்பம் – அரணிடம். பெரும்பெயர் – பெருமை கொண்ட பொருள்கள். பலர் கை இரீஇய – இரவலர் பலருக்கும் கொடுத்துதவிய. கொற்றத்திரு – வெற்றிச் செல்வம். உரவோர் – வலிமையாளர். உம்பல் – வழித்தோன்றல். புழுக்கு – வேகவைத்துப் புழுக்கிய உணவு; இவை பயறுவகைகளாற் செய்யப் பெறுபவை. மட்டம் – கள். புகா – உணவு. எழாஅ – புறமிட்டார்பாற் படைகொண்டு எழாத. மாந்தை – மாந்தைப் பட்டினம். வேளை – வேளைச்செடி. விரவுதல்- கலத்தல். கட்டூர் – பாசறை. வயவர்- வீரர்.
உரவு – வலிமை. தாங்குதல் – தடுத்தல். தானை – படை. சாபம் – வில். ஞாண் – நாண். வார்ந்து – வகுத்து; நீண்டும் ஆம். ஏந்து குவவு – உயர்ந்து திரண்ட. பாண்டில் -வட்டச் சேணம். மொய்ம்பு – தோள். பூத்தன்ன – விளங்கினாற்போல. கவரி – கவரிமயிர்த் தலையாட்டம். மேல்கொண்டு- மேலேறிக் கொண்டு. காழ் – காம்பு. எஃகம் – வேல். விழுமம் – துன்பம். புகலும் – விரும்பும். ஆண்மை – மறமாண்பு. காஞ்சி -நிலையாமை. சான்ற – நிறைந்த. வயவர் – மறவர். களத்திற்குச் செல்வார் மீண்டு வருவாரென்பது நிலையற்றது ஆதலின் மறவரைக் ‘காஞ்சி சான்ற வயவர்’ என்றனர்; பிறரினும் நிலையாமையை நன்கு அறிந்தவர் அவரே யாகலின்.
‘தண்ணுமை, தெண்கிணை’ என்பன பறைவகைகள். மழை செத்து- மேகத்து இடிமுழக்காகக் கருதி. மயங்கி – கலந்து. பழனம் – மருதநிலத்துச் சோலை. கறங்கல் – ஒலித்தல். கூழ் – செல்வம். ஏறு – ஆனேறு. படப்பை – பக்கம். நன்னாடு – சோழ வளநாடு. வளம் – அழகு; செய்வினைத் தொழில்வளமையும் ஆம். தேறிய – தெளிந்த. ஒண்டொடி- ஒளிவளை யணிந்தவள்; அன்மொழித்தொகை.
‘நாள் திங்களாகவும், திங்கள் யாண்டாகவும், யாண்டு ஊழியாகவும், ஊழி வெள்ளமாகவும் நின் வாணாள் பெருகிப் பல்க, நீயும் நெடிது வாழ்வாயாக’ என்பதாம். இறை – தலைமை. கிழவோய் – உரியவனே!
பெயர் விளங்காப்
பதிற்றுப்பத்துச் செய்யுட்கள்
- இருங்கண் யானையொ டருங்கலந் தெறுத்துப்
பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர்
வணங்கா ராதல் யாவதோ மற்றே!
உருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்குக்
கண்ணதிர்பு முழங்கும் கடுங்குரல் முரசமொடு 5
கால்கிளர்ந் தன்ன வூர்திக் கான்முளை
எரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றத்து
நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி
நீர்துளைந் நன்ன செலவின்
நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே! 10 - இலங்குதொடி மருப்பின் கடாஅம் வார்ந்து
நிலம்புடையூஉ எழுதரும் வலம்படு குஞ்சரம்
எரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக்
கால்கிளர்ந் தன்ன கடுஞ்செலல் இவுளி
கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோடு 5
ஊன்வினை கடுக்கும் தோன்றல் பெரிதெழுந்து
அருவியின் ஒலிக்கும் வரிபுனை நெடுந்தேர்
கன்வேட் டனவே முரசங் கண்ணுற்றுக்
கதித்தெழு மாதிரம் கல்லென ஒலிப்பக்
கறங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்ப 10
நெடுமதில் நிரைஞாயிற்
கடிமிளைக் குண்டு கிடங்கின்
மீப்புடை யாரரண் காப்புடைத் தேயம்
நெஞ்சுபுகல் அழிந்து நிலைதளர்பு ஓரீஇ
ஒல்லா மன்னர் நடுங்க 15
நல்ல மன்ற இவண் வீங்கிய செலவே.
3. வந்தனென் பெரும கண்டனென் செலற்கே
களிறு கலிமான் தேரொடு சுரந்து
நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை
மாரி என்னாய் பனியென மடியாய்
பகைவெம் மையின் அசையா வூக்கலை 5
வேறுபுலத் திறுத்த விறல்வெந் தானையொடு
மாறா மைந்தர் மாறுநிலை தேய
மைந்துமலி ஊக்கத்த கந்துகால் கீழ்ந்து
கடாஅ யானை முழங்கும்
இடாஅ ஏணிநின் பாசறை யானே! 10
4. பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினும்
என்னொடு புரையுநள் அல்லள்
தன்னொடு புரையுநர்த் தானறி குநளே!
இவை புறத்திரட்டிலும், தொல்காப்பிய உரைகட்கிடையிலும் காணப்பெற்றவை.
இவ்வாறு காணப்படும் செய்யுள்கள் இந்நூல் முழுமையும் ஒரு காலத்தே கிடைத்தது என்பதற்குச் சான்று பகர்கின்றன.
பதிற்றுப்பத்தைப்
பாடிய சான்றோர்
பதிற்றுப் பத்தைப் பாடிய சான்றோர்கள் பதின்மர். எனினும், காலக்கொடுமையால் காணாதே போயின முதல், பத்து ஆகிய புத்துக்களோடே அவற்றைப் பாடிய சான்றோர்களின் பெயர்களும் அறியவியலாதே மறைந்து போயின. இரண்டுமுதலாக ஒன்பது முடியவுள்ள பத்துக்களைப் பாடியோராகப் பதிகத்தால் அறியப்படுகிறவர்கள் எண்மர். அவர்கள், முறையே குமட்டூர்க் கண்ணனாரும், பாலைக் கோதமனாரும். காப்பியாற்றுக் காப்பியனாரும், பரணரும், காக்கைப் பாடினியார் நச்செள்ளையாரும், கபிலரும், அரிசில்கிழாரும், பெருங்குன்றூர் கிழாரும் ஆவர். இவர்களைப் பற்றிய குறிப்புக்களை மட்டும் நாம் இங்கே காண்போம். இவர்களின் விரிவான வரலாறுகள் ஆராய்தற் குரியனவாகும்.
1. குமட்டூர்க் கண்ணனார்
இவர் பாடியுள்ளது இரண்டாம் பத்து. இவராற் பாடப்பெற்றவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் இவருக்கு அளித்த பரிசில் வியத்தற்கு உரியது. உம்பற் காட்டுப் பகுதியிலுள்ள ஐந்நூறு ஊர்களைப் பிரமதாயமாக அளித்ததுடன், அவனது நாட்டுப் பகுதியுள் தென்னாட்டின் கண்ணிருந்து வந்த அரசிறை வருவாயினும் பாகம் கொடுத்தானாம் அவன்.
‘குமட்டூர்’ என்னும் ஊரினர் இவர். இவர் பெயர் கண்ணனார். குமட்டூர் என்பது பண்டைத் தமிழகத்து ஊர்களுள் ஒன்று. இந் நாளிலே, இப் பெயருடையதான ஊர் எங்கணும் காணப் பெறவில்லை.
‘குவடு’ என்பது மலையுச்சியைக் குறிக்கும் சொல். குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த ஊரான குவட்டூர் என்பதே இவ்வாறு குமட்டூர்’ எனத் திரிந்தது என்பர் சிலர். இவர் ஓய்மாநாட்டுக் குமட்டூரினர் என்று; பேருரையாசிரியரான ஔவை துரைசாமிப் பிள்ளையவர்கள் கூறுவார்கள். சங்கநூற்களுள் இவர் பாடியவையாக வருவன இப்பத்துப் பாட்டுக்களே யாகும்.
இவன் காலத்தே சேரநாட்டின் பெரும்புகழ் இந்நாவலந் தீவு முற்றவும் பரவியிருந்தது. இதனைப், ‘பேரிசை இமயம் தென்னங் குமரியோ டாயிடை, மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்து’ என, இவர் கூறுகின்ற சேரலாதனின் மறமாண்பி னாலேயே நாம் அறியலாம்.
பகைவரை வென்று, தன் வஞ்சிநகரத்தே வெற்றியுலா வருவோனாகிய இவனைச், சூரனை வென்ற முருகன் வந்த வெற்றியுலாவோடு உவமித்துப் பாராட்டுகின்றார் இவர். போர்க்களத்தை நேரடியாகக் கண்டு, அதன் அழிபாட்டு மிகுதியை நோக்கி வருத்தமும், மறமாண்பை எண்ணிப் பெருமிதமும் கொண்டவர் இவர். இதனை, ‘அருநிறம் திறந்த புண்உமிழ் குருதியின், மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து மனாலக்கலவை போல’ ஆயிற்று எனவரும் உவமை விளக்கும். வேந்தர்க்கு உரியவான பலவகைச் செல்வங்களுள்ளும், பகையழித்துப் பெறப்படும் வெற்றியாகிய புகழ்ச்செல்வமே சிறந்ததாகும் என்பதனை, ‘பலர் புகழ் செல்வம்’ எனக் கூறுவர் இவர்.
இமயப் பகுதியிலே அந்நாளிலே வாழ்ந்த ஆரியவரசர் பற்றியும், ஆரிய முனிவர்கள் பற்றியும் அறிந்தவர் இவர். சேரலாதனின் மறமாண்பை வியப்பவர், அரிமான் வழங்கும் சாரல் பிறமான் தோடுகொள் இனநிரை நெஞ்சதிர்ந்தாரும் எனச் சேரலாதனைச் சிங்கவேற்றுக்கும், அவனைப் பகைத்த பிற மன்னரைப் பிறபிற விலங்கினங்கட்கும் ஒப்பிட்டுக் காட்டுவது நயம் மிகுந்ததாகும்.
சேரலாதனது வள்ளன்மையை விளக்குபவர், ‘வறுமைப்பட்ட ஒரு இரவலர் கூட்டம் எவ்வாறு புத்தழகும் புது வளமும் பெற்று விளங்கிற்று’ என, ‘வந்தவண் இறுத்த இரும்பேர் ஒக்கல்……… வசையில் மகளிர் வயங்கிழை அணிய’ என எடுத்துக் காட்டுவதன்மூலம் உணர்த்துகின்றார்.
வளமையை உணர்த்தும் சொன்னயத்திலும், அதுதான் அழிவெய்திய கொடுமையைக் காட்சிப்படுத்தும் சொல்லோவியத்திலும், இவரது செய்யுட்கள் தனித்தன்மையோடு மிளிர்கின்றன.
’நோயொடு பசியிகந்தொரீஇப் பூத்தன்று பெரும் நீ காத்த நாடே’ எனச் சேரலாதனின் நல்லாட்சியைப் போற்றுகின்ற இவர், நாட்டை ஆள்வார்க்குரிய கடமைகளை யாவை என்பதனையும் உணர்த்துகின்றனர். சேரலாதனின் அளப்பரிய பேராற்றல்களை வகைப்படுத்திக் காட்டும் இவரது ‘நிலம் நீர் வளி விசும்பு’ எனத் தொடங்கும் செய்யுள், பழந்தமிழகத்து அரசர்களது பெருமிதநிலையை ஓவியப்படுத்திக் காட்டும் ஒப்பற்ற செய்யுளாகும்.
இவர் காலத்துச் சேரநாடுதான் எத்துணை வளமோடு திகழ்ந்திருக்கிறது! ’கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாடு’ என்று கூறி, அந்தப் பெருவளமை நிலையினைக் காட்டுகிறார் இவர். நல்லவனாகிய அரசன் உலகத்தோர்க்கு உதவுதற் பொருட்டாகவேனும் நெடுநாள் வாழ்தல் வேண்டும் என்று, ‘போர்வல் யானைச் சேரலாத! நீ வாழியர் இவ் உலகத்தோர்க்கு’ என்று சொல்லி மனமுவந்து வாழ்த்துகின்றார் இவர்.
பெண்மையின் சால்பை இவர் அழகாகவும் நுட்பமாகவும் எடுத்துக்காட்டுவது மிகவும் போற்றுவதற்கு உரியதாகும். ’ஆறிய கற்பின்’ அடங்கிய சாயல், ஊடினும் இனிய கூறும் இன்னகை, அமிழ்து பொதி துவர்வாய், அமர்த்த நோக்கு, சுடர்நுதல், அசை நடை’ எனவும், ‘எல்லும் நனியிருந்து எல்லிப்பெற்ற அரிதுபெறு பாயல் சிறு மகிழானும், கனவினுள் உறையும் பெருஞ்சால்பு ஒடுங்கிய, நாணுமலி யாக்கை வாணுதல் அரிவை’ எனவும் இவர் வரைந்துள்ள சொல்லோவியம் பெண்மையின் பெருஞ்சால்புக்கே இலக்கணமாக ஒலிப்பதாகும்.
“மாரி பொய்க்குவதாயினும் சேரலாதன் பொய்யலன் நசையே” என்று சேரலாதனின் வள்ளன்மையையும், ’கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே’ என்று அவனது ஆற்றலையும், இவை இரண்டும் ஒருசேர விளங்கும் அவனது சிறப்பையும் எடுத்துக்காட்டும் நுட்பமான புலமையாளர் இவர் ஆவர்.
2. பாலைக் கோதமனார்
இவர் பாலைத்திணைச் செய்யுட்களைச் செய்வதில் வல்லவர். கோதமனார் என்னும் பெயரினர். ’கோதமன்’ கௌதமன் என்பதன் தமிழ்ச்சொல்லும் ஆகலாம். இவர், இமயவரம்பனின் தம்பியும் மாவீரனுமாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவனை. மூன்றாம் பத்தாற் பாடிப் புகழ்ந்துள்ளார். இவர் பார்ப்பனராயினும், பைந்தமிழ்ப் புலமையும், சிறந்த ஆன்மிக ஞானமும், உயரிய ஒழுக்கச் செவ்வியும் வாய்க்கப் பெற்றவராகவும், உண்மைகளைத் தெளிவுபடக்கூறும் சொல்லாட்சி படைத்தவராகவும் விளங்குகின்றனர்.
‘சொற்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று ஐந்துடன் போற்றி, அவை துணையாக எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கை’யாளர் இவர் ஆகலாம். இவர் கடவுள் நம்பிக்கையிலும், யாக வேள்விகள் இயற்றிக் கடவுளரை மகிழ்வித்துப் போற்றுவதிலும் நம்பிக்கை உடையவர். ஆரிய மரபினரான சான்றோருள் தமிழ் கற்றுச் சிறந்தவருள் இவரும் ஒருவர்.
‘இனனே, காமம், கழி கண்ணோட்டம், அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை, தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து அறந்தெறி திகிரிக்கு வழியடையாகும் என்று தமிழரது அரசியல்நெறி யாதெனக் காட்டுபவரும் இவர்.
வாழ்வு எப்படி அமையவேண்டும்? ‘பிறர் பிறர் ரலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது, மையில் அறிவினர் செவ்விதின் நடந்து, தம் அமர்துணைப் பிரியாது. பாத்துண்டு மூத்த யாக்கையொடு, பிணியின்று கழிய’ என்று வாழ்வின் நல்லமைதியை வகுத்துக்காட்டுபவர் இவர்.
’ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்றல், ஈதல், ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம்புரி யந்தனர் வழிமொழிந் தொழுகி, ஞாலம் நின்வழி யொழுக’ எனப் பாடும் இவர். அந்தக் கோட்பாட்டைத் தமிழரசர் ஏற்று நடக்கவேண்டும் எனவும் விருப்பம் கொள்ளுகின்றனர்.
இவ்வாறு, அறநெறியே நிரம்பிய உளத்தவர் இவராதலினாலே, போரால் நாட்டின்கண் உண்டாகும் அழிபாடுகளை எல்லாம், கற்பார் நெஞ்சம் கரைந்துருளுமாறு எடுத்துக் காட்டி, நிலையாமையை உணர்த்தி, நெறிநின்று வாழ்தலையும் மிக வலியுறுத்துகின்றனர்.
ஐந்திணைச் சால்புகளையும் அழகுறக் காட்டும் இவரது ’இணர்ததை ஞாழல்’ என்னும் செய்யுள் கற்றுக் கற்று இன்புறுதற்கு உரிய ஒரு சிறந்த செய்யுளாகும்.
‘மந்திரத்து அருந்திறல் மரபிற் கடவுட் பேணியர்’ என்று, கடவுள் வழிபாட்டை முன்னின்று நடத்திய தொழிலினரையும் இவர் செய்யுள் காட்டுகின்றது.
இவ்வாறு, இவர் செய்யுட்கள், தமிழகமருங்கிலே ஆரிய முனிவர்களது வேதவேள்வியும் நிலையாமையும் பற்றிய கொள்கைகள் பரவமுற்பட்ட நிலையையும், அவற்றைத் தமிழ் அரசருட் சிலரும் ஏற்றுப்போற்றிய மாற்றத்தையும் காட்டும் வரலாற்று விளக்கங்களாகவும் அமைந்துள்ளன.
இப்பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த குட்டுவன், ‘நீர் வேண்டியது கொண்மின்’ என, இவரும் ‘யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்’ என்றனராம். அவ்வாறே பத்துப் பெருவேள்விகளை வேட்பித்து, அவர்களைச் சுவர்க்கத்துக்கு அனுப்பினான் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்று இப்பத்தின் பதிகம் கூறுகின்றது.
இவருடைய 366ஆவது புறநானூற்றுப் பாடலும் காஞ்சித்திணைச் செய்யுளே யாகும்.
3. காப்பியாற்றுக் காப்பியனார்
இவர் காப்பியாறு என்னும் ஊரினர். காப்பியக் குடி யினராகவோ, அல்லது காப்பியன் என்னும் இயற்பெயரினராகவோ இருக்கலாம். தொல்காப்பியர் போன்றோர் இக்குடியைச் சேர்ந்த தமிழ்ச் சான்றோர்களாவர் என்பது வரலாறு. இவரால் பாடப்பெற்றவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் ஆவான்.
இவர் திருமாலின் திருத்துழாய் மாலையினையும், திருமால் வழிபாட்டு மரபையும் அழகொழுகக்கூறியுள்ளார். ஆதலின் இவரைத் திருமால் அன்பர் எனச் சொல்லினும் பொருந்தும். ‘வண்டன்’ என்பான் இவருக்கு மிகவும் உதவியவொரு வள்ளல் ஆவான். இதனால், இவர் நார்முடிச்சேரலின் சிறப்பைக் கூறும்பொழுதும், ’வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து, வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து வண்டன் அனையை’ என்றி கூறியே சிறப்பிக்கின்றார்.
சேரன்மாதேவியைப்பற்றி உரைக்குங் காலத்து, ‘விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் நின் தொன்னகர்ச் செல்வி’ என்று உரைப்பது, அவளது கற்பு மேம்பாட்டையும், இவரது தெய்வ நம்பிக்கைகளையும் காட்டுவதாக அமையும்.
‘ஆண்கடன்’; ‘புறக்கொடை’; ‘துளங்கு குடி’; ‘முடந்தை நெல்’: ‘மல்லல்’ உள்ளம்’; ‘குருதிச் செம்புனல்’; ‘பகைவர் நகைவர்’ போன்ற பல அரிய சொல்லாட்சிகளை இவரது செய்யுட்களுள் காணலாம். மேலும், இவர்தம் செய்யுட்களை அந்தாதித் தொடையாகவும் அமைத்துப் பாடியுள்ளனர்.
‘நார்முடி’ என்பது எப்படி இருந்தது என்பதையும் இவர் நயமாக ஓவியப்படுத்திக் காட்டுகின்றார். ‘அலந்தலை வேலத்து உலவை அஞ்சினைச் சிலம்பி கோலிய அலங்கற் போர்வையின், இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்து, அவிரிழை தைஇ மின்னுமிழ்பு இலங்கச், சீர்மிகு முத்தந் தைஇய நார்முடிச் சேரல்’ என்பார் இவர்.
‘பனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன் யானைபட்ட வாள் மயங்கு கடுந்தார்’ என்பது போன்ற போர்க்கள உவமை நயங்களையும் இவர் செய்யுட்களுள் காணலாம்.
படைஞரின் கடமையை ’நகைவர்க்கு அரணமாகிப் பகைவர்க்குச் சூர்நிகழ்ந் தற்று நின் தானை’ என்பதனால் மிகமிக அருமையாக உரைப்பார் இவர்.
நார்முடிச் சேரலின் நல்லியல்புகளையும், மறமாண்புகளையும் பிறசிறப்புக்களையும் இவர் வியந்துபோற்றும் நயம் கற்று இன்புறற்கு உரியதாகும்.
இவ்வாறு சீரோடு செய்யுள் செய்து போற்றி வாழ்த்திய காப்பியனார்க்கு அச்சேரலும், நாற்பது நூறாயிரம் பொன்னும் தான் ஆள்வதிற் பாகமும் கொடுத்துச் சிறப்பித்தான் என்பது வரலாறு.
4. பரணர்
இவர் ‘கபில பரணர்’ எனச் சான்றோராற் போற்றப் பெறுகின்ற சால்புடைய இருவருள் ஒருவர். இவராற் பாடப்பெற்றோன் சேரன் செங்குட்டுவன். இவர் பாடியது ஐந்தாம் பத்து. இவர் செய்யுட்கள் பலவும் வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றை நமக்கு உணர்த்துவன. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய பிற சங்க நூற்களிலும் இவர் செய்யுட்கள் நிரம்பக் காணப்படும்.
அகத்துறைச் செய்யுட்களில் இவர் வடித்துக் காட்டும் உயிரோவியங்களும், உவமைச் செறிவுகளும், காட்சிக் கவின்களும் அளவிலவாகும். இவர் வரலாறும் புலமைநலமும் தனி நூலாக எழுதிக் காணும் அளவுக்குச் சுவையும் சிறப்பும் உடையதாகும். ஏறக்குறைய எழுபதுக்கும் மேற்பட்ட பழந்தமிழ்த் தலைவர்களைப் பற்றிய செய்திகளை அறியத் துணை நிற்பன இவர் செய்யுட்களே யாகும். ‘ஊருண் கேணி உண் துறைத் தொக்க பாசியற்றே பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே – (குறுந். 399)’ என்னும் செய்யுள், பிரிவுத் துயரத்து மகளிரைப் பற்றிய ஒப்பற்ற ஓவியமாகும்.
’கடவுள் நிலைய கல்லோங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆகத்
தென்னங் குமரியொ டாயிடை அரசர்
முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச்
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவன்’
என்று கூறும் இவர், செங்குட்டுவனின் மறமாண்போடு, அற்றைத் தமிழ் மறவர் இமயமுதற் குமரிவரை வென்று பேரரசு செலுத்தி வாழ்ந்திருந்த பெருமிதநிலையையும் காட்டுகின்றனர். மற்றும் செங்குட்டுவனது வெற்றிச்செயல்கள் பலவற்றையும் இவர் எடுத்துக்காட்டியுள்ளனர். ‘அனைய பண்பின் தானை மன்னர் இனி யார் உளரோ? நின் முன்னும் இல்லை’ என்று செங்குட்டுவனைப் புகழால் நிலைபெறுத்தியுள்ளவர் இவர்.
‘படுகடல் ஓட்டிய வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர் செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே’ என்று இவனது வள்ளன்மையையும் இவர் எடுத்துக் காட்டுவர்.
5. காக்கை பாடினியார் நச்செள்ளையார்
‘செள்ளை’ என்பது இவர் பெயர். ‘விருந்து வரக்கரைந்த காக்கையது பலியே’ என வரும் இவரது திண்தேர் நள்ளி என்னும் குறுந்தொகைச் செய்யுள் தொடரால், இவரைக் காக்கைபாடினியார் என்றனர். இவர் பெண்பாலராயினும், நுணுகிய புலமையம் தமிழ்நலமும் செறியக்கொண்டு சிறந்தவர். வேண்மாள் அந்துவஞ் செள்ளை என்பாள் இளஞ்சேரல் இரும்பொறையின் தாயும், குட்டுவன் இரும்பொறையின் தேவியும் ஆவள். ஆகவே, இவ்வம்மையும் அவ்வாறே அரசகுடியிற் பிறந்தவராக இருத்தலும் பொருந்துவதாகும். இச்செய்யுட்களால் இவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடியுள்ளார்.
இவர் செய்யுட்கள் பலவும் விறலியரின் ஆடல் பாடல் இசைபோலும் அக்காலக் கலைமேம்பாடுகளைத் தெளிவுறக் காட்டுவனவாக அமைந்துள்ளன. கடற்றுறைகளின் தன்மைகளைத் தெளிவுபட வருணித்துக் காட்டுவதனால் இவரைக் கடற்கரை நாட்டவர் எனக் கருதுதலும் கூடும்.
’சுடர்நுதல், மடநோக்கின், வாள்நகை, இலங்கு எயிற்று, அமிழ்துபொறி துவர்வாய், அசைநடை விறவியர்’ எனவும், ’உயலும் கோதை, ஊறல்அம் தித்தி, ஈரிதழ் மழைக்கண் பேரியல் அரிவை, ஒள்ளிதழ் அவிழகங் கடுக்குஞ் சீறடிப், பல, பல கிண்கிணி சிறுபரடு அலைப்பக், கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்று’ எனவும், ‘வீங்கு இறைத் தடைஇய அமைமருள் பணைத்தோள், ஏந்தெழில் மழைக்கண், வனைந்து வரல் இளமுலைப், பூந்துகில் அல்குல், தேம்பாய் கூந்தல், மின்னிழை விறலியர்’ எனவும், மகளிரை உயிரோவியப்படுத்தும் இவரது சொன்னயம் சொல்லி மகிழ்வதற்கு உரியதாகும்.
‘சாவே இல்லாதே நீதான் நெடுநாள் வாழ்வாயாக’ என்று வாழ்த்தும் இவரது வாழ்த்துரைதான் எத்துணைத் திட்பம் செறிந்து விளங்கிச் சேரலாதனின் சிறப்பையும், அதனை வியந்துபாடும் இவரது புலமையையும் காட்டுகின்றது? ’உயர்நிலை உலகத்துச் செல்லாது, இவண் நின்று, இருநில மருங்கின் நெடிது மன்னியரோ’ என்று வாழ்த்துகின்றார் இவர்.
‘நல்ல மனைவியுடைமையும் ஆடவர்க்குத் தனியான சிறப்பாகும்’ என்பதனை, ’ஆன்றோள் கணவ!’ என்று மிக அழகாகக் குறிப்பார் இவர்.
வந்தவர்கட்கு, மறாது வழங்கி வாழ்ந்த வள்ளல்கள் பலர். ஆனால் சேரலாதனோ அதற்கும் ஒரு நிலையில் உயர்ந்தவனாக, ‘வாராராயினும் இரவலர் வேண்டித் தேரில் தந்து அவர்க்கு ஆர்பதம்! நல்கும் சிறப்பினன்’ என்கிறார் இவர்.
இவ்வாறு, இவர் புலமையும், மக்கள் நிலைகளை நுட்பமாகக் கண்டுகூறும் சொல்லாற்றலும் அமைந்து விளங்கும் தனிச்சிறப்பைக் காண்கின்றோம்.
போர்மறவரின் மறமாண்பை, ‘இன்று இனிது நுகர்ந்தனம்; ஆயின் நாளை, மண்புனை இஞ்சி மதில் கடந்தல்லது உண்குவம் அல்லேம் புகா’ எனக் கூறுவதன் மூலம் காட்டும் நுண்மான் நுழைபுலப் பெரும்புலவரும் இவராவர்.
6. கபிலர்
சங்க நூற்களுள் காணப்படும் புலமைச் செறிவும், ஒழுக்க மேம்பாடும், அருளின் செவ்வியும், நட்பின் சால்பும், செம்மையின் சிறப்பும் அமைந்து விளங்கிய சான்றோர்களிற் குறிப்பிடத்தக்க சிலருட் கபிலர் பெருமானும் ஒருவர் ஆவார். இந்நூலிலுள்ள ஏழாம்பத்து இவர் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடியது ஆகும். இவர் செய்யுட்கள், வரலாறு இரண்டும் தனித்து ஆராயவேண்டிய சிறப்பும் விரிவும் கொண்டவாகும். அந்தப் பெரும்பணியை மேற்கொண்டு இவர் வரலாற்றை நயமும் செறியும் உடையதாகக் செய்து அளித்துள்ளனர், பெரும்புலவரான நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள். அதன்கண் கபிலர் வரலாறு பற்றிய எல்லாச் செய்திகளையும் இனிதே கற்று இன்புறலாம்.
இவர் குறிஞ்சித்திணைச் செய்யுட்களைச் செய்வதில் வல்லவர். ஐங்குறு நூற்றிற் குறிஞ்சிபற்றிய நூறு செய்யுட்களும், குறிஞ்சி கலியும், குறிஞ்சி பாட்டும் அகநானூறு நற்றிணை குறுந்தொகை ஆகியவற்றுள் குறிஞ்சிபற்றிய பல செய்யுட்களும் இவர் செய்தவை. புறநானூற்றுள்ளும் 28 செய்யுட்களை இவர் செய்துள்ளனர்.
ஆழ்ந்த தமிழ்ச் செறிவும், அமைந்த பண்பு நலமும். அழகிய காட்சி யோவியங்களும், வளமையான வரலாற்றுச் செய்திகளுமாகத் தமிழ்வரலாற்றுக் கருவூலப் பெட்டகம் போலத் திகழ்வன இவரது செய்யுட்கள்.
பாரியின்பால் கெழுதகை நட்பினராகத் திகழ்ந்து, அவன் மறைவுக்குப் பின்னரும், அவன் பெண்களை மணஞ்செய்வித்து வாழ்வளித்தபின், வடக்கிருந்து உயிர் நீத்த ஒப்பற்ற நட்பின் சால்பும் உடையவர் இவர்.
‘இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்’ என்று, இவர் தமது நிலையை உரைப்பது பொருத்தமாகவே விளங்குகின்றது. ‘பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே! நட்டோர்க் கல்லது கண்ணஞ்சலையே! மகளிர்க்கல்லது மணங்கமழ் அகலம் மலர்ப்பு அறியலையே! நிலந்திறம் பெயரும் காலை யாயினும், கிளந்தசொல் நீ பொய்ப்பு அறியலையே!’ என்று வாழியாதனின் குணநலன்களைக் கூறி, ‘நனந்தலை உலகம் செய்த நன்று உண்டு எனின், அடையடுப்பு அறியா அருவி யாம்பல் ஆயிர வெள்ள வூழி, வாழியாத, வாழிய பலவே’ என்று வாழ்த்துகின்ற நயம் பெரிதும் இன்புறற் பாலதாகும். அந் நாளைய அந்தணரின், ‘ஒழுக்கம் உயிரின் மேலதாப் பேணும் உயரிய தன்மையை, அறம் கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி அந்தணர் என இவர் கூறுவதனால் அறியலாம்.
இவன் மனைவியையும், ‘பூண் அணிந்து எழிலிய வனைந்து வரல் இளமுலை, மாண்வரி அல்குல், மலர்ந்த நோக்கின், வேய் புரை பணைத்தோள், காமர் கடவுளும் ஆளும் கற்பின், சேண் நாறு கற்பின் சேயிழை’ எனப் போற்றுவர் இவர்.
‘அயிரை நெடுவரை போலத் தொலையாதாக நீ வாழும் நாளே’ என்று வாழியாதனை வாழ்த்திய இவர் வாக்கின்படி, அவனும் புகழோடு வாழும் பெருநிலை பெற்று விளங்குகின்றனன்.
வாழியாதனைப் புறநானூற்று 8, 14,ஆம் செய்யுட்களாலும் இவர் போற்றிப் பாடியுள்ளனர்.
7. அரசில் கிழார்
இவர் இயற்பெயர் தெரிந்திலது. ‘அரிசில்’ என்னும் ஊரினர், வேளாண் குலத்தவர்; பெரும் புலமையும் அரசியறிவும் பெற்றவர் என்பன மட்டுமே நம்மால் அறியக்கூடி யனவாகும். இவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை இப்பதிற்றுப்பத்தின் எட்டாம்பத்தால் பாடியுள்ளதுடன், குறுந்தொகையின் 193ஆம் செய்யுளையும், புறநானூற்று 146, 230, 281, 300, 304, 342ஆம் செய்யுட்களையும் பாடியுள்ளனர். தகடூர் யாத்திரைச் செய்யுட்களிலும் இவர் செய்யுட்கள் காணப்படுகின்றன.
‘செந்நெலின்’ அளவை உறை குவித்தாங்கு’ என இவர் கூறுவதுகொண்டு, மரக்காலுக்கு ‘அம்பணம்’ என்னும் பெயரும், நெற்குவியலுக்கு ’உறை’ என்னும் வழக்கும் வழங்கிவரும் தென்பாண்டி நாட்டவர் இவராகலாம் என்பர். சோணாட்டார் எனவும், மைசூர் நாட்டு அரிசிக்கரை யூரினர் எனவும்; அரியலூரினர் எனவும் பலவாறு கூறுவர்.
’மடங்கடல் தீயின் அனையை, சினங்கெழு குருசில், நின் உடற்றிசினோர்க்கே’ எனவும், ‘பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறைகொண்டு பெயர்தி’ எனவும், இரும்பொறையுன் படையாண்மைப் பாராட்டுவார் இவர்.
‘நின் வயின் பிரிந்த நல்லிசை; கனவினும் பிறர்நசை யறியா’ என்றும் புகழின் மேல் வைத்து இவன் புகழைக் காட்டுவர் இவர். ‘கடவுள் அயிரையின் நிலைஇக் கேடிலவாக, பெரும நின் புகழே’ எனவும் மனங்கலந்து வாழ்த்துகின்றார் இவர்.
இரும்பொறையின் அமைச்சராக விளங்கியும், படைத் துணை ஏற்றும், புலமையோடு பிறபிற ஆண்மையும் பெற்றும் மிகச்சிறந்த பெரியோர் இவர் ஆவர்.
8. பெருங்குன்றூர் கிழார்
இவர் வேளாண் மரபினர். மற்றொருவர் மலைபடுகடாம். பாடியவர்; அவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூரினர். இவர் எந்தப் பெருங்குன்றூரினர் என்பது அறிதற்கு இயலவில்லை. வையாவிக் கோப்பெரும்பேகனை அவன் மனைவி காரணமாகப் பாடியவருள் இவரும் ஒருவர். அகநானூறு. குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள்ளும் இவர் பாடிய சில செய்யுட்கள் காணப்படும். குன்றடுத்த ஊர்கள் பலவும் ‘குன்றூர்’ எனவும், ‘குன்றத்தூர்’ எனவும் வழங்கப்படுதல் தமிழ்நாட்டு மரபு. இந்நூலுள் இவர் பாடியவாக வருவன ஒன்பதாம் பத்துச் செய்யுள்கள். பாடப்பெற்றோன் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையாவான்.
இவரது செய்யுட்கள் காட்சிவருணை நயங்கொண்டும் கருத்துச் செறிவுகொண்டும் விளங்குவன. போர்மறமே பெரிதாகப் பாசறையோனாக இருக்கும் சேரலை, அவன் மனைவியது பிரிவுத்துயரத்தைக் கூறி, வீடு திரும்புமாறு இவர் பாடியுள்ள ‘நிழல்விடு கட்டி’ என்னும் செய்யுள் மிகவும் இலக்கியச் சுவை உடையதாகும். ‘துஞ்சா வேந்தரும் துஞ்சுக; விருந்துமாக நின் பெருந்தோட்கே’ என்னும் சொற்களிலே தான் எத்துணை உயிரிரக்கம் செறிந்து ஒளிர்கின்றது என்பதை உணர்ந்து இன்புறல் வேண்டும். ‘பசும்பிடி’ என்பது ‘பச்சிலை’ என்று கூறப்பெறும் ஒரு மணமுள்ள தழை; இதனை நயமாகக் காட்டியுள்ளவர் இவர். ‘பாடுநர் கொளக்கொளக் குறையாச் செல்வமும், செற்றோர் கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோரையும் உடையவன்’ இளஞ்சேரல் எனவும், ‘வண்மையும் செம்மையும் சால்பும் அறனும் புகன்று புகழ்ந்து அசையா நல்லிசை நிலந்தரு திருவின் நெடியோன்’ எனவும் இவர் சேரனைக் காட்டுகின்றனர். அவன் உயர்வை உளமாரப் போற்றுகின்றனர்.
காக்கைக்கு விருந்து செய்யும் மரபுபற்றிக் காக்கைப் பாடினியார் வரலாற்றுள் அறிந்தோம். இவரோ ‘கார் காலத்து வருவேன்’ எனப் பிரிந்துசென்ற காதலனின் வரவை நினைந்து வருந்தியிருக்கும் மகளிர், மழைமேகத்தின் தோற்றங் கண்டதும், அதனைப் பராவிப் பலியிட்டு வழிபடுவதுபற்றித் தம் நற்றிணைச் செய்யுளுள் குறிப்பிடுகின்றார். குறிஞ்சித்திணையின் காட்சிகளை இயற்கையழகு கொஞ்சித் துளும்ப அமைத்துப் பாடியவர் இவர் என்பதனை இவரது அகத்துறைச் செய்யுட்கள் பலவும் காட்டும்.
‘சுரும்பார் சோலைப் பெரும் பெயர்க் கொல்லி’ எனக் கொல்லிமலையை இவர் வியந்து கூறுவர். கபிலர் பெருமானின் சிறப்பையும், அவர்க்குப் பெரும்பரிசில் அளித்துப் போற்றிய செல்வக்கடுங்கோ வாழியாதனின் வள்ளன்மையையும் போற்றுவார் இவர். ‘மாகஞ் சுடர மாவிசும்பு உகக்கும் ஞாயிறுபோல விளங்குதி பன்னாள்’ என்ற வாழ்த்துரையிலே, இளஞ்சேரலின் மாண்பும் வள்ளன்மையும் எழிலோடு ஒளிர்கின்ற செவ்வியைக் காணலாம்.
‘பயங் கடை அறியா வளங்கெழு சிறப்பின், பெரும்பல் யாணர்க் கூலங்கெழுமி, நன்பல்லூழி நடுவுநின்று ஒழுகப், பல்வேல் இரும்பொறை நின்கோல் செம்மையின், நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த, உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ, அரசியல் தழையாது செருமேந் தோன்றி, நோயிலை யாகியர் நீயே’ என்னும் வாழ்த்துரை அறவுரை யாவும் விளங்குதலைக் கண்டு இன்புறலாம்.
இவ்வாறு நயமும் செம்மையும் நல்லறிவு விளக்கமும் ஒருங்கே இணைந்து கலந்து இனிமையூட்டும் வகையால் சிறப்போடு விளங்குவன இவர் செய்யுட்கள் ஆகும்.
இளஞ்சேரல் பரிசில் நீட்டித்தபோது மனம் வெதும்பியவராக, ‘நும்மனோரும் மற்று இனையர் ஆயின், எம்மனோர் இவண் பிறவலர் மாதோ’ என்று கூறுகின்றதனால், இவரது வாழ்வியல் நிலையையும், புலமைச் செவ்வியையும், உறுதிப் பாட்டையும் நாம் அறியலாம்.
பதிற்றுப்பத்தின்
சேரமன்னர்கள்
பதிற்றுப்பத்தில் இரு குடும்பத்தைச் சார்ந்த சேரவரசர்களின் புகழ்ப் பாட்டுக்களைக் காண்கின்றோம்.
முதற்குடும்பத்தினர் சேரமான் உதியஞ் சேரலாதனும் அவன் வழியினருமாவர்; ஒன்று முதலாக ஆறாம்பத்து முடிய இவர்களைப் பற்றிய பாட்டுக்கள் வருகின்றன.
இரண்டாம் குடும்பத்தினர் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழியினர். இவர்கள், 7,8,9,10 ஆம் பத்துக்களின் பாட்டுடைத் தலைவர்கள் ஆவர்.
முன்னும் பின்னுமாக அமைந்த இந்த வரிசைமுறை காலவமைதியை ஒட்டியது அன்று; முதற்கண் ஒரு குடும்பத்தினரைப் பற்றிய பத்துகளையும், அடுத்து அடுத்த குடும்பத்தினரைப் பற்றிய பத்துகளையும் தொகுத்துள்ளனர்.
இதனால், அந்நாளையச் சேரமன்னர்கள் இருகுடும்பத்தாராக விளங்கி வந்தனர் என்பதும், இருசாராருமே சுதந்திரமான அரசர்களாக விளங்கிவந்தனர் என்பதும் அறியப்படும். முதற்கண் குறிப்பிடப் பெறுவோர் தலைமைக் குடியினர் எனவும், பிற்பட்டுக் குறிப்பிடப் பெறுவோர் கிளைக்குடியினர் எனக் கொள்வதும் ஒருவாறு பொருந்தக் கூடியதே.
இனி, இவர்களைப்பற்றிய வரலாறுகள் மிகவும் விளக்கமாக எழுதப் பெறுவதற்கு உரியன ஆதலால், இங்கே சுருக்கமாகச் சில குறிப்புக்களை மட்டும் இந்நூலினை யொட்டிக் காண்போம்.
1. சேரமான் உதியஞ் சேரலாதன்
இவன் பெயர் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் எனவும் வழங்கும். இவனைப் பாடியவர்கள் மாமூலனாரும், முரஞ்சியூர் முடிநாகராயரும் ஆவர். இவன் பாரதப் போரின்கண் இருதிறத்துப் பெரும்படையணிகட்கும் பெருஞ்சோறு அளித்துப் புகழ்பெற்றவன் என்று குறிப்பிடுவர். ‘ஓரைவர் ஈரைம்பதின்மர் உடன்று எழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன்’ என்று இளங்கோவடிகள் இவன் சிறப்பைச் சிலப்பதிகாரத்துக் கூறுகின்றனர். ’ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்’ எனப் புறநானூற்றுச் செய்யுளும் (3) கூறுகின்றது. இவனை, ‘ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப், போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், வலியும், தெறலும், அளியும் உடையோன்’ என்பர் முரஞ்சியூர் முடிநாகராயர். ‘மறப் படைக் குதிரை மாறா மைந்தின் துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றே, இரும்பல் கூளிச் சுற்றம் குழீஇருந் தாங்கு’ என, இவன் வழங்கிய பெருஞ்சோற்றை உயிரிழந்த முன்னோர் பொருட்டாகத் தெய்வங்கட்கு இடுகின்ற படையலாகக் கூறுவர் மாமூலனார் (அகம், 333). இவன் தேவி வெளியன் வேண்மாள் நல்லினி. இவர்களுக்குப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – இரண்டாம் பத்திற்கு உரியவன். உதியஞ்சேரலுக்கு உரிய முதற்பத்து கிடைக்கப் பெறவில்லை; பாடினோர் பெயரும் அறியப்படவில்லை. ‘நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்’ (அகம்.65) என, இவன் சேரநாட்டை விரிவுபடுத்தியதனையும் மாமூலனார் கூறுவர். ‘வானவரம்பன் வெளியதது அன்ன’ என வருவதனால் (அகம்.359) வெளியம் சேரநாட்டினர்க்குச் சில காலம் உரித்தாயிருந்ததும் அறியப்படும்.
2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
இவனை ஆசிரியர் குமட்டூர்க் கண்ணனார் இரண்டாம் பத்துச் செய்யுட்களால் போற்றிப் பாடியுள்ளனர். இவன் உதியஞ்சேரலுக்கும் வெளியத்து வேண்மாள் நல்லினிக்கும் பிறந்த மகன். 58 ஆண்டுகள் அரசுவீற்றிருந்து மறப் பண்போடும், பிற சிறப்போடும், நாடும் நல்லோரும் போற்ற வாழ்ந்தவன் இவன். இவன் உடன் பிறந்தவன் பல்யானைச் செல்செழு குட்டுவன். இவன் மக்கள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய மறமாண்பினர் ஆவர்.
இவன் காலம், வடபுலத்தே ஆரியப் பேரரசுகள் வலுப்பெற்றிருந்த காலம் ஆகும். நந்தமரபு வலிகுன்றி; மோரிய மரபு தோன்றிய காலவெல்லையை இவன் காலமாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவார்கள். இவன் வடபுலத்து வேந்தர் பலரையும் வெற்றிகொண்டு, இமயம்வரை தன் மறமாண்பை உணரச்செய்து, ‘இமயவரம்பன்’ என்னும் விருதுப்பெயரையும் பெற்றுச் சிறந்தவன். கழாஅத் தலையார், பரணர் ஆகியோர் பாடியுள்ள குடக்கோ நெடுஞ்சேரலாதனும், காப்பியாற்றுக் காப்பியனார், மாமூலனார் ஆகியோர் பாடியுள்ள ’சேரலாதன்’ என்பானும் இவனே என்பர்.
பல துறைகளுள் சீரும் சிறப்பும் புகழும் மறமேம்பாடும் கொடைக் குணமும் கொண்டு விளங்கிய இவன், தன் முதுமைப் பருவத்திலும் போர்செய்தலைக் கைவிடாதானாக விளங்குகின்றான். சோழன் வேற்பஃறடக்கைப் பொருநற் கிள்ளியோடு போர்ப்புறத்து நடந்த பெரும்போரில், ‘பெரும் புண்பட்டு அந்நிலையினும் தன்னைப் பாடிய கழாஅத் தலையாருக்கு தன் மார்பின் ஆரத்தை வழங்கிய சிறப்பினன் இவன் (புறம்.368). வெண்ணிக்குயத்தியாரின் புறப்பாட்டு (66) ’இவன் புறப்புண் நாணி வடக்கிருந்து மிகப் புகழ் உலகம் எய்தினான்’ எனக் கூறும்.
3. பல்யானைச் செல்கெழு குட்டுவன்
இவனைப் பற்றிய செய்திகளைப் பாலைக் கௌதமனார் பாடியுள்ள இப்பதிற்றுப்பத்துச் செய்யுட்களால் மட்டுமே அறிகின்றோம். பிற சங்க நூற்களுள் இவனைப் பற்றிய செய்திகள் எதுவும் காணப்பெறவில்லை. இவன், பாலைக் கௌதமனாரின் விருப்பத்திற்கு இணங்கப் பத்துவேள்விகளை இயற்றி அவரையும் அவர் மனைவியையும் சுவர்க்கத்துக்கு அனுப்பியவன். இவர் பாடிய புறநானூற்று 366 ஆம் செய்யுளும் இவனைப் பற்றியதாகவே தோன்றுகின்றது. ‘அறவோன் மகனே!’ என்ற குறிப்பை வைத்துத் தவறாகத் தருமபுத்திரனைப் பாடியதெனக் கூறியிருக்கலாம். ‘அறவோன்!’ உதியஞ்சேரலே என்பது அவனைப்பற்றிய செய்திகளால் விளங்கும். இவன் உம்பற் காட்டுப் பகுதியை வென்று தன் ஆட்சியை நிலைபெறுத்தியவன்; அகப்பா என்னும் கோட்டையை அழித்தவன்; மண் வகுத்து ஈத்தவன்; கடுங்களிற்று யானைப் புணர் நிரை நீட்டி இருகடல் நீரும் ஒருபகல் ஆடியவன்: அயிரையைப் பரவியவன், இவனுடைய குரு நெடும்பாரதாயனார் என்பவர். இவன் புகழோடு 25 ஆண்டுகள் ஆட்சி நடத்தியதன் பின்னர், தன் குருவோடு காடுசென்று தவமியற்றி உயர்நிலை உலகம் சென்றனன். இவனுடைய பலவான சிறப்புக்களையும் பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் விரிவாக உரைத்துப் போற்றுகின்றன. ’பூழியர் கோ’ எனவும், ’மழவர் மெய்ம்மறை’ எனவும், ‘வெல்போர்க் குட்டுவ’ எனவும், ‘அயிரைப் பொருநன்’ எனவும் இவன் குறிக்கப்படுகின்றான். ’வேயுறழ் பணைத்தோள் இவளோடு ஆயிர வெள்ளம் வாழிய பலவே’ என வாழ்த்தலால். இப்பாட்டுகளைப் பாடிய காலத்து இவன் தேவியும் இருந்தாளாதல் வேண்டும். இவன் வழியினர்பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அறியப்படவில்லை. இவன் நாடுகாவற் சிறப்பினை எல்லாம் அருமைப்பட இச்செய்யுட்கள் உரைக்கின்றன.
4. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இவனை நான்காம் பத்தாற் பாடியவர் ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார் ஆவர். இவன் சேரலாதனுக்கு வேளாவிக்கோமான் பதுமன்தேவி ஈன்றமகன் என்கிறது பதிகம். இவன் 25 ஆண்டுகள் அரசு வீற்றிருந்தவன். பதிற்றுப்பத்தின் அமைப்பு, இவன் செங்குட்டுவனுக்கு மூத்தோன் எனக் காட்டுகின்றது. இவனைப் பாடிய பிற புலவர் கல்லாடனார் ஆவர். பூழிநாட்டுப் படைச்செலவு, கடம்பின் பெருவாயில் நன்னனைத் தோல்வியடையச் செய்தது போன்றவை இவன் மறமாண்பு குறிக்கும் படையெழுச்சிகள் ஆகும். ‘இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாட் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்’ என்று அகநானூற்றுள் (199) கல்லாடனார் இவன் சிறப்பைக் கூறுகின்றனர். அவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியவர். இதனால், இவனையும் அக்காலத்தவனாகக் கொள்ளலாம். இப்பத்து இவனது மறமாண்பையும், கொடை மாண்பையும், செங்கோன்மைச் செவ்வியையும் விரிவாக உரைத்துப் போற்றுகின்றன. ‘விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் நின் தொன்னகர்ச் செல்வி’ என இவள் தேவியையும் போற்றுகின்றனர்.
‘உலகத்தோரே பலர்மற் செல்வர்’ என்னும் செய்யுள் இவனது குணநலத்தையும், பிறர்க்கென வாழ்ந்த பேராண்மைத் திறத்தையும் காட்டுகின்றது.
- கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
இவன் பரணர் பெருமான் பாடிய ஐந்தாம் பத்தின் தலைவன் ஆவான். ‘குடவர் கோமான் நெடுஞ்சேரலாதனுக்குச் சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன் இவன்’ என்று கூறுகிறது இப்பத்தின் பதிகம். இவனே கடவுட் பத்தினிக்குப் படிமம் அமைத்த சிறப்பினை உடையவன்; ஆரிய அரசர்களை வீழ்த்தியவன்; வியலூர், கொடுகூர், பழையனின் போவூர் போன்றவற்றை அழித்தவன்.
இவன் 55 ஆண்டுகள் வீற்றிருந்தவன். செருச் செய் முன்போடு முந்நீர் முற்றி, ஓங்கு திரைப் பௌவம் நீங்க ஓட்டிய நீர்மாண் எஃகம்’ என இவன் கடலிடத்துப் பகைவரை வெற்றிகொண்டதனை அகநானூற்றுச் செய்யுளும் கூறும் (அகம்.212). சிலப்பதிகாரத்து வஞ்சிக்காண்டமும் இவன் மற மாண்புகளை விளக்கும்.
’ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்று முதிர் வடவரை வணங்குவிற் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்’ (அகம். 396) இவன். இவன் கரிகால் வளவன் காலத்தவன் என்பதனைப் பரணர் பாட்டுக்கள் வலியுறுத்தும். இவனது வடபுல வெற்றியும், கடலிடைவெற்றியும் கருதினால், கிரேக்க மாவீரனான அலெக்சாந்தரின் போர் மறத்தோடு ஒப்பிட்டுக் கூறலாம். அண்ணல் யானை அடு போர்க் குட்டுவ’னாகிய இவன், ‘கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசை எல்லை இமயமாகத் தென்னங் குமரி யொடு ஆயிடை’ அரசர் அனைவரினும் மேம்பட்டு விளங்கியவனும் ஆவன். ‘மோகூர்ப் பழையனை இவன் வென்றதும், எழுமுடி மார்பின் எய்திய சேரல் இவன் என்பதும், ‘உடை திரைப் பரப்பிற் படுகடல் ஓட்டிய வெல்புகழ்க் குட்டுவன் இவன் என்பதும், இப்பாட்டுக்களால் அறியப்படுகின்றன. இவன், ‘வணங்கிய சாயலும் வணங்கா ஆண்மையும் கொண்டவன். இவன் சிறப்புக்களைத் தொடுத்து உரைப்பது ‘வெருவரு புனற்றார்’ என்னும் செய்யுள். ‘வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்’ இவன் தந்தை. இவனோ, அவன் புகழையும் நிலைபெறுத்தி, மேலும் பெருக்கிய பேராளனாக விளங்கி 55 ஆண்டுகள் வீற்றிருந்தவன். இவன் மகன் குட்டுவன் சேரல் என்பது பதிகத்தால் அறியப்படும் செய்தியாகும். பெறற்கரிய தன் மகனும், இளவரசனுமாகிய குட்டுவன் சேரலையும் பரணர்க்குப் பரிசிலாகத் தந்து மகிழ்ந்த பெருங்கொடையாளன் இவன்.
6. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடிய ஆறாம்பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவன் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் பிறந்தவன். தண்டகாரணியத்துக் கோட்பட்ட வருடையை மீட்டுத் தொண்டியுட் கொண்டு தந்தவன். ‘வான வரம்பன்’ எனப் பேர் இனிது விளக்கியவன். ‘குழவி கொள்வாரின் குடிபுறங் காத்தவன்’. முப்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தவன். இவனது போர்மறத்தை, ’மழைதவழும் பெருங்குன்றத்துச், செயிருடைய வரவெறிந்து, கடுஞ்சினத்த மிடல் தபுக்கும், பெருஞ்சினப் புயலேறு அனையை’ என்பதனாற் குறிப்பிட்டுள்ளனர். இவன் கலையுணர்வும் கொண்டவன் ஆதலைச் ‘சிறுசெங்குவளை’ என்னுஞ் செய்யுளால் அறியலாம். இவனது கொடைச்சிறப்பை, ‘உயர்நிலை உலகத்துச் செல்லாது, இவணின்று இருநிலமருங்கின் நெடிது மன்னியரோ’ என வாழ்த்துதலால் அறியலாம். அறிவும் சால்பும் அன்பும் பண்பும் கொடைமையும் வெம்மையும் ஒருங்கே பெற்று விளங்கிய சிறப்பினன் இவனாதலை, இச்செய்யுட்கள் பலவும் விளங்கக்கூறி இவனைப் போற்றுகின்றன.
7. செல்வக் கடுங்கோ வாழியாதன்
இவன் இரும்பொறை மரபினன். சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், ஒருதந்தை ஈன்ற மகள் பொறையன் பெருந்தேவிக்கும் மகனாகப் பிறந்தவன். ‘மாயவண்ணன்’ இவனது புரோகிதனாக விளங்கியவன். வேள்விகள் இயற்றியும், அறம்பல செய்தும் புகழோடு 25 ஆண்டுகள் வீற்றிருந்தவன் இவன். இவனுடைய பல்வகைக் குணமேம்பாடுகளையும் ’அருவி யாம்பல்’ என்னும் செய்யுள் விளக்கிக் கூறுகின்றது. ‘ஆயிர வெள்ள ஊழி, வாழியாத வாழிய பலவே’ என்று மனந்திறந்து வாழ்த்துகின்றார் கபிலர் பெருமான். ‘மழையினும் பெரும்பயம்’ பொழிந்தவன் இவன். அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு இருஞ்சேறு ஆடியபடி விளங்கியது இவன் அரண்மனை முற்றம். இவனுக்கு உரித்தாயிருந்தது நேரிமலை; அதனால் இவனை நேரிப்பொருநன் எனவும் கூறுவர். ‘அணங்கு எழில் அரிவையர்ப் பிணிக்கும் மணங் கமழ்’ மார்பனும் இவனாவான்.
இவன் காலத்து இருந்த மற்றொரு சேரமான். ‘கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை’ யாவான். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தை ஒட்டியவன் இவன். ’ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேரலாதன்’ எனவும் இவனைக் கபிலர் போற்றுகின்றனர் (புறம் 8). இவனைப் பாடிய மற்றொரு புலவர் குண்டுகண் பாலியாதனார் ஆவர் (புறம் 387). இவன் சிக்கற்பள்ளிப் போரில் உடல் துறந்து, புகழால் நிலைபேறு பெற்றவன்.
’அயிரை நெடுவரை போலத் தொலையாதாக நீ வாழும் நாளே’ என வாழ்த்துவார் கபிலர், இவனை. இவன் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும், இவன் தேவி வேளாவிக் கோமான் பதுமனின் மகளும் என்று அறியப்படுகின்றன.
8. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
இவனைப் பாடியவர் அரிசில்கிழார். இவர் பாடிய பாட்டுக்களால் பெரிதும் மகிழ்ந்தானாகிய இவன், தானும் கோயிலாளும் புறம்போந்து நின்று, ’கோயிலுள்ளவெல்லாம் கொண்மின்’ என்று, காணம் ஒன்பது நூறாயிரத்தொடு அரசு கட்டிலும் கொடுத்துப் பெரும்புகழ் அடைந்தவன்.
இவனது போர்ச்செயல்களுள் சிறப்பானது தகடூர் அதியமானை வென்றது ஆகும். அந்தப் போர் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதற்குத் ‘தகடூர் யாத்திரை’ என்ற தனிநூலின் எழுச்சியே சான்றாகும். முரசுகட்டிலில் அறியாது ஏறிய மோசிரேனாரைத் துயில் எழுந்துணையும் கவரிவீசி நின்று போற்றிப் புகழ்பெற்று, அவரால் பாடப்பெற்றவனும் இவனே யாவான். பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பானும் இவனே என்பது ஆன்றோர் முடிபு: அதனை இவனது தமிழ்கனியும் நெஞ்சச் செவ்வி நன்கு காட்டும்.
’இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது உயர் நிலை உலகத்து உறையுள் இன்மையை’ நன்கு தெளிந்து, அறமும் மறமும் அறிவும் பண்பும் செறிய வீற்றிருந்து சிறப்புற்றவன் இவன். இவன் பகைவர்க்கு ’மடங்கல் தீயின்’ அனையவன். ‘புகார்ச் செல்வன்’ எனவும், ‘பூழியர் மெய்ம் மறை’ எனவும், ‘கொல்லிப் பொருநன்’ எனவும், ‘கொடித் தேர்ப் பொறையன்’ எனவும் இவனைப் போற்றுவர். இவன் புதல்வனை இவன் தேவி பெற்று நல்கிய சிறப்பை ‘நலம்பெறு திருமணி’ என்னும் செய்யுளால் அறியினும், அவன் யாவன் என்பது அறியப்படாதே உள்ளது. ‘கடவுள் அயிரை நிலைஇக் கேடிலவாக’ இவன் புகழ் என்றும் விளங்கும் தகைமைத்து ஆகும்.
9. இளஞ்சேரல் இரும்பொறை
இவன் பெருங்குன்றூர் கிழார் பாடிய ஒன்பதாம் பத்தின் பாட்டுடைத் தலைவன். குட்டுவன் இரும்பொறைக்கும் வேண்மாள் அந்துவஞ் செள்ளைக்கும் பிறந்தவன். 16 ஆண்டுகள் அரசு வீற்றிருந்தவன். ‘மையூர் கிழான்’ இவன் அமைச்சன். பொத்தியாண்ட பெருஞ்சோழனையும், வித்தையாண்ட இளம்பழையன் மாறனையும் வெற்றிகொண்டவன். மந்திரமரபில் தெய்வம் பேணியும், சதுக்கபூதரை வஞ்சியில் நிறுவியும், சாந்தி வேட்டுச் சிறந்தவன் இவன்.
இவன் தேவியின் வனப்பையெல்லாம் ‘நிழல்விடு கட்டி’ என்னுஞ் செய்யுளால் அறியலாம். மருதம் பாடிய இளங்கடுங்கோ இவனே எனவும் கூறுவர். பாடுநர் கொளக் கொளக் குறையாச் செல்வத்தையும், செற்றோர் கொலக்கொலக் குறையாத் தானையையும், சான்றோர் வண்மையுஞ் செம்மையும் சால்பும் அறனும் புகன்று புகழ்ந்து அசையா நல்லிசையையும் கொண்டு, ’நிலந்தரு திருவின் நெடியோனைப் போல’ விளங்கியவன் இவன். இவனை ‘விறன் மாந்தரன் விறல் மருக’ என்று கூறுவதும் கவனிக்கத்தக்கது. இதனால் இவனை மாந்தரஞ் சேரலின் மகனாகவும் கொள்வர். இவன் சிறப்புக்களை எல்லாம் இந்நூலின் 90ஆம் செய்யுள் (வலிகெழு தடக்கை) ஒருங்கே தொகுத்து உரைக்கின்றது.
செய்யுள் முதற்குறிப்பு
[எண் — பாட்டெண்]
அட்டானனே | 47 | கேள்வி கேட்டு | 74 |
அலந்தலையுன்ன | 23 | கொடிநுடங்கு | 52 |
அவலெறிந்த | 29 | கொடும்ணம் பட்ட | 67 |
அறா அ யாணர் | 71 | கொலைவினை மேவ | 60 |
ஆடுக விறலியர் | 58 | கொள்ளை வல்சி | 19 |
ஆன்றோள் கணவ | 55 | கோடுறழ்ந் தெடுத்த | 16 |
இகல்பெருமையிற் | 72 | சிதைந்தது மன்ற | 27 |
இணர்ததை ஞாழல் | 30 | சினனே காமம் | 22 |
இரும்பனம் புடைய | 42 | சென்மோ பாடினி | 87 |
இரும்புலி கொன்று | 75 | சொற்பெயர் நாட்டம் | 21 |
இழையணிந் தெழுதரும் | 62 | திருவுடைத் தம்ம | 28 |
இழையர் குழையர் | 46 | துளங்குநீர் | 51 |
இறும்பூதாற் | 33 | தேஎர் பரந்த | 26 |
உண்மின் கள்ளே | 18 | தொறுத்த வயல் | 13 |
உயிர்போற்றலையே | 79 | நன்மரந் துவன்றிய | 85 |
உரவோரெண்ணினும் | 73 | நில நீர்வளி | 14 |
உலகத்தோரே | 38 | நிலம்புடைப்பன்ன | 44 |
உலகம் புரக்கும் | 81 | நுங்கோ யாரென | 20 |
உறலுறுகுருதி | 86 | நெடுவயிஞெளிறு | 24 |
எறுத்தேறேய | 84 | பகனிடாகா | 59 |
எறிபிணமிடறிய | 65 | பகைபெருமையிற் | 81 |
எனைப்பெரும்படை | 77 | பலாஅம் பழுத்த | 62 |
ஒருஉப நின்னை | 36 | பார்ப்பார்க் கல்லது | 63 |
ஓடாப் பூட்கை | 57 | பிறர்க்கென வாழ்தி | 39 |
கவரி முச்சி | 43 | புணர்புரி நரம்பின் | 61 |
களிறுகடைஇய | 70 | புரைசான் மைந்த | 35 |
களிறுடைப் பெருஞ்சமம் | 76 | புரைவது நினை | 17 |
கார்மழை முன்பிற் | 83 | பைம்பொற் றாமரை | 48 |
கால்கடிப்பாக | 68 | பொலம்பூந் தும்பை | 45 |
குன்றுதலை மணந்து | 31 | போர்நிழல் புகன்ற | 40 |
மலையுறழ் யானை | 69 | வலம்பட விழூஉம் | 78 |
மாண்டனை பலவே | 32 | வள்ளியை யென்றலிற் | 54 |
மாமலை முழக்கின் | 50 | வாங்கிரு மருப்பிற் | 66 |
மாவாடிய புலன் | 25 | வாழ்கநின் வளனே | 37 |
மீன்வயினிற்ப | 90 | வான்மருப்பிற் | 80 |
யாண்டுதலைப் பெயர | 15 | வானம் பொழுதொடு | 89 |
யாமுஞ் சேறுக | 49 | விழவு வீற்றிருந்த | 56 |
வயவர் வீழ | 12 | வீயா யாணர் | 36 |
வரைமருள் புணரி | 11 | வென்றுகலம் | 53 |
வலம்படு… வாய் | 64 | வையக மலர்ந்த | 88 |
பதிகங்கள்
ஆராத் திருவின் | நான்காம் பதிகம் | |
இமைய வரம்பன் | மூன்றாம் பதிகம் | |
குட்டுவன் இரும்பொறை | ஒன்பதாம் பதிகம் | |
குடக்கோ நெடுஞ்சேரல் | ஆறாம் பதிகம் | |
பொய்யில் செல்வ | எட்டாம் பதிகம் | |
மடியா வுள்ளம் | ஏழாம் பதிகம் | |
மன்னிய பெரும்புகழ் | இரண்டாம் பதிகம் | |
வடவ ருட்கும் | ஐந்தாம் பதிகம் |